பேசாத காரியம்

பேசாத காரியம்

பாரதியார் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை பாரதியை எத்தனைமுறை எழுதிப்பார்த்தாலும் சலிக்காது. இன்று அவனது நூற்றுநாற்பதாவது பிறந்தநாளில் அவனுடைய குருமணி நிவேதிதா தேவியுடனும் பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத அவனுடைய பாடல் ஒன்றுடனும் பாரதியைக் கண்டு மகிழ்வோமா? சகோதரி நிவேதிதா அயர்லாந்து தேசத்துப் பெண்மணி. சுவாமி விவேகானந்தரின் ஆன்மீக ஆளுமையால் ஈர்க்கப்பட்டு இந்தியா வந்தவர். பெண்களுக்கான கல்வி நிறுவனம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்ட விவேகானந்தரின் முயற்சிக்கு உதவியாக இருப்பதற்காக விவேகானந்தரால் அழைக்கப்பட்டு இந்தியா வந்தார். 1902இல் விவேகானந்தரின் மறைவுக்குப்பிறகு தேச விடுதலைக்கான புரட்சிகர ரகசிய இயக்கங்களில் அவர் ஈடுபட்டிருந்தார். 1905இல் கர்சன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். இந்த நிகழ்ச்சி வங்கத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் தேச பக்தர்களை ஆவேசத்தில் தள்ளியது. சுதேசி இயக்கம் வங்கத்தில் தொடங்கி தேசம் முழுவதும் பரவியது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் தளபதியாக வ.உ.சி.யும் இயக்கத்தின் பரப்புரையாளனாக மகாகவி பாரதியும் விளங்கினர். 1905 டிசம்பரில் காசி நகரில் நடந்த காங்கிரசுக்குத் தமிழ்நாட்டிலிருந்து தேசபக்தனாகவும் பத்திரிகையாளனாகவும் பாரதி சென்றிருந்தான். திரும்பும்வழியில் கல்கத்தாவில் டம்டம் பகுதிக்கு வந்திருந்த நிவேதிதாவை முதன்முதலாகச் சந்தித்தான். இந்த நிகழ்ச்சியை பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் தங்கள் படைப்புகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள். பாரதி தனது வாழ்நாளில், தானே அச்சிட்டு வெளியிட்ட நூல்களில் முதல் நான்கு நூல்களை நிவேதிதா தேவிக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதியார் வரலாற்றை ‘பாரதியார் சரித்திரம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் அவரது மனைவி செல்லம்மா பாரதி. தமது குருமணியாக பாரதியார் வரித்துக்கொண்ட சகோதரி நிவேதிதாவைப்பற்றியும் அவரை பாரதி சந்தித்த வரலாற்றையும் சொல்லவந்த செல்லம்மா பாரதி அந்தக் கட்டுரைக்கு ‘குரு உபதேசம்’ என்று தலைப்பிட்டதோடு அக்கட்டுரையின் முடிவில், அந்தச் சந்திப்பை ‘ஆனந்தக் களிப்பு மெட்டில்’ பாரதியார் பாடியிருப்பதாகச் சொல்லி இந்தக் கவிதையை நமக்குத் தந்துள்ளார். ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன் – எனைச்சூதாய் தனிக்கவே சும்மா யிருத்திமுன்னே ஏதுமில்லாதே – சுகமுற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப்பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தேபெற்றதை ஏதென்று சொல்வேன் – சற்றும்பேசாத காரியம் பேசினார் தோழி’ செல்லம்மா பாரதி எழுதிய ‘பாரதியார் சரித்திரம்’ நூலில் அவர் தந்திருக்கிற இந்தக் கவிதை, பெரும்பாலான பாரதியார் கவிதைத் தொகுப்புகளில் காணக்கிடைக்கவில்லை. ஒருவேளை நம் கவனத்திற்கு வராத தொகுப்பு வேறெதிலும் சேர்க்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை.   இந்தக் கவிதையில் ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்?’ என்று செல்லம்மாவிடம் வியப்போடு தொடங்குகிற பாரதி, ‘பெற்றதை ஏதென்று சொல்வேன்?’ என்ற மர்மத்துடன் தொடர்ந்து, ‘பேசாத காரியம் பேசினார் தோழி’ என்று முடிக்கிற அழகைப்பாருங்கள். மனைவியைத் ‘தோழி’ என்றழைக்கிற சமத்துவப் பாங்கினை பாரதியார் கற்ற இடம் சகோதரி நிவேதிதாவின் சந்நதியில்தான். காரியம் என்ற சொல்லுக்குச் செயல் என்றோ வேலை என்றோ பொருள் கொள்கிறோம். ‘பேசாத காரியம்’ என்பதும் அந்தச் சொல்லாடலைப் ‘பேசினார்’ என்று முடிப்பதும் எங்ஙனம்? தனது ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலை (1909 ஜனவரி) சமர்ப்பணம் செய்கிறவேளையில் அந்தப் ‘பேசாத காரிய’த்தின் சாயல் தொனிக்க பாரதி எழுதுவதைப் பார்க்கலாம். ‘எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு’ என்று எழுதுகிறார். ‘பேசாத காரியம்’ எதுவென்று மேற்கண்ட வரிகளில் நமக்குப் புலனாகிவிடுகிறது. அது ‘சொல்லாமல் உணர்த்துவதாம்’. மீண்டும் செல்லம்மா பாரதியிடம் வருவோம். பாரதியார் நிவேதிதா தேவியிடத்து என்ன உபதேசம் பெற்றார் என்பதைத் தன்னிடம் ‘ரொம்பவும் உணர்ச்சியுடன்’ விவரித்ததாகவும் ஆனால் அச்சம்பவத்தைத் தன்னால் ‘விரித்துக்கூற முடியவில்லை’ என்றும் செல்லம்மா எழுதியிருக்கிறார். நிவேதிதாவிடம் பாரதி பெற்ற உபதேசம் எத்தகையது என்றும் அவரது வாக்கின் மூலமாகவே அறியலாம். 1908 ஜனவரியில் தனது முதல் நூலை வெளியிட்டு, அதனைச் சகோதரி நிவேதிதா தேவிக்குச் சமர்ப்பிக்கிறபோது, ‘ஸ்ரீகிருஷ்ணர் அர்ச்சுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதற்கொப்ப, எனக்கு பாரத தேவியின் சம்பூர்ண ரூபத்தைக்காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குரு’ என்று உணர்ச்சி பொங்க எழுதுகிறார். நாம் இந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் கவிதையில், ‘முன்னே ஏதுமில்லாதே – சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார். பற்றிய பற்றற ஒன்றே – தன்னைப் பற்றச் சொன்னார்; பற்றிப் பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற வரிகளில் அடங்கியிருக்கும் உணர்ச்சிப் பிரவாகத்தின் பொருளை இப்போது தெரிந்துகொள்ளமுடிகிறது. பாரதி, தனது குருமணி சந்திப்பின் வருணிப்பில் அதைக் கீதைக் காட்சியுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கும் ‘பாரத மாதாவின் சம்பூர்ண ருபத்தைக் காட்டி’ என்ற சொல்லாட்சியையும் நாம் தேர்ந்துகொண்ட கவிதையின் ‘பார்த்த விடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொற்றொடரையும் இணைத்துப் பார்க்குமிடத்து அந்தக் காட்சி எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றிவிடுகிறது. அந்தச் சந்திப்பை, பாரதியார் பற்றிய ஆய்வு நூல்களில் ஆங்காங்கே பாரதி ஆய்வாளர்களும் அன்பர்களும் எடுத்தாண்டிருக்கிற செய்திகளின் அடிப்படையில் நாம் இந்த கட்டுரைக்குத் தேர்ந்தெடுத்துக்கொண்ட கவிதை வரிகளின் பேசுபொருளைத் தாண்டிவிடாத எல்லைக்குள் நின்றுகொண்டு சுவைத்துப் பார்க்கலாம். சமூகப் பிரக்ஞைமிக்க கவிஞன், தான் வாழ்ந்தகாலத்தின் பிரதியைத் தனது படைப்புகளில் பதிந்துவைக்கின்றான். தனது காலத்தில், தான் இயங்கும் கருத்துவெளியில் துலங்கித்தெரிந்த தன் சமகால ஆளுமையான சகோதரி நிவேதிதாவால் பாரதி ஆகர்சிக்கப்பட்டிருந்ததை இந்தக் கவிதையும் நிவேதிதாவுக்கு பாரதியின் ஆக்கங்களில் செய்யப்பட்டிருக்கும் சமர்ப்பணங்களும் அறுதியிட்டுக் கூறுகின்றன. இந்தக் கவிதை, உள்ளடக்கத்தில் ஒரு சம்பவத்தை விவரிப்பதுபோலத் தோன்றுவதைத் தாண்டி, பாரதி என்ற ஆளுமை செதுக்கப்பட்டதின் வரலாற்றையே பிணைத்துக்கொண்டுள்ள கதையை பாரதியே சொல்வதாகும்.  