நீலகண்ட பிரம்மச்சாரி – 6

நீலகண்ட பிரம்மச்சாரி – 6

காட்சி 6 காலம் : 1908ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒருநாள்இடம் : தூத்துக்குடியில் வ.உ.சி.யின் வீடுபாத்திரங்கள் : வ.உ.சி., நீலகண்டர், பத்மநாப அய்யங்கார் மற்றும் ஓட்டப்பிடாரம் மாடசாமி(வ.உ.சி.யும் பத்மநாப அய்யங்காரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீலகண்டர் கேட்டுக்கொண்டிருக்கிறார்) பத்மநாப அய்யங்கார் : சூரத் காங்கிரஸ் நல்லபடியா முடிஞ்சதோல்லியோ.. தூத்துக்குடியில் புதிய கட்சி வேலையும் பிரமாதமா நடந்துண்டிருக்கு. நீலகண்டர் : இல்லையா பின்னே.. திலகர் கட்சிக்குத் தமிழ்நாட்டில் பிள்ளைவாள்தான தலைவர்?! அப்புறம் தூத்துக்குடியில் உற்சாகத்திற்குக் கேக்கணுமா என்ன? பத்மநாப அய்யங்கார் : ஆஹா! பிள்ளைவாள்.. இவர் யார்..? இந்தப் போடு போடுறாரே! வ.உ.சி. : அய்யங்கார்.. இவர் பெயர் நீலகண்டன். நம்ம வேலைக்கு உதவி செய்ய பாரதியார் அனுப்பி வச்சிருக்கார். தீவிர தேச பக்தர். பத்மநாப அய்யங்கார் : பேஷ்.. பேஷ்..! (இளைஞர் ஒருவர் கும்பிட்டுக்கொண்டே வருகிறார். கண்களில் பதட்டம் தெரிகிறது) வ.உ.சி. : வா, மாடசாமி.. என்ன ஆச்சு? ஏன் பதட்டமா வர்ற..? மாடசாமி : வணக்கம் வக்கீலய்யா.. வணக்கம் சாமி.. நேத்து மில் தொழிலாளர் கூட்டம் நடந்துச்சுல்லங்க ஐயா.. அதுக்கு வந்த தொழிலாளிங்கள எல்லாம் மிரட்டிருக்காங்க. ‘சிதம்பரம் பிள்ளை ராஜ துரோகம் பேசுறவரு.. அவரு கூட்டத்துக்குப் போனா வேலை கிடையாது’ன்னு மிரட்டிருக்காங்க ஐயா. பத்மநாப அய்யங்கார் : அதுக்கு ஏன் பதட்டம்? இது எதிர்பார்த்ததுதான..?(மௌனமாக இருக்கும் வ.உ.சி.யைப் பார்த்து) பிள்ளைவாள்.. என்ன யோசனை.? வ.உ.சி. : அதிகாரிங்க என்ன மிரட்டுறது..? போராட்டம் தீவிரமாகும்போது, வேலைக்கு வரமாட்டேன்னு தொழிலாளி அதிகாரிகளை மிரட்டுற நாளும் வரும். அந்தச் சூழ்நிலையில், தொழிலாளர்களும் அவங்க குடும்பமும் வயிறு காயாம இருக்க நாம ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். பத்மநாப அய்யங்கார் : அவ்வளவு தூரம் போகுமா..? வ.உ.சி. : அதுக்கும் மேலேயே நடக்கும். இந்தத் தொழிலாளிங்களோட கஷ்டங்களை நாம இப்போ வெளிப்படுத்துறோம். விடிஞ்சு போனா அடைஞ்சு வாராங்க; நேரக் கட்டுப்பாடில்லாத வேலைக்கு ரொம்ப மோசமான கூலி. வார ஓய்வு கிடையாது; விடுப்பு எடுக்க முடியாது. இதெல்லாத்தையும் வாங்கணுமின்னா தொழிலாளிங்க ஒற்றுமையாலும் வேலையை நிறுத்தியும்தான் முடியும். நீலகண்டர் (குறுக்கிட்டு) : பிள்ளைவாள்.. நாம தேச சேவையில் மட்டும் கவனம் செலுத்தலாமே..வ.உ.சி. : (மெல்லச் சிரித்து) தேச சேவைன்னா என்ன..? தேச பக்தின்னா என்ன..?மக்களோட பிரச்சினையைப் பேசுறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமன தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனைக்கிறீரா நீலகண்டர்..? இந்தப் பாடம் யாரு சொன்னது? நீலகண்டன் : மன்னிக்கணும்.. நம்மளோட ஆற்றல் வீணாப் போகுதேன்னுதான் கவலை.. எவ்வளவு நாள்தான் வெள்ளைக்காரங்க அக்கிரமத்தைப் பொறுத்துக்கறது? வெள்ளை அதிகாரிகள இன்னமும் ஏன் விட்டு வைக்கணும்..? வ.உ.சி. : என்ன செய்யலாம்? நாம நாலு பேரு சேர்ந்து வெள்ளைக்கார துரைகளைக் கொன்னுட்டா சுதந்திரம் வந்துருமா..? ஒரு துரை போனா இன்னொருத்தன் வருவான். நாம் மக்களைத் திரட்டிப் போராடித்தான் ஜெயிக்கணும். உமக்கு தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால்ஸ் மாகாணத்துல நடந்த சேதி தெரியுமோ..? பத்மநாப அய்யங்கார் : அது ஒரு பாடம்.. விவரமாச் சொல்லுங்க பிள்ளைவாள். வ.உ.சி. : தென்னாப்பிரிக்காவுல வாழுற ஆசியா மக்கள் எல்லாரையும் பதிவு செய்யச் சொல்ற சட்டம்.. அதன்மூலம் ஆசிய மக்களைக் கட்டுப்படுத்தும் சட்டம்.. இதை ஆசிய மக்கள், குறிப்பா நம்ம இந்தியர்கள் எதிர்த்து ரெண்டு வருசமா போராடினாங்க. அதிலேயும் தமிழர்கள்தான் முன்னால நின்னாங்க. இப்போ போன மாசம்தான் தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு போராட்டத்துக்குப் பணிஞ்சு, ஒரு சமாதான பேரத்திற்கு வந்திருக்கிறது. இந்த வெற்றி அந்த மக்களை இன்னும் உற்சாகப்படுத்தும். இன்னும் ஒன்னா இணைக்கும். இந்த உலகத்துல அடிமைத்தனம் எந்த வடிவத்தில் இருந்தாலும் மக்களைத் திரட்டித்தான் எதிர்த்துப் போராடணும். பத்மநாப அய்யங்கார் : இந்த வேலையைச் செய்ததும் நம்ம பிள்ளைவாள்போல இளம் வக்கீல் ஒருத்தர்தான். அவரு பேரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. வ.உ.சி. : சரி, இன்னைக்கு சாயுங்காலம் கடற்கரையில் கோரல் மில் தொழிலாளிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கேன்.. எல்லாரும் வந்துருங்க. (நீலகண்டர் மாடசாமியின் தோள்களில் கை போட்டுக்கொண்டு வெளியில் வருகிறார்) நீலகண்டர் : என்ன மாடசாமி.. பிள்ளைவாள் பேச்சுல அப்படி பிரமிச்சுப் போயிட்டீர் போல.. இப்படிக் கூடறதும் பேசுறதும் எத்தனை நாளைக்கு..? ஒரே நாள்ல நாடு முழுவதும் இருக்கிற வெள்ளைக்காரங்கள கொன்னு போடணும்.. யுத்தம் பண்ணணும். மாடசாமி.. வாய் யுத்தமில்ல. ஆய்தம் தாங்கி, துப்பாக்கி ஏந்தி யுத்தம் பண்ணணும்.. மாடசாமி : இதெல்லாம் நடக்குமா..? ஆயுதம் வாங்கணுமே..! பணம் வேணுமே..! பெரிய ஆட்கள் துணை வேணுமே..! அப்புறம், துப்பாக்கி சுடத் தெரியணுமே..! நீலகண்டன் : எல்லாம் நடக்கும் மாடசாமி.. பரோடா மகராஜா போன்ற சுதேசி ராஜாக்களெல்லாம் சேர்ந்து ஒரு திட்டம் போட்டுருக்காங்க.. விவரமாச் சொல்றேன் வாரும்.. (ஒளி மங்கி மேடை இருள்கிறது.. ஒளி விரியும்போது ஓம்கார் சுவாமிகளின் அறையாக இருக்கிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இந்த மாடசாமி பெரிய சாகசக்காரர் என்கிறார்களே.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம், ரொம்பக் கெட்டிக்காரர், தீரர். ஓட்டப்பிடாரம் இவரது ஊர். சிதம்பரம் பிள்ளையோட தீவிர விசுவாசி. ஆஷ் கொலை வழக்கில் இவர் பெயர் அடிபட்டாலும் கடைசிவரை இவர் பிடிபடவே இல்லை. இவரை என் கட்சிக்குக் கொண்டுவர எத்தனை பேசியிருப்பேன்..? (சிறிய சிந்தனைக்குப் பிறகு)ஆஷ் கொலைக்குப் பின் அவர் தலை மறைவானதால் அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துவிட்டது. அவரது குடும்பம் நிராதரவானது. பாவம்.. இப்படி எத்தனைப் பேரின் கண்ணீரில் உருவானது இந்த சுதந்திர தேசம்.. (கண் கலங்குகிறார்) சீடர் : (உள்ளே வந்து) சுவாமி ஆகாரம் தயார் ஆகிவிட்டது. ஓம்கார் சுவாமிகள் : வாருங்கள் சாப்பிடலாம் (திரை விழுகிறது) (நாளை பார்க்கலாம்)

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

காட்சி 5 களமும் காலமும் : அதே களம், அதே காலம் பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள் மற்றும் சங்கர கிருஷ்ணன் (பூஜை முடித்து வந்த ஓம்கார் சுவாமிகள் தம் இடத்தில் அமர்ந்துகொள்கிறார். கூடவே வந்த சங்கர கிருஷ்ணன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பாயில் அமர்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இங்கே மாலை ஆறு மணிக்கெல்லாம் நல்லா இருண்டு விடுகிறதே?! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, மழைக்காலத்தில் இன்னும் சீக்கிரமாகவே இருண்டுவிடும். சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. வ.உ.சி.யைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி.. பிள்ளைவாள் திருநெல்வேலியில் கைதாகும் வரை நான் அவருடன் பட்டும் படாமலும்தான் இருந்தேன். பிள்ளைவாளுடன் நான் இருந்த சொற்பக் காலம் மிக வேகமாக ஓடியது. என் பாதை வேறு, பிள்ளையின் பாதை வேறு என்பதை நான் அவரோடு சேர்ந்த கொஞ்சநாளிலேயே தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : அதைத் தெரிந்துகொள்ள காலத்தில் கொஞ்சம் பின்னால் போக வேண்டும். பாரதி சொன்னாரல்லவா? பாலர் பற்றி.. பாலரை நேரில் சந்தித்தேன். அப்புறம் அவரது செயலாளராக இருந்த குஞ்சு பானர்ஜி என்பவரைச் சந்தித்திருந்தேன். அவர்கள் மூலம் வங்கத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் ரகசிய வேலைகளைச் செய்துவந்த, தீவிர தேசபக்த பலாத்கார இயக்கங்களை அறிந்துகொண்டேன். அவர்கள் என்னைத் தமிழ்நாட்டில் இந்த பலாத்கார இயக்கத்திற்குத் தகுந்த ஆட்களைத் தேர்வு செய்யப் பணித்தார்கள். நான் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன். இந்த விஷயம் பாரதிக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் தெரியாது. என் ஆள் சேர்க்கும் பணிக்குப் பிள்ளைவாளோடு போவது பயனளிக்கும் என்றுதான் போனேன். ஆனால் சிதம்பரம் பிள்ளையின் தேசப் பணி வேறு; என் பாதை வேறாக இருந்தது. சங்கர கிருஷ்ணன் : வ. உ. சி.க்கோ பாரதிக்கோ அல்லது திலகருக்கோ பலாத்கார வேலைகளில் நம்பிக்கை கிடையாதா..? ஓம்கார் சுவாமிகள் : இருந்தது என்றுதான் நம்புகிறேன். ஆனால் அதற்குக் காலம் கனியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.‘நேரடி பலாத்கார வேலைகளைவிட, தேசபக்தியைப் பரப்புவதே உமது பணியாக இருக்கட்டும்‘ என்று, சகோதரி நிவேதிதா தமக்குக் கட்டளை இட்டதாக, பாரதியார் என்னிடம் ஒருமுறை சொன்னார்.அதுபோக, பாரதியும் பிள்ளைவாளும் தமிழ்க் கலையிலும் இலக்கியத்திலும் பழக்கம் உடையவர்கள். பலாத்கார இரகசிய நடவடிக்கைகள், தமிழ் அரசியல் நெறிக்குப் பொருந்தி வரவில்லை என்று அவர்கள் நம்பினார்கள்.(கொஞ்சம் நிறுத்திக்கொள்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சிதம்பரம் பிள்ளையிடம் எவ்வளவு நாள் இருந்தீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : மிகக் கொஞ்சமாத்தான். சென்னையிலும் தூத்துக்குடியிலுமாக ஒரு மூனு மாசமிருக்கலாம். ஆனா அவரு கூட இருந்ததனால, பின்னால திருநெல்வேலி ஜில்லாவுல எனக்கு நெறைய தொடர்பு கெடச்சுது. அவர் வக்கீலாக இருந்தார். நிறைய பேருக்கு உதவி செய்துவந்தார். சுதேசிப் பிரசாரம், பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டங்கள், சுதேசி பண்டகசாலைன்னு நிறைய பணிகளைச் செஞ்சு வந்தார். சுதேசிக் கப்பல் விட்டது பெரிய வேலை. இப்படியொரு யோசனை சிதம்பரம் பிள்ளைக்கு எப்படி வந்திருக்கும் என்பது அந்தக் காலத்தில் எல்லாருக்கும் ஆச்சர்யமாய் இருந்தது தம்பி. அதை எப்படி வெள்ளைக்காரன் பொறுத்துக்கொள்வான்? அதுதான் அவரு மேல வெள்ளைக்கார அதிகாரிகளுக்குப் பகையைக் கொண்டுவந்தது. அப்புறம் அவரு நடத்துன மில் போராட்டம், வெள்ளைக்காரனுக்குப் புயலும் வெள்ளமும் சேர்ந்து தாக்குனது போல ஆச்சுது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்காரங்களும் கோரல் மில் டைரக்டர்களும் உடன் பிறந்தவங்க மாதிரிதான். சிதம்பரம் பிள்ளை ரெண்டு பக்கமும் வந்தாரு. வணிகம், அரசியல்-ன்னு இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியோட சிதம்பரம் பிள்ளையை வெள்ளை நிர்வாகம் பார்த்தது தம்பி. தொழிலாளிங்கன்னு ஒரு சக்தியை முதன்முதலா இந்தத் தமிழ்நாடு அப்போதுதான் கண்டது தம்பி. படிச்சவங்களே இருந்த அரசியல்ல, படிக்காத ஜனங்கல்லாம் அணி அணியா வந்ததைப் பார்த்து வெள்ளை அதிகாரம், வெலவெலத்துப் போனது. மில் தொழிலாளிகள் கூலியும் கேட்டார்கள். வந்தேமாதரமும் முழங்கினார்கள். இது 1908இல் மிகப்பெரிய அதிசயம் தம்பி. (மீண்டும் சிறிய சிந்தனைக்குப் பிறகு தொடர்கிறார்) ஆனா, பிள்ளை வேலைகள்ள இருந்த சூட்சும அரசியல் அப்போ எனக்குப் புரியல; பின்னாலதான் புரிஞ்சுது. அந்த அரசியலின் எதிர்வினை ரொம்ப நாள் மறையவே இல்லை. சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் எதிர்விளைவு, மூன்றாண்டுகள் கழித்து மணியாச்சியில் வெடித்தது. ஆகவே, என் வாழ்க்கையில் நான் நேரடியாக ஈடுபடாத ஆஷ் கொலையில் சிதம்பரம் பிள்ளையின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் பின்னணி இருந்தது. 1908இல் பிள்ளை செய்த வேலைகளுக்கும் எங்களோட பலாத்கார வழிமுறைகளுக்கும் இடைவெளி நெறைய. அதனால நான் சிதம்பரம் பிள்ளைக்கு வேலை செஞ்ச கையோடே, தனியா ரகசிய இயக்கத்திற்கும் திருநெல்வேலி ஜில்லா முழுசும் அலைஞ்சு ஆள் சேர்த்து வந்தேன். சிதம்பரம் பிள்ளையோட சுதேசி இயக்கத்துல வேலை செஞ்சவங்கள்ள இருந்து சில பேரை எங்க இயக்கத்திற்கும் சேர்த்துகிட்டேன். சங்கர கிருஷ்ணன் : வ.உ.சி. கைதானவுடன் நடந்த எழுச்சிகளில் உங்கள் நடவடிக்கைகள் ஏதுமில்லையே! அப்போது நீங்கள் திருநெல்வேலியில இல்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : ‘ சொல்றேன். 1908 புது வருஷம் பிறந்தபோது, சூரத் காங்கிரஸ் முடிஞ்சு சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி வந்தப்போ, அவருகூட நானும் வந்தேன். அப்போது, தூத்துக்குடி சுதேசி இயக்கச் சூட்டில் பொங்கிக்கொண்டிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பத்மநாப அய்யங்கார் வந்திருந்து, தூத்துக்குடியில் பிரசங்கங்கள் செய்தார். தூத்துக்குடி எங்கிலும் பெரிய கிளர்ச்சி நிலை சூழ்ந்திருந்தது. அப்போ… (மேடையில் ஒளி மங்கி இருளாகித் திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 4

