ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி
கட்டுரை: அக்ரி பரத்வாஜ் யூரல் மலையும் ஆறும் என அமைந்துள்ள பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குடியேறிய இனம் ‘ஸ்லாவ்’. பின்னர் ‘ரோஸ்’ அல்லது ‘ரூஸ்’ எனப்பட்டவர்கள் படையெடுத்தனர். இவ்விரு இனத்தவரும் கலந்து தோன்றிய இனமான ரஷ்யர்கள் வாழ்ந்த பகுதிதான் ரஷ்யா எனப்பட்டது. நவ்கோரட்-டைத் தலைநகராகக்கொண்டு ரூஸ் தலைவர் ரூரிக் என்பவர் ஸ்லாவ் இனத்தவரின் வேண்டுகோளின்படி ஆண்டு வந்தார். இவரது ஆதரவாளர்கள் ரூஸ் எனப்பட்டனர். இவர்களால் வரி வசூலிக்க நியமிக்கப்பட்டவன்தான் இவான். மூன்றாம் இவான் (ஐவான்) பைசாண்டையின் பேரரசின் உறவுக்காரப் பெண்ணை, போப்பின் உதவியால் மணந்துகொண்டான். பைசாண்டையின் பட்டம் எதேச்சையதிகாரி என்பதாகும். ரோமர்களின் பட்டம் சீசர் என்பதாகும். இரண்டையும் இணைத்து அழைக்குமாறு வேண்டினாள் அப்பெண். அதுதான் ரஷ்ய மொழியில் ஜார் என்றானது. பேரரசர் சூட்டிக்கொண்ட பெயர் இவ்வாறாகத்தான் வந்தது. ஜார் பேரரசைச் சார்ந்த மகா பீட்டர் ரஷ்யாவை ஆசிய நாடுகளின் கலாசாரத்திலிருந்து ஐரோப்பியப் பண்பாட்டு வட்டத்திற்குள் கொண்டுவந்தார். நிக்கோலஸ் ரோமோனோவ், இரண்டாம் அலெக்சாண்டர், மூன்றாம் அலெக்சாண்டர், இரண்டாம் நிக்கோலஸ் ஆகிய ரஷ்ய மன்னர்கள் அரசாண்டபோது மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். மக்களது அடிமைத்தனங்களையெல்லாம் அறுத்தெறியும் வகையில் வந்ததுதான் இப்புரட்சி. 1917இல் நடந்த ருசியப் புரட்சி அல்லது நவம்பர் புரட்சி, ஜார் மன்னரையும் உயர் குடியினரையும் விரட்டி அடித்தது. புதிதாக உருவாகி வந்த முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளை மாற்றி அமைத்தது. தொழிற்சாலைகள், வங்கிகள் ஆகியவற்றை அவற்றின் உடைமையாளர்களிடமிருந்து பறித்து, அவற்றைத் தொழிலாளர் மன்றங்களான சோவியத் கரங்களில் ஒப்படைத்தது. வரலாற்றில் முதன்முறையாக தொழிலாளர் வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆகவே பாரதி இதனை ‘யுகப்புரட்சி’ என்று வர்ணித்தான். ‘குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு’ என்று வரையறுத்தான். ‘தேசிய இனங்களின் சிறைக்கூடம்’ என்று அறியப்பட்ட ரஷ்யா, புரட்சிக்குப் பிறகு பல தேசங்கள் மற்றும் அயல் நாட்டு விவகாரங்களின் விஷயத்தில் ‘தொழிலாளர் வர்க்க சர்வதேசியம்’ என்ற ஒரு திசைவழியைக் காட்டியது. இவ்வாறாக, சகல ரஷ்ய மக்களுக்கும் தானே பிரதிநிதி, தானே தலைவன் என்று கூறிக்கொண்டிருந்த, ‘இரணியன் போலரசாண்ட கொடுங்கோலன் ஜாரெனும் பேரிசைந்த பாவி, ஜார் மூடன், புரட்சியின் மூலம் இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்தான்’. பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த சுமடர் புயற்காற்று சூறைதன்னில் திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோலே, ஜாரைச் சுற்றி