அது என்ன? 1903லேயே தேசபக்த இயக்கத்திற்கு பாரதி வந்துவிட்டதை அவன் வார்த்தைகளாலேயே அறிகிறோம். 1909இல் தான் வெளியிட்ட ‘ஜென்ம பூமி’ நூலுக்கு அவன் எழுதிய முகவுரையில் ‘சென்ற சுபகிருது வருஷத்திலே’ தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியதாகவும் தான் அதில் ஈடுபட்டதாகவும்’ கூறுகிறான். சென்ற சுபகிருது வருஷம் என்று அவன் குறிப்பிடுவது 1902 ஏப்ரல் முதல் 1903 மார்ச்வரையிலான காலமாகும். இந்தக் காலத்தில் 1902 ஜனவரிவரை பாரதி காசியில் இருந்தார். ஆகவே இந்த நவீனமார்க்கத்தில் 1903 முதலே ஈடுபட்டிருந்த தேசபக்தன் பாரதி, 1905இல் வங்கத்தில் தொடங்கிய சுதேசிய இயக்கத்தில் ஈடுபட்டிருந்த விவேகானந்தரின் சீடர்கள் உள்ளிட்ட பல தேசபக்தத் தலைவர்களை நேரடியாகவும் பத்திரிகையாளனாகவும் அறிந்திருந்தான். தமிழகத்தில் அந்த சுதேசிய இயக்கத்தின் பரப்புரையாளனாக பாரதி மாறியிருந்த காலத்தில் வங்கத்தில் அந்தத் தலைவர்களில் ஒருவராக இயங்கிய நிவேதிதா தேவியை ஆர்வமுடன் சந்தித்திருக்கிறான். அந்தச் சந்திப்புபற்றி செல்லம்மா பாரதியின் கருத்துக்களை ஒட்டியே பாரதியார் வரலாற்றை எழுதிய இரா.அ.பத்மநாபன் தனது ‘சித்திர பாரதி’யில் குறிப்பிடுகிறார். பாரதியே தம்மிடம் சொன்னதாக திரு.வி.எஸ்.குஞ்சிதபாதம் என்ற பாரதி அன்பர், பாரதி – நிவேதிதா சந்திப்பை ஒரு கட்டுரையில் எழுதியுள்ளார். இவரது கட்டுரை திரு.கடற்கரய் மத்தவிலாச அங்கதம் அவர்கள் பதிப்பித்த ‘பாரதி விஜயம்’ தொகுப்பில் படிக்கக்கிடைக்கிறது. 1905 காசிக் காங்கிரசிலும் 1906 கல்கத்தா காங்கிரசிலும் சகோதரி நிவேதிதா அழைக்கப்பட்டு பார்வையாளராகக் கலந்துகொண்டிருக்கிறார். ஏனெனில் தீவிர இரகசிய இயக்கங்களில் ஈடுபட்டிருந்த தலைவர்களுக்கு காங்கிரசில் நேரடிப் பங்கேற்பு அக்காலத்தில் அனுமதிக்கப்படவில்லை. டம்டம் நகரில் ஒரு மாளிகையில் இரகசியக் கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்தக் கூட்டத்திற்குச் சகோதரி நிவேதிதாவும் வந்திருந்து பேசுகிறார். பாரதியும் அவரது நண்பர்களும் அவரைச் சந்திக்கின்றனர். பாரதி சில பாடல்களைப் பாடுகிறார்.  நிவேதிதாவும் பாரதியும் உரையாடுகின்றனர். பாரதி திருமணமானவர் என்று தெரிந்துகொண்டதும் மனைவியை அழைத்து வராததன் காரணத்தைக் கேட்கிறார் நிவேதிதா. ‘அவ்விதம் பொது இடங்களில் சரிசமமாக மனைவியை அழைத்துவரும் வழக்கம் இல்லை’ என்றும் அவ்வாறு ‘மனைவியைக் காங்கிரசுக்கு அழைத்துவருவதால் பயன் என்ன கிடைக்கப்போகிறது?’ என்றும் பாரதி மிக இயல்பாகப் பதிலளிக்கிறார்.  சகோதரி நிவேதிதா கொதித்துப்போகிறார். ‘சமூகத்தில் பாதியான பெண்களை அடிமையாக வைத்துக்கொண்டே மறுபாதிமட்டும் விடுதலைபெறமுடியாது. உன்னைப்போன்ற படித்தவர்களே பெண்களோடு சமத்துவம் பேணவில்லையெனில் எப்படி இந்தத் தேசத்தில் சமூகச் சீர்திருத்தங்கள் மலரும்? பெண்களும் ஆண்களுக்கு நிகராகப் பொது இயக்கங்களில் வராதவரை இந்தத் தேசத்தின் விடுதலை சித்திக்கப் போவதில்லை’ என்றெல்லாம் பாரதியைக் கண்டித்துப் பேசுகிறார். ‘இனியேனும் மனைவியை உன் இடதுகையெனக் கருது. மனத்தில் அவளைத் தெய்வமெனப் போற்றி வா’ என்கிறார். இதைத்தான் பாரதி, ‘சொன்ன சொல் ஏதென்று சொல்வேன்’ என்று குறிப்பிடுகிறார். பிறகு நடந்ததை திரு.குஞ்சிதபாதம், பாரதி தம்மிடம் கூறியதாகத் தாம் எழுதிய கட்டுரையில் விவரிக்கிறார். ஒரு தருணத்தில் பாரதியைக் கைப்பிடித்து மாளிகைக்கு வெளியே தனியே அழைத்து வந்த நிவேதிதா, பாரதியை அங்கிருந்த ஒரு ஆலமரத்தடியில் நிறுத்தி பாரதியிடம், ‘அதோபார், பாரதமாதாவின் அற்புத தரிசனத்தை’ என்றாராம். பாரதியார் அவர் காட்டிய திசையில் பார்க்கிறார். நிவேதிதாவின் வார்த்தைகள் அத்தனைச் சக்தி மிக்கவையா என்ன! பாரதி பாரதமாதாவின் சம்பூர்ண ரூபத்தைக் காண்பதாகப் பிரமை கொள்கிறார். ‘எனைச் சூதாய் தனிக்கவே சும்மா யிருத்தி முன்னே ஏதுமில்லாதே –  சுக முற்றச் செய்தே எனைப் பற்றிக் கொண்டார்.’ ‘பார்த்தவிடத்தே பெற்றதை ஏதென்று சொல்வேன்’ என்ற சொல்லாடல் இந்த ஆவேசப் பரவசத்தையே நம் கண்முன் நிறுத்துகிறது. ‘பாரத மாதாவின் ஆணையைக் கேட்டுக்கொள். உன் கவியாற்றலை அன்னையின் சேவைக்கே அர்ப்பணிப்பாயாக’ என்ற நிவேதிதாவின் குரல் பாரதியின் உள்ளத்தின் உள்ளே ஒலிக்கிறது. சகோதரி நிவேதிதா பாரதியைத் தொட்டுப் பிரமை கலைக்கிறார். அந்த ஆலமரத்தின் இலை ஒன்றைப் பறித்து பாரதியிடம் கையளித்தார். தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரததேவியின் தொண்டிற்கே என்ற சங்கல்பம் போல பாரதி அதை வாங்கிக்கொண்டார். அந்த ஆலிலைப் பிரசாதத்தை வெகுகாலம் பாரதி பொக்கிஷம்போல் பாதுகாத்துவந்தார் என்று செல்லம்மா கூறுகிறார். ‘சற்றும் பேசாத காரியம் பேசினார் தோழி’ என்ற சொற்றொடரால் பாரதி ‘குருமணியின் தரிசன’த்தைப் பேசுகிறார். ‘அதன்பிறகு தம் உள்ளத்திலிருந்து தேசபக்தி ததும்பிக்கனிந்த பாடல்கள் வெள்ளமாய்க் கொட்டலாயிற்று’ என்றாராம் பாரதியார். நிவேதிதா தேவியுடனான சந்திப்புக்குப்பிறகு மகாகவி பாரதி தனது பாடல்களிலும் கட்டுரைகளிலும் பெண்ணியக் கருத்துகளைத் தொடர்ச்சியாகப் பேசிவந்தார். 1906இல் அவர் பேசியதன் வீச்சு பின்னாளில் 1920களில் பெரியாரியத்தில் பூரணம்பெற்றது என்பதை அறிகிறோம். சாதி மறுப்பு மற்றும் பெண்ணியக் கருத்துகளின் ஆரம்பம் இந்தச் சந்திப்பு என்பதை இந்தத் தருணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்.