நீலகண்ட பிரம்மச்சாரி – 4

காட்சி 4 (மேடையில் முந்தைய காட்சியில் ஓம்கார் சுவாமிகள் பேசிக்கொண்டிருந்த இடம் இருட்டாகவும் இன்னொரு பகுதி ஒளியிலும் இருக்க வேண்டும். ஒளி விழும் பகுதியில் காட்சிகள் விரிகின்றன) காலம் : 1907ஆம் ஆண்டின் இறுதியில் ஒருநாள் முற்பகல் வேளைகளம் : சென்னையில் இந்தியா பத்திரிகை அலுவலகம்பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை (பாரதியார் ஏதோ எழுதிக்கொண்டிருக்கிறார். நீலகண்டர் படித்துக்கொண்டிருக்கிறார். வ.உ.சி. உள்ளே வருகிறார்) வ.உ.சி : வணக்கம் மாமா..! பாரதி : வாரும் மாப்பிள்ளை.. பட்டனத்திற்கு எப்போ வந்தீர்..? வ.உ.சி : இன்னைக்குக் காலையிலேதான் மாமா.. பாரதி : சுதேசிக் கப்பல் ஓட்டமெல்லாம் எப்படிப் போய்க்கொண்டிருக்கிறது..? வ.உ.சி. : வழக்கம்போல நெருக்கடிதான். இருந்துமென்ன? தூத்துக்குடி வர்த்தகப் பெரியவர்களும் மக்களும் தரும் பேராதரவில் சுதேசிக் கம்பெனி நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது மாமா. அது விஷயமாகவும் உங்களைப் பார்க்க வந்தேன். பாரதி : ‘சொல்லுங்க பிள்ளைவாள்.. வ.உ.சி. : கம்பெனிக்கு இன்னும் பங்குகள் சேகரிக்க வேண்டும். தேசபக்தியும் வர்த்தக நிபுணத்துவமும் தெரிந்த இளைஞர் ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் மாமா. பாரதி : கிடைச்சாச்சுன்னு வச்சுக்குங்க மாப்ளே.. (நீலகண்டரைப் பார்த்து) தம்பி.. இங்கே கொஞ்சம் வாரும். சிதம்பரம் பிள்ளையைத் தெரியுமல்லவா..? நீலகண்டன் : பிள்ளைவாளைத் தெரியாமலா..? (வ. உ. சி. யைப் பார்த்து) “வணக்கம் அண்ணா.. பாரதி : (வ.உ.சி.யிடம்) இவர் நீலகண்டன். இங்கிருக்கும் பிரசித்தி பெற்ற வர்த்தகக் கம்பெனி ஒன்றில் கணக்கராகவும் சரக்குப் பிடிக்கிறவராகவும் வேலை பார்க்கிறார். விபின் சந்திரபாலர் இங்கே வந்தபோது, அவரது பேச்சினால் தேசபக்தராகி இந்தியாவுக்கும் வேலை பார்க்கிறார். இப்போ பார்க்கும் வேலையை விட்டுவிட்டு, முழுமையாக தேச வேலைக்கு வந்துவிடுகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். நான்தான் நேரம் வரட்டும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன். வ.உ.சி. : ஆஹா..! சந்தோஷம். பாலரைக் கேட்ட பிறகும் ‘இந்தியாவுக்கு‘ வேலை செய்யாமல் போவாரா..? பாரதி : (வ.உ.சி.யின் சிலேடையைக் குறித்து) சபாஷ்.. (நீலகண்டனைப் பார்த்து) இனிமேல் பிள்ளைவாளிடம் நீ வேலை பார்க்கலாம். சுதேசிக் கம்பெனிக்கு பங்குகளைச் சேகரித்துக் கொடுக்கவேண்டும். அப்படியே பிள்ளைவாளுக்குத் துணையாக தேச சேவையும் செய்யலாம். என்ன சொல்கிறாய் தம்பி..? நீலகண்டன் : அண்ணா பேச்சுக்கு அட்டியேது..? இன்னைக்கே பிள்ளைவாளுடன் சேர்ந்துடறேன். வ.உ.சி. : இப்போது வேண்டாம் நீலகண்டன். நான் சூரத் காங்கிரசுக்குப் பிரதிநிதிகள் சேர்த்து அழைத்துப் போக வந்திருக்கிறேன். மாமாவைப் பார்க்க வந்த முக்கிய வேலையே அதுதான். நான் தூத்துக்குடி சென்றபிறகு ஒருநாள் அழைக்கிறேன். வந்து விடுங்கள். நீலகண்டன் : சரி அண்ணா.. வ.உ.சி. : (நீலகண்டனைப் பார்த்து) பாலரின் பேச்சைக் கேட்டிருப்பீர்கள்.. எப்படி இருந்தது..? நீலகண்டன் : ஒரே நேரத்தில் வெயிலும் சாரலும் சேர்ந்ததுபோல.. ஒரே நேரத்தில் கள்ளும் தேனும் அருந்தியதுபோல.. ஒரே நேரத்தில் பிள்ளைவாளையும் பாரதியாரையும் கேட்பதுபோல.. வ.உ.சி. : பலே பலே.. மாமா.. தம்பிக்குக் கவிதையும் வரும்போல.. சகவாச வரமா..? பாரதி : இவன் சிங்கம்.. உங்களிடம் சேர்ந்தால் தங்கமாகவும் மின்னுவான்.. பராசக்தி அருள் பொழிவாள்..! வ.உ.சி. : கவி வாக்கு பலிக்க வேண்டும். இப்போ சூரத் காங்கிரஸ் வேலைகள் பற்றிப் பேசலாமா மாமா..? (மேடையில் மூவரும் இருக்கும் பகுதியில் ஒளி மங்கி, ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருந்த பகுதியில் ஒளி பரவுகிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. கவி வாக்கு பலித்ததா..? ஓம்கார் சுவாமிகள் : ஆஹா..! பாதி பலித்தது.. பாதி பலிக்கவில்லை தம்பி. சங்கர கிருஷ்ணன் : அது எப்படி சுவாமிஜி? ஓம்கார் சுவாமிகள் : சிதம்பரம் பிள்ளையே பெரிய சிங்கம். நான் அவர் பக்கத்தில் மின்னுவதெப்படி..? ஆகவே பாரதியார் சொன்ன நீலகண்ட சிங்கம், வேறு தங்கங்களைத் தயார் செய்யப் போய்விட்டது. அதற்கும் பிள்ளைவாள் பாசறையில் கற்றதுதான் காரணம் தம்பி. அதுதான் பாதி பலித்தது என்றேன். சிதம்பரம் பிள்ளை ஒரு வசீகரமான தலைவர். கனவான்கள், தொழிலாளிகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், இந்துக்கள், கிறித்தவர்கள் என்று, எல்லாத் தரப்பாளர்களிடமும் அவருக்கு செல்வாக்கு இருந்தது. சுருக்கமாச் சொன்னால், அவர் பின்னால் தூத்துக்குடி நகரமே இருந்தது. அது மட்டுமல்ல; சூரத் காங்கிரசுக்குப் போய்விட்டு வந்தபிறகு, அவர் தமிழ்நாட்டின் தலைவருமாகிவிட்டார். சங்கர கிருஷ்ணன் : ஆஹா..! சுவாமிஜி, வ.உ.சி.யின் ஆளுமையை எத்தனை உணர்ச்சி பொங்க வர்ணிக்கிறீர்கள்..! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, பிள்ளைவாளின் ஆதர்சம் அப்படி.(கொஞ்சம் நிறுத்துகிறார்)சங்கர கிருஷ்ணன் : என்ன சுவாமி..? ஓம்கார் சுவாமிகள் : (குரல் தழுதழுக்க) பாரதியார் சொன்னாரே.. “வேளாளன் சிறை புகுந்தான். தமிழகத்தார் மன்னனென மீள்வான்” என்று. அந்த வாக்கு, சிதம்பரம் பிள்ளைக்குப் பலித்திருக்க வேண்டும் தம்பி.. (சீடர் உள்ளே வருகிறார்) சீடர் : சுவாமி.. கோவில் பூஜைக்கு நேரமாகிறது. ஓம்கார் சுவாமிகள் : பூஜை முடித்து வந்தபிறகு பேசலாம் தம்பி.. (ஒளி மங்கித் திரை விழுகிறது) நாளை பேசுவோம்.

