நீலகண்ட பிரம்மச்சாரி – 7
காட்சி 7 இடம் : ஓம்கார் ஆசிரமம்காலம் : மறுநாள் காலை 10 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : நேற்று ராவுல நல்லா தூங்கினீங்களா..? சங்கர கிருஷ்ணன் : நல்லா தூங்கினேன் சுவாமிஜி. காலை வேளையில் இந்த மலைச் சாரல் மிக ரம்மியமாக இருக்கிறது. அதிலும் தெளிந்த கண்ணாடி போன்ற நதியின் பிரவாகத்தில் என்னை மறந்து போனேன். ஓம்கார் சுவாமிகள் : இந்த நதியை இங்கே ‘தட்சிணப் பிநாகினி’ என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தென்பெண்ணை ஆறாக ஓடுகிறாள். இந்த நதி வனத்திற்குள் ஒரு சுனையில் பிறந்து வருகிறது. இந்த ஆசிரமத்தைத் தொடங்கிய சில நாட்களில் அந்தச் சுனையைக் கண்டுபிடித்து, இந்தப் பகுதி மலைக் குடிகளின் உதவியோடு அந்தப் பாதையைச் சீர் செய்தேன். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! இது தென்பெண்ணை நதியா..!நல்லது சுவாமிஜி. நேற்று வ.உ.சி. வீட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்னபோது, காந்திஜி பத்திப் பேச்சு வந்ததே.. அவரு அப்பவே பிரபலமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா, அப்ப அவரு தென் ஆப்பிரிக்காவில் சத்தியாக்கிரகச் சோதனைகளைச் செய்து வந்தார். அவர் இந்தியாவுக்குள்ள கொஞ்சம் முன்னால வந்திருந்தா, என் சரித்திரம் இப்படி இருந்திருக்குமா..? (சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : காந்தியடிகளைச் சந்தித்திருந்தால் உங்கள் மனம் மாறியிருக்குமுன்னு சொல்றீங்களா..? ஓம்கார் சுவாமிகள் : அப்படிச் சொல்ல வரவில்லை. அவரால் நாட்டின் அரசியல் போக்கு மாறிப்போனதைச் சொன்னேன். அதனால் என் போன்றவர்களின் அரசியல் வழிகளில் மாற்றம் வந்திருக்கலாம் என்று சொன்னேன். தேசத்தின் சரித்திரத்தை, மக்கள் என்ற மகாசமுத்திரத்தின் சக்தியை முன்னிறுத்தி மாற்றிய போக்கு அல்லவா அது..! பின்னாளில் அவரைச் சந்தித்தபோதும் எனக்கு இது தோன்றியது. சங்கர கிருஷ்ணன் : ஆஹா.. அதையும் கேட்க வேண்டும். பிறகு கேட்கிறேன்.சுவாமிஜி, பரோடா மகராஜான்னு மாடசாமிக்கிட்டே சொன்னீங்களே.. அவரு யாரு..? ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. அதை லண்டன்ல இருந்த இந்தியா விடுதியில் இருந்து சொல்லணும். சிதம்பரம் பிள்ளை கேட்டாருல்ல.. ‘உனக்கு தேசபக்திப் பாடம் யாரு போதிச்சது’ன்னு.. அந்த மகானுபவர்களின் நண்பர்கள் எல்லாம் அங்கேதான் இருந்தாங்க. அவங்க ஆரம்பிச்ச இயக்கத்திற்குப் பெயர் ‘அபிநவ் பாரத் சமிதி‘. சியாம்ஜி கிருஷ்ண வர்மான்னு ஒரு தேசபக்தக் கனவான் இருந்தாரு. இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவில் ஆங்கில அரசில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். அபாயகரமான மனிதர் என்ற பிரசித்தியுடன் ஆங்கில அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் மீண்டும் லண்டன் வந்து, இந்தியாவிலிருந்து அங்கே படிக்கப் போனவங்களுக்கு நிதி உதவி செய்றதுக்கு ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செஞ்சு, அதைக் கவனித்து