எங்கே போகிறது கல்வி..? பகுதி 4
கட்டுரை வடிவம்: உமா மகேஸ்வரி நிறைவுப் பகுதி அடித்தளக் கட்டத்திற்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFFS) என்ற படுபாதகமான கட்டமைப்பின் பின்னணி குறித்து விவாதிக்கிற அகில இந்திய கல்விப் பாதுகாப்புக் கமிட்டியின் மெய்நிகர்க் கூட்டத்தில், பேராசியர் ஹோசிமின் திலகர் அவர்களின் நிகழ்த்திய உரையின் நிறைவுப் பகுதியைப் பார்க்கலாம். அத்தியாயம் : 4 – கல்வியைக் கற்றுத் தரும் முறைமைகள் (Pedagogy): கல்வியைக் கற்றுத் தருவதற்குப் பல்வேறு முறைமைகள் என்பது இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுக்கத் தோன்றியிருக்கின்றன. வரலாற்று ரீதியிலே கல்வி கற்பிக்கப்படும் முறைமைகள் நிறைய இருக்கின்றன. அதைப்பற்றி இந்த அறிக்கையில் விளக்கமாகப் பல அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்பதை இந்த அறிக்கையை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. கல்வி என்பது செயல்வழிக் கற்றலாக இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை சொல்கிறது. கல்வி என்பது ஒரு குழந்தையை உற்சாகப்படுத்திப் படிக்க வைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழலை ஒரு வகுப்பறையும் ஆசிரியரும் ஏற்படுத்த வேண்டும், ஆசிரியர் மாணவர்களை வரவேற்கக்கூடியவராக இருக்க வேண்டும், வகுப்பறை என்பது செயல்வழிக் கற்றல் இடமாக இருக்க வேண்டும் என்றெல்லாம் இந்த அறிக்கை விளக்கமாகக் கூறுகிறது. இதைப் படிக்கும்போது மிக மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஆகா! மிக அருமையான ஒரு அறிக்கையாக இருக்கிறதே, மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதைவிடச் சிறந்த ஒன்றைச் சொல்லமுடியாதே என்ற எண்ணம் தோன்றும்படி இருக்கிறது. அதுபோன்ற கட்டமைப்பு, கற்பித்தல் முறைகளைப் பின்பற்ற சிறப்பான வழிகளைக் கூறுகிறார்கள். ஆனால் இங்கு அடிப்படையாகக் கவனிக்க வேண்டியது, கற்றுத் தருவதற்கு நூறு அல்ல, ஆயிரம் அல்ல, பல்லாயிரக்கணக்கான முறைகளையும் வழிகளையும் ஆசிரியர்களே நாள்தோறும் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். எப்படிப்பட்ட முறைமைகளையெல்லாம் பின்பற்றினால் மாணவர்கட்கு அறிவைக் கொண்டு சேர்க்க முடியும் என்பதை ஆசிரியர்களே யோசித்து, பல்வேறு விசயங்களைச் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதுதான் அடிப்படையான உண்மை. இந்த அறிக்கையை நாம் வாசித்துப் பார்த்தால் பல்வேறு அம்சங்களை நாம் பார்க்க முடியும். ஆனால் அவர்கள் சொல்வதைத்தான் நாடு முழுவதும் ஒவ்வொரு பள்ளியிலும் பின்பற்ற வேண்டும் என்று இவர்கள் கூறுவதைத்தான் நாம் கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியா போன்ற ஒரு பரந்து விரிந்த நாட்டில், இத்தனை மாநிலங்கள் இத்தனை மொழிகள் பேசக்கூடிய நாட்டில், இத்தனைக் கலாச்சாரப் பின்னணிகள் உள்ள நாட்டில், இவர்கள் சொல்லக்கூடிய இந்தக் கல்வி முறைமைகளைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டுமென்று எப்படிக் கூற முடியும் என்பதுதான் இங்கே