பொன்னியின் செல்வன் – 14

பொன்னியின் செல்வன் – 14

மண்டபத்திலிருந்து அருள்மொழி வர்மன் குழுவினர் வெளியேறி நடந்தனர். வழியிலேயே பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் பெரிய வேளாரும் சைன்யத்துடன் வந்து கொண்டிருந்தனர். பூங்குழலியும் அவர்களுடன் வந்திருந்தாள். அனைவரும் சாலையோரமிருந்த மண்டபத்திற்குச் சென்று பேசலாமென முடிவெடுத்தனர். போகும் வழியில், பூங்குழலி உதவி கேட்டது வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வர இளவரசரிடம், “சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?” எனக் கேட்க, அவர் “சரிவர நினைவில்லை” என பதிலளித்தார். வந்தியத்தேவன் பூங்குழலியைத் திரும்பி பார்க்க, அவள் தன் வழக்கத்திற்கு மாறாக நாணத்துடன் கடைக்கண்களால் இளவரசரையே பார்த்துக்கொண்டு நிற்பதைக்கண்டு சிரித்துக் கொண்டான். திருக்கோவலூர் சிற்றரசரும் இளவரசரின் பாட்டனாருமான மலையமானும் ஆதித்த கரிகாலனும் இளவரசன் அருள்மொழி காஞ்சிக்கு வந்து பழுவேட்டரையரின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பார்த்திபன். இளவரசர் கொடும்பாளுர் வேளாளரிடம், குந்தவை பழையாறைக்கு அழைப்பதையும், முதன்மந்திரி அநிருத்தர்தான் இலங்கையிலேயே இருக்கச் சொல்லி இருப்பதையும் கூறி ஆலோசனை கேட்டார். அவரோ பூங்குழலி கொண்டு வந்திருக்கும் சேதியைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கும்படி கூறினார். சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு மரக்கலங்கள் நிறைய போர்வீரர்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி கூறினாள். அனைவரும் அதைக் கேட்டு கோபப்பட, இளவரசர் அருள்மொழிவர்மரோ தன்னுடைய தந்தையின் ஆணைக்கு கீழ்ப்பட்டு கலபதியிடம் தம்மை ஒப்புக்கொடுப்பதே முறை எனக் கூறினார். பூங்குழலியிடம் தன்னை அங்கே சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார். கொடும்பாளூர் வேளார், பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியையும் நந்தினி யார் என்பதையும் பார்த்திபேந்திரன் மூலம் அறிந்து கொண்டதை எடுத்துக் கூறி, போகவேண்டாமெனத் தடுத்தார். இளவரசர் அதையும் மறுத்துக் கிளம்ப, தானும் தொடர்ந்து வருவேன் என சைன்யத்துடன் கிளம்பினார். ஆனால், சைன்யத்துடன் கிளம்பிச் சென்றால் தாமதத்தை ஏற்படுத்தி, தன்னை பார்திபேந்திரனுடன் அனுப்பி விடலாம் என்ற சேநாதிபதியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார் அருள்மொழிவர்மர். யானையின் காதில் ஏதோ ஓதி அதை வெகுவேகமாக ஓடச்செய்தார். யானையின் மேல் இளவரசருடன் அமர்ந்திருந்த பூங்குழலி, நடப்பது கனவா நனவா எனத் திகைத்து மகிழ்ந்திருந்தாள். நடுவில் அருள்மொழிவர்மர் ஊமை ராணியைப் பற்றி விசாரிக்க, பூங்குழலி அவள் தன் குருவெனக் கூறினாள். ஊமைராணியே தன் பெரிய தாயார் என்றும், அவர் இறந்துவிட்டதாகத் தன் தகப்பனார் நினைத்துக்கொண்டு வருந்தியிருப்பதாகவும், ஒருவேளை தான் சொல்ல முடியாமல் போனால் பூங்குழலி அதைச் சொல்லவேண்டுமென்ற உறுதிமொழியை இளவரசர் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டார். படைக்கலங்கள் இறங்கியிருந்த துறையை அவர்கள் அடைந்தபோது ஒரு மரக்கலம் தரை தட்டிக் கிடந்ததை கண்டார்கள். என்ன நடந்ததென்றே தெரியாமல் குழப்பமாய் இருந்தது. பூங்குழலி உணவு அருந்தாமல் சோர்வுற்றிருந்தாள். அப்போது அந்தக் கலத்தருகே ஊமைராணி அவர்களுக்காக சமைத்து உணவிட்டாள். இருவரையும் உறங்கச் சொல்லிவிட்டு ஊமைராணி காவல் இருந்தார். உறக்கத்தில் பூங்குழலி ‘அலைகடல்தான் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்’ என்று முணுமுணுக்க, இளவரசர் அவள் மீது பரிவு கொண்டார். விடிந்தவுடன் ஒரு ஓடத்தில் சேநாதிபதியும் ஆழ்வார்க்கடியானும் வந்து சேர்ந்தனர். வரும் வழியில் ஒரு பெரிய மரக்கலம் செல்வதைக் கண்டு அதில் இளவரசர் சென்றிருக்கலாம் என்று கருதி நீரில் குதித்து நீந்தி அந்தக் கலம் நோக்கிச் சென்ற படகொன்றில் ஏறி வந்தியத்தேவன்  சென்றுவிட்டதாகக் கூற இளவரசர் பெரிதும் வருந்தினார். அப்போது ஊமைராணி குதிரையில் வந்து அவர்களை ஒரு இடத்திற்கு வருமாறு சைகை செய்தாள். அங்கு சென்றபோது, இளவரசரைக் கைது செய்ய வந்த மாலுமிகளும் வீரர்களும் இறந்து கிடந்ததைக் கண்டனர். அப்போது கலபதி மட்டும் குற்றுயிரோடு இருக்க, இளவரசர் அவரை மடியில் ஏந்தினார். இளவரசரைக் கைது செய்யும் விவரம், கூட வந்த வீரர்களுக்கு தெரிந்தவுடன் அதற்கு அவர்கள் உடன்பட மறுத்தனர் என்றும், அப்போது வந்த அரபுநாட்டு வீர்கள் தங்களைத் தாக்கிக் கொன்றுவிட்டு மரக் கலத்தையும்  ஓட்டிக்கொண்டு போய்விட்டதாகவும் வருந்திய கலபதி, ‘இளவரசரைக் கைது செய்ய வந்த துரோகத்தினாலேயே இவ்வாறு நிகழ்ந்தது, மன்னிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டு உயிர் விட்டார். பின் இளவரசர் அங்கிருந்த சோழ வீரர்களின் உடல்களை எல்லாம் தக்க மரியாதையுடன் தகனம் செய்தார். சேநாதிபதியிடம் மிகவும் வருந்திய இளவரசர், தன் பொருட்டு வந்தியத்தேவன் அரேபியக் கப்பல் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதால் அவனைக்  காப்பாற்ற என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது பூங்குழலியும் ஊமைராணியும் பூங்குழலியின் தமயனைக் கூட்டிக் கொண்டு வந்தனர். அவள் தமயன், அவர்கள் இளவரசரைக் கொல்ல வந்த பாவிகள் என்பது தெரியாமல் அவர்களை இலங்கைக்குக் கூட்டி வந்ததாகவும், இப்போது அரபுக்கப்பலில் அவர்களுடன் வந்தியத்தேவனையும் கூட்டிப் போய் விட்டதாகவும் மன்னிப்புக் கோரி நின்றான். அப்போது பார்த்திபேந்திரனின் கப்பலைக் கண்ட இளவரசர் சற்றும் தாமதியாமல் படகில் ஏறிக் கப்பலை அடைந்து வந்தியத்தேவனைக் காப்பாற்ற கப்பலைத் திசை திருப்புமாறு கட்டளையிட்டார். பார்த்திபேந்திரனும் கப்பலை விரைந்து செலுத்துமாறு கலபதிக்கு ஆணையிட்டான். கடலில் கொந்தளிப்பு எழுந்தது. ஒரு பெரும்புயல் தோன்றத் தொடங்கியிருந்தது. எனவே கப்பல் நகரவேயில்லை. இளவரசர் வந்தியத்தேவனை எண்ணிக் கவலையுற்றார்.  வந்தியத்தேவன் குந்தவையின் ஆணையின் பேரில், ‘இளவரசர் இல்லாமல் நாம் திரும்பக்கூடாது’ என்று உறுதி பூண்டுதான் கடலில் குதித்துப் படகை அடைந்து கப்பலுக்குச் சென்றான். ஆனால் அங்கு இளவரசர் இல்லை என்பதும், படகில் கூட வந்தவர்கள் அபாயகரமானவர்கள் என்பதையும் கப்பலுக்குச் சென்ற பிறகே புரிந்து கொண்டான். அவனை கப்பலின் அடிப்பகுதியில் கட்டிப் போட்டிருந்தார்கள். கடம்பூரில் தேவராட்டம் ஆடிய தேவராளனும் மந்திரவாதி ரவிதாசனும் கப்பலில் வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதில், அவர்களின் தலைவி இளையராணி நந்தினி என்பதைத் தெரிந்து கொண்டான். மேலே சத்தம் கேட்க, தன் கட்டுகளை விடுவித்துக்கொண்டு வந்தபோது, அராபியர்களை ரவிதாசனும் தேவராளனும் தாக்கிக் கடலில் எறிவதைக் கண்டு தானும் அவர்களைத் தாக்கலானான். அரேபியர்கள் அனைவரையும் மூவரும் தீர்த்து முடித்தனர். ரவிதாசன் அவனை, தன் கூட்டத்தில் சேரவேண்டும், இல்லையானால் கடலில் தூக்கிப் போட்டுவிடுவேன் என மிரட்ட, வந்தியத்தேவன் அவர்களை யார் எனக் கேட்டான். தாங்கள் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் எனவும், சோழர் குலத்தைப் பூண்டோடு அழிக்க சபதம் எடுத்துச் செயல்படுபவர்கள் எனவும் அவனை தங்களோடு சேர்ந்துவிடும்படியும் கூறினர். வந்தியத்தேவன் மறுக்க, அவனைக் கொன்றுவிட முடிவெடுத்தனர். ஆனால் அவன் அவர்களைத் தாக்கத் தயாராய் இருக்க, அவனைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டு கப்பலோடு இருந்த படகை எடுத்துக் கொண்டு தப்பித்தனர். நடுக்கடலில் தன்னந்தனியாக மரக்கலத்தில் வந்தியத்தேவன் மாட்டிக் கொண்டான். புயலும் மழையும் ஆரம்பித்தது. சுற்றிலும் இருட்டு பரவியது. கல் மழை, அதைத் தொடர்ந்து பேய் மழை, இடி, மின்னல் என எல்லாம் சேர்ந்து வந்தது. வந்தியத்தேவன், தன் ஆயுள் இங்கேயே முடிந்து போகுமோ, தாம் இறந்ததை குந்தவைக்கு யார் சொல்லுவார்கள் என்றெல்லாம் பரிதவித்தான். அப்போது ஒரு பெரும் இடி அவன் கப்பலில் இருந்த பாய்மரத்தில் விழுந்து பாய்மரத்தில் தீப்பற்றிக் கொண்டது. தன் விதி அத்துடன் முடிந்து விட்டதென வந்தியத்தேவன் நினைத்துக் கொண்டான்.  அதே சமயத்தில் பார்த்திபேந்திரனின் கலத்தில் இருந்து வந்தியத்தேவனைக் கண்டுவிட்ட இளவரசர் இரண்டு வீரர்களை அழைத்துக்கொண்டு அவனைக் காப்பாற்றப் படகில் கிளம்பினார். பார்த்திபேந்திரன் தடுத்தும் கேட்கவில்லை. புயல் மழையில் கொந்தளிக்கும் அலைகளின் நடுவே மிகுந்த சிரமத்திற்கிடையில் கலத்தின் அருகில் படகை எடுத்துச்சென்று வந்தியத் தேவனிடம் ‘குதி குதி’ எனக் கத்தினார். வந்தியத்தேவன் இளவரசரைக் கண்டவுடன் கடலில் குதிக்க, அலையால் உந்தப்பட்ட படகு, கப்பலிருக்கும் திசையை விட்டு விலகிச் சென்றது. இளவரசர் நீரில் குதித்து வந்தியத்தேவனைப் பற்றிக்கொண்டு படகில் சிரமப்பட்டு ஏற்றினார். தீப்பற்றிய கப்பல் பெரிதாய் எரிய ஆரம்பித்து மூழ்கத் தொடங்கியது. வேகவேகமாய்ப் படகை செலுத்திய பின்னும் உடைந்த பெரிய பாய்மரத் துண்டு ஒன்று படகில் மோத, படகு இரண்டாய் உடைந்தது. உடைந்த பாய்மரத்துண்டை இளவரசரும் வந்தியத்தேவனும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். மழையும் இடியும் புயலும் நின்று அமைதி சூழ்ந்தது. ஆனால், இருளில் படகோ, கப்பலோ சென்ற திசை தெரியவில்லை. கரையில், இளவரசர் சென்ற பின் ஆழ்வார்க்கடியானிடம் சேநாதிபதி, ‘நடந்தது கூட நல்லதற்குத்தான். இளவரசர் பார்த்திபேந்திரனின் கலத்தில் ஏறி காஞ்சிக்குச் சென்றுவிட்டால் தானும் கிளம்பித் தஞ்சைக்குச் செல்வதாகக் கூறினார். ஆழ்வார்க்கடியான், ஊமை ராணியைப் பார்த்தால் கையோடு அழைத்து வரும்படி அநிருத்தர் ஆணையிட்டிருப்பதாகக் கூறிவிட்டு ஊமை ராணியை நோக்கிச் சென்றான். பூங்குழலியை அருகில் அழைத்த சேநாதிபதி அவளிடம், ‘இளவரசர் பற்றிப் பகல்கனவு காணாதே; அவருக்கு என் மகள் வானதிதான் மணப்பெண்’ எனக் கூறி எச்சரிக்க, பூங்குழலி சினமுற்று அங்கிருந்து வேகமாக அகன்றாள். தன் படகை எடுத்துக்கொண்டு புயலின் அல்லோலகங்களுக்கு நடுவே பூதத்தீவில் ஒதுங்கி, புயலின் ஆவேசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது கடலின் ஓரத்தில் பாய்மரத்தில் ஒருவனைக் கண்டு அவனை கரையேற்றினாள். அவன் முதல்நாள் இடிவீழ்ந்ததில் ஒரு மரக்கலம் எரிந்ததைச் சொல்லி, அதில் பலர் காயப்பட்டிருக்கலாம் எனக் கூறினான். சேநாதிபதியின் வார்த்தையால் பெரிதும் வருந்தியிருந்த பூங்குழலி, தன் ஓடத்தை வைத்துக்கொண்டு ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றவாவது செய்யலாம் என நினைத்து கடலுக்குள் இறங்கினாள். இளவரசர் அவளை சமுத்திரகுமாரி என்று அழைத்ததை நினைத்துக் கொண்டாள். இன்னேரம் அவர் கோடியக்கரை சென்றிருப்பார், அரச குடும்பங்கள் அனைத்தும் இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டு  பாட ஆரம்பித்தாள். ‘இடி இடித்து எண்திசையும்வெடிபடும் அவ்வேளையிலேநடனக் கலை வல்லவர் போல்நாட்டியந்தான் ஆடுவதேன்?’ ஒரு இரவு முழுவதும் கடலில் பாய்மரத்தைப் பற்றி மிதந்து கொண்டிருந்த வந்தியத்தேவன், முழுவதுமாய் நம்பிக்கை இழந்திருந்தான். இளவரசர் நான்கு நாட்கள் வரை மிதந்து  உயிர் பிழைத்தவரகள்கூட உண்டு என அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தன்னால் அல்லவா இளவரசருக்கு இவ்வாறு ஆனது என வந்தியத்தேவன் வருந்திக் கொண்டிருந்தான். அப்போது பூங்குழலியின் பாட்டு இனிமையாக அவர்கள் காதில் விழுந்தது. பூங்குழலி  இவர்களைக் கண்டு அதிசயித்து நின்றாள். இளவரசர் வந்தியத்தேவனைப் படகில் ஏற்றி, தானும் ஏறினார். இரண்டாம் பாகம் முற்றிற்று.

