கரைசேராப் படகுகள் – 10

கரைசேராப் படகுகள் – 10

தொடர்கதைவயலில் வேலை செய்தவர்கள் கும்பல் கும்பலாக ஓடியதைப் பார்த்ததும், ‘ஏன் இப்படி ஓடுகிறார்கள்?’ என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றிருந்தார் செந்தாமரை. “எலே.. செந்தாமரை, நம்ம ஊரு கன்னிமா கோயில்ல…. யாரோ பெரியவரு வந்திருக்காராம். எல்லாரும் பாக்க போறாங்களாம், நீயும் வாடா” என்று கோபால் நாயக்கர் கூப்பிடவும், குழந்தை பிறந்த தீட்டு இருப்பதை  மறந்து அவர் கூடவே ஓடினார் செந்தாமரை. கோவாலண்ணன் கூப்பிட்டாரேன்னு வேகவேகமாக வந்த செந்தாமரைக்கு கோயிலுக்கு கிட்ட வந்ததும்தான் தீட்டுன்னு உரைச்சது. இருந்தாலும் வந்துட்டமேன்னு வாசலைத்  தாண்டி ஒதுங்கி நின்றார். கோயில் வாசல்ல  அகலமா ஒரு கல்லு இருக்கும். அந்தக் கல்லு மேல, உடம்பெல்லாம் ஒட்டிப்போய், ஒல்லியாக வேட்டி மாதிரி ஒரு காவித் துணி கட்டிகிட்டு, மேலுக்கு ஒரு துண்ட விரிச்சி போட்டுகிட்டு, கையில ஒரு கொம்ப வச்சிகிட்டு ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். “ஆரு இவரு..?” என்று செந்தாமரை கோவாலுவைக் கேட்டார். “இவருதான் பெரிய மகான்; வட நாட்ல இருந்து  வர்ராராம், இவர பாத்தா புண்ணியமா..” என்று கோவாலு விளக்கினார்.  எல்லாரும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். செந்தாமரை பயந்துகொண்டு ஓரமாக நின்றுகொண்டிருந்தார். மகான், செந்தாமரையைக் கையை அசைத்துக் கூப்பிட்டார். கிட்ட ஓடிப் போன செந்தாமரை, ‘படார்’னு அவர் காலில் விழுந்துட்டார்.  “எழுந்திரு, காய்ச்ச மரம்தான் கல்லடி படும்”னு  சொல்லிட்டு, “சுவாதி நல்லா இருப்பா”ன்னு சொன்னார். ‘அந்த மகான் என்ன சொன்னார்னு புரியலையே..”ன்னு வழியெல்லாம் யோசனையாகவே இருந்தார்  செந்தாமரை. “அண்ணாத்த…. நம்ம வீட்ல யாருண்ணா சுவாதி? இல்லாத பேரை சொல்றாரு” என்று குழப்பமாகக் கேட்டார் செந்தாமரை. “முட்டா பய மவனே.. புனிதா குழந்தைக்குதான் சுவாதின்னு பேர் வக்கச்  சொல்லியிருக்காரு டா” என்று விளக்கினார் கோவாலு. “அண்ணாத்த, எனக்கு ஒரு ஒத்தாச பண்ணுங்க. நம்ம சுப்புடு ஐயர்கிட்ட குறிப்பு கொடுத்திருக்கேன். குழந்தைக்குப் பேரு வாங்கி வந்துடுங்கண்ணா. நான் மவளுங்களை ஏழாம் காப்புக்கு அழைச்சிட்டு வந்திடறேன்”னு சொல்லி பொட்டி வண்டியில புறப்பட்டார் செந்தாமரை. நடுமகள்  ஊரைத் தாண்டிதான் பெரிய மகள் வீட்டுக்குப் போகணும். அதனால  முதல்ல நடுமகள் வீட்டுக்குப் போனாரு செந்தாமரை.  “கடிச்ச பாக்குல காப் பாக்கு கொடுக்காத பெரியாத்தா, நாபெத்த மவளே, நாபெத்த மவளேன்னு வழியனுப்ப வந்தாளாம்”.  அந்த மாதிரி வாயிலேயே வட சுடுவா, கோதை மாமியாரு பவளம். செந்தாமரையைப் பார்த்ததும் “வாங்க.. வாங்க”ன்னு வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்  பவளம். “எப்படி இருக்கீங்க சம்பந்தி?ன்னு தெரியாம கேட்டுட்டாரு செந்தாமரை. “நாயக்  கேட்பாரும் இல்ல, நடுவூட்ல வைப்பாரும் இல்ல;  ஏன்னு கேட்பாரும் இல்ல எடுத்து புடிப்பாரும் இல்ல”ன்னு ஒப்பாரி  வைக்க ஆரம்பிச்சுட்டா பவளம். ஆனா கழுத்துல மாட்டு வடமாட்டம் மோப்பு வச்ச  செயினு தொங்க, காதுல வைர பேசரி மின்ன, ஆளு நல்லா வளமாதான் இருந்தா. பஞ்சு மிட்டாய் நிறத்துல காபிதூள் பூப்போட்ட  வெல உசத்தியான சேலையில கூந்தலில் கனகாம்பரம் தொங்க செழிப்பா இருந்த, மகள் கோதையைப் பாக்கறதுக்கு செந்தாமரைக்கு  மனசுக்கு குளிர்ச்சியா இருந்தது. வயிறு குளிர  மோரைக் குடித்துவிட்டுக் கிளம்பினார். “நாளைக்கு புனிதா பொண்ணுக்கு ஏழாம் காப்பு, குடும்பத்தோட வந்துடுங்க”ன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினார். வண்டிய வேகமாக  கூவத்தூருக்கு ஓட்டினாரு. வவுறு பசியில கத்த, மாட்ட அடிச்சு   ஓட்டினார்.   உச்சி வெயிலுக்கு இவரோட  பெரிய மகள்  வசந்தி வீட்டுக்கு வந்தார். பேத்தி வளரும்போது பாட்டியா பாசம் காட்னவ, தாலி ஏறியதும் மாமியாரா மாறிட்டா. இருந்தாலும், செந்தாமரை மருமவன்தானே.. அதான், மருமவன் வருவாருன்னு எதிர்பார்த்து , வெடக்கோழிக் குழம்பு வச்சு, வயக்காட்டு நண்டை வறுத்து ரசம் பண்ணி வச்சிருந்தாங்க. வவுறு கதறக் கதற உள்ள போட்டுத் திணிச்சுட்டு, மீதிய அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும்   மூட்ட கட்டினார் செந்தாமரை. “காலைல கோழி கூவ வந்துடுங்க  அத்தை. வசந்தி.. நீயும்தான். புனிதா அவ புருசனை நெனைச்சு வெசனப்பட்டுகிட்டு இருக்கா. உன்னையும் கோதையையும் பாத்தா, அவ மனசு ஆறும்”னு  சொல்லிட்டு, “மாமனையும் மச்சானையும் வயக்காட்ல பாத்து சொல்லிட்டேன்”  என்ற சேதியும் சொல்லிட்டு கிளம்பினார். பொழுது சாயறதுக்குள்ள ஊரு போய்ச் சேரணும்னு வண்டிய அடிச்சு ஓட்டினார். வயக்காட்டு வேலைய கணக்கு தீர்த்துட்டு, கட்டின புடவயில கதிரெல்லாம் ஒட்டியிருக்க, முகமெல்லாம் வேர்த்து விறுவிறுக்க  வந்த மரகதத்தைப் பார்க்கும்போது, வழவழன்னு இருக்கற ரப்பர் மரத்துல பால் வடியறா மாதிரி இருந்தது. செந்தாமரையும் மாமியார் வீட்ல கொடுத்த தூக்குச் சட்டிய தூக்கிக்கிட்டு வீட்டுகுள் நுழைந்தார்.  “என்னதுங்க..? என் ஆத்தா கொடுத்தாங்களா?”ன்னு தூக்குச் சட்டிய  கையில வாங்கினாள் மரகதம். “விலை மோர்ல வெண்ணெய் எடுத்து, தலை மகனுக்குக் கல்யாணம் பண்ற குடும்பமாச்சே.. அவளா கொடுத்திருக்கப் போறா?”ன்னு  வம்பிழுத்தார்   பட்டம்மா. “ஓசியில உலை வச்சி, காந்தல்ல களிகிண்டற குடும்பமாச்சே உங்க குடும்பம்! நீ  என் குடும்பத்தைப் பேசறியா?”ன்னு பதிலடி கொடுத்தா மரகதம்.  “ஆரம்பிச்சிட்டீங்களா உங்க போராட்டத்த… சத்த நேரம் அடங்குங்க”ன்னு சத்தம் போட்டுட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்த செந்தாமரை மனசுகுள்ள, அந்த மகான் சொன்னது ஓடியது. அதற்குச் சாட்சியாக முருகர் படத்திற்குப் பின் இருந்து கடிதம் ஆடியது. தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 7

கரைசேராப் படகுகள் – 7

தொடர்கதை` வேகவேகமாக நான்கு கால் பாய்ச்சலில் வாய்க்கால் வரப்பெல்லாம் தாண்டி நடந்தார் செந்தாமரை. நான்கு வயல் தாண்டியதும் மாணிக்கம்  முன்னால் செல்வது தெரிந்தது. இங்கிருந்து சத்தமாகக் கூப்பிட்டார் செந்தாமரை;  “எலே மாணிக்கம்.. எலே மாணிக்கம்….” என்று கத்தினார். மாணிக்கம் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றுகொண்டான். கிட்ட நெருங்கியதும் மாணிக்கத்தைப் பார்த்து, “ஏதோ விசயமா விரசா போற போலிருக்கு” – எங்கே  செல்கிறாய் என்று கேட்காமல் நாசூக்காகக் கேட்டார். “ஆமாண்ணே, பெரிய கருப்பன் வீட்ல மாடு பிடிக்கறதுக்காக மாம்பாக்கம் போறண்ணே” என்று மகிழ்வாகச் சொன்னான் மாணிக்கம். “நல்லதா போச்சு; நானும் என் சின்ன மவள கொடுத்த வீட்டுக்குத்தான் போய்கிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அவனுடன் சேர்ந்து நடந்தார் செந்தாமரை. “ஏம்பா.. மாடு வாரத்துக்கு பிடிக்கப் போறயா? மொத்தமா பிடிக்கப் போறயா?” என்று கேட்ட செந்தாமரைக்கு, “விலைக்குதான்ணே.. நல்ல  கறவை மாடா வேணும்ணே” என்று சொல்லிவிட்டு, “ரெண்டு பொட்ட புள்ள ஆயிடுச்சி. அதுங்களுக்குக் கல்யாணம் காட்சின்னு பாக்கணும். காடு கழனியை மட்டும் நம்பி என்ன பண்றதுண்ணே? அதான் மாடு வாங்கலாம்னு” இழுத்தா மாதிரி சொன்னான் மாணிக்கம். “அதுவும் சரிதான்; நல்ல ரோசனைதான்” என்று சொல்லிக்கொண்டே தலையை அண்ணாந்து பார்த்தார். மணி 12 இருக்கும் என நினைத்துக் கொண்டு, “எலே.. இது கோணங்கி வீட்டுக் கிணறுடா; தண்ணி தேனாட்டம் இருக்கும்” என்று சொன்ன செந்தாமரை, படியில இறங்கி தண்ணீரைக் கையில் அள்ளிக் குடிக்க, மாணிக்கமும் இணைந்துகொண்டான். துண்டை ஈரமாக்கி  வெயில் தெரியாமல் இருக்க, தலையில போட்டுக் கொண்டு நடந்தார்கள் இருவரும். மாம்பாக்கம் வந்ததும், “அண்ணே, நீங்க சம்பந்தி வீட்டுக்கு போயிட்டு, கருப்பன் வீட்டுக்கு வந்து மாடு வாங்கித் தாங்கண்ணே” என்றான் மாணிக்கம். “வேலியில போன ஓணானை வேட்டியில விட்ட கதையாயிடுச்சே; வயல்ல வெள்ளாமை இருக்கு, இவன்கிட்ட வியாபாரம் பேசறது தெரிஞ்சா மரகதம் வைவாளே” என்று மனதிற்குள் புலம்பினார். ஆனால் வாய் “வரேன் மாணிக்கம்” என்றது. சம்பந்தி வீட்டுக்குப் போனதும், “தங்கச்சி.. தங்கச்சி…” என்று கூப்பிட்டார். “அடடே! வாங்கண்ணே… என்று வரவேற்றபடி புனிதாவின் மாமியார் பவுனு  வெளியே வந்தார். “புள்ள பெத்த தீட்டு உள்ள வரக்கூடாது; இங்கேயே உட்காந்துக்கறேன்” என்று துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தார் செந்தாமரை. “புனிதாவும் பேத்தியும் எப்படிண்ணா இருக்காங்க? எங்கண்ணா வயல் வேலை அதிகமா இருக்கு; கை உழைச்சாதான் கஞ்சிங்கற கதையா இருக்கு. இப்பகூட பொட்ட புள்ளைங்களும் அவரும் வயக்காட்டுலதான் இருக்காங்க. பேத்திய கூட வந்து பாக்க முடியல” என்று புலம்பினாள் பவுனு. “ஏழாம் காப்புக்கு குடும்பத்தோட வந்துடுங்கன்னு சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்” என்றார் செந்தாமரை.   “ஆமாண்ணே, என் பேத்திக்குக் காப்பு செய்து போடணும். புள்ள பணம் அனுப்பவே இல்ல, வர்றது வயிறுக்கும் வாய்க்குமே பத்த மாட்டேங்குது” என்று பஞ்சப் பாட்டு பாடினாள் பவுனு. “அதனாலென்ன, காப்புதானே? நான் பார்த்துகறேன்” என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு, “மச்சான் வந்தா சொல்லிடுமா” நான் கிளம்பறேன் என்றார். “இருங்கண்ணே, சாப்பிட்டு போவீங்க” என்ற பவுனிடம்  “வேணாம்” என்று மறுத்துவிட்டுக் கிளம்பினார். வழியெல்லாம், ‘அறுவடைச் செலவையே எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலை; இப்ப காப்பு செலவு வேறயா?’ என்று கவலைப் பட்டுக்கொண்டே வந்தார், கருப்பன் வீட்டுக்குச் சென்று மாட்டைப் பல்லு பிடித்துப் பார்த்தார். மடியில  கை வைத்துப் பார்த்தார். “என்ன மாணிக்கம், விலை பேசிடவா?” என்று கேட்டார். “ஆமாண்ணே, பேசி முடிச்சிடுங்க” என்றான் மாணிக்கம். கருப்பனும் செந்தாமரையும் துண்டைப் போட்டு விரலைப் பிடித்து விலை பேசினார்கள். ரொம்ப நேரம் பேரம் பேசி, கடைசியாக மாணிக்கத்திற்குத் திருப்தியாக விலையை முடித்துக் கொடுத்தார். மாட்டை ஓட்டிகொண்டு கிளம்பி வந்தான் மாணிக்கம். வரும் வழியெல்லாம் “;அந்த ஐயனாரப்பன்தான் உங்களைப்போல வந்து, எனக்கு மாடு வாங்கி கொடுத்தாரு” என்று  செந்தாமரையைப் புகழ்ந்து கொண்டே வநதான் மாணிக்கம். வயக்காட்டில் எல்லாரையும் விரட்டி வேலை வாங்கிக்கொண்டு இருந்தாள்  மரகதம். “கதிரெல்லாம் சீக்கிரம் களம் போய்ச் சேரணும். உங்க ஆண்ட வந்தார்னா என்னை ஆஞ்சிடுவார் ஆஞ்சி” என்று விசனப்பட்டாள். “அடியே.. அருக்காணி.. வாய்க்கால் ஓரத்துல கொஞ்சம் காச்சற கீரைய பறிச்சுக் கொடேன்” என்று அதிகாரம் பண்ணினாள் மரகதம். “புள்ள பெத்தவளுக்கா கீரை?” என்று அதிர்ந்தாள் அருக்காணி. “வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்; கத்தாழ முள்ளு கொத்தோட புடுங்குசாம்னு,  நடிக்காதடி. புள்ள பெத்தவளுக்கு எங்கனயாவது கீரை தருவாங்களாடி?” என்று அதட்டலாகச் சொன்னாள் மரகதம். கதிர் எல்லாம் களம் வந்து சேர்ந்ததும், கட்டெல்லாம் எண்ணி வைக்கோல் பிரி போட்டுக் கட்டி, மூலைக்கு மூலை அடையாளம் வைத்துவிட்டு  மாமனுக்காகக் காத்திருந்தாள் மரகதம். வயக்காட்டில் வேலை செய்த பெண்கள் எல்லாம் வாய்க்கால் தண்ணியில் குளித்துவிட்டு, முந்தானையைப் போட்டு அந்த வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்ப்பதற்கு வானில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் நிலவு ஓடி ஓடிப் பிடிப்பது போல அழகாக இருந்தது. வயக்காட்டில் யாரும் இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தாள் மரகதம். தூரத்தில் ஓநாய் கத்தும் சத்தம் கேட்டது. ‘பச்ச உடம்புக்காரிக்கு சோறு போடணுமே; இந்த மனுசனை இன்னும் காணோமே’ என்று தவித்தாள். தூரத்தில் மாமன் மாடு பிடித்து வருவதைப் பார்த்ததும், குழம்பினாள் மரகதம். தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 5

கரைசேராப் படகுகள் – 5

தொடர்கதை – சாம்பவி சங்கர் சூரியன் தத்தளித்து, தகதகத்துக் கிளம்பும் காலைப்பொழுது. அந்த ஓட்டு வீட்டு வாசலில் பெரிய வேப்பிலைக் கொத்து சொருகி இருந்தது.  பெரிய அகலமான பித்தளைச் சட்டியில் ஆலம் கரைத்து, அதில் வேப்பிலை, கரித் துண்டு, காய்ந்த மிளகாய் போட்டு வாசலில் அனைவரின் பார்வையில் படும்படி வைத்திருந்தனர். மரகதம் மூன்றாம் நாள் புனிதாவுக்கு சாதம் கொடுப்பதற்காக, அதிகாலையிலேயே எழுந்து, குளிசெலவு எல்லாம் மண் சட்டியில் வைத்துப் பொன்னிறமாக வறுத்து, அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து எடுத்தாள். முதல்நாளே பட்டம்மாள் பாட்டி கால்கிலோ பூண்டை உரித்து வைத்திருந்தாள். அலமு பாட்டி, அவள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பிஞ்சுக் கத்தரிக்காயைப் பறித்துவந்து மரகதத்திடம் கொடுத்து இருந்தார். நல்லெண்ணெய் நிறைய ஊற்றி, பூண்டைப் போட்டு, அதன் தலையில் கொஞ்சமாகப் பெருங்காயத்தைக் கொட்டி, நன்றாக வதங்கியதும் பிஞ்சுக் கத்திரிக்காயைப் போட்டு, நல்லெண்ணெயில் மூழ்க விட்டு, தட்டு போட்டு மூடி வைத்து வதக்கி, கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த குளி செலவு போட்டு சட்டியை மூடி வேகவைத்தாள் மரகதம். அந்த வாசனை தெருவில் செல்பவர்கள் அனைவரையும் சுண்டி இழுத்தது. “அடியே… மரகதம், அந்த கத்திரிக்காய் சட்டியில் சுடச்சுட சாதம் போட்டு எடுத்துட்டு