சங்கங்களைக் கலைத்துவிடுங்கள் – ஆசிரியர்கள் குமுறல்

சங்கங்களைக் கலைத்துவிடுங்கள் – ஆசிரியர்கள் குமுறல்

உள்ளாட்சித் தேர்தல் வருவதை ஒட்டி அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, தேர்தல் பணிகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. இந்தச் சூழலில், உடல் நலம் குன்றி மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணி ஆணை அனுப்பப்பட்டுள்ளது. உடல் நலம் குன்றி இருப்பவர்களை தேர்தல் பணியில் ஈடுபடக் கூறி கட்டாயப் படுத்தப்படுவதாக ஆசிரியர்கள் சிலர் வருந்தினார்கள். இந்தச் சிக்கல் குறித்து ஆசிரியர்கள் சிலரிடம் பேசியபோது அவர்கள் தெரிவித்த சில செய்திகள் அதிர்ச்சி அளிப்பாவையாக இருந்தன. அண்மையில் விபத்துக்குள்ளாகி, அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை எடுத்து வரும் அரசுப்பள்ளி ஆசிரியர் மருத்துவச் சான்று பெற்று பள்ளியில் வழங்கி மருத்துவ விடுப்பில் இருக்கிறார். தொலைபேசியில் அவரை அழைத்து, “உங்களுக்கு தேர்தல் பணி ஆணை வந்துள்ளது. என்னைக் கையெழுத்திட்டுப் பெற்றுக் கொள்ளும்படி தலைமை ஆசிரியர் கூறுகிறார். உங்களிடம் கேட்ட பிறகு கையெழுத்திடலாம் என்று அழைத்தேன்” என உடன் பணியாற்றும் ஆசிரியர் சொல்ல, மருத்துவ விடுப்பில் இருக்கும் ஆசிரியரோ, எனது உடல் நிலை தேர்தல் பணி செய்யும் நிலையில் இல்லை.  ஆகவே நீங்கள் கையெழுத்திட வேண்டாம்” எனக் கூறி விட்டார். அரை மணி நேரம் கழித்து மீண்டும் அலுவலக ஊழியர் வழியாக அலைபேசி அழைப்பு. “மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புகைச் சான்று அளிக்க வேண்டும். எப்போது வந்து தேர்தல் ஆணையைப் பெற்றுக் கொள்கிறீர்கள்?” எனக் கேட்கிறார்கள். தலைமை ஆசிரியரை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு, “நான் மருத்துவமனையில் இருக்கிறேன். ஏற்கனவே தங்களிடம் மருத்துவ விடுப்பு தந்துள்ளேன். நீங்கள்தான் இதை மாவட்டக் கல்வி அலுவலருக்குத் தெரிவிக்க வேண்டும்” என்கிறார் அந்த ஆசிரியர். ஆனால், தலைமை ஆசிரியர் உடனடியாக மறுத்து, “இதில் நானோ, மாவட்டக் கல்வி அலுவலரோ எதுவும் செய்வதற்கில்லை. வேண்டுமானால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று ஆணையை ரத்து செய்து கொள்ளுங்கள்” என்கிறார்.  அடுத்து மாவட்டக் கல்வி அலுவலரைத் தொடர்பு கொண்டு சூழலை விளக்க, அவரும்  அதே பதிலைக் கூறுகிறார். “இந்த ஆணைக்கும் எனக்கும் சம்மந்தமில்லை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நேரடியாக வந்துள்ளது. நீங்களே சென்று உங்கள் மருத்துவச் சான்றை இணைத்து, கடிதம் எழுதித் தெரிவித்து ஆணையை ரத்து செய்து கொள்ள வேண்டும்” என்கிறார். மீண்டும் மறுநாள் காலை பள்ளியிலிருந்து விடாமல் அலைபேசி அழைப்பு. “இன்று மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புகைச் சீட்டை ஒப்படைத்தாக வேண்டும், நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்” என்று வற்புறுத்த, அந்த ஆசிரியரும் வேறு வழியின்றி, “ஏற்கனவே இருக்கும் உடல் உபாதைகளுடன் உளவியல் ரீதியான சிக்கலையும் இவர்கள் உருவாக்குகிறார்களே” என வருந்தியதுடன், மருத்துவமனையிலிருந்து பள்ளிக்குச் சென்று அன்றைய தேதியில் கையெழுத்திட்டு ஆணையைப் பெற்றுக்கொண்டு மீண்டும் திரும்பி மருத்துவமனை சென்று சிகிச்சையைத் தொடருகிறார்.  ஒப்புகைச் சீட்டில் அவர் கையெழுத்திட்ட தேதி ஏற்கனவே மருத்துவ விடுப்பில் இருக்கும் தேதி என்ற முரண்பாடு குறித்துக்கூட எண்ணாமல், தேர்தல் ஆணையைப் பெற வற்புறுத்தித் தினித்துள்ளார்கள் மாவட்டக் கல்வி அலுவலரும் பள்ளித் தலைமை ஆசிரியரும். “ஒப்புகைச்சீட்டு மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, விடுப்பில் இருக்கும் ஆசிரியர்களின் தேர்தல் பணி ஆணையை நீக்குவதற்கும் பள்ளித் தலைமை ஆசிரியரும் மாவட்டக் கல்வி அலுவலரும்தானே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்?” என்று கேள்வி எழுப்புகிறார் அந்த ஆசிரியர். குழந்தைப் பேறுக்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு மருத்துவ விடுப்பில் இருக்கும் ஒரு பெண் ஆசிரியர், இவ்வாறான தொடர் வற்புறுத்தல் காரணமாக அவரது கணவரை பள்ளிக்கு அனுப்பி ஆணையைப் பெற்றுச் சென்றிருக்கிறார்.  தேர்தல் பணிக்கான ஆணைகள்  அனுப்புவதற்கு முன்பு, ஒவ்வொரு பள்ளியிலும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் விபரங்களை மாவட்டக் கல்வி அலுவலகம் வழியாக கேட்டுப் பெறுவார்கள். அப்படி ஒரு பள்ளியில், பெண் ஆசிரியர் உடல் நலமின்மையால் மருத்துவ விடுப்பில் இருந்தார். பள்ளிக்கு வந்தோ அல்லது வேறு யாரையாவது அனுப்பியோ அந்தப் படிவத்தை நிரப்பித் தர வேண்டும் என்று அந்த ஆசிரியரை வரவழைத்து படிவத்தை வற்புறுத்தி வாங்கியிருக்கிறார் ஒரு தலைமை ஆசிரியர். கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்காக உடலெங்கும் மயிர் நீக்கிக் கொண்டிருக்கும்போது தலைமை ஆசிரியரிடமிருந்து போன் வருகிறது. “ஆர்டரை வாங்குங்கள், இல்லையெனில் உங்கள் கணவரை கலெக்டர் அலுவலகம் போகச்சொல்லுங்கள்” என்கிறார் தலைமை ஆசிரியர். ‘ஆபரேசன் தியேட்டர் உள்ளே போகும்வரை போனில் பேசிக்கொண்டே போனேன்’ என்கிறார் ஒரு பெண் ஆசிரியர்.  “எங்கள் பள்ளியின் ஆங்கில ஆசிரியரின் உண்மையான நிலைமை இது. ஆசிரியர் தவறிக் கீழே  விழுந்து தண்டுவடத்தில் பிரச்சினையின் காரணமாக ஆபரேசன் செய்து ஒரு வாரம்தான் ஆகிறது. மருத்துவர் ஆலோசனையின்படி அவர் அதிக நேரம் உட்காரவே கூடாது. ஆனால், கலெக்டர் உத்தரவு, தற்போது எதுவும் செய்ய முடியாது. பயிற்சி நாளில் கடிதம் எழுதி கேன்சல் செய்து விடுங்கள் எனக் கல்வித்துறையில் கூறிவிட்டனர்” என்று உடன் பணிபுரியும் ஆசிரியருக்காக வருந்துகிறார் மற்றொரு ஆசிரியர். இவ்வாறாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு விதமான சோகக் கதைகள். தலைமை ஆசிரியர்களும், உயர் அதிகாரிகள் பலரும் எங்களைப் போல ஆசிரியர்களாக இருந்திருப்பார்கள், சிரமங்களை எதிர்கொண்டிருப்பார்கள்தானே? ஆனால், உயர் பொறுப்புக்கு வந்ததும் இவ்வாறு உண்மை நிலையைப் புரிந்துகொள்ளும் அடிப்படை மனித நேயம்கூட இல்லாமல் நடந்துகொள்கிறார்கள் எனக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள், பல நிலைகளில் பல்வேறு துன்பங்களைச் சந்திக்கிறார்கள், துன்பத்துக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ஒரு அரசு ஊழியர் அவருடைய பிரச்சனைகளை, தனது உடனடி உயர் அலுவலரிடம் (Immediate Superior) தான் அதற்கான சான்றுகளுடன் முறையிட முடியும். தனக்குக் கீழே பணியாற்றும் ஊழியரின் உடல் மற்றும் மன நலனில் சிறிதும் அக்கறையின்றி, எதற்கெடுத்தாலும் “இது தேர்தல் அவசரம், இதற்கு நான் பொறுப்பல்ல” என்று தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும்  தலைமைப் பொறுப்புள்ள அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளால் கீழ் மட்ட ஊழியர்கள் மிகுந்த மன நெருக்கடிக்கு உள்ளாவது நிகழ்கிறது.  ஊழியரது உடல்நலப் பிரச்சனையை உறுதி செய்து அரசு மருத்துவர்கள் சான்றளித்தாலும்கூட, அதையும் நம்பாமல் அல்லது தங்கள் பொறுப்பை உணராமல் விலகிச் செல்கிறார்கள். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மிகச் சில ஆசிரியர்களே இவ்வாறான உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்பவர்களாக இருப்பார்கள். அவர்களுக்காக மாற்று ஏற்பாடுகளைச் செய்யக்கூடிய நிலையில் கூடவா அதிகாரிகள் இல்லை? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகிறார்கள். வாக்குச் சாவடி அலுவலராகவும் பொறுப்பு வகிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள், தற்போது தேர்தல் பணிக்கான ஆணையையும் பெற்றுள்ளனர்.  ஏற்கனவே 6-8 வகுப்புப் பாடங்களை இணைய வழியிலும் 9 , 10 வகுப்புகளுக்கு நேரடியாகவும் கற்பித்து வரும் ஆசிரியர்கள், தற்போது புதியதாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள கருடா  அலைபேசி செயலியையும் பதிவிறக்கம் செய்து, களத்தில் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் BLO எனப்படும் வாக்குச்சாவடி அலுவலர்கள், எல்லோருக்கும் ஸ்மார்ட் போன் அவசியமாக இருப்பதில்லை. ஆனாலும் அந்தப் பணிக்காகவே வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. போன் பழுதானாலோ அல்லது பழைய மாடல் போன் வைத்திருப்பவர்கள் ஸ்டோரேஜ் பிரச்சினை காரணமாகவோ, பொருளாதாரச் சிக்கல்கள் இருந்தாலும் உடனடியாக புதிய ஸ்மார்ட் போன் வாங்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகிறோம். சில நேரங்களில் வழக்கமான டேட்டா பேக் தீர்ந்துவிட்டால், கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கனவே இணைய வழிக் கல்விக்காகவும் சொந்தப் பயன்பாட்டுக்கான போனைப் பயன்படுத்தி வருகிறோம். Activities, assignments என ஏராளமான இடவசதி போனில் தேவைப்படுகிறது. தேர்தல் பணிக்காகவும் அதே போன் பயன்படுத்தும்போது சில நேரங்களில் முற்றாக செயலிழந்துவிடுகிறது.   எனவே, இதைக் கருத்தில்கொண்டு தேர்தல் பணிகளுக்கு மட்டும் பயன்படுத்தும் வகையிலான கருவிகளை வழங்கினால், வேலையும் எளிதாகும்; தேர்தல் தொடர்பான தகவல்களும் பாதுகாப்பாகவும் அழிந்து விடாமலும் இருக்கும் என்ற கருத்தையும் ஒரு சில ஆசிரியர்கள் முன் வைக்கிறார்கள். “தலைமை ஆசிரியர்களும் தட்டிக் கழிக்கின்றனர், கல்வி அலுவலர்களும் பொறுப்பிலிருந்து நழுவுகின்றனர். இந்தச் சூழலில் ஆசிரியர்கள் பக்கம் நிற்க வேண்டிய ஆசிரியர் சங்கங்கள் என்ன செய்கின்றன? என்று கேட்டோம். “ஆசிரியர் நலன் சார்ந்து சங்கங்கள் செயல்பட்ட காலம் போய் பல ஆண்டுகள் ஆயிற்று” என ஒரே குரலில் பதிலளிக்கிறார்கள் ஆசிரியர்கள். “ஏற்கனவே பள்ளிகள், மாணவர்கள் நலன் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையையும் ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுப்பதில்லை. ஆசிரியர்கள் பிரச்சினைகளைக் கூட கண்டுகொள்ளாத இந்தச் சங்கங்களால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. ஆசிரியர் சங்கங்கள் இருப்பதை விட அவற்றைக் கலைத்து விடலாம்” என்கின்றனர். தேர்வு நிலை (Selection grade) வாங்க 2 1/2 ஆண்டு காத்திருப்பு, 10, 12 -ஆம் வகுப்புகளது  சான்றிதழ்களுக்கு உண்மைத்தன்மை விண்ணப்பித்து இரண்டரை  ஆண்டுகள்  காத்திருப்பு என்பதோடு இன்னும் பலப்பல சிரமங்கள் என்று புலம்புகின்றனர் ஆசிரியர்கள். அலுவலகப் பணியான, பணிப் பதிவேடுகளை  (SR) scan & upload செய்யும் பணியும் தற்போது ஆசிரியர்கள் தலையில் விழுந்துள்ளது என்கின்றனர். ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் சூழலில், வாக்காளர் கணக்கெடுப்புப் பணி உள்ளிட்ட, தொடர்ச்சியான தேர்தல் ஆணையப் பணிகளுக்காக தனியே ஆட்களைத் தேர்வு செய்து அவர்களைப் பயிற்றுவித்து பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் புதிய வேலை வாய்ப்பும் உருவாகும். தேர்தல் காலத்தில் கூடுதலாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் இதர துறையிலிருந்து பணியமர்த்திக் கொள்ளலாம். முக்கியமாக, உண்மையாகவே உடல் நலப் பிரச்சனைகள் காரணமாக சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் மருத்துவர் ஆலோசனைப்படி தேர்தல் பணியாற்ற இயலாதவர்களுக்கு இப்பணியிலிருந்து விலக்கு அளிக்கத் தேவையான நடைமுறைகளை இந்த அரசு முன்னெடுக்க வேண்டியது அவசியம். மாறுமா ஆசிரியர்களின் அவல நிலை? படங்கள்: இணையத்திலிருந்து

