நீலகண்ட பிரம்மச்சாரி – 7

நீலகண்ட பிரம்மச்சாரி – 7

காட்சி 7 இடம் : ஓம்கார் ஆசிரமம்காலம் : மறுநாள் காலை 10 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன் ஓம்கார் சுவாமிகள் : நேற்று ராவுல நல்லா தூங்கினீங்களா..? சங்கர கிருஷ்ணன் : நல்லா தூங்கினேன் சுவாமிஜி. காலை வேளையில் இந்த மலைச் சாரல் மிக ரம்மியமாக இருக்கிறது. அதிலும் தெளிந்த கண்ணாடி போன்ற நதியின் பிரவாகத்தில் என்னை மறந்து போனேன். ஓம்கார் சுவாமிகள் : இந்த நதியை இங்கே ‘தட்சிணப் பிநாகினி’ என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் தென்பெண்ணை ஆறாக ஓடுகிறாள். இந்த நதி வனத்திற்குள் ஒரு சுனையில் பிறந்து வருகிறது. இந்த ஆசிரமத்தைத் தொடங்கிய சில நாட்களில் அந்தச் சுனையைக் கண்டுபிடித்து, இந்தப் பகுதி மலைக் குடிகளின் உதவியோடு அந்தப் பாதையைச் சீர் செய்தேன். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! இது தென்பெண்ணை நதியா..!நல்லது சுவாமிஜி. நேற்று வ.உ.சி. வீட்டில் நடந்த சம்பவங்களைச் சொன்னபோது, காந்திஜி பத்திப் பேச்சு வந்ததே.. அவரு அப்பவே பிரபலமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா, அப்ப அவரு தென் ஆப்பிரிக்காவில் சத்தியாக்கிரகச் சோதனைகளைச் செய்து வந்தார். அவர் இந்தியாவுக்குள்ள கொஞ்சம் முன்னால வந்திருந்தா, என் சரித்திரம் இப்படி இருந்திருக்குமா..? (சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : காந்தியடிகளைச் சந்தித்திருந்தால் உங்கள் மனம் மாறியிருக்குமுன்னு சொல்றீங்களா..? ஓம்கார் சுவாமிகள் : அப்படிச் சொல்ல வரவில்லை. அவரால் நாட்டின் அரசியல் போக்கு மாறிப்போனதைச் சொன்னேன். அதனால் என் போன்றவர்களின் அரசியல் வழிகளில் மாற்றம் வந்திருக்கலாம் என்று சொன்னேன். தேசத்தின் சரித்திரத்தை, மக்கள் என்ற மகாசமுத்திரத்தின் சக்தியை முன்னிறுத்தி மாற்றிய போக்கு அல்லவா அது..! பின்னாளில் அவரைச் சந்தித்தபோதும் எனக்கு இது தோன்றியது. சங்கர கிருஷ்ணன் : ஆஹா.. அதையும் கேட்க வேண்டும். பிறகு கேட்கிறேன்.சுவாமிஜி, பரோடா மகராஜான்னு மாடசாமிக்கிட்டே சொன்னீங்களே.. அவரு யாரு..? ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. அதை லண்டன்ல இருந்த இந்தியா விடுதியில் இருந்து சொல்லணும். சிதம்பரம் பிள்ளை கேட்டாருல்ல.. ‘உனக்கு தேசபக்திப் பாடம் யாரு போதிச்சது’ன்னு.. அந்த மகானுபவர்களின் நண்பர்கள் எல்லாம் அங்கேதான் இருந்தாங்க. அவங்க ஆரம்பிச்ச இயக்கத்திற்குப் பெயர் ‘அபிநவ் பாரத் சமிதி‘. சியாம்ஜி கிருஷ்ண வர்மான்னு ஒரு தேசபக்தக் கனவான் இருந்தாரு. இங்கிலாந்தில் பாரிஸ்டர் பட்டம் பெற்று இந்தியாவில் ஆங்கில அரசில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். அபாயகரமான மனிதர் என்ற பிரசித்தியுடன் ஆங்கில அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டார். அதனால் மீண்டும் லண்டன் வந்து, இந்தியாவிலிருந்து அங்கே படிக்கப் போனவங்களுக்கு நிதி உதவி செய்றதுக்கு ஒரு ஸ்தாபனம் ஏற்பாடு செஞ்சு, அதைக் கவனித்து வந்தார். இந்த உதவியில் படித்தவர்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் வேலை செய்யக் கூடாதுன்னும் தேச விடுதலைக்கு உழைக்கணும் என்ற நிபந்தனையுடன் அதைச் செஞ்சார். அப்படி திலகர் சிபாரிசுல படிக்க வந்தவருதான் விநாயக தாமோதர் சாவர்க்கர். திலகர் இவரை அனுப்பிய உண்மையான நோக்கம், பலாத்காரப் புரட்சிக்குத் திட்டமிடுவது குறித்தும் வெளிநாட்டில் இருந்துகொண்டு புரட்சியை நடத்த ஆட்களைத் தேர்ந்து, வழிநடத்தி, தயார் செய்வதற்கும்தான். சாவர்க்கர் அந்த வேலையில் வெகு கெட்டிக்காரர். வ.வே.சு. அய்யரும் லண்டனில் படிக்க வந்தார். இவங்கல்லாம் இந்தியா ஹவுஸ்ல இருந்து அந்த இயக்கத்த நடத்திக்கிட்டு இருந்தாங்க. பாரிஸ் நகரத்திலேயும் அந்த இயக்கம் செயல்பட்டு வந்தது. சியாம்ஜி கிருஷ்ண வர்மா பேரில் இங்கிலாந்து உளவுத்துறைக்கு ஐயம் தோன்ற, அவர் பாரிஸ் சென்றுவிட்டார். சாவர்க்கரும் அய்யரும் விடுதியைக் கவனித்து வந்தார்கள். இந்தியாவுல இவங்க இயக்கத்திற்கு லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர், விபின் சந்திர பாலர்-ன்னு செல்வாக்கு இருந்தது. 1857 போல சிப்பாய்ப் புரட்சி ஒன்னு நடத்தணுமின்னு அவங்க எண்ணம். அதுல சில இந்து ராஜாக்களும் இருந்தாங்க. அவங்கள்ள ஒருத்தருதான் பரோடா மகராஜா ஸாயாஜிராவ். சங்கர கிருஷ்ணன் : லால் பால் பால் அப்படின்னு சொல்வாங்களே.. அது இவங்க மூனு பேரைத்தானே சுவாமிஜி..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, அரவிந்தரும் உண்டு. அப்போ லண்டன்ல ஒரு கொலை நடந்தது.. 1909ஆம் வருசம் மதன்லால் திங்கரான்னு ஒரு சுதேசி இளைஞன், கர்சான் வைலி என்ற வெள்ளைக்கார அதிகாரி ஒருத்தன சுட்டுக் கொலை பண்ணினான். கொலையில் இந்தியா ஹவுஸ் ஆட்களுக்குத் தொடர்பு இருந்ததுன்னு மோப்பம் பிடிச்சு சாவர்க்கரை பிடிச்சுக்கிட்டு போச்சு பிரிட்டிஷ் அரசு. அவரை அந்தமான்ல கொண்டு போட்டாங்க. வ.வே.சு. அய்யர் பலே கில்லாடி. தப்பிச்சுப் போயிட்டாரு. 1910ஆம் வருசம் பாண்டிச்சேரிக்கு வந்து என் தலையெழுத்தை அவருதான் எழுதினாரு. சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, சாவர்க்கர்ன்னு சொன்னீங்களே.. காந்தி அடிகள் கொலைச் சதியில் சேர்க்கப்பட்டிருந்தாரே அந்த சாவர்க்கரா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமா அவருதான்.. (சிரிக்கிறார்) காலம் எப்படில்லாம் மாறிடுச்சு பாருங்க.. நான் சாமியாராகி இருக்கேன்.. அரவிந்தர் வேதாந்தியாப் போய் ஆசிரமம் நடத்துனாரு.. வ.வே.சு. அய்யர் காந்திஜி தயவால பிரிட்டிஷ் அரசின் பொதுமன்னிப்ப வாங்கிட்டு ஆசிரமம் நடத்துனாரு. சாவர்க்கர் அந்தமான் சிறைக்கொடுமை தாங்காம மன்னிப்புக் கடிதங்கள் போட்டு வெளியே வந்தாரு. கடைசியிலே காந்திஜி கொலைச் சதியில் சேர்க்கப்பட்டு நிரூபணம் ஆகாம விடுதலையானாரு. சங்கர கிருஷ்ணன் : நீங்க மட்டும்தான் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கிட்ட எந்த விதத்திலேயும் சரணடையாம, ரொம்ப காலம் ஜெயில்ல இருந்தவரு.. இல்லையா சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரிக்கிறார்) அதுதான் தம்பி வேடிக்கை. இரண்டு தடவை நான் ஜெயிலுக்குப் போனபோதும் வெறும் சதிக் குற்றம்தான். ஆஷ் கொலையை நான் திட்டமிடாமலே முதல் குற்றவாளி. ஏழரை வருடம் சிறை. இரண்டாம் தடவை கம்யூனிஸ்ட் பிரச்சார நோட்டீஸ் கொடுத்தேன்.. இன்னொரு எட்டு வருசம் சிறை. இது பெரிய குற்றமில்லியா? இந்தியாவுக்கு வெளியே ரங்கூன்ல கொண்டு போட்டான்..(சிரிக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : நேற்று தூத்துக்குடிச் சம்பவங்களைச் சொல்லிக்கிட்டு இருந்தீங்க.. ஓம்கார் சுவாமிகள் : சொல்றேன்.. 1908 பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி தூத்துக்குடிக்கு ஒரு பெரிய புயல் வந்தது. அதோட பேரு சுப்பிரமணிய சிவா. அப்போ தூத்துக்குடி தேசபக்த வெறி பிடிச்சுக் கிடந்தது. பிப்ரவரி 27ஆம் தேதி கோரல் மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் பண்ணினாங்க. நான் திருநெல்வேலி வந்து கூட்டங்களில் பேசிக்கிட்டிருந்தேன். மார்ச் மூனாம் தேதி வேலை நிறுத்தம் ஜெயிச்சது. 50 சதமானம் சம்பளம் ஒசத்துனாங்க. வார விடுமுறையும் கொடுத்தாங்க. சம்பளம் இல்லாம விடுப்பு எடுத்துக்கிடலாம். நெனச்சுப் பாரு தம்பி, 66 வருசத்திற்கு முன்னே இத நடத்துனாரு பிள்ளைவாள்.. சங்கர கிருஷ்ணன் : உண்மையில் இது பெரிய சாதனைதான் சுவாமிஜி.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, ஏகாதிபத்தியத்தின் முதுகில் விழுந்த அடி இது. அப்புறம் பாலர் விடுதலையைத் தூத்துக்குடியில் கொண்டாடத் திட்டம் போட்டார் பிள்ளைவாள். இது பெரிய மக்கள் எழுச்சி ஆகிவிடும் என்று திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் பயந்தான். தூத்துக்குடியில் சப் கலெக்டரா இருந்த ஆஷ் அதிகார ஆணவம் கொண்ட இன வெறியன். கூடவே சிதம்பரம் பிள்ளை நடத்திய தொழிலாளர் போராட்டத்தை ஒடுக்க நினைத்தும் முடியாத தோல்வியில் குரோதம் கொண்டு இருந்தான். கலெக்டர் விஞ்ச், பாலர் விடுதலைக் கொண்டாட்டத்திற்குத் தடை போட்டான். வ.உ.சி.யும் சிவாவும் அய்யங்காரும் தடையை மீறி பாலர் விழாவை நெல்லையில் கொண்டாடினார்கள். மூனு பேரையும் கைது பண்ணினாங்க. திருநெல்வேலியிலேயும் தூத்துக்குடியிலேயும் பெரிய எழுச்சி நடந்தது. விஞ்ச்சும் ஆஷூம் இந்த ரெண்டு ஊரையும் ரணகளமாக்கி, பேயாட்டம் ஆடினாங்க.என் இயக்கத்தை நடத்த வேண்டியிருந்ததால நான் கடையநல்லூருக்குப் போய் இருந்துகிட்டேன். பிறகு சென்னைக்கு வந்து, இந்தியா பத்திரிகையில் வேலை பார்த்தேன். பாரதியார் பாண்டிச்சேரி போனப்போ, இரண்டு வாரம் நான்தான் இந்தியாவைக் கொண்டு வந்தேன். அப்புறம் இந்தியா பாண்டிச்சேரியிலிருந்து வந்தது. அவ்வளவுதான்.. ஒரு இரண்டரை வருசம் பேயா அலைஞ்சு ஆள் புடிச்சேன். 1910ஆம் வருசம் வந்தது; சித்திரையா வைகாசியா.. சரியா ஞாபகமில்லை. அப்போ.. (மேடையில் ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை தொடரும்.

பவால்

பவால்

திரை விமர்சனம் அஜய் தீட்சித்தின் பிரச்சனை, அவன் லக்னோ பள்ளி ஒன்றின் வரலாற்று ஆசிரியராக இருப்பதோ, தனக்குத் தானேயும் மற்றவர்களிடத்திலும் தன்னைப் பற்றிய போலியான ஒரு பெரிய பிம்பத்தைக் கட்டமைத்துக் கொண்டதோ,  அறிவும் அழகும் கொண்ட நிஷா மனைவியாக வாய்த்ததோ அல்ல. அவளுக்கு வலிப்புக் குறைபாடு இருப்பதை அறிந்து அவளை ஒதுக்க – அது அவர்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தியதும்  மனக் குழப்பத்தில் எம்.எல்.ஏ. விஷ்வாஷ் ரகுவன்சியின் மகன் அதுல் ரகுவன்சியை வகுப்பில் ‘பளா’ரென்று அறைந்ததும்தான்.   அவை, அவன் போலியாகக்  கட்டமைத்துக்கொண்ட பிம்பத்தைச் சடுதியில் நொறுங்கச் செய்து, அவனது வேலைக்கே உலை வைக்கும் நிலைக்குக் கொண்டுசெல்கின்றன. அவற்றை அவன் எவ்விதம் எதிர்கொண்டான், மண உறவும் வேலையும் மீண்டும் அவனுக்கு வாய்த்ததா என்பதுதான், நிதிஷ் திவாரி இயக்கி, ஹிந்தியில் அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ் வசனங்களுடன்  வெளியாகி உள்ள ‘பவால்’ திரைப்படத்தின் மொத்தக் கதை. வலிப்புக் குறைபாடு இருப்பதைத்  திருமணத்திற்கு முன்பே நிஷா தெளிவாக அவனிடம் கூறியும் சம்மதித்து ஏற்றுக்கொண்ட பின்னர் அதையே காரணம் காட்டி அவளைத் தவிர்க்கும் அஜய், தனக்குள் வியாபித்திருக்கும் ஆளுமைச்  சிதைவை அறியாதது சோகம்.   இரண்டாவது உலகப் போரில் தொடர்புடைய நாடுகளுக்கு, தவிர்க்க இயலாத நிலையில் மனைவியுடன் பயணித்துப்  பார்வையிடுவதும் அப்போது நாஜிக்களால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரோடு இருக்கும் ஒருவரது அனுபவத்தை அறிய நேரிட்டதால் அவனுக்குள் வரும் மாற்றத்தையும் அந்த மாற்றம் அவளுக்குள் ஏற்படுத்தும் நம்பிக்கையையும் அஜய் தீட்சித்தாக வரும் வருண் தாவணும் நிஷாவாக ஜான்வி கபூரும்  வெளிப்படுத்துவதில், தாங்கள் ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை முழுவதும் உள்வாங்கி, நிறைவான நடிப்பைத் தந்துள்ளனர். அஜயின் தந்தை மனோஜ் பாவா, தாய் அஞ்சுமன் சக்சேனா, எம்.எல்.ஏ. ரகுவன்ஷி முகேஷ் திவாரி, அவரது மகன் அதுல் நிகில் சாவ்லா, நண்பன் பிரதீக் பச்சோரி (பிபின்) போன்ற துணைப் பாத்திரங்களும் நடிப்பில் சோடை போகவில்லை. மித்தேஷ் மிர்ச்சந்தானியின் காமிரா, இந்தியாவில் லக்னோ, கான்பூர்,  மும்பை என்றும் பாரிஸ், பெர்லின், ஆம்ஸ்டர்டாம், கிரக்கோவ் வார்ஸா, போலந்து ஆகிய அயல்நாடுகளிலும் சுற்றிச் சுழல்வதுடன், இரண்டாம் உலகப்போர் காலத்திலான உருவகப்படுத்தப்பட்ட நிகழ்வுகளைக் கருப்பு வெள்ளையில் வழங்கி, மனதில் ஆழமாகப் பதிய வைப்பது சிறப்பு. டேனியல் பி ஜார்ஜ்ஜின் பின்னணி இசையும் சாரு ஸ்ரீ ராயின் படத்தொகுப்பும் நேர்த்தியாக அமைந்துள்ளன. இனிமையான பாடல்களுக்கு நால்வர் இசை அமைத்துள்ளனர். “எக்ஸாம் வருது பேப்பர் செட் பண்ணனும்” (அஜய்) “முதல்ல உன் லைஃப்ப செட் பண்ணு” (அம்மா) “பிரச்சனைகளைச் சமாளிக்கக் கத்துக்க. இப்படி ஓடாத” (அப்பா) “எப்போ உனக்கு இந்த உறவைச் சமாளிக்க முடியாதுன்னு தோனுதோ, அப்போ எங்ககிட்ட வந்துரும்மா.. யாரும் ஒன்னும் சொல்ல மாட்டாங்க. டைவர்ஸ் வாங்கறது கேவலம் இல்ல” (நிஷாவின் அம்மா) “தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்பட்டா எல்லாம் தெரியும்; இடத்தப் பத்தியும் மனுஷங்களப் பத்தியும்” (நிஷா) “நமக்குள்ள எதுவுமே காமனா இல்ல” (அஜய்) “காமனா இருக்கணும்னு அவசியமா?” (நிஷா) “ஹிட்லரோட லைஃப்ல இருந்து முக்கியமா ஒன்னு கத்துக்லாம்னா, அது பொய், பித்தலாட்டம். இதனால உருவாகற இமேஜ் ரொம்ப நாள் நீடிக்காது. அதனாலதான் இந்த நிலம,  எங்க இட்லர் செத்தானோ அங்க ஒரு கார் பார்க்தான் இருக்கு, ஒரு மெமோரியலும் இல்ல.  சரிதான், கடைசியில உண்மைதான் வெல்லும். பொய்மை இல்ல” (அஜய்) “பத்து மாசமா நெனச்சிகிட்டு இருந்தது, நீ எனக்கு லாயக்கில்லன்னு. ஆனா, இந்தப் பத்து நாள்ல புரிஞ்சுகிட்டேன் நான் உனக்கு லாயக்கில்லன்னு” (அஜய்) “நம்ம வாழ்நாள்ல ஏற்படற துக்கம் அவங்களோட ஒருநாள் வாழ்க்கைக்கு முன்ன ஒன்னுமே இல்ல” “வரலாறு இருக்கறதுக்குக் காரணம், நம்ம தப்ப திருத்திக்கத்தான்” (ரகுவன்ஷி) “மத்தவங்ககிட்ட இருக்கிறதப் பார்த்து அதையே நினைச்சுகிட்டு வருத்தமா இருந்தா, நாம என்னைக்குமே சந்தோஷமா இருக்க முடியாது. ஆனா, கிடைச்சதுல சந்தோஷத்தைத் தேடினா அப்போ முகத்தில் தெரிகிற உண்மையான சந்தோஷம், அந்தச் சந்தோஷத்தைவிடச் சிறந்த இமேஜ் எதுவுமே இல்லை” இவை, அர்த்தபூர்வமான, நினைவை வருடிக்கொண்டே இருக்கும் வசனங்கள். ஹிட்லரின் கொடிய ஆஸ்விட்ச் கான்சன்ட்ரேஷன் கேம்ப்பிலான அனுபவத்தைப் பெரியவர் ஆங்கிலத்தில் சொல்லச் சொல்ல, அதை மொழிபெயர்த்து உணர்வுப்பூர்வமாக அஜய்யிடம் சொல்லும் நிஷாவும் கேட்கும் அஜய்யும் அவை தங்களுடைய வாழ்வின் நிகழ்வுகளோடு ஒத்துப்போகும் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு உள்ளான லேசான விரிசல் மறையவும் அவனுக்குள் அவன் திருத்தம் பெறவும் வாய்ப்பாக அமைத்திருக்கும் பாங்கு, இயக்குநரின் முத்திரை. காதல், பாசம், குடும்பம், மனிதம், பிம்பம், ஆளுமை போன்றவற்றின் உள்ளார்ந்த அர்த்தத்தை உணரவும் நாயகன் அஜய் தீட்சித் போன்ற மனப்பான்மை கொண்ட எவரும் தங்களைச் சுயபரிசோதனை செய்து தெளிவு பெறவும் நித்தீஷ் திவாரி அற்புதமாக இயக்கி வழங்கி உள்ள ‘பவால்’ வாய்ப்பளிப்பது நிச்சயம். மதிப்பெண் : 7/10

