நிறைவேறாத ஆசையுடன் தூக்கிலேறிய மாவீரன்

நிறைவேறாத ஆசையுடன் தூக்கிலேறிய மாவீரன்

பகத்சிங் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பகத்சிங் இருந்த அறையில் ஏகப்பட்ட புத்தகங்கள் நிறைந்திருந்தன. இவையெல்லாம் ஜெயதேவ் மூலமாக வந்த புத்தகங்கள். கொஞ்ச நாட்களாகவே அந்தச் சிறையறை ஒரு நூலகம்போல் மாறியிருந்தது. வரவழைக்கப்பட்டப் புத்தகங்களில் ‘வரலாற்றுப் பொருள் முதல்வாதம்’ என்ற நூல் இல்லை. பஞ்சாப் பொது நூலகத்திலிருந்து வரலாற்றுப் பொருள் முதல்வாதம் என்ற நூலைப் பெற்று அனுப்பிவைக்குமாறு ஜெயதேவுக்கு ஒரு கடிதம் எழுதினார் தணியாத அறிவு தாகம் கொண்டிருந்த பகத்சிங். ‘ஒன்றுக்கு மேற்பட்ட வாழ்க்கைகள் வாழ எனக்கு வாய்ப்புத் தரப்பட்டாலும் நான் அந்த ஒவ்வொரு வாழ்க்கையையும் என் தேசத்தின் நலனுக்காகவே அர்ப்பணம் செய்வேன்’ என்று பிரகடனம் செய்த, முதலாம் லாகூர் சதி வழக்கின் நாயகன் கர்த்தார் சிங்கைத் தனது குருவாக ஏற்றுக்கொண்டவர், இரண்டாம் லாகூர் சதி வழக்கின் நாயகன் பகத்சிங். பஞ்சாப் நேஷனல் காலேஜ் என்ற கல்லூரியில் பகத்சிங் படித்துக்கொண்டிருந்தபோது, அக்கல்லூரியில் பணியாற்றிக்கொண்டிருந்த அவருக்கு நெருக்கமான ஆசிரியரான வித்யாலங்கர் என்பவர் மூலம் அரசியலும் ஆன்மீகமும் கலந்த அரவிந்தரைப் போன்ற மனிதரான சச்சின் சன்யால் என்ற புரட்சியாளரிடம் அறிமுகமானார். அவர் வழியாக உலக அரசியல், இந்திய அரசியல், இந்திய அரசியலில் வெள்ளையன் வந்த கதை, பொருளாதாரப் பிரச்சினைகள் எனப் பல விஷயங்களை அறிந்துகொண்டார். இத்தகைய சூழலில் சட்ட மறுப்பு இயக்கம் வந்தபோது, அதில் முழு வேகத்தோடு பகத்சிங் இறங்கினார். கோரக்பூர் மாவட்டத்தில் செளரி சௌரா என்ற கிராம மக்களிடம் கொந்தளிப்பு அதிகரித்திருந்ததால், காவல் நிலையத்தைத் தாக்கி 22 காவல் துறையினரைக் கொளுத்திவிட்டனர் என்ற செய்தியை அறிந்து, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்திவிட்டார் காந்தி. பகத்சிங் போன்ற ஏராளமான இளைஞர்களைத் திசை திருப்பிய வரலாற்றுப் போக்கின் கரு இதுதான். போராட்டம் வாபஸ் பெறப்பெற்றதால் இளைஞர்கள் பலர் தனித்தனியாக இயக்கம் கண்டனர். நவஜவான்பாரத் சபா என்ற இயக்கத்தைத் தோற்றுவித்து, அதன் பொதுச்செயலாளராக பகத்சிங் விளங்கினார். 1921ஆம் ஆண்டில் காந்தியால் ஆரம்பிக்கப்பட்ட சட்ட மறுப்பு இயக்கம் 1922இல் திரும்பப் பெறப்பட்டது. அதிலிருந்து 1928ஆம் ஆண்டு வரை எந்தவிதமான போராட்டமும் இந்தியாவில் நடக்கவில்லை. விடுதலைப் போராட்டம் மந்தமாகவே போய்க்கொண்டிருந்தது. 1928இல் சைமன் என்கிற வெள்ளையன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு இந்தியாவிற்கான அரசியல் அமைப்புச் சட்டத்தை நிர்ணயிப்பதற்காக வந்தது. இந்தக் குழுவில் இந்தியர் யாரும் இடம்பெறவில்லை என்ற செய்தி நாடு முழுவதும் கோபக் கனலை எழுப்பியது. ‘இந்திய நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நீ யார்? இந்த நாட்டில் வியாபாரம் செய்ய வந்த நீ, ஆளத் தொடங்கி விட்டாய். ஆள வந்த உன்னை முற்றிலுமாக அகற்றியே தீருவோம்’ என்று கூறி, ‘சைமனே திரும்பி போ’ என்று முழக்கமிட்டுத் தங்களது கோபத்தை இந்திய இளைஞர்கள் வெளிப்படுத்தினர். அந்த நேரத்தில், சந்திரசேகர ஆசாத்தால் தொடங்கப்பட்ட இந்துஸ்தான் குடியரசுச் சங்கத்தின் செயற்குழு கூடி, அதன் பெயரை ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசுப் படை என்று மாற்றிக்கொண்டது. சங்கம் என்று இருந்ததை, படை என்று மாற்றியதுடன் அதனுள் சோசலிசம் என்பதைப் பொதிந்து வைத்தார்கள். சோசலிசம், உலகத்தில் நம்பத் தகுந்த மிகச்சிறந்த விஞ்ஞான எழுச்சியாக விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில்தான், தமது அமைப்பின் பெயரை இளைஞர்கள் அவ்வாறு மாற்றினார்கள். இந்தப் படை சார்பாக சைமன் கமிஷனை எதிர்த்துப் பகிரங்கமாக ஆர்ப்பாட்டம் செய்வதோடு, கருப்புக் கொடி காட்டவும் முடிவெடுத்து, முடிவின்படி செயல்பட்டனர். தொடர்ந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடினர் பகத்சிங்கும் அவரது தோழர்களும். ‘புரட்சி என்றால் குண்டுகளையும் துப்பாக்கிகளையும் ஆராதனை செய்வதல்ல; அநீதியை அடித்தளமாகக் கொண்டுள்ள இன்றைய சமுதாய அமைப்பினை மாற்றி அமைப்பது என்பதுதான் புரட்சி என்ற சொல்லின் உண்மையான பொருள்; இப்போதுள்ள அரசாங்க அமைப்பு தொடருமேயானால் ஒரு பெரும் போராட்டம் வெடிக்கும். அதில் நாங்கள் முன்வரிசையில் இருப்போம்’ என்று அந்த இளைஞர் கூட்டம் வேலை செய்து வந்தது. ‘கையில் புத்தகம் இல்லாமல் பகத்சிங்கைப் பார்த்ததே கிடையாது’ என்கிறார் அவரது நண்பர் சிவ வர்மா. ஆரம்பக் காலங்களில் விக்டர் ஹியூகோ, டால்ஸ்டாய், பெர்னாட்ஷா, தாஸ்தோவஸ்கி, சார்லஸ் டிக்கன்ஸ் ஆகியோரின் நூல்களை விரும்பிப் படித்தார். கம்யூனிசத்தில் ஆர்வம் ஏற்பட்ட பிறகு, மாக்சிம் கார்க்கி, லெனின் ஆகியோரின் நூல்களைப் படித்தார். இந்தி, ஆங்கிலம்,பஞ்சாபி, உருது ஆகிய மொழிகளில் எழுதவும் பேசவும் பகத்சிங்கிற்குத் தெரியும். உருது மொழியில் உள்ளம் உருகும் கவிதைகளைப் படைத்தார். படிப்பைவிட, தேச விடுதலையும் கம்யூனிசச் சிந்தனைகளும் அவரை முழுமையாக ஆக்கிரமித்தன. தன்னுடைய சீக்கிய மத அடையாளமான தலைப்பாகை, தாடி உள்ளிட்டவற்றை அகற்றி, இந்தியன் என்ற உணர்வைத் தவிர வேறு அடையாளமே இருக்கக் கூடாது என்று உறுதியாக இருந்து, முறுக்கு மீசையும் தலையில் தொப்பியுமாக மாறினார். வாழ்வின் குறுகிய காலத்திற்குள்ளேயே அரசியல், கடவுள்,மதம்,மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, காதல், அழகு, தற்கொலை, நடப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு ஆய்வுப் பொருள்களிலும் அவர் எண்ணற்ற நூல்களை எழுதிக் குவித்தார். பகத்சிங் சிறையில் இருந்தபோது, ‘கனவுலகத்திற்கு அறிமுகம்’, ‘நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?’, ‘சோஷலிசத்தின் கோட்பாடுகள்’, ‘இந்தியாவில் புரட்சி இயக்கத்தின் வரலாறு’, ‘மரணத்தின் வாசலில்’ ஆகிய நூல்களை படைத்தார். இவற்றில் கனவுலகத்திற்கு அறிமுகம், நான் ஏன் நாத்திகனாக இருக்கிறேன்?ஆகிய படைப்புகள் மட்டுமே இப்போது இருக்கின்றன. மற்ற படைப்புகளும் சிறையிலிருந்து ரகசியமாக வெளியே கொண்டுவரப்பட்டாலும் 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது – அரசு அடக்குமுறை எந்திரம் முழு வீச்சில் இருந்த போது – அக்கையெழுத்துப் பிரதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. பேச்சையும் எழுத்தையும் வெற்றிகரமாக உபயோகித்துக்கொண்ட பகத்சிங், விவாதம் செய்வதில் வல்லவர். சோஹன் சிங் ஜோஷ் குருமுகி, உருது ஆகிய மொழிகளில் மாத இதழாக அமிர்தசரஸில் நடத்திய இதழில் பல புனைபெயர்களில் கட்டுரைகள் எழுதினார். ஹிந்தியில் பிரதாப், பிரபா (கான்பூர்), மஹாரதி (டெல்லி), சாந்த் (அலகாபாத்) ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். சீக்கியர்களின் இலக்கியம் முழுவதும் குருமுகி எழுத்து வடிவில் உள்ளது. அதன் உள் கூறுகளில் ஹிந்தி அதிக அளவில் இருந்தாலும் பஞ்சாபியே அதன் பிரதான கூறாகும். எனவே சீக்கியர்கள் குருமுகியில் எழுத்து வடிவத்தில் எழுதப்படும் பஞ்சாபியைத் தங்கள் மொழியாக ஏற்றுக்கொண்டுள்ளனர். பஞ்சாப் ஹிந்தி சாகித்ய சம்மேளனம் 1924இல் ஏற்பாடு செய்திருந்த பஞ்சாப் மொழி மற்றும் எழுத்து வடிவம் பற்றிய கட்டுரைப் போட்டிக்கு பகத்சிங் எழுதிய கட்டுரையில், ‘மொழியை ஒரு மதப் பிரச்சினையாக மாற்றாமல் அதற்கு ஒரு விரிவான தோற்றத்தைத் தர வேண்டும்’ என்கிறார். ‘ஒவ்வொருவரும் தங்கள் மத நம்பிக்கையின் அடிப்படையிலேயே அணுகும் தடைகளை அகற்றி, பஞ்சாபி மொழி மற்றும் எழுத்து வடிவம் தொடர்பாக இலக்கிய விழிப்புணர்வை சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும். பரஸ்பர விவாதங்களின் மூலமே தீர்மானித்திட வேண்டும். இதற்கு மத அடிப்படையை விட்டொழித்து அணுக வேண்டும். அமிர்தசரசிலிருந்து வெளிவரும் பிரேம் போன்ற இதழ்களின் மூலம் மொழியை மேம்படுத்த வேண்டும். பஞ்சாப் பல்கலைக்கழகத்திடமிருந்து பஞ்சாபி மொழிக்கான அங்கீகாரத்தைக் கோர வேண்டும். இதன் மூலமே பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும். இடைஞ்சல்கள் எல்லாம் இவ்வாறு அகற்றப்பட்ட பின்னர், பஞ்சாபி மொழி ஓர் அழகிய, தரமான இலக்கியங்களைப் படைத்திடும் மொழியாக மாறிடும். பஞ்சாபி மொழியும் இந்தியாவின் நல்ல மொழிகளுக்கு இடையில் வைத்து எண்ணப்படக்கூடிய ஒன்றாகத் திகழும்’ எனக் கூறியதன் மூலம், மொழி மீது பகத்சிங் கொண்டிருந்த கருத்து தெள்ளத் தெளிவாக இருக்கிறது எனலாம். அக்கட்டுரையைப் படித்த சாகித்ய சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அதை மிகவும் போற்றிப் பாராட்டினார். அக்கட்டுரைக்கு 50 ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. அந்தக் கட்டுரை, 1933 பிப்ரவரி 28 அன்று ஹிந்தி இதழ் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டது. தலைமறைவு வாழ்க்கையின்போது, பகத்சிங் எப்போதும் புத்தகங்களையும் துப்பாக்கியையும் தன்னுடையே வைத்திருந்தார். நாட்டின் மீது, இலக்கியத்தின் மீது, மொழியின் மீது அளவிடற்கரிய பற்றுக் கொண்டிருந்த பகத்சிங்கின் நிறைவேறாத ஓர் ஆசையும் உண்டு. தூக்கிலிடப்படுவதற்கு முன் அவரது கடைசி ஆசையை அதிகாரிகள் கேட்டபோது, சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக இருந்த பேபே என்ற பெண்ணின் வீட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட உணவைச் சாப்பிட வேண்டும் என்ற தனது கடைசி ஆசையை வெளிப்படுத்தினார். அதிகாரிகளின் விழிகள் வியப்பில் ஆழ்ந்தபோது, அதற்கான விளக்கத்தை பகத்சிங் கொடுத்தார். ஒரு குழந்தையின் மல ஜலங்களை முகம் சுளிக்காமல் தூய்மை செய்பவரை ‘தாய்’ என்கிறோம்! இங்கே இத்தனை பேரின் கழிவுகளை அகற்றி, அந்தப் பணியைச் செய்கிற அவரும் நம் அனைவருக்கும் ‘தாய்’தானே! அதனால்தான் அந்த அன்னையின் கைகளால் கடைசி உணவைச் சாப்பிட விரும்புகிறேன் என்று சொன்னபோது, கேட்டவர் கண்களில் நீர் தழும்பியது! அதன்படி, அந்தப் பெண்ணும் 23ஆம் தேதி உணவு தயாரித்து எடுத்து வந்தார். ஆனால் திடீரென்று முன்னதாகவே தண்டனை நிறைவேற்றப்பட்டதாலும் வெளியிலிருந்து சிறைக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டதாலும் அவரது கடைசி ஆசை நிறைவேறாது போயிற்று. தூக்கிலிடப்படுவதற்குச் சற்று முன்னர் வரை, லெனின் எழுதிய ‘அரசும் புரட்சியும்’ என்ற நூலை வாசித்துக்கொண்டிருந்தார் பகத்சிங். தூக்கிலிடுவதற்கு அதிகாரி அழைத்ததும் அதிகாரியைப் பார்த்து, ‘ஒரே ஒரு அத்தியாயம்தான் இருக்கிறது. எனது கடைசி அத்தியாயம் முடிவதற்குள் அந்த அத்தியாயத்தைப் படித்து முடித்துவிடுகிறேன்’ என்று கூறினார். அவருடன் இருந்த தோழர்கள், ‘இந்த நிலையிலும் படித்துக்கொண்டிருக்கிறாயே?!’ என்று கேட்டபோது, ‘அறியாமையோடு பகத்சிங் இறந்துவிட்டான்’ என்று யாரும் கூறக்கூடாது. அறிவோடுதான் பகத்சிங் இந்த தேச விடுதலைக்காக மரணத்தை ஆலிங்கனம் செய்ய வேண்டும் என்று விரும்புகிறான்’ என்றார். ஏற்றத்தாழ்வு இல்லாத,சாதி, மத பேதம் இல்லாத, எல்லாரும் இந்தியன் என்ற பெருமித முயற்சியோடு, மண்ணிற்காக மகிழ்ச்சியுடன் மடிந்தாரே பகத்சிங்! அவரை நாம் என்றும் நினைத்துப் போற்ற வேண்டும்; அவர் வழி நடக்க வேண்டும். தூக்கு மேடைஏறுவதற்கு முன்பாகச் சிறை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில், ‘இறுதிப் போராட்டம் வெகு விரைவில் நடக்கவிருக்கிறது. அந்தப் போராட்டம் தீர்மான முடிவை ஏற்படுத்தும். ஏகாதிபத்திய, முதலாளித்துவ சக்திகளின் ஆயுட்காலம் எண்ணப்பட்டு வருகிறது. இந்தச் சக்திகளை ஒழித்துக்கட்டும் போராட்டத்தில் நாங்களும் பங்கு கொண்டோம். அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என்றார். இன்று அவரது பிறந்தநாளில் (28.09.1907) அவரது நினைவுகளைப் போற்றுவோம்.

தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

தமிழ்த் தொண்டர் வ.உ.சி.

விடுதலைப் போரின் முன்னத்தி ஏராக விளங்கி, தியாகம் என்ற சொல்லுக்குப் பூரண விளக்கமாக வாழ்ந்திருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் இன்று. அவரது அரசியல் பற்றி நாம் நிறையவே தெரிந்து வைத்திருக்கிறோம். அவரது தமிழ்த் தொண்டு பற்றிய தகவல்களை அவரது பிறந்தநாள் செய்தியாக சுவடு வழியாகத் தருவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். விடுதலைப் போராட்ட வீரராகத் திகழ்ந்த வ. உ. சி.க்கு தமிழ் இலக்கிய, இலக்கணங்களில் ஆழ்ந்த புலமையும் பற்றும் இருந்தது. 1918இல் மணக்குடவர் எழுதிய அறத்துப்பாலுக்குரிய உரையை ஓலைச்சுவடியிலிருந்து முதன்முதலாக அச்சேற்றிய பெருமை இவரையே சாரும். இந்தப் பதிப்பு வெளிவர வ. உ. சி. க்குப் பெரிதும் உதவியாக இருந்தவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்கள். பரிமேலழகர் தவறாக உரை எழுதிய சில குறள்களுக்கு, இப்பதிப்பில் புதிய விளக்கங்களைத் தந்துள்ளார். ‘புதல்வரைப் பெறுதல்’ என்ற தலைப்பை ‘மக்கட் பேறு’ என்று மாற்றியவர் வ. உ.சி. கல்வி அறிவு இருபாலருக்கும் பொதுவானது என்ற விளக்கத்தையும் தந்தவரும் அவரே. “திருக்குறள் ஆசிரியரைக் குறை கூறினால்கூடச் சிலருக்குக் கோபம் வருவதில்லை. ஆனால் அதன் உரையாசிரியர்களைக் குறை கூறினால் கோபம் வந்துவிடுகிறது. எதிலும் நன்மையும் தீமையும் உண்டு. எதில் தீமை இருந்தாலும் களைய வேண்டியதுதான்” என்று காரைக்குடியில் ஆற்றிய சொற்பொழிவில் திருக்குறள் குறித்தும் பரிமேலழகர் குறித்தும் கூறியுள்ளார் வ.உ.சி. திருக்குறளை அடுத்து, வ.உ.சி.யைக் கவர்ந்த நூல் தொல்காப்பியம். தொல்காப்பியத்தின் மூன்றாவது பகுதியான பொருள் அதிகாரத்தின் மீது அவருக்கு இருந்த ஈடுபாட்டைத் தொல்காப்பியப் பதிப்பில், ‘பொருளதிகாரத்தை நான் படித்தபோது, அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் இல்லாத நிலப் பாகுபாடு, செடிகள், மலர்கள், மக்களது ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருப்பதைக் கண்டேன்’ என்கிறார். தொல்காப்பிய உரையாசிரியர்களுள் ஒருவரான இளம்பூரணர்மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக, இளம்பூரணர் உரையுடன் தொல்காப்பியத்தின் சில இயல்களைத் தாமே பதிப்பித்து வெளியிட்டார். சில இயல்களைத் தமிழறிஞர் வையாபுரிப் பிள்ளை துணையுடன் வெளியிட்டார். 1935இல் சிவஞானபோதம் நூலுக்கு உரை எழுதி வெளியிட்டார். செய்யுள் இயற்றும் ஆற்றல் கொண்ட வ.உ.சி. திருக்குறள் கருத்துகளை மெய்யறம் என்ற நூலில் செய்யுள் வடிவில் எழுதினார். தமது சுய சரிதையையும் செய்யுள் வடிவிலேயே எழுதியிருக்கிறார். வ.உ.சி. எழுதிய நூல்கள் எனது பாடல் திரட்டுமெய்யறம்மெய்யறிவுசுய சரிதைஎனது அரசியல் பெரும் சொல்வ.உ.சி. கண்ட பாரதி மேலும் தனது வாழ்நாளில் இருமுறை (1917 – 1930) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான இன்னிலை விருத்தி உரையை வெளியிட்டார். திருநெல்வேலியைச் சேர்ந்த சொர்ணம் பிள்ளை என்பவர், இன்னிலை என்று சொல்லி ஒரு ஏட்டை வ. உ. சி. யிடம் கொடுத்து, அதற்காகப் பணமும் பெற்றிருக்கிறார். அந்த நூலை வ. உ. சி. வெளியிட்ட பிறகு மயிலை சீனி வேங்கடசாமி போன்ற தமிழறிஞர்கள் அந்த நூல் போலியானது என்று குறிப்பிட்டனர். இதனால் வ. உ. சி. மிகவும் மனம் வெதும்பினார். சொர்ணம் பிள்ளை இதேபோல வ. வே. சு. அய்யர் உள்ளிட்ட பலரையும் ஏமாற்றியிருக்கிறார். ‘அகமே புறம்’, ‘மனம் போல் வாழ்வு’, ‘வலிமைக்கு மார்க்கம்’, ‘சாந்திக்கு மார்க்கம்’ என தனது மனம் கவர்ந்த எழுத்தாளரான ஜேம்ஸ் ஆலனின் நூல்களை அவர் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ஒருவகையில் வ.உ.சி.யின் வாழ்க்கைக்கு ஜேம்ஸ் ஆலன் பெரிதும் உதவியிருக்கிறார் என்றே கூறலாம். வ.உ.சி. போற்றுதும்!

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

                 நீலகண்ட பிரம்மச்சாரி – 16

காட்சி 16 காலம் : 1921ஆம் வருடம் ஜூலை மாதம்இடம் : சென்னை திருவல்லிக்கேணி கடற்கரை (சந்திப்பு தொடர்கிறது)பாத்திரங்கள் : பாரதியார், நீலகண்டர், சுரேந்திரநாத் ஆர்யா, சிங்காரவேலர் சுரேந்திரநாத் ஆர்யா : தீர்ப்புக்கு அப்பீல் முயற்சிகள் செய்தீர்களா..? நீலகண்டர் : என்வரையில் அன்றும் சரி, இன்றும் சரி, பிரிட்டிஷ்காரன் கோர்ட்டை நான் நம்புவதில்லை.. ஆகவே என்னைத் தவிர எல்லாரும் அப்பீல் செய்தார்கள். நான் எதிர்பார்த்தது போலவே அப்பீல் மனுக்களை உயர்நீதிமன்றம் டிஸ்மிஸ் செய்துவிட்டது. பாரதியார் : உமது செயலால் நீர் தனித்துத் தெரிகிறீர்..! சிங்காரவேலர் : வெள்ளைக்காரன் கோர்ட்டைப் பற்றிய உமது அபிப்பிராயம் சரிதான். அதிலும் இது வெள்ளை அதிகாரியைக் கொன்ற கொலை வழக்கு. அப்பீலை எப்படி ஏற்பார்கள்..? நீலகண்டர் : அதிலும் சங்கர கிருஷ்ணய்யர் உள்ளிட்ட எல்லாரும் இந்தக் கொலைக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றே வாதாடினார்கள். அதிலும் மணியாச்சி சம்பவத்தில் வாஞ்சியுடன் இருந்ததாக அடையாளம் குறிக்கப்பட்ட சங்கர கிருஷ்ணய்யர், ‘வாஞ்சியுடன் கடிதத் தொடர்பு இருந்ததை வைத்து என்னைக் குற்றத்தில் சேர்த்திருக்கிறீர்கள். ஆனால் வாஞ்சியின் கொலைத் திட்டங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. மணியாச்சியில் அவருடன் நான் இருக்கவில்லை’ என்றும் வாக்குமூலம் கொடுத்தார். ‘என்னுடனும் அவருக்குப் பழக்கமில்லை’ என்று நீதிமன்றத்தில் கூறினார். அவர்களின் நிலையைக் குறித்து நான் இரக்கம் கொண்டேன். தீர்ப்பளித்த நீதிபதிகளில் இந்தியரான சங்கரன் நாயர், வ.உ.சிதம்பரம் பிள்ளைக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியைச் சீர்குலைத்த காரணத்திற்காகவும் தேசபக்தர்களுக்கு கலெக்டர் ஆஷின் மீது கோபம் இருந்ததைக் குறித்திருக்கிறார். ஆனால் வாஞ்சியின் கடிதம் அதை தேசம் தழுவிய பயங்கர இயக்கத்தின் வேலை எனக் குறித்தது. சனாதன விரோதிகள் என்று ஆங்கிலேயரைப் பொதுவாகக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையிலேயே வெள்ளை நீதிபதிகள் இதனைச் சதி என்றும் அதன் சூத்திரதாரி நான் என்றும் குறிப்பிட்டனர். ஆர்யா : சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கொலையுண்ட செய்தி, ஜெயிலில் சொல்லப்பட்டபோது அவர் மகிழ்ந்திருக்கிறார். நெறி சார்ந்த மனிதரான அந்த மகானுக்குக்கூட, இந்தக் கொலை ‘நல்லதோர் செய்தி’யாகப் பட்டிருக்கிறது. பாரதியார் : சரி அன்பர்களே, நேரமாகிவிட்டது. இந்த வாரக் கடைசியில் நான் ஈரோடு செல்லப் போகிறேன். போய்விட்டு வந்து நாம் சந்திக்கலாம். ஆர்யா : பாரதி, சென்ற மாதம் உன்னை யானை தள்ளிவிட்டதிலிருந்தே நீ சீக்கிரம் சோர்வடைந்துவிடுவதாகத் தெரிகிறது. உடம்பைக் கவனமாகப் பார்த்துக்கொள். பாரதியார் : உடம்பு இருக்கட்டும்.. பராசக்தி துணை வருவாள். காலன் என்னிடம் வரப் பயப்படுவான். பாரேன், யானை என்னைத் தள்ளியதோடு நின்றுவிட்டதல்லவா..! ஈரோட்டில்கூட ‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பில்தான் பேசப்போகிறேன். சிங்காரவேலர் : பாரதி, உமது நம்பிக்கையும் உத்வேகமும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகின்றன. நீர் இந்த தேசத்தின் சொத்து. உமது தேக நிலை குறித்து அஜாக்கிரதையாக இருக்கவேண்டாம். பத்திரமாகப் பயணம் செய்யுங்கள். ஆர்யா : பாரதி, நீ கிளம்பு. நிலவு காய்கிறது; நாங்கள் சற்று நேரம் இருந்துவிட்டு வருகிறோம். சிங்காரவேலர் : நானும் பாரதியுடனேயே செல்கிறேன். நீலகண்டரே, எனது வீட்டுக்கு வாருங்கள். (ஆர்யாவைப் பார்த்து) நீர் அவரை அழைத்து வாரும். (பாரதியாரும் சிங்காரவேலரும் விடைபெற்றுச் செல்கின்றனர்) நீலகண்டர் : (ஆர்யாவைப் பார்த்து) ரொம்ப நேரமாய்க் கேட்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நீர் கிறித்தவப் பாதிரி உடையில் வந்ததைப் பார்த்தவுடன் திடுக்கிட்டுப் போனேன். இது பாரதிக்குத் தெரிந்திருப்பதால் அவரை வைத்துக்கொண்டு கேட்பதற்குச் சற்றுத் தயக்கமாக இருந்தது. ஆர்யா : அது பெரிய கதை; சுருங்கச் சொல்கிறேன். சிதம்பரம் பிள்ளைக்கு ஜெயில் தண்டனை கொடுத்ததை எதிர்த்து மூர் மார்க்கெட்டில் பேசியது உமக்குத் தெரியும் அல்லவா..? நீலகண்டர் : ஆமாம். அதனால் உன்னைக் கைது செய்து கொண்டு போனார்கள். ஆர்யா : சிறைச்சாலைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. தற்கொலை செய்துகொள்ளவும் முயன்றேன். ஆனால் பிழைத்துக்கொண்டேன். வெளியே வந்த பிறகு, வைதீகர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் கிறித்தவத்தைத் தழுவினேன்; வெளிநாடு சென்றேன்; திருமணம் ஆனது. என் மனைவி ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்தவள். நீலகண்டர் : வைதீகத்தின் தீமைகளை மதம் மாறி எதிர்க்க முடியாது. மதத்திற்குள்ளேயே இருந்துகொண்டுதான் போராட வேண்டும். ஆர்யா : இதையேதான் பாரதியும் சொன்னார். சரி போகட்டும்.. அடுத்தாற்போல் என்ன செய்யப் போகிறீர்? நீலகண்டர் : இன்னும் ஒன்றும் தோன்றவில்லை. ஆர்யா : சரி, யோசிக்கலாம். சிங்காரவேலரிடம் அழைத்துப் போகிறேன். உமது சிறைவாசம் எப்படி இருந்தது..? நீலகண்டர் : சிறையிலும் நான் கலகக்காரனாகத்தான் இருந்தேன். அரசியல் கைதிகளுக்கான முறையில் நான் நடத்தப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.மற்றவர்களுக்கும் சிறைச் சட்ட உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தேன். அதிகாரிகளுடன் அடிக்கடி மோதல். பல சிறைகளுக்கு மாற்றினார்கள். இறுதியில் பெல்லாரிக்குக் கொண்டு போனார்கள். 1914இல் ஒருமுறை சிறையிலிருந்து தப்பவும் செய்தேன். ஆர்யா : சிறையிலிருந்து தப்பினீரா?! எப்படி நீலகண்டரே..?! நீலகண்டர் : 1914இல் உலகப்போர் மூண்டதல்லவா..? அப்போதுதான் நாங்கள் புரட்சியைத் திட்டமிட்டிருந்தோம். இந்தச் சமயத்தில் சிறையில் இருப்பதா என்று தப்பித்தேன். அங்குள்ள ஆட்களையே தப்பிக்கும் திட்டத்திற்குப் பயன்படுத்திக்கொண்டேன். மூன்றாம் நாள் என்னைப் பிடித்துவிட்டார்கள். (மேடை ஒளிமாற்றத்தில் ஓம்கார் அறை ஒளியில் வருகிறது) சங்கர கிருஷ்ணன் : பாரதியாருடன், அதுதான் நீங்கள் கடைசியாகப் பேசியதா..? ஓம்கார் : அவர் ஈரோடு சென்று வந்த பிறகும் அவரைத் தினமும் சந்தித்து வந்தேன். சிலசமயம் ஆர்யாவும் வருவார். தமது ஈரோடு பிரயாணம் பற்றி, பாரதி ஒரு கட்டுரையும் எழுதினார். அவரது கடைசி நாளில்.. (திரை விழுகிறது )

