நீலகண்ட பிரம்மச்சாரி – 17

நீலகண்ட பிரம்மச்சாரி – 17

காட்சி 17 காலம் : 1921 செப்டம்பர் 11ஆம் நாள் முற்பகல்இடம் : இந்த வரலாற்றின் ஆரம்பக் காட்சியில் நாம் பார்த்த திருவல்லிக்கேணி பாரதியார் வீடுபாத்திரங்கள் : பாரதியார், செல்லம்மா, சகுந்தலா, வ.வே.சு.அய்யர், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, பரலி நெல்லையப்பர், குவளை கிருஷ்ணமாச்சாரி, ஹரிஹரசர்மா, வைத்தியர், இன்னும் சிலர். (பாரதி கண்மூடிப் படுத்திருக்கிறார். பக்கத்தில் செல்லம்மாவும் சகுந்தலாவும் இருக்கிறார்கள். நீலகண்டரும் குவளை கிருஷ்ணமாச்சாரியும் அருகில் நின்றுகொண்டிருக்கிறார்கள். வாசலில் சத்தம் கேட்கிறது. பலர் உள்ளே வரும் சலசலப்பில் செல்லம்மாவும் சகுந்தலாவும் எழுந்து வாசலைப் பார்க்கிறார்கள்.முதலில் வ.வே.சு.அய்யர் உள்ளே வர, சில போலீஸ் ஜவான்கள் பின்னால் வருகிறார்கள்) செல்லம்மா : வாருங்கள் சுவாமி, உங்கள் சிநேகிதரைப் பாருங்கோ. பயமாக இருக்கிறது சுவாமி. வ.வே.சு.ஐயர் : பயப்பட வேண்டாம் செல்லம்மா. பாரதி குணமாகிவிடுவார். ஆகாரம் ஏதேனும் பண்ணினாரா..? செல்லம்மா : காலையில் சிறிது கஞ்சி மட்டும் குடிச்சார். வைத்தியரை அழைக்க ஹரி போயிருக்கிறார். வ.வே.சு.ஐயர் : (பாரதியின் பக்கத்தில் அமர்ந்து) பாரதி.. பாரதி.. பாரதியார் : (மெதுவாக கண்விழித்து) யார்? ஐயரா..? வாரும்.. வ.வே.சு.ஐயர் : எப்படி இருக்கிறீர்..? பாரதியார் : ஒன்றுமில்லை ஐயரே, வயிற்றுக் கடுப்பு இருக்கிறது; களைப்பாகவும் இருக்கிறது. சரியாகிவிடும். (சுற்றுமுற்றும் பார்க்கிறார். போலீஸ் ஜவான்கள் கண்ணில் பட) செல்லம்மா இந்த ஜவான்கள் நம் வீட்டுக்கு ஏன் வந்திருக்கிறார்கள்..? வ.வே.சு.ஐயர் : அவர்கள் என்கூட வந்தார்கள். என்னைப் போலீஸ் நிலையம் அழைத்துப் போகிறார்கள். போகும் வழியில் உம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்துவிட்டேன். செல்லம்மா : என்ன விஷயம் சுவாமி? வ.வே.சு.ஐயர் : ‘தேசபக்தன்’ பத்திரிகையில் ஒரு வியாசம் வந்திருந்தது. அது ராஜ துவேசத்தைக் கொண்டிருக்கிறது என்று என்மீது வாரண்ட்டு. நான் ‘தேசபக்தன்’ ஆசிரியன் என்பதால், என்னை அழைத்துப் போகிறார்கள். அது இருக்கட்டும்.. (பாரதியைப் பார்த்து)பாரதி.. நான் போய்வருகிறேன். உடம்பைக் கவனித்துக்கொள்ளும். அசட்டையாக இராமல் வைத்தியர் தரும் மருந்தைச் சாப்பிடும்.. வரட்டுமா..? பாரதியார் : (வ.வே.சு. அய்யரின் கரத்தைச் சிறிது பற்றி, பின் விடுகிறார்) சரி அய்யரே.. விசாரணை முடிந்ததும் வாருங்கள். வ.வே.சு.அய்யர் : (எல்லாரையும் கும்பிட்டுக்கொள்கிறார். நீலகண்டரையும் கும்பிட்டுக்கொண்டே) நல்லது.. வருகிறேன்..(வ.வே.சு.அய்யரும் அவருடன் வந்தவர்களும் சென்றுவிடுகிறார்கள்) சகுந்தலா : (குவளையில் கஞ்சியுடன்) அப்பா.. இன்னும் கொஞ்சம் கஞ்சி தரட்டுமா..? (பாரதி தலையாட்ட, சகுந்தலா கஞ்சியைப் புகட்டுகிறார். அப்போது வைத்தியருடன் ஹரிஹர சர்மாவும் வருகிறார்) வைத்தியர் : (பாரதியிடம் நெருங்கி) பாரதி.. எப்படி இருக்கிறீர்? (கேட்டுக்கொண்டே பாரதியின் மணிக்கட்டைப் பிடித்து நாடி பார்க்கத் தொடங்க) பாரதியார் : (கையை உதற முற்படுகிறார். பலம் இல்லாததால் பெருமூச்சு விடுகிறார்) எனக்கு என்ன? நான் நன்றாகத்தான் இருக்கிறேன். செல்லம்மா.. இது என்ன, வைத்தியரை அழைத்தாயா? ஏன் என்னை இப்படித் தொந்தரவு செய்கிறீர்கள்? என்னை விட்டுவிடுங்கள்; எனக்கு ஒன்றுமில்லை. வைத்தியர் : சரிதான் பாரதி, உமக்கு ஒன்றுமில்லைதான். நான் தரும் மருந்தை மட்டும் சாப்பிட்டுவிடுங்கள்; உமது களைப்பெல்லாம் போய்விடும். (செல்லம்மாவிடம் மருந்துப் பொட்டலங்களைக் கொடுத்தவாறே) இந்த மருந்தை இரண்டு மணிக்கொரு தடவை கொடுங்கள். நாளைக்கு வந்து பார்க்கிறேன். தொடர்ந்து கஞ்சியே கொடுத்து வாருங்கள். (பாரதி முனகுவதும் மருந்தை உட்கொள்ள மறுப்பதும் சகுந்தலா அவரைக் கெஞ்சியே மருந்தையும் கஞ்சியும் கொடுப்பதாகப் பகல் பொழுது கடந்து மாலை வருகிறது) செல்லம்மா : பாப்பா.. விளக்கேற்றிவிடம்மா.. (சகுந்தலா விளக்கேற்றுகிறாள்) பாரதியார் : (முன்னிரவில் கண்விழித்து) நீலகண்டரே, ஹரிஹரனும் நீங்களும் பக்கத்தில் வாருங்கள். (பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்கிறார்கள்) இப்போ கொஞ்சம் பரவாயில்லை.ஆப்கானிஸ்தானத்து மன்னன் அமானுல்லாகான் பற்றி ஒரு வியாசம் மனத்தில் வருகிறது. அதை எழுதி சுதேசமித்திரனுக்கு அனுப்பவேண்டும். நீலகண்டர் : சரி, செய்யலாம். உங்களுக்குக் கொஞ்சம் தெம்பு வரட்டும். பாரதியார் : இப்போ தெம்பாகத்தான் இருக்கிறேன். அமானுல்லாகான் யார் தெரியுமா..? உலக யுத்தத்தில் ஜெர்மனிப் பக்கம் இருந்தவன். இப்போ வெள்ளைக்காரர்கள் யுத்தத்தில் ஜெயித்திருப்பதால், அவனை அவதூறு பண்ணிக்கொண்டு வருகிறார்கள். (மூச்சுவிடத் திணறுகிறார்) ஹரிஹர சர்மா : அமைதியாக இருங்கள், பிறகு பேசலாம். சகுந்தலா இங்கே வா. அப்பாவுக்குக் கொஞ்சம் தீர்த்தம் கொடேன்.. செல்லம்மா : மருந்து கொடுக்கும் நேரம்தான். பாப்பா மருந்தும் கஞ்சியும் கொடுத்துவிடு. (சகுந்தலா மருந்து கொடுக்க முயல, பாரதி சாப்பிட மறுக்கிறார். சகுந்தலா வற்புறுத்திப் புகட்ட, மருந்து பாதி இறங்கியும் இறங்காமலும் போகிறது) பாரதியார் : எனக்கு ஒன்றுமில்லை, விடுங்கள்… (படுத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொள்கிறார். பரலி நெல்லையப்பரும் சுதேந்திரநாத் ஆர்யாவும் வருகிறார்கள். பாரதியாரோடு இருந்த நினைவுகளைப் பேசிக்கொள்கிறார்கள். நள்ளிரவு கடந்த பின்னர் பாரதியார் சிந்திப்பதை நிறுத்திக்கொள்கிறார். மறுநாள் காலையில் பாரதியாருக்கு இறுதிச் சடங்குகள் செய்வது பற்றி யோசிக்கிறார்கள்.) காலம் : 1921 செப்டம்பர் 12ஆம் நாள் காலை சகுந்தலா : (செல்லம்மாவிடம்) அக்காவுக்குச் சொல்லணுமே அம்மா.. அக்காவும் அத்திம்பேரும் வந்துருவாங்களா..? குவளை : நானும் ஹரிஹரனும் போய் எல்லாருக்கும் தந்தி கொடுத்துட்டோம். ஆனா அவா எல்லோரும் இன்னைக்கே வந்துட முடியாதே.. வந்திருந்தவர்களில் ஒருவர் : எல்லாரும் வரவரைக்கும் காத்திருக்க முடியுமோ ஓய்..? வந்தவாளை வச்சுக் காரியங்களை செய்ய ஆரம்பிச்சுடணும். நீலகண்டர் : அண்ணாவோட சென்னை சிநேகிதர்களாவது வரவேண்டாமோ.? பரலி நெல்லையப்பர் : பத்திரிகைச் செய்திகூட இனிமேல்தான் வரணும். காத்திருந்து செய்யலாமா..? வந்திருந்தவர்களில் இன்னொருவர் : சம்பிரதாயப்படி இறந்த நாளிலேயே காரியங்களைச் செய்யணும். அஸ்தமனம் வரை போகக் கூடாது. மீண்டும் முதல் நபர் : வருகிறவர்கள் வரட்டும்.. நாம ஆரம்பித்து விடலாம். இரண்டாமவர் : சரி.. பாரதிக்குக் கிரியைகள் யார் செய்யறது..? தம்பி நீலகண்டர், உன்மேல் அவருக்கு ரொம்பப் பிரியம் அல்லவா..? பாரதிக்கு ஈமக் கிரியைகள் நீ செய்யலாமே..? நீலகண்டர் : என்ன..! நானா..? என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சடங்குகளில் எல்லாம் சிறிதும் நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராக இருந்தாலும் நான் இந்தச் சடங்குகளைச் செய்ய மாட்டேன்.. பாரதிக்கு எப்படிச் செய்ய முடியும்?! இன்னொருவர் : அப்போ, ஹரிஹர சர்மாவைச் செய்யச் சொல்லலாம். (ஹரிஹர சர்மா பாரதிக்கான இறுதிச் சடங்குகளைச் செய்வது என்று முடிவாகிறது. பாரதியின் இறுதிப் பயணம் தொடங்குகிறது)

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. உணவு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருப்பதாகவும் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் திட்டத்துக்கு நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பலரும் தெரிவித்து வருகின்றனர். கோதுமை ரவா உப்புமாவுடன் காய்கறி, பருப்பு சாம்பார்; சேமியா காய்கறிக் கிச்சடி, வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், சோள காய்கறிக் கிச்சடி, ரவா கேசரி என, திங்கள் முதல் வெள்ளி வரை தரமாகவும் சுவையாகவும் பாதுகாப்பான முறையிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்படுவது போற்றத்தக்கது. அதுபோக, பிஞ்சுக் குழந்தைகளின் காலைப் பசியாற்றும் நோக்கில் இதற்கு வித்திட்ட தமிழக முதலமைச்சர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அரசுக்குக் கூடுதல் சுமை மிகுந்த திட்டம்தான் எனினும், அறிவுப்பசியுடன் வயிற்றுப்பசி போக்குவதும் ஓர் நல்லாட்சியின் இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து செயல்படும் முதல்வரின் சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் நிச்சயம் வாழ்த்தி வரவேற்பர். இந்த ஆட்சியின் தனித்துவம் மிக்க திட்டம் இது. அதேவேளையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகள் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஒரு புள்ளி விவரப்படி 24310 அரசுத் தொடக்கப் பள்ளிகளுடன் 7024 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் வகுப்பு முடிய உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பசிப்பிணி போக்க உள்ளது அறியத்தக்கது. எட்டு வகுப்பு முடிய உள்ள உயர் தொடக்கப்பள்ளிகளாக விளங்கும் நடுநிலைப் பள்ளிகளில், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் காலை உணவு என்பதை மேலும் சற்றுப் பெரிய மனத்துடன் அணுகி, அரசின்மீது தூக்கி வைக்கப்படும் பாரத்தைப் பொறுத்துக்கொண்டு ஒரே வளாகத்தில் பயிலும் 6,7,8 வகுப்புக் குழந்தைகளும் பயனுறத்தக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதுடன், உரிய உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது உடனடித் தேவையாக இருக்கிறது. பிறரைப் பார்க்கவைத்து உணவு உண்ணும் வழக்கம் தமிழர் பண்பாட்டில் என்றும் இருந்ததில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், தம் பள்ளியில் படிக்கும் தம்பி, தங்கைகள் அரசின் ருசியான வகைவகையான காலை உணவு உண்பதை ஒவ்வொரு நாளும் நேரில் கண்டு, தமக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் மனத்தைக் கல்வியால் ஈடுகட்டுவது என்பது மிகவும் சிரமமான, சிக்கலான காரியமாகும். ஆசிரியர்களாலும் இதனைச் சரிசெய்தல் என்பது இயலாத ஒன்று. ஆகவே, அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் தொடக்க வகுப்புகளுக்குரிய குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஏனைய உயர் தொடக்க வகுப்புகளில் கல்வி பயின்று வரும் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும் அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் மனிதாபிமானத்துடன் மாணவர் மற்றும் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு எவ்வளவு இயலுமோ அவ்வளவு விரைவில் இக் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி நீட்டித்துச் செயல்படுத்துதல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. போலவே, அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளும் இந்தத் திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மதிய உணவுத் திட்டத்தைக் காமராஜர் அறிவித்தபோது தொடங்கி, அதனைச் சத்துணவுத் திட்டமாக எம்.ஜி.ஆர். மாற்றியபோதும், முட்டை மற்றும் தானியச் சிற்றுண்டி வகைகளைக் கலைஞர் இந்தத் திட்டத்தில் சேர்த்தபோதும், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கிடையே பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை. பிற திட்டங்களெல்லாம் அரசுப்பள்ளிகளைப் போலவே அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கும் செயல்படுத்தப்படும்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது, அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டார்கள். தொடர்ந்து இப்போது காலை உணவுத் திட்டத்திலும் அவர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். மதிய உணவு உண்ணும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் மட்டும் மறுக்கப்படுவது அறமன்று என்கிறார்கள் அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பெற்றோர்களும். மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளே பெரும்பாலும் பயில்கிறார்கள். குறிப்பாக, அரசுப்பள்ளிகள் அருகில் இல்லாத கிராமப் பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு, அந்தப் பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளே இருக்கும் ஒரே வாய்ப்பு. மிகச் சொற்ப அளவிலான நகர்ப்புறப் பள்ளிகளை மனத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களைப் புறக்கணிப்பது சரியான நடைமுறையாக இருக்காது. எனவே, தமிழக அரசு தூரிதமாகச் செயல்பட்டு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் நடுநிலை வகுப்புக் குழந்தைகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எடுக்கும் என நம்புவோம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

காட்சி 16 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர் சுரேந்திரநாத் ஆர்யா : தீர்ப்புக்கு அப்பீல் முயற்சிகள் செய்தீர்களா..? நீலகண்டர் : என்வரையில் அன்றும் சரி, இன்றும் சரி, பிரிட்டிஷ்காரன் கோர்ட்டை நான் நம்புவதில்லை.. ஆகவே என்னைத் தவிர எல்லாரும் அப்பீல் செய்தார்கள். நான் எதிர்பார்த்தது போலவே அப்பீல் மனுக்களை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. பாரதியார் : உமது செயலால் நீர் தனித்துத் தெரிகிறீர்..! சிங்காரவேலர் : வெள்ளைக்காரன் கோர்ட்டைப் பற்றிய உமது அபிப்பிராயம் சரிதான். அதிலும் இது வெள்ளை அதிகாரியைக் கொன்ற கொலை வழக்கு. அப்பீலை எப்படி ஏற்பார்கள்..? நீலகண்டர் : அதிலும் சங்கர கிருஷ்ணய்யர் உள்ளிட்ட எல்லாரும் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றே வாதாடினார்கள். அதிலும் மணியாச்சி சம்பவத்தில் வாஞ்சியுடன் இருந்ததாக அடையாளம் குறிக்கப்பட்ட சங்கர கிருஷ்ணய்யர், ‘வாஞ்சியுடன் கடிதத் தொடர்பு இருந்ததை வைத்து என்னைக் குற்றத்தில் சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் வாஞ்சியின் கொலைத் திட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மணியாச்சியில் அவருடன் நான் இருக்கவில்லை’ என்றும் வாக்குமூலம் கொடுத்தார். ‘என்னுடனும் அவருக்குப் பழக்கமில்லை’ என்று நீதிமன்றத்தில் கூறினார். அவர்களின் நிலையைக் குறித்து நான் இரக்கம் கொண்டேன். தீர்ப்பளித்த நீதிபதிகளில் இந்தியரான சங்கரன் நாயர், வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியைச் சீர்குலைத்த காரணத்திற்காகவும் தேசபக்தர்களுக்கு கலெக்டர் ஆஷின் மீது கோபம் இருந்ததைக் குறித்திருக்கிறார். ஆனால் வாஞ்சியின் கடிதம் அதை தேசம் தழுவிய பயங்கர இயக்கத்தின் வேலை எனக் குறித்தது. சனாதன விரோதிகள் என்று ஆங்கிலேயரைப் பொதுவாகக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையிலேயே வெள்ளை நீதிபதிகள் இதனைச் சதி என்றும் அதன் சூத்திரதாரி நான் என்றும் குறிப்பிட்டனர். ஆர்யா : சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கொலையுண்ட செய்தி, ஜெயிலில் சொல்லப்பட்டபோது அவர் மகிழ்ந்திருக்கிறார். நெறி சார்ந்த மனிதரான அந்த மகானுக்குக்கூட, இந்தக் கொலை ‘நல்லதோர் செய்தி’யாகப் பட்டிருக்கிறது. பாரதியார் : சரி அன்பர்களே, நேரமாகிவிட்டது. இந்த வாரக் கடைசியில் நான் ஈரோடு செல்லப் போகிறேன். போய்விட்டு வந்து நாம் சந்திக்கலாம். ஆர்யா : பாரதி, சென்ற மாதம் உன்னை யானை தள்ளிவிட்டதிலிருந்தே நீ சீக்கிரம் சோர்வடைந்துவிடுவதாகத் தெரிகிறது. உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். பாரதியார் : உடம்பு இருக்கட்டும்.. பராசக்தி துணை வருவாள். காலன் என்னிடம் வரப் பயப்படுவான். பாரேன், யானை என்னைத் தள்ளியதோடு நின்றுவிட்டதல்லவா..! ஈரோட்டில்கூட ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில்தான் பேசப்போகிறேன். சிங்காரவேலர் : பாரதி, உமது நம்பிக்கையும் உத்வேகமும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. நீர் இந்த தேசத்தின் சொத்து. உமது தேக நிலை குறித்து அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம். பத்திரமாகப் பயணம் செய்யுங்கள். ஆர்யா : பாரதி, நீ கிளம்பு. நிலவு காய்கிறது; நாங்கள் சற்று நேரம் இருந்துவிட்டு வருகிறோம். சிங்காரவேலர் : நானும் பாரதியுடனேயே செல்கிறேன். நீலகண்டரே, எனது வீட்டுக்கு வாருங்கள். (ஆர்யாவைப் பார்த்து) நீர் அவரை அழைத்து வாரும். (பாரதியாரும் சிங்காரவேலரும் விடைபெற்றுச் செல்கின்றனர்) நீலகண்டர் : (ஆர்யாவைப் பார்த்து) ரொம்ப நேரமாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீர் கிறித்தவப் பாதிரி உடையில் வந்ததைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனேன். இது பாரதிக்குத் தெரிந்திருப்பதால் அவரை வைத்துக்கொண்டு கேட்பதற்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆர்யா : அது பெரிய கதை; சுருங்கச் சொல்கிறேன். சிதம்பரம் பிள்ளைக்கு ஜெயில் தண்டனை கொடுத்ததை எதிர்த்து மூர் மார்க்கெட்டில் பேசியது உமக்குத் தெரியும் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம். அதனால் உன்னைக் கைது செய்து கொண்டு போனார்கள். ஆர்யா : சிறைச்சாலைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றேன். ஆனால் பிழைத்துக்கொண்டேன். வெளியே வந்த பிறகு, வைதீகர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் கிறித்தவத்தைத் தழுவினேன்; வெளிநாடு சென்றேன்; திருமணம் ஆனது. என் மனைவி ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்தவள். நீலகண்டர் : வைதீகத்தின் தீமைகளை மதம் மாறி எதிர்க்க முடியாது. மதத்திற்குள்ளேயே இருந்துகொண்டுதான் போராட வேண்டும். ஆர்யா : இதையேதான் பாரதியும் சொன்னார். சரி போகட்டும்.. அடுத்தாற்போல் என்ன செய்யப் போகிறீர்? நீலகண்டர் : இன்னும் ஒன்றும் தோன்றவில்லை. ஆர்யா : சரி, யோசிக்கலாம். சிங்காரவேலரிடம் அழைத்துப் போகிறேன். உமது சிறைவாசம் எப்படி இருந்தது..? நீலகண்டர் : சிறையிலும் நான் கலகக்காரனாகத்தான் இருந்தேன். அரசியல் கைதிகளுக்கான முறையில் நான் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.மற்றவர்களுக்கும் சிறைச் சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல். பல சிறைகளுக்கு மாற்றினார்கள். இறுதியில் பெல்லாரிக்குக் கொண்டு போனார்கள். 1914இல் ஒருமுறை சிறையிலிருந்து தப்பவும் செய்தேன். ஆர்யா : சிறையிலிருந்து தப்பினீரா?! எப்படி நீலகண்டரே..?! நீலகண்டர் : 1914இல் உலகப்போர் மூண்டதல்லவா..? அப்போதுதான் நாங்கள் புரட்சியைத் திட்டமிட்டிருந்தோம். இந்தச் சமயத்தில் சிறையில் இருப்பதா என்று தப்பித்தேன். அங்குள்ள ஆட்களையே தப்பிக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொண்டேன். மூன்றாம் நாள் என்னைப் பிடித்துவிட்டார்கள். (மேடை ஒளிமாற்றத்தில் ஓம்கார் அறை ஒளியில் வருகிறது) சங்கர கிருஷ்ணன் : பாரதியாருடன், அதுதான் நீங்கள் கடைசியாகப் பேசியதா..? ஓம்கார் : அவர் ஈரோடு சென்று வந்த பிறகும் அவரைத் தினமும் சந்தித்து வந்தேன். சிலசமயம் ஆர்யாவும் வருவார். தமது ஈரோடு பிரயாணம் பற்றி, பாரதி ஒரு கட்டுரையும் எழுதினார். அவரது கடைசி நாளில்.. (திரை விழுகிறது )

