எங்கே போகிறது கல்வி..? பகுதி 4

எங்கே போகிறது கல்வி..? பகுதி 4

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி நிறைவுப் பகுதி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர்க் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்களின் நிகழ்த்திய உரையின் நிறைவுப் பகுதியைப் பார்க்கலாம். அத்தியாயம் : 4 – கல்வியைக் கற்றுத் தரும் முறைமைகள் (Pedagogy): கல்வியைக் கற்றுத் தருவதற்குப் பல்வேறு முறைமைகள் என்பது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தோன்றியிருக்கின்றன. வரலாற்று ரீதியிலே கல்வி கற்பிக்கப்படும் முறைமைகள் நிறைய இருக்கின்றன. அதைப்பற்றி இந்த அறிக்கையில் விளக்கமாகப் பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கையை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. கல்வி என்பது செயல்வழிக் கற்றலாக இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை சொல்கிறது. கல்வி என்பது ஒரு குழந்தையை உற்சாகப்படுத்திப் படிக்க வைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழலை ஒரு வகுப்பறையும் ஆசிரியரும் ஏற்படுத்த வேண்டும், ஆசிரியர் மாணவர்களை வரவேற்கக்கூடியவராக இருக்க வேண்டும், வகுப்பறை என்பது செயல்வழிக் கற்றல் இடமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இந்த அறிக்கை விளக்கமாகக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது மிக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆகா! மிக அருமையான ஒரு அறிக்கையாக இருக்கிறதே, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லமுடியாதே என்ற எண்ணம் தோன்றும்படி இருக்கிறது. அதுபோன்ற கட்டமைப்பு, கற்பித்தல் முறைகளைப் பின்பற்ற சிறப்பான வழிகளைக் கூறுகிறார்கள். ஆனால் இங்கு அடிப்படையாகக் கவனிக்க வேண்டியது, கற்றுத் தருவதற்கு நூறு அல்ல, ஆயிரம் அல்ல, பல்லாயிரக்கணக்கான முறைகளையும் வழிகளையும் ஆசிரியர்களே நாள்தோறும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட முறைமைகளையெல்லாம் பின்பற்றினால் மாணவர்கட்கு அறிவைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை ஆசிரியர்களே யோசித்து, பல்வேறு விசயங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அடிப்படையான உண்மை. இந்த அறிக்கையை நாம் வாசித்துப் பார்த்தால் பல்வேறு அம்சங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் சொல்வதைத்தான் நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்ற வேண்டும் என்று இவர்கள் கூறுவதைத்தான் நாம் கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த நாட்டில், இத்தனை மாநிலங்கள் இத்தனை மொழிகள் பேசக்கூடிய நாட்டில், இத்தனைக் கலாச்சாரப் பின்னணிகள் உள்ள நாட்டில், இவர்கள் சொல்லக்கூடிய இந்தக் கல்வி முறைமைகளைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று எப்படிக் கூற முடியும் என்பதுதான் இங்கே அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. அந்தக் கேள்விக்கும் அவர்கள் ஓரிடத்தில் விடை வைத்திருக்கிறார்கள். என்ன வைத்திருக்கிறார்கள் என்றால், ஆசிரியர்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது, ஆசிரியர்களும் அவர்களாகவே யோசித்து அவர்களாகவே பல விசயங்களைச் செய்ய வேண்டும் என்றுகூடச் சில இடங்களில் குறிப்பிடுவதை நாம் பார்க்க முடியும். ஆசிரியர்கள் பாடல்களின் மூலமாக, விளையாட்டின் மூலமாக, செயல்வழிக் கற்றலின் மூலமாக என்று பல்வேறு முயற்சிகள் வழியாக மாணவர்களுக்கு அறிவைக் கொண்டுபோய்ப் சேர்க்கலாம் என்று பலப்பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள். இதை ஆசிரியர்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றெல்லாம்கூடச் சொல்கிறார்கள். ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஆசிரியர்கள் போதனா முறையில் என்ன சொல்லித்தர வேண்டும்? மாணவர்களிடம் எப்படிப்பட்ட திறனைக் (Competency) கொண்டுவர வேண்டும்? கல்வி விளைவுகள் (learning outcomes) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஆசிரியர்கள் யோசித்து, தங்கள் திட்டங்களில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆசிரியர்கள் பாடத்தின் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இங்கே ஆசிரியர்கள் வழிகாட்டி சொல்லித் தர வேண்டிய பாடங்கள், மாணவர்களே செய்து பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் என்றெல்லாம் பல வகையாகப் பிரித்துப் பிரித்துச் சொல்லியிருக்கின்றார்கள். இதெல்லாம் படிப்பதற்கு நன்றாகவும் பாராட்டத்தக்கதாகவும்தான் இருக்கின்றன என்பது உண்மை. மற்றொரு இடத்தில் அவர்கள் சொல்வதுபோன்று ஐந்து கட்டங்களாகப் பாடங்கள் சொல்லித்தர வேண்டும். அது அறிமுகம், ஒரு கோட்பாட்டை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், நடைமுறையில் தொடர்புபடுத்துவது, அதை எங்கே கொண்டுசென்று (Application) பயன்படுத்துவது, அதற்கு வெவ்வேறு அம்சங்களில் பொருத்திப் பார்ப்பது, அதை விரிவாக்குவது என்று பல வகைகளிலும் விளக்கங்களை முன் வைத்துள்ளனர். அதேபோல, ஆசிரியர்கள் போதிப்பதில், தான் செய்து காட்டுவதும், ஆசிரியர்களுடன் சேர்ந்து செய்வதும், இறுதியில் மாணவரையே செய்ய வைப்பதும் என்ற வகையில் – I do it , We do it , You do it and you do it alone – பல்வேறு கட்டங்களில் அறிவைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதெல்லாம் குறித்து அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கின்றனர் என்பதெல்லாம் உண்மைதான். ஆக, மாணவர்களுக்குக் கற்கும் பொறுப்பு எப்படியெல்லாம் இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுடன் உகந்த உறவை வைத்துக்கொள்வதோடு பெற்றோர்களோடும் நல்ல உறவை வளர்த்துக்கொண்டு மாணவர் – பெற்றோர் இருவருடனும் இயைந்து பழகி அவர்கள் மனத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதேபோல எண்களை அறிவித்தல், எழுத்துகளை அறிவித்தல் குறித்து நாம் அறிவோம். அதில் எழுத்தை அறிவித்தல் என்பதில் Oral language Development, Word Recognition, Reading and writing என்ற நான்கு கட்டங்களாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதேபோல எண்களைக் கற்பிப்பதில் வாய்மொழி வழியாகக் கணக்கைக் கற்றுத் தருவது (Oral Math talk), பல்வேறு செயல்வழிக் கற்றல் வழியாகக் கணக்கைக் கொண்டு சேர்ப்பது, ஒரு குழந்தைக்கு எளிதாகப் புரியக்கூடிய கணக்கிலிருந்து படிப்படியாக சிக்கலான கணக்கு விஷயங்களை எப்படிக் கொண்டு சேர்ப்பது, விளையாட்டு வழியாகக் கணக்கை எடுத்துச் செல்வது (Math game) என அனைத்து வழிகளையும்பற்றிக் கூறியிருப்பது உண்மைதான். இங்கு நமக்கு அடிப்படையான சில கேள்விகள் தோன்றுகின்றன. எண்ணை அறிவித்தலும் எழுத்தை அறிவித்தலும் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்கு மிகமிக அடிப்படையான விஷயங்கள் என்று அறிவோம். Basic Building Block என்று சொல்வார்கள். மிக அடிப்படையான விஷயத்தை, மிகத் திறமையாக, தெளிவாக மாணவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அடிப்படையான தேவையாக இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்கு எத்தனை விதமான கற்பித்தல் முறைகள் இருக்கின்றனவோ அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று பலவாறு கூறியுள்ளதும் சரிதான். ஆனால் என்னுடைய கேள்வி, அப்படிப்பட்ட சூழலைத்தான் பள்ளிகளிலே மத்திய, மாநில அரசாங்கங்கள் ஏற்படுத்தித் தந்து இருக்கின்றனவா? எத்தனைப் பள்ளிகளிலே மாணவர்களுடன் உரையாடக்கூடிய நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களே இல்லை, போதுமான எண்ணிக்கையில் பள்ளிகளும் இல்லை. ஒருவேளை அரசுப் பள்ளிகள்தான் இப்படி இருக்கின்றன என்று சொன்னால், தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளை நடத்தக்கூடிய இடங்களாக இருக்கின்றன. இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்குக்கூடத் தீர்வு கொடுக்காமல், இப்படிப்பட்ட ஒரு அறிக்கையில் நேர்த்தியாக விஷயங்களை விளக்கியிருக்கிறார்களே ஒழிய, இதையெல்லாம் எங்கே போய் இவர்கள் அமல்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறையில் உரையாட முடியாத வகையில் ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை கொடுத்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் கூடுதலாக ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையைக் கொடுத்து, எதிர்த்துக் கேள்விகூடக் கேட்க முடியாத நிலையில் வைத்திருக்கின்றார்கள். இதற்கான தீர்வை NEP 2020 எங்கே முன்வைத்துள்ளது? அல்லது NCFFSதான் இதற்கான தீர்வை எங்கே முன்வைத்துள்ளது? இவற்றையெல்லாம் தாண்டி, இன்று ஆசிரியர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள்? ஒரு பள்ளிக்கு நாம் சென்றோமானால் அவர்கள் உட்காருவதற்கு மேசை, நாற்காலிகூடக் கிடையாது. உட்காரக் கூடாது, உட்கார முடியாது. அவர்களுக்கு என்ன பணிக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உட்கார வேண்டும். நல்ல விஷயம்தான். மூன்று வயது, நான்கு வயது, ஐந்து வயது வரை மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர் இருப்பது மிக மிக நன்மையான விஷயம், சரியான விஷயம்தான். ஆனால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு வந்ததற்குப் பிறகு ஆசிரியர் எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது, அங்கு கரும்பலகை இருக்க வேண்டும், கரும்பலகையில் எழுதிக் கற்பிக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. அதற்கு இவர்கள் என்ன தீர்வு வழங்குகின்றார்கள் என்று பார்த்தால், அந்த வகுப்பறையில் கீழே உயரம் குறைந்த இடத்திலே மாணவர்கள் எழுதிப் பார்க்கும் வகையில், கரும்பலகையை அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாம் காலம் காலமாகப் பார்த்து வருவது என்னவென்றால் ஆசிரியர்தான் எண்களையும் எழுத்துக்களையும் அறிவிப்பவராக இருப்பார். ஆசிரியர்தான் பயிற்சியளிப்பவராக இருப்பார். அப்படி இருக்கும்போது, கரும்பலகை என்பது மாணவர் உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதும் அங்கே மாணவர்களுடன் இணைந்து அமர்ந்து கொண்டு கற்றுத்தர வேண்டும் என்று சொல்வதும் ஆசிரியர்களை எந்தவொரு நிலையில் கொண்டு சென்று வைத்துவிட்டது என்பதைப் பார்க்க வேண்டும். ஆசிரியர் என்பவர் சொல்லித்தரக்கூடிய, கற்றுத்தரக்கூடியவராக இருக்கும் நிலையை மாணவர்கள் பார்க்க வேண்டும். இவர்கள் கூட குரு குரு என்று சொல்கிறார்களே தவிர, அங்கே ஆசிரியரை எண்ணையும் எழுத்தையும் கற்றுத்தரக்கூடியவராக இவர்கள் வைக்கவில்லை. இப்போது நடைமுறையிலிருக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக இவ்வளவு சிரத்தை எடுத்து எண்ணையும் எழுத்தையும் அறிமுகம் செய்தால்கூட, இங்கு ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லை. அவர்களால் கணக்குப்போட முடியவில்லை என்ற சூழலைத்தான் உருவாக்கி வைத்துள்ளனர். அப்படி இருக்கும்போது இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் மிகப்பெரிய தோல்வியில்தான் முடிந்துள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலாவது காரணம், கற்றுத் தரக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியரை மாணவருக்கு நண்பர்களாக ஆக்குவோம் என்ற பெயரிலே ஆசிரியர் நிலையை வைத்தது. மற்றொரு காரணம், முதலாம் வகுப்பிலிருந்தே தேர்ச்சி – தோல்வி என்ற நிலையே இல்லை. இது வந்தபிறகு முதலாம் வகுப்பில் சேர்ந்தவுடன் எட்டாம் வகுப்பு வரை தொடர்ச்சியான தேர்ச்சிதான் என்ற நிலை வந்தபிறகு பள்ளியில் ஒரு சிரத்தையான சூழல் இல்லை. ஆகவேதான் இன்றைய நிலையில் எண்ணையும் எழுத்தையும் அறிவித்தல் என்பது தோல்வியில் முடிந்துள்ளது. இது கடந்த பதினைந்து / இருபது ஆண்டுகளுக்குள்ளாக நடந்துள்ளதேயன்றி அதற்கு முன்பாக இந்நிலை தமிழ்நாட்டில் இல்லை. ஆக, Pedagogy என்று இவர்கள் சொல்லும் கற்றுத்தரும் முறைமைகள் என்பதும் ஒரு பெரிய தோல்வியில்தான் போய் முடிந்திருக்கிறது. மாணவர்களோடு உட்கார்ந்துகொண்டுதான் ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும் என்ற நிலையும் பாடப் புத்தகங்களே வேண்டாம் என்று அறிவிக்கும் நிலையும் அப்படியே பாடப் புத்தகங்கள் இருந்தாலும் அதற்கான பாடத் திட்டத்தை என்.

எங்கே போகிறது கல்வி..? பகுதி 3

எங்கே போகிறது கல்வி..? பகுதி 3

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் நிகழ்த்திய உரைத் தொகுப்பின் தொடர்ச்சியைப் பார்க்கலாம். கற்பித்தலைப் பாழாக்கும் எமிஸ் (EMIS – Education Management Information System): அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களது நிலையையும் பார்க்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பல தொடர்ச்சியான பணிச்சுமைகளுக்கு ஆசிரியர்கள் உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். EMIS (Education Management Information System) என்ற கல்வி மேலாண்மைத் தகவல் முறையைக் கையாளும் நபர்களாக ஆசிரியர்களாக நடத்தப்படுகின்றனர். மாணவர் விபரங்களை நாள்தோறும் சேகரித்து, இந்த EMIS செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இது மட்டுமல்ல, எண்ணிறைந்த பணிகளான, வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, தேர்தல் வந்துவிட்டால் வாக்குச் சீட்டை வீடுவீடாகத் தேடிச்சென்று கொடுத்துக் கையெழுத்து வாங்குவது, முதியோர் கல்வி வளர்ப்பது, இது போதாதென்று இல்லம் தேடிக் கல்வி என்று பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதையெல்லாம் ஆசிரியர்களின் பணிகளாகத் தருகிறார்கள். ஆசிரியர்கள் எந்தவொரு பணியும் இல்லாமல் வெறுமனே அமர்ந்து இருப்பதைப்போல நினைத்து மற்ற பணிகளை எல்லாம் வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் பள்ளிகளில் மாணவர்களைத் தொடர்ச்சியாக நாள்தோறும் சந்திக்கக்கூடிய வாய்ப்பையே இன்றைய ஆசிரியர்கள் பெற முடியாத ஒரு சூழல்தான் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாகப் பள்ளிக்குச் செல்ல விரும்பக்கூடிய ஆசிரியர்கள், மாணவர்கட்குக் கற்றுத் தர ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், அங்கே மாணவர்களைத் தொடர்ச்சியாக சென்று பார்ப்பது, அவர்களோடு இருப்பது என்ற நிலையே இல்லாத ஒரு சூழலை உருவாக்கிவிட்டார்கள். இதுதான் இன்று அரசுப் பள்ளிகளிலே நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் தனியார் பள்ளிகளை எடுத்துக்கொண்டால், அங்கே கடுமையான பணிச்சுமையை ஆசிரியர்களுக்கு வழங்கி, 8 மணி நேரம் என்பதெல்லாம் தாண்டி, 10 மணி நேரம், 12 மணி நேரம் என்று பள்ளிகளிலேயே இருந்து அனைத்துப் பணிகளையும் செய்துவிட்டு மிகவும் களைப்பாக வீடுகளுக்குச் செல்லும் நிலைமையில், எந்தவிதமான பணிச்சுமை குறித்தும் கேள்வி கேட்க முடியாமல் ஒரு அடிமை நிலையில்தான் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படி ஆசிரியர்களைப் பற்றியோ அவர்கள் பணிச்சூழல் பற்றியோ தேசிய கல்விக் கொள்கை 2020 ஆவணமோ அல்லது NCFFS ஆவணமோ வாயே திறக்கவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த ஆவணத்தின் அனைத்து அம்சங்களையும் தொடர்ச்சியாக வாசித்தால் ஆங்கிலத்தில் Rosy Picture என்று ஒன்றைச் சொல்வார்கள். அதாவது மிகவும் அருமையாகப் படம் காட்டுவது. அதுபோலத்தான் இவர்களும் ஒரு பள்ளி எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர்களுக்கு என்னவெல்லாம் வசதி வாய்ப்புகள் இருக்க வேண்டும்? இதையெல்லாம் தாண்டி மாணவர்களுக்கு எப்படியெல்லாம் வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்? என்று மிகவும் அழகான காட்சியை இந்த ஆவணத்தில் ஏற்படுத்துகிறார்கள். ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று பார்த்தோமானால் அங்கே அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் மாணவர்கள் தத்தளித்துக்கொண்டிருப்பதும் கடுமையான பணிச் சுமையில் ஆசிரியர்கள் வைக்கப்பட்டிருப்பதும் அப்படியே நேர் எதிரான ஒரு நிலையை – கிட்டத்தட்ட அடிமைத்தனமான ஒரு நிலையை அங்கே நாம் காணமுடிகிறது. இதைப்பற்றியெல்லாம் இந்த அறிக்கைகள் வாயைத் திறக்க மறுப்பது ஏன் என்ற கேள்விதான் இங்கு எழுகிறது. மொழிக் கொள்கை: மொழிக்கல்வி குறித்து NCFFS என்ன கூற வருகிறது மற்றும் மாணவர்களுக்கு எண்களைக் அறிவித்தல் குறித்தும் எழுத்தை அறிவித்தல் குறித்தும் எப்படிப்பட்ட இலக்கை அது நிர்ணயித்திருக்கிறது என்பதை அடுத்து காணலாம். இங்கு ஏற்கனவே நம்மிடையே அறிமுக உரையாற்றிய பேராசிரியர் சிவக்குமார் அவர்கள், இந்த ஆவணத்தில் கூறப்பட்டிருக்கும் L1, L2, L3 குறித்துப் பேசினார். அதென்ன L1 , L2, L3? ஒரு குழந்தை, தான் வாழக்கூடிய வீட்டில் தனது பெற்றோர்கள் எந்த மொழியைப் பேசுகிறார்களோ அதைத்தான் அவர்கள் L1 என்று கூறுகிறார்கள். அதைத்தான் வீட்டு மொழி (Home Language) அல்லது தாய் மொழி (Mother tongue) அல்லது Familiar Language என்று சொல்கிறார்கள். இங்கே ஒரு உதாரணத்திற்காக, வீட்டிலே பேசுவதைத் தாய்மொழி என்று வைத்துக்கொண்டால், அதையே அவர்கள் L1 என்கின்றனர். பிறகு ஏன் அதை Home Language என்று சொல்ல வேண்டும்? அல்லது Familiar Language என்று சொல்ல வேண்டும்? என்று அதை நாமாகச் சற்று யூகித்துத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவர்கள் வேற்று மாநிலத்திலிருந்து வந்து பிறிதொரு மாநிலத்தில் வாழக்கூடியச் சூழலிலே, அங்கே அந்தத் தாய்மொழியை எழுத்து வடிவிலோ அல்லது வாசித்தல், எழுதுதல் போன்ற விஷயங்களைச் செய்யமுடியாத ஒரு சூழலிலே, அந்த மொழி என்பது அங்கே வீட்டில் பேச்சில் வழங்கக்கூடிய மொழியாக மட்டும்தான் இருக்கிறது. ஆனால் பள்ளிக்குச் சென்றால் அந்த மொழி என்பது அங்கே இருக்காது. இது வேற்று மாநிலங்களிலிருந்து வந்து ஒரு மாநிலத்தில் குடியேறியவர்களின் நிலையாக இருக்கும் என்று யூகிக்கத் தோன்றுகிறது. இதைத்தான் அவர்கள் L1 என்று சொல்கிறார்கள். ஆகவே L1 என்ற, வீட்டில் பேசப்படும் இந்த மொழியை மாணவர்களுக்கு உகந்த மொழியாக அறிவித்து, அந்த வகையிலே பள்ளிகளில் அந்த மொழியைப் பிரதானமாக சொல்லித் தரவும் அதன்மூலமாக மற்ற பாடங்களை மாணவர்களுக்குப் போதிக்கவும், அதாவது பயிற்று மொழியாக L1 என்ற அந்த மொழியைப் பயன்படுத்தவும் கூறுகிறார்கள். குழந்தைகளுக்கு L1 மொழியைப் பாடங்களைச் சொல்லித்தரக்கூடிய மொழியாகக் கூறுகிறார்கள். அடிப்படையில் தர்க்கரீதியாக இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கிறது. அடுத்து L2, L3 என்று சொல்லக்கூடிய மொழிகளைப்பற்றி எடுத்துக்கொண்டால், மாணவர்கள் ஒரே நேரத்தில் தாய் மொழியையோ வீட்டிலே வழங்கப்படும் மொழியையோ பள்ளிகளில் கற்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தி, அங்கே கற்க வேண்டும் என்று முதலாவதாகக் கூறிவிட்டு, இரண்டாவதாக, ஒரு குழந்தை – அதாவது முதல் வயதிலிருந்து எட்டு வயது வரை அதிகப்படியான மொழிகளைக் கற்றுத் தேறக்கூடிய வாய்ப்பை அக்குழந்தையினுடைய மூளையின் வளர்ச்சி வழங்குகிறது என்று கூறுகிறார்கள். தர்க்கரீதியில் யோசித்துப் பார்த்தால் உண்மைதான். ஆரம்பக் காலகட்டத்தில், ஒரு குழந்தை தனது எட்டு வயது வரை பல மொழிகளைக் கற்கக்கூடிய மிகச் சிறந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. அத்தகைய மூளை வளர்ச்சி அங்கே நடக்கிறது என்பது விஞ்ஞான ரீதியில் உண்மையாக இருக்கலாம். ஆனால் இங்கு எழக்கூடிய கேள்வி என்னவென்றால், அதற்காக நடைமுறையில் ஒரு குழந்தையால் எத்தனை மொழிகளைக் கற்க முடியும்? ஒரு குழந்தையைச் சுற்றி எத்தனை மொழிகள் பேசப்படுகின்றன என்பதுதான் அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. ஒரு குழந்தையைச் சுற்றி அக்குழந்தை தெரிந்துகொள்வதற்காக இயற்கையாக அத்தனை மொழிகள் பேசப்படுகின்றனவா? அது இல்லை என்று சொன்னால், வகுப்பறையிலே இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி, நான்கு, ஐந்து என்று பல மொழிகளை போதனையின் மூலம் சொல்லித் தர முடியுமா என்றால், நடைமுறையில் அதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன. இவர்களே பல இடங்களில் இந்த ஆவணத்தில் கூறுவதுபோல, ஒரு குழந்தை இயற்கையாகத்தான் மொழிகளைக் கற்றுக்கொள்ளும். குழந்தையின் மூளை வளர்ச்சி என்பது ஒன்று முதல் எட்டு வயது வரை படுவேகமாக இருந்தாலும் பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் திறன் இயற்கையான முறையில்தான் நடக்கும் என அவர்களே கூறிவிட்டு, ஆனால் பள்ளிகளில் இரண்டாவது மொழி, மூன்றாவது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர்கள் சொல்வது அவர்களுடைய தர்கத்திற்கே புறம்பாகச் செல்வதைக் காட்டுகிறது. ஆகவே, ஒரு குழந்தை இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி எல்லாம் கற்க வேண்டிய அவசியம் இருக்கிறதா என்று பார்த்தால் தர்க்கரீதியில் அது இல்லை என்பதே பதில். ஏனென்றால் அது இயற்கையாக நடக்க வேண்டும். அப்படி என்றால் ஒரு குழந்தை வேறு மொழிகளே கற்றுக்கொள்ளக்கூடாது என்று நாம் சொல்கிறோமா? நிச்சயமாகக் கிடையாது. ஒரு குழந்தை, வாய்ப்பு இருந்தால் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கற்றுக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவது – இயற்கைச் சூழலுக்கு மாறாக நடந்துகொள்வது என்பதைத்தான் நாம் மறுக்க வேண்டியிருக்கிறது. ஆகவே, ஒரு குழந்தை எதார்த்தமாகத் தனது தாய் மொழியை தன் வழக்கத்திலிருக்கக்கூடிய மொழியைக் கற்றுக்கொள்வது, அதன்மூலமாகப் பிற அறிவைப் பெறுவது என்பதுதான் எதார்த்தமாக இருக்க முடியும். இரண்டாவது மொழி, மூன்றாவது மொழி என்பதெல்லாம் அந்தக் குழந்தைக்கு அந்த வயதில் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டு வர வேண்டுமா என்றால், தேவையில்லை என்பதே நாம் கூற வருவது. ஒரு குழந்தைக்கு ஆறு வயதுக்குப் பின்னர், தாய்மொழி மட்டுமல்லாது பிறிதொரு மொழியையும் சொல்லித் தரக்கூடிய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்பதை நாம் கூறுகிறோம். இதே புத்தகத்திலே L 1, L 2, L 3 என்று கூறிவிட்டு, பிறிதொரு இடத்தில் R 1, R 2, R 3 என்று கூறுகிறார்கள். இவற்றுக்கிடையில் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் கிடையாது. எந்த மொழியை வீட்டில் வழங்குகிறார்களோ அந்த மொழியை ட1 என்று வைத்துக் கொண்டால், அந்த மொழியை ஒரு குழந்தை எழுத்து வடிவிலோ அல்லது வாசிப்பதிலோ கற்க முடிந்தால் அதை R1 என்கின்றனர். R என்றால் இங்கே Read and Write என்று குறிப்பிடுகிறார்கள். எனவே எந்த மொழியில் பேசுகிறதோ அதை எழுத்து வடிவில் எழுதினாலும் படித்தாலும் அதை R1, R2, R3 என்று சொல்கிறார்கள். ஆகவே L1, L2, L3 என்பதும் R1, R2, R3 என்பதும் ஒன்றுதான். ஆனால் ஒரு சில நேரங்களில் வீட்டில் பேசக்கூடிய மொழி ஒன்றாகவும் பள்ளிகளில் சென்று படிக்கக் கூடிய மொழி வேறாகவும் இருக்கலாம். வேற்று மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து பிறிதொரு மாநிலத்தில் வசிப்பவராக இருந்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கு அந்தச் சூழல் ஏற்படலாம். இப்போது மற்றொரு விசயத்தையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. என்னவென்றால், ஒரு குழந்தை வீட்டில் பேசக்கூடிய L1 மொழி, அது தாய்மொழியாக இருக்கும் பட்சத்தில், அந்தத் தாய் மொழியில் நல்ல பயிற்சியைப் பெற்றுவிட்ட பின்பு, L2 L3 என்ற அடுத்தடுத்த மொழிகளையும் அந்தக் குழந்தை கற்றுத் தேர்ச்சி பெற பள்ளி வாய்ப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று சொல்கிறார்கள். ஒரு வாதத்திற்காக அது சரி என்று நாம் வைத்துக்கொண்டால்கூட, இங்கு ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அவர்கள் என்ன கூற வருகிறார்கள் என்று பார்த்தால், L2 அல்லது