வாடி…” என்று பட்டம்மா பாட்டி நாவில் நீர் ஊற சொன்னார். “பாரேன் இந்தக் கிழவிக்கு, அங்க புள்ளை பெத்தவ பசியோட இருக்கா. இங்கே இவங்களுக்கு சாப்பாடு கேட்குதாம்” என்று மாமியாரை மனதிற்குள் கிண்டல் அடித்துவிட்டு, தன் மகள் புனிதாவிற்குச் சுடச்சுட சாதமும் கத்தரிக்காய் வதக்கலும் சேர்த்து காலையில் 7 மணிக்கு உணவு கொடுத்தாள். இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த புனிதாவிற்கு, இந்தச் சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது. அவசரமாக வேலை முடித்துக் கொண்டிருக்கும்போதே, “வயலில் ஆளுங்களுக்கு சாப்பாடு வேணும்” என்று செந்தாமரை மரகதத்தை அவசரப்படுத்தினார். நேற்று  செய்து வைத்த கூழில் இருந்து ஒரு அண்டா கூழைக் கரைத்து, அதற்கு ஊறுகாய் மிளகாயும் நார்த்தங்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாயை ஒரு டப்பாவிலும் எடுத்துக்கொண்டாள். கூழ் அண்டாவை, தலையில் சும்மாடு வைத்துத் தூக்கிக்கொண்டாள். மரகதமும் செந்தாமரையும் மாறி மாறி அந்தக் கூழ் அண்டாவை ரெண்டு பர்லாங்கு  தூரத்தில் உள்ள வயலுக்கு எடுத்துச் சென்றனர். வயலில் அறுவடை வேகமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு இருந்த பாதாம் மரத்திலிருந்து கிடுகிடுவென்று வாதாம் இலைகளைப் பறித்த மரகதம், இலைகளை வேகவேகமாக தொண்ணை ஆக்கி, அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் கூழ் ஊற்றிக் கொடுத்தாள். பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த அருக்காணியையும் கூப்பிட்டுக் கூழ் கொடுத்தாள் மரகதம். மரகதம் வயல் வேலை செய்து கொண்டிருந்தாளே தவிர, ‘பட்டம்மா பாட்டியும் அலமு பாட்டியும் புனிதாவையும் குழந்தையையும் நன்றாகப்  பார்த்துக்கொள்வார்களா?’ என்ற கவலையிலேயே அவள் மனம் இருந்தது. மதியம் ரெண்டு மணி இருக்கும். வீட்டு வாசலில் தபால்காரர் வந்து, “ஐயா… ஐயா…” என்று கத்திக் கொண்டிருந்தார். வாசலில் வேப்பிலை சொருகவில்லை என்றால், அவர் நேரடியாக உள்ளே சென்று இருப்பார். வேப்பிலையைப் பார்த்ததும் தயங்கி, வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். ஆடி அசைந்து, திருவாரூர் தேராட்டம் பட்டம்மா பாட்டி வெளியில் வந்தார். “யார் அது? நம்ம ராமுவா? வாப்பா… என்ன வெளியிலேயே நின்னுட்ட?” என்று அக்கறையுடன் கேட்டார் பாட்டி. “வெளியில்தான் வேப்பிலை வேலி போட்டுட்டீங்களே, அப்புறம் எப்படி உள்ளே வர்றது?” என்று அங்கலாய்த்தார் கடுதாசி கொண்டுவந்தவர். “பாட்டி இந்தாங்க, இதை பத்திரமாக உங்க பிள்ளைகிட்ட கொடுத்துடுங்க” என்று கூறி, கவரைப் பாட்டியிடம்  கொடுத்துவிட்டுச் சென்றார். பாட்டி அதை எடுத்து வந்து, பத்திரமாக சாமி மாடத்தில் முருகர் படத்திற்குப் பின்னால் வைத்தார். ‘யார் கண்ணிலும் படாமல், பத்திரமாக என்னிடமே இரு’ என்று படத்திலிருந்த செந்திலாண்டவன் சிரித்தார். வயக்காட்டில் அறுவடை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களும் கதிர் அறுத்து, அரி அரியாக  வைத்தனர். அதை மரகதம், செந்தாமரை, இன்னும் சிலர் கட்டுக் கட்டாகக் கட்டினர். சில கட்டுகள் கட்டி முடித்ததும், ஆண்கள் அந்தக் கதிர்களைத் தலையில் வைத்துக்கொண்டு களத்து மேட்டுக்குச் சென்றனர். கதிர்களை அறுத்து முடித்ததும் பெண்களும் அந்தக் கதிர்களைத்  தலையில் சுமந்து, களத்து மேட்டுக்குக் கொண்டு வருவார்கள். இதில் அழகு என்னவென்றால், ஆண்கள் வேகமாக வாய்க்கால் வரப்புகளில் நடந்து களத்து மேட்டுக்கு வந்துவிடுவார்கள். பெண்கள் பாவம், தட்டுத்தடுமாறி வரப்புகளில் மேடு பள்ளங்களில் கால்வைத்து நடந்து வருவது நடனமாடிக்கொண்டே வருவதுபோல அழகாக இருக்கும். இந்த ஆண்கள் கட்டுகளைக் களத்தில் போட்டுவிட்டு, பாதி வழியில் வந்து தன் தங்கையோ,  மனைவியோ,  அம்மாவோ,  அத்தை மாமன் மகளோ, தூக்கி வரும் கட்டுகளை அவர்கள் மாற்றிக்கொள்வார்கள். அந்தக் கதிர் மாற்றும் அழகு, வானத்தில் அலை அலையாகச் சென்று கொண்டிருக்கும் மேகங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்த் திசையில் வரும் மேகத்துடன் மோதிக் கலைந்து செல்வது போல இருக்கும். கதிரெல்லாம் களம் வந்து சேர்வதற்குள், சூரியன் கீழ் வானம் வந்து சேர்ந்துவிட்டான். அவசர அவசரமாகக் கதிர்க் கட்டுகளை அடுக்கி வைத்துவிட்டு, ஆட்கள் எல்லாரும் அங்கேயே கரண்ட் கொட்டாயில் மோட்டார் கிளப்பி குளித்துவிட்டு, துணிகளைக் காய வைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள். பெண்கள் மார்பையும் உடலையும் மூடுவது போல, ஒற்றை சேலைத் தலைப்பை ஏற்றிக் கட்டிக்கொள்வார்கள். இன்னொரு தலைப்பை மறுகையால் பக்கவாட்டில் தூக்கிப் பிடித்தது  போல நடந்து வருவார்கள். கடலில் பாய்மரக் கப்பல், பாய்மரம் கட்டி கடலின் அலைகளில் ஆடி அசைந்து நகர்வது மாதிரி இருக்கும், பெண்கள் சேலை உலரவைத்து நடந்து வரும் அழகு. அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, செந்தாமரையும் மரகதமும் பேசிக்கொண்டே வந்தார்கள். “இன்னும் அறுவடை செய்ய வேண்டிய தளைகள் 4 துண்டு இருக்கு. இன்னைக்கு இரண்டு துண்டுதான் முடிஞ்சிருக்கு. இதுவே சின்ன தளைகள்தான்” என்று வேலையின் கடினத்தை வருத்தமாகக் கூறினார் செந்தாமரை. “ஆமாங்க, குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வயல் வேலைகளையும் பார்க்க முடியலைங்க” என்று அலுப்புடன் கூறினாள் மரகதம். “அடி போடி, எள்ளு எண்ணெய்க்குக் காயுதாம், எலிப்புழுக்கையும், ‘ஆமாம், கூட சேர்ந்து நானும் காயுறேன்’னு சொல்ற மாதிரி இருக்கு நீ பேசறது. நான் கூலி கொடுக்க பணத்துக்கு என்ன பண்றதுன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன். இவ என்னடான்னா வேலை அதிகமா இருக்குன்னு புலம்பறா”   என்று குறைபட்டார் செந்தாமரை. “ஆமா, பொம்பளைங்க வேலை செய்யறது ஆம்பளைங்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியாதே” என்று மனதுக்குள் புலம்பினாள் மரகதம். வேக வேகமாக வீட்டிற்குள் வந்த மரகதம், அவசரமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு, அதைவிட அவசரமாக மிளகு பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைத்து, அதற்குத் தொட்டுக் கொள்வதற்கு உடைத்த கடலையும் பூண்டும்  சேர்த்துத் துவையல் செய்தாள். புனிதாவிற்கு வறுத்த ரொட்டியைக் காபியில் ஊறவைத்து மாலை 6 மணிக்கே பட்டம்மா பாட்டி  கொடுத்திருந்தார். வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையிடம் சென்று, கொஞ்சிக் கொண்டிருந்தார் செந்தாமரை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவு முழுவதும் மரகதம்தான் அந்தப் பச்சை சிசுவைப் பார்த்துக்கொள்வாள். புனிதாவால் எழுந்து உட்காரக்கூட முடியாது. இன்னும் சரியான சத்தான ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. குழந்தை பிறந்த ரணம் குடல் முழுக்க உள்ளாகவே இருக்கும். அந்த ரணம் ஆறுவதற்கு ஒரு வாரமாவது ஆகும். அது வரைக்கும் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடணும். புனிதா வெளியில் அனைவரிடமும் சிரித்துப் பேசிப் பழகினாலும், அவள் மனம் முழுவதும் அவள் கணவனின் நினைவே நிறைந்திருந்தது. “என்னதான் வேலை அதிகமாக இருந்தாலும், நான் எப்படி இருக்கேன்னு விசாரித்து ஒரு கடுதாசிகூடப் போட முடியாதா?” என்று புனிதாவிற்குக் கோபம் லேசாக எட்டிப் பார்த்தது. “நொண்டியாகக்கூட இருந்துவிடலாம்; திருமணத்திற்குப் பிறகு ஒன்டியாக மட்டும் இருக்கக்கூடாது” என அடிக்கடி பாட்டி சொன்னது புனிதாவிற்கு நினைவுக்கு வந்தது. ‘இவள் வாழ்வின் சதியில் எனக்கும் பங்கு’ என்று செந்தில் ஆண்டவரும் அவருக்குப் பின்னிருந்த கடுதாசியும் சிரித்துக் கொண்டிருந்தது. தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 4 

கரைசேராப் படகுகள் – 4 

தொடர்கதை குழந்தை பெற்றெடுத்த எந்த உயிரினமாக இருந்தாலும் அகோரப் பசியில் இருக்கும். சில உயிரினங்கள் தன் குட்டியையே சாப்பிட்டுவிடும். அப்படி ஒரு பசியில்தான்  நாக்கு வறண்டு தண்ணீர் கேட்டாள் புனிதா. ஆனால் இந்தப் பட்டம்மா கிழவி அதைப் பிடுங்கிவிட்டதே என்ற கோபத்துடன், “ஏன் அத்தை, தண்ணி டம்ளர புடுங்கறீங்க?” என்று  கேட்டாள்  மரகதம்.  “பொசக்கெட்டவளே, புள்ள பெத்த உடனே தண்ணி குடிச்சா ஜன்னி வச்சிடும்” என்று ஆதங்கத்துடன் சொன்னார் பட்டம்மா. “இப்ப என்ன பண்றது? புள்ளைக்கு நாக்கு வறளுதே” என்று விசனப்பட்டாள் மரகதம். “சர்க்கரைத் தண்ணிய தொட்டு, பச்ச மண்ணு நாக்கிலும் புனிதா நாக்கிலும் தடவுங்க” பட்டம்மா பக்குவமாகச் சொன்னார். தாமரைமீது மோகம் கொண்டு ஆதவன் அதிவேகமாய் வரும் இளங்காலைப் பொழுது. ஆதவனைக் கண்ட வெட்கத்தில் ஆம்பலும் அல்லியும் மறைய, குளங்களில் தாமரைகள் பூத்துக் குலுங்கின.  மரகதம்  சாணத்தால் வாசல் மெழுகி, கோலம் போடாமல் விட்டாள். அப்பதான் தீட்டு வீடுன்னு பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஏழு நாளுக்கு அந்த வீட்டுடன் அன்னம் தண்ணி புழங்க மாட்டாங்க.  