கருவாட்டு வாசம்

கருவாட்டு வாசம்

சிறுகதை எல்லாவற்றையும் பகிர்ந்து அளிக்கக்கூடிய நிலையில்தான் இருந்தேன். என்னளவில் இந்த வாழ்வு எனக்கான ஒன்று மட்டுமல்ல. பரந்த தியாகமாகத்தான் பிள்ளை வளர்ப்பைக்கூடப் பார்க்கக்கூடிய பக்குவத்தில் இருந்தேன். அப்பாவின் வயது எழுபது இருக்கும். இன்னும் இரண்டு மாதத்தில் எனக்கும்கூட நாற்பத்து நான்கு முடியப் போகிறது. வராண்டாவின் வெளிச்சம் உறுத்த, மெதுவாக நடக்கலாம் என்று படி இறங்கும்போது செல்வனின் அழைப்பு வந்தது. சந்தர்ப்பங்களைத் தேடாதவன். எது வாழ்வின் எல்லை என்று எனக்கு வந்த கனவு, ஒருபோதும் அவனுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. மிகச் சோர்வாக, அவனன் அழைப்பை எடுக்கச் சந்தர்ப்பம் வாய்த்தபோதும்கூட, திருவிழா கலை நிகழ்ச்சியின் மூன்றாவது பாடல் போலப் பேசத் தொடங்குவான். இவனுக்குக் கவலை என்பது என்னவாக இருக்கும் என்று சிலநேரம் நானாகவே நினைத்து, இன்னும் காலம் இருக்கிறது என்று சமாதானத்திற்குள் புகுந்துவிடுவேன். மருத்துவ வாசனை என்று ஒன்று இன்னும் விற்கப்படாமல் உலவுகிறது. நடுத்தர வர்க்கத்தின் ஊடாக நடக்கத் தொடங்கினேன். கையும் காலும் வாயும் உள்ளவர்கள் மட்டும் மனிதர்கள் இல்லை. மனிதர்கள் என்பவர்கள் அவரவருக்கு உரிய தனித்த உருவம் என்பதை நான் அவன் மூலமாக அறிவேன் என்பதைச் சொன்னபோது, அதை உன் அப்பாவின் வழியாகக் கண்டேன் எனச் சொன்னவனும் அவன்தான். எல்லாவற்றிலும் நிதர்சனமான உண்மை என்று ஒன்று உண்டு என்பதை அவன் வாயிலாகக் கண்டபோது, நான் வாங்கும் சம்பளம் எதற்கானது என்ற அருவருப்புகூட எனக்கு வந்ததுண்டு. பூ வாங்கும் கடையில் இருக்கும் நாட்காட்டி பற்றி, செல்போன் கடையில் இருக்கும் உடைந்த பாகத்தின் பின் இருக்கும் மனிதரைப் பற்றியெல்லாம் இவனுக்கு என்ன அக்கறை என்று நினைக்கத் தோன்றும். சுவரசியம் நிறைந்த சிறுகதை ஒன்றைச் சேகரிக்கத் தெரிந்தவன் செல்வம். அப்பாவை ஊரில் நிறுத்திவிட்டு, கடந்து போன பத்து வருடத்தில், செல்வம், அப்பாவிற்கான முதல் துணை என்றுதான் நினைத்தேன். மிக அருகில் இருப்பது இருப்பு மட்டும்தான். மிக நெருக்கமாக இருப்பதுதான் உணர்வை அறியக்கூடியது என்று எங்கள் இருவரில் எனக்கு மெதுவாகத்தான் தெரிந்தது. தனிமை ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யும் என்று என்னிடம் கேட்ருந்தால், தவறு செய்யச் சொல்லும் என்றுதான் சொல்லியிருப்பேன். எனக்கும் தனிமைக்குமான தூரம் அவ்வளவுதான். அதுவும், கை நிறைய வந்த இந்தத் தொலைபேசி, தனிமையை ஒரு தொடர்வண்டி வேகத்தில் விரட்டியது. ‘அங்கேயேதான் இருக்க?’ என்றதற்கு, ‘ஆமாம்..’ என்றேன். ‘இரு வந்துர்றேன்’ என்றவனின் உருவம் வாசலில் யாருடனோ பேசிகொண்டிருந்தது. என்னிடம் ஏதும் விசாரிக்கவில்லை. அவனாகவே அப்பாவின் உடல்நிலை குறித்த வரைபடத்தைச் சேகரித்துக் கொண்டான். எப்போதும்போல, ‘வா,, டீ சாப்ட்டு வரலாம்’ என்று இருவரும் நடந்தோம். இருபுற மரங்களின் நிழலின் வழியாக விழுந்த வெளிச்சம், பாதையின் ஊடாக எதையும் பேசச் செய்யவில்லை. அவனாகப் பேசுவான். \ ‘அப்பாக்கு உடம்பு முடியல.. நீ எதுக்கும் வந்துட்டுப் போ…’ என்றபோது தட்ட முடியவில்லை. மாதம் இவ்வளவு என்று அனுப்பிப் பழக்கப்பட்ட பின்பாக, அப்பாகூட இஎம்ஐ கணக்கில்தான் வந்தார். சில மாதங்களில், செய்தி வழித் தொடர்பில் சின்ன சஞ்சலம் எனக்கும் அப்பாவிற்கும் உண்டு என்பது அவனுக்கும் தெரியும். இதுவரை எதுவும் அதைப்பற்றி செல்வம் பேசியதில்லை. எல்லாவற்றையும் மிகச் சாதாரணமாகப் பேசும் தெருச் சண்டை வார்த்தைகள் போலானவன் என்ற பிம்பத்தை, செல்வம் அப்போதுதான் உடைத்தான். நிச்சயமாக அவனுக்குத் தெரியாமல் இருக்காது. அப்பா பேசும் எதையும் காதில் வாங்காமல் கழிந்த இரண்டு வருடத்தில். ஒரு குற்றசாட்டுகூட செல்வத்திடமிருந்து வந்ததில்லை. நானாகவே ‘சாயங்காலம் பேசுறேன், ஃபிரீயா இருப்பல்ல..?’ என்றபோது ஆமோதித்துக் காத்திருந்தவனிடம் என்னவெல்லாம் கேட்க வேண்டும் என்று நினைத்தேனோ, அத்தனையையும் ஒரே சொல்லில் மறுத்தான். ‘உனக்கு எது சரிந்னு படுதோ அதைச் செய். அவருக்கு எது சரின்னு படுதோ அதை அவர செய்யவிடு.. ஒருபக்கம்தான, அடைச்சிடலாம்னு மட்டும் நினைக்காத. வயசானவங்க கோபம் கொலையைவிட மூர்க்கமானது’ என்றான். எனக்கு எதுவும் பேசத் தோன்றவில்லை. நானாகவே பேசிகொண்டிருக்கத் தொடங்கிய அழைப்பு, கேட்டுக்கொண்டிருக்கும் அழைப்பாக மாறியது. அம்மா விட்டுச் சென்ற பின், அப்பாவிற்கு இப்படியான ஆசை இருந்திருக்கும் என்று நினைக்கவில்லை. மிகக் குறைவாகப் பேசி, தன்னுடைய வார்த்தைகளைச் சுருக்கிகொண்டார். ஆனால் அதற்கு எதிர்மாறாக இப்போது எல்லாவற்றையும் பேசியே தீர வேண்டும் என்கிறார். எப்போது அலைபேசியை வைப்பார் என்று காத்திருந்து சில நேரம், நானாகவே தூண்டித்தது உண்டு. அப்பாவிடம் மகன் கேட்க முடியாததையும் மகனிடம் அப்பா சொல்லமுடியாததையும் ஊர் மிக விரைவாகச் சொல்லிவிடுகிறது. அப்பாவிற்கு வேறொரு தொடர்பு உண்டு என்ற செய்தி மெல்ல என்னை அரிக்கத் தொடங்கி, அவருடனான பேச்சை நிறுத்திக்கொள்ளத்தான் முடிந்தது என்னால். அதற்குப் பின்பாக நிறைய தகவல்கள். பகல் முழுவதும் அங்குதான் இருக்கிறார். வண்டியில் ஒருநாள் பார்த்தேன். உங்க அப்பா வயசு இருக்கும் என்று நிறைய வந்தன. இந்த வயதில் எதற்காக இவர் இப்படி இருக்கிறார் என்று நானும்கூடக் கூசிப் போனேன். கடந்தமுறை ஊருக்கு வந்து திரும்பியபோது சொத்துப் பத்திரத்தைக்கூட எடுத்து வந்துவிட்டேன். என்னால் இவ்வளவுதான் யோசிக்க முடிந்தது. மனைவிக்கு அவரை வெறுக்க மிக எடை கூடிய காரணம் ஒன்று கிடைத்த மகிழ்ச்சியும் அமைந்தது. செல்வம் டீயை முடித்து வழக்கம்போலப் பேசிகொண்டிருந்தான். ‘போலாம் வா…’ என்றதும் அவ்விடத்தில் அவனிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியேற ஆட்கள் இருந்தார்கள். ‘யாருடா அவரு…?’ ‘தெரியாது மாப்ள… இப்போதான் பழக்கம். அவங்க சொந்தக்காரப் பொண்ணு ஒன்னு நம்ம ஊருக்கு வாக்கப்பட்டு வந்து, இப்போ வெளியூர்ல இருக்காங்களாம்…’ என்றான். விசாரிக்க எனக்கு நேரம் இல்லை. அப்பாவின் நிலை தெரிந்ததால், அடுத்து என்ன செய்யலாம் என்ற அவசரத்தில் இருந்தேன் நான். ‘என்ன சொல்றாங்க செல்வம்? எப்போ டாக்டர பாக்கலாம்…?’ ‘என்ன மாப்ள.. அவசரமா போகணுமா?’ ‘சே… அதெல்லாம் இல்லடா… புள்ளைங்க வர வேண்டியது இருந்தா, சொல்லணும்ல…’ ‘சொல்லிரு மாப்ள… நைட் முடிஞ்சிரும்…’ …….. மருத்துவமனை வாசனை நாசியில் நிறைந்திருந்தது.   ‘கொண்டுவரும்போதே ஒன்னும் இல்ல. நம்மளும் பாவம் பண்ணிறக் கூடாதுன்னுதான பெரும்பாலும் வயசானவங்களைக் கொண்டுவந்து போடுறோம்?! உங்க அப்பாவும் அப்படித்தான்’ எல்லாம் முடியும் வரை, எனக்குப் பழக்கபட்ட மவுனம் கையிருப்பில் இருந்தால் போதும் என்றிருந்தேன். செல்வம், எல்லாம் பேசிவிட வேண்டிய முடிவில் இருந்ததும் தெரிந்தது. ‘வா அப்டி உக்காரலாம்..’ என்று மரத்தைச் சுற்றிய நாற்காலி ஒன்றில் அமர்ந்தோம். ‘உங்க அப்பாவை நினைக்கும்போதல்லாம் உனக்கு வேறொரு மனுஷியும் ஞாபகம் வருதுல்ல மாப்ள?’ இல்லை என்று சொல்லாமல் அவன் முகத்தைப் பார்த்தேன். ‘தப்புன்னு நாம நினைக்கிற ஒன்னு, எப்பயும் நம்ம கூடயே வருதுல்ல.. நாம சரியா இருக்கிறோம் என்ற திமிருக்கு நாமதான சாட்சி?’ ‘நீ எங்க வரேன்னு எனக்குத் தெரியும் செல்வம். எனக்கு அந்த விளக்கம் இனி தேவை இல்லைடா…’ ‘நமக்கு எதுதான் தேவை? வசதியான வாழ்வு. அவ்ளோதான…. அதுக்காக இன்னும் எவ்ளோ தூரம் ஓட முடியுமோ அவ்ளோ ஓடலாம். நமக்கு அந்த இலக்கை நோக்கி ஓடச் சொல்லிக் குடுத்தவங்க செஞ்ச தப்பும் அதுதான். இப்போ உங்க அப்பாவுக்கு சாப்பாட்டுக்குக் காசு குடுத்ததும் உன் கடமை முடிஞ்சி போச்சுல்ல… இதையே உங்க அப்பா, இருவது வருசத்துக்கு முன்னாடி செஞ்சிருந்தா அவருக்குப் பேரு என்ன?’ ‘நீ நடைமுறைக்கு இல்லாதத பேசுறடா. நானும் எங்க அப்பா எனக்கு என்ன செஞ்சாரோ அதையேதான என் புள்ளைக்கும் செய்றேன்? இதுதான உலக வழக்கம்? வெட்டி நியாயம் பேசி அவரு செஞ்ச தப்ப நியாயப் படித்துற நீ…’ ‘சரிதான் மாப்ள.. தியாகம் என்ற வார்த்தையை நாமல்லாம் மறந்து எவ்ளோ நாள் ஆச்சு.. நாம யாருக்காவது அதைச் செஞ்சி ஏமாறும்போது மட்டும்தான் ஞாபகம் வருது. நமக்காக அதைச் செய்பவங்களை நாம கண்டுக்கிறதே இல்லைல… உங்க அப்பா பண்ணுனது தப்புன்னு நீ நினைக்கிறல்ல… நாம செஞ்சது எல்லாம் சரியா? வயசானவங்க பேசுற வார்த்தைகளையும் நடந்துக்குற முறையையும் நம்மாள தடுக்க முடியலங்குற கோபம்தான நமக்கு இருக்கு…? கடைசிவரை நீ அனுப்புற காசுல சாப்பாடு மட்டும் சாப்ட்டு வாழ்ந்து செத்திருந்தா, நீ இப்போ செய்றத விட வேறென்னா செஞ்சிருப்ப உங்க அப்பாவுக்கு…?’ ‘வேறென்ன செய்யணும்டா?’ ‘உறவுதான் மாப்ள மனுசனோட பலம். ஒரு மாசம் யாரும் இல்லாம ஒரு உலகத்துல நீயும் நானும் வாழ முடியாதுடா. வீட்டுச் சுவரும் ஓட்டுற வண்டியும் பதில் பேசுற மாதிரி வந்துட்டா, உங்க அப்பாவுக்கு வேற ஒரு மனுஷி தேவைப்பட்டுருக்காது. ‘இவ்வளவு நடந்த பின்னாடியும், ‘எனக்கு வந்த தகவல் இதுதான். நீ என்னப்பா சொல்ல வர்ற?’ன்னு உன்னால கேட்க முடியலைல.. அதுக்கான பதில் அவருகிட்ட இல்லாமலா இருந்துருக்கும்..?’ ‘வேறொரு பொம்பளகிட்ட நம்ம அப்பா பேசுறாரு… அவங்க வீட்டுக்குப் போய் வர்றாருன்னு செய்தி வந்ததும் நமக்கு சபலம்தான நினைவுக்கு வருது… ஏன்? அவரு வயசுகூட நமக்கு மறந்து போகுது, இல்லையா? அவ்ளோ அடி முட்டாள்களா மாப்ள நாம…? என்னை விடு. உனக்கு அப்படி யாருமே இல்லையா…? ஒரு மாசம் கூடுதலா காசு கேட்டதும் உனக்கு வேற என்ன ஞாபகம் வந்துருக்கும் உங்க அப்பா மேல…? இதுக்கெல்லாம் விளக்கம் சொல்ல எவ்ளோ தவிச்சிருப்பாரு? அதுக்காகவே அவரு அந்தக் காசைச் செலவு பண்ணிருந்தாலும் அது உன் கடமைதானடா மாப்ள? அவருகிட்ட இருந்து வந்ததுதான உனக்கானது எல்லாம்..! ரொம்பப் பெருமையா சமத்துவம் பத்திப் பேசறோம். ஆனா, அதை முந்தைய தலைமுறை செய்தா நம்மளால ஏத்துக்க முடியல. நாமதான மாப்ள பிற்போக்குவாதிங்க…?’ ‘இப்பயும்கூட உங்க அப்பாங்குற ஒரு ஆணுக்காகத்தான மாப்ள பேச முடியுது? இதே இடத்துல உங்க அப்பாகூட பேசப்பட்ட மனுசிக்கு நாம வேற பேருதான வச்சிருக்கோம்?’ செல்வத்தின் வார்த்தைகளிலிருந்து என்னால் மீள முடியவில்லை. சுதந்திரத்தை அனுமதிக்காத மனிதர்களாகத்தானே நம் வாழ்வு நீள்கிறது? அப்பாவின் பெயர் சொல்லி என்னை அழைத்ததும், இருவரும் போனோம். நாளை காலை பத்து மணிக்குக் கிடைச்சிடும். இன்னும் சில ஆதாரங்களைக் கொண்டுவரச் சொன்னர்கள். ‘நான் போய்ப் பாக்குறேன். நீ இங்க எங்கயாவது தூங்கு’ என்று சொல்லிவிட்டுப் போனான் செல்வம். அதற்கு முன்பாக ஒரு கேள்வி வைத்தான். ‘உங்க அப்பாவுக்குக் கருவாடு பிடிக்கும்ல..?’ ‘உனக்கு எப்டித் தெரியும்?’ என்றேன். ‘மிச்சக் கருவாட மொத்தமா விக்க அந்த வீட்டுக்குதான் போறேன்’னு சொன்னன்

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

நீலகண்ட பிரம்மச்சாரி – 15

காட்சி 15 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்.இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். ஆர்யா : நீலகண்டரே, சரணடையும் முடிவைக் கல்கத்தா போய் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது..? நீலகண்டர் : நான் இயங்கி வந்த இயக்கத்தின் நண்பர்கள் வங்கத்தில்தான் இருந்தார்கள். உண்மையில் நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். புதுச்சேரி நண்பர்கள் ஏதோ செய்யப்போகிறார்கள் என்று அறிந்திருந்தேன். அவர்களின் இலக்கு ஆஷ் என்பது தெரியாது.புதுச்சேரியைவிட்டு வெளியேறிய நான், திருநெல்வேலிக்குச் சென்று தோழர்களைப் பார்த்து என் நிலைமையை விளக்கி இருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது எத்தனைத் தவறாகப் போய்விட்டது..?!என்மேல் அவர்களுக்கிருந்த சந்தேகங்களையேனும் நிவர்த்தி செய்திருக்கலாம். இந்தக் கொலையைப்பற்றித் தெரிய வந்திருந்தால் தடுக்க ஒரு முயற்சியும் எடுத்திருக்கலாம். ஆஷ் கொலையுண்டதைப் பத்திரிகைகளில் பார்த்த நான், என் பெயர் தேடப்படும் சதிகாரர்கள் பட்டியலில் இருப்பதை அறிந்ததும், இதுபற்றி யோசித்துத் தெளிவு பெற எனக்குக் கல்கத்தா நண்பர்களே உதவமுடியும் என்பதால், நான் அங்கு சென்றேன். சரணடைந்துவிடலாம் என்று அங்குதான் முடிவு செய்தோம். ஆர்யா : சரணடைவது உமது குணமில்லையே நீலகண்டர்..? நீலகண்டர் : சரணடைவதைத் தவிர வேறு இரண்டு வழிகளை யோசித்தோம்..முதலாவது, நண்பர்கள் உதவியைப் பெற்று எங்கேனும் வெளிநாட்டுக்குத் தப்பிவிடுவது. இரண்டாவது, நமது தேசத்திலேயே தலைமறைவாக வாழ்வது. முதல் வழியில் போனால் இந்தியா விடுதலை பெறும்வரை தேசத்திற்குள் வர முடியாது. சுதந்திரம் பெறப் பல காலம் ஆகலாம். அதுவரை தேச சேவைக்கு வரவே முடியாது. இரண்டாம் வழியில் தேசத்தில் இருக்கலாம். ஆனால் பல காலம் ஒளிந்து வாழ வேண்டும். பயந்துகொண்டே தேச சேவை செய்ய வேண்டும். அது ஆபத்தானது. ஆஷ் கொலையில் எனக்கு நேரடித் தொடர்பு இல்லாததாலும் சதியின்போது நான் திருநெல்வேலியில் இல்லாததாலும் வழக்கிலிருந்து தப்பிக்க சரணடைவதே சரியாக இருக்கும் என்று யோசித்தோம். சிறைத் தண்டனை என்றாலும் சிறிய காலமே அமையும் என்பதால் சீக்கிரம் வெளியே வந்து தேசப் பணியைத் தொடரலாம் என்று கருதியதால், கல்கத்தாவிலேயே சரணடைந்து வாக்குமூலம் கொடுத்தேன். ஆர்யா : (பாரதியாரைப் பார்த்து) ஏன் பாரதி.. கடலூரில் உன்னைக் கைது செய்தபோது, ஆஷ் கொலை வாரண்டில் உன் பெயர் இருந்ததைச் சாக்காக வைத்துக்கொண்டார்கள் என்கிறார்களே? பாரதியார் : 1908இல் நான் புதுச்சேரி வந்தபோது, என் பேரில் எந்த வாரண்டும் இல்லை. ஆஷ் கொலைச் சதியில் புதுவையில் இருந்தவர்களுக்குத் தொடர்பு இருந்தது என்பதை வாஞ்சிநாதன் மற்றும் அவரது சகாக்களின் கடிதங்கள் வாயிலாகத் தெரிந்துகொண்ட பிரிட்டிஷ் அரசு, எங்கள் மீது 1911இல் வாரண்ட் பிறப்பித்தது. பல ஆண்டுகள் சென்றபின்னும் அதற்கு உயிர் இருந்தது, கடலூரில்தான் தெரியவந்தது. ஆர்யா : அப்போ நீலகண்டர் வாக்குமூலத்திற்கு முன்பே பாண்டிச்சேரியின் தொடர்பு பிரிட்டிஷ் அரசுக்கு தெரிந்திருக்கிறதே.. அப்படியானால் நீலகண்டர் புதுவைச் சுதேசிகளை காட்டிக்கொடுத்தார் என்ற பேச்சு வந்தது எப்படி..? நீலகண்டர் : என் வாக்குமூலம் திருநெல்வேலியில் இரண்டு நாட்களாகப் பெறப்பட்டது. ஆனால் இரண்டாவது நாள் வாக்குமூலத்தை என்னை நிர்ப்பந்தித்து வாங்கினார்கள். ஜூலை 12 அன்று, முதல் வாக்குமூலத்தில், நான் அறிந்த விவரங்களையே சொன்னேன். இதில் எனது புதுச்சேரித் தொடர்புகள் பற்றிச் சொல்லவேண்டியிருந்தது. பாரதியார் : உண்மையில், புதுச்சேரி தர்மாலயத்தில் என்ன நடந்தது என்றே எனக்கும் அரவிந்தருக்கும் தெரியாது. எங்களைத் தவிர்த்தே எல்லாம் செய்தார்கள். நீலகண்டரும் அப்போது அங்கு இல்லை என்பதால் அவருக்கும் திட்டங்கள் தெரிந்திராது. (மேடையில் ஒளி மாறி ஓம்கார் அறை வருகிறது. ஓம்கார் அறையில் சங்கர கிருஷ்ணனும் ஓம்கார் சுவாமிகளும் பேசிக்கொண்டிருக்கின்றனர்) சங்கர கிருஷ்ணன் : உங்களிடம் ஏன் நிர்ப்பந்திக்க வேண்டும்..? ஓம்கார் சுவாமிகள் : அவர்கள் வழக்கில் ஒரு உருவத்திற்கு வந்திருக்க வேண்டும். என்னைத் தனியாகவே வைத்திருந்தார்கள். வழக்கு என்ன, யார் என்ன சொல்லியிருப்பார்கள் என்பது எதுவும் எனக்குத் தெரியாது. நான் மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். இரண்டாம் நாள் வாக்குமூலத்தை அதிகாரிகள் ஒருபக்கம் அச்சம் காட்டியும் மறுபக்கம் விடுதலைக்கு ஆசை காட்டியும் தயார் செய்து வாங்கினார்கள். மாஜிஸ்டிரேட் தம்பு என்பவர் முன்னிலையில் அப்ரூவர் தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை கொடுத்த வாக்குமூலத்திற்கு ஒத்துப்போகிற மாதிரி என் வாக்குமூலத்தை மாற்றினார்கள். என் குழப்பத்தாலும் எனக்குச் சொல்லப்பட்ட தகவல்கள் உண்மை என்று நம்பியும் அப்படிக் கொடுக்கவேண்டியதாயிற்று. ஆனாலும் முழுமையாக எதுவும் சொல்லிவிடவில்லை. சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : உயர்நீதிமன்றத்தின் விசாரணையின்போது நீதிபதியிடம் நடந்த உண்மையைக் கூறினேன். என்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்து அவ்வாறு பொய் சொல்ல நேர்ந்த என் பலவீனத்தை நீதிமன்றத்திலேயே குறிப்பிட்டேன். இப்போது நினைத்தாலும் அதை வெட்கப்படும் செயலாகவே உணர்கிறேன். நீதிமன்றம் என் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டது. ஆனால் தீர்ப்பு என்னவோ அப்ரூவர் வாக்குமூலத்தை ஒட்டியதாகவே அமைந்தது. அதுவும் கொலை வழக்கின் தீர்ப்பில் நான் காசிக்குப் போனதை, எனது திருநெல்வேலி நண்பர்களிடம் வசூல் செய்த பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்ட திருடனாகச் சித்தரித்துச் சொல்லியிருந்தார்கள். புதுச்சேரியிலிருந்து நானாக வெளியேறினேனா அல்லது மற்றவர்கள் என்னை வெளியேற்றினார்களா என்பதைச் சந்தேகமாகக் குறிப்பிட்டிருந்தார்கள். சங்கர கிருஷ்ணன் : தீர்ப்பை எதிர்த்து நீங்கள் அப்பீலுக்குப் போகவில்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : (புன்னகைக்கிறார்) (திரை விழுகிறது)