எங்கே போகிறது கல்வி?  பகுதி 2

எங்கே போகிறது கல்வி? பகுதி 2

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி (நேற்றைய முதல் பகுதியின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை அமுல்படுத்துகிற அபாயமான நடவடிக்கைகள் குறித்து, அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி நடத்திய இரண்டாவது விழிப்புணர்வுக் கூட்டம் குறித்த கட்டுரைத் தொகுப்பு இது. அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர் கூட்டத்தில், பேராசிரியர் சிவகுமார் ஆற்றிய உரையை முந்தைய பகுதியில் வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்கள் நிகழ்த்திய உரையின் தொகுப்பைப் பார்க்கலாம். அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு சிறப்புரை: பேரா. சீ. ஹோசிமின் திலகர் நமது அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் சார்பாக NEP 2020இன் முன்மொழிவாக இருக்கக்கூடிய, அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற ஆவணத்தைப் பற்றிய ஆய்வின் இரண்டாவது கூட்டத்தில் இணைந்திருக்கிறோம். இதில் மொழிக்கல்வி குறித்த அணுகுமுறையும் கல்வி அறிவும் (அத்தியாயம்-3), பாடத்திட்ட முறைமை (அத்தியாயம்- 4) ஆகியவை குறித்து எனது கருத்துக்களை முன்வைக்க வாய்ப்புத் தந்தமைக்கு மிக்க நன்றி. முதல் இரண்டு அத்தியாயங்களின் சாராம்சம்: இந்தியாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் அரசியல் சாசன மதிப்புகளையும் அதனுடைய அடிப்படைக் கடமைகளையும் பெறக்கூடிய வகையில், ஒரு சிறந்த கல்வியை அனைவருக்கும் வழங்குவதற்கான நோக்கத்தை NEP 2020 கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்துவதற்காக ECCE – அதாவது, குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு எப்படிப்பட்ட கல்வியை வழங்க வேண்டும் என்று கூறுகிறது. தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCF) குறிப்பாகச் சொல்லவருவது இந்தியப் பாரம்பரியத்தில் கல்வி வேர் விட்டுள்ளது (It is rootedness in Indian traditions) என்பதாகும். அதாவது, முன்பருவ மழலையர் கல்வியானது இந்தியாவின் பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்க வேண்டும் என்று கூறுகிறது. ஒரு குழந்தை, கல்வி பெறும் போக்கில் அடையும் வளர்ச்சியில் அந்தக் குழந்தைக்கு உள்ளேயும் வெளியேயும் எப்படிப்பட்ட ஆழமான இந்தியக் கருத்தாக்கத்தைத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஒருபுறம் இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் இந்த NCFFS ஆவணம், மறுபுறம் குழந்தையின் உள்ளேயும் வெளியேயும் இந்தியாவின் கருத்தாக்கம், இந்தியாவின் பார்வை குழந்தைக்குள் செல்ல வேண்டும் என்று விரும்புகிறது. இங்கேதான் அடிப்படையான ஒரு கேள்வி எழுகிறது. கல்வியின் நோக்கம் என்பது முதலில் எழுத்தை அறிவித்தல், எண்களை அறிவித்தலில் தொடங்க வேண்டும் என்பதை அறிவோம். ஆனால், இந்தியாவின் பாரம்பரியத்தையும் இந்தியாவின் பார்வை, அதனுடைய எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும், இந்தியா எதை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம், ஒரு குழந்தை தனக்கு உள்ளேயும் வெளியேயும் பார்க்க வேண்டும் என்று சொல்வது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. அத்தியாயம் : 3 – மொழிக்கல்வி குறித்த அணுகுமுறையும் கல்வி அறிவும் தேசிய கல்விக் கொள்கை 2020 குழந்தைப் பருவக் கல்வியில் இரண்டு கட்டங்கள் அமைய வேண்டும் என்று கூறுகிறது. முதலில் 3 வயது முதல் 6 வயது வரை ஒரு கட்டமாகவும் பிறகு 6 வயது முதல் எட்டு வயது வரை மற்றொரு கட்டமாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறது. உலகில் எந்தவொரு நாட்டிலும் மூன்று வயதில் கல்வி என்பது கட்டாயமாக இருக்க வேண்டும் என்று எந்தவொரு கல்வி அமைப்பும் கூறியதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், முதன்முதலாக இந்தியாவில், தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரிலே மூன்று வயதுக் குழந்தை கல்வி அமைப்புக்குள் வர வேண்டும் என்று ஒரு கல்விக் கொள்கை கூறியிருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் ECCE-இல் என்ன சொல்கிறார்கள் என்று சொன்னால், அங்கன்வாடிகள் அல்லது பால்வாடிகள் அல்லது முன் பருவ மழலையர் கல்வி (Pre-schools) என்று வரையறுக்கிறார்கள். அதாவது 3 வயது முதல் 6 வயது வரை நிச்சயமாக ஒரு குழந்தையைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். ஏற்கனவே அங்கன்வாடிகளும் பால்வாடிகளும் நம் நாடு முழுவதும் இருக்கின்றன. இது ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதைக் கல்வி அமைப்புக்குள் வரையறுப்பதுதான் இங்கே புதிதாக இருக்கிறது. அதுதான் இங்கே பல நெருடல்களை ஏற்படுத்துகிறது. ஆரம்பகாலக் கல்வி இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும் இந்த அறிக்கை, ஒரு குழந்தை ஆறு வயது முடிந்த பிறகுதான் முதலாவது வகுப்பு செல்ல வேண்டும் என்று NCFFS வரையறுக்கிறது. ஆறிலிருந்து ஏழு வயது வரை முதலாம் வகுப்பும் ஏழு வயது முதல் எட்டு வயது வரை இரண்டாம் வகுப்பு என்று அது வரையறுத்துள்ளது. இப்போது இன்னொரு கேள்வி எழுகிறது. ஒரு குழந்தை மூன்று வயது முதல் ஆறு வயது வரை படிக்காமல் விட்டுவிட்டால், அதாவது அங்கன்வாடிக்குச் செல்லாமல் இருந்துவிட்டால் என்ன நேரும் என்பதற்கு இந்த அறிக்கையில் எந்த பதிலும் கிடையாது. நாம் யூகித்துதான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிகிறது. ஒருவேளை அதுபோன்று ஒரு குழந்தை 3 வயது முதல் 6 வயது வரை அங்கன்வாடிப் பள்ளிகளுக்குச் செல்லாமல் விட்டுவிட்டால் நேரடியாக, ஆறு வயதுக்குப் பின்பாக முதலாம் வகுப்பில்தான் சேர முடியும் என்று தோன்றுகிறது. இதுவும் மிகவும் ஒரு புதிரான விஷயம்தான். ஏனெனில், ஒரு பெற்றோரோ ஒரு குழந்தையோ பள்ளிக்கு முன்பருவக் காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள். குழந்தை தீர்மானிக்க முடியாவிட்டாலும்கூட, அதன் பெற்றோருக்குத்தான் தீர்மானிக்கும் பொறுப்பை வழங்க வேண்டும். அப்படியிருக்கும்போது, நிச்சயமாக மூன்று வயதிலே சேர்த்தே ஆக வேண்டும் என்பதெல்லாம் மிகவும் வேடிக்கையாகவும் புதிராகவும் இருக்கிறது. மேலும் அதைக் கட்டாயப்படுத்துவதென்பது, மிகவும் ஒரு ஆரோக்கியமற்ற போக்காக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இப்போது ECCE குறித்து நாம் மேலும் ஆழமாகத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, தமிழ்நாட்டில் பள்ளிகளின் நிலையும் கல்வியின் நிலையும் மாணவர்கள் நிலையும் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். அரசுப் பள்ளிகள் மூடலும் வேகமெடுக்கும் தனியார்மயமும் தமிழ்நாட்டில் உள்ள மொத்தப் பள்ளிகளின் எண்ணிக்கை 58,897ஆக இருக்கிறது. இதில் 35,621 பள்ளிகள் தொடக்கப் பள்ளிகளாகவும் 9392 பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும் 5788 பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் 8,096 பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை 24,310 தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் 7,024, அதே போல உயர்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 3,135 ஆக இருக்கின்றன. 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 பள்ளிகள் இருக்கின்றன. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என்று மொத்தம் 12,382 பள்ளிகள் இருக்கின்றன. அதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளிகள் என்று பார்த்தால், தொடக்கப் பள்ளிகளில் தொடங்கி மேல்நிலைப் பள்ளிகள் வரை 8,328 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் உள்ள மொத்த ஆசிரியர்கள் விபரங்களைப் பார்தோமானால், 5.6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 2.27 லட்சம் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளிலும் 77 ஆயிரம் ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 2.53 லட்சம் ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளிலும் பணிபுரிகின்றனர். மற்ற பிரிவுகளில் 4,552 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். மொத்தம் 37,579 பள்ளிகளில், அரசுப் பள்ளிகளில் 2.27 லட்சம் ஆசிரியர்கள்தான் பணிபுரிகின்றனர். ஆனால் 12, 382 தனியார் பள்ளிகளில் 2.53 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இதை எதைக் காட்டுகிறது என்று சொன்னால், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்குதான் இருக்கிறது. ஆனால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களின் எண்ணிக்கை அரசுப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாக இருக்கிறது. அடுத்ததாக, கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு மேலாக, தேசிய கல்விக் கொள்கை 1986 நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பின்னால் – அதற்கு முன்பாகவும் தனியார் பள்ளிகள் வளர்ந்து வந்தாலும் – தமிழ்நாட்டில் பள்ளிகள் தனியார்மயம் என்பது படுவேகமாக நடந்திருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் உள்ள மொத்த மாணவ மாணவிகளைப் பொறுத்தவரை ஒரு கணக்கெடுப்பு செய்தால், அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 22,25,308 மாணவர்களும் தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்களும் மற்ற பள்ளிகளில் 83,755 மாணவர்களும் படிக்கின்றனர். 35,579 பள்ளிகள் கொண்ட அரசுப் பள்ளிகளில் 45,93,422 மாணவர்கள்தான் பயில்கின்றனர். ஆனால், வெறும் 12,382 எண்ணிக்கையே உள்ள தனியார் பள்ளிகளில் 64,15,398 மாணவர்கள் பயில்கின்றனர். (புள்ளி விவரங்கள் உதவி: 2022 மே மாதம் 28 அன்று தினமணியில் வெளியான நடுப்பக்கக் கட்டுரை, முன்னாள் கல்வி அமைச்சர் முனைவர் வைகைச்செல்வன் எழுதியது). இது மீண்டும் எதைக் காட்டுகிறது என்றால், அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைவது மட்டுமல்லாமல், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் கடுமையாகக் குறைந்துள்ளது. பள்ளிகளில் தனியார்மயம் என்பது மிக வேகமாக நடைபெறுகிறது. கல்வியை மறுக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009 இப்போது சில அடிப்படையான கேள்விகள் நம் முன் எழுகின்றன. அவை என்னவென்றால், நாம் தேசிய கல்விக் கொள்கை 1986ஐ எடுத்துப் பார்த்தாலும் சரி, தேசிய கல்விக் கொள்கை 2020ஐ எடுத்துப் பார்த்தாலும் சரி, சமுதாயத்தில் வாழும் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் மேலாக, கல்வி உரிமைச் சட்டம் 2009, 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்று கூறியதை நாம் அறிவோம். அது உண்மையென்று சொன்னால், அரசுப் பள்ளிகளின் நிலை ஏன் இப்படிச் செல்கிறது? அரசுப் பள்ளிகளிலிருந்து விலகி, தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் ஏன் செல்கின்றனர் என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தேடவேண்டிய ஒரு சூழல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக அனைவருக்குமான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (RTE-2009) என்ன சொல்கிறது என்றால், அரசுப் பள்ளிகளில் இடம் கிடைக்காத மாணவர்கள் அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் போய்ச் சேர்ந்து கொள்ளலாம். தனியார் பள்ளிகளின் மொத்த மாணவர்களில் 25% மாணவர்கள் இதுபோல் சேர்ந்து படிக்க அரசே முன்வந்து வாய்ப்பளிக்கும். அவர்கள் கட்டவேண்டிய கல்விக் கட்டணத்தையும் அரசே கட்டும் எனச் சொல்கிறது. இந்தக் கல்வி உரிமைச் சட்டம் குறித்தும் 25% தனியார் பள்ளிச் சேர்க்கைக்கு அரசாங்கமே நிதி வழங்குவது குறித்தும் SRM கல்வி நிறுவன மாணவர்

எங்கே போகிறது கல்வி?

எங்கே போகிறது கல்வி?

கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி நாடாளுமன்ற விவாதம் ஏதுமின்றி, கடந்த 2020ஆம் ஆண்டில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தச் சூழலில் அடிப்படைப் பாடத்திட்டங்களை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது. இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொருட்டு அகில இந்தியா கல்விப் பாதுகாப்புக் கமிட்டி (AISEC) தொடர் கூட்டங்களை நடத்தி வருகிறது. அந்த வரிசையில் முதலாவது அமர்வில் பேராசியரியர் யோகராஜன் ஆற்றிய உரையின் தொகுப்பை முன்பு சுவடு இதழில் வெளியிட்டிருந்தோம். அடுத்ததாக, அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து அலசுவதற்காக அகில இந்திய கல்வி பாதுகாப்புக் கமிட்டி ஏற்பாடு செய்திருந்த மெய்நிகர் கூட்டத்தில் பேராசியர் ஹோசிமின் திலகர் சிறப்புரை ஆற்றிய நிகழ்வின் முழுத் தொகுப்பை தொடராக சுவடு வெளியிடுகிறது. அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) மெய்நிகர்க் கூட்டத்தைத் தொகுத்தளித்த தோழர் ரெங்கையா முருகன் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி குறித்த ஓர் அறிமுகத்துடன் நிகழ்வைத் தொடங்கி வைத்தார். 1986ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொண்டுவந்த தேசிய கல்விக் கொள்கைக் குறித்து, அதன் நன்மை தீமைகளை ஆய்வு செய்யும் பொருட்டு ஒரு அமைப்பு உருவானது. உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் இந்த அமைப்பின் தலைவராகவும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுஷில் குமார் முகர்ஜி உள்ளிட்ட சிலரும் இணைந்து அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியை உருவாக்கினர். இதன் தமிழ்நாடு பிரிவும் அப்போதிருந்தே செயல்பட்டு வந்தது. 1986இல், அக்கல்விக் கொள்கை குறித்து MIDS (Madras Institute of Development Studies) நிறுவனரும் உலகப் புகழ்பெற்ற கல்வியாளருமான மால்கம் ஆதிசேஷய்யா, யோஜனாவில் மிகச் சிறப்பான கட்டுரை ஒன்றை எழுதினார். “அய்யோ… அதனை ஒரு முனைப்படுத்தாதீர்” என்ற கட்டுரைதான் அது. அதாவது, ‘நீங்கள் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு தமிழ்நாட்டில் இருக்கும் வேலூருக்குத் தேவையான கல்வித் திட்டத்தை வகுக்காதீர்கள்’ என்றார். அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையானவற்றை உள்ளடக்கிய கல்வியைப் பரவலாக்க வேண்டும் என்றார். ‘கல்வி என்பது வேறு, கல்வி முறை என்பது வேறு. கல்வி என்பது கற்கின்ற செயலை அடிப்படையாகக் கொண்டிருப்பது எனவும் கல்வி முறை என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள் இவை அனைத்தையும் உள்ளடக்கிய தொகுப்பு என்றும் அவர் கூறினார். ஆனால் தற்போது நடைமுறையிலிருக்கும் கல்விக் கொள்கையை யார் வகுக்கின்றனர் என்றால், ஆளும் அரசுதான் வகுக்கிறது. இன்றுள்ள பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறும் இந்த அபிவிருத்திக்குத் தகுந்தவாறும் உருவாக்கப்பட்டுள்ளதே தேசிய கல்விக் கொள்கை 2020. இதன் அபாயங்கள் குறித்தும் கல்வி வணிகப் பண்டமாக மாறப்போவதையும் இந்தியா பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும்போது எவ்வாறு ஓரிடத்தில் அமர்ந்து கல்விக் கொள்கையை உருவாக்க முடியும் என்றும் அப்போதே ஆதிசேஷயா தனது கட்டுரையில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக உரை: பேராசிரியர் சிவக்குமார் 1986இல் அகில இந்திய கல்விப் பாதுகாப்பு கமிட்டி (AlSEC) அமைப்பு எனக்கு அறிமுகமாயிற்று. மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசிரியராக நான் இருந்தேன். 1986இல் அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி, கல்விக் கொள்கை குறித்து ஒரு அருமையான தொகுப்பை வெளியிட்டது. அந்த வரலாற்றை அனைவருக்கும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். 1986இலிருந்து இந்தக் கல்விக் கொள்கைகள் எவ்வாறு கல்வியை வணிகமயத்துக்கு, கார்ப்பரேட் மயத்துக்குக் கொண்டுசெல்கிற அளவுக்கு வளர்ந்திருக்கின்றன என்று நாம் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும். எந்த ஒரு கல்விக் கொள்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. ராஜீவ் காந்தி கல்விக் கொள்கை, பிர்லா – அம்பானி கல்விக் கொள்கை, தற்போது அமலாகிக்கொண்டுள்ள தேசிய கல்விக் கொள்கை 2020 உள்ளிட்ட அனைத்துமே தமிழ்நாட்டின் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் திறன் மேம்பாடு (Skill Development) என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்துகிற கார்ப்பரேட் கல்விக் கொள்கையாகத்தான் உருவாகியுள்ளன. முந்தைய மெய்நிகர்க் கூட்டத்தில் பழம்பெருமை, பாரம்பரியம் இரண்டையும் எவ்வாறு பாஜக அரசு கையிலெடுத்து மிக நாசூக்காக வேலை செய்துகொண்டுள்ளது என்று பேராசிரியர் யோகராஜன் மிக அருமையாக எடுத்துரைத்தார். NCF குறித்த விவரங்களை AISEC அமைப்பு தமிழில் வெளிக்கொண்டு வருகிறது. பள்ளிக் கல்வி, உயர்கல்வி என எல்லாவற்றிலும் மிக அழகாகத் திட்டமிட்டு, பாஜகவினர் செயல்படுத்திக்கொண்டுள்ளனர் என்பதை அதன்மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. ஹிட்லர் உயிரியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். எதற்காக என்றால், கண், இமை, முடி இவற்றையெல்லாம் வைத்து ஒரு பாசிச வெறியை, வெறுப்புணர்வை யூதர்கள் மேல் வைத்து, அவர்களைக் கொலை செய்யும் அளவிற்குத் தூண்டும் வகையில் உயிரியல் பாடம் கற்பிக்கப்பட்டது. நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று ஜெர்மானியர்களுக்குப் போதிக்கப்பட்டது. முந்தைய கூட்டத்தில் யோகராஜன் அவர்கள் ஆற்றிய உரையை நாம் மிகச் சாதராணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. NCFஇன் அடிப்படை என்பது மிகவும் ஆபத்தானது. அத்தியாயம் 3இல் மொழிக்கொள்கை பற்றியும் அத்தியாயம் 4இல் கல்வியியல் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளன. பேராசிரியர் ஹோசிமின் திலகர், இன்று நம்மிடையே அவற்றின் பின்னணியையும் பேசவுள்ளார். நான் இதை வாசிக்கும்போது மூன்றாம் அத்தியாயத்தில் ஒரு ஆபத்தான சொல்லாடலைக் கையாள்கின்றனர் என்பதைப் புரிந்துகொண்டேன். காந்தியடிகள், தாகூர் போன்றவர்களெல்லாம் தாய்மொழி வழிக் கல்வியை வலியுறுத்தியது பற்றி நமக்குத் தெரியும். 1966 கோத்தாரி கல்விக் கொள்கை குறித்து யோகராஜன் தனது உரையில் குறிப்பிட்டார். அக்கோத்தாரிக் குழு அறிக்கையில் தாய்மொழி வழிக் கல்வி குறித்து வலியுறுத்தப்பட்டது. தாய்மொழி வழிக்கல்வி என்று சொன்னார்களே தவிர, வீட்டு மொழி (Home Language) என்று அங்கே சொல்லப்படவில்லை. தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கோத்தாரி கூறினார். கல்லூரி வரையிலும் – பட்ட வகுப்புகள் வரை அது கொண்டுசெல்லப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 1970களில் பட்ட வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வி கொண்டு வரப்பட்டது. ஆனால் இன்று அது முடங்கிப் போயிருக்கிறது. நான் தமிழ் வழியிலேயே இயற்பியல் பாடம் கற்பித்தேன். தமிழ் வழியிலேயே முதுநிலை வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்கள் எல்லாம் எழுபதுகளில் இருந்தன. இன்று எல்லாமே வணிகமயமாகவும் தாய்மொழிக் கல்வியைப் புறந்தள்ளும் நிலைக்கும் மாறியுள்ளன. NCFஐ உற்றுநோக்கினால், இதன் அடிப்படையாக மூன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் உள்ள குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்க வேண்டும், எவ்வாறு உருவாக்க வேண்டும், பிறந்த உடனேயே அந்தக் குழந்தைகள் எதைச் சொல்ல வேண்டும், எதை உச்சரிக்க வேண்டும்? எந்த மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்? என்று அழுத்தம் கொடுக்கப்பட இருக்கிறது. இவை குறித்தெல்லாம் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட இருக்கிறது. மூன்று வயதிலிருந்தே பள்ளிக்கூடம், வகுப்புகள், பாடமுறை என்று பேசுவதைக் குழந்தைகள் மீதான வன்முறையாகப் பார்க்கிறேன். முக்கியமாக, மொழியைப் பொறுத்தவரை L1, L2, L3 என்று பிரிக்கிறார்கள். Home Language, Mother tongue பின்பு Familiar language என்று குறிப்பிடுவது விந்தையாக உள்ளது. Home Language என்பதை ஹிந்தி என்று அவர்கள் வெளிப்படையாகவே கூறிவிடலாம். தாய்மொழிக்கு இரண்டாமிடம் கொடுக்கிறார்கள். இந்த மூன்று மொழிகளையும் கற்றுக் கொடுக்கக்கூடிய அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டுமென்று மூன்றாவது அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. இதற்காகப் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்கள். அடுத்து, கல்வியியல் திட்டங்கள், அவற்றின் அமலாக்கங்கள், கலைத் திட்டங்கள் குறித்தும் பேசப்படுகிறது. நாம் மிக ஆபத்தான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். 1986 கல்விக் கொள்கை தொடங்கி, தனியார்மயத்துக்கு எதிராகப் போராடிய அமைப்பு கல்விப் பாதுகாப்புக் கமிட்டி. Delinking degree from job என்பதைப்பற்றி அன்று நாம் விரிவாகப் பேசியிருக்கின்றோம். ஹோசிமின் திலகர், யோகராஜன், சுதாகர் மற்றும் மூத்த தோழர்களுக்கெல்லாம் நன்கு தெரியும். அந்த Delinking degree from job இப்போது நடந்துவிட்டது. திறன் மேம்பாட்டுப் பாடம் (Skill Development Course) இல்லாத, பரவாத, வேரூன்றாத இடமே இல்லை. மக்கள் கல்விக் கூட்டியக்க மாநாடு குறித்துப் பேச நாங்கள் இரண்டு கல்லூரிகளுக்குச் சென்றோம். இரண்டுமே அரசுக் கல்லூரிகள். அதில் ஒரு கல்லூரிப் பேராசிரியர் எங்களிடம் குறைபட்டுக்கொண்டார். அது கேட்பதற்கே அதிர்ச்சியாக இருக்கிறது. பொதுப் பாடத்திட்டத்தை மக்கள் கல்விக் கூட்டியக்கம் எதிர்த்தது. அகில இந்தியக் கல்விப் பாதுகாப்புக் கமிட்டியும் அதை எதிர்த்துக் குரல் கொடுத்தது. பொதுப் பாடத்திட்டத்தைக் கலை அறிவியல் கல்லூரிகளில் அமல்படுத்தியுள்ளார்கள். அவர் கூறியது என்னவென்றால், ‘தனியார் தன்னாட்சிக் கல்லூரிகளெல்லாம் அவர்கள் விருப்பம்போல் பாடத்திட்டத்தை அமைத்துக்கொள்ளலாம்’ என்று அமைச்சர் சொன்னபடி அமைத்துக் கொண்டுவிட்டார்கள். ஆனால் அரசுக் கல்லூரிகளில் இது வலிந்து புகுத்தப்படுகிறது. குறிப்பாக, முதல்நிலைப் பாடத்தில் 4 கோர் (Core) பாடங்கள், உதாரணமாக அறிவியல் பாடத்தை எடுத்துக்கொண்டால் 4 பாடங்கள் வெளியேற்றப்பட்டு திறன் மேம்பாட்டுப் பாடங்கள் உள்ளே நுழைக்கப்பட்டுள்ளன. ஒன்று தெளிவாக இருக்கிறது. ஆளுகின்ற அரசு வேலையிலிருந்தும் சமூகத்திலிருந்தும் கல்வியையும் பாடங்களையும் பிரித்தல் (Delink degree from job, Delink Subject from Society) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமூகத்தைவிட்டு இந்தப் பாடங்கள் விலகி இருக்க வேண்டும். சமூக உணர்வையோ சிந்தையையோ உருவாக்குகின்ற வகையில் பாடங்கள் இருக்கக்கூடாது என்று கருதுகிறது. இயற்பியலைக் கற்பிக்கும்போது நீ செய்ய வேண்டியதெல்லாம், அவர்களுக்கு அணுகுண்டைப் பற்றிச் சொல்ல வேண்டுமே தவிர, அணு சோதனைகள் பற்றியோ அது குறித்து ஐன்ஸ்ட்டீன் பின்னாளில் வருந்தி வெளியிட்ட அறிக்கை குறித்தோ சொல்லக் கூடாது. இவற்றைப் பேசுவதற்கு வகுப்பறைகளில் இடம் இருக்கக்கூடாது. திறன், திறன் (Skill, skill) என்றுதான் பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். தேசிய கல்விக் கொள்கை வந்தபோது நாம் கூட்டம் போட்டிருக்கின்றோம். அதற்கு முன்னால் கஸ்தூரி ரங்கன் அறிக்கை வந்தபோதும் கூட்டம் நடத்தியுள்ளோம். 2016இல் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அறிக்கை வந்தபோதும் கூட்டம் போட்டுள்ளோம். அந்தத் திட்டங்களை ஒவ்வொன்றாக அமுலாக்குவதற்கான மறைமுகமான சட்டங்கள்தான் இந்தக் கட்டமைப்பு (Frame Work) என்றுகூட நான் சொல்வேன். இந்த ஒன்றிய அரசின் பல திட்டங்களை எதிர்ப்பதாக மாநில அரசாங்கம் இப்போது தமிழ்நாட்டை ஆண்டுகொண்டுள்ள திராவிட அரசாங்கம் சொல்கிறது. அவர்கள் சனாதனத்தைப் பற்றிப் பேசுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு நமது முந்தைய கூட்டத்தில் யோகராஜன் அவர்கள் பேசிய அந்தப் பாரம்பரியத்தைப் பற்றித் தெரியுமா என்றால், நாம்தான் சொல்லவேண்டியிருக்கிறது. மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறுகிறார்கள். அதுபற்றித்தான் மூன்றாவது