தொலைந்த நூலகம்

தொலைந்த நூலகம்

அறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு அஞ்சலி ஒரு பல்கலைக் கழகம் கலைந்துவிட்டதுஒரு நூலகம் தொலைந்துவிட்டது ஓர் அவை ஒரு சபை என்றால்அதில் ஔவை இருந்தால்அதற்கு ஒரு கௌரவம் கடற்கரையோபுகைவண்டி நிலையமோஅவர் இருக்கும் இடம்தமிழ்ச்சங்கம் ஆகிவிடும் அங்கே தமிழ் விளையாடும்அங்கே கவிதை பூத்துக்குலுங்கும்கலைகள் அங்கே களைகட்டும் அறிஞர்களின் அறிஞரைஇழந்துவிட்டது தமிழ்புலவர் கோபோய்விட்டார் நம்மை விட்டு ஒரு பாடலுக்கு அவர் உரை சொல்வதைமூல ஆசிரியன் நேரில் கேட்டால்நிச்சயம் அவரைமுத்தமிட்டு உச்சிமுகர்வான் இயல் இசை நாடகம்மூன்று தமிழும் அறிந்தவர் தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கியம்அவரது நுனிநாக்கில் இருந்தது ஆங்கில இலக்கியம்தோதறிந்துதுணைவரும் அவருக்கு தரையே மேடை, பேச்சே உரைமேடை தேவை என்றால்சம்பிரதாயத்துக்காகப் போடலாம் 24 மணி நேர அறிஞர்உலக வரலாறு, தமிழ்ப் பண்பாடுஇரண்டும் இணையும் புள்ளியைத்துல்லியமாக ஆய்ந்தறிந்த பேராசிரியர் இலக்கணம் எனும் இரும்புக் கடலைஇவருக்கு மட்டும்பஞ்சு மிட்டாயாக இளகும்திருக்குறளும் சிலம்பும்அந்நியோனியமாய் அவர் நாவில் பழகும் மேடையேறிப் பேசும்போதுஎங்கிருந்தோ யார் யாரோபொருத்தமான நூல்களைநம் கண்ணுக்குத் தெரியாமல்அவருக்கு நீட்டுவார்கள்அபூர்வமான மேற்கோள்களைஅவர் கண்களில் காட்டுவார்கள் கம்பனோடு ஷேக்ஸ்பியரைக்கைகுலுக்க வைப்பார்கபிலரையும் கீட்சையும்தோளோடு தோள்கைபோட்டு நடக்கவைப்பார் தொல்காப்பியர் திருவள்ளுவர் எல்லாம்அவரது தோழர்களோகம்பன் இளங்கோ பாரதி எல்லாம்அவருக்கு நண்பர்களோஎன்று நினைக்கத் தோன்றும் நேற்றைய பெருமையை மட்டும் அல்லஇன்றின் அருமையும் அறிந்தவர் இன்றைய இலக்கியம் வரைக்கும்அவரது பார்வை படர்ந்ததுஆனால் இந்த நாள்ஏன் இப்படி முடிந்தது? எங்கு காண்போம் இனிஇவர் போல் ஒருவரை?எக்காலம் அடைவோம்இவர் போல் ஓர் அறிஞரை?

அடிக்கும்போதும் வராத அப்பா

அடிக்கும்போதும் வராத அப்பா

‘அப்பனை முழுங்கின சனியன்’ என்றுபாட்டி திட்டும்போதெல்லாம்என் தோழிகளின் அப்பாக்களைநினைவு கூர்வேன்அவ்வளவு உயரமாக இருக்கும் அப்பாவைநான் எப்படி விழுங்க முடியும் என்றுபுரியாமல் விழித்துவிட்டுபாட்டியிடம் கேட்டிருக்கிறேன்சிலசமயம் பாட்டி அடிப்பதுண்டுசிலசமயம் அலுப்பதுண்டுசிலசமயம் என்னை அடித்துவிட்டுஅவளும் அழுவாள்ஆனால் நான் எப்போதும்அப்பா என்றுதான் அழுதிருக்கிறேன்அப்பா என்று சொல்லி அழதே என்றுமேலும் அடித்திருக்கிறாள் பாட்டிஆனால் ஒருமுறைகூடஅப்பா வந்ததே இல்லை. பவித்ரா பாண்டியராஜூ