பொன்னியின் செல்வன் – 13

பொன்னியின் செல்வன் – 13

சின்ன பழுவேட்டரையரிடம் பாதாளச் சிறையின் சாவியைப் பெற்றுக்கொண்ட குந்தவை, வானதியை அழைத்துக்கொண்டு வைத்தியர் மகனைக் காணச் சென்றாள். பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கச்சாலையின் பின்புறமாகப் பாதாளச் சிறைச்சாலை இருந்ததால் அதற்கான கட்டுக்காவலும் அதிகமாக இருந்தது. அங்கு சென்றபோது சேந்தன் அமுதன் தேவாரப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் யார் என்பதையும், அவன் வந்தியத்தேவனுக்குச் செய்த உதவியையும் பற்றி குந்தவை தெரிந்து கொண்டாள். வைத்தியர் மகனைப் பழுவூர் இளையராணியின் ஆட்கள் அழைத்துப் போனதையும், வந்தியத்தேவன் காவலர்களிடம் இருந்து தப்பி இலங்கைக்குச் சென்றுவிட்டான் என்பதையும் தெரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். சேந்தன் அமுதன் விடுதலை செய்யப்பட்டான். பல்வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், முக்கியமான நிருபம் (கடிதம்) ஒன்றை ஆதித்த கரிகாலனுக்கு எழுதி முடித்தாள் நந்தினி. அதில், ‘அரசிளங்குமரா! தயங்கி, பயந்து இந்த நிருபம் எழுதத் துணிந்தேன். இராஜ்யத்தின் நிலைமையைப் பற்றிப் பலவிதமான செய்திகள் காதில் விழுகின்றன. தாங்கள் எதையும் கவனிப்பதில்லை. நோயினால் மெலிந்திருக்கும் தங்கள் தந்தை பலமுறை சொல்லி அனுப்பியும், தாங்கள் தஞ்சைக்கு வரவில்லை. இதற்குக் காரணம் நான்தானோ என்ற எண்ணம் என்னை வதைக்கிறது. தங்களை ஒருமுறை சந்தித்தால் எல்லாச் சந்தேகங்களையும் போக்கி விடுவேன். அதற்குத் திருவுளம் இரங்குவீர்களா? தஞ்சைக்கு வர விருப்பமில்லாவிட்டால், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சந்திக்கலாம். நான் இன்று தங்கள் பாட்டியின் ஸ்தானத்தில் இருக்கிறேன். நாம் சந்தித்துப் பேசுவதில் என்ன ஆட்சேபம் இருக்க முடியும்? இதைக் கொண்டுவரும் வீர இளைஞர், சம்புவரையர் குமாரரைத் தாங்கள் பூரணமாக நம்பி அவரிடம் எந்தச் செய்தியும் சொல்லி அனுப்பலாம் – இங்ஙனம், துரதிர்ஷ்டத்தின் கூடப் பிறந்த அபாக்கியவதி நந்தினி’ என்று எழுதி இருந்தது. அந்த நிருபத்தை, அவளது கவர்ச்சியில் ஏற்கெனவே மயங்கிப் போயிருந்த கந்தமாறனிடம் கொடுத்து, அதைக் கரிகாலரிடம் சேர்ப்பிக்கும்படியும், எப்படியும்  அவரைக் கடம்பூருக்கு அழைத்து வரும்படியும் வேண்டிக் கொண்டாள். வந்தியத்தேவன் கந்தமாறனை முதுகில் குத்தியிருக்கமாட்டான் என்றும் அன்று நிலவறைச் சந்திப்பின்போது தன்னை பழுவேட்டரையர் மகளாக அழைத்ததையும் நினைவுபடுத்தினாள். கந்தமாறன் யோசித்து முடிக்குமுன் பெரிய பழுவேட்டரையர் ஆங்காரத்துடன் வந்து சேர்ந்து கந்தமாறனை கேள்விகளால் துளைத்தார். நந்தினி பொறுமையாக அதற்கெல்லாம் பதில்சொல்லி அவரை சமாளித்து, கந்தமாறன் ஆதித்த கரிகாலனுக்கு ஓலை கொண்டுசெல்வதைப் பற்றிக் கூற, பழுவேட்டரையாரால் நந்தினியை எதிர்த்து எதுவும் சொல்ல முடியவில்லை. கந்தமாறன் சென்றபிறகு, தன்னை அவன் எதிரில் சந்தேகப்பட்டுப் பேசியதற்காகப் பழுவேட்டரையரிடம் பெரிதாய் வருந்தி, தன்மேல் சந்தேகம் உள்ளதானால் வாளெடுத்துக் கொன்றுவிடுங்கள் என்றெல்லாம் கூறி இளக வைத்தாள். பின் பழுவேட்டரையர் அவளை சமாதானப்படுத்தத் தொடங்கினார். அங்கே இலங்கையில்.. வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இளவரசரைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது வழியில், பார்த்திபேந்திரப் பல்லவனைச் சந்திக்க நேர்ந்தது. வந்தியத்தேவன், தான் வந்த காரணத்தைத் தெரிவிக்காமல் பேச்சை முடித்துக்கொண்டான். ஆழ்வார்க்கடியான் பார்த்திபேந்திரனுடன் வந்திருந்த ஆட்களைக் கூர்ந்து பார்த்தான். பார்த்திபேந்திரன் சென்றவுடன், அந்த ஆட்கள் திருப்பியம்புறம் பள்ளிப்படையில் சோழர் குலத்தை அழிக்க சபதம் எடுத்துக் கொண்டவர்கள் என்று வந்தியத்தேவனிடம் கூறினான். வந்தியத்தேவன் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு பூங்குழலியின் தமையன் இலங்கைக்குச் சென்றதைப்பற்றி அவள் தந்தை குறிப்பிட்டதை  நினைத்துக்கொண்டான். இலங்கையின் சில பகுதிகள் சிங்கள மன்னன் மகிந்தனிடம் இருப்பதாகவும், சோழப் படை கைப்பற்றிய பகுதிகளில் இளவரசர் அருள்மொழி வர்மர் கருணையுடன் இலங்கை மக்களிடம் நடந்து கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். அப்போது வீதியில் பெரிய யானை மீதான அம்பாரியில் சீன யாத்ரிகர்கள் அமர்ந்திருக்க, அதன் மீதிருந்த பாகனை ஆழ்வார்க்கடியான் கூர்ந்து கவனித்து அது இளவரசர் அருள்மொழிவர்மர்தான் என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் வந்தியத்தேவன் அதைக் கவனித்திருக்கவில்லை. ஒரு காவலாளி கொடும்பாளூர் முத்திரை மோதிரத்தைச் சரிபார்த்து அவர்களை அழைத்துச் சென்றான். காவலாளியும் ஆழ்வார்க்கடியானும் இரு குதிரைகளில் ஏறிக்கொள்ள, வந்தியத்தேவனுக்குக் குதிரை வழங்கப்படவில்லை. கோபமடைந்த வந்தியத்தேவன் காவலாளியைத் தள்ளிவிட்டு, தாண்டிப்போன குதிரைகளைப் பின் தொடர ஆரம்பித்தான். வெகுதூரம் சென்றபிறகு சோழர் சைன்யத்துடன் தாவடிகள் காணப்பட்டது. அப்போது முன்சென்ற குதிரைகளிலிருந்து ஒருவர் மட்டும் வேகமாக வந்து வந்தியத்தேவனின் முகத்தில் குத்திக் கீழே தள்ளி அவன் இடுப்பிலிருந்த ஓலையை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். வந்தியத்தேவனால் அசையவே முடியவில்லை. அப்போது சுற்றியிருந்த அனைவரும் அந்த வீரனின் முகத்தைக் கண்டு ‘பொன்னியின் செல்வர் வாழ்க’ எனக் கோஷமிட, வந்தியத்தேவன் திகைத்தான். பின் அனைவரும் விலகிச் செல்ல, அருள்மொழிவர்மர் விஷயங்களைக் கேட்டறிந்தார். ‘பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனைக் காஞ்சிக்கு அழைத்து வரும் தூதனாக வந்திருப்பதை அறிந்தே, உங்களைச் சந்திக்கும் முன்பு அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தேன்’ என இளவரசர் கூறினார். ஆழ்வார்க்கடியான் தன்னை இலங்கையிலேயே இருக்கும்படி அநிருத்த பிரம்மராயர் சொல்லி அனுப்பியதாகக் கூறினான். மூன்று பேரிடமும் இருந்து வெவ்வேறு விதமான செய்திகளை அடைந்த இளவரசர் அமைதி காத்தார். பின்னர் பார்த்திபேந்திரனைச் சந்திப்பதற்காக அநுராதபுரம் கிளம்பிய அருள்மொழிவர்மருக்கு, செல்லும் வழியில் புத்தரின் பாதங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு செய்தி கிடைத்தது. அன்று இரவில் ஒரு படித்துறை தடாகத்தின் அருகே மூவரும் சென்றனர். அங்கு ஒரு பிட்சு வந்து அவர்களை ரகசிய வழியொன்றில் நிலவறை விகாரம் ஒன்றின் உள்ளே அழைத்து சென்றார். அங்கு ஒரு கருங்கல் மண்டபத்தில் தங்க சிங்காதனம், மணிமகுடம், உடைவாள், செங்கோல் அனைத்தும் இருந்தன. அங்கிருந்த தலைமைப் பிட்சு இளவரசரை அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இலங்கை அரசுரிமையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அருள்மொழி வர்மர், தான் அவருடைய வேண்டுகோளுக்காகப் பெருமைப்படுவதாகவும் தன் தந்தையும் அரசருமான சுந்தர சோழருக்கு, தான் கீழ்ப்பட்டவன் என்பதால் அவரின் சொல்லின்றி எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி மறுத்தார். வந்தியத்தேவன் இளவரசரின் பெருந்தன்மையை எண்ணிப் பெருமிதப்பட்டவாறே இருக்க, மூவரும் வெளிவந்தனர். அதைப்பற்றிப் பேசிக்கொண்டே வீதியில் நடந்தபொழுது கைதட்டும் ஓசை கேட்க, திரும்பிப் பார்க்கையில் ஓர் உருவம் நின்றிருந்தது. அதை நோக்கி இருவரையும் அழைத்துக் கொண்டு இளவரசர் நகர, அவர்கள் இருந்த இடத்தில் இருந்து மேல் மாட முகப்பு இடிந்து வீழ்ந்தது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தால்கூட மூவரும் இறந்திருக்கக் கூடும். காப்பாற்றிய அந்த உருவத்தைக் கண்ட வந்தியத்தேவன் திகைத்தான். ஏனெனில் அந்தப் பெண் பழுவூர் இளையராணி நந்தினியின் உருவ அமைப்பில் இருந்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த உருவம் மறைந்து விட, சித்தப் பிரமையோ எனக் குழம்பினான். ஒரு மண்டபத்தை அடைந்து அங்கு இரவைக் கழிப்பதற்காக மூவரும் தங்கினர். அப்போது வந்தியத்தேவன் அந்தப் பெண்மணியைப் பற்றிக் கேட்க, அருள்மொழி வர்மர் அவளைப்பற்றிச் சொல்லலானார். ‘சிறு வயதில் என்னைப் பொன்னி நதியில் இருந்து காப்பாற்றிய பெண்மணி இவர்தான். நான் இலங்கைக்கு வந்தபிறகு, ஒரு சமயம் இரவில் எழும் விசித்திரமான குரலைக் கேட்டு என் வீரர்கள் அச்சப்பட, அது இந்தப் பெண்மணியின் குரல்தான் என்பதை நான் கண்டுகொண்டேன். அவரால் பேச முடியாது என்றும், அவர் என்மீது அளப்பரிய பாசம் கொண்டவர் என்பதையும் அறிந்து கொண்டேன். அப்போது அங்கு குளிர்காய்ச்சல் பரவி இருந்ததால், உடனே அங்கிருந்து நாங்கள் கிளம்பி விட வேண்டும் என அந்த மாதரசி கேட்டுக்கொள்ள நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அது மட்டுமல்லாமல் என்னைத் தொடரும் மறைமுக எதிரிகள், வனவிலங்குகள், மலைப்பாம்புகள் போன்ற பல அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறார்’ என்று கூறியவர், அவர்களை படுத்துக்கொள்ளும்படி கூறினார். அப்பொழுது அந்த மூதாட்டி அங்கு வந்து, அவர்களைப் பின் தொடருமாறு சைகை செய்ய மூவரும் அங்கிருந்து கிளம்பினர். அவர்களை ஒரு ரகசிய  குகைக்கு அழைத்துச்சென்று, குகையின் சுவர்களில் தான் வரைந்திருந்த  சித்திரங்களைக் காட்டினாள். அந்தச் சித்திரங்களில் இருந்து,  ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு வாலிபன் காதல் கொள்வதும், அவர்கள் மகிழ்ந்திருப்பதும், ஒரு தருணத்தில் அந்த வாலிபன் பிரிந்து செல்ல, இந்தப் பெண் தொடர்ந்து சென்று அவனை ஒரு நகரத்தில் பார்த்தபோது, அவ்வாலிபன் அரசனாகப் பட்டம் சூடி நிற்பதைக் கண்டு அந்தப் பெண் மனமுடைந்து கலங்கரை விளக்கில் இருந்து விழுவதையும், அவளை ஒருவர் காப்பாற்றியதையும் அறிந்து கொண்டார்கள். பின் அந்தப் பெண் மனநிலை சரியில்லாத வெறியளாகவும் கர்ப்பமுற்றும் இருப்பதையும், அங்கிருந்த ராணி ஒருத்தியும் அப்போது கர்ப்பமாக இருப்பதையும்,  அந்தப் பெண்ணுக்கு இரு குழந்தைகள் பிறப்பதையும், ராணி அந்தக் குழந்தைகளில் ஒன்றை வளர்க்கக் கேட்பதையும், இந்தப் பெண் இரண்டு குழந்தைகளையுமே விட்டுவிட்டு ஓடிவந்து விட்டதையும், தூரமாய் இருந்து இரு குழந்தைகளையும் அவ்வப்போது பார்ப்பதுவுமான பல செய்திகளை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். பின்பொரு நாள் காவிரியில் விழுந்த குழந்தையை அப்பெண் காப்பாற்றுவது  போன்ற சித்திரத்தைப் பார்த்ததும்,  ‘அந்தப் பெண் நீங்கள்தான்’ என அருள்மொழி வர்மர் சுட்டிக்காட்ட, அந்த மூதாட்டி இளவரசரை அணைத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள். பின் இன்னொரு சுவரில் வரவிருக்கும் அபாயங்களை சித்திரத்தில் எழுதி அருள்மொழிவர்மரிடம் காட்டினாள். குகையின் மேல் நின்று பார்த்தபொழுது இவர்கள் படுத்திருந்த இடம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தொடரும்.