ஆடைக் கட்டுப்பாட்டால் அவதியுறும் ஆசிரியைகள்

ஆடைக் கட்டுப்பாட்டால் அவதியுறும் ஆசிரியைகள்

கட்டுரையாளர்: உமா மகேஸ்வரி   ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை ஆடையை வைத்தும் ஒடுக்கப்படும் நிலைக்கு ஆளாகும் நிலையில்தான் இந்த 2023இலும் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் தேதி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் வந்த செய்தியொன்று பல தளங்களில் விவாதத்திற்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமான செய்தி. ஆம், கோவை மாவட்டத்தில் அரசுப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியை ஒருவர், புடவைக்குப் பதிலாக சுடிதாரில் பள்ளிக்குச் சென்றிருக்கிறார்.  தலைமையாசிரியரும் கல்வி அலுவலரும் அதற்கு அனுமதி மறுத்திருக்கின்றனர். இவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் பல ஆசிரியைகள் இந்த உடைப் பிரச்சனையால் அவதியுற்று வரும் நிலையை ஆங்காங்கே காண முடிகிறது.  வளர்ந்த மாணவர்கள் மத்தியில் சங்கடமாக உணரும் பெண் ஆசிரியர்கள் கோவையில் சுடிதார் அணிந்து வந்த அந்த ஆசிரியர் அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். புடவை அணிந்துகொண்டு வந்து வகுப்பில் பாடம் நடத்தும்போது  கிண்டல் கேலிப் பேச்சுகளை அவரது உடையை வைத்து மாணவர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.  அவர் தனது சேலையைச் சரிப்படுத்திய பிறகே மீண்டும் கற்பித்தலைத் தொடர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நாளும்  இது தொடர, வசதியான உடையாகக் கருதி, பள்ளிக்கு சுடிதாரில் வந்திருக்கிறார். ஆனால் பள்ளித் தலைமையாசிரியரும் மற்ற ஆசிரியர்களும் அது குறித்து சர்ச்சையைக் கிளப்பியதால் தொடர்ந்து சுடிதாரில் செல்ல முடியவில்லை. மீண்டும் புடவையை அணிந்து வந்த ஆசிரியர் மாணவர் தரும் சங்கடங்களைச் சந்திக்க நேரிட, அது அவருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை உருவாக்கியுள்ளது. சமீப காலங்களில்  பள்ளி மாணவர்களிடையே பல விரும்பத்தகாத நடத்தைகள் வெளிப்படுவதை அவ்வப்போது செய்திகளில் பார்க்கலாம். அவரவர் வீடுகளில், வசிப்பிடங்களில், சமூகத்தில் சற்று உற்று நோக்கினாலே குழந்தைகளிடம் உருவாகியுள்ள நடத்தை மாற்றத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். மேல்நிலை வகுப்புகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களது பணி, கூடுதல் சவால் நிறைந்ததாக இருக்கிறது. அதிலும் ஆசிரியைகள் பல இடங்களில் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. ஏனெனில் இந்தச் சமூகத்தில் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை,  வயதுக்கு ஏற்புடையதாக இல்லாத பலவற்றை உற்றுநோக்கும் குழந்தைகள், தங்கள் வாழ்க்கையில் அவற்றைச் செயல்படுத்த முனைகின்றனர். குறிப்பாக, பள்ளிகள் – வகுப்பறைகள்தான் அதற்கான தளங்களாக அவர்களுக்குத் தோன்றுகிறது. அவர்களது வீடுகளில் சரியான வழிகாட்டுதல் இல்லை; பள்ளிகளிலும் உரையாடல் என்பதே இல்லை. திரைப்படங்கள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றின் தாக்கத்தால், தங்களை ஹீரோக்களாகவும் ஆன்ட்டி ஹீரோக்களாகவும் எண்ணிக்கொள்ளும் மனோநிலை மாணவர்களிடம் தோன்றுகிறது. அதன் ஒருபகுதியாகவே பள்ளிகளில்  பெண் ஆசிரியர்களது உடலை வைத்துக் கேலி செய்யும் சூழல் உருவாகிறது. அதேபோல் வீடுகளில் பெண்கள் நடத்தப்படும் விதம், மரியாதையற்ற தன்மை இதையெல்லாம்  மாணவர்கள் பார்த்து வளர்கின்றனர். இவற்றின் வெளிப்பாடே பள்ளிகளில் நடக்கும் இப்படியான சில விரும்பத்தகாத விளைவுகள். வீடும் பள்ளியும் மாணவர்களை சரியான பாதையில் வழிநடத்தத் தவறியதன் விளைவுதான் இது. ஆகவே வளர்ந்த மாணவர்கள் மத்தியில் உடை விஷயத்தில் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்பதாலேயே பல ஆசிரியைகள் சுடிதார் அணிந்து வர விரும்புகின்றனர். அரசாணை 67 கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தேதியில், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட்ட அரசாணை (GO No.67) அரசு ஊழியர்கள் அணியக்கூடிய உடை குறித்து மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஆண் மற்றும் பெண் ஊழியர்களுக்குத்  தனித்தனியாக  என்ன மாதிரியான உடைகளை அணியவேண்டும் என்று அந்த அரசாணை தெளிவுபடுத்தியுள்ளது.‌ அனைத்துத் தரப்பினரும் கண்ணியமான உடையையே அணிந்து வரவேண்டும் என்று அந்த அரசாணை கூறுகிறது. பெண்களுக்கான உடைகளாக, சல்வார் கமீஸ், சுடிதார், புடவை என அனைத்தும் அதில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.  இந்த அரசாணையில் அரசு ஊழியர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளவை ஆசிரியர்களுக்கும் பொருந்துகிறது. ஏனெனில் அவர்களும் அரசு ஊழியர்களே. பள்ளிக்கல்வி இயக்குனர், இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார் என்பதும்  குறிப்பிடத்தக்கது. பள்ளியில் பெண் ஆசிரியர்களின் நிலை உடல்நிலையில் பிரச்சனைகள் வந்து புடவை அணிய முடியாமல் இன்னலுறும் ஆசிரியர்களும் கல்வித்துறையில்  சுடிதார் அணிய அனுமதி  கேட்டுள்ளனர். ஆனால் துறையில் அனுமதி கிடைக்காததால் வேதனையுடன் புடவையையும் சுமக்கின்றனர். அந்தவகையில்   நம்முடன் பேசிய கூகல் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஜான் பௌலா, “எனக்கு வலது கையில் அறுவை சிகிச்சை செய்திருப்பதால் ஜாக்கெட் அணிய முடியாது. புடவை அணிவதில் மிகுந்த சிரமம் இருக்கிறது. கடந்த கல்வி ஆண்டில் பள்ளியில் தலைமையாசிரியரிடம் அனுமதி  கேட்டால், சுடிதார் அணிந்து வரக்கூடாது என்கிறார். துறையில் வட்டாரக் கல்வி அலுவலருக்கு, மாவட்டக் கல்வி அலுவலருக்கு என, அனைவரிடமும் எனது மருத்துவச் சான்று மற்றும் பரிசோதனைச் சான்றுகளை இணைத்து விண்ணப்பித்து அனுமதிக்காகக் காத்திருந்து மிகுந்த போராட்டத்திற்கிடையே அனுமதி பெற்றேன். ‌மீண்டும் இந்தக் கல்வி ஆண்டில் இதே அனுமதிப் பிரச்சனை. இதற்கெல்லாம் முடிவே கிடையாதா என்று நினைத்து வருந்தினேன். இந்த அரசாணையைப்பற்றி அறிந்துகொண்ட பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்கிறார். “மார்பில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேரும் காலம் வந்தபின்னும் இறுக்கமான உள்ளாடை  மற்றும் ஜாக்கெட் அணிய முடியாத காரணத்தால், முழுமையாகக் குணமாகும்வரை சுடிதார் அணிந்து செல்ல மருத்துவர் பரிந்துரைத்தார். ஆனால் பள்ளிக்குச் சென்றபோது உடன் பணிபுரியும் ஆசிரியைகளால் பட்ட இன்னல்களைச் சொல்லி மாளாது. உடன் பணிபுரியும் ஆண் ஆசிரியர், அலுவலகம் சென்று உயரதிகாரியிடம் பேசி அனுமதி வாங்கினார். ஏறத்தாழ ஒரு மாதம் சுரிதாரில் சென்றேன். இன்று இந்த G.O. பார்த்த பிறகு அனைத்தும் ஞாபகம் வருகிறது. இப்படி ஒரு ஆணை இருக்கிறது என்பதையே இன்றுதான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி” என்கிறார் விருதுநகர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் தேன்மொழி. கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் சசிகலா, இந்தக் கல்வி ஆண்டில் முதலில் இருந்தே பள்ளிக்கு சல்வார் கமீஸ் உடை அணிந்து சென்றுகொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் தலைமையாசிரியர் கேள்விக்கு உட்படுத்தினாலும் இந்த அரசாணையைக் கூறி ஆசிரியர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது கடலூர் மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசாணைப்படி தாங்கள் விரும்பிய உடையை அணிந்து வரலாம் என்று மாவட்டக் கல்வி அலுவலர் அனுமதித்துள்ளார் என்கிறார். இப்படி, தற்போது இந்த அரசாணையைப் பார்த்தபிறகு பலரும் தாங்கள் சந்தித்த இந்தச் சுடிதார் பிரச்சனைகள் குறித்து மனம் திறக்கின்றனர். அரசாணைக்குப் பிறகும் தடைகள் ஆசிரியைகள் புடவை, சல்வார் கமீஸ் அல்லது சுடிதார்  துப்பட்டாவுடன் அணிந்து வரலாம் என்று அரசாணை கூறிய பிறகு, தமிழ்நாட்டில் ஆங்காங்கே சிலர் அணிந்து செல்லத் தொடங்கினர். ஆனால் சில பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் சேலையைத் தவிர வேறு உடை அணியக்கூடாது எனச் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதும் நடந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் வெலக்கல்நத்தம் என்ற பள்ளியில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர் இந்த அரசாணைக்குப் பிறகு சுடிதார் அணிந்து பள்ளி சென்றிருக்கிறார். ஆனால்  அப்பள்ளியின் தலைமையாசிரியர் அங்குள்ள மூத்த பெண் ஆசிரியரின் வழியாக இவரிடம் இந்த உடையை அணியக் கூடாது என வற்புறுத்தக் கூறியுள்ள்ர். ஆனால் அதன் பிறகும் இவர் தொடர்ந்து சுடிதார் உடையையே அணிந்து செல்வதால், ‘வழக்குத் தொடர்ந்த ஆசிரியருக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும், மற்ற ஆசிரியர்களுக்குப் பொருந்தாது. எனவே உயர் அலுவலர் வழிகாட்டல்படி (Dress Code) உடை அணிந்து வரவேண்டும்’ என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாகச் சுற்றுகிறது. அதன்பிறகும் ‘முதன்மைக் கல்வி அலுவலருக்குக் கடிதம் கொடுத்து அனுமதி வாங்குங்கள். பிறகு உங்கள் விருப்பப்படி உடை அணியலாம்’ என்று தொடர்ந்து பள்ளியில் அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். பெண் ஆசிரியர்களே இந்த மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதும் பல இடங்களில் நடக்கிறது.  சமூகத்தின் பார்வை – உடை என்பது கலாச்சாரம்  காலம்காலமாக நமது தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் உடையை அவர்கள் தீர்மானிப்பதில்லை. அவர்கள் வாழும் வீடும் குடும்பத்தாரும்  சமூகமும்தான் முடிவு செய்கின்றன. ஒருகாலத்தில்  பெண்கள் பருவம் அடைந்த உடனேயே பாவாடை தாவணி  அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தது. பதிமூன்று, பதினான்கு வயதுள்ள பெண் குழந்தைகள் பூப்படைந்த பிறகு, தாங்கள் விரும்பவில்லை என்றாலும்  தாவணியைத் தவிர வேறு உடை அணிய வீட்டில் அனுமதி கிடையாது. வீட்டிலேயே இல்லாதபோது, ஒரு பெண் பள்ளிக்கோ அல்லது வெளியிடங்களுக்கோ தான் விரும்பும் உடையை அணிவது சாத்தியமற்ற செயல். ஆனால் சமீபகாலமாக இதில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. சேலை அணிந்தவர்கள் சுடிதார், சல்வார் கமீஸ், பேண்ட் சட்டை  மற்றும் பல  நவீன ஆடைகளை அணிய ஆரம்பித்துள்ளனர். பெண் குழந்தைகள் மட்டுமல்ல , வளர்ந்த பெண்களும்கூட எல்லாவிதமான உடைகளையும் அணிய ஆரம்பித்துள்ளனர்.  இன்று பெண்கள் பணிபுரியாத துறைகளே இல்லை எனலாம். அந்தவகையில் பணிக்குச் செல்லும் பெண்கள் தங்களுக்குப் பிடித்தமான உடையை அணிய ஆரம்பித்துள்ளனர். பல துறைகளிலும் உடை அணிவது என்பது ஒரு பிரச்சினையாக இல்லை.‌  மத்திய மாநில அரசு அலுவலகளில் பணிபுரியும் பெண்கள், கீழ்நிலையில் இருந்து உயர்பதவிகள்  வரை இந்த அரசு ஆணை 67 வருவதற்கு முன்பிருந்தே புடவை, சுடிதார், சல்வார் என அணிந்து செல்வதைப் பார்க்கலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் பதவியில் இருக்கும் பெண்களும் சல்வார் கமீஸ், சுடிதார் ஆகியவற்றை அணிகின்றனர். பள்ளிக்கல்வித் துறையிலேயேகூட, பல மட்டங்களில் பணிபுரியும் பெண்களும் சுடிதார் அணிந்து பணிக்குச் செல்கின்றனர். இவை மட்டுமல்லாது, கல்வித்துறை அலுவலகங்களில் மாற்றுப் பணியில் ஈடுபட்டு வரும் பெண் ஆசிரியர்களும் தாங்கள் விரும்பும் உடையை அணிந்து செல்கின்றனர். ஆனால் அதே ஆசிரியர்கள், பள்ளிக்குள் பாடம் கற்பிக்கக் கூடியவர்களாக இருந்தால் சேலை மட்டுமே அணியக் கட்டாயப்படுத்துவதன் நோக்கம் என்னவென்று நாம் யோசிக்க வேண்டும். பாரம்பரியம் என்றும் பண்பாடு என்றும் ஆசிரியர்கள் எல்லாரும் கலாச்சாரக் காவலர்களாகவே இருக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்திக்கும் சமூகத்தின் போக்கு கவலைப்பட வைக்கிறது. பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் சிந்தனையில், சிறுவயது முதலே ஆசிரியை என்றால் சேலைதான் அணிய வேண்டும் பதிய வைக்கக்கூட இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆண் ஆசிரியர்கள் நமது கலாச்சாரத்தைக் காப்பாற்றுகிறார்களா? பாரம்பரிய உடையைத்தான் பள்ளிக்கு அணிந்து வருகிறார்களா என்பதையும் கவனிக்க வேண்டும். பள்ளி மாணவிகள் உடை மாற்றம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு, தாவணி உடையை மாற்றி சுடிதார் உடையைப் பரிந்துரை செய்து 2011ஆம் ஆண்டு சட்டமன்ற பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து

பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

பள்ளிகளில் போதைப்பொருள் பயன்பாடு

கல்விக் கட்டுரை : சு. உமா மகேஸ்வரி பள்ளிக்கல்வியின் சூழல் நாளுக்கு நாள் பல வழிகளில் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது. இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்திலிருந்தே அதிகம் பேசப்படும் ஒன்றாக, போதைப்பொருள் பிரச்சனை இருந்துவருகிறது. அது குறித்து செங்கல்பட்டு மாவட்டப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின் விவரங்கள் கீழ்வருமாறு. மாவட்ட ஆட்சியரது வாராந்திர ஆய்வுக் கூட்டத்தில், சட்ட விரோத போதைப்பொருள் நடமாட்டத்தைத் தடுத்தல் குறித்தான, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரைகள் வழங்குதல். மாணவர்களிடையே COOL LIP என்ற போதை தரக்கூடிய மிட்டாய் பயன்பாடு உள்ளதா என்பதை ஆசிரியர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். பள்ளி அருகில் உள்ள கடைகளில் COOL LIP  விற்கப்படுகிறது எனத் தகவல் தெரிந்தால், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் புகார் அளித்திடல் வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கும் தகவல் அளித்திட வேண்டும். RBSK (Rashtriya Bal Swasthya Karyakram) என்ற மருத்துவக் குழு, பள்ளிகளில் மருத்துவ‌ முகாம் நடத்தும்போது, மாணவர்களின் பற்களைப் பரிசோதனை செய்து, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் கறைகள் உள்ளதா எனக் கண்டறிந்து, அம்மாணவர்களுக்கு த் தனியே உளவியல் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். அம்மாணவர்களுக்கு போதைப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன என்பதைக் கண்டறிந்து, மந்தன முறையில் காவல் நிலையத்தில் புகார் தரப்படவேண்டும். அவ்வாறு மந்தன முறையில் காவல்துறையில் தரப்பட்ட புகாரின் நகல், முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டும். பிரதி வாரம் திங்கட்கிழமை காலை வழிபாட்டுக் கூட்டத்தில், அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிகள், உளவியல் ஆலோசகர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் மூலமாக, போதை விழிப்புணர்வு சார்ந்த கருத்துருக்களை எடுத்துரைக்கும் வகையில் மாணவர்களிடையே உரையாற்ற வேண்டும். போதை விழிப்புணர்வு சார்ந்த போட்டிகள் நடத்தப்பட வேண்டும். காவல்துறை, உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து, பாரத சாரணர் சாரணியர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களை இணைத்து, போதை விழிப்புணர்வுப் பேரணி பள்ளியளவில் நடத்தப்பட வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கை வழிகாட்டுதலைத் தருகிறது. சென்னை சுற்றுவட்டாரத்தில் கண்ணகி நகர், வடசென்னை, பல்லாவரம், குரோம்பேட்டை, ஓ.எம்.ஆர் சாலையில் அமைந்துள்ள பள்ளிகளில் பணியாற்றும் சில ஆசிரியர்களும் தங்கள் பள்ளி மாணவர்கள் இந்த COOL LIP பழக்கத்தைக் கைக்கொண்டுள்ளதாகக் கூறினர். இதனால் மாணவர்கள் சமுதாயம் செல்லும் மோசமான பாதை குறித்தும் தங்கள் சி.ஆர்.சி பயிற்சி அரங்குகளில் வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர். செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட சென்னைப் பகுதி மாணவர்களிடம் மட்டுமே இந்தப் பழக்கம் உள்ளதா? தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் இந்தப் பழக்கம் எவ்வாறு இருக்கிறது என  ஆசிரியர்கள் சிலரிடம் பேசும்போது, கள நிலவரம் என்னவென்று புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில், இந்தச் சுற்றறிக்கைகள் தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் என, அனைத்து மாவட்டங்களிலும் கடந்த மூன்று மாதங்களாகச் சுற்றி வருகின்றன. தஞ்சாவூரைச் சேர்ந்த மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி அவர்கள் இது குறித்துப் பேசும்போது, “வழிபாட்டுக் கூட்டத்தில உறுதிமொழி எடுக்கச் சொல்லியிருக்கோம். வாசல்ல tobacco free zone என்று ஒட்டியிருக்கோம். தலைமையாசிரியர்கிட்ட பக்கத்துல எந்தக் கடையிலும் போதைப்பொருள் விற்பனையில்லைன்னு சான்று வாங்கியிருக்கோம். மாணவர்களிடம் இருந்தால், அதைப்பெற்று அன்பாகக் கண்டிச்சிருக்கோம் என்கிற அளவில் அரசும் கல்வித்துறையும் தங்கள் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கின்றன. உண்மையில் இந்தப் பழக்கம் வெளிவட்டாரப் பெரியவர்கள்,  பெற்றோர், முன்னாள் மாணவர்கள் போன்றோரிடமிருந்து மாணவர்கள் பழக்கத்திற்கு வருகிறது. பெற்றோரே பலர் அப்படி வரும்போது, யாரிடம் போய்ச் சொல்வது? விற்பவர்களுக்கும் உபயோகிப்போருக்கும் கடுமையான தண்டனைக்கு வழிவகை செய்யாமல், பள்ளியையோ மாணவர்களையோ குறை சொல்வது அர்த்தமற்றது” என்கிறார். “அரசு இதன் விற்பனையைத் தடைசெய்ய வேண்டும். பள்ளி மாணவர்களிடையே வயது வித்தியாசம் இன்றி, இப்பழக்கம் பரவி வருகிறது. பல மாணவர்களை இப்பழக்கத்திற்கு  அடிமையாக்கி வைத்திருக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஆசிரியர் ஷாலினி. “இதற்காகவே எங்கள் பள்ளியில் கேமரா வைக்க வேண்டும் என நான் வற்புறுத்தி, சில ஆசிரியர்களின் எதிர்ப்பையும் மீறி நன்கொடையாளர்கள் மூலம் கேமரா வைத்தோம். தற்போது ஓரளவு குறைந்துள்ளது. ஆனால் பள்ளிக்கு வெளியே என்ன நடக்கிறது எனத் தெரியவில்லை. பெண் பிள்ளைகள் இதற்குப் பணம் கொடுத்து உதவுகிறார்கள்” என்கிறார் திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பணியாற்றும் பகுதி நேர  ஆசிரியர் கௌதமன். “எங்கள் பள்ளி அருகில் கடைகளில் விற்பனை இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத் (PTA) தலைவரை வைத்து வார்னிங் கொடுத்துள்ளோம். மீறினால் அவரு இவங்களை வேற மாதிரி கவனிப்பார்னு பயம். நம்ம பையனுகளே ஏஜன்சி எடுத்து நடத்துறாங்க. காட்டில்தான் அவனுகளுக்கு ஓப்பன் டாய்லெட். மண்ணில் புதைத்து வியாபாரம் செய்வாங்க. நாங்களும் சஸ்பெண்ட் பண்ணிட்டு இருக்கோம்” என்கிறார் தாராபுரத்தில் அரசுப்  பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஜெய கீதா. “அமைச்சர்கள் முதல் கவுன்சிலர்கள் வரை கமிஷன் போகிறது. சென்ற ஆட்சியில் குட்கா கமிஷன் ஊழலில் சுகாதாரத்துறை அமைச்சரே ரெய்டில் சிக்கினார். வட இந்தியக் கூலித் தொழிலாளர்கள் மூலமே இதுபோன்ற பழக்கங்கள் தமிழகத்தில் நுழைந்தது. இப்பழக்கத்தால் வாய்ப் புற்றுநோய் ஏற்படும்” என்கிறார் சீர்காழி ஆசிரியர் கண்ணன். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கிராமப் பகுதி ஒன்றின் அரசு  மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர், “முறத்தில் அள்ளி அள்ளிக் கழிப்பறைகளில் கொட்டினேன், COOL LIP பாக்கெட் கவர்களை” என்று கூறி வேதனையாகப் பகிர்ந்துகொண்டார். கூடுவாஞ்சேரி அருகே சில பள்ளிகளில் மாணவர்களிடம் பேசும்போது, சின்ன பசங்ககூட கூலிப் பயன்படுத்துகின்றனர் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.  திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி ஆசிரியர், “பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள், ஒருநாள் முழுவதும் தங்கள் பள்ளிகளில் நடக்கும் கூலிப் பிரச்சனை குறித்துதான் பேசி வருந்துகின்றனர். மொரட்டுப்பாளையம், வாவி பாளையம், முதலிபாளையம், ஊத்துக்குளி உள்ளிட்ட அனைத்துப் பள்ளி மாணவர்களும் இந்த போதைப் பொருள் பயன்பாட்டால் சீரழிவதைக் காணச் சகிக்கவில்லை” என்கிறார். கரூர் பகுதி ஆசிரியர் சாதாரணன் என்பவர், தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நகர மயமான தனது பள்ளியில், இந்த கூலிப் பழக்கக் குழந்தைகளைக் கண்டறிந்து, அதைக் களையப் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து எடுத்த நடவடிக்கைகள் குறித்து சில மாதங்களுக்கு முன்பு, தனது முகநூலில் விரிவாக எழுதியிருந்தார். இப்படி ஏராளமான கதைகள் அன்றாடம் நடந்துகொண்டு இருக்கின்றன பள்ளிகளில். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி மாணவர்கள்தான்  அங்கொன்றும் இங்கொன்றுமாக புகைப்பிடிப்பது போன்ற பழக்கங்களைக் கைக்கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் வந்தபிறகு, பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் எல்லா ஊர்களிலும் மதுக்கடைகளுக்குச் சீருடையில் செல்வதாகவும் சில பள்ளிகளில் பள்ளிக்குள்ளேயே மது அருந்திவிட்டு வந்து மாணவர்கள் பிரச்சினை செய்வதாகவும் செய்திகளைப் பார்த்திருக்கலாம். ஆனால் கொரோனா காலத்தின் கொடையால் அங்கொன்றும் இங்கொன்றுமாக இலைமறை காய்மறையாக இருந்த இந்த போதைப்பொருள் கலாச்சாரம், தற்போது பள்ளிகளில் வெளிப்படையாகவே வேரூன்றி, மாணவர் சமுதாயத்தை நாசம் செய்து வருகின்றது. இப்படியான பழக்கம் கண்டறியப்பட்ட எத்தனையோ மாணவர்கள், மருத்துவச் சிகிச்சைக்கும் செல்கின்றனர். அப்படியான ஒரு சூழலில் ஒரு மருத்துவர் பகிர்ந்துகொண்ட செய்தி நம்மைத் திகைக்க வைக்கிறது. “இந்த ‘கூலிப் ‘ போதை மருந்துப் பொடியில் கண்ணாடித் துண்டுகள் மிகப் பொடியாக அரைத்துக் கலக்கப்படுகின்றன” என்கிறார் அவர். அதை மாணவர்கள் வாயில் வைத்து அடைத்துக்கொள்ளும்போது, வாயின் உட்புறம் இருக்கும் மிக மெல்லிசான தசைப் பகுதியை அறுத்துச் செல்லும் கண்ணாடித் துண்டுகள், இரத்தத்தில் உடனடியாக போதை மருந்து கலப்பதற்காகவும் அந்த போதை உணர்வை வீரியப்படுத்துவதற்காகவும்  அப்படி காலக்கப்படுகிறது” என்று சொல்வதை எப்படி நம்மால் சந்தேகிக்க முடியும்? இந்தப் பழக்கம் ஏழை – பணக்காரன், ஆண் குழந்தைகள் – பெண் குழந்தைகள், அரசுப்பள்ளி – தனியார் பள்ளி என்று எந்த வேறுபாடுகளும் இல்லாமல், அனைத்துத் தரப்பு மாணவர்களையும் அடிமைப்படுத்தியுள்ளது. பெண் குழந்தைகளும் இதைப் பயன்படுத்துவதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனனர். எண்ணிக்கையில் குறையலாம். ஆனால், இப்போது மது குடிக்கும் பழக்கம் எப்படிப் பெண் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லையோ, அதுபோலவே இதுவும்.  வயது வித்தியாசம் இல்லாமல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இதை உபயோகிப்பதை, ஒவ்வொரு பள்ளியையும் கண்காணித்தால் தெரிந்துகொள்ள முடியும். தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை, மாணவர்கள்  ஓரளவு பெற்றோர்களின் கண்காணிப்பு வளையத்திற்குள் இருப்பதால் கண்டறிய முடிவதாகவும் பெரும்பாலும் மீட்டுவிடுவதாகவும் சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும், பெற்றோர்களால் கைவிடப்பட்டவர்கள் என்றே கூறுமளவிற்கு வீடுகளில் கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் எதார்த்தம். ஏனெனில், இந்தச் சமுதாயத்தில் அன்றாடங்காய்ச்சிகளாகவே வாழும், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் கடைக்கோடி மக்களின் குழந்தைகளுக்கான அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் இந்த வியாபாரிகளின் வலையில் சிக்கித் தவிப்பவர்கள். அரசாங்கம் நினைத்தால் இந்த போதைப் பொருள்கள் தயாரிப்பு, விநியோகம் இவற்றைத் தடுத்து நிறுத்த முடியும். ஆனால் பள்ளி ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும் என்று சுற்றறிக்கைகள் விடுவது எந்த வகையிலும் பொறுப்பேற்காத தன்மையைக் காட்டுகிறது. பாம்பின் கால் பாம்பறியும். ஆமாம், காவல்துறைக்குத் தெரியாமல் எந்தக் கடைகளுக்கு இந்த போதைப் பொருள்கள் வந்துவிடும் சொல்லுங்கள். அரசியல்வாதிகளுக்குத் தெரியாமல் இதுபோன்ற கேடுகள் சமூகத்தில் நடக்க வாய்ப்பு உண்டா? அதோடு, எந்த ஆசிரியர் இயக்கங்களும் சங்கங்களும் இது குறித்து அரசையோ கல்வித் துறையையோ ஏன் கேள்வி கேட்க மறுக்கிறார்கள்? அல்லது ஏன் இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக்கொள்ளவில்லை? என்ற கேள்வியையும் முன்வைக்கிறோம். இத்தனை விபரீதமான பழக்கத்தை ஒழிக்க, பள்ளிகளில் உறுதிமொழி எடுக்கச் சொல்கிறது அரசு. விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தக் கூறுகிறது.  ஆனால், தலைமை ஆசிரியர் பாடம் நடத்தும் ஆசிரியர்களது வகுப்பறையைக் கவனித்து எமிஸ் ஆப்பில் போட வேண்டும். அதில் இதுபோன்ற மாணவர்கள் வகுப்பறைகளில் ‌இருக்கின்றனரா என்று ஏதாவது கேள்வியை வடிவமைத்திருக்கிறதா கல்வித்துறை என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். தேசிய கல்விக் கொள்கை, இப்படியான மாணவர்களுக்கோ பள்ளிகளைப் பீடித்திருக்கும் இந்த விபரீதப் போக்கிற்கோ என்ன தீர்வை வைத்துள்ளது? இந்த அரசு எடுக்கும் கல்வி சார்ந்த திட்டங்களில் இந்தப் பிரச்சனைக்கு என்ன திட்டம் வைத்துள்ளது? பள்ளி மேலாண்மைக் குழுக்களில் இவையெல்லாம் மனம் திறந்து பேசப்படுகிறதா? கிராமங்களில்கூட வேரூன்றி வளர்ந்துள்ள இந்தப் பழக்கங்களைக் களைய, கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் போடப்படுகிறதா? மாணவர்கள் எதிர்காலம் நாசமாகி வருவதைத் தடுக்க, கல்வி அமைச்சர்

ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

ஆசிரியர்களுக்கிடையே பாகுபாடு காட்டும் சமூகநீதி அரசு

தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் காந்தி பிறந்ததினத்தை நேற்று நாடே பெருமையுடன் நினைவு கூர்ந்தது. அவரின் அறவழிப் போராட்டங்கள் குறித்து சிலாகித்துப் பேசப்பட்டது. தமிழ்நாட்டில், காந்தி காட்டிய அறவழியில் ஆசிரியர்கள் போராட்டக் களம் கண்டு வருகின்றனர். காந்தி நடத்திய அறப்போராட்டம் ஆங்கிலேயரின் மனத்தையே மாற்றி இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டது. ஆனால் ஆசிரியர்களது அறப் போராட்டம் நமது மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழர்களின் நெஞ்சையே தொட மறுக்கிறது. தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக நடக்கும் பல நிகழ்வுகளைப் பட்டியலிட்டால், அவற்றுள் முதன்மையாக இருப்பது ஆசிரியர்களது போராட்டம். கல்வி கொடுக்கும் பள்ளிகளில் மிக முக்கியமானவர்கள் ஆசிரியர்கள். பிறகுதான் கட்டமைப்பு, வகுப்பறைகள், இன்ன பிற வசதிகள் யாவும். அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஏராளமான சிக்கல்களை நாம் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். ஆசிரியர்கள் நியமனமே இல்லாமல் இருக்கும் பள்ளிகளும் இருக்கின்றன. பெயரளவுக்கு நியமனம் செய்து, அவர்களைப் பகுதி நேர ஆசிரியர்கள் என்ற பெயரில் வாரத்தில் மூன்று அரை நாட்கள் – அதாவது மொத்தமாக ஒன்றரை நாட்கள் மட்டுமே வரவழைப்பது; ஒரு மாதத்திற்கு 12 நாட்கள் மட்டுமே பள்ளிக்குள் அனுமதிப்பது என்று, சுமார் 16000 ஆசிரியர்களது வாழ்க்கையைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தது அரசு. மத்திய அரசின் வழிகாட்டுதல்தான் இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம்  என்றாலும், நம் குழந்தைகள் கல்வி பெற வேண்டுமெனில் முழு நேரமும் ஆசிரியர்களது தேவை பள்ளிகளுக்கு இருக்கிறது என்று மாநில அரசுக்குத் தெரியாதா? அதைக் குறித்து அப்போது முதல் இப்போது வரை எவருக்கும் அக்கறை இல்லை. இருந்திருந்தால் இத்தனை வருடங்களாகத் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிக் குழந்தைகள் இந்த அவலத்திற்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். ஆம்; ஒரு பள்ளியின் ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதில் முதன்மையாளர் உடற்கல்வி ஆசிரியர்தான். வகுப்பறை ஒழுங்கை வகுப்பாசிரியர் பார்த்துக்கொள்வார் என்றாலும் பள்ளியின் மொத்த ஒழுங்கை, அனைத்து ஆசிரியர்களது உதவியுடன் உடற்கல்வி ஆசிரியர்கள்தான் கவனிக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அவர்களது பணியும் அதுதான் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  மூன்று அரை நாட்கள் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்தால், மற்ற மூன்றரை நாட்கள் பள்ளிகளில் ஒழுங்கை யார் கவனிப்பது? அந்த மீதி மூன்றரை நாட்களில் உடற்கல்வி வகுப்புகளுக்கு வரும் குழந்தைகளை விளையாட வைப்பது யார்? விளையாட்டுப் போட்டிகளுக்குத் தயார் செய்வது எப்படி? இதையே மற்ற துறை பகுதி நேர ஆசிரியர்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம் எனில், நம் குழந்தைகளுக்கு எத்தனை தூரம் கல்வி மறுக்கப்படுகிறது, அவர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர் என்று நாம் உணர முற்படுதல் அவசியம். படைப்பாற்றல் திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் களம் கலை ஆசிரியர்களது கையில்தான் இருக்கிறது. மற்றபடி அனைத்து ஆசிரியர்களுக்கும் பொறுப்பு உண்டு என்று நாம் பேசலாம். ஆனால் பாட ஆசிரியர்களுக்குத் தேர்வு மதிப்பெண் என்ற வட்டத்துக்குள் நின்று வாளைச் சுழற்றும் அளவிலான இடமே உள்ளது. ‘வானமே எல்லை; நீ உன் திறமையைக் காட்டு’ என்று மாணவர்கள் பார்வையை விசாலமாக்கும்  உத்தியை ஓவியம், தையல் உள்ளிட்ட கலை ஆசிரியர்களால்தான்  செய்ய இயலும். கணினிச் செயல்பாடு  உள்ளிட்ட பல திறன்களை மாணவர்களிடம் வளர்க்கும் இந்தச் சிறப்பு ஆசிரியர்கள் பள்ளிக்குள் இருந்தும் இல்லாமல் இருக்கும் ஒரு நிலைமையைக் கடந்த பத்தாண்டுகளில் எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை. விளைவு, ஆசிரியர்கள் தேவைப் பட்டியலில்  இவர்கள் பணியாற்றும் எந்தப் பள்ளிக்கும் புதிய ஆசிரியர் நியமனம் கிடையாது. இந்தப் பத்தாண்டு காலமாக எந்தவித ஆசிரியர் நியமனமும் இல்லை என்பது மற்றொரு துக்க வரலாறு. ஆனால், இந்தப் பகுதி நேர ஆசிரியர்கள் நியமனத்தில் மாணவர்கள் நலனுக்கும் கேடு; ஆசிரியர் நலனுக்கும் கேடு. அவர்கள் பெறும் ஊதியம் தற்போது பத்தாயிரம் மட்டுமே.  மாதம் பன்னிரண்டு நாட்களுக்குப் பத்தாயிரம் போதாதா என்ற குரல்களும் இங்கே ஒலிக்கின்றன. அது மிகப்பெரிய தவறு. ஒரு மாதத்தில் மீதி பதினெட்டு நாட்கள் அந்த ஆசிரியர்கள் எங்கே செல்வார்கள்? வேறு இடத்தில் நிரந்தரமாக வேலை செய்ய முடியுமா? வேலை தருவார்களா? இன்றுள்ள விலைவாசியில் இந்த ஊதியத்தை வைத்துக் குடும்பம் நடத்துவது இயலாத காரியம் என்பதை சமூகப் பார்வையுடன் சிந்திக்கும் அனைவராலும் அறிந்துகொள்ள முடியும். ஆனால் ஆட்சியாளர்கள் சிந்திக்க மறுக்கின்றனர். அத்தோடு பதினோரு மாதங்கள் மட்டுமே அவர்களுக்கு ஊதியம்  தரப்படுகிறது. மே மாதத்தில் அவர்களுக்குப் பசி எடுக்காதா? வாடகை வீட்டில் வசிப்போரிடம் வீட்டு உரிமையாளர் வாடகை கேட்க மாட்டாரா? அந்த மே மாதத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் யாருக்கும் எந்தப் பணத் தேவையும் இருக்காதா? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம். இந்த  ஊதியச் சிக்கலைத் தீர்க்கவும் மாணவர் நலன் கருதியும் எங்களை நிரந்தரப் பணியாளர் ஆக்குங்கள் என்று பகுதி நேர ஆசிரியர்கள் இன்று வரை 52க்கும் மேற்பட்ட முறைகள் போராட்டக் களத்தில் நின்றுள்ளனர். அந்தப் போராட்டங்களின் பலனாக முதலில் ஐந்தாயிரமாக இருந்த அவர்களது ஊதியம் தற்போது பத்தாயிரமாக மாறியுள்ளது; அவ்வளவே. ஊதியத்தைக் கடந்து, பணியாற்றும் பள்ளியிலோ சமூகத்திலோ வீட்டிலோ அவர்களுக்கு மரியாதை கிடையாது என்பது மற்றொரு வகை மன உளைச்சல். கடந்த பத்தாண்டுகளில் இறந்தவர், வேலையை விட்டவர், வேறு வேலைக்குச் சென்றவர், ஓய்வு பெற்றவர் என நான்காயிரம் ஆசிரியர்கள் காணாமல் போக, எஞ்சியுள்ளவர்கள் 12000 சொச்சம் ஆசிரியர்கள்தான். செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வந்தன.  இந்த நேரத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இறங்கி, சில நாட்களில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு, தற்போது தொடர் போராட்டத்தில் இன்று ஒன்பதாவது நாளாகத் தொடர்கின்றனர். இதுவரை ஐந்தாயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாகவும் நாட்கள் செல்லச் செல்லப் பெண் ஆசிரியர்களுக்கு அங்கு தங்க, உடைமாற்ற, கழிப்பறை செல்ல என்று எதற்கும் இயலாத சூழல். ஆகவே போராடுவோருக்குக் கடும் சிக்கல்கள் நிலவுகின்றன எனவும் சங்கப் பொறுப்பாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் தடைகளை மீறி ஒன்பதாவது நாளாக இன்றும் களத்தில் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். இதற்கிடையே போராட்டம் தொடங்கியது முதல் நேற்று வரையிலான எட்டு நாட்களில் பகுதி நேர ஆசிரியர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியைச் சேர்ந்த கணினி ஆசிரியர் உடல்நலக் குறைவால் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காததால் உயிரிழந்துள்ளார்.  மற்றொரு பகுதி நேர ஆசிரியரான கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த மணிகண்டன் என்ற ஓவிய ஆசிரியர், கடன் சுமையால் தற்கொலை செய்துகொண்டு உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிருக்கிறார். இருவருக்கும் பணம்தான் பிரச்சனை. அதற்கு இவர்களது ஊதியம் மிக முக்கியமான காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. மனிதாபிமானமற்ற முறையில் இப்படி ஆசிரியர்கள் வஞ்சிக்கப்படுவது கண்டனத்துக்குரியது. இவர்கள் துன்பம் சமூகத்தை அதிர்வுக்கு உள்ளாக்கி இருக்கிறது. கடந்த காலங்களில் 2016 தேர்தலின்போதும், 2021 தேர்தலின்போதும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்ற வாக்குறுதியை திமுக அளித்தது. அதை நம்பி குடும்பம் குடும்பமாக இவர்களுக்கு வாக்களித்தோம். ‌எங்கள் உறவினர்கள் குடும்பங்களையும் இவர்களுக்கே வாக்களிக்க வைத்தோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் நாங்கள் பலமுறை போராடிவிட்டோம்.  இப்போதும் எட்டு நாட்கள் ஆகியும் திரும்பிக்கூடப் பார்க்க மறுக்கிறார்கள் கல்வி அமைச்சரும் முதல்வரும் என்று வெளிப்படையாகப் புலம்பித் தீர்க்கின்றனர் பகுதி நேர ஆசிரியர்கள். இவர்களின் போராட்ட முழக்கமே 181ஆவது கோரிக்கை என்ன ஆயிற்று? என்பதுதான். இந்த நேரத்தில் பல ஆசிரியர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்குச் செல்வது என்ற சூழலும் நிலவுகிறது. கடந்த எட்டு நாட்களில் ஆறு முறை பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றனர். பள்ளிக்கல்வி இயக்குனர், கல்விச்செயலர், இணை இயக்குநர், சமக்ஷ்ர சிக்ஷா அபியான் திட்ட இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் வெறும் ஊதிய உயர்வு மட்டும் தருவதாகக் கூறிப் போராட்டத்தை முடித்துவிடப் பார்ப்பதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இறுதியாக நேற்று எட்டாவது நாள் மாலை, கல்வி அமைச்சர் தனது வீட்டிற்குப் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார். அந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால் இன்றும் போராட்டம் தொடர்கிறது. பேச்சுவார்த்தை குறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பகுதிநேர ஆசிரியர்கள் சங்கதினரிடம் கேட்டபோது, “பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளிடம் ஐந்து முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பதால் நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். இந்நிலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்று மாலை (அக்டோபர் 2) எங்களை அழைத்துப் பேசினார். அப்போது எங்கள் கோரிக்கைகள் குறித்து அமைச்சரிடம் பேசிய வகையில் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை பிறந்தது. இதற்கு முன்பும் பலமுறை அமைச்சரைச் சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாகப் பேசியுள்ளோம். அப்போதும் அமைச்சரின் பதில் எங்களுக்குச் சாதகமாக இருந்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் எங்கள் கோரிக்கைகள் மீது எந்தவிதமான அறிவிப்பும் வெளிவரவில்லை. அமைச்சருடனான பேச்சுவார்த்தையின்போது உடனிருக்கும் அதிகாரிகள், அமைச்சர் முன்னிலையில் ஒரு மாதிரியும் அவர்களைத் தனியே சந்திக்கும்போது வேறு மாதிரியும் பேசுகின்றனர். அமைச்சர் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற முனைந்தாலும் அதிகாரிகள் அதற்குத் தடையாக இருக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது. அதிகாரிகளின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது,  அவர்கள் இந்த அரசுக்கு எதிராகச் செயல்பட எங்களைத் தூண்டி விடுகின்றார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளைக் கேட்டால் ‘உங்கள் கோரிக்கையை நிதித்துறைக்கு அனுப்பியுள்ளோம். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று நிதித்துறையைக் கை காட்டுகின்றனர். ஆனால் நிதித்துறையிலிருந்து எங்களுக்குச் சாதகமான எந்த பதிலும் வரவில்லை. பள்ளிக் கல்வித்துறையும் நிதித்துறையும் சேர்ந்து அரசுக்கு எதிராக ஆசிரியர்களைத் திசை திருப்புகிறதா என்ற சந்தேகம் வலுக்கிறது. ‘திமுக அரசு ஆசிரியர்களுக்கானது’ என்ற நிலையை ‘ஆசிரியர்களுக்கு எதிரானது திமுக அரசு’ என்று மாற்ற அதிகாரிகள் முயல்கிறார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார்கள். கல்வித்துறையில் அவுட் சோர்சிங்கில், ஃபெல்லோசிப் நியமனங்களுக்கே அரை லட்சத்திற்கும் அதிகமாக ஊதியம் தரும் கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு ஊதியம் தராமல்  வஞ்சித்து, அவர்களை நிரந்தரமாக்காமல் குழந்தைகளின் வாழ்க்கையையும் சேர்த்து வஞ்சிப்பது கண்டிக்கத்தக்கது. சம வேலைக்கு சம ஊதியம்  அடுத்து, பகுதி நேர ஆசிரியர்கள் போராடிக்கொண்டிருக்கும் அதே டிபிஐ வளாகத்தின் புதிய கட்டிட வாகன நிறுத்துமிடத்தில் நிரந்தர ஆசிரியர்களும் பல ஆயிரக்கணக்கில் இணைந்து கடந்த ஐந்து நாட்களாக நீர் அன்ன ஆகாரம் இன்றிப் போராடி வருவது மற்றொரு வேதனை. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் 2009ஆம் ஆண்டு பணியில்