ஹோம்

ஹோம்

திரை விமர்சனம் கால் வலி இருந்தாலும் பொருட்படுத்தாமல்,  வழமையான வேலைகளைச் செய்யும் குட்டியம்மா (மஞ்சு பிள்ளை), உழைத்துத் தேய்ந்த நிலையில், அவ்வப்போது நினைவுகளும் தப்பும் பெரியவர் அப்பச்சன் (கயினிகரி தங்கராஜ்), டீ குடித்த கப்புகளைக்கூட கீழே திருப்பி எடுத்துச் செல்லாமல், சுழலும் மின் விசிறியை நிறுத்தக்கூட கீழே இருக்கும் அம்மாவை, மாடி அறைக்கு அழைக்கும் இளைஞன் சார்லஸ் ஆலிவர் (நேஸ்லன் கே கபூர்), அறியாமல் சிறுநீர் கழித்துவிடும் அப்பாவை நொந்து கொள்வதும் உடன் அப்படி நொந்துகொண்ட தன்னையே அதற்கு நொந்து கொள்வதும், மாடித் தோட்டத்தை மட்டில்லா மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொள்வதுமான குடும்பத் தலைவன் ஆலிவர் ட்விஸ்ட் (இந்ரன்ஸ்), அந்த இல்லத்தில் இருந்து 220 கிலோமீட்டர் தள்ளி, தனது அடுத்த படத்திற்கான ஆயத்த வேலையில் மூழ்கி இருக்கும் திருமணமாகாத இளம் இயக்குனர் அந்தோனி டிவிஸ்ட் (ஸ்ரீநாத் பாஷி), இவர்களுக்குள் நிலவும் உறவை, உரிமையை, உயர்வை, உரசலை ஆழமாகவும் அதே அளவுக்கு மெதுவாகவும் சித்தரிக்கும் மலையாள மொழித் திரைப்படம்தான், ரோஜின் தாமஸ் எழுதி இயக்கி, அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஹோம்’. “பாரு, இந்த இடம் எவ்ளோ அழுக்கா இருக்கு? இது உன்னோட அறை அல்ல, மனசு. ஒரு வேலை செய். இங்கிருந்துட்டு கிளைமாக்ஸ் எழுதாதே. உன்னோட முதல் படத்தோட கதைய எங்கிருந்து  எழுதின?” புரொடியூசர் பேபி கேட்க, பதிலாக செல்போன் அழைத்து அந்தோணி எடுத்துப் பார்க்க,  படத்தின் தலைப்பு வருவது நயம். அந்தோணி வீட்டுக்கு வந்தும் அப்பாவின் நேசம் அவன்மீது படராமல், அவரின் நெருக்கம் தொடராமல், அவ்வப்போது அவன் ஸ்மார்ட்போனும்  அதில் வரும் காதலி பிரியாவும் இடையூறாகவே இருக்கின்றனர். இது, “வழக்கமா வீட்ல இருக்கும்போது அவன் படுக்கப்போகும் முன்னே நம்மள முத்தமிட்டு குட் நைட் சொல்வான்” என்று குட்டியம்மா ஆலிவரிடம் அன்று இல்லாததைக் கூறி வருந்துவதில் பளிச்சிடும். அந்தோணி படித்துக் கொண்டிருந்த ஜோசப் லோபஸின் வாழ்க்கை வரலாறு பற்றி விசாரித்த ஆலிவர், தாமும் ஏன் இப்படி எழுத முடியாது? என்று கேட்க, “வாழ்க்கையில் அசாதாரணமானவை நிகழணும். அதுக்கப்புறம்தான் ஒரு புத்தகம் எழுத முடியும். இந்தப் பக்கத்திலே அவரோட சாதனைகள பாருங்க. உங்க சுயசரிதை அரைப் பக்கம்கூட வராது. ‘நான், ஆலிவர் ட்விஸ்ட்’ ன்னு அதுக்கு ‘பளிச்’சுன்னு பேரு தரலாம். நான் கடை நடத்தனேன், காலத்துக்கு ஏத்த மாதிரி மாற முடியாமல் அதை மூடிட்டேன். இப்போ மாடித் தோட்டத்தப் பராமரிச்சுகிட்டு சும்மாவே உக்காந்திருக்கேன். வேற எழுத என்ன இருக்கு? இது அரைப் பக்கம்கூட வராது”. அந்தோணியின் இந்த வார்த்தைகள் ஆலிவர் ட்விஸ்ட்டிடம் பல ட்விஸ்ட்களை ஏற்படுத்தி விடுவதை விவரிக்கும் சுவாரசியம்தான், ஹோம் படத்தின் மீதிக் கதை. வருங்கால மாமனாருக்குதான் மகன் ஸ்மார்ட் போன் வாங்கவிருக்கிறான் என்றறிந்து, தானே குறைந்த விலையில் ஒரு போன் வாங்கி வந்து இருக்க, எதிர்பாராதவிதமாக மகன் அந்தோணி அவருக்காக ஒரு ஸ்மார்ட் போன் வாங்கித் தந்ததை அறிந்து, ஆலிவர் மகிழும் போதே பாக்கெட்டில் இருந்த செல்போன் ஒலித்ததை அடுத்து, அவர் சங்கடத்தில் நெளிவதும் சின்ன மகன் சார்லஸ்சிடம்  செல்போனைப் பயன்படுத்துவது குறித்துப் பாடம் எடுத்துக் கொள்வதும் ஜோசப் லோபசைப் படமெடுக்க இயலாமல் தவிப்பதும் நடிகர் விஷாலிடம் சகஜமாகப் பழகிப் பேசுவதிலும் உளவியல் மருத்துவரிடம் விவாதிப்பதிலும் அங்கு டாக்டர் அவரிடம் கேட்டது போல சார்லஸிடம் கேட்டு, எதிர்பாராதவிதமாகப் பதில் வந்து விடுவதிலும்  ‘எல்லாம் போனில் இருக்கிறது’ என்று சொல்லும் ஜோசப்பிடம், ‘போனில் இருக்கலாம். ஆனா, மனசுல இல்ல’ என்று சொல்வதிலும் ஆலிவராக இந்ரன்ஸ் மிளிர்கிறார். பாசத்தைக் காட்டிட முனைவதிலும் மாறிவரும் தொழில்நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதில் ஏற்படும் பரவசத்தையும் ஏக்கத்தையும் பரிதவிப்பையும் ஒருசேர அற்புதமாகப் பிரதிபலிக்கவும் செய்கிறார். ஒரு பக்கம் தொழில், இன்னொரு பக்கம் காதல் என்று ஆதங்கமும் அவதியுமாக ஸ்ரீநாத் பாஷியின் நடிப்பும் அருமை. மஞ்சு பிள்ளை, நேசலன் கே கபூர், கயினிகரி தங்கராஜ், தீபா தாமஸ் (பிரிய ஜோசப்), விஜய் பாபு (டாக்டர். பிராங்கிளின்), ஜானி அந்தோனி (சூரியன்), மணியன்பில்லா ராஜு (பேபி), அனுப் மேனன் (நடிகர் விஷால்), கே.பி.ஏ.சி. லலிதா (அன்னம்மா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். ராகுல் சுப்பிரமணியம் இசையின் இனிமையும் நீல் டி குன்ஹாவின் கண்கவர் ஒளிப்பதிவும் படத்தின் மெதுவான நகர்வையும் பொருட்படுத்தாமல் செய்துவிடுகின்றன. படத்தொகுப்பைக் கவனித்துள்ள பிரிஜிஷ் பிரகாஷ், இன்னும் கடுமையாகக் கவனித்து, படத்தின் வேகத்தைச் சற்று கூட்டி இருக்கலாம் அல்லது அதன் நீளத்தையாவது குறைத்திருக்கலாம். எல்லோரது வாழ்க்கையிலும் ஏதோ ஒரு சாதனை இருக்கத்தான் செய்கிறது. அதைக் கண்டறியக்கூட இயலாத வகையில்தான், அவரவர் வாழ்க்கை ஓடிக்கொண்டே இருக்கிறது. அதனை வெளிக்கொணர்ந்து அங்கீகரிக்க உறவுகள் உதவ வேண்டும். அப்படி உதவினால்தான் அது உறவு என்பதையும் எங்கு கோபப்பட மாட்டார்களோ, சந்தோஷப்படுத்துவார்களோ, தவறிழைத்தால் கண்டிப்பார்களோ, தவறு எனில் திருத்துவார்களோ, அதுதான் ‘இல்லம்’ என்பதையும், எத்தனை நவீன தொழில்நுட்பங்களுக்கு நாம் அறிமுகமானாலும், அடிப்படையான மனிதப் பண்புகளை மட்டும் இழந்து விடக்கூடாது என்பதையும் அழகாகவும் அன்பாகவும் அழுத்தமாகவும்கூட எடுத்துச் சொல்லும் படம்தான், ஹோம். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