நீலகண்ட பிரம்மச்சாரி – 6

நீலகண்ட பிரம்மச்சாரி – 6

காட்சி 6 காலம் : 1908ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒருநாள்இடம் : தூத்துக்குடியில் வ.உ.சி.யின் வீடுபாத்திரங்கள் : வ.உ.சி., நீலகண்டர், பத்மநாப அய்யங்கார் மற்றும் ஓட்டப்பிடாரம் மாடசாமி(வ.உ.சி.யும் பத்மநாப அய்யங்காரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீலகண்டர் கேட்டுக்கொண்டிருக்கிறார்) பத்மநாப அய்யங்கார் : சூரத் காங்கிரஸ் நல்லபடியா முடிஞ்சதோல்லியோ.. தூத்துக்குடியில் புதிய கட்சி வேலையும் பிரமாதமா நடந்துண்டிருக்கு. நீலகண்டர் : இல்லையா பின்னே.. திலகர் கட்சிக்குத் தமிழ்நாட்டில் பிள்ளைவாள்தான தலைவர்?! அப்புறம் தூத்துக்குடியில் உற்சாகத்திற்குக் கேக்கணுமா என்ன? பத்மநாப அய்யங்கார் : ஆஹா! பிள்ளைவாள்.. இவர் யார்..? இந்தப் போடு போடுறாரே! வ.உ.சி. : அய்யங்கார்.. இவர் பெயர் நீலகண்டன். நம்ம வேலைக்கு உதவி செய்ய பாரதியார் அனுப்பி வச்சிருக்கார். தீவிர தேச பக்தர். பத்மநாப அய்யங்கார் : பேஷ்.. பேஷ்..! (இளைஞர் ஒருவர் கும்பிட்டுக்கொண்டே வருகிறார். கண்களில் பதட்டம் தெரிகிறது) வ.உ.சி. : வா, மாடசாமி.. என்ன ஆச்சு? ஏன் பதட்டமா வர்ற..? மாடசாமி : வணக்கம் வக்கீலய்யா.. வணக்கம் சாமி.. நேத்து மில் தொழிலாளர் கூட்டம் நடந்துச்சுல்லங்க ஐயா.. அதுக்கு வந்த தொழிலாளிங்கள எல்லாம் மிரட்டிருக்காங்க. ‘சிதம்பரம் பிள்ளை ராஜ துரோகம் பேசுறவரு.. அவரு கூட்டத்துக்குப் போனா வேலை கிடையாது’ன்னு மிரட்டிருக்காங்க ஐயா. பத்மநாப அய்யங்கார் : அதுக்கு ஏன் பதட்டம்? இது எதிர்பார்த்ததுதான..?(மௌனமாக இருக்கும் வ.உ.சி.யைப் பார்த்து) பிள்ளைவாள்.. என்ன யோசனை.? வ.உ.சி. : அதிகாரிங்க என்ன மிரட்டுறது..? போராட்டம் தீவிரமாகும்போது, வேலைக்கு வரமாட்டேன்னு தொழிலாளி அதிகாரிகளை மிரட்டுற நாளும் வரும். அந்தச் சூழ்நிலையில், தொழிலாளர்களும் அவங்க குடும்பமும் வயிறு காயாம இருக்க நாம ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். பத்மநாப அய்யங்கார் : அவ்வளவு தூரம் போகுமா..? வ.உ.சி. : அதுக்கும் மேலேயே நடக்கும். இந்தத் தொழிலாளிங்களோட கஷ்டங்களை நாம இப்போ வெளிப்படுத்துறோம். விடிஞ்சு போனா அடைஞ்சு வாராங்க; நேரக் கட்டுப்பாடில்லாத வேலைக்கு ரொம்ப மோசமான கூலி. வார ஓய்வு கிடையாது; விடுப்பு எடுக்க முடியாது. இதெல்லாத்தையும் வாங்கணுமின்னா தொழிலாளிங்க ஒற்றுமையாலும் வேலையை நிறுத்தியும்தான் முடியும். நீலகண்டர் (குறுக்கிட்டு) : பிள்ளைவாள்.. நாம தேச சேவையில் மட்டும் கவனம் செலுத்தலாமே..வ.உ.சி. : (மெல்லச் சிரித்து) தேச சேவைன்னா என்ன..? தேச பக்தின்னா என்ன..?மக்களோட பிரச்சினையைப் பேசுறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமன தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனைக்கிறீரா நீலகண்டர்..? இந்தப் பாடம் யாரு சொன்னது? நீலகண்டன் : மன்னிக்கணும்.. நம்மளோட ஆற்றல் வீணாப் போகுதேன்னுதான் கவலை.. எவ்வளவு நாள்தான் வெள்ளைக்காரங்க அக்கிரமத்தைப் பொறுத்துக்கறது? வெள்ளை அதிகாரிகள இன்னமும் ஏன் விட்டு வைக்கணும்..? வ.உ.சி. : என்ன செய்யலாம்? நாம நாலு பேரு சேர்ந்து வெள்ளைக்கார துரைகளைக் கொன்னுட்டா சுதந்திரம் வந்துருமா..? ஒரு துரை போனா இன்னொருத்தன் வருவான். நாம் மக்களைத் திரட்டிப் போராடித்தான் ஜெயிக்கணும். உமக்கு தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால்ஸ் மாகாணத்துல நடந்த சேதி தெரியுமோ..? பத்மநாப அய்யங்கார் : அது ஒரு பாடம்.. விவரமாச் சொல்லுங்க பிள்ளைவாள். வ.உ.சி. : தென்னாப்பிரிக்காவுல வாழுற ஆசியா மக்கள் எல்லாரையும் பதிவு செய்யச் சொல்ற சட்டம்.. அதன்மூலம் ஆசிய மக்களைக் கட்டுப்படுத்தும் சட்டம்.. இதை ஆசிய மக்கள், குறிப்பா நம்ம இந்தியர்கள் எதிர்த்து ரெண்டு வருசமா போராடினாங்க. அதிலேயும் தமிழர்கள்தான் முன்னால நின்னாங்க. இப்போ போன மாசம்தான் தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு போராட்டத்துக்குப் பணிஞ்சு, ஒரு சமாதான பேரத்திற்கு வந்திருக்கிறது. இந்த வெற்றி அந்த மக்களை இன்னும் உற்சாகப்படுத்தும். இன்னும் ஒன்னா இணைக்கும். இந்த உலகத்துல அடிமைத்தனம் எந்த வடிவத்தில் இருந்தாலும் மக்களைத் திரட்டித்தான் எதிர்த்துப் போராடணும். பத்மநாப அய்யங்கார் : இந்த வேலையைச் செய்ததும் நம்ம பிள்ளைவாள்போல இளம் வக்கீல் ஒருத்தர்தான். அவரு பேரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. வ.உ.சி. : சரி, இன்னைக்கு சாயுங்காலம் கடற்கரையில் கோரல் மில் தொழிலாளிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கேன்.. எல்லாரும் வந்துருங்க. (நீலகண்டர் மாடசாமியின் தோள்களில் கை போட்டுக்கொண்டு வெளியில் வருகிறார்) நீலகண்டர் : என்ன மாடசாமி.. பிள்ளைவாள் பேச்சுல அப்படி பிரமிச்சுப் போயிட்டீர் போல.. இப்படிக் கூடறதும் பேசுறதும் எத்தனை நாளைக்கு..? ஒரே நாள்ல நாடு முழுவதும் இருக்கிற வெள்ளைக்காரங்கள கொன்னு போடணும்.. யுத்தம் பண்ணணும். மாடசாமி.. வாய் யுத்தமில்ல. ஆய்தம் தாங்கி, துப்பாக்கி ஏந்தி யுத்தம் பண்ணணும்.. மாடசாமி : இதெல்லாம் நடக்குமா..? ஆயுதம் வாங்கணுமே..! பணம் வேணுமே..! பெரிய ஆட்கள் துணை வேணுமே..! அப்புறம், துப்பாக்கி சுடத் தெரியணுமே..! நீலகண்டன் : எல்லாம் நடக்கும் மாடசாமி.. பரோடா மகராஜா போன்ற சுதேசி ராஜாக்களெல்லாம் சேர்ந்து ஒரு திட்டம் போட்டுருக்காங்க.. விவரமாச் சொல்றேன் வாரும்.. (ஒளி மங்கி மேடை இருள்கிறது.. ஒளி விரியும்போது ஓம்கார் சுவாமிகளின் அறையாக இருக்கிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இந்த மாடசாமி பெரிய சாகசக்காரர் என்கிறார்களே.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம், ரொம்பக் கெட்டிக்காரர், தீரர். ஓட்டப்பிடாரம் இவரது ஊர். சிதம்பரம் பிள்ளையோட தீவிர விசுவாசி. ஆஷ் கொலை வழக்கில் இவர் பெயர் அடிபட்டாலும் கடைசிவரை இவர் பிடிபடவே இல்லை. இவரை என் கட்சிக்குக் கொண்டுவர எத்தனை பேசியிருப்பேன்..? (சிறிய சிந்தனைக்குப் பிறகு)ஆஷ் கொலைக்குப் பின் அவர் தலை மறைவானதால் அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துவிட்டது. அவரது குடும்பம் நிராதரவானது. பாவம்.. இப்படி எத்தனைப் பேரின் கண்ணீரில் உருவானது இந்த சுதந்திர தேசம்.. (கண் கலங்குகிறார்) சீடர் : (உள்ளே வந்து) சுவாமி ஆகாரம் தயார் ஆகிவிட்டது. ஓம்கார் சுவாமிகள் : வாருங்கள் சாப்பிடலாம் (திரை விழுகிறது) (நாளை பார்க்கலாம்)

அரச விருந்தாளி

அரச விருந்தாளி

நகைச்சுவைச் சிறுகதை முதல் வகுப்பு நீதித்துறை மாஜிஸ்டிரேட் கோர்டின் குற்றவாளிக்கூண்டில் ராக்கப்பன் நின்றிருந்தான். வயது 40, உயரம் 175 செமீ, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவன், திருமணமானவன், மனைவி அவனை விட்டு விலகி நான்கு வருடங்கள் ஆகின்றன. மீன் அங்காடியில் மீன்களை வெட்டிச் சுத்தம்செய்து தரும் பணியைச் செய்து வந்தான். குரூர நகைச்சுவை உணர்வு கொண்டவன். மாஜிஸ்டிரேட், பழைய திரைப்பட நடிகர் உசிலைமணியின் சாயலில் இருந்தார். அரசு வழக்கறிஞர் எழுந்து, மெதுவாக நடந்து ராக்கப்பனிடம் வந்தார். “நீதானே நண்டு ராக்கப்பன்?” “நீதானே பப்பரப்பா பப்ளிக் புராசிகுட்டர்?” “மரியாதை இல்லாம பேசக்கூடாது” “நீ மட்டும் பேசலாமா?” “சரிங்க நண்டு சார். விஷயத்துக்கு வருவோம்…” “வந்துக்க” “12.06.2023 அன்று காலை 10.30 மணிக்கு ஆர் ஒன் போலீஸ் ஸ்டேஷன் போனாயா?” “போனேன்” “போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல நின்ன டானாக்காரருக்கு மீசையும் நாமமும் வரைஞ்சு விட்டியா?” “சமத்தா நின்னார். மீசையும் நாமமும் வரைஞ்சேன்” “போலீஸ்காரர்னு உனக்குத் துளியும் மரியாதை இல்லை” “சரியா வரையாம விட்ட மீசையை எச்சில் துப்பி அழிச்சேனே… அதைச் சொல்றீங்களா? நான் மீசையும் நாமமும் வரைஞ்சதை அந்தப் போலீஸ்காரர் செமத்தியா என்ஜாய் பண்ணினார் தெரியுமா?” “அடுத்து என்ன பண்ணின? ஸ்டேஷனுக்குள்ள திமுதிமுன்னு எருமைமாடு மாதிரி புகுந்த” “ஆமா… எவ்வளவு நேரம் வெளிவாசல் டானாக்காரர்கிட்டயே நிக்றது? உள்ளே நடந்தேன்” “கொண்டு வந்த மீன் கழிவுகளை ஸ்டேஷனுக்குள்ள விசிறியடிச்சே” “அஞ்சு கிலோ இருக்கும். கழிவுகளைக் கொட்ன பிறகு ஸ்டேஷன் பூராவும் கலீஜான நாத்தம்.. மீன் மார்க்கெட் அட்மாஸ்பியரை ஸ்டேஷனுக்குள்ள கொண்டு வந்திட்டேன்ல்ல..” “அட்ரோஸியஸ்..” “டைரக்டர் அட்லி பத்தியெல்லாம் எனக்குத் தெரியாதுங்க..” “ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் மரியசூசை ஓடிவந்து, ‘ஏய்யா மீன் கழிவுகளைக் கொட்டின?’ அப்டின்னு கோபமா கேட்டார்” “பழைய ரயில் கரி இன்ஜின் போலப் புசுபுசுத்தார்” “அவரை நீ என்ன பண்ணின?” “அவரை மடிலபோட்டு ரோரோன்னு கொஞ்சினேன்” “பொய்.. அவரைத் தாறுமாறா அடிச்சு, சட்டையைக் கிழிச்சு, தலைமுடியைப் பிய்ச்சு, அவர் மூஞ்சில சாணிய அப்பிட்ட… இன்ஸ்பெக்டர் ஐஸியூல இருந்து போன வாரம்தான் டிஸ்சார்ஜ் ஆனார். ஸ்டேஷன் ஆளுக வந்து உன்னையும் இன்ஸ்பெக்டரையும் விலக்கிவிடலைன்னா இன்ஸ்பெக்டர் அடி தாங்காமச் செத்திருப்பார்” “என்னை ரொம்பப் புகழாதிங்க பப்பரப்பா பப்ளிக் புராசிகுட்டர்” “நீ வெளிவாசல் டானாக்காரரைத் தொந்திரவு பண்ணினது, இபிகோ 353 பிரிவின்படியும் இன்ஸ்பெக்டரைத் தாக்கிக் கொல்ல முயன்றது இபிகோ 307 பிரிவின்படியும் குற்றம். இதோட உன் க்ரைம் நின்னுச்சா? இல்லையே…” “எதையும் அரைகுறையா செய்றது என் பழக்கமில்லை” “ஸ்டேஷனுக்குள்ள இருந்த பெண் போலீஸைக் கட்டியணைச்சு இங்கீலிசு முத்தம் கொடுத்திருக்க.. பெண் போலீஸிடம் அத்து மீறி, பாலியல் பலாத்காரம் பண்ண முயற்சி பண்ணின. அந்தப் பொண்ணு வாங்கின முத்தத்தோட தப்பிச்சு ஓடிருச்சு” “அந்தப் பொம்பளை போலீஸ் எனக்குப் போதிய ஒத்துழைப்புத் தரல… ரேப் பண்றது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?” “பணியில் இருந்த பெண் போலீஸைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது இபிகோ 376 பிரிவின்படி ஏழுவருடக் கடுங்காவலுக்குரிய குற்றம். பெண் போலீஸின் கழுத்துச் செயினைத் திருடினாய். இது இபிகோ 511 பிரிவின்படிக் குற்றம்..” “அந்தப் பெண் போலீஸ் மாடு கட்டுற கயிறு மாதிரி இருந்துச்சு. அந்தச் செயினை விலைக்கா வாங்கிப் போட்டிருக்கும்? லஞ்சம் வாங்கித்தான் போட்டிருக்கும். அதான் லஞ்சப் பொருளைப் பறிமுதல் பண்ணினேன்…” “உன் அடுத்த க்ரைம்.. எழுத்தர் மேஜைக்கு ஓடி அவரின் கம்ப்யூட்டரை உடைத்தாய். அவரின் மேஜையிலிருந்த கோப்புகளைக் கிழித்துப் போட்டாய்..” “போலீஸ் ஸ்டேஷன்கள் இல்லேன்னா ஆட்டோமாட்டிக்காக குற்றங்கள் குறைஞ்சிடும். ஒருத்தனும் கள்ளச்சாராயம் காய்ச்ச மாட்டான். நேஷனல் பெர்மிட் லாரிக்காரன்கள் நிம்மதியா லாரி ஓட்டுவான்க. நடைபாதை வியாபாரிகள்கிட்ட கோயில் யானை மாதிரி பிச்சை கேட்பது நின்றுவிடும். கட்டப் பஞ்சாயத்துகள் நடக்காது..” மாஜிஸ்டிரேட் குறுக்கிட்டார். “விட்டா நீதிமன்றங்களும் தேவை இல்லைன்னு சொல்வ போல…” “நீதிமன்றங்கள்ல நேர்மை இருந்தா சாமானியர்களுக்கு எளிமையா நீதி கிடைச்சிரும். ஆனா அதனால நமக்கென்ன லாபம் மொதலாளி? இதுல தொழில் ரகசியம் என்னன்னா.. கி.. கி.. கி..” உசிலைமணியைப் போலவே மிமிக்ரி செய்து நீதிபதியை நக்கல் அடித்தான் ராக்கப்பன். “உன் பேச்சு நீதிமன்ற அவமதிப்பின் கீழ் வரும். நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971இன் பிரிவு 2(சி), உன் துர்நடத்தைக்குத் தகுந்த தண்டனை தரும்” பப்ளிக் பிராஸிக்யூட்டர் தொடர்ந்தார். “காவல்நிலையப் பணிகளைச் செய்ய விடாதது, காவல்நிலைய சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தது ஆகியவை இபிகோ 425இன் படி குற்றம்” “குற்றம் குற்றம்னு ஏன் பினாத்றீங்க?” கத்தினான் ராக்கப்பன். “இதோட குற்றஞ்சாட்டப்பட்ட ராக்கப்பனின் குற்றங்கள் முடிவடையவில்லை. லாக்கப் ரூம் சாவியை எடுத்துத் திறந்து, லாக்கப்பில் இருந்த ஆறு கைதிகள் தப்பித்து ஓட உதவியிருக்கிறார்” “உங்கள்மீது சுமத்தப்படும் குற்றங்களை எல்லாம் ஒப்புக்கொள்கிறீர்களா ராக்கப்பன்?” “ஒத்துக்கிட்டா அவார்டா தரப் போறீங்க?” “நேரடியான பதில் தேவை…” ராக்கப்பன் சார்பாக வாதாடும் வக்கீல் எழுந்தார். “யோவ் தேங்காமூடி வக்கீல்… நீ எனக்காக வாதாடி இன்னும் தண்டனையைக் கூட்டிராத. கம்னு உக்காரு” மாஜிஸ்டிரேட் ஒருகணம் யோசித்தார். “மிஸ்டர் பிபி, அக்யூஸ்ட்டின் நடவடிக்கைகள் முழுக்க மனநிலை பிறழ்ந்த ஒருவரின் நடவடிக்கைகளாகத் தெரிகிறது. நாம் ஏன் இவரை மனநலப் பரிசோதனைக்கு அனுப்பக்கூடாது?” “ஏய் ஜட்ஜு.. யாரைப் பாத்து மென்டல்னு சொன்ன? நீதான் மெண்டல். நான் நல்லாத்தான் இருக்கேன்.. என்னால வேணுமின்னா பத்து பேரு மெண்டல் ஆவானுக” “போலீஸ் உன்னை அடித்தார்களா?” “அவனவன் பொண்டாட்டிக மேல இருந்த கோவத்தை என்னை அடிச்சுத் தீர்த்துக்கிட்டான்க. நான் வடிவேலுமாதிரி. என்னை ஆயிரம் அடி அடிச்சாலும் நல்லா இருந்துச்சு மசாஜ்னு எந்திரிச்சு வந்திருவேன்..” “உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாக இருக்கிறது” “நான் பரிதாபப்படச் சொன்னேனா? நீ உன் வேலையப் பாரு மாஜிஸ்..” “உன் தண்டனையைக் குறைக்கலாமா?” “எதுக்கு? இபிகோ என்ன சொல்லுதோ அந்த தண்டனைகளை என் மீது விதிச்சிட்டுப் போ..” மாஜிஸ்டிரேட் தன் தீர்ப்பை வாசிக்க ஆரம்பித்தார். “இபிகோ 353, 376, 425, 511 மற்றும் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் 1971 பிரிவு 2(சி)இன்படி குற்றஞ்சாட்டப்பட்ட ராக்கப்பனுக்கு மொத்தமாக 17 வருடக் கடுங்காவல் தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கிறேன். அபராதம் கட்டவில்லை என்றால் கூடுதலாக ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை…” “டாங்ஸ் மாஜிஸ் செல்லாக்குட்டி” “உனக்கு அப்பீல் செய்ய அவகாசம் வேண்டுமா? சொந்த ஜாமீன் தரட்டுமா?” “அய்ய.. நேரா என்னைப் புழலுக்கு அனுப்பு அம்மணி..” *** புழல் சிறைச்சாலைக்குள் நுழைந்தான் ராக்கப்பன். “என்னய்யா… நுணலும் தன் வாயால கெடும் என்பதுபோல, குற்றங்களை எல்லாம் பெருமையா ஒத்துக்கிட்டு ஜெயிலுக்கு வந்திட்ட?” என்றார் வார்டன். “நான் போட்டு வைத்த ஜெயில் திட்டம் ஓகே கண்மணி” பாடினான் ராக்கப்பன். “என்னது.. திட்டம் போட்டியா?” “ஆமா.. திட்டம்தான். மூன்று வேளை ராஜ உணவு- வாரத்திற்கு ஒரு புது சினிமா- மாதம் ஒருமுறை மனைவியுடன் மூன்று மணிநேரம்- செல்போன் இன்கம்மிங் கால் வசதி- ஆறுமாதத்துக்கு ஒரு வாரம் பரோல்- ஏசி அறை ஈரோப்பியன் கிளாசெட்டுடன். சிறைக்குள் கிடைக்கும் வசதி வாய்ப்பெல்லாம், மாதம் நாப்பதாயிரம் செலவு பண்ணினாலும் கிடைக்காது. தினம் மீன்வெட்டிச் சுத்தப்படுத்திக் கொடுத்தா பிச்சைக்காசு இருபது முப்பது ரூபாதான் கிடைக்கும். அதனால திட்டம் போட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள புகுந்து, வெரைட்டி வெரைட்டியா க்ரைம் செய்து கைதாகிவிட்டேன். அடுத்த 15-18 வருஷத்துக்கு நான் மாமியார் வீட்டுக்குப் போன புது மாப்பிள்ளை.. செம என்ஜாய் கரோதான்” வார்டன் தோள்களைக் குலுக்கி அங்கலாய்த்தார். “அட கிறுக்குப் பயலே.. எனி ஹவ், அரச விருந்தாளிக்கு என் கண்ணிய வரவேற்பு..” வெல்கம் ட்ரிங்க்காகக் கொடுக்கப்பட்ட மட்டன் சூப்பைக் குடித்தபடி கண் சிமிட்டிய ராக்கப்பன் சொன்னான், “சுதந்திர தினத்திற்கு பீஃப் பிரியாணி போட்ருங்க..”