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

காட்சி 3 காலமும் களமும் : அதே நாள்; அதே இடம். பாத்திரங்கள்: சங்கர கிருஷ்ணன் மற்றும் சீடர். (மேடையின் ஒருபகுதி இருளாகவும் மறுபகுதி ஒளியிலும் இருக்கிறது. இருளான பகுதியில் ஓம்காரின் அறை உள்ளது. ஒளிவிழும் பகுதியில் சங்கர கிருஷ்ணன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : “ஐயா, ஆசிரமம் எவ்வாறு நடக்கிறது? பொருள் உதவி யார் செய்கிறார்கள்.?” சீடர் : “சுவாமிஜியைத் தெரிந்த வடநாட்டு நண்பர்களும் இங்கேயே இருக்கும் சில பெரிய மனிதர்களும் தனவந்தர்களும் உதவி செய்கிறார்கள். சுவாமிஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரும் பொது ஜனங்களும் உதவுகிறார்கள். இந்தப்பக்கம் உள்ள ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் உதவி பண்றாங்க..” சங்கர கிருஷ்ணன் : “நல்லது ஐயா, சுவாமிஜி பற்றி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்களேன்..” சீடர் : “ஐயா, நான் இங்கு வந்து சிலகாலம்தான் ஆகிறது. எனக்கு சீர்காழி. சுவாமிகளின் ஊர்க்காரன்தான். சுவாமிஜியின் பிரசங்கங்கள் இங்கு வெகு சகஜம். வடநாட்டு பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் இவரைப் பத்தியும் இவரோட பிரசங்கங்களையும் போட்டிருக்கிறார்கள். இவர் பெரிய புரட்சிக்காரர் என்பதெல்லாம் இங்கே உள்ளவர்களுக்கு அதிகம் தெரியாது. இவரும், தனது பழைய செய்திகளை யாருக்கும் சொல்வதும் இல்லை. எனக்குக்கூட கொஞ்சமாகத்தான் தெரியும்..” (சங்கர கிருஷ்ணன் சாப்பிட்டு முடிக்கிறார்) சீடர் : “தட்டத்திலேயே கை அலம்பிக்கொள்ளுங்கள். ஓய்வறை இருக்கிறது. சற்று ஓய்வெடுங்கள். சுவாமிஜியை மாலை சந்திக்கலாம். நான் வந்து அழைத்துக்கொள்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “ஓய்வு தேவையில்லை. ஆசிரமப் பணிகளைப் பார்க்கிறேனே..” சீடர் : சரி, வாருங்கள், சுற்றிக் காட்டுகிறேன். (இருவரும் அறையிலிருந்து வெளியேறுகிறார்கள். சாப்பாட்டு அறையில் ஒளி மறைந்து ஓம்கார் சுவாமிகளின் அறைப் பகுதியில் ஒளி வருகிறது. ஓம்கார் சுவாமிகள் அமர்ந்திருக்கிறார். சங்கர கிருஷ்ணன் உள்ளே வருகிறார்) நேரம் : மாலை 4 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : “வாரும் சங்கர கிருஷ்ணன். அமருங்கள். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தீங்களா?” சங்கர கிருஷ்ணன் : “ஆமாம் சுவாமி.. கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்தது.” ஓம்கார் சுவாமிகள் : “என்ன ஆச்சர்யம் தம்பி?” சங்கர கிருஷ்ணன் : “இந்த 85 வயசிலேயும் ஆசிரம வேலைகளை நீங்களும் செய்றீங்க.. அப்புறம்…” ஓம்கார் சுவாமிகள் : “அப்புறம் என்ன? சொல்லுங்கள்..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமணர் என்பதால் ஆசிரமத்தில் எல்லாரும் பிராமணர்களாக இருப்பாங்களோன்னு நெனைச்சுட்டேன். ஆனா ஹரிஜன்கள் தொண்டர்களா இருக்காங்க. சமையல் வரைக்கும் அவங்க இருக்கறதும் ஆசிரமக் கோவில் பணிகள்ளே அவங்க சுதந்திரமா வேலை செய்யறதும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது..” ஓம்கார் சுவாமிகள் : “ஆமாம் ஒரு பன்னிரண்டு தாழ்த்தப்பட்ட குடும்பத்தச் சேர்ந்தவங்க இந்த ஆசிரமப் பணிகள்ள இருக்காங்க. எல்லா சாதிக்காரங்களும் இங்கே வந்து வேலை செய்யலாம். ஆசிரமத்துல சாதி வித்தியாசமே தெரியாது. இப்ப உங்க கண்ணுல பட்டுருக்கு. கண்ணுலயா.. காதுலயா.?” (கேட்டுவிட்டுக் குழந்தைபோலச் சிரிக்கிறார்.) சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி, நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் உங்களிடம் சந்தேகம் ஒன்று கேட்கலாமா?” ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக்கொண்டே) “இந்தப் பீடிகையிலேயே நீங்கள் கேட்கப் போவதென்ன என்று தெரிகிறது. கேளுங்கோ..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமண பாஷையை விலக்கிப் பேசுவது வியப்பளிக்கிறது..” ஓம்கார் சுவாமிகள் : (மீண்டும் வெடிச் சிரிப்புடன்) “40 வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். நான் இப்போது பிரசங்கி அல்லவா? தமிழில் பேசுகையில் இன்னும் முழுதாக மாறிவிட்டதுன்னு சொல்லமுடியாது சங்கர கிருஷ்ணன். நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்கோ.” சங்கர கிருஷ்ணன் : “அறுபது வருசத்திற்கு முன்னே நீங்கள் பெரிய புரட்சிக்காரர். இப்போ சாது. இந்த சந்நியாச வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்திப் போனீர்கள்..?” ஓம்கார் சுவாமிகள் : “இது உங்கள் கேள்வியாக இருக்கமுடியாது. கேட்க வந்ததை நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.” சங்கர கிருஷ்ணன் : “அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல, இது தப்பித்தலா என்று தோன்றுகிறது சுவாமிஜி..” (ஓம்கார் சுவாமிகள் மௌனமாகிறார். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதை அடக்கிக்கொள்வது போன்ற மௌனம்) ஓம்கார் சுவாமிகள் : (கொஞ்சம் உஷ்ணமாகவே) “என்ன சொன்னீர்? கோழைத்தனம் என்றா? தப்பித்தல் என்றா? நான் கோழையில்லை தம்பி; தப்பிக்கவும் இல்லை. நான் அதிபயங்கரவாதியெல்லாம் கிடையாது. அந்த வார்த்தையே தப்பு. என்னால் தொண்டு செய்யாமல் சோம்பி இருக்க முடியாது. இளமையில் குடும்பம், கல்யாணம், சம்பாத்தியம் எல்லாமே விட்டுட்டு வந்தது நாட்டுத் தொண்டுக்காகத்தான்.” (சற்றே நிதானிக்கிறார். இப்போது குரல் சாந்தமடைகிறது) “தம்பி, என் இருத்தல் அவசியமல்லவா? 1930இல் விடுதலையானேன். நாடு மாறியிருந்தது. வெளியே வந்தபோது உப்புச் சத்தியாக்கிரகம் உச்சத்தில் இருந்தது. தேசபக்தி என்பது மாறியிருந்தது. போர்க்களம் மாறியிருந்தது. புதிய களத்தில், புதிய பாதையில், நான் பொருந்திப் போகவில்லை. நான் அறிந்திராத புதிய தேசத் தொண்டர்களோடு என் சேர்க்கை அமையமுடியாது என்ற நிலை. அதுபோக, இந்தச் சாது மனோநிலைக்கு நான் சிறையிலேயே வந்திருந்தேன். அதனால் என் இருப்புக்கும் நாட்டுப் பணியைத் தொடர்ந்து செய்யவும் இந்தப் புதிய பிறப்பைத் தேர்ந்தெடுத்தேன். பலாத்காரப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்தவனாக என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் வங்கப் புரட்சியாளர்கள் இருந்தார்கள்.. பாரதியார் இருந்தார்.. சிதம்பரம் பிள்ளை இருந்தார்.. அரவிந்தர் இருந்தார்.. வ.வே.சு.அய்யர் இருந்தார்.. சிங்காரவேலர் இருந்தார்.. கம்யூனிஸ்ட் பிரசாரகனாகவும் சிலநாட்கள் இருந்தேன். நான் ஒரு கலவை மனிதன். இந்தச் சாது வாழ்க்கைகூட முழுமையில்லை என்றே உணர்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “மன்னிக்க வேண்டும் சுவாமிஜி.. உங்களை சினப்படுத்திவிட்டேன்..” ஓம்கார் சுவாமிகள் : “பரவாயில்லை தம்பி.. இப்பவும், என் பழைய தோழன் சங்கர கிருஷ்ணன் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்..” சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி.. காலையில் ஆஷ் கலெக்டர் கொலை பற்றிச் சொல்லத் தொடங்கினீர்கள்.. தொடர்ந்து சொல்லவேணும்..” ஓம்கார் சுவாமிகள் : “ஆஷ் கொலை.. அது ஒரு குறைப் பிரசவம்.. ஆனாலும் அது, வெள்ளைக்காரர்களை ஒரு உலுக்கு உலுக்கியது. இந்தியாவில் மட்டுமல்ல; இங்கிலாந்தில்கூட அதன் எதிரொலிகள் இருந்தன. அந்தக் கொலையை வாஞ்சி ஐயர் செய்தபோது நான் காசியில் இருந்தேன் தெரியுமா தம்பி..? ஆனால், என்னைத்தான் முதல் குற்றவாளியா ஆக்கினாங்க.” சங்கர கிருஷ்ணன் : ‘தெரிந்திருக்கிறேன் சுவாமிஜி.. ஆனால் உங்கள் வாக்கு மூலத்தில் நீங்கள் யாரையும் விட்டுக் கொடுக்கவில்லை.. குற்றத்தின் மோடிவிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முயலவில்லை..’ ஓம்கார் சுவாமிகள் : ‘அது எப்படிச் செய்வேன்.. அந்த செயலின் சூத்திரதாரி நானில்லை.. அது வ.வே.சு.ஐயர்.. ஆனால் அந்தத் தோழர்கள் என் வார்ப்புகள்.. கொஞ்சம் அவசரப் பட்டு விட்டார்கள்.. அவர்கள் அவசரத்தின் காரணம் சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கலெக்டர் இழைத்த கொடுமைகள்தான்.. சங்கர கிருஷ்ணன் : “விவரமாகச் சொல்ல வேண்டும்.” ஓம்கார் சுவாமிகள் : “சொல்கிறேன். அதைச் சிதம்பரம்பிள்ளையிடம் இருந்து தொடங்கவேண்டும். அப்போது, நான் பாரதியாரின் இந்தியா பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பாரதியாரைப் பார்க்க வந்த சிதம்பரம்பிள்ளையிடம் பாரதியார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அது 1907ஆம் வருசமாயிருக்கும். (சுவாமிகள் கண்களை மூடி நினைவுகளில் மூழ்குகிறார். ஒளி மங்கித் திரை விழுகிறது.)

நீலகண்ட பிரம்மச்சாரி – 2

நீலகண்ட பிரம்மச்சாரி – 2

காட்சி 2 (திரை எழவில்லை. மெல்லிய செவ்வொளி பரவி நிற்கிறது.பின்னணியில் குரல் மட்டும் ஒலிக்கிறது) குரல் : “பாரதியார் சொன்னதுபோல, தேசபக்தச் செம்மல்கள் பசி தாகம் மறந்து, சொந்த வாழ்க்கை பற்றிய நினைவே இல்லாமல் பட்டினியாக அலைந்ததெல்லாம் எமது நாட்டின் விடுதலைக்காகவே வாழ்ந்த இருபதாம் நூற்றாண்டின் முதல் கால்பகுதி. அது தமிழ்நாட்டு விடுதலைப் போர் வரலாற்றில், உன்னதமான காலமாக இருந்தது. விடியும்போது வீட்டில் இருந்தால், இருட்டும்போது வீடா அல்லது சிறையா என்று அவர்களுக்குத் தெரிந்திராது. பேச வாய்ப்பூட்டு; எழுதினால் தணிக்கை; நடந்தால் கண்காணிப்பு. இப்படி வாழ்ந்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் அடுத்த கால்பகுதியில் என்னவானார்கள் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. அவர்களில் சிலபேரின் வரலாற்றையேனும் நமது இளையதலைமுறைக்குச் சொல்லிவைக்கலாம் என்பதால், இந்த நீலகண்ட பிரம்மச்சாரியை இங்கு அழைத்து வந்துள்ளோம். கால வெள்ளத்தில் நாம் நூறு ஆண்டுகள் பின்னாலிருந்து பார்க்கப் போவதால், முன் பின்னாக, நம் வசதிக்கேற்றார் போலவே பார்க்கப் போகிறோம். நாம் சந்திக்கப்போகும் நிகழ்ச்சிகளும் நண்பர்களும் நமக்கு காலப் பிரமாணத்தை உணர்த்தி, உதவியாக இருப்பார்கள்.” (ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவ, திரை விலகுகிறது) காலம்: 1974 ஆம் ஆண்டு, மார்ச் மாதத்தில் ஒருநாள் காலைகளம்: சத்குரு ஓம்கார் ஆசிரமம். மைசூர் நந்தி மலை அடிவாரம்பாத்திரங்கள்: சத்குரு ஓம்கார் சுவாமிகள், சீடர், பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன் பத்திரிகையாளர் சங்கர கிருஷ்ணன், நந்திமலை அடிவார ஆசிரமம் முன்பு வந்து, வாசலில் நிற்கும் சீடரிடம் பேசும்போது காட்சி தொடங்குகிறது. கட்டட முகப்பில் ‘SATHGURU OMKAR ASHRAM, NANDHI HILLS’ என்ற பழைய போர்டு தொங்குகிறது. சங்கர கிருஷ்ணன்: “நான் ஒரு பத்திரிகையாளன். சென்னையில் இருந்து வருகிறேன். சுவாமிஜியைப் பார்க்கவேண்டும்..” சீடன் : “தங்கள் பெயர்?” சங்கர கிருஷ்ணன் : “சங்கர கிருஷ்ணன்” சீடன் : “கொஞ்சம் பொறுங்கள்.. சுவாமிஜியிடம் அனுமதி கேட்டு வருகிறேன்.” (உள்ளே சென்று சில கணங்களில் திரும்புகிறார்.) சீடன் : “வாங்க.. சுவாமிஜி அழைக்கிறார்..” (இருவரும் உள்ளே போகிறார்கள்.மேடை இருளுக்குள் போய், ஒளி திரும்பும்போது, ஆசிரம உள் அறையாகத் தெரிகிறது. சுவாமிகள் ஒரு பாயில் அமர்ந்திருக்கிறார். படித்துக்கொண்டிருந்த ஆங்கில செய்தித்தாளைக் கீழே வைத்துவிட்டு, சுவாமிகள் உள்ளே வரும் சங்கர கிருஷ்ணனைப் பார்க்கிறார். செய்தித்தாளின் தலைப்பில் பீஹார் மாணவர் போராட்டங்கள் பற்றிய செய்தியும் ஜெயப்ரகாஷ் நாராயணன் இந்திரா காந்தி அரசைக் கண்டித்திருப்பதும் பெரிய எழுத்துகளில் தெரிகிறது.) ஓம்கார் சுவாமிகள் : “வாங்க தம்பி.. அமருங்கள்.” (சுவாமிகளின் எதிரில் விரிக்கப்பட்டிருக்கும் இன்னுமொரு பாயில் சங்கர கிருஷ்ணன் உட்கார்ந்துகொள்கிறார்.) சங்கர கிருஷ்ணன் : “வணக்கம் சுவாமிஜி..” ஓம்கார் : “வணக்கம். உங்கள் பெயர், எனக்குப் பழைய நினைவுகளை இழுத்து வருகிறது..” சங்கர கிருஷ்ணன் : “என் பெயரா சுவாமி?” ஓம்கார் : “ஆமாம்.. அது இருக்கட்டும்.. பிரயாணம் பத்திரமாக இருந்ததா..? ஜெயப்பிரகாஷ் கிளர்ச்சி பலமா இருக்கே..!” சங்கர கிருஷ்ணன் : “இங்கே எல்லாம் அவ்வளவு தீவிரம் இல்லை சுவாமிஜி..” ஓம்கார் : “நல்லது.. என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்தீர்கள்?” சங்கர கிருஷ்ணன் : “பத்து நாள் முன்னாலதான் உங்களைப் பத்தி தெரிஞ்சுகிட்டேன். தலைவர் காமராசர் உங்களப் பத்தி பேசின செய்தி, எல்லாப் பத்திரிகையிலேயும் வந்தது. உங்களுக்கு சுதந்திரப் போராட்ட வீரருக்கான தாமிரப் பட்டயம் கொடுக்கணுமின்னு அரசாங்கத்தக் கேட்டிருந்தாரு காமராசர்..” ஓம்கார் : “காமராசருக்கு ரொம்ப நல்ல மனசு.. ஆனா அவரே பெரிய தியாகி ஆச்சே.. இப்படியெல்லாம் சலுகை கொடுப்பதற்கும் கேட்பதற்கும் தந்தா வாங்குறதுக்கும் அவருக்கே வெட்கமா இருந்திருக்கும். இப்போ விடுபட்டவங்களுக்குக் கேக்குறாரு. நான் இரண்டாம் தடவை ஜெயிலுக்குப் போகும்போது, அவருக்கு இருபது இருபத்தஞ்சு வயசு போல இருக்கும். சத்தியமூர்த்திகூட ஒரு தடவை பாத்திருக்கேன்..” சங்கர கிருஷ்ணன் : “நீங்களும் தாமிரப் பட்டயத்தை வேண்டாமுன்னு சொல்லிட்டதா செய்தி கேள்விப்பட்டேன்.” ஓம்கார் : “அதுகூட தெரிஞ்சிடுத்தா..? காமராசருக்கிட்ட போயி என் தம்பிதான் சிபாரிசு பண்ணிருக்கான். அவனை சத்தம் போட்டு, போன மாசம்தான் கடிதம் எழுதியிருந்தேன்..” சங்கர கிருஷ்ணன் : “ஏன் சுவாமி?” ஓம்கார் : “அது அவசியமில்ல தம்பி. நாட்டுக்காக செஞ்ச வேலை. நாங்க ஆரம்பிச்சு வச்சோம். காந்தி வந்து முடிச்சு வச்சார். எங்க கோளாறு எங்களுக்குத் தெரியல. பெருசா யோசிச்சோம். நாங்க செஞ்சுட்டா, ஜனங்க எங்க பின்னால வந்துருவாங்கன்னு நெனச்சிட்டோம். ஆனா, ஜனங்கள தன் வேலைக்குத் தயார் பண்ணிட்டுத்தான் காந்தி தம்மோட வேலையெல்லாம் செஞ்சார்.” (பேச்சை நிறுத்திவிட்டு, கண் மூடி ஏதோ யோசனையில் ஆழ்ந்து போகிறார். சில நொடிகள் சென்ற பின்னே..) சங்கர கிருஷ்ணன் : “சுவாமி..” ஓம்கார் : “பழைய யோசனை தம்பி..” சங்கர கிருஷ்ணன் : “அதெல்லாம் கேட்கணுமின்னுதான் உங்களைப் பார்க்க வந்திருக்கேன் சுவாமி..” ஓம்கார் : “அந்தப் பழைய கதையை எல்லாம் இப்போ நான் யாருக்கும் சொல்றதில்ல தம்பி..” சங்கர கிருஷ்ணன் : “அப்படி இல்லை சுவாமிஜி. உங்கள் கதை எல்லாருக்கும் தெரிய வேணும். ரொம்ப தூரத்திலிருந்து அதை எல்லாம் தெரிஞ்சுக்கிடத்தான் வந்திருக்கேன். நீங்க சொல்றத பத்திரிகைல போட உங்க அனுமதியும் வேணும் சுவாமிஜி..” ஓம்கார் : “முரட்டுத்தனமா முடியாதுன்னு சொல்ல முடியலயே தம்பி.. இது எனக்கே ஆச்சர்யமா இருக்கு. நான் சிறுபிள்ளையிலே இருந்தே ரொம்ப முரண்டு தம்பி. உங்க பெயரில எனக்கு ஏதோ வசீகரம் வருது. உங்ககிட்டே சொல்றேன். ஆனா, பத்திரிகையிலே கட்டாயம் வேண்டாம்..” சங்கர கிருஷ்ணன் : “ரொம்ப சந்தோஷம் சுவாமி. உங்க அனுமதி இல்லைன்னா உங்க கதை பத்திரிகையில வராது சுவாமி..” ஓம்கார் : “அந்தப் பழைய கதையை உன் பெயர் கொண்ட என் தோழனிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்..கடைய நல்லூர் சங்கர கிருஷ்ணன்..! அவன் ரொம்பத் தீவிரமான ஆளு. சிதம்பரம் பிள்ளைக்காக வேலை செஞ்சிக்கிட்டிருந்தான். சிதம்பரம் பிள்ளை வேலைக்காகவே நானும் அலைஞ்சபோது பழக்கமானான். பின்னால நாங்க இயக்கம் தொடங்கினப்போ, வாஞ்சிநாதனயும் இன்னும் சில பேரையும் அவன்தான் கொண்டு வந்தான். வாஞ்சி ஐயர் ஆஷ் கலெக்டர சுட்டப்போ, கூடப் போனது இவன்தான்..” (கதையை நிறுத்திவிட்டு..) “சங்கர கிருஷ்ணா, முதலில் ஆகாரம் செய்யுங்கள்.. நிதானமாகப் பேசலாம்..” (சீடனைப் பார்த்து..) “அழைத்துப் போய் ஆகாரம் பண்ணி வைப்பா..” (சங்கர கிருஷ்ணன் செல்ல, சுவாமிஜி மீண்டும் செய்தித்தாளைக் கையில் எடுத்துக்கொள்கிறார். மெல்ல இருள் பரவ, திரை விழுகிறது) (நாளை தொடர்வோம்)