தேர்தல் வாக்குறுதியும் கள்ள மௌனங்களும்

நீட் தேர்வு இன்னொரு உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. “மருத்துவம் மட்டும்தான் படிப்பா?”, “ஆட்சிக்கு வந்தவுடன் எப்படி நீட்டை நீக்க முடியும்? தேதி குறிப்பிட்டுச் சொன்னார்களா?”, எல்லாம் சட்டப்படிதானே செய்ய முடியும்?”, “நீட்டை நீக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு”. இப்படி அவரவர் பங்குக்கு ஆளுக்கு ஒரு விளக்கம் கொடுத்து வருக்கிறார்கள். ஆனால், இவை யாவுமே இழந்த உயிர்களை மீட்டுத் தரப்போவதும் இல்லை. இவர்கள் எவருமே மீட்பரும் இல்லை என்பதே கசப்பான உண்மை. கடந்த ஆட்சியில் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் மரணங்களை முன்வைத்து முழங்கியவர்கள், அந்த மரணங்களை வைத்து அரசியல் செய்தவர்கள் இப்போது கள்ள மௌனம் காக்கிறார்கள். ஒருவேளை ஆட்சி மாற்றம் நிகழாமல் போயிருந்தால், இந்நேரம் அவர்கள் என்ன செய்துகொண்டிருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்கும்போது, உண்மையிலேயே அந்த உயிர்கள் மீது அக்கறை உள்ளவர்களால் ஆற்றாமையும் அறச்சீற்றமும் பீறிட்டு எழுவதைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளும் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக, நீட் தேர்வை முன்வைத்து மாணவர்களின் உயிரோடு விளையாடும் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசும் முன்பாக நீட் தேர்வு கடந்து வந்துள்ள வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம். கடந்து வந்த பாதை 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய மருத்துவக் கவுன்சில் (Medical Council of India -MCI) கெசட்டில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. மருத்துவக் கல்விக்கான நெறிமுறைகளில் (Regulations on Graduate Medical Education, 1997) மாற்றம் செய்து, எம்.பி.பி.எஸ் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நுழைவு மற்றும் தகுதித் தேர்வு நடத்துவது (Eligibility cum entrance test) என்று நெறிமுறைகள் மாற்றப்பட்டன. இவை “Regulations on Graduate Medical Education, 2010” என்று அழைக்கப்பட்டன. இதன் அடிப்படையில் MCI 2012ஆம் ஆண்டு மே மாதம் நுழைவுத் தேர்வு நடத்தத் தயாரானது. ஆனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களின் எதிரிப்பு காரணமாக தேர்வு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது. கெசட் அறிவிப்பு வந்ததுமே உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே. பட்நாயக் கொண்ட அமர்வு, பல்வேறு தேர்வுகள் நடத்துவதற்குப் பதிலாக ஒரே தேர்வு நடத்துவது திறமை வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு நிதிச் சுமை, மன அழுத்தம் ஆகியவற்றிலிருந்து விடுவிக்கும் என்பதால் வரவேற்கத்தக்கது என்று தீர்ப்பளித்தனர். மே 5, 2013ல் முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வேலூர் சி.எம்.சி. கல்லூரி உள்ளிட்டோர் மூன்று பேர் கொண்ட அமர்வுக்கு மேல் முறையீடு செய்தனர். அதை அன்றைய தலைமை நீதிபதி அல்டாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், ஏ.ஆர். தவே ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. அல்டாமஸ் கபீர் ஒய்வு பெறுகிற நாளில் அவரது கடைசித் தீர்ப்பாக நீட் தீர்ப்பு வெளியானது. “நீட் தேர்வு அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று கபீர் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார். மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் கபீரும், சென்னும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தவே ஆதரவாகவும் கருத்துக் கொண்டிருந்தனர். எனவே தீர்ப்பு பெரும்பான்மைத் தீர்ப்பாக அமைந்தது. நீட்டுக்கு எதிரான இந்தத் தீர்ப்பு, 2013ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு வெளியானபோது, நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி தவே, ஓய்வு பெறும் நாள் வந்துவிட்டதால், வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று நீதிபதி கபீர் மீது குற்றம் சாட்டினார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து, 2013 அக்டோபர் 23ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கு, முந்தைய வழக்கில் நீட்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த, நீட்டுக்கு எதிராகத் தீர்ப்பளித்த கபீர் மீது குற்றம்சாட்டிய நீதிபதி தவே தலைமையில் அமைக்கப்பட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி, 2010 டிசம்பரில் வெளியிடப்பட்ட அறிவிக்கை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அடுத்த ஆண்டே நீட் தேர்வை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதனால் 2017-ல் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் 85 சதவீத இடங்களை தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு ஒதுக்கி அன்றைய தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சிபிஎஸ்சி மாணவர்கள் தொடுத்த வழக்கில், தமிழக அரசின் ஆணை செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பின்னர், தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்யும் வரைவு அவசரச் சட்டத்தை உருவாக்கி மத்திய அரசுக்கு அனுப்பியது. அது சட்ட ரீதியாக செல்லாது என்ற அட்டார்னி ஜெனரலின் கருத்தால் கைவிடப்பட்டது. இத்தனை இடர்களைக் கடந்து, 2020 ஆம் ஆண்டில், மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு இயற்றியது. ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மாநில அரசுக்கு உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, அன்றைய அதிமுக அரசு அந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டது. சுமார் 400 அரசுப்பள்ளி மாணவர்கள் சென்ற ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் கால் பதிக்க அந்தச் சட்டம் வழிவகை செய்தது. 7.5% இடஓதுக்கீட்டை ஏற்க முடியாது என்றவர்கள், தற்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர், பொறியியல், சட்டம், விவசாயம் உள்ளிட்ட இதர தொழிற்கல்விக்கும் அதனை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் தொடர்ந்து அதிமுக அரசுமீது குற்றம் சாட்டிவந்த திமுக, ஆட்சிக்கு வந்ததும் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டது. தேர்தலில் வென்று ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்யும் நோக்கில், ஏ.கே.ராஜன் குழுவை அமைத்து கருத்துக் கேட்பு நடத்தி சட்டமுன்வடிவைத் தயாரித்து வருகிறது. விரைவில் அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று தெரிகிறது. இந்தச் சட்டம் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று நடைமுறைக்கு வந்து நீட் தேர்வு இல்லாத நிலை உருவாகுமா? அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்வார் இங்கே யாருமில்லை. பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கொண்ட நம் கல்வி முறையில், அனைவருக்குமான ஒற்றைத் தேர்வு என்பது, அரசியல் சாசனம் வழங்கும் அனைவரும் சமம் என்ற அடிப்படை உரிமையை மறுப்பதாகும். பெரு நகரங்களில் பல லட்சங்களைக் கொட்டி, தனிப்பயிற்சி பெற்று வரும் மாணவனோடு, எங்கோ தொலைதூரக் கிராமத்திலும், மலைப்பகுதிகளிலும் உள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடிக்கும் மாணவனைப் போட்டியிடச் செய்வது சமூக நீதியின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் செயலாகும். இடைக்கால நடவடிக்கைகள் ஏன் இல்லை? நீட் தேர்வு அறிவிப்பு வெளியான 2010, நீட்டுக்கு எதிரான தீர்ப்பின் மீதான மேல் முறையீடு செய்யப்பட்ட 2013 ஆகிய ஆண்டுகளில் மன்மோகன் சிங் தலைமையிலான ஒன்றிய அரசின் ஆட்சியில் திமுகவும் பங்கு வகித்தது. திமுகவின் காந்திச்செல்வன் சுகாதாரத் துறை இணை அமைச்சராகவும் இருந்தார். தமிழ்நாட்டில் 85% இடங்களை, சமச்சீர் கல்வியில் பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கிய தமிழ்நாடு அரசின் ஆணையை எதிர்த்து, சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆதரவாகவும் நீட் தேர்வுக்கு ஆதரவாகவும் தீரப்பைப் பெற்றுத் தந்தவர்கள் திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் முந்தைய திமுக ஆட்சியில் அட்வகேட் ஜெனராலாக இருந்த பி.எஸ்.ராமனும் ஆவர். தீர்ப்பு வெளியான பிறகு ஊடகங்களுக்குப் பேட்டியளித்த நளினி சிதம்பரம், “இனி நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு ஒன்றும் செய்ய முடியாது” என்று குறிப்பிட்டார். இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், அப்போது எதிர்க்கட்சியாகவும் இப்போது ஆளும் கட்சியாகவும் இருந்து நீட்டுக்கு எதிராகப் பேசிவரும் திமுக, இன்றுவரை உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவில்லை. லட்சக்கணக்கான மாணவர்களின் கல்விக் கனவு வெறும் ஐந்து நீதிபதிகளின் சிந்தனையோடு முடிந்துவிடுவதில்லை. அரசியல் சாசனம் மக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை நிலைநாட்ட வேண்டிய கடமை நீதிமன்றங்களுக்கு உண்டு. ஐந்து நீதிபதிகள் அமர்வோடு நீதி நின்றுவிடுவதில்லை. இதற்கு முன்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஏழு மற்றும் ஒன்பது நீதிபதிகள் அமர்வுகள் அமைக்கப்பட்ட வரலாறுகள் உண்டு. சபரிமலை வழக்கில்கூட ஒன்பது நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்டது. 1973-ல் கேசவானந்த பாரதி Vs கேரள மாநிலம் வழக்கில் அதிகபட்சமாக 13 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அமைக்கப்பட்ட வரலாறும் நம்மிடையே உள்ளது. ஆனால், நீட் தேர்வைப் பொறுத்தவரை, இவ்வளவு தீவிரமாக நீட்டை எதிர்ப்பவர்களும், எதிர்ப்பதாகக் காட்டிக்கொள்பவர்களும் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு முன்பு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்காக நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வுகளில் +2 மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் இரண்டின் அடிப்படையில் கட் ஆஃப் மதிப்பெண்கள் வைக்கப்பட்டு சேர்க்கை நடைபெற்றது. ஆனால், நீட் தேர்வு அடிப்படையிலான சேர்க்கை, பள்ளிக்கல்வியில் பெறும் மதிப்பெண்ணை முற்றாகப் புறம் தள்ளுகிறது. குறைந்தபட்சம், மாநில அரசின் இடங்களுக்கு, அந்தந்த மாநிலங்களே அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்திக்கொள்ளக் கூட இங்கே உரிமை கோரப்படவில்லை. சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்தும் முகமையாக, தகுதி பெற்ற அமைப்பாக வரையறை பெற்றது எப்படி என்ற கேள்விகளுக்கு விடையளிப்பார் யாருமில்லை. முந்தைய அதிமுக ஆட்சி மீதும், 2014 – 2019 வரை தமிழ்நாட்டிலிருந்து சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் ஏராளமான விமர்சனங்கள் வைக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதே எண்ணிக்கையில் தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட்டுக்கு எதிராக டெல்லியில் எழுப்பிய குரல்கள், மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? கருத்துக் கேட்புக் குழு அமைத்த தற்போதைய திமுக அரசு, மேல்முறையீட்டு வாய்ப்புகள் குறித்து ஏன் ஆலோசிக்கவில்லை? அதிகாரம், பொருளாதாரம், எண்ணிக்கை என அனைத்திலும் பலம் பொருந்தியவர்கள் மாணவர்களின் மரணங்களுக்கு விலை வைத்துக் கொண்டிருக்க, இவை எதுவுமே இல்லாத எளியவர்கள் இப்படியான கேள்விகளை மட்டுமே தொடர்ந்து எழுப்பிக் கொண்டிருக்க முடிகிறது என்பதுதான் வேதனையான உண்மை. நீட் தேர்வு ஒழிக்கப்படுமா? அந்த அதிசயம் எப்போது நிகழும்? என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்வரை மாணவர்கள் மன உறுதியோடு அதனை எதிர்கொள்ள வேண்டும். போராட்ட முடிவில் வெற்றி வசப்படாவிடில்