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

நீலகண்ட பிரம்மச்சாரி – 11

காட்சி 11 காலம் : 1911ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வாஞ்சிநாதன் புதுவை வந்த அடுத்தநாள்இடம் : உடற்பயிற்சிக் களம், பாண்டிச்சேரியில் கரடிக்குப்பம்.பாத்திரங்கள் : நாகசாமி, வாஞ்சிநாதன், வ.வே.சு.அய்யர், கண்ணுப்பிள்ளை மற்றும் சில இளைஞர்கள்.(உடற்பயிற்சிக் களத்தில் சிலம்பப் பயிற்சி நடந்துகொண்டிருக்கிறது.. வ.வே.சு.அய்யர் கவனித்துக்கொண்டிருக்கிறார். மற்றவர்கள் வட்டமாகச் சுற்றிநின்று பார்த்துக்கொண்டிருக்கின்றனர். நாகசாமியும் வாஞ்சிநாதனும் வருகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : வாருங்கள். சிலம்பப் பயிற்சி முடியட்டும். அமர்ந்து பாருங்கள்..(அமர்ந்து கொள்கிறார்கள். மோதல் பயிற்சி உச்சத்தில் வருகிறது. ஒருவரின் சிலம்பம் கையிலிருந்து நழுவிவிடுகிறது. போட்டி முடிகிறது. எல்லாரும் கை தட்டுகிறார்கள்)வ.வே.சு.அய்யர் : (கம்பை நழுவவிட்டவரைப் பார்த்து) கண்ணுப்பிள்ளை, நன்றாகத்தான் மோதினாய்.. இதுவரை உன்னைக் கவனித்து வந்தவன் என்ற முறையில் சொல்கிறேன். நல்ல தேர்ச்சி தெரிகிறது. ஒரு சிறு கவனப் பிசகு. ராகவனுக்குப் போதும்; உன்னை வீழ்த்திவிட்டான். (வென்றவனைப் பார்த்து) ராகவா, லாகவமும் நேரக்கணிப்பும் கவனத்தில் நன்றாக வைத்துக்கொள்கிறாய்.. நல்லது. இன்று புதிய சகோதரர் நம்மிடம் வந்திருக்கிறார். திருநெல்வேலி ஜில்லாவைச் சேர்ந்தவர். பெயர் வாஞ்சிநாதன்.அனைவரும் : வணக்கம் (வாஞ்சிநாதனைப் பார்த்து கும்பிடுகிறார்கள்)வாஞ்சிநாதன் : (நெகிழ்ந்து போய்) வணக்கம். (கும்பிடுகிறார்)வ.வே.சு.அய்யர் : அனைவரும் தர்ம இல்லத்திற்கு வந்து சேருங்கள். அங்கே நமது கூட்டம் நடக்கவிருக்கிறது.(மேடையில் இருள் பரவி, ஒளி வரும்போது தர்ம இல்லத்தில் சபை கூடியிருக்கிறது)வ.வே.சு.அய்யர் : நாகசாமி, நீங்கள் இன்று சபைக்கு அக்கிராசனம் செய்து சபையை நடத்துங்கள்.நாகசாமி : சகோதரர்களே, இந்த பாரத பூமியின் புதல்வர்களாகிய நம்மைக் கீழ்மைப்படுத்துவதற்கான காரியங்களை வெள்ளை அரசாங்கம் தொடர்ந்து செய்து வருவதை நீங்கள் அறிவீர்கள். அதன் உச்சக்கட்டமாக மிலேச்ச அரசன் ஐந்தாம் ஜார்ஜ் முடி சூட்டிக்கொள்கிற வைபவத்தை இந்தியாவிலும் தர்பார் நடத்திக் கொண்டாடப்போவதாகச் செய்தி வந்திருக்கிறது. இந்த தேசத்தின் பெரியவர்கள் வெஞ்சிறையில் வாடிக்கொண்டிருக்கும்போது அந்தப் பரங்கிப் பஞ்சமன் முடிசூட்டிக்கொள்வதைக் கொண்டாடுவார்களாம்.. நாம் பார்த்துக்கொண்டிருக்க வேணுமாம். பொழுதெல்லாம் எங்கள் செல்வங்கொள்ளை கொண்டு போகவோ? – நாங்கள் சாகவோ?அழுதுகொண்டிருப்போமோ? ஆண்பிள்ளைகள் அல்லமோ? – உயிர் வெல்லமோ?நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ? – பன்றிச் சேய்களோ? என்று சுப்பிரமணிய பாரதியார் பாடிய பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளை செக்கடியில் நொந்துகொண்டிருக்கிறார். நாம் இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாம் ஏன் கைகட்டிக்கொண்டு சும்மா இருக்கிறோம் என்று பிரான்ஸ் தேசத்தில் இருக்கும் பெரியவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். அதைப்பற்றியெல்லாம் மேற்கொண்டு அய்யர் பேசுவார். வ.வே.சு.அய்யர் : ஸ்ரீமான் பிள்ளை சிறையில் வாடுவதைப்பற்றி கல்லும் கரையும்வண்ணம் பாரதியார் பாடிவைத்தார். மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி – இருகண்ணற்ற சேய்போற் கலங்குவதுங் காண்கிலையோ? என்று பாரதியார் பாடியிருப்பதை நினைவுகொள்ளுங்கள்.பிரான்ஸ் நாட்டில் இருக்கிற நமது தலைவர்கள் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஜார்ஜ் முடிசூட்டு விழா நாளில் நாம் நம் எதிர்ப்பைக் காட்டும் விதமாக, அவன் இந்த நாட்டில் கால் வைக்கும் வேளையில் நாடெங்கிலும் உள்ள பரங்கி அதிகாரிகள் கொல்லப்படுவார்கள். அதற்கு வேண்டிய ஆயத்தங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன.பரங்கியரைக் கொல்வது பாவம் அன்று. இது போன்று ஒரு திட்டத்தை இங்கிலாந்தில் நானும் சாவர்க்கரும் வெற்றியாக்கினோம். சாவர்க்கர் இப்போது பம்பாய் தாணா சிறையில் இருக்கிறார். அவர் சொல்லியிருப்பதை நினைவுபடுத்துகிறேன். ‘தனிநபர் படுகொலை அந்நிய அதிகாரிகளையும் நிர்வாகத்தையும் நிலைகுலையச் செய்யவும் மக்களை எழுச்சிகொள்ளவும் செய்யும். புரட்சியின் தொடக்கமாகத் தனிநபர் கொலைகள் இருக்கும்’ – என்று சாவர்க்கர் கூறியிருக்கிறார். நம் தமிழ்நாட்டிலும் நமது இயக்கத்தில் நாம் 3000 உறுப்பினர்கள் இருக்கிறோம். நமது இலக்கு, திருநெல்வேலி கலெக்டர் ஆஷ்தான். தூத்துக்கடி சுதேசிக் கப்பல் கம்பெனி மூடிப்போவதற்குக் காரணமாக இருந்த இன வெறியன். நமது சங்கத்தின் உறுப்பினரும் மகத்தான தேசத் தொண்டருமாகிய ஸ்ரீமான் சிதம்பரம் பிள்ளையின் துயரங்களுக்கும் இவனே காரணகர்த்தா.இவனைக் கொல்ல வேண்டும். கொன்றுவிட்டு, தன்னையும் மாய்த்துக்கொண்டு இயக்கத்தின் இரகசியத்தைக் காக்கும் தியாகமும் துணிச்சலும் கொண்டவரே இந்தப் பணியைச் செய்ய வல்லவர். நம்மில் அதைச் செய்யப்போகிற வீரர் யார்..? உடனே சொல்ல வேண்டியதில்லை. யோசித்துச் சொல்லுங்கள். இந்தத் தியாக வேள்வியில் தம்மையும் ஆகுதியாக்கி பாரத மாதாவின் பாதங்களில் வெற்றிக் காணிக்கை செய்யும் பாக்கியம் பெறப் போகிறவர் யார்..?(வாஞ்சிநாதன் குறுக்கிட்டு ஏதோ சொல்ல முயல, வ.வே.சு. அய்யர் கையமர்த்தி) யாரும் இப்போது எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நன்றாக யோசித்து மனத்தையும் சிந்தையையும் ஒருமுகப்படுத்தி அடுத்த கூட்டத்தில் தர்ம இல்லத்தில் கூடி முடிவு செய்யலாம். இப்போது இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்வோம்.(உறுதிமொழியை நாகசாமி சொல்ல, அனைவரும் உறுதி ஏற்கிறார்கள்)(வாஞ்சிநாதனைப் பார்த்து) தம்பி, நீர் சில நாட்கள் நாகசாமி இல்லத்தில் தங்கியிருங்கள். கண்ணுப்பிள்ளை, நீ வாஞ்சியுடன் தங்கிக்கொண்டு அவருக்குத் துணையாக இருக்க வேண்டும். நான் தினமும் காலையில் வருவேன். மாலையில் இந்த உடற்பயிற்சிக் கழகத்தில் சந்திக்கலாம். கூட்டம் முடிந்தது. வாஞ்சிநாதன் : ஐயா, என் விடுப்பு முடிவதற்குள் நான் செல்ல வேண்டும். நான் எத்தனை நாட்கள் இங்கே இருக்க நேரும்? நீலகண்டர் எப்போது வருவார்..? ஏதேனும் தெரியுமா? வ.வே.சு. அய்யர் : நீர் எத்தனை நாள் விடுப்பில் இருக்கிறீர்? வாஞ்சி நாதன் : ஒரு மாதம் ஐயா.. வ.வே.சு. அய்யர் : ஒரு வாரம் இருந்து பாருங்கள். அடுத்த கிழமைக்குள் நீலகண்டர் வரவில்லையெனில் நீர் செல்லலாம். (மேடையில் ஒளி மங்கி இருளாகிறது. மீண்டும் ஒளி பரவும்போது ஓம்கார் அறையில் ஓம்கார் சுவாமிகளும் சங்கர கிருஷ்ணனும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி, ஒரு சந்தேகம். பல சமயங்களில் கேட்க நினைத்தேன். இப்போது அதைக் கேட்காமல் இருக்க முடியாது. கேட்கலாமா..? ஓம்கார் சுவாமிகள் : கேளுங்கள் தம்பி.. சங்கர கிருஷ்ணன் : நாகசாமி பேசும்போது இங்கிலாந்து அரசனைப் ‘பஞ்சமன்‘ என்று குறிப்பிட்டார் அல்லவா..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம்.. சங்கர கிருஷ்ணன் : பஞ்சமன் என்றால் நான்கு வருணத்திற்கும் கீழாக ஒடுக்கி வைக்கப்பட்டவர்கள் என்றுதானே பொருள்..? ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி. சங்கர கிருஷ்ணன் : அப்படியானால் இந்தப் புரட்சியாளர்கள் என்று சொல்லிக்கொண்டவர்களிடம் சாதி பேதம் இருக்கத்தானே செய்தது..? சாதியின் பெயரால் சக மனிதனை இழிவாகப் பார்க்கும் பார்வையை இவர்கள் விட்டுவிடவில்லையே..? ஓம்கார் சுவாமிகள் : கேள்விகள் முடிந்தனவா தம்பி..? சங்கர கிருஷ்ணன் : இன்னும் இருக்கின்றன சுவாமிஜி. ‘இந்தப் புரட்சியாளர்கள் அனைவரும் மேல்தட்டு சாதியினராகிய பிராமணர்கள் மற்றும் பிள்ளைமார் என்ற வேளாளர்களாக இருக்கிறார்களே’ என்ற உறுத்தல் எனக்கு இருந்து வந்தது.இப்போது புதுச்சேரிக்காரரான நாகசாமி ஐயர், இங்கிலாந்து அரசனைச் சாதியில் கீழானவன் என்ற பொருளில் அழைக்கிறார் என்பதால் இவர்களிடம் சனாதனம் ஒட்டிக்கொண்டிருந்தது என்பது தெரிகிறது. சாதி இழிவைப் பிறர்மீது சுமத்திக்கொண்டு இவர்கள் புரட்சி பேசியது எப்படி..? ஓம்கார் சுவாமிகள் : நீண்ட கேள்விகள்.. இன்னும் ஒரு கேள்வியும் இருக்க வேண்டும். நானும் பிராமணன் என்பதால், நான் வருணாஸ்ரமத்தை நம்புகிறேனா என்ற கேள்வியும் உங்களிடம் இருக்க வேண்டுமே! வாஞ்சிநாதன் தன்னைச் சுட்டுக்கொண்டபோது, அவர் சட்டைப்பையில் இருந்த கடிதத்திலும் ‘ஜார்ஜ் பஞ்சமன்‘ என்ற சொல் இருந்தது. ‘அழியாத சனாதன தர்மத்தைக் காப்பாற்றுவதற்காக இந்தச் செயலைச் செய்ததாக’ வாஞ்சிநாதன் குறிப்பிட்டிருந்தார். எங்கள் காலத்தில் இந்தத் தமிழ்நாட்டில் கல்வி வசதியைப் பெற்றிருந்தவர்கள் பிராமணர்களும் வசதியான செல்வந்தர்களாக இருந்த வேளாள சாதியினரும்தான். தாங்கள் பெற்ற கல்வியினால் தாங்கள் அடிமைகளாக இருக்கிறோம் என்பதை முதன்முதலில் உணர்ந்தவர்கள் அவர்களாகவே இருந்தார்கள். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லும் இடத்திலும் அவர்களே இருந்தார்கள். அதே நேரத்தில், மதம் மாறிய பிற சாதியினருக்கு கிறித்தவம் கல்வி கொடுத்தது. கல்வி பெற்றதின் நன்றியுணர்ச்சி அவர்களை ஆங்கில அரசுக்கு விசுவாசிகளாகவே மாற்றி வைத்திருந்தது. இந்த முரண்பாடு சனாதனிகளை அவர்களிடம் நெருங்கவிடவில்லை. ‘சனாதானம் என்பது மாறாதது.. அது படைப்பில் தீர்மானம் ஆகிறது’ என்பது இந்து மதம் சார்ந்த நம்பிக்கை. ‘எல்லாம் மாறக்கூடியதே.. பிறப்பின் காரணமாக மேல் கீழ் என்று சட்டம் வைத்துக்கொள்வது மனித இனத்தின் நாகரிகம் அல்ல’ என்ற புரிதல் எங்கள் காலத்தில் வந்துவிடவில்லை. இந்து சனாதனிகள் அரசியல் விடுதலையைப் பேசினார்களே தவிர, சாதி சமயச் சடங்குகளை விட்டுவிடவில்லை. கீதை, பாரதம், இராமாயண மேற்கோள்களில் இருந்தே அவர்களின் வியாக்கியானங்கள் இருந்தன. திலகர், பாலர், சாவர்க்கர், வ.வே.சு.அய்யர் எல்லாருமே சனாதனத்தை முழுமையாக விட்டுவிடவில்லை. ஒரு சிலவற்றை விட்டிருப்பார்கள்.. ஆகவே நாகசாமி பேசிய சொற்களில் சனாதனம் தொனித்ததில் வியப்பு இல்லை. பாரதியார் மற்றும் சிதம்பரம் பிள்ளை போன்றவர்கள் மட்டுமே சாதி மறுப்பைப் பேசியும் செயலில் காட்டியும் வந்தார்கள். அதற்காக அவர்கள் தங்கள் சாதிக்காரர்களால் ஒதுக்கியும் வைக்கப்பட்டார்கள். பாரதி, தன் மகள் கல்யாணத்தில் கலகம் செய்து விடுவாரோ என்று வைதிகம் பயந்தது. நான் பாரதியைப்போல சாதிச் சடங்குகளுக்கு எதிரானவனாகவே இருந்தேன். பாரதி சிதைக்குத் தீ மூட்டும் பாக்கியத்தை எனக்குத் தருவதற்கு முன்வந்தார்கள். சாதிச் சடங்குகள் செய்வதில் எனக்கு நம்பிக்கை இல்லாதபடியினால் நான் அதைச் செய்ய மறுத்துவிட்டேன். சுதேசி இயக்கத்தை எல்லா சாதியினரும் நம்பினார்கள். அந்தத் தலைவர்களை, அவர்களின் செயல்பாடுகளை ஒரு கட்டம் வரை ஆதரிக்கவும் செய்தார்கள். காந்தியடிகளும் கம்யூனிஸ்ட்களும் தேச அரசியலில் வரும்வரை, சாதி என்ற தீமையைப் போக்க வேண்டும் என்பதில் தேசிய விடுதலை இயக்கத்தில் இருந்தவர்கள் கவனம் செலுத்தவில்லை. ஆனால் நாளடைவில் எங்களில் பலர் சனாதனத்தை உதறினோம். அதை நிரூபிக்க எங்களுக்குச் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. அந்தத் தலைமைப் பாத்திரம் காந்தி யுகத்திற்குப் போய்விட்டது. ஆனால் உடல், பொருள், ஆவி அத்தனையும் தேச விடுதலைக்கு அர்ப்பணித்ததில் எங்களின் பாத்திரத்தில் எந்தக் கறையும் களங்கமும் சொல்ல முடியாது. இந்த விளக்கத்தை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்று தெரியவில்லை. சங்கர கிருஷ்ணன் : உங்கள் நீண்ட விளக்கத்தைச் சுருக்கினால், திலகர் வழியில் வந்த பலாத்காரப் புரட்சியாளர்கள் அனைவரும் சனாதனிகளே என்ற விடைதான் வருகிறது சுவாமிஜி. (திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 6