திருப்பூர் எனும் திருப்புமுனை – 9

திருப்பூர் எனும் திருப்புமுனை – 9

வசதியான வரையறையைக் கடந்தால் வளர்ச்சி தொடர்ந்து இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்து, கருத்துகளைப் பகிரும் நண்பர்களுக்கு நன்றி. பல்வேறு கேள்விகள் மற்றும் விபரங்களைக் கேட்டும், இதுகுறித்து எழுதவில்லையா என்கிற கேள்விகளும் என்னிடம் முன்வைக்கப்படுகின்றன. அனைத்து விவரங்களும் கோர்வையாக வர வேண்டும் என்கிற கவனத்துடன் ஒவ்வொரு தரவுகளையும் எழுதிவருகிறேன். அடுத்தடுத்து வரும் பகுதிகளில் விடுபட்ட ஒவ்வொன்றையும் அவசியம் எழுத விழைகிறேன். செயற்கை நூலிழை ஆடைகள் உற்பத்திக்கான துணி வகைகள் பல. அவற்றுள் முக்கியமானவை பாலியஸ்டர், நைலான், மொடால், பாம்பூ, அக்ரிலிக் , ரேயான் உள்ளிட்டவை. இவற்றில் பருத்தி இழைகள் கலந்தும், ஸ்பான்டெக்ஸ் என்ப்படும் இழுவை நூல்வகைகள் இணைத்தோ அல்லது தனியாக ஒரு நூலிழை வகையாகவோ துணிகள் தயாரிக்கப்பட்டு ஆடைகளாக உருவாகின்றன. நாளது தேதியில் நுகர்வில் பல்வேறு மாற்றங்களைக் கண்டுவருகிறோம். 30 ஆண்டுகளுக்கு முன் நாம் எவ்வாறான ஆடைகளை உபயோகித்தோம், இன்றைய தேதியில் எவ்வளவு மாற்றங்களை அடைந்துள்ளோம் எனச் சிந்தித்துப் பாருங்கள். இந்த மாற்றங்கள் தொடர்ந்து வேகமாக முன்னெடுக்கப்படும் நிலையில் தொடர்ந்து பருத்தி இழை ஆடைகளின் உற்பத்தி குறித்தே நமது பார்வை இருப்பது இன்றைய பின்னடைவுக்கு மட்டுமல்லாது, வளர்ச்சி நிலைத் தேக்கத்துக்கும் காரணமாக நாம் பார்க்கலாம். பருத்தி உற்பத்தி இங்கே அதிகம். உலகத் தேவையில் 4 சதவீதத்திற்கும் குறைவாகவே நாம் ஆடை ஏற்றுமதி செய்கிறோம். தேவைகள் பெருமளவிற்கு இருக்கும்போது ஏன் பருத்தி ஆடை உற்பத்தியை விட்டுவிட்டு செயற்கை நூலிழை உற்பத்தியை நோக்கி செல்லவேண்டும் என்கிற கேள்வி பலருக்கும் எழும். கடந்த 30 ஆண்டுகளில் உற்பத்தி தேசங்கள் அதிகரித்துள்ளன. பங்களாதேஷ், தாய்லாந்து, வியட்நாம், இந்தோனேஷியா, கம்போடியா ஆகிய நாடுகள் அபரிதமான வளர்ச்சியை அடைந்துள்ளன. பாகிஸ்தானும் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ளது. கோர் ப்ரோடக்ட் எனச் சொல்லப்படும் பல்வேறு ஆடைகளின் உற்பத்தி இந்த தேசங்களுக்கு மாறியுள்ளது. காரணம், இந்தத் தொழில் வளரவேண்டும் என்கிற நோக்கத்தில் அந்தந்த நாட்டின் அரசுகள் அங்குள்ள உற்பத்தியாளர்களுக்குக் கொடுத்த சலுகைகள், புவிசார் அரசியல் நோக்கம், அதே சமயம் மதிப்புக் கூட்டல் குறித்தான கருத்துக்களைப் புறந்தள்ளி பஞ்சு, நூல் மற்றும் துணி ஏற்றுமதியை ஊக்குவித்தது, உற்பத்தி தேசங்கள் பெற்ற சர்வதேசச் சலுகைகள் மற்றும் உள்நாட்டுச் சலுகைகள் ஆகியவை ஆடை விலைகளில் பெரும் வேறுபாடுகளை உருவாக்கியதால் இறக்குமதி நாடுகள் விலை குறைவாகக் கிடைக்கும் நாடுகளை நோக்கி நகர்ந்தனர். மென்பொருள் ஏற்றுமதி, ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகள் அதிக வருவாய் ஈட்டியதால் ஜவுளித்துறையை ஆதரிப்பதில் அரசின் தரப்பில் சுணக்கம் ஏற்பட்டதும், வேளாண் தொழிலுக்கு அடுத்து அதிக வேலை வாய்ப்புகளை வழங்கும் ஜவுளித்துறை மற்றும் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் முக்கியத்துவத்தை அரசு புறந்தள்ளியதும், பருத்தியை ஊக பேர வணிகத்தில் சேர்த்ததும், அதனால் ஏற்பட்ட தொடர் நூல் விலை மாற்றங்கள் ஆகியவையும் பருத்தி ஆடை உற்பத்திக்கான பின்னடைவில் உள்ள முக்கிய காரணங்கள். முந்தைய பகுதியில், செயற்கை நூலிழை ஆடை உற்பத்தி குறித்துப் பார்த்தோம். ஏற்கனவே திருப்பூரின் உற்பத்திப் படிநிலைகள் குறித்தும் பார்த்துள்ளோம். முற்றிலும் பருத்தி ஆடைகள் தயாரிப்பதற்கான கட்டமைப்பில், செயற்கை நூலிழை ஆடைகளை எவ்வாறு தயாரிப்பது என்கிற கேள்வி சிலருக்கு எழக்கூடும். திருப்பூரின் வரலாறே, உழைப்பு; அதையும் கடந்து, நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் விவேகமும் வேகமும்; மற்றும் முதலீடுகளுக்குத் தயங்காத தொழில்முனைவோர் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான். மேற்சொன்ன காரணங்களைப் பற்றி விவாதித்துக்கொண்டே இருக்கப் போகிறோமா அல்லது இந்தக் கடும் சவால்களையும் தாண்டிய வாய்ப்புகளை நமதாக்கிக்கொள்ளப் போகிறோமா என்பதே நமது அடுத்தகட்டப் பயணத்தைத் தீர்மானிக்கும். பெரும் முதலீடுகள் இல்லாமல், அதே சமயம் இருக்கும் கட்டமைப்பை செயற்கை நூலிழை ஆடைத் தயாரிப்பிற்கு ஏற்ப மேம்படுத்த வேண்டிய தேவை உள்ளது. பல்வேறு தளங்களில் இதை முன்னெடுக்க வேண்டும். அதே சமயம், புதிய முதலீடுகளை இந்தக் கோணத்தில் திருப்பவேண்டிய தேவையும் உள்ளது. தனித்தனி உற்பத்திக் கேந்திரங்களாக உள்ள நூற்பாலைகள், நிட்டிங், டையிங், பினிஷிங், பிரிண்டிங் போன்றவை குழுவாக இணையவேண்டும். இவை ஒரே நிறுவனமாக மாறி, துணிகள் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனங்களாக மாறவேண்டும். இந்தவகையில் உற்பத்திச் செலவு குறைவு, தொடர்ந்து இடைவெளியின்றி இயங்கும் வழிகள், பணச்சுழற்சி, ஆடைத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மொத்தமாகத் துணியாக வாங்கி ஆடைத் தயாரிப்பில் மட்டும் ஈடுபட்டு இன்னும் கவனத்தைக் குவித்தால் வர்த்தகத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக அமையும். கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 10% நிறுவனங்கள்,துணியாக வாங்கி ஆடை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் முறைக்கு முழுமையாக மாறிவிட்டனர். பல நிறுவனங்கள் பகுதி அளவில் இவ்வாறு செயல்படுகின்றன. இந்த முறைக்கு மாறுவது தொழிலை நாம் தக்கவைக்கும் முயற்சிகளில் ஒன்றாகவே பார்க்கிறேன். திரும்ப திரும்ப ஒன்றைத் தொடர்ந்து வலியுறுத்த விரும்புகிறேன். பருத்தி ஆடை உற்பத்தி மட்டுமே பிரதானம் என்னும் வசதியான வரையறையைக் கடந்து வெளியே வரவேண்டும். அவ்வாறு கடந்து வந்தால் பெரும் வாய்ப்பு நமக்காகக் காத்திருக்கிறது. அழியப் பிறந்த மண் அல்ல இது; அழிவின் விளிம்பு வரை சென்று, மிகப் பெரிய அளவில் உயிர்த்தெழும் வல்லமை கொண்ட ஊர். அடுத்தடுத்த அத்தியாங்களில் வங்கி சார்ந்த சிக்கல்கள், தொழிலார்கள் அளவில் செய்யவேண்டிய மாற்றங்கள், உற்பத்தி நிலைகளில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்துப் பார்ப்போம்.

நீலகண்ட பிரம்மச்சாரி -14

நீலகண்ட பிரம்மச்சாரி -14

காட்சி 14 காலம் : 1921ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒருநாள்இடம் : திருவல்லிக்கேணி கடற்கரைபாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர். (பாரதியாரும் நீலகண்டரும் கடற்கரையில் அமர்ந்திருக்கின்றனர். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கவிதையை பாரதியார் படித்துக் காட்டுகிறார்.) பாரதியார் : கேள்! விடை கூறினள் மாதா! நம்மிடையாவனே யிங்கு தோன்றினன்? இவன் யார்?உலகப் புரட்டர் தந்திர உரையெலாம்விலகத் தாய்சொல் விதியினைக் காட்டுவான்.மலைவு செய்யாமை; மனப்பகை யின்மை ;நலிவுறுத்தோரை நாம் எதிர்த்திடாமை ;தீச்செயல் செய்யும் அரசினைச் சேராமை;ஆச்சரியப்பட உரைத்தனன் -அவையெலாம்.வருக காந்தி ! ஆசியா வாழ்வே !தரும விதிதான் தழைத்திட உழைப்பாய்.ஆன்மா அதனால் ஜீவனை யாண்டுமேனெறிப் படுத்தும் விதத்தினை யருளினாய்.. நீலகண்டர் : (குறுக்கிட்டு) அண்ணா நிறுத்துங்கள். பாரதியார் : என்ன பாண்டியா? நீலகண்டர் : என்ன பாட்டு இது..? பொருள் தெரிகிறது. காந்தி மகான் தோன்றியதை பாரத மாதா சொல்வது போல அமைத்திருக்கிறீர்கள். ஆனால் சந்தக் கட்டு ஏதும் இல்லாமல் வழக்கமான உங்கள் நயம் எதுவுமில்லாமல் இருக்கிறதே..! பாரதியார் : (சிரிக்கிறார்) பலே.. சரியாகத்தான் சொன்னீர் நீலகண்டர். இது என் பாட்டு இல்லை. அமெரிக்கா தேசத்தில் வாழ்ந்து வரும் ஸ்ரீமதி மாட் ரால்ஸ்டன் ஷர்மன் என்ற மாது எழுதிய ஆங்கிலக் கவிதை. தமிழில் மொழிபெயர்த்து எழுதினேன். சுதேசமித்திரனுக்கு போகப் போகிறது. நீலகண்டர் : அண்ணா, சாகாவரம் பெற்ற பாடல்களை வடித்தவர் நீங்கள். ஆனால் உங்கள் கற்பனை சௌந்தர்யம் இந்த மொழிபெயர்ப்பில் வரவில்லையே.. சுதேந்திரநாத் ஆர்யா : (சிங்காரவேலருடன் வந்துகொண்டே) அது எப்படி அமையும் நீலகண்டரே.. மூலத்தின் ஜீவன் எத்தகையதோ, அதுதான் மொழிபெயர்ப்பிலும் வரும். இதே காந்தியைப் பற்றி ‘வாழ்க நீ எம்மான்‘ என்று பாரதி பாடியது எத்தனை ஜீவன் ததும்பியதாக இருந்தது..? பாரதியார் : ஏதேது, நீங்கள் இருவரும் எனக்கு மொழிபெயர்க்கவே வராது என்று சொல்வது போல இருக்கிறது.. (எல்லாரும் சிரிக்கிறார்கள்) ஆர்யா : ‘வந்தேமாதரம்’ மொழிபெயர்ப்பு ஒன்று போதுமே, பாரதி பெயரைச் சொல்வதற்கு..பாரதி, உன்னைக் கேலி செய்து எவ்வளவு நாள் ஆச்சு?! கோபம் இல்லையே..? சிங்காரவேலர் : ஆர்யா, இந்தக் கவிதையின் கூர்மையைக் கவனியுங்கள். இதில் பாரதி, காந்தியின் அரசியல் பாதையைச் சுட்டிக் காட்டுகிறார். வெளிநாட்டார் வியாக்கியான உலகம், காந்தியின் வருகையை ஆசியாவின் எழுச்சியாகப் பார்ப்பதைக் கவனியுங்கள். காந்தியின் வழியை திலகர் வழி வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். என்ன பாரதி சரிதானே..? பாரதியார் : நாட்டின் வருங்கால அரசியலில் காந்தியின் பாத்திரம் தவிர்க்க முடியாதது சிங்காரவேலரே.. கவிதையை நீங்கள் யோசிக்கும் விதத்தை வியக்கிறேன். அது போகட்டும் ஆர்யா. நீலகண்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தாயே.. ஆர்யா : ஆமாம் பாரதி.. நீலகண்டரே நீர் வந்திருப்பதை பாரதி சொன்னார். சிறைவாசம் முடிந்து எத்தனை நாள் ஆயிற்று..? நீலகண்டர் : இரண்டாண்டுகள் ஆயிற்று. பல இடங்கள் அலைந்து திரிந்தேன். சென்னைக்கு வந்தும் நாலைந்து நாட்கள் திக்குத் தெரியாது அலைந்தேன். சாப்பாட்டுக்கு வழியில்லை. கோயிலில் பிரசாதம் வாங்கிப் பசி ஆறினேன். வெட்கத்தைவிட்டு யாசகமும் பெற்றேன். ரயிலடியிலும் கடற்கரையிலும் கோயில் மண்டபங்களிலும் படுத்துக்கொண்டேன். சிலநாள் முன்புதான் பாரதி அண்ணா வீட்டைக் கண்டுபிடித்தேன். பாரதியார் : பார் ஆர்யா, இவர் ஒரு சிம்மம். ஒரு தடவை இயக்கத்திற்கு நன்கொடை தருவேன் என்று இவரை அலையவைத்த ஒரு பெரிய மனிதரைத் துப்பாக்கியைக் காட்டிப் பணியவைத்தவர். பெரிய விவேகி.. அப்படிப்பட்டவர் பட்டினியாய் அலைந்திருக்கிறார் பார்.. சிங்காரவேலர் : அதற்கும், காலத்தை வென்று நிற்கப் போகிற நவ கவிதை ஒன்று உம்மிடம் பிறந்து வந்ததே.. நீலகண்டர் : அண்ணா, இவர் யார்..? இதற்கு முன்பு நான் பார்த்ததில்லையே.. இவர் என்ன சொல்கிறார்..? நான் பட்டினியாய் அலைந்ததில் கவிதை வந்ததா..? எப்படி…? பாரதியார் : இவர் சிங்காரவேலர்.. பெரிய மேதை.. தொழிலாளர் மேன்மைக்காக உழைத்து வருகிறார். அவர்களை ஐக்கியப்படுத்தி வருகிறார். ருஷ்யாவின் போல்ஸ்விக் கட்சியைப் போல் நமது நாட்டிலும் சமதர்மக் கட்சியொன்றை ஏற்படுத்த முயன்று வருகிறவர்களில் இவரும் ஒருவர்.நீர் பட்டினியாய் என் வீட்டுக்கு வந்த அன்று ஒரு பாட்டு வந்தது. அதைக் கடற்கரைக் கூட்டத்தில் பாடினேன். சிங்காரவேலர் அந்த விருத்தாந்தத்தை அறிந்தவர்..அதைத்தான் சொன்னார். (சிங்காரவேலரைப் பார்த்து) இவர்தான் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி. உமது தொழிலாளர் சங்கங்களில் வேலை செய்யக்கூடிய திறமை வாய்ந்தவர். தொண்டால் சிறை அளந்து வந்திருக்கிறார். சிங்காரவேலர் : பாரதியிடம் இத்தனை புகழ்ச் சொல் பெறுவது கடினம் தம்பி.. நீ விரும்பினால் என்னுடன் வந்து உதவி செய்யலாம். நீலகண்டர் : அண்ணா, இப்படித்தான் சிதம்பரம் பிள்ளையிடம் அனுப்பி வைத்தார். அவரிடம் நான் தேறவில்லை. இப்போது உங்களுடன் அனுப்புகிறார். சிங்காரவேலர் : ஆஷ் கொலை வழக்கில் அதிக நாள் தண்டனை பெற்றவர் நீர்தான் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம், சதிக் குழுவை உருவாக்கியவன், சதியைத் திட்டமிட்டவன் என்றெல்லாம் சொல்லிக் குற்றப் பத்திரிக்கை வாசித்தார்கள். ஆனால் இந்தத் திட்டத்தில் நான் இல்லவே இல்லை. ஆர்யா : நீர் சரணடைந்தபோது இதைக் குறிப்பிட்டிருந்தீர் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம்.. பத்தாண்டுகளுக்கு முன்னால் இதே மாதத்தில்தான் கல்கத்தாவில் நானாக முன்வந்து சரணடைந்தேன்; வாக்குமூலமும் கொடுத்தேன். 1911ஆம் வருடம் ஜூலை 11ஆம் தேதி திருநெல்வேலிக்குக் கொண்டுவந்தார்கள். (மேடை இருளில் போய் ஒளியில் வரும்போது ஓம்கார் அறை) சங்கர கிருஷ்ணன் : ஆஷ் கொலையின்போது காசியில் இருந்தேன் என்று சொன்னீர்களே.. கல்கத்தாவுக்கு எப்போது போனீர்கள்.? ஓம்கார் : சொல்கிறேன். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 13

நீலகண்ட பிரம்மச்சாரி – 13

காட்சி 13 காலம் : 1911 ஏப்ரல் மாதத்தில் ஒருநாள்இடம் : பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம் வெள்ளவாரி ஓடைபாத்திரங்கள் : நாகசாமி, கண்ணுப்பிள்ளை, வாஞ்சிநாதன்.(நாகசாமி, வாஞ்சிநாதனுக்கு துப்பாக்கிச் சுடப் பயிற்சி தருகிறார்) நாகசாமி : வாஞ்சி, உமக்குத் துப்பாக்கிச் சுடுவதில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. கையில் நடுக்கம் குறைந்துவிட்டது. குறி வைப்பதிலும் நல்ல தேர்ச்சி வந்துவிட்டது. இன்னும் சிலநாள் பயிற்சி போதும். இலக்கைத் தவறவிடமாட்டாய். வாஞ்சிநாதன் : வந்தனம் ஐயா. நாகசாமி : உமது இலக்கு 6 அடி முதல் 10 அடிக்குள் இருக்குமாறு உமக்குப் பயிற்சி தரப்பட்டுள்ளது. எதிரி இந்த இலக்கில் இருக்குமாறு பார்த்துக்கொண்டு நீர் துப்பாக்கியை இயக்க வேண்டும். எதிரியின் மார்புதான் சரியான இலக்கு. அப்படியான இலக்கு எல்லைக்குள் எதிரி இருக்கும்போது துப்பாக்கி வெடிக்க வேண்டும். கொஞ்சம் குறி விலகினாலும் தோட்டா பிசகிப் பாய்ந்து எதிரி தப்பித்துவிட அதிகம் வாய்ப்பு உண்டு. வாஞ்சிநாதன் : நல்லது ஐயா. நாகசாமி : வாஞ்சி ஐயர், உம்மை நினைத்து மிகுந்த பெருமை கொள்கிறேன். தென் தமிழ்நாட்டு விடுதலைப் போர்ச் சரித்திரத்தில் உமக்கு அழியாத பெயரும் கீர்த்தியும் உருவாகப் போகிறது. உமது தியாகத்திற்கு இணை சொல்ல வேறு யாரும் இல்லை. வாஞ்சிநாதன் : நானும் கர்வமாகவே இருக்கிறேன் அண்ணா. இந்தக் கடமையை என்னை நம்பி ஒப்படைத்தீர்களே..! உங்களுக்கும் ஐயருக்கும் எத்தகைய நன்றி சொன்னாலும் தகும். நாகசாமி : உண்மையில் நீர் முதலில் இங்கு வந்தபோது எனக்கு அத்தனை நம்பிக்கை இல்லை. அய்யர்தான் உன்மேல் பெரிய நம்பிக்கை வைத்து இந்தப் பெரிய பணியைத் தந்துள்ளார். வாஞ்சிநாதன் : பாரத மாதாவுக்கு என் கடமையை நிச்சயம் செய்து முடிப்பேன். கண்ணுப்பிள்ளை : வாஞ்சி அண்ணா, அந்த நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நாகசாமி : அநேகமாக பிரான்ஸ் தேசத்திலிருந்து துப்பாக்கி இந்த வாரத்தில் வந்துவிடும். வந்ததும் திட்டத்திற்குத் தயாராகிவிடலாம். வாஞ்சிநாதன் : ஆனா, நீலகண்டர் எங்கே போனார் என்ன ஆனாருன்னு தெரியவில்லையே அண்ணா? (மேடையில் இருள் பரவி ஒளி வரும்போது ஓம்காரின் அறை) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, நீங்கள் வாஞ்சியின் பயிற்சியின்போது எங்குதான் இருந்தீர்கள்..? ஓம்கார் : பாண்டிச்சேரியை விட்டு வெளியேறிய சில நாட்களில் காசிக்குச் சென்றுவிட்டேன். ஆஷ் கொலைச் சதியில் என்னையும் சேர்க்கப்பட்டிருந்ததை காசியில் பத்திரிகைச் செய்தியாகத்தான் நான் தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : நாகசாமி சொன்னதுபோல வாஞ்சிநாதனின் பெயர் தமிழ்நாட்டு விடுதலைப் போர் வரலாற்றில் நிலைகொண்டுவிட்டது அல்லவா..? ஓம்கார் : ஆமாம், வாஞ்சி அந்தக் கொலைக்குத் தயாரானதைவிட, தற்கொலைக்குத் தயாரானதுதான் பெரிய சவால். புரட்சிக்குத் தயார் ஆகிறவன் மரணத்திற்கும் சேர்ந்தேதான் தயார் ஆகிறான். ஆனால், அந்த மரணம் சமரில் அமைய வேணடும்; அல்லது அந்த மரணம் தொடர்ந்து புரட்சிக்குப் பலம் சேர்க்கவேண்டும் அல்லவா..? வாஞ்சியின் தியாகம் மகத்தானது. ஆனால் அவர் செயலும் தியாகமும் புரட்சியைத் துடைத்துப் போட்டுவிட்டது. வாஞ்சியின் மரணத்தோடு தமிழ்நாட்டு புரட்சிப் இயக்கமும் தனது இறுதி மூச்சை விட்டது. ஆகவேதான் அவரது தியாகம் அர்த்தமில்லாது போய்விட்டது. (மேடை இருளில் போகிறது. ஒளி வரும்போது தர்மாலயம் இல்லத்தின் அறை) காலம் : 1911ஆம் ஆண்டு மே மாத இறுதியில் ஒருநாள் முன்னிரவு.பாத்திரங்கள் : வ.வே.சு. அய்யர், வாஞ்சிநாதன், கண்ணுப்பிள்ளை, நாகசாமி வ.வே.சு.அய்யர் : துப்பாக்கி வந்துவிட்டது (துப்பாக்கியை எடுத்துக் காட்டுகிறார்) மேடம் காமாவின் முயற்சியினால் பிரான்ஸ் தேசத்திலிருந்து வந்த துப்பாக்கி இது. இதில் இரண்டு குண்டுகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. ஒன்று ஆஷ் கலெக்டர் மார்பைத் துளைக்க வேண்டும். இன்னொன்று உனக்கானது; தியாக வேள்வியின் ஆகுதிக்கானது. நீர் உமது வேலையை எப்போது ராஜினாமா செய்யப்போகிறீர்? வாஞ்சிநாதன் : ஊருக்குப் போனதும் செய்துவிடுவேன் ஐயா. வ.வே.சு.அய்யர் : நல்லது.. நீர் செய்யப் போகும் வேலை கச்சிதமாக இருக்க வேண்டும். அதை இங்கே திட்டமிட முடியாது. அதை நீங்கள் உங்கள் ஊரில் சென்றுதான் முடிவு செய்ய வேண்டும். உமக்கும் புதுச்சேரியில் உள்ள எங்களுக்குமான தொடர்பு இன்றுடன் முடிகிறது. இனிமேல் இந்தப் பணி திருநெல்வேலியின் பணி. ஜாக்கிரதை.!பராசக்தி உமக்குத் துணையிருப்பாள். பாரத மாதாவின் பரிபூரண ஆசிகள் உம்முடன் இருக்கும். சென்று வாருங்கள். நாகசாமியும் கண்ணுப்பிள்ளையும் உம்மைப் புதுச்சேரி எல்லையைக் கடந்து விட்டு வருவார்கள்.(நாகசாமியைப் பார்த்து), எப்படி அழைத்துப் போகப்போகிறீர்கள்..? நாகசாமி : இன்னைக்கு இராத்திரி 11 மணிக்குக் கிளம்புகிறோம். வில்லியனூர் போய், அங்கிருந்து பாகூர் சென்று ஆற்றுக்கு அக்கரை போய் திருப்பாப் புலியூரில் ரயிலேற்றி விட்டுவிட்டு வருவோம். வ.வே.சு. அய்யர் : நல்லது.. பத்திரமாக அனுப்பிவிட்டு வாருங்கள். காரியம் ஜெயம் ஆகட்டும். (வாஞ்சிநாதன் வணங்கிக் கொள்கிறார். வ.வே.சு. அய்யர் விடைபெற்றுச் செல்கிறார்) (மேடையில் காட்சி மாறுகிறது. மீண்டும் ஓம்கார் அறை) சங்கர கிருஷ்ணன் : சுவாமி, காரியம் ஜெயம் ஆனது அல்லவா..? ஓம்கார் : காரியம் ஜெயம்தான். புரட்சி இயக்கத்திற்கு ஜெயம் இல்லையே. தன் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்றுதானே வாஞ்சி தன்னைச் சுட்டுக்கொண்டார்? அப்படியானால் அவர் தன் பெயரையும் ஊரையும் எழுதிக்கொண்டது தவறல்லவா? சங்கர கிருஷ்ணன் : கொலைக்குப் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று சொல்வதற்குத்தானே அந்தக் கடிதத்தை அவர் வைத்துக்கொண்டார்? ஓம்கார் : அந்த வேலையை இயக்கம் செய்ததாக இருக்க வேண்டும். தன் பெயரையும் ஊரையும் எழுதி வைத்தது, தன் முனைப்பால் வந்த அறிவு மயக்கம், ஒரு புரட்சிக்காரனுக்கு வரக்கூடாதது. அவரை அடையாளம் காட்டிய கடிதத்தை வைத்தது மட்டுமின்றி அவர் வீட்டிலும் தன் சகாக்களின் கடிதங்களை அழிக்காமல் வைத்திருந்து, எல்லாரையும் அவரே காட்டிக் கொடுத்தவரானார். இது மிகப் பரிதாபம். இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு..? ஆஷ் கொலைச் சதியில் தம்மைச் சேர்த்துவிடுவார்களோ என்றும் செய்த சத்தியத்தை மீறி இயக்கத்தைக் காட்டிக்கொடுக்க வேண்டி வந்துவிடுமோ என்றும் நினைத்து இன்னும் இருவர் தற்கொலை செய்துகொண்டார்கள். ஒருவர் செங்கோட்டையைச் சேர்ந்த தர்மராஜ ஐயர்; வாஞ்சிநாதனுக்கு நெருங்கிய நண்பர். இயக்கத்தின் சார்பில் எனக்கு மணியார்டர் அனுப்பி வந்தவர். அவர் பாதரச நஞ்சை உட்கொண்டு மரணமடைந்தார். இன்னொருவர் வெங்கடேச அய்யர்; புனலூர்க் காரர். இவர் கத்தியால் தொண்டையில் குத்திக்கொண்டு சாவை வரவேற்றார். இவர்களின் மரணத்தை நீங்கள் வீரச் சாவில் சேர்க்கமாட்டீர்கள் அல்லவா? ஏனெனில் இவர்கள் ஆஷைக் கொல்லவில்லை. வெறும் பயத்தில் உயிரைவிட்டார்கள் என்பதால்தானே? தனிநபர்க் கொலைச் சதிக்கான தண்டனையையோ, போலீஸ் சித்திரவதையையோ ஏற்றுக்கொள்ளத் தேவையான மனோதிடத்தை, இவர்களுக்குப் புரட்சியைப் போதித்த தலைவர்கள் கற்றுக்கொடுக்கவில்லை அல்லவா? சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, நீங்களும் புரட்சியைப் போதித்தவர் அல்லவா? நீங்கள் இல்லாத இடத்தை வேறொருவர் நிரப்பிக்கொள்ளும் வகையில் உங்கள் போதனை பலவீனமானதாய் இருந்ததாகச் சொல்லலாமா? ஓம்கார் : எனது தோல்வியும் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் உடனடிச் செயலை அவர்கள் மனம் விருப்பத்துடன் நாடியது. தகுந்த தருணத்திற்காக அவர்கள் காத்திருக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