அம்மாவுக்குக் கல்யாணம்

அம்மாவுக்குக் கல்யாணம்

வேர்களாகும் விழுதுகள் – 3 “அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில குடை பிடிப்பானாம். ஆனாலும் ரெண்டாங் கல்யாணத்துக்கு இம்புட்டு ஆடம்பரம் ஆகாது”. கெட்டி மேளச் சத்தத்தை மீறி, பின்னாலிருந்து குரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன். மெல்லிய குரலென  நினைத்துப் பேசிக்கொண்டிருந்த பெண்கள்  அசடு வழிய சிரித்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர். அது ஒரு திருமண வீடு. மணப்பெண்ணின்  முதல் திருமணம் தோல்வியுற்றதால் நடைபெறும்  மறுமணம், அப்பெண்களின் வாயில் அவலாகிக் கொண்டிருந்தது. கணவனை இழந்தவர்கள், பிரிந்து வாழ்பவர்கள், மணமுறிவு பெற்று வாழ்பவர்கள், திருமணமாகாதவர்கள் என, தனித்து வாழும் கணிசமான  பெண்களால் நிரம்பிக் கிடக்கிறது  இந்தச் சமூகம். ஆனாலும்கூட, ஒரு  பெண்ணிற்கு  மறுமணம் என்பதை இன்னும்  இங்கு இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்களின்  சிறகுகளை முறிப்பதில் இதுபோன்ற  பெண்களுக்கும் பங்குண்டு. ஐ.நா.வின் ‘உலகப் பெண்களின் முன்னேற்றம் 2019 – 2020; மாறும் உலகில் குடும்பங்கள்’  என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள அறிக்கையில், உலகிலேயே கணவனை இழந்த பெண்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. அதே நேரத்தில் இந்தியாவில்தான் மிகக்  குறைந்த அளவில் 1.3 சதவீத  விவாகரத்துகள் (1000 திருமணங்களில் 13 திருமணமே மணமுறிவு)  நடைபெறுவதாகவும் குறிப்பாக  நகர்ப்புறங்களில் மட்டுமே நிகழ்வதாகவும்  கூறுகிறது. இந்த இரண்டு முரண்களுக்குமான காரணத்தை ஆராய்ந்தால் மீண்டும் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்ற சக்கரங்களுக்குள்ளேயே சுழல வேண்டியிருக்கும்.  இந்தியாவின் இந்த மிகக் குறைவான மணமுறிவுகளுக்கு பின்னால் இருப்பது மகிழ்வான, புரிதலான திருமண உறவா? அல்லது சமுதாய அழுத்தமா? என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியே. பில்கேட்ஸ் – மெலிண்டா இணையரின் திருமண முறிவு அறிக்கையைக்கூட  ஏற்றுக்கொள்ள முடியாமல் பொங்கும் கூட்டத்தை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஏனெனில், இன்றும் இங்கு விவாகரத்து  என்பது, தனி மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல் எனப் புரிந்து கொள்ளப்படாமல், வெட்கத்திற்குரியதாகவும் அவமானத்திற்குரியதாகவும், குடும்ப கௌரவமாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது.  இந்தியாவின் முதல் (கணவனை இழந்த) பெண் மறுமணம் 1856 டிசம்பர் 7 ஆம் தேதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் முயற்சியால்  வங்கத்தில் நடைபெற்றதாக  வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றும்கூட கணவனை இழந்த பின்போ அல்லது மணமுறிவுக்குப் பின்போ மறுமணம்  செய்யத் தயங்கி, துவண்டு நிற்கும் பெண்களே இங்கு அதிகம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மறுமணங்கள் இன்று பரவலாக மனதளவில்  ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்கூட, ஆணின் மறுமணம் போல பெண்ணின் மறுமணம் எளிதாகக் கை கூடுவதில்லை. குறிப்பாக குழந்தையுடைய  பெண்கள்  மறுமணம் செய்யக்கூடாது என்றே உலகம் எதிர்பார்க்கின்றது. பெண் என்பவள் ஆணைச் சார்ந்தே வாழவேண்டும் என நிர்பந்திக்கும் இதே சமூகம், இணையர் இறந்து விட்டாலோ, பிரிந்து விட்டாலோ பெண் தனியாகவே வாழ்ந்து முடிக்க  வேண்டும்  என்றும் எதிர்பார்க்கிறது. குழந்தையுடன் மறுமணம் நோக்கிச் சிந்திக்கும் பெண்ணைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, அவளை வாழ்நாளெல்லாம் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறது, இன்றும்.  ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே  பெண்களின் மறுமணம் குறித்து சிந்தித்திருக்கிறார் எழுத்தாளர் சூடாமணி. இவரது ‘இரண்டாவது அப்பா’  என்ற சிறுகதை, ஏழு வயதுக் குழந்தையுடன் கணவனை இழந்த கதைநாயகி, துணிவுடன் இரண்டாம் திருமணம் முடித்து அதனை எதிர்க்கும் தன் தாயையும் ஏற்கத் தயங்கும் மகனையும் அழகாக சமாளித்து, தன்னம்பிக்கையுடன்  புது வாழ்வைத் தொடர்வதை விவரிக்கிறது. சூடாமணியின் ‘இரண்டாம் அப்பா’  காலத்திற்கும்  முன்பே  ஒலித்த  குரலாய், பெண்கள் மறுமணத்தை ஓங்கிச் சொல்கிறது. இன்றும்  பெண்ணின் மறுமணத்தை கள்ளத்திருமணம் போல் நடத்தும் பெற்றோர்களுக்கிடையே தன் மகள்   சௌந்தர்யாவின் மறுமணத்தை  ஊரறிய  நடத்தி, பொருள் பொதிந்ததாக மாற்றி,  வாழும்  உதாரணத் தந்தையாகத் திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.  இந்த சமூகத்தில் அப்பாவாக இருப்பதற்கும் அம்மாவாக இருப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அப்பா மறுமணம் முடித்தால் ஏற்றுக் கொள்ளும் குழந்தைகளால்  அம்மாவுக்கு மறுமணம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. காரணம், நாம் உருவாக்கி வைத்திருக்கும்  அம்மா என்ற புனித பிம்பம்.  தன் உணர்வுகளை அழித்து, குழந்தைகளுக்காகவே தங்கள் வாழ்வை  ஒப்புக் கொடுத்துவிடுபவள்தான்  தியாகத்தாய் என  செல்களில் உறைந்து கிடக்கும் அழுக்கை அகற்றினாலன்றி  பெண்ணிற்கான மறுமணங்கள் சாத்தியப்படாது. இப்படிப்பட்ட சூழலில்தான் அம்மாவிற்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு  என்பதைப் புரிந்து, தங்கள் தாய்க்கு திருமணம் முடித்து வைத்து நம்பிக்கை வெளிச்சம் தந்திருக்கின்றனர் இரண்டு  இளைஞர்கள் தமிழகத்திலும் கேரளாவிலும். அவர் பெயர் மினி. கேரளாவில் கொல்லம் அருகில் பள்ளிமோன் என்னுமிடம். திறமையான, அன்பான ஆசிரியை. மகன் கோகுல் ஸ்ரீதர். கணவரின் கட்டளைக்கிணங்க, குழந்தைக்காக பணியை உதறிய உதாரண மங்கை.    திருமண பந்தம் சுகப்படவில்லை. தினந்தோறும் வாக்குவாதம், பிரச்சினை, சண்டை. குழந்தைக்காக கசப்பான திருமண வாழ்வை சகித்துக்கொண்டு, பூட்டிய கதவுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானோரில் ஒருத்தியாக  வாழ்ந்தார். அப்படியான ஒரு நாளில்  தலையில் விழுந்த அடியால் இரத்தம் சொட்டச்சொட்ட நின்ற அம்மாவைப் பார்த்து பதறிய மகனிடம், “ஒண்ணுமில்லடா, அம்மா உனக்காக என்ன வேணா தாங்கிக்குவேன்” என்று சொன்ன அம்மாவின் வார்த்தைகள் தன்னைத் தூங்க விடவில்லை எனக் கூறுகிறார்  கோகுல் ஸ்ரீதர். ஏனெனில், இது போன்ற வன்முறைகள் அம்மாவின் மீது ஏவப்படுவது  முதன்முறையல்ல.  ‘உனக்காகத் தாங்குவேன்’ என்பது மினியின் வார்த்தைகள் மட்டுமல்ல. இந்தியாவின் பெரும்பான்மை அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்காகவே  எந்தத் துன்பத்தையும்  தாங்கிக் கொண்டு, திருமண பந்தத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சண்டை, சச்சரவு, பிரச்சினைகள் சூழ்ந்த சூழலில் வாழும், வளரும் குழந்தைகள் நம்பிக்கையின்மை, மன அழுத்தம், தனிமை உணர்வுடனே வாழ்வதாகக் கூறுகிறது சைல்ட் ட்ரெண்ட்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு.  கோகுலும் அப்படியே வளர்ந்தான், வாழ்ந்தான்.  தொடர்ந்த பிரச்சினைகளுக்குப் பிறகு, தன்  அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அப்பாவின் வீட்டை விட்டு வெளியேறிய அந்தக் கணத்தில் அவருக்கென ஒரு வாழ்வை அமைத்துத் தரவேண்டும் என, தான் முடிவெடுத்ததாக கோகுல் கூறுகிறார். தனக்காக தன் தாய் இதுவரை அனுபவித்த கொடுமைகளின் முற்றுப் புள்ளியாக  மறுமணத்தை யோசித்திருக்கிறார் இந்த இளைஞர்.  “எனக்காக இவ்வளவு காலம் எல்லாவற்றையும் எதிர்த்து வாழ்ந்த அம்மா கொஞ்சம் தனக்காகவும் வாழட்டும்” என விரும்பினேன் எனக் கூறும் கோகுல், மறுமண முடிவுக்கு தன் தாயை சம்மதிக்க வைக்க, பெருமுயற்சி எடுக்க வேண்டி இருந்திருக்கிறது. தன் தாயின் பள்ளிப் பருவ நண்பன் வேணு என்பவரே வரனாக வந்தபோது இந்த மறுமணம் கைகூடியிருக்கிறது. தன் அம்மாவின் மறுமண முடிவை மற்றவர்கள் தவறாக சித்தரித்து விடக் கூடாது என்பதே கோகுலின்   கவலையாக இருந்தது. அதனால் அவரே இந்த நிகழ்வை முகநூலில் பகிர்ந்து  “அம்மாவின் இரண்டாவது திருமண முடிவை ஏற்றுக்கொண்டு, அவருக்கான மரியாதையை அளியுங்கள்” என்று கூறிய இந்த முற்போக்கு இளைஞனை சமூக வலைத்தளங்கள் கொண்டாடித் தீர்க்கின்றன. “அப்பாக்கள் மறுமணம் செய்தால் ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள், அதையே அம்மாக்கள்  செய்தால் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?” என்று முடித்த  கோகுலின் நியாயமான கேள்விக்கு  இளைஞர்களே பதிலாக வேண்டும்.   தமிழ்நாட்டின் சித்தார்த்தன் கருணாநிதி எழுதியுள்ள, Right to Marry  என்ற நூலை வாசித்துவிட்டு, அவரைத் தொடர்புகொண்டு I’m proud of you என்று கூறிய என் வார்த்தைகளுக்கு கேள்விகளாலேயே சாட்டை வீசுகிறார் அவர். “இதில்  பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? இன்றும்  இதைப் பெருமையாகப் பேசுகிறோம் என்பதே வேதனைக்குரிய விஷயமல்லவா? இது சாதாரணமான, இயல்பான ஒரு நிகழ்வாக மாற இந்தச் சமூகத்திற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும்?” என்று கேள்வியால் அசரடிக்கும்  சித்தார்த், தந்தை இறந்து  பத்தாண்டுகள் கழித்து தன் அம்மா செல்விக்கு, 47 வயதில்  மறுமணம் செய்து வைத்திருக்கிறார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், வலையாம்பட்டு என்ற கிராமத்தில் வறுமையில் சுழன்ற குடும்பம் அது. 2009-ல் கணவர் இறந்துவிட,  கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த சித்தார்த் கருணாநிதி, பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகிழ்னன்  என்ற இரு மகன்களோடு, வறுமையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் செல்வி அம்மாள்.  இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் படும் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தார்.   வழக்கமான தமிழ் அம்மாவாக தன் ஆசாபாசங்களைத் தள்ளிவைத்து, தன் பிள்ளைகளின் படிப்பிற்காக உழைத்துத்  தேய்ந்தார். மகன்கள் இருவரும் படித்து, வேலை தேடி, நகரம் நோக்கி நகர்ந்துவிட தனிமை அவரைத் தின்றது.  நல்லகாலம்,  சராசரி மகன்களாய் இல்லாமல், இருவரும் தாயின் வலியை உணர்ந்து கொண்டனர். சித்தார்த், தன் தம்பியோடு கலந்தாலோசித்து அம்மாவுக்கு மறுமணம் செய்யும் முடிவைக் கையிலெடுத்தார். ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சமூகத்தின் கட்டமைப்பு குறித்தும் கவலைப்பட்ட செல்வி அம்மாள் மறுத்து ஒதுங்கினார். மனம் தளரவில்லை சித்தார்த்தன். 2017 ல் ஆரம்பித்த பேச்சுவார்த்தை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்தது. இறுதியில் பிள்ளைகளே வென்றனர்.  அருகிலுள்ள சூலாங்குறிச்சியில் மறுமணம் முடிய, இன்று குடும்பமுமே உற்சாகத்தில். “பத்தாண்டுகளுக்கு முன்பே எனது ஆசிரியர் ஒருவர் அம்மாவின் மறுமணம் குறித்து என்னிடம் பேசியபோது அருவெறுப்பாக இருந்தது. ஆனால் நானும் காதலித்து,  பிரிவு நேரிட்டபோதுதான், அம்மாவிற்கு மறுமணம் தேவை என்பதை உணர்ந்தேன்” என்கிறார்  கோவையில் ஆங்கில மொழிப் பயிற்றுனராக இருக்கும் சித்தார்த் கருணாநிதி.  “ஆணோ, பெண்ணோ இணையரில் ஒருவர்  இறந்து விட்டால் சிறிது காலம் எடுத்துக் கொண்டு மீண்டும் மணம் புரிவதில் என்ன தவறு?”  என்று அவர் கேட்கும் கேள்வியின் நியாயத்தை ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் உணர வேண்டிய தருணமிது. “நான் கணவரை இழந்து தனியாக இருந்தபோது உதவி கேட்டு எந்த ஆண்களிடமாவது பேசினால் கூட, என்னைத் தவறாகப் பேசியவர்கள், நான் மறுமணம் முடித்த பிறகு என்னை அவ்வாறு பேசுவதில்லை. என் மீதான அவர்கள் பார்வை மாறியிருக்கிறது” என மகிழ்ச்சியோடு கூறும் செல்வி அம்மாளின் வார்த்தைகளிலுள்ள மற்றொரு கோணம் பெண்கள் மறுமணத்திற்கு வலுசேர்க்கிறது. இந்தியாவில் 1.36 மில்லியன் பேர்   விவாகரத்தானவர்கள் என்றும், 40 மில்லியன் பெண்கள் கணவரை இழந்தவர்கள் என்றும் 2016-ல் வெளியான BBC  அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, தனித்து வாழும் ஆண்களை விட, தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்.  முறிந்து  போகும் திருமண பந்தங்களிலும், முடிந்துபோன திருமண வாழ்க்கையிலும் தோற்றுப் போய்விட்டோம் என்று எண்ணாமல் மீண்டும் ஒரு வாழ்வை ஏற்றுக்கொள்ள பெண்கள் முன்வர வேண்டும். புராதனச் சிந்தனைகளைத் தூக்கிக்கொண்டு, தனிமையில்  உழலாமல், விருப்பமான வாழ்வை அமைத்துக் கொள்வதில் தவறேதுமில்லை.   ஊர்