நீலகண்ட பிரம்மச்சாரி

நீலகண்ட பிரம்மச்சாரி

நாடகம் காட்சி 1 காலம்: 1921ஆம் ஆண்டில் ஒருநாள் காலைகளம்: திருவல்லிக்கேணி – பாரதியார் வீடுபாத்திரங்கள்: நீலகண்டர், சகுந்தலா பாரதி, செல்லம்மா பாரதி மற்றும் பாரதியார் வீட்டு முற்றத்தில் ஒரு பதின்ம வயதுப் பெண் சத்தமாகத் ‘திருக்குறள்’ படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் பாரதியாரின் இரண்டாவது புதல்வி சகுந்தலா. “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான் யாசகம் பெற்றுத்தான் உயிர் தரிக்க வேண்டியவாறு இந்த உலக மக்களுக்கு இழிவு இருக்குமானால், இந்த உலகத்தைப் படைத்தவனும் கெட்டு ஒழியட்டும்.” (வாசலில் குரல் கேட்கிறது) குரல்: “அண்ணா.. பாரதி அண்ணா..” சகுந்தலா எழுந்து வாசலுக்கு வருகிறாள். 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நிற்கிறார். தாடி அடர்ந்த முகம், அழுக்கான ஆடை, ஆங்காங்கே சில கந்தல்கள். கண்களில் சகுந்தலாவைத் தெரிந்துகொண்டதன் காரணமாக அன்பு கனிந்து நிற்கிறது. சகுந்தலா: “அப்பா இல்லையே.. வெளியே போயிருக்கிறார்..” வாசலில் நிற்கும் மனிதர்: “பாப்பா.. நீ சகுந்தலாதானே?! என்னைத் தெரியவில்லையா..? நான் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. பாண்டிச்சேரியில் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறேன்.” சகுந்தலா: “சரியாக நினைவுக்கு வரவில்லை மாமா.. உள்ளே வாருங்கள். அம்மாவைக் கூப்பிடுகிறேன். அம்மா.. அம்மா..” நீலகண்டர் உள்ளே வருகிறார். வீட்டின் உள்ளிருந்து பாரதியாரின் மனைவி செல்லம்மா வருகிறார். நீலகண்டர்: “நமஸ்காரம் மன்னி.. நான் நீலகண்டன்.. தெரியறதா..?” செல்லம்மா: “ஏன் தெரியவில்லை..? வாருங்கோ நீலகண்டன்.. இந்த நாற்காலியில் சித்த உட்காருங்கோ.. உங்கள் அண்ணா வெளியில் போயிருக்கிறார்.. இருங்கோ.. வந்துவிடுவார்.. குடிக்க ஜலம் கொண்டு வருகிறேன்.” சமையல் உள்ளுக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் செல்லம்மா. நீலகண்டர் குடித்து முடிக்கிறார். செல்லம்மா: “மிகவும் இளைத்துவிட்டாற்போல் காண்கிறது..” நீலகண்டர்: “கொஞ்சம் அலைச்சல்..” செல்லம்மா: “ஜெயிலில் இருந்து எப்போ வெளியே வந்தேள்..?” நீலகண்டர்: “இரண்டு வருசம் ஆச்சு..” செல்லம்மா: “இந்த ஊருக்கு எப்போ வந்தேள்..?” நீலகண்டர்: “ஒரு கெழமை இருக்கும்.. இன்னைக்குத்தான் அண்ணா வீட்ட கண்டுபிடிச்சேன்.. பாப்பாவுக்கு என்னை ஞாபகம் வரலை போல..” செல்லம்மா: “அப்போ அவ சின்ன பொண்ணு. அதனால ஞாபகம் இருக்காது..” (சகுந்தலாவைப் பார்த்து) “சகுந்தலா, இவர் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. தீவிர தேசபக்தர்.. அப்பாவோட சிநேகிதர்.. பத்து வருசத்திற்கு முன்னே நாம பாண்டிச்சேரில இருக்கச்சே, திருநெல்வேலி ஆஷ் கலெக்டர் கொலை நடந்த வழக்கிலே எட்டு வருசம் ஜெயில்ல இருந்தவர்..” (வாசலில் சத்தம் கேட்கிறது. பாரதியார் பாட்டொன்றைப் பாடியவாறே உள்ளே வருகிறார்) பாரதியார்: “பாரத சமுதாயம் வாழ்கவே.. ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே..” நீலகண்டர்: (எழுந்தவாறே) “அண்ணா..” பாரதியார்: “யார்..?” நீலகண்டர்: “நீலகண்டன் அண்ணா.. என்னைத் தெரியலையா..?” பாரதியார்: “ஆஹா..! வாரும் நீலகண்டன்.. எப்போ வந்தீர்..?” நீலகண்டர்: “சித்த நேரம் முன்னேதான்..” பாரதியார் : “ஜெயில்ல ரொம்ப சிரமப்படட்டீர் போல.. உடம்பு துரும்பாயிட்டுதே ஓய்..” நீலகண்டர் : “கொஞ்சம் படுத்தினார்கள்தான்.. நானும் விட்டதில்லை. அரசியல் கைதிகளுக்குண்டான மரியாதையை ஜெயில்ல தொடர்ந்து கேட்டதினால, என்னைக் கலகக்காரனாவே நடத்துனாங்க..” பாரதியார் : “அதல்லவோ உம்மோட பெருமை.. நீலகண்டன்னாலே சிம்மம் அல்லவா..?”(செல்லம்மாவைப் பார்த்து) “செல்லம்மா.. சாப்பாடு தயார்தானே?” (கனவில் இருப்பவர் போன்ற தோற்றத்தில் கண்களை அகல விரித்து, நீலகண்டரிடம்) “ஓய் நீலகண்டன்.. ருசிய தேசத்து சேதி ஒன்னு தெரியுமோ..? அங்கே போல்ஸ்விக்-ன்னு ஒரு கட்சியாம். மக்கள் ராஜ்ஜியம் கொண்டு வந்திருக்கிறார்களாம். அங்கே இனிமேல் பசி, பட்டினி எதுவுமிராதாம்.. அதுபோல சமுதாயம் இந்தப் புராதன பாரத தேசத்திற்கு வந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்..?” நீலகண்டன் (குறுக்கிட்டு): “அண்ணா.. ஒரு நாலணா வேண்டும்..” பாரதியார்: “ஏன்..?” நீலகண்டன்: “சாப்பிட்டு முழுதாக ஒன்றரை நாள் ஆச்சு.. பசியில் நீங்கள் பேசுவதுகூட சரியாகக் காதில் விழவில்லை அண்ணா. நாலணா தந்தீர்கள் என்றால் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவேன்..” பாரதியார்: “பாண்டியா.. இதென்ன கொடுமை..!! செல்லம்மா.. நம்ம வீட்டில் ஆகாரம் ஏதேனும்..?” செல்லம்மா மௌனமாக உள்ளே சென்று திரும்பி வந்து, நீலகண்டரிடம் செல்லம்மா: “இந்தாருங்கள்.. போய் ஏதேனும் ஆகாரம் முடித்து வாருங்கள்..” நீலகண்டர்: “வந்தனம் மன்னி..” (நீலகண்டர் வெளியே நடக்கிறார்) பாரதியார்: “அம்மா.. காளி.. உன் பக்தர்கள் நிலையைப் பார்.. இந்த நாட்டில் பெரிய புரட்சியைக் கொண்டுவருவதற்காக சிறையேற்ற மனிதர், பட்டினியில் அலைவதென்றால் நீ இருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது..?”(பாடுகிறார்) “இனியொரு விதிசெய்வோம் – அதைஎந்த நாளும் காப்போம்தனியொருவனுக் குணவிலையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்” (திரை விழுகிறது) (நாளை தொடரும்)

தேச பக்தக் கலைஞர்

தேச பக்தக் கலைஞர்

மதுரகவி பாஸ்கர தாஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டத்தில் கலைஞர்களின் பங்களிப்பு மகத்தானது.கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, விஸ்வநாத தாஸ் என்று அந்தப் பட்டியல் மிக நீளமானது. அந்தப் படடியலில் பிரதானமாக முன்னால் வருபவர் கலைஞர் மதுரகவி பாஸ்கர தாஸ். மதுரகவி பாஸ்கர தாஸ் தமது படைப்பாற்றலால் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அக்கினிப் பொறி தட்டும் தேசிய எழுச்சிப் பாடல்களால் நாடகம் பார்க்க வந்த ரசிகர்களிடம் தேசபக்த உணர்வைக் கிளர்ந்தெழச் செய்தார்.பிரிட்டிஷ் அரசு நாடகத் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தபோது பக்திப் பாடல்கள் என்ற போர்வையில் விடுதலைக் கிளர்ச்சிப் பாடல்களை உருவாக்கினார். இவர் எழுதிய பாடல்களை கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா போன்ற கலைஞர்கள் மேடைகளில் பாடிவந்தனர். 1892ஆம் ஆண்டு ஜூன் 30 அன்று, விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரத்தில் பிறந்தார் பாஸ்கர தாஸ். இவரது இயற்பெயர் வெள்ளைச்சாமி. இருள் நீக்கி மக்களுக்கு வெளிச்சம் தர வேண்டும் என்ற நோக்கில் வெள்ளைச்சாமி என்று இவரது பெற்றோர்கள் பெயர் வைத்திருப்பார்களோ என்னவோ! நாகலாபுரத்தில் நான்காம் வகுப்பு வரை படித்தபிறகு, தனது பாட்டியின் ஊரான மதுரைக்குச் சென்றார். அங்கு ஆரம்பத்தில் கட்டட வேலைக்குச் சென்ற இவர், தெருக்கூத்து, நாடகம் ஆகியவற்றில் கலந்துகொள்வதில் நாட்டம் கொண்டார். சிறுவயதிலேயே பாடல்கள் எழுதுவதிலும் பாடுவதிலும் ஆற்றல் பெற்றவராக இருந்தார். சிலகாலம் மதுரை அனுமந்தராயன் கோயில் தெருவில் வாழ்ந்திருந்தபோது, அதே தெருவில் வசித்து வந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி இவரிடம் பாடல்களைக் கேட்பார். இவர், 11 நாடகங்கள் மற்றும் 110 நாட்டுப்பற்றுப் பாடல்களை இயற்றியுள்ளார். மதுரை திருநகரில் சித்திரகலா என்ற புகைப்பட நிறுவனத்தை நிறுவினார். இவருக்கு இரண்டு மனைவிகள். இரண்டாவது மனைவிக்கு ஏழு ஆண்கள், 7 பெண்கள். மொத்தம் 14 குழந்தைகளில் ஒரு ஆணும் பெண்ணும் இறந்துவிட்டனர்.ஐந்தாவது மகளின் பெயர் சரஸ்வதி. இவரது கணவர் எம். எஸ். சண்முகம் நில அளவைப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது எழுத்து மற்றும் நாடகத்துறையில் செயல்பட்டுவரும் தமிழ்ச்செல்வன், கோணங்கி, பூபதி ஆகியோர் இவர்களது மகன்களே. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமஸ்கிருத மகாகவி காளிதாஸ் பற்றி, தமிழில் முதல் பேசும் படமாக காளிதாஸ் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘இந்தியர்கள் நம்மவர்க்குள் ஏனோ வீண் சண்டை’ போன்ற தேசபக்திப் பாடல்களை மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதியிருந்தார். தொடர்ந்து பல படங்களுக்குப் பாடல்கள் எழுதியிருக்கிறார் பாஸ்கர தாஸ். இதன்மூலம் முதல் சினிமா பாடலாசிரியர் என்ற பெருமையைப் பெற்றார். திரைப்படங்களாக இருந்தாலும் நாடக மேடைகளாக இருந்தாலும் இவரின் பாடல்கள் தேசபக்திக் கனலை ஊட்டி வளர்க்கும் பாடல்களாகவே இருந்தன. இவரது பாடல்களில் உள்ள கருத்துகள் பாமர மக்களுக்கு உதவிகரமாக இருந்தன. திரையில், திரை இசைப் பாடல்களில் பெண்களைப் போகப் பொருளாகச் சித்தரித்துப் பாடல்கள் இயற்றிக்கொண்டிருந்த காலத்தில் பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில்பாடல்களை இயற்றியவர் இவர். இவரது பாடல்களால் மக்கள் எழுச்சிபெற்று வருவதைக் கண்டு கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள், இவர்மீது பல வழக்குகளைத் தொடுத்தபோது அவற்றை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டார். இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இவரைப் பாராட்டி முத்தமிழ் சேத்திர மதுரகவி பாஸ்கரதாஸ் என்று பெயரிட்டுப் பெருமிதம் கொண்டார். எட்டையபுரம் மன்னர் இவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் விளைநிலங்களைப் பரிசாகக் கொடுத்தார். இவரது பெருமையை கவியோகி சுத்தானந்த பாரதியார், சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம், அவ்வை தி.க. சண்முகம், தீரர் சத்தியமூர்த்தி என பலதுறைப்பட்ட பெருமக்களும் பாராட்டியுள்ளனர். மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் நூலாக வெளிவந்திருக்கிறது. 1926ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி மதுரையில் தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கம் முதன்முதலாக நாடக நடிகர்களுக்காகத் தொடங்கப்பட்டு அதன் முதல் தலைவராக மதுரகவி பாஸ்கரதாஸ் இருந்தார். மதுரையில் தொடங்கி, பின்னாளில் சென்னையில் நாடகச் சங்கம் தொடங்குவதற்கு இப்பெயரைப் பயன்படுத்த அனுமதி கேட்டபோது மதுரை நிர்வாகிகள் மறுத்துவிட்டனர். தேசபக்தர், கவிஞர், பாடகர், நடிகர், தொழிற்சங்கவாதி என பன்முகத்தன்மை கொண்ட மதுரகவி பாஸ்கரதாஸ், மகாத்மா காந்தியின் பாசத்திற்குரியவர். சுப்ரமணிய சிவா, வ.உ.சிதம்பரம்பிள்ளை, நீலகண்ட பிரம்மச்சாரி போன்ற தமிழ்நாட்டு தேசபக்தர்களைப் பற்றி வரலாற்றில் குறைந்த பதிவுகளே உள்ளன. அந்த வரிசையில் மதுரகவி பாஸ்கர தாஸூம் இருக்கிறார். இது அவலமல்லவா! இந்த அவலத்தைப் போக்க மதுரகவி பாஸ்கரதாஸிற்கு மணி மண்டபம் கட்டி இவரது வரலாறு தமிழ்நாட்டில் அனைவருக்கும் தெரியச் செய்தல் வேண்டும்.

கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

மீண்டும் வளம் பெறுமா? நாம் அறிந்த வரையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் முற்றிலும் புதிதாக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுலாத்தலமென்றால் அது பூம்புகார்தான். சிலப்பதிகாரத்தின் கதை மாந்தரின் ஊரான பூம்புகார், பழைய காலத்தில் புகார் நகரம் என்றே அழைக்கப்பட்டது. காவிரி புகும், பகைவர்கள் புகார் எனும் பொருள்படும், ‘புகும் புகார்’ என்பதே பின்னாளில் பூம்புகார் என்றானது. காவிரிப்பூம்பட்டினம் என்றொரு பெயரும் உண்டு இதற்கு. சங்க காலம் முதலே சோழர்களின் துறைமுக நகராகவும் முதல் தலைநகராகவும் விளங்கியது. காலப்போக்கில் கடல்கொண்ட புகார் நகரம் போய், ஒரு சிறு மீனவ கிராமமாகச் சுருங்கிவிட்டது. இந்த இடத்தில் சிலப்பதிகாரத்தின் நினைவாக ஒரு சுற்றுலாத்தலம் அமைக்க விரும்பினார் கலைஞர். அதன்படி இங்கே சிலப்பதிகாரக் கதையை விளக்கும் அழகிய சிற்பங்கள் அடங்கிய சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றும் நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், கண்ணகி கோட்டம் ஆகியவையும் அமைக்கப்பட்டன. கலைக்கூடத்தின் முகப்பு அக்கால எழுநிலை மாடத்தின் வடிவில் அமைக்கப்பட்டது. உள்ளே சிலப்பதிகாரக் காட்சிகளும் நடு முற்றத்தில் கண்ணகி, மாதவி ஆகியோருக்கு ஆளுயரத்துக்கு மேற்பட்ட கலைநயம் கொஞ்சும் சிலைகளும் அமைக்கப்பட்டன. அக்காலப் புகார் நகரின் அமைப்பை விளக்கும் முப்பரிமாண மாதிரி வடிவம் ஒன்றும் இதில் இருந்தது. கலைக்கூடத்தைச் சுற்றி கண்ணைக் கவரும் தோட்டங்களும் நடைபாதைகளும் இளைப்பாறும் இடங்களும் அமைக்கப்பட்டன. இளங்கோ அடிகளுக்கும் கரிகால் சோழனுக்கும் கம்பீரமான சிலைகள் அமைக்கப்பட்டன. வண்ண விளக்குகளும் நீரூற்றுகளுமாய் ஜொலித்தன. இந்தக் கலைக்கூட எழுநிலை மாடம்தான் முன்பு தமிழ்நாடு செய்திப் பிரிவின் இலட்சினையாக (லோகோ) விளங்கியது. இதனைத் தவிர சிலப்பதிகாரத்தில் ஐவகை மன்றங்கள் பூம்புகாரில் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. 1.வெள்ளிடை மன்றம், 2.இலஞ்சி மன்றம், 3.நெடுங்கல் மன்றம், 4.பூத சதுக்கம், 5.பாவை மன்றம் ஆகியவையே அவை. இவற்றில் வெள்ளிடை மன்றம், பூத சதுக்கம் தவிர மற்ற மூன்று மன்றங்கள் இக் கலைக்கூடத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. 1. இலஞ்சி மன்றம் கூன் முதுகுடையோர், குள்ளமாய்ப் பிறந்தோர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்கள் மூழ்கி எழுந்து, அந்தக் குறைபாடுகள் நீங்க சுற்றிவந்து வழிபட, பொய்கையும் மண்டபமும் கூடிய இலஞ்சி மன்றம்! “கூனும் குறளும் ஊமும் செவிடும்அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்றுவலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்” – சிலப்பதிகாரம். இது தற்போது, ஒரு பூங்காவின் நடுவே இரண்டு தடாகங்களும் (நீச்சல் குளம்) இரண்டுக்கும் இடையில் ஒரு மண்டபமும் அதன் இருபுறமும் உடை மாற்றும் அறை போன்ற வட்ட வடிவ அறைகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திலும் நீராடும் பெண்ணின் பல்வேறு நிலைச் சிற்பங்கள் – நீராடச் செல்லுதல், உடை அணிதல், ஒப்பனை செய்து கொள்ளல், மாலை சூடுதல் என்ற நிலைகளில் பெண்களின் கலைநயமிக்க சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2. பாவை மன்றம் அரசன் நீதி தவறும்போதும் நீதி வழங்கும் அவையில் தவறான தீர்ப்பு – நடுநிலையாக இல்லாமல் ஒரு சார்பில் வழங்கப்படும்போதும் அந்தத் தவறை வாய் திறந்து சொல்லாமல் குறிப்பாலே கண்ணீர் வடித்துக் காட்டிக்கொடுக்கும் பாவை நிற்கும் பாவை மன்றம் ! “அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து,உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும்,நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து,பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்” – இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம் இது கலைக்கூடத்தின் நேர் எதிரே பூங்காவிற்கு இடையில் ஒரு வட்ட வடிவ மண்டபமாக உள்ளது. இதில் சிலப்பதிகார வரிகளுடன் பெண்களின் சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ளன. 3. நெடுங்கல் நின்ற மன்றம் பிறரால் வஞ்சிக்கப்பட்டு பித்துப் பிடித்தவர்களும் நஞ்சு உண்டு அவதிப்படுவோரும் பாம்பு தீண்டியவர்களும் பேய் பிடித்தவர்களும் சுற்றி வர, அவர்களின் துயரத்தைப் போக்கும் நெடிய கல் நிற்கின்ற நெடுங்கல் நின்ற மன்றம்! இது ஒரு Menhir கல்போல இருந்திருக்கலாம். வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர்சுழல வந்து தொழத்துயர் நீங்கும்நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்! – இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம் இது கலைக்கூடத்தின் பின்புறம் ஒரு கலைநயமிக்க நெடுந்தூணும் அதனைச் சுற்றிலும் சிற்பங்களும் கொண்ட அழகிய கலை வடிவம். இதன் மினியேச்சர் வடிவத்தைதான் கலைஞர் தனது பூம்புகார் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் லோகோவாகப் பயன்படுத்தினார். இதைத்தவிர சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு ஓட்டலும் உணவு விடுதியும் நத்தாங்கூடு மற்றும் முத்துச்சிப்பிகளின் வடிவில் காட்டேஜ்களும் அமைக்கப்பட்டன. கலைக்கூடத்தின் வெளி நுழைவாயிலிலிருந்து, கதவு, கைப்பிடி, பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையம்கூட சிலம்பு வடிவத்திலேயே வடிவமைக்கப்பட்டது. இந்திரவிழா நடத்தும் பொருட்டு ஒரு அரங்கமும் அமைக்கப்பட்டது. இது தவிர ஊருக்கு ஏழு கிலோமீட்டர் முன்னதாகவே பூம்புகார் நுழைவு வாயில், கரிகால் சோழன் தோரண வாயில், இளங்கோ அடிகள் தோரண வாயில், கோவலன் தோரண வாயில், கண்ணகி தோரண வாயில், மாதவி தோரண வாயில் போன்ற வாயில்களும் அமைக்கப்பட்டன. சுற்றுலாவை மேம்படுத்த, தமிழ்நாட்டில் எங்கு பேருந்துகளுக்கு சுற்றுலா ரூட் பர்மிட் கேட்டாலும் அதில் தஞ்சை மாவட்டத்திற்கான பர்மிட் கட்டாயமாக சேர்த்தே அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு நாளில் இந்திரவிழா, அரசு விழாவாக மாவட்ட நிர்வாகத்தால் கலை/இலக்கிய நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இவையெல்லாம் கலைஞர் ஆட்சியிலிருந்த வரை சிறப்பாக நடைபெற்றன. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்த இடம் கேட்பாரற்று விடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி கலைஞர் தலைமையில் வந்தபோதும் இந்த இடம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. இந்திர விழா மட்டும் பெயரளவில் நடைபெற்றது. பூங்காக்கள் அழிந்தன; கட்டடங்கள் சிதிலமுற்றன; முத்துச் சிப்பி, நத்தாங்கூடு வடிவக் காட்டேஜ்கள் எலும்புக்கூடாய்ப் போய் இன்று தரை மட்டமாகி, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பாவை மன்றம் நாய்களும் சமூக விரோதிகளும் புழங்கும் இடமாயிற்று. நெடுங்கல் மன்றத்தைச் சுற்றி இருந்த பூங்காக்கள் அழிந்து, இன்று அருகில் செல்லக்கூடப் பாதை இல்லாமல் திறந்த வெளியில் நிற்கின்றன. இலஞ்சி மன்றத்தின் நீச்சல் குளங்கள் வறண்டு போய், பூங்காக்கள் அழிந்து, அதன் கருமை நிற கிரானைட் கட்டடங்களின் மேல் தற்காலக் காவியக் காதலர்கள் தங்கள் பெயர்களைக் கல்வெட்டாகச் செதுக்கி வைத்துள்ளனர். இதன் நுழைவாயில் வாசமிகு கருவாட்டுக் கடைகளால் சூழப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஓட்டலும் உணவகமும் காணாமல் போய்விட்டன. ஒரே ஒரு சுற்றுலா அலுவலகம் பெரும்பாலும் திறக்கப்படாமல் உள்ளது. அங்குள்ளவர்களிடம் பூம்புகார் பற்றியோ சிலப்பதிகாரம் பற்றியோ எந்த ஒரு தகவலும் கிடைக்காது. சுக ஜீவனம் நடத்தும் அரசு ஊழியர்கள். தற்போது கலைக்கூடத்தையும், ‘புதுப்பிக்கிறோம் என்ற பெயரில்’ நீண்ட காலமாக மூடி வைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. மற்ற இடங்களை, திறந்த வீட்டில் குக்கல்கள் போலச் சுற்றி வரலாம். சிலம்பு வடிவப் பேருந்து நிலையம் பழுதுபட்டுள்ளது. அதனைச் சுற்றி ஜேசிபிக்கள் ஏதோ பணி செய்கின்றன. கலைஞரின் கனவு சுற்றுலாத்தலமான பூம்புகாரை ஏனோ கலைஞரே பின்னாளில் கண்டுகொள்ளவில்லை; தொகுதியையும்தான். நீண்டகாலம் தொகுதியைக் கூட்டணி வேட்பாளர்களுக்கே ஒதுக்கினார். வெகு நீண்ட காலத்திற்குப் பின்னர் தற்போது திமுக எம்.எல்.ஏ. பார்க்கலாம், பூம்புகார் மீண்டும் நலம் பெறுகிறதா, வளம் பெறுகிறதா என்று.

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

புனைவுகளால் நாம் வாழ்கிறோம்

கதை சொல்பவர்களாகிய நாம் வெளியே சென்று நம் இதயம் விரும்பும் இரையைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். இங்கே எல்லாம் உள்ளது; எல்லாம் உண்மை; பூமி நம் காலடியில் ஒரு சிறிய தூசி மட்டுமே.    இதைச் சொன்னவர், 1923ஆம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஐரிஷ் கவிஞர் வில்லியம் பட்லர் யீட்ஸ். அவருடைய பிறந்தநாள் இன்று. இவர் தனது நாட்டில் Abbey என்ற நாடக அரங்கு ஒன்றையும் நிறுவியுள்ளார். நாடக ஆசிரியராகவும் விளங்கி இவர், கலையின் பயன்பாட்டை மக்கள் குறைவாகப் பயன்படுத்துவதாக வருந்தினார். ‘இலக்கியம் என்றால் என்ன?’ என்ற பெரும்பாலானவர்களின் கேள்விக்கு, “எழுத்துக்களின் வழியே, குறியீடுகளின் மூலமும் சம்பவங்களின் மூலமும் மனிதர்களின் மனநிலையைக் கொண்டுசெல்வதைத் தவிர இலக்கியம் என்பது வேறென்ன?!“ என்பதே இவரின் பதிலாக இருந்தது. இவருக்கு நோபல் பரிசை வழங்கியதற்கான காரணம், “ஒட்டு மொத்த நாட்டு மக்களின் மனநிலையை, கலை வடிவில், எப்போதும் ஈர்க்கக்கூடிய அளவில் அமைந்த இவரது கவிதைகள்” என்று நோபல் கமிட்டி குறிப்பிட்டது. “எல்லா உன்னதமான விஷயங்களும் போரின் விளைவுகள் என்று நான் நினைக்கிறேன். பெரிய தேசங்கள் மற்றும் பிரிவுகள் காணக்கிடைக்கும் உலகில், சிறந்த கவிதை மற்றும் தத்துவம் என்பது கண்ணுக்குத் தெரியாத போர்” என்கிறார் யீட்ஸ். டிசம்பர் 10, 1923 அன்று ஸ்டாக்ஹோம் கிராண்ட் ஹோட்டலில் நடந்த நோபல் விருந்தில் வில்லியம் பட்லர் யீட்ஸ் ஆற்றிய உரையில், நான் ஐரிஷ் நாடக இயக்கத்தை எனது கருப்பொருளாகத் தேர்ந்தெடுத்துள்ளேன், ஏனென்றால், நீங்கள் எனக்கு வழங்கிய பெரிய மரியாதையை நான் நினைவில் கொள்ளும்போது, தெரிந்த மற்றும் தெரியாத பலரை என்னால் மறக்க முடியாது. நான் நாடகங்கள் எழுதாமல் இருந்திருந்தால், வியத்தகு விமர்சனங்களை எழுதாமல் இருந்திருந்தால், எனது கவிதைகள் மேடையில் பேசும் தரத்தில் இல்லாதிருந்தால், ஒருவேளை ஆங்கிலக் குழுக்கள் எனது பெயரை உங்களுக்கு அனுப்பியிருக்காது. இது அவர்களின் திட்டமிட்ட சிந்தனையின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்றாலும், எனது இயக்கத்தின் அடையாளம் இல்லாமல் இது இல்லை. இப்போது நீங்கள் எனக்கு இந்தப் பெரிய கவுரவத்தை அளித்துள்ளீர்கள். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு பல ஐரிஷ் எழுத்தாளர்கள் ஒன்றாகச் சந்தித்து தங்கள் நாட்டின் இலக்கியம் குறித்த விமர்சனத்தைத் தொடங்கினர். மாகாணவாதத்திலிருந்து இலக்கியத்தை விடுவிப்பதன் மூலம் ஐரோப்பிய அங்கீகாரத்தைப் பெறலாம் என்பது அவர்களின் கனவாக இருந்தது. அவர்களுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், அவர்கள் இல்லையென்றால் ஒருபோதும் நான் இந்தத் தகுதியைப் பெற்றிருக்க முடியாது என்பது என் மனத்துக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டார். ‘ஒரு ஐரிஷ் விமானஓட்டுனர் அவரது மரணத்தை முன்னறிவிக்கிறார்’ என்ற தலைப்பில் ஒரு போர்ச் சூழலில் யீட்ஸ் எழுதிய கவிதை இது. மேகங்களின் மத்தியில் எங்கோஎன் விதியைச் சந்திப்பேன் என்று எனக்குத் தெரியும்நான் போராடுபவர்களை வெறுக்கவில்லைநான் அவர்களை நேசிக்காமல் காவல் காக்கிறேன்என் நாடு கில்டார்டன் கிராஸ்என் நாட்டு மக்கள் கில்டார்டரின் ஏழைகள்முன்பைவிட அவர்களை மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்எந்த முடிவும் அவர்களுக்கு வேண்டியதைக் கொண்டுவரவே முடியாதுசட்டமோ கடமையோ என்னை போராடத் தூண்டவில்லை தனிமையின் தூண்டுதல் மேகங்களில்இந்த ஆரவாரத்தில் விமானம் ஓட்டுகிறேன்பொது மனிதரோ அல்லது கோபமான கூட்டமோஅனைத்தையும் மனதில் கொண்டு சமன்செய்தேன்வரவிருக்கும் ஆண்டுகள் மூச்சுத்திணறல் போலத் தோன்றியதுபல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மூச்சுச்திணறல் வாழ்க்கையுடன்மரணம் சமநிலை செய்கிறது. ‘எந்தவொரு புத்தகத்திலிருந்தும் நான் கற்றுக்கொள்வதற்கு முன்பு, ஒரு கலை அல்லது கைவினை பற்றிய யோசனையை, பண்டைய தொழில்நுட்பங்கள் மற்றும் மர்மங்களைக் கொண்ட ஒரு வழிபாட்டு யோசனையிலிருந்து பிரிக்கமுடியாது என்பதை நான் மக்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்’ என்கிறார்  பெரும்பாலும் இவரது கவிதைகள், பிரபலமான தருணங்கள், மற்றவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளைப் பிரதிபலிப்பவையாக உள்ளன. நாட்டின் செனட் சபை உறுப்பினராகவும் அவர் இருமுறை பணியாற்றியுள்ளார். கலை, இலக்கியத்தின் பயன்பாடு மக்களிடம் கணிசமாக இருக்கவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருந்துள்ளது.

