பாரதியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை சீவலப்பேரியில் நன்கு அறிமுகமான, செல்வாக்கு மிக்கவரான, சத்திரம் சுப்பையர் என்ற கடுவாய்ச் சுப்பையர் – பாகீரதி அம்மையார் ஆகியோரின் மகன் சின்னச்சாமியின் (சுந்தரராஜன் என்ற செல்லப் பெயரும் உண்டு) மகன் சுப்பிரமணியன் என்ற பாரதி, கடந்த நூற்றாண்டில் தமிழகத்தில் மிக அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். 39 ஆண்டுகளே வாழ்ந்த பாரதி எழுதிக் குவித்திருப்பவை ஏராளம். ஒரு கவிஞனாக, பத்திரிகை ஆசிரியராக, கார்ட்டூனிஸ்ட்டாக, சிறுகதை எழுத்தாளராக, கட்டுரை ஆசிரியராக அவரது பரிமாணங்கள் கணக்கிலடங்கா. வீர சுதந்திரம் வேண்டி நின்ற போராளி; பெண் விடுதலைக்குக் குரல் கொடுத்த சீர்திருத்தவாதி; சாதிப் பிரிவுகளையும் தீண்டாமையையும் எதிர்த்துப் போரிட்ட புரட்சியாளர்; சர்வதேசக் கண்ணோட்டத்துடன் சமகால அரசியலை விமர்சித்தவர். பாரதியின் கவிதைகள் போலப் போற்றத்தக்க வகையில் கட்டுரைகளும் கதைகளும் அமைந்துள்ள பான்மையை ஒரு சிலரே அறிவர். கவிதா மண்டலத்தின் ஏகச் சக்கரவர்த்தியாக விளங்குவது போலவே, உரைநடைக்கும் அவரே வழிவகுத்துள்ளார் என்பதைத் தமிழகம் இன்னும் உணராதது விந்தையே! கவிதைகளில் சுருக்கமாகக் கூறப்பட்ட பல செய்திகளை, கட்டுரைகளிலும் கதைகளிலும் விரிவாக விளக்கியுள்ளார். இவரது சிறுகதைகள் ஒழுக்க மேம்பாட்டிற்காக, கலாச்சார மேம்பாட்டிற்காக, தேசபக்தியை உருவாக்குவதற்காக எழுதப்பட்டன. நிலப் பிரபுத்துவச் சமூகத்தில் நிலவிய சாதி அமைப்பு, மூட நம்பிக்கை, பெண் அடிமைத்தனம், போலி வாழ்க்கை ஆகியவற்றை அவரது சிறுகதைகள் அம்பலப்படுத்துகின்றன. இவர் ஒரு முற்போக்கான புரட்சிகரப் புனைவியல்வாதியாவார். கலை இலக்கியத்தில் நிலப்பிரபுத்துவத் தன்மை நிலவிவந்த காலத்தில், கலை இலக்கியக் கோட்பாட்டை ஜனநாயகத் தன்மை உள்ளதாக மாற்றுவதற்குப் பாடுபட்டவர். பாரதியின் காலகட்டம் சமூக அடிப்படையில் தேசியப் பூஷ்ர்வாக்களின் தோற்றக் காலமாக இருந்தது. வெள்ளையரின் வருகைக்குப் பின்பு நிலப்பிரபுத்துவத்துடன் இந்தியவகை முதலாளித்துவம் வளரத் தொடங்கியதன் காரணமாக, தேசிய முதலாளிகள் பாரம்பரியக் கருத்துக்களைச் சுவீகரித்துக்கொண்டதுடன் புதுமையையும் வரவேற்கும் போக்குக் கொண்டவர்களாகவே இருந்தனர். அதனால், வெள்ளையர்களை எதிர்த்தார்கள். அதே நேரத்தில், பாட்டாளி வர்க்கத்தினருடன் முரண்பாடு கொண்டவர்களாக இருந்தார்கள். இவர்களிடம் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு இருந்தபோதிலும் தங்களது வர்க்க நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு, தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டும் போக்கும் இவர்களிடம் இருந்தது. இத்தகைய காலகட்டத்தில்தான் இலக்கியம் படைத்தார் பாரதி. புதர் மண்டிக் கிடந்த தமிழ் இலக்கியத்தைச் சுத்தம் செய்யும் முதல் பணியாக