மகாகவி நாள் குழப்பம்

மகாகவி நாள் குழப்பம்

பாரதி நினைவு நாள் மகாகவி நாளாகக் கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்குப் பாராட்டுகள். ஆனால், பாரதியின் நினைவுநாள் செப்டம்பர் 11 என்பதுதான் பிழையாக உள்ளது. பாரதி இறந்தது செப்டம்பர் 11 நள்ளிரவு 12 முடிந்து, செப்டம்பர் 12 அன்று ஒன்றரை மணிக்கு. சென்னை மாநகராட்சிப் பதிவேட்டிலும் செப்டம்பர் 12 என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அக்கால வழக்கப்படி காலை ஆறு மணி வரையிலான நேரத்தை முந்தைய தேதியில் குறிப்பிட்டு சிலர் பேச்சு வழக்கில் சொன்னதே வரலாறாக நிலைத்துவிட்டது. அனைத்திந்திய வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி உள்ளிட்டவை இன்றளவும் செப்டம்பர் 11 தேதியிலேயே பாரதி நினைவு நாள் நிகழ்வுகளை ஒலி/ஒளிபரப்புகின்றன. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பிற மாநிலங்களிலும் பாரதி சிலையில் நினைவுநாள் தவறாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தக் குழப்பத்தைச் சரி செய்யக்கோரி தமிழறிஞர்கள் பலர் குரல் எழுப்பி வந்துள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியர் ச. சுப்புரெத்தினம் எடுத்த முயற்சியின் பலனாக, எட்டயபுரம் பாரதி நினைவு மண்டபத்தில் உள்ள கல்வெட்டில், 2014 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், பாரதியின் நினைவு நாள் செப்டம்பர் 12 என்று மாற்றம் செய்யப்பட்டது. மேலும், பேராசிரியரின் முயற்சியால், புதுவை பாரதியார் இல்லத்தில் அவரது இறப்புச் சான்றிதழ் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவர் பாரதியின் நினைவுநாள் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர, செப்டம்பர் 12 என்பதை தமிழ்நாடு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரி வருகிறார். இந்தச் சூழலில், தமிழக அரசே பாரதி நினைவுநாளை செப்டம்பர் 11 என்று அறிவித்துள்ளது வரலாற்றுப் பிழையை அதிகாரபூர்வமாக ஆக்குவதாக உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக மகாகவி நாள் செப்டம்பர் 12 அன்று கொண்டாடப்படும் என அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் குழப்பம் முடிவுக்கு வரும்.

வைகைப் புயலே வருக!

வைகைப் புயலே வருக!

நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிப்பதற்குத் தடை விதித்து போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அவர் களம் இறங்கவிருக்கிறார் என்பது மகிழ்வான செய்தி. ரெட் கார்டு நீக்கப்பட்டது குறித்துப் பேட்டியளித்த அவர், “இது என்னுடைய மறுபிறவி” என்று நெகிழ்ச்சியோடு கூறியிருக்கிறார். ரெட் கார்ட் வழங்கப்பட்ட காலத்தில், திரைப்படங்களில்தான் வடிவேலு நடிக்கவில்லையே தவிர, தொலைக்காட்சிகள் வழியாகவும் மீம்கள்  வழியாகவும் அன்றாட வாழ்வில் அவரது வசனங்கள் வாயிலாகவும் நம்மைத் தொடர்ந்து சிரிக்க வைத்துக்கொண்டேதான் இருந்தார் என்பதுதான் உண்மை.  தனி மனிதன் என்பது வேறு. ஒரு கலைஞனாக இருப்பது என்பது வேறு. தனிமனிதனின் கருத்து சுதந்திரத்திற்காக ஒரு துறை அவனது கலை வாழ்வை முடக்கி வைத்திருந்தது. இப்பொழுதாவது அந்தத் தடை நீங்கியிருப்பது நல்லது.  ஒவ்வொரு நடிகனுக்கும் ஒரு பருவம் உண்டு. SEASON என்று சொன்னால் சிலருக்கு எளிதில் புரியும். அதேபோல, ஒரே மாதிரியான தொனி ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பேசப்படும். நாகேஷ், தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளி ராஜன், ஜனகராஜ் , கவுண்டமணி, செந்தில், விவேக், சூரி என இப்பொழுது இருக்கும் யோகிபாபு வரை நீண்ட நெடிய பருவங்கள் உண்டு. நாகேஷ் ஒரு ட்ரெண்ட் செட் செய்தார். அவர் காலத்தில் அல்லது அவரது காலத்தைத் தொடர்ந்த  சிலர் அவரவர் பாணியில் ட்ரெண்ட் செய்ய முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களுக்கென ஒரு பாணியை உருவாக்குவதற்குள் நிலைத்தன்மை பெறாமல் பல நல்ல கலைஞர்கள் காணாமல் போனார்கள். அது தான் நிதர்சனம். ஆனால் எப்பொழுது கேட்டாலும் இனிக்கும் வகையான இசை இருப்பது போல் சில நகைச்சுவைகளை நாகேஷ் உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.  கவுண்டமணி – செந்தில் காம்போவும் சரி, கவுண்டமணியின் சிங்கிள் ட்ராக் காமெடிகளும் சரி, நகைச்சுவையில் புது ட்ரெண்ட்டை உருவாக்கினாலும் அதைத் தொடர்ந்து வந்த வடிவேலு, விவேக் பருவங்கள் முக்கியமானவை. அதில் நிலைத்து தனக்கென்று தனிப்பட்ட முத்திரையை இன்றளவும் பதித்துக்கொண்டிருப்பவர் வடிவேலு.  வடிவேலுவின் மகத்தான வெற்றிக்கு சில காரணங்களைப் பட்டியலிட்டுச் சொல்ல முடியும்.  முதலில் திகட்டவே திகட்டாத தென் தமிழகத்தின், முக்கியமாக மதுரை வட்டார வழக்குமொழி.  சொற்களைப் பிரயோக்கிக்கும் அலைவரிசை மற்றும் அதற்கேற்றபடி உடல் மொழியை, முக பாவனைகளைக் கோர்க்கும் நடிப்புத்திறமை.  ஒரு சாமான்யனாக, மனதில் தோன்றும் அசரீரிகளை அசரீரிகளாகவே ஒலிக்கவிட்டு, அதையும் வடிவேலுவின் குரலாக ஒலிக்கவிட்டு எல்லா மூலைகளிலும் வடிவேலுவைப் பயன்படுத்தத் தெரிந்த, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்த கன்டென்ட் ரைட்டர்ஸ் மற்றும் இயக்குனர்கள்.  இவை எல்லாம் ஒன்று சேர்ந்த கலவைதான் வடிவேலுவின் வெற்றி.  குழந்தைகளை ஈர்க்கும் முக பாவனைகள் வடிவேலுவிடம் உண்டு. ஒரு படத்தில் ஒரு குழந்தை பலூன் ஊதச்சொல்லும், அவரும் ஊதுவார்.  பலூன் உடையும். உடைந்ததும் முகத்தில் ஒரு பாவனை காட்டுவார். குழந்தை அழும்போது குழந்தையை மிரட்டும் தொனியாக மாற்றுவார். ஆனால் குழந்தையிடம் தோற்கும் முகத்தை நகைச்சுவைக்காக மாற்றுவார்.  எந்த வார்த்தையை எப்படிச் சொன்னால் அது விகாரமாக மாறும் என்று தெரியாமல் பயன்படுத்தி சிலர் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். ஆனால் வடிவேலுவிடம் இருக்கும் தனித்திறமை, எந்த வார்த்தையை எப்படிச் சொன்னால் மக்கள் சிரிப்பார்கள் என்பதைப் புரிந்து வைத்திருப்பது. இது அனைவருக்கும் வராது. உதாரணத்திற்கு, ‘உயிரே.. உயிரே.. தப்பித்து எப்படியாவது ஓடிவிடு… ஐயயோ வருதே… மூதேவி வருதே…” என்று வடிவேலுவின் குரலில் ஒலிக்கும்பொழுது திரையில் வடிவேலுவின் முகமும் உருவமும் பர்தாபோட்டு மூடியிருப்பதாகக் காட்டப்பட்டிருக்கும். ஆனாலும் நம்மால் அந்தக் குரலைக் கேட்டவுடன் வரும் வெடிச்சிரிப்புக்குத் தடை போட முடியாது. நகைச்சுவையில் தனித்து நின்ற உச்சரிப்புகளில் அதுவும் ஒன்று.  வடிவேலு பற்றி சமூக வலைத்தளங்களில் பல கட்டுரைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருந்தாலும் நுணுக்கமான விசயங்களை மட்டுமின்றி வெகுஜனக் காமெடிகளில் பரவலாக அறியப்பட்ட காமெடிகளைச் சொல்லாமல் கட்டுரை நிறைவு பெறாது என்பதுதான் வடிவேலுவின் வெற்றி.  ஒரு தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வரும் வாக்காளர் இன்னொரு கட்சி பூத்தில் அந்தக் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்றும் வடிவேலுவின் பூத்திற்கு வந்து உங்களுக்குத்தான் ஓட்டு போட்டேன் என்றும் கூறுவார். “அவன்ட்ட வாங்குன காசுக்கு ஏணியில ஒரு குத்து, உன்ட்ட வாங்குன காசுக்கு தென்னை மரத்துல ஒரு குத்து” என்றும் சொல்வார். “மூன்றாவது குத்த நான் குத்தவா?” என்று வடிவேலு சொல்வதற்கு முன், எழுத்தால் எழுத முடியாத ஒரு சத்தத்தை (ஜங்……) எழுப்பி, “ங்கொய்யாலே” என்று அவனை அடிப்பார். உண்மையில் அந்தக் காமெடிக்கான சிரிப்பின் ஆதிப்புள்ளி முத்துக்காளை வசனத்தைச் சொல்ல ஆரம்பிக்கும்போது உருவானாலும் வடிவேலு உச்சரிப்பில் மொழியும் சொல்லும் அற்ற அந்த ஒலிதான் சாமான்யனையும் தன்னை மறந்து சிரிக்க வைக்கும் அல்லது வெடிக்க வைக்கும் பெரும்புள்ளி. அதே காட்சியில் அடுத்து வரும் நபர், அவர் கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன் என்று சொல்வதை வடிவேலு நம்ப மறுப்பார். அதற்கு அவர் “நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரிஞ்சுதான் ஓட்டு போட்ட சீட்டைக் கொண்டு வந்திருக்கேன்” என்று சொல்லி பாக்கெட்டில் இருந்து சீட்டை வெளியே எடுத்துக் காண்பித்து, 17 வருசமா உங்களுக்குத்தான் ஓட்டு போடறேன்” என்று சொல்வார். “அப்படின்னா 17 வருசமா கொண்டு போய்ட்டுதான் இருக்கியா?!!” என்று சொல்லி, முதல் நபருக்குக் கோபத்தைக் காண்பித்தவர், இரண்டாவது நபருக்கு முகத்தில் அதிரிச்சியையும் குரலில் மாற்றத்தையும் ஏற்படுத்துவதுதான் அந்த நகைச்சுவையின் நீட்சி. ஒரு நெடிய காட்சியைத் திரைப்படுத்தும்பொழுது இரண்டு சவால்கள் உள்ளன. அந்தக் காட்சிக்கென்று இருக்கும் உணர்வை பார்வையாளனுக்கு ஏற்படுத்துவது. இரண்டாவது, காட்சி தொடர்ந்து நீடித்துக்கொண்டிருக்கும் பொழுது, பார்வையாளனை அந்த உணர்வுக்குள்ளேயே தக்க வைப்பது. ஆனால் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் நெடிய காட்சிகளாகப் படமாக்கப்படும்பொழுது, அவை அதே உணர்வில் இருப்பதோடு அல்லாமல், உணர்வு மோலோங்கவும் செய்யும். அதாவது நகைச்சுவையின் வீச்சு அதிகமாகவும் செய்யும்.  அதே திரைப்படத்தில் ஒரு நபரிடமிருந்து ஃபோன் வரும், இவர் சொல்ல வருவதற்குள் எதிர்முனையில் இருப்பவர் இவரைப் பேசவே விடாமல் ஏதோ பேசுவார். அந்த ஒலி திரையில் வராது. ஆனால் எதிர்முனையில் இருப்பவன் தன்னைப் பேச விடாமல் பேசுவதைத் தன் குரல் சமிக்ஞைகள் மூலமாகவே எதிரொலிப்பார், எதிரொளிப்பார்.  வடிவேலுவின் வெற்றிக்கு அவரது வட்டாரமொழி என்று இந்தக் கட்டுரையை ஆரம்பித்தாலும் வெறுமனே சமிக்ஞைகளைக் கொண்டு மனதில் நின்ற கலைஞனாகவே வடிவேலுவை நிலை நிறுத்த விரும்புகிறேன்.  பல ஐ.டி நிறுவனங்களில், மருத்துவமனைகளில் வடிவேலுவின் பிரபல மீம்களும், அவர் பேசிய உரையாடல்களும் பேசப்படுகின்றன. வடிவேலுவின் நகைச்சுவைகள் A B C  என்று சென்டர் பாகுபாடு இல்லாமல் அனைத்துத் தரப்பு ரசிகர்களுக்குமாய் இருந்தது என்பதுதான் உண்மை.  நகைச்சுவையோடு இசையையும் இணைத்து அதற்குத் தன் குரலையும் நடனத்தையும் ஒருசேர ஒப்புக் கொடுத்தவர் வடிவேலு. பல பாடல்கள் வடிவேலுவிற்கென்றே நடன அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டன. நடன அமைப்பாளரின் தொனியை வடிவேலுவிற்கு ஏற்றுவதற்கு பதிலாக ஒட்டுமொத்த நடனக் கலைஞர்களும் வடிவேலுவின் ஆட்டத்தை ஆடிக்கொண்டிருக்கும் பாடல் காட்சிகளும் உண்டு. பிரபுதேவாவுடன் இணைந்து ஆடிய ‘ஆல் டே ஜாலி டே’, விஜய்யுடன் இணைந்து ஆடிய ‘வாடி வாடி வாடி, கை படாத ஜோடி’ உள்ளிட்ட பல பாடல்களில் திறமையான நடனக் கலைஞர்களுக்கு சவால் விடும் வகையில் அவரது உடல் மொழி அமைந்திருக்கும்.   வாடகைக்கு சைக்கிள் எடுக்கும் எளிய நகைச்சுவையில், ‘எடுத்த நாள் முதல் இந்த நாள் வரை வண்டியை விடவில்லை” எனக் காந்தர்வக் குரலிசையை ஒலிக்கச் செய்திருந்தார். “இந்த ஊரே என் பாட்டைப் பாடும்” என்ற குரல் பாடகர் வடிவேலுவிற்கானது.  என்.எஸ்.கே., சந்திரபாபுவிற்குப் பிறகு நகைச்சுவை நடிகர் பாடகராக வலம் வருவதும் அந்தக் குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டாடுவதும் வடிவேலுவின் குரல்தான். மிகவும் சாமானியர்களில் ஒருவனாக பல படங்களில் நடித்த வடிவேலு, 23ஆம் புலிகேசியாக நகைச்சுவையை மிக இயல்பாக வெளிப்படுத்தினாலும் ஒரு மன்னனுக்கு உண்டான அந்த கெத்துடன் வாழ்ந்து காட்டினார் என்று சொன்னால் அது மிகையில்லை. ஒவ்வொரு நடிகனும் ஒவ்வொரு காலகட்டத்தில் தேங்கி நின்றுவிடுவான்.  அதற்கு திரைக்காட்சியின்மீது ஏற்படும் அயற்சியும் தலைமுறையினர் மாறுவதால் ரசனையின் வீச்சு மாறுவதாலும்தான். ஆனாலும் அனைத்துத் தலைமுறையையும் கவரும் ரஜினி போல தன்னைத் தலைமுறைகள் கடந்து தக்க வைத்துக்கொண்டவர் வடிவேலு.  கலைத்துறையில் கலைஞனுக்கும் சரி, ரசிகனுக்கும் சரி சலிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது. இருவரில் ஒருவருக்குச் சலிப்பு ஏற்பட்டாலும், அந்தக் கலைஞன் தன் சந்தையைத் தவறவிடுவான். வடிவேலுவின் வளர்ச்சியில் பல முட்டுக்கட்டைகள் வந்தாலும், அவருக்குக் விதிக்கப்பட்ட தடைக் காலத்தில் அவருடைய இருப்பை பல ரசிகர்கள் தவறவிட்டார்கள். சூரி யோகிபாபு போன்ற நகைச்சுவை நடிகர்கள் அந்த இடங்களைப் பூர்த்தி செய்தாலும் புது ரகங்களைக் கொண்டுவந்தாலும் வடிவேலுவின் வசனங்களும் சமிக்ஞைகளும் பார்வைகளும் மக்களின் வாழ்வியலில் ஒன்றாகிவிட்டன.  நேசமணி காண்ட்ராக்டருக்குத் தலையில் அடிபட்ட நகைச்சுவை வந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, #PrayForNesamani ஹேஷ் டேக் உலக அளவில் ட்விட்டரில் டிரெண்ட் ஆகி சமூக வலைத்தளங்களிலும் மெயின் ஸ்ட்ரீம் மீடியாவிலும் பேசுபொருளாய் ஆனது.  கமலஹாசனின் விக்ரம் பட போஸ்டரில் வடிவேலுவை போட்டும், ஜேம்ஸ்பாண்ட் படத்தில் அவரைப் போட்டும் வலைதளங்கள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன. பொன்னியின் செல்வன் போஸ்டர்கள் வெளியான சில மணி நேரங்களில் அனைத்து கதாபாத்திரங்களிலும் வடிவேலுவின் முகத்தைப் பொருத்தி அதிரச் செய்தார்கள் மீம் கிரியேட்டர்கள். ஒரு கலைஞன், தன் தொழிலுக்கு நேர்மையாக தியாக மனப்பான்மையுடன் உழைக்கும்பொழுது வெற்றி பெறுகிறான். மக்களை மகிழ்விக்கும் கலையை அவன் நேசிக்கும் விதமே, அவனை மக்கள் மத்தியில் நிறுத்துகிறது.  இவ்வளவு ஆண்டுகால தடைக்குப் பின்னும் வடிவேலுவின் நடிப்பும் பாணியும் மக்களிடம் புழங்குவதன் மையச்சரடு, வடிவேலு சாமான்யர்களின் கலைஞன் என்பதும் அவரது நகைச்சுவைகள் வாழ்வியல் எதார்த்தங்களைப் பிரதிபலிக்கின்றன என்பதும்தான்.  எவ்வளவு கடினமான மனநிலையிலிருந்தும் வெளிவர, ஒற்றை வீரபாகுவின் பார்வையோ, ஏட்டு ஏகாம்பரத்தின் ‘மல…’ என்ற சிரிப்போ, ‘வேணாம், வலிக்குது, அழுதுருவேன்’ என்ற கைப்புள்ளயின் குரலோ, ‘ஒய் பிளட், சேம் பிளட்’ என்ற வார்த்தையோ போதுமானது. பல குழப்பங்களுக்கு மத்தியில் ‘என்னடா நடக்குது இங்க…?’ என்ற விசித்திர குரலும், ‘தம்பி, டீ இன்னும் வரல’, ‘இது வாலிப வயசு’ போன்ற கெத்தும்தான் வாழ்வியல் முறைகளுக்குள் ஊடுருவிவிட்ட வெற்றியின் தடயம்.  யாராலும் தடைசெய்ய முடியாத வைகைப் புயல் மீண்டும் வருகிறது, பலரின் சுமைகளைத் தீர்க்க. தயாராகவே இருப்போம். இனி, “Sing in the rain….” கட்டுரையாளர்: பழனிக்குமார்,

உண்மையான சமூகநீதி நாள்

உண்மையான சமூகநீதி நாள்

பெரியார் பிறந்த செப்.17-ஆம் தேதி சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. பெரியார் விரும்பிய சமூக நீதி எது? அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதா? வெறும் உறுதிமொழி மட்டும் ஏற்பதா? பலகட்டப் போராட்டங்களுக்குப் பின்னரே பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியல் வகுப்பினர் இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற முடிந்தது. இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்தவர்களும் இன்று தங்களுக்குத் தாங்களே இட ஒதுக்கீடு வழங்கிக்கொண்டுள்ளார்கள். ஆனால், இட ஒதுக்கீட்டால் பலன் அடைந்தவர்கள் வேற்றுகிரகவாசிகளைப் போல நடந்துகொள்ளும் அளவிற்கு அதன் வரலாறு தெரியாமல் இருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் ஒன்றிய அரசின் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகியுள்ளது என்பது சமூகநீதித் தளத்தில் ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, சமூக நீதி என்பது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குவதோடு முடிந்துவிட்டதா? இதனைக் கடந்து அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டாமா? ஆட்சி அதிகாரத்தில் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? மக்கள் தொகையில் சரிபாதி அளவில் உள்ள பெண்களுக்கான இடப் பகிர்வு எப்போது நடைமுறைக்கு வரும்? எப்போது கட்சிப் பதவிகளில் வாரிசு அரசியல் ஒழிந்து, தலைமைப் பொறுப்புகள் அனைவருக்கும் சாத்தியமாகும்? எப்போது ‘கல்வியும் மருத்துவமும் விற்பனைக்கு’ என்ற நிலை மாறி அனைவருக்கும் சமமான கல்வியும் மருத்துவமும் கிடைக்கும்? இட ஒதுக்கீட்டின் பலன் எப்போது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும்? மிக முக்கியமாக, எப்போது பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமையாகும்? இன்னும் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் தலைமுறை, “நான் இப்போது பேசுவதைக் காட்டிலும் முற்போக்குடன் நடந்துகொள்ள வேண்டும்” என்று விரும்பிய பெரியாரின் கனவு நனவாகும் நாளே உண்மையான சமூக நீதி நாளாகும். அப்படியான ஒரு நாள் உருவாகும் வகையில், இளைய தலைமுறையை வழிநடத்துவோம் என்று உறுதியேற்றுச் செயல்படுவதே உண்மையான சமூகநீதியை நோக்கிய பயணத்தில் மற்றொரு மைல் கல்லாக இருக்கும்.