நோட்டாவை நோக்கி ஆசிரியர்கள்?! 

நோட்டாவை நோக்கி ஆசிரியர்கள்?! 

விடியலை நம்பி இருளில் வீழ்ந்தோம் – குமுறும் ஆசிரியர்கள் பொதுவாகவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு எப்போதும் வாரி வழங்குவதாக ஒரு பேச்சு இங்குண்டு. அதிலும் குறிப்பாக, ஆசிரியர்களுக்கு திமுக தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளைக் கொட்டிக் கொடுப்பதாகப் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒரு கருத்து ஆழ வேரூன்றி இருப்பதை மறுப்பதற்கில்லை. இதன் காரணமாகவே, அஇஅதிமுக தலைமை உள்ளிட்ட எவருக்கும் ஆசிரியர்கள் மீது எப்போதும் முழுதாக நம்பிக்கை இருப்பதில்லை. வேண்டா வெறுப்பாகத்தான் அவர்கள் ஆட்சியிலிருக்கும் காலக்கட்டங்களில் கிள்ளிக் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர். இதன் உச்சகட்டமாக 2003இல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர் பெருமக்கள் அனைவரையும் ஒற்றைக் கையெழுத்தில் ஒருசேரப் பணிநீக்கம் செய்து ஆணை பிறப்பித்த கறுப்பு நாளை யாரும் மறப்பதற்கில்லை. இவர்களால் தமக்கு எந்தவொரு பயனும் இல்லை என்கிற ஆழ்மன வெறுப்புணர்ச்சியே அதற்குரிய காரணமாகக் கருதிக்கொள்ள நிறைய வாய்ப்புண்டு. அரசியல் சார்பற்ற நிலையில், எந்த ஆட்சி குறித்தும் ‘இது நம் ஆட்சி’ என்று கவலை கொள்ளாமல் செயல்படும் பொதுவான ஆசிரியர் இயக்கங்களுக்குள், அடையாள அரசியல் மற்றும் கட்சி சார்பு மனநிலையை விதைத்து, தலைமைப் பதவி ஆசையுடன் ஊசலாடிய நபர்களுக்கு வலைவிரித்து, ஒட்டுமொத்த ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக ஆசிரியர் இயக்கத்தை உடைத்ததில், திமுக மற்றும் இடதுசாரி இயக்கங்களுக்கு நிறையப் பங்குண்டு. தமிழக அளவில், குறிப்பாக திமுகவிற்கு வலுவான இயக்கமாக ஆசிரியர் மன்றம் ஒன்று இருப்பதுபோல் ஆசிரியர்கள் மத்தியில் அஇஅதிமுக சார்புடைய ஓர் இயக்கத்தை வலுவானதாகக் கட்டமைக்க இன்று வரை இயலவில்லை என்பதே உண்மை. அரசு ஊழியர் இயக்கங்கள் பலவும் இன்றும்கூட, தேசிய, மாநிலக் கட்சிகள் சார்புடையவையாக உள்ளது அறியத்தக்கது. அதேவேளையில், ஆசிரியர் இயக்கங்களுக்குள் இந்த நிலை இல்லை. திமுக மற்றும் சிபிஎம் கட்சி சார்ந்த ஒரு சில ஆசிரியர் இயக்கங்களைத் தவிர, பெரும்பாலான  ஆசிரியர் இயக்கங்கள் இப்போது வரை கட்சி சார்பற்று, பொதுவானவையாக, துணிந்து திடமுடன் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. இதுபோன்ற கட்சி சார்புடைய இயக்கங்கள், தமிழக அரசியல் வரலாற்றில் பெரிதாக எதையும் சாதித்ததாகத் தெரியவில்லை. நம்பும்படியாக எதையெதையோ சொல்வார்கள். ஆனால் எதுவும் உண்மையல்ல. எந்த மயிலாவது தாமாக இறகொன்றை இரந்து கேட்பவருக்குக் கொடுத்துவிடுமா என்ன? தன்னலத்திற்காகப் பொதுநலத்தைப் பணயம் வைத்த துரோக வரலாறே ஆசிரியர் போராட்டக் களங்களின் வழிநெடுகிலும் காணப்படுவது வருந்தத்தக்கது. வேதனைக்குரியதும்கூட. இந்த ஆசிரியர் இயக்க உடைப்பு வேலை, இன்றும் தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி சார்ந்த ஆசிரியர் அமைப்புகளின் ஒவ்வொரு நிலையிலும் தொடர்வதைக் காணச் சகிக்கவில்லை. கடந்த காலங்களில் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்த போராட்டக் களங்கள், அண்மைக்காலமாகப் பிசுபிசுத்து, வெறும் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் போக்கிடமாக ஆகிப்போனதற்கு, தனிமனிதப் பதவி வெறியும் கண்மூடித்தனமாக நம்பும் கட்சி மோகமும் முக்கியக் காரணங்கள் ஆகும். திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக, வாய்விட்டுச் சொல்லவும் முடியாமல், கட்சி அபிமானத்திலிருந்து விலகவும் இயலாமல், தணலில் மாட்டிய பிஞ்சு உயிராக அண்மைக்காலத்தில், கட்சி சார்ந்த ஆசிரியர் அமைப்புகளின் நிலையுள்ளது. இஃது ஆசிரியர்களின் பெரும் துயரம் ஆகும். வெறுப்பு மிகுந்த எதிரியை எதிர்த்து, ‘இழப்பதற்கு இனி எதுவுமில்லை; அடைவதற்கு ஓர் இலக்கு இருக்கிறது’ என்று உயிரைக் கொடுத்துப் போராட முடியும். அன்பிற்கினிய பச்சைத் துரோகியுடன், இனி எவ்வளவு காலத்திற்கு மறத்துப்போன ஆன்மாவுடன் கைகோர்த்து நடைபோடுவது என்று அல்லாடித் தவிக்கும் ஆசிரியர் இயக்கவாதிகள் மிகவும் பரிதாபத்திற்குரியவர்களாக இருப்பது கொடுமையானது. முன்பு போல், இப்போது யாரையும் அவ்வளவு எளிதாக அதிகக் காலம் ஏமாற்ற முடியாது. எளிய அணுகுமுறையையும் தியாக உணர்வையும் கட்சி சார்பில்லாத போராட்டக் குணத்தையும் காலில் போட்டு மிதித்து, பக்கா பகட்டுக் கட்சிக்கார அரசியல்வாதிபோல் ஆகிவிட்ட, வெள்ளையும் சொள்ளையும் பளிச்சிடும் ஆசிரியர் இயக்கத் தலைமைகள் இதை உணருதல் அவசியம். முகத்திற்கு நேராக எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிவற்ற பலரும் தம் முதுகிற்கு பின் காறித் துப்புவது குறித்துச் சிந்திப்பது நல்லது. அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்ட நிலையில் இன்றைய ஆசிரியர்கள் நிலையுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தகால ஆட்சியாளர்கள் மேற்கொண்ட ஆசிரியர் விரோத வடுக்களுக்குத் தீர்வாக, விடியல் அரசைத் துணையாகக் கொண்டது மறைப்பதற்கில்லை. பழைய ஓய்வூதியம், சம வேலைக்குச் சம ஊதியம், ஊதிய முரண்பாடுகள் களைதல், பகுதிநேர ஆசிரியர்களுக்குக் கடந்த காலத்தைப் போன்று காலமுறை ஊதியம் வழங்குதல், பழைய ஊக்க ஊதியம், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியத்தை மீண்டும் விடுவித்தல் முதலானவற்றிற்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பி இருந்தவர்களுக்கு, கிடைத்தது என்னவோ பெருத்த ஏமாற்றம் மட்டுமே என்றால் மிகையில்லை. அதாவது, இருண்ட வாழ்விலிருந்து மீள முடியா நரக வாழ்வில் தாமாகவே போய்விழுந்த குற்ற உணர்வில், ஒவ்வொருநாளும் ஒவ்வோர் ஆசிரியரும் உழல்வதாக அறியப்படுகிறது. விளம்பரங்கள் பள்ளிக்குத் தேவைதான். ஆனால், வெற்று விளம்பரங்களால் கல்வி பாழாக்கப்படுவதை எவராலும் ஏற்கவியலாது. கற்பித்தலை மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, இணையத்தோடும் பதிவேடுகளோடும் நொடிகள்தோறும் மல்லுக்கட்டும் முழுநேர வேலையில் ஆசிரியர்களின் ஆவி போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியது அனைவரின் முழுமுதற் கடமையாக உள்ளது. முதன்மையானதும் பயன்மிக்கதும் ஆசிரியர் நலனுக்கு உகந்ததுமான பல்வேறு கோரிக்கைகளும் ஆழ்கடலில் கொண்டுபோய் போடப்பட்டவையாகவே இன்றுவரை காணப்படுகின்றன. ‘ஆட்சிக்கு வருவதற்கு முன் ஒரு பேச்சு; வந்த பிறகு வேறு பேச்சு’ என்பதில் ஆசிரியர்களுக்கு எப்போதும் உடன்பாடில்லை. பழைய கொடிய பிசாசுகளுடன் போராடிக்கொண்டிருக்கும் அப்பாவி ஆசிரியச் சமூகத்தை அதிலிருந்து விடுவிக்காமல், மேலும் புதிய புதிய பேய்களை ஏவிவிட்டு வேடிக்கை பார்ப்பது என்பது கொடுமையானது. ஆம். எண்ணும் எழுத்தும், கிணற்றைத் தேடி அலைந்த கதையாக உயிரை மாய்க்கும் இணைய வழி மதிப்பீட்டு முறைகள் மற்றும் ஆய்வுப் படையெடுப்புகள், பதவி உயர்வுகள் கலந்தாய்வைக் கொள்கை முடிவெடுத்து நடத்துவதில் காலம் தாழ்த்துதல், அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் தற்காலிக, தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்க அறிவுறுத்துதல், காலை உணவுத் திட்டம் வாயிலாக, மறைமுகமாக ஆசிரியர் பெருமக்களை 12 மணிநேரம் உழைக்க வைக்க, மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோரை ஏவிவிடுதல் முதலான, புத்தம் புதிய பிசாசுகளுடன் போராடி, உடல் மற்றும் உள நலன் கெட்டு, சுயமரியாதை இழந்து, அகால மரணம் அடையும் அவலநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது இன்றியமையாதது. இத்தகைய சூழலில், இந்தியத் துணைக்கண்ட ஒன்றிய அளவில், திராவிட மாடல் அரசின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் மக்கள் நலத்திட்ட உதவிகளையும் தொலைநோக்குச் சிந்தனைகளையும் முன்னெடுக்கும் முன்முயற்சிகள் அனைத்திலும் உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலன்கள் காக்கப்படத் தோள்கொடுப்பது அரசின் கடமையாகும். இன்றைய பாசிச, மதவாத, வெறுப்பு அரசியல் மற்றும் அவற்றின் அனைத்து மக்கள் விரோத மற்றும் குரோதச் செய்கைகளுக்குத் தவழ்ந்து தலையாட்டும், திராணியற்று திராவிடத்தை முழுக்குப் போட்டு, தலைமை குழப்பம் நிலவும் கைப்பாவை அரசியல் மீது பின்தொடரும் நோக்கும் போக்கும் ஆசிரியர்கள் மத்தியில் இருப்பதாகத் தோன்றவில்லை. இந்த நிலையில் திமுகவை விட்டாலும் ஒர் அமைதியும் இணக்கமும் குறைந்தபட்ச மகிழ்ச்சியும் அனைத்துத் தரப்பினருக்கும் கிடைத்திட வேறு கதியில்லை என்பதே நடப்பியல் ஆகும். அதேவேளையில், நம்பகமும் நம்பிக்கையும் நிறைந்த விடியல் அரசு கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் 100 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதை நினைத்து ஆசிரியர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கத்தான் வேண்டியுள்ளது. தம் நியாயமான எதிர்ப்பை விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட, தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஆசிரியர்களும் அவர்களது குடும்பத்தினர்களும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நோட்டாவை நாடிப்போகும் அபாயகரமான சூழலைத் தடுத்து நிறுத்தி, நம்பிக்கை இழந்து மடியும் நிலையிலுள்ள எஞ்சிய கடைசி வேரில் உயிர்நீர் ஊற்ற முன்வருமா முன்மாதிரி அரசு?

பழம்பெருமை பேசுவதுதான் கல்வியா?

பழம்பெருமை பேசுவதுதான் கல்வியா?

தொடக்கக் கல்வியில் நுழைந்துள்ள NCFFS ஆபத்து குறித்து AISEC அமைப்பு முன்னெடுத்துள்ள தொடர் உரையாடலின் முதல் அமர்வின் நிறைவுப் பகுதி;   NCFFSஇன் பல்வேறு இடங்களில் பண்டைய (ancient) என்ற சொற்பயன்பாடு குறித்தும் அதன்வழியே தொடக்கக் கல்வியைப் பின்னுக்கு இழுக்கும் முயற்சி குறித்தும் முந்தைய பகுதியில் பார்த்தோம். நடைமுறையில் இருக்கும் சில புதிய தேசிய கல்விக் கொள்கையின் திட்டங்கள் மற்றும் கல்வியின் நோக்கம் குறித்து இதில் கூறப்பட்டுள்ளவை குறித்த உரையாடலைத் தொடர்கிறார் பேராசிரியர் யோகராஜன். (NIPUN) National Initiative for proficiency in Reading with Understanding and Numeracy) நிபுன் பாரத் திட்டம் என்ற இந்தத் திட்டம்தான் NEP 2020இன் திட்டம். அதைத்தான் நமது தமிழக அரசு எண்ணும் எழுத்தும் திட்டம் என்று கூறி நடைமுறைப்படுத்தி வருகிறது. வித்யா பிரவேஷ் (Vidya Pravesh) – கல்விக்குள் நுழையும் குழந்தைகளுக்கு 4 மாத காலத்திற்கு ஓரியண்டேஷன் தரும் திட்டம். இதற்கான கலைத் திட்டங்களை NCERT உருவாக்கியிருப்பதாகக் கூறியுள்ளனர். பாலவாடிகா (Balvatika) – இத்திட்டம் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு ECCE தகுதியுள்ள ஆசிரியர்களை வைத்துக் கற்பிப்பதாகக் கூறுகின்றனர். இதை நம் தமிழகம் 2020இல் எல்லாப் பள்ளிகளிலும் அவசர அவசரமாகக் கொண்டுவரும்படி கட்டாயமாக்கி, முழு வீச்சில் நடத்தியது. அதன்பிறகு அது கவனிக்கப்படவில்லை என்பதும் உண்மை. மேலே சொன்ன பல்வகைத் திட்டங்களை, இந்தக் கல்வித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மிகச் சிறந்த வழி விளையாட்டுகள் என்கின்றனர். விளையாட்டின் முக்கியத்துவம் மற்றும்  விளையாட்டுகளின் வகைகள் குறித்து மிக மிக நுட்பமாக விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு ஆசிரியர்களை வலியுறுத்தும் விதமாகவும்  விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கொள்கை என்னவோ நாம் முன்னர் பார்த்ததுதான்.  இதுவரை சொல்லப்பட்ட யாவும் வெறும் முன்னுரை மற்றும் நோக்கங்கள்தான். இனி இதன் இரண்டாவது பகுதியான பாடத்திட்ட இலக்குகள் மற்றும் கற்றல் விளைவுகள் குறித்து NCFFS கூறுவதைப் பார்ப்போம்.   ஏற்கனவே நாம் பார்த்த நோக்கங்களையும் ஒவ்வொரு (domain) துறையிலும் உடற்கல்வி, மொழிக் கல்வி, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய உடற்தகுதி என, அந்தத் துறையில் இந்த நோக்கத்தை பிரயோகித்து Manifesto உருவாக்கி, அதற்கேற்றவாறு அதிலிருந்து, கற்றல் இலக்குகள் Curricular Goalஐ உருவாக்கி, அந்தக் கற்றல் இலக்குகள்  நிறைவேறினால் அந்த மனிதரிடம் என்ன திறன் அல்லது வல்லமை வரும் என்று (Competency) பார்த்து வரிசைப்படுத்தி, அந்தத் திறன் இருப்பதை உறுதிப்படுத்த, Check list உருவாக்குகின்றனர். வல்லமை ஒரே நாளில் தோன்ற முடியாது. சிறிது சிறிதாக வளரும்.. அந்தச் சிறு பகுதிகளை learning outcome (கற்றல் அடைவுகள்) என்று வரிசைப்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு, பேசுதல் திறன். இத்திறன் ஒருவரிடம் இருப்பதற்கு என்னென்ன காரணிகள் இருக்க வேண்டும் என்று ஒரு கடினமான கட்டமைப்புக்குள் (rigid frame work) கொண்டுவந்துவிடுகின்றனர். இந்த இடத்தில்தான் உண்மையான பயம் உருவாகிறது. Aims – Curricular goals – Competency – Learning Outcome இதுதான் முறை. இந்தக் கற்றல் அடைவுகள் என்ன வேண்டுமோ அதற்கேற்றபடிதான் கலைத்திட்டம் இருக்க வேண்டும் என்று சொல்லும் மத்திய அரசு, இந்த முறைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலமும் அவர்களுக்கான கல்வியை அமைத்துக்கொள்ளலாம் என்கிறது. ஆனால், உண்மையில் என்ன நடக்கிறதென்றால், இந்த முறைப்படி  ‘கலைத் திட்ட (Curriculum & Syllabus) உருவாக்கும் பணியை NCERT வசம் கொடுத்துவிட்டது. NEP சொல்வதோ, பள்ளிக் கல்வியில் என்ன மதிப்பெண் பெற்றாலும் அதற்கு முக்கியத்துவம் இல்லை. மேலும் அது அந்தளவிற்குத் தேர்வு முறையே இலகுவாக இருக்க வேண்டும் என்கிறது. ஆனால், சாதாரண மக்கள், தேர்வு என்றால் பரீட்சை, குழந்தைகளுக்கு அறிவு இருக்கின்றதா எனச் சோதிக்கிறார்கள் என அவர்கள் நினைப்பார்கள். ஆனால் கற்றல் – கற்பித்தல் பணியில்  ஈடுபடுவோர்க்கும் கல்வியாளர்களுக்கும், தேர்வு என்பது கற்றல் கற்பித்தல் நிகழ்முறைப் போக்கை நாமே பரிசோதனை செய்துகொள்வது என்பது தெரியும். ஒரு தேர்வின்  மதிப்பீட்டு முறை எதற்காக என்றால், அது இல்லையேல் கற்றலும் கற்பித்தலும்  நடந்ததா என்று நமக்குத் தெரியாது. ஆனால் இப்போது தேர்வையே  மிக எளிமையாக்க வேண்டும் என்கின்றனர். அந்தத் தேர்வில் மாணவன் பெறும் மதிப்பெண்ணுக்கு  முக்கியத்துவம்  இல்லை. ஏனென்றால், இந்தியாவில் பன்னிரண்டாம், பத்தாம் வகுப்பு முடித்த அத்தனை பேரும்  உயர் கல்விக்குச்  செல்ல வேண்டும் என்றால், அந்த மதிப்பெண் இனிமேல் தகுதியாக இருக்க முடியாது. அதற்குப் பதிலாக (NTA ) என்ற அகில இந்திய அளவில் ஒரு அமைப்பு உருவாக்கி இருக்கின்றனர். National Testing Agency. இது வைக்கும் தேர்வு, மிகவும் கடினமாக இருக்கும். அந்த National Testing Agency என்ன தேர்வு வைக்கிறதோ, அதில் யார் தேர்ச்சி பெறுகிறாரோ, அவர்கள்தான் இனிமேல் கல்லூரிகளுக்கே செல்ல முடியும். இதுதான் NEP 2020 சொல்லக்கூடிய விசயம். இந்தக் கற்றல் அடைவுகள் (learning outcome) என்னவென்பதை NCERT  புத்தகங்கள் தீர்மானிக்க ஆரம்பித்தால், இந்த NTA வைக்கக்கூடிய தேர்வுகளில் NCERTஇன் புத்தகங்களே அடிப்படையாக இருக்கும். அதாவது இந்த learning Outcome உருவாக்கும் முறையை எல்லா மாநிலங்களும் பின்பற்றித்தான் ஆக வேண்டும்  என்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எந்த மாநில அரசாவது NCERT பாடத்திட்டத்திற்கு மாறாக, வேறு சிலபஸை வைத்திருக்க முடியுமா? என்ன பெயரில் வேறு சிலபஸ் வைத்திருந்தாலும் அதனுடைய கற்றல் விளைவுகளும் NCERTஇன் கற்றல் விளைவுகளும்  ஒரே மாதிரிதான் இருக்கும்; இருக்க வேண்டும். இவர்கள் சொல்லக்கூடிய  aim – அதிலிருந்து உருவாக்கப்படும் Curricular goal – அந்த Curricular goal இலிருந்து உருவாக்கப்பட்ட Competency – அதிலிருந்து உருவாக்கப்பட்ட learning outcome – இந்த learning Outcome குழந்தைகளுக்குக் கிடைப்பதற்குத் தேவையான Curriculum and சிலபஸ் – இப்படியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இப்படியாக ஒரு சிக்கலான அமைப்பை உருவாக்கியிருக்கின்றனர். இறுதியில் இவர்கள் சொல்வது, எதிக்ஸ் வேல்யூஸ் – நெறிமுறைகளுக்கு மதிப்பாளிக்க வேண்டும் என்கின்றனர். அதில் பலவற்றைக் கூறினாலும் முக்கிய இடம் தந்திருப்பது இந்தியப் பண்டைய பெருமையே. எந்தவிதப் பெருமைவாதத்துக்கும் இடம் தராமல், உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா மனிதர்களையும் இனம், சாதி, மதம், மொழி, பால் பேதமின்றி அனைவரையும் சமமாகப் பார்ப்பதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் இவர்கள் பெருமைவாதத்தையே தொடர்ந்து பேசுகின்றனர்; வழியுறுத்துகின்றனர். அடுத்த அமர்வில், NCFFSஇல் கூறப்பட்டுள்ள அடுத்த சில பிரிவுகள் குறித்து உரையாடுவோம். உரையாடல் தொடரும்.