அவரது பணி அமைந்துவிட்டது. அப்படிச் சுத்தம் செய்யும்பொழுது அவர் முற்போக்கானவற்றைத் தன் வசப்படுத்திக்கொள்கிறார். அவற்றைக் காலத்தின் தேவை கருதிப் புதிய இலக்கியமாகப் படைத்துத் தந்தார். அந்தப் புதிய இலக்கிய வகைதான் அவரது சிறுகதைகள். ஆறில் ஒரு பங்கு என்ற கதைக்கு பாரதி இவ்வாறாக முகவுரை தருகிறார்: ஒரு சாதி ஓர் உயிர். பாரத நாட்டில் உள்ள 30 கோடி ஜனங்களும் ஒரு சாதி. வகுப்புகள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது; வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத்திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது; மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது; இந்த உணர்வே நமக்கு சுதந்திரமும் அமரத் தன்மையும் கொடுக்கும். இந்நூலை பாரத நாட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல்லாம் உணவு கொடுத்து இரட்சிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத்தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன். பள்ளர், பறையர் என்ற பஞ்சமர் சாதியைச் சார்ந்தவர்களுக்கு வைசியர் என்ற புதிய அந்தஸ்தைக் கொடுத்து நிலப்பிரபுத்துவ எதிர்ப்பைக் காட்டுகிறார். அவர் காலத்தில் அவர் கண்ட சமூக அமைப்பிலிருந்து மீறிய சிந்தனை உலகப் படிமம்தான் இந்தக் கதையின் மூலப் பொருளாக அமைந்துள்ளது. மதங்கள் காதலுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதை ஸ்வர்ணகுமாரி என்ற கதையின் மூலமாகக் கூறுகிறார். சாதியக் கட்டுகள் தகர்த்தெறியப்பட வேண்டும் என்ற பாரதியின் கனவு நிலையை பிரம்ம சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகளைக் கதையின் பாத்திரங்களுடன் இணைத்துப் பிரதிபலித்து காட்டுகிறார். வேதம், மகாபாரதம், பைபிள், குர்ஆன் ஆகியவை கூறுபவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற, அறிவு வளர்ச்சிக்கு – விஞ்ஞான வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக இருந்தவற்றை, குதிரைக்கொம்பு என்ற கதையின் மூலம் கேலி செய்கிறார். ‘அஞ்சியஞ்சிச் சாவார் இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே’ என்று இந்நாட்டு மக்களின் அச்சத்தை இடித்துரைக்கும் வகையில் ஆனைக்கால் உதை என்ற நகைச்சுவைக் கதை மூலம் கேலி செய்கிறார். இதுபோன்ற கதைகள்மூலம், தான் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூகச் சூழலைக் கவனித்து இலக்கியம் படைத்தார். மகாகவியின் புதிய ஆத்திசூடி ஒரு தனி இலக்கியம் என்றே கூறலாம். இந்தப் புதிய ஆத்திசூடிக்குக் காப்புப் பாடலாக எழுதியதில், பரம்பொருள் வாழ்த்தாக சர்வ மதச் சமரசமாக அனைத்துச் சமயங்களின் ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார். ஆத்திசூடி இளம்பிறை யணிந்துமோனத்திருக்கு வெண் மேனியான்கருநிறம் கொண்டு பாற்கடல் மிசை