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர்களிடம் 10 கேள்விகள்

ஆசிரியர் தினம் என்றால் எனக்கு சில ஆசிரியர்களை ஞாபகம் வருகிறது. முதல் வகுப்பெடுத்த கீதா டீச்சரையும் மூன்றாம் வகுப்பு எடுத்த விஜயா டீச்சரையும் ஐந்தாம் வகுப்பு எடுத்த ஞானவேல் ஐயாவையும் என்றுமே மறக்க முடியாது. மஞ்சள் தேய்த்துக் குளித்த முகத்தோடு வருவார் கீதா டீச்சர். நெற்றி வகுட்டில் நீண்டிருக்கும் குங்குமம். எடுப்பான ஏதாவது ஒரு வண்ணத்தில் சேலையுடுத்தியிருப்பார். விஜயா டீச்சர் தெத்துப்பல்லுடையவர். அவர் சிரிக்கும்போது காற்றில் புளியம்பூக்கள் உதிர்வது போலிருக்கும். இன்றும்கூட பாண்ட்ஸ் பவுடரின் வாசத்தை நுகரும்போதெல்லாம் அவருடைய பிம்பம் நினைவுக்கு வந்துவிடும். அதுபோலவே ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஓவிய டீச்சராக பணிபுரிந்தவரையும் (அவர் என் அப்பாவுடன் படித்த சக தோழி)மீனா டீச்சராக பணிபுரிந்த சமூக அறிவியல் ஆசிரியையும் மறக்கமுடியாது. இந்த மீனா டீச்சர் தான் இதற்கு முன்பாக “ஜெயப்பிரதா டீச்சர் போய்க் கொண்டிருக்கிறார்” எனும் என்னுடைய கவிதையில் பிரதிபலித்தார். மேலே விடுபட்ட நான்காம் வகுப்பெடுத்த அல்போன்ஸ் டீச்சர் மிகவும் பிரபல்யமானவர். எங்கள் ஊரில் அவர் எல்லோருக்கும் பரிச்சயமானவர். தேர்தல் நேரத்திலும் வருடத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் ஒவ்வொரு வீடாகக் கணக்கெடுக்க வருவதால் எல்லாருடைய வீடும், ஆட்களும் மிகப் பரிட்சயம். ஞானவேல் ஐயாவும் அப்படித்தான் அவருக்கும் எனக்கும் உள்ள உறவை எழுத இப்பதிவு போதாது. ஒன்பதாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்ட எனக்கு ஃபேஸ்புக் வழியே பல ஆசிரியர்கள் நண்பர்களாக இருக்கின்றனர். செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தில் நான் எதையாவது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். அப்படித் தோன்றியதுதான் இந்தப் பேட்டி. ஆசிரியப் பணியில் இருக்கும் மூவரிடம் ஒரே மாதிரியான பத்துக் கேள்விகளை முன்வைத்தேன். அதற்கு அவர்கள் தந்த பதில்கள் இதோ: முதலாவதாக திருமதி. கமலவள்ளி சுப்பிரமணியம் (எம்.ஏ.பி. எட்) அவர்கள். பணியிடம்: ஞானாம்பிகா உதவி தொடக்கப்பள்ளி. கருப்பம்புலம் வடகாடு, வேதாரண்யம் வட்டம், நாகை மாவட்டம். பணி அனுபவம்: 29 ஆண்டுகள். இந்தக் கொரோனோ காலத்திலும் மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வீடு வீடாகச் சென்று மாணவர்களின் நலனுக்காக பல நல்லுதவிகளைப் புரிந்தவர். லாக்டவுன் தீவிரமான காலத்தில் தன்னுடைய சம்பளத்தை, சுயநலமின்றி ஏழை மாணாக்கர்களின் குடும்பத்திற்காகச் செலவு செய்தவர். இவருக்கெல்லாம் நல்லாசிரியர் விருது கிடைத்ததா என்று தெரியவில்லை. கிடைக்கவில்லை என்றால் உடனடியாக அரசு கொடுக்க வேண்டும். இனி அவரிடம் பத்துக் கேள்விகளும் அவரது பதில்களும்: 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? நான் பணியேற்றதே மறக்க இயலா நிகழ்வுதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? என்னை வியக்க வைத்த மாணவர் சோமசுந்தரம் மகாலிங்கம். தொடக்கப்பள்ளியை விட்டு சென்றதும் அவருடன் அதிகம் தொடர்பில்லை. கஜா புயல் பாதிப்பின் பொழுது என்னை மெஜஞ்சரில் தொடர்பு கொண்டு பள்ளி பாதிப்பைச் சரி செய்ய 60000 ரூபாய் அனுப்பினார். பேருதவி அது. 3. ஆசிரியப் பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? அடைந்தது நிறைய. இழந்தது ஏதுமில்லை. 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? அப்படி நினைத்ததில்லை. ஆனா, ‘இந்தப் பணி கிடைக்காதிருந்தால் என்னவாகி இருப்பேன்?’ என யோசித்திருக்கிறேன். பணி ஓய்வை மனம் எப்படி எதிர்கொள்ளும் என யோசித்திருக்கிறேன். 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? தெரியவில்லை. காலத்திடம் கேட்க வேண்டிய கேள்வி. 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டில் இல்லத்தரசி. பள்ளி எப்படியோ, வீடும் அப்படித்தான். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? ஒருபோதும் நான் என்னை முன்மாதிரி என நினைத்ததில்லை. எல்லோரிடமும் நான் கற்றுக்கொள்பவளாகவே இருக்கிறேன். சிலர் எப்படி இருக்க வேண்டும் எனக் கற்பிக்கிறார்கள். சிலர் எப்படி இருக்கக்கூடாது எனக் கற்பிக்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? பாடமுறை, கற்பிக்கும் முறை இவற்றில் மாற்றம் வந்திருக்கிறது. தொடக்கநிலையில் முன்பு தமிழ் அகரவரிசை கற்பிப்போம். இப்போது கோட்டெழுத்துக்கள் முதலில் கற்பிக்கச் சொல்கிறார்கள். அடிப்படையைக் கற்பிப்பவர்கள் நாங்கள் என்பதால் பாடத்திட்டம் மாறாது. முழு அடைவுக்கு என்ன செய்யலாம் என்பதை எங்கள் பணி அனுபவம் உணர்த்தி இருக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப்பார்க்கிறீர்கள்? புறம் பேசுதல். பொறாமை. இவற்றின் சதவீதம் குறையவேயில்லை. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? சூழ்நிலையை எதிர்கொண்டு வெற்றி பெறுபவராக இருக்க வேண்டும். ——— அடுத்து, முனைவர் சி.சங்கீதா அவர்கள். ஸ்ரீவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக எட்டு ஆண்டுகளாக பணிபுரிகிறார். பாடம் மட்டுமின்றி இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் புலமையுடையவர். “தொல்காப்பியப் பெயர்த்தி” இவரது கவிதை நூலாகும். இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், கபிலர் மலை. என்னுடைய அன்புத்தோழியான அவரிடமும் இதே கேள்விகளை முன் வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? 2009-இல் தனியார் கல்லூரியில் பணியாற்றியபோது முதன்முதலாக தேர்வு கண்காணிப்புப் பணி. அதுவும் ஆங்கிலத் தேர்வு. மிகுந்த கவனத்தோடு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை எடுத்துக்கொண்டு தேர்வு அறைக்குச் சென்றேன். ஆனால் மனதுக்குள் கொஞ்சம் பயமாகவே இருந்தது. மாணவர்களுக்கு முக்கியமான சில அறிவிப்புகளை கொடுத்தேன். குறிப்பாக, யாரும் பிட் வைத்திருக்கக் கூடாது. இருந்தால் கொடுத்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு எல்லாருக்கும் வினாத்தாளையும் விடைத்தாளையும் கொடுத்தேன். பின்  ஒவ்வொரு மாணவிக்கும் கையெழுத்து போட்டுக்கொண்டு இருந்தேன். எல்லோரையும் பரிசோதித்துவிட்டுதான், நான் கையெழுத்து போட்டேன். சிறிது நேரம் கழித்து பறக்கும்படை வந்தார்கள். வகுப்பு முழுக்க சுற்றிப் பார்த்தார்கள். திடீரென்று ஒரு மாணவியின் விடைத்தாளை வாங்கிப் பார்த்தால், உள்ளே தூண்டுச் சீட்டு. எனக்கோ பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் அந்த மாணவியை நான் பரிசோதனை செய்துவிட்டு  கையெழுத்து போட்டேன். கையெழுத்து போட்ட பின்பு bit வைத்து எழுதிய அந்த மாணவியை என்னால் இன்று வரை மறக்க முடியாது.   என் வாழ்க்கையில் முதன் முதலில் மெமோ வாங்குவதற்குக் காரணமாக இருந்தது அந்த மாணவிதான். 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? தலையணை அளவில் நாவல்களை வாசித்த மாணவர்கள்தான் நான் வியந்தவர்கள். 3. ஆசிரியப்பணியால் நீங்கள் அடைந்தது என்ன? இழந்தது என்ன? பேராசிரியர் என்ற முகவரியால் நிறைய மனிதர்களைச் சம்பாதித்து இருக்கிறேன். வாழ்க்கையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் நிலையை எட்டியிருக்கிறேன். படிப்பிற்காகவும் பணிக்காகவும் இழந்தது குடும்பத்தின் பிரிவு மட்டும்தான். 4. என்றாவது இந்த வேலை போதுமென நினைத்திருக்கிறீர்களா? என்றைக்கும் நினைத்ததேயில்லை. எப்போதும் இளைஞர்களோடு பணியாற்றுகிற சவாலான வாழ்க்கையை  வாழவே ஆசை. 5. இவ்வேலைக்கு வரவில்லையெனில் வேறு என்ன வேலைக்குச் சென்றிருப்பீர்கள்? ஒரு மனிதனுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான ஆசையிருக்கும். ‘சின்ன வயதில் டாக்டர் ஆகணும், பத்தாங்கிளாஸ் படிக்கும் போது கேட்ரிங் படிக்கனும், பன்னிரெண்டாங் கிளாஸ் முடிச்சதும்  வேதியியல் படிக்கவேண்டும்’ என ஆசைப்பட்டேன். குறைந்தபட்சம் ஆங்கில இலக்கியமாது படிக்கவேண்டுமென ஆசைப்பட்டேன். அதுவும் நடக்கவில்லை. பி. ஏ. முடித்தவுடன் வழக்கறிஞருக்குப் படிக்க ஆசைப்பட்டேன். விண்ணப்பக்கட்டணம் 400 ரூபாய் இல்லாததால் எம். ஏ. படித்தேன். நானும் என் தோழி மஞ்சுவும் வழக்கறிஞர் படிக்க ஆசைப்பட்டோம். அவர் இன்று புகழ்பெற்ற வழக்குரைஞராக வலம் வருகிறார். எம். ஏ. படிக்கவில்லை எனில் அவரோடு நானும் வழக்கறிஞர் ஆயிருப்பேன். 6. வகுப்பறையில் நுழைந்தவுடன் ஆசிரியராக மாறிவிடும் நீங்கள் வீட்டில் எவ்வாறு இருப்பீர்கள்? வீட்டிலும் அவ்வப்போது பேராசிரியர் மனநிலை வந்துகொண்டேதான் இருக்கும். 7. சக ஆசிரியர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ நீங்கள் முன்மாதிரியாக  இருக்கிறீர்களா? அல்லது அவர்களிடமிருந்து  இன்னும் கற்றுக் கொள்கிறீர்களா? நான் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் செய்கிற பணியை சிறப்பாகச் செய்தாலே நாம் மற்றவர்களுக்கு உதாரணமாக மாறிவிடுவோம். நமக்குத் தெரியாததை சக ஆசிரியர்களிடமிருந்து கற்றுக் கொள்வதில்தான் நம் உயரம் இருக்கிறது. எனது பேச்சிற்கும் தைரியத்திற்கும் அதைவிட அன்பிற்கும் என்னை முன்மாதிரியாக கொள்ளும் மாணவர்களும் நட்பு வட்டங்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 8. நீங்கள் பணியில் சேர்ந்தபோது இருந்த பாடமுறைகளிலிருந்து இப்போது நிறைய மாற்றங்கள். இது சுலபமாக இருக்கிறதா? கடினமாக இருக்கிறதா? காலத்திற்கேற்றவாறு இலக்கியம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது போல நாமும் இந்த இணைய உலகில் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும். கடினமென்று எதுவுமில்லை. கற்றலில்தான் இந்த வாழ்வு பயணிக்கிறது. 9. பெரும்பான்மையாகக் கல்வியறிவு பெற்றுவிட்ட இன்றைய சமூகம் இன்னும் மாற்றிக்கொள்ளாத விசயமாக எதைப் பார்க்கிறீர்கள்? சமூகம் வளர்ச்சி பெற்று வந்தாலும் மனிதர்கள் இன்னும் மாறாமல் இருப்பது என்றால் சாதி, மதம் என்ற பாகுபாட்டில் வாழ்வது. வாழ்க்கை நிலையானதல்ல என்பதை உணராமல் குரோதம், பொறாமை, பேராசை முதலிய எண்ணத்தோடு வாழ்வது. 10. இறுதிக் கேள்வி. இன்றைய மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? உலகை வெல்லக்கூடிய ஆயுதம் கல்வி. கல்வி என்பது அறிவை விரிவுசெய்து பகுத்தறிவோடு நடக்க வழிகாட்டுகிறது. இந்தக்கால இளைஞர்கள் கல்வி கற்பதோடு,  மனிதநேயத்தோடும் யாவற்றையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தோடும் இருக்க வேண்டும். அதோடு, நல்ல நூல்களை வாசிப்பதோடு நல்ல மனிதர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.——— நிறைவாக, அனுராதா.எஸ். நான் ‘அனுக்கா’ என அன்போடு அழைக்குமளவிற்கு நெருக்கமானவர். மாணவர்களை நண்பர்களாகக் கையாளும் வித்தை தெரிந்தவர். கடந்த பதினோரு வருடங்களாக சென்னை வேல்டெக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவருடைய சொந்த ஊர் சென்னை. அவரிடமும் அதே பத்துக் கேள்விகளை முன்வைத்தோம். 1. உங்களின் இத்தனை ஆண்டுகாலப் பணியில் நீங்கள் மறக்க முடியாத நிகழ்வாக ஏதேனும் ஒன்று? மாணவர்களுடன் சேர்ந்து கல்லூரியில்  மண் பானையில் விறகடுப்பில் பொங்கல் வைத்ததை மறக்க முடியாது. 2. உங்களையே வியக்க வைத்த மாணவர்கள் யாரேனும் உண்டா? எதனால்? நிறைய