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கருணாநிதி ஏன் கலைஞர் ஆனார்?

கலைஞர் 100 – சிறப்புப் பதிவு தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் கலை உலகிலிருந்து பிரிக்க முடியாத பெயர் கலைஞர். முத்துவேல் கருணாநிதியாகத் தோன்றி, மறைவுக்குப் பின்னும் கலைஞராக வாழ்ந்துகொண்டிருக்கும் அவரது நூறாவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவருடைய எழுத்தாற்றல் பற்றி நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும். தமிழ் எழுத்துலக வரலாற்றில் கலைஞரைத் தவிர்த்துவிட்டு யாராலும் வரலாறு எழுதவியலாது. அவருடைய படைப்புகள் தமிழ் இலக்கியத்தில் இன்றியமையாதவையாக நிலைத்திருக்கின்றன. தனது தூக்குமேடை நாடகம் அரங்கேற்றத்தின் முடிவில் நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களால் கருணாநிதியைப் பாராட்டி வழங்கப்பட்ட பட்டம்தான் கலைஞர். அன்று முதல் இன்றுவரை மட்டுமல்ல, தமிழ்கூறும் உலகம் இருக்கும்வரை கலைஞர் என்று உச்சரித்தால் அது கருணாநிதியை அழைப்பதாகவே இருக்கும். அவர் தனது வாழ்நாள் முழுவது தமிழ் இலக்கியத்துக்காக பணியாற்றினார் என்று கூறினால் அது மிகையில்லை. தமிழ்நாட்டு அரசியல் உலகில் எந்த அளவுக்கு அவர் பணியாற்றினாரோ அதையும் விஞ்சும் அளவுக்கு தமிழிலக்கியத்திற்கும் பணியாற்றினார் என்பதும் உண்மையே. அவருடைய மாணவப்பருவத்திலேயே தமிழ் இலக்கியத்தின்மீது ஆர்வம் கொண்டதின் காரணமாக ‘மாணவ நேசன்’ எனும் கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கி அதில் அவருடைய எண்ணங்களைப் படைத்து மாணவர்கள் மத்தியில் எழுச்சியை உருவாக்க முயன்றிருக்கிறார். பத்திரிகைப் பணிகள் 1942இல் முரசொலி எனும் துண்டு பிரசுரத்தை எழுதி வெளியிட்டுவந்தார்.  அவ்வெளியீடு சில மாதங்களிலேயே நின்றுபோனது. 1946இல் மீண்டும் முயற்சித்து அதை மாத இதழாக வெளியிட்டார். 1948இல் மீண்டும் அது நின்றுபோனது. கருணாநிதி அவர்கள் தனது முயற்சியைக் கைவிடாமல் 1953இல் மீண்டும் முரசொலியை மாத இதழாகக் கொண்டுவந்தார். முரசொலியின் மூலம் தனது கருத்துகளை, தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை மிகத்தெளிவாக மக்களுக்குக் கொண்டு சேர்த்தார். முரசொலியில் அவர் எழுதிய கட்டுரைகள் மாணவர்களும் இளைஞர்களும் திராவிடர் இயக்கத்தில் இணைந்து பணியாற்ற உந்துதலாக இருந்திருக்கின்றன. 1960இல் மாத இதழாக இருந்த முரசொலி, நாளிதழாக வெளிவரக் காரணமாயிருந்தவரும் அவரே. அன்று முதல் இன்று வரை திமுகவின் அதிகாரப்பூர்வ இதழாக முரசொலி வெளிவந்துகொண்டிருக்கிறது. திரையுலகப் பயணம் கலைஞரின் எழுத்தில் வெளிவந்த திரைப்படங்களும் ஏராளம். சுமார் 75 திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றோடு சில திரைப்படங்களில் பாடல்களையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக 1952இல் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் அவர் எழுதிய வசனங்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. தனது 20ஆம் வயதிலேயே ஜூபிடர் பிக்சர்ஸ் எனும் படக் கம்பெனியில் அவர் பணியாற்றியபோது அவருடைய வசனத்தில் வெளியான முதல் திரைக் காவியம் ராஜகுமாரி. திரும்பிப்பார், மனோகரா போன்ற திரைப்படங்கள் அவரைத் திரையுலகில் ஜொலிக்க வைத்தன. நாடக உலகில் கலைஞர் பல்வேறு நாடகங்களுக்கும் கதை, வசனம் எழுதி அவற்றில் அதில் நடித்தும் இருக்கிறார். 1947 தொடங்கி 1979 வரையிலும் சுமார் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். அவற்றில் மணிமகுடம், மகான் பெற்ற மகன், மந்திரி குமாரி, தூக்குமேடை ஆகிய சில நாடகங்கள் அவரை நாடக்கலையிலும் வல்லுநராகப் பார்க்க வைத்தன. இலக்கிய உலகில் நீங்கா இடம் புதிய கோணங்களில் புதினங்களைப் படைப்பதிலும் கருணாநிதி கெட்டிக்காரராகவே இருந்திருக்கிறார். அரும்பு, இரத்தக் கண்ணீர், சுருளி மலை, நடுத்தெரு நாராயணி, புதையல், பெரிய இடத்துப் பெண், ஒரே இரத்தம் ஆகிய புதினங்கள் மிகச்சிறப்புப் பெற்றவை. கலைஞரின் சிறுகதைகள், பெரியாரின் கொள்கைகளையும் அண்ணாவின் அரசியல் மற்றும் கட்சித் தலைமைப் பண்பையும் விவரிக்கும் படைப்பாகவே அமையப்பெற்றிருப்பது அவருடைய கொள்கைப் பற்றையும் அரசியல் தெளிவையும் நமக்குச் சொல்வதாகவே காணப்படுகின்றன. பாலைவன ரோஜா, விஷம் இனிது, வேணியின் காதலன், நளாயினி, நுனிக் கரும்பு ஆகிய சிறுகதைகள் படிக்கும்போதே நம்மை மெய் சிலிர்க்கச் செய்யும். நாற்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவருடைய படைப்பில் வெளியாகியுள்ளன. அவருடைய சிறுகதைத் தொகுப்புகளில் கண்ணடக்கம், ஒரு மரம் பூத்தது, கிழவனின் கனவு, சங்கிலிச் சாமியார் ஆகிய அனைத்துமே கொள்கைக் களஞ்சியமாக, பெட்டகமாக வைத்துக் கொண்டாடப்படவேண்டிய தொகுப்புகள். அவருடைய இலக்கியப் படைப்புகள் இத்தோடு நின்றுவிடவில்லை. கலைஞரின் கவிதைகள், திரையிசைப் பாடல்கள் ஆகியவற்றோடு திருக்குறள் உரை, சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா, குரளோவியம், சிலப்பதிகாரம், தாய், பூம்புகார் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியப் படைப்புகளையும் தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார். தமது வாழ்க்கையைத் தன்வரலாறாக எழுதி நெஞ்சுக்கு நீதி என்ற நூலாக வெளியிட்டுள்ளார். 4000க்கும் கூடுதலான பக்கங்களைக் கொண்ட நெஞ்சுக்கு நீதி 6 பாகங்களாக வெளிவந்து பல்லாயிரக்கணக்கில் விற்னையாகியுள்ளது. கலைஞரின் சொற்பொழிவுகள், பத்திரிகைப் பேட்டிகள் மட்டுமே 5 தொகுப்புகளாக உள்ளன என்பதை மெச்சாமல் இருக்கமுடியுமா!? கட்டுரைத் தொகுப்புகள் 30 தலைப்புகளிலும் சிறு குறிப்புகள் 20 தலைப்புகளிலும் வெளிவந்துள்ளன. கலைஞர் கடிதங்கள் 12 தொகுப்புகள், குடியரசு கட்டுரைகள், கரிகாலன் பதில்கள் என்று அவரது எழுத்துகள் எங்கெங்கும் பரவிக்கிடக்கின்றன. ஏராளமான பயணக் கட்டுரைகளும் எழுதியுள்ளார். 1957 முதல் 2018 வரை கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆற்றிய சட்டமன்ற உரைகளின் தொகுப்புகள் 12 தொகுதிகளாக வெளிவந்திருக்கின்றன. அவருடைய மொத்தப் படைப்புகளையும் வாசித்து முடிக்க நமக்கு ஒரு வாழ்நாள் போதாது என்றால் மிகையில்லை. கலைஞரின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் விதமாக வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் முயற்சியில் தற்போதைய திமுக தலைமையிலான அரசு ஈடுபட்டுவருகிறது. ஆனால் கலைஞரின் படைப்புலகப் பங்களிப்புகளை இன்றைய திமுகவினர் பெரும்பாலானவர்கள் சிறிதளவுகூட வாசித்திருக்க மாட்டார்கள் என்பதும் உண்மையே. கலைஞரின் நூற்றாண்டு தொடங்கும் இந்த வேளையில், அவருடைய படைப்புகள் பொதுமக்களைப் பரவாலாகச் சென்று சேர்வதற்கு உரிய நடவடிக்கைகள் எடுப்பதே அவருடைய இலக்கியப் பங்களிப்பை நிலை நிறுத்த உதவும். இல்லையேல் அது வெறும் அடையாளமாகவே நின்றுவிடும்.   முகப்புப் படம்: இணையத்திலிருந்து

வில்லிசை நாயகன்

வில்லிசை நாயகன்

பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது முதிர்வு காரணமாக சென்னையில் இன்று காலமானார் அவருக்கு வயது 94. சுப்பு ஆறுமுகம், வில்லிசைக் கச்சேரிகள் மூலம் ராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்களை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்துக் கூறியவர். 1928 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் சுப்பு ஆறுமுகம் பிறந்தார். தனது வில்லுப் பாட்டின் வாயிலாக சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே ஆன்மிகம், தேச பக்தியை வளர்த்து வந்தார். கடந்த 40 வருடங்களாக வில்லுப்பாட்டுக் கச்சேரியினை நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் வில்லுப்பாட்டினால் மக்களைப் பெரிதும் கவர்ந்தவர். வில்லுப் பாட்டுக் கலை தமிழ் நாட்டில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் பிரபலம் அடைந்தது. அவருக்குப் பிறகு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களால் உலகளவில் பரவியது. தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இவரின் குரு, வித்துவான் ஆ.க.நவநீத கிருஷ்ணன் பிள்ளை என்பவர் ஆவார். இவர் திருநெல்வேலி மந்திர மூர்த்தி உயர்நிலைப் பள்ளியிலும், பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் பள்ளியிலும் படித்தார். அதன்பிறகு ‘மதுரை தமிழ்ச் சங்கம்’ என்ற அமைப்பில் மூன்று ஆண்டுகள் படித்துத் தமிழ் மொழியில் புலமை பெற்று விளங்கினார். சுப்பு ஆறுமுகம் தனது பதினாறாம் வயதில் ‘குமரன் பாட்டு’ என்ற நூலை எழுதியிருக்கிறார். திரைப்பட நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் கவிஞரை வில்லிசை, திரைப்படங்கள், திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுத சென்னைக்கு அழைத்து வந்தார். காந்தி மகான் கதையை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1948-ல் கவிஞர் சுப்பு அவர்களைக் கொண்டு எழுதச் சொல்லி சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி வந்தார். திரையுலகில் கலைவாணர் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்த பல படங்களுக்கான நகைச்சுவைக் காட்சிகளையும் எழுதியுள்ளார். 1960ஆம் வருடம் இவரின் வில்லிசை நிகழ்ச்சி ‘கருணைக்கடல் காஞ்சி காமாட்சி’ என்ற தலைப்பில் அரங்கேறியது. ‘காந்தி வந்தார்’ என்ற வில்லிசையை சென்னை வானொலியில் பாடினார். காந்திமகான் கதை கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களைப் புகழ் ஏணியின் உயரத்துக்குக் கொண்டு சென்றது. கலைவாணர் அவர்களின் மறைவிற்குப் பின்னர், கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்களே நாடெங்கும் முதல் பணியாக, வில்லுப்பாட்டு நிகழ்ச்சியினைத் தொடர்ந்து நடத்தி வந்தார். சுமார் 1000க்கும் மேற்பட்ட வில்லிசை நிகழ்ச்சிகளை ஆலயங்களில், வானொலியில், தொலைக்காட்சிகளில் ஆசுகவியாக அவ்வப்போது இயற்றி அவற்றைத் தன் வில்லிசையின் மூலம் தமிழக மக்களின் ரசனையை நேரிடையாகப் பெற்றார். கவிஞர் என்று எல்லோராலும் புகழப்பட்ட சுப்பு ஆறுமுகம் தமிழக அரசால் ‘கலைமாமணி’ என்ற கௌரவத்தையும், மத்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் விருதையும் பெற்றார். கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருதினையும் சுப்பு ஆறுமுகம் பெற்றுள்ளார். இந்திய அரசின் தேசிய நலத்திட்டங்கள், தேச பக்தி, தெய்வ பக்தி, தொழிற் சாலைகளில் தற்காப்பு முறைகளைக் கையாள்வது போன்ற சமுதாய நிகழ்ச்சிகள், வாக்காளர்களின் உரிமை போன்ற விழிப்புணர்வு தலைப்புகளில் பல்லாயிரக் கணக்கான நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அழிந்துவரும் கலைகளில் ஒன்றான வில்லிசையின் நாயகராகத் திகழ்ந்த சுப்பு ஆறுமுகம் அவர்களின் மறைவு தமிழ் இசை உலகிற்கு மாபெரும் இழப்பாகும். தாணப்பன் கதிர்