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

காட்சி 5 களமும் காலமும் : அதே களம், அதே காலம் பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள் மற்றும் சங்கர கிருஷ்ணன் (பூஜை முடித்து வந்த ஓம்கார் சுவாமிகள் தம் இடத்தில் அமர்ந்துகொள்கிறார். கூடவே வந்த சங்கர கிருஷ்ணன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பாயில் அமர்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இங்கே மாலை ஆறு மணிக்கெல்லாம் நல்லா இருண்டு விடுகிறதே?! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, மழைக்காலத்தில் இன்னும் சீக்கிரமாகவே இருண்டுவிடும். சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. வ.உ.சி.யைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி.. பிள்ளைவாள் திருநெல்வேலியில் கைதாகும் வரை நான் அவருடன் பட்டும் படாமலும்தான் இருந்தேன். பிள்ளைவாளுடன் நான் இருந்த சொற்பக் காலம் மிக வேகமாக ஓடியது. என் பாதை வேறு, பிள்ளையின் பாதை வேறு என்பதை நான் அவரோடு சேர்ந்த கொஞ்சநாளிலேயே தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : அதைத் தெரிந்துகொள்ள காலத்தில் கொஞ்சம் பின்னால் போக வேண்டும். பாரதி சொன்னாரல்லவா? பாலர் பற்றி.. பாலரை நேரில் சந்தித்தேன். அப்புறம் அவரது செயலாளராக இருந்த குஞ்சு பானர்ஜி என்பவரைச் சந்தித்திருந்தேன். அவர்கள் மூலம் வங்கத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் ரகசிய வேலைகளைச் செய்துவந்த, தீவிர தேசபக்த பலாத்கார இயக்கங்களை அறிந்துகொண்டேன். அவர்கள் என்னைத் தமிழ்நாட்டில் இந்த பலாத்கார இயக்கத்திற்குத் தகுந்த ஆட்களைத் தேர்வு செய்யப் பணித்தார்கள். நான் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன். இந்த விஷயம் பாரதிக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் தெரியாது. என் ஆள் சேர்க்கும் பணிக்குப் பிள்ளைவாளோடு போவது பயனளிக்கும் என்றுதான் போனேன். ஆனால் சிதம்பரம் பிள்ளையின் தேசப் பணி வேறு; என் பாதை வேறாக இருந்தது. சங்கர கிருஷ்ணன் : வ. உ. சி.க்கோ பாரதிக்கோ அல்லது திலகருக்கோ பலாத்கார வேலைகளில் நம்பிக்கை கிடையாதா..? ஓம்கார் சுவாமிகள் : இருந்தது என்றுதான் நம்புகிறேன். ஆனால் அதற்குக் காலம் கனியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.‘நேரடி பலாத்கார வேலைகளைவிட, தேசபக்தியைப் பரப்புவதே உமது பணியாக இருக்கட்டும்‘ என்று, சகோதரி நிவேதிதா தமக்குக் கட்டளை இட்டதாக, பாரதியார் என்னிடம் ஒருமுறை சொன்னார்.அதுபோக, பாரதியும் பிள்ளைவாளும் தமிழ்க் கலையிலும் இலக்கியத்திலும் பழக்கம் உடையவர்கள். பலாத்கார இரகசிய நடவடிக்கைகள், தமிழ் அரசியல் நெறிக்குப் பொருந்தி வரவில்லை என்று அவர்கள் நம்பினார்கள்.(கொஞ்சம் நிறுத்திக்கொள்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சிதம்பரம் பிள்ளையிடம் எவ்வளவு நாள் இருந்தீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : மிகக் கொஞ்சமாத்தான். சென்னையிலும் தூத்துக்குடியிலுமாக ஒரு மூனு மாசமிருக்கலாம். ஆனா அவரு கூட இருந்ததனால, பின்னால திருநெல்வேலி ஜில்லாவுல எனக்கு நெறைய தொடர்பு கெடச்சுது. அவர் வக்கீலாக இருந்தார். நிறைய பேருக்கு உதவி செய்துவந்தார். சுதேசிப் பிரசாரம், பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டங்கள், சுதேசி பண்டகசாலைன்னு நிறைய பணிகளைச் செஞ்சு வந்தார். சுதேசிக் கப்பல் விட்டது பெரிய வேலை. இப்படியொரு யோசனை சிதம்பரம் பிள்ளைக்கு எப்படி வந்திருக்கும் என்பது அந்தக் காலத்தில் எல்லாருக்கும் ஆச்சர்யமாய் இருந்தது தம்பி. அதை எப்படி வெள்ளைக்காரன் பொறுத்துக்கொள்வான்? அதுதான் அவரு மேல வெள்ளைக்கார அதிகாரிகளுக்குப் பகையைக் கொண்டுவந்தது. அப்புறம் அவரு நடத்துன மில் போராட்டம், வெள்ளைக்காரனுக்குப் புயலும் வெள்ளமும் சேர்ந்து தாக்குனது போல ஆச்சுது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்காரங்களும் கோரல் மில் டைரக்டர்களும் உடன் பிறந்தவங்க மாதிரிதான். சிதம்பரம் பிள்ளை ரெண்டு பக்கமும் வந்தாரு. வணிகம், அரசியல்-ன்னு இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியோட சிதம்பரம் பிள்ளையை வெள்ளை நிர்வாகம் பார்த்தது தம்பி. தொழிலாளிங்கன்னு ஒரு சக்தியை முதன்முதலா இந்தத் தமிழ்நாடு அப்போதுதான் கண்டது தம்பி. படிச்சவங்களே இருந்த அரசியல்ல, படிக்காத ஜனங்கல்லாம் அணி அணியா வந்ததைப் பார்த்து வெள்ளை அதிகாரம், வெலவெலத்துப் போனது. மில் தொழிலாளிகள் கூலியும் கேட்டார்கள். வந்தேமாதரமும் முழங்கினார்கள். இது 1908இல் மிகப்பெரிய அதிசயம் தம்பி. (மீண்டும் சிறிய சிந்தனைக்குப் பிறகு தொடர்கிறார்) ஆனா, பிள்ளை வேலைகள்ள இருந்த சூட்சும அரசியல் அப்போ எனக்குப் புரியல; பின்னாலதான் புரிஞ்சுது. அந்த அரசியலின் எதிர்வினை ரொம்ப நாள் மறையவே இல்லை. சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் எதிர்விளைவு, மூன்றாண்டுகள் கழித்து மணியாச்சியில் வெடித்தது. ஆகவே, என் வாழ்க்கையில் நான் நேரடியாக ஈடுபடாத ஆஷ் கொலையில் சிதம்பரம் பிள்ளையின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் பின்னணி இருந்தது. 1908இல் பிள்ளை செய்த வேலைகளுக்கும் எங்களோட பலாத்கார வழிமுறைகளுக்கும் இடைவெளி நெறைய. அதனால நான் சிதம்பரம் பிள்ளைக்கு வேலை செஞ்ச கையோடே, தனியா ரகசிய இயக்கத்திற்கும் திருநெல்வேலி ஜில்லா முழுசும் அலைஞ்சு ஆள் சேர்த்து வந்தேன். சிதம்பரம் பிள்ளையோட சுதேசி இயக்கத்துல வேலை செஞ்சவங்கள்ள இருந்து சில பேரை எங்க இயக்கத்திற்கும் சேர்த்துகிட்டேன். சங்கர கிருஷ்ணன் : வ.உ.சி. கைதானவுடன் நடந்த எழுச்சிகளில் உங்கள் நடவடிக்கைகள் ஏதுமில்லையே! அப்போது நீங்கள் திருநெல்வேலியில இல்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : ‘ சொல்றேன். 1908 புது வருஷம் பிறந்தபோது, சூரத் காங்கிரஸ் முடிஞ்சு சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி வந்தப்போ, அவருகூட நானும் வந்தேன். அப்போது, தூத்துக்குடி சுதேசி இயக்கச் சூட்டில் பொங்கிக்கொண்டிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பத்மநாப அய்யங்கார் வந்திருந்து, தூத்துக்குடியில் பிரசங்கங்கள் செய்தார். தூத்துக்குடி எங்கிலும் பெரிய கிளர்ச்சி நிலை சூழ்ந்திருந்தது. அப்போ… (மேடையில் ஒளி மங்கி இருளாகித் திரை விழுகிறது)

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பு திருப்பூர் பின்னலாடைத் தொழில் உருவாகிப் பின்னர் அது பெரும் தொழிலாக உருமாறிய பரிணாம வளர்ச்சியின் வரலாறு, சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடைத் தொழில் வளர்ச்சியால் மாநகரமாக விரிவடைந்தது, பின்னலாடைத் தொழிலின் படிநிலைகள், திருப்பூரின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதியில் தொழிலுக்கான அடிப்படை, முதலீடு மற்றும் அவை தொடர்பான தரவுகளைக் காண்போம். முந்தைய பகுதிகளை வாசிக்கத் தவறியவர்கள் கீழே உள்ள இணைப்புகள் வழியே அவற்றை வாசித்துவிட்டு, இந்தப் பகுதியைத் தொடர்ந்தால் பின்னலாடைத் தொழில் குறித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். பின்னலாடை உற்பத்திச் சங்கிலியின் பல்வேறு படிநிலைகளை முன்பே விளக்கமாகப் பார்த்தோம். ஒவ்வொரு படிநிலை உற்பத்தி மையங்களும் ஒவ்வொரு விதமான கட்டமைப்பு, அதற்கேற்றாற்போல் இயந்திரங்கள், தொழிலாளர்கள் ஆகியவற்றைக் கொண்டவை. அடிப்படை முதலீடுகளும் ஒவ்வொரு தொழிற்சாலையின் தன்மைக்கேற்ப மாறுபடும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் முதலீடுகள் செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பக் கட்டத்தில் முற்றிலும் இந்தியத் தயாரிப்பு இயந்திரங்களை மட்டுமே கொண்டு தொழிற்சாலைகள் இயங்கின, ஏற்றுமதி வர்த்தகம் தொடங்கிய பின்னர், ஒவ்வொரு படிநிலை உற்பத்தித் தளங்களிலும் இறக்குமதி இயந்திரங்கள் கோலோச்சத் தொடங்கின. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, தைவான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு கடன் சலுகைகள், மானியங்கள், ஊக்குவிப்புத் தொகை போன்றவை, சாமானியர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றியது. வங்கிக் கடன் வசதி மிக எளிதாகக் கிடைக்கப்பெற்றதும் கிடைத்த கடனைக் கொண்டு தொழிலைச் சிறப்பாக முன்னெடுத்து, அடுத்தடுத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு வர்த்தக வளர்ச்சியையும் அதன் வாயிலாக வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கப்பெற்ற சூழல் உருவானது. இதைத் தாண்டி, இங்கு ஒரு பண்பாடு உண்டு. ஆடை உற்பத்தி என்பது, பல்வேறு படிநிலைகளைக் கொண்டது என முன்பே குறிப்பிட்டதைப்போல, ஒவ்வொரு படிநிலைத் தொழில் முனைவோர்களும் அடுத்தடுத்த படிநிலைத் தொழிமுனைவோர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டதாலேயே இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது. இந்த இணக்கம் என்பது, பொருளாதார ஆதரவையும் உள்ளடக்கியது என்றால் மிகையல்ல. வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கப்பெறும் ஒரு ஏற்றுமதி நிறுவனம், அந்த ஆர்டருக்கான உற்பத்திச் செலவுக்காக, வங்கியில் மூலதனக் கடனைப் பெறும். ஆர்டரின் மொத்த மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் தொகையை வங்கிகள் கடனாகக் கொடுக்க, இதர படிநிலை நிறுவனங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பணிக்கான தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனாக வழங்க, ஏற்றுமதி நிறுவனம் அணைத்து ஒருங்கிணைப்பையும் செய்து ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து, வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்று, மூலதனக் கடனை அடைப்பர். வங்கிகள் உள்ளிட்ட, உற்பத்திப் படிநிலைக் கடன் அனைத்திற்கும் ஏற்றுமதி நிறுவனமே பொறுப்பு. ஏற்றுமதி செய்வதென்பது, லாபத்தைக் கடந்து, பெரும் சவாலான ஒன்று என்றே சொல்லலாம். ஏனெனில், வெளிநாட்டு வர்த்தகர், நாம் அனுப்பிய சரக்கை எடுக்காமலோ அல்லது பெற்றுக்கொண்டு பணத்தை வழங்காமல் போனாலோ, ஏற்றுமதி நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் மீளவே முடியாமல் சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்கும் சூழல் உருவாகும். ஆடைச் சந்தை என்பது மிக நுட்பமான ஒன்று. குறித்த காலத்திற்குள் ஆடைகள் தயாராகி சந்தைக்கு விற்பனைக்குச் செல்லவேண்டும். தவறும் பட்சத்தில் சரக்குக்குள் தேங்கும் அபாயம் மற்றும் அதிகத் தள்ளுபடி கொடுத்து விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதையும் கடந்து, வெளிநாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்து வாயிலாகச் செல்லும் ஆடைகள், உற்பத்தி இலக்குக் காலம் தவறும்பட்சத்தில், விமானம் மூலம் ஆடைகளை அனுப்ப நேர்ந்தால், கடல் வழியே அனுப்புவதற்குச் செலவாகும் தொகையைப்போல, 10 முதல் 12 மடங்கு அதிகமாகச் செலவழிக்க வேண்டும். இது ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு கடும் பொருள் இழப்பை ஏற்படுத்தும். ஏற்றுமதித் தொழிலில், குறித்த கால உற்பத்தியும் தரமும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை.  இந்தியாவைப் பொறுத்தமட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் தொழில் ஜவுளித் தொழில்.  அதேநேரத்தில், குறைத்த முதலீட்டில் நல்ல லாபமும் தொழிலைத் தொடர்ந்து விரிவாக்கும் வாய்ப்புகள் அதிகமும் பெற்ற தொழிலும் இதுதான். அடர்ந்த மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிக அளவில் இருக்க வேண்டும். அந்தவகையில் திருப்பூர், அதிக வேலைவாய்ப்பினை, அந்நியச் செலவாணியை, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஊராகத் திகழ்ந்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடு என்பது 110 பேருக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும். இதன் காரணமாகவே, அதிக வளர்ச்சியை நோக்கி இந்தத் தொழில் பயணித்தது. இன்னும் ஒரு பண்பாட்டை இங்கே மீண்டும் குறிப்பிட்ட ஆகவேண்டும். புதியவர்களுக்கு, தொழிலை மனமுவந்து கற்றுத் தருவதோடு மட்டுமல்லாது, அப்படிப் பயின்றவர்களுக்குச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதோடு, தொழிலைக் கற்றுக்கொடுத்தவரே முன்னின்று புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறும் வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து, மூலப்பொருட்களைத் தரும் நிறுவனங்களிடம் தாங்களே பிணையாக நின்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனைப் பெற்றுத்தந்ததுடன், சந்தை வாய்ப்புகளைக் கற்றுத் தந்து ஒரு சமூகமாக உயர்வதற்கான பண்பாட்டு விழுமியங்களைத் திருப்பூர் மக்கள் தங்களை அறியாமலே கொண்டிருந்தனர். இந்தத் திறந்த மனதும் பெருந்தன்மையான செயல்பாடும் திருப்பூரில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாக அமைந்தன. அது மட்டுமல்லாது, இங்குள்ள பெரும்பாலான தொழில் முனைவோர்கள் வேளாண் பின்னணியைக் கொண்டவர்களே. அவர்களுக்கு, வேளாண் வருவாய் சேமிப்பாக வைத்துள்ள உற்றார் உறவினர், மிகக் குறைந்த வட்டி அல்லது தங்களுக்குத் தேவையான நேரத்திற்கு தொகையைத் திருப்பித் தரவேண்டும் என்னும் நிபந்தனையோடு வட்டி இல்லாமலும் கடன் கொடுத்தனர். வங்கிக் கடனுக்குப் பிணையாக அசையாச் சொத்துக்களை வழங்க இயலாதவர்களுக்கு, இதுபோன்ற கடன் வசதிகள் பெரும் பேறாக அமைந்தன.   ஏற்றுமதி செய்வதிலிருக்கும் அபாயம் குறித்து மேலே பார்த்தோம். அதற்கான தீர்வாக, மத்திய அரசின் ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் (ECGC), இறக்குமதியாளர்களின் பின்னணியை, அதற்கென உள்ள மதிப்பீட்டு நிறுவனங்கள் வழியாகப் பெற்று, அதற்கேற்ப கடன் உத்திரவாதங்களை அளித்தனர். இதனால் பாதுகாப்பான ஏற்றுமதி என்கிற நிலையை எட்ட முடிந்தது. சுருங்கச் சொன்னால், இது ஒரு காப்பீட்டுத் திட்டம் போலச் செயல்படும். பணத்திற்கான உத்திரவாதத்தைக் கொடுப்பதற்கு நாம் சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு வட்டி மானியத் திட்டங்களுடன், மாநில அரசும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கடன் உதவிகளை விரைவாக அளித்ததும் இந்தத் தொழில் வளரப் பெருமளவு உதவியது. தற்சமயம் சிறிதும் பெரிதுமாக சுமார் 20000 நிறுவனங்கள் வாயிலாக, சுமார் 60000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது எனில், இவை அனைத்திற்குமான அடிப்படை முன்பே குறிப்பிடப்பட்ட பல்வேறு கடன் உதவிகளே. தொழில் வளர்ச்சிக்கான அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். இனி தொழில் சந்தித்துவரும் பிரச்சனைகள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான தீர்வுகள் போன்றவற்றை இனி அடுத்தடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம். மீண்டும் திங்களன்று புதிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன். நம்பிக்கையுடன் நடைபோடுவோம்.

நீலகண்ட பிரம்மச்சாரி – 4

நீலகண்ட பிரம்மச்சாரி – 4

காட்சி 4 (மேடையில் முந்தைய காட்சியில் ஓம்கார் சுவாமிகள் பேசிக்கொண்டிருந்த இடம் இருட்டாகவும் இன்னொரு பகுதி ஒளியிலும் இருக்க வேண்டும். ஒளி விழும் பகுதியில் காட்சிகள் விரிகின்றன) காலம் : 1907ஆம் ஆண்டின் இறுதியில் ஒருநாள் முற்பகல் வேளைகளம் : சென்னையில் இந்தியா பத்திரிகை அலுவலகம்பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை (பாரதியார் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார். நீலகண்டர் படித்துக்கொண்டிருக்கிறார். வ.உ.சி. உள்ளே வருகிறார்) வ.உ.சி : வணக்கம் மாமா..! பாரதி : வாரும் மாப்பிள்ளை.. பட்டனத்திற்கு எப்போ வந்தீர்..? வ.உ.சி : இன்னைக்குக் காலையிலேதான் மாமா.. பாரதி : சுதேசிக் கப்பல் ஓட்டமெல்லாம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது..? வ.உ.சி. : வழக்கம்போல நெருக்கடிதான். இருந்துமென்ன? தூத்துக்குடி வர்த்தகப் பெரியவர்களும் மக்களும் தரும் பேராதரவில் சுதேசிக் கம்பெனி நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது மாமா. அது விஷயமாகவும் உங்களைப் பார்க்க வந்தேன். பாரதி : ‘சொல்லுங்க பிள்ளைவாள்.. வ.உ.சி. : கம்பெனிக்கு இன்னும் பங்குகள் சேகரிக்க வேண்டும். தேசபக்தியும் வர்த்தக நிபுணத்துவமும் தெரிந்த இளைஞர் ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் மாமா. பாரதி : கிடைச்சாச்சுன்னு வச்சுக்குங்க மாப்ளே.. (நீலகண்டரைப் பார்த்து) தம்பி.. இங்கே கொஞ்சம் வாரும். சிதம்பரம் பிள்ளையைத் தெரியுமல்லவா..? நீலகண்டன் : பிள்ளைவாளைத் தெரியாமலா..? (வ. உ. சி. யைப் பார்த்து) “வணக்கம் அண்ணா.. பாரதி : (வ.உ.சி.யிடம்) இவர் நீலகண்டன். இங்கிருக்கும் பிரசித்தி பெற்ற வர்த்தகக் கம்பெனி ஒன்றில் கணக்கராகவும் சரக்குப் பிடிக்கிறவராகவும் வேலை பார்க்கிறார். விபின் சந்திரபாலர் இங்கே வந்தபோது, அவரது பேச்சினால் தேசபக்தராகி இந்தியாவுக்கும் வேலை பார்க்கிறார். இப்போ பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, முழுமையாக தேச வேலைக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். நான்தான் நேரம் வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். வ.உ.சி. : ஆஹா..! சந்தோஷம். பாலரைக் கேட்ட பிறகும் ‘இந்தியாவுக்கு‘ வேலை செய்யாமல் போவாரா..? பாரதி : (வ.உ.சி.யின் சிலேடையைக் குறித்து) சபாஷ்.. (நீலகண்டனைப் பார்த்து) இனிமேல் பிள்ளைவாளிடம் நீ வேலை பார்க்கலாம். சுதேசிக் கம்பெனிக்கு பங்குகளைச் சேகரித்துக் கொடுக்கவேண்டும். அப்படியே பிள்ளைவாளுக்குத் துணையாக தேச சேவையும் செய்யலாம். என்ன சொல்கிறாய் தம்பி..? நீலகண்டன் : அண்ணா பேச்சுக்கு அட்டியேது..? இன்னைக்கே பிள்ளைவாளுடன் சேர்ந்துடறேன். வ.உ.சி. : இப்போது வேண்டாம் நீலகண்டன். நான் சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் சேர்த்து அழைத்துப் போக வந்திருக்கிறேன். மாமாவைப் பார்க்க வந்த முக்கிய வேலையே அதுதான். நான் தூத்துக்குடி சென்றபிறகு ஒருநாள் அழைக்கிறேன். வந்து விடுங்கள். நீலகண்டன் : சரி அண்ணா.. வ.உ.சி. : (நீலகண்டனைப் பார்த்து) பாலரின் பேச்சைக் கேட்டிருப்பீர்கள்.. எப்படி இருந்தது..? நீலகண்டன் : ஒரே நேரத்தில் வெயிலும் சாரலும் சேர்ந்ததுபோல.. ஒரே நேரத்தில் கள்ளும் தேனும் அருந்தியதுபோல.. ஒரே நேரத்தில் பிள்ளைவாளையும் பாரதியாரையும் கேட்பதுபோல.. வ.உ.சி. : பலே பலே.. மாமா.. தம்பிக்குக் கவிதையும் வரும்போல.. சகவாச வரமா..? பாரதி : இவன் சிங்கம்.. உங்களிடம் சேர்ந்தால் தங்கமாகவும் மின்னுவான்.. பராசக்தி அருள் பொழிவாள்..! வ.உ.சி. : கவி வாக்கு பலிக்க வேண்டும். இப்போ சூரத் காங்கிரஸ் வேலைகள் பற்றிப் பேசலாமா மாமா..? (மேடையில் மூவரும் இருக்கும் பகுதியில் ஒளி மங்கி, ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருந்த பகுதியில் ஒளி பரவுகிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. கவி வாக்கு பலித்ததா..? ஓம்கார் சுவாமிகள் : ஆஹா..! பாதி பலித்தது.. பாதி பலிக்கவில்லை தம்பி. சங்கர கிருஷ்ணன் : அது எப்படி சுவாமிஜி? ஓம்கார் சுவாமிகள் : சிதம்பரம் பிள்ளையே பெரிய சிங்கம். நான் அவர் பக்கத்தில் மின்னுவதெப்படி..? ஆகவே பாரதியார் சொன்ன நீலகண்ட சிங்கம், வேறு தங்கங்களைத் தயார் செய்யப் போய்விட்டது. அதற்கும் பிள்ளைவாள் பாசறையில் கற்றதுதான் காரணம் தம்பி. அதுதான் பாதி பலித்தது என்றேன். சிதம்பரம் பிள்ளை ஒரு வசீகரமான தலைவர். கனவான்கள், தொழிலாளிகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என்று, எல்லாத் தரப்பாளர்களிடமும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. சுருக்கமாச் சொன்னால், அவர் பின்னால் தூத்துக்குடி நகரமே இருந்தது. அது மட்டுமல்ல; சூரத் காங்கிரசுக்குப் போய்விட்டு வந்தபிறகு, அவர் தமிழ்நாட்டின் தலைவருமாகிவிட்டார். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! சுவாமிஜி, வ.உ.சி.யின் ஆளுமையை எத்தனை உணர்ச்சி பொங்க வர்ணிக்கிறீர்கள்..! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, பிள்ளைவாளின் ஆதர்சம் அப்படி.(கொஞ்சம் நிறுத்துகிறார்)சங்கர கிருஷ்ணன் : என்ன சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (குரல் தழுதழுக்க) பாரதியார் சொன்னாரே.. “வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார் மன்னனென மீள்வான்” என்று. அந்த வாக்கு, சிதம்பரம் பிள்ளைக்குப் பலித்திருக்க வேண்டும் தம்பி.. (சீடர் உள்ளே வருகிறார்) சீடர் : சுவாமி.. கோவில் பூஜைக்கு நேரமாகிறது. ஓம்கார் சுவாமிகள் : பூஜை முடித்து வந்தபிறகு பேசலாம் தம்பி.. (ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை பேசுவோம்.