திராவிடக் களஞ்சியமா? தமிழ்க் களஞ்சியமா?

திராவிடக் களஞ்சியமா? தமிழ்க் களஞ்சியமா?

சங்க இலக்கிய நூல்கள் சந்தி பிரிக்கப்பட்டு எளிமைப் பதிப்பாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் அறிவித்தது விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. திராவிடம் ஆரியத்துக்கு எதிரான சொல் என்று ஒரு தரப்பும் திராவிடமும் தமிழும் வேறு வேறல்ல, தமிழ் என்ற சொல்லின் திரிந்த வடிவம்தான் திராவிடம் என்று ஒரு தரப்பும் சொல்லிக்கொண்டிருக்கையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்தேசியப் பேரியக்கத்தின் பெ. மணியரசன், கார்ட்டூனிஸ்ட் பாலா போன்ற தூயமைவாத தமிழ்த்தேசியவாதிகள் திராவிடக் களஞ்சியம் என்ற பெயருக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருக்கிறார்கள். அரசியல்வாதியும் நடிகருமான சீமான் ஆரியத்தின் செல்லக்குழந்தைதான் திராவிடம் என்றும் திராவிடத் திருட்டுத்தனம் என்றும் தனது நீண்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதே சீமான்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு, எங்கள் பெரும்பாட்டன் மாயோன்தான் கிருஷ்ணன் என்று சொல்லி வழிபாடு நடத்துவதாகச் சொன்னார். மாயோன் கிருஷ்ணனாகத் திரிபடையும்போது, தமிழ் திராவிடமாகத் திரிபடைந்திருக்காதா என்ன? அவ்வளவு ஏன், பெரியாரின் பேரனாக இருந்த சீமான், பெரும்பாட்டன் மாயோனின் பேரனாக மாறி இருக்கும்போது, தமிழ் என்ற சொல் பிற இடங்களில் திராவிட எனத் திரிபடையாதா என்ன? திராவிடம் ஆரியத்தின் குழந்தை எனில், எச் ராஜா, நாராயணன், ராகவன், அண்ணாமலை வகையறாக்கள் எல்லாம் ஏன் திராவிடத்தைக் கண்டு பதறப்போகிறார்கள்? ஆனால் அந்த நபர்கள் யாருமே சீமான், மணியரசன் போன்றோர் குறித்து எதுவுமே பேசுவதில்லையே, அது ஏன் ? எப்போதும்போல இப்போதும் திராவிட தமிழ்தேசிய சர்ச்சை, சமூக ஊடகங்களில் மட்டுமே பேசுபொருளாகும். சீமான், பாலா போன்றோரின் திராவிடத் திருட்டு என்ற விமர்சனத்துக்கு திராவிடத் தலைவர்கள் எதிர்ப்பு அறிக்கை வெளியிடப்போகிறார்களா? அல்லது வழக்கம் போலவே மௌனம் காப்பார்களா? என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும். மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவிலிருந்து என்கிறது அறிவியல். ஆளுக்கு ஒரு இனம் எனில் ஒவ்வொரு இனக்குழுக்கள் வாழும் இடத்திலும் மனித இனம் ஒரே நேரத்தில் தோன்றியிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான ஆதாரங்கள் எதுவுமே இதுவரை கிடைக்கவில்லை. எனில், அறிவியல் கோட்பாட்டின்படி மனிதர்கள் அனைவரும் ஒரே இனம்தான். குடும்ப அமைப்பு உருவாகும் முன்பாக ஆண் பெண் கலப்பு என்பதற்கான வரைமுறைகள் எதுவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. தாய் வழிச்சமூகக் காலத்தில் பெண்ணே தன் விருப்ப ஆணைத் தேர்வு செய்திருப்பதால், இனக்கலப்பு என்பது இயல்பாகவே இருந்திருக்கும். அதனால், நான் தூய்மையான இனத்தைச் சேர்ந்தவன் என்று ஒருவர்கூட சொல்லிக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டுக்கு உள்ளேயே ஊருக்கு ஒரு தமிழ் பேசப்படுகிறது. எழுத்துகளின் பண்டைய வரிவடிவம் ஏராளமான மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது. போலவே அந்தந்த ஊரில் வரி மற்றும் ஒலி வடிவங்கள் மாறியிருக்கக்கூடும். அதனால் திராவிட மொழிக்குடும்பம், தமிழ் மொழிக்குடும்பம் என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. சங்க இலக்கியங்கள் தமிழில் இருப்பதால் தமிழ்க் களஞ்சியம் என்று பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கை தவறில்லை. அதுவே நியாயமானதும் கூட. ஏனெனில், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற பிற்போக்குவாதக் கருத்துகளை முன்வைக்கும் நூல்களையும் உள்ளடக்கிய தொகுப்புக்கு திராவிடக் களஞ்சியம் என்று பெயரிடுவதே அபத்தம்தான். நாளடைவில் தேவாரம், திருவாசகம், திருப்பாவை, திருவிளையாடல் புராணம் போன்றவையும்கூட திராவிடக் களஞ்சியத்தில் சேர்ந்துவிடக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது. பகுத்தறிவு மற்றும் முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட பெரியார், அண்ணா, பாரதிதாசன், சுரதா, கலைஞர் கருணாநிதி, எஸ்.எஸ்.தென்னரசு, இரா.அரங்கண்ணல், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, டி.கே.சீனிவாசன், குடியரசு, கி.வீரமணி, உள்ளிட்ட ஏராளமான திராவிட இயக்க எழுத்தாளர்களின் நூல்களை ‘திராவிடக் களஞ்சியம்’ என்ற பெயரில் கொண்டு வருவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், திராவிடம் என்பது வெற்றுப் பழம் பெருமை பேசும் கோட்பாடாக மாறிவிடாமல், முற்போக்குடனும் தொலைநோக்குடனும் அறிவியல் பார்வையுடனும் சமத்துவ நோக்குடனும் சிந்திப்பதற்கான அடையாளச் சொல்லாகவே இருக்க வேண்டும். திராவிடம் என்பது எப்போதும் ஆரியத்தின் நேரடி எதிர்ச்சொல்லாக இருப்பதே காலத்தின் தேவை. இதற்கிடையே, இந்தக் கட்டுரையை நிறைவு செய்து வெளியிடவிருந்த நேரத்தில், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். “சர்ச்சையை எழுப்புபவர்கள், வெளியிடப்பட்ட அறிவிப்பை முழுமையாகப் படிக்காமல் விமர்சிக்கிறார்கள். சங்ககால நூல்கள் சந்தி பிரிக்கப்பட்டு, இளைய தலைமுறையினர் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் வெளியிடப்படும். திராவிடக் களஞ்சியம் என்பது கடந்த 150 ஆண்டுகளில் வெளிவந்துள்ள திராவிட இயக்க உணர்வாளர்கள் சமூக சீர்திருத்தம் சார்ந்து எழுதிய, மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, சமூக நீதி உள்ளிட்டவை சார்ந்த நூல்கள், கால்டுவெல் முதல் ஆர். பாலகிருஷ்ணன் உள்ளிட்ட சமகால ஆய்வாளர்கள் வரையிலான ஆய்வு நூல்கள் ஆகியவற்றின் தொகுப்பு. இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமல், இரண்டையும் போட்டு குழப்பிக்கொண்டு, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல வேண்டாம்” என்று கூறியுள்ளார். அவ்வகையில் நமது எண்ணத்தின் வெளிப்பாடே அரசின் நிலைப்பாடாக உள்ளது எனபது மகிழ்வான செய்தியாகும். இந்தக் குழப்பத்துக்குக் காரணமான, செய்தி – மக்கள் தொடர்புத்துறை அறிவிப்புப் பதாகையும் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது.

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

மீண்டும் பள்ளிக்குப் போகலாம்

செப்.1 : தமிழ்நாடு முழுவதும் பல மாத இடைவெளிக்குப் பின்னர், 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்காக நாம் எடுத்த முயற்சிகளும் கொடுத்த அழுத்தங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. சிலர் நம்மீது கோவப்படவும் சிலர் வருந்தவும் செய்தார்கள். ஆனால், அனைத்தும் கடந்து நம்மாலான முயற்சிகளைத் தொடர்ந்து செய்துவந்தோம். பள்ளிகள் திறக்கப்பட்டதில் மிகச் சிறிய அளவில் நாமும்‌ பங்காற்றியிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியே. மகிழ்வான இந்த வேளையில், அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் ஹோசிமின் திலகர், தோழர் க.யோகராஜன், பேராசிரியர் ச.மாடசாமி, ஊடகவியலாளர் தோழர் அ. குமரேசன், NORDIC FORUM தலைவர் தோழர் விஜய் அசோகன் ஆகியோரின் பங்களிப்பும் ஆதரவும் நன்றியுடன் நினைவுகூறத்தக்கவை. மாணவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீண்டும் நேரடிக் கற்றல் அனுபவத்தைப் பெற்று சிறப்புற அன்புமிக்க வாழ்த்துகள்! சுவடு பதிப்பகம்A3 ஆசிரியர் குழு அரசுக்கு நாம் அனுப்பிய கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய முழுமையான கடிதத்தை இங்கே வாசிக்கலாம்.