நினைவுகளின் துகள்

நினைவுகளின் துகள்

ஏதோ பழைய பொருட்களைபோட்டுவைப்பதைப் போலஎன் நினைவுகளைஒரு மூலையில் போட்டு வைத்திருக்கிறாய்என்றாவது ஒருநாள்உனக்குத் தேவையற்றதாகிவிடும் என்கிறாய்என் நினைவுகளின் மேல்புதிதாய் ஒரு பட்ரோஸ் செடி பூத்துக் குலுங்கலாம்அல்லதுமண்தொட்டியில் களை மண்டிக்கிடக்கலாம்அல்லதுஉன் பூச்சாடியில் மரம் முளைத்திருக்கலாம் ஆனால் நானோஇந்த நினைவுகளுக்குதினமும் சிரட்டையில் தானியம் இடுகிறேன்புராதனமான பொருட்களைப் போல்பத்திரப்படுத்துகிறேன்ஒருநாள் என் கல்லறையைத் தோண்டும்போதுஉன் கரங்களில் என் நினைவுகளின் துகள் வந்து விழும்தானே! பவித்ரா பாண்டியராஜூ

சாகாவரம் தேடு

சாகாவரம் தேடு

என் மனதுள் நுழையமுனைந்து முனைந்து என்னால்விரட்டப்படாமல்வாசலில் நிற்பவனே!! உனது அன்பின் ஆழம்மாவலி கங்கையின் நீளத்திலும்நீளமானதுஅறிவேன் நன்கு. என் விழிகளில் விழி நுழைத்துமுகம் புகழ்ந்துபருவத்தின் மீது புராணம் பாடிபாதச்சுவடுகளின் மீதுலவுகிறாய் என் செய்வேன்?உன் மீதுபரிதாபம் மட்டுமேபட முடிகிறது உலகம் நானென்கிறாய் – உலகவிந்தை நானென்கிறாய்கவிதைகளும் காட்சிகளும்அனைத்தின்பமும் நானென்கிறாய்எத்தனை பொய்!!! பகலின் இரவுகளில்நாடு கடத்தப்பட்டுகாடுகளின் சுதந்திரச் சிறைகளில்மனித இயந்திரங்களாய்இருநூறாண்டுகள் இருளுக்குள் உழலும் மக்கள்கூட்டத்திலிருந்துஎழுந்து வந்தவன் நீநினைவுகளை ஞாபகத்திற்கழை. எவனெவன் வாழ்வுக்கோ உதிரம் சிந்திஉழைத்து மரிக்கும்அறியாமைகளுக்குஉனை விட்டால் ஒளிப்பிழம்பு யார்? உலக விழிகளால்மறுதலிக்கப்பட்ட அந்த உலகம்உன்னிடம் எதையெதையோபார்த்திருக்கிறது!!! அதன்காய்ந்து வறண்டதொண்டைகளில்தாகம் ஏக்கம்பசி கனவு! விழிகளுக்கு மிக அருகாமையில்விழித்து நிற்கும்பொறுப்புகள் கடமைகள் துறந்துமேல் வர்க்க இளைஞனாய்வாலிபத்தைசல்லாபத்தி லிடுகிறாய். எத்தனைத் துயரேற்றாள்உன் தாய் உனை ஈன; உனை வளர்க்க??எத்தனை இடர் கடந்தார்உன் தந்தை நீ பள்ளி செல்ல??எத்தனை துன்பமுற்றமக்கள் கூட்டம் உன் மண்ணில்?? விருப்பமில்லா விடுமுறையில் உன்ஏழையூர் விரைகையில்அம் மலையக மனிதரின் விழிகளில்இல்லாமையும் இயலாமையும்இணைத்திசைக்கும்துயர கீதங்களைக்கேட்டிருக்கிறாயா? ஒழுகும் கூரைகளின் கீழ்உறக்கங்களை வழியவிட்டஇரவுகளின் அழுகையொலிகள்எட்டியிருக்கறதா உன் செவிகளுக்கு? பசுமை அடர்ந்த உயர்ந்த மண்ணில்தாழ்வுடைய வறண்டவாழ்வின் சுமைகளைத்தராசிலிட்டிருக்கிறாயா? இனத்தால் பொருளால்சாதியால் நிறத்தால்விலக்கப்பட்டவர்களுக்குவிடுதலைக்காய் முழங்கப்போகும்குரல் யாருடையது?? பரம்பரையைப் பரிசளித்து வளர்த்தமண்ணை மூழ்கடிக்கும்அதிகாரங்களுக்கெதிராய்நிமிர்வது யார்??விடைகாணா வினாக்கள்ஆயிரமிருக்க நீயோ…..வலிமையை இளமையைஎன் நடைபாதையெங்கும்பூக்கள் விரிக்கச் சிந்திக் கொண்டிருக்கிறாய் இளமையின் சுகிப்பைவியர்வையூரியகருப்பு மண்தந்த எழுத்துக்களால்அலங்காரப்படுத்துகிறாய். எப்போது அவர்களின்அழுகை தடுக்கும்ஆயுதம் செய்ய உன் அறிவைக்கருவாக்கப் போகிறாய்??? இங்கு உன்னையும் என்னையும்இணைத்த இப்பெரும்பல்கலைகழக மெனும்அறிவாலயம்மனிதர்களுக்கான மனிதர்களைஉரு செய்யவே உழைக்கிறது. இங்கு மனிதனாவது சாதரணம்!மனிதர்களுக்கான மனிதராவதேசாகாவரம். நீசாகாவரம் பெறுஅப்போதுஉன் காதல்மறுபரிசீலனைக்குட்படலாம்!! ஏனெனில்நான் நம் மண்ணையும் மக்களையுமேசிந்தித்துக் கொண்டிருக்கிறேன் எஸ்தர், மலையகம், இலங்கை

