ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

ஆஹா என்று எழுந்ததுபார் யுகப்புரட்சி

கட்டுரை: அக்ரி பரத்வாஜ் யூரல் மலையும் ஆறும் என அமைந்துள்ள பகுதியில் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் குடியேறிய இனம் ‘ஸ்லாவ்’. பின்னர் ‘ரோஸ்’ அல்லது ‘ரூஸ்’ எனப்பட்டவர்கள் படையெடுத்தனர். இவ்விரு இனத்தவரும் கலந்து தோன்றிய இனமான ரஷ்யர்கள் வாழ்ந்த பகுதிதான் ரஷ்யா எனப்பட்டது. நவ்கோரட்-டைத் தலைநகராகக்கொண்டு ரூஸ் தலைவர் ரூரிக் என்பவர் ஸ்லாவ் இனத்தவரின் வேண்டுகோளின்படி ஆண்டு வந்தார். இவரது ஆதரவாளர்கள் ரூஸ் எனப்பட்டனர். இவர்களால் வரி வசூலிக்க நியமிக்கப்பட்டவன்தான் இவான். மூன்றாம் இவான் (ஐவான்) பைசாண்டையின் பேரரசின் உறவுக்காரப் பெண்ணை, போப்பின் உதவியால் மணந்துகொண்டான். பைசாண்டையின் பட்டம் எதேச்சையதிகாரி என்பதாகும். ரோமர்களின் பட்டம் சீசர் என்பதாகும். இரண்டையும் இணைத்து அழைக்குமாறு வேண்டினாள் அப்பெண். அதுதான் ரஷ்ய மொழியில் ஜார் என்றானது. பேரரசர் சூட்டிக்கொண்ட பெயர் இவ்வாறாகத்தான் வந்தது. ஜார் பேரரசைச் சார்ந்த மகா பீட்டர் ரஷ்யாவை ஆசிய நாடுகளின் கலாசாரத்திலிருந்து ஐரோப்பியப் பண்பாட்டு வட்டத்திற்குள் கொண்டுவந்தார். நிக்கோலஸ் ரோமோனோவ், இரண்டாம் அலெக்சாண்டர், மூன்றாம் அலெக்சாண்டர், இரண்டாம் நிக்கோலஸ் ஆகிய ரஷ்ய மன்னர்கள் அரசாண்டபோது மக்கள் பல இன்னல்களுக்கு ஆளானார்கள். மக்களது அடிமைத்தனங்களையெல்லாம் அறுத்தெறியும் வகையில் வந்ததுதான் இப்புரட்சி. 1917இல் நடந்த ருசியப் புரட்சி அல்லது நவம்பர் புரட்சி, ஜார் மன்னரையும் உயர் குடியினரையும் விரட்டி அடித்தது. புதிதாக உருவாகி வந்த முதலாளித்துவச் சொத்துடைமை உறவுகளை மாற்றி அமைத்தது. தொழிற்சாலைகள், வங்கிகள் ஆகியவற்றை அவற்றின் உடைமையாளர்களிடமிருந்து பறித்து, அவற்றைத் தொழிலாளர் மன்றங்களான சோவியத் கரங்களில் ஒப்படைத்தது. வரலாற்றில் முதன்முறையாக தொழிலாளர் வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஆகவே பாரதி இதனை ‘யுகப்புரட்சி’ என்று வர்ணித்தான். ‘குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு’ என்று வரையறுத்தான். ‘தேசிய இனங்களின் சிறைக்கூடம்’ என்று அறியப்பட்ட ரஷ்யா, புரட்சிக்குப் பிறகு பல தேசங்கள் மற்றும் அயல் நாட்டு விவகாரங்களின் விஷயத்தில் ‘தொழிலாளர் வர்க்க சர்வதேசியம்’ என்ற ஒரு திசைவழியைக் காட்டியது. இவ்வாறாக, சகல ரஷ்ய மக்களுக்கும் தானே பிரதிநிதி, தானே தலைவன் என்று கூறிக்கொண்டிருந்த, ‘இரணியன் போலரசாண்ட கொடுங்கோலன் ஜாரெனும் பேரிசைந்த பாவி, ஜார் மூடன், புரட்சியின் மூலம் இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்தான்’. பொய் கூறி அறம் கொன்று சதிகள் செய்த சுமடர் புயற்காற்று சூறைதன்னில் திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோலே, ஜாரைச் சுற்றி இருந்த மூடர்கள் மரமாக விழவில்லை. விழுந்து விறகானர்கள். மரம் போன்று விழுந்தால் வீட்டு கட்டிடத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். விறகாக வீழ்ந்தால் சாம்பலாகத்தான் போகும். மக்கள் எழுச்சி பெற்றால் மன்னனும் அவனைச் சார்ந்தோரும் சாம்பலாகத்தான் போவார்கள் என்பதை புதுமை விரும்பி பாரதி தனது கவிதை மூலம் தெளிவாகக் கூறுகிறார். உணவும் பண்டங்களும் எரிபொருளும் பதுக்கப்பட்டன. கள்ளத்தனமாக நாடு கடத்தப்பட்டன. இடைக்கால அரசின் அதிகாரப்பூர்வமான அறிக்கையின்படி ராத்தல் இரண்டு ரூபிளுக்குத் தகுதியான காபிக் கொட்டை வாங்குவதற்கு நுகர்வாளர் 13 ரூபிள் தரவேண்டிய சூழல் இருந்தது. மக்கள் ரொட்டி கிடைக்காமல் திண்டாடினர். போர் முனையில் படையாட்கள் பசியிலும் வதைந்தனர். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனி உண்டோ? மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி உண்டோ? இனி ஒரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம். தனி ஒருவனுக்கு உணவிலை எனில் ஜகத்திணை அழித்திடுவோம் என்ற பாரதியின் கவிதை வரிகளுக்கேற்ப, போல்ஷிவிக்குகளின் குரல், ‘அனைத்து ஆட்சியதிகாரமும் சோவியத்களுக்கே! ரொட்டி வேண்டும்; நிலம் வேண்டும்; யுத்தத்திற்கு முடிவு கட்டு; ஒழித்து கட்டு கள்ளச்சந்தை வாணிபத்தை’ என்பதாக ஓங்கி எழுந்தது. பாரதியைப் போன்றே, பாரதிதாசன் வழி வந்த பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும் நவம்பர் புரட்சியை, ‘புதிய ஒளி வீசுது பார்!’ என்று கூறுவதைப் பார்க்கிறோம்.‘சதிமிகுந்த கொடுங்கோலன் ஜார்முன் மக்கள்கதியுயரக் காணும் வழிஏது மின்றிமிதியுண்டார் அராஜகத்தின் மீளாச் சேற்றில்வெம்பி யழுதார் பசியால் வெந்தார் நைந்தார்இதைக்கண்டார் லெனின் ஸ்டாலின். செக்கிலிட்டதேங்காய்போல் தொழிலாளர் துயரும் கண்டார்உதிர்த்த கண்ணீர் துடைத்தெழுந்தார்உதித்ததுபார் புரட்சியெனும் உரிமைச் செம்போர்’ என்று வரவேற்றார். புரட்சிக்குப் பிறகு லெனின் தலைமையிலான போல்ஷிவிக்குகள் ஆட்சி கூட்டுப்பண்ணை விவசாயம் மேற்கொண்டதை, ‘நாட்டுக்குப் பொருத்தம் நாமே நடத்தும் கூட்டுப்பண்ணை விவசாயம்’! என வரவேற்றார். லெனின் புரட்சியைப்பற்றிக் கூறும்போது, ஏகாதிபத்திய யுகத்தில் புரட்சி என்பது ஒரு ஜனநாயகக் கட்டத்தின் வழியாகவே பிறக்கும் என்றார். அதற்கு முதலாளித்துவ ஜனநாயகம் என்று பெயரையும் இட்டார். நேரடியாக சோசலிசத்துக்குள் குதித்துவிட முடியாது என்றும் கூறினார். ஜார் மன்னனின் நிலப்பிரபுத்துவ, ஏகாதிபத்திய ஆளும் முறைமையின் மீது மக்கள் அதிருப்தி அடைந்திருந்த நேரத்தில், அந்த அமைப்பை வீழ்த்தவேண்டுமானால் தொழிலாளி வர்க்கம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியை நடத்தியாக வேண்டும் என கட்சியை ஏற்கச் செய்ய லெனின் பெரிதும் முயன்றார். அதில் வெற்றியும் கண்டார். ரஷ்யப் புரட்சி 1917 மார்ச், நவம்பர் என இரு கட்டங்களாக நடைபெற்றது (ரஷ்யக் காலண்டர்படி பிப்ரவரி, அக்டோபர்). செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என்றழைக்கப்படும் பழைய பெட்ரோகிராடைச் சேர்ந்த சோவியத்கள், ஜார் மன்னனைத் தூக்கி எறிந்துவிட்டு கெரன்ஸ்கியால் தலைமை தாங்கப்பட்ட முதலாளித்துவ அரசுக்கு முழு அதிகாரத்தை வழங்கினர். லெனின் தலைமறைவாக இருந்தார். ஏப்ரல் மாதம் ரஷ்யத் தலைநகர் வந்தார். மக்களைப் படிப்படியாக ஈர்த்து முழு அதிகாரத்தையும் அமைதியான வழியிலே கைப்பற்ற சோவியத்துகளுக்கு ஆலோசனை வழங்கினார். நவம்பர் 6 என்பது நேரத்துக்கு முந்தியது. நவம்பர் 8 என்பது கால தாமதமானது. நவம்பர் 7 மிகச் சரியானது என்று எடுத்துரைத்தார். சோவியத் அதிகாரம் நிலைநாட்டப்பட்டவுடன் சோவியத் அரசு சார்பாக அமைதி, ரொட்டி, நிலம் என 3 பிரகடனங்களை அறிவித்தார். மின்மயமாக்குதலையும் சோவியத் அதிகாரத்தையும் கூட்டினால் கம்யூனிசம் என்ற உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான சூத்திரம் என லெனின் குறிப்பிட்டார். தொழிலாளர் வர்க்கம் சீர்திருத்தத்திற்கான போராட்டம் என்பதைத் தாண்டி, ஒரு தொழிலாளர் வர்க்க ஆட்சியை உருவாக்கிய பெருவெடிப்பை இப்புரட்சி நிகழ்த்தியது. அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற உருவான எழுச்சியானது, முதலாளித்துவ அமைப்பு முழுவதையும் தூக்கி எறிவதற்கும் வழிவகை செய்கிறது என்பதை உலகிற்கு நிரூபித்துக் காட்டியது. கற்றறிந்த ஞானியின் தலைமையிலான சோஷலிச அரசு, அடிமை முறையிலும் வறுமையிலும் இருந்த விவசாயிகளையும் தொழிலாளர்களையும் சமுதாயத்தின் எஜமானவர்களாக மேன்மை அடையச் செய்தது. இலவச வீட்டு வசதி, கல்வி, சுகாதார வசதி, கண்ணியமான வாழ்க்கை அனைத்து மக்களுக்கும் கிடைக்கும்படி செய்தது. புரட்சிக்குப் பிந்தைய கால்நூற்றாண்டுக்குள் வேலையின்மையைத் துடைத்துப் போட்டது. பூர்ஷ்வா வர்க்கத்தைப் பாட்டாளிகளால் நிச்சயமாக தோற்கடிக்க முடியும்; சோசலிசம் முதலாளித்துவத்தைத் தோற்கடிக்க முடியும்; ஒடுக்கப்பட்ட நாடுகள் ஏகாதிபத்தியவாதிகளை தோற்கடிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய இப்புரட்சி பாட்டாளி வர்க்கத்திற்கு ஓர் உன்னதமான அனுபவம் ஆகும். உலகம் முழுவதிலும் உள்ள ஒடுக்கப்பட்ட நாடுகளிலும் காலனி நாடுகளிலும் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களுக்கு உந்து சக்தியாக இருந்த – இருக்கும் நவம்பர் புரட்சி – சோவியத் புரட்சியை நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்ளும்போதில் 70 ஆண்டுகளைத் தாண்டி அதன் விழுமியங்கள் நிலைகொள்ளாமல் போனதின் துயரமும் நெஞ்சில் அப்பிக்கொள்வதை பலமாக உதறிக்கொண்டு, ‘சோவியத் புரட்சியின் விளைவுகள் நீடுழி வாழ்க’ என்று உள்ளம் வாழ்த்துகிறது. ‘இடிபட்ட சுவர்போல கலி வீழ்ந்தான் கிருதயுகம் எழுக மாதோ’ என்ற தமிழ்க் கவியின் வாக்கு எழுந்து பொலிகிறது.

இறுகப்பற்று

இறுகப்பற்று

திரை விமர்சனம்: மது ராஜேந்திரன் காதலித்து மணந்த அர்ஜுன் (ஸ்ரீ) திவ்யா (சானியா ஐயப்பன்) இடையே, அவள் சுறுசுறுப்பாகவும் புத்திசாலியாகவும் இல்லாததாகப் பிரச்சினை. ஒரு குழந்தை உள்ள ரங்கேஷ் (விதார்த்) பவித்ரா (அபர்னதி) தம்பதியருக்குள், அவள் குண்டாக இருப்பதுதான் பிரச்சினை. இனி சேர்ந்து வாழ முடியாது என விவாகரத்து முடிவுக்கு வந்துவிடும் நிலையில் அவர்கள் தனித்தனியாகவும், சமயத்தில் ஒன்றாகவும் உளவியல் நிபுணரும் திருமண ஆலோசகருமான மித்ராவைச் சந்திக்கிறார்கள். “கல்யாணம் என்பது கண்ணாடி மாதிரி. உடைந்தால் ஒட்டாது. உறவு என்பது ரப்பர் பேண்ட் போன்றது. இருபக்கம் இழுக்கும்போது அறுந்துபோகும். அதைச் சிலர் தூக்கி வீசுவார்கள். சிலர் அதை முடிச்சுப் போட்டுப் பயன்படுத்துவார்கள். வீசி எறிய வேண்டுமா, முடிச்சுப் போட வேண்டுமா என்பது நம் கையில்தான் இருக்கிறது” என்று, ஆலோசனைக்கு வரும் அத்தம்பதியர்களிடம் நேர்மறையான முடிவை எட்டும் நோக்கில், எதிர்மறையான சில செயல்பாடுகளை முன்னெடுக்கும்படி ஆலோசனை கூறும் மித்ராவும் (ஸ்ரத்தா ஸ்ரீநாத்) கணவன் மனோகருடன் (விக்ரம் பிரபு) சந்தோஷமாகச் சென்றுகொண்டிருந்த வாழ்வில் எதிர்பாராத விதமாகப் பிரச்சினையைச் சந்திக்கிறாள். அவர்களுக்குள் உள்ள பிரச்சினைகளின் உண்மையான வடிவத்தை இனம் கண்டு, அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதை விறுவிறுப்பாகவும் சுவைபடவும் கூறுவதுதான், மகராஜ் தயாளனுடன் திரைக்கதை எழுதி, யுவராஜ் தயாளன் இயக்கி வெளிவந்துள்ள ‘இறுகப்பற்று’ திரைப்படம். ஸ்ரத்தா ஸ்ரீநாத் – விக்ரம் பிரபு ஜோடியாகட்டும், ஸ்ரீ சானியா ஐயப்பன் மற்றும் விதார்த் அபர்னதி ஜோடிகளாகட்டும், பாத்திரங்களின் தன்மையை முழுவதுமாக உள்வாங்கி, நடிப்பில் அற்புதமாக  வெளிப்படுத்தும் பாங்கில், ஒருவருக்கொருவர் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்திருப்பது சிறப்பு. சில நிமிடங்கள்தான் என்றாலும், அந்தப் பாத்திரத்திற்கு மனோபாலா ஏகப் பொருத்தம். அவர் இனி இல்லாதது பெரும் வருத்தம். கோகுல் பினாயின் ஒளிப்பதிவு ‘பளிச்’சென்று கண்களுக்குக் குளுமை. ஜஸ்டின் பிரபாகரனின்  மென்மையான பின்னணி இசையும் இனிமை தரும் பாடலிசையும் அருமை. ஜே.வி. மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பு, கச்சிதம். கதைக்கரு புதிதல்ல. அதைத் திரையில் தந்த விதம் அருமை. நகைச்சுவை குழைத்த வசனங்கள்; என்றாலும், சில ‘நறுக்’கென்று இருக்கின்றன. என்னதான் திருமணமாகிவிட்டாலும், கணவனோ மனைவியோ அவரவர்க்கு உள்ள தனித்த அடையாளங்களை, திருமணத்திற்குப் பிறகு விட்டுவிட வேண்டும் என்கிற பரஸ்பர எதிர்பார்ப்புதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை. சமரசமின்றி இந்த எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து, பரஸ்பரம் துணை நின்றால் பிரச்சினைகளுக்கே இடமில்லை என்பதை, அழுத்தம் திருத்தமாகவும் கலை நயத்தோடும் சொல்வதில், இயக்குநர் யுவராஜ் தயாளன் வெற்றி பெற்றிருக்கிறார். பிரச்சினைகளில் உழலும் தம்பதியர், அவற்றைக் களைய ஏதுவாக, சுயபரிசோதனை செய்துகொள்ளவும், திருமணத்தை எதிர்கொள்ளும் ஆண் பெண்ணோ, காதலர்களோ, திருமண ஆலோசனையாகக் கொள்ளவும் அவசியம் இந்த, ‘இறுகப்பற்று’. மதிப்பெண் : 8/10

சாபத்தில் பிறந்தவர்கள்

சாபத்தில் பிறந்தவர்கள்

கவிதை: செ. புனித ஜோதி நாங்கள்நதியின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் எங்களோடுஓடிக்கொண்டிருக்கிறதுகண்ணீர் நாங்கள்மண்ணின் சாபத்தில் பிறந்தவர்கள்எப்போதும் குண்டு வெடிப்பில்ஈந்து கொண்டிருக்கிறோம்உடலை நாங்கள்கடலின் சாபத்தில் பிறந்தவர்கள்உண்பதற்கும் உடுப்பதற்கும்உறங்குவதற்கும் இடமின்றிபரந்த தேசத்தில் தினம் தினம்அலைக்கழிக்கப்படுகின்றோம்அலைகளாய் நாங்கள்காற்றின் சாபத்தில் பிறந்தவர்கள்மூச்சுவிடக்கூடஉரிமையற்று இருக்கின்றோம் அத்தனையும்மனிதமற்ற மனங்களின்வன்மத்தில் விளைந்தவிளைச்சல்கள் அவர்களின் ரொட்டித் துண்டுகளில்பழக்கூழ் போலத் தடவித்தடவிஉண்டு மகிழ்கின்றனர்எங்கள் குருதியை காட்டாற்று வெள்ளமாய்ப் பெருகியோடும்அரசியல் ஆதிக்கத்தில்திசைக்கொன்றாய்த் திரிகின்றோம்செத்த பிணமாய் ஏனெனில் நாங்கள்திரிசங்கு நேரத்தில் பிறந்தஅகதிகள்