பொன்னியின் செல்வன் – 12

பொன்னியின் செல்வன் – 12

இலங்கையில் நிலைமை அவ்வாறிருக்க, பழையாறையிலிருந்து குந்தவையும் வானதியும் தஞ்சைக்குக் கிளம்பினார்கள்.  நாட்டில் அரசியல் சூழ்ச்சி நடைபெறுவதை வந்தியத்தேவன் மூலம் கேட்டதிலிருந்து, உடல்நலம் சரியில்லாத தன் தந்தையுடன், சகோதரர்களும் அருகே இல்லாத சூழ்நிலையில், தான் அங்கே இருப்பதுதான் நியாயம் என குந்தவைக்குத் தோன்றிவிட்டது. செல்லும் வழியில் வானதி, அருள்மொழிக்கு ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயர் வந்த காரணத்தைக் குந்தவையிடம் கேட்க, அவள் சொல்லலானாள். ‘”ருள்மொழிவர்மன் குழந்தையாக இருக்கையில் படகில் குடும்பத்துடன் பொன்னி நதியில் செல்கையில், தவறி நதியில் விழுந்து விட்டான். அனைவரும் பதற, வீரர்கள் நதியில் குதித்துத் தேட, குழந்தை கிடைக்காமல் எல்லோரும் பயந்து விட்டனர். அப்போது படகிலிருந்து சற்று தூரத்தில் ஒரு பெண்ணுருவம் குழந்தையை ஏந்தியபடி தோன்றியது. உடனே சுந்தரசோழர் குதித்து குழந்தையைப் பெற்றுக்கொண்ட வினாடியில் அந்தப் பெண்ணுருவம் சடாரென்று மறைந்து விட்டது. குழந்தையைப் படகில் கொண்டு வந்து சேர்த்த சுந்தரசோழரோ மூர்ச்சையுற்றுப் போனார். பின் அந்தப் பெண் யாரெனத் தெரிந்து கொள்ள முடியாததால் சோழநாட்டின் தெய்வமான பொன்னித் தாயே காப்பாற்றிக் கொடுத்தாள் என்ற பொருளில் ‘பொன்னியின் செல்வன்’ என அருள்மொழிவர்மனை அழைக்கத் தொடங்கினர்” என குந்தவை சொல்லி  முடித்தாள். இருவரும் தஞ்சையை அடைந்தார்கள். வரவேற்ற நந்தினியிடமும் பழுவேட்டரையர்களிடமும் குந்தவை பூடகமாக வார்த்தைப் போர் நிகழ்த்த ஆரம்பித்தாள். நந்தினியும் அதைப் புரிந்து கொண்டு திருப்பி அடிக்க, அந்தச் சொற்போரில் கலந்துகொள்ள முடியாமலும் புரியாமலும் வானதி தவித்தாள். அன்றைய முன்னிரவில் வானதி தவிர, அனைத்துப் பெண்களும் நவராத்திரி விசேஷ பூஜைக்காக துர்க்கை கோவிலுக்குச் சென்று விட, வானதி தனித்து மாடத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு அழுகுரலும் புலம்பலும் கேட்க, கேட்ட இடத்தை நோக்கி நடந்தாள். “என்னை ஏன் உயிருடன் சித்ரவதை செய்கிறாய்? உன்னைத் தெரியாமல் கொன்று விட்டதற்கு ஏன் இப்படிப் பழிவாங்குகிறாய்?” என்றெல்லாம் சொல்லிப் புலம்பியும் அழுதும் கொண்டிருந்தது சுந்தர சோழர்தான் என்று தெரிந்து வானதி திகைத்துப் போனாள். அப்படி அவர் பார்த்து புலம்பிக் கொண்டிருந்த உருவம் எதுவென எட்டிப் பார்த்தபொழுது, பழுவூர் இளையராணியின் உருவம் போல மங்கலாகத் தெரியவும் வானதி அங்கிருந்து நகர்ந்து செல்ல முயற்சித்து மூர்ச்சையடைந்தாள். அடுத்த நாள் காலையில் சுந்தர சோழர் குந்தவையை அழைத்து வானதியைப் பற்றி விசாரித்துவிட்டு,  தஞ்சை அரண்மனை இளம்பெண்களுக்கு ஏற்றதல்ல. இங்கு பேய் நடமாடுகிறது என்றெல்லாம் சொல்ல, குந்தவை  அவரின் உடல் தேறும் வரை இங்குதான் இருப்பேன் என மறுமொழி கூறினாள். பெருமூச்செறிந்த சுந்தரசோழர், இனி தான் உடல்நிலை தேற வாய்ப்பில்லை என்றும் அதற்கு தன் மனக்கவலை மட்டுமே காரணம் எனவும் கூறினார். நடக்கும் சதிகளைப் பற்றி குந்தவை லேசாக எடுத்துரைத்து, மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன என்று கூற, சுந்தரசோழர் மகிழ்ந்து செம்பியன் மாதேவியை அழைத்து முதலில் அவர் சம்மதம் கேட்டு மதுராந்தகனுக்கே பட்டம் கட்டி விடலாம் எனக் கூறினார். குந்தவை துணுக்குற்று, “இது உங்கள் வாரிசுக்கு நீங்கள் செய்யும் துரோகமில்லையா?” என்று கேட்க, “இல்லை, என் சாபக்கேட்டை என் புதல்வர்களுக்குக் கடத்த விரும்பவில்லை” என்று சுந்தரசோழர் சொல்லவும் குந்தவை அதிர்ந்தாள். மேலும் சொல்லும்படி அவள் வற்புறுத்த, சுந்தரசோழர் அவளிடம் பின்வரும் கதையைக் கூறினார். “என் வாலிப பிராயத்தில், இலங்கையில் போருக்குச் சென்றிருந்தேன். போர் தோல்வியில் முடியவே, மனம் குமைந்து யாரும் அறியாமல் கடலில் குதித்து ஒரு தீவில் கரை ஒதுங்கினேன். எதிர்பாராத ஒரு தருணத்தில் என்னைக் கொல்ல வந்த கரடி ஒன்றிடமிருந்து என்னைக் காப்பாற்றினாள் கரையர் குலப் பெண்ணொருத்தி. அவள் வாய் பேச முடியாத ஊமைப் பெண். நான் அவளுடன் அந்தத் தீவில் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒருநாள் என்னைத் தேடிக் கொண்டு நம் நாட்டினர் கப்பல்களில் வந்து இறங்கினர். அந்தப் பெண்ணிடம் கண்டிப்பாகத் திரும்பி வருவதாக வாக்களித்துவிட்டு நான் நம் நாட்டுக்குத் திரும்பினேன். உடனே நான் ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்பொழுது என் பாட்டனார் பராந்தக சோழன் சாகும் தருவாயில் இருந்தார். சோழநாட்டின் மேன்மையை நிலை நாட்ட வேண்டும் என்று என்னிடம் உறுதி வாங்கிக் கொண்டார். அவருக்குப் பின் என் பெரியப்பா கண்டராதித்தர் சக்ரவர்த்தியானார். அப்போதுதான் அவர் மழவரையர் மகளான செம்பியன் மாதேவியை மணந்திருந்தார். ஆனபோதும் அவர் என்னையே யுவராஜனாக பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இருவரும் பட்டாபிஷேகம் முடித்து மக்களுக்கு அரண்மனை மேன்மாடத்தின் முன்றிலில் காட்சிதர நின்றிருந்தோம். வாழ்த்துத் தெரிவித்த மக்களுக்கிடையே கண்ணீருடன் அந்த ஊமைப் பெண்ணின் முகம் தெரிய, நான் திகைத்து மயங்கி விழுந்தேன். மயக்கம் நீங்கி எழுந்தவுடன் என் நண்பன் அநிருத்தனை அழைத்து அந்தப் பெண்ணின் அடையாளங்களைச் சொல்லி, கண்டுபிடிக்க வேண்டுமெனக் கண்டிப்புடன் கேட்டிருந்தேன். கோடியக்கரையில் நான் சொன்ன அடையாளங்களுடன் ஒரு பெண் இருப்பதாகவும் அழைத்தால் வர மறுத்துவிட்டதாகவும் அநிருத்தன் கூற, நான் நேரடியாகவே சென்றேன். ஆனால், அங்கு சென்று விசாரித்தபொழுது அவள் கலங்கரை விளக்குத் தூணின் மீது ஏறி விழுந்து விட்டதாகவும் பொங்கி வந்த கடலின் சீற்றத்தில் மூழ்கிவிட்டிருக்கலாம் எனவும் கூறினார்கள். நான் அளவுகடந்த துன்பம் அடைந்தாலும், தஞ்சைக்கு அவளை அழைத்து வந்தால் நேரும் சங்கடங்கள் இல்லாமல் போனதை எண்ணி ஒருவகையில் அமைதியும் அடைந்து தஞ்சைக்குத் திரும்பி ராஜ்யப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தேன். ஆனால், அவளின் உருவம் என் கனவுகளில் வந்து அலைக்கழிக்கும்.  நாளடைவில் அதையெல்லாம் மறந்துவிட்டிருந்தாலும் பின்பொருநாள் அருள்மொழிவர்மன் காவிரியில் விழுந்த நாளன்று காவிரியம்மனே வந்து காத்து நின்றதாக  நீங்கள் கருதினீர்கள். ஆனால், வந்தது அவள்தான்.  அதேபோல, ஆதித்த கரிகாலன் இளவரசப் பட்டம் ஏற்றதும் தாய்மார்களின் ஆசி பெற அந்தப்புரம் சென்ற அவனுடன் நான் சென்றபோது, தாய்மார்களுடன் அவளது ஆவியும் நின்றிருந்ததிகைக்க கண்டு அன்றும் நான் மூர்ச்சையுற்றேன். அப்போதெல்லாம்கூட என் குற்றவுணர்வும் சித்தப்பிரமை காரணமாகவும் இப்படி எண்ணிக் கொள்கிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது நள்ளிரவில் நாலைந்து முறையாக வந்து இம்சை செய்கிறாள். அதைப் பார்த்துதான் வானதி மயங்கி வீழ்ந்திருக்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், இந்த சாபமுள்ள சோழ சாம்ராஜ்யம் என் பிள்ளைகளுக்கு வேண்டாம். மதுராந்தகனுக்குக் கொடுத்து விடலாம்” என சுந்தர சோழர் சொல்லவும், குந்தவை குறுக்கிட்டு “இதற்கு செம்பியன் மாதேவி பாட்டி ஒத்துக்கொள்வாரா? உலகம் என்ன சொல்லும்? அரசாள்வதற்கென எந்தத் தகுதியும் வேண்டாமா?” என்றெல்லாம் கேட்டாள். சுந்தரசோழர் அனைத்தையும் மறுத்து வாதிட்டு, உடனடியாக செம்பியன் மாதேவியை அழைத்து வருமாறு குந்தவையிடம் வலியுறுத்தினார். அப்போதைக்கு சுந்தரசோழரை சமாதானம் செய்து, தன் அன்னையைத் தனியே அழைத்து, “ஒரு கணமும் அரசரைத் தனிமையில் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குந்தவை எச்சரித்தாள். ஆதுர சாலை எனப்படும் தர்ம வைத்தியசாலை ஒன்றைத் தஞ்சையில் துவக்கி வைத்தாள் குந்தவை. தனக்குரிய சர்வமானிய நிலங்களை அந்த ஊர் விவசாயிகளே சகல உரிமைகளுடன் அனுபவித்துக்கொண்டு, ஆதுரசாலை வைத்தியருக்கு ஆண்டு தோறும் நெல்லும், தினமும் பசும்பாலும்,  ஆட்டுப்பாலும்,  இளநீரும் அனுப்ப வேண்டியது என தான சிலா சாஸனம் செய்து கொடுத்தாள் குந்தவை. அந்த விழாவில் சுந்தர சோழர் பிள்ளைகளுக்கு மக்கள் கொடுத்த ஆசி முழக்கங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு எரிச்சலை அளித்தன. காயமுற்று சிகிச்சை பெற்றுக் கொண்டு, நந்தினி அரண்மனையில் இருந்து வந்த கந்தன்மாறனைப் பார்க்கக் குந்தவை சென்றாள். குந்தவை வந்த குதூகலத்தில், கந்தன்மாறன் இன்னும் அதிகமான குற்றச்சாட்டுகளை வந்தியத்தேவன் மீது  புனைந்தான். அப்போது வைத்தியர் மகனை கோடிக்கரையில் இருந்து ஒற்றனென்று பிடித்துக் கொண்டு வந்ததை மூவரும் பார்த்தனர். நந்தினி சூழ்ச்சியாகப் பேசி, வந்தியத்தேவனை இலங்கைக்கு அனுப்பிய விஷயத்தைக் குந்தவையிடமிருந்து வரவழைத்தாள். வந்தியத்தேவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லி குந்தவையை வருத்தினாள் நந்தினியிடம் சொற்போரில் தோற்றுப்போன குந்தவை, சினத்துடன் சின்ன பழுவேட்டரயரைச் சந்தித்தாள். தான் சக்கரவர்த்திக்கு மூலிகை தேடி வர அனுப்பித்த வைத்தியர் மகனை ஒற்றனென்று சிறைப் பிடித்தது தவறென்று கூறி விடுதலை செய்ய வேண்டினாள். சின்ன பழுவேட்டரையர் பாதாளச் சிறையின் சாவியைக் குந்தவையிடம் கொடுத்து, “நீங்களே விடுதலை செய்து அதற்குப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். குந்தவை அதை ஏற்றுக்கொண்டு சாவியுடன் சிறைச்சாலையை நோக்கி நடந்தாள்.  சின்ன பழுவேட்டரையர் அதிருப்தியுடன் விலகி நடக்கலானார்.