வாசிப்பைத் திசை திருப்பிய வண்ணதாசன்

வாசிப்பைத் திசை திருப்பிய வண்ணதாசன்

வண்ணதாசன் பிறந்தநாள் சிறப்புப் பதிவு 1982ல் நான் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது எங்கள் அக்கிரஹாரத்தினர் அனைவரும் மெஜுரா காலேஜ் அல்லது அமெரிக்கன் காலேஜில்தான் சேருவார்கள். அவை இரண்டும் தன்னாட்சிக் கல்லூரிகள், அதிலும் மெஜுரா காலேஜில் டபிள் மேஜர், கெமிஸ்ட்ரி பேராசிரியர்களாக நண்பன் விஸ்வநாத்தின் மாமா நடராஜன், மற்றொரு நண்பர்களான கோபால் – வாசு என்ற இரட்டையர்களின் மாமா மீனாட்சிசுந்தரம் ஆகியோர் இருந்தது போன்ற காரணங்களால் நான் பிடிவாதமாக தியாகராஜர் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். எங்கள் தெருவினரில் 99 சதவிகிதத்தினர் தெப்பக்குளம் பக்கம் போனதேயில்லை. நான்தான் முதல் ஆள். நான் சேர்ந்ததால் கண்ணனும் அங்குதான் சேர்ந்தான் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவனும் சேர்ந்தான். கூடவே மேலே சொன்ன கோபால் – வாசு இரட்டையர்களும். படிப்பு ஒரு பக்கம், வாசிப்பு ஒரு பக்கம் என்று ஓடிக் கொண்டிருந்தது. மாதநாவல் ஒன்றில் பாலகுமாரனின் ஏதோ ஒரு நதி, சுப்ரமண்ய ராஜுவின் எங்கோ ஒரு இரவில் இரண்டையும் சேர்த்துப் போட்டுக் கலக்கினார்கள். இந்துமதி ஆசிரியராக இருந்த பிரியம்வதா காமிக்ஸில் சுஜாதாவின் நைலான் கயிறு வந்தது. ராணிமுத்துவில் மெக்கானிக் ஷாப்பில் வேலை பார்க்கும் சிறுவர்களை வைத்து சுஜாதா எழுதிய அன்று உன் அருகில் வந்தது. மகரயாழ் மங்கை, ஆலவாயழகன், திருச்சிற்றம்பலம் என்று வரிசையாக ஜெகச்சிற்பியனின் சரித்திர நாவல்களாக அவரது ஒரு ரசிகரிடமிருந்து ஓசி கிடைக்கும். வேறொரு புறம் அலைஓசை, பார்த்திபன் கனவு என்று ஓசி கிடைக்கும். புஷ்பா தங்கதுரை, ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார் பற்றி சொல்லவே வேண்டாம். எங்கும் கிடைக்கும். இன்ஸ்பெக்டர் சிங், ஏதோ ஷெர்லாக் ஹோம்ஸ் ரேஞ்சுக்கு துப்பறிவார். இப்படியாகக் காலம் போய்க் கொண்டிருந்தது. கண்ணனின் அத்தை வீடு அப்போது கிருஷ்ணாராயர் தெப்பக்குளம் அனுமார் கோவிலுக்கு எதிரில் இருந்தது. அனுமார் கோவிலுக்குப் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையில் மாத நாவல்கள் வாங்கிக் கொண்டு அப்படியே கண்ணனின் அத்தை வீட்டிற்கும் போய் வருவோம். அந்தப் பெட்டிக்கடையில் கல்பனா இதழில் சுஜாதாவின் மண்மகனை வாங்கி கடை வாசலிலேயே நின்று படித்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது. கண்ணனின் அத்தை பையன் ஐஓபியில் வேலை பார்த்தார். அவருக்கு 3 – 4 வயதில் ஒரு பெண்குழந்தை. அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இந்த முறை ஆண்குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசை. வியாழக்கிழமை தோறும் மாலையில் பூஜை செய்து பாயசம் நைவேத்யம் செய்து அதை பையன்களுக்குத் தந்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று யாரோ அந்த மன்னிக்கு பரிகாரம் சொல்ல, அவர் வாராவாரம் பூஜை செய்ய ஆரம்பித்தார். பாயசம் சாப்பிட நான், கண்ணன், ரவி, பாலன், கோபால், வாசு எல்லோரும் போவோம். கடைசியில் இரண்டாவதும் பெண் குழந்தைதான் பிறந்தது வேறு விஷயம் ! ஆனால், அவர்கள் வீட்டில்தான் எனக்கும், கண்ணனுக்கும் வாசிப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போகும் ஒரு அறிமுகம் கிடைத்தது. நாங்கள் பூஜை முடியும் சமயத்திற்குப் போவோம். பத்து நிமிடங்கள் காத்திருப்பதாகவே பெரும்பாலும் அமையும். அந்த வீடு ஒரு வக்கீலுக்குச் சொந்தமானது. டிவிஎஸ் கோவாப்பரேட்டிவ் ஸ்டோர்ஸ்க்கு அடுத்த வீடு. முன் போர்ஷனில் வக்கீல் வீடு. பின் போர்ஷன்களில் கண்ணன் அத்தையும், மற்றொரு குடும்பமும் குடியிருந்தார்கள். பூஜை நேரத்தில் வக்கீல் மாமியும், மற்றொரு குடும்பத்தின் மாமியும் வருவார்கள். அப்போது நாங்கள் கல்லூரிக்கு வந்து விட்டதால் இயல்பாகவே எதிர்பாலினரை கவனிக்கும் குறுகுறுப்பு வந்துவிட்டது. கண்ணன், கோபால், வாசு ஆகியோர் மனைமாட்சியிலிருந்து நேரே எழுந்து வந்தவள் போல் இருந்தாள் என்பாரே சுஜாதா, அது மாதிரி மனைமாட்சி லுக்கில் யாரேனும் இருந்தால் உருகிவிடுவார்கள். நான், ரவி, பாலன் மூவரும் ஜெயமாலினி மாதிரி இருப்பவர்களைத் தான் பார்ப்போம். வக்கீல் மாமி நடிகை சுமித்ரா ஜாடை. மற்றொரு மாமி சி.ஐ.டி.சகுந்தலா ஜாடை. சகுந்தலா மாமியின் கை உருண்டு திரண்டு பயில்வான் மாதிரி இருக்கும். மாமி குட்டைக் கை ரவிக்கை போட்டு கையின் திண்மையை இன்னும் சற்று enchance செய்வாள். சி.ஐ.டி. சகுந்தலா மாமி அவ்வப்போது என்னிடம் “நீங்க தெலுங்காளா? மராட்டிலதானே ராவ்னு வெப்பா ! கூடப் பிறந்தவா எத்தன பேர்“? என்பது மாதிரி சி.ஐ.டி கேள்விகள் கேட்பாள். நானும் மாமி,மாமி என்று ஓவராக பாசம் பொங்க, குஷியாக பதில் சொல்வேன். சுமித்ரா ஜாடை மாமியை நான் கண்டு கொண்டதே இல்லை. நீங்கள் எதிர்பார்த்தபடியே சி.ஐ.டி.சகுந்தலா மக்கு. வக்கீல் வீட்டு சுமித்ரா மாமி அறிவாளி. அதிலும், அந்த மாமி வண்ணதாசன் படிப்பவராக இருந்தார். ஒரு சுபயோக, சுபதினத்தில் கண்ணனுக்கு வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தைத் தந்தாள். அதற்கு முன்பே அன்னம் நவ கவிதை வரிசையின் புலரி மூலமாக கல்யாண்ஜியாக அவரை எங்களுக்குத் தெரிந்தாலும், அவரது சிறுகதைகளைப் படித்ததில்லை. உண்மையிலேயே எங்கள் வாசிப்பைப் புரட்டிப் போட்ட எழுத்து அது. அந்த தனுமையை வாழ்க்கையில் மறக்க முடியுமா? தனலட்சுமியையும், ஞானப்பனையும். டெய்சி வாத்திச்சியையும், சைக்கிளில் வரும் ஆங்கிலோ இந்தியப் பெண்ணையும் கண் முன்னே நிறுத்தின எழுத்து. அவர்கள் எல்லோருமே நிஜம். அது வண்ணதாசனின் கல்லூரி நாட்களின் கதை என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன். ஞானப்பன் அவரது அறை நண்பராம். இந்த நல் உணவை தந்த நம் இறைவனைப் பாடுவோம் என்ற பாட்டும் நிஜம். நிஜம் தவிர வேறில்லை என்று சொல்லியிருந்தார் வண்ணதாசன். கண்ணனும், நானும் வண்ணதாசனைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்தோம். எத்தனை கதைகள்… எல்லாமே மனதுக்கு மிக நெருக்கமாக, என் கதையாக, அல்லது எனக்கு மிகவும் நன்றாகத் தெரிந்தவர் ஒருவரின் கதையாக … இதை எழுதும் போதே சில பழைய பாடல்கள் கதை ஞாபகத்திற்கு வருகிறது… அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் வேண்டுமா? அன்பே வா…. அழைக்கின்ற தெந்தன் மூச்சே…, தென்றலே நீ செல்வாய் எங்கும் நில்லாமல் செல்வாய்…. என்று இலங்கை வானொலியை நினைவூட்டும் அற்புதமான கதை… அதிலும், நீ வரவில்லையெனில் ஆதரவேது… என்ற பாடல்… கண்டசாலா மாதிரி பாடும் சத்யம்… கடைசியில் கதையின் முடிவில் வருவேன் நான் உனது மாளிகையின் வாசலுக்கே…. இந்தப் பாடல்களில் எதை நினைத்தாலும், அல்லது கேட்டாலும், அந்தக் கதையும், வண்ணதாசனும் தானே நினைவிற்கு வருகிறார்கள் ! தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்களில் வரும், “எங்க அம்மையில்ல”. படிக்கும் போது அப்படிச் சிலிர்த்திருக்கிறேன். பின்னாளில் பலரும் மோகமுள்ளின் ”இதுக்குத்தானா பாபு?” என்ற வரியை சிலாகிக்கும் போதெல்லாம், என் மனம் டெய்சி வாத்திச்சியின், “தனலட்சுமி தான் வேணுமாக்கும்?” என்ற கேள்வியை நினைத்துக் கொள்ளும். கடைசி வரியில் ஒரு அழுத்தம் என்ற ஒரு அம்சத்தின் மீது எனக்கு ஒரு தனி காதல் வரக் காரணமாக இருந்தது வண்ணதாசனின் பல கதைகளின் கடைசி வரிகள்தான்.. தேர் நிலையத்துக்குள் இருந்து கோமுவை அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது…என்றொரு கடைசி வரி. போலாமா என்று என்னிடம் கேட்டாலும், போய்க்கொண்டே இருப்பவள் என்று அவளைப் பற்றித் தோன்றியது… என்றொரு கடைசி வரி.. வீட்டுக்கு ஒரு நாள் வாயேன் ராஜீ என்றேன். வருகிறேன் என்று கூடச் சொல்லவில்லை. என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டதில் சந்தோஷம், என்று சொன்னாள். அது இவ்வளவு பெரிய விஷயமாகி விட்டிருக்கிறது அவளுக்கு ! என்றொரு கடைசி வரி.. ஈஸ்வரி ஓடையில் நின்றுகொண்டிருந்தாள், என்றொரு கடைசி வரி. எதை எழுத வேண்டும் என்கிறது போல, எதை எழுதக் கூடாது என்கிறதும் எனக்குத் தெரியாதா சின்னம்மா? எனக்கும் கொஞ்சம் புரிந்து எழுதுகிற வயதாகிவிட்டதில்லையா இப்போது? என்றொரு கடைசி வரி. இவை கடைசி வரிகளல்ல உண்மையில் வேறொரு கதையின் ஆரம்ப வரிகள் என்பதைப் புரிந்து படிக்கும் வயது எனக்கு வந்தபோது, நான் நல்ல வாசகனானேன்! [எனது ‘வாசிப்பு அறிந்ததும், அடைந்ததும் தொகுப்பிலிருந்து’] என் அன்பிற்குரிய வண்ணதாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும் வணக்கமும். முகப்பு ஓவியம்: கனலி கட்டுரை: ச. சுப்பாராவ், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்

