பேசாத காரியம்
பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பாரதியை எத்தனைமுறை எழுதிப்பார்த்தாலும் சலிக்காது. இன்று அவனது நூற்றுநாற்பதாவது பிறந்தநாளில் அவனுடைய குருமணி நிவேதிதா தேவியுடனும் பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத அவனுடைய பாடல் ஒன்றுடனும் பாரதியைக் கண்டு மகிழ்வோமா? சகோதரி நிவேதிதா அயர்லாந்து தேசத்துப் பெண்மணி. சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக ஆளுமையால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தவர். பெண்களுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்ட விவேகானந்தரின் முயற்சிக்கு உதவியாக இருப்பதற்காக விவேகானந்தரால் அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். 1902இல் விவேகானந்தரின் மறைவுக்குப்பிறகு தேச விடுதலைக்கான புரட்சிகர ரகசிய இயக்கங்களில் அவர் ஈடுபட்டிருந்தார். 1905இல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்த நிகழ்ச்சி வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் தேச பக்தர்களை ஆவேசத்தில் தள்ளியது. சுதேசி இயக்கம் வங்கத்தில் தொடங்கி தேசம் முழுவதும் பரவியது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தளபதியாக வ.உ.சி.யும் இயக்கத்தின் பரப்புரையாளனாக மகாகவி பாரதியும் விளங்கினர். 1905 டிசம்பரில் காசி நகரில் நடந்த காங்கிரசுக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேசபக்தனாகவும் பத்திரிகையாளனாகவும் பாரதி சென்றிருந்தான். திரும்பும்வழியில் கல்கத்தாவில் டம்டம் பகுதிக்கு வந்திருந்த நிவேதிதாவை முதன்முதலாகச் சந்தித்தான். இந்த நிகழ்ச்சியை பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் தங்கள் படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரதி தனது வாழ்நாளில், தானே அச்சிட்டு வெளியிட்ட நூல்களில் முதல் நான்கு நூல்களை நிவேதிதா தேவிக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியார் வரலாற்றை ‘பாரதியார் சரித்திரம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் அவரது மனைவி செல்லம்மா பாரதி. தமது குருமணியாக பாரதியார் வரித்துக்கொண்ட சகோதரி நிவேதிதாவைப்பற்றியும் அவரை பாரதி சந்தித்த வரலாற்றையும் சொல்லவந்த செல்லம்மா பாரதி அந்தக் கட்டுரைக்கு ‘குரு உபதேசம்’ என்று தலைப்பிட்டதோடு அக்கட்டுரையின் முடிவில், அந்தச் சந்திப்பை ‘ஆனந்தக் களிப்பு மெட்டில்’ பாரதியார் பாடியிருப்பதாகச் சொல்லி இந்தக் கவிதையை நமக்குத் தந்துள்ளார். ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் – எனைச்சூதாய் தனிக்கவே சும்மா யிருத்திமுன்னே ஏதுமில்லாதே – சுகமுற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப்பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தேபெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்பேசாத காரியம் பேசினார் தோழி’ செல்லம்மா பாரதி எழுதிய ‘பாரதியார் சரித்திரம்’ நூலில் அவர் தந்திருக்கிற இந்தக் கவிதை, பெரும்பாலான பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக்கிடைக்கவில்லை. ஒருவேளை நம் கவனத்திற்கு வராத தொகுப்பு வேறெதிலும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. இந்தக் கவிதையில் ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்?’ என்று செல்லம்மாவிடம் வியப்போடு தொடங்குகிற பாரதி, ‘பெற்றதை ஏதென்று சொல்வேன்?’ என்ற மர்மத்துடன் தொடர்ந்து, ‘பேசாத காரியம் பேசினார் தோழி’ என்று முடிக்கிற அழகைப்பாருங்கள். மனைவியைத் ‘தோழி’ என்றழைக்கிற சமத்துவப் பாங்கினை பாரதியார் கற்ற இடம் சகோதரி நிவேதிதாவின் சந்நதியில்தான். காரியம் என்ற சொல்லுக்குச் செயல் என்றோ வேலை என்றோ பொருள் கொள்கிறோம். ‘பேசாத காரியம்’ என்பதும் அந்தச் சொல்லாடலைப் ‘பேசினார்’ என்று முடிப்பதும் எங்ஙனம்? தனது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலை (1909 ஜனவரி) சமர்ப்பணம் செய்கிறவேளையில் அந்தப் ‘பேசாத காரிய’த்தின் சாயல் தொனிக்க பாரதி எழுதுவதைப் பார்க்கலாம். ‘எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு’ என்று எழுதுகிறார். ‘பேசாத காரியம்’ எதுவென்று மேற்கண்ட வரிகளில் நமக்குப் புலனாகிவிடுகிறது. அது ‘சொல்லாமல் உணர்த்துவதாம்’. மீண்டும் செல்லம்மா பாரதியிடம் வருவோம். பாரதியார் நிவேதிதா தேவியிடத்து என்ன உபதேசம் பெற்றார் என்பதைத் தன்னிடம் ‘ரொம்பவும் உணர்ச்சியுடன்’ விவரித்ததாகவும் ஆனால் அச்சம்பவத்தைத் தன்னால் ‘விரித்துக்கூற முடியவில்லை’ என்றும் செல்லம்மா எழுதியிருக்கிறார். நிவேதிதாவிடம் பாரதி பெற்ற உபதேசம் எத்தகையது என்றும் அவரது வாக்கின் மூலமாகவே அறியலாம். 1908 ஜனவரியில் தனது முதல் நூலை வெளியிட்டு, அதனைச் சகோதரி நிவேதிதா தேவிக்குச் சமர்ப்பிக்கிறபோது, ‘ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதற்கொப்ப, எனக்கு பாரத தேவியின் சம்பூர்ண ரூபத்தைக்காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று உணர்ச்சி பொங்க எழுதுகிறார். நாம் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கவிதையில், ‘முன்னே ஏதுமில்லாதே – சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார். பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப் பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற வரிகளில் அடங்கியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தின் பொருளை இப்போது தெரிந்துகொள்ளமுடிகிறது. பாரதி, தனது குருமணி சந்திப்பின் வருணிப்பில் அதைக் கீதைக் காட்சியுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கும் ‘பாரத மாதாவின் சம்பூர்ண ருபத்தைக் காட்டி’ என்ற சொல்லாட்சியையும் நாம் தேர்ந்துகொண்ட கவிதையின் ‘பார்த்த விடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொற்றொடரையும் இணைத்துப் பார்க்குமிடத்து அந்தக் காட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. அந்தச் சந்திப்பை, பாரதியார் பற்றிய ஆய்வு நூல்களில் ஆங்காங்கே பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் எடுத்தாண்டிருக்கிற செய்திகளின் அடிப்படையில் நாம் இந்த கட்டுரைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கவிதை வரிகளின் பேசுபொருளைத் தாண்டிவிடாத