பொன்னியின் செல்வன் – 11

பொன்னியின் செல்வன் – 11

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே நூறு அக்கினிக் குண்டங்கள் தோன்றி அணைந்தன. புகையோ விறகோ எதுவுமில்லாது ஒளிர்ந்து பின் அணைந்து பின் புதிதாகத் தோன்றின. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவன் புத்தி வேலை செய்து, கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் அந்த வாயு வெளிவரும்போது ஏற்படும் தோற்றம் என்று உணர்தியது. பின் வந்தியத்தேவன் பூங்குழலியை வீடு திரும்பும்படி அழைத்துக்கொண்டு, திரும்பும் வழியில் இலங்கைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு பூங்குழலியை வந்தியத்தேவன் கேட்க, அவள் பதிலேதும் அளிக்கவில்லை.மறுநாள், தியாகவிடங்கக் கரையரை கோவிலில் சந்தித்தபொழுது அவரும் பூங்குழலியை அழைத்துச் செல்லும்படி கேட்குமாறும், ஆனால் அவளிடம் எந்த ஆசை வார்த்தைகளைப் பேசியும் கோபப்படுத்திவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்து கடலுக்குச் சென்று குளிக்கலாம் என்று கடலுக்குள் இறங்கியவன், தான் கழற்றி வைத்திருந்த தன் துணிகளில் இருந்து ஓலையை எடுத்துக்கொண்டு பூங்குழலி ஓடுவதைப் பார்த்து அதிர்ந்துபோய் ஓடி வந்தான். பூங்குழலி வெகு வேகமாக விரைந்து காட்டுப் பகுதியில் மறைந்து கொள்ள, வெகுதூரம் அவளைத் தேடி காட்டுக்குள் வந்தியத்தேவன் அலைந்தான். ஒரு இடத்தில் பூங்குழலி ஓலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வந்தியத்தேவனைச் சிறைப்பிடிக்க வைத்தியர் மகன் பழுவேட்டரையரின் ஆட்களைக் கூட்டி வந்திருப்பதாகக் கூறி, அதில் இருந்து தப்புவிப்பதற்காகவே திசைதிருப்பி வேகமாகக் காட்டுப்பகுதிக்குக் கூட்டி வந்ததாகக் கூறினாள். பூங்குழலியின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு நன்றி சொல்லிவிட்டு, இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி மறுபடியும் வேண்ட, பதிலாக பூங்குழலி, தான் கேட்கும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை வாங்கிக்கொண்டாள். அவனை அங்கேயே மறைந்து இருக்குமாறும் இரவு வரும் வரை வெளியே வரவேண்டாமெனவும் சொல்லி ஒரு மண்டபத்தில் மறைந்து இருக்கச் சொன்ன பூங்குழலியிடம் ஆபத்தான மிருகங்கள் வருமே என வந்தியத்தேவன் தன் பயத்தை வெளிப்படுத்தினான். வஜ்ராயுதம் போன்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து ஒரு சிறுத்தையை அதில்தான் கொன்றேன் எனக் கூறிக் கிளம்பிய பூங்குழலியை வந்தியத்தேவன் பிரமிப்புடன் பார்த்தான். காரணம், அது திருக்கை மீனின் எலும்பு. இரவில் முன்னேற்பாடுடன் வந்து பூங்குழலி கொடுத்த சமிக்ஞையின் பேரில் வெளிவந்து இருவரும் ஓசைப்படாமல் படகைத் தள்ளிக் கிளம்பினர். அவள் படகைக் கையாளும் லாவகம் குறித்துப் பாராட்டி அவளின் தந்தை அவளை அழைத்துச் செல்லச் சொன்னதைக் கூறிய வந்தியத்தேவனிடம், கடலுக்கு வந்துவிட்டால் சமுத்திர ராஜனே அவளது தந்தை எனவும் அவள் சமுத்திரகுமாரி எனவும் பூங்குழலி கூறினாள். வந்தியத்தேவன் அவளிடம் பேசித் தெரிந்து கொண்டதில் அவள் சாதாரண பெண்களைப் போல அல்ல என்றும் பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மரின் பெயரைச் சொன்னால் அவளின் முகத்தில் நாணமும் உடலில் குழைவும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டான். கடலில் ஏற்படும் ஆபத்துகளைப் பூங்குழலி சொல்லச்சொல்ல, வந்தியத்தேவன் அதைக் கேட்டுக் குழம்பி கடலில் குதித்து விட, பூங்குழலி பெரும்பாடுபட்டு அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றினாள். மறுபடியும் கண்விழித்த போது அவள் பாடிக் கொண்டிருந்தாள். ‘வாரிதியும் அடங்கி நிற்கமாருதமும் தவழ்ந்து வரகாரிகையென் உள்ளந்தனிலேகாற்று சுழன்றடிப்பதேன்?அலை கடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?வந்தியத்தேவன் அவள் மனதில் ஏதோ சோகமும் ஏமாற்றமும் சஞ்சலப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்று எண்ணினான். அவளை சந்தேகப்பட்டது மிகவும் தவறெனவும் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டான். பூங்குழலி அதை ஒன்றும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இலங்கையில் நாகத்தீவில் இறக்கிவிடுவதாகக் கூறவும், இளவரசர் எங்கு தங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதைப் பற்றிய பேச்சு வந்தது. பூங்குழலி நாகத்தீவுக்கு முன் பூதத்தீவு என்று ஒன்று உள்ளதாகவும் இவன் படகிலேயே இருந்தால் அவள் போய் விஷயம் சேகரித்து வருவதாகவும் சொல்ல, வந்தியத்தேவன் அதற்குச் சம்மதித்தான். பூதத்தீவில் இறங்கி சொன்ன மாதிரியே ஒரு நாழிகைக்குள் விஷயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவள் முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரை மாதோட்டத்தில் சந்திக்க இளவரசர் சென்றிருப்பார் எனக் கூறினாள். கரை நெருங்க பூங்குழலி கேட்ட சத்தியத்தை நினைவுபடுத்தி என்ன உதவி வேண்டும் என வந்தியத்தேவன் கேட்க, சில நிமிடங்கள் சிந்தித்தவள், பொன்னியின் செல்வனைச் சந்தித்து ஓலையெல்லாம் கொடுத்தான பிறகு ‘சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?’ என்று கேட்க வேண்டுமென்றும், அதற்கு அவர் சொல்லும் பதிலை மாறாமல் தன்னிடம் சொல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள். பூங்குழலியின் மனதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன் திகைத்து, ‘அவ்வளவு உயரத்தில் பறக்கவா இந்த ஓடக்காரப் பெண்ணுக்கு ஆசையிருக்கிறது!’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு, உன் உதவிக்காகவே இதைக் கண்டிப்பாகச் செய்வேன் என உறுதி பூண்டு அவளிடமிருந்து விடைபெற்றான். பூங்குழலி ஓடத்தில் சாய்ந்து அவளுலகில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாள். கடற்கரையோரமாக நடந்து சென்று இலங்கையின் மாதோட்டத்தில் சோழ சைன்யம் தங்கியிருந்த இடத்துக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கும் கடம்பூரைப் போலக் கெடுபிடிகள் நடக்கவும், வந்தியத்தேவனைச் சிறைப்பிடித்தனர். அவன் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளரைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லவும் அவனிடமிருந்த முத்திரை மோதிரம், ஓலை எல்லாவற்றையும் பரிசோதித்து எடுத்துக் கொண்டார்கள். அப்போது சேனாதிபதி, முதன்மந்திரி அநிருத்த ப்ரும்மராயரை ராமேசுவரம் வரை வழியனுப்பச் சென்றிருந்ததனால் அவர் வரும் வரை அவனைக் காவலில் வைத்திருந்தனர். பிரயாணத்தில் களைத்திருந்த வந்தியத்தேவன் முதல்நாள் முழுக்க நன்கு தூங்கி ஓய்வெடுத்தான். இரண்டாம் நாளின் இறுதியில் பக்கத்து அறையிலிருந்து ஆழ்வார்க்கடியானின் குரல் கேட்கவே ஆச்சர்யமடைந்தான். பிறகு விசாரித்ததில் அவன் சேனாதிபதியுடன் இங்கு வந்ததாகக் கூறினான். குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டிருந்த ஆழ்வார்க்கடியான், அங்கிருந்து மதுரை சென்று சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு முதன்மந்திரி அநிருத்த பிரும்மராயர் இலங்கையில் அருள்மொழிவர்மரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்த வணிகர்களைச் சந்தித்து நடப்பு நிலவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அங்குதான் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களைத் தன் எஜமானனான அநிருத்த பிரும்மராயரிடம் ஆழ்வார்க்கடியான் முழுவதுமாகக் கூறினான். அநிருத்த பிருமராயர் சேனாதிபதியுடன் இருந்தபோது வந்தியத்தேவனைப் பற்றிச் செய்தி வந்ததால் ஆழ்வார்க்கடியான் விரைந்து இலங்கைக்குச் சென்று வந்தியத்தேவனைப் பற்றி எடுத்துச் சொல்லி இளவரசரிடம் தன் ஓலையைக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவரின் ஆணையைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்து சேனாதிபதியுடன் திரும்பியிருந்தான். வந்தியத்தேவனிடமிருந்து எடுக்கப்பட்ட ஓலை, மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இளவரசர் அநுராதபுரம் சென்றுவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஓலையைச் சேர்க்கும்படி சேனாதிபதி சொன்னதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். இருவரும் இணைந்து சேனாதிபதியைச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே அவருக்கு வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. வந்தியத்தேவன் புத்திசாலித்தனமாக, அவரது அண்ணன் மகளான வானதியைப் பற்றியும் குந்தவை அவள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றியும் பேச சேனாதிபதி மகிழ்வுற்றார். இருவரும் ஒருவரையொருவர் பிரியக்கூடாதெனவும் ஒற்றுமையுடன் சென்று இளவரசரைச் சந்திக்கும்வரை சண்டையிடாமல் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்த, அவரை வணங்கி விடைபெற்று இருவரும் இளவரசரைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தொடரும்.

பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று

பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று

இரண்டாம் பாகத்திற்குள் நுழையும் முன்பு முதற் பாகத்தின் சுருக்கம்:இராஜராஜன் என்று பிற்காலத்தில் பட்டமேற்ற சோழ இளவரசன் அருள்மொழி வர்மன் இலங்கையில் போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனது அண்ணன் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன். இவர்கள் இருவருக்கும் நடுவில் பிறந்த குந்தவை அப்போது பழையாறையில் இருந்தாள். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன் மாளிகை ஒன்றைக் கட்டி, தன் தந்தையும் சோழ அரசருமான சுந்தர சோழரை அங்கு வந்து தங்கியிருக்க வேண்டி, வாணர் குலத்தில் வந்த தனது நண்பன் வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்து அனுப்பினான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்த சிற்றரசர்களின் ரகசியக் கூட்டத்தில், சுந்தர சோழரின் பெரிய தந்தை கண்டராதித்த சோழரின் புதல்வனான மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட அவர்கள் முடிவு செய்ததை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.கண்டராதித்தர் இறந்தபோது மதுராந்தகன் சிறுவனாக இருந்தபடியால் சுந்தர சோழர் அரசராகி இருந்தார். மதுராந்தகனை ஆதரித்த சோழ நாட்டு சிற்றரசர்களுக்குத் தலைமை வகித்தவர் சோழ நாட்டு நிதியமைச்சர் பெரிய பழுவேட்டரையர். இவரது தம்பி சின்ன பழுவேட்டரையர்தான் தஞ்சைக் கோட்டையின் காவலர். பெரிய பழுவேட்டரையர் தனது முதிர்ந்த வயதில் நந்தினி என்ற பெண்ணை மணந்து கொண்டிருந்தார். நந்தினியின் மீதான மோகத்தில் கட்டுண்டு கிடந்த பெரிய பழுவேட்டரையரை நந்தினி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள். நந்தினியும் ஆதித்த கரிகாலனும் இளமையில் காதலர்கள். இவர்கள் காதலை குந்தவையும் கண்டராதித்தர் மனைவி செம்பியன் மாதேவியும் விரும்பவில்லை. பாண்டியருடன் நடந்த இறுதிப் போரின்போது நந்தினியின் வேண்டுகோளைப் புறம்தள்ளி, வீரபாண்டியன் தலையைக் கொய்தான் ஆதித்தன். வீரபாண்டியன் கொலைக்குப் பழிவாங்க சபதம் பூண்ட நந்தினி, பழுவூர் இளைய ராணியாகி பாண்டி நாட்டு ஆபத்துதவிகளுக்கு உதவி செய்து வந்தாள்.வந்தியத்தேவன் வழியில் நந்தினியைச் சந்தித்து அவள் தந்த முத்திரை மோதிரத்தைக் காட்டி அரசரைச் சந்தித்து ஆதித்தன் ஓலையைக் கொடுக்கிறான். தன்மீது ஐயம் கொண்ட சின்னப் பழுவேட்டரையரை ஏமாற்றி கோட்டையை விட்டு வெளியேறுகிறான். தஞ்சையில் அவன் சந்தித்த சேந்தன் அமுதன், வந்தியத்தேவனுக்கு உதவுகிறான். அவன் கோடிக்கரையில் இருக்கும் தன் மாமன் மகள் பூங்குழலியை ஒருதலையாகக் காதலிக்கிறான் என்பது தெரிய வருகிறது. வந்தியத்தேவனை ஒற்றன் என்று கருதி பழுவேட்டரையர் ஆணை ஒருபுறம் துரத்த, ஆபத்துதவிகள் கூட்டத்தைச் சேர்ந்த மந்திரவாதி ரவிதாசன் ஒருபுறம் துரத்த, அனைத்தும் கடந்து, பழையாறை வந்து ரகசியமாக இளவரசி குந்தவையைச் சந்தித்து விவரங்களைக் கூறுகிறான் வந்தியத்தேவன். இலங்கையில் உள்ள அருள்மொழி வர்மனைப் பழையாறைக்கு வரும்படி அழைத்து ஒரு ஓலை எழுதி, வந்தியத்தேவன் மூலம் அதை அனுப்பி வைக்கிறாள் குந்தவை. காஞ்சியில் இருந்தே வந்தியத் தேவனைத் தொடர்கிறான் ஆழ்வார்க்கடியான் என்ற திருமலை. பாண்டி நாட்டு ஆபத்துதவிகளின் ரகசியமும் அவன் தெரிந்திருக்கிறான். அவன் முதன்மந்திரி அநிருத்த பிரமராயரின் ஆள் என்பதை வந்தியத்தேவன் அறியவில்லை. வானத்தில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியிருந்தது பற்றிப் பலரும் பலவாறு பேசிக் கொண்டிருந்தனர். இனி இரண்டாம் பாகம்.. பொன்னியின் செல்வன் – 10இரண்டாம் பாகம் – சுழல்காற்று கோடியக்கரையின் கடலோரத்தில் மிதந்த சிறிய படகிலிருந்து நெஞ்சை உருகச் செய்யும் ஒரு பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்த இளம்பெண், நீண்ட கருங்குழலில் தாழம்பூவின் ஒரு மடலைச் சூடிக்கொண்டு தன்னில் ஆழ்ந்துகொண்டு அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள்.‘அலைகடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?நிலமகளும் துயிலுகையில்நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? அவளின் மனதில் இருந்த சோகத்தையெல்லாம் வெளிப்படுத்திய அந்தப் பாடல், கேட்பவரின் நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சியோடிருந்தது.ஆழம் அதிகமில்லாத அந்தக் கடற்கரையோரம் தன் ஓடத்தை நிறுத்திக் கரையிறங்கிய அந்தப் பெண், சேந்தன் அமுதன் மணக்க விரும்பும் முறைப்பெண்ணான பூங்குழலிதான். கலங்கரை விளக்கின் தீபம் ஏற்றப்பட்டிருந்ததைப் பார்த்த பூங்குழலி கோடியக்கரை குழகர் கோவிலில் சேமங்கலம் அடிக்கும் ஒலி கேட்கவே கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தாள். கோடியக்கரை கடற்கரையை ஒட்டி அடர்ந்த காடு. முழுவதும் மணற்பரப்பும் மணல்மேடுகளின் மீது செடிகளும் மரங்களூம் முளைத்ததினால் கெட்டிப்பட்ட குன்றுகளும் பள்ளங்களும் நிறைந்த அந்தக் காட்டில் வழிகண்டுபிடித்துப் போவது கடினம். திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதைப் போல பிரமை தோன்றக்கூடிய அபாயமான காட்டுவழி. பூங்குழலி அந்த வழியாகச் சென்று கோவிலில் தரிசித்துவிட்டு, பட்டர் அளித்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு மதில் மேல் அமர்ந்து உண்ணலானாள். அப்பொழுது வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் இரு குதிரைகளில் வருவதைப் பார்த்தவள், என்னவென்று விவரிக்க முடியாத உணர்ச்சியினால் கடல் பக்கமாக ஓடலானாள். அந்தக் காட்டில் வழி கண்டுபிடித்துப் போக முடியாமல் பூங்குழலியைப் பார்த்ததும் வழிகேட்கலாம் எனக் குதிரையிலிருந்து இறங்கிய வந்தியத்தேவன், அவள் ஓடுவதைக் கண்டு திகைத்து பின் அவனும் துரத்த, பாதி வழியிலேயே சேந்தன் அமுதன் குறிப்பிட்ட பெண் இவள்தான் எனப் புரிந்து கொண்டு மேலும் துரத்தலானான். அந்தக் கடற்கரை மணற்வெளியைப் பற்றி அறிந்திராத வந்தியத்தேவன் ஓடுகிற வேகத்தில் அதிலிருந்த புதைகுழியில் மாட்டிக்கொண்டு, தன்னைக் காப்பாற்றுமாறு கத்த, பூங்குழலி விரைந்து செயல்பட்டாள். அங்கு தேங்கிப்போயிருந்த சேற்றில் ஓடத்தை ஓட்டிக் கொண்டு வந்து தன் வலிய கரங்களை வந்தியத்தேவனுக்குக் கொடுத்து மேலிழுத்தாள். பின் சேற்றைக் கடலில் கழுவிக்கொண்ட வந்தியத்தேவன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, ‘சேந்தன் அமுதனின் காதலிதானே நீ?’ எனக் கேட்க, பூங்குழலி மறுத்தாள். பேசிக்கொண்டே இருவரும் நடந்தபோது முதல்நாள் இருவர் தன் அண்ணனுக்கு நிறைய காசு கொடுத்து இலங்கைக்குச் சென்றதைப் பூங்குழலி சொல்ல, அவள் சொன்ன அடையாளத்தை வைத்து அது மந்திரவாதி ரவிதாஸனாக இருக்கும் என வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டான். வழக்கமாக தான் பெண்களிடம் கடைபிடிக்கும் வழக்கப்படி பூங்குழலியிடம் வந்தியத்தேவன் பேச, அவள் தனக்கு நிறைய காதலர்கள் இருப்பதாகவும் சந்தேகமாய் இருந்தால் நள்ளிரவில் அவர்களைச் சந்திக்கச் செல்லும்போது பின் தொடர்ந்து வந்து பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லிச் சிரிக்க, பூங்குழலிக்கு சித்தப் பிரமையோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. பேசிக்கொண்டே வைத்தியர் மகனையும் அழைத்துக் கொண்டு பூங்குழலியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கோடியக்கரை கலங்கரை விளக்கக் காவலரும் பூங்குழலியின் அப்பாவுமான தியாகவிடங்கக் கரையரிடம் தாங்கள் வந்த சேதியைச் சொல்லி, தான் மட்டும் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யுமாறு வந்தியத்தேவன் கேட்டான். அவர் தன் மருமகளின் பணத்தாசை காரணமாக தன் மகன் யாரோ இருவரை இலங்கைக்கு ஏற்கெனவே ஒரு படகில் அழைத்துச் சென்றதைக் கூறி வருத்தப்பட்டுவிட்டு, உணவு உண்டு அங்கேயே தங்குமாறும், தான் வேறு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.வந்தியத்தேவன் நன்கு உண்டுவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென விழிப்பு தட்டி தன்னைத் தாண்டிச் சென்ற பூங்குழலியைத் தொடர்ந்து சென்றான். அடர்ந்த இருளில் பயந்துகொண்டே வந்தியத்தேவன் செல்ல, பூங்குழலி அழுகையுடன் அந்தப் பாடலை மறுபடி கடற்கரையில் பாடலானாள். வந்தியத்தேவனைப் பார்த்தவள், சிரித்தபடி அவனைத் திரும்பி பார்க்கச் சொல்ல, அங்கு பார்த்தவன் நடுநடுங்கிப் போனான். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 7