அடிப்படைக் கேள்வியாக இருக்கிறது. அந்தக் கேள்விக்கும் அவர்கள் ஓரிடத்தில் விடை வைத்திருக்கிறார்கள். என்ன வைத்திருக்கிறார்கள் என்றால், ஆசிரியர்களுக்கும் சுதந்திரம் இருக்கிறது, ஆசிரியர்களும் அவர்களாகவே யோசித்து அவர்களாகவே பல விசயங்களைச் செய்ய வேண்டும் என்றுகூடச் சில இடங்களில் குறிப்பிடுவதை நாம் பார்க்க முடியும். ஆசிரியர்கள் பாடல்களின் மூலமாக, விளையாட்டின் மூலமாக, செயல்வழிக் கற்றலின் மூலமாக என்று பல்வேறு முயற்சிகள் வழியாக மாணவர்களுக்கு அறிவைக் கொண்டுபோய்ப் சேர்க்கலாம் என்று பலப்பல யோசனைகளை முன் வைத்திருக்கிறார்கள். இதை ஆசிரியர்களே தீர்மானித்துக்கொள்ளலாம் என்றெல்லாம்கூடச் சொல்கிறார்கள். ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டும் என்றால், இந்த ஆசிரியர்கள் போதனா முறையில் என்ன சொல்லித்தர வேண்டும்? மாணவர்களிடம் எப்படிப்பட்ட திறனைக் (Competency) கொண்டுவர வேண்டும்? கல்வி விளைவுகள் (learning outcomes) எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று முன்கூட்டியே ஆசிரியர்கள் யோசித்து, தங்கள் திட்டங்களில் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றார்கள். ஆசிரியர்கள் பாடத்தின் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இங்கே ஆசிரியர்கள் வழிகாட்டி சொல்லித் தர வேண்டிய பாடங்கள், மாணவர்களே செய்து பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டிய பாடங்கள் என்றெல்லாம் பல வகையாகப் பிரித்துப் பிரித்துச் சொல்லியிருக்கின்றார்கள். இதெல்லாம் படிப்பதற்கு நன்றாகவும் பாராட்டத்தக்கதாகவும்தான் இருக்கின்றன என்பது உண்மை. மற்றொரு இடத்தில் அவர்கள் சொல்வதுபோன்று ஐந்து கட்டங்களாகப் பாடங்கள் சொல்லித்தர வேண்டும். அது அறிமுகம், ஒரு கோட்பாட்டை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும், நடைமுறையில் தொடர்புபடுத்துவது, அதை எங்கே கொண்டுசென்று (Application) பயன்படுத்துவது, அதற்கு வெவ்வேறு அம்சங்களில் பொருத்திப் பார்ப்பது, அதை விரிவாக்குவது என்று பல வகைகளிலும் விளக்கங்களை முன் வைத்துள்ளனர். அதேபோல, ஆசிரியர்கள் போதிப்பதில், தான் செய்து காட்டுவதும், ஆசிரியர்களுடன் சேர்ந்து செய்வதும், இறுதியில் மாணவரையே செய்ய வைப்பதும் என்ற வகையில் – I do it , We do it , You do it and you do it alone – பல்வேறு கட்டங்களில் அறிவைக் கொண்டுபோய்ச் சேர்ப்பதெல்லாம் குறித்து அறிக்கையில் சுட்டிக் காட்டியிருக்கின்றனர் என்பதெல்லாம் உண்மைதான். ஆக, மாணவர்களுக்குக் கற்கும் பொறுப்பு எப்படியெல்லாம் இருக்கிறது என்று கூறுகின்றனர். ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுடன் உகந்த உறவை வைத்துக்கொள்வதோடு பெற்றோர்களோடும் நல்ல உறவை வளர்த்துக்கொண்டு மாணவர் – பெற்றோர் இருவருடனும் இயைந்து பழகி அவர்கள் மனத்தில் இடம்பெற வேண்டும் என்றும் கூறுகிறார்கள். அதேபோல எண்களை அறிவித்தல், எழுத்துகளை அறிவித்தல் குறித்து நாம் அறிவோம். அதில் எழுத்தை அறிவித்தல் என்பதில் Oral language Development, Word Recognition, Reading