ஈசனின் நிர்வாணம்

ஈசனின் நிர்வாணம்

ஏதோவொரு தெருக்கூத்து நாடகத்தை போலஇந்த சூரியப்பகலில் நடந்துக் கொண்டிருக்கிறேன் ஈசனின் நிர்வாணத்தை மறைக்கும்சாம்பலின் நிறத்தில்எங்கோ எரியும் காட்டுத்தீயின் புகையைமேகமாக்கி என்னிடம் இழுத்து வருகிறாய் சலங்கை கட்டி ஆடும் கிளைகளும்தூரத்து மண் வாசமும்கொல்லையில் ஓயாது கத்தும் கன்றும்ரசனையற்றவளின் கண்களில் காட்சிகளாய் விரிக்கிறாய் பிணத்திற்கு முன்னால் ஓங்கி ஓங்கிஒப்பாரி வைக்கும்ரேடியோ பெட்டியைப்போலகேட்பாரற்று ஓரமாய் கிடக்கிறேன் அனுமானங்களை என்னுள் நிரப்பிவெப்பத்தை உள்வாங்கிக் கொண்டு வியர்வையை துளிர்க்க விடுகிறாய் முதிர்கன்னியின் மரணத்திற்குவயிற்றுவலிப் புனைக்கதைக் கேட்கும்பிணத்தைப் போலநடுவீதியில் படுத்துறங்கும் என்னுள்ளே வீசுகிறதுமரணத்திற்கான சிறு ஓலம். பவித்ரா பாண்டியராஜு

பதவி வாங்கும் கருவி

பதவி வாங்கும் கருவி

கவிஞர் பொன்மணிதாசன் கவிதை பெட்டியிலே பணமிருக்கும்பேருசொல்ல ஆளிருக்கும்வட்டிக்கென்று சென்றபணம்வளர்ச்சியிலே தானிருக்கும் ஒட்டிசில உறவிருக்கும்உறவினிலும் முரணிருக்கும்அட்டியிலை பெற்றப்பேருஆகாசம் தொட்டிருக்கும்! வீட்டுக்கே சாமிவரும்வீராப்பு பேசவரும்ஓட்டுக்கு பணங்கொடுத்தால்ஓடோடிப் பதவிவரும் மாட்டுக்கும் மரியாதைமறக்காமல் தேடிவரும்நாட்டுக்குள் இவருக்கென்றுநாற்புறமும் புகழுவரும்!  வந்தநோய் விரட்டவரிசையிலே மருத்துவரும்அந்தநோய் தீர்ப்பதற்குஆயிரமாய் செவிலியரும் எந்தபணம் கொடுத்தாலும்ஏற்காமல் முதுமைவரும்அந்தநாள் வந்துவிட்டால்அடுத்தநொடி தனிமைவரும்! அறிவார் அறியவரும்அறிவார்ந்த தத்துவத்தைவிரிவாய் சொல்வதென்றால்விடுகதை யந்தவித்தை புரியாமல் ஆடும்களம்பூமியடா நீயறிந்தால்தெரியாமல் வந்தநிலைதெளிவாக்கு மிந்தகதை! பொன்மணிதாசன்

காவியக் கலை

காவியக் கலை

கவிஞர் பொன்மணிதாசன் கவிதை புன்னகை யொளியில் பூத்தநல் என்னை சிலிர்ப்பாக்கும் – அவள்கண்ணடி காணும் கவிதை மொழியோகண்களை விரிவாக்கும்! விரிகுடை போலிரு விற்புரு இரண்டுவிழியிடம் கடன்கேட்கும் – நான்சொரிகிற பார்வை சூட்சம மறிந்துசூடும் நாணமதுவாக்கும்! கரைய மறந்த கார்முகில் குழலதுகாலை தான்நோக்கும் – என்விரல்சிறைபடச் செய்த சிகையின் அழகுசேர்த்தநல் வலையாக்கும்! வரைய இருந்த வனப்புறு அழகின்வடிவம் அவளாக்கும் -நான்நிறைய நிறைய நினைத்த வண்ணநித்திலப் பூவாக்கும்! உண்டு உருண்டு உதடுகள் உலரஉணர்வுகள் உசுப்பேத்தும் – தேனில்வண்டு விழுந்த வகையென் மனதுவழிதொட கொதிப்பேத்தும்! கண்டு நெருங்கி கலப்பது காவியகலையில் ஒன்றாக்கும் – அவளைக்கொண்டு குலவி கொஞ்சும் வேளைகுமணன் நானாக்கும்! பொன்மணிதாசன்