பொன்னியின் செல்வன் – 7

வந்தியத்தேவன் தனக்குள் வலிந்து ஏற்றிக் கொண்ட திடசித்தத்தால் நந்தினியின் மோகன சக்தியையும்  அவளின் தேர்ந்த மயக்கும் சொற்களையும் சமாளித்து, அவனுடைய எஜமான விசுவாசம் என்ற கவசத்தால் தகுந்த மறுமொழிகளைத் தந்தான். ‘முற்பிறவியில் நாம் சந்தித்தவர்களாக இருந்திருப்போம்’ என்று நந்தினி கூறியபோதுகூட, மனதில் குடந்தை ஜோதிடர் வீட்டில் சந்தித்த பெண்ணை நினைத்தபடி நந்தினியை ஒட்டியே பேசினான்.  ஆழ்வார்க்கடியான் தன்னிடம் நந்தினியைத் தன் தங்கையெனக் கூறியதாகவும் மறுபடியும் பழைய வாழ்க்கைக்குத் தங்களை அழைத்துப் போக விருப்பமாக இருப்பதையும் நந்தினியிடம் கூறச் சொல்லியதாகக் கூறினான். ‘அது தன்னால் முடியாது’ என்று கூறிய நந்தினியிடம், அவளைப் பாராட்டி புகழ்ந்தே வந்தியத்தேவன் பேசியதை அவள் ஒருவாறு ஏற்றுக் கொண்டாள். முத்திரை மோதிரத்தை பழுவேட்டரையர் தன்னிடம் கொடுத்ததாக சின்னப் பழுவேட்டரையரிடம் பொய் சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது எக்காளங்களும் முரசுகளும் ஒலிக்கக் கேட்டு பெரிய பழுவேட்டரையர் வந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டார்கள்.  பேச்சுவாக்கில் குந்தவையைப் பற்றிப் பேசும்போது நந்தினியின் கண்ணில் தெரிந்த குரோதத்தைக் கண்ட வந்தியத்தேவன் உள்ளூர அதிர்ந்தான். தனக்கான அந்தரங்க ஊழியனாக இருக்கச் சொல்லி நந்தினி கேட்டபொழுது, அந்தப் பணிக்காகவே தன் தலைவன் கரிகாலன் குந்தவையிடம் தன்னை அனுப்பி வைத்திருப்பதாக வந்தியத்தேவன் கூறியதைக் கேட்டு எரிச்சலடைந்தாள். குந்தவைக்கு எடுத்துச் செல்லும் ஓலையைப் படித்துவிட்டு, இதற்கு மறுமொழியை என்னிடம் காட்டுவதாயிருந்தால் இந்தக் கோட்டையை விட்டு உங்களைத் தப்பி செல்ல உதவி செய்வதோடு  வேறு சில உதவிகளும் என்னால் செய்ய முடியும் என நந்தினி கூறியபோது ஆந்தையின் குரல் கேட்டது. நிஜ மந்திரவாதியே வந்து விட்டான் என்றாள் நந்தினி; வந்தியத்தேவன் மறைந்து கொண்டான்.  ஆழ்வார்க்கடியான் திருப்புறம்பியம் பள்ளிப்படையில் பார்த்த அந்த ரவிதாசன்தான் மந்திரவாதியாக வந்திருந்தான். நந்தினியிடம் அவளின் பழைய கதையை நினைவூட்டிய ரவிதாசன்,  வீரபாண்டியன் சிதையோடு கட்டாய உடன்கட்டை ஏற்றப்பட இருந்த அவள், தங்களுடன் இணைந்து பழிவாங்கும் நடவடிக்கையில் உதவுவேன் என்று சொன்னதை நினைவூட்டினான். தங்கள் கூட்டத்தில் யாரும் நம்பவில்லையாயினும், தான் மட்டும் அவளை நம்பிக் காப்பாற்றியதாகவும், நந்தினி பழுவேட்டரையரை மணந்து கொண்டதால் ஆத்திரமுற்றுக் கொல்ல வந்த பொழுது, பழைய சம்பவங்களுக்குப் பழிவாங்குவதற்கே இந்த அரண்மனையில் இருப்பதாக நந்தினி கூறியதையும் அவளுக்கு நினைவுபடுத்தி,  இப்பொழுது சுகபோகத்தில் அதை மறந்து விட்டதாகக் குற்றம் சாட்டினான். மேலும் வந்தியத்தேவனின் அழகில் அவள் மயங்கியிருக்கலாம் என்றும் சொல்ல, நந்தினி கோபமுற்று தான் செய்யும் திட்டங்கள் குந்தவைக்கு எதிரானவை என்றும் அங்கிருந்தும் சோழ அரசை அழிக்கும் செயலைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினாள். அதை நம்பாமல் பார்த்த ரவிதாசனிடம், வந்தியத்தேவனை அவனிடம் ஒப்படைப்பதாகவும் அவனுடன் சென்று குந்தவையிடம் பதில் ஓலை வாங்கியதும் தன்னிடம் அழைத்து வருமாறும் கூறிவிட்டு வந்தியத்தேவனைத் தேடியபோது அவன் அங்கிருந்து காணாமல் போயிருந்தான்.  பெரிய பழுவேட்டரையர் திரும்பி வந்தபொழுது எப்பொழுதும் எதிர்கொள்ளும் சின்ன பழுவேட்டரையர் சிறிது நேரம் கழித்தே வந்தார். போன காரியம் வெற்றியடைந்ததைப் பற்றிச் சொன்ன பெரிய பழுவேட்டரையரிடம், குந்தவையிடமும் செம்பியன் மாதேவியிடமும் கவனத்துடன் இருக்க வேண்டுமென சின்ன பழுவேட்டரையர் கேட்டுக் கொண்டார்.  பின்னர் பெரியவர் பெயரைச் சொல்லிக் கொண்டு முத்திரை மோதிரத்துடன் வந்திருந்த வந்தியத்தேவன் பற்றிய நிகழ்ச்சிகளைச் சின்னவர் சொல்ல, இருவரையும் வந்தியத்தேவன் ஏமாற்றி விட்டதை உணர்ந்து கோபமடைந்தனர். அப்படியானால் அந்த முத்திரை மோதிரம் இளையராணிதான்  தந்திருக்க முடியும் எனவும், நந்தினி மேல் தனக்கிருக்கும் சந்தேகங்களையும் சின்ன பழுவேட்டரையர் கூற, பெரியவர் சின்னப் பையனிடம் ஏமாந்துவிட்டதற்காகவும் நந்தினி மேல் சந்தேகப்பட்டதற்காகவும் சினந்து, தம்பியை வார்த்தைகளில் வறுத்தெடுத்துவிட்டு நந்தினியைப் பார்க்கச் சென்றார். செல்லும் வழியில் நந்தினியைப் பற்றி யோசித்துக் கொண்டே சென்ற பெரியவர், மந்திரவாதியை அடிக்கடி அழைத்துப் பேசுவது, தன்னைத் தொட விடாமல் விரதம் என்று சொல்வது பற்றியெல்லாம் கேட்டே ஆகவேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டார். பழுவேட்டரையர் லதாமண்டபத்தை அடையும்பொழுது நந்தினி அழுதுகொண்டே, தான் அவரை விட்டுப் பிரிந்து இருப்பது கடினமாக இருந்தது என்றும், தன்னை அனைவரும் பழிசுமத்துகிறார்கள் எனவும் நாடகமாடினாள். நந்தினியின் நடிப்புக்குக் கைப்பாவையாகிவிட்ட பழுவேட்டரையர், அவளை சமாதானப் படுத்தினார். மதுராந்தகனை நந்தினி அரச பதவிக்காக மனம் மாற்றியதையும், சுரங்க வழியில் சென்று பல்லக்கில் மறைத்து சென்றதையும் அவளின் புத்திசாலித்தனமான யோசனை எனக் கூறிப் பாராட்டி சமாதானப்படுத்த முயன்றார். நந்தினி மேலும் மேலுமாக நடித்து, ‘ஒரு கிழ எருமை மாட்டை இந்த இளம்வயதில் மணந்திருக்கிறாயே’ என்று சொல்லி குந்தவை அவளை ஏற்கனவே அவமானப்படுத்தியதை எல்லாம் சொல்லி அழத் தொடங்க, குந்தவை மீதான பழுவேட்டரையரின் சினம் மேலும் அதிகமானது. போர்க்களத்தில் தன்னந்தனியான வழியில் அபயம் என நந்தினி வந்தபோதே அவர் உள்ளம் அவள்பால் விழுந்து விட்டது என்றும் முன் பிறவிகளாய் நாம் இணைந்திருந்தோம் என்றும் பழைய கதைகளைக் கூறக்கூற நந்தினி பின்பக்கமாய்த் திரும்பி எரிச்சலை அடக்கிக்கொண்டு அவர் பேசுவதைக் கண்டு மகிழ்வதைப் போல நடித்தாள்.  மேலும், வீரராகிய அவர் பெண்ணான குந்தவையின் மந்திரசக்தியை எதிர்ப்பது அவரின் வீரத்துக்கே இழுக்கு என்பதால்தான், மந்திரவாதியின் உதவியைத் தான் நாடுவதாக நந்தினி கூறியதும் பழுவேட்டரையர் உருகிவிட்டார். அந்தப் பொழுதிலேயே நந்தினி, சுந்தர சோழரை அரச பதவியிலிருந்து இறக்கிவிட்டு பழுவேட்டரையரை சோழ சிம்மாசனத்தில் அமர வைப்பதுதான் தன் திட்டம் எனக் கூறவும் அவர் மேலும் நிலைகுலைந்தார்.  