இருந்த மூடர்கள் மரமாக விழவில்லை. விழுந்து விறகானர்கள். மரம் போன்று விழுந்தால் வீட்டு கட்டிடத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். விறகாக வீழ்ந்தால் சாம்பலாகத்தான் போகும். மக்கள் எழுச்சி பெற்றால் மன்னனும் அவனைச் சார்ந்தோரும் சாம்பலாகத்தான் போவார்கள் என்பதை புதுமை விரும்பி பாரதி தனது கவிதை மூலம் தெளிவாகக் கூறுகிறார். உணவும் பண்டங்களும் எரிபொருளும் பதுக்கப்பட்டன. கள்ளத்தனமாக நாடு கடத்தப்பட்டன. இடைக்கால அரசின் அதிகாரப்பூர்வமான அறிக்கையின்படி ராத்தல் இரண்டு ரூபிளுக்குத் தகுதியான காபிக் கொட்டை வாங்குவதற்கு நுகர்வாளர் 13 ரூபிள் தரவேண்டிய சூழல் இருந்தது. மக்கள் ரொட்டி கிடைக்காமல் திண்டாடினர். போர் முனையில் படையாட்கள் பசியிலும் வதைந்தனர். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ? இனி ஒரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம். தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்திணை அழித்திடுவோம் என்ற பாரதியின் கவிதை வரிகளுக்கேற்ப, போல்ஷிவிக்குகளின் குரல், ‘அனைத்து ஆட்சியதிகாரமும் சோவியத்களுக்கே! ரொட்டி வேண்டும்; நிலம் வேண்டும்; யுத்தத்திற்கு முடிவு கட்டு; ஒழித்து கட்டு கள்ளச்சந்தை வாணிபத்தை’ என்பதாக ஓங்கி எழுந்தது. பாரதியைப் போன்றே, பாரதிதாசன் வழி வந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் நவம்பர் புரட்சியை, ‘புதிய ஒளி வீசுது பார்!’ என்று கூறுவதைப் பார்க்கிறோம்.‘சதிமிகுந்த கொடுங்கோலன் ஜார்முன் மக்கள்கதியுயரக் காணும் வழிஏது மின்றிமிதியுண்டார் அராஜகத்தின் மீளாச் சேற்றில்வெம்பி யழுதார் பசியால் வெந்தார் நைந்தார்இதைக்கண்டார் லெனின் ஸ்டாலின். செக்கிலிட்டதேங்காய்போல் தொழிலாளர் துயரும் கண்டார்உதிர்த்த கண்ணீர் துடைத்தெழுந்தார்உதித்ததுபார் புரட்சியெனும் உரிமைச் செம்போர்’ என்று வரவேற்றார். புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையிலான போல்ஷிவிக்குகள் ஆட்சி கூட்டுப்பண்ணை விவசாயம் மேற்கொண்டதை, ‘நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம்’! என வரவேற்றார். லெனின் புரட்சியைப்பற்றிக் கூறும்போது, ஏகாதிபத்திய யுகத்தில் புரட்சி என்பது ஒரு ஜனநாயகக் கட்டத்தின் வழியாகவே பிறக்கும் என்றார். அதற்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்று பெயரையும் இட்டார். நேரடியாக சோசலிசத்துக்குள் குதித்துவிட முடியாது என்றும் கூறினார். ஜார் மன்னனின் நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய ஆளும் முறைமையின் மீது மக்கள் அதிருப்தி அடைந்திருந்த நேரத்தில், அந்த அமைப்பை வீழ்த்தவேண்டுமானால் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தியாக வேண்டும் என கட்சியை ஏற்கச் செய்ய லெனின் பெரிதும் முயன்றார். அதில் வெற்றியும் கண்டார். ரஷ்யப் புரட்சி 1917 மார்ச், நவம்பர் என