கிடப்போன்மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்ஏசுவின் தந்தை எனப் பல மதத்தினர்உருவகத்தாலே உணர்ந்து உணராதுபலவகையாகப் பரவிடும் பரம்பொருள்ஒன்றே! அதனியல் ஒளியுறுமறிவோம்அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார்அதனருள் வாழ்த்தி அமர வாழ்வெய்துவோம் என்று தொடங்கும் பாடலில் சைவம், வைணவம், இஸ்லாம், கிறித்தவம் ஆகிய சமயங்களைக் குறிப்பிட்டு, ‘அனைத்து மதங்களிலும் கூறப்படுவது ஒரே பரம்பொருளைப் பற்றித்தான். இந்தப் பரம்பொருளில் ஒளியுறுவது . அவ்வறிவு நிலை கண்டார்க்கு அல்லல் இல்லை. எனவே அத்தகைய பரம்பொருளின் அருளை வாழ்த்தி அமர வாழ்வு எய்துவோம்’ என்று காப்புப் பாடலில் பாடுகிறார். பாரதியின் புதிய ஆத்திசூடி நல்ல அறிவுரைகளும் ஆணைகளும் நிரம்பிய நல்லதோர் இலக்கியமாகும். நாட்டிற்குத் தேவையானவற்றைக் கூறும் இந்த ஆத்திசூடி நாட்டு மக்களிடம் பரவ வேண்டும். பாரதி திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் விருப்பமின்றியே ஆங்கில மொழியைக் கற்றார். காசியில் சமஸ்கிருதமும் ஹிந்தி மொழியும் பயின்றார். காசியில் இருந்த சமயத்தில் உருது மொழியையும் கற்றார். புதுச்சேரியில் இருக்கும்போது பிரஞ்சு, வங்காளம் ஆகிய மொழிகளைக் கற்றார். பின்னர் ஜெர்மன் மொழியையும் அறிந்தார். சென்னை வாசத்தின்போது தெலுங்கு மொழியைப் படித்தார். பின்னர் அரபு மொழியையும் மலையாள மொழியையும் கற்றார். கோத்த பொய் வேதங்களை எல்லாம் சாடி, மடத்தன முதலையின் வயிற்றைக் கிழித்தவன் பாரதி. கற்றறிந்த பண்டிதர்கள் மட்டுமே பொருள் அறிந்துகொள்ளக்கூடிய காவியங்கள், நூல்கள் கொண்டிருந்த தமிழுக்கு புதிய ஒளி கொண்டுவந்தவர் பாரதி. எளிய நடையில் பாமரருக்கும் பொருள் விளங்குமாறு கவிதைகளை இயற்றியவர் பாரதி. அவர் காலத்துச் சூழ்நிலையில் மக்களின் துயரம், வறுமை, அடிமைத்தனம், மடமை பற்றிக் கனலும் கவர்ச்சியும் கலந்த நடையிலே பாடல்களை எழுதினார். வெயில் பயிர்களுக்கு உயிர் கொடுப்பதைப்போல, தமிழர்களின் உள்ளத்தை மலர்ந்து விரியச் செய்த மகாகவி பாரதி 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செப்டம்பர் 12ஆம் தேதி அதிகாலை 1:30 மணிக்கு இயற்கை எய்தினார். பாரதியின் இறுதிச்சடங்கில் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மா கொள்ளி வைத்தார். இறுதிச் சடங்கிற்கான செலவுகளை வக்கீல் துரைசாமி ஐயர் செய்தார். ஒண்டிக் குடித்தனச் சூழல், பிராமண சமூக வழக்கம், இன்று இருப்பதைப் போன்று பாதுகாத்து வைக்கக்கூடிய வசதியின்மை ஆகியவற்றால் பாரதியின் உடல் எரியூட்டப்பட்டது. சிலமணி நேரங்களில் தகவல் சொல்வதற்கோ மற்றவர்கள் வந்து பங்கேற்பதற்கோ வசதி இல்லாத அந்தக் காலத்தில், வெறும் 14 பேருடன் மட்டுமே பாரதியின் இறுதிச்சடங்குகள் நடந்தன. இருப்பினும் அவரது உடல் மறைந்த பின்பும் தமிழ் பேசும் ஒவ்வோர் உயிரினிடத்தும் பாரதி கலந்தே நிற்கின்றார்.