மந்திரவாதியும் நந்தினியும் பேசிக்கொண்டிருந்த போதே, அங்கிருந்து மறைவில் சென்ற வந்தியத்தேவன் தட்டுத்தடுமாறியபடி ஒரு இருண்ட சுரங்கப்பாதையை அடைந்தான். இருட்டில் துழாவியபடி வழியைத்தேடிக் கொண்டிருந்தபோது காலடிச் சத்தம் கேட்டு அத்திசையில் பார்க்கையில் மதுராந்தகனை வேல் தாங்கிய காவலன் ஒருவனும், அவனுடைய நண்பனான கந்தமாறனும் அழைத்து வருவதைக் கண்டான். பல்லக்கில் நந்தினியை அனுப்பிவிட்டு கோட்டைக்குள் சுரங்க வழியாக மதுராந்தகனை ரகசியமாக அழைத்து வருவதைப் புரிந்து மறைந்து கொண்டான். அவர்கள் வந்த வழியே தப்பிச் சென்றுவிடலாம் என்று கருதி அவ்வழியே சென்றவன் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ள, அந்த இடம் பொக்கிஷ நிலவறை என்பதை உணர்ந்துகொண்டான். மறுபடியும் ஏதோ ஒலி கேட்க வந்தியத்தேவன் ஒளிந்து நின்று கவனித்தான். மதுராந்தகனை விட்டுவிட்டு வந்த கந்தமாறன், காவலனுடன்  ஒருபுறம் வர, பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடன் இன்னொரு புறத்திலிருந்து வந்து சந்தித்து ஏதோ பேசிக்கொண்டார்கள்.  பிறகு கந்தமாறன் விடைபெற்று முந்திச் செல்ல பெரிய பழுவேட்டரையர் பின்செல்லும் வீரனுக்கு ஏதோ சமிக்ஞை செய்தார். இருண்ட அந்தப் பாதையில் கந்தமாறனைப் பின் தொடர்ந்தால் கோட்டைக்கு வெளியே சென்றுவிடலாம் என்று புரிந்து கொண்ட வந்தியத்தேவன் சற்றுத்தொலைவில் அவர்களைப் பின் தொடர்ந்தான்.  ரகசியமான இடத்தில் சுவர் திறக்கப்பட, முதலில் வெளியேறிய கந்தமாறனைப் பின்னாலிருந்து காவலன் கத்தியால் குத்தினான். வந்தியத்தேவன் துரிதமாகச் செயல்பட்டு, அந்தக் காவலன் மேலும் கந்தமாறனைத் தாக்காதவாறு அவனை உதைக்க, அவன் சுவரில் மோதி கீழே சரிந்தான். அந்த நேரத்தில்  விளக்கு வெளிச்சம் வந்தியத்தேவன் மீது விழுந்தது. முதலில் கந்தமாறனைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்று உணர்ந்து கொண்ட வந்தியத்தேவன், அந்தக் காவலனை அவனது அங்கவஸ்திரத்தைக் கொண்டேக் கட்டிப் போட்டுவிட்டு, மயங்கிச் சரிந்திருந்த கந்தமாறனைத்  தூக்கிக்கொண்டு சுரங்கப் பாதையிலிருந்து வெளியே வந்தான். அது கோட்டைக்கு வெளியே வடவாறு ஒட்டிச்செல்லும் இடம் என்பதைக் கவனித்து கந்தமாறனைத் தோளில் சுமந்து நீரில் மூழ்கிவிடாதவாறு ஓரமாகவே சென்று ஆழம் குறைவாக இருந்த இடத்தில் சிரமப்பட்டு ஆற்றைக் கடந்து சென்றான். மரநிழலில் அவனைக் கீழே இறக்கி இன்னும் உயிர் இருக்கிறதா என்று பார்க்க, சற்றே கண்விழித்த  கந்தமாறன், வந்தியத்தேவன்தான் தன்னைப் பின்னாலிருந்து  கத்தியால் குத்திவிட்டதாகக் குற்றம் சாட்டடிவிட்டு மீண்டும் மயங்கிவிட்டான். வந்தியத்தேவன் உள்ளம் சோர்ந்து போனான்.  மறுபடியும் கந்தன்மாறனைத் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த சேந்தன் அமுதன் வீட்டிற்குச் சென்றான். தோட்டத்தை நெருங்கியபோதே அது முற்றிலுமாக நாசமாக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கலங்கிப் போனான். சின்ன பழுவேட்டரையரின் ஆட்கள், தான் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து வந்து நாசமாக்கியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டவன், திண்ணையில் படுத்திருந்த சேந்தன் அமுதனை மெல்ல எழுப்பி கந்தமாறனைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைக் கூறினான். சேந்தன் அமுதன், படைகள் வந்து அவனை விசாரித்து  நந்தவனத்தை அழித்துவிட்டுப் போனதாகவும் நல்லவேளையாகக் குதிரையை ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்லிவிட்டு முதலில் இங்கிருந்து தப்பித்துப் போகும்படி வந்தியத்தேவனிடம் கூறினான். தன்னுடைய அன்னை வைத்தியத்தில் தேர்ந்தவள் என்று கூறிய சேந்தன் அமுதன் அன்னையை எழுப்பினான். பச்சிலைகள் கட்டி கந்தமாறனுக்கு மருத்துவம் செய்யத் தொடங்கியபோது படைவீரர்கள் வரும் சத்தம் கேட்கவே, சேந்தன் அமுதனை பழையாறைக்குச் செல்ல சிறிது தூரம் வழிகாட்ட வருமாறு அழைத்துக் கொண்டு வந்தியத்தேவன் குதிரையில் ஏறிக் கிளம்பினான். வந்த படைவீரர்கள் வாய்பேசமுடியாத முதியவளிடமிருந்து எதையும் தெரிந்துகொள்ள முடியாமல் வெளியேறினர். அதில் பாதிப்பேர் குதிரைச் சத்தத்தைக் கேட்டு வந்தியத்தேவனை துரத்திக்கொண்டு சென்றனர். மறைந்த கண்டராதித்தரின் மனைவியான செம்பியன் மாதேவியும், குந்தவையும், வானதியும், பழையாறையில் கிருஷ்ணனின் பிறந்தநாளான அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்புகையில் ஆழ்வார்க்கடியானைக் கண்டார்கள். சிறு சமிக்ஞையின் மூலம் அவனை அரண்மனைக்கு வருமாறு சைகை செய்தனர். ஆழ்வார்க்கடியான் முதலில் செம்பியன் மாதேவியைச் சந்தித்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைப் பற்றி விவரமாகக் கூறலானான். ‘ஆதித்த கரிகாலன், பார்த்திபேந்திர பல்லவன் மற்றும் ஆதித்த கரிகாலனுடைய பாட்டனாராகிய திருக்கோவலூர் மலையமான் ஆகியோர் காஞ்சிபுரத்தில் பேசிக்கொண்டனர். இரண்டு பழுவேட்டரையர்களும் மதுராந்தகனும் சேர்ந்து சதி செய்து, சக்ரவர்த்தியைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அதற்கு செம்பியன் மாதேவியின் ஆதரவும் உள்ளது என்று சந்தேகப் படுகிறார்கள். எனவே அந்தரங்கமான தூதுவன் ஒருவனை ஓலை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அவன் சக்ரவர்த்தியைச் சந்தித்து ஓலையைக் கொடுத்து விட்டான். பதில் அளிப்பதற்கு ஒரு நாள் காத்திருக்குமாறு சக்ரவர்த்தி கூற, அதற்குள் அவன் சின்ன பழுவேட்டரையனின் கட்டுக்காவலை மீறித் தப்பித்துவிட்டான். அவன் அசகாய சூரன். மேலும்…’ என ஆழ்வார்க்கடியான் தயங்கியபோது, எதுவானாலும் சொல்லுமாறு செம்பியன் மாதேவி கூறினார். மதுராந்தகன் பல்லக்கில் கடம்பூரில் நடந்த ரகசியக் கூட்டத்துக்கு வந்ததையும், அங்கு நடந்த ஆலோசனைகளைப் பற்றியும் கூறினான். மிகவும் வருந்திய செம்பியன் மாதேவி குந்தவை தேவியைக் கலந்துகொண்டு மறுபடியும் ஆழ்வார்க்கடியானைச் சந்திப்பதாகக் கூறி அவனை அனுப்பி வைத்தார். பழையாறை நகரில் சோழ அரண்மனையை ஒட்டி ஓடை ஒன்றை அரசர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். குந்தவையின் மாளிகையில் உத்தியானவனத்தில்  குந்தவையும் வானதியும் பேசிக்கொண்டிருந்தனர். ஈழத்துக்கு