இரவின் நிழல்

இரவின் நிழல்

திரை விமர்சனம்‘பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும்தான் என்னை எல்லா வயசிலேயும் விரட்டிக்கிட்டே இருந்தது ; சிலர் செய்யற பாவம் கங்கைக்குப் போனால் தீரும், சில பாவங்கள், செய்யறவா கங்கையோடு போனாலும் தீராது; வெதச்சுது எல்லாம் முளைக்கும்டா, பாவம் உட்பட’ – சுருக்கமாகச் சொன்னால் இதுதான், ‘இரவின் நிழல்’. நந்து (பார்த்திபன்) – காட்டமாகச் சொன்னால், கந்து வட்டிக்காரன்; கண்ணியமாகக் கூறினால், பைனான்சியர். குழந்தைப் பருவம் முதல் நடுத்தர வயது வரையிலான, கரடுமுரடான அவனது வாழ்க்கையை, வேதனையை, சுரண்டலை, பஞ்சமா பாதகங்களை, ஆஷாடபூதித்தனம் இல்லாமல், அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டுவதுதான், பார்த்திபன் ராதாகிருஷ்ணன் எழுதி இயக்கி, நடித்துள்ள ‘இரவின் நிழல்’ எனும் உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தின் கதை. இதனை ‘டார்க் ஸ்டோரி’ என்றால் அது நகைமுரண். நந்துவின் வாழ்க்கைப் பாதையில் இடையிடையே பயணிக்கும் அம்மா ராணி (ரேகா நாயர்), சந்துரு (நந்து), ஆனந்த கிருஷ்ணன் (நந்து), காதலி லட்சுமி (சினேகா), மனைவி சிலக்கம்மா (பிரீகிடா சகா), பார்வதி (சாய் பிரியங்கா ரூத்), பிரேம குமாரி (வரலட்சுமி சரத்குமார்), சாமியார் பிரேமானந்தா (ரோபோ சங்கர்) ஆகியோர் துணைப் பாத்திரங்களாக மட்டுமல்லாது, நந்துவின் பாத்திரப் படைப்புக்கு உறுதுணையாகவும் நிற்பது சிறப்பு. சிலக்கம்மா (பிரீகிடா சகா) கலக்கலம்மா ! பொதுவாக, விருப்பப்பட்ட வாழ்க்கை எவருக்கும் அமைவதில்லை என்பதுதான் உண்மை. அமைந்த வாழ்க்கையை, கிடைத்த வாய்ப்புக்கேற்ப செப்பனிட்டுக்கொண்டு, அடுத்தடுத்தக் கட்டங்களை நோக்கி நகர்வதுதான், எல்லோருக்குமான வாழ்க்கையாக இருக்கின்றது.  நந்துவின் வாழ்க்கையும் அப்படித்தான். கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், அவன் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை ; அப்படியான வாழ்க்கைக்குத்தான்,  நந்து தேர்வானான். பசியும் பணம் சார்ந்த பிரச்சனையும் விரட்ட முடியாத இடத்தை அவன் அடைந்து, மனதில் குற்ற உணர்வும் அன்பு மயமான வாழ்க்கையும் ஒருங்கே முகிழ்த்து, நடக்கும் போராட்டத்தில் பலியாவது நந்து, பிழைத்து நிற்பது மனிதம். இவற்றை ‘செல்லுலாய்ட்’டில், நான்-லீனியர் சிங்கிள் ஷாட் மூலம், தொய்வில்லாமல் வழங்க பார்த்திபன் மிகவும் மெனக்கெட்டு இருப்பதை உணர முடிகிறது. வெற்றியும் பெற்றுள்ளார். நான்-லீனியர் சிங்கிள் ஷாட் குறித்த புரிதலை ஏற்படுத்த, படத்தின் முதல் அரை மணி நேரம் செலவிடப்பட்டுள்ளது. அதிலும் படத்திற்கான வாய்ஸ் ஓவர் தவிர்த்து, அந்தத் தொழில்நுட்பத்தை விளக்குவதற்கான வாய்ஸ் ஓவராக அமைந்திருந்தால், இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கக்கூடும். படத்திலும்கூட வாய்ஸ் – ஓவர்தான்; என்றாலும், இதில் காட்சிகளின் நீள அகலங்களுக்கு வாய்ப்பில்லாததைக் கணக்கில் கொண்டால்,  இதைத் தவிர்க்க முடியாதுதான் என்பதையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். பாவம் என்கிற ஒரு வட்டத்துக்குள்தான்  நந்துவின் வாழ்க்கை என்று முடிவு செய்துவிட்டது போல, மீண்டும் மீண்டும் அவனது காரியம் ஒவ்வொன்றையும் பாவமாகவே வரித்துக் கொண்டு வருகிறது, கதை. நாய் விற்ற காசு குறைக்காது என்பது போல, அவன் விற்கும் கஞ்சா காசுதான், அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை சுகபோக வாழ்க்கை வாழ வழி வகுத்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம். ஏசியா புக் ஆப் ரிகார்ட்ஸ், இண்டியா புக் ஆப் ரிகார்ட்ஸ் இரண்டிலும், ‘இரவின் நிழல்’ ‘முதல் ஏசியன் நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ படமாக முத்திரை பதித்த பார்த்திபனின் இந்தச் சாதனைக்கான கடும் உழைப்புக்கு,  ஏ ஆர் ரகுமானின் அட்டகாசமான இசையும், ஆர்தர் வில்சனின் பிரமிப்பான ஒளிப்பதிவும் பக்கா பலம். கலை இயக்குநர் விஜய் முருகனின் உழைப்பும் வீண் போகவில்லை. ‘நான்-லீனியர் சிங்கிள் ஷாட்’ குறித்த புரிதலுடனான அனுபவத்திற்கும்,  வாலிபக் கவிஞர் வாலி போன்று, பார்த்திபனின் வார்த்தை ஜாலத்தைச் சுகிக்கவும், பொதுவாக எலைட் சமூகம் முகம் சுளிக்கும் ஒரு வாழ்க்கையைப் பற்றிய ஆபாசம் உட்பட ஆசாபாசங்களை, வலிகளை உணரவும், தூக்கம் தொலைத்த ஓர் இரவு வாய்க்கவும் வாய்ப்பளிக்கிறது, பார்த்திபன் இராதாகிருஷ்ணனின்  ‘இரவின் நிழல்’. மதிப்பெண் : 8.5/10 மது ராஜேந்திரன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

நா.முத்துக்குமார் தொண்ணூறுகளின் இறுதியிலேயே வந்து விட்டாலும் இரண்டாயிரத்தின் மத்தியப் பகுதியில் இருந்து 2015 வரை உச்சத்தில் இருந்த பாடலாசிரியர். பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து, பழனி பாரதி என்று தனி ஆளாகத் திரைத்துறையில் கோலோச்சிய பாடலாசிரியர் வரிசையின் கடைசிக் கண்ணி அவர்தான். இனி தனி ஒருவருக்கு அந்த இடம் சாத்தியமில்லை. இரண்டாயிரத்துக்குப் பிறகு அப்படி ஒரு நிலையில் அவரும் இருந்ததே பெரிய விஷயம். அந்த வகையில் அவர் முக்கியமானவர். அவருடைய வெற்றி என்பது யுவன் மற்றும் ஜி.வி யின் வெற்றியும்தான். நிறைய பேர் நா.முத்துக்குமார் குறித்துப் பேசுகிறபோது, யுவனைப் பேசுகிற அளவுக்கு ஜி.வி. குறித்துப் பேசுவதில்லை. ஆனால் வெயில், கிரீடம், அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய ஜி.வி.யின் முக்கியமான ஆல்பங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் நா.முத்துக்குமார்தான். ‘தலைவா’விலும் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய பாடல்கள் உண்டு (பலர் ஜி.வி.இசையமைத்த பாடல்களையும் யுவன் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர்). இந்த இருவரைத் தவிர பிறருக்கும் எழுதியிருக்கிறார். அவ்வளவு எளிதில் யாரும் ஊடுருவி விட முடியாத ரஹ்மானின் கோட்டைக்குள்ளேயே ஊடுருவி, ஆறு படங்களில் பாட்டு எழுதி விட்டார் (பல்லேலக்கா – சிவாஜி, வளையபட்டித் தவிலு- அழகிய மகன், ராத்திரியின் சொந்தக்காரா- பார்த்தாலே பரவசம், டாக்ஸி டாக்ஸி- சக்கரக்கட்டி, ஜோதா அக்பர், சர்வம் தாளமயம்) பட்டுக்கோட்டையின் பலம் சமூகம். கண்ணதாசன் மரபு சார்ந்த தமிழ் வாழ்வியலையும் பக்தி மரபையும் எளிமைப்படுத்தித் திரையில் தந்தவர். வைரமுத்து மரபு இலக்கியத்தை நவீன சிந்தனைகளோடு இணைத்தவர்; கூடுதலாக கிராமிய வாழ்வியலையும் நவீன வாழ்வின் பல்வேறு கூறுகளையும் திரையில் வடித்தவர். அறிவுமதி தனக்கான தனித்துவத்துடன் கூடிய கவிஞர்; அப்துல் ரகுமானின் திரையுலக பிம்பம்‌. பழநி பாரதி நவீன மெட்டுகளுக்கேற்ப, தாளங்களுக்கேற்ப கவித்துவத்துடன் கூடிய புதுமையான வரிகளைக் கண்டறிந்தவர். தாமரை காதலின் பெண் மொழியை பாடல்கள் வழி பேசியவர். வாலி இந்தக் கணக்கில் வர மாட்டார். அவர் பாத்திரத்தின் வடிவத்தைத் தானும் அடைந்து விடும் நீர் போன்றவர். அவர் பலம், பலவீனம் இரண்டுமே இதுதான். ஆனால், இயற்கை சார்ந்த ஜென் மனநிலையையும் பித்தேறிய காதலின் உளறல்களையும் தனித்துவமாக பாடல்களில் வடித்தவர் நா.முத்துக்குமார்தான். ‘மின்சாரக் கம்பியின் மீதுமைனாக்கள் கூடு கட்டும்’என்பதெல்லாம் அழகிய படிமம். ‘காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்காற்றிடம் கோபம் கிடையாது’என்று கேட்பதற்கு மரங்களோடு உறவாடுகிற மனநிலை வாய்த்திருக்க வேண்டும். ‘தாராளமா மனசிருந்தாகேரளான்னு தெரிஞ்சுக்க’என்றெழுதிய ரசனை நிறைந்த குறும்புக்காரன். ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்னோய்க்கு தானே மருந்து’என்றார் வள்ளுவர். பிற நோய்களுக்கு மருந்து வேறிடத்தில் இருக்கும்; காதல் நோய்க்கு அதுவே மருந்து என்கிற வள்ளுவரின் சிந்தனையை‘காதல் நோய்க்கு மருந்து தந்துநோயைக் கூட்டுமே’என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றவர். பெண்ணின் கண்களைப் பார்த்து‘உன் கண்கள்வண்டை உண்ணும் பூக்களென்பேன்’என்று சொல்வதற்கெல்லாம் எப்படிப்பட்ட ரசனை இருக்க வேண்டும்..!! ஆழமாக மட்டுமல்ல, எளிமையான வரிகளிலும் காதலைச் சொல்லி விட முடியும் அவரால்.‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லைஅவளுக்கு யாரும் இணையில்லைஅவள் அப்படி ஓன்றும் கலரில்லைஆனால் அது ஒரு குறையில்லை’என்பதுதானே சாமானியக் காதலனின் குரலாக இருக்க முடியும்..! ‘கொடுத்ததை திருப்பி நா கேட்ககடனா கொடுக்கலையேஉனக்குள்ளதானே நா இருக்கேன்உனக்கது தெரியலயேபாக்காத பாக்காதகுத்தும் பார்வையால்என்ன பார்க்காதேபோகாத தள்ளிப் போகாதேஎன்ன விட்டு விட்டுதள்ளித் தள்ளிப் போகாத’எவ்வளவு எளிமையான சொற்களில் மிகப்பெரிய உணர்வு சொல்லப்பட்டிருக்கிறது..! ‘கதைகளைப் பேசும் விழியருகேஎதை நான் பேச என்னுயிரே’என்று சொற்கள் திகைத்து நிற்கிற இடத்தையும் எல்லா கவிஞர்களையும் போலவே இவரும் அடையாளம் காட்டியிருக்கிறார். ‘பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்‌‌காற்றுவெளியில் கலந்தே இருக்கும்சாம்பல் உதிரும்.. வார்த்தை உதிருமா?பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்உயிரும் போகும்.. உருவம் போகுமா?உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்‌விரல்கள் இன்று எங்கே?தோளில் சாய்ந்து கதைகள் பேசநமது விதியில் இல்லைமுதல் கனவு கண்டிடும் முன்னரேதூக்கம் கலைந்ததே’என்றெல்லாம் எழுத, காதலின் அமானுஷ்யத்தை உணர்கிற அரூப மொழியில் உழன்றவனாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் குறித்து அவர் எழுதிய பாடல்கள் ஊரறிந்தவை. பெண் குழந்தை பற்றிய திரைப்படப் பாடல்களில் ‘அபியும் நானும்’ படத்தில் வருகிற ‘வா வா என் தேவதையே’ பாடல்தான் எனக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும் (வைரமுத்து).ஆனால், ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் கவித்துவமும் கற்பனையும் நன்றாக இருக்கும்.‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்’என்பது அழகான தொடக்கம்; சந்தேகமே இல்லை. ‘இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள் எதுவும் தேவையில்லைசிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்மலையின் அழகோ தாங்கவில்லைஉந்தன் கைகள் பிடித்து போகும் வழிஅது போதவில்லை இன்னும் வேண்டுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்பது அழகான ஏக்கம்; அதிலும் சந்தேகமே இல்லை. ‘தூரத்து மரங்கள் பார்க்குதடிதேவதை இவளா கேக்குதடிதன்னிலை மறந்து பூக்குதடிகாற்றினில் வாசம் தூக்குதடிஅடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?உனது புன்னகை போதுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்ற வரிகளிலும் அதே வாசம். ‘உன் முகம் பார்த்தால் தோணுதடிவானத்து நிலவு சின்னதடிமேகத்தில் மறைந்தே பார்க்குதடிஉன்னிடம் வெளிச்சம் கேட்குதடிஅதைக் கையில் பிடித்து ஆறுதல் உரைத்துவீட்டுக்கு அனுப்பு நல்லபடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்கிற இடத்தில் டோஸ் ரொம்ப கூடி, காதல் பாடலின் மிகை வந்து விடுகிறது. சினிமா பாடலாசிரியர்களில் வைரமுத்துக்குப் பிறகு, கவிதைத் தொகுப்புகளும் நன்றாக அமைந்தது பழநி பாரதி, யுகபாரதி, முத்துக்குமாருக்கு மட்டுமே. கதை வடிவில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். இந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்குப் பதிலாக, இன்னும் சில காலம் அவர் இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்படத்தான் தோன்றுகிறது. மானசீகன் ஓவியங்கள்: ரம்யா ரோஷன்