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

காட்சி 3 காலமும் களமும் : அதே நாள்; அதே இடம். பாத்திரங்கள்: சங்கர கிருஷ்ணன் மற்றும் சீடர். (மேடையின் ஒருபகுதி இருளாகவும் மறுபகுதி ஒளியிலும் இருக்கிறது. இருளான பகுதியில் ஓம்காரின் அறை உள்ளது. ஒளிவிழும் பகுதியில் சங்கர கிருஷ்ணன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : “ஐயா, ஆசிரமம் எவ்வாறு நடக்கிறது? பொருள் உதவி யார் செய்கிறார்கள்.?” சீடர் : “சுவாமிஜியைத் தெரிந்த வடநாட்டு நண்பர்களும் இங்கேயே இருக்கும் சில பெரிய மனிதர்களும் தனவந்தர்களும் உதவி செய்கிறார்கள். சுவாமிஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரும் பொது ஜனங்களும் உதவுகிறார்கள். இந்தப்பக்கம் உள்ள ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் உதவி பண்றாங்க..” சங்கர கிருஷ்ணன் : “நல்லது ஐயா, சுவாமிஜி பற்றி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்களேன்..” சீடர் : “ஐயா, நான் இங்கு வந்து சிலகாலம்தான் ஆகிறது. எனக்கு சீர்காழி. சுவாமிகளின் ஊர்க்காரன்தான். சுவாமிஜியின் பிரசங்கங்கள் இங்கு வெகு சகஜம். வடநாட்டு பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் இவரைப் பத்தியும் இவரோட பிரசங்கங்களையும் போட்டிருக்கிறார்கள். இவர் பெரிய புரட்சிக்காரர் என்பதெல்லாம் இங்கே உள்ளவர்களுக்கு அதிகம் தெரியாது. இவரும், தனது பழைய செய்திகளை யாருக்கும் சொல்வதும் இல்லை. எனக்குக்கூட கொஞ்சமாகத்தான் தெரியும்..” (சங்கர கிருஷ்ணன் சாப்பிட்டு முடிக்கிறார்) சீடர் : “தட்டத்திலேயே கை அலம்பிக்கொள்ளுங்கள். ஓய்வறை இருக்கிறது. சற்று ஓய்வெடுங்கள். சுவாமிஜியை மாலை சந்திக்கலாம். நான் வந்து அழைத்துக்கொள்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “ஓய்வு தேவையில்லை. ஆசிரமப் பணிகளைப் பார்க்கிறேனே..” சீடர் : சரி, வாருங்கள், சுற்றிக் காட்டுகிறேன். (இருவரும் அறையிலிருந்து வெளியேறுகிறார்கள். சாப்பாட்டு அறையில் ஒளி மறைந்து ஓம்கார் சுவாமிகளின் அறைப் பகுதியில் ஒளி வருகிறது. ஓம்கார் சுவாமிகள் அமர்ந்திருக்கிறார். சங்கர கிருஷ்ணன் உள்ளே வருகிறார்) நேரம் : மாலை 4 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : “வாரும் சங்கர கிருஷ்ணன். அமருங்கள். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தீங்களா?” சங்கர கிருஷ்ணன் : “ஆமாம் சுவாமி.. கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்தது.” ஓம்கார் சுவாமிகள் : “என்ன ஆச்சர்யம் தம்பி?” சங்கர கிருஷ்ணன் : “இந்த 85 வயசிலேயும் ஆசிரம வேலைகளை நீங்களும் செய்றீங்க.. அப்புறம்…” ஓம்கார் சுவாமிகள் : “அப்புறம் என்ன? சொல்லுங்கள்..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமணர் என்பதால் ஆசிரமத்தில் எல்லாரும் பிராமணர்களாக இருப்பாங்களோன்னு நெனைச்சுட்டேன். ஆனா ஹரிஜன்கள் தொண்டர்களா இருக்காங்க. சமையல் வரைக்கும் அவங்க இருக்கறதும் ஆசிரமக் கோவில் பணிகள்ளே அவங்க சுதந்திரமா வேலை செய்யறதும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது..” ஓம்கார் சுவாமிகள் : “ஆமாம் ஒரு பன்னிரண்டு தாழ்த்தப்பட்ட குடும்பத்தச் சேர்ந்தவங்க இந்த ஆசிரமப் பணிகள்ள இருக்காங்க. எல்லா சாதிக்காரங்களும் இங்கே வந்து வேலை செய்யலாம். ஆசிரமத்துல சாதி வித்தியாசமே தெரியாது. இப்ப உங்க கண்ணுல பட்டுருக்கு. கண்ணுலயா.. காதுலயா.?” (கேட்டுவிட்டுக் குழந்தைபோலச் சிரிக்கிறார்.) சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி, நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் உங்களிடம் சந்தேகம் ஒன்று கேட்கலாமா?” ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக்கொண்டே) “இந்தப் பீடிகையிலேயே நீங்கள் கேட்கப் போவதென்ன என்று தெரிகிறது. கேளுங்கோ..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமண பாஷையை விலக்கிப் பேசுவது வியப்பளிக்கிறது..” ஓம்கார் சுவாமிகள் : (மீண்டும் வெடிச் சிரிப்புடன்) “40 வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். நான் இப்போது பிரசங்கி அல்லவா? தமிழில் பேசுகையில் இன்னும் முழுதாக மாறிவிட்டதுன்னு சொல்லமுடியாது சங்கர கிருஷ்ணன். நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்கோ.” சங்கர கிருஷ்ணன் : “அறுபது வருசத்திற்கு முன்னே நீங்கள் பெரிய புரட்சிக்காரர். இப்போ சாது. இந்த சந்நியாச வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்திப் போனீர்கள்..?” ஓம்கார் சுவாமிகள் : “இது உங்கள் கேள்வியாக இருக்கமுடியாது. கேட்க வந்ததை நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.” சங்கர கிருஷ்ணன் : “அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல, இது தப்பித்தலா என்று தோன்றுகிறது சுவாமிஜி..” (ஓம்கார் சுவாமிகள் மௌனமாகிறார். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதை அடக்கிக்கொள்வது போன்ற மௌனம்) ஓம்கார் சுவாமிகள் : (கொஞ்சம் உஷ்ணமாகவே) “என்ன சொன்னீர்? கோழைத்தனம் என்றா? தப்பித்தல் என்றா? நான் கோழையில்லை தம்பி; தப்பிக்கவும் இல்லை. நான் அதிபயங்கரவாதியெல்லாம் கிடையாது. அந்த வார்த்தையே தப்பு. என்னால் தொண்டு செய்யாமல் சோம்பி இருக்க முடியாது. இளமையில் குடும்பம், கல்யாணம், சம்பாத்தியம் எல்லாமே விட்டுட்டு வந்தது நாட்டுத் தொண்டுக்காகத்தான்.” (சற்றே நிதானிக்கிறார். இப்போது குரல் சாந்தமடைகிறது) “தம்பி, என் இருத்தல் அவசியமல்லவா? 1930இல் விடுதலையானேன். நாடு மாறியிருந்தது. வெளியே வந்தபோது உப்புச் சத்தியாக்கிரகம் உச்சத்தில் இருந்தது. தேசபக்தி என்பது மாறியிருந்தது. போர்க்களம் மாறியிருந்தது. புதிய களத்தில், புதிய பாதையில், நான் பொருந்திப் போகவில்லை. நான் அறிந்திராத புதிய தேசத் தொண்டர்களோடு என் சேர்க்கை அமையமுடியாது என்ற நிலை. அதுபோக, இந்தச் சாது மனோநிலைக்கு நான் சிறையிலேயே வந்திருந்தேன். அதனால் என் இருப்புக்கும் நாட்டுப் பணியைத் தொடர்ந்து செய்யவும் இந்தப் புதிய பிறப்பைத் தேர்ந்தெடுத்தேன். பலாத்காரப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்தவனாக என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் வங்கப் புரட்சியாளர்கள் இருந்தார்கள்.. பாரதியார் இருந்தார்.. சிதம்பரம் பிள்ளை இருந்தார்.. அரவிந்தர் இருந்தார்.. வ.வே.சு.அய்யர் இருந்தார்.. சிங்காரவேலர் இருந்தார்.. கம்யூனிஸ்ட் பிரசாரகனாகவும் சிலநாட்கள் இருந்தேன். நான் ஒரு கலவை மனிதன். இந்தச் சாது வாழ்க்கைகூட முழுமையில்லை என்றே உணர்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “மன்னிக்க வேண்டும் சுவாமிஜி.. உங்களை சினப்படுத்திவிட்டேன்..” ஓம்கார் சுவாமிகள் : “பரவாயில்லை தம்பி.. இப்பவும், என் பழைய தோழன் சங்கர கிருஷ்ணன் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்..” சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி.. காலையில் ஆஷ் கலெக்டர் கொலை பற்றிச் சொல்லத் தொடங்கினீர்கள்.. தொடர்ந்து சொல்லவேணும்..” ஓம்கார் சுவாமிகள் : “ஆஷ் கொலை.. அது ஒரு குறைப் பிரசவம்.. ஆனாலும் அது, வெள்ளைக்காரர்களை ஒரு உலுக்கு உலுக்கியது. இந்தியாவில் மட்டுமல்ல; இங்கிலாந்தில்கூட அதன் எதிரொலிகள் இருந்தன. அந்தக் கொலையை வாஞ்சி ஐயர் செய்தபோது நான் காசியில் இருந்தேன் தெரியுமா தம்பி..? ஆனால், என்னைத்தான் முதல் குற்றவாளியா ஆக்கினாங்க.” சங்கர கிருஷ்ணன் : ‘தெரிந்திருக்கிறேன் சுவாமிஜி.. ஆனால் உங்கள் வாக்கு மூலத்தில் நீங்கள் யாரையும் விட்டுக் கொடுக்கவில்லை.. குற்றத்தின் மோடிவிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முயலவில்லை..’ ஓம்கார் சுவாமிகள் : ‘அது எப்படிச் செய்வேன்.. அந்த செயலின் சூத்திரதாரி நானில்லை.. அது வ.வே.சு.ஐயர்.. ஆனால் அந்தத் தோழர்கள் என் வார்ப்புகள்.. கொஞ்சம் அவசரப் பட்டு விட்டார்கள்.. அவர்கள் அவசரத்தின் காரணம் சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கலெக்டர் இழைத்த கொடுமைகள்தான்.. சங்கர கிருஷ்ணன் : “விவரமாகச் சொல்ல வேண்டும்.” ஓம்கார் சுவாமிகள் : “சொல்கிறேன். அதைச் சிதம்பரம்பிள்ளையிடம் இருந்து தொடங்கவேண்டும். அப்போது, நான் பாரதியாரின் இந்தியா பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பாரதியாரைப் பார்க்க வந்த சிதம்பரம்பிள்ளையிடம் பாரதியார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அது 1907ஆம் வருசமாயிருக்கும். (சுவாமிகள் கண்களை மூடி நினைவுகளில் மூழ்குகிறார். ஒளி மங்கித் திரை விழுகிறது.)

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 13

(இறுதிப் பகுதி) 14. அசுவத்தாமா செய்தது கொரில்லா யுத்தமா? கர்ணனின் தூய மனம் பற்றியும் மனிதாபிமானம் பற்றியும் சென்ற பகுதியில் பார்த்தோம். அவனது செய்நன்றி அறிதலின் சிறப்பைச் சொல்லும் உபகதை ஒன்றை இப்போது காண்போம். குந்திதேவிதான் தனது தாய் என்று தெரிந்துகொண்ட கர்ணன், குந்திதேவியிடம் கேட்ட இரண்டு வரங்களில் ஒரு வரம் முக்கியமானது. “தாயே, நான் படுகளத்தில் மரணத் தருவாயில் கிடக்கும்போது, நீ என்னை ‘மகனே’ என்று வாயார அழைத்து என்னை உன் மகன் என்று உலகுக்கு அறிவிக்க வேண்டும்” என்பதுதான் கர்ணன் கேட்ட இரண்டாவது வரம். மரணத் தருவாயில், தன்னை மகனே என்று அழைக்கும்படி கர்ணன் கேட்ட வரத்தில் முக்கியமான சாதிப் பாகுப்பாட்டின் பின்னணி ஒன்று ஒளிந்திருக்கிறது. அது என்ன? கர்ணன் தானத்தில் சிறந்தவன் என்பதை உலகறியும். ஆனால் அவன் செய்ய முடியாமற்போன ஒரு தானம் இருக்கிறது. அது ‘அன்னதானம்’. சூதபுத்ரனின் கையினால் எல்லா தானமும் பெற்ற பார்ப்பனர்களும் மக்களும் அவன் கையிலிருந்து ‘அன்னதானம்’ மட்டும் பெற மறுத்துவிட்டார்கள். எவ்வளவோ முயற்சி செய்தும் கர்ணனால் ‘அன்னதானம்’ மட்டும் வழங்க முடியவில்லை என்கிறது மகாபாரதம்.இதிலும் சூத்திரன் சத்ரியன் என்ற பாகுபாடு, இந்த நியதியின் அடித்தளமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. உயர்ஜாதியைச் சேர்ந்தவர்களால் மட்டுமே அன்னதானம் செய்ய முடியும் என்ற நியதி, கர்ணனின் நெஞ்சைத் துளைக்கும் கொடூர வண்டாகவே இருந்தது. அதிலும், ‘அன்னதானம் செய்தவன் மட்டுமே சொர்க்கத்திற்குப் போக முடியும்’ என்றும் ‘இல்லையேல் நரகத்தில் வாடவேண்டும்’ என்று பார்ப்பனர்கள் கர்ணனுக்குப் போதித்திருந்தார்கள். தான் சூதபுத்திரன் என்று அறியப்படும்வரை, தன்னால் அன்னதானம் செய்ய முடியாது என்று நம்பினான் கர்ணன். அதனால்தான் குந்திதேவியிடம், மரணத் தருவாயில், தனது பிறப்பு ரகசியத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்பதை ஒரு வரமாகப் பெற்றான். குந்திதேவி ரகசியத்தை வெளிப்படுத்துவதற்கும் தனது மரணத்திற்குமிடையிலான தருணத்தில், யாரேனும் சிலருக்கு ‘அன்னதானம்’ தந்து சொர்க்கத்திற்குள் நுழையும் தகுதியைப் பெற்றுவிட வேண்டும் என்பதுதான் கர்ணனின் நோக்கம். எனில், முன்பே அது அறிவிக்கப்பட்டால் நல்லதுதானே என்ற கேள்வி எழுகிறது அல்லவா? ஆனால் அந்த அறிவிப்பால் யுத்தத்தில் நண்பன் துரியோதனனுக்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க முடியாமல் போய்விடுமே! அதனால்தான் அந்த இரண்டாவது வரத்தைக் குந்தி தேவியிடம் கேட்டான். அப்படித்தானே ஆகிப் போனது. செஞ்சோற்றுக் கடனுக்காக எல்லாவற்றையும் பின்தள்ளிய அவனது செய்நன்றி பாராட்டல் மெய்சிலிர்க்க வைக்கிறது அல்லவா!மகாபாரதக் காலத்தில் வருணாசிரம அமைப்பு, சில வர்ணங்களைச் சில காரியங்களை செய்யவிடக்கூடாது என்று தடை விதித்திருப்பதைக் கர்ணனின் கதை காட்டுகிறது. இனி அசுவத்தாமனைப் பார்ப்போம். அசுவத்தாமன் துரோணரின் ஒரே மைந்தன். போர் செய்வதில் மகாரதன். அவன் சிரஞ்சீவி. அவனுக்கு எந்த நாளும் மரணமில்லை.தொடை பிளந்து நிலத்தில் கிடந்த துரியோதனன், மரண தேவியின் வருகைக்காகக் காத்திருந்தான். அந்த நேரத்தில் சாம்ராஜ்ய ஆசையோ யுத்தத்தைத் தொடரும் எண்ணமோ துரியோதனனுக்கு இல்லை. புயலுக்குப் பின்னே அமைதி என்பதைப்போல, வீர மரணத்தைத் தழுவக் காத்திருந்தான். துரியோதனனின் சாவுத் துயர் அஸ்தினாபுரத்தைக் கலங்கடிக்கும் முன்பு நடந்த கடைசி நாடகத்தின் பாத்திரமாக அசுவத்தாமனே இருந்தான். பார்ப்பனனும் சுத்த வீரனுமான அஸ்வந்தாமனுக்கு துரியோதனனை அவனது மரணத் தருவாயில் கண்கொண்டு பார்க்கச் சகிக்கவில்லை. “துரியோதனா.. யுத்தம் முடிந்துவிட்டது என்று நினைக்காதே. பீஷ்மரையும் துரோணரையும் கர்ணனையும் சல்லியனையும் தலைமைச் சேனாதிபதிகளாக்கி, நீ, இதோ தொடை பிளந்து பூமா தேவியின் மேல் மரணத்திற்காக காத்துக்கொண்டு கிடக்கிறாய். உன்னைப் பார்க்க மனம் பேதலிக்கிறது. உன்பொருட்டு, நான் எதையேனும் செய்ய வேண்டும் என்று என் உள்மனம் சொல்கிறது” என்றான் அசுவத்தாமன். அசுவத்தாமன் சிரஞ்சீவி என்று காட்ட, அவன் தலையில் ஒரு அபூர்வமணி கண்ணைப் பறிக்கும் வண்ணம் ஒளி சிந்தும். அந்த ஒளி துரியோதனின் கண்களில் பட்டுத் தெறித்தது. “அசுவாத்தமரே, யுத்தம் முடிந்துவிட்டது. இரு பக்க சேனைகளும் அழிந்துவிட்டன. யுத்தம் செய்யத் தேர்களோ யானைகளோ வாள்களோ இல்லை. இந்த யுத்தத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள் மட்டுமே உயிரோடு இருக்கிறார்கள். எங்கு திரும்பினாலும் நர மாமிசத்தை விரும்பி உண்ணும் நரி போன்ற விலங்குகளின் விருந்து மண்டபம்போலக் காட்சி அளிக்கிறது குருக்ஷேத்ரபூமி. எங்கும் மரண ஓலம் மட்டுமே கேட்கிறது. இந்த நிலையில் அசுவத்தாமரே, உமக்கு என்னால் என்ன செய்துவிட முடியும்?” என்று கேட்டான் துரியோதனன். “துரியோதனா, நீ ஒன்றும் பெரிதாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நீ என்னை கௌரவ சேனையின் தலைமைச் சேனாதிபதியாக நியமித்துவிடு. நீ மரணம் அடையும் முன்பு உன் மனம் குளிர நான் உனக்கு நல்ல சேதி கொண்டுவருவேன்” என்றான் அசுவத்தாமன். அசுவத்தாமன் அந்த அளவிற்கு இரங்கிக் கேட்டுக்கொண்டதால், துரியோதனனும், இல்லாத கௌரவப்படைக்கு அசுவத்தாமனைத் தலைமைச் சேனாதிபதியாக நியமித்தான். அசுவத்தாமன் எமனோடும் அஞ்சாமல் போர் புரியக்கூடிய போராளிதான். ஆனால், எதிரிப்படை என்று எதுவும் இல்லாத நிலையிலும் தனக்கென்று ஒரு படை இல்லாத நிலையிலும் அசுவத்தமனால் என்ன செய்யமுடியும்? தன் தந்தையை அநியாயமாகக் கொன்றவர்களைப் பழிவாங்கிடவும் துரியோதனச் சக்ரவர்த்திக்கு ஏதேனும் ஒரு நன்மை செய்திட வேண்டும் என்ற உந்துதலினாலும், ஆனால், வழி தெரியாமல் திகைத்துத் தடுமாறிக்கொண்டும் இருந்த அசுவத்தாமன், பண்டவர்களின் பாசறை இருந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு மரத்தடியில் படுத்தான். ஆனாலும் என்ன செய்ய முடியும் என்பது அசுவத்தாமனுக்குப் புரியவே இல்லை. அந்தச் சமயத்தில் அவன் படுத்திருந்த மரத்தின்மேல் அலறல் சத்தம் கேட்டது. அசுவத்தாமன் உற்றுக் கவனித்தான். மரத்திலிருந்த கோட்டான்கள் சில, தமக்கு வசதியான இரவு நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, இரவு நேரத்தில் கண் தெரியாத காக்கைகளைத் தங்களுடைய இரையாக்கிக் கொள்வதைக் கவனித்தான். அதுதான் இந்த அலறலுக்கான காரணம். இங்கே ஒரு முக்கியமான செய்தி: இதற்குமுன் போர்கள் ரத, கஜ, துரக பதாதிகளுடன் மோதிக்கொண்ட நிலைநின்று நடத்திய (Positional) யுத்தம். ஆனால், மரத்தடியில் படுத்திருந்த அசுவத்தாமனுக்குக் கோட்டான்களின் மூலம் கிடைத்த பாடம், எதிரி உறங்கும்போது கொல்ல முயலும் யுத்தம். இரவில் நடத்தும் கொரில்லா யுத்தம். உலக இலக்கியங்களில் முதன்முறையாக, ‘கொரில்லா யுத்தத்தின்’ சாராம்சத்தை மகாபாரதத்தில்தான் பார்க்கிறோம். உடனே அசுவத்தாமன், தன் யுத்த முறையை வகுத்துக்கொண்டான். அதன்படி இரவு நேரத்தில் திருட்டுத்தனமாய் பாண்டவர் பாசறைக்குள் புகுந்து, அங்கே ஆழ்ந்த நித்திரையில் இருந்த பாண்டவர்களின் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, துரியோதனனிடம் ‘பாண்டவர்களைக் கொன்றுவிட்டேன்’ என்று ரத்தம் வடியும் கையைக் காட்டி, அவனை மனங்குளிர வைப்பது அசுவத்தாமனின் திட்டம். அதன்படியே, அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தீப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்த பாசறைக்குள் அசுவத்தாமன் கிருபாச்சாரியாருடன் நள்ளிரவில் புகுந்தான். பாசறைக்குள் பலர் படுத்திருப்பதைக் கண்டான். இருட்டில் அவர்கள் முகங்களும் உருவங்களும் சரியாகத் தெரியவில்லை. திட்டமிட்டபடி அசுவத்தாமன் அங்கே படுத்திருந்த அனைவருடைய கழுத்தையும் நெறித்துக் கொன்றுவிட்டு, துரியோதனனிடம் வந்து, “துரியோதனா.. வெற்றி உன்னுடையதே! இந்த நிசப்தமான இரவில் பாண்டவர்கள் அனைவரையும் ரத்தம் வடியும் இந்த கைகளினால் கண்விழிகள் பிதுங்கப் பிதுங்கக் கொன்றுவிட்டேன். அதனால், யுத்தத்தில் நீதான் வெற்றி பெற்றாய். கடைசியாக உன் தலைமைச் சேனாதிபதியாக உனக்கு வெற்றி தேடித் தந்துள்ளேன். அதனால் மனநிம்மதியுடன் வெற்றி வீரனாக சொர்க்கம் போவாயாக!” என்று துரியோதனனிடம் அசுவத்தாமன் சொல்லிக்கொண்டிருந்தான். அப்போது அங்கே கிருஷ்ணனும் பாண்டவர்களும் வந்து சேர்ந்தார்கள்.“அசுவத்தாமா.. இது என்ன பேடித்தனம். அந்தப் பாசைறையில் படுத்திருந்தவர்கள் அனைவரும் பாண்டவர்களுக்கு வெவ்வேறு மனைவியர் மூலம் பிறந்த பால்குடி மறவாப் பாலகர்கள். அவர்களைக் கொல்ல உனக்கு எப்படி மனம் வந்தது?” என்று கிருஷ்ணன் கடிந்துகொண்ட பின்னர்தான், அசுவத்தாமனுக்கு, தான் இரவில் பாண்டவர்களுக்குப் பதிலாக, பாண்டவர்களின் மைந்தர்களைக் கொன்றுவிட்டோம் என்பது புரிந்தது. அசுவத்தாமனால் பதில் பேசமுடியவில்லை. மௌனமாக இருந்தான்.“அசுவத்தாமா.. இந்தக் கொடூரச் செயலுக்கு உனக்கு தண்டனை வழங்கியே தீரவேண்டும். ஆனால் நீ சிரஞ்சீவி. அதனால் உன்னைக் கொல்ல முடியாது. இந்த பஞ்சமகா பாதகத்தைச் செய்த பிராமணனாகிய நீயே உன் தோல்வியை ஒப்புக்கொள். அதுதான் உனக்குத் தக்க தண்டனையாக இருக்கும்” என்றான் கிருஷ்ணன். அசுவத்தாமன் அதற்கு ஒப்புக்கொண்டான். தன் தலையில் சுடர்விட்டுப் பிரகாசித்துக்கொண்டு ஒளிரும் மணியைத் தன்னுடைய சரணாகதியின் அடையாளமாக, அசுவத்தாமன் கிருஷ்ணனிடம் எடுத்துக் கொடுத்தான். அதுமட்டும் அசுவத்தாமனுக்குப் போதுமான தண்டனை ஆகாது என்பதால், “நீ மனித உருவத்தை இழப்பாய். ஆனால் நீ சிரஞ்சீவி என்பதால் வனாந்திரங்களில் ஓலமிட்டுக்கொண்டு ஓடும் ஊழிக்காற்றாய்க் காலம் முழுக்கத் திரிந்தலைவாய்” என்று கிருஷ்ணன் அசுவத்தாமனுக்கு சாபம் கொடுத்தான். அதுமுதல் அசுவத்தாமன் வனாந்திர ஓலமாகத் திரிகிறான் என்கிறார் வியாசர். முதல் கொரில்லா யுத்தம் பல்வேறு காரணங்களினால் தோற்றுப்போயிற்று என்பது உண்மையெனினும், பல நாடுகளில் இந்த யுத்த முறையைக்கொண்டு, அமெரிக்க ஏகாதிபத்யம் போன்ற வல்லரசுகளையே மண்ணைக் கவ்வ வைத்துள்ளனர் என்பதைச் சரித்திரத்தின் ஏடுகள் சொல்கின்றன. இதில் உள்ள சட்டப் பிரச்சனை என்னவெனில், குருக்ஷேத்ர யுத்தம் தொடங்கும் முன்னர், இரண்டு படைகளின் தலைமைச் சேனாதிபதிகளும் ஒன்றாக அமர்ந்து, யுத்தத்தை எப்படி நடத்தவேண்டும் என்று திட்டமிட்டார்கள் என்கிறது மகாபாரதம். இரவு வரும் முன்னே யுத்தத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதும் இரவு நேர யுத்தம் என்றால் அது இரு தரப்பினரின் சம்மதத்துடன்தான் நடக்க வேண்டும் என்றும் எந்தப் படையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் காயமுற்றவர்களை யுத்தகளத்திலிருந்து அகற்றி, வைத்திய சாலையில் சேர்க்க வேண்டும் என்பதும் தன்னோடு யுத்தம் செய்யாத வீரனை மற்றொரு வீரன் தாக்கக்கூடாது என்றும் பல யுத்த விதிகளை அந்த இருதரப்புக் கூட்டத்தில் வகுக்கிறார்கள். ஒரு விசித்திரம் என்னவென்றால், மகாபாரதத்தில் சொல்லப்படும் யுத்த நியதிகள்தான் தற்போது ஐக்கிய நாடுகள் வகுத்துள்ள யுத்த நியதிகளின் முன்னோடி என்று சொன்னால் மிகையில்லை. பிரச்சனை என்னவெனில், துல்லியமாக வரையறுத்த இந்த நியதிகளை, சிரஞ்சீவியாக வாழ வரம்பெற்ற ஒரு பார்ப்பன வீரன் மீறி, ஒரு பாவமும் அறியாத பாலர்களை இரவில் கழுத்தை நெறித்துக் கொல்வது ஒப்புக்கொள்ளப்பட்ட யுத்த நியதிகளுக்குப் புறம்பானது மட்டுமல்ல; தர்மசாத்திரம் பயின்றவர்கள் செய்யும் செயலுமல்ல. இன்று சில பார்ப்பனர்கள், தாங்கள் குற்றமே இழைப்பதில்லை என்றும் சட்டத்தின் ஆட்சியை மதித்து வாழ்பவர்கள் என்றும் மற்ற அடுக்குகளில் வாழ்பவர்களைவிட மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள் என்றும் அர்த்தமில்லாமல் பீற்றுகிறார்கள். அவர்கள், குரு துரோணரின் மகனான அசுவத்தாமன் செய்த கொடுஞ்செயலைப்பற்றி மகாபாரதத்தில் உள்ள கதையைப் படித்துப் பார்க்க வேண்டும். ‘மூளை வலிமை அதிகம் உள்ளவர்கள்’ என்பதை அசுவத்தாமன்