சித்தா

சித்தா

திரை விமர்சனம் பழனி நகராட்சியில் பணிபுரியும் ஈஸ்வரன், அவனது அண்ணி, அவளது எட்டு வயது சுந்தரி என மகிழ்ச்சியாகச் சென்றுகொண்டிருந்தது அக்குடும்பம். அவனுக்கு சுந்தரியும் சுந்தரிக்கு சித்தாவும்தான் எல்லாமுமே. அண்ணி அவனுக்குப் பெண் பார்க்க முனைகிறாள். பிடி கொடுக்காத ஈஸ்வரன், அதே நகராட்சியில் பணியில் சேரும் தன்னுடன் பள்ளியில் படித்த சக்தியை நேசிக்கிறான். இந்நிலையில், சுந்தரியுடன் படிக்கும் பொன்னியின் வேறுபாடான நடவடிக்கையைக் கவனித்த ஈஸ்வரன், அவளைத் தனியாக அழைத்துச் சென்று விசாரிக்க முயல, அவள் பித்துப் பிடித்தவள் போல பயத்தால் நடுங்கி, அவனிடமிருந்து விலகிச் செல்கிறாள்.  மருத்துவப் பரிசோதனையில் பொன்னி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைகிறான். மேலும் அந்தப் பழி அவன் மீது விழ, இது இரட்டிப்பாகி அவனை நிலைகுலையச் செய்கிறது. அதிர்ச்சியிலிருந்து மீண்ட பொன்னி சொன்ன உண்மை அவன் மீதான பழியைத் துடைக்க, நிம்மதி அடைந்த வேளையில் சுந்தரி காணாமல் போக, பேரதிர்ச்சி அடைகிறான் ஈஸ்வரன். சுந்தரி எப்படிக் காணாமல் போனாள், அவள் கடத்தப்பட்டாளா, அவள் என்ன ஆனாள், மீட்கப்பட்டாளா என்பதுதான் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘சித்தா’ தமிழ்த் திரைப்படத்தின் மீதிக் கதை. குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது போக, ஒவ்வொரு நாள் விடியும்போதும் இந்தக் கொடூரங்கள் நாடெங்கும் தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் அவலத்திற்கிடையே ‘சித்தா’ கவனம் பெறுகிறது. இந்தக் கதையை அருண்குமார் எழுதி இயக்கியதும் நடிகர் சித்தார்த் தயாரித்ததும் அவர்களுக்குக் குழந்தைகள் மீதுள்ள அக்கறையையே காட்டுகிறது. சித்தார்த் (ஈஸ்வரன்), சகஸ்ர ஸ்ரீ (சுந்தரி), நிமிஷா சஜயன் (வள்ளி), அஞ்சலி நாயர் (அண்ணி) முக்கியப் பாத்திரங்களாக இருந்தாலும் சித்தார்த்  ‘சேட்டை’ என சுந்தரி மீது கட்டற்ற பாசத்தைப் பொழிவதிலாகட்டும் பெண்ணுக்கு நேர்ந்ததை அறிந்து உடைந்து போவதிலாகட்டும் பழி தம்மீதே பேரடியாக இறங்கும்போதிலாகட்டும் “சித்தப்பாவாக இருந்தாலும்..” என்று அண்ணி சொல்வதைக் கேட்டு வேதனையான சிரிப்பை உதிர்ப்பதிலாகட்டும் சேட்டை காணாமல் போனதை அறிந்து துடித்துப் போவதிலாகட்டும் வள்ளி தனக்கு நேர்ந்ததைச் சொன்னதைக் கேட்டு நொந்து போவதாகட்டும் குற்றவாளியைக் கண்டுபிடிக்க இயலாத கையறு நிலையில் கதறுவதாகட்டும் திறம்பட்ட உணர்வுப்பூர்வமான நடிப்பால் படம் முழுவதும் மட்டுமல்ல, நம் மனத்திலும் வியாபித்து நிற்கிறார் சித்தார்த். காதல், வலி, வேதனையைத் துல்லியமாக நிமிஷா சஜயன் வெளிப்படுத்துகிறார். சுந்தரியாக சகஸ்ர ஸ்ரீயின் பங்களிப்பும் பொன்னியாக நடித்த சிறுமியின் நடிப்பும் அருமை. அண்ணியாகவும் ஓர் அம்மாவாகவும் அழுத்தமான நடிப்பைப் பதிவு செய்கிறார் அஞ்சலி நாயர். வடிவேலு பாத்திரத்தை ஏற்றவரும் சிறப்பான பங்களிப்பைத் தந்துள்ளார். வசனங்கள் கூர்மையானவை; சிந்திக்கத் தக்கவை. கதைக் கருவுக்கு இணக்கமாக பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவும் விஷால் சந்திரசேகரின் விறுவிறுப்பைக் கூட்டும் பின்னணி இசையும் சுரேஷ் ஏ.பிரசாந்தின் படத்தொகுப்பும் படத்தின் சிறப்பு. கொஞ்சம் பிசகினாலும் பிரச்சாரமாகப் போய்விடக்கூடிய நிலையில், கத்தி மேல் நடப்பதான சவாலாக நடந்து,  உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், பார்ப்போர் மனத்தில் குழந்தைகள் மீதான பாதுகாப்பு குறித்த எச்சரிக்கை உணர்வு, இயல்பாகப் பதியும் வகையில் நேர்த்தியான திரைப்படமாக ‘சித்தா’வைத் தந்து, சவாலில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குநர் அருண்குமார். மதிப்பெண்: 8.5/10

தூரத்தில் இல்லை

தூரத்தில் இல்லை

கவிதை நீ மனிதன்நீதான் இவ்வுலகம்நீதான் அனைத்தும் செய்தாய் நீதான் வெற்று நிலத்தினைப் பசுமை செய்தாய்நீதான் இரும்பை உருக்கி ஆயுதம் செய்தாய்நீதான் அவர்களுக்குக் கொடுவாள் கொடுத்தாய்நீதான் எல்லாமுமாக நின்றாய் ஆனால்நீதான் அடிமைப்பட்டாய் உறுதியான மனத்தை எங்கோ தொலைத்துநீதான் இங்கு கீழானவன் ஆனாய் அதனால்தான் அவர்கள் உன் நிர்வாணம் பார்க்கின்றனர் அது அவர்களது புத்திஅவர்களின் கடவுள்களும் அப்படித்தான் அதனால்தான் உன்னுள் அவர்கள் அதனைத் தேடுகிறார்கள் நீ மறந்துவிட்டாய் நீதான் அவர்களுக்குபுதிய புதிய செருப்புகள் செய்து கொடுத்தாய்அதனையும் அவர்கள் தேய்த்துதூரம் வீசியிருப்பார்கள்  எப்போது நீ அவர்கள் தூக்கி வீசிய செருப்புகளை எடுத்துஅவர்களின் தலைமேல் சாமரம் வீசப்போகிறாய்?  சல்லடை சல்லடையாகச்  சந்து வைத்து உன்னை அவர்கள் பிரித்து வைத்துள்ளதை எப்போது நீ அறிந்துகொள்ளப் போகிறாய் ?  உன்னிடம் உறுதியான கைகள் இருக்கின்றனஆனால்உறுதி குலைந்த உன் மனத்தைஎப்போது திடம் செய்யப் போகிறாய்?  அவர்கள் கொஞ்சம்நீதான் அதிகம்ஏன் அடிமைப்பட்டிருக்கிறாய்?  எழுந்து நில்அப்போது பார்அவர்களின் சாம்ராஜ்யம் சுக்கு நூறாகச் சிதறிப் போகும் ஆமாம்அந்த நாள்தூரத்தில் இல்லை

ம(க்கா)தக் குப்பை

ம(க்கா)தக் குப்பை

கவிதை கடற்கரை எங்கும்கடவுள் கிடக்கிறார் மடங்கிய கையுடன்மல்லாந்து கிடக்கிறார் உடைந்த கால்கள்ஒதுங்கிக் கிடக்கின்றன கடலும் இரங்கிக்கண்ணீர் வடித்ததுதடவித் தடவித்தானும் ஓய்ந்தது சங்கச் செல்வர்கள்சரித்துப் போட்டபின்தங்க நேரமின்றிசரக்கடிக்கப் போய்விட்டார் துங்கக் கரிமுகத்தோன்சுருண்டு கிடக்கஅங்கவன் கண்கள்ஆகாயம் பார்த்தன மக்காத குப்பைதான்மதவெறி என்பதால்தக்க வைக்காமல்சமுத்திரம் தள்ளியதோ!

சொல்லணு குண்டுகள்

சொல்லணு குண்டுகள்

கவிதை எங்கள் கவிதை வரிகளேஎங்கள் வெடிகுண்டுத் தொழிற்சாலையிலிருந்துவெளி வருகின்ற அணுகுண்டுக் காவியங்களே நாங்கள் உங்களை வெளியே வீசும்போதுஅன்று யூரோசீமாவில் வீசப்பட்டஐன்ஸ்டீன் உருவாக்கியஅணுகுண்டுகளைப் போல் அழிவுகள்உருவாகப்போவதில்லை அந்த அணுகுண்டுசுரண்டுவோன் சுரண்டப்படுவோன் என்றுஎவரையும் மிச்சம் வைக்காமல்தன் தீ வாயினுள் வைத்துப்பொசுக்கி உண்டு ஜீரணித்துவிட்டது ஆனால், இன்று நீங்களோஏழைகளைச் சுரண்டியதால் தங்கள் வாழ்க்கையைசொர்க்கமாக மாற்றிக்கொண்டிருக்கும்சூழ்ச்சிக்காரர்களின் உல்லாச உப்பரிகைகளைவேரோடு தரைமட்டமாக்கிஇந்நாள் வரையில் சுரண்டப்பட்டுஏழ்மைக் குவியல்களில் வாழ்கின்றமுதுகுத் தண்டுகளுக்குப் புதிய பாதைசமைக்கப் போகின்றீர்கள் இந்த சமுதாய ஜீவநதியைத்தனது நச்சுக் கருத்துக்களால்சாக்கடை நீராக்கி, சகதிக் குளமாக்கிஓட முடியாமல் தேங்கும்தடைகளைக் களைவதற்குஎங்கள் உடலிலிருந்து ஒவ்வொரு செல்லையும்அழித்து உருவாக்கும் எங்கள்அருமைக் கவிதைகளே நீங்கள் வெளியே பாய்ந்து வருவதுஅந்தச் சாக்கடையில் சங்கமாவதற்கு அல்லஉங்களுள் இருக்கின்ற சொல்லணுக்களால்அதிலே இருக்கின்ற கிருமிகளையும்கிளர்ச்சி செய்து போரிட்டு அழித்து ஒழித்துவிட்டுபுதிய ரத்த ஓட்டத்தை உருவாக்கவேநீங்கள் புறப்பட்டுச் செல்கின்றீர்கள் நீங்கள்வரிசை வரிசையாய்ஏட்டில் வந்து படியும்போதெல்லாம்எங்களது கண்களில்தொழிலாளி வர்க்கம்வரிசை வரிசையாக வந்துஓரணியில் திரண்டு கூக்குரல் இடுகின்றகாட்சிகள்தான் தென்படுகின்றன தான் உண்ட உணவை ஜீரணிக்கதன்னைச் சுற்றிக் கூடு கட்டிக்கொண்டிருக்கும்கூட்டுப் புழுக்கள் அல்ல நீங்கள்இந்தச் சமுதாயத்திலுள்ள கொடுங்கோலர்களைக்கொட்டுவதற்காகப் பறந்து செல்லும்குளவிப் பூச்சிகள் இந்தச் சமுதாயத்தில் நீச்சலடிக்க முடியாமல்தத்தளிக்கும் ஏழை மக்களுக்கு நீங்கள்கட்டுமரங்களாகவும் கலங்கரை விளக்கமாகவும்விளங்க வேண்டுமென்றேஎங்கள் சிந்தனைத் தேரோட்டத்திலிருந்துசெதுக்கப்பட்டுப் புறப்படுகின்றீர்கள் எங்கள் சோதனைக் குழாயிலிருந்துவெளி வருகின்ற நீங்கள் குழந்தைகள் அல்லதிராவக ஆவிகள் உங்களை உருவாக்கும் பிரம்மாபின்புறம் கையை வைத்துஉங்கள் தலையெழுத்தை எழுதவில்லைமுன்னே வைத்துதீர்க்க தரிசனப் பார்வையோடுஇரும்புச் சூட்டு எழுத்துக்களால் எழுதுகிறான் உங்களது கதிரொளியால் இங்கு உருவாகப்போவதுபச்சை நிற வயல் வெளிகளல்லசெஞ்சாத்து நிறத்தின் செங்குருதிஆற்றில் மிதக்கக் போகும்துப்பாக்கிக் கட்டைகள் நீங்கள் மேடை ஏறியதும்உங்களுக்கு சூட்டப்படப் போவதுமலர் மாலைகள் அல்லஇரும்புச் சங்கிலிகளும்தூக்கு மரச் சுறுக்கு முடிச்சுமே ஆகும் உங்களை யாரும் தூக்கி வைத்துகுழந்தைப் பாட்டு பாடப்போவதில்லைஉங்களைத் தூக்கி தூக்கி வீசப் போகிறார்கள்ஏனென்றால் நீங்கள்அனைத்தும் வெடிகுண்டுகள் நீங்கள் ஆடப் போவதுஊர்வசியின் மோகன அடிகளல்லதொழிலாளி வர்க்கத்தின் ருத்ர தாண்டவம் உங்களிடமிருந்து பனி உருகுவதால் நீங்கள்வால் நட்சத்திரமாய்த் தெரியப் போவதில்லைஅப்போது உருகப்போவதுதனியுடைமைவாதிகளின் ரத்தக் கொழுப்புகள் உங்கள் அடிகளின் கீழே நசுங்கப்போகும் மாட மாளிகைகள்சுரண்டியதால் உருவான குடிசைகளைவிண் முட்டும் கோபுரங்களாகக் காட்டப்போகின்றன நீங்கள் சுவற்றில் எழுதப்படுகின்றதேர்தல் கோஷங்கள் அல்லஇதயத்தில் கீறப்படுகின்ற வறுமை கீதங்கள் நீங்கள் சிவப்பு விளக்கு போட்டுக்கொண்டுவெளியே வந்தாலும்அங்கே நடக்கப்போவதுபாலியல் வன்கொடுமைகள் அல்லஅங்கே போடப்போவதுபொதுவுடமைப் பூ மஞ்சமும்அறிவுடைய அன்பு வாழ்வுமே ஆகும் நீங்கள் வெளியே வரும்போதுகோழி இறகால் உங்களை நாங்கள்அடைகாக்கப் போவதில்லைசெங்கற்சூலை போட்டுசுட்டு எடுத்து அடுக்குகிறோம் உங்களைக் கொண்டு கட்டப் போகும் மாளிகைக்குகுருதி நீர்தான் தெளிக்கப்பட்டாலும்அதன் நிறம் இறுதியில்வெண்மையாகவே மாறப்போகிறது நீங்கள்நான்கு சுவர் அறையிலேபாப் மியூசிக்கோடு கத்தப் போகும்காட்டுக் கூச்சல் அல்லதெருவின் முனையில்பசியின் கண்களோடும் கிழிந்த உடைகளோடும்ஆவலோடு எதிர்பார்க்கும்ஏழைகளின் காதுகளில் விழப் போகும்பூபாள எழுச்சி ராகங்கள் நீங்கள்இந்தத் தனியுடமைக் கடலைத் தாண்டும்போதுஎதிர்ப்படுகின்ற முதலாளித்துவ அரக்கிகளின்வாயிலே புகுந்து காதிலே வரக்கூடாதுஉன் அகன்ற தீ வாயிலேஅவர்களை விழுங்கிவிட்டுபொதுவுடைமை பூமியிலே காலூன்ற வேண்டும் செல்லுங்கள்திசை மாறிச் சென்று சோம்பிக் கிடக்காதீர்கள்உங்களுக்குநாங்கள் ‘போ போ’ என்று கட்டளை இடவில்லைஉங்கள் காதுகளிலே ‘போர் போர்’ என்றதாரக மந்திரத்தை உச்சரித்து அனுப்புகிறோம் உங்களுக்காகஏழை மக்கள் கோடி கோடியாகக்காத்துக் கிடக்கின்றனர்அவர்களின் கைகளிலேயேஉறுதி மிகுந்த அன்புப் பிணைப்பினை ஏற்படுத்துங்கள்முதலாளித்துவத்தின் தலையிலேசதிராட்டம் போடுங்கள்