நீலகண்ட பிரம்மச்சாரி – 12

காட்சி 12 காலம் : ஓம்கார் ஆசிரமத்தில் சங்கர கிருஷ்ணன் வந்த மூன்றாம் நாள்பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : தம்பி, நேற்று மாலை மலை ஏறிப்போய் வந்தீர்கள் போல.. எப்படி இருந்தது..? சங்கர கிருஷ்ணன்: அருமையான அனுபவமாக இருந்தது சுவாமி. நீங்கள் கொஞ்சகாலம் முன்பு வரை மலை மேலேதான் இருந்தீர்களாமே..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம். கீழே என்னை அவதாரம் போல மக்கள் நினைக்க ஆரம்பித்துப் பல இடங்களில் இருந்தெல்லாம் கூட்டமாக வந்தார்கள். இங்கே வந்து சில ஆண்டுகளில் இந்த ஆசிரமத்திற்குப் பல காரணங்களாக பக்தர்கள் கூட்டம் கூடிக்கொண்டே போனது. நான் தொந்தரவுக்கு உள்ளானேன். தனிமையை விரும்பிய நான் கூட்டத்தின் போதைக்குள் சிக்கிவிட்டதாக உணர்ந்தேன். ஆகவே மலை மேலே போய் இருந்துகொண்டேன். அந்தக் காலத்தில்தான் காந்தியடிகள் வந்திருந்தார். முதலில் அவரது பிரதம சீடர் குமரப்பா மலை ஏறி வந்து என்னைப் பார்த்தார். அவர் சொல்லி, காந்திஜி என்னைப் பார்க்க விரும்பினார். அவர் என்னைப் பார்க்க மேலேறி வருவது சரியாக இருக்காது என்று கருதி நான் கீழிறங்கி வந்து பார்த்தேன். சங்கர கிருஷ்ணன்: ஆஹா.. இங்கே காந்தியடிகள் வந்திருக்கிறாரா..? நேற்று பாரதியின் இறுதிச் சடங்கை செய்ய உங்களை அழைத்தார்கள் என்று சொன்னீர்கள். இன்று காந்தியடிகள் இங்கே வந்திருக்கிறார் என்கிறீர்கள். ஒரு பக்கம் வாஞ்சிநாதன் கதை போய்க்கொண்டிருக்கிறது. நான் எதை முதலில் கேட்கட்டும் சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக் கொண்டே) எதைக் கேட்டால் என்ன..? பேச்சின் போக்கில் போவோம்.. தானாக எல்லாம் வரும். சங்கர கிருஷ்ணன்: ஆசிரமத்தில் உங்களிடம் சிலர் வைத்தியத்துக்கு வருவதைப் பார்க்க முடிந்தது.. அது எப்படி சுவாமி..? வைத்தியம் தெரியுமா..? ஓம்கார் சுவாமிகள் : ஆசிரமம் மேலே போனதற்கு அதுவும் ஒரு காரணம். எனக்கு சித்த வைத்தியத்தில் ஏதோ கொஞ்சம் தெரியும். இங்கே இருக்கும் குடிகளுக்கும் வருகிற பக்தர்களுக்கு அவசரக் காலத்திலும் மருத்துவ யோசனைகள் சொல்லி வந்திருக்கிறேன். (சிரிக்கிறார்) அவை அதிசயமாகப் பலிக்கத் தொடங்கின தம்பி. மக்கள் ரொம்பவும் நம்பிவிட்டார்கள். (மீண்டும் சிரிக்கிறார்) சாமியாரின் மருத்துவம் வேறு பலனைத் தருவதற்கு முன்பு ஆசிரமத்தை மேலே கொண்டுபோவதுதான் சரியென்று போனேன். என்னைக் கேட்காமல் யாரும் வரக்கூடாது என்று திட்டம் சொல்லி இருந்தேன். நல்ல மக்கள்..! என் பேச்சை மீறவில்லை.அவர்களும் எனக்கு உத்தரவு போடுவார்கள்; நானும் சிலவற்றைக் கேட்டுக்கொள்வேன். அப்படி ஒரு உத்தரவு, ‘சாமியாருக்கு வயதாகி விட்டது.. மேலே தங்கக்கூடாது. கீழே தங்கள் பார்வையில் இருக்க வேண்டும்’ என்று. சங்கர கிருஷ்ணன்: நல்லது சுவாமிஜி, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : மீதிக்கதை வேகம் நிறைந்தது. வாஞ்சிநாதனை தர்ம இல்லம் தயார்படுத்தியது. தினமும் காலை வேளையில் வ.வே.சு. அய்யரின் போதனைகள்; மாலையில் கிளர்ச்சியூட்டும் உடற்பயிற்சிகள்; சிலம்ப வித்தைகள். அதன் மூலம் வீர சாகச உணர்வுகளால் மனத்தில் போதையூட்டுவது; பாரத இராமாயண யுத்தக் கதைகள் மூலமாக வன்முறையை மிகச் சாதாரணமானதாக இரத்தத்தில் ஏற்றுவது; தனிநபர்க் கொலைகளை வீரம் என்று நம்பச் செய்வது.. இப்படி நெஞ்சில் வேண்டிய உரம் ஏறின பிறகு வாஞ்சிநாதன் சில இயக்கப் பிரசாரப் பிரசுரங்களோடு செங்கோட்டை வந்து சேர்ந்தார். அவர் தனது இறுதியான வேலையைச் செய்வதற்கான பிரயத்தனங்களைச் செய்தார். மீண்டும் அவர்கள் ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டிலும் புனலூரிலும் கூடியதாகத் தெரிகிறது. சங்கர கிருஷ்ணன்: (சிரித்துவிடுகிறார்) ஓம்கார் சுவாமிகள் : ஏன் சிரிப்பு தம்பி..? சங்கர கிருஷ்ணன்: மன்னிக்க வேண்டும் சுவாமி, நீங்கள் தயார் செய்த நண்பர்களை, ‘அவர்கள்’ என்று குறிப்பிட்டுவிட்டீர்களே..? ஓம்கார் சுவாமிகள் : அது அப்படித்தானே ஆயிற்று தம்பி.. என் கட்டுப்பாட்டில் அவர்கள் இல்லையே.. சங்கர கிருஷ்ணன்: சரி சுவாமிஜி, ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்ததைச் சொல்லுங்கள். ஓம்கார் சுவாமிகள் : அவை எல்லாமே நான் இல்லாத நிகழ்வுகள்.. கேட்டவற்றிலிருந்தே சொல்கிறேன்.. ஓட்டப்பிடாரம் மாடசாமி வீட்டில் நடந்த கூட்டத்தில்தான் வாஞ்சிநாதன் இந்த செயலைச் செய்யப்போகிறார் என்று மற்றவர்களுக்கு தெரியவந்தது.கலெக்டர் ஆஷைக் கொன்றுவிட்டுத் தன் உயிரையும் மாய்த்துக்கொள்ளப் போகிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியவந்தது. கற்பனை செய்து பார்த்தால் வாஞ்சிநாதன் திட்டங்களை அவர்கள் எதிர்பார்த்திராததால் அதிர்ச்சிதான் அடைந்திருப்பார்கள். (மேடையில் ஒளி மங்கி மாடசாமி வீடாக ஒளி விரிகிறது) காலம் : 1911ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஆரம்பத்தில் ஒருநாள் பகல் வேளை.இடம் : மாடசாமி வீடு, ஓட்டப்பிடாரம்.பாத்திரங்கள் : வாஞ்சிநாதன், மாடசாமி, சங்கரகிருஷ்ணய்யர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளை மற்றும் சிலர். வாஞ்சிநாதன் : (தான் கொண்டுவந்த பிரசுரங்களை எல்லோரிடமும் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு) ‘ஆரியர்களுக்கு ஒரு ஆப்த வாக்கியம்’ (என்ற பிரசுரத் தலைப்பை வாசித்துவிட்டு) எல்லோரும் இந்தப் பிரசுரத்தைப் படிக்க வேண்டும். நமது நாட்டின் கீழ்மைகளுக்கெல்லாம் காரணங்களைத் தெரியப்படுத்தியிருக்கிறோம். பரங்கியரின் அக்கிரமங்களையும் நமது நாட்டுச் செல்வங்களைக் கொள்ளை கொண்டு போவதையும் பஞ்சத்திலும் நோயிலும் நமது ஜனங்கள் மடிந்துகொண்டிருப்பதையும் வெள்ளையர்கள் உல்லாசமாகத் திரிந்துகொண்டு தேசபக்தர்களை ஒடுக்கி வைப்பதையும் மக்களுக்குப் புரியும் விதமாகக் குறித்திருக்கிறோம். மாடசாமி : இந்தப் பிரசுரங்களை என்ன செய்ய வேண்டும்..? வாஞ்சிநாதன் : மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டும். நமது இயக்கத்திற்கு மக்களின் ஆதரவைத் திரட்ட வேண்டும். சங்கரகிருஷ்ணய்யர் : அது சரி, நமது அடுத்த திட்டம் என்ன..? நீலகண்டரைப் பார்த்தீர்களா.? வாஞ்சிநாதன் : நீலகண்டர் பாண்டிச்சேரியில் இல்லை; எங்கிருக்கிறார் என்றும் தெரியாது. வ.வே.சு. அய்யர்தான் பாண்டிச்சேரியில் இப்போது இயக்கத்தை நடத்துகிறார். புதிய பரங்கி அரசன் ஐந்தாம் ஜார்ஜ் என்பவன் முடிசூடப் போகிறானாம். நமது நாட்டிலும் வந்து அந்த வைபவத்தைச் செய்யப் போகிறானாம். அவன் இந்தியாவில் காலை வைக்கும் நாளில், பரங்கியர் எதிர்ப்பைக் காட்டுவதற்கு நாடெங்கிலும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றனவாம். நமது கடமையாக நமது ஜில்லாவில் நாம் கலெக்டர் ஆஷைக் கொல்ல வேண்டும். அந்த வேலையை எனக்குத் தந்திருக்கிறார்கள். நீங்கள் எல்லாரும் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற எனக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.(வாஞ்சிநாதன் நிறுத்துகிறார். எல்லாரும் அமைதியாக இருக்கிறார்கள். பல கணங்கள் கனமாக நகர்கின்றன) சங்கரகிருஷ்ணய்யர் : அபாயமான திட்டம். இது நீலகண்டருக்குத் தெரியாது என்பது தெரிகிறது; நீ தயார் நிலையில் வந்திருப்பதும் தெரிகிறது. இன்றைய தேதியில், இந்த ஜில்லாவின் பெரிய மனிதர்கள், கனவான்கள், தனவான்கள் எல்லாரையும் கலெக்டர் ஆஷ் பயத்தாலும் நயத்தாலும் தன் வசப்படுத்தி இருக்கிறான். கொஞ்சகாலம் முன்பு பெரிய கூட்டத்தின் நடுவில் மாலையும் கழுத்துமாக அவன் வீற்றிருக்கிற படத்தைப் பார்த்தேன். நீ செய்யப்போகிற காரியத்திற்குப் பிறகு நமக்கு எந்த ஆதரவும் கிடைக்காது. நாம் தலைமறைவாகவே வாழ வேண்டியிருக்கும். வாஞ்சிநாதன் : இது தெரிந்ததுதானே.. நாம் எல்லாரும் இரத்தத்தில் சங்கல்பம் செய்திருப்பது மறந்துவிட்டதா..? காரியத்திற்குத் தயாராகும்போது தயக்கமோ பயமோ நமக்குள் வரலாமா..? சிதம்பரம் பிள்ளை சிறையில் துன்பப்பட்டதைக் கேட்டு நமக்கு எத்தனை கோபம் வந்தது..? அதுவெல்லாம் ஆறிப்போனதா..? சொல்லுங்கள்.. மாடசாமி : சகோதரா, நான் துணிந்துவிட்டேன். உன் மகத்தான தியாகத்தை ஆசீர்வதிக்கிறேன். நான் என்ன செய்ய வேண்டும் என்றாலும் செய்கிறேன். மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : சரி, நானும் சம்மதிக்கிறேன். சங்கர கிருஷ்ணய்யர் : நானும் துணிகிறேன். மற்றவர்கள் : நாங்களும் சம்மதிக்கிறோம்.. (மீண்டும் எல்லோரும் சேர்ந்து இந்த இரகசியத்தைக் காப்பதாக உறுதிமொழி எடுக்கிறார்கள்) வாஞ்சிநாதன் : இன்னும் சில வேலைகள் பாண்டிச்சேரியில் பாக்கி இருக்கின்றன. முக்கியமானது, துப்பாக்கியும் அதற்கான பயிற்சியும். அதற்காக நான் மீண்டும் எனது விடுப்பை நீட்டித்துக்கொண்டு பாண்டிச்சேரி போகிறேன். நான் திரும்பியதும் நம் செயலைத் திட்டமிட்டு நிறைவேற்றுவோம். பாரதமாதாவுக்கு நம்மை அர்ப்பணிப்போம். அன்னை நம்மை ஆசீர்வதிப்பாள். (திரை விழுகிறது)

திருப்பூர் எனும் திருப்புமுனை – 8

திருப்பூர் எனும் திருப்புமுனை – 8

கடினக் காலங்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் இதுவரை திருப்பூரில் பின்னலாடைத் தொழிலின் தோற்றம், உள்கட்டமைப்பு, கடந்துவந்த பாதை, தொழிலாளர்கள், பொருளாதாரக் கட்டமைப்பு, தொழில் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களைப் பார்த்தோம். இனி இந்தத் தொழிலில் உள்ள பிரச்சனைகளைக் குறித்துக் காண்போம். 1980களில் துவங்கிய ஏற்றுமதி 1984இல் 9 கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து படிப்படியாக வளர்ந்து, இன்று 37 ,500 கோடி ரூபாய் என்ற அளவினை எட்டி உள்ளது. ஏறத்தாழ 2000க்கும் மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் இங்கு உள்ளன. இதில் 200 நிறுவனங்கள் 23000 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்கின்றன. மீதமுள்ள 11500 கோடி ரூபாயை 1800 நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன. 1991ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்த தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் பல்வேறு உலகளாவியச் சந்தை வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. இருப்பினும் கோட்டா முறை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்திய நிலையில், 2004ஆம் ஆண்டுக்குப் பின் கோட்டாமுறை ஒழிந்து மேலும் வாய்ப்புகள் எளிதாகின. இந்நிலையில் போட்டி நாடுகளின் தொடர் வளர்ச்சி, நமக்கான வாய்ப்புகளைப் பெறுவதில் கடும் சவால்களை உருவாக்கியுள்ளது. வளர்ந்த பொருளாதார வல்லரசுகளான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் மறைமுகமான தடைகளால் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்து நெருக்கடியைக் கொடுத்தே வந்தன. அதையும் கடந்து தொழிலில் சீரான முன்னேற்றங்களைப் பெற்றாலும் இங்குள்ள பெரும்பாலான நிறுவனங்கள் தொடர் தகமைப்பில் பின்தங்கின. அதேசமயம் இறக்குமதி நிறுவனங்களின் தேவைக்கேற்பத் தங்களைத் தகவமைத்து, புதிய நுட்பங்களுக்கு உடனடியாக முதலீடுகளைச் செய்து பயணித்த நிறுவனங்கள் இன்றளவும் தொடர்ந்து முன்னேறியே வருகின்றன. 10 முதல் 20% வரை ஒவ்வோரு வருடமும் அந்த நிறுவனங்கள் வளர்கின்றன. அதேபோல் குறிப்பிட்ட ஆடைகள், அதாவது உள்ளாடைகள் மட்டும், இரவு உடைகள் மட்டும், ஆண்களுக்கான மேலாடைகள் மட்டும், பெண்களுக்கான மேலாடைகள் மட்டும், பிறந்த மற்றும் சிறுவர்களுக்கான உடைகள் மட்டும் எனக் கவனம் பதித்து அதற்கேற்பத் தங்களின் தொழிற்சாலைக் கட்டமைப்புகளை அமைத்துப் பயணிக்கும் நிறுவனங்கள் தொடர்ந்து முன்னேறுவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கவனச் சிதறல் இல்லாத காரணத்தால், தலைமை மேலாளர் முதல் கடைநிலை அலுவலர் வரை எல்லா நிலைகளிலும் நன்கு பயிற்சி பெற்று, தரம் மற்றும் குறித்த நேரத்தில் சரக்குகளை அனுப்பி வாடிக்கையாளர்களின் நன்மதிப்பைப் பெற்றதோடு அடுத்தடுத்த வர்த்தக அளவுகளில் அவர்கள் வளர்ச்சி காண்கின்றனர். எல்லா விதமான ஆடைகளையும் தயார் செய்யும் அணுகுமுறையைக் கொண்ட நிறுவனங்கள் வளர்ச்சியில் பின்தங்குவதும் ஒருகட்டத்தில் இழப்பைச் சந்தித்துத் தொழிலிருந்து விலகிய சூழல் ஏற்பட்டதும் உண்டு. அதேசமயம் மிகத் துல்லியமாகத் திட்டமிட்டு எல்லா விதமான ஆடைகளை உற்பத்தி செய்யும் கட்டமைப்புகளைத் தனித்தனியாக ஏற்படுத்திப் பயணிக்கும் நிறுவனங்கள் அபார வளர்ச்சியையும் அடைந்துள்ளன. இந்தியா பருத்தி உற்பத்தியில் உலகளவில் இரண்டாம் இடத்தை வகிப்பது குறித்து ஏற்கனவே குறிப்பிட்டிருந்தேன். பருத்தியை நூலாக மாற்றும் நூற்பாலைகள் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்தாலும் இந்திய நூற்பாலைகளில் 55% தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளது. இங்கிருந்து உற்பத்தியாகும் நூல், உள்நாட்டுத் தேவைகள் மற்றும் ஏற்றுமதித் தேவையைப் பூர்த்தி செய்கிறது. பருத்தியாலான ஆடைகளே திருப்பூரில் 95% அளவுக்கு உற்பத்தியாகின்றன. குதிரைக்குக் கடிவாளம் இட்டதுபோல், அதை நோக்கியே இந்தத் துறை பயணித்தது இன்றைய தேதியில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம். பருத்தி ஆடைகள் மிருதுவானவை; கோடைக்காலத்திற்கு மிகவும் ஏற்றவை. குளிர்காலத்தில் பருத்தி ஆடைகளின் பயன்பாடு மிகக் குறைவே. நமது ஏற்றுமதிச் சந்தை 90% ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளைச் சார்ந்துஉள்ளது. அங்குள்ள பருவநிலை என்பது, ஆண்டுக்கு 4 முதல் அதிகபட்சம் 5 மாதங்களே கோடைக்காலம். மீதமுள்ள மாதங்களில் பருத்தி ஆடைகளின் தேவை என்பது மிகக் குறைவு. பருத்தித் துணியில் குளிர்கால ஆடைகளை மிகக் குறைவாகவே இறக்குமதியாளர்கள் வாங்குவர். ஏனெனில் பருத்தியைவிட செயற்கை நூலிழைகளான பாலியஸ்டர், நைலான் போன்றவற்றில் தயாராகும் ஆடைகளே உடலைக் கதகதப்பாக வைப்பதற்கு உதவும் என்பதால், இந்த வகை ஆடைகளையே அவர்கள் அதிகம் இறக்குமதி செய்வர். செயற்கை நூலிழை ஆடைகளைத் தயாரிப்பதில் நாம் கவனத்தைச் செலுத்தாமல் விட்டதை மிகப்பெரிய இழப்பாகத் தற்சமயம் உணர்கிறோம். நுகர்விலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. நமது வாழ்க்கை முறையை ஒட்டியே ஒரு தகவலைச் சொல்கிறேன். 25 -30 வருடங்களுக்கு முன் பள்ளிக்குச் சென்று வந்தபின், சீருடைகளைக் களைந்து, இருக்கும் உடைகளை அணிந்து விளையாடச் செல்லும் பழக்கம் இருந்தது. இன்றைய தேதியில், என்ன விளையாட்டை மேற்கொள்கிறோமோ அதற்கேற்ப ஆடைகளை அணியும் பழக்கத்திற்கு அது மாறியுள்ளது. இது ஒரு மிகப் பெரிய வர்த்தக வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் விளையாட்டுகளுக்கென்றே தயாராகும் ஆடைகள் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து வருவதையும் அதற்கான பிரத்தியோக சில்லறை வர்த்தகப் பெரும் நிறுவனங்கள் வளர்ந்து வருவதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது தவிர இரவு உடை, பார்ட்டி வெர் என, ஒரு நாளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று விதமான ஆடைகளை அணிவதால், நுகர்வு அதிகரித்துள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள தரவுகளை நாம் உள்வாங்கத் தவறிவிட்டதாகவே நான் கருதுகிறேன். பருத்தி ஆடை உற்பத்தி என்னும் வசதியான வட்டத்திற்குள் நம்மை நாமே அடைத்துக்கொண்டோம். பஞ்சு விலையின் கடும் உயர்வு, நூல் தட்டுப்பாடு, நூல் ஏற்றுமதி, உள்ளிட்ட பிரச்சனைகள் ஒவ்வொன்றாகத் தொழிலுக்கான நெருக்கடியைத் தொடர்ந்து ஏற்படுத்துவது; அதனால் பெரும் பாதிப்பிற்கு இந்தத் தொழில் உள்ளவதற்கான காரணம், மாற்று ஏற்பாடுகள் இல்லாததும் அதை நோக்கி நமது கவனத்தைச் செலுத்தாததுமே. இதைச் சரியாக உள்வாங்கிய சீனா, பங்களாதேஷ், வியட்நாம், கொரியா, தைவான் போன்ற நாடுகள் தொடர்ந்து தொய்வின்றிப் பயணிக்கின்றன. உலகளவில் சந்தைக்கு வரும் விளையாட்டு தொடர்பான ஆடைத் தயாரிப்பில் பருத்தி ஆடைகள் 21% மட்டுமே. மீதமுள்ள 79% ஆடைகள் செயற்கை நூலிழையில் தயாரிக்கப்படுபவையே. பருத்தி ஆடை உற்பத்தியில் நமது போட்டி உற்பத்தி நாடுகளான வங்கம், வியட்நாம், சீனா உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பைக் கழித்தால் நமது பங்களிப்பு 3 முதல் 4% மட்டுமே. செயற்கை நூலிழை ஆடைகளில் நாம் போட்டியிலேயே இல்லை என்பதே கசப்பான உண்மை. இதற்கான காரணம், பருத்தித் துணிகள் தயாரிக்கும் அளவிற்கான நுட்பமும் சூழலும் செயற்கை நூலிழைத் தயாரிப்பில் இல்லை என்பதே. ஒவ்வொரு வருடமும் செயற்கை நூலிழை ஆடைகளுக்கான தேவை அதிகரித்தவண்ணமே உள்ளது. தற்சமயம் இந்தியாவின் விளையாட்டு தொடர்பான ஆடை வர்த்தகம் 8% என்ற அளவிற்கு உள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த ஆடையை வேண்டுமெனாலும் அணிந்துகொண்டு நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, இதர விளையாட்டுகளில் ஈடுபட்டு வந்தவர்கள், தற்சமயம் அந்தந்த விளையாட்டுகளுக்கெனத் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியத் தொடங்கியுள்ளதை நம்மால் காணமுடியும். நம்மைச் சுற்றியே அதற்கான சான்றுகள் உள்ளன. மிகச் சமீப வருடங்களில் விளையாட்டு ஆடைகள் மற்றும் உபகரணங்களுக்காகவே பிரத்தியோகமாகத் தங்களது சில்லறை வர்த்தக மையங்களை இந்தியாவில் அமைத்த டெக்காதலோன் (Decathlon) நிறுவனம் நாளது தேதியில் மிக விரிவாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்களின் கடைகளையும் அமைத்துவருவதைக் கண்கூடாகக் காணலாம். பருத்தி ஆடைகள் உற்பத்தி என்கின்ற வட்டத்தைக் கடந்து, செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியையும் நாம் கைகொள்ளவேண்டிய நிலையை உணர்ந்து அதை நோக்கிப் பயணிக்கவேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதுவொன்றும் பெரும் விடயமும் அல்ல. பருத்தி ஆடைத் தயாரிப்பிற்கான கட்டமைப்பில் பல்வேறு சிறு மாற்றங்களையும் அதற்கான முதலீடுகளையும் செய்தால் அடுத்தடுத்த வருடங்களில் நமது ஆடைத் தயாரிப்பில் குறைந்தது 25% முதல் 30% செயற்கை நூலிழை ஆடை உற்பத்தியை எட்டலாம். அதற்கான முயற்சிகளைப் பல்வேறு தளங்களில் பல்வேறு நிறுவனங்கள் துவங்கியுள்ளன என்கிற நற்செய்தியையும் இங்கே பகிரக் கடமைப்பட்டுள்ளேன். கடினக் காலங்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் மகத்தானவை. அந்த விதத்தில் மகத்தான படங்களுடன் திருப்பூர் தொழில்துறை புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த பகுதிகளில் மேலும் பல விபரங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.  