நீலகண்ட பிரம்மச்சாரி – 2

நீலகண்ட பிரம்மச்சாரி – 2

காட்சி 2 (திரை எழவில்லை. மெல்லிய செவ்வொளி பரவி நிற்கிறது.பின்னணியில் குரல் மட்டும் ஒலிக்கிறது) குரல் : “பாரதியார் சொன்னதுபோல, தேசபக்தச் செம்மல்கள் பசி தாகம் மறந்து, சொந்த வாழ்க்கை பற்றிய நினைவே இல்லாமல் பட்டினியாக அலைந்ததெல்லாம் எமது நாட்டின் விடுதலைக்காகவே வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்பகுதி. அது தமிழ்நாட்டு விடுதலைப் போர் வரலாற்றில், உன்னதமான காலமாக இருந்தது. விடியும்போது வீட்டில் இருந்தால், இருட்டும்போது வீடா அல்லது சிறையா என்று அவர்களுக்குத் தெரிந்திராது. பேச வாய்ப்பூட்டு; எழுதினால் தணிக்கை; நடந்தால் கண்காணிப்பு. இப்படி வாழ்ந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் அடுத்த கால்பகுதியில் என்னவானார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர்களில் சிலபேரின் வரலாற்றையேனும் நமது இளையதலைமுறைக்குச் சொல்லிவைக்கலாம் என்பதால், இந்த நீலகண்ட பிரம்மச்சாரியை இங்கு அழைத்து வந்துள்ளோம். கால வெள்ளத்தில் நாம் நூறு ஆண்டுகள் பின்னாலிருந்து பார்க்கப் போவதால், முன் பின்னாக, நம் வசதிக்கேற்றார் போலவே பார்க்கப் போகிறோம். நாம் சந்திக்கப்போகும் நிகழ்ச்சிகளும் நண்பர்களும் நமக்கு காலப் பிரமாணத்தை உணர்த்தி, உதவியாக இருப்பார்கள்.” (ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவ, திரை விலகுகிறது) காலம்: 1974 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் ஒருநாள் காலைகளம்: சத்குரு ஓம்கார் ஆசிரமம். மைசூர் நந்தி மலை அடிவாரம்பாத்திரங்கள்: சத்குரு ஓம்கார் சுவாமிகள், சீடர், பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன் பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன், நந்திமலை அடிவார ஆசிரமம் முன்பு வந்து, வாசலில் நிற்கும் சீடரிடம் பேசும்போது காட்சி தொடங்குகிறது. கட்டட முகப்பில் ‘SATHGURU OMKAR ASHRAM, NANDHI HILLS’ என்ற பழைய போர்டு தொங்குகிறது. சங்கர கிருஷ்ணன்: “நான் ஒரு பத்திரிகையாளன். சென்னையில் இருந்து வருகிறேன். சுவாமிஜியைப் பார்க்கவேண்டும்..” சீடன் : “தங்கள் பெயர்?” சங்கர கிருஷ்ணன் : “சங்கர கிருஷ்ணன்” சீடன் : “கொஞ்சம் பொறுங்கள்.. சுவாமிஜியிடம் அனுமதி கேட்டு வருகிறேன்.” (உள்ளே சென்று சில கணங்களில் திரும்புகிறார்.) சீடன் : “வாங்க.. சுவாமிஜி அழைக்கிறார்..” (இருவரும் உள்ளே போகிறார்கள்.மேடை இருளுக்குள் போய், ஒளி திரும்பும்போது, ஆசிரம உள் அறையாகத் தெரிகிறது. சுவாமிகள் ஒரு பாயில் அமர்ந்திருக்கிறார். படித்துக்கொண்டிருந்த ஆங்கில செய்தித்தாளைக் கீழே வைத்துவிட்டு, சுவாமிகள் உள்ளே வரும் சங்கர கிருஷ்ணனைப் பார்க்கிறார். செய்தித்தாளின் தலைப்பில் பீஹார் மாணவர் போராட்டங்கள் பற்றிய செய்தியும் ஜெயப்ரகாஷ் நாராயணன் இந்திரா காந்தி அரசைக் கண்டித்திருப்பதும் பெரிய எழுத்துகளில் தெரிகிறது.) ஓம்கார் சுவாமிகள் : “வாங்க தம்பி.. அமருங்கள்.” (சுவாமிகளின் எதிரில் விரிக்கப்பட்டிருக்கும் இன்னுமொரு பாயில் சங்கர கிருஷ்ணன் உட்கார்ந்துகொள்கிறார்.) சங்கர கிருஷ்ணன் : “வணக்கம் சுவாமிஜி..” ஓம்கார் : “வணக்கம். உங்கள் பெயர், எனக்குப் பழைய நினைவுகளை இழுத்து வருகிறது..” சங்கர கிருஷ்ணன் : “என் பெயரா சுவாமி?” ஓம்கார் : “ஆமாம்.. அது இருக்கட்டும்.. பிரயாணம் பத்திரமாக இருந்ததா..? ஜெயப்பிரகாஷ் கிளர்ச்சி பலமா இருக்கே..!” சங்கர கிருஷ்ணன் : “இங்கே எல்லாம் அவ்வளவு தீவிரம் இல்லை சுவாமிஜி..” ஓம்கார் : “நல்லது.. என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்?” சங்கர கிருஷ்ணன் : “பத்து நாள் முன்னாலதான் உங்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். தலைவர் காமராசர் உங்களப் பத்தி பேசின செய்தி, எல்லாப் பத்திரிகையிலேயும் வந்தது. உங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரருக்கான தாமிரப் பட்டயம் கொடுக்கணுமின்னு அரசாங்கத்தக் கேட்டிருந்தாரு காமராசர்..” ஓம்கார் : “காமராசருக்கு ரொம்ப நல்ல மனசு.. ஆனா அவரே பெரிய தியாகி ஆச்சே.. இப்படியெல்லாம் சலுகை கொடுப்பதற்கும் கேட்பதற்கும் தந்தா வாங்குறதுக்கும் அவருக்கே வெட்கமா இருந்திருக்கும். இப்போ விடுபட்டவங்களுக்குக் கேக்குறாரு. நான் இரண்டாம் தடவை ஜெயிலுக்குப் போகும்போது, அவருக்கு இருபது இருபத்தஞ்சு வயசு போல இருக்கும். சத்தியமூர்த்திகூட ஒரு தடவை பாத்திருக்கேன்..” சங்கர கிருஷ்ணன் : “நீங்களும் தாமிரப் பட்டயத்தை வேண்டாமுன்னு சொல்லிட்டதா செய்தி கேள்விப்பட்டேன்.” ஓம்கார் : “அதுகூட தெரிஞ்சிடுத்தா..? காமராசருக்கிட்ட போயி என் தம்பிதான் சிபாரிசு பண்ணிருக்கான். அவனை சத்தம் போட்டு, போன மாசம்தான் கடிதம் எழுதியிருந்தேன்..” சங்கர கிருஷ்ணன் : “ஏன் சுவாமி?” ஓம்கார் : “அது அவசியமில்ல தம்பி. நாட்டுக்காக செஞ்ச வேலை. நாங்க ஆரம்பிச்சு வச்சோம். காந்தி வந்து முடிச்சு வச்சார். எங்க கோளாறு எங்களுக்குத் தெரியல. பெருசா யோசிச்சோம். நாங்க செஞ்சுட்டா, ஜனங்க எங்க பின்னால வந்துருவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா, ஜனங்கள தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலையெல்லாம் செஞ்சார்.” (பேச்சை நிறுத்திவிட்டு, கண் மூடி ஏதோ யோசனையில் ஆழ்ந்து போகிறார். சில நொடிகள் சென்ற பின்னே..) சங்கர கிருஷ்ணன் : “சுவாமி..” ஓம்கார் : “பழைய யோசனை தம்பி..” சங்கர கிருஷ்ணன் : “அதெல்லாம் கேட்கணுமின்னுதான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன் சுவாமி..” ஓம்கார் : “அந்தப் பழைய கதையை எல்லாம் இப்போ நான் யாருக்கும் சொல்றதில்ல தம்பி..” சங்கர கிருஷ்ணன் : “அப்படி இல்லை சுவாமிஜி. உங்கள் கதை எல்லாருக்கும் தெரிய வேணும். ரொம்ப தூரத்திலிருந்து அதை எல்லாம் தெரிஞ்சுக்கிடத்தான் வந்திருக்கேன். நீங்க சொல்றத பத்திரிகைல போட உங்க அனுமதியும் வேணும் சுவாமிஜி..” ஓம்கார் : “முரட்டுத்தனமா முடியாதுன்னு சொல்ல முடியலயே தம்பி.. இது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. நான் சிறுபிள்ளையிலே இருந்தே ரொம்ப முரண்டு தம்பி. உங்க பெயரில எனக்கு ஏதோ வசீகரம் வருது. உங்ககிட்டே சொல்றேன். ஆனா, பத்திரிகையிலே கட்டாயம் வேண்டாம்..” சங்கர கிருஷ்ணன் : “ரொம்ப சந்தோஷம் சுவாமி. உங்க அனுமதி இல்லைன்னா உங்க கதை பத்திரிகையில வராது சுவாமி..” ஓம்கார் : “அந்தப் பழைய கதையை உன் பெயர் கொண்ட என் தோழனிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்..கடைய நல்லூர் சங்கர கிருஷ்ணன்..! அவன் ரொம்பத் தீவிரமான ஆளு. சிதம்பரம் பிள்ளைக்காக வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். சிதம்பரம் பிள்ளை வேலைக்காகவே நானும் அலைஞ்சபோது பழக்கமானான். பின்னால நாங்க இயக்கம் தொடங்கினப்போ, வாஞ்சிநாதனயும் இன்னும் சில பேரையும் அவன்தான் கொண்டு வந்தான். வாஞ்சி ஐயர் ஆஷ் கலெக்டர சுட்டப்போ, கூடப் போனது இவன்தான்..” (கதையை நிறுத்திவிட்டு..) “சங்கர கிருஷ்ணா, முதலில் ஆகாரம் செய்யுங்கள்.. நிதானமாகப் பேசலாம்..” (சீடனைப் பார்த்து..) “அழைத்துப் போய் ஆகாரம் பண்ணி வைப்பா..” (சங்கர கிருஷ்ணன் செல்ல, சுவாமிஜி மீண்டும் செய்தித்தாளைக் கையில் எடுத்துக்கொள்கிறார். மெல்ல இருள் பரவ, திரை விழுகிறது) (நாளை தொடர்வோம்)

நீலகண்ட பிரம்மச்சாரி

நீலகண்ட பிரம்மச்சாரி

நாடகம் காட்சி 1 காலம்: 1921ஆம் ஆண்டில் ஒருநாள் காலைகளம்: திருவல்லிக்கேணி – பாரதியார் வீடுபாத்திரங்கள்: நீலகண்டர், சகுந்தலா பாரதி, செல்லம்மா பாரதி மற்றும் பாரதியார் வீட்டு முற்றத்தில் ஒரு பதின்ம வயதுப் பெண் சத்தமாகத் ‘திருக்குறள்’ படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் பாரதியாரின் இரண்டாவது புதல்வி சகுந்தலா. “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான் யாசகம் பெற்றுத்தான் உயிர் தரிக்க வேண்டியவாறு இந்த உலக மக்களுக்கு இழிவு இருக்குமானால், இந்த உலகத்தைப் படைத்தவனும் கெட்டு ஒழியட்டும்.” (வாசலில் குரல் கேட்கிறது) குரல்: “அண்ணா.. பாரதி அண்ணா..” சகுந்தலா எழுந்து வாசலுக்கு வருகிறாள். 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நிற்கிறார். தாடி அடர்ந்த முகம், அழுக்கான ஆடை, ஆங்காங்கே சில கந்தல்கள். கண்களில் சகுந்தலாவைத் தெரிந்துகொண்டதன் காரணமாக அன்பு கனிந்து நிற்கிறது. சகுந்தலா: “அப்பா இல்லையே.. வெளியே போயிருக்கிறார்..” வாசலில் நிற்கும் மனிதர்: “பாப்பா.. நீ சகுந்தலாதானே?! என்னைத் தெரியவில்லையா..? நான் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. பாண்டிச்சேரியில் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறேன்.” சகுந்தலா: “சரியாக நினைவுக்கு வரவில்லை மாமா.. உள்ளே வாருங்கள். அம்மாவைக் கூப்பிடுகிறேன். அம்மா.. அம்மா..” நீலகண்டர் உள்ளே வருகிறார். வீட்டின் உள்ளிருந்து பாரதியாரின் மனைவி செல்லம்மா வருகிறார். நீலகண்டர்: “நமஸ்காரம் மன்னி.. நான் நீலகண்டன்.. தெரியறதா..?” செல்லம்மா: “ஏன் தெரியவில்லை..? வாருங்கோ நீலகண்டன்.. இந்த நாற்காலியில் சித்த உட்காருங்கோ.. உங்கள் அண்ணா வெளியில் போயிருக்கிறார்.. இருங்கோ.. வந்துவிடுவார்.. குடிக்க ஜலம் கொண்டு வருகிறேன்.” சமையல் உள்ளுக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் செல்லம்மா. நீலகண்டர் குடித்து முடிக்கிறார். செல்லம்மா: “மிகவும் இளைத்துவிட்டாற்போல் காண்கிறது..” நீலகண்டர்: “கொஞ்சம் அலைச்சல்..” செல்லம்மா: “ஜெயிலில் இருந்து எப்போ வெளியே வந்தேள்..?” நீலகண்டர்: “இரண்டு வருசம் ஆச்சு..” செல்லம்மா: “இந்த ஊருக்கு எப்போ வந்தேள்..?” நீலகண்டர்: “ஒரு கெழமை இருக்கும்.. இன்னைக்குத்தான் அண்ணா வீட்ட கண்டுபிடிச்சேன்.. பாப்பாவுக்கு என்னை ஞாபகம் வரலை போல..” செல்லம்மா: “அப்போ அவ சின்ன பொண்ணு. அதனால ஞாபகம் இருக்காது..” (சகுந்தலாவைப் பார்த்து) “சகுந்தலா, இவர் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. தீவிர தேசபக்தர்.. அப்பாவோட சிநேகிதர்.. பத்து வருசத்திற்கு முன்னே நாம பாண்டிச்சேரில இருக்கச்சே, திருநெல்வேலி ஆஷ் கலெக்டர் கொலை நடந்த வழக்கிலே எட்டு வருசம் ஜெயில்ல இருந்தவர்..” (வாசலில் சத்தம் கேட்கிறது. பாரதியார் பாட்டொன்றைப் பாடியவாறே உள்ளே வருகிறார்) பாரதியார்: “பாரத சமுதாயம் வாழ்கவே.. ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே..” நீலகண்டர்: (எழுந்தவாறே) “அண்ணா..” பாரதியார்: “யார்..?” நீலகண்டர்: “நீலகண்டன் அண்ணா.. என்னைத் தெரியலையா..?” பாரதியார்: “ஆஹா..! வாரும் நீலகண்டன்.. எப்போ வந்தீர்..?” நீலகண்டர்: “சித்த நேரம் முன்னேதான்..” பாரதியார் : “ஜெயில்ல ரொம்ப சிரமப்படட்டீர் போல.. உடம்பு துரும்பாயிட்டுதே ஓய்..” நீலகண்டர் : “கொஞ்சம் படுத்தினார்கள்தான்.. நானும் விட்டதில்லை. அரசியல் கைதிகளுக்குண்டான மரியாதையை ஜெயில்ல தொடர்ந்து கேட்டதினால, என்னைக் கலகக்காரனாவே நடத்துனாங்க..” பாரதியார் : “அதல்லவோ உம்மோட பெருமை.. நீலகண்டன்னாலே சிம்மம் அல்லவா..?”(செல்லம்மாவைப் பார்த்து) “செல்லம்மா.. சாப்பாடு தயார்தானே?” (கனவில் இருப்பவர் போன்ற தோற்றத்தில் கண்களை அகல விரித்து, நீலகண்டரிடம்) “ஓய் நீலகண்டன்.. ருசிய தேசத்து சேதி ஒன்னு தெரியுமோ..? அங்கே போல்ஸ்விக்-ன்னு ஒரு கட்சியாம். மக்கள் ராஜ்ஜியம் கொண்டு வந்திருக்கிறார்களாம். அங்கே இனிமேல் பசி, பட்டினி எதுவுமிராதாம்.. அதுபோல சமுதாயம் இந்தப் புராதன பாரத தேசத்திற்கு வந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்..?” நீலகண்டன் (குறுக்கிட்டு): “அண்ணா.. ஒரு நாலணா வேண்டும்..” பாரதியார்: “ஏன்..?” நீலகண்டன்: “சாப்பிட்டு முழுதாக ஒன்றரை நாள் ஆச்சு.. பசியில் நீங்கள் பேசுவதுகூட சரியாகக் காதில் விழவில்லை அண்ணா. நாலணா தந்தீர்கள் என்றால் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவேன்..” பாரதியார்: “பாண்டியா.. இதென்ன கொடுமை..!! செல்லம்மா.. நம்ம வீட்டில் ஆகாரம் ஏதேனும்..?” செல்லம்மா மௌனமாக உள்ளே சென்று திரும்பி வந்து, நீலகண்டரிடம் செல்லம்மா: “இந்தாருங்கள்.. போய் ஏதேனும் ஆகாரம் முடித்து வாருங்கள்..” நீலகண்டர்: “வந்தனம் மன்னி..” (நீலகண்டர் வெளியே நடக்கிறார்) பாரதியார்: “அம்மா.. காளி.. உன் பக்தர்கள் நிலையைப் பார்.. இந்த நாட்டில் பெரிய புரட்சியைக் கொண்டுவருவதற்காக சிறையேற்ற மனிதர், பட்டினியில் அலைவதென்றால் நீ இருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது..?”(பாடுகிறார்) “இனியொரு விதிசெய்வோம் – அதைஎந்த நாளும் காப்போம்தனியொருவனுக் குணவிலையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்” (திரை விழுகிறது) (நாளை தொடரும்)