பள்ளிக் கல்வியில் வைதீகத்தின் கூறுகள்

பள்ளிக் கல்வியில் வைதீகத்தின் கூறுகள்

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து குறித்து AISEC கலந்துரையாடல் பள்ளிக்கல்வியில் பஞ்ச கோஷா விகாஸ் என்ற பிற்போக்கு சிந்தனை சார்ந்த கருத்து நுழைக்கப்படுவதை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த curriculam frame work இல் மதம் எவ்வாறு கோலோச்சுக்கிறது என்பதைப் பேராசிரியர் யோகராஜன் தொடர்ந்து விளக்குகிறார். The Panchakosha concept and imagination also maps into the different domains of development envisaged in ECCE which are the basis of the Curricular Goals. இந்த பஞ்ச கோஷா கோட்பாடும் கற்பனைத் திறனும்தான் curricular goals  இல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறுகின்றனர். தயவுசெய்து இந்த curricular  goals என்ற வார்த்தையை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதெல்லாமே இதற்கான விளக்கங்கள் (Substantiation). மேலும் அவர்கள் கூறுவது என்னவென்றால், Physical development (sharirik vikas) சரீரம் என்றால் உடம்பு, விகாஷ் என்றால் வளர்ச்சி, development of Life energy (Pranik Vikas), இதெல்லாம் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம். Emotional / mental development (Manasik Vikas), Intellectual drelopment (Bauddhikvikas) Spritual development (chaitsik Vikas) ஆனந்தமய கோஷா இருக்கிறதே, அதனுடைய நீட்சிகளே இவை. எல்லாமே சமஸ்கிருத வார்த்தைகள். இப்படித்தான் அனைத்தையும் இந்த frame work இல் விவரிக்கின்றனர். வைதீகத்தில் இரு முக்கியமான கூறுகள் இருக்கும். ஒன்று ஸ்ருதி, மற்றொன்று ஸ்மிருதி. விவேகானந்தரின் எழுத்துகளை எடுத்து வாசித்தால்கூட, அவர் சொல்வது ஸ்ருதி, ஸ்மிருதியில் ஸ்ருதியைத்தான் அடிப்படையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பார். ஸ்மிருதியை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது; கொள்ளவும் முடியாது, ஏனெனில் அது வெறுமனே ஒருவருடைய நினைவிலிருந்து மற்றொருவருக்கு வாய்மொழியாகக் கடத்தப்படுவது. அதனால் அதன் உண்மைத்தன்மையை யாரும் பார்க்க முடியாது. ஆய்வு செய்வதானால் ஸ்ருதியை மையமாக வைத்துதான் ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்கிறார் விவேகானந்தர்.                           கல்வி கற்கக்கூடிய குழந்தைகளுக்கு ஞாபக சக்தி – நினைவாற்றல் மிக  முக்கியம் என்பது நம் எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். அதை நாம் எடுத்துக் கூற வேண்டுமானால் நினைவாற்றல் குறித்து நவீன அறிவியல் என்ன சொல்கிறது என்றும் மிக அழகாக விவரிக்கலாம். ஆனால் அப்படிக் கூறாமல், The ancient Indian emphasis on Smirithi என்கின்றனர். எல்லா இடத்திலேயும் ancient என்ற சொல்லைப் பார்க்க முடிகிறது.  Since Vedic era, the ancient Indian holistic natural Indian natural medical system of Ayurveda has also been a guide to early childcare practices… இதற்கு முன்பு வரை இதுபோன்ற பேச்சுகளை நவீன அறிவியலையும்  பண்டைய இதிகாசங்களையும் இணைக்கும் விஷங்களை அரசியல் தலைவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்தனர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இங்கு  பாடங்களில் பேசுகின்றனர். ஏற்கனவே அறிவியல் குறித்து மிக ஆழமாகத் தெரிந்தவர்களுக்குத் தெரியும், அறிவியலின் ஒரு பிரிவான இயற்பியல் துறையை ரோமானிய இயற்பியல், கிரேக்க இயற்பியல், தமிழக இயற்பியல், இந்திய இயற்பியல், அமெரிக்க இயற்பியல் என்று யாரும் பிரிக்க முடியுமா? பிரிக்க மாட்டோம். ஏன் பிரிப்பதில்லை? ஏனெனில்  இயற்பியல் என்பது அறிவியல் பாடத்தில் உள்ள ஒரு துறை, அங்கு பொதுவாக பொருட்களின்  இயக்கத்தின் விதிகள் குறித்துப் படிக்கிறோம். உலகம் முழுமைக்கும் அந்த விதிகள் பொதுவானவை. அவர்கள் கூறுவதை அவ்வாறே பாருங்கள். Since the Vedic era, the ancient Indian holistic natural medical system of Ayurveda has also been a guide to early childcare practices, with one of its eight branches dedicated to the care of children. The approach to knowledge and understanding of childcare in Ayurvedic texts was holistic. The biological, psychological, sociological, and cultural approaches were seen as mutually inclusive. In the contemporary practice of Ayurveda, Kaumarabhrithya, the first section of the Kashyapa Samhita, is often consulted for the practice of paediatrics, gynaecology, and obstetrics. It is reported to have been written in the 6th century BCE. உலகத்தில் விவசாயம் தோன்றி 20,000 வருடங்கள் ஆயிற்று. ஆகவே இருபதாயிரம் வருடங்களாக உலகில் நாகரிகம் உருவாகியுள்ளது. இப்படி நீண்ட காலமாக வளர்ந்ததால் பல இடங்களில் பல மருத்துவ முறைகள் தோன்றியுள்ளன என்பது உண்மைதான். இப்படி மருத்துவ முறைகள் தோன்றியிருந்தாலும், வளர்ச்சி அடைந்து வளர்ச்சி அடைந்து உண்மையிலேயே அறிவியல் எல்லாம் சரியாக இணைக்கப்பட்டிருந்தால் எப்படி மாறியிருக்க வேண்டும் எனில், “மருத்துவ அறிவியல்” என்று மாறியிருக்க வேண்டும். அதாவது, ஆயுர்வேதம் என்பது இல்லை, யுனானி என்பது இல்லை, ஆங்கில மருத்துவம் என்பது இல்லை, சித்தா என்பது இல்லை, ஹோமியோபதி என்பது இல்லை. அனைத்தும் இணைந்து “மருத்துவ அறிவியல்” – யுனிவெர்சல் மெடிக்கல் சயின்ஸ் என்று மாறியிருக்க வேண்டும் என்பது அறிவியல் பார்வை கொண்ட எல்லாருக்கும் தெரியும். இன்னும்  அறிவியலால் அப்படி இணைக்க முடியாததால், அவையெல்லாம் தனித்தனியாக இருக்கின்றன. சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், ஆயுர்வேதம் ஆகியவற்றின் கருத்துகள், கொள்கைகள் ஆய்வு செய்யப்படவேண்டும். இதெல்லாம் ஆய்வு செய்து அறிவியல் முறைக்குக் கீழ் வந்துவிட்டால் எல்லாமே மருத்துவமுறையாக மாறிவிடும். அதன்பிறகு அது சித்தாவாகவோ, யுனானியாகவோ ஆயுர்வேதமாகவோ இருக்காது.  2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுர்வேத அறிவானது மிக உயர்ந்த அறிவு. ஆனால் இன்று இருக்கக்கூடிய நவீன அறிவியலில் இந்த அறிவை மிக உயர்ந்த அறிவு என்று சொல்லிவிட முடியாது.  ஆனால் இதையும் NCF வடிவமைப்பில் curicular  goal ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.  Samskaras (சம்ஸ்காராஷ்) என்ற சொல் இதில் பல இடங்களில் வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளில் வருகிறது. இதன் பொருளை பொதுவாக நாம் எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால், Disposition, attainment of  values, அப்படின்ற பொருளில் வரக்கூடிய வார்த்தைகள் என்ன மாதிரியான attainment? உதாரணமாக, பிள்ளை  பால் குடிப்பருவம் முடித்துவிட்டது, திட உணவு உண்ணும் பருவம் வந்துவிட்டது, அதற்குப் பண்டை காலத்தில் என்ன பெயர் என்றால் அன்னப் பிரசன்னா (Annaprashana). இன்றிலிருந்து பிள்ளைக்குப் பருப்பு சோறு தரப் போறோம். அதுபோல, பிள்ளையின்  விரல்கள்  ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வலிமையுடையதாக ஆகிவிட்டது. அதன் சிந்தனைகள் கேள்விகள் கேட்கும் அளவு வளர்ந்துவிட்டது. அவர்களுக்கு எழுத்து பழக்க வேண்டும். இது ஒரு சம்ஸ்காரா, இதை vidyarambha  அல்லது Aksharabhyasa என்கின்றனர். இப்படி எல்லா இடங்களிலும் சமஸ்கிருதப் பெயர்கள்தான் இருக்கின்றன. இவற்றை எல்லாம்  NCF-க்குள் கொண்டு வருகிறார்கள். இதைப் பெருமை என்று கூறுகின்றனர்.  மேலும், முழுமையான ஆண் மகன் அல்லது மனிதன் என்றால் pursuit of the four Purusharthas , Dharma – நியாயம்  Artha  – பணம் (Wealth)  Kama (Pleasure) மகிழ்ச்சி and Moksha. (Salvation), இந்த சம்ஸ்காராக்களை நோக்கிக் குழந்தைகள் பயணம் பண்ணக்கூடிய வகையில் இந்த NCF வடிமைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகின்றனர். இத்தோடு நின்றுவிடவில்லை. இந்தியாவில் கல்வியின் அடையாளமாக யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்றும் கூறும்போது உண்மையிலேயே  சாவித்ரி பாய் பூலே, ஜோதிராவ் பூலே குறித்துக் குறிப்பிட்டுள்ளனர். நாமும் குறிப்பிடுவோம். ஆனால் எதார்த்த இந்தியாவில் கல்விக்கான முன்னோடி என்றால் ஈஸ்வர சந்திர வித்யாசாகரைத் சொல்வோம். ஏனென்றால் வங்கத்தில் தெருவில் நின்று பிச்சை எடுக்காதது மட்டும்தான் குறை, அப்படியான வழிவகைகளில்  பணியாற்றி, எண்ணற்ற பள்ளிகளைத் திறந்தது அவர்தான். அதன் காரணமாகத் தான் வங்கம் முதலில் கண்ணைத் திறந்தது. அதனால்தான் வங்கத்தை உடைக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் நினைத்தனர். இந்திய  மறுமலர்ச்சியின் தந்தை  ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ஆனால் அவரை இங்கு குறிப்பிடவில்லை.  அவருக்குப் பின் வந்த பூலே தம்பதியினரைச் சேர்த்துள்ளனர். அவர்களிருவரும் மிகப் பெரிய ஆளுமைகள்தான். அவர்களுடன் ரபீந்தரநாத் தாகூரைச் சேர்த்துள்ளனர். அவரையும் சிந்தனையாளர் என்று ஏற்று இருக்கிறது இந்த NCF. மற்றும் சுவாமி விவேகானந்தரையும் குறிப்பிடுகின்றனர். சுவாமி விவேகானந்தர் கல்வி குறித்து ஏராளமானவற்றைக் கூறியுள்ளார். ஆனால் இவர்கள் எதைச் சேர்த்திருக்கிறார்கள் என்றால், Is the empirical world all that we need to know? Is this all that we are? Should the improvement of material aspects of human existence all that we need to strive for? For him, the core of human existence and human possibilities lies in atman (the self).. atman. (the self)…என்பதன்  உண்மையான அர்த்தம் ஆன்மா என்று சொல்லலாம். எத்தனையோ விஷயங்களை அற்புதமாகப் பேசியிருக்கிறார் விவேகானந்தர். ஆனால் அவர் கூறிய இந்தக் கூற்றை மட்டுமே இங்கு இவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அடுத்து மகாத்மா காந்தியடிகள்.  நாமும் அவரை ஏற்றுக்கொள்ளலாம். அடுத்து அரபிந்தோ, அவரது புரட்சிகர ஆரம்ப கால வாழ்க்கையைப் புகழ்வோம். ஆனால் கல்வி குறித்து அவரது கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எந்தவொரு ஜனநாயக மதச்சார்பற்ற நாடும் விழிப்புணர்வுள்ள மக்களும்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அடுத்து ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. அவரையும் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.  இவர்கள் எல்லாரும் கல்வியில் முக்கியப் பங்காற்றி இருப்பதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தவிர குறிப்பிடபபடும் வேறு இருவர், கிருபாஜி பதேகா மற்றும் தரபா மோடகி. இவர்கள் இருவரும் மராத்திய குஜராத் பகுதியைச் சேர்ந்தவர்கள், இருவரும்  சீர்திருத்தவாதிகள் . அடுத்து Current State learning crisis குறித்துச் சொல்கின்றனர். பிரச்சனைகனைக் குறித்துப் பேசுபவர்கள், தீர்வுகளைச் சொல்லியிருப்பார்கள் என்று தேடினால் அதுபற்றி எதுவுமே இல்லை. அடுத்து  சில புள்ளி விவரங்கள் தருகின்றனர். 11.7 இலட்சம் பள்ளிகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அவற்றில் 9.3 லட்சம்  தொடக்கப் பள்ளிகள், 1.9 இலட்சம்  முன்பருவப் பள்ளிகள்  (Pre Primary), 2.7 லட்சம் அங்கன்வாடிப் பள்ளிகள் இருக்கின்றன. அங்கன்வாடியும்  முன்பருவப் பள்ளிகளும் நிச்சயமாக நமக்குப் போதுமானதாக இருக்காது. அதைப்பற்றிக் கூறுகின்றனர். 

பாரதி கவிதா மண்டலத்தின் மூன்றாம் தலைமுறை

பாரதி கவிதா மண்டலத்தின் மூன்றாம் தலைமுறை

கவிஞர் தமிழ் ஒளி பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக கவிதையில், புதுப் பாதைகளை உருவாக்கி, தமிழ் மக்களின் சிந்தனைப் போக்கில் முழுமையான மாறுதலுக்கு அடித்தளமிட்ட பாரதி முதல் தலைமுறை என்றால், பாரதி விட்டுவைத்துப்போன சொத்து என்று புதுமைப்பித்தனால் புகழப்பட்டவரும் பாரதியின் கருத்துகளால் ஈர்ப்புற்று எளிய பாடல்களை எழுதியவருமான பாரதிதாசன் இரண்டாம் தலைமுறை. இருவரும் வகுத்துச் சென்ற வழியை மேலும் செம்மைப்படுத்திய கவிஞர் தமிழ் ஒளி மூன்றாம் தலைமுறை. பாரதி கவிதா மண்டலத்தில் முத்திரை பதித்தவர் கவிஞர் தமிழ் ஒளி. இவரது இயற்பெயர் விஜயரங்கம். குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூரில் 21.09.1924இல் பிறந்த இவர், மாணவப் பருவத்திலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். பாரதி, பாரதிதாசன் ஆகியோரால் உந்தப்பட்டு, உணர்வுத் தாகமும் சிந்தனை வீச்சும் நிறைந்த கவிதைகளை எழுதி மக்களின் கவனத்தைப் பெற்றவர். பாண்டிச்சேரியில் பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் போன்வேன் (Bonvan) என்ற ஆளுநரின் மகளின் ஆணவத் திமிரைக் கண்டு ஆத்திரம் அடைந்த தமிழ் ஒளி, அவளது அதிகாரத்தைப் பற்றித் துண்டுப் பிரசுரம் எழுதி நகரெங்கும் பரப்பினார். இதனால் அவரால் பாண்டிச்சேரியில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இரண்டு வாரங்கள் புதுவையில் சிறைவாசம். விடுதலை செய்யப்பட்ட பிறகு பாரதிதாசனின் முயற்சியால் தஞ்சை மாவட்டம் கரந்தை தமிழ்க் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அங்குதான் தன்னுடைய பெயரை தமிழ் ஒளி என மாற்றிக்கொண்டார். பிறர் துன்பம் கண்டு பொங்கி எழுபவர், வேதனைப்படுபவர், தான் வாழும் சமுதாயத்தில் மக்கள் படும் இன்னல்களைக் கண்டு மக்களைப் போலத் தானும் கவலை கொள்ள வேண்டும்; இன்னல்களையும் தடைகளையும் எதிர்த்து நிற்கும் வல்லமையைப் பெறுவதற்குப் பாடுபட வேண்டும்; அவனே உண்மையான கவிஞன் என்பதற்கேற்ப வாழ்ந்து காட்டியவர். இந்திய நாட்டிலும் உலகம் முழுவதும் எத்திசையில் எது நடந்தாலும் கொடுமைகளை எதிர்ப்பதிலும் நல்லவற்றை வரவேற்பதிலும் ஆர்வம் காட்டினார். ‘பொதுவுடைமைப் போர்க்களத்தில் வீரக் கவிஞனாக விளங்கியவர் தமிழ் ஒளி’ என்று இவரைப் பற்றிப் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை சரியாகவே கணித்துள்ளார். அது உண்மையே. தனது காலத்தின் பொதுவுடைமை இயக்கத்தின் சாதனைகளையும் மக்கள் எழுச்சியையும் தமிழ் ஒளியைப்போல எந்தக் கவிஞனும் வீறுடனும் கவித் திறத்துடனும் வெளிப்படுத்தவில்லை. இவர் கவிதையையே வாழ்வாகக் கொண்டவர். வாழ்க்கையையும் கவிதையாக மாற்றியவர். தனக்கென்று வேறு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதவர். கவிஞனாகவே வாழ்ந்து முடிந்தவர். வங்கக் கவிஞன் நஸ்துலைப் போல, உலகப் புகழ்பெற்ற கவிகளான ஷெல்லி, பைரனைப் போல, தமிழ் ஒளியும் கவிதையையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து காட்டியவர். ‘பாரதி பரம்பரை’ என்ற கவிதையில் அவர் தன்னை யார் என்று அடையாளம் காட்டி, பெருமிதமும் அடைகிறார்.‘கண் வழி சொட்டுங் குருதியொடுங் கானில் வழிதடவி – தமிழ்ப்பண் வழி சென்று பழம் புகழ் சேர்த்தவன் பாரதி’ என்கிறார். சேரியில் வாழ்ந்த வீராயி, பிறந்த நாட்டிலும் வாழ முடியாமல், கடல் கடந்து ஆப்பிரிக்க நாட்டுக்குச் சென்று பிழைத்தாலும் அங்கும் எமனாகத் திரிந்து சுரண்டும் முதலாளித்துவக் கொடுமைகளை, ‘வீராயி’ என்ற காவியத்தில் கொதிப்போடு எடுத்துக்கூறியிருக்கிறார் கவிஞர் தமிழ் ஒளி. முத்தியாலுப்பேட்டை கல்வே கல்லூரியில் பாரதிதாசன் ஆசிரியராகப் பணியாற்றியபோது தமிழ் ஒளி அவரது மாணவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை தினமான மே தினத்தை, ‘கோழிக்கு முன் எழுந்து கொத்தடிமைபோல் உழைத்து, பாடுபட்ட ஏழை முகம் பார்த்துப் பதைபதைத்து, கண்ணீர் துடைக்க வந்த காலமே, நீ வருக! மே தினமே நீ வருக!’ என முதன்முதலில் தமிழில் பாடியவர் தமிழ் ஒளியே. ‘சிலப்பதிகாரம் காவியமா? நாடகமா?’ என்னும் நூலில், ‘பல்வேறு கலை வடிவங்களைக் குறிக்கும் பல்வேறு சொற்களும் இயற்கையே என்பதை உணராமல், ஒரே பொருளைக் குறிக்கப் பல சொற்களும் உள்ளன என்று கருதி அரைத்த மாவை அரைத்தும் சுற்றியசெக்கையே சுற்றியும் தமிழ் உலகம் புதுமையைக் காணவும் இல்லை; பழமையைப் பேணவும் இல்லை; நாணவும் இல்லை. இதுவே இன்றைய நிலை’ என்று ஆதங்கப்படுகிறார். ‘மூன்று காண்டங்களும் 30 காதைகளும் அடங்கிய சிலம்பு கதை, பாடுவோனால் அரங்கில் பாடப்பெறவும் ஆடுவோரால் கூத்துகள் ஆடப் பெறவும் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி ஆகியன கூடப் பெறவும் சிறந்து விளங்கும் இசை நாடகமாகத் திகழ்கிறது’ என்று கூறுகிறார். தமிழகத்தில் பண்டு பெருகியிருந்த இசை நாடகங்களின் கடைசிச் சுடரே சிலப்பதிகாரம். அது கடைசிச் சுடர் ஆகையினாலேதான், இளங்கோவடிகள் இசை நாடக இலக்கணத்தையும் சிலம்பினுட் பொதிந்து வைத்தார். ‘நிலை பெற்ற சிலை’யில் காதலன் மருதவாணன், காதலி வஞ்சி இருவரும் ஊரின் எதிர்ப்புக்கு மத்தியில் தனியாகச் சந்திக்கிறார்கள். காதலனைக் கண்டதும் வஞ்சி நாணமும் அதிர்ச்சியும் கொண்டு பேசாது ஒதுங்கி நிற்கிறாள். ‘நீ எட்டப் போய் நிற்கலாமா?’ என்று கேட்டு வஞ்சியை வாரி அணைத்துவிடுகிறான். அதற்கு வஞ்சியும் ‘தங்கள் காதல் ஏவி வரும் உணர்ச்சியினை, என்றன் உள்ளம் எட்டி அணைக்காமல் இருந்திடுமோ அத்தான்?’ எனக் கேட்க, ‘இருவரும் நீ நான் என்றில்லாமல் ஒன்றிவிட்டார் இருள் கிழித்தே; நிலவோடு வான் தழுவ நிறைந்தது இன்பம்’ என்று, காதலர் கூடுவதை இயற்கை இன்பத்தோடு இணைத்துக் கற்பனையாக கூறும் அழகே காதலரின் அன்பை உயர்வுபடத் தெரிவிக்கிறது. ‘தமிழர் சமுதாய நிலை’ நூலில் குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் தொழில் மாற்றங்கள், இறை வணக்கம் பற்றிய செய்திகளைப் புதிய கண்ணோட்டத்தில் ஆய்வு செய்திருக்கிறார். நிலப் பிரபுத்துவச் சமுதாயம், கற்பனைகளையும் புராணங்களையும் ஏற்றுக்கொண்டதன்மூலம், தன் பண்டைய மரபான பொருண்முதன்மைக் கருத்தை வளர்க்கத் தவறிவிட்டது என்கிறார். வீரவணக்கம் கடவுள் வணக்கமாய் மாறியபோது, அதாவது சமயங்கள் முகிழ்த்தபோது அச்சமயங்களில் எண்ண முதல் கருத்துகளே தலைமை வகித்தன என்கிறார். 40 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர் தமிழ் ஒளி, பல துறைகளில் தனது தமிழ் அறிவைப் பயன்படுத்தி, அரிய பல நூல்களை இயற்றினார். ‘தனிப்பட்ட முறையில் எனது தோழராகவும் ஆசானாகவும் திகழ்ந்தவர் கவிஞர் தமிழ் ஒளி. தமிழ் மொழியில் அவர் அறியாத துறை இல்லை’ என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் தனது இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்களில் குறிப்பிடுகிறார். ‘தமிழ் வானத்தில் விளங்கிய ஒரு விண்மீன்! அதன் மங்காத கவிதை ஒளியைப் போற்றுவோமாக!’ என்று சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் டாக்டர் மு. வ. தமிழ் ஒளி கவிதைகள் வெளியீட்டுக்கு முன்னுரை எழுதியிருக்கிறார். 1957ஆம் ஆண்டு விண்வெளிப் பயணம் வந்த நேரத்தில், ‘அந்தரத்தில் மேடை அமைத்தான்’ என்ற பாடலை எழுதியிருக்கிறார். சந்திர மண்டலத்தில் மனிதன் போய் தரையிறங்கிய நேரத்தில், ‘சரித்திரத்தையும் மாற்றியது மனித சக்தி; சாத்திரத்தை மாற்றுவது மனித சக்தி’ என்று பாடினார். பாரதி, பாரதிதாசன், தமிழ் ஒளி, பட்டுக்கோட்டை என்று நேர் செய்ய வேண்டிய தேவை அவரது நூற்றாண்டில் ஏற்பட்டிருக்கிறது. திருக்குறளில் பேசப்படும் இயற்கை நெறி சார்ந்த கடவுள் மரபு, வைதீக நெறி சார்ந்த கடவுள் மரபாகக் கட்டமைக்கப்படுவதை தமிழ் மொழி மறுக்கிறார். திருக்குறளின் மொழி அமைப்பு, சொற்களின் பொருள் ஆகியவற்றை விவாத முறையில் அணுகியவர் அவர். 25 அதிகாரங்களைக் கொண்ட திருக்குறள் காமத்துப்பாலை, தனது கண்ணோட்டத்தில் உரைநடையில் எழுதியுள்ளார். அவரது படைப்புகள், தொழிலாளி வர்க்கத்திற்கும் தமிழ் இலக்கியத்திற்கும் ஊக்கம் தந்து உற்சாகம் ஊட்டக்கூடியவை ஆகும்.