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

காட்சி 11 காலம் : 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாஞ்சிநாதன் புதுவை வந்த அடுத்தநாள்இடம் : உடற்பயிற்சிக் களம், பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம்.பாத்திரங்கள் : நாகசாமி, வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், கண்ணுப்பிள்ளை மற்றும் சில இளைஞர்கள்.(உடற்பயிற்சிக் களத்தில் சிலம்பப் பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது.. வ.வே.சு.அய்யர் கவனித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் வட்டமாகச் சுற்றிநின்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாகசாமியும் வாஞ்சிநாதனும் வருகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : வாருங்கள். சிலம்பப் பயிற்சி முடியட்டும். அமர்ந்து பாருங்கள்..(அமர்ந்து கொள்கிறார்கள். மோதல் பயிற்சி உச்சத்தில் வருகிறது. ஒருவரின் சிலம்பம் கையிலிருந்து நழுவிவிடுகிறது. போட்டி முடிகிறது. எல்லாரும் கை தட்டுகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : (கம்பை நழுவவிட்டவரைப் பார்த்து) கண்ணுப்பிள்ளை, நன்றாகத்தான் மோதினாய்.. இதுவரை உன்னைக் கவனித்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நல்ல தேர்ச்சி தெரிகிறது. ஒரு சிறு கவனப் பிசகு. ராகவனுக்குப் போதும்; உன்னை வீழ்த்திவிட்டான். (வென்றவனைப் பார்த்து) ராகவா, லாகவமும் நேரக்கணிப்பும் கவனத்தில் நன்றாக வைத்துக்கொள்கிறாய்.. நல்லது. இன்று புதிய சகோதரர் நம்மிடம் வந்திருக்கிறார். திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்தவர். பெயர் வாஞ்சிநாதன்.அனைவரும் : வணக்கம் (வாஞ்சிநாதனைப் பார்த்து கும்பிடுகிறார்கள்)வாஞ்சிநாதன் : (நெகிழ்ந்து போய்) வணக்கம். (கும்பிடுகிறார்)வ.வே.சு.அய்யர் : அனைவரும் தர்ம இல்லத்திற்கு வந்து சேருங்கள். அங்கே நமது கூட்டம் நடக்கவிருக்கிறது.(மேடையில் இருள் பரவி, ஒளி வரும்போது தர்ம இல்லத்தில் சபை கூடியிருக்கிறது)வ.வே.சு.அய்யர் : நாகசாமி, நீங்கள் இன்று சபைக்கு அக்கிராசனம் செய்து சபையை நடத்துங்கள்.நாகசாமி : சகோதரர்களே, இந்த பாரத பூமியின் புதல்வர்களாகிய நம்மைக் கீழ்மைப்படுத்துவதற்கான காரியங்களை வெள்ளை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதன் உச்சக்கட்டமாக மிலேச்ச அரசன் ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டிக்கொள்கிற வைபவத்தை இந்தியாவிலும் தர்பார் நடத்திக் கொண்டாடப்போவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்த தேசத்தின் பெரியவர்கள் வெஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கும்போது அந்தப் பரங்கிப் பஞ்சமன் முடிசூட்டிக்கொள்வதைக் கொண்டாடுவார்களாம்.. நாம் பார்த்துக்கொண்டிருக்க வேணுமாம். பொழுதெல்லாம் எங்கள் செல்வங்கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?அழுதுகொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? – உயிர் வெல்லமோ?நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? – பன்றிச் சேய்களோ? என்று சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை செக்கடியில் நொந்துகொண்டிருக்கிறார். நாம் இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் ஏன் கைகட்டிக்கொண்டு சும்மா இருக்கிறோம் என்று பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பெரியவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் மேற்கொண்டு அய்யர் பேசுவார். வ.வே.சு.அய்யர் : ஸ்ரீமான் பிள்ளை சிறையில் வாடுவதைப்பற்றி கல்லும் கரையும்வண்ணம் பாரதியார் பாடிவைத்தார். மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி – இருகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? என்று பாரதியார் பாடியிருப்பதை நினைவுகொள்ளுங்கள்.பிரான்ஸ் நாட்டில் இருக்கிற நமது தலைவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஜார்ஜ் முடிசூட்டு விழா நாளில் நாம் நம் எதிர்ப்பைக் காட்டும் விதமாக, அவன் இந்த நாட்டில் கால் வைக்கும் வேளையில் நாடெங்கிலும் உள்ள பரங்கி அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.பரங்கியரைக் கொல்வது பாவம் அன்று. இது போன்று ஒரு திட்டத்தை இங்கிலாந்தில் நானும் சாவர்க்கரும் வெற்றியாக்கினோம். சாவர்க்கர் இப்போது பம்பாய் தாணா சிறையில் இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நினைவுபடுத்துகிறேன். ‘தனிநபர் படுகொலை அந்நிய அதிகாரிகளையும் நிர்வாகத்தையும் நிலைகுலையச் செய்யவும் மக்களை எழுச்சிகொள்ளவும் செய்யும். புரட்சியின் தொடக்கமாகத் தனிநபர் கொலைகள் இருக்கும்’ – என்று சாவர்க்கர் கூறியிருக்கிறார். நம் தமிழ்நாட்டிலும் நமது இயக்கத்தில் நாம் 3000 உறுப்பினர்கள் இருக்கிறோம். நமது இலக்கு, திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்தான். தூத்துக்கடி சுதேசிக் கப்பல் கம்பெனி மூடிப்போவதற்குக் காரணமாக இருந்த இன வெறியன். நமது சங்கத்தின் உறுப்பினரும் மகத்தான தேசத் தொண்டருமாகிய ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் துயரங்களுக்கும் இவனே காரணகர்த்தா.இவனைக் கொல்ல வேண்டும். கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்டு இயக்கத்தின் இரகசியத்தைக் காக்கும் தியாகமும் துணிச்சலும் கொண்டவரே இந்தப் பணியைச் செய்ய வல்லவர். நம்மில் அதைச் செய்யப்போகிற வீரர் யார்..? உடனே சொல்ல வேண்டியதில்லை. யோசித்துச் சொல்லுங்கள். இந்தத் தியாக வேள்வியில் தம்மையும் ஆகுதியாக்கி பாரத மாதாவின் பாதங்களில் வெற்றிக் காணிக்கை செய்யும் பாக்கியம் பெறப் போகிறவர் யார்..?(வாஞ்சிநாதன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயல, வ.வே.சு. அய்யர் கையமர்த்தி) யாரும் இப்போது எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நன்றாக யோசித்து மனத்தையும் சிந்தையையும் ஒருமுகப்படுத்தி அடுத்த கூட்டத்தில் தர்ம இல்லத்தில் கூடி முடிவு செய்யலாம். இப்போது இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.(உறுதிமொழியை நாகசாமி சொல்ல, அனைவரும் உறுதி ஏற்கிறார்கள்)(வாஞ்சிநாதனைப் பார்த்து) தம்பி, நீர் சில நாட்கள் நாகசாமி இல்லத்தில் தங்கியிருங்கள். கண்ணுப்பிள்ளை, நீ வாஞ்சியுடன் தங்கிக்கொண்டு அவருக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் தினமும் காலையில் வருவேன். மாலையில் இந்த உடற்பயிற்சிக் கழகத்தில் சந்திக்கலாம். கூட்டம் முடிந்தது. வாஞ்சிநாதன் : ஐயா, என் விடுப்பு முடிவதற்குள் நான் செல்ல வேண்டும். நான் எத்தனை நாட்கள் இங்கே இருக்க நேரும்? நீலகண்டர் எப்போது வருவார்..? ஏதேனும் தெரியுமா? வ.வே.சு. அய்யர் : நீர் எத்தனை நாள் விடுப்பில் இருக்கிறீர்? வாஞ்சி நாதன் : ஒரு மாதம் ஐயா.. வ.வே.சு. அய்யர் : ஒரு வாரம் இருந்து பாருங்கள். அடுத்த கிழமைக்குள் நீலகண்டர் வரவில்லையெனில் நீர் செல்லலாம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவும்போது ஓம்கார் அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, ஒரு சந்தேகம். பல சமயங்களில் கேட்க நினைத்தேன். இப்போது அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்கலாமா..? ஓம்கார் சுவாமிகள் : கேளுங்கள் தம்பி.. சங்கர கிருஷ்ணன் : நாகசாமி பேசும்போது இங்கிலாந்து அரசனைப் ‘பஞ்சமன்‘ என்று குறிப்பிட்டார் அல்லவா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம்.. சங்கர கிருஷ்ணன் : பஞ்சமன் என்றால் நான்கு வருணத்திற்கும் கீழாக ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதானே பொருள்..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி. சங்கர கிருஷ்ணன் : அப்படியானால் இந்தப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் சாதி பேதம் இருக்கத்தானே செய்தது..? சாதியின் பெயரால் சக மனிதனை இழிவாகப் பார்க்கும் பார்வையை இவர்கள் விட்டுவிடவில்லையே..? ஓம்கார் சுவாமிகள் : கேள்விகள் முடிந்தனவா தம்பி..? சங்கர கிருஷ்ணன் : இன்னும் இருக்கின்றன சுவாமிஜி. ‘இந்தப் புரட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு சாதியினராகிய பிராமணர்கள் மற்றும் பிள்ளைமார் என்ற வேளாளர்களாக இருக்கிறார்களே’ என்ற உறுத்தல் எனக்கு இருந்து வந்தது.இப்போது புதுச்சேரிக்காரரான நாகசாமி ஐயர், இங்கிலாந்து அரசனைச் சாதியில் கீழானவன் என்ற பொருளில் அழைக்கிறார் என்பதால் இவர்களிடம் சனாதனம் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது தெரிகிறது. சாதி இழிவைப் பிறர்மீது சுமத்திக்கொண்டு இவர்கள் புரட்சி பேசியது எப்படி..? ஓம்கார் சுவாமிகள் : நீண்ட கேள்விகள்.. இன்னும் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும். நானும் பிராமணன் என்பதால், நான் வருணாஸ்ரமத்தை நம்புகிறேனா என்ற கேள்வியும் உங்களிடம் இருக்க வேண்டுமே! வாஞ்சிநாதன் தன்னைச் சுட்டுக்கொண்டபோது, அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்திலும் ‘ஜார்ஜ் பஞ்சமன்‘ என்ற சொல் இருந்தது. ‘அழியாத சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தச் செயலைச் செய்ததாக’ வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருந்தார். எங்கள் காலத்தில் இந்தத் தமிழ்நாட்டில் கல்வி வசதியைப் பெற்றிருந்தவர்கள் பிராமணர்களும் வசதியான செல்வந்தர்களாக இருந்த வேளாள சாதியினரும்தான். தாங்கள் பெற்ற கல்வியினால் தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை முதன்முதலில் உணர்ந்தவர்கள் அவர்களாகவே இருந்தார்கள். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இடத்திலும் அவர்களே இருந்தார்கள். அதே நேரத்தில், மதம் மாறிய பிற சாதியினருக்கு கிறித்தவம் கல்வி கொடுத்தது. கல்வி பெற்றதின் நன்றியுணர்ச்சி அவர்களை ஆங்கில அரசுக்கு விசுவாசிகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்த முரண்பாடு சனாதனிகளை அவர்களிடம் நெருங்கவிடவில்லை. ‘சனாதானம் என்பது மாறாதது.. அது படைப்பில் தீர்மானம் ஆகிறது’ என்பது இந்து மதம் சார்ந்த நம்பிக்கை. ‘எல்லாம் மாறக்கூடியதே.. பிறப்பின் காரணமாக மேல் கீழ் என்று சட்டம் வைத்துக்கொள்வது மனித இனத்தின் நாகரிகம் அல்ல’ என்ற புரிதல் எங்கள் காலத்தில் வந்துவிடவில்லை. இந்து சனாதனிகள் அரசியல் விடுதலையைப் பேசினார்களே தவிர, சாதி சமயச் சடங்குகளை விட்டுவிடவில்லை. கீதை, பாரதம், இராமாயண மேற்கோள்களில் இருந்தே அவர்களின் வியாக்கியானங்கள் இருந்தன. திலகர், பாலர், சாவர்க்கர், வ.வே.சு.அய்யர் எல்லாருமே சனாதனத்தை முழுமையாக விட்டுவிடவில்லை. ஒரு சிலவற்றை விட்டிருப்பார்கள்.. ஆகவே நாகசாமி பேசிய சொற்களில் சனாதனம் தொனித்ததில் வியப்பு இல்லை. பாரதியார் மற்றும் சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் மட்டுமே சாதி மறுப்பைப் பேசியும் செயலில் காட்டியும் வந்தார்கள். அதற்காக அவர்கள் தங்கள் சாதிக்காரர்களால் ஒதுக்கியும் வைக்கப்பட்டார்கள். பாரதி, தன் மகள் கல்யாணத்தில் கலகம் செய்து விடுவாரோ என்று வைதிகம் பயந்தது. நான் பாரதியைப்போல சாதிச் சடங்குகளுக்கு எதிரானவனாகவே இருந்தேன். பாரதி சிதைக்குத் தீ மூட்டும் பாக்கியத்தை எனக்குத் தருவதற்கு முன்வந்தார்கள். சாதிச் சடங்குகள் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாதபடியினால் நான் அதைச் செய்ய மறுத்துவிட்டேன். சுதேசி இயக்கத்தை எல்லா சாதியினரும் நம்பினார்கள். அந்தத் தலைவர்களை, அவர்களின் செயல்பாடுகளை ஒரு கட்டம் வரை ஆதரிக்கவும் செய்தார்கள். காந்தியடிகளும் கம்யூனிஸ்ட்களும் தேச அரசியலில் வரும்வரை, சாதி என்ற தீமையைப் போக்க வேண்டும் என்பதில் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்தவர்கள் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாளடைவில் எங்களில் பலர் சனாதனத்தை உதறினோம். அதை நிரூபிக்க எங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அந்தத் தலைமைப் பாத்திரம் காந்தி யுகத்திற்குப் போய்விட்டது. ஆனால் உடல், பொருள், ஆவி அத்தனையும் தேச விடுதலைக்கு அர்ப்பணித்ததில் எங்களின் பாத்திரத்தில் எந்தக் கறையும் களங்கமும் சொல்ல முடியாது. இந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. சங்கர கிருஷ்ணன் : உங்கள் நீண்ட விளக்கத்தைச் சுருக்கினால், திலகர் வழியில் வந்த பலாத்காரப் புரட்சியாளர்கள் அனைவரும் சனாதனிகளே என்ற விடைதான் வருகிறது சுவாமிஜி. (திரை விழுகிறது)