வாழும் கவிஞன் வாலி

வாழும் கவிஞன் வாலி

கவிஞர் வாலியின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர் பாடல்களோடு சிறு பயணம்: “நன்றி சொல்லவே உனக்குஎன் மன்னவா வார்த்தை இல்லையேதெய்வம் என்பதே எனக்குநீயல்லவா வேறு இல்லையே” இன்று அதிகாலை காரில் உட்கார்ந்தபோது, பனிக்குளிரைக் கிழித்துக்கொண்டு எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும்போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள்; அவர் எழுதிய பாடல் முக விசேடம். கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,தான் ஒரு படைப்பாளி, என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை அவர் நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார். அதே சமயம், கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார். அதனால்தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டப்பட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும் “நன்றி சொல்லவே உனக்கு, என் மன்னவா வார்த்தை இல்லையே” பாடலும் பிடிக்கும்; அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும், “சின்ன ராசாவே…..சித்தெறும்பு என்னைக் கடிக்குது” பாட்டும் பிடிக்கும். இரண்டுமே வாலியின் பாடல்கள்தான். இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார். “அந்த நாள் ஞாபகம்நெஞ்சிலே வந்ததே வந்ததேநண்பனே…..” என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர்தான், “நிலவிடம் வாடகை வாங்கிவிழி வீட்டினில் குடி வைக்கலாமா…நாம் வாழும் வீட்டுக்குள்வேறாரும் வந்தாலே தகுமா…..” என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன?!! “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி? சமைஞ்சது எப்படி?” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.“டாலாக்கு டோல் டப்பிமா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் போடுவது வாலியின் பண்பு. ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.எப்படி, அழுத்தமான சூழல் ஒன்றில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ, அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப் பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ, அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார். இயக்குநர் கதிர் – இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால்தான் நமக்கும் “யாப்போடு சேராதோபாட்டு தமிழ்ப் பாட்டுதோப்போடு சேராதோகாற்று பனிக்காற்று….” என்று இதயத்திலும் “ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்அன்பே உன் பேரைச் சிந்தித்தால்தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்கண்ணே நம் கண்கள் சந்தித்தால்நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..” என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது. “அன்னமிடும் கைகளிலேஆடிவரும் பிள்ளை இதுஉன்னருகில் நானிருந்தால்ஆனந்தத்தின் எல்லையதுகாயத்ரி மந்திரத்தைஉச்சரிக்கும் பக்தனம்மாகேட்கும் வரம் கிடைக்கும் வரைகண்ணுறக்கம் மறந்ததம்மா” தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி – இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை “தாமரை மேலே நீர்த்துளி போல்தலைவனும் தலைவியும் வாழ்வதென்னநண்பர்கள் போலே வாழ்வதற்குமாலையும் மேளமும் தேவையென்ன?” என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில் “நிலவினை நம்பி இரவுகள் இல்லைவிளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லைஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…” எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது. அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில் முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம். “மல்லிகை முல்லைப் பூப்பந்தல்” என்று “அன்பே ஆருயிரே” (1975) க்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக எழுதி, அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் சுவீகரித்துக் கொண்டவர், 30 வருடங்கள் கழித்து மூன்றாம் தலைமுறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் “மயிலிறகே மயிலிறகே” என வருடும் வரிகளோடு அதே “அன்பே ஆருயிரே” தலைப்பில் வெளிவந்த இன்னொரு படத்திலும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். இவையெல்லாம் தன்னைப் பிரச்சாரப்படுத்திக் கவர்ந்து கொண்ட வாய்ப்புகள் அல்ல. அவர் மீதான ஈர்ப்பால் தானாகத் தேடி வந்தவை. கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை; அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள்.இன்னொரு பரிமாணமும் இருக்கிறது, அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும். தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத்தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி. கானா பிரபா