லொகி ஷெல்லே (ஒரு தேவதையின் முத்தம்)

லொகி ஷெல்லே (ஒரு தேவதையின் முத்தம்)

வங்க மொழித் திரைப்பட அறிமுகம் மேற்கு வங்கத்தில் இச்சான் கஞ் என்கிற கிராமத்தில் நிலவும், மனிதத்தை வதைக்கும் வகையிலான சமூக, மதக் கோட்பாடுகள் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து நின்று, அவர்களுக்குள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயலும், மூன்று இளம் மருத்துவ மாணவர்களைச் சுற்றிச் சுழலும் உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் அமைந்த வங்க மொழித் திரைப்படம்தான், கௌஷிக் கங்குலி துணிச்சலுடன் எழுதி இயக்கி, சோனி லைவ் தளத்தில் தமிழ் உட்பட ஆறு மொழிகளில் வெளியாகியுள்ள ‘லொகி ஷெல்லே.’ “லட்சுமி, மாதாவோட மறுபிறப்பு! நாலு கை இருந்துச்சாம்…” இந்தச் செய்தியும் சாரை சாரையாக மக்கள் செல்வதும் அந்தக் கிராமமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதும், ஒரு திருமணத்திற்குச் சென்று கொல்கத்தா திரும்பும் வழியில் கார் பழுதானதையடுத்து, அதில் வந்த இளம் மருத்துவர்களான அமீர் உசேன் (உஜ்ஜ்ன் கங்குலி), காயத்ரி சட்டர்ஜி (ரித்விகா பால்) ஹிப்நாத் தாத்தா (புரப் சீல் ஆச்சார்யா) ஆகியோரை அங்கேயே தங்கவைத்துவிட்டது. பத்திரிகையாளர் ஜாய் மித்ரா (அம்ரிஷ் பட்டாச்சாரியா) தந்த கூடுதல் தகவல்கள், குழந்தை லட்சுமியைப் பார்க்கத் தூண்டியது. குழந்தையைப் பார்த்துக்  குழப்பம் அடைந்து, தொடர்பு கொண்ட மூத்த மருத்துவர் டாக்டர் மிதாலி சென் (சுர்னி கங்குலி), அந்தக் குழந்தை ‘பாராசிட்டிக் ட்வின்ஸ்’ என்றும் கூடுதலான கைகளை அறுவை சிகிச்சை செய்து அகற்றாது விட்டால், அக்குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்றும் தெரிவிக்க, அதிர்ச்சி அடைகின்றனர். தீண்டத்தகாதவர்களாக அதுவரை ஒதுக்கி வைக்கப்பட்ட அந்தக் கிராமத்தில், கடவுளே வந்து பிறந்துள்ளதாக நம்பி, அம்மக்களும் சுற்றியுள்ள கிராம மக்களும் குழந்தை லட்சுமியைத் தரிசிக்கவும் காணிக்கை செலுத்தவும் குவியத் தொடங்குகின்றனர். இதனை அறிந்த ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், அந்த மக்களின் அறியாமையைப் பணமாக்கவும் அந்தக் குழந்தையை வணிகப் பொருளாகக் காட்டித் தங்களுக்கான நிரந்தர வருமானமாக மாற்றவும் திட்டமிட்டுக் காய் நகர்த்துகிறது. “எல்லாம் மூட நம்பிக்கை… இதே மாதிரிதான் சில வருஷத்துக்கு முன்ன, பிள்ளையார் பால் குடிச்சதா சொன்னாங்க” என்று சொன்ன அமீர், எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்று முனைகிறான். நண்பர்களுடனும் பத்திரிகையாளர் ஜாய் மித்ராவுடனும் சேர்ந்து, அதற்கான திட்டத்தை வகுக்கிறான். குழந்தையின் தன்மையை உணராத, அதன் உருவத்தை வைத்துக் கடவுளின் அவதாரமாக நம்புகிற,  அறியாமையில் உழலும் மக்கள் ஒருபுறம். அவர்களின் அறியாமையையும் அந்தக் குழந்தையையும் வைத்து வருமானம் பார்க்க விழையும் ஆதிக்க சாதிக் குடும்ப வாரிசான ரஜத் நாராயன் ராய் (இந்ராசிஷ் ராய்) அடியாட்களுடன் மறுபுறம். இவர்களிடமிருந்து அந்தக் குழந்தையை மீட்டு, உரிய அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வேண்டும் என்று அமீர் உசேன்  வகுத்த திட்டம் வெற்றி பெற்றதா என்பதுதான் ‘லொகி ஷெல்லே’ படத்தின் மீதிக் கதை. கௌஷிக் கங்குலி செதுக்கிய பாத்திரப் படைப்புகளும் அப்படைப்புகளை உணர்ந்து உயிர் கொடுத்துள்ள கலைஞர்களும் திரைப்படத்தை இறுதிவரை விறுவிறுப்பாகவும் உணர்வுப்பூர்வமாக நெகிழச் செய்வதாகவும் சில காட்சிகளில் மனதை உலுக்கிவிடுவதாகவும் சிந்தனையைத் தூண்டுவதாகவும் ஆக்கிவிடுகின்றனர். உஜ்ஜன் கங்குலி, ரித்விகா பால், புரப் சீல் ஆச்சார்யா, சுர்னி கங்குலி, இந்ராசிஷ் ராய், அம்ரிஷ் பட்டாச்சார்யா, ரிவிடொபிரிடோ சென், பிரிதீப் பட்டாச்சாரியா போன்ற முதன்மைப் பாத்திரங்களின் அட்டகாசமான நடிப்பிற்குக் குறையில்லாமல், குழந்தையின் அம்மா உட்பட துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பை வழங்கியுள்ளது சிறப்பு. இப்படி, சிந்தனையைத் தூண்டும் வசனங்களாலேயே கட்டமைக்கப்பட்ட அற்புதமான திரைக்கதை. கோபி பகத்தின் ஈர்ப்பான ஒளிப்பதிவும் பிரபுதா பானர்ஜியின் பின்னணி இசையும் பாடலிசையும் சுபஜித் சின்காவின் கச்சிதமான படத்தொகுப்பும் கௌஷிக் கங்கோலியின் இயக்கத்திற்கு விறுவிறுப்பைக் கூட்டி, வலு சேர்க்கின்றன. இந்தியாவில் இரண்டொரு மாநிலங்களைத் தவிர்த்து, இதர மாநிலங்களில் பெருவாரியான கிராமங்களில், ஏன் நகரங்களில் ‘படித்த’ மாந்தர்கள் உட்பட, மதரீதியாகக் கட்டமைக்கப்பட்ட புராண, இதிகாசக் கதைகளில் மாற்றுச் சிந்தனையின்றி ‘நம்பிக்கை’ கொண்டு வாழும் அப்பாவி மக்களும் அறியாமையில் உழலும் அம்மக்களைச் சுரண்டும் சாதி அடுக்கில் மேலோங்கி நிற்கும் ஆதிக்க, ஆன்மிகவாதிகளின் கட்டுக்கடங்காத சுரண்டல் அராஜகங்களும் அவற்றுக்குமிடையே அரிதாக உயிரைப் பணயம் வைத்தும் மனிதத்தை உயர்த்திப் பிடித்து உணர்த்தும் சில மனிதர்களும் உள்ள நடப்பை, படம்பிடித்துக் காட்டும் சீரிய படைப்புதான் ‘லொகி ஷெல்லே’   “சிட்டியோ கிராமமோ, அங்கு லட்சுமி மாதிரி யாரையாவது ஒரு குழந்தையப் பார்த்தீங்கன்னா, அமீர் வர்ற வரையில வெயிட் பண்ணாதீங்க. அதுக்குப் பதிலா, நீங்களே அமீர் ஹுசைன் மாதிரி களத்துல இறங்குங்க!” பத்திரிகையாளர்  ஜாய் மித்ராவின் இறுதியான இந்த வார்த்தைகள்தான், நெடுநாட்களுக்குக் காதுகளில் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கும்.   மதிப்பெண்: 8/10