அகிலன் என்னும் இலட்சிய எழுத்து

அகிலன் என்னும் இலட்சிய எழுத்து

தமிழ் படைப்பிலக்கிய உலகில் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர் எழுத்தாளர் அகிலன். 1922 இல் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் என்னும் ஊரில் பிறந்த அகிலாண்டம் என்ற அகிலன் 1938 இல் தனது முதல் கதையை எழுதினார். பள்ளியில் வெளிவந்த பத்திரிகையில் ‘அவன் ஏழை’ என்ற அந்தக் கதையை பதினாறு வயதுப் பையனான அகிலன் கொடுத்தபோது, அந்தக் கதையின் நடைச் சிறப்பு ஆசிரியருக்கு ஐயத்தை ஏற்படுத்த, இந்தக் கதையை எங்கு திருடினாய்?’ என்று கேட்டார். ‘ஐயா, என் கதையை நீங்கள் பிரசுரிக்க வேண்டாம். திருப்பித் தந்து விடுங்கள். நான் திருடனில்லை’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் அகிலன். அந்த ரோசத்திலேயே உண்மையை உணர்ந்த ஆசிரியர், அவரைத் தட்டிக் கொடுத்தார். 1944 இல் அவரது முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ வெளிவந்தது. ஆனால், அகிலன் தமிழ் வாசகர்களிடையே வாழ்நாள் முழுவதும் மங்காத முழு நிலவாகவே பிரகாசித்தார். பள்ளிப் பருவத்திலேயே வாலிபர் சங்கம் அமைத்து, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிகள் நிராகரிப்பு என்றெல்லாம் தேசிய இயக்கங்களில் செயல்பட்டிருக்கிறார். தேசிய இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த அகிலனுக்கு, ‘தேச விடுதலை மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும்’ என்று, அன்றிருந்த எல்லாப் படைப்பாளிகளைப் போலவே மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்யோ என்ற யதார்த்தம் அவரைச் சுட்டிருக்க வேண்டும். அவர் படைப்புகளில் இந்த ஏமாற்றத்தை நாம் அடையாளம் காண முடியும். மு.வ., கி.வா.ஜ. உள்ளிட்ட இலக்கிய ஜாம்பவான்களிடமும், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள் உள்ளிட்ட கலைஞர்களுடனும் நெருக்கமும் அன்பும் கொண்டிருந்தார். தீவிர கொள்கைப் பிடிப்பும் நேர்மையும் அவரது எழுத்தாளர் வாழ்வின் இலட்சியமாக இருந்தன. போட்டி மிகுந்த அன்றைய படைப்புலகில், அவர் தன் இலட்சியத்தில் என்றும் தளராமல் தன் படைப்புகளை வெளிக் கொணர்ந்தார். அகிலனுக்கென்று மிகப் பெரிய வாசகர் வட்டம் எப்போதும் இருந்தது. எல்லா வார, மாத இதழ்களிலும் அவரது சிறுகதைகளோ தொடர் கதைகளோ நிச்சயம் வந்த வண்ணம் இருக்கும். மொத்தம் 20 நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் சிறுவர் நூல்கள் என்று பன்முகப் படைப்பிலக்கியங்களிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். எளிய நடையுடன் கூடிய இவரது படைப்புகளில், சமூகப் பொறுப்புடன் கூடிய எழுத்து வேட்கை துலங்குவதைக் காண முடியும். சுவையான கதைக்களம், உயிர்த் துடிப்பான பாத்திரப் படைப்பு, அறம் சார்ந்த வாழ்க்கையின் மீதான பிடிப்பு என்று, அகிலனின் படைப்புகள் வாசகர் மனதைக் கொள்ளை கொண்டன. 1963 இல் அவரது சரித்திரப் புதினமான ‘வேங்கையின் மைந்தன்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற அகிலன், 1975 இல் அவரது ‘சித்திரப் பாவை’ நாவலுக்கு ஞான பீடம் விருதையும் வென்றார். அவரது பாவை விளக்கு, வாழ்வு எங்கே மற்றும் கயல் விழி ஆகிய படைப்புகள் திரைப்படங்களாக வந்தன. எங்கே போகிறோம், சிநேகிதி, பெண், கொம்புத் தேன் மற்றும் நெஞ்சின் அலைகள் உள்பட்ட மகத்தான நாவல்களைப் படைத்த அகிலன், தனக்கென்று மிகப் பெரிய வாசகர் உலகத்தைக் கொண்டிருந்தார். அகிலனின் படைப்புகள் சர்ச்சைகளையும் காட்டமான விமர்சனங்களையும் சந்தித்த தருணங்களும் உண்டு. அவற்றை மிகுந்த நேர்மையுடன் அணுகினார் அகிலன் என்ற பண்பாளர். மிகச் சிறந்த இலக்கிய மேதையும் ஒரு அரை நூற்றாண்டு கால இலக்கிய உலகின் இலட்சியம் மிக்க அடையாளமாகவும் (1944 – 1988) தமிழ் உலகில் சுடர் விட்ட அகிலனுக்கு இன்று நூற்றாண்டு தொடங்குகிறது. சுவடு இதழ், ஒரு தொடக்கமாக அகிலனின் நூற்றாண்டை, எழுத்தில் சமூகப் பொறுப்பின் அடையாளமாகப் போற்றிக் கொண்டாட வாசகர்களை அழைக்கிறது. வாழ்க அகிலன் புகழ்! கோமதி சங்கர்

அவள் பெயர் சக்தி

அவள் பெயர் சக்தி

மேடை நாடக விமர்சனம் திருமணமாகி ஏழு ஆண்டுகளான நிலையில், ஜனனி கார்த்திக் தம்பதியருக்குள் குழந்தைப் பராமரிப்பு, வீட்டு வேலைகளைப்  பகிர்தல், பரஸ்பர உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்றவற்றில் எழும் பிரச்சனைகளின் உச்சமாக, குழந்தை ஆர்த்தியை அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விடுகிறாள் ஜனனி. சராசரி அப்பாவாக பரமேஸ்வரன், கொஞ்சமே புரிந்த அம்மாவாக சாந்தி, அவர் காலத்திலேயே உறைந்து போனவளாக கொள்ளுப்பாட்டி, தனித்துவத்தில் அக்கறையும், ஊசலாட்டமும் ஒருங்கே கொண்ட தங்கையாக ஹரிணி ஆகியோர் ஜனனியின் ஊடாகவும், அவளுடன் சேர்ந்தும் வாழ்க்கையை அவரவர்  கோணத்தில் அலசுகிறார்கள்; வாதப் பிரதிவாதங்கள் நடக்கின்றன. என்னதான் முடிவு என்பதும், அந்த முடிவை எட்டுவதற்கான காரணங்களாக அவர்கள் எவற்றை நிறுவுகிறார்கள் என்பதும்தான், தாரிணி கோமல் எழுதி இயக்கியுள்ள, கோமல் தியேட்டரின் ‘அவள் பெயர் சக்தி’ நாடகத்தின் கதைக்கரு. நாடகாசிரியர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், நாடக இயக்குநர் என்கிற பன்முகத் திறமை கொண்ட, நினைவில் வாழும் கோமல் சுவாமிநாதன் அவர்களின் புதல்வி தாரிணி கோமல் இந்த நாடகத்தை மிகச் சிறப்புற எழுதி இயக்கியுள்ளார். கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் கோடை நாடக விழாவில் சிறந்த நாடகமாகப் பரிசு பெற்றது. சிறந்த கதை இயக்கத்திற்காகத்  தாரிணி கோமல் விருது பெற்றுள்ளார். நான்கு தலைமுறைப் பெண்களின் வளர்சிதை மாற்றங்களைப் பதிவு செய்ய முனைந்திருக்கிறார் தாரிணி. ஒரே குடும்பத்தில் உள்ள அந்த நான்கு பெண்களின் தலைமுறை முன்னேற்றத்தை வேறுபடுத்திக் காட்டுவதில் பெறும் வசதியை, அது ஒரே குடும்பமாக உள்ளதாலேயே, இயல்பாகப் பரிணமிக்கும் எந்த ஒரு மாற்றத்தையும் நிலைநிறுத்திக் கொள்வதில், உணர்வுபூர்வமான குறுக்கீடு இல்லாது நேர்மறையான வாய்ப்பைப் பெற இயலாமல் போவது ஏமாற்றமே! பல்வேறுபட்ட குடும்பங்களில் இருக்கும் நான்கு தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையைத் தெரிவு செய்திருந்தால், தலைமுறை மாற்றத்தைப் பதிவு செய்வது சற்று சவாலாக இருந்தாலும், எதார்த்தமாக இருந்திருக்கக் கூடும். கல்வி, பொருளாதார வகையில் சௌகரியமான ஒரு குடும்பச் சூழலில் நிகழக்கூடிய தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைவிட, இவை அல்லாத ஒரு குடும்பத்தில் கண்ணெதிரே காணும் (அவ்விதம் கவனிக்க விழைந்தால்)  குடும்பத்தின் பொருட்டான  ஒரு பெண்ணின் தியாகம், அர்ப்பணிப்பு அதனினும் உயர்வாகத் தெரிய, கொண்டாட வாய்ப்புண்டு. அந்தக் கொள்ளுப் பாட்டியிடம், அன்றாடம் நடக்கும் தன் சோகக் கதையைக் கூறும் அக்குடும்பப் பணிப்பெண் சுகுணாவின் கதையும், அப்படித்தானே! இந்த நான்கு தலைமுறைப் பெண்களின் தனிமனித சுதந்திரம், ஆசாபாசங்கள், ஆதங்கங்கள், பிரச்சனைகள், ஐயத்திற்கு அப்பாற்பட்ட பாதுகாப்பின்மை ஆகியவற்றை அலசும் அக்கறையில் கொஞ்சம், அவற்றுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் காரணமாக அமைந்துள்ளவர்கள், ஆண்கள்தான் என்பதை அழுத்தந்திருத்தமாகச் சுட்டிக் காட்டி இருக்கலாம். என்ன, கைத்தட்டு கிடைப்பதென்பது சற்றுச் சிரமம்தான்! குடும்பத்திற்காக, இட மாறுதலுக்கு உள்ளாவதைத் தவிர்க்கும் விதமாக, தனது பதவி உயர்வை அம்மா சாந்தி துறந்ததை வருத்தத்தோடு வெளிப்படுத்துவதும், விருப்ப ஓய்வு கொடுப்பதற்குத்  தடையாக இல்லாமல், தான் ‘அனுமதி’க்கவேதானே செய்தேன் என்று சங்கரன் கூறுவதும்,  அதேபோன்று, தன் வேலை, தனது பதவி உயர்வு, நிறுவனத்தில் தமக்குள்ள இருப்பு என்று, சுயநலமாக தன்னைப் பற்றியே சிந்திக்கும் கார்த்திக் பேசுவதும் கவனிக்கத்தக்கவை. கதைக்கருவை ஒட்டிய வசனங்கள் கூர்மையானவை. குறிப்பாக, ஜனனி, தினேஷ், அர்ஜுன், ஹரிணி பேசும், தாரிணி கோமலின் வசனங்கள் சிந்தனைக்கு உரியவை!  ஜனனியாக வரும் கிருத்திகா சுர்ஜித், ஹரிணியாக வரும் மயூரா பாலகுருநாதன் இருவரும் நாட்டியக் கலைஞர்கள் என்பதால், மெருகேறிய நடிப்பைக் காண முடிகிறது. அறிமுக நடிப்பிலேயே அசத்திய பேபி இயல், உஷா ரவிச்சந்திரன் (கொள்ளுப்பாட்டி), அனுராதா கண்ணன் (சாந்தி), சித்தார்த் (கார்த்திக்), பரமேஸ்வரன் ஹரிஹரன் (சங்கரன்), சாய் ஸ்ரீனி (அர்ஜுன்), ஸ்ரீகிருஷ்ணன் (தினேஷ்), சுதா, சுகுணா (வீட்டுப் பணிப்பெண்கள்) தத்தம் பாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி, சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவர்களில் சிலர் விருதுகளையும் பெற்றுள்ளனர் என்பது சிறப்பு. ஜனனி எதிர்கொள்ளும் பிரச்சனை வேண்டுமானால், விவாகரத்து வரையில் போவதற்கான கடுமையான பிரச்சனையாக, அந்தக் குடும்பத்திற்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக விவாகரத்து என்பதே படுபாதகமான ஒன்று என்று நிறுவுவதும், இழிவும், அவமரியாதையும், பாலியல் வன்முறையும் நிகழ்த்தும், நிகழ்த்த முயற்சிக்கும் ஆண்களைப் பற்றி அணுவளவும் கண்டிக்காமல், பெண்களை மட்டும் கட்டுப்படுத்த முனைவதும், ஆங்காங்கு வாரி இறைக்கும் முற்போக்குக் கருத்துகளை இரக்கமே இல்லாமல் மீண்டும் வாரி எடுத்து ஒரு மூலையில் கொட்டுவதற்கு ஒப்பாகி விடுவதைத் தவிர்த்திருக்கலாம். நல்லவேளை, அக்குடும்பத்தினர் கலாச்சாரக் காவலர்களாகவும் அவதாரமெடுத்து, ஜனனி ஹரிணியைப் பார்த்து, ‘இதென்ன கர்மமோ, ஆம்பள பொம்பளங்கற வித்தியாசமில்லாம, புருஷா மத்தியில இப்படித்தான் ஜீன்ஸ் பேண்ட், டி-ஷர்ட்டை போட்டுண்டு’ என்று சொல்லாமல் விட்டதும், அமெரிக்கா செல்வதற்கு கார்த்திக் பின்னர் ‘அனுமதி’ தந்ததும், ‘ கிரகாச்சாரம், கடல் தாண்டறதா? இதெல்லாம் பாத்துண்டு இன்னும் நான் உசுரோட இருக்கனுமாடா சங்கரா!’ என்று அரற்றாமல் விட்டதும் கொஞ்சம் ஆறுதல்தான்! எந்த ஒரு நிறுவனத்திலும், தகுதி இல்லாமல் பணி நியமனம், பதவி உயர்வு அளிப்பதில்லை. குடும்பச் சூழல் காரணமாகவே, பதவி உயர்வுக்கு உரிய தேர்வை எழுதாத காரணத்தினால்தான், தமக்கு அதிகாரியாகப் பதவி உயர்வு கிடைக்கவில்லை, எழுத்தராகவே விருப்ப ஓய்வு பெற வேண்டியதாகிவிட்டது என்று ஒப்புக் கொண்டு கூறும் சாந்தி, இன்று தன்னைவிடப் பணி நிலையில்  இளையவர்களும்  தகுதியே இல்லாதவர்களும் (!) உயர் அதிகாரிகளாக உள்ளதாக வெறுப்பை உமிழ்வது போன்று பேசுவது அபத்தம் அல்லவா! பத்மா ஸ்டேஜ் கண்ணனின் நாடக அரங்கம் அருமை. தங்கபாண்டியன் மற்றும் சிவா, ராஜேந்திரன், செல்வனின் மேடை நிர்வாகம் சிறப்பு. மைலை பாபுவின் ஒளியும், விருது பெற்ற பெரம்பூர் குமாரின் ஒப்பனையும்,  முத்தாய்ப்பாக  குஹபிரசாத்தின் பின்னணி இசையும், ஸ்ரீஜித்தின் ஒலிக் கோர்ப்பும், பாடலைப் பாடிய அனந்துவின் குரலும் நாடகத்தின் பின்புலத்தில் பக்கபலமாக அமைந்துள்ளது சிறப்பு! சில குறைகள் இருந்தாலும், போதிய அளவு ஆழ்ந்து இல்லாது மேம்போக்காகத்தான் என்றாலும், முன் முயற்சியாக பெண்களின் தலைமுறை இடையேயான பல்வேறுபட்ட மனநிலைகளை, பிரச்சனைகளை முன்னெடுத்துக் கதைக் கருவாக்கி, சிறந்த கலைஞர்களைக் கொண்டு, திறம்பட ‘அவள் பெயர் சக்தி’ என்கிற நாடகமாக இயக்கி வழங்கியுள்ள தாரிணி கோமல் சந்தேகமின்றி, பாராட்டுக்குரியவரே! மது ராஜேந்திரன்