நீலகண்ட பிரம்மச்சாரி – 6

காட்சி 6 காலம் : 1908ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒருநாள்இடம் : தூத்துக்குடியில் வ.உ.சி.யின் வீடுபாத்திரங்கள் : வ.உ.சி., நீலகண்டர், பத்மநாப அய்யங்கார் மற்றும் ஓட்டப்பிடாரம் மாடசாமி(வ.உ.சி.யும் பத்மநாப அய்யங்காரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நீலகண்டர் கேட்டுக்கொண்டிருக்கிறார்) பத்மநாப அய்யங்கார் : சூரத் காங்கிரஸ் நல்லபடியா முடிஞ்சதோல்லியோ.. தூத்துக்குடியில் புதிய கட்சி வேலையும் பிரமாதமா நடந்துண்டிருக்கு. நீலகண்டர் : இல்லையா பின்னே.. திலகர் கட்சிக்குத் தமிழ்நாட்டில் பிள்ளைவாள்தான தலைவர்?! அப்புறம் தூத்துக்குடியில் உற்சாகத்திற்குக் கேக்கணுமா என்ன? பத்மநாப அய்யங்கார் : ஆஹா! பிள்ளைவாள்.. இவர் யார்..? இந்தப் போடு போடுறாரே! வ.உ.சி. : அய்யங்கார்.. இவர் பெயர் நீலகண்டன். நம்ம வேலைக்கு உதவி செய்ய பாரதியார் அனுப்பி வச்சிருக்கார். தீவிர தேச பக்தர். பத்மநாப அய்யங்கார் : பேஷ்.. பேஷ்..! (இளைஞர் ஒருவர் கும்பிட்டுக்கொண்டே வருகிறார். கண்களில் பதட்டம் தெரிகிறது) வ.உ.சி. : வா, மாடசாமி.. என்ன ஆச்சு? ஏன் பதட்டமா வர்ற..? மாடசாமி : வணக்கம் வக்கீலய்யா.. வணக்கம் சாமி.. நேத்து மில் தொழிலாளர் கூட்டம் நடந்துச்சுல்லங்க ஐயா.. அதுக்கு வந்த தொழிலாளிங்கள எல்லாம் மிரட்டிருக்காங்க. ‘சிதம்பரம் பிள்ளை ராஜ துரோகம் பேசுறவரு.. அவரு கூட்டத்துக்குப் போனா வேலை கிடையாது’ன்னு மிரட்டிருக்காங்க ஐயா. பத்மநாப அய்யங்கார் : அதுக்கு ஏன் பதட்டம்? இது எதிர்பார்த்ததுதான..?(மௌனமாக இருக்கும் வ.உ.சி.யைப் பார்த்து) பிள்ளைவாள்.. என்ன யோசனை.? வ.உ.சி. : அதிகாரிங்க என்ன மிரட்டுறது..? போராட்டம் தீவிரமாகும்போது, வேலைக்கு வரமாட்டேன்னு தொழிலாளி அதிகாரிகளை மிரட்டுற நாளும் வரும். அந்தச் சூழ்நிலையில், தொழிலாளர்களும் அவங்க குடும்பமும் வயிறு காயாம இருக்க நாம ஏற்பாடு செய்ய வேண்டியிருக்கும். பத்மநாப அய்யங்கார் : அவ்வளவு தூரம் போகுமா..? வ.உ.சி. : அதுக்கும் மேலேயே நடக்கும். இந்தத் தொழிலாளிங்களோட கஷ்டங்களை நாம இப்போ வெளிப்படுத்துறோம். விடிஞ்சு போனா அடைஞ்சு வாராங்க; நேரக் கட்டுப்பாடில்லாத வேலைக்கு ரொம்ப மோசமான கூலி. வார ஓய்வு கிடையாது; விடுப்பு எடுக்க முடியாது. இதெல்லாத்தையும் வாங்கணுமின்னா தொழிலாளிங்க ஒற்றுமையாலும் வேலையை நிறுத்தியும்தான் முடியும். நீலகண்டர் (குறுக்கிட்டு) : பிள்ளைவாள்.. நாம தேச சேவையில் மட்டும் கவனம் செலுத்தலாமே..வ.உ.சி. : (மெல்லச் சிரித்து) தேச சேவைன்னா என்ன..? தேச பக்தின்னா என்ன..?மக்களோட பிரச்சினையைப் பேசுறதும் தீர்க்கிறதும்தான் தேச சேவை. வெறுமன தேசப் படத்த வச்சு பூஜை பண்றதும் பாரத மாதாவுக்கு ஜேன்னு கோஷம் போடுறதும்தான் தேசபக்தின்னு நெனைக்கிறீரா நீலகண்டர்..? இந்தப் பாடம் யாரு சொன்னது? நீலகண்டன் : மன்னிக்கணும்.. நம்மளோட ஆற்றல் வீணாப் போகுதேன்னுதான் கவலை.. எவ்வளவு நாள்தான் வெள்ளைக்காரங்க அக்கிரமத்தைப் பொறுத்துக்கறது? வெள்ளை அதிகாரிகள இன்னமும் ஏன் விட்டு வைக்கணும்..? வ.உ.சி. : என்ன செய்யலாம்? நாம நாலு பேரு சேர்ந்து வெள்ளைக்கார துரைகளைக் கொன்னுட்டா சுதந்திரம் வந்துருமா..? ஒரு துரை போனா இன்னொருத்தன் வருவான். நாம் மக்களைத் திரட்டிப் போராடித்தான் ஜெயிக்கணும். உமக்கு தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால்ஸ் மாகாணத்துல நடந்த சேதி தெரியுமோ..? பத்மநாப அய்யங்கார் : அது ஒரு பாடம்.. விவரமாச் சொல்லுங்க பிள்ளைவாள். வ.உ.சி. : தென்னாப்பிரிக்காவுல வாழுற ஆசியா மக்கள் எல்லாரையும் பதிவு செய்யச் சொல்ற சட்டம்.. அதன்மூலம் ஆசிய மக்களைக் கட்டுப்படுத்தும் சட்டம்.. இதை ஆசிய மக்கள், குறிப்பா நம்ம இந்தியர்கள் எதிர்த்து ரெண்டு வருசமா போராடினாங்க. அதிலேயும் தமிழர்கள்தான் முன்னால நின்னாங்க. இப்போ போன மாசம்தான் தென்னாப்பிரிக்க வெள்ளை அரசு போராட்டத்துக்குப் பணிஞ்சு, ஒரு சமாதான பேரத்திற்கு வந்திருக்கிறது. இந்த வெற்றி அந்த மக்களை இன்னும் உற்சாகப்படுத்தும். இன்னும் ஒன்னா இணைக்கும். இந்த உலகத்துல அடிமைத்தனம் எந்த வடிவத்தில் இருந்தாலும் மக்களைத் திரட்டித்தான் எதிர்த்துப் போராடணும். பத்மநாப அய்யங்கார் : இந்த வேலையைச் செய்ததும் நம்ம பிள்ளைவாள்போல இளம் வக்கீல் ஒருத்தர்தான். அவரு பேரு மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. வ.உ.சி. : சரி, இன்னைக்கு சாயுங்காலம் கடற்கரையில் கோரல் மில் தொழிலாளிகள் கூட்டத்தைக் கூட்டியிருக்கேன்.. எல்லாரும் வந்துருங்க. (நீலகண்டர் மாடசாமியின் தோள்களில் கை போட்டுக்கொண்டு வெளியில் வருகிறார்) நீலகண்டர் : என்ன மாடசாமி.. பிள்ளைவாள் பேச்சுல அப்படி பிரமிச்சுப் போயிட்டீர் போல.. இப்படிக் கூடறதும் பேசுறதும் எத்தனை நாளைக்கு..? ஒரே நாள்ல நாடு முழுவதும் இருக்கிற வெள்ளைக்காரங்கள கொன்னு போடணும்.. யுத்தம் பண்ணணும். மாடசாமி.. வாய் யுத்தமில்ல. ஆய்தம் தாங்கி, துப்பாக்கி ஏந்தி யுத்தம் பண்ணணும்.. மாடசாமி : இதெல்லாம் நடக்குமா..? ஆயுதம் வாங்கணுமே..! பணம் வேணுமே..! பெரிய ஆட்கள் துணை வேணுமே..! அப்புறம், துப்பாக்கி சுடத் தெரியணுமே..! நீலகண்டன் : எல்லாம் நடக்கும் மாடசாமி.. பரோடா மகராஜா போன்ற சுதேசி ராஜாக்களெல்லாம் சேர்ந்து ஒரு திட்டம் போட்டுருக்காங்க.. விவரமாச் சொல்றேன் வாரும்.. (ஒளி மங்கி மேடை இருள்கிறது.. ஒளி விரியும்போது ஓம்கார் சுவாமிகளின் அறையாக இருக்கிறது) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இந்த மாடசாமி பெரிய சாகசக்காரர் என்கிறார்களே.. ஓம்கார் சுவாமிகள் : ஆமாம், ரொம்பக் கெட்டிக்காரர், தீரர். ஓட்டப்பிடாரம் இவரது ஊர். சிதம்பரம் பிள்ளையோட தீவிர விசுவாசி. ஆஷ் கொலை வழக்கில் இவர் பெயர் அடிபட்டாலும் கடைசிவரை இவர் பிடிபடவே இல்லை. இவரை என் கட்சிக்குக் கொண்டுவர எத்தனை பேசியிருப்பேன்..? (சிறிய சிந்தனைக்குப் பிறகு)ஆஷ் கொலைக்குப் பின் அவர் தலை மறைவானதால் அவரது சொத்துக்களை அரசு பறிமுதல் செய்துவிட்டது. அவரது குடும்பம் நிராதரவானது. பாவம்.. இப்படி எத்தனைப் பேரின் கண்ணீரில் உருவானது இந்த சுதந்திர தேசம்.. (கண் கலங்குகிறார்) சீடர் : (உள்ளே வந்து) சுவாமி ஆகாரம் தயார் ஆகிவிட்டது. ஓம்கார் சுவாமிகள் : வாருங்கள் சாப்பிடலாம் (திரை விழுகிறது) (நாளை பார்க்கலாம்)

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

நீலகண்ட பிரம்மச்சாரி – 5

காட்சி 5 களமும் காலமும் : அதே களம், அதே காலம் பாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள் மற்றும் சங்கர கிருஷ்ணன் (பூஜை முடித்து வந்த ஓம்கார் சுவாமிகள் தம் இடத்தில் அமர்ந்துகொள்கிறார். கூடவே வந்த சங்கர கிருஷ்ணன், தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே பாயில் அமர்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. இங்கே மாலை ஆறு மணிக்கெல்லாம் நல்லா இருண்டு விடுகிறதே?! ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி, மழைக்காலத்தில் இன்னும் சீக்கிரமாகவே இருண்டுவிடும். சங்கர கிருஷ்ணன் : சுவாமிஜி.. வ.உ.சி.யைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தீர்கள். ஓம்கார் சுவாமிகள் : ஆமாம் தம்பி.. பிள்ளைவாள் திருநெல்வேலியில் கைதாகும் வரை நான் அவருடன் பட்டும் படாமலும்தான் இருந்தேன். பிள்ளைவாளுடன் நான் இருந்த சொற்பக் காலம் மிக வேகமாக ஓடியது. என் பாதை வேறு, பிள்ளையின் பாதை வேறு என்பதை நான் அவரோடு சேர்ந்த கொஞ்சநாளிலேயே தெரிந்துகொண்டேன். சங்கர கிருஷ்ணன் : எப்படி சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : அதைத் தெரிந்துகொள்ள காலத்தில் கொஞ்சம் பின்னால் போக வேண்டும். பாரதி சொன்னாரல்லவா? பாலர் பற்றி.. பாலரை நேரில் சந்தித்தேன். அப்புறம் அவரது செயலாளராக இருந்த குஞ்சு பானர்ஜி என்பவரைச் சந்தித்திருந்தேன். அவர்கள் மூலம் வங்கத்திலும் மராட்டியத்திலும் பஞ்சாபிலும் ரகசிய வேலைகளைச் செய்துவந்த, தீவிர தேசபக்த பலாத்கார இயக்கங்களை அறிந்துகொண்டேன். அவர்கள் என்னைத் தமிழ்நாட்டில் இந்த பலாத்கார இயக்கத்திற்குத் தகுந்த ஆட்களைத் தேர்வு செய்யப் பணித்தார்கள். நான் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன். இந்த விஷயம் பாரதிக்கும் சிதம்பரம் பிள்ளைக்கும் தெரியாது. என் ஆள் சேர்க்கும் பணிக்குப் பிள்ளைவாளோடு போவது பயனளிக்கும் என்றுதான் போனேன். ஆனால் சிதம்பரம் பிள்ளையின் தேசப் பணி வேறு; என் பாதை வேறாக இருந்தது. சங்கர கிருஷ்ணன் : வ. உ. சி.க்கோ பாரதிக்கோ அல்லது திலகருக்கோ பலாத்கார வேலைகளில் நம்பிக்கை கிடையாதா..? ஓம்கார் சுவாமிகள் : இருந்தது என்றுதான் நம்புகிறேன். ஆனால் அதற்குக் காலம் கனியவில்லை என்று அவர்கள் நினைத்தார்கள்.‘நேரடி பலாத்கார வேலைகளைவிட, தேசபக்தியைப் பரப்புவதே உமது பணியாக இருக்கட்டும்‘ என்று, சகோதரி நிவேதிதா தமக்குக் கட்டளை இட்டதாக, பாரதியார் என்னிடம் ஒருமுறை சொன்னார்.அதுபோக, பாரதியும் பிள்ளைவாளும் தமிழ்க் கலையிலும் இலக்கியத்திலும் பழக்கம் உடையவர்கள். பலாத்கார இரகசிய நடவடிக்கைகள், தமிழ் அரசியல் நெறிக்குப் பொருந்தி வரவில்லை என்று அவர்கள் நம்பினார்கள்.(கொஞ்சம் நிறுத்திக்கொள்கிறார்) சங்கர கிருஷ்ணன் : சிதம்பரம் பிள்ளையிடம் எவ்வளவு நாள் இருந்தீர்கள்? ஓம்கார் சுவாமிகள் : மிகக் கொஞ்சமாத்தான். சென்னையிலும் தூத்துக்குடியிலுமாக ஒரு மூனு மாசமிருக்கலாம். ஆனா அவரு கூட இருந்ததனால, பின்னால திருநெல்வேலி ஜில்லாவுல எனக்கு நெறைய தொடர்பு கெடச்சுது. அவர் வக்கீலாக இருந்தார். நிறைய பேருக்கு உதவி செய்துவந்தார். சுதேசிப் பிரசாரம், பஞ்சாலைத் தொழிலாளர் கூட்டங்கள், சுதேசி பண்டகசாலைன்னு நிறைய பணிகளைச் செஞ்சு வந்தார். சுதேசிக் கப்பல் விட்டது பெரிய வேலை. இப்படியொரு யோசனை சிதம்பரம் பிள்ளைக்கு எப்படி வந்திருக்கும் என்பது அந்தக் காலத்தில் எல்லாருக்கும் ஆச்சர்யமாய் இருந்தது தம்பி. அதை எப்படி வெள்ளைக்காரன் பொறுத்துக்கொள்வான்? அதுதான் அவரு மேல வெள்ளைக்கார அதிகாரிகளுக்குப் பகையைக் கொண்டுவந்தது. அப்புறம் அவரு நடத்துன மில் போராட்டம், வெள்ளைக்காரனுக்குப் புயலும் வெள்ளமும் சேர்ந்து தாக்குனது போல ஆச்சுது. பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்காரங்களும் கோரல் மில் டைரக்டர்களும் உடன் பிறந்தவங்க மாதிரிதான். சிதம்பரம் பிள்ளை ரெண்டு பக்கமும் வந்தாரு. வணிகம், அரசியல்-ன்னு இரண்டு பக்கமும் கூர்மையான கத்தியோட சிதம்பரம் பிள்ளையை வெள்ளை நிர்வாகம் பார்த்தது தம்பி. தொழிலாளிங்கன்னு ஒரு சக்தியை முதன்முதலா இந்தத் தமிழ்நாடு அப்போதுதான் கண்டது தம்பி. படிச்சவங்களே இருந்த அரசியல்ல, படிக்காத ஜனங்கல்லாம் அணி அணியா வந்ததைப் பார்த்து வெள்ளை அதிகாரம், வெலவெலத்துப் போனது. மில் தொழிலாளிகள் கூலியும் கேட்டார்கள். வந்தேமாதரமும் முழங்கினார்கள். இது 1908இல் மிகப்பெரிய அதிசயம் தம்பி. (மீண்டும் சிறிய சிந்தனைக்குப் பிறகு தொடர்கிறார்) ஆனா, பிள்ளை வேலைகள்ள இருந்த சூட்சும அரசியல் அப்போ எனக்குப் புரியல; பின்னாலதான் புரிஞ்சுது. அந்த அரசியலின் எதிர்வினை ரொம்ப நாள் மறையவே இல்லை. சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையின் எதிர்விளைவு, மூன்றாண்டுகள் கழித்து மணியாச்சியில் வெடித்தது. ஆகவே, என் வாழ்க்கையில் நான் நேரடியாக ஈடுபடாத ஆஷ் கொலையில் சிதம்பரம் பிள்ளையின் ஏகாதிபத்திய எதிர்ப்பின் பின்னணி இருந்தது. 1908இல் பிள்ளை செய்த வேலைகளுக்கும் எங்களோட பலாத்கார வழிமுறைகளுக்கும் இடைவெளி நெறைய. அதனால நான் சிதம்பரம் பிள்ளைக்கு வேலை செஞ்ச கையோடே, தனியா ரகசிய இயக்கத்திற்கும் திருநெல்வேலி ஜில்லா முழுசும் அலைஞ்சு ஆள் சேர்த்து வந்தேன். சிதம்பரம் பிள்ளையோட சுதேசி இயக்கத்துல வேலை செஞ்சவங்கள்ள இருந்து சில பேரை எங்க இயக்கத்திற்கும் சேர்த்துகிட்டேன். சங்கர கிருஷ்ணன் : வ.உ.சி. கைதானவுடன் நடந்த எழுச்சிகளில் உங்கள் நடவடிக்கைகள் ஏதுமில்லையே! அப்போது நீங்கள் திருநெல்வேலியில இல்லையா சுவாமி? ஓம்கார் சுவாமிகள் : ‘ சொல்றேன். 1908 புது வருஷம் பிறந்தபோது, சூரத் காங்கிரஸ் முடிஞ்சு சிதம்பரம் பிள்ளை தூத்துக்குடி வந்தப்போ, அவருகூட நானும் வந்தேன். அப்போது, தூத்துக்குடி சுதேசி இயக்கச் சூட்டில் பொங்கிக்கொண்டிருந்தது. திருவனந்தபுரத்திலிருந்து பத்மநாப அய்யங்கார் வந்திருந்து, தூத்துக்குடியில் பிரசங்கங்கள் செய்தார். தூத்துக்குடி எங்கிலும் பெரிய கிளர்ச்சி நிலை சூழ்ந்திருந்தது. அப்போ… (மேடையில் ஒளி மங்கி இருளாகித் திரை விழுகிறது)