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC நடத்தும் உரையாடல்

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC நடத்தும் உரையாடல்

புதிய தேசிய கல்விக் கொள்கை, நீட் போன்றவற்றைப் பற்றிப் பொதுமக்களிடம் முழுமையான புரிதல் இல்லாவிட்டாலும்கூட ஓரளவுக்கேனும் அவை குறித்த அறிமுகமும் செய்திகளும் அவர்களைச் சென்று சேர்ந்திருக்கின்றன. ஆனால், ஒன்றிய அரசு கல்வித்துறையில் செய்துவரும் பரவலான மாற்றங்கள் குறித்த முழுமையான புரிதல் பெரும்பாலான கல்வியாளர்களிடம் கூட இல்லை என்பதே கசப்பான உண்மை. மாற்றங்கள் என்பவை மாறாதவை என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அந்த மாற்றங்கள் எதை நோக்கி நம்மை வழிநடத்துகின்றன என்பதுதான் நம்முன் நிற்கும் முக்கியக் கேள்வி. இந்தச் சூழலில் குழந்தை பிறந்தது முதலே கல்வி என்ற நடைமுறையைப் புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதோடு, அதற்கான செயல்திட்டங்களும் வெளியாகிவருகின்றன. தொடக்கக் கல்விக்கான NCFFS (National Curriculum Framework For Foundational Stage) என்ற கலைத்திட்டம் அண்மையில் வெளியிடப்பட்டது. அதைக்குறித்து பொதுத்தளத்தில் ஒரு புரிதலை உருவாக்கும் நோக்கில், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, மெய்நிகர் உரையாடல்களை நடத்தி வருகிறது. இந்த உரையாடலின் தொடக்கமாக நடைபெற்ற முதல் கூட்டத்தில் NCFFSஇன் முதல் இரண்டு அத்தியாயங்கள் விரிவாக விளக்கப்பட்டன. அந்தப் புரிதலை அனைவருக்கும் எடுத்துச் செல்லும் வகையில் கூட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளின் தொகுப்பை வெளியிடுகிறோம். நிகழ்வை ஒருங்கிணைத்த தோழர் சுதாகர், இந்த உரையாடலின் நோக்கம் குறித்து நிகழ்த்திய உரை:   சென்ற வாரம் செய்தி ஊடகங்களில் +2 பொதுத் தேர்வு பற்றிய செய்தி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களால் பெரிதும் உற்று நோக்கப்பட்டது. NCFஇன் பரிந்துரைப்படி இனிமேல் +1, +2 வகுப்புகளுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். (இந்த நடைமுறைக்கு  மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழும் என்பதால்) நடத்தப்படும் இரண்டு தேர்வுகளில் எதில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனரோ அதை அந்தக் கல்வியாண்டின் மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும் செய்தி வெளியிடப்பட்டது. 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையைப் பற்றி அறிந்தவர்களுக்கு இந்தத் திட்டம் என்பது, 9 முதல் 12ஆம் வகுப்புகள் வரை செமஸ்டர் முறையை அறிமுகப்படுத்த வலியுறுத்தும் NEP 2020இன் வழிகாட்டுதலின் தொடக்கப் படிதான் என்று நன்கு தெரியும். NEP 2020 பற்றிப் பலரும் பரவலாக அறிந்திருந்தாலும் NCF (National Curriculum Framework) என்றால் என்ன? NEP – NCF இரண்டிற்கும் உள்ள வேறுபாடு மற்றும் தொடர்பு என்ன? என்பன போன்ற பல கேள்விகள், சந்தேகங்கள் இருக்கின்றன. இந்தச் செய்தி வருவதற்கு முன்பாகவே, NCF என்கிற நாசகாரக் கட்டமைப்புப் பற்றி நன்கு அறிந்து, அதனை மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், கல்வி மீது அக்கறை கொண்டவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ‘அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி’ திட்டமிட்டிருந்தது. எனவே ஒரு விரிவான ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்துவது எனத் திட்டமிட்டு, முதல் மெய்நிகர் கூட்டம் 30.08.2023 அன்று நடைபெற்றது.   தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை 2019ஆம் ஆண்டு சற்றேறக் குரிய 400க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ஆவணமாக வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து தேசிய கல்விக் கொள்கை 2020 மத்திய அரசாங்கத்தால் எந்தவித விவாதமும் இல்லாமல் தன்னிச்சையாகக் கொண்டு வரப்பட்டு, அதைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நாம் அறிவோம். NEP 2020, இங்குள்ள கல்வி அமைப்பைப் பல படிநிலைகளாகப் பிரிக்கிறது. உதாரணமாக, பள்ளிக் கல்வியை 5+3+3+4 எனப் பிரிக்கிறது. அதோடு மட்டுமல்லாமல், அதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தத் தேவையான கலைத் திட்டங்களை (NCE) உருவாக்க மத்திய அரசு National Steering Committee என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு NCFFS  (National Curriculum Framework For Foundational Stage) என்ற கலைத் திட்டத்தை, 3 முதல் 8 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான கல்வி ஆவணமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Women and Child Development) உருவாக்கப்பட்டு, அதாவது பிறந்த குழந்தையிலிருந்து மூன்று வயது வரையுள்ள குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ECCE இன் (Early Childhood Care and Education) என்ற திட்டத்தின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளது. இது பிறந்த குழந்தைகளின் கற்றல் தூண்டுதல்களுக்கான வழிமுறைகளைப் பற்றியும் பிற வளர்ச்சிகளைப் பற்றியும் குறிப்பிடுவதுடன், சமூகப் பொருளாதார நெறிமுறைகள் மேம்பாடு (Socio Economical Ethical Development) குறித்தும் போதனைகளைப் பற்றியும் வழிவகுக்கிறது. அப்படி வழிவகுத்தவற்றைப் பெற்றோர்களிடமும் தன்னார்வலர்களிடமும் (Community members – volunteers) கொடுக்கின்றனர். யார் அந்தத் தன்னார்வலர்கள் என்று நம் எல்லாருக்கும் தெரியும். பிறந்த குழந்தைக்குக் கல்வி முறை என்பது உலகில் எந்த நாட்டிலும் இல்லை. நம் நாட்டில் மட்டும்தான் இதைக் கொண்டு வந்துள்ளனர். பலதரப்பட்ட சமூகக் கட்டமைப்புகளைக் கொண்ட நம் நாட்டில், மத்திய சமூக வளர்ச்சி அமைச்சகம் கூறும் விளக்கம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. அதே போல NCFSE (National Curriculum Framework For School Education) என்ற கலைத் திட்டத்திற்கான ஆவணத்தையும் பள்ளி மாணவர்களுக்காக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. அதேபோல, NHEQF (National Higher Education Qualification Framework) என்ற கலைத் திட்டத்திற்கான ஆவணத்தை உயர் கல்வி மாணவர்களுக்காக வடிவமைத்து வெளியிட்டுள்ளது. இந்த ஆவணங்கள் எதுவும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் வெளியிடப்படவில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 வெளியிடப்பட்டபோது தமிழ் மொழியிலோ மற்ற மாநில மொழிகளிலோ வெளியிடவில்லை. அதேபோல இந்த ஆவணங்களும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படவில்லை. மொழிப் பற்றாளர்களிடமிருந்தும் எந்தக் குரலும் இதுவரை எழுப்பப்படவில்லை. அதாவது இதன் முக்கியத்துவம் இன்னும் உணரப்படவில்லை என்று அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டி பதிவு செய்கிறது. இதன் காரணமாக, இதைப் பற்றிய தெளிவான புரிதலை மக்கள் மத்தியிலும் குறிப்பாக கல்வியாளர்கள் மத்தியிலும் பெற்றோர், ஆசிரியர், மாணவர் மத்தியிலும் உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த உரையாடலை நாம் தொடங்கியிருக்கிறோம்.  சிறப்பு அழைப்பாளர் ஊடகவியலாளர் சரவணபாரதி அவர்களின் வாழ்த்து: நீங்கள் எடுத்துள்ள இந்த அற்புதமான முயற்சி, சாதாரணப் பொதுமக்களுக்கும் சென்று சேர வேண்டியது. கருத்தரங்கில் கலந்துகொள்பவர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்தக் கருத்தரங்கில் நடைபெற்றதை உங்கள் எழுத்தின் வாயிலாகவும் உரையின் வாயிலாகவும் வீடியோ வாயிலாகவும் பல மக்களுக்கும் தெரியப்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு நல்ல முன்னெடுப்பை அனைவரும் எடுக்க வேண்டும். NCFFSஇன் முதல் இரண்டு அத்தியாயங்கள் குறித்து பேராசிரியர் யோகராஜன் விளக்கிப் பேசிய ஆய்வுரை: என் முன்னே இருக்கக்கூடிய பணி, எளிய பணி என்று என்னால் கருத இயலவில்லை. இதுவொரு மிக நுட்பமான பணி. ஏனெனில், இப்போது நாம் பேசக்கூடிய இந்தப் பொருண்மையானது, பல ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கக்கூடிய பல தத்துவங்களுக்கு இடையில் நிலவும் போராட்டங்களுடைய வெளிப்பாடு ஆகும். அதனை இப்போது கல்வித் தளத்திற்குக் கொண்டுவந்துள்ளனர். இதுவரை அரசியல், சமூகம், கலாச்சாரத் தளங்கள் என வெவ்வேறு தளங்களில் இப்பிரச்சனைகள் நிலவிவந்தன. அப்பிரச்சனைகளின் மையமாக இன்று கல்வி மாறிவிட்டது. கல்விக் கொள்கை (Educational Policy) என்பது  என்ன? கலைத் திட்டம் (Curriculam Framework) என்பது என்ன? என்பனவற்றை நாம் அடிப்படையிலிருந்து அறிந்துகொள்ள வேண்டும். கல்வித்திட்டம் என்பது அடிப்படையில் கொள்கை முடிவு ஆகும். கற்பித்தல் முறைகள் (Pedagogy) எப்படி இருக்க வேண்டும், கல்வி எப்படி இருக்க வேண்டும், ஆரம்பக் கல்வி எப்படி இருக்க வேண்டும், கல்வியை நிர்வகிக்கும் அமைப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்று கல்விக் கொள்கைகள் வரையறுக்கின்றன. இக்கொள்கைகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் அதற்கு ஒரு திட்ட வரைபடம் (Blue Print) வேண்டும். உதாரணமாக, ஒரு கட்டடம் கட்ட வேண்டுமென்றால் அதன் வடிவமைப்புக்கென ஒரு வரைபடம் உருவாக்கப்படுவதுபோல, கல்வியில் பாடத்திட்டம், வகுப்பறைகள், பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், ஆசிரியர்கள், கற்பித்தல் முறைகள், இன்னும் பலப்பல வழிமுறைகள், செயல்முறைகள் உள்ளிட்டவற்றைக் குறித்த திட்ட வரைபடம்தான் NCF. இந்தத் திட்ட வரைபடம் நான்கு அடுக்குகளில் வந்துள்ளது. எனவே இந்த நான்கு படிநிலைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இந்த உரையாடலில் நாம் ஆரம்பக் கல்விக்கான வரையறையையும் பள்ளிக் கல்விக்கான வரையறையையும் கையில் எடுத்துள்ளோம். தொடர்ச்சி நாளை வெளியாகும்.

கிழவனிடம் காதல் கொண்டேன்

கிழவனிடம் காதல் கொண்டேன்

புதிதாக ஒன்றையும் சொல்லிவிடப் போவதில்லை இக்கட்டுரை. எண்ணற்ற ஆளுமைகள் சொல்லியிருப்பவற்றைக் காட்டிலும் அரிதாக எதனையும் அள்ளித் தந்துவிடப் போவதில்லை நான். நூற்றாண்டைத் தாண்டியும் ஒடுக்குமுறையாளர்களைக் கனவிலும் கிலி கொள்ள வைக்கும் அக்கிழவனைப் பற்றிப் பேச என்னிடம் என்ன மிச்சமிருக்கிறது?! ஆனாலும், உலகம் முழுக்க ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தவர்கள் எண்ணற்றோர். அவர்களை நேசிக்கும் அதே வேளையில், எனது அதீத நேசிப்பென்பது இவ்வுலகில் இருவர் மீது மட்டுமே. அதிலொருவர், புரட்சியாளன் சேகுவேரா; மற்றொருவர், கலகக்காரன் ஈ.வே.ராமசாமி. தனது இனம் ஒடுக்கப்பட்டது, தனது மொழி ஒடுக்கப்பட்டது, தனது சாதி ஒடுக்கப்பட்டது, தனது மதம் ஒடுக்கப்பட்டது, தனது நாடு ஒடுக்கப்பட்டது, தனது வர்க்கம் ஒடுக்கப்பட்டது, தனது நிறம் ஒடுக்கப்பட்டது என்பதன் பொருட்டுப் புயலாய் எழுந்த மரியாதைக்குரியவர்கள் ஏராளம். ஆனால், தனிப்பட்டவிதத்தில் எந்தவித ஒடுக்குதலுக்கும் ஆளாகாமல் ராஜபோகமாய் வாழ்ந்துகொண்டிருக்கையிலேயே, தான், தனது, என்பதைத் தாண்டி  பிற மனிதர் துன்பம் காணச் சகியாது களத்தில் குதித்தார்களே, அதன்பொருட்டே ‘காதல் கொண்டேன்’ இவ்விருவர் மீதும். ஒட்டுமொத்த மானுடத்தையே நேசித்த டாக்டர் சேகுவேரா பிறந்ததோ அர்ஜன்டைனா. போராடியதோ கியூபா, புரட்சிக்கான விதைகளைத் தூவியதோ காங்கோ உட்படப் பல நாடுகள், மாவீரனாய்ச் சரிந்ததோ பொலிவியா. ஓரளவுக்கு அப்படித்தான் நமது கிழவனும். சமூகப் பணிக்கு வரும்போது ஈரோட்டில் அங்கம் வகித்த பதவிகள் மட்டுமே நாற்பதுக்கும் மேல். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஒலிக்கத் தொடங்கிய பெரியாரின் குரல் இருபதாம் நூற்றாண்டின் முக்கால்பாகம் வரை சுழன்றடித்த பின்பே ஓய்வு கொண்டது.  ஓய்வு கொண்டதென்னவோ உடல்தான். ஆனால் ஒடுக்குதல்களுக்கு எதிரான அவரது முழக்கங்கள் அரை நூற்றாண்டு கடந்தும் இன்றும் தென்னாட்டைத் தாண்டி, வடக்கு கிழக்கென வியாபித்து, போர்க்குரல் எழுப்புவோர் இடையே ஒலித்துக்கொண்டிருக்கிறது. யானையின் தும்பிக்கையினைப்போலப் போட்டுக்கொண்டிருந்த  ‘லை’யினையும் ‘னை’யினையும் சீர்திருத்தி, இன்றைக்கு இதனைக் கணினியில் தட்டச்சும்போதும்கூடப் பயன்படுகிற எழுத்துச் சீர்திருத்தத்தினை எண்பதாண்டுகளுக்கும் முன்னரே அறிமுகப்படுத்தியவர்தான் தந்தை பெரியார். தெலுங்குக் கீர்த்தனைகள் மட்டுமே பாடிக்கொண்டிருந்த தமிழ்நாட்டின் சங்கீத சபாக்களின் முன் தமிழில் பாடச் சொல்லிப் போர்க்குரல் கொடுத்ததோடு நில்லாமல் தமிழகமெங்கும் தமிழிசை விழாக்களை நடத்தத் துணை நின்றவர்தான் தந்தை பெரியார். இனம், நிறம், பால், மொழி, சமயம், பிறப்பு, உட்பட எதிலும் பாகுபாடு காட்டக்கூடாது என்ற ஐ.நா.வினது உலகளாவிய மனித உரிமைப் பிரகடனம் (Universal Declaration on Human Rights) கூட 1948இல்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், அதற்கும் இருபதாண்டுகளுக்கு முன்னரே அதைச் செயலாக்கத் துணிந்த அக்கிழவனை என்னென்பது?! ஆம், ‘தான் யார்?’ என்பதைக் காட்டிலும் ‘தான் யாருக்கானவன்?’ என்பதில் அம்மனிதனுக்கு இருந்த தெளிவுதான் இன்றைக்கும் அம் மாமனிதனை எண்ணிச் சிலாகிக்க வைக்கிறது நம்மை. சாதி ரீதியாகப் பார்த்தால் தந்தை பெரியாரின் குடும்பமோ ‘முற்பட்ட’ வகுப்பு. ஆனால் குரல் கொடுத்ததோ ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்காக. மொழி ரீதியாகப் பார்த்தால் வீட்டார் கன்னடம். ஆனால் குரல் கொடுத்ததெல்லாம் தமிழ் மக்களுக்காக. நம்பிக்கையின் அடிப்படையிலோ நாத்திகர். ஆனால் இறைத்தலங்களில் சமத்துவம் நிலவக் குரல் கொடுத்ததென்பதோ ஆத்திகர்களின் சுயமரியாதைக்காக. மத ரீதியாகப் பார்த்தால் பெரும்பான்மை. ஆனால் ஓங்கி ஒலித்த குரல் சிறுபான்மை மக்களுக்காக. பாலின ரீதியில் ஆண். ஆனால், குரல் கொடுத்ததெல்லாம் பெண்ணினத்திற்காக. இவை போதாதா இப்பூவுலகு இன்னமும் இந்த மனிதனை நேசித்துக்கொண்டிருக்க? (சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள திராவிடச் சுவடுகள் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை)

ஞானக்கிழவன்

ஞானக்கிழவன்

கவிதை அக்கினிக் குழம்புகள் அள்ளி எடுத்துப்பக்குவ லேகியம் படைத்த கிழவனே புழுத்துக் கிடந்த புழுக்களுக் குள்ளேபுலியின் ரத்தம் புகுத்திய தலைவனே விழித்தால் மரணம் விளையுமென் றஞ்சித்தூங்கிக் கிடந்த வேங்கையை எழுப்பிநகங்களை நீதான் ஞாபகப் படுத்தினாய்முகங்களில் மீசை முளைப்பதைச் சொன்னாய் தள்ளாடும் வயதிலும் சருகான தில்லைநீஓலையாய்த் தானே உபயோக மானாய் இத்தனை சாதனை வித்தைகள் புரியஎத்தனை பரம்பரை இருந்தது உனக்கு? இரணிய மின்னல் எழுந்ததே அதுவும்சித்தரின் நெருப்புச் சித்தாந்தங்களும்மட்டுமா உன்னை மாற்றின? இல்லையே வால்டேர் செய்த வார்த்தைப் புரட்சிகள்டார்வின் வீசிய தத்துவ வெடிகள்காரல் மார்க்சின் கனத்த கருத்துகள்ரஸ்ஸல் புரிந்த ரசவா தங்கள்விஞ்ஞானிகளின் மெய்ஞ்ஞா னங்கள்இத்தனை உரங்கள் இட்டத னால்உன்மூளையில் மூலிகை முளைத்தது தந்தையே சூரிய மருந்து பட்டதும் வானில்உடுக்கள் என்னும் வடுக்கள் மறையும் உன்கரம் பட்டதும் எம்முடல் தன்னில்காயம் மறைந்தொரு மாயம் நிகழ்ந்தது கி.மு. கி.பி. பழைய கணக்குபெ.மு. பெ.பி. புதிய கணக்கு ஒரு நூற்றாண்டைக் கூட்டிக் கழித்தால்உன்றன் அறிவே மிஞ்சும் எமக்கு நின் அடையாளம் தாடியும் தடியும்நீதான் எங்கள் அடியும் முடியும் (சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள திராவிடச் சுவடுகள் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை)

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. உணவு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருப்பதாகவும் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் திட்டத்துக்கு நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பலரும் தெரிவித்து வருகின்றனர். கோதுமை ரவா உப்புமாவுடன் காய்கறி, பருப்பு சாம்பார்; சேமியா காய்கறிக் கிச்சடி, வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், சோள காய்கறிக் கிச்சடி, ரவா கேசரி என, திங்கள் முதல் வெள்ளி வரை தரமாகவும் சுவையாகவும் பாதுகாப்பான முறையிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்படுவது போற்றத்தக்கது. அதுபோக, பிஞ்சுக் குழந்தைகளின் காலைப் பசியாற்றும் நோக்கில் இதற்கு வித்திட்ட தமிழக முதலமைச்சர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அரசுக்குக் கூடுதல் சுமை மிகுந்த திட்டம்தான் எனினும், அறிவுப்பசியுடன் வயிற்றுப்பசி போக்குவதும் ஓர் நல்லாட்சியின் இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து செயல்படும் முதல்வரின் சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் நிச்சயம் வாழ்த்தி வரவேற்பர். இந்த ஆட்சியின் தனித்துவம் மிக்க திட்டம் இது. அதேவேளையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகள் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஒரு புள்ளி விவரப்படி 24310 அரசுத் தொடக்கப் பள்ளிகளுடன் 7024 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் வகுப்பு முடிய உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பசிப்பிணி போக்க உள்ளது அறியத்தக்கது. எட்டு வகுப்பு முடிய உள்ள உயர் தொடக்கப்பள்ளிகளாக விளங்கும் நடுநிலைப் பள்ளிகளில், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் காலை உணவு என்பதை மேலும் சற்றுப் பெரிய மனத்துடன் அணுகி, அரசின்மீது தூக்கி வைக்கப்படும் பாரத்தைப் பொறுத்துக்கொண்டு ஒரே வளாகத்தில் பயிலும் 6,7,8 வகுப்புக் குழந்தைகளும் பயனுறத்தக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதுடன், உரிய உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது உடனடித் தேவையாக இருக்கிறது. பிறரைப் பார்க்கவைத்து உணவு உண்ணும் வழக்கம் தமிழர் பண்பாட்டில் என்றும் இருந்ததில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், தம் பள்ளியில் படிக்கும் தம்பி, தங்கைகள் அரசின் ருசியான வகைவகையான காலை உணவு உண்பதை ஒவ்வொரு நாளும் நேரில் கண்டு, தமக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் மனத்தைக் கல்வியால் ஈடுகட்டுவது என்பது மிகவும் சிரமமான, சிக்கலான காரியமாகும். ஆசிரியர்களாலும் இதனைச் சரிசெய்தல் என்பது இயலாத ஒன்று. ஆகவே, அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் தொடக்க வகுப்புகளுக்குரிய குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஏனைய உயர் தொடக்க வகுப்புகளில் கல்வி பயின்று வரும் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும் அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் மனிதாபிமானத்துடன் மாணவர் மற்றும் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு எவ்வளவு இயலுமோ அவ்வளவு விரைவில் இக் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி நீட்டித்துச் செயல்படுத்துதல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. போலவே, அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளும் இந்தத் திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மதிய உணவுத் திட்டத்தைக் காமராஜர் அறிவித்தபோது தொடங்கி, அதனைச் சத்துணவுத் திட்டமாக எம்.ஜி.ஆர். மாற்றியபோதும், முட்டை மற்றும் தானியச் சிற்றுண்டி வகைகளைக் கலைஞர் இந்தத் திட்டத்தில் சேர்த்தபோதும், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கிடையே பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை. பிற திட்டங்களெல்லாம் அரசுப்பள்ளிகளைப் போலவே அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கும் செயல்படுத்தப்படும்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது, அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டார்கள். தொடர்ந்து இப்போது காலை உணவுத் திட்டத்திலும் அவர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். மதிய உணவு உண்ணும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் மட்டும் மறுக்கப்படுவது அறமன்று என்கிறார்கள் அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பெற்றோர்களும். மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளே பெரும்பாலும் பயில்கிறார்கள். குறிப்பாக, அரசுப்பள்ளிகள் அருகில் இல்லாத கிராமப் பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு, அந்தப் பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளே இருக்கும் ஒரே வாய்ப்பு. மிகச் சொற்ப அளவிலான நகர்ப்புறப் பள்ளிகளை மனத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களைப் புறக்கணிப்பது சரியான நடைமுறையாக இருக்காது. எனவே, தமிழக அரசு தூரிதமாகச் செயல்பட்டு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் நடுநிலை வகுப்புக் குழந்தைகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எடுக்கும் என நம்புவோம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