இரு கட்டங்களாக நடைபெற்றது (ரஷ்யக் காலண்டர்படி பிப்ரவரி, அக்டோபர்). செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்றழைக்கப்படும் பழைய பெட்ரோகிராடைச் சேர்ந்த சோவியத்கள், ஜார் மன்னனைத் தூக்கி எறிந்துவிட்டு கெரன்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசுக்கு முழு அதிகாரத்தை வழங்கினர். லெனின் தலைமறைவாக இருந்தார். ஏப்ரல் மாதம் ரஷ்யத் தலைநகர் வந்தார். மக்களைப் படிப்படியாக ஈர்த்து முழு அதிகாரத்தையும் அமைதியான வழியிலே கைப்பற்ற சோவியத்துகளுக்கு ஆலோசனை வழங்கினார். நவம்பர் 6 என்பது நேரத்துக்கு முந்தியது. நவம்பர் 8 என்பது கால தாமதமானது. நவம்பர் 7 மிகச் சரியானது என்று எடுத்துரைத்தார். சோவியத் அதிகாரம் நிலைநாட்டப்பட்டவுடன் சோவியத் அரசு சார்பாக அமைதி, ரொட்டி, நிலம் என 3 பிரகடனங்களை அறிவித்தார். மின்மயமாக்குதலையும் சோவியத் அதிகாரத்தையும் கூட்டினால் கம்யூனிசம் என்ற உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான சூத்திரம் என லெனின் குறிப்பிட்டார். தொழிலாளர் வர்க்கம் சீர்திருத்தத்திற்கான போராட்டம் என்பதைத் தாண்டி, ஒரு தொழிலாளர் வர்க்க ஆட்சியை உருவாக்கிய பெருவெடிப்பை இப்புரட்சி நிகழ்த்தியது. அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற உருவான எழுச்சியானது, முதலாளித்துவ அமைப்பு முழுவதையும் தூக்கி எறிவதற்கும் வழிவகை செய்கிறது என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியது. கற்றறிந்த ஞானியின் தலைமையிலான சோஷலிச அரசு, அடிமை முறையிலும் வறுமையிலும் இருந்த விவசாயிகளையும் தொழிலாளர்களையும் சமுதாயத்தின் எஜமானவர்களாக மேன்மை அடையச் செய்தது. இலவச வீட்டு வசதி, கல்வி, சுகாதார வசதி, கண்ணியமான வாழ்க்கை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படி செய்தது. புரட்சிக்குப் பிந்தைய கால்நூற்றாண்டுக்குள் வேலையின்மையைத் துடைத்துப் போட்டது. பூர்ஷ்வா வர்க்கத்தைப் பாட்டாளிகளால் நிச்சயமாக தோற்கடிக்க முடியும்; சோசலிசம் முதலாளித்துவத்தைத் தோற்கடிக்க முடியும்; ஒடுக்கப்பட்ட நாடுகள் ஏகாதிபத்தியவாதிகளை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய இப்புரட்சி பாட்டாளி வர்க்கத்திற்கு ஓர் உன்னதமான அனுபவம் ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் காலனி நாடுகளிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்த – இருக்கும் நவம்பர் புரட்சி – சோவியத் புரட்சியை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்ளும்போதில் 70 ஆண்டுகளைத் தாண்டி அதன் விழுமியங்கள் நிலைகொள்ளாமல் போனதின் துயரமும் நெஞ்சில் அப்பிக்கொள்வதை பலமாக உதறிக்கொண்டு, ‘சோவியத் புரட்சியின் விளைவுகள் நீடுழி வாழ்க’ என்று உள்ளம் வாழ்த்துகிறது. ‘இடிபட்ட சுவர்போல கலி வீழ்ந்தான் கிருதயுகம் எழுக மாதோ’ என்ற தமிழ்க் கவியின் வாக்கு எழுந்து பொலிகிறது.