எல்லைக்குள் நின்றுகொண்டு சுவைத்துப் பார்க்கலாம். சமூகப் பிரக்ஞைமிக்க கவிஞன், தான் வாழ்ந்தகாலத்தின் பிரதியைத் தனது படைப்புகளில் பதிந்துவைக்கின்றான். தனது காலத்தில், தான் இயங்கும் கருத்துவெளியில் துலங்கித்தெரிந்த தன் சமகால ஆளுமையான சகோதரி நிவேதிதாவால் பாரதி ஆகர்சிக்கப்பட்டிருந்ததை இந்தக் கவிதையும் நிவேதிதாவுக்கு பாரதியின் ஆக்கங்களில் செய்யப்பட்டிருக்கும் சமர்ப்பணங்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்தக் கவிதை, உள்ளடக்கத்தில் ஒரு சம்பவத்தை விவரிப்பதுபோலத் தோன்றுவதைத் தாண்டி, பாரதி என்ற ஆளுமை செதுக்கப்பட்டதின் வரலாற்றையே பிணைத்துக்கொண்டுள்ள கதையை பாரதியே சொல்வதாகும். அது என்ன? 1903லேயே தேசபக்த இயக்கத்திற்கு பாரதி வந்துவிட்டதை அவன் வார்த்தைகளாலேயே அறிகிறோம். 1909இல் தான் வெளியிட்ட ‘ஜென்ம பூமி’ நூலுக்கு அவன் எழுதிய முகவுரையில் ‘சென்ற சுபகிருது வருஷத்திலே’ தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியதாகவும் தான் அதில் ஈடுபட்டதாகவும்’ கூறுகிறான். சென்ற சுபகிருது வருஷம் என்று அவன் குறிப்பிடுவது 1902 ஏப்ரல் முதல் 1903 மார்ச்வரையிலான காலமாகும். இந்தக் காலத்தில் 1902 ஜனவரிவரை பாரதி காசியில் இருந்தார். ஆகவே இந்த நவீனமார்க்கத்தில் 1903 முதலே ஈடுபட்டிருந்த தேசபக்தன் பாரதி, 1905இல் வங்கத்தில் தொடங்கிய சுதேசிய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த விவேகானந்தரின் சீடர்கள் உள்ளிட்ட பல தேசபக்தத் தலைவர்களை நேரடியாகவும் பத்திரிகையாளனாகவும் அறிந்திருந்தான். தமிழகத்தில் அந்த சுதேசிய இயக்கத்தின் பரப்புரையாளனாக பாரதி மாறியிருந்த காலத்தில் வங்கத்தில் அந்தத் தலைவர்களில் ஒருவராக இயங்கிய நிவேதிதா தேவியை ஆர்வமுடன் சந்தித்திருக்கிறான். அந்தச் சந்திப்புபற்றி செல்லம்மா பாரதியின் கருத்துக்களை ஒட்டியே பாரதியார் வரலாற்றை எழுதிய இரா.அ.பத்மநாபன் தனது ‘சித்திர பாரதி’யில் குறிப்பிடுகிறார். பாரதியே தம்மிடம் சொன்னதாக திரு.வி.எஸ்.குஞ்சிதபாதம் என்ற பாரதி அன்பர், பாரதி – நிவேதிதா சந்திப்பை ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இவரது கட்டுரை திரு.கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்கள் பதிப்பித்த ‘பாரதி விஜயம்’ தொகுப்பில் படிக்கக்கிடைக்கிறது. 1905 காசிக் காங்கிரசிலும் 1906 கல்கத்தா காங்கிரசிலும் சகோதரி நிவேதிதா அழைக்கப்பட்டு பார்வையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஏனெனில் தீவிர இரகசிய இயக்கங்களில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு காங்கிரசில் நேரடிப் பங்கேற்பு அக்காலத்தில் அனுமதிக்கப்படவில்லை. டம்டம் நகரில் ஒரு மாளிகையில் இரகசியக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்குச் சகோதரி நிவேதிதாவும் வந்திருந்து பேசுகிறார். பாரதியும் அவரது நண்பர்களும் அவரைச் சந்திக்கின்றனர். பாரதி சில பாடல்களைப் பாடுகிறார். நிவேதிதாவும் பாரதியும் உரையாடுகின்றனர். பாரதி திருமணமானவர் என்று தெரிந்துகொண்டதும் மனைவியை அழைத்து வராததன் காரணத்தைக் கேட்கிறார் நிவேதிதா. ‘அவ்விதம் பொது இடங்களில் சரிசமமாக மனைவியை அழைத்துவரும் வழக்கம் இல்லை’ என்றும் அவ்வாறு ‘மனைவியைக் காங்கிரசுக்கு அழைத்துவருவதால் பயன் என்ன கிடைக்கப்போகிறது?’ என்றும் பாரதி மிக இயல்பாகப் பதிலளிக்கிறார். சகோதரி நிவேதிதா கொதித்துப்போகிறார். ‘சமூகத்தில் பாதியான பெண்களை அடிமையாக வைத்துக்கொண்டே மறுபாதிமட்டும் விடுதலைபெறமுடியாது. உன்னைப்போன்ற படித்தவர்களே பெண்களோடு சமத்துவம் பேணவில்லையெனில் எப்படி இந்தத் தேசத்தில் சமூகச் சீர்திருத்தங்கள் மலரும்? பெண்களும் ஆண்களுக்கு நிகராகப் பொது இயக்கங்களில் வராதவரை இந்தத் தேசத்தின் விடுதலை சித்திக்கப் போவதில்லை’ என்றெல்லாம் பாரதியைக் கண்டித்துப் பேசுகிறார். ‘இனியேனும் மனைவியை உன் இடதுகையெனக் கருது. மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி வா’ என்கிறார். இதைத்தான் பாரதி, ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்’ என்று குறிப்பிடுகிறார். பிறகு நடந்ததை திரு.குஞ்சிதபாதம், பாரதி தம்மிடம் கூறியதாகத் தாம் எழுதிய கட்டுரையில் விவரிக்கிறார். ஒரு தருணத்தில் பாரதியைக் கைப்பிடித்து மாளிகைக்கு வெளியே தனியே அழைத்து வந்த நிவேதிதா, பாரதியை அங்கிருந்த ஒரு ஆலமரத்தடியில் நிறுத்தி பாரதியிடம், ‘அதோபார், பாரதமாதாவின் அற்புத தரிசனத்தை’ என்றாராம். பாரதியார் அவர் காட்டிய திசையில் பார்க்கிறார். நிவேதிதாவின் வார்த்தைகள் அத்தனைச் சக்தி மிக்கவையா என்ன! பாரதி பாரதமாதாவின் சம்பூர்ண ரூபத்தைக் காண்பதாகப் பிரமை கொள்கிறார். ‘எனைச் சூதாய் தனிக்கவே சும்மா யிருத்தி முன்னே ஏதுமில்லாதே – சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்.’ ‘பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொல்லாடல் இந்த ஆவேசப் பரவசத்தையே நம் கண்முன் நிறுத்துகிறது. ‘பாரத மாதாவின் ஆணையைக் கேட்டுக்கொள். உன் கவியாற்றலை அன்னையின் சேவைக்கே அர்ப்பணிப்பாயாக’ என்ற நிவேதிதாவின் குரல் பாரதியின் உள்ளத்தின் உள்ளே ஒலிக்கிறது. சகோதரி நிவேதிதா பாரதியைத் தொட்டுப் பிரமை கலைக்கிறார். அந்த ஆலமரத்தின் இலை ஒன்றைப் பறித்து பாரதியிடம் கையளித்தார். தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரததேவியின் தொண்டிற்கே என்ற சங்கல்பம் போல பாரதி அதை வாங்கிக்கொண்டார். அந்த ஆலிலைப் பிரசாதத்தை வெகுகாலம் பாரதி பொக்கிஷம்போல் பாதுகாத்துவந்தார் என்று செல்லம்மா கூறுகிறார். ‘சற்றும் பேசாத காரியம் பேசினார் தோழி’ என்ற சொற்றொடரால் பாரதி ‘குருமணியின் தரிசன’த்தைப் பேசுகிறார். ‘அதன்பிறகு தம் உள்ளத்திலிருந்து தேசபக்தி ததும்பிக்கனிந்த பாடல்கள் வெள்ளமாய்க் கொட்டலாயிற்று’ என்றாராம் பாரதியார். நிவேதிதா தேவியுடனான சந்திப்புக்குப்பிறகு மகாகவி பாரதி தனது பாடல்களிலும் கட்டுரைகளிலும் பெண்ணியக் கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். 1906இல் அவர் பேசியதன் வீச்சு பின்னாளில் 1920களில் பெரியாரியத்தில் பூரணம்பெற்றது என்பதை அறிகிறோம். சாதி மறுப்பு மற்றும் பெண்ணியக் கருத்துகளின் ஆரம்பம் இந்தச் சந்திப்பு என்பதை இந்தத் தருணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்.