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 5 முந்தைய 4 பகுதிகளில் திருப்பூரின் அடிப்படைத் தொழில் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் ஆதரவுக்கும் சமூக ஊடகத் தொடர்புத் தளங்கள் வாயிலாக கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோருக்கும் நன்றிகளும் பேரன்பும். இந்தப்ப பகுதியில் திருப்பூரில் தயாராகும் ஆடைகள் சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன, அங்குள்ள வர்த்தகக் கட்டமைப்பு குறித்தான விவரங்களைக் காண்போம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதிக்குத் தயாராகும் ஆயத்த ஆடைகள், ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இவற்றில் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 85% அளவிலும் இதர நாடுகளுக்கு 15% அளவிலும் ஏற்றுமதி நடைபெறுகிறது. இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பை, இறக்குமதியாளர்கள், சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் என்று பிரிக்கலாம். இவற்றைக் குறித்து தனித்தனியே காண்போம்.   இறக்குமதியாளர்கள் இறக்குமதி நிறுவனங்கள், அங்குள்ள நிகழ்நேரத் தேவைகளுக்கேற்ப ஆடை வடிவமைப்பளர்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில், வண்ணங்களில், டிசைன்களை அமைத்து, அவற்றை இங்குள்ள தங்களுடைய வர்த்தகத் தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடை மாதிரிகளைப் பெற்று, அவற்றை அங்குள்ள பல்வேறு சிறிதும் பெரிதுமான சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு எடுத்துச்சென்று, அவர்கள் தேர்ந்தெடுக்கும் மாதிரிகளில் ஆர்டர்களைப் பெற்று, அவற்றை மொத்தமாகத் தொகுத்து, இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மொத்த ஆர்டர்களாக வழங்குவர். குறித்த காலக்கெடுவுக்குள் அந்த ஆர்டர்களை இங்குள்ள நிறுவனங்களுக்கு அனுப்பி, தயாரிப்புப் பணிகளை முடித்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளைப் பெற்று சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். பல இறக்குமதியாளர்கள், தாங்களே நிகழ்நேரத் தேவைக்கேற்ப டிசைன்களை உருவாக்கி, அதை மொத்த ஆர்டர்களாக இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து பெற்று, விற்பனை செய்வர். இந்தச் சூழலில் இறக்குமதியாளர்களுக்கும் ஏற்றுமதியளர்களுக்கும் மட்டுமே தொடர்பு இருக்கும். தரக் கட்டுப்பாடு, விலை நிர்ணயம், ஏற்றுமதிக்கான பணப் பரிவர்த்தனை அனைத்திற்கும் இறக்குமதி நிறுவனமே பொறுப்பு. சில்லறை வர்த்தக நிறுவனங்கள்  இறக்குமதியாளர்கள் அல்லாது, சில்லறை வர்த்தக நிறுவனங்களே நேரடியாக இங்குள்ள ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தகம் செய்வதும் உண்டு. நிகழ்நேரத் தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஆர்டர்களை வழங்கி, குறித்த காலக்கெடுவுக்குள் உற்பத்தி செய்யப்பெற்று, தங்களின் வர்த்தகச் சங்கிலியில் உள்ள ஆடையகங்களில் விற்பனை செய்வர். இதில், ஆடைகளை மட்டுமே விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள், பல்வேறு நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள் என இரண்டு விதமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், முதலாம் வகைக்கு உதாரணமாக நமது நாட்டில் உள்ள ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற நிறுவனங்களையும் இரண்டாம் வகைக்கு உதாரணமாக பிக் பஜார், டி மார்ட் போன்ற  நிறுவனங்களையும் குறிப்பிடலாம். (பிக் பஜார் நிறுவனம் தற்போது மூடப்பட்டுவிட்டது). பிராண்டுகள் இவை பிரத்தியோகமாக உருவாக்கப்படும் ஆடைகள். நிகழ்நேரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு பிராண்டும் தங்களுக்கான தனித்துவமான கொள்கை வடிவமைப்புக்களின் அடிப்படையில், தங்களின் ஆடை வடிவமைப்புக்கென்றே உள்ள குழுவின் வாயிலாக டிசைன்களை உருவாக்கி, அவற்றை இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் ஆடைகளாகத் தயாரித்து ப்ராண்டுகளுக்கென்றே பிரத்தியோகமாக அமைக்கப்பெற்ற கடைகளிலும் பல்வேறு பிராண்டுகள் விற்பனை செய்யும் வர்த்தகச் சங்கிலி அமைப்புகளின் வாயிலாகவும் விற்பனை செய்வர். ப்ராண்டுகளுக்கான உதாரணமாக யூ.எஸ் போலோ, லெவிஸ், கேப், கேஸ், பெனட்டன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இறக்குமதியாளர்களைத் தவிர்த்து, சில்லறை வர்த்தக நிறுவனங்களும் ப்ராண்டுகளும் இணையத்தின் வாயிலாகவும் தங்களின் விற்பனையை மேற்கொள்கின்றன. மேற்சொன்ன மூன்று வகை இறக்குமதி அமைப்புகள், இங்குள்ள நிறுவனங்களில் நேரடியாகவோ முகவர்கள் வாயிலாகவோ அல்லது இந்தியாவில் அமையப்பெற்ற தங்களின் சொந்த அலுவலகத்தின் வாயிலாகவோ வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தரக்கட்டுப்பாடு, ஆடைகள் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களின் அமைப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். இவை தவிர, ஆடைகளைத் தரச் சோதனை செய்வதற்கான சர்வேதேசப் பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட தங்களின் அமைப்புகளை இந்தியாவில் ஆடை ஏற்றுமதி அதிகமாக நடைபெறும் நகரங்களில் ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், திருப்பூரில், பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச ஆடை தொடர்பான பரிசோதனைக் கூடங்களை இங்கு நிர்மாணித்து, தரச் சோதனைகளை மேற்கொள்கின்றன. இந்தக் கூடங்களில், ஆடைகளின் எடை, அதில் உள்ள சாயத்தின் தன்மை, ஆடைகளின் நிலைத்தன்மை, ஆடைகளைத் தயாரிக்கும்போது உபயோகித்த பலவகை ரசாயனங்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டதா, ஆடைகளின் சுருங்கும் தன்மை என, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த முடிவுகள் இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அம்முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். ஏற்றுமதிக்குத் தயார் நிலையில் இருக்கும் ஆடைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை இறக்குமதி நிறுவனங்களால் நியமனம் செய்யப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அல்லது சொந்த அலுவலகத்தின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்வர். இதில், ஆர்டர்கள் பெறப்பட்டபோது ஏற்றுமதி நிறுவனங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட தரத்தின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? அடிப்படைக் குறைபாடுகள் உள்ளதா? என்றெல்லாம் சோதித்து, அந்தச் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் தவறும்பட்சத்தில் ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி மறுக்கப்படும். இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், எவ்வாறு வர்த்தக வாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்கிற கேள்வி இந்தத் தொழிலில் இல்லாதோருக்கும் இந்தத் தொழிலின் மீதான ஈர்ப்பு உள்ளவர்களுக்கும் இயல்பாகவே எழும். வர்த்தகம் சார்ந்த வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு நடைபெறும் கண்காட்சிகளில் பங்கு பெறுவது, முகமை அலுவலகங்கள், முகவர்கள், இறக்குமதி நிறுவனங்களின் தேடல், இணையம், உற்பத்தி நிறுவனங்களின் பின்னணி போன்ற பல்வேறு வகைகளில் வர்த்தக வாய்ப்புகள் பெறப்படுகின்றன.  திருப்பூரைப் பொறுத்தமட்டில், நிட்டட் கார்மெண்ட்ஸ் என்னும் பின்னலாடை மட்டுமே பிரதானமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு குழந்தைகள், சிறுவர், பெரியவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிற்குமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், டி ஷர்ட், ஸ்போர்ட்ஸ் வேர், இரவு உடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை இங்கு பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாகப் பதிவு செய்யவேண்டுமெனில் இன்னும் சில அத்தியாயங்கள் தேவைப்படும். திருப்பூர் என்னும் சுயம்புவாக உருவாகிய தொழில் நகரத்தின் அடிப்படைகளைப் பற்றிப் பார்த்துவருகிறோம். இன்னும் இந்தக் கட்டுரைத் தொடரின் மையப்புள்ளிக்கு நாம் செல்லவில்லை. நேரடியாக அந்தப் புள்ளியிலிருந்து எழுத இயலும் என்றாலும், இந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கும் பெரிய புரிதல் தேவை இருக்கும் என்பதை உணர்ந்தே, தோற்றம் முதல் கடந்துவந்த பாதைகளை விவரித்து வருகிறேன். அடுத்து, பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பற்றிப் பார்த்த பிறகு, இன்றைய தடுமாற்றம், அதற்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான வழிகள் குறித்து எழுத விழைகிறேன். பொறுமையுடன் அடுத்தடுத்து வரும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டுகிறேன். இனிவரும் காலங்களில், தவிப்பைத் தவிர்த்து தளராமல் முன்னேற வேண்டும் என்ற நோக்கமே இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. வெள்ளியன்று மீண்டும் சந்திப்போம்

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் சிலர், அதே பள்ளி மாணவர் மீதும் அவர் சகோதரி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது சமூகத்தில் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. மாணவர்களிடம் மிக வேகமாகப் பரவிவரும் மது மற்றும் இதர போதைப் பழக்கங்கள், வகுப்பறையிலும் பள்ளிக்கு வெளியிலும் மாணவர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகள் போன்றவற்றைக் குறித்தெல்லாம், இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் பேசுவதும், பின்னர் வழக்கம்போல அடுத்த சம்பவம் நடக்கும்வரை அவற்றையெல்லாம் மறந்துவிட்டு இருப்பதும் நம் சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.  குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்துக்குமான ஒற்றைக் காரணம் என்று கொரோனாவைக் கைகாட்டிக் கடந்து சென்றுவிடுகிறோம்.   மாணவர்களிடம் நிகழ்ந்துவரும் இந்த மாற்றங்களுக்கு என்னவெல்லாம் பின்னணிக் காரணங்களாக இருக்கின்றன? மாணவர்கள் ஏன் அழிவுப் பாதையில் செல்கிறார்கள்? ஆசிரியர்களால் அவர்களை நல்வழிப்படுத்த முடியாதா? முடியும். கண்டிப்பாக ஆசிரியர்களால் நல்வழிப்படுத்த முடியும். அவர்களை ஆசிரியர் பணியை மட்டும் செய்யச் சொன்னால், மாணவர்கள் செய்யும் குற்றங்கள் ஓரளவு குறையும். முன்பெல்லாம் ஆசிரியர்களுக்கு, பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது மட்டுமே வேலையாக இருந்தது. அதனால் அவர்களுக்கு மாணவர்களோடு செலவிட நிறைய நேரம் கிடைத்தது. ஆசிரியர்களால் மாணவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்களின் நிறை குறைகளை, பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் தற்போதைய கல்விச்சூழலில், கற்பித்தல் பணி மட்டுமல்லாமல், மேற்கொண்டு பல்வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. அலுவலர்கள் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அதனால் அவர்களுக்குப் பாடப் புத்தகத்தில் இருக்கும் பாடங்களைச் சொல்லித்தரவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி அவர்கள் மாணவர்களோடு உரையாடி, அவர்களின் நிறை குறைகளைச் சரி செய்ய முடியும்? ஒரு புரிதலுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள், பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் பட்டியல், சுமத்தப்படும் கூடுதல் சுமைகள் ஆகியவை இங்கே தரப்பட்டுள்ளன. மன்றங்கள் 1) தமிழ் மன்றம்2) ஆங்கில மன்றம்3) கணித மன்றம்4) அறிவியல் மன்றம்5) தொன்மை மன்றம் (சமூக அறிவியல்)6) திரைப்படம் காட்சிப்படுத்துதல் மன்றம்7) தமிழ் இலக்கிய மன்றம்8) ஆங்கில இலக்கிய மன்றம்9) வினாடி வினா மன்றம்10) வானவில் மன்றம்11) குழந்தைகள் பாதுகாப்பு மன்றம்12) போக்சோ மன்றம்13) போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம்14) சாலைப் பாதுகாப்பு மன்றம்15) தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம்16) சுற்றுச்சூழல் மன்றம்17) நூலக மன்றம்18) முன்னாள் மாணவர்கள் மன்றம்19) JRC20) SCOUT21) NSS22) NCC நலத்திட்டப் பதிவேடுகள் 1) பாடப்புத்தகங்கள்2) பாடக்குறிப்பேடுகள்3) புத்தகப் பை4) காலணிகள்5) அட்லஸ்6) சத்துணவு சாப்பிடும் மாணவர்கள்7) இலவசச் சீருடை விவரங்கள்8) Sanitary Napkin for Girl Students Details9) Geometry Box10) இலவச சைக்கிள்11) மடிக்கணினி கூடுதல் வேலைகள் 1) Student Admission – Register2) Student Transfer Certificate – Register3) Potential Dropout Details4) OOSC Details5) X, XII STD – Nominal Roll6) Health & wellbeing ( Students Height, Weight, Eye Power issues, …etc – 48 questions)7) School Timetable8) இல்லம் தேடிக் கல்வி9) நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பிள்ளை10) புதுமைப் பெண்11) 7.5% இட ஒதுக்கீடு12) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், பதிவேடு பராமரித்தல்13) எண்ணும் எழுத்தும்14) மாணவர்களின் பேருந்துப் பயண அட்டை15) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு16) மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல்17) RBSK & IEDSS18) பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டப் பதிவேடு கல்வி உதவித்தொகைப் பணிகள் 1) Pre Matric SC/ST Scholarship2) Post Matric SC/ST Scholarship3) Minority Scholarship4) பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை5) சுகாதாரத்துறை பெற்றோரின் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை6) MBC Scholarship இதர பணிகள் 1) SSLC / HSC (+1, +2) Exam Duty2) Online Entry NR for 10th Students3) Supplementary Exam (June, September)4) NMMS (VIII STD) Exam5) NTSE (X STD) Exam6) ஊரகத் திறனாய்வுத் தேர்வு7) ESLC (VIII STD) Exam8) TNPSC Exam9) Election Duty10) BLO Duty11) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு12) Stock Register Maintain Duty13) Treasury / Pay Bill work14) TRI certificate15) Acutance Register for Regular Teachers / Part Time Teachers / Non-Teaching Staff16) Sports competitions17) Over all Competitions18) கலைத் திருவிழா19) CRC & BRC Training / RP Training இன்னும் இதுபோலப் பல வேலைகளை ஆசிரியர்களுக்கு ஒதுக்குவதால், அவர்களின் கற்பித்தல் பணி பெருமளவில் பாதிக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனும் பாதிக்கப்படுகிறது. இவையெல்லாம் தேவையான – அவசியமான செயல்களாக இருந்தாலும், இந்தப் பணிகளுக்கென ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்களை – பணியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கு பாடத்திட்டங்களை நடத்துவதற்கு நேரம் போதாத காரணத்தால், அவர்களால் நலத்திட்டச் செயல்பாடுகளிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை நிலவுகிறது. இதுபோன்ற இரட்டைக்குதிரைச் சவாரி நிலையால் பெரும்பாலான திட்டங்கள் பெயரளவிலேயே இருக்கின்றன. நல்ல திட்டங்கள்கூட ஏட்டளவில் நின்றுவிடுகின்றனவே தவிர, செயல்பாட்டில் இல்லை என்பது வேதனைக்குரியது. இதற்கிடையில், மாணவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரமாக மாற்றும் சூழலும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏன் உங்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது, ஏன் மாணவர்களின் மதிப்பெண் குறைந்துள்ளது போன்ற உயரதிகாரிகளின் கேள்விகளால் ஆசிரியர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. அந்த அழுத்தமானது ஒரு மாணவனை எப்படியாவது 35 மதிப்பெண் எடுக்கவைத்து, தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்பட வைக்கிறதே தவிர, அந்த மாணவன் பாடத்தைப் புரிந்துகொண்டாரா? என்பதில் கவனம் செலுத்த முடிவதில்லை. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பதை ஆசிரியர்கள் முழுமனதோடு ஏற்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிக்கக்கூட ஆசிரியர்களுக்குத் தற்போது உரிமை இல்லை என்பதே உண்மை. கண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்களே தாக்குவது, பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்குவது, மாணவர்கள் உடனுக்குடன் உணர்வுவயப்பட்டு விபரீத முடிவுகளை எடுப்பதால் நேரிடும் பேரிழப்பு மற்றும் அதன் பின்விளைவுகள் என்று, ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு இல்லாத சூழலும் சேர்ந்தே நிலவுகிறது. இத்தனை அழுத்தங்களுக்கு இடையில்தான் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி என்பது வெறும் பாடங்களை மட்டும் கற்பித்து, மாணவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாக உருவாக்கும் செயல்பாடு அல்ல. நல்லவை, அல்லவை, சமூக அக்கறை, தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் துணிவு உள்ளிட்ட ஏராளமான வாழ்வியல் கூறுகளை இளைய தலைமுறைக்குக் கடத்தவேண்டிய இடங்களே பள்ளிக்கூடங்கள். ஆனால், தற்கால பொருளாதாரமய வாழ்க்கைச்சூழலில், மாணவர்களை வெறுமனே மதிப்பெண் அடிப்படையில் வகைப்படுத்தி அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வேலையை, தனியார் பள்ளிகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் நமது கல்வித்துறை செயல்படுத்தி வருவது வேதனைக்குரியது. தெருக்கள்தோறும் திறந்து வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள், மதுப் பழக்கத்துக்கு ஆளான பெற்றோர் மற்றும் சுற்றத்தார், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி, மாஸ் ஹீரோ மன நிலையை விதைக்கும் திரைப்படங்கள், உள்ளங்கையில் தவழும் சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் என மாணவர்களின் கவனம் மற்றும் நடத்தைச் சிதைவுகளுக்கு ஏராளமான காரணிகள் இருந்தாலும் அவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வெறும் ஆவண எழுத்தாளர்களாகவும் பதிவேடு பாராமரிப்பாளர்களாகவும் மட்டுமே ஆசிரியர்களை மாற்றி வைத்துள்ளது இன்றைய கல்வித்துறை. கொரோனா இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் நியமனம் தேவை என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. வழக்கம்போலவே அந்தக் கோரிக்கை அரசின் கவனம் பெறாமல் போக, ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கேட்டுக்கேட்டு ஓய்ந்துபோனதால் தற்போது அவர்களும் அந்தக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டனர். முன்பெல்லாம் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு இருந்தது. அந்த வகுப்பில் மாணவர்களுக்கு நீதிக் கருத்துகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. தற்போது அந்த வகுப்புகள் இல்லை. திருக்குறளில் இல்லாத நீதி போதனைகள் இல்லை. ஆனால் தற்போதைய கல்விமுறை ஒவ்வொரு திருக்குறளுக்கும் முழுமையான விளக்கத்தைக்கூடச் சொல்லித்தருவதில்லை. ஒரு குறளுக்கு இரண்டு வரிகளில் விளக்கம் கொடுக்கப்பதோடு முடிந்துவிடுகிறது. அந்த விளக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மாணவர்களுக்குப் பொருள் தெரிவதில்லை. பெரும்பாலான ஆசிரியர்களும் தங்களின் வேலைப்பளுவால் விரிவான விளக்கத்தைச் சொல்லித் தருவதில்லை. மொத்தத்தில் இளைய தலைமுறையோடு உரையாட பெற்றோர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. ஆசிரியர்களுக்கும் நேரம் தரப்படுவதில்லை. இதனால், சமூகத்திலும் இணையத்திலும் தாங்கள் காணும் நிகழ்வுகளின் தாக்கத்தில் எதிர்காலத் தூண்கள் துருப்பிடித்துச் சிதைந்துகொண்டுள்ளன.   இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, கல்வி முறையில் உரிய மாற்றங்களைக் கொண்டுவந்து சீர்திருத்தவில்லை என்றால் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்.

அத்தியாகிரகம்

அத்தியாகிரகம்

கவிதை ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும் நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது அதன் நூற்றாயிரம் துகள்களும்கோரப் பார்வையோடு வெறித்தபடி நடக்கும்கால் நரம்புகளை ஊடுருவி கண் நரம்புகளைச் சிதைக்கும்அத்தியாகிரகத்திற்குஅழைப்பு விடுத்திருக்கின்றன மெளனச் சாணத்தால்கிழவனின் கண்ணாடிச் சில்லுகளைஒருபோதும் ஒற்றி எடுத்திட முடியாது நாடே போற்றிய எழுபத்தைந்துநைந்து போனது வீதியெங்கும் மூவர்ணம்பறக்க-விட்டோம்வீடெங்கும் ஏற்றி வைத்துச்சிறக்க வைத்தோம் அதையின்றுஉயர் வர்ணம் யாரென்றகர்ணத்தில் உடைத்துவிட்டார்கள் கிழவனின் கண்ணாடிச் சில்லுகளின் மீதுமெளனத்தை அடைகாக்க அனுமதித்தால் ஆபரணங்களைப் போலஆடைகளுக்கும்வட்டி கட்ட நேரிடும்