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

நீலகண்ட பிரம்மச்சாரி – 3

காட்சி 3 காலமும் களமும் : அதே நாள்; அதே இடம். பாத்திரங்கள்: சங்கர கிருஷ்ணன் மற்றும் சீடர். (மேடையின் ஒருபகுதி இருளாகவும் மறுபகுதி ஒளியிலும் இருக்கிறது. இருளான பகுதியில் ஓம்காரின் அறை உள்ளது. ஒளிவிழும் பகுதியில் சங்கர கிருஷ்ணன் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்) சங்கர கிருஷ்ணன் : “ஐயா, ஆசிரமம் எவ்வாறு நடக்கிறது? பொருள் உதவி யார் செய்கிறார்கள்.?” சீடர் : “சுவாமிஜியைத் தெரிந்த வடநாட்டு நண்பர்களும் இங்கேயே இருக்கும் சில பெரிய மனிதர்களும் தனவந்தர்களும் உதவி செய்கிறார்கள். சுவாமிஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களுக்கு வரும் பொது ஜனங்களும் உதவுகிறார்கள். இந்தப்பக்கம் உள்ள ஒரு ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவங்களும் உதவி பண்றாங்க..” சங்கர கிருஷ்ணன் : “நல்லது ஐயா, சுவாமிஜி பற்றி உங்களுக்குத் தெரிஞ்சதைச் சொல்லுங்களேன்..” சீடர் : “ஐயா, நான் இங்கு வந்து சிலகாலம்தான் ஆகிறது. எனக்கு சீர்காழி. சுவாமிகளின் ஊர்க்காரன்தான். சுவாமிஜியின் பிரசங்கங்கள் இங்கு வெகு சகஜம். வடநாட்டு பாஷையிலும் தெலுங்கு பாஷையிலும் இவரைப் பத்தியும் இவரோட பிரசங்கங்களையும் போட்டிருக்கிறார்கள். இவர் பெரிய புரட்சிக்காரர் என்பதெல்லாம் இங்கே உள்ளவர்களுக்கு அதிகம் தெரியாது. இவரும், தனது பழைய செய்திகளை யாருக்கும் சொல்வதும் இல்லை. எனக்குக்கூட கொஞ்சமாகத்தான் தெரியும்..” (சங்கர கிருஷ்ணன் சாப்பிட்டு முடிக்கிறார்) சீடர் : “தட்டத்திலேயே கை அலம்பிக்கொள்ளுங்கள். ஓய்வறை இருக்கிறது. சற்று ஓய்வெடுங்கள். சுவாமிஜியை மாலை சந்திக்கலாம். நான் வந்து அழைத்துக்கொள்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “ஓய்வு தேவையில்லை. ஆசிரமப் பணிகளைப் பார்க்கிறேனே..” சீடர் : சரி, வாருங்கள், சுற்றிக் காட்டுகிறேன். (இருவரும் அறையிலிருந்து வெளியேறுகிறார்கள். சாப்பாட்டு அறையில் ஒளி மறைந்து ஓம்கார் சுவாமிகளின் அறைப் பகுதியில் ஒளி வருகிறது. ஓம்கார் சுவாமிகள் அமர்ந்திருக்கிறார். சங்கர கிருஷ்ணன் உள்ளே வருகிறார்) நேரம் : மாலை 4 மணிபாத்திரங்கள் : ஓம்கார் சுவாமிகள், சங்கர கிருஷ்ணன். ஓம்கார் சுவாமிகள் : “வாரும் சங்கர கிருஷ்ணன். அமருங்கள். ஆசிரமத்தைச் சுற்றிப் பார்த்தீங்களா?” சங்கர கிருஷ்ணன் : “ஆமாம் சுவாமி.. கொஞ்சம் ஆச்சரியமாவும் இருந்தது.” ஓம்கார் சுவாமிகள் : “என்ன ஆச்சர்யம் தம்பி?” சங்கர கிருஷ்ணன் : “இந்த 85 வயசிலேயும் ஆசிரம வேலைகளை நீங்களும் செய்றீங்க.. அப்புறம்…” ஓம்கார் சுவாமிகள் : “அப்புறம் என்ன? சொல்லுங்கள்..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமணர் என்பதால் ஆசிரமத்தில் எல்லாரும் பிராமணர்களாக இருப்பாங்களோன்னு நெனைச்சுட்டேன். ஆனா ஹரிஜன்கள் தொண்டர்களா இருக்காங்க. சமையல் வரைக்கும் அவங்க இருக்கறதும் ஆசிரமக் கோவில் பணிகள்ளே அவங்க சுதந்திரமா வேலை செய்யறதும் ரொம்ப ஆச்சரியமா இருந்தது..” ஓம்கார் சுவாமிகள் : “ஆமாம் ஒரு பன்னிரண்டு தாழ்த்தப்பட்ட குடும்பத்தச் சேர்ந்தவங்க இந்த ஆசிரமப் பணிகள்ள இருக்காங்க. எல்லா சாதிக்காரங்களும் இங்கே வந்து வேலை செய்யலாம். ஆசிரமத்துல சாதி வித்தியாசமே தெரியாது. இப்ப உங்க கண்ணுல பட்டுருக்கு. கண்ணுலயா.. காதுலயா.?” (கேட்டுவிட்டுக் குழந்தைபோலச் சிரிக்கிறார்.) சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி, நீங்கள் தவறாக நினைக்காவிட்டால் உங்களிடம் சந்தேகம் ஒன்று கேட்கலாமா?” ஓம்கார் சுவாமிகள் : (சிரித்துக்கொண்டே) “இந்தப் பீடிகையிலேயே நீங்கள் கேட்கப் போவதென்ன என்று தெரிகிறது. கேளுங்கோ..” சங்கர கிருஷ்ணன் : “நீங்கள் பிராமண பாஷையை விலக்கிப் பேசுவது வியப்பளிக்கிறது..” ஓம்கார் சுவாமிகள் : (மீண்டும் வெடிச் சிரிப்புடன்) “40 வருடங்களில் எத்தனையோ மாற்றங்கள். நான் இப்போது பிரசங்கி அல்லவா? தமிழில் பேசுகையில் இன்னும் முழுதாக மாறிவிட்டதுன்னு சொல்லமுடியாது சங்கர கிருஷ்ணன். நீங்கள் கேட்க வந்ததைக் கேளுங்கோ.” சங்கர கிருஷ்ணன் : “அறுபது வருசத்திற்கு முன்னே நீங்கள் பெரிய புரட்சிக்காரர். இப்போ சாது. இந்த சந்நியாச வாழ்க்கைக்கு எப்படிப் பொருந்திப் போனீர்கள்..?” ஓம்கார் சுவாமிகள் : “இது உங்கள் கேள்வியாக இருக்கமுடியாது. கேட்க வந்ததை நேரடியாகக் கேட்டுவிடுங்கள்.” சங்கர கிருஷ்ணன் : “அதிபயங்கரவாதத்தின் மறுபக்கம் கோழைத்தனம் என்பார்கள். அதுபோல, இது தப்பித்தலா என்று தோன்றுகிறது சுவாமிஜி..” (ஓம்கார் சுவாமிகள் மௌனமாகிறார். கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டதை அடக்கிக்கொள்வது போன்ற மௌனம்) ஓம்கார் சுவாமிகள் : (கொஞ்சம் உஷ்ணமாகவே) “என்ன சொன்னீர்? கோழைத்தனம் என்றா? தப்பித்தல் என்றா? நான் கோழையில்லை தம்பி; தப்பிக்கவும் இல்லை. நான் அதிபயங்கரவாதியெல்லாம் கிடையாது. அந்த வார்த்தையே தப்பு. என்னால் தொண்டு செய்யாமல் சோம்பி இருக்க முடியாது. இளமையில் குடும்பம், கல்யாணம், சம்பாத்தியம் எல்லாமே விட்டுட்டு வந்தது நாட்டுத் தொண்டுக்காகத்தான்.” (சற்றே நிதானிக்கிறார். இப்போது குரல் சாந்தமடைகிறது) “தம்பி, என் இருத்தல் அவசியமல்லவா? 1930இல் விடுதலையானேன். நாடு மாறியிருந்தது. வெளியே வந்தபோது உப்புச் சத்தியாக்கிரகம் உச்சத்தில் இருந்தது. தேசபக்தி என்பது மாறியிருந்தது. போர்க்களம் மாறியிருந்தது. புதிய களத்தில், புதிய பாதையில், நான் பொருந்திப் போகவில்லை. நான் அறிந்திராத புதிய தேசத் தொண்டர்களோடு என் சேர்க்கை அமையமுடியாது என்ற நிலை. அதுபோக, இந்தச் சாது மனோநிலைக்கு நான் சிறையிலேயே வந்திருந்தேன். அதனால் என் இருப்புக்கும் நாட்டுப் பணியைத் தொடர்ந்து செய்யவும் இந்தப் புதிய பிறப்பைத் தேர்ந்தெடுத்தேன். பலாத்காரப் புரட்சியில் நம்பிக்கை வைத்திருந்தவனாக என்னை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால், நான் கடந்து வந்த பாதையில் வங்கப் புரட்சியாளர்கள் இருந்தார்கள்.. பாரதியார் இருந்தார்.. சிதம்பரம் பிள்ளை இருந்தார்.. அரவிந்தர் இருந்தார்.. வ.வே.சு.அய்யர் இருந்தார்.. சிங்காரவேலர் இருந்தார்.. கம்யூனிஸ்ட் பிரசாரகனாகவும் சிலநாட்கள் இருந்தேன். நான் ஒரு கலவை மனிதன். இந்தச் சாது வாழ்க்கைகூட முழுமையில்லை என்றே உணர்கிறேன்.” சங்கர கிருஷ்ணன் : “மன்னிக்க வேண்டும் சுவாமிஜி.. உங்களை சினப்படுத்திவிட்டேன்..” ஓம்கார் சுவாமிகள் : “பரவாயில்லை தம்பி.. இப்பவும், என் பழைய தோழன் சங்கர கிருஷ்ணன் கேட்டதாக எடுத்துக்கொள்கிறேன்..” சங்கர கிருஷ்ணன் : “சுவாமிஜி.. காலையில் ஆஷ் கலெக்டர் கொலை பற்றிச் சொல்லத் தொடங்கினீர்கள்.. தொடர்ந்து சொல்லவேணும்..” ஓம்கார் சுவாமிகள் : “ஆஷ் கொலை.. அது ஒரு குறைப் பிரசவம்.. ஆனாலும் அது, வெள்ளைக்காரர்களை ஒரு உலுக்கு உலுக்கியது. இந்தியாவில் மட்டுமல்ல; இங்கிலாந்தில்கூட அதன் எதிரொலிகள் இருந்தன. அந்தக் கொலையை வாஞ்சி ஐயர் செய்தபோது நான் காசியில் இருந்தேன் தெரியுமா தம்பி..? ஆனால், என்னைத்தான் முதல் குற்றவாளியா ஆக்கினாங்க.” சங்கர கிருஷ்ணன் : ‘தெரிந்திருக்கிறேன் சுவாமிஜி.. ஆனால் உங்கள் வாக்கு மூலத்தில் நீங்கள் யாரையும் விட்டுக் கொடுக்கவில்லை.. குற்றத்தின் மோடிவிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள முயலவில்லை..’ ஓம்கார் சுவாமிகள் : ‘அது எப்படிச் செய்வேன்.. அந்த செயலின் சூத்திரதாரி நானில்லை.. அது வ.வே.சு.ஐயர்.. ஆனால் அந்தத் தோழர்கள் என் வார்ப்புகள்.. கொஞ்சம் அவசரப் பட்டு விட்டார்கள்.. அவர்கள் அவசரத்தின் காரணம் சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் கலெக்டர் இழைத்த கொடுமைகள்தான்.. சங்கர கிருஷ்ணன் : “விவரமாகச் சொல்ல வேண்டும்.” ஓம்கார் சுவாமிகள் : “சொல்கிறேன். அதைச் சிதம்பரம்பிள்ளையிடம் இருந்து தொடங்கவேண்டும். அப்போது, நான் பாரதியாரின் இந்தியா பத்திரிகையில் வேலை செய்துகொண்டிருந்தேன். பாரதியாரைப் பார்க்க வந்த சிதம்பரம்பிள்ளையிடம் பாரதியார் என்னை அறிமுகம் செய்து வைத்தார். அது 1907ஆம் வருசமாயிருக்கும். (சுவாமிகள் கண்களை மூடி நினைவுகளில் மூழ்குகிறார். ஒளி மங்கித் திரை விழுகிறது.)