and writing என்ற நான்கு கட்டங்களாகச் செய்ய வேண்டும் என்கிறார்கள். அதேபோல எண்களைக் கற்பிப்பதில் வாய்மொழி வழியாகக் கணக்கைக் கற்றுத் தருவது (Oral Math talk), பல்வேறு செயல்வழிக் கற்றல் வழியாகக் கணக்கைக் கொண்டு சேர்ப்பது, ஒரு குழந்தைக்கு எளிதாகப் புரியக்கூடிய கணக்கிலிருந்து படிப்படியாக சிக்கலான கணக்கு விஷயங்களை எப்படிக் கொண்டு சேர்ப்பது, விளையாட்டு வழியாகக் கணக்கை எடுத்துச் செல்வது (Math game) என அனைத்து வழிகளையும்பற்றிக் கூறியிருப்பது உண்மைதான். இங்கு நமக்கு அடிப்படையான சில கேள்விகள் தோன்றுகின்றன. எண்ணை அறிவித்தலும் எழுத்தை அறிவித்தலும் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்புப் படிக்கும் குழந்தைகளுக்கு மிகமிக அடிப்படையான விஷயங்கள் என்று அறிவோம். Basic Building Block என்று சொல்வார்கள். மிக அடிப்படையான விஷயத்தை, மிகத் திறமையாக, தெளிவாக மாணவரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது அடிப்படையான தேவையாக இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் அதற்கு எத்தனை விதமான கற்பித்தல் முறைகள் இருக்கின்றனவோ அவற்றில் எதை வேண்டுமானாலும் பின்பற்றலாம் என்று பலவாறு கூறியுள்ளதும் சரிதான். ஆனால் என்னுடைய கேள்வி, அப்படிப்பட்ட சூழலைத்தான் பள்ளிகளிலே மத்திய, மாநில அரசாங்கங்கள் ஏற்படுத்தித் தந்து இருக்கின்றனவா? எத்தனைப் பள்ளிகளிலே மாணவர்களுடன் உரையாடக்கூடிய நிலையில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்?போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்களே இல்லை, போதுமான எண்ணிக்கையில் பள்ளிகளும் இல்லை. ஒருவேளை அரசுப் பள்ளிகள்தான் இப்படி இருக்கின்றன என்று சொன்னால், தனியார் பள்ளிகள் கட்டணக்கொள்ளை நடத்தக்கூடிய இடங்களாக இருக்கின்றன. இப்படிப்பட்ட அடிப்படைப் பிரச்சனைகளுக்குக்கூடத் தீர்வு கொடுக்காமல், இப்படிப்பட்ட ஒரு அறிக்கையில் நேர்த்தியாக விஷயங்களை விளக்கியிருக்கிறார்களே ஒழிய, இதையெல்லாம் எங்கே போய் இவர்கள் அமல்படுத்தப்போகிறார்கள் என்ற கேள்விதான் நமக்குள் எழுகிறது. ஆசிரியர்களும் மாணவர்களும் வகுப்பறையில் உரையாட முடியாத வகையில் ஆசிரியர்களுக்குப் பணிச்சுமை கொடுத்துள்ளனர். தனியார் பள்ளிகளில் இன்னும் கூடுதலாக ஆசிரியர்களுக்குப் பணிச்சுமையைக் கொடுத்து, எதிர்த்துக் கேள்விகூடக் கேட்க முடியாத நிலையில் வைத்திருக்கின்றார்கள். இதற்கான தீர்வை NEP 2020 எங்கே முன்வைத்துள்ளது? அல்லது NCFFSதான் இதற்கான தீர்வை எங்கே முன்வைத்துள்ளது? இவற்றையெல்லாம் தாண்டி, இன்று ஆசிரியர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளார்கள்? ஒரு பள்ளிக்கு நாம் சென்றோமானால் அவர்கள் உட்காருவதற்கு மேசை, நாற்காலிகூடக் கிடையாது. உட்காரக் கூடாது, உட்கார முடியாது. அவர்களுக்கு என்ன பணிக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து உட்கார வேண்டும். நல்ல விஷயம்தான். மூன்று வயது, நான்கு வயது, ஐந்து வயது வரை மாணவர்களோடு சேர்ந்து ஆசிரியர் இருப்பது மிக மிக நன்மையான விஷயம், சரியான