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்று நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆம், கல்விமுறை மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, தற்போதைய கல்விமுறை என்பது, அதன் பொருளை மறந்து, தேர்வுகள், திறன்கள், வேலைவாய்ப்பு எனத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிட்ட கடிதம் ஒன்று தமிழ்நாடு தேர்வுகள் துறையிலிருந்து பள்ளிகளுக்கு வந்தது. அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவித்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்காக பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றிபெறுவோரில் 500 மாணவர்கள் மற்றும் 500‌ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் இளநிலைப் பட்டம் முடிக்கும்வரை ஆண்டுதோறும் 10000 ரூபாய் வழங்கப்படும். அதாவது மீண்டும் புதிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதி நடைமுறைக்கு வருகிறது. திறன்கள் குறித்து மட்டுமே பேசுவதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020. நுழைவுத் தேர்வு வேண்டாம் என்கிறோம்; ஆனால் திறனறித் தேர்வுக்கு அவர்களைத் தயார் செய்யும்படி கூறுகிறோம். லட்சக்கணக்கான குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெறும் ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் எனில், சமவாய்ப்பு இதில் எங்கே இருக்கிறது எனும் கேள்வி எழுகிறது. இதற்கு அடுத்ததாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விக்கான மாநிலத்  திட்ட இயக்குனரும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும் கூட்டாக ஒரு இணைச் செயல்முறைக்கான சுற்றறிக்கையை இம்மாதம் அனுப்பியுள்ளனர். அந்தச் சுற்றறிக்கையில், ‘மாநில மதிப்பீட்டுப் புலம்’ என்ற பெயரில் 6 முதல் 12 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (High Tech Lab) வழியாக வினாடி-வினா தேர்வுகளை நடத்த அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் பல்வேறு மாவட்டங்களிலும் 6-12 வகுப்புகளுக்கு முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடந்துவருகின்றன. இன்றுதான், அதாவது ஆகஸ்ட் 12 அன்று மாலைதான் தேர்வுகள் முடிவடைகின்றன. அடுத்த மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, அதாவது ஆகஸ்டு 16 முதல் 29 வரை மாணவர்களுக்கு வினாடி-வினா தேர்வுகளை நடத்தி, அதைப் பதிவு செய்யும்படி வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பிவைத்துள்ளனர். ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டு நாட்கள் தேர்வுகள் என்றாலும் ஆய்வகங்களில் மாணவர்களைப் பகுதி பகுதியாக அனுப்ப வேண்டியிருப்பதால், ஆசிரியர்களால் வகுப்புகளைக் கவனிக்கவோ பாடங்களை நடத்தவோ இயலவே இயலாது. இந்தத் தேர்வுகள் முடிந்து அடுத்த சில நாட்களில், செப்டம்பரில், காலாண்டுத் தேர்வுகள் வந்துவிடுமே! ஒரு தேர்வு முடிந்த அடுத்த சில நாட்களில் மீண்டும் மீண்டும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படுமென்றால், நமது கல்வியின் நோக்கம்தான் என்ன? குழந்தைகள் பள்ளிக்கு வருவதே தேர்வுகளை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பதற்கா? ஆசிரியர்கள் எதற்கு? பாடம் நடத்துவதற்கா அல்லது தேர்வுகள் நடத்துவதற்கா? இந்த வினாடி-வினா தேர்வு நடைமுறையிலும் கொள்குறி வகை வினாக்கள்தான் இடம்பெறுகின்றன. எனில், ஆறாம் வகுப்பு முதலே நாம், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறோம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல அறிந்துகொள்ள முடிகிறது அல்லவா? குறிப்பாக, இத்தகைய தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் கொள்குறி வகையாகவே இருக்கும். எந்தத் தேர்வு என்றாலும் பாடப்பொருள் அறிவை, கொள்குறி (multiple choice) வகை வினாக்களாகவே எதிர்கொள்ளும்படி மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். நுழைவுத்தேர்வுகளை வன்முறை என்கிறோம். ஆனால் ஒவ்வொரு தேர்வும் நுழைவுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகளின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகிறது. “கல்வி என்பது பள்ளியில்தான் தொடங்குகிறது என்று நினைப்பது நமது அறிவீனத்தையே காட்டுகிறது. அதேபோல அச்சிடப்பட்ட பாடங்களை ஒரு குழந்தையின்மீது திணித்து, அது அந்தக் குழந்தையின் மூளைக்குள் ஏறிவிட்டதா எனத் தேர்வுகள் மூலம் பரிசோதிப்பதும் கல்வி அல்ல. குழந்தைகளுக்கு நீங்கள் எதையும் கற்றுக்கொடுக்க முடியாது. அவர்களாகவே கற்று அறிவதற்கான சூழலை மட்டுமே உருவாக்க முடியும்” என்கிறார் மரியா மாண்டிசோரி. ஆனால் நாம், நமது பள்ளிகளில் என்ன செய்துகொண்டுள்ளோம் தெரியுமா? முதல் வகுப்பு முதல் ஆன்லைன் தேர்வு. எண்ணும் எழுத்தும் திட்டம் வகுப்பறைகளில் நடப்பது, அதன் நீட்சியாக குழந்தைகளுக்கு அலைபேசி செயலி வழியாகத் தேர்வு. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வகுப்புகள் வரையிலும் தேர்வு, தேர்வு, தொடர்ந்து தேர்வுகள் மட்டுமே‌. சில பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் வகுப்பறைகளில் பாடங்களைக் கற்றுத் தருவதும் தேர்வுகள் நடத்துவதும் நடைமுறையில் இருந்தாலும் தற்போது இருக்குமளவுக்கு குழந்தைகளுக்கு மன அழுத்தமோ பாடச் சுமைகளோ இருந்ததில்லை. பாடநூலில் உள்ள பாடங்களை நடத்துவதற்கான சூழலும் சுதந்திரமும் ஆசிரியர்களுக்கு இருந்தது. அந்தந்தப் பாட ஆசிரியர்கள், தமது மாணவர்களின் சூழல் மற்றும் அவர்களின் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றையும் இன்னபிற சூழல்களையும் கருத்தில்கொண்டு, பாடங்களில் உள்ள வினாக்களை சிறு தேர்வுகளாக அவ்வப்போது நடத்துவார்கள். அதன் மதிப்பீட்டுக்குப் பிறகு, குறிப்பிட்ட மாணவர்களுக்கு எங்கெல்லாம் கவனம் தேவையோ, அங்கு சிறப்புக் கவனம் தருவார்கள். அதேபோல, பாடநூல்களும் இத்தனைக் கனமாகவோ குழப்பங்கள் நிறைந்ததாகவோ இருக்காது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறனையும் அன்றைய பாடநூல்கள் பெற்றிருந்தன. ஆனால் அதற்கு எதிர்மாறாக, தற்போதைய பாடநூல்களின் அளவும் அதீதப் பாடப்பொருள்களும் குழந்தைகள் கல்வியை வெறுப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருப்பதைக் குறித்து நாம் எங்காவது கவனம் கொள்கிறோமா? கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களும் இது குறித்தான கள உண்மைகளை வெளியே சொல்வதில்லை; கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. உலகத் தரத்தில் கல்வி தருவதாகக் கூறி, போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதுவாகப் பாடநூல்களை வடிவமைக்கின்றனர், பாடநூல் குழு உறுப்பினர்கள். பாடநூல்களை வெறுக்கும் மனநிலைக்குச் தள்ளப்படும் குழந்தைகளை இங்கு  ஒவ்வொரு வகுப்பிலும் பார்க்கலாம். இவர்கள் எட்டாம் வகுப்பு வரை இலவசத் தேர்ச்சி பெற வைக்கப்படுகின்றனர். தடையில்லாத் தேர்ச்சியின் (No Detention Policy) மோசமான விளைவுகளால் குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பிலும்கூடத் தமிழ் எழுத்துகளைப் படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தாய்மொழியில் சரளமாகப் படிக்கத் தெரியாத ஒரு தலைமுறையைத்தான் இந்தக் கல்வி முறை உருவாக்கி வைத்துள்ளது. ஆங்கில வழிக்கல்வி, அவர்களது கல்வி  வாழ்க்கையைப் பதம் பார்க்கும் அடுத்த கத்தி. ஆங்கிலத்தில் அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், ஆங்கிலப் பாடத்தில் 100% தேர்ச்சி தரும் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் கொண்டுள்ள அற்புதமான கல்வித்துறை நம்முடையது. ஆம், ஒரு மொழியை மொழியாகவே கற்பிக்கத் தெரியாமல் செயல்படும்போது, மற்ற பாடங்களான அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் போன்ற பாடங்களில் உள்ள ஆங்கில அறிவை எப்படிக் கடத்த முடியும் என்ற கேள்வி நம்மிடையே இருந்தால், நாம் மாணவர்களுக்குத் துரோகம் இழைக்கமாட்டோம். எல்லாமே இங்கு ஆவணங்கள்தான். குழந்தைகளுக்கு வாசிக்கத் தெரிகிறதா? எழுதத் தெரிகிறதா? சிறு தேர்வு வைத்துள்ளீர்களா? யூனிட் டெஸ்ட் வைத்துள்ளீர்களா? மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களா? மதிப்பெண் குறைந்தால் அதற்குக் குறைதீர் கற்பித்தல் செய்கிறீர்களா? மெல்லக் கற்போர் பயிற்சி நடக்கிறதா? பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா?  ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படுகிறதா? இவை அனைத்தையும் எமிஸ் இணையதளத்தில் ஏற்றினாயா? இல்லையெனில் அதை உடனே செய்ய வேண்டும். இவைதான் இன்று அரசுப் பள்ளிகளில் நடக்கும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள். அடுத்ததாக, வாரத்தேர்வு வைத்தீர்களா? மாதத் தேர்வு வைத்தீர்களா? சிறப்பு வகுப்புகள் வைத்தீர்களா, வைக்கவில்லையா? வைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை; ஆனால் தேர்ச்சி வீதம் குறையக் கூடாது. அவரவர் சூழலுக்கு ஏற்ப, சிறப்பு வகுப்புகள் நடத்துவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் தேர்ச்சி சதவீதத்தில் கவனம் தேவை. எனில், பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் இருக்குமா? ஒரு கட்டத்தில் எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே, குழந்தைகள் தேர்வுகளை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடும் சூழல்தான் தற்போது நிலவுகிறது. இவை மட்டுமா? உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (High Tech lab) வழியாக ஒவ்வொரு மாதமும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுகள். அனைத்தும் கொள்குறி வகை வினாக்கள் எனில், மாணவன் எப்போதுதான் சிந்தனை செய்வது? சொந்த நடையில் எழுதுவது? எப்போது தான் கற்ற கல்வி மூலம் இந்தச் சமூகத்துக்காக வினையாற்றுவது? என்பன போன்ற சந்தேகங்களுக்கெல்லாம் நம்மிடம்  பதிலே இல்லை. கல்வித்துறையிலும் சந்தேகமே ஏற்படுவதில்லை என்பதுதான் நம்முடைய ஆகப் பெரிய கவலை. எப்போது வேண்டுமானாலும், நாளொன்றுக்கு  குறைந்தபட்சம் சுமார் மூன்று ஆணைகளாவது பள்ளிகளுக்கு வருகின்றன. மாணவர் எண்ணிக்கை, கணக்கீடுகள், போட்டி அறிவிப்புகள், பயிற்சிகள், எமிஸ் பதிவேற்றங்கள், மாணவர்கள் விவரங்கள், கல்வி உதவித் தொகைகள் என, தொடர்ச்சியான பணிகள். இவை அனைத்தும் இயல்பான வகுப்பறைகளை முற்றிலும் பாதிக்கின்றன. இவற்றுடன் மாணவர்களது உடல்நலக் குறைவு, அவர்கள் விடுப்பு எடுப்பது, உறவினர் வீடுகளுக்கு செல்வது, உள்ளூர்ப் பண்டிகைகள், ஆசிரியர்கள் உடல் நலமின்மை, விடுப்பு எடுப்பது, பயிற்சிக்குச் செல்வது என, இப்படிப் பலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. தற்காலத்தில் அலைபேசிகளின் ஆதிக்கம், திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், போதைப்பொருள் பழக்கங்கள், இப்படி இன்னும் சில கவன ஈர்ப்பு விஷயங்களைத் தாண்டி மாணவர்களைக் கல்விக்குள் அழைத்து வரவேண்டிய தேவை உள்ளது. ஒரு கல்வி ஆண்டில் மாணவர் – ஆசிரியர்  இருவரும் இணைந்து, எத்தனை நாட்கள் கல்விச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர் என்று கணக்கிட்டால், நம்முடைய போதாமை முழுமையாக வெளிப்படும். அரைகுறைக் கல்வியைக்கூடப் பெறாமலேதான் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர். அனைவரும் தேர்ச்சி என்ற சுலோகத்தை மட்டும்தான் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். அது அல்லவே கல்வி. அதனால் எந்தப் பயனும் கிடையாது என்பதை, குழந்தைகள் உயர்கல்வி செல்லும்போதுதான் உணர்கின்றனர். பள்ளிக் கல்வியை முடித்தபிறகும் பல வகையான போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், நீட், JEE உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும். குழந்தைகள் பாறைகளாக மாறிப்போகும் மனநிலையில், இறுகிப்போய்தான் வாழ்கின்றனர். அவர்களது மாணவப் பருவம் மிகவும் வறட்சியாகவே இருக்கிறது. தேர்வுகளை வெறுக்கும் குழந்தைகளது மனநிலை காக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் கல்வித்துறை ஈடுபடவேண்டும். குழந்தைகளது மனநிலை மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் முழு மனதோடும் ஆர்வத்தோடும் கற்றலில் ஈடுபடும் சூழலையும் மனநிலையையும் உருவாக்க வேண்டியதே இன்றைய முக்கிய மற்றும் அவசரத் தேவை.

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 12

13. கர்ணனின் மனத்தூய்மை கர்ணனை அங்கதேச மன்னனாக துரியோதனன் அறிவித்ததிலும் ஒரு சட்டப்பிரச்சனை இருக்கிறது. அஸ்தினாபுரத்தில் நடக்கும் வில்வித்தையில் அர்ச்சுனன் தன் ஆற்றலைக் காண்பித்தபின், மைதானத்தில் அமர்ந்திருந்தவர்களின் மத்தியிலிருந்து ஆயிரம் சூரியனின் தேஜஸோடு ஒரு அழகான வாலிபன் எழுந்து வந்தான். தன்னையும் வில்வித்தையில் பங்குகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று அவன் கிருபாச்சாரியாரைக் கேட்டான். அவன் பெயர் கர்ணன் என்பதோ அவன் தேரோட்டி மகன் என்பதோ யாருக்கும் தெரியாது. ஆனால் கிருபாச்சாரியார், அந்த இளைஞனை வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்தார். அதனால் அவர், “நீ யார்? நீ சத்ரியனா? நீ எந்த நாட்டு மன்னன்? சத்ரியர்கள் மட்டும்தான் இந்த வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். அதனால் நீ யார் என்பதைச் சொல்” என்று அந்த இளைஞனிடம் கேட்டார். அந்த இளைஞன் கிருபாச்சாரியாரின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தயங்கி நின்றான். அப்போது அந்தப் பக்கமாக வந்த தேரோட்டி அதிரதன், “கர்ணா, நீ இங்கே என்ன செய்கிறாய் மகனே?” என்று கேட்டதும், அவன் தேரோட்டி அதிரதனின் மகன் என்பதையும் சூத்திரன் என்பதையும் கிருபாச்சாரியாரும் மற்றவர்களும் தெரிந்துகொண்டனர். அவர்கள் கர்ணனைப் பார்த்து ஏளனமாய்ச் சிரித்தனர். “இது சத்திரியர்களுக்கான வீரப் போட்டி. தேரோட்டியின் மகனான நீ போய் தேரோட்டும் வேலையைப் பார்” என்று கிருபாச்சாரியாரும் பாண்டவர்களும் கர்ணனின் மனம் நோகப் பேசினார்கள். கர்ணன் பதில் பேசமுடியாமல் தலைகுனிந்து நின்றான். அர்ச்சுனனை எதிர்க்க, அவனுக்கு இணையான வில்லாளியாகக் கர்ணனைப் பார்த்த துரியோதனன், “நான் இப்போதே கர்ணனை அங்க தேச மன்னனாக்குகிறேன்” என்று பிரகடனம் செய்து, அங்கேயே மகுடம் சூட்டி, கர்ணனைக் கௌரவித்தான். “இந்த உதவிக்கு, என் உயிரைத் தந்து கைம்மாறு செய்வேன்” என்று கர்ணன் நெகிழ்ச்சியோடு துரியோதனனுக்கு சத்தியம் செய்து கொடுத்தான். அதன்பின்பு அவர்களுடைய நட்பு, எந்தவொரு இதிகாசத்திலும் காணக்கிடைக்காத அபூர்வமான காவிய நட்பாக நீடித்தது என்பதை அனைவரும் அறிவோம். இந்தச் சர்ச்சைகளின் காரணமாக, அன்று தொடர இருந்த வில்வித்தைப் போட்டி அத்தோடு நின்றுபோய்விட்டது. கலைந்துபோன மக்கள், கர்ணனைப்பற்றியே பேசிக்கொண்டு வீடு திரும்பினார்கள். இதில் உள்ள சட்ட நிலைப்பாடு என்னவென்றால், கர்ணன் துரியோதனனால் அங்கதேச மன்னனாக்கப்பட்டுவிட்டதால், அவன் அந்தஸ்து உயர்ந்ததே தவிர, அவன் தேரோட்டியின் மகன் என்பதும் சூத புத்ரன் என்பதும் அப்போதும் மாறவில்லை என்பதுதான். அதாவது, அங்கதேச மன்னாகிவிட்டதால் கர்ணன் சத்திரியனாகிவிடவில்லை என்பதுதான் மகாபாரதக் கால சட்ட நிலைப்பாடு. வில்வித்தைப் போட்டி என்பது மன்னர்களுக்கானது என்பது கிருபாச்சாரியரின் வாதம் அல்ல. அது சத்ரியர்களுக்கானது என்பதுதான் கிருபாச்சாரியரின் நிலைப்பாடு.அதனால், அங்கதேசத்தின் மன்னனாக்கப்பட்டாலும் சூத புத்திரனான கர்ணன் கிருபாச்சாரியாரின் பார்வையில் சத்ரியனாகிவிடவில்லை. அதனால், வில்வித்தைப் போட்டியில் கலந்துகொள்ளும் உரிமை உள்ளவனாகவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. .அதனால், துரியோதனின் செயலானது, கர்ணனை சாதிய இடரிலிருந்து நிரந்தரமாக மீட்டு எடுத்துவிட்ட உபாயம் என்று சொல்லமுடியாது. அதனால் மற்றவர்கள், அங்கதேச மன்னனான கர்ணனை சூத புத்ரனாகவே பார்த்தார்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், சத்திரியர்கள் மட்டுமே அரசாளத் தகுதியுடையவர்கள் என்று பீஷ்மர் சொன்ன சட்ட நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில், ஒரு சூத புத்திரன் அரசனாக்கப்பட்ட நிகழ்ச்சி நடக்கிறது. அதனால் கர்ணனின் முடிசூட்டு விழாவானது, மகாபாரதத்தின் சத்ரியர்கள் பற்றிய மையக் கருத்து மற்றும் சட்ட நிலைப்பாட்டைத் தகர்த்தெறிந்துவிடுவதைக் கவனிக்க முடிகிறது. சூத புத்ரனான கர்ணன், அங்கதேச மன்னாக முடியும் என்றால், அதே கர்ணனும் அவன் மகன் விருஷகேதுவும் ஏன் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்திகளாக முடிசூட்டிக்கொள்ள முடியாது என்ற கேள்விக்கு விடையில்லை. உலகம் போற்றும், நிகரில்லா ஒரு இதிகாசத்தில் சொல்லப்படும் இந்த ஒரு சம்பவம், இதிகாசத்தின் கதைப்போக்கு சரியானதுதானா என்று சிந்திக்க வைத்துவிடுகிறது என்றால் மிகையல்ல. கர்ணனை ஆற்றில் கண்டெடுத்தது அதிரதன். அவன் பீஷ்மரின் தேரோட்டி, அவனுடைய மனைவியின் பெயர் ராதா. அவர்கள் தன்னுடைய தந்தையும் தாயும் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும். ஏனெனில், அவனை ஆற்றிலிருந்து மீட்டெடுத்தபோது அவனை வைத்திருந்த ஆடம்பரமான பேழையையும் அதனுள் இருந்த அரச வம்சச் சேலையையும் விலைமதிப்பில்லாத அணிமணிகளையும் அவர்கள் கர்ணனிடம் ஒப்படைத்துவிட்டார்கள். அதனால், தன்னைப் பெற்ற தாய், பெற்றெடுத்தவுடன் தன்னை ஆற்றில் விட்டுவிட்டாள் என்பது கர்ணனுக்குத் தெரியும். கர்ணனின் வளர்ப்புத் தாய் ராதாவின் பெயராலேயே, கர்ணன் ராதேயன் என்றும் அழைக்கப்பட்டான். தன்னுடைய தந்தை ‘சூரிய தேவன்’ என்பது கர்ணனுக்குத் தெரியுமா, தெரியாதா என்பதை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி, இதிகாசத்தை வியாசர் அற்புதமாய் நகர்த்துகிறார். சூரிய தேவன்தான் தன்னுடைய தந்தை என்று கர்ணனுக்குத் தெரிந்திருந்தால், சூரிய தேவனிடமே, ‘தன் தாய் யார்?’ என்பதைக் கர்ணன் கேட்டறிந்திருக்கமுடியும்.அதிலும் கர்ணனின் கவசகுண்டலத்தை யாசகம் பெற்றுப்போக, இந்திரன் பார்ப்பன வேதியன் வடிவத்தில் வந்தபோது, ‘வந்திருப்பவன் இந்திரன்’ என்று கர்ணனை எச்சரிக்கை செய்த சூரியதேவனிடம் தன் தந்தை பற்றிக் கேட்டிருந்தால், கர்ணனைத் தன் ‘பிறப்பறியா மர்மத்தினால்’ புழுவைப் போலத் துடிதுடித்து வாழ சூரிய தேவன் அனுமதித்திருக்க மாட்டான் என்பது தெளிவு. அதனால்தான் சூரிய தேவன்தான் தன் தந்தை என்பது கர்ணனுக்குக் கடைசிவரை தெரியாது என்பதை நாம் யூகித்துக்கொள்ள முடிகிறது. கர்ணனின் வளர்ப்புத் தந்தையான அதிரதனின் பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.அதிரதன் என்றால் யுத்தத்தில் தரையில் கும்பலோடு கும்பலாய் நின்று எதிரிகளுடன் சண்டை செய்யும் சாதரணமான காலாட்படைப் போர் வீரன் என்ற அர்த்தமும் உண்டு.அதனால், அதிரதன் என்ற தேரோட்டியின் மகன் என்ற அர்த்தத்தில் கர்ணனைக் கேவலப்படுத்திய பலர், கர்ணனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தார்கள். ‘சூத புத்ரன்’ என்றழைத்தாலே கர்ணன் மனம் சோர்ந்து போவான். அதிரதனும் ராதாவும் தன் சொந்தத் தாய் தந்தையர் இல்லை என்பது கர்ணனுக்குத் தெரியும் என்பதால், அவனை ‘சூத புத்திரன்’ என்று அழைத்தவர்களை எதிர்த்துப் பேசி, ‘தான் சூத புத்திரன் அல்ல’ என்பதை நிறுவி, அவ்விதம் அழைத்தவர்களின் வாயை அடைத்திருக்க முடியும். ஆனால் மகாபாரதத்தில் எந்தவொரு இடத்திலும், கர்ணன் ‘சூத புத்ரன்’ என்று தன்னை அழைத்தவர்களிடம் வாதம் செய்ததாக ஒரு நிகழ்வுகூட இல்லை. ‘சூத புத்ரன்’ என்றழைத்து அவமானப்படுத்தினால், தலைகுனிந்துகொண்டு வாயடைத்து நின்றுவிடுவான். அதற்குப் பிரதான காரணம், கர்ணன் தன்னுடைய வளர்ப்புப் பெற்றோரைக் கடைசிவரையில் தன் சொந்தப் பெற்றோரைப்போல மதித்ததுதான் என்கிறார் வியாசர். அதனால் அவர்களைத் தன் சொந்தப் பெற்றோர்கள் இல்லை என்று சொல்லி அவமானப்படுத்துவதைக் கர்ணன் செய்யவில்லை என்கிறார் வியாசர். ‘சூத புத்ரன்’ என்ற பதத்திற்கு என்ன அர்த்தம் என்பதை இணையத்தில் தேடினால், ‘பிரமாணத் தாய்க்கும் சூத்திரத் தந்தைக்கும் பிறந்த மகன்’ என்று காட்டுகிறது. அது முற்றிலும் தவறான அர்த்தம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. அது தவறுதலான புரிதலின் அடிப்படையில் சொல்லப்பட்டுள்ள தவறான அர்த்தம் என்பதில் சந்தேகமில்லை. ‘சூத புத்ரன்’ என்பதற்கு ‘தேரோட்டியின் மகன்’ என்று கூகுள் இன்னொரு அர்த்தம் சொல்கிறது. எது எப்படியிருப்பினும், சாதிய அமைப்பில் கீழடுக்கில் உள்ளவர்களையே சூத புத்ரன் என்று அழைத்தார்கள் என்று நாம் அர்த்தம் கொள்ள முடியும். ‘அதிரதன்’ என்ற சொல்லும் ‘கீழடுக்கில் உள்ள மனிதனையே அது குறிப்பிடுகிறது’ என்பதை உறுதிப்படுத்துகிறது. இதை ஏன் இவ்வளவு விரிவாகச் சொல்ல நேர்ந்தது என்றால், சாதிய அமைப்பின் கீழடுக்கைச் சேர்ந்த மனிதன் என்று கருதப்பட்டதால், நாளும் பொழுதும் கர்ணனைப் போன்றவொரு மகாரதனே, எந்த அளவிற்கு உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் சொல்லொணா அவமானத்திற்கு உள்ளானான் என்பதை விளக்குவதற்குத்தான். குந்திதேவிக்குக் கர்ணன் என்றொரு மகன் பிறந்த விஷயம் பாண்டுவிற்கே தெரியாது. அனைத்தும் அறிந்த கிருஷ்ண பரமாத்மாவிற்கு மட்டுமே இந்த ரகசியம் தெரியும். பீஷ்மருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருந்தது என்பதைத் தவிர, அதை உறுதியாகச் சொல்ல எந்த ஆதாரமும் இல்லை. எனவே, ராஜமாதாவான குந்திதேவி தன்னுடைய தாயாக இருகக்கூடும் என்ற சந்தேகம் கர்ணனுக்குக் கனவில்கூடத் தோன்றவில்லை என்பதில் ஆச்சரியமில்லை. இதிலும் மாறுபட்ட கதைகள் சொல்லப்படுகின்றன. அஸ்தினாபுரத்தில் வில்வித்தை நடந்தபோதே மைதானத்தில் கவச குண்டலத்தோடு ஆயிரம் சூரியனின் தேஜஸோடு அர்ச்சுனனுக்கு சவால் விட்டபடி வந்த இளைஞனைப் பார்த்ததும், தான் ஆற்றில்விட்ட தன் மகன் கர்ணன்தான் இவன் என்பதைத் தெரிந்துகொண்ட குந்திதேவி, மயக்கமுற்று கீழே சரிந்துவிட்டாள் என்று, ராஜாஜி தனது மகாபாரத (வியாசர் விருந்து) நூலில் கூறுகிறார். அது சரியாக இருக்குமெனில், அதன்பின் கர்ணனைக் குந்திதேவி நேரில் சந்திக்க ஏன் முயலவில்லை என்பதற்கும் அவன் பாண்டவர்களின் மூத்த சகோதரன் என்ற வகையில் பாண்டவர் அணியில் சேர்ந்துகொள்ள அவனை ஏன் வற்புறுத்தவில்லை என்பதற்கும் ராஜாஜியின் நூலில் விளக்கம் இல்லை. இன்னொரு கதையின்படி, குருக்ஷேத்ர யுத்தம் தொடங்குவதற்குச் சற்று முன்புதான் கிருஷ்ணன், கர்ணன்தான் அவள் ஆற்றில் விட்ட மகன் என்ற ரகசியத்தைக் குந்திதேவிக்குச் சொல்லி, அவளுக்கு சில ஆலோசனைகள் சொன்னதாகச் சொல்லப்படுகிறது. எது எப்படியாயினும், குந்திதேவிதான் தன் உண்மையான தாய் என்பது தெரிந்ததும் கர்ணன் மகிழ்ச்சிக் கடலிலும் துன்ப சாகரத்திலும் ஒரே நேரத்தில் மூழ்கிப்போனான். தான் சத்ரியன் என்று தெரிந்துகொண்டதால் மகிழ்ச்சி. தான் அஷ்தினாபுரத்துக்கே மன்னனாகத் தகுதியுள்ள தன்னை, ‘சூத புத்ரன்’ என்று சொல்லி, தன் பிறப்பறியா மர்மத்தைச் சுட்டிக் காட்டி அவமானத்தில் மனம் நோக வைத்ததால் துன்பம். கர்ணனின் ஜீவகாருண்யச் சிந்தனை பற்றியும் மனிதாபிமானக் கண்ணோட்டம் பற்றியும் ஒவ்வொரு மாநிலத்திலும் பல சுவாரசியமான உபகதைகள் இருக்கின்றன. அதில் ஒருசில உபகதைகளை இங்கே எடுத்துக்காட்டாகச் சொன்னால் மட்டுமே, அந்த மகாரதன் எவ்வளவு மென்மையான உன்னதமான மனிதன் என்பதும் சாதியப் புறக்கணிப்பின் காரணமாக அவன் எவ்வளவு நொந்து நொடிந்து வாழ்ந்தான் என்பதும் புரியும். துரோணர் தொடக்கத்தில், கர்ணனை சீடனாக ஏற்றுக் கொள்ளலாமா என்று சோதிக்க எண்ணி, கர்ணனை அதிகாலையில் அவரை வந்து சந்திக்கச் சொல்கிறார். அவரின் சீடனாவது கர்ணனின் நீண்ட காலக் கனவு என்பதால், துரோணரை அவர் சொன்னபடியே அதிகாலையில் போய்ப் பார்த்து வணங்கி நின்றான். அப்போது, கர்ணனின் குறி வைக்கும் திறனை அறிந்துகொள்ள அந்த நேரத்தில் வானத்தில் பறந்துகொண்டிருந்த ஒரு பறவையைக் காட்டி, அதை அம்பெய்தி வீழத்தும்படி கர்ணனை துரோணர் பணித்தார். ஆனால் கர்ணன், அந்தப் பறவையை வீழ்த்த வில் வளைக்காமல் நின்றுவிட்டான். ஆச்சரியமடைந்த துரோணர், “ஏன் நான் சொன்னபடி அந்தப் பறவையை அம்பெய்து வீழ்த்தவில்லை?” என்று கர்ணனைக் கேட்டார். ஏனெனில் வேறு யாராக

திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

திருப்பூர் எனும் திருப்புமுனை – 4

தொழிலாளர் பங்களிப்பு பின்னலாடைத் தொழிலின் தோற்றம், வளர்ச்சி மற்றும் அதன் உற்பத்திப் படிநிலைகள் ஆகியவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தத் தொழிலின் அடிநாதமும் வெற்றிக்கான முக்கியக் காரணங்களில் ஒன்றுமான தொழிலார்களைக் குறித்து இந்தப் பகுதியில் காண்போம். நூற்பாலைகள் அதிகமிருந்த ஊர் திருப்பூர் என்ற தரவை முன்பே பதிவு செய்திருந்தோம். அந்தவகையில், பின்னலாடைகள் தயாரிப்பில் தொழிலாளர்கள் எளிதாகப் பங்குபெற இயன்ற சூழல் அமைந்தது. ஆடை உற்பத்தியில் பல்வேறு படிநிலைகள் கொண்ட தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பணிபுரியும் வாய்ப்புகள் அமைந்தன. அதிகப்படியான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அமையப்பெற்றதும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிருந்து திருப்பூரை நோக்கிப் பலர் தொழிலாளர்களாகப் புலம் பெயர்ந்தனர். திருப்பூருக்கு வேலை செய்து பொருளீட்ட வந்த யாரையும் திருப்பூர் கைவிடவில்லை என்பதே நிதர்சனம். எந்தவிதமான முன் அனுபவமும் இல்லாமல் திருப்பூரின் தொழிற்சாலைகளுக்கு வேலை கேட்டு வந்த ஒவ்வொருவரையும் அடிப்படைச் சம்பளம் ஒன்றை நிர்ணயம்செய்து, அவருக்குத் தேவையான பயிற்சிகளை நிகழ்நேரத் தொழிற்சாலை இயக்கத்தின்போதே அளித்து, ஒருகட்டத்தில் நன்கு தேர்வு பெற்றபின், திறனுக்கு ஏற்ற ஊதியத்துடன் பணியாற்றி வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைக்கு அவரை நகர்த்திச் சென்றது வரலாறு. பின்தங்கிய மாவட்டங்கள், குறிப்பாக வேளாண் மற்றும் இதர பணிகளுக்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் மாவட்டங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது பொருளாதார மேம்பாட்டிற்காகத் திருப்பூரை நோக்கி வந்ததும் அப்படி வந்த ஒவ்வொருவரையும் திருப்பூர் கைவிடாமல் சுவீகரித்ததோடு மட்டுமல்லாமல் பொருளாதார மேம்பாட்டையும் வழங்கி, வாழ்க்கையின் அடுத்த நிலைக்கு அவர்களைக் கொண்டு சென்றது. பல்வேறு தொழிலாளர்களை முதலாளிகளாக மாற்றியதோடு மட்டுமல்லாமல் தொழிலாளர் சமூகத்திலிருந்து ஏரளமான பட்டதாரிகள் உருவாகி சமூகத்தில் உயர் பதவிகளை அலங்கரிக்கும் மாற்றங்களும் இங்கு நிகழ்ந்துள்ளன. இங்குள்ள தொழிலாளர்களும் சரி, அவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் தொழில் முனைவோர்களும் சரி, எப்பொழுதும் தங்களுக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்திக்கொண்டதே இல்லை. எந்தவொரு தொழிலாளியிடம் உரையாடினாலும்  தான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுவதைக் காட்டிலும் ‘எங்க கம்பெனி’ என்பதை மிகுந்த உரிமையுடனும் வாஞ்சையுடன் குறிப்பிடுவர். ஏற்றுமதி ஆடைகளைக் குறித்த நேரத்தில் அனுப்பவேண்டிய நெருக்கடியான சூழல்கள் அடிக்கடி ஏற்படும். அந்த நேரங்களிலெல்லாம் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை என்றே சொல்லவேண்டும். அதேநேரத்தில் தொழில்முனைவோர்களும் உரிய முறையில் தொழிலாளர்களின் மாண்பை மதித்து, அவர்களை நிறுவனத்தின் ஒரு அங்கமாகவே கருதுகின்றனர். தொழிலாளர்கள் என வரும்போது, தொழிற்சங்கங்களின் பங்களிப்பை நிச்சயம் குறிப்பிட்டே ஆகவேண்டும். பஞ்சாலைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே, தொழிற்சங்கங்கள் மிக சிறப்பாக இயங்கி வந்தன. அதன் தொடர்ச்சியாக, பின்னலாடைத் தொழிலார்களுக்கான தொழிற்சங்கங்கள், பிரதான அரசியல் கட்சிகளின் சார்பில் தொடங்கப்பட்டு, தொழிலாளர்களின் உரிமைகளைத் தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். 1984ஆம் ஆண்டு வரலாற்று ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள பஞ்சப்படி போராட்டம், நீண்ட நாட்கள் வேலை நிறுத்தமாக நடைபெற்று, பலகட்டப் பேச்சுவாத்தைகளுக்குப் பிறகு முடிவுற்றது. தொழிற்சங்கங்களுக்கும் தொழில் முனைவோர் சங்கங்களுக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு பேணப்பட்டால் மட்டுமே எந்தவொரு தொழிலும் சிறப்பாக நடைபெறுவதோடு அடுத்த கட்ட வளர்ச்சிக்குச் செல்லும் என்பது அடிப்படை. அந்தவகையில், அனைத்துத் தொழிற்சங்கங்களும் பிரதான தொழில்முனைவோர் சங்கங்களும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையுடன் இணைந்து, ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு வேலை நிறுத்தமோ சிறு சலசலப்போ இல்லாமல் தொழில் பயணிக்கிறதென்றால், இருதரப்பிற்கும் ஏற்பட்டுள்ள பரஸ்பர புரிதலும் உரையாடல்களுமே காரணம். தொழிலாளர்கள் – தொழில் முனைவோர்கள் உறவிலும் மற்ற எந்த ஊர்களிலும் காண இயலாத பண்பாட்டினைத் திருப்பூரில் காணலாம்.  சம்பளம் மற்றும் தொழிலார்களின் இதர உரிமைகளுக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்போதெல்லாம், அதைப் புதிதாகக் காண்பவர்களுக்கு, தொழிலாளர் – தொழில் முனைவோர் உறவு கெட்டு, இனி தொழிலுக்குப் பெரும் இழப்பு ஏற்படும் என்கிற தோற்றம் இயல்பாகவே ஏற்படும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. அவரவர் கருத்தில் அவரவர் வலுவாக நிற்பர். ஒருகட்டத்தில் மிகச் சுமூகமான தீர்வை நோக்கி நகர்ந்து, அதை நடைமுறைக்குக் கொண்டுவந்து தொழில் தடைபடாமல் நடைபெறச் செய்வர். தொழில் முனைவோர் சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் அரசுத் தரப்பு ஆகியவை இணைந்து, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்படுத்தி, தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது வேறு எங்கும் காணமுடியாது ஒரு நடைமுறையாகும். ஒரு விடயத்தை இங்கே குறிப்பிடாவிட்டால் தொழிமுனைவோன் என்கிற முறையில் நான் நன்றி மறந்தவனாவேன். ஏனெனில் பின்னலாடைத் தொழில் பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சோதனைகளைச் சந்தித்து, ஸ்தம்பித்து நின்ற நேரங்களிலெல்லாம், போர்க்களத்தில் முன்நின்று களமாடி, போரை வெல்வதற்கான காரணமாக அமையும் முன்னணி வீரர்கள் போல், இந்தத் தொழிலைக் காப்பாற்றிய பெருமை அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களையே சாரும். நான் மேலே குறிப்பிட்ட தரவுகள் மூலம் திருப்பூரின் பின்னலாடைத் தொழில் வெற்றிக்கான பின்புலங்களில் தொழிலாளர்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். தொழில் வெற்றியில் மட்டுமல்லாது, எங்கெல்லாம் இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் திருப்பூரின் உதவிக்கரம் முதலாவதாக நீள்வதுடன், அதிகளவு பங்களிப்பை நல்குகிற செய்தியையும் நம்மில் பலர் அறிந்திருக்கக்கூடும். அதன் அடிப்படை, நான் மேற்சொன்ன மனிதநேயமிக்க தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளர்களுக்கு இடையிலான உறவுப் பாலமே. கொரோனா பெருந்தொற்றுக் காலகட்டம் மிகக் கொடூரமான காலகட்டம் என்பதை நாம் அனைவருமே அனுபவத்தில் கண்டோம். குறிப்பாக, நாடெங்கிலும் புலம்பெயர்த் தொழிலாளர்கள் சந்தித்த அவலங்களை நாடே பார்த்தது. ஆனால் திருப்பூர் மட்டுமே அந்தச் சிக்கலைச் சிறப்பாகக் கையாண்டது என்றால் அது மிகையில்லை. ஒரு தொழிலாளர்கூடப் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொண்டதோடு, ஊரடங்கு தளர்த்தப்பட்டவுடன் ரயில்களிலும் பேருந்துகளிலும் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பிய பெருமை திருப்பூர் தொழில் சமூகத்தையே சாரும். அதுமட்டுமல்ல; அவர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் ஆகியவற்றோடு இலவசத் தடுப்பூசியை அரசு அறிவிக்கும் முன்னரே, கட்டணம் செலுத்தி பல ஆயிரம் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்திய அந்த நேயமும் திருப்பூரையே சாரும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஏறத்தாழ 19 மாநிலத் தொழிலாளர்கள் இங்கு பணிபுரிகின்றனர். அவர்கள் அனைவரின் விருப்ப மாநிலம் தமிழ்நாடு என்றாலும் அதில் திருப்பூர் முதன்மை வகிக்கிறது. இதற்குக் காரணம், பொருளீட்டல் வாய்ப்புகளைத் தாண்டி, தொழிலாளர்களை சரிசமமாக, சக மனிதனாக மதிக்கும் மக்கள் திருப்பூர் மக்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், சப்பாத்தியையும் இட்லியையும் பரஸ்பரம் பங்கிட்டு உண்ணும் பண்பாட்டினை, சக மனிதனை நேசிக்கும் அறத்தினைத் தன்னகத்தே கொண்டுள்ள மக்கள் திருப்பூர் மக்கள் என்பதே பெருமைமிகு உண்மை. தொழில் மற்றும் அது வளர்ந்த கதை, அதைத் தொடர்ந்து தொழிலாளர்களின் பங்களிப்புகளைப்பற்றி இதுவரை பார்த்தோம். அடுத்த பகுதியில், திருப்பூரிலிருந்து வர்த்தக உறவினை மேற்கொள்ளும் வர்த்தகர்கள், சந்தைகள் ஆகியவற்றைப்பற்றியும் அதைத் தொடர்ந்து, இன்றைய தேக்கநிலை, செய்யத் தவறிய மற்றும் மேற்கொண்டு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளைப் பற்றிப் பார்ப்போம். தொடர்ந்து பயணிப்போம், நம்பிக்கையுடன்.  

ஆடி மாதம்

ஆடி மாதம்

கவிதை வானமே கூரையெனவாழ்ந்திருந்த சாமிகள்மூன்று பிரகாரங்கள் கொண்டகான்கிரீட் கட்டடத்துக்குள்அடைக்கப்பட்டனர் கோயில்கள் எல்லாம்ஆலயங்கள் ஆகிவிட்டனபேச்சியம்மனுக்கும் முண்டகக்கண்ணிக்கும்கூடஸ்ரீ என்ற முன்னொட்டு சேர்ந்துகொண்டுவிட்டது எல்லாத் தெருக்களிலும்எல்.ஆர்.ஈஸ்வரி பாடிக்கொண்டிருக்கிறார்எல்.ஈ.டி. அலங்காரக் கட் அவுட்டிலிருந்துஅருள்பாலிக்கிறார்கள் அம்மன்கள் முளைப்பாரி சுமந்துவரும்ஆறு பேருக்கு முன்பாகஎட்டுப் பேர் வருகிறார்கள்கொட்டு அடித்தபடி பொங்கல் வைப்பவர்கள் ஒருபக்கம்கூழ் ஊற்றுபவர்கள் மறுபக்கம்பொங்கிப் பெருக்கெடுக்கிறதுநாள் முவழுதும் பக்திப் பரவசம் மாலையில் தொடங்குகிறதுதீ மிதிக்கும் நிகழ்வுஆத்தாவின் சக்தியில் ஐயம் கொண்டுஅருகே நிறுத்தப்படுகிறது ஆம்புலன்ஸ் முன்னிரவில் களை கட்டும்இசைக் கச்சேரியும் ஆடலும் பாடலும்கூடவே, கூழ் வார்த்த களைப்பு நீங்கடாஸ்மாக் பழரசத்தின் பரவசம் ஆலயத்தின் முன் அனைவரும் திரண்டிருக்கஎதிர்த்திசையில் சிலர்மாரத்தான் ஓடிக்கொண்டிருந்தனர்தலைவிரி கோலமாய் இடைமறித்து நிகழ்த்தப்பட்ட விசாரணையில்அம்பலமானது செய்திஒலிபெருக்கியின் ஓலம் தாங்காமல்ஓடிக்கொண்டிருந்தார்கள் அம்மன்கள்

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11

மகாபாரதத்தில் சட்டச் சிக்கல்கள் – 11

12. திருமண உரிமைகளின் பரிணாம வளர்ச்சி இன்றைய சமுதாயத்தில் கருமுட்டை அல்லது விந்து தானம் செய்தவரின் பெயரை அதை தானமாகப் பெற்றவர்களுக்குக்கூடத் தெரியாத அளவிற்கு ரகசியமாக வைக்கும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது. ஆனால், கருமுட்டை அல்லது விந்து தானம் என்ற அதிநவீன விஞ்ஞானமுறை இல்லாததாலும் குழந்தை ‘வரம்’ தந்தவரே நேரடியாக உடலுறவு வைத்துக்கொள்வதாலும் குழந்தையின் தாய் யார் என்பதையும் தந்தை யார்  என்பதையும் மறைக்க இயலாத சூழல் அப்போது இருந்தது. அது பல்வேறு சமயங்களில் விதுரன் போன்ற ஞானிகளைக்கூடக் கடும் அவமானத்திற்கு உள்ளாக்கி வைத்ததையும் பார்க்கிறோம். ஒருவகையில் பார்த்தால், குருவம்சத்தினர், மீனவர் குலப் பெண்ணான சத்யவதியின் வழித்தோன்றல்கள். இன்னொரு கோணத்தில் பார்த்தால், வேதங்களைத் தொகுத்தவர் என்று சொல்லப்படும் வேதவியாசரின் வாரிசுகள் என்பதை மகாபாரதத்திலிருந்து நாம் புரிந்துகொள்கிறோம். அதனால், பீஷ்மரைப் போன்றவர்கள், தொடர்ந்து சத்திரியகுலம் மட்டுமே அரசாளத் தகுதியுள்ளவர்கள் என்று சொல்வது மகாபாரதக் கதையின் கதைப்போக்கிற்கு எதிர்மாறாக இருப்பதை வாசகர்கள் எளிதாகப் புரிந்துகொள்ளமுடியும். இங்கே இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. பாண்டு, மாத்ரியுடன் உடலுறவுகொள்ள முற்பட்டபோது, முனிவரின் சாபத்தின்படி தலை சுக்கு நூறாக வெடித்துச் செத்துப் போனான். பாண்டுவின் இளைய தாரமான மாத்ரி, கணவனுடன் உடன்கட்டை ஏறித் தன்னை மாய்த்துக்கொண்டாள். ஆனால், பாண்டுவின் முதல் மனைவியான குந்திதேவி, உடன்கட்டை ஏறுவதைத் தவிர்த்துவிட்டு, பாண்டவர்களை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொண்டாள். இந்த நிகழ்வு, உடன்கட்டை ஏறும் வழக்கம் மகாபாரதக் காலத்திலேயே இருந்தது என்பதைக் காட்டுகிறது. ஆனால், உடன்கட்டை ஏறுவதைப் பொறுத்தவரையில், இறந்தவரின் மனைவிக்குக் குழந்தைகள் இருந்தால் உடன்கட்டை ஏறி உயிரை மாய்த்துக்கொள்ளத் தேவையில்லை என்பதும், குறைந்தது குழந்தைகளைக் கவனித்து வளர்க்க இறந்துபோன கணவனுக்கு குந்திதேவி போல இன்னொரு மனைவி இருந்தால்தான் உடன்கட்டை ஏறி, ‘சதிமாதா’ ஆகமுடியும் என்பதும் விளங்கும். எனவே, மகாபாரதக் காலத்தில் உடன்கட்டை ஏறுதல் மனைவி கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான நியதி அல்ல என்பதைத்தான் குந்திதேவியும் மாத்ரியும் நமக்கு உணர்த்துகிறார்கள். மகாபாரதக் காலத்தில் பெண்ணிற்குப் பல உரிமைகள் மறுக்கப்பட்டது என்றாலும் பெண் என்பவள் ஆன்மா என்று ஒன்று இல்லாத ஜீவன் என்ற நிலைப்பாடு அப்போது இல்லை என்பதை நம்மால் பார்க்கமுடிகிறது. பெண் ஆன்மா இல்லாதவள் என்பதால், இறந்துபோன கணவனுடன் உடன்கட்டை ஏறி சதிமாதாவாகக் கடமைப்பட்டவள் என்பது, பின்னாளில் பார்ப்பானியத்தால் முனமொழியப்பட்ட நிலைப்பாடு. உடன்கட்டை ஏறும் கொடிய வழக்கம், ராஜாராம் மோகன்ராய் மற்றும் ஆங்கிலேயர்களின் முன்முயற்சியினால் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது ‘உடன் கட்டை’ ஏறும்படி செய்பவர்கள் மீது கொலைக் குற்றம் சுமத்தப்படுகிறது. மத ரீதியான பாரம்பரிய  வழக்கம் என்ற வாதத்தைச் சட்டம் ஏற்றுக்கொள்வதில்லை. இதன் காரணமாக, ‘உடன்கட்டை’ ஏற்றும் வழக்கம் இப்போது இந்தியாவில் அடியோடு ஒழிந்துவிட்டது. அதிலும், பலதார மணம் புரிவது குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 494 சொன்னபிறகு, ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கருத்தியல், நடைமுறைக்கு வந்துவிட்டது. மேலும் பெண்ணிற்கு 1955ஆம் ஆண்டு, இந்து திருமணச் சட்டத்தின் மூலம், விவாகரத்து உரிமை வழங்கப்பட்ட பின்பு, ‘கற்பு’ என்ற கற்பிதத்திற்குக் கொடுக்கப்பட்டு வந்து புனித அந்தஸ்தைச் சட்டம் ஒழித்துவிட்டது என்று சொன்னால் அது மிகையல்ல. இருபாலருக்கும் திருமண உரிமை வழங்கப்பட்ட பின்பு, இந்து திருமணச் சட்டத்தில் கூறியுள்ள காரணங்களின் அடிப்படையில், இருபாலரும் விவாகரத்து பெற்றுக்கொள்வதோடு, வேறு ஒருவரை மறுமணமும் செய்துகொள்ள முடியும். அவ்விதம்  மறுமணம் செய்தவரையும் விவாகரத்து செய்தால், மீண்டும் மறுமணம் செய்துகொள்ளும் உரிமையைப் பெறுவதால், அந்த உரிமையின் உள்ளே ‘பலதாரத் திருமண உரிமை’யும் ‘பலபுருஷத் திருமண உரிமை’யும் ஒளிந்திருப்பதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அதாவது, ஒரு சமயத்தில் ஒரு பெண் (அ) ஆண் பல ஆண்களை அல்லது பெண்களை மகாபாரதக் காலம் போல மணம் செய்துகொள்ள முடியாது என்றாலும், வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு மறுமணத்தின்போதும், பல புருஷர்களுடன் வாழும் உரிமையைப் பெண்களும் பல பெண்களுடன் வாழும் உரிமையை ஆண்களும் பெற்றுவிட்டனர் என்பதுதான் இன்றைய சட்ட நிலைப்பாடு. சட்டமே அங்கீகாரம் வழங்கிய பின்பு, இன்றும் கற்பின் புனிதம் பற்றியும் மேன்மை பற்றியும் பேசுவது நடப்பில் இருக்கும் இந்து திருமணச் சட்டப் பிரிவுகள் கூறும் உள்ளடக்கம் பற்றிய அறியாமையின் காரணமாகச் சொல்லப்படும் வாதமேயன்றி வேறில்லை. பெண்ணை உடன்கட்டை ஏற்றுவதைப் புனிதச் செயல் என்று கொண்டாடிய காலத்திலிருந்து, விவாகரத்து உரிமை வழங்கியதன் மூலம், கற்பு என்ற கற்பிதத்திற்குக் கொடுத்துவந்த புனித அந்தஸ்து சட்டத்தால் பறிக்கப்பட்டுவிட்ட காலகட்டத்திற்கு வந்துவிட்டோம் என்பதுதான் புரிந்துகொள்ளப்பட வேண்டிய சமூகப் பரிமாணம். இப்போது, ‘திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட புனித உறவு’ என்ற அபத்ததிலிருந்து, வால்டேர் போன்ற மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் சொல்லியவண்ணம், ‘திருமணம் என்பது இருவருக்குமிடையில் செய்துகொள்ளப்படும் சமூக ஒப்பந்தம் (Social Contract)’ என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம் என்பது தெளிவு. இது புரியாதவர்கள், திருமணம், விவாகரத்து, மறுமணம் இவற்றைப் பற்றிய பழைய பாரதக் கலாச்சாரம்தான் உலகத்திற்கே வழிகாட்டிக்கொண்டு இருக்கிறது என்று பத்தாம்பசலித்தனமாக உளறிக்கொண்டு இருக்கிறார்கள். அந்தப் புரிதல் இல்லாததால்தான், இந்து மதம், உலகில் உள்ள ஏனைய மதங்களைவிட மேன்மையான மதம் என்ற கருத்தோட்டத்தில் இருந்துகொண்டு, அவர்கள் தங்கள்  கண்ணோட்டத்தை உலகக் கண்ணோட்டததிலிருந்து சுருக்கிக்கொண்டுவிடுகிறார்கள். (வரும் சனிக்கிழமை தொடர்வோம்)

நங்கூரம்

நங்கூரம்

கவிதை நீண்ட நெடியஓட்டத்திற்குப் பிறகுநிதானமாய் மெல்லதிரும்பிப்பார்க்கிறேன் எத்தனை தூரம்நதியில் விழுந்த இலையாககாலம் என்னைஇழுத்துக்கொண்டு வந்திருக்கிறது! காலத்துக்கேற்றகதாபாத்திரங்களின்ஒப்பனை கலையாமல் உள்வைத்துத் தைத்தஉணர்வுகளின்சுயம் கசியாமல் விழி பூக்கும் கண்ணீரின்வேர்களின்வலி விழுங்கி உதட்டுப் புன்னகையில்கூடுதலாய்க் கொஞ்சம்ஒளி கூட்டி என் குணம் தெரியாமல்பூச்சாண்டி காட்டிய வாழ்விற்கும்நேசம் போதித்து எஞ்சி நிற்கும்காலப் பெருவெளியில்நங்கூரமாகும் என்னை நினைத்தால்எனக்கே சற்றுபொறாமையாகத்தான் இருக்கிறது