அண்மைக் காலத்தில் கணினி அறிவியலின் விரிந்து பரந்த நவீனத் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) காணப்படுகிறது. பொதுவாக, மனித நுண்ணறிவு தேவைப்படும் வேலைகளை, நுட்பத்துடன் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கும் பணியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயற்கை நுண்ணறிவு என்பது திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு காணுதல், பன்முகச் சிந்தித்தல், எண்ணங்களை ஆராய்ந்து தெளிதல், கற்றதைச் செயல்படுத்தல் என்பன போன்ற நுண்ணறிவுத் திறன்களை உள்ளீடாகக் கொண்டுள்ளது. பொதுவாக, முந்தைய அனுபவங்களைக் கொண்டு இயந்திரத்தைக் கற்கச் செய்தல், எதிர்கொள்ளும் தீர்வுகளுக்கேற்பத் தானாக மாற்றிக் கொள்ளுதல், மனிதனைப்போல் சிந்தித்துப் பிரச்சனைகளின் முடிவுகளுக்கான வழிமுறைகளைக் கண்டறிதல், சரியான முடிவுகளைச் செயல்படுத்துதல் முதலானவற்றை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்கிறது. இத்தகைய நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வகுப்பறையில் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவுக் கற்றல் – கற்பித்தல் காணொலிகள் அடங்கிய தொகுப்பு வெளியிடும் முயற்சியில் ஒரு சிலர் முயன்று வருவது எண்ணத்தக்கது. செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு என்பது எதிர்வரும் காலங்களில் மருத்துவம், மின் வணிகம், கல்வி, நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, தரவுப் பாதுகாப்பு, விவசாயம், விளையாட்டு, சமூக ஊடகங்கள், தானியங்கிக் கருவிகள் மற்றும் எந்திர மனித உற்பத்திப் பணிகள் எனப் பல்வேறு துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. கல்வித் துறையில் இதன் வருகை ஒரு புதிய மைல் கல்லாக அமையப் போகிறது. இப்போதும் பல்வேறு சமூக ஊடகங்களில் எல்லாருடைய மனங்களிலும் நீங்காமல் நிலைத்து நிற்கும் மறைந்த தேசியத் தலைவர்கள், கவிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், நடிகர் நடிகைகள், கற்பனைக் கதை மாந்தர்கள் முதலான நபர்களின் நிழற்படம் மற்றும் காணொலிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மீட்டுருவாக்கம், உருவாக்கம் செய்யப்பட்டவற்றைக் கண்டுகளித்து வியக்கும் போக்குகள் அதிகரித்து வருகின்றன. கேரள மாநிலத்தில் சாலைப் போக்குவரத்தை  ஒழுங்குபடுத்தும் நடைமுறையில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட காரணத்தால் கணவனின் தவறான நடத்தையைக் கண்டுபிடித்த மனைவி இதுகுறித்து வழக்குப் பதிந்து நியாயம் கேட்ட சேதி ஊரறிந்த ஒன்று. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் இதைப்போன்ற எதிர்மறையான தவிர்க்க முடியாத சிதைந்த நோக்கத்திற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு ஐன்ஸ்டீனின் கோட்பாடு ஆகும். ஆல்பிரட் நோபல் அதனை மாற்றி யோசித்து உருவாக்கியதை அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் இருபெரும் நகரங்களில் அவற்றைப் பரிசோதிக்க முடிவு செய்து பெரும் நாசம் விளைவித்ததை யாரும் மறக்க முடியாது. இதுபோன்ற அல்லது இதைவிடவும் மிகப்பெரிய மனித ஆக்கப் பேரிடர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வித்திட்டால் என்ன செய்வது என்று பல்வேறு வளர்ந்த நாடுகளும் இத்தொழில்நுட்பப் பயன்பாட்டை எதிர்த்து முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இத்தொழில்நுட்பம் பல்வேறு வகையான துறைகளில் பல்வேறு புதுமைகளைப் படைக்க இருப்பதாக அறியப்படுகிறது. அதேவேளையில், இதனால் மனித சமூகத்துள் பலவிதக் குழப்பங்கள், ஆபத்துகள், பணி இழப்புகள், மனநெருக்கடிகள் சார்ந்த வாழ்வியல் பிரச்சினைகள் தொடக்கத்தில் எழும் என்பது நிச்சயம். எனினும், இது எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் ஏற்படுவது இயற்கை என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. இதுபோன்றவற்றைத் தடுக்க நினைப்பதும் முடியாத நிலையில் இயலாமையால் வருந்துவதும் அறிவீனம் ஆகும். மனித வேலையிழப்பை மட்டும் கவனத்தில் கொள்ள முடியாது. ஆள் விரயம், கால விரயம், நேர விரயம், பண விரயம், மன உளைச்சல் விரயம் போன்றவை இதனால் பெருமளவில் தவிர்க்கப்பட்டதையும் நினைவுகூர்ந்து எண்ணிப் பார்ப்பது அவசியம். இன்றைய சூழலில் எந்தவொரு மின் சாதனங்கள், தகவல்தொடர்புக் கருவிகள் மற்றும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த வசதிகளையும் நுகர்வுத் தன்மைகளையும் வெகுவாகக் குறைத்துக்கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாகும். மனித மனம் அவற்றிற்கு அடிமையாகிவிட்டது. ஒருகட்டத்தில் இவற்றின் பாதகங்களைக் கடந்து போகவும் சாதகங்களை நினைந்து போற்றவும் பழகிக் கொண்டு விட்டோம் என்பதுதான் உண்மை. சரி. கல்வியில் இதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்குச் சரியாக விடையளிப்பது அவசியம். வகுப்பறைகளில் இத்தொழில்நுட்பம் பல்வேறு புதுமைகளைத் துல்லியமாக விளைவிக்கும். அதாவது, மகாத்மாவைப் பாட வைக்கலாம். நேரு மாமாவை ஆட வைக்கலாம். நேதாஜியை வீர உரையாற்றச் செய்யலாம். வேலுநாச்சியாரைப் போரிடச் செய்யலாம். புரட்சியாளர் அம்பேத்கர் போதிப்பதைக் கேட்கச் செய்யலாம். கவிக்குயில் சரோஜினியைக் கவி பாட வைக்கலாம். மகாகவி பாரதியை உணர்ச்சிப் பெருக்குடன் கவிதை எழுதச் சொல்லலாம்.  இவையனைத்தையும் இன்றையக் காலச் சூழலில் தத்ரூபமாக வியக்கத்தக்க வகையில் இப்போது செய்து காட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வழிகோலும். இதுபோன்ற நிகழ்வுகள் கற்பித்தலில் ஆசிரியர் பணியை வெகுவாகக் குறைக்க உதவிடும். புதுமை – இனிமை – எளிமை அடிப்படையில் கற்பித்தல் பணிச்சுமை இலகுவாகும். இதற்கு நேர்மாறாக, கற்றலில் துரிதமும் துல்லியமும் மகிழ்ச்சியும் நீடித்து நிலைத்தலும் மிகும். எத்தகைய காணொலிகளையும் இதனால் மிக விரைவாக உருவாக்க முடியும். பல்வேறு கேலிச்சித்திர இயங்குபடம் அடங்கிய தொகுப்பு, குழந்தைகளின் கவனத்தை அதிகம் ஈர்த்து கற்றல் சுமையாகவும் தண்டனையாகவும் வலியாகவும் வேதனையாகவும் அல்லாமல் விரைவாகவும் எளிதாகவும் இயல்பாகவும் ஆனந்தமாகவும் நிகழ அதிகம் வாய்ப்புண்டு. எந்தவித ஐயப்பாடுகளையும் அவை சார்ந்த தீர்வுகளையும் விளக்கங்களையும் தேடித் திரியும் அவசியம் இல்லை. ஓப்பன் ஏஐ சாட் ஜிபிடி (Open AI ChatGPT) மூலம் நொடிப் பொழுதில் விடைகளாகப் பெறவியலும். இதன் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டாலும் காலப்போக்கில் அனைத்துக் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. தானே கற்றலுக்கு இஃதொரு நல்ல எந்திர ஆசிரியர் (AI-Teacher) ஆகும். அதற்குத்தான் கூகுள் (Google) தேடுபொறி இருக்கிறதே என்று அங்கலாய்ப்பது சரியாகாது. பல்வேறு இயங்குதளத்தைச் சுட்டிக்காட்டி உரிய தரவுகளைத் தேடிக் கண்டடைவது தேடுவோரின் கடினப் பணியாக உள்ளது. ஆனால், இஃது அவ்வாறு கிடையாது. கையிலே காசு வாயிலே இனிப்பு என்பது போல, வினாத் தொடுத்த மறுநொடியே சுடச்சுட விடைகளைச் சிறியதாகவும் பெரிதாகவும் அளவாகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் போதும் போதும் என்று கொட்டிக்கொண்டிருக்கும். தற்போது ஆங்கிலத்தில் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. தமிழ் மொழியில் போதுமான தரவுகள் வழங்கப்படுவது இன்று குறைவானதாக உள்ளது. ஆனால், நாளை அவ்வாறு இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதேவேளையில், தேர்வின்போது ஒரு மாணவனிடம் இது கிடைக்குமேயானால் அபாயகரமானது. படிக்கவே வேண்டியதில்லை. எதையும் நொடிப் பொழுதில் தன்வயப்படுத்திக் கொள்ளும் பேராபத்து இதில் உள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் கல்வித்துறை எதிர்காலத்தில் போராடும் என்பது திண்ணம். இத்தகைய நிலையில், கல்வித்துறை நிர்வாகத்தில் இத்தொழில்நுட்பம் புகுத்தப்படுமேயானால், ஆசிரியர் பணியும் பணியிடமும் கேள்விக்குள்ளாகக் கூடும். இத்தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சமே மனித வளத்தை வெகுவாகக் குறைத்து நிறைவான அடைவைப் பெறச் செய்வதாகும். பள்ளிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளால் இணைக்கப்பட்டு அதிகபட்சமாக ஐந்து தொடக்கப்பள்ளிகளோ, நடுநிலைப்பள்ளிகளோ, உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளோ பிணைக்கப்பட்டு ஒரு குறு கற்றல் வள மையம் தோற்றுவிக்கப்பட்டு சுழற்சி முறையில் தகுதியும் திறமையும் அனுபவமும் பயிற்சியும் நிறைந்த பாட ஆசிரியர்கள் எடுக்கும் இணையவழி இடைவினை வகுப்பு களால் (Online Mutual Response Class) கல்வி வளப்படுத்தப்படும். தவிர, ஸ்டூவர்ட் ரஸ்ஸல் மற்றும் பீட்டர் நார்விக் எனும் ஆசிரியர்கள் முன்மொழிந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட அ) எதிர்வினை இயந்திரங்கள் (Reactive Machines), ஆ) வரையறுக்கப்பட்ட நினைவகம் (Limited Memory), இ) மனத்தின் கோட்பாடு (Theory of Mind), ஈ) சுய விழிப்புணர்வு (Self-Awareness) ஆகியவற்றுள்  மனத்தின் கோட்பாடு (Theory of Mind) அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் சமூக நுண்ணறிவு (Social Intelligence) கொண்டதாக அமைக்கப்படுகின்றன. இவை மனித நோக்கங்களை ஊகித்து அறிவதுடன், அவர்தம் நடத்தையைக் கண்காணிக்கவும் முடியும். இவை மனிதக் குழுக்களின் ஒருங்கிணைந்த உறுப்பினர்களாக இருப்பதற்கான திறன்களைக் கொண்டிருப்பதன் காரணமாகக் கல்வியில் இதன் பயன்பாடுகள் அதிகரிக்கக் கூடும். இதற்கு இயந்திர வழிக் கற்றல் (Machine Learning) மற்றும் அதன் ஒரு பகுதியாக விளங்கும் ஆழ்ந்து கற்றல் (Deep Learning) ஆகியவை கற்போருக்கு மிகுந்த உதவிகரமாக விளங்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. செயற்கை நுண்ணறிவு தானியக்க எந்திரச் செயல்முறை (AI Robotic Process Automation) மூலமாகக் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை வடிவமைத்து வழங்கும் செயல்பாடுகள் ஊடாக மதிப்பீட்டு முறைகளும் அதன் வழியாகக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் குறைதீர் நடவடிக்கைகள் போன்றவை நிகழ்த்தும் நோக்கும் போக்கும் காலப்போக்கில் ஆசிரியர் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதிலிருந்து பெறப்படும் தரவுகள் அனைத்தும் துல்லியமும் துரிதமும் மிக்கதாக இருக்கும். மனித விருப்பு வெறுப்பிற்கு ஈண்டு இடமில்லை. எடுத்துக்காட்டாக, ஐந்து பாட ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணியை ஓர் AI எந்திரம் செய்துவிடும். மனிதப் பிழைகள் மாதிரியான குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. பயனர்க்கு இடையேயான நட்பு (User Friendly) இதனால் வலுப்படும். மேலும், இன்றைய தொழில்நுட்பக் கருவிகள் மீதான இனம் புரியாத ஈர்ப்பின் காரணமாகக் குழந்தைகளிடம் கற்றலானது விரைந்து நிகழும். போதிப்பவர் என்ற நிலையிலிருந்து ஆசிரியர் மாணவர் கற்பதற்கான வளங்களையும் வசதிகளையும் சூழலையும் ஏற்படுத்தித் தரும் நபராக (Facilitator) அறியப்படுவார். ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் விளைவிப்பது இங்கு நோக்கமல்ல. வேகமாக மாறி வரும் உலக நடப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் புரியவிருக்கும் அபரிமிதமான மாயவித்தைகள் மற்றும் விந்தைகள் குறித்த போதிய விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கையும் நோக்கி நகர முனைவதும் முனைப்புக் காட்டுவதும் இன்றியமையாதது என்று ஆசிரியர் பெருமக்கள் புரிந்து கொள்வது நல்லது. 2030களில் இப்போதுள்ள மரபுவழி வகுப்பறை (Chalk and Talk Class) திறன்மிகு வகுப்பறை (Smart Class) நிலையைக் கடந்து செயற்கை நுண்ணறிவு வகுப்பறை யாக (AI Class) உருவாக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். இப்படித்தான் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (Educational Management Information System) வருகைப்பதிவு உள்ளிட்ட செயல்பாடுகள் கல்வியில் மெல்ல நுழைக்கப்பட்டபோது பலரும் இதெல்லாம் கொஞ்சகாலம்தான் நீடிக்கும் என்று வெளிப்படையாகப் புலம்பியது அறியத்தக்கது. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் கல்வித்துறையில்

அங்கேயே..

அங்கேயே..

கவிதை இரங்கற்பா எழுதிக்கொண்டிருக்கிறேன்விரைவில் வந்துவிடும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் மலர் மாலைகள்தயார் செய்ய நேரமாகலாம்வேம்பு நிச்சயம் இருக்கும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஆயிரம் முதலைகள்உடனே ஒப்புக்கொண்டுள்ளனபோட்டியில் கலந்துகொள்ளஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் வண்ணக் கோலாட்டம்மிதமாகத் தோன்றலாம்பறை அடித்து விளையாடகுத்தாட்டம் வரும்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தள்ளிப் போகுமோகவலை வேண்டவே வேண்டாம்முகச் சவரமும் உடன் செய்வார்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் தண்ணீர்ப் பானைக்காகத்தேடி அலைய வேண்டாம்தோளை வலுவாக வைத்துஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் என்ன!வாய்க்கரிசிக்கும் வழியில்லையா? அடடா!சரி, அதையும் நாங்களே தருகிறோம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் முறையாகச் செய்ய வேண்டியகாரியங்கள் தெரியுமா?இல்லை, அதுவும் எங்கள் வேலையா?எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் ஐந்தாம் நாள், மாதக் கணக்காவதுமுடியுமோ என்னவோ.. பரவாயில்லைஎங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள் கழுத்து நெரிபட்டுக்கிடந்தசனநாயகம் இறந்த நேரமாவதுசரியாகக் குறித்தீரா சோதிடரேபாவம் அந்தப் பச்சை மண்ணைஇனியாவது பிரித்துப் பார்க்காமல்வலியின்றி அடக்கம் செய்வோம் விரைந்து வருகிறது எல்லாம்எங்கும் போய்விடாமல்அங்கேயே இருங்கள்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூர் எனும் திருப்புமுனை – 6