வந்தார். இந்த உதவியில் படித்தவர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை செய்யக் கூடாதுன்னும் தேச விடுதலைக்கு உழைக்கணும் என்ற நிபந்தனையுடன் அதைச் செஞ்சார். அப்படி திலகர் சிபாரிசுல படிக்க வந்தவருதான் விநாயக தாமோதர் சாவர்க்கர். திலகர் இவரை அனுப்பிய உண்மையான நோக்கம், பலாத்காரப் புரட்சிக்குத் திட்டமிடுவது குறித்தும் வெளிநாட்டில் இருந்துகொண்டு புரட்சியை நடத்த ஆட்களைத் தேர்ந்து, வழிநடத்தி, தயார் செய்வதற்கும்தான். சாவர்க்கர் அந்த வேலையில் வெகு கெட்டிக்காரர். வ.வே.சு. அய்யரும் லண்டனில் படிக்க வந்தார். இவங்கல்லாம் இந்தியா ஹவுஸ்ல இருந்து அந்த இயக்கத்த நடத்திக்கிட்டு இருந்தாங்க. பாரிஸ் நகரத்திலேயும் அந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. சியாம்ஜி கிருஷ்ண வர்மா பேரில் இங்கிலாந்து உளவுத்துறைக்கு ஐயம் தோன்ற, அவர் பாரிஸ் சென்றுவிட்டார். சாவர்க்கரும் அய்யரும் விடுதியைக் கவனித்து வந்தார்கள். இந்தியாவுல இவங்க இயக்கத்திற்கு லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பாலர்-ன்னு செல்வாக்கு இருந்தது. 1857 போல சிப்பாய்ப் புரட்சி ஒன்னு நடத்தணுமின்னு அவங்க எண்ணம். அதுல சில இந்து ராஜாக்களும் இருந்தாங்க. அவங்கள்ள ஒருத்தருதான் பரோடா மகராஜா ஸாயாஜிராவ். சங்கர கிருஷ்ணன் : லால் பால் பால் அப்படின்னு சொல்வாங்களே.. அது இவங்க மூனு பேரைத்தானே சுவாமிஜி..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, அரவிந்தரும் உண்டு. அப்போ லண்டன்ல ஒரு கொலை நடந்தது.. 1909ஆம் வருசம் மதன்லால் திங்கரான்னு ஒரு சுதேசி இளைஞன், கர்சான் வைலி என்ற வெள்ளைக்கார அதிகாரி ஒருத்தன சுட்டுக் கொலை பண்ணினான். கொலையில் இந்தியா ஹவுஸ் ஆட்களுக்குத் தொடர்பு இருந்ததுன்னு மோப்பம் பிடிச்சு சாவர்க்கரை பிடிச்சுக்கிட்டு போச்சு பிரிட்டிஷ் அரசு. அவரை அந்தமான்ல கொண்டு போட்டாங்க. வ.வே.சு. அய்யர் பலே கில்லாடி. தப்பிச்சுப் போயிட்டாரு. 1910ஆம் வருசம் பாண்டிச்சேரிக்கு வந்து என் தலையெழுத்தை அவருதான் எழுதினாரு. சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, சாவர்க்கர்ன்னு சொன்னீங்களே.. காந்தி அடிகள் கொலைச் சதியில் சேர்க்கப்பட்டிருந்தாரே அந்த சாவர்க்கரா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா அவருதான்.. (சிரிக்கிறார்) காலம் எப்படில்லாம் மாறிடுச்சு பாருங்க.. நான் சாமியாராகி இருக்கேன்.. அரவிந்தர் வேதாந்தியாப் போய் ஆசிரமம் நடத்துனாரு.. வ.வே.சு. அய்யர் காந்திஜி தயவால பிரிட்டிஷ் அரசின் பொதுமன்னிப்ப வாங்கிட்டு ஆசிரமம் நடத்துனாரு. சாவர்க்கர் அந்தமான் சிறைக்கொடுமை தாங்காம மன்னிப்புக் கடிதங்கள் போட்டு வெளியே வந்தாரு. கடைசியிலே காந்திஜி கொலைச் சதியில் சேர்க்கப்பட்டு நிரூபணம் ஆகாம விடுதலையானாரு. சங்கர கிருஷ்ணன் : நீங்க மட்டும்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கிட்ட எந்த விதத்திலேயும் சரணடையாம, ரொம்ப காலம் ஜெயில்ல