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

அண்மைக் காலத்தில் கணினி அறிவியலின் விரிந்து பரந்த நவீனத் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) காணப்படுகிறது. பொதுவாக, மனித நுண்ணறிவு தேவைப்படும் வேலைகளை, நுட்பத்துடன் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கும் பணியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயற்கை நுண்ணறிவு என்பது திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு காணுதல், பன்முகச் சிந்தித்தல், எண்ணங்களை ஆராய்ந்து தெளிதல், கற்றதைச் செயல்படுத்தல் என்பன போன்ற நுண்ணறிவுத் திறன்களை உள்ளீடாகக் கொண்டுள்ளது. பொதுவாக, முந்தைய அனுபவங்களைக் கொண்டு இயந்திரத்தைக் கற்கச் செய்தல், எதிர்கொள்ளும் தீர்வுகளுக்கேற்பத் தானாக மாற்றிக் கொள்ளுதல், மனிதனைப்போல் சிந்தித்துப் பிரச்சனைகளின் முடிவுகளுக்கான வழிமுறைகளைக் கண்டறிதல், சரியான முடிவுகளைச் செயல்படுத்துதல் முதலானவற்றை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்கிறது. இத்தகைய நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வகுப்பறையில் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவுக் கற்றல் – கற்பித்தல் காணொலிகள் அடங்கிய தொகுப்பு வெளியிடும் முயற்சியில் ஒரு சிலர் முயன்று வருவது எண்ணத்தக்கது. செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு என்பது எதிர்வரும் காலங்களில் மருத்துவம், மின் வணிகம், கல்வி, நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, தரவுப் பாதுகாப்பு, விவசாயம், விளையாட்டு, சமூக ஊடகங்கள், தானியங்கிக் கருவிகள் மற்றும் எந்திர மனித உற்பத்திப் பணிகள் எனப் பல்வேறு துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. கல்வித் துறையில் இதன் வருகை ஒரு புதிய மைல் கல்லாக அமையப் போகிறது. இப்போதும் பல்வேறு சமூக ஊடகங்களில் எல்லாருடைய மனங்களிலும் நீங்காமல் நிலைத்து நிற்கும் மறைந்த தேசியத் தலைவர்கள், கவிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், நடிகர் நடிகைகள், கற்பனைக் கதை மாந்தர்கள் முதலான நபர்களின் நிழற்படம் மற்றும் காணொலிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மீட்டுருவாக்கம், உருவாக்கம் செய்யப்பட்டவற்றைக் கண்டுகளித்து வியக்கும் போக்குகள் அதிகரித்து வருகின்றன. கேரள மாநிலத்தில் சாலைப் போக்குவரத்தை  ஒழுங்குபடுத்தும் நடைமுறையில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட காரணத்தால் கணவனின் தவறான நடத்தையைக் கண்டுபிடித்த மனைவி இதுகுறித்து வழக்குப் பதிந்து நியாயம் கேட்ட சேதி ஊரறிந்த ஒன்று. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் இதைப்போன்ற எதிர்மறையான தவிர்க்க முடியாத சிதைந்த நோக்கத்திற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு ஐன்ஸ்டீனின் கோட்பாடு ஆகும். ஆல்பிரட் நோபல் அதனை மாற்றி யோசித்து உருவாக்கியதை அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் இருபெரும் நகரங்களில் அவற்றைப் பரிசோதிக்க முடிவு செய்து பெரும் நாசம் விளைவித்ததை யாரும் மறக்க முடியாது. இதுபோன்ற அல்லது இதைவிடவும் மிகப்பெரிய மனித ஆக்கப் பேரிடர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வித்திட்டால் என்ன செய்வது என்று பல்வேறு வளர்ந்த நாடுகளும் இத்தொழில்நுட்பப் பயன்பாட்டை எதிர்த்து முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இத்தொழில்நுட்பம் பல்வேறு வகையான துறைகளில் பல்வேறு புதுமைகளைப் படைக்க இருப்பதாக அறியப்படுகிறது. அதேவேளையில், இதனால் மனித சமூகத்துள் பலவிதக் குழப்பங்கள், ஆபத்துகள், பணி இழப்புகள், மனநெருக்கடிகள் சார்ந்த வாழ்வியல் பிரச்சினைகள் தொடக்கத்தில் எழும் என்பது நிச்சயம். எனினும், இது எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் ஏற்படுவது இயற்கை என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. இதுபோன்றவற்றைத் தடுக்க நினைப்பதும் முடியாத நிலையில் இயலாமையால் வருந்துவதும் அறிவீனம் ஆகும். மனித வேலையிழப்பை மட்டும் கவனத்தில் கொள்ள முடியாது. ஆள் விரயம், கால விரயம், நேர விரயம், பண விரயம், மன உளைச்சல் விரயம் போன்றவை இதனால் பெருமளவில் தவிர்க்கப்பட்டதையும் நினைவுகூர்ந்து எண்ணிப் பார்ப்பது அவசியம். இன்றைய சூழலில் எந்தவொரு மின் சாதனங்கள், தகவல்தொடர்புக் கருவிகள் மற்றும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த வசதிகளையும் நுகர்வுத் தன்மைகளையும் வெகுவாகக் குறைத்துக்கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாகும். மனித மனம் அவற்றிற்கு அடிமையாகிவிட்டது. ஒருகட்டத்தில் இவற்றின் பாதகங்களைக் கடந்து போகவும் சாதகங்களை நினைந்து போற்றவும் பழகிக் கொண்டு விட்டோம் என்பதுதான் உண்மை. சரி. கல்வியில் இதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்குச் சரியாக விடையளிப்பது அவசியம். வகுப்பறைகளில் இத்தொழில்நுட்பம் பல்வேறு புதுமைகளைத் துல்லியமாக விளைவிக்கும். அதாவது, மகாத்மாவைப் பாட வைக்கலாம். நேரு மாமாவை ஆட வைக்கலாம். நேதாஜியை வீர உரையாற்றச் செய்யலாம். வேலுநாச்சியாரைப் போரிடச் செய்யலாம். புரட்சியாளர் அம்பேத்கர் போதிப்பதைக் கேட்கச் செய்யலாம். கவிக்குயில் சரோஜினியைக் கவி பாட வைக்கலாம். மகாகவி பாரதியை உணர்ச்சிப் பெருக்குடன் கவிதை எழுதச் சொல்லலாம்.  இவையனைத்தையும் இன்றையக் காலச் சூழலில் தத்ரூபமாக வியக்கத்தக்க வகையில் இப்போது செய்து காட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வழிகோலும். இதுபோன்ற நிகழ்வுகள் கற்பித்தலில் ஆசிரியர் பணியை வெகுவாகக் குறைக்க உதவிடும். புதுமை – இனிமை – எளிமை அடிப்படையில் கற்பித்தல் பணிச்சுமை இலகுவாகும். இதற்கு நேர்மாறாக, கற்றலில் துரிதமும் துல்லியமும் மகிழ்ச்சியும் நீடித்து நிலைத்தலும் மிகும். எத்தகைய காணொலிகளையும் இதனால் மிக விரைவாக உருவாக்க முடியும். பல்வேறு கேலிச்சித்திர இயங்குபடம் அடங்கிய தொகுப்பு, குழந்தைகளின் கவனத்தை அதிகம் ஈர்த்து கற்றல் சுமையாகவும் தண்டனையாகவும் வலியாகவும் வேதனையாகவும் அல்லாமல் விரைவாகவும் எளிதாகவும் இயல்பாகவும் ஆனந்தமாகவும் நிகழ அதிகம் வாய்ப்புண்டு. எந்தவித ஐயப்பாடுகளையும் அவை சார்ந்த தீர்வுகளையும் விளக்கங்களையும் தேடித் திரியும் அவசியம் இல்லை. ஓப்பன் ஏஐ சாட் ஜிபிடி (Open AI ChatGPT) மூலம் நொடிப் பொழுதில் விடைகளாகப் பெறவியலும். இதன் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டாலும் காலப்போக்கில் அனைத்துக் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. தானே கற்றலுக்கு இஃதொரு நல்ல எந்திர ஆசிரியர் (AI-Teacher) ஆகும். அதற்குத்தான் கூகுள் (Google) தேடுபொறி இருக்கிறதே என்று அங்கலாய்ப்பது சரியாகாது. பல்வேறு இயங்குதளத்தைச் சுட்டிக்காட்டி உரிய தரவுகளைத் தேடிக் கண்டடைவது தேடுவோரின் கடினப் பணியாக உள்ளது. ஆனால், இஃது அவ்வாறு கிடையாது. கையிலே காசு வாயிலே இனிப்பு என்பது போல, வினாத் தொடுத்த மறுநொடியே சுடச்சுட விடைகளைச் சிறியதாகவும் பெரிதாகவும் அளவாகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் போதும் போதும் என்று கொட்டிக்கொண்டிருக்கும். தற்போது ஆங்கிலத்தில் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. தமிழ் மொழியில் போதுமான தரவுகள் வழங்கப்படுவது இன்று குறைவானதாக உள்ளது. ஆனால், நாளை அவ்வாறு இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதேவேளையில், தேர்வின்போது ஒரு மாணவனிடம் இது கிடைக்குமேயானால் அபாயகரமானது. படிக்கவே வேண்டியதில்லை. எதையும் நொடிப் பொழுதில் தன்வயப்படுத்திக் கொள்ளும் பேராபத்து இதில் உள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் கல்வித்துறை எதிர்காலத்தில் போராடும் என்பது திண்ணம். இத்தகைய நிலையில், கல்வித்துறை நிர்வாகத்தில் இத்தொழில்நுட்பம் புகுத்தப்படுமேயானால், ஆசிரியர் பணியும் பணியிடமும் கேள்விக்குள்ளாகக் கூடும். இத்தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சமே மனித வளத்தை வெகுவாகக் குறைத்து நிறைவான அடைவைப் பெறச் செய்வதாகும். பள்ளிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளால் இணைக்கப்பட்டு அதிகபட்சமாக ஐந்து தொடக்கப்பள்ளிகளோ, நடுநிலைப்பள்ளிகளோ, உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளோ பிணைக்கப்பட்டு ஒரு குறு கற்றல் வள மையம் தோற்றுவிக்கப்பட்டு சுழற்சி முறையில் தகுதியும் திறமையும் அனுபவமும் பயிற்சியும் நிறைந்த பாட ஆசிரியர்கள் எடுக்கும் இணையவழி இடைவினை வகுப்பு களால் (Online Mutual Response Class) கல்வி வளப்படுத்தப்படும். தவிர, ஸ்டூவர்ட் ரஸ்ஸல் மற்றும் பீட்டர் நார்விக் எனும் ஆசிரியர்கள் முன்மொழிந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட அ) எதிர்வினை இயந்திரங்கள் (Reactive Machines), ஆ) வரையறுக்கப்பட்ட நினைவகம் (Limited Memory), இ) மனத்தின் கோட்பாடு (Theory of Mind), ஈ) சுய விழிப்புணர்வு (Self-Awareness) ஆகியவற்றுள்  மனத்தின் கோட்பாடு (Theory of Mind) அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் சமூக நுண்ணறிவு (Social Intelligence) கொண்டதாக அமைக்கப்படுகின்றன. இவை மனித நோக்கங்களை ஊகித்து அறிவதுடன், அவர்தம் நடத்தையைக் கண்காணிக்கவும் முடியும். இவை மனிதக் குழுக்களின் ஒருங்கிணைந்த உறுப்பினர்களாக இருப்பதற்கான திறன்களைக் கொண்டிருப்பதன் காரணமாகக் கல்வியில் இதன் பயன்பாடுகள் அதிகரிக்கக் கூடும். இதற்கு இயந்திர வழிக் கற்றல் (Machine Learning) மற்றும் அதன் ஒரு பகுதியாக விளங்கும் ஆழ்ந்து கற்றல் (Deep Learning) ஆகியவை கற்போருக்கு மிகுந்த உதவிகரமாக விளங்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. செயற்கை நுண்ணறிவு தானியக்க எந்திரச் செயல்முறை (AI Robotic Process Automation) மூலமாகக் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை வடிவமைத்து வழங்கும் செயல்பாடுகள் ஊடாக மதிப்பீட்டு முறைகளும் அதன் வழியாகக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் குறைதீர் நடவடிக்கைகள் போன்றவை நிகழ்த்தும் நோக்கும் போக்கும் காலப்போக்கில் ஆசிரியர் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதிலிருந்து பெறப்படும் தரவுகள் அனைத்தும் துல்லியமும் துரிதமும் மிக்கதாக இருக்கும். மனித விருப்பு வெறுப்பிற்கு ஈண்டு இடமில்லை. எடுத்துக்காட்டாக, ஐந்து பாட ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணியை ஓர் AI எந்திரம் செய்துவிடும். மனிதப் பிழைகள் மாதிரியான குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. பயனர்க்கு இடையேயான நட்பு (User Friendly) இதனால் வலுப்படும். மேலும், இன்றைய தொழில்நுட்பக் கருவிகள் மீதான இனம் புரியாத ஈர்ப்பின் காரணமாகக் குழந்தைகளிடம் கற்றலானது விரைந்து நிகழும். போதிப்பவர் என்ற நிலையிலிருந்து ஆசிரியர் மாணவர் கற்பதற்கான வளங்களையும் வசதிகளையும் சூழலையும் ஏற்படுத்தித் தரும் நபராக (Facilitator) அறியப்படுவார். ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் விளைவிப்பது இங்கு நோக்கமல்ல. வேகமாக மாறி வரும் உலக நடப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் புரியவிருக்கும் அபரிமிதமான மாயவித்தைகள் மற்றும் விந்தைகள் குறித்த போதிய விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கையும் நோக்கி நகர முனைவதும் முனைப்புக் காட்டுவதும் இன்றியமையாதது என்று ஆசிரியர் பெருமக்கள் புரிந்து கொள்வது நல்லது. 2030களில் இப்போதுள்ள மரபுவழி வகுப்பறை (Chalk and Talk Class) திறன்மிகு வகுப்பறை (Smart Class) நிலையைக் கடந்து செயற்கை நுண்ணறிவு வகுப்பறை யாக (AI Class) உருவாக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். இப்படித்தான் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (Educational Management Information System) வருகைப்பதிவு உள்ளிட்ட செயல்பாடுகள் கல்வியில் மெல்ல நுழைக்கப்பட்டபோது பலரும் இதெல்லாம் கொஞ்சகாலம்தான் நீடிக்கும் என்று வெளிப்படையாகப் புலம்பியது அறியத்தக்கது. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் கல்வித்துறையில்

கதை பேசும் ஓவியம்

கதை பேசும் ஓவியம்

கவிதை வரைபடம் ஒன்றைக் கரம் புகுத்திபடிக்கச் சொல்கிறான்என் அப்புக்குட்டி ஏழுமலை தாண்டிஇரண்டு மலைகளுக்கிடையேஎப்பொழுதும் பேசிக்கொண்டே இருக்கின்றனவெண்நிலவும் சிவப்புச் சூரியனும் ஓடி வருகிறதுமலையடிவாரம் கடந்தநதியொன்று சலசலப்புடன் பாடும் பறவை இரண்டைத்தாங்கியே நிற்கிறதுஅசை ஒலியெழுப்பியாய்படபடத்த இலை மரப்பச்சை நதி மணலில் கால்த் தடம் பதித்துஅருகில் குடில் சென்றுதிண்ணையில் குரைக்கின்றநாயின் சிறு பாதம் சுற்றுகிறது பின், வானம் பார்த்துஊர்க்குருவிகள்எங்கே போகின்றன கூட்டமாய்?எனக் கேட்டவாறுநண்பருடன் மிகை நயம் பேசும்போதே பெயரற்றுத் தொடரும் என்றேவரைந்துவிடுகிறான் அடிக்குறிப்பை அப்படியென்றால் பேசியதெல்லாம்கோடுகளும் நிறங்களும்கடந்து வந்த எண்ணமும்கற்பனையின் கதைகளுமா? பேசும் படம்அடுத்து வண்ணமேற்றிக்கொண்டிருக்கிறதுஓவியத்தின் கதைக்காக

நீலகண்ட பிரம்மச்சாரி – 10

நீலகண்ட பிரம்மச்சாரி – 10

காட்சி 10 காலம் : 1911ஆம் வருடம்.ஜனவரி மாதத்தில் அதே நாள்இடம் : பாண்டிச்சேரி ‘தர்ம இல்லம்’பாத்திரங்கள் : வ.வே.சு.ஐயர், வாஞ்சிநாதன், நாகசாமி. (வ.வே.சு.அய்யரும் வாஞ்சிநாதனும் ஒரு இல்லத்தின் முன்பு நிற்கிறார்கள். வாசலில் ஒரு இளைஞர் நிற்கிறார்) வ.வே.சு.அய்யர் : வாஞ்சிநாதன்.. இதுதான் ‘தர்மம்’ பத்திரிகாலயம்.. இவர் நாகசாமி. இவர்தான் ‘தர்மம்’ பத்திரிகையைக் கவனித்துக்கொள்கிறார். நாகசாமி : வாருங்கள் அய்யர்.. வாரும் தம்பி.. தம்பி யார்..? வ.வே.சு.அய்யர் : இவர் வாஞ்சிநாதன். நீலகண்டரின் தயாரிப்பு. அவரைத் தேடித்தான் வந்திருக்கிறார். (நீலகண்டர் பெயரைச் சொன்னதும் நாகசாமியின் முகம் மாறுகிறது. வ.வே.சு.அய்யரும் அதைக் கவனிக்கிறார்) நாகசாமி : நீலகண்டரைத் தேடி வந்தாரா..? அவர்தான் இப்போ இங்கு இல்லையே.. வ.வே.சு. அய்யர் : ஆமாம்.. அவர் வரும் வரை இங்கேதான் இவர் தங்க வேண்டும்.. நீர்தான் கவனித்துக்கொள்ள வேண்டும். நாகசாமி : சரி.. அப்படியே ஆகட்டும்.. ஆனால்… வ.வே.சு. அய்யர் : மற்றதை அப்புறம் பேசிக்கொள்வோம்.. இவர் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடும்.. மாலை சந்திக்கலாம்.(வ.வே.சு. அய்யர் புறப்படுகிறார்)(மேடையில் இருள் பரவுகிறது. மீண்டும் ஒளி பரவும்போது வ.வே.சு. அய்யரின் வீடு. வ.வே.சு.அய்யரும் நாகசாமியும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : அய்யரே.. நீலகண்டன் நம் காரியத்துக்கு ஒத்து வர மாட்டார் என்றுதானே தர்ம இல்லத்தில் இருந்து அவரை நான் வெளியேற்றினேன்.. நம் ரகசியங்கள் பல அவருக்குத் தெரியும்.. அவர் நம் கருத்திலிருந்து கொஞ்சநாள் விலகிப் பேசி வந்தார். அவர் நம்முடன் இருந்தால் போலீசுக்குக்கூட விவரங்கள் போய்விடலாம். வ.வே.சு. அய்யர் : என்ன நாகசாமி.. நீலகண்டன் நம்முடன் மாறுபடுகிறாரே தவிர, நம்பிக்கைத் துரோகி அல்ல. இயக்க சபதம் செய்திருப்பவர். அவரைப் பற்றி இந்த சந்தேகம் வேண்டாம். நாகசாமி : சரி அய்யரே.. இந்த வாஞ்சி, நீலகண்டரின் ஆள் ஆயிற்றே.. இவரை வைத்து என்ன செய்யப் போகிறோம்..? வ.வே.சு. அய்யர் : துணிச்சல் மிகுந்த பையனாக இருக்கிறான். திருநெல்வேலி ஜில்லாவில் இருக்கும் தேசபக்தர்களின் தொடர்பு இருக்கிறது. நீலகண்டர் மீது இவனுக்கு மனக்குறை இருக்கிறது. நமது திட்டத்தை இவனை வைத்து நிறைவேற்றலாம். அவனிடம் இணக்கமாகப் பேச்சுக் கொடுத்து அவனது மனநிலையைப் புரிந்துகொள்ளும். நாம் பிறகு சந்திப்போம். (மேடையில் இருள் பரவி மீண்டும் ஒளி பரவுகையில் ‘தர்மாலயம்’ வீட்டில் நாகசாமியும் வாஞ்சிநாதனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : தம்பி வாஞ்சி.. நம்ம வீட்டுச் சாப்பாடு பிடித்திருந்ததா..? பிரம்மச்சாரி செய்த சாப்பாடாயிற்றே..? வாஞ்சிநாதன் : நல்லா இருந்தது அண்ணா.. நாகசாமி : சந்தோசம் தம்பி. தம்பிக்கு திருவிதாங்கூர் ராஜ்யத்தில் செங்கோட்டைன்னு அய்யர் சொன்னார். கலியாணம் ஆகிவிட்டதா..? வாஞ்சிநாதன் : ‘ஆம் அண்ணா. திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நாகசாமி : ஓ..! இளம் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து தேச சேவைக்கு வந்திருக்கிறீர். உண்மையிலேயே மெய் சிலிர்க்கிறது தம்பி. தம்பிக்கு என்ன வேலை..? வாஞ்சிநாதன் : காட்டிலாகா ரேஞ்சர். நாகசாமி : ஆஹா..! இப்படி ஒரு வேலையை வைத்துக்கொண்டா இந்த ரகசிய இயக்கத்திற்கு வந்தீர்கள்..? கேட்கவே அதிசயமாய் இருக்கிறது தம்பி.. நீர் நீலகண்டரைத் தேடி வந்ததைப் பற்றி அய்யர் சொன்னார். அப்படித் தலை போகிற அவசரம் என்ன வந்தது தம்பி..? வாஞ்சிநாதன் : திருநெல்வேலியில் நடப்பதெல்லாம் பிரம்மச்சாரிக்குத் தெரியுமா..? அவர்பாட்டுக்கு பாண்டிச்சேரிக்குப் போனவர் ஒரு தகவலும் தரவில்லை. புனலூர் சங்கர கிருஷ்ணருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதிலும் உருப்படியாக ஒன்றுமில்லை. எனக்கு ஒரு கடிதம் எழுதி, மான் தோல் ஒன்று ஏற்பாடு செய்து தரும்படிக் கேட்டிருந்தார். வேறு செய்தி இல்லை. நாகசாமி : இதற்கெல்லாமா அவசரப்பட்டு அவரைப் பார்க்க வந்திருக்கிறீர்..? வாஞ்சிநாதன் : அது மட்டுமில்லை அண்ணா. பரலிக்கோட்டை நெல்லையப்பர், சிதம்பரம் பிள்ளையை ஜெயிலில் பார்த்துவிட்டு வந்து சொன்ன செய்தி எங்களை உருக்கிவிட்டது. ஜெயிலில் அந்த மேதையைச் செக்கிழுக்க வைக்கிறார்களாம். அடிக்கக்கூடச் செய்கிறார்களாம். நெல்லையப்பரிடம் சொல்லி வருந்தியிருக்கிறார் பிள்ளைவாள்.. (கண் கலங்கி அழுகிறான்)இந்தக் கொடுமைக்கெல்லாம் காரணமான கலெக்டர் ஆஷின் அக்கிரமங்களுக்கு ஒரு முடிவே இல்லையான்னு அவர் நெல்லையப்பரிடம் சொன்னாராம்.ஆஷ் கலெக்டர் அக்கிரமமும் கூடிப் போச்சுங்க ஐயா. குற்றாலத்தில் வெள்ளையர்கள் குளிப்பதற்குத் தனியாக நேரம் வைத்துச் சட்டம் போட்டிருக்கிறான், அந்த இன வெறியன். வெள்ளையர்கள் குளிக்கும்போது நம்ம ஜனங்கள் யாரும் அருவிப் பக்கமே போகக்கூடாதாம்.திருநெல்வேலியில் இப்போ யாரும் சுதந்திரமா பேசக்கூட முடியாது. நீலகண்டர் வந்தால் அவரிடம் கேட்டு, இவன் அக்கிரமத்திற்கு ஏதாவது பாடம் பண்ணணுமுன்னு யோசிச்சோம். அவரைக் கேட்காம எதையும் செய்யவும் தயக்கமாயிருக்கு. அதான் நேரே பார்த்துட்டு வந்திரலாமுன்னு சகோதரர்கள் அனுப்பி வச்சாங்க. நாகசாமி : நெல்லையப்பர் இங்கேயும் வந்திருந்தார். எங்களுக்கும் இந்தச் சேதி தெரியும். நாங்களும் கொதிச்சுப் போய்த்தான் இருக்கோம். இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும்பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந்து இழிவுற்றாலும்விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே என்று பாரதியார் பாடியது பிள்ளையவர்களுக்கே பொருந்தும். அந்த மகானுக்காகவேனும் ஏதும் செய்துதானாக வேண்டும் என்று எனக்கும் தோன்றுகிறது தம்பி. கவலைப்படாதே தம்பி, இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை காலை பேசுவோம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. ஒளி விரியும்போது வ.வே.சு. அய்யரும் நாகசாமியும் தனியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) நாகசாமி : அய்யரே, இந்தப் பையன் வேண்டாம். புதிதாகத் திருமணம் ஆனவன். பெண் குழந்தை இருக்கிறது. இவனுக்கு ஏதேனும் ஆனால் இவனது இளம் மனைவியின் நிலை என்னவாகும்..? வ.வே.சு.அய்யர் : தேச இயக்கம் என்று வந்துவிட்டால், இப்படியெல்லாம் பார்க்க முடியமா..? நமது திட்டத்தை இவனை வைத்துச் செய்ய முடியுமா என்று பார்ப்போம். முடிந்தால் செய்ய முனையலாம்.. நாளை கரடிக் குப்பத்திற்கு எல்லாரையும் வரச்சொல்லி இருக்கிறேன். நீரும் வாஞ்சிநாதனை அழைத்துக்கொண்டு வந்துவிடும்.. அங்கே பேசிக்கொள்வோம். (மேடை இருளாகிறது.. மீண்டும் ஒளி பரவ, ஓம்கார் ஆசிரமத்தில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமி.. உங்களைத் துரோகி என்று வெளியேற்றினார்களா..? ஏன் சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : பலாத்கார இயக்கம் என்பது ஆயதந்தாங்கிய யுத்தம் என்றே நான் நம்பி வந்தேன். அப்படியான நேரடிப் போரைத்தான் எதிர்பார்த்து நான் சந்தித்தவர்களிடமெல்லாம் சொல்லியும் நம்பிக்கையும் கொடுத்து வந்தேன். தனிநபர் கொலையில் எனக்கு நம்பிக்கையும் சம்மதமும் இல்லை. ஆனால் சில நாட்களாக பாரிஸிலிருந்து வ.வே.சு.அய்யருக்கு வந்திருக்கும் செய்தியின் அடிப்படையில், அவர்கள் தனிநபர் கொலைகள் பற்றிப் பேசத் தொடங்கினார்கள். அந்த முரண்பாடு முற்றவே, அவர்கள் என்னை ஒதுக்கிவைத்துப் பேசினார்கள். என்மீது ஐயமும் கொண்டார்கள். அதிலும் நாகசாமி என்னைப் போலீஸ் உளவாளி என்று சந்தேகம் கொண்டுவிட்டார். என்னை தர்மாலயத்திலிருந்து வெளியேற்றவும் செய்தார். இது அரவிந்தருக்குத் தெரிந்திருக்கும். பாரதியாருக்குத் தெரியாது. சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்ன ஆச்சு சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : வாஞ்சிநாதனை உயிர்த் தியாகம் செய்யத் தயார் செய்தார்கள். (திரை விழுகிறது) (நாளை தொடரும்)

சரித்திரப் பயணத்தில் சந்திரயான் 3

சரித்திரப் பயணத்தில் சந்திரயான் 3

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் அனைவரும் இன்றைய மாலைப் பொழுதை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடந்த ஜூலை 14 அன்று நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலம், நிலவில் தரையிறங்கவுள்ளதைக் காணவே இத்தனை ஆவல் நிலவுகிறது. கற்பனையில் நிலவைப் பாடிக்கொண்டிருந்த காலத்தை மாற்றியது அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்றால் அது மிகையில்லை. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஏற்கனவே சந்திரயான் 1 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தாலும் சந்திரயான் 2, தன்னுடைய பயணத்தின் இறுதிக்கட்டத்தில் எதிர்பாராத தோல்வியைத் தழுவியது. அதனைத் தொடர்ந்து இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் 40 நாள் பயணம் இன்று நிறைவடைகிறது. சந்திரயான் 1 நிலவின் வட துருவத்தில் தரையிறங்கியது. ஆனால் சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ளது. இதனால், நிலவின் தென் பகுதிக்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறவுள்ளது. சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம், சந்திரயான் 3க்கு முன்னதாகவே நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் அது நிலவில் மோதி நொறுங்கியது. எனவே, சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கப் போகும் அந்த இறுதி நிமிடங்களை உலகமே உற்றுநோக்குகிறது. சந்திரயான் 3 விண்கலத்தின் 40 நாள் பயணம் 10 கட்டங்களாக நிகழ்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் சிறிது சிறிதாக முன்னேறி நிலவை நெருங்கியுள்ள சந்திரயான் மூன்றின் பயணத்தின் படிநிலைகளைக் காண்போம். பெரும் சவால்களைக் கடந்து, எட்டாவது கட்டப் பயணத்தை இன்று நிறைவு செய்யவுள்ள சந்திரயான் 3 விண்கலம், தனது பயணத்தின் 9 மற்றும் 10ஆம் கட்டத்தையும் வெற்றிகரமாக நிறைவு செய்து, இந்தியாவின் அறிவியல் வலிமையை உலகிற்கு உணர்த்தும் நாளாக இந்த நாள் அமையட்டும். சந்திரயான் 3 திட்டத்தில் பங்காற்றிய அறிவியலாளர்கள் உள்ளிட்ட இஸ்ரோ குழுவினர் அனைவருக்கும் நமது வாழ்த்துகளும் பாராட்டுக்களும்.