விஷயம்தான். ஆனால் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ஆகிய வகுப்புகளுக்கு வந்ததற்குப் பிறகு ஆசிரியர் எண்ணையும் எழுத்தையும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும்போது, அங்கு கரும்பலகை இருக்க வேண்டும், கரும்பலகையில் எழுதிக் கற்பிக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. அதற்கு இவர்கள் என்ன தீர்வு வழங்குகின்றார்கள் என்று பார்த்தால், அந்த வகுப்பறையில் கீழே உயரம் குறைந்த இடத்திலே மாணவர்கள் எழுதிப் பார்க்கும் வகையில், கரும்பலகையை அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். நாம் காலம் காலமாகப் பார்த்து வருவது என்னவென்றால் ஆசிரியர்தான் எண்களையும் எழுத்துக்களையும் அறிவிப்பவராக இருப்பார். ஆசிரியர்தான் பயிற்சியளிப்பவராக இருப்பார். அப்படி இருக்கும்போது, கரும்பலகை என்பது மாணவர் உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதும் அங்கே மாணவர்களுடன் இணைந்து அமர்ந்து கொண்டு கற்றுத்தர வேண்டும் என்று சொல்வதும் ஆசிரியர்களை எந்தவொரு நிலையில் கொண்டு சென்று வைத்துவிட்டது என்பதைப் பார்க்க வேண்டும். ஆசிரியர் என்பவர் சொல்லித்தரக்கூடிய, கற்றுத்தரக்கூடியவராக இருக்கும் நிலையை மாணவர்கள் பார்க்க வேண்டும். இவர்கள் கூட குரு குரு என்று சொல்கிறார்களே தவிர, அங்கே ஆசிரியரை எண்ணையும் எழுத்தையும் கற்றுத்தரக்கூடியவராக இவர்கள் வைக்கவில்லை. இப்போது நடைமுறையிலிருக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் வாயிலாக இவ்வளவு சிரத்தை எடுத்து எண்ணையும் எழுத்தையும் அறிமுகம் செய்தால்கூட, இங்கு ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரியவில்லை. அவர்களால் கணக்குப்போட முடியவில்லை என்ற சூழலைத்தான் உருவாக்கி வைத்துள்ளனர். அப்படி இருக்கும்போது இந்த எண்ணும் எழுத்தும் திட்டம் மிகப்பெரிய தோல்வியில்தான் முடிந்துள்ளது. அதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலாவது காரணம், கற்றுத் தரக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியரை மாணவருக்கு நண்பர்களாக ஆக்குவோம் என்ற பெயரிலே ஆசிரியர் நிலையை வைத்தது. மற்றொரு காரணம், முதலாம் வகுப்பிலிருந்தே தேர்ச்சி – தோல்வி என்ற நிலையே இல்லை. இது வந்தபிறகு முதலாம் வகுப்பில் சேர்ந்தவுடன் எட்டாம் வகுப்பு வரை தொடர்ச்சியான தேர்ச்சிதான் என்ற நிலை வந்தபிறகு பள்ளியில் ஒரு சிரத்தையான சூழல் இல்லை. ஆகவேதான் இன்றைய நிலையில் எண்ணையும் எழுத்தையும் அறிவித்தல் என்பது தோல்வியில் முடிந்துள்ளது. இது கடந்த பதினைந்து / இருபது ஆண்டுகளுக்குள்ளாக நடந்துள்ளதேயன்றி அதற்கு முன்பாக இந்நிலை தமிழ்நாட்டில் இல்லை. ஆக, Pedagogy என்று இவர்கள் சொல்லும் கற்றுத்தரும் முறைமைகள் என்பதும் ஒரு பெரிய தோல்வியில்தான் போய் முடிந்திருக்கிறது. மாணவர்களோடு உட்கார்ந்துகொண்டுதான் ஆசிரியர்கள் சொல்லித் தர வேண்டும் என்ற நிலையும் பாடப் புத்தகங்களே வேண்டாம் என்று அறிவிக்கும் நிலையும் அப்படியே பாடப் புத்தகங்கள் இருந்தாலும் அதற்கான பாடத் திட்டத்தை என்.