நீலகண்ட பிரம்மச்சாரி

நீலகண்ட பிரம்மச்சாரி

நாடகம் காட்சி 1 காலம்: 1921ஆம் ஆண்டில் ஒருநாள் காலைகளம்: திருவல்லிக்கேணி – பாரதியார் வீடுபாத்திரங்கள்: நீலகண்டர், சகுந்தலா பாரதி, செல்லம்மா பாரதி மற்றும் பாரதியார் வீட்டு முற்றத்தில் ஒரு பதின்ம வயதுப் பெண் சத்தமாகத் ‘திருக்குறள்’ படித்துக்கொண்டிருக்கிறாள். அவள் பாரதியாரின் இரண்டாவது புதல்வி சகுந்தலா. “இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகியற்றி யான் யாசகம் பெற்றுத்தான் உயிர் தரிக்க வேண்டியவாறு இந்த உலக மக்களுக்கு இழிவு இருக்குமானால், இந்த உலகத்தைப் படைத்தவனும் கெட்டு ஒழியட்டும்.” (வாசலில் குரல் கேட்கிறது) குரல்: “அண்ணா.. பாரதி அண்ணா..” சகுந்தலா எழுந்து வாசலுக்கு வருகிறாள். 30 வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நிற்கிறார். தாடி அடர்ந்த முகம், அழுக்கான ஆடை, ஆங்காங்கே சில கந்தல்கள். கண்களில் சகுந்தலாவைத் தெரிந்துகொண்டதன் காரணமாக அன்பு கனிந்து நிற்கிறது. சகுந்தலா: “அப்பா இல்லையே.. வெளியே போயிருக்கிறார்..” வாசலில் நிற்கும் மனிதர்: “பாப்பா.. நீ சகுந்தலாதானே?! என்னைத் தெரியவில்லையா..? நான் நீலகண்டன்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. பாண்டிச்சேரியில் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறேன்.” சகுந்தலா: “சரியாக நினைவுக்கு வரவில்லை மாமா.. உள்ளே வாருங்கள். அம்மாவைக் கூப்பிடுகிறேன். அம்மா.. அம்மா..” நீலகண்டர் உள்ளே வருகிறார். வீட்டின் உள்ளிருந்து பாரதியாரின் மனைவி செல்லம்மா வருகிறார். நீலகண்டர்: “நமஸ்காரம் மன்னி.. நான் நீலகண்டன்.. தெரியறதா..?” செல்லம்மா: “ஏன் தெரியவில்லை..? வாருங்கோ நீலகண்டன்.. இந்த நாற்காலியில் சித்த உட்காருங்கோ.. உங்கள் அண்ணா வெளியில் போயிருக்கிறார்.. இருங்கோ.. வந்துவிடுவார்.. குடிக்க ஜலம் கொண்டு வருகிறேன்.” சமையல் உள்ளுக்குள் சென்று தண்ணீர் கொண்டுவந்து தருகிறார் செல்லம்மா. நீலகண்டர் குடித்து முடிக்கிறார். செல்லம்மா: “மிகவும் இளைத்துவிட்டாற்போல் காண்கிறது..” நீலகண்டர்: “கொஞ்சம் அலைச்சல்..” செல்லம்மா: “ஜெயிலில் இருந்து எப்போ வெளியே வந்தேள்..?” நீலகண்டர்: “இரண்டு வருசம் ஆச்சு..” செல்லம்மா: “இந்த ஊருக்கு எப்போ வந்தேள்..?” நீலகண்டர்: “ஒரு கெழமை இருக்கும்.. இன்னைக்குத்தான் அண்ணா வீட்ட கண்டுபிடிச்சேன்.. பாப்பாவுக்கு என்னை ஞாபகம் வரலை போல..” செல்லம்மா: “அப்போ அவ சின்ன பொண்ணு. அதனால ஞாபகம் இருக்காது..” (சகுந்தலாவைப் பார்த்து) “சகுந்தலா, இவர் நீலகண்டர்.. நீலகண்ட பிரம்மச்சாரி.. தீவிர தேசபக்தர்.. அப்பாவோட சிநேகிதர்.. பத்து வருசத்திற்கு முன்னே நாம பாண்டிச்சேரில இருக்கச்சே, திருநெல்வேலி ஆஷ் கலெக்டர் கொலை நடந்த வழக்கிலே எட்டு வருசம் ஜெயில்ல இருந்தவர்..” (வாசலில் சத்தம் கேட்கிறது. பாரதியார் பாட்டொன்றைப் பாடியவாறே உள்ளே வருகிறார்) பாரதியார்: “பாரத சமுதாயம் வாழ்கவே.. ஜய ஜய ஜய பாரத சமுதாயம் வாழ்கவே..” நீலகண்டர்: (எழுந்தவாறே) “அண்ணா..” பாரதியார்: “யார்..?” நீலகண்டர்: “நீலகண்டன் அண்ணா.. என்னைத் தெரியலையா..?” பாரதியார்: “ஆஹா..! வாரும் நீலகண்டன்.. எப்போ வந்தீர்..?” நீலகண்டர்: “சித்த நேரம் முன்னேதான்..” பாரதியார் : “ஜெயில்ல ரொம்ப சிரமப்படட்டீர் போல.. உடம்பு துரும்பாயிட்டுதே ஓய்..” நீலகண்டர் : “கொஞ்சம் படுத்தினார்கள்தான்.. நானும் விட்டதில்லை. அரசியல் கைதிகளுக்குண்டான மரியாதையை ஜெயில்ல தொடர்ந்து கேட்டதினால, என்னைக் கலகக்காரனாவே நடத்துனாங்க..” பாரதியார் : “அதல்லவோ உம்மோட பெருமை.. நீலகண்டன்னாலே சிம்மம் அல்லவா..?”(செல்லம்மாவைப் பார்த்து) “செல்லம்மா.. சாப்பாடு தயார்தானே?” (கனவில் இருப்பவர் போன்ற தோற்றத்தில் கண்களை அகல விரித்து, நீலகண்டரிடம்) “ஓய் நீலகண்டன்.. ருசிய தேசத்து சேதி ஒன்னு தெரியுமோ..? அங்கே போல்ஸ்விக்-ன்னு ஒரு கட்சியாம். மக்கள் ராஜ்ஜியம் கொண்டு வந்திருக்கிறார்களாம். அங்கே இனிமேல் பசி, பட்டினி எதுவுமிராதாம்.. அதுபோல சமுதாயம் இந்தப் புராதன பாரத தேசத்திற்கு வந்துவிட்டால் எவ்வளவு நன்றாயிருக்கும்..?” நீலகண்டன் (குறுக்கிட்டு): “அண்ணா.. ஒரு நாலணா வேண்டும்..” பாரதியார்: “ஏன்..?” நீலகண்டன்: “சாப்பிட்டு முழுதாக ஒன்றரை நாள் ஆச்சு.. பசியில் நீங்கள் பேசுவதுகூட சரியாகக் காதில் விழவில்லை அண்ணா. நாலணா தந்தீர்கள் என்றால் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு வருவேன்..” பாரதியார்: “பாண்டியா.. இதென்ன கொடுமை..!! செல்லம்மா.. நம்ம வீட்டில் ஆகாரம் ஏதேனும்..?” செல்லம்மா மௌனமாக உள்ளே சென்று திரும்பி வந்து, நீலகண்டரிடம் செல்லம்மா: “இந்தாருங்கள்.. போய் ஏதேனும் ஆகாரம் முடித்து வாருங்கள்..” நீலகண்டர்: “வந்தனம் மன்னி..” (நீலகண்டர் வெளியே நடக்கிறார்) பாரதியார்: “அம்மா.. காளி.. உன் பக்தர்கள் நிலையைப் பார்.. இந்த நாட்டில் பெரிய புரட்சியைக் கொண்டுவருவதற்காக சிறையேற்ற மனிதர், பட்டினியில் அலைவதென்றால் நீ இருக்கிறாய் என்பதை எப்படி நம்புவது..?”(பாடுகிறார்) “இனியொரு விதிசெய்வோம் – அதைஎந்த நாளும் காப்போம்தனியொருவனுக் குணவிலையெனில்ஜகத்தினை அழித்திடுவோம்” (திரை விழுகிறது) (நாளை தொடரும்)

காந்திப் பசுவும் ஏகாதிபத்தியப் புலியும்

காந்திப் பசுவும் ஏகாதிபத்தியப் புலியும்

‘வாழ்க நீ! எம்மான் இந்த வையத்து நாட்டி லெல்லாம்தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னைவாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா நீ வாழ்க வாழ்க! பெருங்கொலை வழியாம் போர்வழி இகழ்ந்தாய்அதனிலுந் திறன் பெரிதுடைத்தாம்அருங்கலைவாணர் மெய்த்தொண்டர் தங்கள்அறவழி யென்று நீ அறிந்தாய்நெருங்கிய பயன்சேர் ஒத்துழையாமை!நெறியினால் இந்தியாவிற்குவருங்கதி கண்டு பகைத்தொழில் மறந்துவையகம் வாழ்க நல்லறத்தே!’ என்று தமிழ்நாட்டு மகாகவி பாரதி காந்தியடிகளைப் புகழ்ந்துரைத்தான். இந்தப் பாடலில் ‘ஒத்துழையாமை ‘ என்று காந்தியப் போர் நெறியை பாராட்டிக் குறிப்பிடும் பாரதியார் தனது இந்தியா பத்திரிகைக் கட்டுரைகளில் காந்தியடிகளின் தென்னாப்பிரிக்கப் போர்முறையை பாரதி வெகுவாக ரசிக்கவில்லை என்றே தெரிகிறது.தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் உரிமைகளுக்காகக் காந்தியடிகள் நடத்தும் போராட்டங்களைத் தமிழ்நாட்டு மகாகவி ஆதரிக்கிறான். ஆனாலும் இந்தப் புதிய அமைதிப் போர்முறைக்கு அவன் பழகாதவன் ஆயிற்றே! ஆகவே காந்தியைப் பசுவாகவும் தென்னாப்பிரிக்க ஏகாதிபத்திய அரசைப் புலியாகவும் சித்தரித்து இந்தியா பத்திரிகையில் கேலிச் சித்திரம் எழுதுகிறான். 1859இலேயே இந்தியர்களின் தென்னாப்பிரிக்கக் குடியேற்றம் தொடங்கியிருக்கிறது. காந்தியடிகளின் தென்னாப்பிரிக்க விஜயம் 1893இல்தான். முப்பதாண்டுகளில் ஏகாதிபத்தியம் இறுகிப்போய் தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர் உரிமைகளின்மீது கோடரி வைக்கும் காலத்தில்தான் காந்தியடிகளின் வருகை நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்த அவரது ஒத்துழையாமை, சட்டமறுப்புப் போர்களும் அவற்றில் அவர் அடைந்த வெற்றிகளும் உலகம் முழுதும் பிரசித்தி பெற்றன. ஒப்பந்தக் கூலிகளாக வந்து முப்பது ஆண்டுகளில் தென்னாப்பிரிக்காவையே தங்கள் வாழ்நிலமாக மாற்றிக்கொண்ட அந்த எளிய மக்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கும் சட்டங்களை ஏகாதிபத்திய அரசு அவர்கள் தலையில் இறக்கியது. இந்தக் கொடுமைகளிலிருந்து தங்களைக் காப்பாற்ற காந்தியடிகளையே அந்த எளிய மக்கள் நம்பினர். 1909இல் இந்த மக்களின் பிரதிநிதியாகக் காந்தியடிகள் லண்டன் வரை சென்று ஏகாதிபத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தச்சென்று வெறுங்கையுடன் திரும்பினார். நியாயத்தின் குரல்களுக்கு ஏகாதிபத்தியம் அத்தனை எளிதில் செவி சாய்க்குமா என்ன? தென்னாப்பிரிக்காவுக்கு காந்தி திரும்பியவுடன் காத்திருந்து காலனி அரசு அவரைக் கைது செய்தது. அவ்வளவுதான், மக்களின் கொதிநிலை வெடித்தது. மிகப்பெரிய மக்கள் எழுச்சி கிளர்ந்து எழுந்தது. இந்த மக்கள் பேரலையின் சீற்றம் இந்தியாவுக்கும் தெரிந்த வேளையில் தமிழ்நாட்டு மகாகவி இந்தக் கேலிச் சித்திரத்தை எழுதுகிறான். போராட்டத்தை ஆதரித்து கட்டுரையில் சீறுகிறான். போராட்டத்திற்கு வீதியிலிறங்கி நிதி திரட்ட முனைகிறான். தன் பங்களிப்பாக ஐந்து ரூபாய் என்கிறான்.கேலிச் சித்திரத்துக்கு விளக்கத்தை ஒரு உருவகக் கதையின் தொனியில் எழுதுகிறான். பழைய புராணக் கதையை எடுத்துக்கொண்டு வருகிறான். காட்டு வழியில் ஒரு கொடும் புலியிடம் அகப்பட்ட பசுவானது, ‘ என் கன்றுக்குப் பால் கொடுக்காமல் வந்துவிட்டேன். அது பசியால் தவித்து நிற்கும். என் கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு வந்துவிடுகிறேன். அதுவரை என்னை விட்டுவைக்க வேண்டும். சத்தியமாக நான் என் கடமை முடித்து உன்னிடம் திரும்பிவருவேன்’ என்றது. சொன்னபடி திரும்பியும் வந்தது. இதைத் தன் பாணியில் பாரதி சொல்லிவிட்டு இப்படி முடிக்கிறான். “பின்பு பசுவானது கன்றுக்குப் பால் கொடுத்துவிட்டு அதைத் தன்னுடைய சிநேகிதியான மற்றொரு பசுவிடத்தில் ஒப்புவித்துவிட்டு, புலியினிடத்தில் வந்து, ‘என்னுடைய தர்மத்தைச் செய்துவிட்டு வரும்படி உத்தரவளித்ததற்கு உமக்கு வந்தனமளிக்கிறேன். என்னைப் புசியும்’ என்றது. இதைக் கண்ட புலி ஆச்சர்யப்பட்டு ‘அம்மா, ஸத்திய தேவதையே, உன்னைப் புசித்துவிட்டு நான் எந்த நீச கதிக்குப் போவேன்! நான் இதுவரைக்கும் செய்தது போதும்!’ என்று சொல்லிப் பட்டினியிலிருந்து பிராணனை விட்டது. இப்பசுவைப் போல் நடந்து கொண்ட நமது ஸ்ரீகாந்தி பிரபுவைத் தென்னாப்பிரிக்கப் புலிகள் என்ன செய்கின்றன பார்த்தீர்களா? தென்னாப்பிரிக்காவில் மனுஷிய ரூபம் தரித்த புலியைப் பார்க்கிலும் கொடுமையாக (தங்களுக்கு உதவி புரிந்த) இந்தியர்களை நடத்தும் நாகரிக ஆங்கிலேயர்களை இக்கலிகாலத்தில்தான் காணலாம்.” காந்தியடிகள் ஒத்துழையாமையிலோ சட்ட மறுப்பிலோ அரசை எதிர்க்காத காலங்களில் அரசுடன் ‘நல்லுறவு பேணிய பசு’ என்பதை ‘ஏகாதிபத்தியப் புலிகள்‘ நினைவில் கொள்ளமாட்டார்கள் என்பதைப் பாரதி உணர்த்துகிறான்.1909இல் பாரதி, தான் பசுவாக சித்தரித்த காந்தியடிகளை 1919இல் நேரில் சந்தித்து அவரது ஒத்துழையாமையை ஆசிர்வதிக்கிறான். காந்தியடிகள் நமது புராதன தேசத்து மக்களின் விடுதலையில், புனரமைப்பில், நல்லிணக்கத்தில் தளர்வில்லாத அக்கறை கொண்டிருந்தார். தனது கருத்துக்களின் வழியாகவும் செயல்பாடுகளின் ஊடாகவும் அந்த அக்கறையை உறுதியுடன் நிரூபித்துக்கொண்டே இருந்தார். அதுவரை இருந்த போராட்ட முறைகளில் அறிவுஜீவிகளும் மேல்தட்டு நபர்களுமே பங்களித்தனர். காந்தி யுகத்தில்தான் தேசத்தின் மொத்த மக்களும் தேசிய இயக்கத்தில் வந்தனர். விடுதலை இயக்கத்தில் முழுமையான அர்ப்பணிப்பைத் தந்தனர். இத்தனை மக்கள் அவரைத் தொடர்ந்தபோதும் அவர் மீதான எதிர் விமர்சனங்களும் தொடர்ந்தன. அவர் விரும்பியும் சொல்லியும் வந்தபடியே அவர் நெடிய வாழ்வு வாழ்வதையே நிறுத்திவிடலாம் என்று அவரது சித்தாந்தத்திற்கு எதிரானவர்கள் அவர்கள் நினைத்ததை முடித்தார்கள். அந்தத் துன்பகரமான சம்பவம் நடந்து இன்றுடன் முக்கால் நூற்றாண்டு முடிந்து போனது. ஆனால் அண்ணலின் இருப்பு எத்தனை நியாயமானது என்று இன்றைக்கு நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