நீலகண்ட பிரம்மச்சாரி – 9

நீலகண்ட பிரம்மச்சாரி – 9

காட்சி 9 காலம் : 1911 ஜனவரி மாதத்தில் ஒருநாள்இடம் : ஈசுவரன் தர்மராஜா வீதி, பாண்டிச்சேரிநேரம் : காலை 8 மணிபாத்திரங்கள் : வாஞ்சிநாதன், வ.ரா., வ.வே.சு.ஐயர் வாஞ்சிநாதன் : (வீதி முனையில் நின்றுகொண்டு எதிரே வரும் நபரிடம்) ஐயா, இங்கே பாரதியார் வீடு எங்கே இருக்கிறது..? எதிரே வந்த நபர் : இதே தெருவில் கடைசி வீடுதான்.. நீர் யார்? பாரதியாருக்கு என்ன உறவு..? வாஞ்சிநாதன் : ஐயா, நான் பாரதியாரைப் பார்க்க வரவில்லை. அவர் வீட்டில் தங்கியிருக்கும் என் நண்பர் ஒருவரைப் பார்க்க வேண்டும். எதிரே வந்த நபர் : பாரதியின் வீட்டிலா..? நானும் அங்குதான் இருக்கிறேன். அங்கு வேறு யாரும் இல்லையே.. (வந்தவரை ஏற இறங்கப் பார்க்கிறார்) வாஞ்சிநாதன் : ஐயா, ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்..? எதிரே வந்த நபர் : இல்லை.. பாரதி வீட்டைத் தேடி வருகிற பாதிப் பேர் மாறுவேடத்தில் வரும் போலீஸ்காரர்கள். மீதிப் பேர் போலீசுக்கு உளவு சொல்கிறவர்கள். அதனால்தான் பார்த்தேன். உம்மைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. நீர் யாரைத் தேடிவந்திருக்கிறீர்..? வாஞ்சிநாதன் : ஐயா. என்பெயர் வாஞ்சிநாதன்.. எனக்கு ஊர் செங்கோட்டை. நான் பிரம்மச்சாரியைத் தேடி வந்திருக்கிறேன். எதிரே வந்த நபர் : யாரை..? பிரம்மச்சாரியையா..? (பலமாகச் சிரிக்கிறார்) பிரம்மச்சாரிதான் பெண்ணைத் தேடுவார். நீர் எந்த பிரம்மச்சாரியைத் தேடுகிறீர்..? (மீண்டும் சிரிக்கிறார்) இங்கே நிறைய பிரம்மச்சாரிகள் உண்டு. கல்யாணம் பண்ணிய, பண்ணாத பிரம்மச்சாரிகள்.. நானும் பிரம்மச்சாரிதான். வாஞ்சிநாதன் : ஐயா, நான் நீலகண்டரைத் தேடி வந்தேன். நீலகண்ட பிரம்மச்சாரி. எதிரே வந்த நபர் : ஓ..! அவரா..? அட்டைக் கரி பாய்ந்த தேகத்தில் இருப்பாரே.. புரட்சிக்காரர் என்று பாரதி சொல்லுவார். பாரதியைவிட என்ன புரட்சி செய்துவிட்டார் என்று தெரியவில்லை. அவர் பாரதியைவிட அரவிந்தரிடத்தும் வ.வே.சு.அய்யரிடமும்தான் அந்தரங்கம் பேசுவார். இப்போ வ.வே.சு. அய்யரிடம் கேட்கலாம் வாரும். வாஞ்சிநாதன் : ஐயா, உங்களைத் தெரிந்து கொள்ளவில்லையே.. நீங்கள்..? எதிரே வந்த நபர் : அதனால் ஓன்றும் ஆகிவிடாது. என்னைத் தெரிந்துகொள்ளாததால் பாண்டிச்சேரியில் புயல் ஒன்றும் வந்துவிடாது. நான் இந்தப் பாண்டிச்சேரியில் அவ்வளவு முக்கியமானவன் அல்ல. என்பெயர் ராமசாமி. வ.ரா. என்று சுருக்கி அழைப்பார்கள். (இருவரும் பேசிக்கொண்டே சென்று ஒரு இல்லத்தின் முன்பு நிற்கிறார்கள்) வ.ரா. : இதுதான் வ.வே.சு. அய்யருடைய வாசஸ்தலம்.. ஐயரே.. ஐயரே.. வ.வே.சு. ஐயர் : வாரும் ஓய் வ.ரா.. என்ன இந்தக் காலை வேளையில்..? வ.ரா. : எனக்கு ஒன்றுமில்லை.. இந்தப் பையன்தான் நீலகண்டரைத் தேடி வந்திருக்கிறார். நீலகண்டர் உம்மோடு இருப்பார் என்று அழைத்து வந்தேன். வ.வே.சு. ஐயர் : நீலகண்டர் இரண்டு நாளைக்கு முன்னால் இங்கு இருந்தார். ஏதோ அவசரம் என்று சொல்லிவிட்டுப் போனார். அதற்கப்புறம் காணவில்லை ஓய்.. அந்த ஆளைத் தேடி இவரு வந்தாராமா..? என்ன விஷயம்..? வ.ரா : உள்ளே அழைத்துப்போய் விசாரியுங்கள் ஐயரே.. நான் கிளம்புகிறேன்.. பாரதியார் தேடுவார்.வ.வே.சு. ஐயர் : சரி ஓய்.. பாரதியாரை வரச்சொல்லும். (ஒளி மங்கி இருளாகிறது. ஒளி பரவும்போது மேடை ஒரு வீட்டின் அறையாக இருக்கிறது) வ.வே.சு. ஐயர் : உன் பேரு என்ன தம்பி? நீலகண்டருக்கும் உமக்கும் எப்படிப் பழக்கம்..? வாஞ்சிநாதன் : என் பேரு வாஞ்சிநாதன். தேசபக்த வேலையிலதான் நீலகண்டருடன் பழக்கம். அவரைப் பார்த்து முக்கிய விஷயம் பேசணும். வ.வே.சு. ஐயர் : அவரு வெளியூர் போயிட்டாரு. எங்கப் போனாரு, எப்ப வருவாருன்னு தெரியாது தம்பி. வாஞ்சிநாதன் : சரி ஐயா.. அப்ப நான் ஊருக்குப் போக வேண்டியதுதான். வ.வே.சு.ஐயர் : தம்பி.. என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா உமக்கு உதவலாம். வாஞ்சிநாதன் : மன்னிக்கணும் ஐயா, அதைச் சொல்ல முடியாது. வ.வே.சு.ஐயர் : ஓ..! ரகசிய இயக்கமா..? நானும் உங்க இயக்கத்தோட பழக்கம்தான். நீலகண்ட பிரம்மச்சாரியோட எல்லா ரகசியமும் எனக்கும் தெரியும். அதனால தைரியமா உன்னோட பிரச்சினையைச் சொல்லலாம். வாஞ்சிநாதன் : (அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு) பிரம்மச்சாரி உங்களைப் பற்றியும் சொல்லி இருக்கிறார். ஆனா.. வ.வே.சு.ஐயர் : (வாஞ்சியின் தோளில் கை போட்டவாறே) பயம் வேண்டாம். இந்தப் பாண்டிச்சேரில நாங்க போலீஸ் பரிவாரத்தோடத்தான் இருக்கோம். பயந்தா எப்படி..? பயப்படாமச் சொல்லும். வாஞ்சிநாதன் : சரி ஐயா.. இப்போ திருநவேலி ஜில்லாவுல பரங்கியர் அதிகாரம் சகிக்கலே. கலெக்டர் ஆஷ் தேசபக்தர்களைத் தொடர்ந்து வேட்டையாடுறார். எத்தனை நாள் அவரைச் சகிச்சுக்கிட்டுப் போறது..? வ.வே.சு.ஐயர் : அதெல்லாம் சரி.. நீலகண்டரைப் பார்க்க இவ்வளவு தூரம் வர்றதுக்கு என்ன அவசரம் வந்தது? வாஞ்சிநாதன் : வெள்ளைக்காரங்களைக் கொன்னு சுயராஜ்யம் சமைப்போம்ன்னு நீலகண்டர் சொல்லிக்கிட்டே இருக்காரு. ஆனா ஒன்னும் நடந்த பாடில்லை. ஆயுதங்கள் வரணும். சந்தர்ப்பம் வரணுமுன்னு சொல்றாரே தவிர, ஒன்னும் ஆரம்பிச்ச பாடில்லை.(கொஞ்சம் தயங்கியவாறு)இப்போ ரெண்டு மாசமா ஆளையும் காணலை. சூர்யோதயம் பத்திரிகையும் வரலை. அதுக்குக் கணக்கும் சொல்லலை. அதுதான் அவரை நேரில் பார்த்து ரெண்டுல ஒன்னு கேட்டுறலாமுன்னு நம்ம ஆளுங்க அனுப்பிச்சு இந்த ஊருக்கு வந்தேன். வ.வே.சு.ஐயர் : தம்பி, நீலகண்டரின் காரியங்கள் எப்படி இருந்தாலும், பண விஷயத்தில் அவர் ரொம்பக் கறார். நீங்க கொடுத்த பணத்திற்குச் சரியாகக் கணக்கு வைத்திருப்பார். பட்டினி கிடந்தாலும் பொதுப் பணத்தில் கை வைக்கவே மாட்டார். அந்த விஷயத்தில் உமக்குக் கிஞ்சித்தும் சந்தேகம் வேண்டியதில்லை. வாஞ்சிநாதன் : சரி ஐயா.. அப்ப நான் கிளம்ப வேண்டியதுதான். நீலகண்டர் வந்த உடனே, நான் வந்து போனதைச் சொல்லிவிடுங்கள். வ.வே.சு.ஐயர் : சரி.. அப்போ உடனே கிளம்பணுமா..? ரெண்டு மூனு நாள் இருந்து நீலகண்டர் வந்துட்டா பார்த்துட்டே போயிறலாமே.. வாரும்.. பின்னால கிணற்றடியிலே ஸ்நானம் பண்ணிட்டு சாப்பிட வாரும்.. மத்தத அப்புறம் பேசலாம்..’ (மேடையில் இருள் பரவி திரும்ப ஒளி வரும்போது ஓம்காரின் அறையில் காட்சி தொடர்கிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, இது என்ன..? நீலகண்டரிடம் அவர் ஆட்களுக்குச் சந்தேகம் வந்துவிட்டதுபோல..? ஓம்கார் சுவாமிகள் : இந்த ரகசிய இயக்கங்களின் பெரிய பலவீனம் என்னவென்றால், சிறிது தொடர்பு விட்டுப்போனாலும் சந்தேகம் கிளை விட்டுவிடும். பண விவகாரம் இருந்தால் இன்னும் ஆபத்து. ரெண்டு மாச காலமா நானும் போகவில்லை. சூரியோதயமும் அனுப்ப முடியவில்லை. பத்திரிகையை நடத்த மிகச் சிரமமாக இருந்தது. அச்சடிச்ச பிரதிகளையும் அனுப்ப முடியவில்லை. போலீஸ் கெடுபிடி அப்படி இருந்தது. இன்னொரு விஷயம், சந்தாப் பணம் வேறு வேலையில் செலவு ஆகிவிட்டது. இயக்க வேலைதான். இருந்தாலும் அதை நான் திருநெல்வேலி சென்றால் அல்லவா சொல்ல முடியும்..? சங்கர கிருஷ்ணன் : அப்புறம் என்னாச்சு..? ஓம்கார் சுவாமிகள் : அப்புறம் என்ன.. வ.வே.சு.ஐயர் வாஞ்சிநாதனை மடை மாற்றினார். ஆசிரமப் பணிகள் முடிந்தபிறகு, பாண்டிச்சேரியில் நடந்த மீதிக் கதையைச் சொல்கிறேன். (திரை விழுகிறது) நாளை பார்க்கலாம். (நாளை பார்க்கலாம்)

அங்கேயே..

அங்கேயே..

கவிதை இரங்கற்பா எழுதிக்கொண்டிருக்கிறேன்விரைவில் வந்துவிடும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் மலர் மாலைகள்தயார் செய்ய நேரமாகலாம்வேம்பு நிச்சயம் இருக்கும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஆயிரம் முதலைகள்உடனே ஒப்புக்கொண்டுள்ளனபோட்டியில் கலந்துகொள்ளஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் வண்ணக் கோலாட்டம்மிதமாகத் தோன்றலாம்பறை அடித்து விளையாடகுத்தாட்டம் வரும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தள்ளிப் போகுமோகவலை வேண்டவே வேண்டாம்முகச் சவரமும் உடன் செய்வார்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தண்ணீர்ப் பானைக்காகத்தேடி அலைய வேண்டாம்தோளை வலுவாக வைத்துஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் என்ன!வாய்க்கரிசிக்கும் வழியில்லையா? அடடா!சரி, அதையும் நாங்களே தருகிறோம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் முறையாகச் செய்ய வேண்டியகாரியங்கள் தெரியுமா?இல்லை, அதுவும் எங்கள் வேலையா?எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஐந்தாம் நாள், மாதக் கணக்காவதுமுடியுமோ என்னவோ.. பரவாயில்லைஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் கழுத்து நெரிபட்டுக்கிடந்தசனநாயகம் இறந்த நேரமாவதுசரியாகக் குறித்தீரா சோதிடரேபாவம் அந்தப் பச்சை மண்ணைஇனியாவது பிரித்துப் பார்க்காமல்வலியின்றி அடக்கம் செய்வோம் விரைந்து வருகிறது எல்லாம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள்

நீலகண்ட பிரம்மச்சாரி – 8

நீலகண்ட பிரம்மச்சாரி – 8

காட்சி 8 காலம் : 1910ஆம் வருடம் கோடைக்காலத்தில் ஒருநாள்இடம் : தென்காசியில் மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை வீடுபாத்திரங்கள் : நீலகண்டர், மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை, சங்கர கிருஷ்ணன், வாஞ்சிநாதன், இன்னும் சில இளைஞர்கள் (காளி படம் ஒன்றுக்கு மாலை போட்டு வைத்திருக்க, பொரியும் கடலையும் படைக்கப்பட்டிருக்கிறது.. சிறிய செம்பு ஒன்றில் தண்ணீரும் பக்கத்தில் செப்பு ஒன்றில் குங்குமமும் இருக்கிறது) நீலகண்டர் : என்ன சிதம்பரம் பிள்ளை.. எல்லாரும் வந்தாச்சா..? மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : ஓட்டப் பிடாரம் மாடசாமியும் தூத்துக்குடி ஆறுமுகம் பிள்ளையும் வரணும். இப்போ ரயில் வர நேரம்தான். தென்காசி ரயிலடி பக்கம்தான..(அப்போது ரயில் ஊதல் கேட்கிறது) நீலகண்டர் : சரி அவர்களும் வந்துரட்டும்.. (வாஞ்சிநாதனைக் காட்டி) இது யாரு? புதுசா இருக்காரே.. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை : இவரைப் புனலூர் சங்கர கிருஷ்ணய்யர் அழைச்சுட்டு வந்திருக்கார்.. (நீலகண்டர் சங்கர கிருஷ்ணய்யரைப் பார்க்கிறார்) புனலூர் சங்கர கிருஷ்ணன் : இவர் வாஞ்சி ஐயர்.. ஊர் செங்கோட்டை.. நம்ம வேலை பற்றிச் சொல்லியிருக்கேன். (கதவு தட்டும் சத்தம் கேட்க, சிதம்பரம் பிள்ளை கதவைத் திறக்க இரண்டு நபர்கள் உள்ளே வரவும் கதவை மறுபடியும் சாத்துகிறார் சிதம்பரம் பிள்ளை) நீலகண்டர் : வாங்கோ ஆறுமுகம் பிள்ளை, வாரும் மாடசாமி.. சிதம்பரம் பிள்ளைவாள் சேதி ஏதாச்சும் தெரியுமா..?(வ.உ.சி.யின் பெயரைக் கேட்டதுமே எல்லாரும் கண் கலங்குகிறார்கள்)மாடசாமி : (குரல் தழுதழுக்க) கோயம்புத்தூர்ல போட்டுருக்கான்.. பாவம் எப்படி இருக்காரோ.. பரலிக்கோட்டை நெல்லையப்பர் போன வாரம் பார்க்கப் போனாரு.. அவரு வந்தாத்தான் ஐயா எப்படி இருக்காருன்னு தெரியும்..(சில கணங்கள் கனத்த மவுனமாகக் கழிகிறது) நீலகண்டர் : சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்..எல்லாரும் நம்ம வழக்கம்போல காளி முன்னால சங்கல்பம் செஞ்சுக்குவோம்.. சங்கர கிருஷ்ணன், இன்னைக்கு நீர் சங்கல்பம் செஞ்சு வையும். சங்கர கிருஷ்ணன் : மகா காளி, உன் பெயரால் உறுதிகொள்கிறோம். எங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தேச சேவைக்கு அர்ப்பணம் செய்கிறோம். பாரத மாதா சங்கத்தின் வேலைகளையும் திட்டங்களையும் இரகசியமாக வைத்துக்கொள்வோம். எங்களில் இரகசியத்தை வெளியிடுவோன் யாராயினும் அவன் நரகத்திற்கே போவான். இரகசியத்தை வெளியிடுவோன் சுட்டுக் கொல்லப்படுவான். திட்டமிட்ட ஒருநாளில் தேசம் முழுவதிலும் உள்ள வெள்ளையர்களைக் கொல்லும் பணிக்கு, எப்போதும் ஆயத்தமாயிருந்து காத்திருப்போம். கட்டளை வந்தவுடன் அர்ச்சுனன் போலக் காரியம் ஆற்றுவோம்.. இது சத்தியம். மற்றவர்கள் : ஆம்.. இது சத்தியம். (நீலகண்டர் காளியின் படத்தின் முன்பு இருந்த செம்புத் தண்ணீரில் குங்குமத்தை எடுத்துக் கலக்குகிறார்) நீலகண்டர் : சகோதரர்களே, ஆங்கிலேயர்கள் பாம்புகள். கண்ட இடத்தில் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள். நாம் தனித்தனியாகச் செய்வோமென்றால் சூரனைப்போல முளைத்துக்கொண்டு வருவார்கள். நமது பாரத மாதா சங்கம் கல்கத்தாவிலிருந்து சொல்லும் ஒருநாளில் நாம் ஒன்றாய்த் திரண்டு யுத்தம் செய்து வெள்ளைப் பூண்டுகளைக் கொல்வோம்.நான் தமிழ்நாடெங்கிலும் சுற்றிவந்து ஆட்களைத் தயார்செய்து வந்திருக்கிறேன்.திருநெல்வேலி ஜில்லாவில் 3000 மறவர்களையும் 20000 கம்பளத்து நாயக்கர்களையும் நமது திட்டத்திற்குத் தருவதாக மறவர் தலைவர்களும் நாயக்கர் தலைவர்களும் சம்மதித்திருக்கின்றனர். ஜெர்மனியிலிருந்து நமக்கு ஆயுதங்கள் வருவதற்கு ஏற்பாடு ஆகியிருக்கிறது. எல்லாம் கூடிவரும்போது நாம் நமது மாதாவின் சேவையைப் பூர்த்தி செய்வோம்.சகோதரர்களே, பாரத மாதாவின் பெயரால் ஆணை.. இந்தக் குங்குமத் தீர்த்தத்தைப் பரங்கியரின் இரத்தமாக எண்ணிப் பருகுவோம். இது நமது கடமையின் சின்னமாக இருக்கட்டும். வாழ்க அன்னை.. வந்தே மாதரம்..! (நீரைத் தீர்த்தம்போல அனைவருக்கும் கொடுத்துவிட்டு, கடைசியில் தானும் அருந்துகிறார்) நீலகண்டர் : சகோதரர்களே, இனி நாம் நமது சொந்தப் பெயர்களில் இயங்கக்கூடாது. புனைப்பெயரை வைத்துக்கொள்ள வேண்டும்.. இன்றிலிருந்து எனது பெயர் பிரம்மச்சாரி. மடத்துக்கடை சிதம்பரம் பிள்ளை இனிமேல் கோவிந்தன். வாஞ்சி அய்யர் இன்று முதல் ஹரி.. (தொடர்ந்து பெயர் சூட்டும் படலம் நடந்து முடிகிறது) நீலகண்டர் : சகோதரர்களே, நமது இயக்கத்தின் செய்திகளை நாம் தெரிந்துகொள்வதற்கு ஏதுவாக, பாண்டிச்சேரியிலிருந்து நாம் வெளியிடும் ‘சூரியோதயம்‘ என்ற பத்திரிகைக்கு சந்தா சேகரிக்க உங்களையெல்லாம் கேட்டிருந்தேன். நீங்களும் சேகரித்துக் கொடுத்தீர்கள். இப்போது நூறு பிரதிகள் கொண்டு வந்திருக்கிறேன். சந்தா தந்தவர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். மீதியைக் கொடுத்து இன்னும் நிறைய சந்தாதாரர்களைச் சேர்க்க வேண்டும். நம் செய்திகள் பரவலாகத் தமிழ்நாடெங்கும் சென்று சேர வேண்டும். நான் பாண்டிச்சேரிக்குச் செல்கிறேன். திரும்ப வர சிலகாலம் ஆகலாம். எல்லாம் கூடிவரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்போம். வந்தே மாதரம்..! அனைவரும் : வந்தே மாதரம்..! (மேடையில் மெதுவாக இருள் பரவுகிறது. மீண்டும் ஒளி பரவ, ஆசிரம அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் இருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, இவ்வளவு ரகசியங்களும் எப்படி வெளியாகின..? ஓம்கார் சுவாமிகள் : அந்த வாஞ்சி அய்யர், ‘நான்தான் கொன்னேன் பாத்துக்கோ’ என்கிற மாதிரி, தன் பெயரையும் ஊரையும் எழுதிச் சட்டைப்பையில் வைத்துக்கொண்டு அல்லவா தன்னைச் சுட்டுக்கொண்டார்..?! அந்தக் கடுதாசியிலிருந்துதான் நூல் பிடித்தார்கள்..! சங்கர கிருஷ்ணன் : அந்த வீரச் சாவை நாங்களெல்லாம் எப்படிப் போற்றிக்கொண்டிருக்கிறோம்..! நீங்கள் அதை ஏதோ முட்டாள்தனம் போலக் குறிப்பிடுகிறீர்களே சுவாமி?! ஓம்கார் சுவாமிகள் : அவசரக்குடுக்கைத்தனம் என்றும் சொல்ல வேண்டும்.. பாண்டிச்சேரியில் வ.வே.சு.அய்யர் செய்து முடித்த சூழ்ச்சியின் விளைவு அது. சங்கர கிருஷ்ணன் : பாண்டிச்சேரியில் என்னதான் நடந்தது சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : நான் இல்லாதபோது நடந்த விஷயங்கள் அவை. என்னைத் தேடிப் பாண்டிச்சேரிக்கு வாஞ்சிநாதன் வந்திருந்தார். நான் அப்போது அங்கே இல்லை. மீண்டும் நான் வந்தபிறகு தெரிந்துகொண்டதைத்தான் சொல்ல வேண்டும். சொல்கிறேன்.. (திரை விழுகிறது)