பள்ளிக் கல்வியில் வைதீகத்தின் கூறுகள்

பள்ளிக் கல்வியில் வைதீகத்தின் கூறுகள்

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து குறித்து AISEC கலந்துரையாடல் பள்ளிக்கல்வியில் பஞ்ச கோஷா விகாஸ் என்ற பிற்போக்கு சிந்தனை சார்ந்த கருத்து நுழைக்கப்படுவதை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த curriculam frame work இல் மதம் எவ்வாறு கோலோச்சுக்கிறது என்பதைப் பேராசிரியர் யோகராஜன் தொடர்ந்து விளக்குகிறார். The Panchakosha concept and imagination also maps into the different domains of development envisaged in ECCE which are the basis of the Curricular Goals. இந்த பஞ்ச கோஷா கோட்பாடும் கற்பனைத் திறனும்தான் curricular goals  இல் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கூறுகின்றனர். தயவுசெய்து இந்த curricular  goals என்ற வார்த்தையை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இதெல்லாமே இதற்கான விளக்கங்கள் (Substantiation). மேலும் அவர்கள் கூறுவது என்னவென்றால், Physical development (sharirik vikas) சரீரம் என்றால் உடம்பு, விகாஷ் என்றால் வளர்ச்சி, development of Life energy (Pranik Vikas), இதெல்லாம் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம். Emotional / mental development (Manasik Vikas), Intellectual drelopment (Bauddhikvikas) Spritual development (chaitsik Vikas) ஆனந்தமய கோஷா இருக்கிறதே, அதனுடைய நீட்சிகளே இவை. எல்லாமே சமஸ்கிருத வார்த்தைகள். இப்படித்தான் அனைத்தையும் இந்த frame work இல் விவரிக்கின்றனர். வைதீகத்தில் இரு முக்கியமான கூறுகள் இருக்கும். ஒன்று ஸ்ருதி, மற்றொன்று ஸ்மிருதி. விவேகானந்தரின் எழுத்துகளை எடுத்து வாசித்தால்கூட, அவர் சொல்வது ஸ்ருதி, ஸ்மிருதியில் ஸ்ருதியைத்தான் அடிப்படையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பார். ஸ்மிருதியை அடிப்படையாகக் கொள்ளக்கூடாது; கொள்ளவும் முடியாது, ஏனெனில் அது வெறுமனே ஒருவருடைய நினைவிலிருந்து மற்றொருவருக்கு வாய்மொழியாகக் கடத்தப்படுவது. அதனால் அதன் உண்மைத்தன்மையை யாரும் பார்க்க முடியாது. ஆய்வு செய்வதானால் ஸ்ருதியை மையமாக வைத்துதான் ஆய்வு செய்ய வேண்டும் என்று சொல்கிறார் விவேகானந்தர்.                           கல்வி கற்கக்கூடிய குழந்தைகளுக்கு ஞாபக சக்தி – நினைவாற்றல் மிக  முக்கியம் என்பது நம் எல்லாருக்கும் நன்றாகத் தெரியும். அதை நாம் எடுத்துக் கூற வேண்டுமானால் நினைவாற்றல் குறித்து நவீன அறிவியல் என்ன சொல்கிறது என்றும் மிக அழகாக விவரிக்கலாம். ஆனால் அப்படிக் கூறாமல், The ancient Indian emphasis on Smirithi என்கின்றனர். எல்லா இடத்திலேயும் ancient என்ற சொல்லைப் பார்க்க முடிகிறது.  Since Vedic era, the ancient Indian holistic natural Indian natural medical system of Ayurveda has also been a guide to early childcare practices… இதற்கு முன்பு வரை இதுபோன்ற பேச்சுகளை நவீன அறிவியலையும்  பண்டைய இதிகாசங்களையும் இணைக்கும் விஷங்களை அரசியல் தலைவர்கள் மேடையில் பேசிக்கொண்டிருந்தனர் என்பது நமக்குத் தெரியும். ஆனால் இங்கு  பாடங்களில் பேசுகின்றனர். ஏற்கனவே அறிவியல் குறித்து மிக ஆழமாகத் தெரிந்தவர்களுக்குத் தெரியும், அறிவியலின் ஒரு பிரிவான இயற்பியல் துறையை ரோமானிய இயற்பியல், கிரேக்க இயற்பியல், தமிழக இயற்பியல், இந்திய இயற்பியல், அமெரிக்க இயற்பியல் என்று யாரும் பிரிக்க முடியுமா? பிரிக்க மாட்டோம். ஏன் பிரிப்பதில்லை? ஏனெனில்  இயற்பியல் என்பது அறிவியல் பாடத்தில் உள்ள ஒரு துறை, அங்கு பொதுவாக பொருட்களின்  இயக்கத்தின் விதிகள் குறித்துப் படிக்கிறோம். உலகம் முழுமைக்கும் அந்த விதிகள் பொதுவானவை. அவர்கள் கூறுவதை அவ்வாறே பாருங்கள். Since the Vedic era, the ancient Indian holistic natural medical system of Ayurveda has also been a guide to early childcare practices, with one of its eight branches dedicated to the care of children. The approach to knowledge and understanding of childcare in Ayurvedic texts was holistic. The biological, psychological, sociological, and cultural approaches were seen as mutually inclusive. In the contemporary practice of Ayurveda, Kaumarabhrithya, the first section of the Kashyapa Samhita, is often consulted for the practice of paediatrics, gynaecology, and obstetrics. It is reported to have been written in the 6th century BCE. உலகத்தில் விவசாயம் தோன்றி 20,000 வருடங்கள் ஆயிற்று. ஆகவே இருபதாயிரம் வருடங்களாக உலகில் நாகரிகம் உருவாகியுள்ளது. இப்படி நீண்ட காலமாக வளர்ந்ததால் பல இடங்களில் பல மருத்துவ முறைகள் தோன்றியுள்ளன என்பது உண்மைதான். இப்படி மருத்துவ முறைகள் தோன்றியிருந்தாலும், வளர்ச்சி அடைந்து வளர்ச்சி அடைந்து உண்மையிலேயே அறிவியல் எல்லாம் சரியாக இணைக்கப்பட்டிருந்தால் எப்படி மாறியிருக்க வேண்டும் எனில், “மருத்துவ அறிவியல்” என்று மாறியிருக்க வேண்டும். அதாவது, ஆயுர்வேதம் என்பது இல்லை, யுனானி என்பது இல்லை, ஆங்கில மருத்துவம் என்பது இல்லை, சித்தா என்பது இல்லை, ஹோமியோபதி என்பது இல்லை. அனைத்தும் இணைந்து “மருத்துவ அறிவியல்” – யுனிவெர்சல் மெடிக்கல் சயின்ஸ் என்று மாறியிருக்க வேண்டும் என்பது அறிவியல் பார்வை கொண்ட எல்லாருக்கும் தெரியும். இன்னும்  அறிவியலால் அப்படி இணைக்க முடியாததால், அவையெல்லாம் தனித்தனியாக இருக்கின்றன. சித்த மருத்துவம், யுனானி மருத்துவம், ஆயுர்வேதம் ஆகியவற்றின் கருத்துகள், கொள்கைகள் ஆய்வு செய்யப்படவேண்டும். இதெல்லாம் ஆய்வு செய்து அறிவியல் முறைக்குக் கீழ் வந்துவிட்டால் எல்லாமே மருத்துவமுறையாக மாறிவிடும். அதன்பிறகு அது சித்தாவாகவோ, யுனானியாகவோ ஆயுர்வேதமாகவோ இருக்காது.  2500 ஆண்டுகளுக்கு முன்பு ஆயுர்வேத அறிவானது மிக உயர்ந்த அறிவு. ஆனால் இன்று இருக்கக்கூடிய நவீன அறிவியலில் இந்த அறிவை மிக உயர்ந்த அறிவு என்று சொல்லிவிட முடியாது.  ஆனால் இதையும் NCF வடிவமைப்பில் curicular  goal ஆக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.  Samskaras (சம்ஸ்காராஷ்) என்ற சொல் இதில் பல இடங்களில் வருகிறது. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருளில் வருகிறது. இதன் பொருளை பொதுவாக நாம் எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால், Disposition, attainment of  values, அப்படின்ற பொருளில் வரக்கூடிய வார்த்தைகள் என்ன மாதிரியான attainment? உதாரணமாக, பிள்ளை  பால் குடிப்பருவம் முடித்துவிட்டது, திட உணவு உண்ணும் பருவம் வந்துவிட்டது, அதற்குப் பண்டை காலத்தில் என்ன பெயர் என்றால் அன்னப் பிரசன்னா (Annaprashana). இன்றிலிருந்து பிள்ளைக்குப் பருப்பு சோறு தரப் போறோம். அதுபோல, பிள்ளையின்  விரல்கள்  ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வலிமையுடையதாக ஆகிவிட்டது. அதன் சிந்தனைகள் கேள்விகள் கேட்கும் அளவு வளர்ந்துவிட்டது. அவர்களுக்கு எழுத்து பழக்க வேண்டும். இது ஒரு சம்ஸ்காரா, இதை vidyarambha  அல்லது Aksharabhyasa என்கின்றனர். இப்படி எல்லா இடங்களிலும் சமஸ்கிருதப் பெயர்கள்தான் இருக்கின்றன. இவற்றை எல்லாம்  NCF-க்குள் கொண்டு வருகிறார்கள். இதைப் பெருமை என்று கூறுகின்றனர்.  மேலும், முழுமையான ஆண் மகன் அல்லது மனிதன் என்றால் pursuit of the four Purusharthas , Dharma – நியாயம்  Artha  – பணம் (Wealth)  Kama (Pleasure) மகிழ்ச்சி and Moksha. (Salvation), இந்த சம்ஸ்காராக்களை நோக்கிக் குழந்தைகள் பயணம் பண்ணக்கூடிய வகையில் இந்த NCF வடிமைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறுகின்றனர். இத்தோடு நின்றுவிடவில்லை. இந்தியாவில் கல்வியின் அடையாளமாக யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்றும் கூறும்போது உண்மையிலேயே  சாவித்ரி பாய் பூலே, ஜோதிராவ் பூலே குறித்துக் குறிப்பிட்டுள்ளனர். நாமும் குறிப்பிடுவோம். ஆனால் எதார்த்த இந்தியாவில் கல்விக்கான முன்னோடி என்றால் ஈஸ்வர சந்திர வித்யாசாகரைத் சொல்வோம். ஏனென்றால் வங்கத்தில் தெருவில் நின்று பிச்சை எடுக்காதது மட்டும்தான் குறை, அப்படியான வழிவகைகளில்  பணியாற்றி, எண்ணற்ற பள்ளிகளைத் திறந்தது அவர்தான். அதன் காரணமாகத் தான் வங்கம் முதலில் கண்ணைத் திறந்தது. அதனால்தான் வங்கத்தை உடைக்க வேண்டும் என்று ஆங்கிலேயர் நினைத்தனர். இந்திய  மறுமலர்ச்சியின் தந்தை  ஈஸ்வர சந்திர வித்யாசாகர், ஆனால் அவரை இங்கு குறிப்பிடவில்லை.  அவருக்குப் பின் வந்த பூலே தம்பதியினரைச் சேர்த்துள்ளனர். அவர்களிருவரும் மிகப் பெரிய ஆளுமைகள்தான். அவர்களுடன் ரபீந்தரநாத் தாகூரைச் சேர்த்துள்ளனர். அவரையும் சிந்தனையாளர் என்று ஏற்று இருக்கிறது இந்த NCF. மற்றும் சுவாமி விவேகானந்தரையும் குறிப்பிடுகின்றனர். சுவாமி விவேகானந்தர் கல்வி குறித்து ஏராளமானவற்றைக் கூறியுள்ளார். ஆனால் இவர்கள் எதைச் சேர்த்திருக்கிறார்கள் என்றால், Is the empirical world all that we need to know? Is this all that we are? Should the improvement of material aspects of human existence all that we need to strive for? For him, the core of human existence and human possibilities lies in atman (the self).. atman. (the self)…என்பதன்  உண்மையான அர்த்தம் ஆன்மா என்று சொல்லலாம். எத்தனையோ விஷயங்களை அற்புதமாகப் பேசியிருக்கிறார் விவேகானந்தர். ஆனால் அவர் கூறிய இந்தக் கூற்றை மட்டுமே இங்கு இவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அடுத்து மகாத்மா காந்தியடிகள்.  நாமும் அவரை ஏற்றுக்கொள்ளலாம். அடுத்து அரபிந்தோ, அவரது புரட்சிகர ஆரம்ப கால வாழ்க்கையைப் புகழ்வோம். ஆனால் கல்வி குறித்து அவரது கொள்கையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எந்தவொரு ஜனநாயக மதச்சார்பற்ற நாடும் விழிப்புணர்வுள்ள மக்களும்  ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அடுத்து ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. அவரையும் நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.  இவர்கள் எல்லாரும் கல்வியில் முக்கியப் பங்காற்றி இருப்பதாகக் கூறியுள்ளனர். அவர்கள் தவிர குறிப்பிடபபடும் வேறு இருவர், கிருபாஜி பதேகா மற்றும் தரபா மோடகி. இவர்கள் இருவரும் மராத்திய குஜராத் பகுதியைச் சேர்ந்தவர்கள், இருவரும்  சீர்திருத்தவாதிகள் . அடுத்து Current State learning crisis குறித்துச் சொல்கின்றனர். பிரச்சனைகனைக் குறித்துப் பேசுபவர்கள், தீர்வுகளைச் சொல்லியிருப்பார்கள் என்று தேடினால் அதுபற்றி எதுவுமே இல்லை. அடுத்து  சில புள்ளி விவரங்கள் தருகின்றனர். 11.7 இலட்சம் பள்ளிகள் இந்தியா முழுவதும் இருக்கின்றன. அவற்றில் 9.3 லட்சம்  தொடக்கப் பள்ளிகள், 1.9 இலட்சம்  முன்பருவப் பள்ளிகள்  (Pre Primary), 2.7 லட்சம் அங்கன்வாடிப் பள்ளிகள் இருக்கின்றன. அங்கன்வாடியும்  முன்பருவப் பள்ளிகளும் நிச்சயமாக நமக்குப் போதுமானதாக இருக்காது. அதைப்பற்றிக் கூறுகின்றனர். 

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC உரையாடல் – பகுதி 2

தொடக்கக் கல்வியில் NCFFS ஆபத்து – AISEC உரையாடல் – பகுதி 2

அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டி நடத்திய மெய்நிகர் உரையாடலில், NCFFSஇன் முதல் இரண்டு அத்தியாயங்கள் குறித்துப் பேராசிரியர் யோகராஜன் விளக்கிப் பேசிய ஆய்வுரையின் தொடர்ச்சி: எந்தவொரு கொள்கையும் காரணமில்லாமல் எழுதப்படுவதில்லை. ஒரு கொள்கை எழுதுவதற்குக் கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கிறது. அந்தக் காரணத்தை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? அதற்கு அறிவியல் நமக்கு ஒரு வழியைக் கற்றுக் கொடுக்கிறது. அந்த நிகழ்வை நீங்கள் அதன் இயக்கத்தில் பார்க்க வேண்டும். எந்த நடைமுறையில் (Process), கல்வி எப்படி இயங்கிக் கொண்டுள்ளது, எந்த இயக்கத்திலிருந்து இந்தக் கொள்கை வந்துள்ளது, அப்படியெனில் அதன் நோக்கம் என்ன, என்பனவற்றையெல்லாம் பார்க்க வேண்டும் என்று அறிவியல் சொல்லித் தருகிறது. அடுத்ததாக அதனுடைய பின்னணியைப் பார்க்க வேண்டும் என்கிறது. சமூக, பொருளாதாரப் பின்னணியில் அந்தக் கொள்கையை நாம் அணுக வேண்டும் என்றும்  அறிவியல் சொல்கிறது. இந்த இயக்கத்திலும், இந்தப்  பின்னணியிலும் ஒரு கொள்கையைப் பார்க்கும்போதுதான் அந்தக் கொள்கையை நாம் மதிப்பீடு செய்ய முடியும்.  அதனோடு (relevance) தொடர்புடையவைகளைப் புரிந்துகொள்ள முடியும். கொள்கையினுடைய சாதக, பாதக, ஆபத்தான அம்சங்களையோ அல்லது நல்ல அம்சங்களையோகூட புரிந்துகொள்ள வேண்டுமெனில் அதன் இயக்கத்தில் இதைப் பார்க்க முயற்சிக்க வேண்டும். கல்வியை அதன் பிராசஸில் (Process) பார்க்க வேண்டும் என்பதன் பொருள், இன்றுள்ள கல்விச்சூழல் கடந்த காலங்களில் எப்படி இருந்தது என்று பார்க்க வேண்டும். கல்விக் கொள்கை 1986இல் எப்படி இருந்தது, அதற்கு முன்பு எப்படி இருந்தது, 1986இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு 1992இல் அதையே செறிவூட்டி (Enrich) மறுபடியும் வெளியிட்டனர். அதற்குப் பெயரும் அந்த நேரத்தில் NEP தான். NEP 1986, NEP 1992, அதன் பிறகு, பிர்லா அம்பானியின் கமிட்டி, அதற்குப் பிறகு மிக முக்கியமான இது போன்ற கமிட்டி என்று சொன்னால் சாம் பிட்ரோவின் நேஷனல் நாலெட்ஜ் கமிஷன். இந்தப் போக்கில் இன்று எங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்றால் 2019இல் வெளியிட்ட வரைவுக் கொள்கை, அதன் பிறகு கொரோனா காலத்தில் பாராளுமன்றத்தில் எந்த விவாதத்திற்கும் உட்படுத்தாமல் கொண்டுவரப்பட்ட  NEP 2020.   இந்த NCF 2023இல் 10 அத்தியாயங்கள் இருக்கின்றன. அவற்றுள் முதலிரண்டு அத்தியாயங்களையே இப்போது நாம் பார்க்கப் போகிறோம். நாட்டு மக்களின் பொருளாதார நிலையை முழுமையாகப் புரிந்துகொள்ள, World inequality database எனும் தகவல் தளம் மூலம் Stats of India எனும் அமைப்பு உருவாக்கிய வரைபடம் இங்கே  கொடுக்கப்பட்டுள்ளது. படத்தில் X அச்சு நாட்டின் 140 கோடி மக்களையும் Y அச்சு அவர்களது  வருமானத்தையும் காட்டுகிறது. இந்தப் படம் சொல்லும் செய்தி என்னவெனில், இந்த நாட்டில் ஏறத்தாழ 90% மக்க‍ளின் (சுமார் 125 கோடிப் பேர்) அதிகபட்ச மாத வருமானம் ரூ.20000 மட்டுமே.  பொருளாதார அடித்தட்டு நிலையில் உள்ள 10%, அதாவது சுமார் 14 கோடி இந்திய மக்களுக்கு வருமானம் என்ற ஒன்று ஏறத்தாழ இல்லவே இல்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். அடுத்து உள்ள சுமார் 14 கோடி (11-20%) மக்களால் ஒரு மாதத்திற்கு 4600 ரூபாய்க்கும் குறைவான வரையே வருமானமே ஈட்ட முடிகிற சூழலைப் பார்க்கிறோம். அடுத்த 20%, அதாவது சுமார் 28 கோடி மக்களின் வருவாய், 4600 ரூபாய்க்கும் 6700 ரூபாய்க்கும் இடையில் உள்ளது. இதன் சராசரி 5650 ரூபாய். அதற்கடுத்த 20%, 28 கோடி மக்களின் வருவாய் 6700க்கும் 9500 க்கும் இடையில் உள்ளது. அதாவது சராசரி மாதவருவாய் சுமார் 8100 ரூபாய். அதற்கடுத்த 20% -28 கோடி மக்களின் வருவாய் 9500 க்கும் 14900க்கும் இடையே உள்ளது. அதன் சராசரி 12200 ரூபாய். 81 முதல் 90 வரையுள்ள மக்களின் வருவாய் 25000 க்கும் குறைவாக (சராசரி 19950) உள்ளது. 20000க்கும் அதிகமான மாத வருவாய் உள்ள மக்கள் வெறும் 10% பேர் மட்டுமே. மாதம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வருவாய் உள்ள மக்கள் நாட்டில் வெறும் 3% பேர் மட்டுமே. இந்த அறிக்கையைக் கொடுத்து அந்தக் கமிட்டி சொல்வது யாதெனில், உலகத்தில் எந்தவொரு நாட்டிலும் இப்படியொரு ஏற்றத்தாழ்வை நாங்கள் கண்டதில்லை என்பதே. ஏற்றத் தாழ்வுகளின் உட்சபட்சமாக நமது இந்தியா உள்ளது. வேறு சில தரவுகளையும் இப்போது பார்ப்போம். இந்தியாவில் இருக்கக்கூடிய முதல் பத்து செல்வந்தர்களின் சொத்து மதிப்பு ஏறத்தாழ 57 லட்சம் கோடி ரூபாய். வெறும் 1% பணக்காரர்கள் இந்தியாவின் 73% பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துகின்றனர். 99% மக்களால் மீதமுள்ள 27% பொருளாதாரப் பங்களிப்பு பகிரப்படுகிறது. இந்தியாவில் வாழும் மிகப் பெரிய பணக்காரர்களான அம்பானி, அதானி போன்றவர்களின் வருமானத்தைப் பார்த்தால், நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அளவில் இருக்கிறது. அம்பானியின் வருமானம் ஒரு மணி நேரத்திற்கு ஏறத்தாழ 90 கோடி. அதானியின் வருமானம் ஒரு மணி நேரத்துக்கு 75 கோடி. ஆனால் 40 கோடி மக்களால் ஒரு நாளைக்கு இருபது ரூபாய்கூட சம்பாதிக்க முடியவில்லை. இவை அனைத்தும் 2022 கணக்கீடுகளின்படியான தகவல்களே. 2022ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, கடைசி இரண்டு வருடங்களில் சுமார் 12 கோடி மக்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். ஒவ்வொரு நாளும் சுமார் 7000 இந்தியர்கள் பசியால் இறந்து போகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 10000 பேர் மருத்துவ வசதியில்லாமல் இறந்து போகின்றனர். 2019ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 9.6 கோடி  எண்ணிக்கையில் இருந்த நடுத்தர வர்க்கத்தினர் எண்ணிக்கை தற்போது 6.3 கோடியாகக் குறைந்துவிட்டது. நடுத்தர வர்க்கத்தினர் வேகமாகத் தேய்ந்துகொண்டே போகின்றனர். மேலும், இந்தியாவில் ஒவ்வொரு 16 நிமிடத்துக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாவதாகப் புகார் (report) செய்யப்படுகிறது. இதில் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு தகவல், இந்தியாவில் சுமார் 72% பாலியல் வன்கொடுமைகளில் புகார் செய்யப்படுவதே இல்லை என்பது. இதுதான் இன்றைய இந்தியாவின் சூழல். அதேபோலத் தமிழகத்தின் சூழலும் பெரிய அளவில் இதிலிருந்து மாறுபட வாய்ப்பில்லை. குறிப்பாக, இந்தச் சூழல்கள்தான் கல்விக்கான சூழலை உருவாக்குகின்றன. சான்றாக, 2022ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த பொதுத்தேர்வில் மட்டும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஏறக்குறைய ஒரு லட்சத்துப் பதினைந்தாயிரம் (1,15,000)  பேர் தேர்வு எழுதவில்லை. ஆனால் இந்த எண்ணிக்கையான 1,15,000 என்பது நிச்சயமாகத் தற்செயலாக இல்லை. இது ஒரு மிகப்பெரிய எண்ணிக்கை. இத்தனைக் குடும்பங்களில் மிகப்பெரிய பிரச்சனைகள் அந்த நேரத்தில் தோன்றியிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது. இப்படிப்பட்ட ஒரு பின்னணியில், இவ்வளவு பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிலவுகிற சூழலில், ஒரு கல்விக் கொள்கை கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கல்விக் கொள்கை குறித்துத்தான் நாம் உரையாடப் போகிறோம். நாம் இயற்கையாக என்ன எதிர்பார்ப்போம் என்றால், இந்தக் கல்விக் கொள்கைக்கும் நாம் பேசிய இத்தனை விஷயங்களுக்கும் தொடர்பிருக்கிறதா? இந்தக் கல்விக் கொள்கை இந்திய எதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறதா? இத்தகைய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கணக்கில்கொண்டு திட்டங்கள் ஏதேனும் அறிவியல் முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறதா? என்றெல்லாம்தான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நாம் அப்படிப்பட்ட எந்த ஒரு விஷயத்தையும் இதில் பார்க்க முடியவில்லை. முற்றிலும் வேறு விதமான நோக்கம், வேறு விதமான லட்சியம் ஆகியவற்றையே நாம் அதில் காண்கிறோம். யார் மிகப் பாதுகாப்பான நிலையில் இருக்கிறார்களோ, இவை அனைத்திலும் யார் ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்கள் எதை லட்சியம் என நினைக்கிறார்களோ, அவர்கள் எதைக் கனவு என்று நினைக்கிறார்களோ, அந்தக் கனவைப் பூர்த்தி செய்ய மக்கள், மாணவர்கள், இளைஞர்கள் எப்படி யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அப்படிப்பட்ட யோசனைகளைத்தான் இந்தக் கொள்கை வெளிப்படுத்துகிறது. இந்தக் கொள்கையை உண்மையில் நீங்கள் கவனித்துப் படித்தால் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ள முடியும். எந்தெந்த மாநிலத்தில் என்னென்ன பிரச்சனைகள் இருக்கின்றன, தொடக்க, உயர்நிலை, மேல்நிலை மற்றும் உயர்கல்வியில் இத்தகைய பிரச்சனைகள் இருக்கின்றன என்பன போன்ற எந்தவிதமான ஆய்வுகளையோ அல்லது எந்தவிதமான புள்ளி விவரங்களையோ இதில் நாம் பார்க்க முடியாது. இது முற்றிலும் வேறு ஒரு தளத்திற்கு நம்மை விவாதத்திற்கு இழுத்துச் செல்கிறது. Glorious unity and diversity of India. இப்படிப்பட்ட வார்த்தைகள் இந்தக் கல்விக் கொள்கையில் திரும்பத் திரும்ப வருவதை நாம் பார்க்கலாம். இந்த NCF 2023 ஆசிரியர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. என்ன காரணம் எனில், ஆசிரியர்களை இந்த NCF நோக்கத்துக்காக, திரும்பத் திரும்பப் பேச வைக்கப் போகின்றனர். ஆசிரியர்களுக்குப் பயிற்சி தரப் போகின்றனர், வேறு சில யுக்திகளும் கைவசம் வைத்துள்ளனர், அதன் வழியாகவும் இந்தக் கருத்துகளை  மாணவர்களுக்குக் கொண்டுசெல்ல முயல்கின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் பத்து லட்சம் மாணவர்கள் பள்ளிப் படிப்பை முடித்தபின்னர், கல்வியைவிட்டு வெளியேறுகின்றனர். இந்தக் கொள்கை மட்டும் பாதிப்பான கொள்கையாக இருந்தால், ஒவ்வொரு வருடமும் பத்து லட்சம் மாணவர்கள் என்ற அளவில் 5 வருடங்களில் 50 லட்சம் மாணவர்கள், பத்து வருடங்களில் ஒரு கோடிப் பேர் வெளியேறிவிடுவார்கள். இந்தியா முழுவதும் கணக்கெடுத்தால், அவ்வாறாக வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். தேசம் எந்த நிலைமைக்குப் போகும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். NCFஇன் அறிமுகத்தில் அவர்கள் சொல்வது, இந்தியப் பாரம்பரியங்கள் மற்றும் இந்தியப் பண்டைய பெருமைகளில் இந்த Framework வேரூன்றியுள்ளது என்பதுதான். பொதுவாக எந்தக் கல்வியாளரிடம் பேசினாலும் இந்த மாதிரியான Indian Tradional இல் வேரூன்றி இருக்கிறது என்று பேச மாட்டார்கள். பொதுவாக எப்படிப் பேசுவோம் என்றால், கல்வி என்பது மனிதர்களை மாண்புற வைக்க வேண்டும்; கல்வி என்பது ஜனநாயக மாண்புகளை மக்களிடம் உருவாக்க வேண்டும்; மற்றவரை மதிக்கும் குணங்களை உருவாக்க வேண்டும்; சமதர்ம குணங்களை உருவாக்க வேண்டும் என்றுதான் பலவிதமான வழிகளில் பேசுவோம்; எதிர்பார்ப்போம். ஆனால் இந்தக் கொள்கை திரும்பத் திரும்ப பேசுவது, Rootedness in Indian Tradition என்பதுதான். இது வெறும் வார்த்தைகளுக்காக மட்டும் சொல்லப்பட்டதல்ல. நாம் நன்கு கவனித்துப் பார்த்தால் தெரியும், இதுபோல தேசிய கல்விக் கொள்கையில் இருக்கும் பலவற்றையும் வெறும் வார்த்தைகளாக இவர்கள் கூறவில்லை. அவை அனைத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைகளில்தான் ஈடுபட்டு வருகின்றனர், அதற்காகத்தான் இதைப் பேசுகின்றனர். எதைப் பற்றிப் பேசுகின்றனர் என்றால், அது பண்டைய இந்தியப்

தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமா ‘நான் முதல்வன் திட்டம்?’

தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமா ‘நான் முதல்வன் திட்டம்?’

உயர் கல்வித்துறையில் கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் மத்தியில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஏற்படுத்தப்போகும் விளைவுகள் குறித்துத் தற்போது மிகப்பெரும் விவாதங்கள் நடைபெறுகின்றன. 63 பக்கங்களைக் கொண்ட NHEQF (National higher education qualification frame work) என்று சொல்லக்கூடிய தேசிய கல்விக் கொள்கையின் தகுதி வரைவு அறிக்கையானது, அனைத்து உயர்கல்வி அமைப்புகளையும் ஒற்றை அமைப்பின் கீழ் கொண்டுவந்து HECI (Higher Education Commission of India) எனப்படும் அமைப்பின் மூலம் கட்டுப்படுத்துவது அதன் நோக்கமாகவும் உள்ளது.  இதனைப் பிரதிபலிக்கும் வகையில், தற்போதைய தமிழக அரசானது மாநிலத்திற்கென்று தனியான தனித்துவக் கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டதோடு அல்லாமல், தமிழ்நாட்டிற்கான தனியான கல்விக் கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. ஆனால் அதில் கல்வியாளர் ஜவகர்நேசன் தமிழ்நாடு கல்விக் கொள்கை வரைவுக் குழுவிலிருந்து வெளியேறியது, தமிழ்நாட்டு  மக்களிடமும்  கல்வியாளர்களிடமும் கல்விக் குழுவின் மீதான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயர்கல்வித் துறையில், குறிப்பாக NEP 2020இன்  ஒரு அங்கமாக விளங்கும் திறன் மேம்பாடு (Skill Development) குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, தொழிலாளர் சந்தைக்கு (Labour Market) மாணவர்களைத் தயார்படுத்துதல் என்ற திட்டத்தினை முன்னிறுத்துகிறது. அத்தகைய திறன் மேம்பாடு (Skill Development) என்பது எத்தகைய சூழலை மாணவர்களிடம் உருவாக்கும் என்பதற்கான விடையை தேசிய கல்விக் கொள்கையின் தகுதி வரைவு அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடபடவில்லை. தற்போது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ‘நான் முதல்வன்’ திட்டம் என்பது, தேசிய கல்விக் கொள்கையின் திறன் மேம்பாட்டுத் திட்டம் (Skill Development  Programme) தான் பெயர் மாற்றம் செய்யப்பட்டு அமல்படுத்தபடுவதாகவே கல்வியாளர்களால் கவலையோடு பார்க்கப்படுகிறது. ‘நான் முதல்வன் திட்டம்’ என்பது, மாணவர்களின் திறனை வளர்க்கும் திட்டம் என்று சொல்லப்பட்டது (Skill Based Programme). ஆனால் இதனை, தேசிய கல்விக் கொள்கையான NEP  2020க்கு  ஆதரவான நிலைப்பாட்டைத் தமிழக அரசு எடுத்துள்ளதாகவே கல்வியாளர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.  தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும் NEP 2020இன் நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்வோம் என அறிவித்ததன் மூலம் மாநிலக் கல்விக் கொள்கையானது எதிர்கால மாணவர் சமூகத்திற்குச் சரியான வழிகாட்டலோடு அமையுமா என்ற சந்தேகத்தையும் மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு சரியான திசையில் செல்கிறதா என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டமானது தமிழக அரசின் லேபிள் ஒட்டப்பட்ட தனியார் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்ட திட்டம் என்பதே கல்வியாளர்கள் தமிழக அரசுக்கு எதிராக வைக்கும் குற்றச்சாட்டு.  இதன் பின்னணியில் Amazon, IBM, Educom போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இயங்குவதால், வணிகமயம் மட்டுமே (Commercialization) இதன் நோக்கமாக இருக்கக்கூடும். இந்தத் திட்டத்தை ஏன் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்? திறன் வளர்க்கும்  திட்டத்திற்குத் தமிழக அரசிடம் திறன் இல்லையா? அல்லது கல்வியாளர்கள் இல்லையா? என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது. மேலும் நான் முதல்வன் திட்டத்திற்கு பலகோடி ரூபாய் தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்ந்து அந்நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதற்குப் பின்வரும் காலங்களில் மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுமா இல்லையா என்பதற்கான விடை தமிழக அரசால் வழங்கப்படவில்லை. 1949இல் கல்விக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் கமிஷன் அமைக்கப்பட்டது முதல் தற்போது வரை தமிழக மாணவர்களிடம் திறனே வளரவில்லையா? அப்துல் கலாம், சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, மின்னஞ்சல் மென்பொருளை உருவாக்கிய சிவா அய்யாதுரை போன்றவர்கள் கிராமப்புற அரசுப் பள்ளிகளில் படித்தே திறனை வளர்த்து உச்சநிலையை அடைந்தனர். இதுபோன்றே திறனை வளர்த்தவர்களின் பட்டியல் நீளமானது. தற்போது அனைத்துக் கலை அறிவியல் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டு (O.D) தமிழகப் பல்கலைக்கழகங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டதோடு பயிற்சி பெற்ற பேராசிரியர்கள் மூலம் மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாகப் பல்கலைக்கழகங்கள் மூலம் தமிழக அரசு தம்பட்டம் அடித்துக்கொண்டது, கல்வியாளர்களைக் கலக்கமுற செய்துள்ளது. ஆனால் கள நிலவரம் வேறு வடிவத்தில் உள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலம் படிக்கும் இந்தத் திறன் மேம்பாடு என்கின்ற ‘நான் முதல்வன் திட்டம்’ ஏதோ கடமைக்கு மாணவர்கள் கற்பதாகவே உள்ளது. இதில் கற்றல் கற்பித்தல் குறைபாடும் பெரும் இடைவெளியை ஆசிரியர்கள் மாணவர்களிடையே ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் கேள்வி கேட்கும் திறனை வளர்ப்பதும் அறிவியல்பூர்வமாகச் சிந்திக்கத் தூண்டுவதும் கல்வியின் முக்கிய நோக்கமாக இதுவரை இருந்து வந்துள்ளது. அதைவிடுத்து திறன் மேம்பாடு என்ற பெயரில், தொழிலாளர் சந்தையை  (Labour Market) உருவாக்கும் தேசிய கல்விக் கொள்கையின் மறு வடிவமான இந்த ‘நான் முதல்வன்’  திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்பதே ஒட்டுமொத்தக் கள நிலவரத்தை அறிந்த கல்வியாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

காலை உணவுத்திட்டத்தில் பாகுபாடு?!

தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் தமிழக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அண்மையில் தொடங்கப்பட்டுள்ளது. உணவு மிகவும் நன்றாகவும் சுவையாகவும் இருப்பதாகவும் பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தத் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும் திட்டத்துக்கு நல்வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் பலரும் தெரிவித்து வருகின்றனர். கோதுமை ரவா உப்புமாவுடன் காய்கறி, பருப்பு சாம்பார்; சேமியா காய்கறிக் கிச்சடி, வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், சோள காய்கறிக் கிச்சடி, ரவா கேசரி என, திங்கள் முதல் வெள்ளி வரை தரமாகவும் சுவையாகவும் பாதுகாப்பான முறையிலும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு வழங்கப்படுவது போற்றத்தக்கது. அதுபோக, பிஞ்சுக் குழந்தைகளின் காலைப் பசியாற்றும் நோக்கில் இதற்கு வித்திட்ட தமிழக முதலமைச்சர் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அரசுக்குக் கூடுதல் சுமை மிகுந்த திட்டம்தான் எனினும், அறிவுப்பசியுடன் வயிற்றுப்பசி போக்குவதும் ஓர் நல்லாட்சியின் இன்றியமையாத கடமை என்பதை உணர்ந்து செயல்படும் முதல்வரின் சிந்தனையை அனைத்துத் தரப்பு மக்களும் நிச்சயம் வாழ்த்தி வரவேற்பர். இந்த ஆட்சியின் தனித்துவம் மிக்க திட்டம் இது. அதேவேளையில், தமிழ்நாட்டில் செயல்படும் அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 1 முதல் 5 வகுப்புகள் படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே இத்திட்டம் தொடங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஒரு புள்ளி விவரப்படி 24310 அரசுத் தொடக்கப் பள்ளிகளுடன் 7024 அரசு நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் வகுப்பு முடிய உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் பசிப்பிணி போக்க உள்ளது அறியத்தக்கது. எட்டு வகுப்பு முடிய உள்ள உயர் தொடக்கப்பள்ளிகளாக விளங்கும் நடுநிலைப் பள்ளிகளில், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு மட்டும் காலை உணவு என்பதை மேலும் சற்றுப் பெரிய மனத்துடன் அணுகி, அரசின்மீது தூக்கி வைக்கப்படும் பாரத்தைப் பொறுத்துக்கொண்டு ஒரே வளாகத்தில் பயிலும் 6,7,8 வகுப்புக் குழந்தைகளும் பயனுறத்தக்க வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பதுடன், உரிய உகந்த நடவடிக்கைகள் மேற்கொள்வது என்பது உடனடித் தேவையாக இருக்கிறது. பிறரைப் பார்க்கவைத்து உணவு உண்ணும் வழக்கம் தமிழர் பண்பாட்டில் என்றும் இருந்ததில்லை என்பது யாவரும் அறிந்த ஒன்றாகும். அந்த வகையில், தம் பள்ளியில் படிக்கும் தம்பி, தங்கைகள் அரசின் ருசியான வகைவகையான காலை உணவு உண்பதை ஒவ்வொரு நாளும் நேரில் கண்டு, தமக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்று ஏங்கும் மனத்தைக் கல்வியால் ஈடுகட்டுவது என்பது மிகவும் சிரமமான, சிக்கலான காரியமாகும். ஆசிரியர்களாலும் இதனைச் சரிசெய்தல் என்பது இயலாத ஒன்று. ஆகவே, அரசு நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் தொடக்க வகுப்புகளுக்குரிய குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், ஏனைய உயர் தொடக்க வகுப்புகளில் கல்வி பயின்று வரும் 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கும் அதிக காலம் எடுத்துக் கொள்ளாமல் மனிதாபிமானத்துடன் மாணவர் மற்றும் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு எவ்வளவு இயலுமோ அவ்வளவு விரைவில் இக் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி நீட்டித்துச் செயல்படுத்துதல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. போலவே, அரசு உதவி பெறும் பள்ளிக் குழந்தைகளும் இந்தத் திட்டத்தில் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்களுக்கும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மதிய உணவுத் திட்டத்தைக் காமராஜர் அறிவித்தபோது தொடங்கி, அதனைச் சத்துணவுத் திட்டமாக எம்.ஜி.ஆர். மாற்றியபோதும், முட்டை மற்றும் தானியச் சிற்றுண்டி வகைகளைக் கலைஞர் இந்தத் திட்டத்தில் சேர்த்தபோதும், அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கிடையே பாகுபாடு எதுவும் காட்டப்படவில்லை. பிற திட்டங்களெல்லாம் அரசுப்பள்ளிகளைப் போலவே அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்கும் செயல்படுத்தப்படும்போது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது, அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகள் புறக்கணிக்கப்பட்டார்கள். தொடர்ந்து இப்போது காலை உணவுத் திட்டத்திலும் அவர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள். மதிய உணவு உண்ணும் அரசு உதவிபெறும் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவுத் திட்டம் மட்டும் மறுக்கப்படுவது அறமன்று என்கிறார்கள் அந்தப் பள்ளிகளின் ஆசிரியர்களும் பெற்றோர்களும். மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள குழந்தைகளே பெரும்பாலும் பயில்கிறார்கள். குறிப்பாக, அரசுப்பள்ளிகள் அருகில் இல்லாத கிராமப் பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு, அந்தப் பகுதியில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளிகளே இருக்கும் ஒரே வாய்ப்பு. மிகச் சொற்ப அளவிலான நகர்ப்புறப் பள்ளிகளை மனத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களைப் புறக்கணிப்பது சரியான நடைமுறையாக இருக்காது. எனவே, தமிழக அரசு தூரிதமாகச் செயல்பட்டு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் நடுநிலை வகுப்புக் குழந்தைகளுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எடுக்கும் என நம்புவோம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

ஆளில்லா வகுப்பறை நோக்கி நகருமா கல்வி? 

அண்மைக் காலத்தில் கணினி அறிவியலின் விரிந்து பரந்த நவீனத் தொழில்நுட்பமாகச் செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence – AI) காணப்படுகிறது. பொதுவாக, மனித நுண்ணறிவு தேவைப்படும் வேலைகளை, நுட்பத்துடன் செய்யும் திறன் கொண்ட இயந்திரங்களை உருவாக்கும் பணியில் செயற்கை நுண்ணறிவின் பங்கு பெருமளவில் தேவையாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் செயற்கை நுண்ணறிவு என்பது திட்டமிடுதல், பிரச்சினைகளுக்குச் சரியான தீர்வு காணுதல், பன்முகச் சிந்தித்தல், எண்ணங்களை ஆராய்ந்து தெளிதல், கற்றதைச் செயல்படுத்தல் என்பன போன்ற நுண்ணறிவுத் திறன்களை உள்ளீடாகக் கொண்டுள்ளது. பொதுவாக, முந்தைய அனுபவங்களைக் கொண்டு இயந்திரத்தைக் கற்கச் செய்தல், எதிர்கொள்ளும் தீர்வுகளுக்கேற்பத் தானாக மாற்றிக் கொள்ளுதல், மனிதனைப்போல் சிந்தித்துப் பிரச்சனைகளின் முடிவுகளுக்கான வழிமுறைகளைக் கண்டறிதல், சரியான முடிவுகளைச் செயல்படுத்துதல் முதலானவற்றை செயற்கை நுண்ணறிவு மேற்கொள்கிறது. இத்தகைய நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை வகுப்பறையில் பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவுக் கற்றல் – கற்பித்தல் காணொலிகள் அடங்கிய தொகுப்பு வெளியிடும் முயற்சியில் ஒரு சிலர் முயன்று வருவது எண்ணத்தக்கது. செயற்கை நுண்ணறிவுப் பயன்பாடு என்பது எதிர்வரும் காலங்களில் மருத்துவம், மின் வணிகம், கல்வி, நிதி, சட்டம், வங்கி, போக்குவரத்து, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, தரவுப் பாதுகாப்பு, விவசாயம், விளையாட்டு, சமூக ஊடகங்கள், தானியங்கிக் கருவிகள் மற்றும் எந்திர மனித உற்பத்திப் பணிகள் எனப் பல்வேறு துறைகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட இருக்கிறது. கல்வித் துறையில் இதன் வருகை ஒரு புதிய மைல் கல்லாக அமையப் போகிறது. இப்போதும் பல்வேறு சமூக ஊடகங்களில் எல்லாருடைய மனங்களிலும் நீங்காமல் நிலைத்து நிற்கும் மறைந்த தேசியத் தலைவர்கள், கவிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், சமூகச் சீர்திருத்தவாதிகள், நடிகர் நடிகைகள், கற்பனைக் கதை மாந்தர்கள் முதலான நபர்களின் நிழற்படம் மற்றும் காணொலிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மீட்டுருவாக்கம், உருவாக்கம் செய்யப்பட்டவற்றைக் கண்டுகளித்து வியக்கும் போக்குகள் அதிகரித்து வருகின்றன. கேரள மாநிலத்தில் சாலைப் போக்குவரத்தை  ஒழுங்குபடுத்தும் நடைமுறையில் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட காரணத்தால் கணவனின் தவறான நடத்தையைக் கண்டுபிடித்த மனைவி இதுகுறித்து வழக்குப் பதிந்து நியாயம் கேட்ட சேதி ஊரறிந்த ஒன்று. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் இதைப்போன்ற எதிர்மறையான தவிர்க்க முடியாத சிதைந்த நோக்கத்திற்கு ஆகச் சிறந்த எடுத்துக்காட்டு ஐன்ஸ்டீனின் கோட்பாடு ஆகும். ஆல்பிரட் நோபல் அதனை மாற்றி யோசித்து உருவாக்கியதை அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் இருபெரும் நகரங்களில் அவற்றைப் பரிசோதிக்க முடிவு செய்து பெரும் நாசம் விளைவித்ததை யாரும் மறக்க முடியாது. இதுபோன்ற அல்லது இதைவிடவும் மிகப்பெரிய மனித ஆக்கப் பேரிடர்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வித்திட்டால் என்ன செய்வது என்று பல்வேறு வளர்ந்த நாடுகளும் இத்தொழில்நுட்பப் பயன்பாட்டை எதிர்த்து முழுமையாக ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இத்தொழில்நுட்பம் பல்வேறு வகையான துறைகளில் பல்வேறு புதுமைகளைப் படைக்க இருப்பதாக அறியப்படுகிறது. அதேவேளையில், இதனால் மனித சமூகத்துள் பலவிதக் குழப்பங்கள், ஆபத்துகள், பணி இழப்புகள், மனநெருக்கடிகள் சார்ந்த வாழ்வியல் பிரச்சினைகள் தொடக்கத்தில் எழும் என்பது நிச்சயம். எனினும், இது எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நடைமுறைக்கு வந்த காலகட்டத்தில் ஏற்படுவது இயற்கை என்பதைப் புரிந்து கொள்வது நல்லது. இதுபோன்றவற்றைத் தடுக்க நினைப்பதும் முடியாத நிலையில் இயலாமையால் வருந்துவதும் அறிவீனம் ஆகும். மனித வேலையிழப்பை மட்டும் கவனத்தில் கொள்ள முடியாது. ஆள் விரயம், கால விரயம், நேர விரயம், பண விரயம், மன உளைச்சல் விரயம் போன்றவை இதனால் பெருமளவில் தவிர்க்கப்பட்டதையும் நினைவுகூர்ந்து எண்ணிப் பார்ப்பது அவசியம். இன்றைய சூழலில் எந்தவொரு மின் சாதனங்கள், தகவல்தொடர்புக் கருவிகள் மற்றும் நவீன மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் சார்ந்த வசதிகளையும் நுகர்வுத் தன்மைகளையும் வெகுவாகக் குறைத்துக்கொள்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாகும். மனித மனம் அவற்றிற்கு அடிமையாகிவிட்டது. ஒருகட்டத்தில் இவற்றின் பாதகங்களைக் கடந்து போகவும் சாதகங்களை நினைந்து போற்றவும் பழகிக் கொண்டு விட்டோம் என்பதுதான் உண்மை. சரி. கல்வியில் இதன் தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதற்குச் சரியாக விடையளிப்பது அவசியம். வகுப்பறைகளில் இத்தொழில்நுட்பம் பல்வேறு புதுமைகளைத் துல்லியமாக விளைவிக்கும். அதாவது, மகாத்மாவைப் பாட வைக்கலாம். நேரு மாமாவை ஆட வைக்கலாம். நேதாஜியை வீர உரையாற்றச் செய்யலாம். வேலுநாச்சியாரைப் போரிடச் செய்யலாம். புரட்சியாளர் அம்பேத்கர் போதிப்பதைக் கேட்கச் செய்யலாம். கவிக்குயில் சரோஜினியைக் கவி பாட வைக்கலாம். மகாகவி பாரதியை உணர்ச்சிப் பெருக்குடன் கவிதை எழுதச் சொல்லலாம்.  இவையனைத்தையும் இன்றையக் காலச் சூழலில் தத்ரூபமாக வியக்கத்தக்க வகையில் இப்போது செய்து காட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் வழிகோலும். இதுபோன்ற நிகழ்வுகள் கற்பித்தலில் ஆசிரியர் பணியை வெகுவாகக் குறைக்க உதவிடும். புதுமை – இனிமை – எளிமை அடிப்படையில் கற்பித்தல் பணிச்சுமை இலகுவாகும். இதற்கு நேர்மாறாக, கற்றலில் துரிதமும் துல்லியமும் மகிழ்ச்சியும் நீடித்து நிலைத்தலும் மிகும். எத்தகைய காணொலிகளையும் இதனால் மிக விரைவாக உருவாக்க முடியும். பல்வேறு கேலிச்சித்திர இயங்குபடம் அடங்கிய தொகுப்பு, குழந்தைகளின் கவனத்தை அதிகம் ஈர்த்து கற்றல் சுமையாகவும் தண்டனையாகவும் வலியாகவும் வேதனையாகவும் அல்லாமல் விரைவாகவும் எளிதாகவும் இயல்பாகவும் ஆனந்தமாகவும் நிகழ அதிகம் வாய்ப்புண்டு. எந்தவித ஐயப்பாடுகளையும் அவை சார்ந்த தீர்வுகளையும் விளக்கங்களையும் தேடித் திரியும் அவசியம் இல்லை. ஓப்பன் ஏஐ சாட் ஜிபிடி (Open AI ChatGPT) மூலம் நொடிப் பொழுதில் விடைகளாகப் பெறவியலும். இதன் நம்பகத்தன்மை மற்றும் துல்லியத்தன்மை குறித்து நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டாலும் காலப்போக்கில் அனைத்துக் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுவிடும் என்று நம்பப்படுகிறது. தானே கற்றலுக்கு இஃதொரு நல்ல எந்திர ஆசிரியர் (AI-Teacher) ஆகும். அதற்குத்தான் கூகுள் (Google) தேடுபொறி இருக்கிறதே என்று அங்கலாய்ப்பது சரியாகாது. பல்வேறு இயங்குதளத்தைச் சுட்டிக்காட்டி உரிய தரவுகளைத் தேடிக் கண்டடைவது தேடுவோரின் கடினப் பணியாக உள்ளது. ஆனால், இஃது அவ்வாறு கிடையாது. கையிலே காசு வாயிலே இனிப்பு என்பது போல, வினாத் தொடுத்த மறுநொடியே சுடச்சுட விடைகளைச் சிறியதாகவும் பெரிதாகவும் அளவாகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் போதும் போதும் என்று கொட்டிக்கொண்டிருக்கும். தற்போது ஆங்கிலத்தில் நிறைய கொட்டிக் கிடக்கின்றன. தமிழ் மொழியில் போதுமான தரவுகள் வழங்கப்படுவது இன்று குறைவானதாக உள்ளது. ஆனால், நாளை அவ்வாறு இருக்கும் என்று சொல்வதற்கில்லை. அதேவேளையில், தேர்வின்போது ஒரு மாணவனிடம் இது கிடைக்குமேயானால் அபாயகரமானது. படிக்கவே வேண்டியதில்லை. எதையும் நொடிப் பொழுதில் தன்வயப்படுத்திக் கொள்ளும் பேராபத்து இதில் உள்ளது. இதை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் கல்வித்துறை எதிர்காலத்தில் போராடும் என்பது திண்ணம். இத்தகைய நிலையில், கல்வித்துறை நிர்வாகத்தில் இத்தொழில்நுட்பம் புகுத்தப்படுமேயானால், ஆசிரியர் பணியும் பணியிடமும் கேள்விக்குள்ளாகக் கூடும். இத்தொழில்நுட்பத்தின் சிறப்பு அம்சமே மனித வளத்தை வெகுவாகக் குறைத்து நிறைவான அடைவைப் பெறச் செய்வதாகும். பள்ளிகள் அனைத்தும் இணையதளம் மூலமாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப வசதிகளால் இணைக்கப்பட்டு அதிகபட்சமாக ஐந்து தொடக்கப்பள்ளிகளோ, நடுநிலைப்பள்ளிகளோ, உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளோ பிணைக்கப்பட்டு ஒரு குறு கற்றல் வள மையம் தோற்றுவிக்கப்பட்டு சுழற்சி முறையில் தகுதியும் திறமையும் அனுபவமும் பயிற்சியும் நிறைந்த பாட ஆசிரியர்கள் எடுக்கும் இணையவழி இடைவினை வகுப்பு களால் (Online Mutual Response Class) கல்வி வளப்படுத்தப்படும். தவிர, ஸ்டூவர்ட் ரஸ்ஸல் மற்றும் பீட்டர் நார்விக் எனும் ஆசிரியர்கள் முன்மொழிந்த அணுகுமுறைகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்ட அ) எதிர்வினை இயந்திரங்கள் (Reactive Machines), ஆ) வரையறுக்கப்பட்ட நினைவகம் (Limited Memory), இ) மனத்தின் கோட்பாடு (Theory of Mind), ஈ) சுய விழிப்புணர்வு (Self-Awareness) ஆகியவற்றுள்  மனத்தின் கோட்பாடு (Theory of Mind) அடிப்படையில் செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், மனித உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் சமூக நுண்ணறிவு (Social Intelligence) கொண்டதாக அமைக்கப்படுகின்றன. இவை மனித நோக்கங்களை ஊகித்து அறிவதுடன், அவர்தம் நடத்தையைக் கண்காணிக்கவும் முடியும். இவை மனிதக் குழுக்களின் ஒருங்கிணைந்த உறுப்பினர்களாக இருப்பதற்கான திறன்களைக் கொண்டிருப்பதன் காரணமாகக் கல்வியில் இதன் பயன்பாடுகள் அதிகரிக்கக் கூடும். இதற்கு இயந்திர வழிக் கற்றல் (Machine Learning) மற்றும் அதன் ஒரு பகுதியாக விளங்கும் ஆழ்ந்து கற்றல் (Deep Learning) ஆகியவை கற்போருக்கு மிகுந்த உதவிகரமாக விளங்க வாய்ப்புகள் நிறைய உள்ளன. செயற்கை நுண்ணறிவு தானியக்க எந்திரச் செயல்முறை (AI Robotic Process Automation) மூலமாகக் கற்றல் கற்பித்தல் நிகழ்வுகளை வடிவமைத்து வழங்கும் செயல்பாடுகள் ஊடாக மதிப்பீட்டு முறைகளும் அதன் வழியாகக் கிடைக்கப்பெறும் தரவுகளின் அடிப்படையில் குறைதீர் நடவடிக்கைகள் போன்றவை நிகழ்த்தும் நோக்கும் போக்கும் காலப்போக்கில் ஆசிரியர் இடத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும் சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன. இதிலிருந்து பெறப்படும் தரவுகள் அனைத்தும் துல்லியமும் துரிதமும் மிக்கதாக இருக்கும். மனித விருப்பு வெறுப்பிற்கு ஈண்டு இடமில்லை. எடுத்துக்காட்டாக, ஐந்து பாட ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கற்பித்தல் பணியை ஓர் AI எந்திரம் செய்துவிடும். மனிதப் பிழைகள் மாதிரியான குற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. பயனர்க்கு இடையேயான நட்பு (User Friendly) இதனால் வலுப்படும். மேலும், இன்றைய தொழில்நுட்பக் கருவிகள் மீதான இனம் புரியாத ஈர்ப்பின் காரணமாகக் குழந்தைகளிடம் கற்றலானது விரைந்து நிகழும். போதிப்பவர் என்ற நிலையிலிருந்து ஆசிரியர் மாணவர் கற்பதற்கான வளங்களையும் வசதிகளையும் சூழலையும் ஏற்படுத்தித் தரும் நபராக (Facilitator) அறியப்படுவார். ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் விளைவிப்பது இங்கு நோக்கமல்ல. வேகமாக மாறி வரும் உலக நடப்பில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் புரியவிருக்கும் அபரிமிதமான மாயவித்தைகள் மற்றும் விந்தைகள் குறித்த போதிய விழிப்புணர்வையும் முன்னெச்சரிக்கையும் நோக்கி நகர முனைவதும் முனைப்புக் காட்டுவதும் இன்றியமையாதது என்று ஆசிரியர் பெருமக்கள் புரிந்து கொள்வது நல்லது. 2030களில் இப்போதுள்ள மரபுவழி வகுப்பறை (Chalk and Talk Class) திறன்மிகு வகுப்பறை (Smart Class) நிலையைக் கடந்து செயற்கை நுண்ணறிவு வகுப்பறை யாக (AI Class) உருவாக்கப்பட்டிருக்கும் என்பது திண்ணம். இப்படித்தான் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (Educational Management Information System) வருகைப்பதிவு உள்ளிட்ட செயல்பாடுகள் கல்வியில் மெல்ல நுழைக்கப்பட்டபோது பலரும் இதெல்லாம் கொஞ்சகாலம்தான் நீடிக்கும் என்று வெளிப்படையாகப் புலம்பியது அறியத்தக்கது. ஆனால், மிகக் குறுகிய காலத்தில் கல்வித்துறையில்

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

ஆசிரியர் – மாணவர் உரையாடலுக்குத் தடைக்கல்லாகும் கல்வித்துறை

நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் சிலர், அதே பள்ளி மாணவர் மீதும் அவர் சகோதரி மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளது சமூகத்தில் தற்போதைய பேசுபொருளாக உள்ளது. மாணவர்களிடம் மிக வேகமாகப் பரவிவரும் மது மற்றும் இதர போதைப் பழக்கங்கள், வகுப்பறையிலும் பள்ளிக்கு வெளியிலும் மாணவர்களின் விரும்பத்தகாத நடவடிக்கைகள் போன்றவற்றைக் குறித்தெல்லாம், இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது மட்டும் பேசுவதும், பின்னர் வழக்கம்போல அடுத்த சம்பவம் நடக்கும்வரை அவற்றையெல்லாம் மறந்துவிட்டு இருப்பதும் நம் சமூகத்திற்கு ஒன்றும் புதிதல்ல.  குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளில் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனைத்துக்குமான ஒற்றைக் காரணம் என்று கொரோனாவைக் கைகாட்டிக் கடந்து சென்றுவிடுகிறோம்.   மாணவர்களிடம் நிகழ்ந்துவரும் இந்த மாற்றங்களுக்கு என்னவெல்லாம் பின்னணிக் காரணங்களாக இருக்கின்றன? மாணவர்கள் ஏன் அழிவுப் பாதையில் செல்கிறார்கள்? ஆசிரியர்களால் அவர்களை நல்வழிப்படுத்த முடியாதா? முடியும். கண்டிப்பாக ஆசிரியர்களால் நல்வழிப்படுத்த முடியும். அவர்களை ஆசிரியர் பணியை மட்டும் செய்யச் சொன்னால், மாணவர்கள் செய்யும் குற்றங்கள் ஓரளவு குறையும். முன்பெல்லாம் ஆசிரியர்களுக்கு, பாடங்களைச் சொல்லிக்கொடுப்பது மட்டுமே வேலையாக இருந்தது. அதனால் அவர்களுக்கு மாணவர்களோடு செலவிட நிறைய நேரம் கிடைத்தது. ஆசிரியர்களால் மாணவர்களுடன் உரையாட முடிந்தது. அவர்களின் நிறை குறைகளை, பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் தற்போதைய கல்விச்சூழலில், கற்பித்தல் பணி மட்டுமல்லாமல், மேற்கொண்டு பல்வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்றன. அலுவலர்கள் செய்யவேண்டிய வேலைகள் எல்லாம் ஆசிரியர்கள் மீது திணிக்கப்படுகின்றன. அதனால் அவர்களுக்குப் பாடப் புத்தகத்தில் இருக்கும் பாடங்களைச் சொல்லித்தரவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி அவர்கள் மாணவர்களோடு உரையாடி, அவர்களின் நிறை குறைகளைச் சரி செய்ய முடியும்? ஒரு புரிதலுக்காக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வேலைகள், பராமரிக்க வேண்டிய பதிவேடுகளின் பட்டியல், சுமத்தப்படும் கூடுதல் சுமைகள் ஆகியவை இங்கே தரப்பட்டுள்ளன. மன்றங்கள் 1) தமிழ் மன்றம்2) ஆங்கில மன்றம்3) கணித மன்றம்4) அறிவியல் மன்றம்5) தொன்மை மன்றம் (சமூக அறிவியல்)6) திரைப்படம் காட்சிப்படுத்துதல் மன்றம்7) தமிழ் இலக்கிய மன்றம்8) ஆங்கில இலக்கிய மன்றம்9) வினாடி வினா மன்றம்10) வானவில் மன்றம்11) குழந்தைகள் பாதுகாப்பு மன்றம்12) போக்சோ மன்றம்13) போதை ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம்14) சாலைப் பாதுகாப்பு மன்றம்15) தேர்தல் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு மன்றம்16) சுற்றுச்சூழல் மன்றம்17) நூலக மன்றம்18) முன்னாள் மாணவர்கள் மன்றம்19) JRC20) SCOUT21) NSS22) NCC நலத்திட்டப் பதிவேடுகள் 1) பாடப்புத்தகங்கள்2) பாடக்குறிப்பேடுகள்3) புத்தகப் பை4) காலணிகள்5) அட்லஸ்6) சத்துணவு சாப்பிடும் மாணவர்கள்7) இலவசச் சீருடை விவரங்கள்8) Sanitary Napkin for Girl Students Details9) Geometry Box10) இலவச சைக்கிள்11) மடிக்கணினி கூடுதல் வேலைகள் 1) Student Admission – Register2) Student Transfer Certificate – Register3) Potential Dropout Details4) OOSC Details5) X, XII STD – Nominal Roll6) Health & wellbeing ( Students Height, Weight, Eye Power issues, …etc – 48 questions)7) School Timetable8) இல்லம் தேடிக் கல்வி9) நம்ம ஸ்கூல் – நம்ம ஊரு பிள்ளை10) புதுமைப் பெண்11) 7.5% இட ஒதுக்கீடு12) பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம், பதிவேடு பராமரித்தல்13) எண்ணும் எழுத்தும்14) மாணவர்களின் பேருந்துப் பயண அட்டை15) வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு16) மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்குதல்17) RBSK & IEDSS18) பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டப் பதிவேடு கல்வி உதவித்தொகைப் பணிகள் 1) Pre Matric SC/ST Scholarship2) Post Matric SC/ST Scholarship3) Minority Scholarship4) பெண் கல்வி ஊக்குவிப்புத் தொகை5) சுகாதாரத்துறை பெற்றோரின் மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்புத் தொகை6) MBC Scholarship இதர பணிகள் 1) SSLC / HSC (+1, +2) Exam Duty2) Online Entry NR for 10th Students3) Supplementary Exam (June, September)4) NMMS (VIII STD) Exam5) NTSE (X STD) Exam6) ஊரகத் திறனாய்வுத் தேர்வு7) ESLC (VIII STD) Exam8) TNPSC Exam9) Election Duty10) BLO Duty11) மக்கள் தொகைக் கணக்கெடுப்பு12) Stock Register Maintain Duty13) Treasury / Pay Bill work14) TRI certificate15) Acutance Register for Regular Teachers / Part Time Teachers / Non-Teaching Staff16) Sports competitions17) Over all Competitions18) கலைத் திருவிழா19) CRC & BRC Training / RP Training இன்னும் இதுபோலப் பல வேலைகளை ஆசிரியர்களுக்கு ஒதுக்குவதால், அவர்களின் கற்பித்தல் பணி பெருமளவில் பாதிக்கிறது. மாணவர்களின் கற்றல் திறனும் பாதிக்கப்படுகிறது. இவையெல்லாம் தேவையான – அவசியமான செயல்களாக இருந்தாலும், இந்தப் பணிகளுக்கென ஒவ்வொரு பள்ளிக்கும் அலுவலர்களை – பணியாளர்களை நியமித்து அவர்கள் மூலம் செயல்படுத்த வேண்டும். அதுமட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கு பாடத்திட்டங்களை நடத்துவதற்கு நேரம் போதாத காரணத்தால், அவர்களால் நலத்திட்டச் செயல்பாடுகளிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியாத நிலை நிலவுகிறது. இதுபோன்ற இரட்டைக்குதிரைச் சவாரி நிலையால் பெரும்பாலான திட்டங்கள் பெயரளவிலேயே இருக்கின்றன. நல்ல திட்டங்கள்கூட ஏட்டளவில் நின்றுவிடுகின்றனவே தவிர, செயல்பாட்டில் இல்லை என்பது வேதனைக்குரியது. இதற்கிடையில், மாணவர்களை மதிப்பெண்கள் பெறும் இயந்திரமாக மாற்றும் சூழலும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஏன் உங்கள் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது, ஏன் மாணவர்களின் மதிப்பெண் குறைந்துள்ளது போன்ற உயரதிகாரிகளின் கேள்விகளால் ஆசிரியர்களுக்கு அழுத்தம் ஏற்படுகிறது. அந்த அழுத்தமானது ஒரு மாணவனை எப்படியாவது 35 மதிப்பெண் எடுக்கவைத்து, தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்பட வைக்கிறதே தவிர, அந்த மாணவன் பாடத்தைப் புரிந்துகொண்டாரா? என்பதில் கவனம் செலுத்த முடிவதில்லை. வன்முறை ஒருபோதும் தீர்வாகாது என்பதை ஆசிரியர்கள் முழுமனதோடு ஏற்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் மாணவர்களைக் கண்டிக்கக்கூட ஆசிரியர்களுக்குத் தற்போது உரிமை இல்லை என்பதே உண்மை. கண்டிக்கும் ஆசிரியர்களை மாணவர்களே தாக்குவது, பெற்றோர்கள் மற்றும் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்குவது, மாணவர்கள் உடனுக்குடன் உணர்வுவயப்பட்டு விபரீத முடிவுகளை எடுப்பதால் நேரிடும் பேரிழப்பு மற்றும் அதன் பின்விளைவுகள் என்று, ஆசிரியர்களுக்குப் பணிப்பாதுகாப்பு இல்லாத சூழலும் சேர்ந்தே நிலவுகிறது. இத்தனை அழுத்தங்களுக்கு இடையில்தான் ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி என்பது வெறும் பாடங்களை மட்டும் கற்பித்து, மாணவர்களை வேலை செய்யும் இயந்திரங்களாக உருவாக்கும் செயல்பாடு அல்ல. நல்லவை, அல்லவை, சமூக அக்கறை, தன்னம்பிக்கை, சவால்களை எதிர்கொள்ளும் துணிவு உள்ளிட்ட ஏராளமான வாழ்வியல் கூறுகளை இளைய தலைமுறைக்குக் கடத்தவேண்டிய இடங்களே பள்ளிக்கூடங்கள். ஆனால், தற்கால பொருளாதாரமய வாழ்க்கைச்சூழலில், மாணவர்களை வெறுமனே மதிப்பெண் அடிப்படையில் வகைப்படுத்தி அவர்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் வேலையை, தனியார் பள்ளிகளுக்குச் சற்றும் குறைவில்லாமல் நமது கல்வித்துறை செயல்படுத்தி வருவது வேதனைக்குரியது. தெருக்கள்தோறும் திறந்து வைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடைகள், மதுப் பழக்கத்துக்கு ஆளான பெற்றோர் மற்றும் சுற்றத்தார், குழந்தைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி, மாஸ் ஹீரோ மன நிலையை விதைக்கும் திரைப்படங்கள், உள்ளங்கையில் தவழும் சமூக ஊடகங்கள் மற்றும் ஓடிடி தளங்கள் என மாணவர்களின் கவனம் மற்றும் நடத்தைச் சிதைவுகளுக்கு ஏராளமான காரணிகள் இருந்தாலும் அவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு வெறும் ஆவண எழுத்தாளர்களாகவும் பதிவேடு பாராமரிப்பாளர்களாகவும் மட்டுமே ஆசிரியர்களை மாற்றி வைத்துள்ளது இன்றைய கல்வித்துறை. கொரோனா இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளில் மனநல ஆலோசகர்கள் நியமனம் தேவை என்ற கோரிக்கைகள் வலுவாக எழுந்தன. வழக்கம்போலவே அந்தக் கோரிக்கை அரசின் கவனம் பெறாமல் போக, ஆசிரியர்களும் கல்வியாளர்களும் கேட்டுக்கேட்டு ஓய்ந்துபோனதால் தற்போது அவர்களும் அந்தக் கோரிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டனர். முன்பெல்லாம் நீதிபோதனை என்று ஒரு வகுப்பு இருந்தது. அந்த வகுப்பில் மாணவர்களுக்கு நீதிக் கருத்துகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. தற்போது அந்த வகுப்புகள் இல்லை. திருக்குறளில் இல்லாத நீதி போதனைகள் இல்லை. ஆனால் தற்போதைய கல்விமுறை ஒவ்வொரு திருக்குறளுக்கும் முழுமையான விளக்கத்தைக்கூடச் சொல்லித்தருவதில்லை. ஒரு குறளுக்கு இரண்டு வரிகளில் விளக்கம் கொடுக்கப்பதோடு முடிந்துவிடுகிறது. அந்த விளக்கத்தில் உள்ள வார்த்தைகளுக்கு மாணவர்களுக்குப் பொருள் தெரிவதில்லை. பெரும்பாலான ஆசிரியர்களும் தங்களின் வேலைப்பளுவால் விரிவான விளக்கத்தைச் சொல்லித் தருவதில்லை. மொத்தத்தில் இளைய தலைமுறையோடு உரையாட பெற்றோர்களுக்கும் நேரம் இருப்பதில்லை. ஆசிரியர்களுக்கும் நேரம் தரப்படுவதில்லை. இதனால், சமூகத்திலும் இணையத்திலும் தாங்கள் காணும் நிகழ்வுகளின் தாக்கத்தில் எதிர்காலத் தூண்கள் துருப்பிடித்துச் சிதைந்துகொண்டுள்ளன.   இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு, கல்வி முறையில் உரிய மாற்றங்களைக் கொண்டுவந்து சீர்திருத்தவில்லை என்றால் சீர்திருத்தப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத்தான் செய்யும்.