இருந்தவரு.. இல்லையா சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) அதுதான் தம்பி வேடிக்கை. இரண்டு தடவை நான் ஜெயிலுக்குப் போனபோதும் வெறும் சதிக் குற்றம்தான். ஆஷ் கொலையை நான் திட்டமிடாமலே முதல் குற்றவாளி. ஏழரை வருடம் சிறை. இரண்டாம் தடவை கம்யூனிஸ்ட் பிரச்சார நோட்டீஸ் கொடுத்தேன்.. இன்னொரு எட்டு வருசம் சிறை. இது பெரிய குற்றமில்லியா? இந்தியாவுக்கு வெளியே ரங்கூன்ல கொண்டு போட்டான்..(சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : நேற்று தூத்துக்குடிச் சம்பவங்களைச் சொல்லிக்கிட்டு இருந்தீங்க.. ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. 1908 பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தூத்துக்குடிக்கு ஒரு பெரிய புயல் வந்தது. அதோட பேரு சுப்பிரமணிய சிவா. அப்போ தூத்துக்குடி தேசபக்த வெறி பிடிச்சுக் கிடந்தது. பிப்ரவரி 27ஆம் தேதி கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பண்ணினாங்க. நான் திருநெல்வேலி வந்து கூட்டங்களில் பேசிக்கிட்டிருந்தேன். மார்ச் மூனாம் தேதி வேலை நிறுத்தம் ஜெயிச்சது. 50 சதமானம் சம்பளம் ஒசத்துனாங்க. வார விடுமுறையும் கொடுத்தாங்க. சம்பளம் இல்லாம விடுப்பு எடுத்துக்கிடலாம். நெனச்சுப் பாரு தம்பி, 66 வருசத்திற்கு முன்னே இத நடத்துனாரு பிள்ளைவாள்.. சங்கர கிருஷ்ணன் : உண்மையில் இது பெரிய சாதனைதான் சுவாமிஜி.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, ஏகாதிபத்தியத்தின் முதுகில் விழுந்த அடி இது. அப்புறம் பாலர் விடுதலையைத் தூத்துக்குடியில் கொண்டாடத் திட்டம் போட்டார் பிள்ளைவாள். இது பெரிய மக்கள் எழுச்சி ஆகிவிடும் என்று திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் பயந்தான். தூத்துக்குடியில் சப் கலெக்டரா இருந்த ஆஷ் அதிகார ஆணவம் கொண்ட இன வெறியன். கூடவே சிதம்பரம் பிள்ளை நடத்திய தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க நினைத்தும் முடியாத தோல்வியில் குரோதம் கொண்டு இருந்தான். கலெக்டர் விஞ்ச், பாலர் விடுதலைக் கொண்டாட்டத்திற்குத் தடை போட்டான். வ.உ.சி.யும் சிவாவும் அய்யங்காரும் தடையை மீறி பாலர் விழாவை நெல்லையில் கொண்டாடினார்கள். மூனு பேரையும் கைது பண்ணினாங்க. திருநெல்வேலியிலேயும் தூத்துக்குடியிலேயும் பெரிய எழுச்சி நடந்தது. விஞ்ச்சும் ஆஷூம் இந்த ரெண்டு ஊரையும் ரணகளமாக்கி, பேயாட்டம் ஆடினாங்க.என் இயக்கத்தை நடத்த வேண்டியிருந்ததால நான் கடையநல்லூருக்குப் போய் இருந்துகிட்டேன். பிறகு சென்னைக்கு வந்து, இந்தியா பத்திரிகையில் வேலை பார்த்தேன். பாரதியார் பாண்டிச்சேரி போனப்போ, இரண்டு வாரம் நான்தான் இந்தியாவைக் கொண்டு வந்தேன். அப்புறம் இந்தியா பாண்டிச்சேரியிலிருந்து வந்தது. அவ்வளவுதான்.. ஒரு இரண்டரை வருசம் பேயா அலைஞ்சு ஆள் புடிச்சேன். 1910ஆம் வருசம் வந்தது; சித்திரையா வைகாசியா.. சரியா ஞாபகமில்லை. அப்போ.. (மேடையில் ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை தொடரும்.