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

பொதுவுடைமை காணப் பொழுதெல்லாம் உழைத்த தியாகச்செம்மல் ஜீவா

தோழர் ஜீவானந்தம் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை சமூக, பொருளாதார மற்றும் அரசியல் களங்களில், உழைக்கும் மற்றும் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை நோக்கிச் செல்வதையே இலக்காகக் கொண்ட, காலத்தால் உருவாக்கப்பட்டவர்தான் தோழர் ஜீவா என்று அன்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தோழர் ஜீவானந்தம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907 ஆகஸ்ட் 21ஆம் தேதி பிறந்தார் ஜீவா. ஜீவாவின் பெற்றோர் பட்டம் பிள்ளையும் உமையம்மையும் அன்றைய ஆதிக்க ஜாதியைச் சார்ந்தவர்கள். பொருளாதார வசதியில் குறைந்திருந்தாலும் பட்டம் பிள்ளையின் பொதுப்பணித்துறைக் காவலர் பணி அவரை அரசு விசுவாசியாக வாழ நிர்ப்பந்தித்திருந்தது. தென்பாண்டிச் சீமையில் நிரம்பி வந்த வழக்கத்தின்படி நான்காவதாகப் பிறந்த இந்தக் குழந்தைக்கு மூக்காண்டி என்ற பெயரைச் சூட்டினர். இது அங்கு நிலவி வந்த ஒரு பழக்கம். குலதெய்வமான சொரிமுத்தையன் பெயரைச் சூட்டும் வகையில் சொரிமுத்து என்ற பெயரையும் ஜீவாவிற்கு இட்டனர். பங்கிம் சட்டர்ஜியின் நாவலான ஆனந்த மடத்தில் வரும் ஜீவானந்தர் என்ற பெயரின் தாக்கத்தாலும் விவேகானந்தரின் மீது கொண்ட ஈடுபாட்டாலும் சிராவயல் காந்தி ஆசிரமத்தை அமைத்து நடத்தத் தொடங்கியபோதுதான் தன் பெயரை மாற்றிக்கொண்டார். ஐந்தாவது படிவத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதே 80 வெண்பாக்களை இயற்றியவர். இளமைப் பருவத்திலேயே மகாத்மா காந்தி வாசகசாலை அமைத்தார்; நாடகக் குழுக்களை உருவாக்கினார்; கிராமங்களில் மாணவர் அமைப்புகளை உருவாக்கி, கிராமச் சேவைகளில் நிவாரப் பணிகளில் ஈடுபட்டார். ஐந்தாம் படிவம் படித்துக்கொண்டிருந்தபோது சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாவலையும் ஞான பாஸ்கரன் என்ற நாடகத்தையும் எழுதினார். ஞான பாஸ்கரன் நாடகத்தை அவரே தயாரித்து அரங்கேற்றி, அதில் நடிக்கவும் செய்தார். எட்டாம் வகுப்பு முடித்து ஒன்பதாம் வகுப்பிற்குக் கோட்டாறு அரசுப் பள்ளியில் சேருகிறபோது வட கேரளத்தில் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகத்தில் பங்கெடுத்தார். கவிஞர் ஜீவா ஒருபக்கம் தேச விடுதலை, மறுபக்கம் சுயமரியாதை, மூன்றாவது பக்கம் தொழிலாளி வர்க்க விடுதலை என்று முப்பரிமாணம் கொண்ட ஜீவா, சின்னஞ்சிறு வயதிலேயே தேச விடுதலைப் பாடல்களை எழுதியவர் காரைக்குடி வட்டார வாழ்வில் ஒரு பெண்விடுதலைக் கவிஞராகவும் தலித் விடுதலைக் கவிஞராகவும் புகழ்பெற்றவர். மார்க்சியத்தோடும் தொழிலாளி வர்க்கத்தோடும் கொண்ட தொடர்பால் அவரது பாடல்களில் சோசலிசம், ஜனநாயகம், தொழிலாளர் விடுதலை ஆகியவை பாடுபொருளாக அமைந்தன. சிறந்த ஜெர்மனி ஆசிரியரான ரெணி புலாப் மில்லர் எழுதிய போல்ஸ்விசம் அகமும் முகமும் என்ற நூலை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்து, அந்தப் பாடலைத் தழுவி 1934இல் கோடி கால் பூதமடா என்ற பாடலை எழுதினார். ஏங்காதெழுந்திருடா என்ற தலைப்பில் அவர் எழுதிய வீரச் சுவை மிக்க பாட்டு, பொதுமையாகக் கடமையை வற்புறுத்தும் பாட்டாகும். செயலில் குதிக்கக் கொதிப்பேறி ஓடும் குருதியில் தெம்பு பாய்ச்சும் பாட்டாக அது இன்றும் விளங்குகிறது. 1938இல் பாசிசம் என்ற தலைப்பில், பாசிச எதிர்ப்பை முன்வைத்து,   பாசிசமே பாசிசமேபாதக ஏகாதிபத்தியத் தீதின் அகோரத்தன்மைநீசத்தனத்தின் எல்லை நிட்டூர ரூபம்நெறியில் சர்வாதிகார வெறி மகாபாபம் என்ற பாடலை எழுதினார். பட்டிமன்றப் பேச்சாளர் ஜீவா கம்பன் விழாவின் ஒருபகுதியாக நடந்த பட்டிமன்றத்தில், கூற்றினும் கொடியவள் கூனியா? சூர்ப்பநகையா? கைகேயியா? என்ற தலைப்பில் ம.பொ.சி, எஸ்.ராமகிருஷ்ணன், தோழர் ஜீவா ஆகியோர் பேசினர். கைகேயியே என்ற தலைப்பில் ஜீவா பேச எழுந்து, 20 நிமிடங்கள் முன்னுரையாகப் பேசினார். பின்பு, ‘கைகேயி தசரதனிடம் இரண்டு வரங்கள் கேட்கிறாள். ஒன்று, ராமன் காட்டுக்குப் போக வேண்டும்; இரண்டு, பரதன் நாட்டை ஆள வேண்டும். இவற்றைக் கேட்டதும் தசரதன் மயங்கி விழுந்துவிடுகிறான். இதைக் கண்ட கைகேயி, ராமனுக்கு ஆள் அனுப்புகிறாள். ராமன் வருகிறான். தசரதன் மயங்கிக் கிடக்கிற அந்த நிலையிலேயே ராமனிடம் கைகேயி, ‘நீ காட்டுக்குப் போக வேண்டும்; பரதன் நாட்டை ஆள வேண்டும். இது மன்னனின் கட்டளை’ என்கிறாள். ராமன் உடனே காட்டுக்குப் புறப்படுகிறான். மயக்கம் தெளிந்து தசரதன், ‘ராமன் எங்கே?’ என்று கேட்க, கைகேயியோ அவன் காட்டுக்குப் போய்விட்டான் என்கிறாள். அதைக் கேட்டதும் வருத்தம் தாளாமல் தசரதன் செத்து விடுகிறான். கணவன் இறந்ததைப் பார்த்த கைகேயி தூங்கப் போகிறாள். ராமன் காட்டுக்குப் போயாச்சு; தன்மகன் நாடாள வந்து விடுவான்; தன் கணவனும் இறந்தாச்சு என்று நிம்மதியில் தூங்குகிறாள் என்று கூறிவிட்டு, ஜீவா கூட்டத்தைப் பார்த்து, கூற்றினும் கொடியவள் யார்?  நீங்களே தீர்ப்பு சொல்லுங்கள்’ என்று கூற, கூட்டமே கொந்தளித்து ஆரவாரித்தது. 22ஆவது கம்பன் விழாவின் இறுதி நாளில், இதுவரை வழக்கில் இல்லாத வகையில் தனது பேச்சால் கம்பன் அடிபொடி ச. கணேசனின் மனத்தைப் பூரிப்படையச் செய்கிறார். ச.கணேசன் தனது நன்றியுரையில், இதுவரை கம்பன் விழா நடத்திய பயன் முழுவதையும் இன்றுதான் பெற்றேன் என்று கூறி முடிக்கிறார். இவ்வாறுதான், ஜீவா என்ற மார்க்சியவாதி கம்பனைப் பார்த்தார். பாரதியைப்பற்றி சரியான முறையில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் ஜீவாதான். ஒருமுறை பாரதியைப்பற்றிப் பேசிவிட்டு இறங்கியபோது, பாரதியின் மகள் சகுந்தலா பாரதி ஓடிவந்து, அவர் கைகளைப் பிடித்துக்கொண்டு நா தழுதழுக்க, ‘என் தந்தையின் பெருமையை இன்றுதான் நிஜமாக உணர்கிறேன்’ என்றாராம். அதேபோன்று, தாகூர் விழாவில் அவர் பேசி முடித்ததும், தாகூரின் பேத்தி ஓடிவந்து ஜீவாவைப் பாராட்டி, ‘என் தாத்தாவின் கவிதைகள் எவ்வளவு ஆழமானவை என்பதை இன்றுதான் உணர்ந்தேன்’ என்றாராம். இவையெல்லாம் ஜீவா ஒரு மாபெரும் கொள்கையாளர்; எதார்த்த இலக்கிய நெறியைத் தமிழ் மக்களுக்கு முறையாக அறிமுகப்படுத்தியவர் என்பதைக் காட்டுகின்றன. போராளி ஜீவா மேடையில் ஓர் வேங்கை பாயுமேகைகளை விண்ணோக்கி வீசி வருமேவீறு கொண்டு ஓர் யானை போரில் கிளம்புமேவெஞ்சேனை முறுக்கேறுமேகோடையின் இடி கொண்டு கொட்டுமேவார்த்தையில் கொஞ்சு தமிழ் விளையாடுமே என்ற வரிகளுக்கேற்ப வாழ்க்கையோடு மல்லுக்கட்டிய தோழர் ப. ஜீவானந்தம், நாடக உலக தேசபக்தரான விஸ்வநாததாஸ் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவருக்கு சுகுணராஜன் அல்லது சுதந்திர வீரன் என்ற நாடகத்தை எழுதித் தந்தவர். ஜீவா பத்தாம் வகுப்பு படிக்கும்போது காந்திஜியைப் பற்றியும் கை ராட்டினத்தைப் பற்றியும் எழுதியபாடல், அந்த நாடகத்தில் முதல் பாடலாக இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலை, காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கம் ஆகியன ஜீவாவை தேசிய இயக்கத்தின்பால் ஈர்த்தன. கதர் ஆடை அணியும் வழக்கத்தை அவர் கடைசிவரை கைவிடவில்லை. அவருடைய அன்னை இறந்தபோதுகூட கதர் ஆடை கிடைக்காததால் கொள்ளி வைக்கவே மறுத்துவிட்டார். திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்திய பரத்வாஜர் ஆசிரமத்தில் ஏற்பட்ட சாதியப் பாகுபாடு, ஜீவாவைப் பொதுவுடைமையை நோக்கி நகரச் செய்தது என்பதில் இருவேறு கருத்து கிடையாது. சிராவயல் ஆசிரமத்தில் வர்ணாசிரம தர்மம் பற்றிக் காந்தியிடம் விவாதித்தார். காந்திஜியின் வர்ணாசிரமக் கருத்துக்கள் முற்போக்கானவை அல்ல என்பதை உணர்ந்தார். உலகில் உள்ள துன்பங்கள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகக் கொடுமைகள் எல்லாம் முடிய வேண்டுமானால், சமூகச் சீர்திருத்தம் மட்டும் போதாது;  சமூகப் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும்; அதைச் சமதர்ம அஸ்திவாரத்தில் கட்ட வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். காந்தியத்திலிருந்து விலகி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்து, வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை ஒழிப்பு இயக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டு, தீண்டாமைக்கு எதிராகப் போராடினார். பகத்சிங்கின் ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காக, அவரைச் சங்கிலியில் கட்டி அடித்து இழுத்து வந்தனர் அன்றைய ஆங்கிலேயக் காவலர்கள். வர்ண பேதங்களுக்கு எதிராக மட்டுமல்லாது வர்க்க பேதங்களுக்கு எதிராகவும் போராடவேண்டும் என்று பெரியாரிடம் வாதிட்டார். 08.01.1932இல் கோட்டையூரில் தடை உத்தரவை மீறிப் பேசிக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டுச் சிறை புகுந்தார். சிறை வாழ்க்கையின்போது பகத்சிங்கின் தோழர்களான பூதேஸ்வர் தத், குந்தர் லால், வங்கப் புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி போன்றோரைச் சந்தித்ததன் மூலம், 1932இல் ஒரு காங்கிரஸ்காரராகச் சிறை புகுந்து, அதே ஆண்டு நவம்பரில் ஒரு கம்யூனிஸ்டாக சிறையிலிருந்து வெளிவந்தார் ஜீவா. பின்னர் சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் சென்னை மாகாணச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. அதன்பிறகு 1936இல் தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் ஜீவா உறுப்பினராக இருந்தார். தமிழ்ப் பற்றாளர் ஜீவா மறைமலை அடிகளுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக, தனித்தமிழ்ப் பற்றாளராக, ஜீவா என்ற தன் பெயரை உயிர் அன்பன் என்று மாற்றிக்கொண்ட அவர், மிகப்பெரும் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கொண்டவர். ஜீவாவின் நடவடிக்கைகளைத் தாங்கிக்கொள்ள முடியாத பிரிட்டிஷ் அரசு, வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டு, ஜீவா தமிழ்நாட்டில் நடமாடத் தடை விதித்தது. இந்திய விடுதலைக்குப் பின்னர், நேரு தலைமையிலான அரசு 1948 முதல் 1951 வரை கம்யூனிஸ்ட் கட்சியைத் தடை செய்த காலத்தில் சிறை சென்று திரும்பினார். 1952இல் அன்றைய வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, சட்டமன்றம் சென்றார். திமுக சட்டமன்றத்துக்குள் நுழையும் முன்பாகவே, தமிழ்நாடு என்று பெயர் சூட்டவேண்டுமென்று சட்டமன்றத்தில் பேசியவர் தோழர் ஜீவானந்தம். தமிழ்நாட்டில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருக்கவேண்டும். கல்வி, நீதிமன்றம், நிர்வாகம் என எல்லா இடங்களிலும் தமிழே இருக்க வேண்டும் என்று 1952 செப்டம்பர் 29இல் சட்டமன்றத்தில் முழங்கினார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்ந்த அவர், மேற்குத் தாம்பரத்தில் ஒரு சிறிய குடிசையிலேயே கடைசிவரை வாழ்ந்தார். இதைக் கேள்விப்பட்ட அன்றைய முதல்வர் காமராஜர், அவருக்குத் தனியே வீடு ஒதுக்க முன்வந்தபோதும் அதை ஏற்க மறுத்துவிட்ட மாமனிதர் அவர். 1963ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் நாள் உடல்நலக் குறைவால் அவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவரது இறுதிச் சடங்கில் பாவலர் வரதராஜன் கண்ணீர் மல்கப் பாடிய வரிகள் இவை. சிங்கமென முரசறைந்த குரலும் எங்கே?செந்தமிழை ஆய்ந்து சொன்ன உருவம் எங்கே?செங்கொடி ஈன்றெடுத்த ஜீவா எங்கே?இனி எங்கள் குறை ஈடு செய்ய யார்தான் இங்கே?

திருப்பூர் எனும் திருப்புமுனை -7

திருப்பூர் எனும் திருப்புமுனை -7

போட்டி உற்பத்தியாளர்கள் திருப்பூர் பின்னலாடைத் துறையின் தோற்றம் மற்றும் கடந்து வந்த பாதையில் நாம் இந்தப் பகுதியில் பார்க்க இருப்பது, போட்டி உற்பத்தியாளர்கள். அதற்கு முன்பாக, நம் நாட்டில் வேறு எங்கெல்லாம் பின்னலாடை உற்பத்தி நடைபெறுகிறது எனப் பார்ப்போம், சென்னை, கர்நாடகா, மகாராஷ்டிரா, லூதியானா, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் உள்நாடு மற்றும் வெளிநாட்டுத் தேவைகளுக்கான பின்னலாடைகள் உற்பத்தி நடைபெறுகிறது. ஆனால், திருப்பூர் மட்டுமே 55% அளவுக்கு நாட்டின் பின்னலாடை ஏற்றுமதியில் உற்பத்திக்கான பங்களிப்பைச் செய்கிறது. இந்தியா மட்டுமல்லாது, சீனா, பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, இந்தோனேஷியா, மியான்மார், சில ஆப்பிரிக்கா நாடுகள்,  பெரு, பிரேசில், துருக்கி, போர்ச்சுகல், ஜோர்டான் உள்ளிட்டவை இந்தியாவில் உற்பத்தியாகும் பின்னலாடை வகைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்கின்றனர். உலக ஜவுளித் தேவையில் சீனா 35% பங்களிப்பை வழங்குகிறது. பங்களாதேஷ் 8%, வியட்நாம் 7%, இந்தியா 3.8% பங்கினை அளிக்கின்றன. இந்தியாவிலிருந்து மிக அதிகமாக, பருத்தி சார்ந்த ஆடைகளே உற்பத்தி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகின் பஞ்சு உற்பத்தியில் சீனா முதலிடமும் இந்தியா இரண்டாம் இடமும் வகிக்கின்றன. 1960களின் இறுதிவரை, உள்நாட்டுப் போர், கலவரம், நிலையில்லாத் தன்மை போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்த சீனா, அமெரிக்க ஆக்கிரமிப்பினால் மிகுந்த இன்னலுக்கு உள்ளான வியட்நாம், இந்தியாவின் முயற்சியால் 1971இன் இறுதியில் தனி நாடு அந்தஸ்தைப் பெற்ற பங்களாதேஷ் ஆகிய நாடுகள் நாளது தேதியில், ஏறத்தாழ உலகின் ஜவுளிச் சந்தையின் சரி பாதியைத் தங்களிடம் வைத்துள்ளன. 1990களில் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து துணியை இறக்குமதி செய்து மட்டுமே ஆயத்த ஆடைத் தயாரிப்பை மேற்கொண்டிருந்த பங்களாதேஷ், இன்றைய தேதியில் பஞ்சை இறக்குமதி செய்து ஆடைகளைத் தயாரித்து அனுப்புமளவிற்குத் தனது கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது.   வியட்நாமைப் பொறுத்தவரை அதன் ஆடை உற்பத்தித் தேவைக்கான துணிகளை 8% மட்டுமே தனது நாட்டில் தயாரிக்கிறது. மீதமுள்ள 92% அளவிற்கான நூல் மற்றும் துணிகளை, சீனா, இத்தாலி, துருக்கி, பங்களாதேஷ், இந்தியா, தைவான், கொரியா போன்ற நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்தே ஆடை உற்பத்தியை மேற்கொள்கிறது. பல உள்நாட்டுக் குழப்பங்களால் அண்டை நாடான இந்தியாவுடன் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைபிடித்துவரும் பாகிஸ்தான், சிறுகச் சிறுகத் தனது ஆயத்த ஆடை உற்பத்திக் கட்டமைப்பை வலுப்படுத்தி, இன்று குறிப்பிடத்தக்க அளவு வளர்ந்துள்ளது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள், பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து அவர்களின் தொழில் கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதோடு, பங்களாதேஷ், வியட்நாம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து வரி இல்லாமல் தங்கள் நாடுகளில் இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியன் ஏற்படுத்தியுள்ளது. 1991ஆம் ஆண்டுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்த உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் கொள்கைகள் ஒருபுறம்; உலகளாவிய வர்த்தக வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுத்தாலும் பல்வேறு இன்னல்களை இந்தியாவிற்குக் கொடுத்துள்ளது என்பதை மறுக்கவியலாது. உதாரணத்திற்கு, இங்குள்ள ஏற்றுமதி உற்பத்தியை அதிகரிக்கத் தேவையான பல மானியங்களை மத்திய அரசு வழங்கி வந்த காரணத்தால், தொழில் நன்றாக வளர்ந்தது. உலகத் தேவைக்கு 3% அளவிற்கும் தனிநபர் வருவாய் 1000 அமெரிக்க டாலர் என்கிற அளவினை எட்டும் நாடுகள் தங்கள் நாட்டில் உள்ள உற்பத்தித் தொழிலுக்கு வழங்கி வரும் மானியங்களைப் படிப்படியாக குறைத்துவிட வேண்டும் என்கிற நிபந்தனையைப் பின்பற்றவில்லை என்று, ஐ.நா.வில் இந்தியாவை எதிர்த்துக் கொடுக்கப்பட்ட புகார்களை சட்ட ரீதியாக எதிர்கொண்டு முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் அவர்களின் தலைமையிலான அரசு, 8 ஆண்டுக் காலம், இயன்ற அளவு மானியங்களை வழங்கியே வந்தது. சீனாவைப் பொறுத்தமட்டில், அங்கு பருத்தி ஆடைகள் தவிர்த்து, செயற்கை நூலிழை எனச் சொல்லப்படும் பாலியஸ்டர், நைலான், ரேயான் உள்ளிட்ட ஆடைகள் பெருமளவு தயாரிக்கப்படுகின்றன. வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் நாடுகளிலும் இவ்வாறான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவைப் பொறுத்தமட்டில் பாலியஸ்டர் ஆடைகள் வடமாநிலங்கள், குறிப்பாக லூதியானா மற்றும் சூரத்தில் அதிகளவு தயாரிக்கப்படுகின்றன. அதுவும் உள்நாட்டு விற்பனைக்கே அதிகம் அனுப்பப்படுகிறது. இது தவிர, அக்ரிலிக், வூல் உள்ளிட்ட ஆடைகளும் சீனாவில் அதிகளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உற்பத்தித் திறனை எடுத்துக்கொண்டால், நாம் மற்ற நாடுகளைக் காட்டிலும் பின்தங்கியுள்ளோம். அதேபோல் ஒரு தொழிற்சாலையில் நிர்மாணிக்கப்பட்ட இயந்திரங்களுக்கு ஏற்ப ஆட்களின் பங்களிப்பு என்பது 1 இயந்திரத்திற்கு 1.15 என்கின்ற அளவிலே உள்ளது. இது பங்களாதேஷ் மற்றும் வியட்னாமிற்கும் பொருந்தும். அதேசமயம் இந்தியாவைப் பொறுத்தவரை, ஒரு இயந்திரத்திற்கு இரு ஆட்கள் என்கிற அளவு உள்ளது. உற்பத்தியைப் பொறுத்தவரை, சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் நிர்ணமாணிக்கப்பட்ட தொழிற்சாலைக் கொள்ளளவிற்கு 80% அளவு உற்பத்தியை மேற்கொள்கின்றன. இந்தியாவில் இது 40% அளவே உள்ளது. ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஒதுக்கீடு அதாவது கோட்டா முறையிலேயே ஏற்றுமதி செய்ய இயலும். இது அனைத்து உற்பத்தி நாடுகளுக்கும் பொருந்தும். அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பா ஒருங்கிணைந்ததல்ல. பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, நெதர்லாண்ட்ஸ், பெல்ஜியம், ஸ்பெயின் என, தனித்தனி நாடுகளாக, ஒவ்வொரு நாட்டிற்கும் தனி ஒதுக்கீடு என்கிற அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்பட்டது. ஒவ்வொரு வருடமும் உற்பத்தி நாட்டு அரசும் இறக்குமதி நாட்டு அரசும் இந்த ஒதுக்கீடுகளை உறுதி செய்வர். அதன் அடிப்படையில் உற்பத்தி நாடுகளின் அரசு, தனது துறைசார் அலுவலகத்தின் வாயிலாக இந்த ஒதுக்கீடுகளை, சீரிய காலகட்டத்தில் ஏல அடிப்படையில் வெளியிடும். அதிக மதிப்புக்கூடிய ஆடைகளை வைத்திருக்கும் நிறுவனங்கள் இந்த ஒதுக்கீடுகளைப் பெற்று ஏற்றுமதி செய்வர். 2004ஆம் ஆணடுக்குப் பிறகு இந்த முறை ஒழிக்கப்பட்டு, 2005 முதல் தாரளமாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திய நாடுகள் சீனா, பங்களாதேஷ் மற்றும் வியட்நாம் என்பதைத் தரவுகள் விளக்கும். திருப்பூரின் கட்டமைப்பு மட்டுமே பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான பல்வேறு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்த ஏதுவாக இருந்தது. இதுபோன்ற கட்டமைப்பை நாட்டின் பிற பகுதிகளில், அவ்வளவு ஏன், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில்கூட ஏற்படுத்த இயலாமல் போனது. இதை உள்ளபடியே பெரும் அவலமாகவே கருதவேண்டும். குறைந்தபட்சம் நாடு முழுவதும் 20 திருப்பூர் அமையப்பெற்றிருந்தால், வர்த்தக வாய்ப்புகளும் வேலைவாய்ப்புகளும் பொருளாதாரச் சூழலும் பறந்து விரிந்திருக்கும். பல மாநிலங்கள் இன்றளவும் முயன்றாலும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை என்பதும், இனி வரும் காலங்களில் பல்வேறு மாற்றுச் சிந்தனைகளுடன் அணுகினால், பல திருப்பூர்களை உருவாக்க இயலும் என்பதே நிதர்சனம். ஏற்றுமதிக்கான ஆடைகள் பெரும்பாலும் கப்பல் வழியாகவே இறக்குமதி நாடுகளுக்கு அனுப்பப்படும். காலக்கெடு  தவறியோ அல்லது இறக்குமதி நிறுவனத்திற்கு உடனடித் தேவை என்கிற நிலையிலோ விமானம் வாயிலாக அனுப்பப்படும். பெரும்பாலான விமானம் வாயிலான சரக்குப் போக்குவரத்து சென்னை, பெங்களூரு, கொச்சின், மும்பை, டெல்லி, ஹைதராபாத் ஆகிய நகரங்கள் வாயிலாகச் செல்லும். கப்பல் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் தூத்துக்குடி, சென்னை, கொச்சின், மும்பை மற்றும் குஜராத் மாநிலத்தின் முந்த்ரா துறைமுகங்கள் வாயிலாகச் செல்கின்றன. தூத்துக்குடியைப் பொறுத்தமட்டில் மதர் வெஸ்ஸல்ஸ் எனப்படும் பெரிய கப்பல்கள் வருவதற்கான வாய்ப்பில்லை. அதனால் இங்கிருந்து சிறு கப்பல் வாயிலாக இலங்கைத் துறைமுகம் சென்று, சீனாவிலிருந்து புறப்பட்டு வரும் மதர் வெஸ்ஸல் வாயிலாக அனுப்பப்படும். மும்பை, கொச்சி, முந்த்ரா துறைமுகங்களுக்கு மதர் வெஸ்ஸல்ஸ் வருகின்றன, இந்தியாவிலிருந்து கப்பல் வாயிலாக அனுப்பப்படும் சரக்குகள் ஐரோப்பியத் துறைமுகங்களை அடைய 20 முதல் அதிகபட்சம் 30 நாட்களும் அமெரிக்காவிற்கு 28 முதல் 55 நாட்களும் எடுத்துக்கொள்கின்றன. விமானம் வாயிலாகச் செல்வதற்கு 2 முதல் 5 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன.   ஒருவழியாக என்னால் இயன்ற அளவு, திருப்பூரின் பின்னலாடைத் தொழிலின் தோற்றம் மற்றும் அதன் கட்டமைப்பு, கடந்துவந்த பாதை குறித்து விவரித்துவிட்டேன். இனி நிகழ்கால நிலை, இடர்ப்பாடுகள், சவால்கள் மற்றும் எதிர்காலம் குறித்தான பார்வைகள் குறித்து அடுத்த பகுதியிலிருந்து பேசுகிறேன். தொடர்ந்து ஆர்வத்துடனும் உற்சாகத்துடன் வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் நன்றியும் அன்பும்.