வ. உ. சி. நினைவுநாளில் அவர் புகழ் பாடும் கவிதை நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனகடலிலும் நீசுதந்திரக் கொடிபறக்கவிட்டாய் கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்இன்னும் பட்டொளி வீசிப்பறக்கிறது பாரெங்கும் நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீபொருள் ஈட்டியிருக்கலாம் மக்கள் மன்றம் வந்துஉரிமைக் குரல் கொடுத்ததால்நீதிமன்றம் கொண்டுபோய்நிறுத்தினார்கள் உன்னை ஆம்…வழக்கறிஞராகப் போகவேண்டியநீதிமன்றத்துக்குகுற்றவாளியாகக் கொண்டு போய்நிறுத்தியது காலம் கண்ணை மூடிக்கொண்டுதண்டனையும் கொடுத்தாள்அன்று கோலோச்சியஆங்கில நீதி தேவதை நீதி தேவதையா?அநீதி தேவதையானஅவள் வழங்கியதோஇரட்டை தீவாந்திரம் அத்தோடு மூழ்கியதுஉன் வாழ்க்கைக் கப்பல் முள்ளை முள்ளால்தான்எடுக்க வேண்டும் என்பதால்கப்பலில் வந்த வெள்ளையனைகப்பலோட்டியே கப்பலேற்றலாம்என நீ நினைத்தாய் சட்டம் படித்த உன் நெஞ்சில்இருந்தது நீதிஅதனால் உன் முள் கூடதராசு முள்ளாகத்தான் இருந்தது வணிகம் செய்ய வந்துஆட்சியைப் பிடித்தவெள்ளையன் வைத்திருந்ததோவிஷம் தடவிய முள் ஆயுள் தண்டனை விதித்துசிறையில் அடைத்துஉன் சிறகுகளைப் பிய்த்து எறிந்ததுஆங்கில ஏகாதிபத்தியம் செக்கிழுத்து செக்கிழுத்துசிறையிலேயே நீசிதைந்து போனாய் விடுதலை அடைந்து வெளியே வந்ததும்உன் துடுப்புகளையும்உடைத்துப் போட்டதுஎமது அலட்சியம் ஏற்கனவே உடல் தேய்ந்திருந்த நீஅதனால் உள்ளமும்ஓய்ந்து போனாய் அடியோடு வீழ்ந்துபோனதுஅரசோடு போட்டி போட்ட உன்அகண்ட பொருளாதாரம் அன்றாட வாழ்க்கைக்கேதள்ளாடும் நிலைக்குப் போனதுஉன் வாழ்வாதாரம் பின் உயிர் வாழ்ந்த நாளெல்லாம்கொடும் வெயிலானதுகடன்காரர்கள் பட்டியலேஉன் உயிலானது கடிதம் எழுதி எழுதியேகாலாவதி ஆனதுன் காலம் கணக்குப் பார்த்தாதீர்க்க முடியும் உன் தியாகத்தை? கடலில் கரைத்த பெருங்காயமானதுஉன் தியாகம்கண்ணீராலும் ஆறாத பெருங்காயமானதுஎங்கள் இயலாமை காந்தி கணக்கானதுஉன் வாழ்வு மன்னிக்கச் சொல்லிஉன் முன் மன்றாடுவதன்றிவேறொன்று தோன்றவில்லை எனக்கு இவ்வளவு நெருக்கடிகளுக்கிடையேஎப்படி உனக்குள்அப்படி ஒரு இலக்கிய தாகம்? கடலையே குடித்துவிடுவதுபோல்எழுதித் தள்ளியிருக்கிறாய்! பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தாய்ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தாய்கவிதை எழுதினாய்உரை எழுதினாய்சிறையிலும் எழுதினாய் எங்கள் பாரதியின் தோழனேஉன்னை எழுதாமல் இன்று நான்வேறு யாரை எழுதிஎன்ன பயன்? கப்பலால் கவிழ்ந்தகலங்கரை விளக்கேஒன்றை மட்டும் யாரும்மறைக்கமுடியாது எங்கே எப்போதுகப்பலைப் பார்த்தாலும்உன் ஞாபகம்தான்எங்கள் நெஞ்சில் எழுகிறது ஏனெனில்தேசத்தின் முதல் சுதந்திரக் கப்பல்உன்னுடையதல்லவா?அதில் பட்டொளி வீசிப் பறந்ததுஇந்த மண்ணின் மானம் அல்லவா? அதிகாரத்துக்கு அஞ்சாமல்நெஞ்சு நிமிர்த்திய வீரனேசட்டத்தால் போராடிய சூரனே சதி காரத்தால் நீ வீழ்ந்திருந்தாலும்இந்திய விடுதலை வரலாற்றில்என்றென்றும் ஒளிவீசும் அத்தியாயம்உன் சரித்திரம் காலக் கடலில் கரைந்து போகும்எத்தனையோ மனித வாழ்க்கையில்என்றென்றும் கரையாமல் வாழும்கப்பல் ஓட்டிய உன் கம்பீரம் இந்தியப் பெருங்கடல் அலைகள்உன் பெயரை ஓயாமல்பாடிக்கொண்டே இருக்கும் எங்கள் நெஞ்சின் அலைகளும்.

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வ. உ. சி. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’என்று மகாகவி பாரதி தன் கவிதையில் வ.உ.சி.யின் சிறைக் கொடுமையைப் பதிவு செய்திருக்கிறான். சமகால விடுதலை இயக்கத் தலைவனுக்குத் தமிழால் சாகாவரம் தருகிறான். அது மட்டுமல்ல, ‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்மன்னனென மீண்டான் என்றேகேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மைக் கோவே!’என்று வ.உ.சி.க்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஆறுதலாக உரைக்கின்றான். தேசத்தின் விடுதலை இயக்க வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்ற கருதுகோள், கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் மட்டுமல்ல, இந்திய தேசிய காங்கிரஸ் காலத்தில் திலகர் யுகத்திலும், தொடர்ந்த காந்தி யுகத்திலும், எம் தமிழ்நிலத்தின் பங்கே பிரதானமாக இருந்ததில் நிலை கொண்டுள்ளது.  அது இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற இந்தத் தியாகத் திருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் (1872-1936) வரலாற்றால் தவிர்க்க முடியாத நிரந்தரமான சான்றாக அமைந்து விடுகிறது. செப்டெம்பர் 5 என்றால் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களோடு, வ.உ.சி. பிறந்தநாள் என்பதால் அவர் பற்றியும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறியத் தருதல் வேண்டும். வ.உ.சி.யும் பாரதியும் மனமொப்பிய நண்பர்கள். அவர்கள் நட்பை ஆராய்கிற பாங்கில் ‘நான் கண்ட பாரதி’ என்று சிறு நூலை வ. உ. சி. எழுதியிருக்கிறார். பாரதி சுதேசிய இயக்கப் பரப்புரையாளன். தூத்துக்குடி செய்திகளைத் தனது ‘இந்தியா’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதுகிறான். வ.உ.சி.யின் 151-வது பிறந்த நாளில் அந்தச் செய்திகளைப் பகிர விரும்புகிறேன். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று, சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882-ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி எண் 85, கிரேட் காட்டன் சாலை, தூத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பதிவு எண் 13 of 1906. அதற்கு முன்பு, ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற பெயரில் பம்பாய் ஷலைன் ஸ்டீம் கப்பல்  கம்பெனியாரிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு வாங்கி இயக்கி வந்தனர். ஆங்கில அரசாங்கம் வெள்ளைக்காரர் கப்பல் கம்பெனிகளுக்குச் சார்பாக இருந்து, சுதேசிய கம்பெனி கப்பல்களுக்கு இடையூறு விளைவித்தனர். 1906 ஜூலை 7-ஆம் தேதியிட்ட ‘இந்தியா’ இதழில், ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற தலைப்பில் நிருபர் செய்தி என்ற கோதாவில் பாரதி தருகிற செய்தியின் சாரம்: தூத்துக்குடியிலே அஸிஸ்டெண்ட் போலீஸ் தலைவர் மிஸ்டர் ராமசாமி நாயுடு, ஸ்டேஷன் ஆபீஸர் குருநாதய்யர், இருவரும் மாதக் கணக்கில் விடுப்பு கேட்கிறார்களாம். ஏன்? அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி நாயுடுவும் சப் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் மோஹிதீன் கான் லோடி என்பவரும் வேறு ஊருக்குப் பணி மாறுதல் கேட்கிறார்களாம். அதுவும் ஏன்? தூத்துக்குடி அஸிஸ்டெண்ட் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் வாலர் என்பவர் வெள்ளைக் கப்பல் கம்பெனி பக்கம் சேர்ந்து கொண்டு, சுதேசிக் கப்பல் கம்பெனிக்குத் தொந்தரவு கொடுக்கிறாராம். அதனால் மேற்படி அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்ய முடியவில்லையாம். இதையெல்லாம் சொல்லிவிட்டு மேற்படி அதிகாரிகள் வாலருக்கு அஞ்சிவிடாமல் தாம் நியாயமாகப் பணிபுரிய வேண்டும் என்று அறிவூட்டுகிறார் அந்த நிருபர். மீண்டும் ஜூலை 21 இதழில் மிஸ்டர் வாலரின் சுதேசிக் கம்பெனிக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவாக எழுதுகிறார் பாரதி. ஆகஸ்டு 11 இதழில் ‘தூத்துக்குடியில் சுதேசியம்’ என்ற தலைப்பில், சுதேசிய முயற்சிகள் பலப்பட்டு வருவதை எழுதுகிறார். அதே இதழில், தென் இந்திய இரயில்வே கம்பெனியார் வெள்ளைக் கப்பல் கம்பெனியில் வர்த்தகம் செய்ய வரும் வணிகர்களுக்குக் கட்டணச் சலுகை அளித்திருப்பதை எழுதி, சீர்காழி வர்த்தகர்கள் இந்த வெள்ளைக் கம்பெனிகளின் கூட்டுச் சதியில் ஏமாறாமல் சுதேசிக் கம்பெனியுடனேயே வர்த்தகம் நடத்தியிருப்பதைப் பாராட்டுகிறார் பாரதி. செப்டெம்பர் 11 இதழில் புதிய கப்பல் கம்பெனி கனவு நிறைவேறப் போவதைத் தெரிவிக்கிறார். இந்தப் ‘புதிய சுதேசிய புகைக் கப்பல் கம்பெனி’யின் பாகஸ்தர்கள் லீகல் அட்வைசர்கள் காரியதரிசிகள் யார் யார்? என்றெல்லாம் விரிவான விவரங்களைத் தருகிறார் பாரதி. தூத்துக்குடி சுதேசிய இயக்கத்தில் வ.உ.சி.தலைவன் என்றால் பாரதி மகத்தான பரப்புரையாளன். செப்டெம்பர் 5-இல் வ.உ.சி.க்குப் பிறந்த நாள் வருகிறதென்றால், செப்டெம்பர் 11 பாரதியின் நினைவுநாள் ஆகும். இருவரையும் நினைவு கூர்வோம். இரா.கோமதிசங்கர், திருநெல்வேலி

சிப்பாய் புரட்சி – ஒரு பின்னணி

சிப்பாய் புரட்சி – ஒரு பின்னணி

1799, மே மாதம் 4-ம் தேதி. ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டையைக் காக்க, திப்பு சுல்தான் விரைந்து செல்கிறார். தான் உயிரினும் மேலாக நம்பிக்கை வைத்திருந்த பூர்ணையாவும், மிர்சாதிக்கும், கமருதீனும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக மாறியதைக்கண்டு, ஒரு வினாடி பதைத்துத்தான் போனார். அவர்தான் வீரனாயிற்றே; உடைவாளைச் சுழற்றிக் களத்தில் இறங்கினார் திப்பு. எதிர்முகாமில் வெல்லெஸ்லி தலைமையில் ஏகாதிபத்தியப்படை. பெரும் போர் நடந்தது. போரின் நடுவே ஏதோ ஒரு துரோகியின் வாள் திப்புவைத் தாக்கியது. போர் முடிவுக்கு வந்து, வெள்ளையர்கள் திப்புவைத் தேடுகின்றனர். இறுதியில், ஒரு மன்னனுக்குரிய எந்த அடையாளமும் இன்றி, போர்க்களத்தில் வீரர்கள் உடல்களுக்கிடையில் கிடக்கிறது, மாவீரன் திப்பு சுல்தான் உடல். போர்முடிந்ததும், திப்பு சுல்தான் மகன்களும் மகள்களும் உறவினர்களும் வேலூர் கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டனர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில், போர்க்களத்தில் உயிர் நீத்த ஒரே மன்னரான திப்புசுல்தான் வாரிசுகள்,வேலூர் சிறையில் வாளாவிருக்கவில்லை. வேலூர் கோட்டைக்குள் இருந்த சிப்பாய்கள், மீசை வைக்கக்கூடாது; தலைப்பாகை மாற்ற வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாட்டு கொண்டு வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் உத்தரவுகளை எதிர்த்து, சிப்பாய்கள் கனன்று கொண்டிருந்தனர். சிப்பாய்களின் எதிர்ப்பை திப்பு சுல்தானின் மூத்த மகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும், அரசியல் ரீதியாக உருமாற்றி வந்தனர். இறுதியில், 1806 -ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி, புரட்சிக்கான தேதி தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தத் தேதியில் புரட்சி நடைபெறவில்லை. பின்னர் 1806-ம் ஆண்டு, ஜூலை மாதம் 10-ம் தேதி நிச்சயிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில், ஜூலை 10-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு, வேலூர் கோட்டைக்குள் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள், சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசீம், சுபேதார் ஷேக் ஹுசைன் ஆகியோர் தலைமையில் அணிவகுத்து, ஆங்கிலேய அதிகாரிகளையும், ஆங்கிலேய ராணுவ வீரர்களையும் சுட்டு வீழ்த்தினார்கள். கட்டாய தலைப்பாகை அமுல் படுத்திய கர்னல் மிக்கிராஸ் உட்பட, 14 வெள்ளை அதிகாரிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். “வாருங்கள் நவாப், திப்பு சுல்தான் ஆட்சியைத் தொடருங்கள்” என்று, திப்பு சுல்தானின் மூத்த மகனை அழைத்தனர் சிப்பாய்கள். வேலூர் கோட்டைக்குள் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்பு சுல்தானின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால், அதிகாலை ஆர்க்காட்டிலிருந்து கர்னல் ராபர்ட் கில்லஸ்பி (Colonel Robert Gillespei) தலைமையில் பிரிட்டிஷ் படைகள் வந்து, புரட்சிக்காரர்களை வேட்டையாடியது.தன்னெழுச்சியாக எழுந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிரான பெரும் புரட்சி, வெந்து தணிந்தது. ஆனாலும், அந்தத் தீ நாளங்கள் அணைந்ததுபோல் தோன்றினாலும், அதில் புகைந்து கனன்று கொண்டிருந்த தீக்கனல்,1857-ம் ஆண்டு அடுத்த புரட்சிக்கு உந்து சக்தியாக இருந்தது என்பது வரலாறு. ஆனால், 1806 -ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் புரட்சி, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் உரிய இடத்தைப் பெறவில்லை என்பதுதான் கொடுமை. ஷாகுல் ஹமீது

ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

நூல் அறிமுகம் இருபத்தி ஆறு தலைப்புகளில், இந்தப் புதினம் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுப் புதினம். காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளான ‘ஜனவரி 30, 1948’ தான் இறுதி இயலின் தலைப்பு. இந்நூல், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பு நிறைவு செய்து விட்டுத் தம் பசுமையான நினைவுகளோடு பிரியா விடை கொடுக்கும், புதினத்தின் முக்கியக் கதைமாந்தர்களான சீனிவாச ராகவன், பிரான்சிஸ், மற்றும் செந்தூர் பாண்டியன் ஆகியோரது எதிர்காலத் திட்டங்கள் பற்றிய உரையாடலோடு தொடங்குகிறது. ஆதரவற்ற அநாதையான பிரான்சிஸ், தான் வளர்த்தெடுக்கப்பட்ட விதத்தினைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள கண்டியில் கிறித்துவப் பாதிரியாவதற்குப் படிக்கச் செல்கிறான்.  செந்தூர் பாண்டியன், தன் தந்தையின் வணிகத்தை மேம்படுத்த லாகூருக்குப் பயணிக்கிறான். பயணத்தின்போது, அரசு உயர் அதிகாரி ஒருவரோடு பரிச்சயம் ஏற்பட, அந்த அதிகாரி, காந்தியம் பற்றி அறிந்து கொள்ளச்சொல்லி, ரொமன் ரொலைந்த் எழுதிய நூல் ஒன்றையும், தன்வரலாற்றுப் புத்தகமான ‘சத்திய சோதனை’ நூலையும் வாசிக்கத் தருகிறார். அந்த நூல்களைப் பயணத்தின் போதே வாசிக்கத் தொடங்குகிறான் செந்தூர் பாண்டியன். பிராமண குலத்தைச் சேர்ந்த ராகவன், தன் தந்தையின் வழி, வழக்குரைஞர் தொழில் செய்யாது, புனேயில், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் நிருபர் பணிக்குச் செல்கிறான். அந்தப் புதிய சூழலில், ராகவன் வரலாற்றுப் பாத்திரங்களான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கர்க்கரே, சாவர்க்கர் போன்றோர்களோடு தொடர்பு ஏற்பட்டு அவர்களோடு தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபடுகிறான். இதனால், காந்தியத்தைப் பற்றியும், பிராமணீயத்தின் மறுபுறத்தையும், இந்துத்துவ அமைப்புகளின் வெறுப்பு அரசியலை மய்யமாகக் கொண்ட தீவிரவாதத் தன்மையையும் அவனால் நன்கு உணர முடிகிறது. இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய சமயங்களின்  நல்லிணக்கத்திற்குப் பெயர் போன லாகூர் மாநகரம், அங்கு நிகழ்ந்த முஸ்லீம் லீக் மாநாட்டுப் பிரிவினைவாதத் தீர்மானத்தின் பின்புலத்தில்  தீவிரவாத இஸ்லாமியர்களின் போக்கினால் எவ்வாறு அமைதியற்றுப் போயுள்ளது என்பதை லாகூர் சென்றடைந்தவுடன், செந்தூர் பாண்டியன் கண்கூடாகப் பார்த்து அதிர்ந்து போகிறான். அவனுடைய சினேகிதன் யாகூப் கூட மதவெறியால் மாறிப் போயிருப்பதைக் கண்டு வருத்தம் கொள்கிறான். ஆனால், யாகூப்பின் அன்னையும், சகோதரியும் இவன் மீது எப்போதும் போல சகஜமாகப் பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில், யாகூப்பின் இளைய சகோதரி சலேலாவிற்கு, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் தாய், செந்தூர் பாண்டியனுக்கு மணம் முடிக்க யோசனையை முன்வைக்கிறார். பிறகு, தேசப் பிரிவினையுடனான சுதந்திரம் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், லாகூர் பாகிஸ்தானின் பக்கம் என்று தகவல் கசிந்தவுடன், லாகூரில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மீது கடுமையான தாக்குதல் நடக்கிறது. இதன் தீவிரத்தை உணர்ந்த செந்தூர் பாண்டியனின் தந்தை சற்குணம் தன் வீட்டுப் பத்திரத்தை சலேலாவின் பெயருக்கும், தன் பெரிய கடையினை யாகூப்பின் பெயருக்கும் மாற்றம் செய்து, அவர்கள் அன்னையிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டுத் தன் மகனுடன் சொந்த ஊர் திரும்புவதாகச் சொல்கிறார். தன் தொழிலில் ஈட்டிய சொத்தையே எழுதிக் கொடுத்து விட்ட சற்குணத்திற்கு, தன் சொத்தான சலேலாவைத் தருகிறாள் அவளுடைய அன்னை. தான் மனதால் நேசித்த சலேலா, மனைவியாகப் போகும் குதூகலத்துடன்  தன் தந்தையுடன் ஊர் திரும்பும் வழியில், காவலர்கள் வழி மறிக்கிறார்கள்.  சலேலாவின் மீது கொண்ட இச்சை காரணமாக, ஒரு வாரம்  வைத்துக் கொண்டு அனுப்புவதாகக் கூறித் தன் வண்டியில் ஏற்றச் சொல்கிறார்கள். அதை எதிர்த்து மற்ற இருவரும் போராடும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்கிறான் செந்தூர் பாண்டியன். அதே சமயத்தில், சலேலாவும், காவலர் பிடியிலிருந்து திமிறி, காவலரின் கத்தியுடன் கூடிய துப்பாக்கியால் தன்னைக் கீறிக் கொண்டு சாய்கிறாள். ஓட்டுனர் பகதூர், அதிர்ச்சியில் உறைந்து போகும் செந்தூர் பாண்டியனைத் தேற்றி,  தில்லி நோக்கிச் செல்லலாம் என்கிறான். அங்கு காந்தி தங்கியிருந்த குடியிருப்பையும், அவரது சமாதான நடவடிக்கைகளையும் கண்ணுற்ற பாண்டியன், பழி வாங்கும் எண்ணம் ஏதுமின்றி, சொல்லொணாத் துயரைத் தாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்வதைத் தவிர்த்து, ராகவனைச் சந்திப்பதற்காகப் புனே செல்கிறான். அங்கு ராகவனோடு கழிக்கும் கால கட்டத்தில், காந்தியைக் கொல்ல சதிவலை பின்னப்படுவதாக இருவரும் உணர்கிறார்கள். தேசப் பிரிவினையால், உலகு கண்டிராத மதக் கலவரமும், தேசம் கண்டிராத அகதிகள் பிரச்னையும் ஏற்படுகிறது. முஸ்லீம் லீக ஆட்சி செய்யும் வங்காளம் கொலைக் களமாக மாறுகிறது. வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் குறிப்பிட்டதுபடி, 55000 ராணுவ வீரர்கள் தில்லியில் கொண்டு வர இயலாத அமைதியை, ஒற்றை வீரராக காந்தி, நவகாளியில் தன் சாகும் வரை உண்னாவிரதப் போராட்டத்தால் கல்கத்தாவில் கொண்டு வருகிறார். அதன் பின் தில்லி வருகிறார் காந்தியடிகள். தன்னுடைய சமாதான நடவடிக்கைகள் பலனளிக்காது போகவே, பிர்லா மாளிகையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். அடுத்தடுத்த உண்ணாவிரதத்தால் 79 வயது நிரம்பிய காந்தியின் உடல்நிலை மிகவும் பலவீனமடைந்தாலும், நாட்டில் அமைதியை நிலை நாட்ட உறுதியுடன் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார் மகாத்மா காந்தி.    காந்தியைக் காண செந்தூர் பாண்டியன் தில்லி செல்கிறான். ஐந்து நாட்களில் நிலைமை சீரடைகிறது. ‘காந்தி செத்தொழியட்டும்’ என்று பழித்த அகதிகள், காந்தியின் உயிரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு தரப்பினரும், அமைதிக்கான உறுதிமொழியைக் காந்தியிடம் அளித்தபின், அந்த உறுதிமொழிகள் மன உறுதியுடன் நிறைவேற்றப் படாவிட்டால், தான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டியதிருக்கும் என்று காந்தி எச்சரிக்கை விடுக்கிறார். மௌலானா ஆசாத் பழச்சாறு கொடுக்க உண்ணாவிரதம் நிறைவு பெறுகிறது. அதற்குப்பின், வழக்கம் போல காந்தி தன் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்கிறார். ஆனால், அவரைக் கொல்வதற்கான திட்டம் புனாவில் தீட்டப்பட்டு, அதை நிறைவேற்றத் தில்லியில் திரள்கிறது மதவெறி பிடித்த கோட்சே கும்பல். ஒரு மாகாத்மாவின் கொலைச் செயலின் பின்புலமாக இருந்த மதவெறி பிடித்த பிராமணீயக் கொள்கையை மட்டுமின்றி, அந்தப் படுகொலை செயல்படுத்தப்பட்ட நுட்பமான விவரங்களையும் இந்த அற்புதமான நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.  நூலாசிரியர்: கன்யூட் ராஜ் பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2022)  விலை: ரூ. 460/- ஆனந்த் பாசு                      

சர்தார் உத்தம்

சர்தார் உத்தம்

திரை விமர்சனம் 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி, பஞ்சாப் மாநில ஆளுநர் லெப்டினன்ட் மைக்கேல் ஓ டயர் ஆணையின் பேரில், அமிர்தசரஸ் நகரில் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில், அமைதியாகக் கூடியிருந்த 20 ஆயிரம் பேர்கள் மீது முன்னெச்சரிக்கை ஏதும் செய்யாமல், பிரிகேடியர் ஜெனரல் ரெஜினால்டு டயர் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட, ரத்தக் குளியலில் ஆயிரக்கணக்கில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் கொல்லப்பட்டனர். அப்படுகொலையைக் கண்ணுற்றுத் தகித்துப் போன மாணவர் உத்தம் சிங், 1933 ஆம் ஆண்டு ஆப்கான், ரஷ்யா வழியாகக் கடும் பயணம் மேற்கொண்டு, லண்டனுக்குச் சென்று, படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயர் மரணமுற்றதை அறிந்து, அடுத்து அப்படுகொலைக்கு ஆணையிட்ட அன்றைய ஆளுநர் மைக்கேல் ஓ டயரை 1940 மார்ச் 13 ஆம் தேதி சுட்டுக் கொன்று, ஜூலை 31 ஆம் தேதி தூக்குக் கயிற்றை முத்தமிட்ட வரலாற்றின் இந்தி திரை வடிவம்தான், விஷால் கௌசல் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து, சூஜித் சிர்கார் இயக்கி அமேசான் பிரைம் வீடியோவில் தமிழில் வசன எழுத்துகளுடன், தற்போது வெளியாகியுள்ள ‘சர்தார் உத்தம்’. படம் ஆரம்பித்து இருபத்தேழாவது நிமிடத்தில் எதிர்பாராத அதிர்ச்சிகரமான அந்த நிகழ்வு நடந்தேறிவிட, அதற்குப் பிறகும் படம் தொடர்கிறது. அடுத்த ஒன்றேகால் மணி நேரத்தில், பேரதிர்ச்சியான தீர்ப்பு வெளியாகிவிட, படம் முடியவில்லை, தொடர்கிறது. அதற்கடுத்த 15 நிமிடங்களில் முத்தாய்ப்பாக, எல்லாவற்றுக்கும் அடிப்படையான நிகழ்வு விரிந்து, 24 நிமிடங்கள் நீடித்து மனதை ரணமாக்கிட, அதற்குப் பிறகான நிகழ்வில் உள்ளம் கனத்தும் போகிறது. ஏறக்குறைய இரண்டரை மணி நேரம் ஓடும் இந்தப்படத்தின் முக்கியமான ஒவ்வொரு நிகழ்வுக்குப் பிறகும், தொய்வில்லாமல் விறுவிறுப்புடன் படம் தொடர்வதற்கு அடித்தளம், வலுவான திரைக்கதையும், அர்ப்பணிப்புடன் கூடிய இயக்கமும்தான். சுதந்திரமும் உரிமையும் மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில், அந்தச் சுதந்திரத்திற்காகவும் மனித உரிமைக்காகவும் போராடும் மனித குலப் பிரதிநிதிகளின் வீரமும் தியாகமும் செறிந்த வரலாற்றின் ஒரு கீற்றுதான், சர்தார் உத்தம். லண்டன் காக்ஸ்டன் ஹாலில், காவல்துறை பிடியில், எதிர்த்து ஆரவாரம் செய்யும் மக்களிடையே, பதட்டம் இல்லாமல் தெளிவான முகத்துடன் வெளியே வரும்போதாகட்டும், ஸ்காட்லாந்து யார்டின் மூன்றாம் தர விசாரணை நடைமுறையின் போதுகூட “மரணத்தப் பார்க்கற நான், வலியை உணரல” என்று சிரித்துக் கொண்டே சொல்லும்போதாகட்டும், சுதந்திரத்திற்காகப் போராடுவது குறித்து எலீன் பால்மரிடம் விவாதிக்கும் போதாகட்டும், இந்தியர்களைப் பற்றி, சுதந்திரத்திற்காகப் போராடும் புரட்சியாளர்களைப் பற்றி மைக்கேல் ஓ டயர் பேச்சுகளைக் கேட்ட உணர்வில் தகிக்கும் போதாகட்டும், “அதனாலே பகத்சிங் பத்தி பேசாதே… அவரப்பத்தி உனக்குத் தெரியாதா?” என்று டிடெக்டிவ் ஸ்வைனிடம் சொல்லும் போதாகட்டும், கள்ளம் கபடமற்ற தோழி ரேஷ்மாவுடன் அளவளாவும் போதாகட்டும், “உங்க பிரிட்டிஷ் சட்டத்தில் இந்தக் கொலை, போராட்டமாகக் கருதப்படுமா? அல்லது கொலையாகக் கருதப்படுமா?” என்று லாயர் ஹாட்சிசனிடம் அப்பாவியாகக் கேட்கும் போதாகட்டும், “என்னைச் சுடு, இந்த வழக்கே நேர விரயம். பேசாம என்னைச் சுட்டு விடு. டயர் குற்றவாளி, நீங்களும் உங்க கொள்கைகளும்தான் குற்றவாளிகள்…” என்று துவங்கி, தண்டனை அறிவிப்புக்குப் பிறகு, “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக, கொடுங்கோன்மை ஒழிக, புரட்சி நீண்ட காலம் வாழ்க” என தீரத்துடன் நீதிமன்றத்தில் வாதாடுவதாகட்டும், “நான் ஒரு புரட்சியாளன் என்பதை இந்த உலகுக்குத் தெரிய வைங்க” என்று ஸ்வைனிடமும், ‘செய்த குற்றத்திற்கு மன்னிப்பு கோரினால் வாழ முடியும்’ என்று கூறும் எலீன் பால்மரிடம் மறுத்து, “என் நண்பன பாக்கற நேரம் வந்துடுச்சு…” என்று பகத்சிங்கை நினைத்துச் சொல்லும் போதாகட்டும் இப்படத்தில் விஷால் கௌவுசல், சர்தார் உத்தம் சிங்காகவே வாழ்ந்திருக்கிறார். மைக்கேல் ஓ டயர் (ஷான் ஸ்காட்), டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் ஸ்வெயின் (ஸ்டீபன் ஹோகன்), பகத்சிங் (அமோல் பரசார்), ரேஷ்மா (பணிட்டா சந்து), ஜெனரல் ரெஜினால்ட் டயர் (ஆண்ட்ரூ அவில்), எலீன் பால்மர் (கிறிஸ்டியன் அவெர்டன்) ஆகியோரும் தத்தம் பாத்திரத்திற்கு உரிய பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளனர். சிந்தனைக்குரிய வசனங்களும் தத்ரூபமான காட்சியமைப்புகளும் அருமையான ஒளிப்பதிவும் மிகவும் பொருத்தமான பின்னணி இசையும் நேர்த்தியான படத்தொகுப்பும் கலைஞர்களின் சிறப்பான பங்களிப்பும் படத்தின் சிறப்புக்குப் பக்கபலம். “ஒரு உண்மையான புரட்சியாளர் சில கொள்கைகள பின்பற்றணும். நீங்க பாரபட்சமாக, மத வெறியனாக, சாதி வெறியனாக இருக்க முடியாது. பொருளாதார அல்லது சமூக வர்க்க வேறுபாடு இல்லாது கடைப்பிடிக்கும் ஒரே உண்மை, சமத்துவமாகும். எல்லாரையும் சமமாக நடத்தி மனித நேயத்தில் வலுவான நம்பிக்கையோடு இருப்பது…. “ “அவங்க என்னைக் கொன்று விடலாம். ஆனா என் கருத்துகள கொல்ல முடியாது. ஒரு கொள்கைக்கான நேரம் வந்துட்டா அதன் பிறகு அதைத் தடுக்க முடியாது. நீங்க எதிர்த்திடா விட்டால் அல்லது ஒடுக்குபவருடன் போராடாம விட்டால், உங்க உரிமைகள் உங்களுக்கு எப்பவுமே கிடைக்காது. ஒரு உண்மையான கொள்கை இன்றிக் கிடைக்கும் சுதந்திரம், அடிமைத்தனத்தை விட மோசமாக இருக்கும். சுதந்திரம் நமது பிறப்புரிமை, எனவே, இந்த அடக்குமுறை ஆட்சியை நாங்கள் நிராகரிக்கிறோம்”. இவை யாவும் பகத்சிங்கின் வார்த்தைகள்தாம்; எனினும், அவரது நிலையில் உலகில் இருக்கும் எவர் சிந்தனையும் இவையாகத்தான் இருக்கக்கூடும். முதல், இரண்டாம் உலகப் போர்களில் பிரிட்டிஷ் நாட்டிற்காக 2.6 மில்லியன் இந்தியர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்காலக் கொள்கையின்படி ‘மனித ஏற்பாடா’க உருவாக்கப்பட்ட வங்காளப் பஞ்சத்தால் 4 மில்லியன் இந்தியர்கள் பட்டினியால் இறந்திருக்கிறார்கள். நூறு ஆண்டுகள் கடந்தும், நிகழ்த்திய ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு, பிரிட்டிஷ் அரசிடமிருந்து அலுவல் பூர்வமான மன்னிப்பை இந்தியாவால் இன்னும் பெற இயலவில்லை என்பது கூடுதல் கொடுமை. எது தேசபக்தி என்று பாடம் எடுக்காமல், இதுதான் தேசபக்தி என்று பாடமாகவே வாழ்ந்து, மன்னிப்புக் கேட்டு மறுவாழ்வு பெறுவதை மறுத்து, சுத்த சுயமரியாதை வீரனாகத் திகழ்பவன்தான், சர்தார் உத்தம்சிங். வரலாற்றை மறைப்பதற்கோ திருத்துவதற்கோ முன்னரே, அதனைப் படித்து விழிப்புணர்வு பெறுவது மிகவும் அவசியம்; அந்த வகையில், ‘ சர்தார் உத்தம் ‘ வரலாற்றுத் திரைப்படத்தைப் பார்ப்பதும்கூட. மதிப்பெண் : 9/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து