பொன்னியின் செல்வன் – 4

பொன்னியின் செல்வன் – 4

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் என நினைத்திருப்போம். ஆனால் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றிருக்கும். வந்தியத்தேவனுக்கு அந்த இரவு அப்படித்தான் அமைந்திருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்ததும், உற்ற நண்பனான கந்தமாறன் தன்னிடம்கூட ஏதும் கூறாமல் தன்னைத் தனியே படுக்க வைத்துவிட்டு வந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதும், தன்னைப் பற்றி எச்சரிக்கையாகப் பேசியதும் வந்தியத்தேவனை அங்கு நடப்பவற்றை உற்றுக் கவனிக்கத் தூண்டின. பழுவேட்டரையர், சாம்ராஜ்யத்தின் அரசுரிமையைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ஏற்கனவே இளவரசராக இருப்பவர் சுந்தரசோழரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனபோதும், பழுவேட்டரையர் தன்னுடன் குழுமியிருந்தவர்களிடம் அரசைக் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன்மாளிகை கட்டிவைத்துக் கொண்டு அதற்கு சுந்தரசோழரையும் தாயையும் அழைத்துக் கொண்டிருப்பது யாருக்கும் உவப்பில்லை எனக் கூறினார். மேலும் ஈழத்துக்குப் போர் புரியச் சென்றிருக்கும் அருள்மொழிவர்மன், படையெடுத்துச் சென்ற இடத்திலேயே உணவுக்கு ஏற்பாடு செய்யாமல் தஞ்சையிலிருந்து அனுப்பச் சொல்வது சரியில்லை என்றும், அவ்வாறு அவர் கட்டாயப்படுத்தப் படுவதால், நிதி நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பிலுள்ள அவரும் அவருடைய தம்பியான சின்ன பழுவேட்டரையரும் அதிகமான வரிகளை விதிப்பதற்குண்டான அவசியம் நேர்வதாகச் சொல்லிக் குறைப்பட்டார். இதற்கெல்லாம் மேல் சுந்தரசோழரின் உடல்நலம் கெட்டுக் கொண்டிருப்பதையும், அடுத்த வாரிசு யாரென முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அரசு நலனில் அக்கறையுள்ள நமக்கு உண்டென்றும் அவர் சொல்லும்போது கூட்டத்தில் உள்ள அனைவரும் அதிர்ந்தனர். ஏற்கனவே வாரிசாய் உள்ள ஆதித்த கரிகாலனைப் பற்றிக் கேட்க, அவர் முந்தைய நாட்களில் நடந்த பட்டத்திற்குண்டான உரிமைகளைப் பற்றி விரிவாக கூறினார். ஆதித்த கரிகாலனை விட சுந்தரசோழரின் பெரியதகப்பனான கண்டராதித்தர் – செம்பியன் மாதேவி தம்பதியருக்குப் பிறந்த மதுராந்தகனுக்கே அதிக உரிமை உண்டென அவர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னபோது, யாராலும் மறுத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. சுந்தர சோழர் இதைப்பற்றி எதையும் பேசத் தெம்பிலாது அவர் மகள் குந்தவை தேவியினால்தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அதிருப்தியாகத் தெரிவித்தபொழுது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு, பழுவேட்டரையரை நோக்கி ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. பழுவேட்டரையர் அங்கு கொண்டு வந்து வைத்திருந்த மூடுபல்லக்கைப் பற்றியும், குந்தவை தேவியைப் பழி கூறும் பழுவேட்டரையர், தான் புதிதாக மணந்துகொண்ட மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பதும், இவ்வளவு முக்கியமான கூட்டத்தின்போதுகூட அவரை உடன் கூட்டி வந்திருப்பதையும் சுட்டிக் காட்டினர். பழுவேட்டரையர் சினம் காட்டாமல், முதலில் ராஜாங்க விஷயங்கள் முடிவானதும் அதைப்பற்றிப் பதில் கூறுவதாகக் கையமர்த்தினார். பிறகு மதுராந்தகன் முடிசூடுவதைப் பற்றியான பேச்சுகள் எழுந்தன. அதற்கு ஆதரவு தருபவர்கள் யார் யாரெனத் தெரிந்துகொள்ளப் பழுவேட்டரையர் முயன்றார். அப்போது சம்புவரையர் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார். மதுராந்தகனை செம்பியன் மாதேவி ஒரு சிவக்கொழுந்தாகவே சிறுவயது முதல் வளர்த்து வருகிறார். ராஜ்ய விவகாரங்களில் தலையிடாமல சிவ காரியங்களில் மட்டுமே நாட்டம் செலுத்துபவராகவே மதுராந்தகனை அனைவரும் இவ்வளவு நாள் பார்த்து வருகிறார்கள். இப்பொழுது வாரிசுப் போட்டிக்கு முதலில் செம்பியன் மாதேவி சம்மதிப்பாரா? மற்றும் மதுராந்தகனின் விருப்பம் என்னவென்று தெரியாமல் நாம் கூடி முடிவெடுத்துவிட்டு, பின்னர் அரசரிடம் அவப்பெயர் வாங்கிவிடக்கூடாதே என்றெல்லாம் தன் அச்சத்தைத் தெரிவித்தார். அப்பொழுது பழுவேட்டரையர், யாரும் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், அதற்குரிய ஆதாரத்தைக் காண்பிப்பதாகவும் கூறி “மதுராந்தகரே! வெளியில் வாருங்கள்” என்று கூற, பல்லக்கைவிட்டு வெளியே வந்து அனைவரையும் வணங்கிய மதுராந்தகனைப் பார்த்து அனைவரும் திகைத்தனர். பின்னர் மதுராந்தகனை வாழ்த்தினர். இவற்றை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனும் அதிர்ந்து, ‘இதற்காகத்தான் ஆழ்வார்க்கடியான் ஒற்றறிய வந்தானா?’ என்று நினைத்தபடி ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தைப் பார்க்க, அங்கு யாருமில்லை. இதற்குமேல் இங்கு நின்று கவனித்துப் பார்க்க ஏதுமில்லை என்று தெரிந்து கொண்டவன் அவனுடைய இடத்தில் போய்ப் படுத்து உறங்க முயற்சித்தான். ஒரு பெரும் அரசியல் சுழலில் தான் சிக்கிக்கொண்டதாய் உளைந்தவனால் அவ்வளவு சீக்கிரம் உறங்க முடியவில்லை. காலையில் கந்தமாறன் வந்து எழுப்பிய பிறகே வந்தியத்தேவனால் எழ முடிந்தது. எழுந்ததும், முதல்நாள் நடைபெற்ற சம்பவங்களை நினைத்துக் கொண்டவன் உடனே அங்கிருந்து கிளம்புவதாகக் கூறினான். கந்தமாறன் முதலில் வருந்தினாலும், பெரிதாக எதுவும் சொல்லவில்லை. கொள்ளிடக்கரை வரையிலும் அவனை வழியனுப்ப கூடவே வந்தான். வந்தியத்தேவன், கந்தமாறன் முன்பே அவன் தங்கை மணிமேகலையைப் பற்றிக் கூறியதை நினைவுபடுத்தி, அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை என வருந்தினான். கந்தமாறன் தர்மசங்கடத்துடன், அவன் தங்கை மணிமேகலையை வந்தியத்தேவனுடன் முன்னம் இணைத்துப் பேசியதை மன்னித்துவிடுமாறு வேண்ட, வந்தியத்தேவன் தன்னைப் போன்ற ஓர் ஏழை இதை எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான் எனக் கூறினான். கந்தமாறன் எந்த உண்மையையும் அவனிடம் சொல்ல முடியாததற்கு வருந்தினான். அதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனை சமாதானப்படுத்தி விடைபெற்றான். அவன் குதிரையை ஒரு பணியாள் கொண்டுபோக, இன்னொரு குதிரையை அக்கரையில் வாங்கிக் கொடுக்க இன்னொரு பணியாள் உடன் வர, வந்தியத்தேவன் படகில் ஏறியபோது, இன்னொருவரும் அவசரமாக வந்து ஏறினார். அது ஆழ்வார்க்கடியான். படகில் ஒரு வீர சைவரும் இருக்க, வழக்கம்போல இருவரும் சண்டை போட்டுக்கொண்டே அக்கரையில் இறங்கினர். வந்தியத்தேவனுக்குக் குதிரை வாங்கிக்கொண்டு வருவதற்காக வந்த பணியாள் கிளம்பிவிட, ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஒருவரையொருவர் நேற்று நடந்த விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றார்கள். இருவருமே ஒருவரை ஒருவர் ஒற்றறிய முயன்றதால், அவர்கள் இருவரால் எதையும் அறிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றமே மிஞ்சியது. மூடுபல்லக்கில் வந்த பழுவேட்டரையரின் ராணியிடம் கடிதம் கொடுக்கச் சொன்ன ஆழ்வார்க்கடியானுடைய செயல் தவறானது என்று வந்தியத்தேவன் சொல்ல, அவன் மறுத்தான். ‘மதுரைக்குப் பக்கத்தில் என்னுடைய பெற்றோர் எடுத்து வளர்த்த குழந்தைதான் நந்தினி. ஆண்டாளைப் போன்று பக்தியில் சீலமாய்த் திகழ்ந்தவள். வடநாட்டுக்கு நான் யாத்திரை சென்றிருந்தபொழுது, சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடைபெற்றது. அப்பொழுது தப்பித்து ஓடிவந்த அடைக்கலம் புகுந்த வீரபாண்டியனின் மரணத் தறுவாயில் நந்தினி உதவி செய்தபொழுது, படைவீரர்கள் உட்புகுந்து அவனைக் கொன்றுவிட்டார்கள். பழுவேட்டரையர் அவளைப் பிடித்து வந்து கட்டாயமாக மணம் புரிந்திருக்கிறார். அதற்குப் பிறகு நான் அவளைச் சந்திக்க முடியவில்லை. அவளைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் விடுதலை செய்து போகவும் முயன்று கொண்டிருக்கிறேன்’ என ஆழ்வார்க்கடியான் முடித்தான். இதைக் கேட்டவுடனே வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பற்றிய தன் தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டான். எனினும், பல்லக்கிலிருந்தது மதுராந்தகன்தான் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும் விளையாட்டுப் போல, ‘சுந்தரசோழருக்கு அடுத்து யார் பட்டத்துக்கு வருவார்?’ என்ற கேள்வியைக் கேட்டு ஆழம் பார்த்தான். ஆனால் ஆழ்வார்க்கடியான் அசராமல், இதெல்லாம் குடந்தை ஜோதிடர்தான் சொல்வார் எனக் கூறி, ஜோசியரின் பெருமைகளையும் கூறினார். குதிரை வந்தவுடன் வந்தியத்தேவன் ஜோசியர் இல்லத்துக்குச் சென்று ஆருடம் பார்த்துவிட்டே தன் பயணத்தைத் தொடர்வது என்று முடிவு செய்துவிட்டே கிளம்பினான். அதே சமயத்தில் அரிசிலாற்றின் கரையில் ஒரு படகு சில பெண்களைச் சுமந்துகொண்டு வந்தது. படகில் இருந்து இரு முக்கியப் பெண்மணிகள் இறங்கினர். கொடும்பாளூர் இளவரசி வானதியும், சோழவம்சக் குலக்கொடி குந்தவை தேவியும் படகிலிருந்து இறங்கினர். குடந்தையில் தங்களுக்கு முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி வானதியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவை கரையில் காத்துக் கொண்டிருந்த ரதத்தில் கிளம்பினாள். எங்கு செல்கிறோம் என்று கேட்ட வானதியிடம், குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குச் செல்லப் போவதாகக் குந்தவை கூறினாள். ரதத்தை ஒதுக்கி நிறுத்தச் சொல்லி சாரதிக்கு ஆணையிட்ட இளவரசியையும் வானதியையும் ஜோசியர் வரவேற்று அமர வைத்தார். வானதி சிறிது காலமாக அடிக்கடி மயக்கமடைவதையும், உற்சாகமற்று இருப்பதையும் பற்றித் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் குந்தவை கூறினாள். அக்காலத்தின் பழக்கமாக உயர்குடும்பங்களைச் சேர்ந்த ஜாதகங்களை ஜோசியர்கள் வைத்திருப்பது போன்று வானதியின் ஜாதகத்தையும் வைத்திருந்த குடந்தை ஜோதிடர், ஜாதகத்தை எடுத்துப் பார்த்து, நம்ப முடியாது திகைத்துப்போனார். குந்தவை என்னவென்று வினவ, ஜோதிடர் வானதியின் ஜாதகம் கொண்டிருந்த சிறப்புகளைப் பற்றிக் கூறலானார். வானதியை மணக்கப் போகிறவன் கடல் கடந்து போயிருக்கிறான். அவன் போர்களில் வென்று அரசனாக முடிசூடுவான். இந்தப் பெண்ணின் காலில் இருக்கும் தாமரையினால், பின்னால் ஒரு காலத்தில் பெரும் பட்டமகிஷிகள் கூட இவர் பாதம் பணியக் காத்திருப்பார்கள். இவரின் வயிற்றில் ஆலிலை ரேகை கொண்டுள்ளதால் இவருக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தடங்கல் என்பதே கிடையாது. உலகை வெற்றி கொள்வான்’ என்று கூறிக் கொண்டிருந்தபோதே வானதி மயங்கி வீழ்ந்தாள். அவளின் மயக்கத்தைத் தெளிவித்தவாறே வானில் இருக்கும் வால்நட்சத்திரத்தைப் பற்றிய தன் சந்தேகத்தைக் குந்தவை கேட்டாள். ஆனால், ஜோசியர் அதற்கு சரியான மறுமொழி அளிக்காமல் மழுப்பி விட்டார். விழித்த வானதிக்கும் குந்தவைக்கும் அம்மன் பிரசாதத்தை அளித்த ஜோசியரிடம் வானதி, குந்தவை தேவிக்கு அமையப்போகும் கணவரைப் பற்றிக் கேட்டாள். ‘எங்கிருக்கிறார்? எப்படி வருவார்?’ என்று வானதி கேட்டபோது, ஜோசியர் சொல்வதற்கு முன் குறும்பாக, குதிரையில் ஏறி வருவார், அசகாய சூரர் என்றெல்லாம் குந்தவை பதில் அளித்துக் கொண்டிருக்க, நிஜமாகவே குதிரை வரும் சத்தம் கேட்டது. வாசலில் குழப்பமான ஒலிகள் கேட்டன. கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் உள் நுழைந்தான். குந்தவையின் கண்களும் வந்தியத்தேவனின் கண்களும் சந்தித்துக் கொண்டன. குந்தவையை ஏறிட்ட வந்தியத்தேவன், உடனே சமாளித்துக்கொண்டு சீடனை கடிந்தபடி வெளியே சென்றுவிட்டான். குந்தவையும் வானதியும் விடைபெற்று வெளியில் வந்தபொழுது மன்னிப்பும் கேட்டான். அவர்களின் ரதம் கிளம்பிய பிறகு ஜோதிடரிடம் அவர்கள் யாரெனத் தெரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. வந்தியத்தேவனின் ஜாதகத்தை வைத்திருந்த ஜோதிடர், அவனுக்குக் கடற்பயணம் வாய்க்குமெனினும், உயர்ந்த பதவிகள் அவனைத் தேடிவருமெனவும் ஆருடம் கூறினார். ஆழ்வார்க்கடியானைப் பற்றிக் குறிப்பிட்டபொழுது, அந்த அடையாளத்தில் திருமலையப்பனை மட்டுமே தெரியும் எனக் கூறினார். பொற்கழஞ்சுகளைச் சன்மானம் அளித்த பிறகு வந்தியத்தேவன் வழியெங்கும் இயற்கை எழிலை ரசித்தபடி தன் பிரயாணத்தைத் தொடங்கினான். தொடரும். சவிதா