வீட்டு வாசலில் “அம்மா… தாயீ..” என்ற குரல் கேட்டு வெளியில் வந்த மரகதம், வாசலில் வண்ணாத்தி இருப்பதைப் பார்த்தாள்.  “வா சொக்கி.. ஏன் நேற்று துணி எடுத்துட்டு வரல?” என்று சற்று அதட்டலுடன் கேட்டாள். “வந்தேன் தாயீ, திண்ணையில பெரிய வூட்டு அய்யாமாருங்க எல்லாம் இருந்தாங்க, அதான் போயிட்டேன். பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காமே, ரொம்ப சந்தோசமுங்க”  என்று வெள்ளந்தியாகப் பேசினாள் சொக்கி.  “ஆமா சொக்கி, தீட்டு எடுக்கற அன்னிக்கு உனக்கு வெத்தல பாக்கு தரேன். இப்ப பாப்பா துணிய தனியா எடுத்துட்டுப் போ” என்று உள் அறையைக் காட்டினாள் மரகதம். “எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. புள்ள பெத்த வீடும் கல்யாண வீடும் ஒன்னுன்னு சொல்வாங்க. வாரவங்க போறவங்களை கவனிக்கணும்; புள்ள பெத்தவளை கவனிக்கணும். காடு கழனிய பாக்கணும். இந்த மனுஷன் வேற, ரெண்டு நாள்ல அறுவடைன்னு சொல்றாரு. ஆளுங்களுக்கு கூழாக்குவேனா? புனிதாவ கவனிப்பேனா? ஆத்தாடி, தலைய சுத்துதே!” என்று புலம்பிக்கொண்டே வேலைகளைத் தொடர்ந்தாள் மரகதம். “செந்தாமர.. டவுனுக்குப் போய் புனிதாவுக்கு வறுத்த ரொட்டி வாங்கிட்டு வா. இன்னிக்கு புனிதாவுக்கு அதுதான் சாப்பாடு”  என்று மகனுக்குக் கட்டளையிட்ட பட்டம்மா, “ஏன்டா, உன் மத்த மவளுக்கெல்லாம் சேதி சொல்லிட்டியா?” என்று பேத்திகளைப் பார்க்கும்  ஆர்வமுடன் கேட்டாள்.  “சொல்லி விட்டிருக்கு. அவளுங்க எல்லாம் ஏழாம் காப்புக்கு வர்ரோம்னு சொல்லியிருக்காங்க” என்றார் செந்தாமரை. “என்னமோ போடா, நீ பெத்தது மூனும் பொண்ணா போச்சேன்னு வெசனமா இருக்கு” என்று புலம்பிக்கொண்டே பட்டம்மா பாட்டி நெய்யை ஊற்ற, “யாரை நோவறது? விதைச்சவன் விதைச்சுட்டான்; விதி வழியே போவ வேண்டியதுதான்” என்று சலித்துக்கொண்டார் செந்தாமரை.  “ஏங்க காலையிலேயே எதுக்கு சலிச்சிகிட்டு? ஆகற வேலைய பாருங்க. போய் சுப்புடு ஐயரைப் பாத்து புள்ளைக்கு பேர் குறிச்சிட்டு  வாங்க” என்று செந்தாமரையைக் கிளப்பி சுப்புடு ஐயர் வீட்டிற்கு அனுப்பினாள் மரகதம்.  “மரகதம்….  மிளகு, சீரகம், தனியா, சுக்கு, ஓமம், திப்பிலி, இதையெல்லாம் பொன்னிறமா வறுத்து, அம்மியில வச்சு ஒட்ட ஒட்ட அரைச்சு, குழம்பு வைக்கணும். இனிமே மூனு மாசத்துக்கு இது மாதிரி பத்தியச் சாப்பாடுதான் தரணும்” என்று மரகதத்திற்கு விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்  பட்டம்மா.  பக்கத்துத் தெரு குப்புசாமி ரெட்டியார் கொல்லையில் களையெடுத்துக் கொண்டே  பெண்கள், ஊர்க் கதையை ஊறுகாய் இல்லாமல் வாயில் ஊறவைத்தனர்.  “ஏன்டி, நம்ம ஓட்டு வீட்டு  பட்டம்மா பாட்டி பேத்திக்கு பொண்ணு பொறந்திருக்காமே!”  என்று முனியம்மாவுக்கு மூக்கு வியர்த்தது.  “ஆமான்டி, பாவம் அவ புருசன் வரலன்னு அழுதுகிட்டு இருக்காளாம். எங்க இருக்கானோ?! உயிரோட இருக்கானோ, இல்லையோ! யாரு கண்டா? கல்யாணம் பண்ணி மூனு மாசத்துல விட்டுட்டு போனான்; இன்னி வரைக்கும் தகவல் இல்லையாம்”  என்று  அருக்காணி அளந்துவிட்டுக் கொண்டிருந்தாள்.  மனிதர்களிடம் இருந்து வரும் வார்த்தைகள், தனக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்கள். அந்த வார்த்தையின் பலன் பிறருக்குச் சொந்தம் என்பதை அறியாமலே பேசுகிறார்கள். இங்கும் அப்படித்தான், களையெடுத்துக் கொண்டே புனிதாவின் கணவனைப் பற்றி, தப்புத் தப்பாக தலைப்புச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தனர். “அருக்காணி, உன் வாயில நல்ல வார்த்தைகளே வராதா? பாவம் புனிதா, அவ புருசனைப் பத்தி அவச்சொல்லா சொல்ற. எல்லாம் மாசம் ஒரு தடவை கடுதாசி போடறானாம்” என்று நல்ல மனதுடன் பேசினாள் சிவப்பி.  “ஏன்? கடுதாசி போடற துரைக்கு ஒரு எட்டு வந்து பாக்க முடியாதாமா? அப்படி என்ன பொல்லாத வேலை? ஒருக்கால் அங்க ஏதாவது வீடு கீடு வச்சிருப்பானோ?” என்று திரையில்லாமல் படம் ஓட்டினாள் அருக்காணி.  “ஊரு கதைய உப்பில்லாம பேசறியே அருக்காணி, உன் புருசனை எங்க மூனு மாசமா காணோம்? அடிச்சி விரட்டிட்டியா?” என்று கடுப்புடன் கேட்டாள் சிவப்பி.  “என் கதைதான் ஊரு சிரிக்குதே! உனக்கு வேற தனியா சொல்லணுமா? அவன்தான் அந்த எடுபட்ட  சிறுக்கியை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டான். அதான் ஒரேயடியா போய் சேருடான்னு தலைமுழுகி விட்டுவிட்டேன்” என்று சாதாரணமாகச் சொன்னாள் அருக்காணி. அருக்காணியைப் பொறுத்தவரை அவள் கதையாக இருந்தாலும், ஊர்க்கதையாக இருந்தாலும், மேளம் கொட்டாமல் தண்டோரா போடுவாள். இது அவள் இயல்பு. அதை யாரும் பெரிதாக எடுத்துக்க மாட்டாங்க. ‘குடிகாரக் கணவனிடம் உதைபட்டு வாழறதைவிட, தனியா உழைச்சு ரெண்டு புள்ளைங்களைக் காப்பாத்தறாளே’ன்னுதான் சந்தோஷப்படறாங்க. அருக்காணி ஒரு கொல்லையில் வேலை செய்தால், அங்கே ஊர் செய்தி முழுவதும் தெரிந்து கொள்ளலாம். இன்னிக்கு இப்பதானே தென்னன்டை  தெரு புனிதாவைப் பற்றி சொல்லியிருக்கா? இன்னும் வடக்குத் தெரு, நடுத் தெரு, வில்லித் தெருன்னு எல்லா செய்தியும் வரும். யார் யார் வீட்ல அடிச்சிகிட்டாங்க என்பதில் தொடங்கி, யார் வீட்ல என்ன சமையல் செய்தாங்க என்பது வரை அனைத்துச் செய்திகளுக்கும் குத்தகைக்காரி இந்த அருக்காணி. தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் 2

கரைசேராப் படகுகள் 2

தொடர்கதை வாழ்க்கை , எந்தத் துன்பமும் இல்லாமல்  மகிழ்ச்சியாகச் செல்லும்வரை  மனிதனுக்கு  தான்தான்  பெரிய சக்தி என்ற எண்ணம். கொஞ்சம் துன்பம் தலை தூக்கும்போதுதான்  தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதை உணர்கிறான்; அதையும்  மதங்களில் தேடுகிறான்; மனித மனங்களை விட்டுவிட்டான்.  புனிதாவின்  அலறல் ஓலம் , ஈரக்குலையே  வாய்வழியே  வந்துவிடும் அளவிற்கு  வெளியில்  இருப்பவர்களுக்கு  வேதனையளித்தது. பெண்கள் உள்ளே போகலாம் என்று நினைத்தால், வெளியே திண்ணையில்  பெருசுகள் இருக்கிறார்கள். அவர்களை மீறிப் போனால் மரியாதையாக இருக்காது என்று வாசல் தெளிக்கும் இடத்திலேயே இளவட்டப் பெண்கள்  தத்தளித்து நின்றனர். தெருத்திண்ணையில் பட்டம்மா  பாட்டியுடன்  வட்டமேசை போடவரும் வல்லரசு நாடுகள் அலமு பாட்டி, கருப்பாயி  பாட்டி, கோமளா பாட்டி என, அனைவருக்கும் தகவல் தெரிந்து, அடித்துப்பிடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினர்.  “ஏம்பா  செந்தாமரை, பொட்டி வண்டிய கட்டுப்பா. டவுன் ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போகலாம்” என்று பால் ரெட்டியார்  குரல் கொடுத்தார்.  “யார்ரா இவன் மடையன், இந்த நேரத்தில எந்த டவுன் ஆஸ்பித்திரி திறந்திருக்குமாம்?” என்று  கோபால் நாயக்கர் பதில் கொடுத்தார். கூடியிருந்தவர்களின்  தவிப்பு  செந்தாமரையை மேலும்  கலக்கமாக்கியது. உள்ளே வந்த பாட்டிகள் நேராக பட்டம்மா பாட்டியிடம் போனார்கள். குழந்தை கீழே விழுந்தால்,  யாரும் பார்க்கலைன்னா அழாம அது பாட்டுக்கும் எழுந்து விளையாடும்; யாராவது  பார்த்தால்தான் ஒப்பாரி வைக்கும். அது மாதிரி, இது வரைக்கும் தேமேன்னு வெற்றிலை இடித்த பட்டம்மா பாட்டி, தோழிகளைப் பார்த்ததும் , “அடி ஏய்!! என் பேத்தி நிலைமையை  பார்த்தீங்களாடி”ன்னு  ஒப்பாரி வைக்க ஆரம்பித்தார்.  “ஏய் கிழவி, சும்மா இருக்க மாட்டியா? எழவு வீடு மாதிரி ஒப்பாரி வைக்கற?” என்று செந்தாமரை அதட்டினார். உடனே எல்லா பாட்டிகளும் எழுந்து, புனிதா இருக்கும் அறைக்குள் சென்றனர். செந்தாமரை செய்வதறியாது தலையில் அடித்துக் கொண்டார். “ஏம்மா மருத்துவச்சி, கர்ப்பப் பை வாய் திறந்திடுச்சா?”ன்னு, எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி அதட்டல் விட்டாள் அலமு பாட்டி.  யாரும் பேசற நிலையிலா இருக்காங்க அங்க? மருத்துவச்சி கட்டில்ல ஏறி, முட்டியால புனிதா வயிற்றில் அழுத்திக் கொண்டிருந்தாள். இதைப் பார்த்ததும் கோமளா பாட்டி அலறினாள்.   “ஏம்மா, என்னம்மா பண்ற? இப்படி  முட்டியால அழுத்தினா குழந்தை  தலை அழுந்தும்மா. மூளை நரம்பு பாதிச்சு மனவளர்ச்சி இல்லாம போயிடும். சில நேரங்களில்  அது மலத்தையே சாப்பிட்டு விடும். இப்படி தூர வாம்மா”ன்னு மருத்துவச்சியை தூர வரச்சொல்லிட்டு  கோமளா பாட்டி புனிதாவின் வயிற்றை அழுத்திவிட்டுக் கொண்டே கீழிறக்கினாள். “புனிதா, ஐயோ ஐயோன்னு  கத்தாதே. குழந்தை நல்லபடியா பொறக்கணும்னு  மனசுல நினைச்சுகிட்டு, சாமி பேரை சொல்லிக் கத்து” என்று  கோமளா பாட்டி புனிதாவிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே குழந்தை வரும் பாதை வழுக்கிக்கொண்டு வருவதற்காக அங்கு விளக்கெண்ணெய் தடவி விட்டு, மீண்டும் கைகளால்  வயிறை அழுத்தினாள். இப்போது புனிதாவுக்கு வலி உச்சத்தைத் தொட்டது. அவளுடைய அலறல் வெளியில் இருப்பவர்களின் இதயத்தைக் கையில் வைத்துத் துடிக்க வைத்தது. கோமளா பாட்டி அதிக அழுத்தம் கொடுக்கவும், தலையைத் திருப்பி குழந்தை வெளியே வர ஆரம்பித்தவுடன், அதன் தலையை லாவகமாகப் ,பிடித்து குழந்தையை வெளியே எடுத்தாள்.   குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்டதும்,  பால் ரெட்டியார் தயாராக வைத்திருந்த பேப்பர் பேனாவில் நேரம்   குறித்தார். 20-10-1965, நேரம்: சூரியன் அஸ்தமனமாகும் 6:15 என எழுதினார். வெளியில் நின்றிருந்த பெண்கள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். “வாங்கடி, பொழுது இருட்டுது. சீக்கிரம் தண்ணி மோந்துட்டு போகணும்”னு ஒருத்தி குரல் கொடுத்ததும், அனைவரும் கிணற்றடி நோக்கி ஓடினர்.  புனிதா கொஞ்சம் நிதானமானதும் செந்தாமரை  உள்ளே வந்து பார்த்தார். செந்தாமரையைப் பார்த்ததும், “அவர் வரலையாப்பா?” என்று தழுதழுத்த குரலில் கேட்டாள் புனிதா.  “அதுக்குதான்  நான் அப்பவே சொன்னேன். ஊரில் இல்லாத மாப்பிள்ளைன்னு தூக்கிவச்சிகிட்டு ஆடுனீங்க” என்று  பப்படம்  மாதிரி பொரிந்தாள் பட்டம்மா பாட்டி.  தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள்

கரைசேராப் படகுகள்

தொடர்கதை – பகுதி 1 ‘ஜல் ஜல்’ என்ற சலங்கை ஒலி வானில் எதிரொலிக்க, புழுதிப் படலமொன்று மேகத்தினைத் திரையிட, அதற்குள் சூரியன் ஒளிந்து கொள்ள, சூரியனைத் தேடி நிலாமகள் வரும் மந்தகாசமான மாலைப் பொழுது. அருங்குணம் என்னும் கிராமத்து நாற்சந்தியில், வயல் வேலை முடித்து வரும் மக்கள், மந்தை மாடு ஓட்டிவரும் மக்கள், இரவு உணவுக்குக் கடைகளில் பொருள் வாங்கும் மக்கள், தெரு விட்டு தெரு சென்று கதை பேசும் மக்களென, அந்த இடமே வெங்கலப் பானையில் இரும்புக் குண்டை உருட்டியது போன்று கலகலப்பாக இருந்தது. தென்னன்ட தெருவில் ஒரு வீட்டின் நடுக்கூடத்தில், சாய்வு நாற்காலியில் சாய மனமில்லாமல் நிமிர்ந்து உட்கார்ந்து இருந்தது ஒரு உருவம். கிட்டத்தட்ட சினிமா நடிகர் செந்தாமரை மாதிரி அதே உருவம், அதே குரல், அதே நடை, அட! பெயர் கூட அதேதான். ஆனால் இவர் அவரல்ல. விசு படத்தின் கதாநாயகி கமலா காமேஷ் மாதிரி ஒரு உருவம். அதே உயரம், அதே ஒல்லி, ஆனால் பெயர் மட்டும் மரகதம். கூடத்தின் ஒரு முனையில் இருந்து ‘டொக்.. டொக்.. டொக்..’ என்று தாள லயத்துடன் ஒரு ஓசை. தவில் வித்துவான் வீட்டிற்கு வந்தால் இருவரும் கச்சேரி வாசிப்பார்கள். சில நேரங்களில் தவில் தாளம் தப்புமே தவிர, பட்டம்மா பாட்டியின் வெற்றிலை இடிக்கும் ஓசை தாளம் தப்பாது. ஒரு அறையின் கதவைத் திறந்து கொண்டு மரகதம்மா அவரசமாக வெளியே ஓடிவந்து சமையலறைக்குள் நுழைந்தார்கள். மரகதம்மா கதவைத் திறந்த அந்த இடைவெளியில் அறைக்குள் இருந்து ஒரு பெண் அலறும் ஓசையும் கதறி அழும் ஓசையும் கலவையாகக் கேட்டது. மரகதம்மா செந்தாமரையைத் தாண்டிப் போகும்போது, “மரகதம் இப்ப எப்படி இருக்கு?” என்று பதற்றத்துடன் கேட்டார் செந்தாமரை. “பயமாதாங்க இருக்கு” என்று பாத்திரத்தில் ஏதோ எடுத்துப் போகும் மரகதம் அழுதபடியே சொல்லிவிட்டுப் போனாள். வெளியில் திண்ணையில் அமர்ந்திருந்த பெரிசுகள், “என்னப்பா செந்தாமரை, என்னாச்சு?” என்று குழுவாகக் குரல் கொடுத்தனர். ஒலிபெருக்கி இல்லாமலே பெரிசுகளின் குரல் தெருவெல்லாம் எதிரொலித்தது. “ஏம்பா உன் மருமவனுக்கு தகவல் சொல்லி விட்டயா?” என்று ஒரு பெரிசு ஏதோ மாபெரும் யோசனை சொன்னமாதிரி சபையைப் பார்த்தார். “ம்..ம்.. மதியமே சொல்லிவிட்டுட்டேன். ஆனா பதில் தகவல்தான் வரல” என்று விரக்தியுடன் சொன்னார் செந்தாமரை. “சீராட்டி, பாராட்டி, தங்கப் பாலாடையில் பாலூட்டி வளர்த்த தங்க மயிலை, மலைக் குரங்கு கையில் பிடிச்சுக் கொடுத்துட்டானே.. இந்த அக்கிரமம் எங்க நடக்கும்?” என்று புலம்பினாள் பட்டம்மா பாட்டி. “ஏய் கிழவி, அனத்தாம சும்மா இரு. இங்க அவனவன் உயிரைக் கையில பிடிச்சிட்டு நிற்கிறான். நீ வேற எசப்பாட்டு பாடிக்கிட்டு..” என்று அதட்டினார் செந்தாமரை. தெருவில் உள்ள பெண்களில் பாதிப்பேர் வெண்கலக் குடத்தை வைத்துக் கொண்டும், பானையை வைத்துக்கொண்டும் தண்ணீர் மோந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெண் ஓடிவந்து, “நம்ம மரகதம்மா பொண்ணு வலியில் துடிக்குதாமே” என்று தகவல் சொல்ல, பெண்கள் அனைவரும் சிட்டாய்ப் பறந்தனர். செந்தாமரை வீட்டு வாசலில் ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. உள்ளேயிருந்து புனிதா அலறுவது கல்லிலும் நார்வரும் போல், அனைவர் மனதையும் உருக வைத்தது. கூடியிருந்த பெண்கள், “கன்னியம்மா தாயே! புனிதாவ காப்பாத்து” என வேண்டினர். தொடரும்.. சாம்பவி சங்கர்