திருப்பூரின் தொழில் வளர்ச்சிக்கான பொருளாதாரக் கட்டமைப்பு திருப்பூர் பின்னலாடைத் தொழில் உருவாகிப் பின்னர் அது பெரும் தொழிலாக உருமாறிய பரிணாம வளர்ச்சியின் வரலாறு, சிறிய கிராமமாக இருந்த திருப்பூர், பின்னலாடைத் தொழில் வளர்ச்சியால் மாநகரமாக விரிவடைந்தது, பின்னலாடைத் தொழிலின் படிநிலைகள், திருப்பூரின் வளர்ச்சியில் தொழிலாளர்களின் பங்களிப்பு, ஏற்றுமதிச் சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதியில் தொழிலுக்கான அடிப்படை, முதலீடு மற்றும் அவை தொடர்பான தரவுகளைக் காண்போம். முந்தைய பகுதிகளை வாசிக்கத் தவறியவர்கள் கீழே உள்ள இணைப்புகள் வழியே அவற்றை வாசித்துவிட்டு, இந்தப் பகுதியைத் தொடர்ந்தால் பின்னலாடைத் தொழில் குறித்துத் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும். பின்னலாடை உற்பத்திச் சங்கிலியின் பல்வேறு படிநிலைகளை முன்பே விளக்கமாகப் பார்த்தோம். ஒவ்வொரு படிநிலை உற்பத்தி மையங்களும் ஒவ்வொரு விதமான கட்டமைப்பு, அதற்கேற்றாற்போல் இயந்திரங்கள், தொழிலாளர்கள் ஆகியவற்றைக் கொண்டவை. அடிப்படை முதலீடுகளும் ஒவ்வொரு தொழிற்சாலையின் தன்மைக்கேற்ப மாறுபடும். எளிதாகச் சொல்ல வேண்டுமெனில், குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாய் முதல் கோடிகளில் முதலீடுகள் செய்யப்பட்டு, தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஆரம்பக் கட்டத்தில் முற்றிலும் இந்தியத் தயாரிப்பு இயந்திரங்களை மட்டுமே கொண்டு தொழிற்சாலைகள் இயங்கின, ஏற்றுமதி வர்த்தகம் தொடங்கிய பின்னர், ஒவ்வொரு படிநிலை உற்பத்தித் தளங்களிலும் இறக்குமதி இயந்திரங்கள் கோலோச்சத் தொடங்கின. ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, தைவான், துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு, உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. ஒன்றிய அரசின் பல்வேறு கடன் சலுகைகள், மானியங்கள், ஊக்குவிப்புத் தொகை போன்றவை, சாமானியர்களையும் தொழில் முனைவோர்களாக மாற்றியது. வங்கிக் கடன் வசதி மிக எளிதாகக் கிடைக்கப்பெற்றதும் கிடைத்த கடனைக் கொண்டு தொழிலைச் சிறப்பாக முன்னெடுத்து, அடுத்தடுத்து விரிவாக்கம் செய்து, அதிகளவு வர்த்தக வளர்ச்சியையும் அதன் வாயிலாக வேலைவாய்ப்பும் நல்ல வருவாயும் கிடைக்கப்பெற்ற சூழல் உருவானது. இதைத் தாண்டி, இங்கு ஒரு பண்பாடு உண்டு. ஆடை உற்பத்தி என்பது, பல்வேறு படிநிலைகளைக் கொண்டது என முன்பே குறிப்பிட்டதைப்போல, ஒவ்வொரு படிநிலைத் தொழில் முனைவோர்களும் அடுத்தடுத்த படிநிலைத் தொழிமுனைவோர்களுடன் இணக்கமாகச் செயல்பட்டதாலேயே இந்தத் தொழில் சிறப்பான வளர்ச்சியைக் கண்டது. இந்த இணக்கம் என்பது, பொருளாதார ஆதரவையும் உள்ளடக்கியது என்றால் மிகையல்ல. வெளிநாட்டு ஆர்டர் கிடைக்கப்பெறும் ஒரு ஏற்றுமதி நிறுவனம், அந்த ஆர்டருக்கான உற்பத்திச் செலவுக்காக, வங்கியில் மூலதனக் கடனைப் பெறும். ஆர்டரின் மொத்த மதிப்பில் 50 முதல் 60 சதவீதம் தொகையை வங்கிகள் கடனாகக் கொடுக்க, இதர படிநிலை நிறுவனங்கள், தாங்கள் முன்னெடுக்கும் பணிக்கான தொகையைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனாக வழங்க, ஏற்றுமதி நிறுவனம் அணைத்து ஒருங்கிணைப்பையும் செய்து ஆடைகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்து, வாடிக்கையாளரிடம் பணத்தைப் பெற்று, மூலதனக் கடனை அடைப்பர். வங்கிகள் உள்ளிட்ட, உற்பத்திப் படிநிலைக் கடன் அனைத்திற்கும் ஏற்றுமதி நிறுவனமே பொறுப்பு. ஏற்றுமதி செய்வதென்பது, லாபத்தைக் கடந்து, பெரும் சவாலான ஒன்று என்றே சொல்லலாம். ஏனெனில், வெளிநாட்டு வர்த்தகர், நாம் அனுப்பிய சரக்கை எடுக்காமலோ அல்லது பெற்றுக்கொண்டு பணத்தை வழங்காமல் போனாலோ, ஏற்றுமதி நிறுவனம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் மீளவே முடியாமல் சொத்துக்களை விற்றுக் கடனை அடைக்கும் சூழல் உருவாகும். ஆடைச் சந்தை என்பது மிக நுட்பமான ஒன்று. குறித்த காலத்திற்குள் ஆடைகள் தயாராகி சந்தைக்கு விற்பனைக்குச் செல்லவேண்டும். தவறும் பட்சத்தில் சரக்குக்குள் தேங்கும் அபாயம் மற்றும் அதிகத் தள்ளுபடி கொடுத்து விற்கவேண்டிய சூழ்நிலை உருவாகும். இதையும் கடந்து, வெளிநாடுகளுக்குக் கப்பல் போக்குவரத்து வாயிலாகச் செல்லும் ஆடைகள், உற்பத்தி இலக்குக் காலம் தவறும்பட்சத்தில், விமானம் மூலம் ஆடைகளை அனுப்ப நேர்ந்தால், கடல் வழியே அனுப்புவதற்குச் செலவாகும் தொகையைப்போல, 10 முதல் 12 மடங்கு அதிகமாகச் செலவழிக்க வேண்டும். இது ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திற்கு கடும் பொருள் இழப்பை ஏற்படுத்தும். ஏற்றுமதித் தொழிலில், குறித்த கால உற்பத்தியும் தரமும் மிகுந்த கவனத்துடன் கையாளப்பட வேண்டியவை.  இந்தியாவைப் பொறுத்தமட்டில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பினை வழங்கும் தொழில் ஜவுளித் தொழில்.  அதேநேரத்தில், குறைத்த முதலீட்டில் நல்ல லாபமும் தொழிலைத் தொடர்ந்து விரிவாக்கும் வாய்ப்புகள் அதிகமும் பெற்ற தொழிலும் இதுதான். அடர்ந்த மக்கள்தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டின் வளர்ச்சிக்கு, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அதிக அளவில் இருக்க வேண்டும். அந்தவகையில் திருப்பூர், அதிக வேலைவாய்ப்பினை, அந்நியச் செலவாணியை, புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் ஊராகத் திகழ்ந்து வருகிறது. ஒரு கோடி ரூபாய் முதலீடு என்பது 110 பேருக்கான வேலைவாய்ப்பினை உருவாக்கும். இதன் காரணமாகவே, அதிக வளர்ச்சியை நோக்கி இந்தத் தொழில் பயணித்தது. இன்னும் ஒரு பண்பாட்டை இங்கே மீண்டும் குறிப்பிட்ட ஆகவேண்டும். புதியவர்களுக்கு, தொழிலை மனமுவந்து கற்றுத் தருவதோடு மட்டுமல்லாது, அப்படிப் பயின்றவர்களுக்குச் சந்தை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதோடு, தொழிலைக் கற்றுக்கொடுத்தவரே முன்னின்று புதிய தொழில் தொடங்க வங்கிக் கடன் பெறும் வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்து, மூலப்பொருட்களைத் தரும் நிறுவனங்களிடம் தாங்களே பிணையாக நின்று, குறிப்பிட்ட காலக்கெடுவுக்கான கடனைப் பெற்றுத்தந்ததுடன், சந்தை வாய்ப்புகளைக் கற்றுத் தந்து ஒரு சமூகமாக உயர்வதற்கான பண்பாட்டு விழுமியங்களைத் திருப்பூர் மக்கள் தங்களை அறியாமலே கொண்டிருந்தனர். இந்தத் திறந்த மனதும் பெருந்தன்மையான செயல்பாடும் திருப்பூரில் பல ஆயிரம் தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாக அமைந்தன. அது மட்டுமல்லாது, இங்குள்ள பெரும்பாலான தொழில் முனைவோர்கள் வேளாண் பின்னணியைக் கொண்டவர்களே. அவர்களுக்கு, வேளாண் வருவாய் சேமிப்பாக வைத்துள்ள உற்றார் உறவினர், மிகக் குறைந்த வட்டி அல்லது தங்களுக்குத் தேவையான நேரத்திற்கு தொகையைத் திருப்பித் தரவேண்டும் என்னும் நிபந்தனையோடு வட்டி இல்லாமலும் கடன் கொடுத்தனர். வங்கிக் கடனுக்குப் பிணையாக அசையாச் சொத்துக்களை வழங்க இயலாதவர்களுக்கு, இதுபோன்ற கடன் வசதிகள் பெரும் பேறாக அமைந்தன.   ஏற்றுமதி செய்வதிலிருக்கும் அபாயம் குறித்து மேலே பார்த்தோம். அதற்கான தீர்வாக, மத்திய அரசின் ஏற்றுமதிக் கடன் உத்தரவாதக் கழகம் (ECGC), இறக்குமதியாளர்களின் பின்னணியை, அதற்கென உள்ள மதிப்பீட்டு நிறுவனங்கள் வழியாகப் பெற்று, அதற்கேற்ப கடன் உத்திரவாதங்களை அளித்தனர். இதனால் பாதுகாப்பான ஏற்றுமதி என்கிற நிலையை எட்ட முடிந்தது. சுருங்கச் சொன்னால், இது ஒரு காப்பீட்டுத் திட்டம் போலச் செயல்படும். பணத்திற்கான உத்திரவாதத்தைக் கொடுப்பதற்கு நாம் சிறிய தொகையைக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு வட்டி மானியத் திட்டங்களுடன், மாநில அரசும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சார்பில் கடன் உதவிகளை விரைவாக அளித்ததும் இந்தத் தொழில் வளரப் பெருமளவு உதவியது. தற்சமயம் சிறிதும் பெரிதுமாக சுமார் 20000 நிறுவனங்கள் வாயிலாக, சுமார் 60000 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெறுகிறது எனில், இவை அனைத்திற்குமான அடிப்படை முன்பே குறிப்பிடப்பட்ட பல்வேறு கடன் உதவிகளே. தொழில் வளர்ச்சிக்கான அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். இனி தொழில் சந்தித்துவரும் பிரச்சனைகள், அவற்றுக்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான தீர்வுகள் போன்றவற்றை இனி அடுத்தடுத்து வரும் பகுதிகளில் பார்ப்போம். மீண்டும் திங்களன்று புதிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கிறேன். நம்பிக்கையுடன் நடைபோடுவோம்.

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

ஏற்றுமதி வாய்ப்புகளும் இறக்குமதிச் சந்தையும்

திருப்பூர் எனும் திருப்புமுனை – 5 முந்தைய 4 பகுதிகளில் திருப்பூரின் அடிப்படைத் தொழில் கட்டமைப்பு குறித்துப் பார்த்தோம். தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் இந்தத் தொடருக்குக் கிடைத்துவரும் ஆதரவுக்கும் சமூக ஊடகத் தொடர்புத் தளங்கள் வாயிலாக கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வோருக்கும் நன்றிகளும் பேரன்பும். இந்தப்ப பகுதியில் திருப்பூரில் தயாராகும் ஆடைகள் சர்வதேச அளவில் எந்தெந்த நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன, அங்குள்ள வர்த்தகக் கட்டமைப்பு குறித்தான விவரங்களைக் காண்போம். திருப்பூரிலிருந்து ஏற்றுமதிக்குத் தயாராகும் ஆயத்த ஆடைகள், ஐரோப்பிய, அமெரிக்க, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இவற்றில் ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 85% அளவிலும் இதர நாடுகளுக்கு 15% அளவிலும் ஏற்றுமதி நடைபெறுகிறது. இறக்குமதி நாடுகளின் வர்த்தகக் கட்டமைப்பை, இறக்குமதியாளர்கள், சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிராண்டுகள் என்று பிரிக்கலாம். இவற்றைக் குறித்து தனித்தனியே காண்போம்.   இறக்குமதியாளர்கள் இறக்குமதி நிறுவனங்கள், அங்குள்ள நிகழ்நேரத் தேவைகளுக்கேற்ப ஆடை வடிவமைப்பளர்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களில், வண்ணங்களில், டிசைன்களை அமைத்து, அவற்றை இங்குள்ள தங்களுடைய வர்த்தகத் தொடர்பு நிறுவனங்களுக்கு அனுப்பி, ஆடை மாதிரிகளைப் பெற்று, அவற்றை அங்குள்ள பல்வேறு சிறிதும் பெரிதுமான சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு எடுத்துச்சென்று, அவர்கள் தேர்ந்தெடுக்கும் மாதிரிகளில் ஆர்டர்களைப் பெற்று, அவற்றை மொத்தமாகத் தொகுத்து, இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களுக்கு மொத்த ஆர்டர்களாக வழங்குவர். குறித்த காலக்கெடுவுக்குள் அந்த ஆர்டர்களை இங்குள்ள நிறுவனங்களுக்கு அனுப்பி, தயாரிப்புப் பணிகளை முடித்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளைப் பெற்று சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு அனுப்பிவைப்பார்கள். பல இறக்குமதியாளர்கள், தாங்களே நிகழ்நேரத் தேவைக்கேற்ப டிசைன்களை உருவாக்கி, அதை மொத்த ஆர்டர்களாக இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் உற்பத்தி செய்து பெற்று, விற்பனை செய்வர். இந்தச் சூழலில் இறக்குமதியாளர்களுக்கும் ஏற்றுமதியளர்களுக்கும் மட்டுமே தொடர்பு இருக்கும். தரக் கட்டுப்பாடு, விலை நிர்ணயம், ஏற்றுமதிக்கான பணப் பரிவர்த்தனை அனைத்திற்கும் இறக்குமதி நிறுவனமே பொறுப்பு. சில்லறை வர்த்தக நிறுவனங்கள்  இறக்குமதியாளர்கள் அல்லாது, சில்லறை வர்த்தக நிறுவனங்களே நேரடியாக இங்குள்ள ஏற்றுமதியாளர்களிடம் வர்த்தகம் செய்வதும் உண்டு. நிகழ்நேரத் தேவைகளுக்கு ஏற்ப ஏற்றுமதி நிறுவனங்களிடம் ஆர்டர்களை வழங்கி, குறித்த காலக்கெடுவுக்குள் உற்பத்தி செய்யப்பெற்று, தங்களின் வர்த்தகச் சங்கிலியில் உள்ள ஆடையகங்களில் விற்பனை செய்வர். இதில், ஆடைகளை மட்டுமே விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள், பல்வேறு நுகர்வுப் பொருட்களை விற்பனை செய்யும் சங்கிலித் தொடர் கொண்ட நிறுவனங்கள் என இரண்டு விதமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் உண்டு. சுருக்கமாகச் சொன்னால், முதலாம் வகைக்கு உதாரணமாக நமது நாட்டில் உள்ள ரிலையன்ஸ் ட்ரென்ட்ஸ், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற நிறுவனங்களையும் இரண்டாம் வகைக்கு உதாரணமாக பிக் பஜார், டி மார்ட் போன்ற  நிறுவனங்களையும் குறிப்பிடலாம். (பிக் பஜார் நிறுவனம் தற்போது மூடப்பட்டுவிட்டது). பிராண்டுகள் இவை பிரத்தியோகமாக உருவாக்கப்படும் ஆடைகள். நிகழ்நேரத் தேவைகளைக் கருத்தில்கொண்டு, ஒவ்வொரு பிராண்டும் தங்களுக்கான தனித்துவமான கொள்கை வடிவமைப்புக்களின் அடிப்படையில், தங்களின் ஆடை வடிவமைப்புக்கென்றே உள்ள குழுவின் வாயிலாக டிசைன்களை உருவாக்கி, அவற்றை இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்களில் ஆடைகளாகத் தயாரித்து ப்ராண்டுகளுக்கென்றே பிரத்தியோகமாக அமைக்கப்பெற்ற கடைகளிலும் பல்வேறு பிராண்டுகள் விற்பனை செய்யும் வர்த்தகச் சங்கிலி அமைப்புகளின் வாயிலாகவும் விற்பனை செய்வர். ப்ராண்டுகளுக்கான உதாரணமாக யூ.எஸ் போலோ, லெவிஸ், கேப், கேஸ், பெனட்டன் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இறக்குமதியாளர்களைத் தவிர்த்து, சில்லறை வர்த்தக நிறுவனங்களும் ப்ராண்டுகளும் இணையத்தின் வாயிலாகவும் தங்களின் விற்பனையை மேற்கொள்கின்றன. மேற்சொன்ன மூன்று வகை இறக்குமதி அமைப்புகள், இங்குள்ள நிறுவனங்களில் நேரடியாகவோ முகவர்கள் வாயிலாகவோ அல்லது இந்தியாவில் அமையப்பெற்ற தங்களின் சொந்த அலுவலகத்தின் வாயிலாகவோ வர்த்தகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் வகுக்கப்பட்ட கொள்கைகளின் அடிப்படையில் தரக்கட்டுப்பாடு, ஆடைகள் உற்பத்தி மேற்கொள்ளும் நிறுவனங்களின் அமைப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். இவை தவிர, ஆடைகளைத் தரச் சோதனை செய்வதற்கான சர்வேதேசப் பரிசோதனைக் கூடங்கள் உள்ளிட்ட தங்களின் அமைப்புகளை இந்தியாவில் ஆடை ஏற்றுமதி அதிகமாக நடைபெறும் நகரங்களில் ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், திருப்பூரில், பல்வேறு நிறுவனங்கள், சர்வதேச ஆடை தொடர்பான பரிசோதனைக் கூடங்களை இங்கு நிர்மாணித்து, தரச் சோதனைகளை மேற்கொள்கின்றன. இந்தக் கூடங்களில், ஆடைகளின் எடை, அதில் உள்ள சாயத்தின் தன்மை, ஆடைகளின் நிலைத்தன்மை, ஆடைகளைத் தயாரிக்கும்போது உபயோகித்த பலவகை ரசாயனங்கள் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டதா, ஆடைகளின் சுருங்கும் தன்மை என, பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த முடிவுகள் இறக்குமதி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, அம்முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்படும். ஏற்றுமதிக்குத் தயார் நிலையில் இருக்கும் ஆடைகளில் குறிப்பிட்ட சதவீதத்தை இறக்குமதி நிறுவனங்களால் நியமனம் செய்யப்பட்ட தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் அல்லது சொந்த அலுவலகத்தின் தரக்கட்டுப்பாட்டு அலுவலர்களைக் கொண்டு சோதனை மேற்கொள்வர். இதில், ஆர்டர்கள் பெறப்பட்டபோது ஏற்றுமதி நிறுவனங்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட தரத்தின் அடிப்படையில் ஆடைகள் தயாரிக்கப்பட்டுள்ளதா? அடிப்படைக் குறைபாடுகள் உள்ளதா? என்றெல்லாம் சோதித்து, அந்தச் சோதனை முடிவுகளின் அடிப்படையில் ஏற்றுமதிக்கு அனுமதிக்கப்படும். இந்தக் கட்டுப்பாடுகள் தவறும்பட்சத்தில் ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதி மறுக்கப்படும். இங்குள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், எவ்வாறு வர்த்தக வாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்கிற கேள்வி இந்தத் தொழிலில் இல்லாதோருக்கும் இந்தத் தொழிலின் மீதான ஈர்ப்பு உள்ளவர்களுக்கும் இயல்பாகவே எழும். வர்த்தகம் சார்ந்த வெளிநாட்டுப் பயணங்கள், அங்கு நடைபெறும் கண்காட்சிகளில் பங்கு பெறுவது, முகமை அலுவலகங்கள், முகவர்கள், இறக்குமதி நிறுவனங்களின் தேடல், இணையம், உற்பத்தி நிறுவனங்களின் பின்னணி போன்ற பல்வேறு வகைகளில் வர்த்தக வாய்ப்புகள் பெறப்படுகின்றன.  திருப்பூரைப் பொறுத்தமட்டில், நிட்டட் கார்மெண்ட்ஸ் என்னும் பின்னலாடை மட்டுமே பிரதானமாக உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு குழந்தைகள், சிறுவர், பெரியவர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பிற்குமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், டி ஷர்ட், ஸ்போர்ட்ஸ் வேர், இரவு உடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை இங்கு பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன. இது குறித்து விரிவாகப் பதிவு செய்யவேண்டுமெனில் இன்னும் சில அத்தியாயங்கள் தேவைப்படும். திருப்பூர் என்னும் சுயம்புவாக உருவாகிய தொழில் நகரத்தின் அடிப்படைகளைப் பற்றிப் பார்த்துவருகிறோம். இன்னும் இந்தக் கட்டுரைத் தொடரின் மையப்புள்ளிக்கு நாம் செல்லவில்லை. நேரடியாக அந்தப் புள்ளியிலிருந்து எழுத இயலும் என்றாலும், இந்தத் தொழிலில் உள்ளவர்களுக்கும் பெரிய புரிதல் தேவை இருக்கும் என்பதை உணர்ந்தே, தோற்றம் முதல் கடந்துவந்த பாதைகளை விவரித்து வருகிறேன். அடுத்து, பொருளாதாரக் கட்டமைப்புகளைப் பற்றிப் பார்த்த பிறகு, இன்றைய தடுமாற்றம், அதற்கான காரணங்கள், அவற்றைக் களைவதற்கான வழிகள் குறித்து எழுத விழைகிறேன். பொறுமையுடன் அடுத்தடுத்து வரும் கட்டுரைகளையும் வாசிக்க வேண்டுகிறேன். இனிவரும் காலங்களில், தவிப்பைத் தவிர்த்து தளராமல் முன்னேற வேண்டும் என்ற நோக்கமே இந்தக் கட்டுரைத் தொடரை எழுதுவதற்கான ஊக்கத்தை அளித்துள்ளது. வெள்ளியன்று மீண்டும் சந்திப்போம்

