நீலகண்ட பிரம்மச்சாரி – 6
காட்சி 6 காலம் : 1908ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒருநாள்இடம் : தூத்துக்குடியில் வ.உ.சி.யின் வீடுபாத்திரங்கள் : வ.உ.சி., நீலகண்டர், பத்மநாப அய்யங்கார் மற்றும் ஓட்டப்பிடாரம் மாடசாமி(வ.உ.சி.யும் பத்மநாப அய்யங்காரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீலகண்டர் கேட்டுக்கொண்டிருக்கிறார்) பத்மநாப அய்யங்கார் : சூரத் காங்கிரஸ் நல்லபடியா முடிஞ்சதோல்லியோ.. தூத்துக்குடியில் புதிய கட்சி வேலையும் பிரமாதமா நடந்துண்டிருக்கு. நீலகண்டர் : இல்லையா பின்னே.. திலகர் கட்சிக்குத் தமிழ்நாட்டில் பிள்ளைவாள்தான தலைவர்?! அப்புறம் தூத்துக்குடியில் உற்சாகத்திற்குக் கேக்கணுமா என்ன? பத்மநாப அய்யங்கார் : ஆஹா! பிள்ளைவாள்.. இவர் யார்..? இந்தப் போடு போடுறாரே! வ.உ.சி. : அய்யங்கார்.. இவர் பெயர் நீலகண்டன். நம்ம வேலைக்கு உதவி செய்ய பாரதியார் அனுப்பி வச்சிருக்கார். தீவிர தேச பக்தர். பத்மநாப அய்யங்கார் : பேஷ்.. பேஷ்..! (இளைஞர் ஒருவர் கும்பிட்டுக்கொண்டே வருகிறார். கண்களில் பதட்டம் தெரிகிறது) வ.உ.சி. : வா, மாடசாமி.. என்ன ஆச்சு? ஏன் பதட்டமா வர்ற..? மாடசாமி : வணக்கம் வக்கீலய்யா.. வணக்கம் சாமி.. நேத்து மில் தொழிலாளர் கூட்டம் நடந்துச்சுல்லங்க ஐயா.. அதுக்கு வந்த தொழிலாளிங்கள எல்லாம் மிரட்டிருக்காங்க. ‘சிதம்பரம் பிள்ளை ராஜ துரோகம் பேசுறவரு.. அவரு கூட்டத்துக்குப் போனா வேலை கிடையாது’ன்னு மிரட்டிருக்காங்க ஐயா. பத்மநாப அய்யங்கார் : அதுக்கு ஏன் பதட்டம்? இது எதிர்பார்த்ததுதான..?(மௌனமாக இருக்கும் வ.உ.சி.யைப் பார்த்து) பிள்ளைவாள்.. என்ன யோசனை.? வ.உ.சி. : அதிகாரிங்க என்ன மிரட்டுறது..? போராட்டம் தீவிரமாகும்போது, வேலைக்கு வரமாட்டேன்னு தொழிலாளி அதிகாரிகளை மிரட்டுற நாளும் வரும். அந்தச் சூழ்நிலையில், தொழிலாளர்களும் அவங்க குடும்பமும் வயிறு காயாம இருக்க நாம ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். பத்மநாப அய்யங்கார் : அவ்வளவு தூரம் போகுமா..? வ.உ.சி. : அதுக்கும் மேலேயே நடக்கும். இந்தத் தொழிலாளிங்களோட கஷ்டங்களை நாம இப்போ வெளிப்படுத்துறோம். விடிஞ்சு போனா அடைஞ்சு வாராங்க; நேரக் கட்டுப்பாடில்லாத வேலைக்கு ரொம்ப மோசமான கூலி. வார ஓய்வு கிடையாது; விடுப்பு எடுக்க முடியாது. இதெல்லாத்தையும் வாங்கணுமின்னா தொழிலாளிங்க ஒற்றுமையாலும் வேலையை நிறுத்தியும்தான் முடியும். நீலகண்டர் (குறுக்கிட்டு) : பிள்ளைவாள்.. நாம தேச சேவையில் மட்டும் கவனம் செலுத்தலாமே..வ.உ.சி. : (மெல்லச் சிரித்து) தேச சேவைன்னா என்ன..? தேச பக்தின்னா என்ன..?மக்களோட பிரச்சினையைப் பேசுறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமன தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனைக்கிறீரா நீலகண்டர்..? இந்தப் பாடம் யாரு சொன்னது? நீலகண்டன் : மன்னிக்கணும்.. நம்மளோட ஆற்றல் வீணாப் போகுதேன்னுதான் கவலை.. எவ்வளவு நாள்தான் வெள்ளைக்காரங்க அக்கிரமத்தைப் பொறுத்துக்கறது? வெள்ளை அதிகாரிகள இன்னமும் ஏன் விட்டு வைக்கணும்..? வ.உ.