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

தினந்தோறும் தேர்வுகள் – திணறும் மாணவர்கள்

நமது கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்று நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆம், கல்விமுறை மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக, தற்போதைய கல்விமுறை என்பது, அதன் பொருளை மறந்து, தேர்வுகள், திறன்கள், வேலைவாய்ப்பு எனத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. அண்மையில், ஆகஸ்ட் ஒன்றாம் தேதியிட்ட கடிதம் ஒன்று தமிழ்நாடு தேர்வுகள் துறையிலிருந்து பள்ளிகளுக்கு வந்தது. அதில், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அறிவித்தல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வுக்காக பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். வெற்றிபெறுவோரில் 500 மாணவர்கள் மற்றும் 500‌ மாணவிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் இளநிலைப் பட்டம் முடிக்கும்வரை ஆண்டுதோறும் 10000 ரூபாய் வழங்கப்படும். அதாவது மீண்டும் புதிய கல்விக்கொள்கையின் ஒரு பகுதி நடைமுறைக்கு வருகிறது. திறன்கள் குறித்து மட்டுமே பேசுவதுதான் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020. நுழைவுத் தேர்வு வேண்டாம் என்கிறோம்; ஆனால் திறனறித் தேர்வுக்கு அவர்களைத் தயார் செய்யும்படி கூறுகிறோம். லட்சக்கணக்கான குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெறும் ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும் எனில், சமவாய்ப்பு இதில் எங்கே இருக்கிறது எனும் கேள்வி எழுகிறது. இதற்கு அடுத்ததாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விக்கான மாநிலத்  திட்ட இயக்குனரும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநரும் கூட்டாக ஒரு இணைச் செயல்முறைக்கான சுற்றறிக்கையை இம்மாதம் அனுப்பியுள்ளனர். அந்தச் சுற்றறிக்கையில், ‘மாநில மதிப்பீட்டுப் புலம்’ என்ற பெயரில் 6 முதல் 12 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு, உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (High Tech Lab) வழியாக வினாடி-வினா தேர்வுகளை நடத்த அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதுதான் பல்வேறு மாவட்டங்களிலும் 6-12 வகுப்புகளுக்கு முதல் இடைப்பருவத் தேர்வுகள் நடந்துவருகின்றன. இன்றுதான், அதாவது ஆகஸ்ட் 12 அன்று மாலைதான் தேர்வுகள் முடிவடைகின்றன. அடுத்த மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, அதாவது ஆகஸ்டு 16 முதல் 29 வரை மாணவர்களுக்கு வினாடி-வினா தேர்வுகளை நடத்தி, அதைப் பதிவு செய்யும்படி வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பிவைத்துள்ளனர். ஒவ்வொரு வகுப்புக்கும் இரண்டு நாட்கள் தேர்வுகள் என்றாலும் ஆய்வகங்களில் மாணவர்களைப் பகுதி பகுதியாக அனுப்ப வேண்டியிருப்பதால், ஆசிரியர்களால் வகுப்புகளைக் கவனிக்கவோ பாடங்களை நடத்தவோ இயலவே இயலாது. இந்தத் தேர்வுகள் முடிந்து அடுத்த சில நாட்களில், செப்டம்பரில், காலாண்டுத் தேர்வுகள் வந்துவிடுமே! ஒரு தேர்வு முடிந்த அடுத்த சில நாட்களில் மீண்டும் மீண்டும் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படுமென்றால், நமது கல்வியின் நோக்கம்தான் என்ன? குழந்தைகள் பள்ளிக்கு வருவதே தேர்வுகளை மட்டுமே எழுதிக்கொண்டிருப்பதற்கா? ஆசிரியர்கள் எதற்கு? பாடம் நடத்துவதற்கா அல்லது தேர்வுகள் நடத்துவதற்கா? இந்த வினாடி-வினா தேர்வு நடைமுறையிலும் கொள்குறி வகை வினாக்கள்தான் இடம்பெறுகின்றன. எனில், ஆறாம் வகுப்பு முதலே நாம், போட்டித் தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார் செய்கிறோம் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனிபோல அறிந்துகொள்ள முடிகிறது அல்லவா? குறிப்பாக, இத்தகைய தேர்வுக்கான வினாக்கள் அனைத்தும் கொள்குறி வகையாகவே இருக்கும். எந்தத் தேர்வு என்றாலும் பாடப்பொருள் அறிவை, கொள்குறி (multiple choice) வகை வினாக்களாகவே எதிர்கொள்ளும்படி மாணவர்கள் தயார் செய்யப்படுகிறார்கள். நுழைவுத்தேர்வுகளை வன்முறை என்கிறோம். ஆனால் ஒவ்வொரு தேர்வும் நுழைவுத்தேர்வு மற்றும் போட்டித்தேர்வுகளின் அடிப்படையிலேயே வடிவமைக்கப்படுகிறது. “கல்வி என்பது பள்ளியில்தான் தொடங்குகிறது என்று நினைப்பது நமது அறிவீனத்தையே காட்டுகிறது. அதேபோல அச்சிடப்பட்ட பாடங்களை ஒரு குழந்தையின்மீது திணித்து, அது அந்தக் குழந்தையின் மூளைக்குள் ஏறிவிட்டதா எனத் தேர்வுகள் மூலம் பரிசோதிப்பதும் கல்வி அல்ல. குழந்தைகளுக்கு நீங்கள் எதையும் கற்றுக்கொடுக்க முடியாது. அவர்களாகவே கற்று அறிவதற்கான சூழலை மட்டுமே உருவாக்க முடியும்” என்கிறார் மரியா மாண்டிசோரி. ஆனால் நாம், நமது பள்ளிகளில் என்ன செய்துகொண்டுள்ளோம் தெரியுமா? முதல் வகுப்பு முதல் ஆன்லைன் தேர்வு. எண்ணும் எழுத்தும் திட்டம் வகுப்பறைகளில் நடப்பது, அதன் நீட்சியாக குழந்தைகளுக்கு அலைபேசி செயலி வழியாகத் தேர்வு. ஆறாம் வகுப்பு முதல் கல்லூரி வகுப்புகள் வரையிலும் தேர்வு, தேர்வு, தொடர்ந்து தேர்வுகள் மட்டுமே‌. சில பத்தாண்டுகளுக்கு முன்பெல்லாம் வகுப்பறைகளில் பாடங்களைக் கற்றுத் தருவதும் தேர்வுகள் நடத்துவதும் நடைமுறையில் இருந்தாலும் தற்போது இருக்குமளவுக்கு குழந்தைகளுக்கு மன அழுத்தமோ பாடச் சுமைகளோ இருந்ததில்லை. பாடநூலில் உள்ள பாடங்களை நடத்துவதற்கான சூழலும் சுதந்திரமும் ஆசிரியர்களுக்கு இருந்தது. அந்தந்தப் பாட ஆசிரியர்கள், தமது மாணவர்களின் சூழல் மற்றும் அவர்களின் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றையும் இன்னபிற சூழல்களையும் கருத்தில்கொண்டு, பாடங்களில் உள்ள வினாக்களை சிறு தேர்வுகளாக அவ்வப்போது நடத்துவார்கள். அதன் மதிப்பீட்டுக்குப் பிறகு, குறிப்பிட்ட மாணவர்களுக்கு எங்கெல்லாம் கவனம் தேவையோ, அங்கு சிறப்புக் கவனம் தருவார்கள். அதேபோல, பாடநூல்களும் இத்தனைக் கனமாகவோ குழப்பங்கள் நிறைந்ததாகவோ இருக்காது. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறனையும் அன்றைய பாடநூல்கள் பெற்றிருந்தன. ஆனால் அதற்கு எதிர்மாறாக, தற்போதைய பாடநூல்களின் அளவும் அதீதப் பாடப்பொருள்களும் குழந்தைகள் கல்வியை வெறுப்பதற்கு ஒரு முக்கியக் காரணமாக இருப்பதைக் குறித்து நாம் எங்காவது கவனம் கொள்கிறோமா? கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களும் இது குறித்தான கள உண்மைகளை வெளியே சொல்வதில்லை; கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வுக்கு உட்படுத்துவதில்லை. உலகத் தரத்தில் கல்வி தருவதாகக் கூறி, போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு ஏதுவாகப் பாடநூல்களை வடிவமைக்கின்றனர், பாடநூல் குழு உறுப்பினர்கள். பாடநூல்களை வெறுக்கும் மனநிலைக்குச் தள்ளப்படும் குழந்தைகளை இங்கு  ஒவ்வொரு வகுப்பிலும் பார்க்கலாம். இவர்கள் எட்டாம் வகுப்பு வரை இலவசத் தேர்ச்சி பெற வைக்கப்படுகின்றனர். தடையில்லாத் தேர்ச்சியின் (No Detention Policy) மோசமான விளைவுகளால் குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பிலும்கூடத் தமிழ் எழுத்துகளைப் படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தாய்மொழியில் சரளமாகப் படிக்கத் தெரியாத ஒரு தலைமுறையைத்தான் இந்தக் கல்வி முறை உருவாக்கி வைத்துள்ளது. ஆங்கில வழிக்கல்வி, அவர்களது கல்வி  வாழ்க்கையைப் பதம் பார்க்கும் அடுத்த கத்தி. ஆங்கிலத்தில் அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், ஆங்கிலப் பாடத்தில் 100% தேர்ச்சி தரும் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் கொண்டுள்ள அற்புதமான கல்வித்துறை நம்முடையது. ஆம், ஒரு மொழியை மொழியாகவே கற்பிக்கத் தெரியாமல் செயல்படும்போது, மற்ற பாடங்களான அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் போன்ற பாடங்களில் உள்ள ஆங்கில அறிவை எப்படிக் கடத்த முடியும் என்ற கேள்வி நம்மிடையே இருந்தால், நாம் மாணவர்களுக்குத் துரோகம் இழைக்கமாட்டோம். எல்லாமே இங்கு ஆவணங்கள்தான். குழந்தைகளுக்கு வாசிக்கத் தெரிகிறதா? எழுதத் தெரிகிறதா? சிறு தேர்வு வைத்துள்ளீர்களா? யூனிட் டெஸ்ட் வைத்துள்ளீர்களா? மதிப்பெண்கள் பெற்றுள்ளார்களா? மதிப்பெண் குறைந்தால் அதற்குக் குறைதீர் கற்பித்தல் செய்கிறீர்களா? மெல்லக் கற்போர் பயிற்சி நடக்கிறதா? பள்ளி நூலகத்திலிருந்து புத்தகங்கள் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதா?  ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படுகிறதா? இவை அனைத்தையும் எமிஸ் இணையதளத்தில் ஏற்றினாயா? இல்லையெனில் அதை உடனே செய்ய வேண்டும். இவைதான் இன்று அரசுப் பள்ளிகளில் நடக்கும் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள். அடுத்ததாக, வாரத்தேர்வு வைத்தீர்களா? மாதத் தேர்வு வைத்தீர்களா? சிறப்பு வகுப்புகள் வைத்தீர்களா, வைக்கவில்லையா? வைக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை; ஆனால் தேர்ச்சி வீதம் குறையக் கூடாது. அவரவர் சூழலுக்கு ஏற்ப, சிறப்பு வகுப்புகள் நடத்துவதா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளலாம். ஆனால் தேர்ச்சி சதவீதத்தில் கவனம் தேவை. எனில், பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் இருக்குமா? ஒரு கட்டத்தில் எதுவும் கற்றுக்கொள்ளாமலேயே, குழந்தைகள் தேர்வுகளை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடும் சூழல்தான் தற்போது நிலவுகிறது. இவை மட்டுமா? உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (High Tech lab) வழியாக ஒவ்வொரு மாதமும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்வுகள். அனைத்தும் கொள்குறி வகை வினாக்கள் எனில், மாணவன் எப்போதுதான் சிந்தனை செய்வது? சொந்த நடையில் எழுதுவது? எப்போது தான் கற்ற கல்வி மூலம் இந்தச் சமூகத்துக்காக வினையாற்றுவது? என்பன போன்ற சந்தேகங்களுக்கெல்லாம் நம்மிடம்  பதிலே இல்லை. கல்வித்துறையிலும் சந்தேகமே ஏற்படுவதில்லை என்பதுதான் நம்முடைய ஆகப் பெரிய கவலை. எப்போது வேண்டுமானாலும், நாளொன்றுக்கு  குறைந்தபட்சம் சுமார் மூன்று ஆணைகளாவது பள்ளிகளுக்கு வருகின்றன. மாணவர் எண்ணிக்கை, கணக்கீடுகள், போட்டி அறிவிப்புகள், பயிற்சிகள், எமிஸ் பதிவேற்றங்கள், மாணவர்கள் விவரங்கள், கல்வி உதவித் தொகைகள் என, தொடர்ச்சியான பணிகள். இவை அனைத்தும் இயல்பான வகுப்பறைகளை முற்றிலும் பாதிக்கின்றன. இவற்றுடன் மாணவர்களது உடல்நலக் குறைவு, அவர்கள் விடுப்பு எடுப்பது, உறவினர் வீடுகளுக்கு செல்வது, உள்ளூர்ப் பண்டிகைகள், ஆசிரியர்கள் உடல் நலமின்மை, விடுப்பு எடுப்பது, பயிற்சிக்குச் செல்வது என, இப்படிப் பலவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது. தற்காலத்தில் அலைபேசிகளின் ஆதிக்கம், திரைப்படங்கள், சமூக ஊடகங்கள், போதைப்பொருள் பழக்கங்கள், இப்படி இன்னும் சில கவன ஈர்ப்பு விஷயங்களைத் தாண்டி மாணவர்களைக் கல்விக்குள் அழைத்து வரவேண்டிய தேவை உள்ளது. ஒரு கல்வி ஆண்டில் மாணவர் – ஆசிரியர்  இருவரும் இணைந்து, எத்தனை நாட்கள் கல்விச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர் என்று கணக்கிட்டால், நம்முடைய போதாமை முழுமையாக வெளிப்படும். அரைகுறைக் கல்வியைக்கூடப் பெறாமலேதான் மாணவர்கள் பள்ளிக் கல்வியை முடிக்கின்றனர். அனைவரும் தேர்ச்சி என்ற சுலோகத்தை மட்டும்தான் திரும்பத் திரும்பக் கூறுகின்றனர். அது அல்லவே கல்வி. அதனால் எந்தப் பயனும் கிடையாது என்பதை, குழந்தைகள் உயர்கல்வி செல்லும்போதுதான் உணர்கின்றனர். பள்ளிக் கல்வியை முடித்தபிறகும் பல வகையான போட்டித் தேர்வுகள், நுழைவுத் தேர்வுகள், நீட், JEE உள்ளிட்ட பலவும் இதில் அடங்கும். குழந்தைகள் பாறைகளாக மாறிப்போகும் மனநிலையில், இறுகிப்போய்தான் வாழ்கின்றனர். அவர்களது மாணவப் பருவம் மிகவும் வறட்சியாகவே இருக்கிறது. தேர்வுகளை வெறுக்கும் குழந்தைகளது மனநிலை காக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியில் கல்வித்துறை ஈடுபடவேண்டும். குழந்தைகளது மனநிலை மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைகள் முழு மனதோடும் ஆர்வத்தோடும் கற்றலில் ஈடுபடும் சூழலையும் மனநிலையையும் உருவாக்க வேண்டியதே இன்றைய முக்கிய மற்றும் அவசரத் தேவை.

மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

மரு வைத்து வந்துள்ள மணற்கேணி

புதிய கண்டுபிடிப்புகளைப் போலவே கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு அறிவிப்பும் வெளியிடப்படுவது குறித்து என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஆன்லைன் கல்விக்கு அடிகோலும் முயற்சிகள்தான் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் அனைத்தும். இதற்காகப் பணியாற்றி, கடும் உழைப்பைத் தந்திருக்கும் கல்வித்துறையின் அத்தனை ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள். ஆனால் இரண்டு ஆண்டுகளாக அந்த ஆசிரியர்களின் பணியிடங்களில் வகுப்புகளை கவனிக்க, பாடம் நடத்த, வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் சிறப்பு. இல்லை என்றால் அது குழந்தைகளுக்குச் இழைக்கப்படும் துரோகம்; அநீதி. கல்வித் துறையில் மணற்கேணி என்ற செயலி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த மணற்கேணி குறித்து, இரு வழிகளில் நாம் விளக்கலாம்.  முதலாவதாக, இது நாட்டிலேயே  முதன்முதலாக என்பது உண்மை அல்ல. ஆம், தமிழ்நாட்டின் கல்வித்துறையில் பத்தாண்டுகளுக்கும் முன்பாகவே, சபிதா ஐஏஎஸ் அவர்கள் கல்விச் செயலாளராகப் பணியாற்றியபோது, மாநிலக்கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) டிஜிட்டல் கன்ட்டென்ட் என்ற கோட்பாட்டை முன்னெடுத்தது. பல்வேறு வகையான பயிற்சிகள், பாடப்பொருள் தயாரிப்பு, மொழிபெயர்ப்பு, அறிவியல் காணொளிகள் என்று, முப்பரிமாண (3D) வரைவில் பலவிதமான வழிகளில் டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிக்கப்பட்டது. SCERTஇல் ICT CELL என்ற ஒரு தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு SCERTஇன் விரிவுரையாளர் ஒருவரை அதற்குப் பொறுப்பாளராகப் பணியமர்த்தியது. அங்கு ஒருங்கிணைப்பாளராக பள்ளி ஆசிரியர் ஒருவரும் பணியாற்றினார். ICT CELL வழியாக நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்புப் பணியில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டனர். 2013 முதல் 2016 வரை டிஜிட்டல் கன்ட்டென்ட் சார்ந்த ஏராளமான பணிகள் ICT CELL வழியாக முன்னெடுக்கப்பட்டன. ஆசிரியர்கள் தயாரித்த டிஜிட்டல் கன்ட்டென்ட் அனைத்தும் மாணவர்கள் பயன்பாட்டுக்காக SCERT  வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்வதற்காகச் சேகரம் செய்யப்பட்டன. SCERTஇல் பயிற்சி பெறாமல், தனிநபராக ஆர்வமாக டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்பில் ஈடுபடும் ஆசிரியர்களிடமிருந்தும்கூட அவை பெறப்பட்டன. சில மாவட்டங்களில், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், முதல்வர்கள் தலைமையில், ஆசிரியர்கள்  டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்,  அந்த நேரத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கலாச்சாரமும் பெருகின. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளை நவீனப் பள்ளிகளாக மாற்றம் செய்ய முயற்சி செய்ய ஆரம்பித்து வேகமெடுத்தது என்றும் கூறலாம். பத்தாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் உள்ள மனப்பாடப்பகுதியை, பாடல்கள் வழியாக டிஜிட்டல் கன்ட்டென்ட்டுகளாக மாற்றினர். அது மட்டுமல்ல; சிறு வகுப்புகள் முதல், ஒவ்வொரு வகுப்பிற்கும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழ்ப்பாடம் மட்டுமல்ல; ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும்  சமூக அறிவியல் என அனைத்துப் பாடங்களுக்கும் இப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதன் நீட்சியாகத்தான் சில வருடங்கள் கழித்து, கல்வித் தொலைக்காட்சி என்ற முயற்சியும் விரிவாக்கம் செய்யப்பட்டது.  கற்றலில் புதுமை செய்யக் கூடிய ஆசிரியர்களது (Innovative  Practicing Teachers)   பணிகளை டிஜிட்டல் ஆவணமாக்கும் வேலையையும் SCERT முன்னெடுத்தது. முதற்கட்டமாக, நூறு ஆசிரியர்களைத் தேர்வு செய்து  அவர்கள் செய்யும் புதுமையான கற்பித்தல் முறைகளைக் காணொளிகளாக  தயார் செய்து, வலைத்தளத்தில் பதிவேற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதற்காகவும் ஒரு பெரும் தொகையை (ரூபாய் பத்து லட்சம்) SCERT  ஒதுக்கியது. இப்பணியைச் செய்ய முன்வந்தவரும்கூட, சேலம் மாவட்ட ஆசிரியர் ஒருவர்தான்.  இப்பணி நிறைவடைந்ததா என, இன்று வரை தெரியவில்லை. நூறு ஆசிரியர்களில், ஒருசிலரின் காணொளிகளை மட்டும் SCERT சேனலில் பார்க்க முடிகிறது. 10 மற்றும் 12ஆம் வகுப்புப் பாடப்பிரிவுகளுக்கு, சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் ஆகுமெண்டேட் ரியாலிட்டி என்ற  என்ற பிரிவிலும் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் தயாரிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. அப்போது முன்னெடுக்கப்பட்ட பணிகளுக்கான ஒரு சில உதாரணங்கள்: இப்படி ஏராளமான முன்னெடுப்புகள் செய்யப்பட்டன.  அண்ணா நூற்றாண்டு நூலகம் அருகே அமைந்துள்ள கல்வியியல் இணையக் கழகம், ஆசிரியர்களுக்கு செயலிகள் உருவாக்கும் (App Development) பயிற்சிகளையும்கூட வழங்கியது. அதற்கும் SCERT இன் ICT CELL  தான் ஒருங்கிணைப்பு செய்தது. பாடப்புத்தகங்களை ஃபிலிப் (flip) போல விரலால் புத்தகத்தின் பக்கங்கள் திருப்பும் முறையைப்போல டிஜிட்டல் பக்கங்களை உருவாக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்குத் தரப்பட்டது. இக்குழுவில் இணை இயக்குநர் ஒருவரையும் இணைந்திருந்தது SCERT நிறுவனம். டெல்லியில்  தேசியக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) வழியாக இப்பயிற்சியை எடுத்துக் கொண்ட ஆசிரியர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின்  (SCERT) ஒருங்கிணைப்பில் பத்தாம் வகுப்பு பாடப் புத்தகங்களை flip முறையில் டிஜிட்டல் கன்ட்டென்ட் உருவாக்கம் செய்தனர். இப்படியாக, தொடர்ச்சியான பன்முகத்தன்மையுடன் பல வருடங்களாக, தொடர்ச்சியாக, டிஜிட்டல் கன்ட்டென்ட் தயாரிப்புப் பணிகளைச் செய்ய ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர். அந்தப் பயிற்சிகளில் திறன்பெற்ற ஆசிரியர்கள்தான், மாநில மையத்தில் பெரும்பாலும் டிஜிட்டல் கன்ட்டென்ட் உருவாக்கம் உள்பட, பள்ளிக்கல்வி முன்னெடுக்கும் ICT சார்ந்த தொழில்நுட்பக் கற்றல் – கற்பித்தல்  திட்டங்கள் அனைத்திற்கும் இன்றளவும்  பங்காற்றி வருகின்றனர்.  சில வருடங்களாக அல்லது பல வருடங்களாக இந்தப் பணியில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள், பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குப்  பாடம் நடத்துவதே இல்லை என்ற விமர்சனமும் பரவலாக உள்ளது. அரசின் முயற்சிகள் கல்வித்துறையை நவீனமாக்கும் பார்வையைக் கொண்டிருக்கலாம். ஆனால் எந்தத் திட்டம் போட்டாலும் ஆசிரியர்களே அதைக் கவனிக்க வேண்டும் என்றால், கற்பித்தல் பணிக்கு யாரை நியமிப்பார்கள்? முதல் பத்தியில் கூறியபடி, இரண்டாவது விளக்கம்: இந்த மணற்கேணி திட்டம் இணையவழிக் கல்வியை ஊக்குவிக்க உருவாகியுள்ளது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020இன் ஒரு கூறு. ஆம், ஏற்கனவே DHIKSHA செயலி வழியாக ஆசிரியர்கள் செய்யும் டிஜிட்டல் கன்ட்டென்ட் பதிவேற்றம் செய்யப்படும் என செய்தி வெளியானது; பின்னர் அது நடைமுறையிலும் வந்தது. புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020இல் தலைப்பு 24, இணைய மற்றும் டிஜிட்டல் கல்வி என்ற உபதலைப்பின் 3ஆவது பிரிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.  இணைய வழிக் கற்பித்தல் மற்றும் கருவிகள் என்ற தலைப்பில், DHIKSHA குறித்துக் குறிப்பிட்டுள்ளனர். இதைத்தான் அப்போதே நாம் வேண்டாம் என்று கூறினோம். அதாவது, மரு வைத்து மாறுவேடம் பூண்டால் அது மணற்கேணி. மருவை எடுத்துவிட்டால் அது DHIKSHA. DHIKSHA செயலியில் டிஜிட்டல் கன்ட்டென்ட்கள் பதிவேற்றம் செய்ததும், வகுப்பறையில் ஆசிரியர்கள் ஒருநாளைக்கு ஒருமுறையாவது அதைத் திறந்து பயன்படுத்த வேண்டும் என்றனர். ஆனால் அதில் கற்றல் வளங்கள் (டிஜிட்டல் கன்ட்டென்ட்டுகள்) எல்லாத் தலைப்புகளுக்குள்ளும் காலியாகவே இருக்கும். அது பெயருக்குத்தான் உருவாக்கப்பட்டிருந்தது. இவை அனைத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கை 2020 வளர்க்க நினைக்கும் இணையவழிக் கல்வியையே நாடச் சொல்கின்றன. நேரடிக் கற்பித்தலுக்கு வழிவகுக்காத இவை புறக்கணிக்கத்தக்கவையே. இதுவரை நாம் இங்கு கூறிய பத்தாண்டு கால டிஜிட்டல் வளங்கள் தமிழ்நாட்டின் குழந்தைகளது கல்வித்தரத்தை எந்த விதத்திலும் உயர்த்தவோ தரப்படுத்தவோ இல்லை. தரம் குறையவே செய்திருக்கிறது. அடிப்படையில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. குறிப்பாக ஆசிரியர்கள் நியமனம், கற்றல் கற்பித்தல் பணி தொய்வின்றி நிகழ்வதற்கான சூழலை உருவாக்குதல், ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை மட்டும் மேற்கொள்ளச் செய்தல் என யோசிக்கலாம். அதை விடுத்து, புதிய புதிய பெயர்களில் தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவது – மணற்கேணி என்ற பெயரில் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் கூறுகளில் ஒன்றான DHIKSHA  செயலியைப்போன்ற செயலியை அறிமுகம் செய்வது அவசியமற்றது. தேவைக்கேற்ற செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டால்தான், கல்வி‌ ஏற்றமிகு வழியில் உயரும். 

தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

தமிழக அரசை மதிக்காத தனியார் கல்லூரி

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கல்லூரி பல ஆண்டுகளாக நிதி மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளில் ஈடுபட்டு வந்ததோடு மட்டுமல்லாமல் கடந்த 2019-20, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய மூன்று கல்வி ஆண்டுகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கையையும் நிறுத்தியது.   இந்தக் கல்லூரியில் நிலவும் சிக்கல்கள் குறித்தும் கல்லூரியை முழுமையாக அபகரித்துக்கொள்ள, கல்லூரியின் செயலர் எடுத்துவரும் முயற்சிகள் குறித்தும் அவர்மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்தும் கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 3 அன்று சுவடு தளத்தில் விரிவான கட்டுரையை வெளியிட்டிருந்தோம். https://hexamedia.in/save-dbj/ அதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு அக்கல்லூரியின் நிர்வாகக் குழுவை முற்றிலுமாக நீக்கிவிட்டு, முறைகேடுகளைக் களையவும் மாணவர் சேர்க்கையைத் தொடர்ந்து நடத்தவும் ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976, பிரிவு  14 A’இன் படி, அக்கல்லூரியை நிர்வகிப்பதற்காக ‘சந்தோஷ் டி சுரானா’ என்பவரை சிறப்பு அலுவலராக (Special Officer) நியமித்தது (அரசாணை எண்:153, தேதி:12.08.2022). தமிழக அரசு நியமனம் செய்த சிறப்பு அலுவலருக்கு எதிராக, அக்கல்லூரி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றது. ஆனால் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகள் அனைத்திற்கும் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கம்போல் எந்த உத்தரவையும் மதிக்காத கல்லூரி நிர்வாகம், உயர்நீதிமன்ற உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு, கடந்த ஆண்டு (2022-23) மாணவர் சேர்க்கையை நடத்தவில்லை. மாறாக, நீதிமன்றம், தமிழக அரசு மற்றும் பொதுமக்களை ஏமாற்றும் விதமாக, கல்லூரி நிர்வாகம் நடத்தும் சுயநிதிப் பாடப்பிரிவான பி.காம்-இல்  மட்டும் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்துள்ளது. இவ்வாறான தாராள மனப்பான்மையோடும் கல்வி வள்ளலாகவும் இருக்கும் இக்கல்லூரி நிர்வாகத்தினர், கடந்த 2016-17ஆம் கல்வி ஆண்டு முதல் அரசு  நிர்ணயித்த கட்டணத்தை வசூல் செய்யாமல் (ரூபாய் 795) சுயநிதிக் கட்டணமாக ரூபாய் 42,000 வரை வசூல் செய்தது ஏன் என்ற கேள்வியை எழுப்புகின்றனர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர். நடப்புக் கல்வி ஆண்டில் (2023-24) அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கையை நடத்தாமல் கடந்த ஆண்டைப் போலவே சுயநிதிப் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் மாணவர் சேர்க்கையை நடத்திக்கொண்டிருக்கின்றனர். கடந்த கல்வியாண்டில் 70 மாணவர்களை ரூபாய் 500 கட்டணத்தில் சேர்த்த நிர்வாகம், நடப்புக் கல்வி ஆண்டில் அந்தக் கட்டணத்தையும் 7,210 ரூபாயாக உயர்த்தியுள்ளதோடு, பொருளாதாரத்தில்  பின்தங்கியோருக்கு மட்டும் சேர்க்கை நடைபெறும் எனவும் ஒரு நாடகத்தை அரங்கேற்றத் தயாராகியுள்ளது. 2022ஆம் ஆண்டு ஆகஸ்டு 17க்குப் பிறகு, ஏறத்தாழ 10 மாதங்களாக இந்தக் கல்லூரி மீதான வழக்கானது நீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு வரவில்லை. தொடர்ந்து உயர்கல்வித்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து, வழக்கை விரைவுபடுத்தக் கோரியும் தமிழக அரசு இவ்வழக்கின்மீது அக்கறை காட்டவில்லை. மேலும் தமிழக அரசின் அரசு வழக்கறிஞர்களைச் சந்தித்து முறையிட்டும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இவற்றையெல்லாம் பார்க்கும்போது, இக்கல்லூரி நிர்வாகம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி வழக்கை மறுவிசாரணைக்கு வரவிடாமல்  தடுக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது என்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஒருவேளை இக்கல்லூரியைப் பின்பற்றி, தமிழகத்தில் உள்ள 164 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கையை நிறுத்தினால், தமிழக அரசின் சமூக நீதி, இட ஒதுக்கீட்டுக் கொள்கை மற்றும் மாணவர்களின் உயர்கல்வியும் கேள்விக்குறியாகும். நீதிமன்ற உத்தரவையும் செயல்படுத்தாமல், தமிழக அரசின் உத்தரவையும் பொருட்படுத்தாமல், தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இக்கல்லூரி நிர்வாகம், அப்பகுதியில் உள்ள ஏழை எளிய மாணவர்களுக்கு, குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டிய உயர்கல்வியைப் பறித்துக்கொண்டுள்ளது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகளாக (2019-20, 2020-21, 2021-22, 2022-23, 2023-24) இக்கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அரசு நிர்ணயித்த கட்டணத்தில் உயர்கல்வி பெறவேண்டிய மாணவர்கள், கல்வி கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இக்கல்லூரியின் முறைகேடுகளைத் தட்டி கேட்டதற்காக, இக்கல்லூரியால்  பழிவாங்கப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 11 பேராசிரியர்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக்கொண்டிருக்கின்றனர். அப்பேராசிரியர்களின் பணிநீக்கம் செல்லாது என்றும் அவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றும் சென்னை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குனர் உத்தரவிட்டும் கல்லூரி நிர்வாகம் அதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் முடக்கி வைத்துள்ளது. இக்கல்லூரியை மீட்டெடுக்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், பொதுமக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் என்று பலரும் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர். மேலும் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் முத்தரசன்,  மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன்,  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அமைப்புகளும் அரசியல் கட்சியினரும் இக்கல்லூரியை மீட்டெடுக்க வேண்டும் என்று தங்களின் அறிக்கைகள் மூலம் தமிழக அரசை வலியுறுத்திக்கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நிதி உதவியோடு உள்கட்டமைப்புகளை மேம்படுத்திக்கொண்ட பிறகு, கல்லூரியை முழுமையாக அபகரிக்க நடக்கும் இத்தகைய முயற்சிகளை அரசு கால தாமதமின்றி முறியடிக்க வேண்டும். மேலும் இனி எந்தவொரு அரசு உதவி பெறும் கல்லூரியையும் மூடுவதற்கோ அல்லது சுயநிதிக் கல்லூரியாக மாற்றுவதற்கோ அனுமதிக்காத வகையில், ‘தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டம் 1976’இல் உரிய சட்டத் திருத்தங்களைத் தமிழக அரசு செய்து, ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்வியைப் பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதுவே சமூகநீதியைப் பாதுகாப்பதற்கான திராவிட மாடல் அரசின் கடமையாகும்.

மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

மருத்துவம் சார்ந்த படிப்புகளும் வாய்ப்புகளும்

MBBS மட்டுமே மருத்துவப் படிப்பு என பொதுப்படையாக எல்லார் மனத்திலும் பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பல் மருத்துவத்தைத் தேர்வு செய்வோர் சிலர். ஆனால் அதையும் தாண்டி நிறைய துணை மருத்துவப் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதைக் குறித்த விழிப்புணர்வு மாணவர்களிடமோ பொதுமக்களிடமோ இன்னமும் இல்லை. மருத்துவர்கள்கூட அப்படிப்புகள் குறித்து அதிகம் பேசுவதில்லை. ஆனால், ஆண்டுதோறும் புதிதாக உருவாகும் அந்தப் படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகளின் காலி இடங்கள் வெகுவாக அளவாக நிரப்பப்படவே இல்லை. கடந்த 2021இல் NSSO (National Sample Survey Organization) மேற்கொண்ட ஆய்வின்படி 2030இல் 10000 நபர்களுக்கு 22 துணை மருத்துவப் பணியாளர்கள் என்ற அளவில் (22.3 : 1000) தேவை விகிதம் இருக்கும் எனத் தெரிய வருகிறது. மற்ற எல்லாத் துறைகளிலும் பாலினப் பாகுபாடு இல்லாமல் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கினாலும் செவிலியர்களின் துறையில் மட்டும் 79.85 சதவீதம் பேர் பெண்களாக இருக்கின்றனர். வெறும் 20.15% ஆண்கள் மட்டுமே இந்தத் துறையில் உள்ளனர். பெரும்பாலான இடங்களில் ஆண்கள் செவிலியர் துறைக்கு வருவதை ஒரு இழுக்காகவே கருதுகின்றன்றனர். இதைத் தொடர்ந்து பெண்களுக்கு மட்டுமே ஆன செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளைத் தனியார் கல்லூரிகள் நிறுவத் தொடங்கியுள்ளன. கொரோனா காலத்தில் நிலைமை மோசமாகி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர துணை மருத்துவர்களுக்கு மிகுந்த பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த நேரத்தில் OECD (The Organization for Economic Co-operation and Development) நாடுகள் நிறைய துணை மருத்துவர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியர்களுக்கு வேலை வாய்ப்பை அளித்ததன் விளைவாக கோவிட் காலகட்டங்களில் துணை மருத்துவர்களுக்கான நெருக்கடி ஏற்பட்டு அதன் விகிதம் மேலும் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்றளவிலும்கூட துணை மருத்துவ ஊழியர்களின் தேவை குறித்த விழிப்புணர்வு பேசப்படுவதே இல்லை என்பதுதான் நிதர்சனம். இன்னும் ஆராய்ந்து பார்த்தால் மருத்துவர்களிடமே இந்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லை என்றே கூறலாம்.   மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் ஒரு சில படிப்புகளையும் அந்த ஊழியர்களையும் குறித்த தாழ்வு மனப்பான்மையே நிலவுகிறது. அவர்களைக் குறித்து இழிவாகப் பேசுவதும் நடத்துவதும் நடந்துகொண்டே இருக்கின்றன. எவ்வளவோ பகுத்தறிவுச் சிந்தனைகள் பேசப்பட்டாலும் “ஓ.. நர்ஸா..? ஓ.. தெரபிஸ்டா..? அப்போ டாக்டர் இல்லையா?” என்ற வார்த்தைகள், மேலும் ஒரு சமூகச் சீர்திருத்தமின்மையைப் பறைசாற்றிக்கொண்டே இருக்கின்றன. சிறந்த துணை மருத்துவப் படிப்பு என்று கூகுளில் தேடினால், ஏதோ கடமைக்கு நான்கு படிப்புகளைக் காட்டிவிட்டு முதுகலைப் பட்டப்படிப்பை எல்லாம் அங்கே அள்ளிவிட்டிருக்கிறார்கள். MBBS மட்டும்தான் மருத்துவப் படிப்பு என்ற ஆழ்ந்த எண்ணம் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவம் என்பது பலதரப்பட்ட அணுகுமுறை (Multidisciplinary approach) கொண்ட பல துறைகளும் தொடர் சங்கிலிகளைப்போலப்  பிணைந்திருப்பது. ஒரு மருத்துவமனையை நடத்துவதற்கு மருத்துவர்கள் மட்டுமே போதாது. மருத்துவத் துறை சார்ந்த இதர கருவிகளை இயக்கவும் அதை நேர்க்கோட்டில் நகர்த்திச் செல்லவும் அனைத்து வகையான இதர துணை மருத்துவ ஊழியர்களும் அவசியம். Every health worker’s work matters. மருத்துவப் படிப்புகளில் சேர விரும்பும் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்கள் துணை மருத்துவப் படிப்புகள் குறித்தும் அவற்றிற்கு உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக, தங்கள் குழந்தைகளை மருத்துவர்கள் ஆக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ள பெற்றோர்கள் இதைக்குறித்து அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். B.PHARMB.P.T. (Physiotherapy)B.ASLP (Audiology Speech Language Pathologist)B.Sc. (NURSING)B.Sc. RADIOGRAPHY AND IMAGING TECHNOLOGYB.Sc. RADIO THERAPY TECHNOLOGYB.Sc. CARDIO-PULMONARY PERFUSION TECHNOLOGYB.Sc. MEDICAL LABORATORY TECHNOLOGYB.Sc. OPERATION THEATRE & ANAESTHESIA TECHNOLOGYB.Sc. CARDIAC TECHNOLOGYB.Sc. CRITICAL CARE TECHNOLOGYB.Sc. DIALYSIS TECHNOLOGYB.Sc. PHYSICIAN ASSISTANTB.Sc. ACCIDENT & EMERGENCY CARE TECHNOLOGYB.Sc. RESPIRATORY THERAPYB.OPTOMB.O.T (Occupational Therapy)B.Sc. NEURO ELECTRO PHYSIOLOGYB.Sc. CLINICAL NUTRITION மேலே உள்ளது துணை மருத்துவப் படிப்புகளுக்கான பட்டியல் மட்டுமன்று. இந்தத் துணை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் சேர்வதற்கு, தமிழ்நாடு அரசு கலந்தாய்வையும் நடத்துகிறது. பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை முதன்மைப் பாடங்களாகப் படித்த மாணவர்கள் தங்கள் மருத்துவ கட் ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் இந்தப் பட்டப்படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அதற்கான கலந்தாய்வுக்காக இணைய வழியில் கீழ்க்காணும் இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.net    விண்ணப்பிக்கும் காலம் ஜூன் 19 அன்று தொடங்கி ஜூன் 28 மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள படிப்புகள் குறித்த விரிவான விவரங்கள் கொண்ட கையேடும் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறைகளில் ஆர்வம் உள்ள மாணவர்கள் மேற்கண்ட துணை மருத்துவப் படிப்புகளில் சேர்ந்தும் படிக்கலாம். எதிர்காலத்தில் நல்ல வேலைவாய்ப்புகளையும் பெறலாம். – லக்ஷயா, Occupational Therapist

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

ஆறாம் வகுப்பில் அ ஆ இ ஈ ?

பள்ளி திறந்து சில நாட்கள் ஆகின்றன. ஜூன் முதல் தேதி பள்ளி திறந்தாலே பாடத்திட்டங்களை முழுவதுமாக முடித்துவிட முடியாது என்கிற சூழலில் 11 நாட்கள் தாமதமாவே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒருபக்கம் வெயிலின் தாக்கம்  காரணமாக இந்தத் தாமதம் இருந்தாலும் களத்தில் வேறுவகையான பிரச்சனைகளை ஆசிரியர்கள் சந்திக்கின்றனர். தமிழ்நாட்டின் பள்ளிகளில் எந்தப் பாகுபாடுமின்றி ஒரு கணக்கெடுப்பு நடத்தினால், அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத மாணவர்கள் எல்லா இடங்களிலும் எல்லாப் பள்ளிகளிலும்  இருப்பார்கள். தனியார் பள்ளிகளில் இப்பிரச்சினை எப்படி கையாளப்படுகிறது என்று தெரியவில்லை. ஆனால் வகுப்புக்கு ஒரு ஆசிரியர் இருக்கும்போதும் பாடத்துக்கு ஒரு ஆசிரியர், மொழி ஆசிரியர் என முதல் வகுப்பில் இருந்தே மாணவர்களைக் கையாளும்போதும் இப்பிரச்சினைகள் களையப்படலாம். அப்படியான சூழல் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் இருக்கின்றன. அரசுப் பள்ளிகளிலோ கடந்த பல பத்தாண்டுகளுக்கும் மேலாக எழுதத் தெரியாதவர்கள், வாசிக்கத் தெரியாதவர்கள், அடிப்படைக் கணக்குத் திறன்கள் இல்லாதவர்கள் என ஆறாம் வகுப்பிலிருந்து  பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் காணலாம். இருபதாண்டுகளுக்கு முன்னால் தொடக்கப்பள்ளிகளிலிருந்து அல்லது நடுநிலைப் பள்ளிகளிலிருந்து  வெளிவரக்கூடிய மாணவர்கள் எழுத்துகளை வாசிக்கவும் எழுதவும் நன்கு பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பர். ஆனால் சமீப காலங்களில் இதுபோன்று இல்லாமல், மிக மோசமான கற்றல் அடைவுடன், அடிப்படை எழுத்துகள் அறியாமலும் வாசிப்பின்றியும்தான் மாணவர்கள் வெளிவருகின்றனர். கணக்குப் பாடத்திலும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய நிலையிலும் வாய்ப்பாடு தெரியாமலும்தான் இருக்கின்றனர். இவர்கள் அரசுப் பள்ளிகளிலிருந்து வருபவர்கள் மட்டுமல்ல; தனியார் பள்ளிகளிலிருந்தும் வருகிறார்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படியாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆறாம் வகுப்பில் அல்லது ஏழு, எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில்  சேர வரும் மாணவர்களை நாம் தனியார் பள்ளிகளைப்போல நுழைவுத்தேர்வு வைத்துப் புறக்கணிக்கவோ அல்லது இது உங்களுக்கான பள்ளி இல்லை எனத் திருப்பி அனுப்பவோ முடியாது; அனுப்பவும் கூடாது. சட்டப்படியும் அது ஏற்புடையதல்ல. ஏனெனில் அரசுப் பள்ளிகள் எல்லாருக்குமான பள்ளிகள். மேற்குறிப்பிட்ட கற்றல் குறைபாடுகளுடன் அரசுப் பள்ளிகளை வந்தடையும் மாணவர்கள் எண்ணிக்கை  ஒவ்வொரு வருடமும்  ஏறத்தாழ 50 சதவீதத்தைத் தாண்டிவிடுகிறது. வகுப்பறையில் பெரும்பான்மைக் குழந்தைகள் மேற்கூறிய பிரச்சனைகளுடன்தான் இருக்கின்றனர். இவர்களைக் கையாளும் ஆசிரியர்கள், தனிப்பட்ட கவனம் எடுத்துதான் இந்தச் சிக்கலைச் சரி செய்ய முயற்சி செய்கிறார்கள். பல பள்ளிகளில் தலைமையாசிரியர், ஆசிரியர்களுடன் கலந்து பேசி, 6 முதல் 8 வரையிலான வகுப்பு மாணவர்களில் வாசிக்கத் தெரியாதவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் எடுப்பது நடக்கும். அல்லது வகுப்பாசிரியர் கவனித்து கூடுதல் நேரம் எடுத்து எழுத்துகளைக் கற்பித்தல், பயிற்சி தருதல் போன்ற செயல்பாடுகள் நடக்கும். ஆனால் எல்லாப் பள்ளிகளும் இவற்றைச் செயல்படுத்துகிறதா என்பது குறித்துத் தனியாக ஆய்வு செய்துதான் அறிந்துகொள்ள முடியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக, பல மாவட்டங்களில் அல்லது அனைத்து மாவட்டங்களிலும் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் கூட்டத்தில் இப்பிரச்சனையை முன்வைத்து , வாசிப்புப் பயிற்சியை மேற்கொள்ளச் சொல்கின்றனர்.  பெரும்பாலும்  இந்த  ஆணை வாய்மொழி உத்தரவவாகத்தான் இருக்கும். இது வருடத்திற்கு வருடம் கூடுதல் அழுத்தங்களுடன் நடந்தேறி வருகிறது. இதற்காகத் தனிப் பதிவேடு பராமரிக்க வேண்டும் என்று EMIS வரை எடுத்துச் சென்றனர். உண்மையாகவே கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் மேம்படுகின்றனரோ இல்லையோ, பதிவேடு தயாரிப்பு சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் எழுதப்படாத விதி.  இந்தக் கல்வி ஆண்டில், சில தினங்களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில், ‘இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் கற்றலில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு, அடிப்படைக் கற்றலை மேம்படுத்தும் விதமாக, தமிழ் மற்றும் ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியாத, அடிப்படைக் கணிதக் கணக்குகள் மற்றும் வாய்ப்பாடு தெரியாத, கற்றலில் பின்தங்கிய மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தனியாக ஒரு பிரிவை (section) உருவாக்கி, பள்ளி திறந்த நாளிலிருந்து (12/06/2023) முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களுக்கென கால அட்டவணை‌ (Time Table) தனியாகப் பின்பற்றி, மாணவர்களின் அடிப்படைக் கற்றலை மேம்படுத்தி, மீண்டும் அதே வகுப்பு படிக்கும் மாணவர்களுடன் அவர்களை சேர்த்துக் கல்வி பயில அனுமதிக்குமாறு, தங்கள் பள்ளிகளில் பணிபுரியும்  6 முதல் 8 வகுப்பு போதிக்கும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படியான முயற்சியைப் போர்க்கால அடிப்படையில் எடுத்துள்ளது  வரவேற்கத்தக்கது. ஆனால் இதைத் தொடக்கப் பள்ளிகளிலேயே நடைமுறைப்படுத்தி, எழுத்துகளைக் கற்றுக் கொடுத்தபிறகு  உயர்நிலை வகுப்புகளுக்கு ஏன் அனுப்பக்கூடாது? என்ற கேள்வியை நாம் முன்வைக்கிறோம். தொடக்க வகுப்புகளில் ஐந்தாம் வகுப்பு வரை என்ன நடக்கிறது? எந்தக் குழந்தையாக இருந்தாலும் அவர்கள் கற்றல் அடைவுகளுக்கு ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இத்தனை ஆண்டுகளாக, ‘தொடக்கக்கல்வி முடித்து வரும் குழந்தைகள் ஏன் அடிப்படைத் திறன்களைப் பெறாமல் ஐந்தாம் வகுப்பை நிறைவு செய்கின்றனர்?’ என்ற கேள்வி அனைவரிடமும் இருக்கிறது. அங்குள்ள ஆசிரியர்களைக் கல்வி அலுவலர்கள் கேள்வி கேட்காமல், அதே குழந்தை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து படிக்கும்போது, அங்குள்ள ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து அழுத்தம் தருகின்றனர் என்ற புலம்பல் ஆசிரியர்களிடம் இருப்பதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்தால், அரசியல் சட்டத்தின்படி எல்லாருக்குமான சமமான கல்வி கிடைக்கிறதா என்று சிந்திக்கத் தோன்றும். ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் அதிகம் இருப்பதாலும் வெறும் திட்டங்களை மட்டுமே நடைமுறைப்படுத்தி வருவதாலும் தொடக்கப்பள்ளி மாணவர்களை நாம் முழுமையான எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்குவதில்லை என்றும் அறிந்துகொள்ள முடியும். அந்தந்த வகுப்புகளுக்கான பாடங்களை அவர்கள் எப்போது படிப்பார்கள்? மேற்சொன்ன சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று மாத காலத் தனி  வகுப்பு என்பது  மாணவர்களுக்கு மிக முக்கியமான காலம். பள்ளி திறந்து முதல் மூன்று மாதங்களில்தான்  முதல் பருவப் பாடங்கள் நடத்தி முடிக்கப்படும். முதல் பருவத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களை இந்த மாணவர்கள் எப்போது கற்றுக்கொள்வார்கள்? இப்படியாக ஒரு வகுப்பில் படிக்கவேண்டிய பாடங்களைத் தவறவிட்டு, தவறவிட்டு பத்தாம் வகுப்பு வரும்போது வெறும் 35 மதிப்பெண்களுக்கு அவர்களைத் தயார் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. இதில் எங்கே நாம் அனைவருக்குமான கல்வியை, சமமான கல்வி வாய்ப்புகளை உருவாக்குகிறோம்? ‘ஒரு மாணவனுக்கு வெறும் எழுத்துக் கூட்டிப் படிக்க, எழுத மட்டுமே கற்றுத் தருவதற்கு, எதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்கவேண்டும் என்றுதான் இப்போதெல்லாம் தற்காலிக ஆசிரியர்களைக் குறைந்த ஊதியத்திற்கு அரசு நியமனம் செய்துகொள்கிறதோ?!’ என்ற எண்ணம் தோன்றுகிறது. நுண்திறன்களைக் கற்றுக்கொள்ள நம் மாணவர்களை எப்படித் தயார்படுத்துவது? ஆகவேதான் தொழிற்கல்வி பற்றியும் திறன் மேம்பாடு என்று சொல்லி, வேலைக்காக ஆட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளாக மட்டுமே பள்ளிகளைத் தயார்படுத்தி வருகிறது அரசு. நவீன அறிவியலையும் கணக்கு உள்ளிட்ட பாடங்களையும் படித்து ஆராய்ச்சி மாணவர்கள் உருவாகாமல் போவதற்கு தொடக்க வகுப்புகளில் சரியாகக் கற்றுத்தராதது மிக முக்கியமான காரணம். கல்வி அலுவலர்கள் என்ன செய்கின்றனர்? தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அடிப்படை வாசிப்பை மாணவர்களிடம் உருவாக்கி எழுத்துகளைக் கற்றுக்கொடுக்க வேண்டியதை ஏன் கல்வி அலுவலர்கள் கட்டாயப்படுத்துவதில்லை? எண்ணும் எழுத்தும் திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இல்லம் தேடிக் கல்வியும் எட்டாம் வகுப்புவரை செயல்பட்டது. இத்தனை இருந்தும் ஏன் அனைத்துக் குழந்தைகளையும் எழுத்துகளை வாசிக்கவைக்கக்கூடச் செய்ய முடியவில்லை?   தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாறுதலாகி வந்துசேரும் 60% குழந்தைகள் அடிப்படை வாசிப்புத்திறன் இல்லாத நிலையில் இருக்கும் போக்கும் நிலவுகிறதே, அந்தப் பள்ளிகளை அரசு ஏன் கண்டுகொள்வதில்லை? BRT எனப்படும் கல்வி அலுவலர்கள், வருடந்தோறும் பள்ளிகளை ஆய்வு செய்கின்றனரே! ஏன் முழுமையான வாசிப்புத் திறனைக்  கொண்டுவர இயலவில்லை? உளவியல் சிக்கல் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் இது போன்ற மாணவர்களைத் தனியாகப் பிரித்து உட்கார வைக்கும்போது மனதளவில் தாழ்வு மனப்பான்மை உருவாவதைக் கண்கூடாகப் பார்க்கலாம்.  குழந்தைகள் உரிமை, சமத்துவம் எதுவும் இங்கே காக்கப்படுவதில்லை. குழந்தைகளிடம் கற்றல் திறனில் வேறுபாடு இருக்கலாமே தவிர, எழுத்துகளை, அடிப்படை வாசிப்பைக்கூடக் கற்றுத் தராமல், குற்றத்தைக் குழந்தைகள் மீதே போடும் போக்கு வரவேற்கத்தக்கதல்ல. அவர்களை எதற்குமே லாயக்கற்றவர்கள் என்று ஒதுக்கி வைத்து, எட்டாம் வகுப்பு வரை கடைசி பெஞ்ச் மாணவர்களாக மாற்றி, சமூகத்தின் எதிரிகளாகச் சித்தரிக்கும் போக்கைப் பொதுச்சமூகம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும். குழந்தைகள் உரிமைக்கான அமைப்புகள், சிறார்களுக்காக இயங்குவோர் என அனைவரும் இவை பற்றியெல்லாம் சிந்திக்கின்றனரா என்று தெரியவில்லை. குழந்தைகள் உரிமையைத் தட்டிப் பறிக்கும் போக்கு இங்கே நிலவுகிறது. அடித்தட்டு மக்கள், முதல் தலைமுறைக் குழந்தைகள் ஆகியோருக்கு தொடக்கப் பள்ளிகளில் அடிப்படை எழுத்து, வாசிப்பு, கணக்குத் திறன்களைக் கொடுக்காத சூழலில், அவர்களை அவையில் முந்திய இருக்கச் செய்வது எப்படி? சிறார்களின் மன, உளவியலைக் கணிக்கிறோமா, காக்கிறோமா என்று ஆய்வு செய்யுங்கள். தரமான கல்வியை அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் எனில், அதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் இங்குள்ளோருக்கு வேண்டும். அப்போதுதான்  ஐந்தாம் வகுப்பிலேயே சரளமாக எழுதப் படிக்க, அடிப்படைக்  கணக்குகளைச் செய்ய மாணவர்களைத் தயார்படுத்தி அனுப்பவேண்டும் என்ற கருத்து வலுப்பெறும். ஆறாம் வகுப்பிலிருந்து மாணவர்கள் பெரிய பாடப் புத்தகங்களை வாசித்து உள்வாங்கி, தனக்கான வாழ்க்கையை நோக்கி  நகரும் சூழல் உருவாகும். ஆகவே உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் எழுத்துகள் கற்றுத்தரும் வேலையை மட்டும் ஆசிரியர்கள் செய்யாமல், அவரவர் பாடங்களைக் கற்பிக்கும் பணியை உருவாக்க வேண்டும். முக்கியக் காரணமும் உரிய தீர்வும் என்ன? அரசு தொடக்கப்பள்ளிகளைப் பொறுத்தவரை, ஓராசிரியர் மற்றும் ஈராசிரியர் பள்ளிகள் ஏராளமாக இருக்கும் சூழலில், ஐந்து வகுப்புகளையும் ஒரே ஆசிரியர் மட்டுமே கவனித்துக்கொள்ளும் சூழல் இருப்பதால், அவர்களால் ஒரே நேரத்தில் ஐந்து வகுப்புகளுக்கும் எவ்வாறு கற்றல் பணியை மேற்கொள்ள இயலும்? எனவே ஒரு வகுப்புக்கான பாடங்களை எடுக்கும்போது, மற்ற நான்கு வகுப்பு மாணவர்களுக்கும் கற்பித்தல் – கற்றல் நிகழ்வதில்லை. ஐந்தில் ஒரு பங்கு கற்பித்தல் மட்டுமே நிகழ்வதால், இறுதியாக அவர்கள் ஐந்து வகுப்புகளை முடித்து வெளியே வரும்போது ஒன்று அல்லது இரண்டாம் வகுப்புக்கான மாணவர்களின்