அத்தியாகிரகம்

அத்தியாகிரகம்

கவிதை ஆடையற்ற மேனியோடுநடக்கும் நங்கையைகிட்டப் பார்வையில் கண்டதும் நகையோடு நடக்கும் சுதந்திரத்ததைதூரப் பார்வையில் கண்டகிழவனின் கண்ணாடிகீழே விழுந்து சிதறியது அதன் நூற்றாயிரம் துகள்களும்கோரப் பார்வையோடு வெறித்தபடி நடக்கும்கால் நரம்புகளை ஊடுருவி கண் நரம்புகளைச் சிதைக்கும்அத்தியாகிரகத்திற்குஅழைப்பு விடுத்திருக்கின்றன மெளனச் சாணத்தால்கிழவனின் கண்ணாடிச் சில்லுகளைஒருபோதும் ஒற்றி எடுத்திட முடியாது நாடே போற்றிய எழுபத்தைந்துநைந்து போனது வீதியெங்கும் மூவர்ணம்பறக்க-விட்டோம்வீடெங்கும் ஏற்றி வைத்துச்சிறக்க வைத்தோம் அதையின்றுஉயர் வர்ணம் யாரென்றகர்ணத்தில் உடைத்துவிட்டார்கள் கிழவனின் கண்ணாடிச் சில்லுகளின் மீதுமெளனத்தை அடைகாக்க அனுமதித்தால் ஆபரணங்களைப் போலஆடைகளுக்கும்வட்டி கட்ட நேரிடும்

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்று நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆம், கல்விமுறை மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, தற்போதைய கல்விமுறை என்பது, அதன் பொருளை மறந்து, தேர்வுகள், திறன்கள், வேலைவாய்ப்பு எனத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிட்ட கடிதம் ஒன்று தமிழ்நாடு தேர்வுகள் துறையிலிருந்து பள்ளிகளுக்கு வந்தது. அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவித்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்காக பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றிபெறுவோரில் 500 மாணவர்கள் மற்றும் 500‌ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் இளநிலைப் பட்டம் முடிக்கும்வரை ஆண்டுதோறும் 10000 ரூபாய் வழங்கப்படும். அதாவது மீண்டும் புதிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதி நடைமுறைக்கு வருகிறது. திறன்கள் குறித்து மட்டுமே பேசுவதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020. நுழைவுத் தேர்வு வேண்டாம் என்கிறோம்; ஆனால் திறனறித் தேர்வுக்கு அவர்களைத் தயார் செய்யும்படி கூறுகிறோம். லட்சக்கணக்கான குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெறும் ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் எனில், சமவாய்ப்பு இதில் எங்கே இருக்கிறது எனும் கேள்வி எழுகிறது. இதற்கு அடுத்ததாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விக்கான மாநிலத்  திட்ட இயக்குனரும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும் கூட்டாக ஒரு இணைச் செயல்முறைக்கான சுற்றறிக்கையை இம்மாதம் அனுப்பியுள்ளனர். அந்தச் சுற்றறிக்கையில், ‘மாநில மதிப்பீட்டுப் புலம்’ என்ற பெயரில் 6 முதல் 12 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (High Tech Lab) வழியாக வினாடி-வினா தேர்வுகளை நடத்த அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் பல்வேறு மாவட்டங்களிலும் 6-12 வகுப்புகளுக்கு முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடந்துவருகின்றன. இன்றுதான், அதாவது ஆகஸ்ட் 12 அன்று மாலைதான் தேர்வுகள் முடிவடைகின்றன. அடுத்த மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, அதாவது ஆகஸ்டு 16 முதல் 29 வரை மாணவர்களுக்கு வினாடி-வினா தேர்வுகளை நடத்தி, அதைப் பதிவு செய்யும்படி வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பிவைத்துள்ளனர். ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டு நாட்கள் தேர்வுகள் என்றாலும் ஆய்வகங்களில் மாணவர்களைப் பகுதி பகுதியாக அனுப்ப வேண்டியிருப்பதால், ஆசிரியர்களால் வகுப்புகளைக் கவனிக்கவோ பாடங்களை நடத்தவோ இயலவே இயலாது. இந்தத் தேர்வுகள் முடிந்து அடுத்த சில நாட்களில், செப்டம்பரில், காலாண்டுத் தேர்வுகள் வந்துவிடுமே! ஒரு தேர்வு முடிந்த அடுத்த சில நாட்களில் மீண்டும் மீண்டும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படுமென்றால், நமது கல்வியின் நோக்கம்தான் என்ன? குழந்தைகள் பள்ளிக்கு வருவதே தேர்வுகளை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பதற்கா? ஆசிரியர்கள் எதற்கு? பாடம் நடத்துவதற்கா அல்லது தேர்வுகள் நடத்துவதற்கா? இந்த வினாடி-வினா தேர்வு நடைமுறையிலும் கொள்குறி வகை வினாக்கள்தான் இடம்பெறுகின்றன. எனில், ஆறாம் வகுப்பு முதலே நாம், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறோம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல அறிந்துகொள்ள முடிகிறது அல்லவா? குறிப்பாக, இத்தகைய தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் கொள்குறி வகையாகவே இருக்கும். எந்தத் தேர்வு என்றாலும் பாடப்பொருள் அறிவை, கொள்குறி (multiple choice) வகை வினாக்களாகவே எதிர்கொள்ளும்படி மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். நுழைவுத்தேர்வுகளை வன்முறை என்கிறோம். ஆனால் ஒவ்வொரு தேர்வும் நுழைவுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகளின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகிறது. “கல்வி என்பது பள்ளியில்தான் தொடங்குகிறது என்று நினைப்பது நமது அறிவீனத்தையே காட்டுகிறது. அதேபோல அச்சிடப்பட்ட பாடங்களை ஒரு குழந்தையின்மீது திணித்து, அது அந்தக் குழந்தையின் மூளைக்குள் ஏறிவிட்டதா எனத் தேர்வுகள் மூலம் பரிசோதிப்பதும் கல்வி அல்ல. குழந்தைகளுக்கு நீங்கள் எதையும் கற்றுக்கொடுக்க முடியாது. அவர்களாகவே கற்று அறிவதற்கான சூழலை மட்டுமே உருவாக்க முடியும்” என்கிறார் மரியா மாண்டிசோரி. ஆனால் நாம், நமது பள்ளிகளில் என்ன செய்துகொண்டுள்ளோம் தெரியுமா? முதல் வகுப்பு முதல் ஆன்லைன் தேர்வு. எண்ணும் எழுத்தும் திட்டம் வகுப்பறைகளில் நடப்பது, அதன் நீட்சியாக குழந்தைகளுக்கு அலைபேசி செயலி வழியாகத் தேர்வு. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வகுப்புகள் வரையிலும் தேர்வு, தேர்வு, தொடர்ந்து தேர்வுகள் மட்டுமே‌. சில பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் வகுப்பறைகளில் பாடங்களைக் கற்றுத் தருவதும் தேர்வுகள் நடத்துவதும் நடைமுறையில் இருந்தாலும் தற்போது இருக்குமளவுக்கு குழந்தைகளுக்கு மன அழுத்தமோ பாடச் சுமைகளோ இருந்ததில்லை. பாடநூலில் உள்ள பாடங்களை நடத்துவதற்கான சூழலும் சுதந்திரமும் ஆசிரியர்களுக்கு இருந்தது. அந்தந்தப் பாட ஆசிரியர்கள், தமது மாணவர்களின் சூழல் மற்றும் அவர்களின் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றையும் இன்னபிற சூழல்களையும் கருத்தில்கொண்டு, பாடங்களில் உள்ள வினாக்களை சிறு தேர்வுகளாக அவ்வப்போது நடத்துவார்கள். அதன் மதிப்பீட்டுக்குப் பிறகு, குறிப்பிட்ட மாணவர்களுக்கு எங்கெல்லாம் கவனம் தேவையோ, அங்கு சிறப்புக் கவனம் தருவார்கள். அதேபோல, பாடநூல்களும் இத்தனைக் கனமாகவோ குழப்பங்கள் நிறைந்ததாகவோ இருக்காது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறனையும் அன்றைய பாடநூல்கள் பெற்றிருந்தன. ஆனால் அதற்கு எதிர்மாறாக, தற்போதைய பாடநூல்களின் அளவும் அதீதப் பாடப்பொருள்களும் குழந்தைகள் கல்வியை வெறுப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருப்பதைக் குறித்து நாம் எங்காவது கவனம் கொள்கிறோமா? கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களும் இது குறித்தான கள உண்மைகளை வெளியே சொல்வதில்லை; கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. உலகத் தரத்தில் கல்வி தருவதாகக் கூறி, போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதுவாகப் பாடநூல்களை வடிவமைக்கின்றனர், பாடநூல் குழு உறுப்பினர்கள். பாடநூல்களை வெறுக்கும் மனநிலைக்குச் தள்ளப்படும் குழந்தைகளை இங்கு  ஒவ்வொரு வகுப்பிலும் பார்க்கலாம். இவர்கள் எட்டாம் வகுப்பு வரை இலவசத் தேர்ச்சி பெற வைக்கப்படுகின்றனர். தடையில்லாத் தேர்ச்சியின் (No Detention Policy) மோசமான விளைவுகளால் குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பிலும்கூடத் தமிழ் எழுத்துகளைப் படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தாய்மொழியில் சரளமாகப் படிக்கத் தெரியாத ஒரு தலைமுறையைத்தான் இந்தக் கல்வி முறை உருவாக்கி வைத்துள்ளது. ஆங்கில வழிக்கல்வி, அவர்களது கல்வி  வாழ்க்கையைப் பதம் பார்க்கும் அடுத்த கத்தி. ஆங்கிலத்தில் அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், ஆங்கிலப் பாடத்தில் 100% தேர்ச்சி தரும் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் கொண்டுள்ள அற்புதமான கல்வித்துறை நம்முடையது. ஆம், ஒரு மொழியை மொழியாகவே கற்பிக்கத் தெரியாமல் செயல்படும்போது, மற்ற பாடங்களான அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் போன்ற பாடங்களில் உள்ள ஆங்கில அறிவை எப்படிக் கடத்த முடியும் என்ற கேள்வி நம்மிடையே இருந்தால், நாம் மாணவர்களுக்குத் துரோகம் இழைக்கமாட்டோம். எல்லாமே இங்கு ஆவணங்கள்தான். குழந்தைகளுக்கு வாசிக்கத் தெரிகிறதா? எழுதத் தெரிகிறதா? சிறு தேர்வு வைத்துள்ளீர்களா? யூனிட் டெஸ்ட் வைத்துள்ளீர்களா? மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களா? மதிப்பெண் குறைந்தால் அதற்குக் குறைதீர் கற்பித்தல் செய்கிறீர்களா? மெல்லக் கற்போர் பயிற்சி நடக்கிறதா? பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா?  ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படுகிறதா? இவை அனைத்தையும் எமிஸ் இணையதளத்தில் ஏற்றினாயா? இல்லையெனில் அதை உடனே செய்ய வேண்டும். இவைதான் இன்று அரசுப் பள்ளிகளில் நடக்கும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள். அடுத்ததாக, வாரத்தேர்வு வைத்தீர்களா? மாதத் தேர்வு வைத்தீர்களா? சிறப்பு வகுப்புகள் வைத்தீர்களா, வைக்கவில்லையா? வைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை; ஆனால் தேர்ச்சி வீதம் குறையக் கூடாது. அவரவர் சூழலுக்கு ஏற்ப, சிறப்பு வகுப்புகள் நடத்துவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் தேர்ச்சி சதவீதத்தில் கவனம் தேவை. எனில், பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் இருக்குமா? ஒரு கட்டத்தில் எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே, குழந்தைகள் தேர்வுகளை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடும் சூழல்தான் தற்போது நிலவுகிறது. இவை மட்டுமா? உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (High Tech lab) வழியாக ஒவ்வொரு மாதமும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுகள். அனைத்தும் கொள்குறி வகை வினாக்கள் எனில், மாணவன் எப்போதுதான் சிந்தனை செய்வது? சொந்த நடையில் எழுதுவது? எப்போது தான் கற்ற கல்வி மூலம் இந்தச் சமூகத்துக்காக வினையாற்றுவது? என்பன போன்ற சந்தேகங்களுக்கெல்லாம் நம்மிடம்  பதிலே இல்லை. கல்வித்துறையிலும் சந்தேகமே ஏற்படுவதில்லை என்பதுதான் நம்முடைய ஆகப் பெரிய கவலை. எப்போது வேண்டுமானாலும், நாளொன்றுக்கு  குறைந்தபட்சம் சுமார் மூன்று ஆணைகளாவது பள்ளிகளுக்கு வருகின்றன. மாணவர் எண்ணிக்கை, கணக்கீடுகள், போட்டி அறிவிப்புகள், பயிற்சிகள், எமிஸ் பதிவேற்றங்கள், மாணவர்கள் விவரங்கள், கல்வி உதவித் தொகைகள் என, தொடர்ச்சியான பணிகள். இவை அனைத்தும் இயல்பான வகுப்பறைகளை முற்றிலும் பாதிக்கின்றன. இவற்றுடன் மாணவர்களது உடல்நலக் குறைவு, அவர்கள் விடுப்பு எடுப்பது, உறவினர் வீடுகளுக்கு செல்வது, உள்ளூர்ப் பண்டிகைகள், ஆசிரியர்கள் உடல் நலமின்மை, விடுப்பு எடுப்பது, பயிற்சிக்குச் செல்வது என, இப்படிப் பலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. தற்காலத்தில் அலைபேசிகளின் ஆதிக்கம், திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், போதைப்பொருள் பழக்கங்கள், இப்படி இன்னும் சில கவன ஈர்ப்பு விஷயங்களைத் தாண்டி மாணவர்களைக் கல்விக்குள் அழைத்து வரவேண்டிய தேவை உள்ளது. ஒரு கல்வி ஆண்டில் மாணவர் – ஆசிரியர்  இருவரும் இணைந்து, எத்தனை நாட்கள் கல்விச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர் என்று கணக்கிட்டால், நம்முடைய போதாமை முழுமையாக வெளிப்படும். அரைகுறைக் கல்வியைக்கூடப் பெறாமலேதான் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர். அனைவரும் தேர்ச்சி என்ற சுலோகத்தை மட்டும்தான் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். அது அல்லவே கல்வி. அதனால் எந்தப் பயனும் கிடையாது என்பதை, குழந்தைகள் உயர்கல்வி செல்லும்போதுதான் உணர்கின்றனர். பள்ளிக் கல்வியை முடித்தபிறகும் பல வகையான போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், நீட், JEE உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும். குழந்தைகள் பாறைகளாக மாறிப்போகும் மனநிலையில், இறுகிப்போய்தான் வாழ்கின்றனர். அவர்களது மாணவப் பருவம் மிகவும் வறட்சியாகவே இருக்கிறது. தேர்வுகளை வெறுக்கும் குழந்தைகளது மனநிலை காக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் கல்வித்துறை ஈடுபடவேண்டும். குழந்தைகளது மனநிலை மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் முழு மனதோடும் ஆர்வத்தோடும் கற்றலில் ஈடுபடும் சூழலையும் மனநிலையையும் உருவாக்க வேண்டியதே இன்றைய முக்கிய மற்றும் அவசரத் தேவை.