சி. : என்ன செய்யலாம்? நாம நாலு பேரு சேர்ந்து வெள்ளைக்கார துரைகளைக் கொன்னுட்டா சுதந்திரம் வந்துருமா..? ஒரு துரை போனா இன்னொருத்தன் வருவான். நாம் மக்களைத் திரட்டிப் போராடித்தான் ஜெயிக்கணும். உமக்கு தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால்ஸ் மாகாணத்துல நடந்த சேதி தெரியுமோ..? பத்மநாப அய்யங்கார் : அது ஒரு பாடம்.. விவரமாச் சொல்லுங்க பிள்ளைவாள். வ.உ.சி. : தென்னாப்பிரிக்காவுல வாழுற ஆசியா மக்கள் எல்லாரையும் பதிவு செய்யச் சொல்ற சட்டம்.. அதன்மூலம் ஆசிய மக்களைக் கட்டுப்படுத்தும் சட்டம்.. இதை ஆசிய மக்கள், குறிப்பா நம்ம இந்தியர்கள் எதிர்த்து ரெண்டு வருசமா போராடினாங்க. அதிலேயும் தமிழர்கள்தான் முன்னால நின்னாங்க. இப்போ போன மாசம்தான் தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு போராட்டத்துக்குப் பணிஞ்சு, ஒரு சமாதான பேரத்திற்கு வந்திருக்கிறது. இந்த வெற்றி அந்த மக்களை இன்னும் உற்சாகப்படுத்தும். இன்னும் ஒன்னா இணைக்கும். இந்த உலகத்துல அடிமைத்தனம் எந்த வடிவத்தில் இருந்தாலும் மக்களைத் திரட்டித்தான் எதிர்த்துப் போராடணும். பத்மநாப அய்யங்கார் : இந்த வேலையைச் செய்ததும் நம்ம பிள்ளைவாள்போல இளம் வக்கீல் ஒருத்தர்தான். அவரு பேரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. வ.உ.சி. : சரி, இன்னைக்கு சாயுங்காலம் கடற்கரையில் கோரல் மில் தொழிலாளிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கேன்.. எல்லாரும் வந்துருங்க. (நீலகண்டர் மாடசாமியின் தோள்களில் கை போட்டுக்கொண்டு வெளியில் வருகிறார்) நீலகண்டர் : என்ன மாடசாமி.. பிள்ளைவாள் பேச்சுல அப்படி பிரமிச்சுப் போயிட்டீர் போல.. இப்படிக் கூடறதும் பேசுறதும் எத்தனை நாளைக்கு..? ஒரே நாள்ல நாடு முழுவதும் இருக்கிற வெள்ளைக்காரங்கள கொன்னு போடணும்.. யுத்தம் பண்ணணும். மாடசாமி.. வாய் யுத்தமில்ல. ஆய்தம் தாங்கி, துப்பாக்கி ஏந்தி யுத்தம் பண்ணணும்.. மாடசாமி : இதெல்லாம் நடக்குமா..? ஆயுதம் வாங்கணுமே..! பணம் வேணுமே..! பெரிய ஆட்கள் துணை வேணுமே..! அப்புறம், துப்பாக்கி சுடத் தெரியணுமே..! நீலகண்டன் : எல்லாம் நடக்கும் மாடசாமி.. பரோடா மகராஜா போன்ற சுதேசி ராஜாக்களெல்லாம் சேர்ந்து ஒரு திட்டம் போட்டுருக்காங்க.. விவரமாச் சொல்றேன் வாரும்.. (ஒளி மங்கி மேடை இருள்கிறது.. ஒளி விரியும்போது ஓம்கார் சுவாமிகளின் அறையாக இருக்கிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இந்த மாடசாமி பெரிய சாகசக்காரர் என்கிறார்களே.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம், ரொம்பக் கெட்டிக்காரர், தீரர். ஓட்டப்பிடாரம் இவரது ஊர். சிதம்பரம் பிள்ளையோட தீவிர விசுவாசி. ஆஷ் கொலை வழக்கில் இவர் பெயர் அடிபட்டாலும் கடைசிவரை இவர் பிடிபடவே இல்லை. இவரை என் கட்சிக்குக் கொண்டுவர எத்தனை பேசியிருப்பேன்..? (சிறிய சிந்தனைக்குப் பிறகு)ஆஷ் கொலைக்குப் பின் அவர் தலை மறைவானதால் அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துவிட்டது. அவரது குடும்பம் நிராதரவானது. பாவம்.. இப்படி எத்தனைப் பேரின் கண்ணீரில் உருவானது இந்த சுதந்திர தேசம்.. (கண் கலங்குகிறார்) சீடர் : (உள்ளே வந்து) சுவாமி ஆகாரம் தயார் ஆகிவிட்டது. ஓம்கார் சுவாமிகள் : வாருங்கள் சாப்பிடலாம் (திரை விழுகிறது) (நாளை பார்க்கலாம்)