ஆனந்த யாழ் மீட்டியவன்

ஆனந்த யாழ் மீட்டியவன்

நா.முத்துக்குமார் தொண்ணூறுகளின் இறுதியிலேயே வந்து விட்டாலும் இரண்டாயிரத்தின் மத்தியப் பகுதியில் இருந்து 2015 வரை உச்சத்தில் இருந்த பாடலாசிரியர். பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ,வாலி, வைரமுத்து, பழனி பாரதி என்று தனி ஆளாகத் திரைத்துறையில் கோலோச்சிய பாடலாசிரியர் வரிசையின் கடைசிக் கண்ணி அவர்தான். இனி தனி ஒருவருக்கு அந்த இடம் சாத்தியமில்லை. இரண்டாயிரத்துக்குப் பிறகு அப்படி ஒரு நிலையில் அவரும் இருந்ததே பெரிய விஷயம். அந்த வகையில் அவர் முக்கியமானவர். அவருடைய வெற்றி என்பது யுவன் மற்றும் ஜி.வி யின் வெற்றியும்தான். நிறைய பேர் நா.முத்துக்குமார் குறித்துப் பேசுகிறபோது, யுவனைப் பேசுகிற அளவுக்கு ஜி.வி. குறித்துப் பேசுவதில்லை. ஆனால் வெயில், கிரீடம், அங்காடித் தெரு, மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள் ஆகிய ஜி.வி.யின் முக்கியமான ஆல்பங்களில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் நா.முத்துக்குமார்தான். ‘தலைவா’விலும் சில பாடல்கள் எழுதியிருக்கிறார். இன்னும் நிறைய பாடல்கள் உண்டு (பலர் ஜி.வி.இசையமைத்த பாடல்களையும் யுவன் என்றே நம்பிக் கொண்டிருக்கின்றனர்). இந்த இருவரைத் தவிர பிறருக்கும் எழுதியிருக்கிறார். அவ்வளவு எளிதில் யாரும் ஊடுருவி விட முடியாத ரஹ்மானின் கோட்டைக்குள்ளேயே ஊடுருவி, ஆறு படங்களில் பாட்டு எழுதி விட்டார் (பல்லேலக்கா – சிவாஜி, வளையபட்டித் தவிலு- அழகிய மகன், ராத்திரியின் சொந்தக்காரா- பார்த்தாலே பரவசம், டாக்ஸி டாக்ஸி- சக்கரக்கட்டி, ஜோதா அக்பர், சர்வம் தாளமயம்) பட்டுக்கோட்டையின் பலம் சமூகம். கண்ணதாசன் மரபு சார்ந்த தமிழ் வாழ்வியலையும் பக்தி மரபையும் எளிமைப்படுத்தித் திரையில் தந்தவர். வைரமுத்து மரபு இலக்கியத்தை நவீன சிந்தனைகளோடு இணைத்தவர்; கூடுதலாக கிராமிய வாழ்வியலையும் நவீன வாழ்வின் பல்வேறு கூறுகளையும் திரையில் வடித்தவர். அறிவுமதி தனக்கான தனித்துவத்துடன் கூடிய கவிஞர்; அப்துல் ரகுமானின் திரையுலக பிம்பம்‌. பழநி பாரதி நவீன மெட்டுகளுக்கேற்ப, தாளங்களுக்கேற்ப கவித்துவத்துடன் கூடிய புதுமையான வரிகளைக் கண்டறிந்தவர். தாமரை காதலின் பெண் மொழியை பாடல்கள் வழி பேசியவர். வாலி இந்தக் கணக்கில் வர மாட்டார். அவர் பாத்திரத்தின் வடிவத்தைத் தானும் அடைந்து விடும் நீர் போன்றவர். அவர் பலம், பலவீனம் இரண்டுமே இதுதான். ஆனால், இயற்கை சார்ந்த ஜென் மனநிலையையும் பித்தேறிய காதலின் உளறல்களையும் தனித்துவமாக பாடல்களில் வடித்தவர் நா.முத்துக்குமார்தான். ‘மின்சாரக் கம்பியின் மீதுமைனாக்கள் கூடு கட்டும்’என்பதெல்லாம் அழகிய படிமம். ‘காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்காற்றிடம் கோபம் கிடையாது’என்று கேட்பதற்கு மரங்களோடு உறவாடுகிற மனநிலை வாய்த்திருக்க வேண்டும். ‘தாராளமா மனசிருந்தாகேரளான்னு தெரிஞ்சுக்க’என்றெழுதிய ரசனை நிறைந்த குறும்புக்காரன். ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழைதன்னோய்க்கு தானே மருந்து’என்றார் வள்ளுவர். பிற நோய்களுக்கு மருந்து வேறிடத்தில் இருக்கும்; காதல் நோய்க்கு அதுவே மருந்து என்கிற வள்ளுவரின் சிந்தனையை‘காதல் நோய்க்கு மருந்து தந்துநோயைக் கூட்டுமே’என்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றவர். பெண்ணின் கண்களைப் பார்த்து‘உன் கண்கள்வண்டை உண்ணும் பூக்களென்பேன்’என்று சொல்வதற்கெல்லாம் எப்படிப்பட்ட ரசனை இருக்க வேண்டும்..!! ஆழமாக மட்டுமல்ல, எளிமையான வரிகளிலும் காதலைச் சொல்லி விட முடியும் அவரால்.‘அவள் அப்படி ஒன்றும் அழகில்லைஅவளுக்கு யாரும் இணையில்லைஅவள் அப்படி ஓன்றும் கலரில்லைஆனால் அது ஒரு குறையில்லை’என்பதுதானே சாமானியக் காதலனின் குரலாக இருக்க முடியும்..! ‘கொடுத்ததை திருப்பி நா கேட்ககடனா கொடுக்கலையேஉனக்குள்ளதானே நா இருக்கேன்உனக்கது தெரியலயேபாக்காத பாக்காதகுத்தும் பார்வையால்என்ன பார்க்காதேபோகாத தள்ளிப் போகாதேஎன்ன விட்டு விட்டுதள்ளித் தள்ளிப் போகாத’எவ்வளவு எளிமையான சொற்களில் மிகப்பெரிய உணர்வு சொல்லப்பட்டிருக்கிறது..! ‘கதைகளைப் பேசும் விழியருகேஎதை நான் பேச என்னுயிரே’என்று சொற்கள் திகைத்து நிற்கிற இடத்தையும் எல்லா கவிஞர்களையும் போலவே இவரும் அடையாளம் காட்டியிருக்கிறார். ‘பேசிப் போன வார்த்தைகள் எல்லாம்‌‌காற்றுவெளியில் கலந்தே இருக்கும்சாம்பல் உதிரும்.. வார்த்தை உதிருமா?பார்த்துப் போன பார்வைகள் எல்லாம்பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்உயிரும் போகும்.. உருவம் போகுமா?உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்‌விரல்கள் இன்று எங்கே?தோளில் சாய்ந்து கதைகள் பேசநமது விதியில் இல்லைமுதல் கனவு கண்டிடும் முன்னரேதூக்கம் கலைந்ததே’என்றெல்லாம் எழுத, காதலின் அமானுஷ்யத்தை உணர்கிற அரூப மொழியில் உழன்றவனாக இருக்க வேண்டும். பெண் குழந்தைகள் குறித்து அவர் எழுதிய பாடல்கள் ஊரறிந்தவை. பெண் குழந்தை பற்றிய திரைப்படப் பாடல்களில் ‘அபியும் நானும்’ படத்தில் வருகிற ‘வா வா என் தேவதையே’ பாடல்தான் எனக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பிடிக்கும் (வைரமுத்து).ஆனால், ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலில் கவித்துவமும் கற்பனையும் நன்றாக இருக்கும்.‘ஆனந்த யாழை மீட்டுகிறாய் – அடிநெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்அன்பென்னும் குடையை நீட்டுகிறாய்அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்’என்பது அழகான தொடக்கம்; சந்தேகமே இல்லை. ‘இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்பாஷைகள் எதுவும் தேவையில்லைசிறு பூவில் உறங்கும் பனியில் தெரியும்மலையின் அழகோ தாங்கவில்லைஉந்தன் கைகள் பிடித்து போகும் வழிஅது போதவில்லை இன்னும் வேண்டுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்பது அழகான ஏக்கம்; அதிலும் சந்தேகமே இல்லை. ‘தூரத்து மரங்கள் பார்க்குதடிதேவதை இவளா கேக்குதடிதன்னிலை மறந்து பூக்குதடிகாற்றினில் வாசம் தூக்குதடிஅடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?உனது புன்னகை போதுமடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்ற வரிகளிலும் அதே வாசம். ‘உன் முகம் பார்த்தால் தோணுதடிவானத்து நிலவு சின்னதடிமேகத்தில் மறைந்தே பார்க்குதடிஉன்னிடம் வெளிச்சம் கேட்குதடிஅதைக் கையில் பிடித்து ஆறுதல் உரைத்துவீட்டுக்கு அனுப்பு நல்லபடிஇந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கேஎன்றும் வாழவில்லை என்று தோன்றுதடி’என்கிற இடத்தில் டோஸ் ரொம்ப கூடி, காதல் பாடலின் மிகை வந்து விடுகிறது. சினிமா பாடலாசிரியர்களில் வைரமுத்துக்குப் பிறகு, கவிதைத் தொகுப்புகளும் நன்றாக அமைந்தது பழநி பாரதி, யுகபாரதி, முத்துக்குமாருக்கு மட்டுமே. கதை வடிவில் அவர் எழுதிய கவிதைகள் எல்லாம் எனக்குப் பிடிக்கும். இந்த நாளில் பிறந்தநாள் வாழ்த்து கூறுவதற்குப் பதிலாக, இன்னும் சில காலம் அவர் இருந்திருக்கலாம் என்று ஆதங்கப்படத்தான் தோன்றுகிறது. மானசீகன் ஓவியங்கள்: ரம்யா ரோஷன்

காலத்தால் அழியாத கவி கா. மு. ஷெரீப்

காலத்தால் அழியாத கவி கா. மு. ஷெரீப்

எளிமையான வார்த்தைகளைத் தேடிப்பிடித்து, பாமரனும் புரிந்துகொள்ளும் வண்ணம் பாடல்களை இயற்றுவதில் வல்லமை படைத்த, கதை, வசனகர்த்தா,எழுத்தாளர், கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்களது நினைவு தினம் இன்று. தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்று, சுயம்புக் கவிஞரான ‘காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவர் தஞ்சை மாவட்டத்தில் அபிவிருத்தீஸ்வரம் என்னும் ஊரில், 1914ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் காதர்ஷா ராவுத்தர். தாய் முகம்மது இப்ராகிம் பாபாத்தம்மாள். தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவும் இறைவன் கொடுத்த அறிவும் அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கின. 15ஆம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். ‘தமிழரசுக் கழகத்துடன்’ இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கிருஷ்ணமூர்த்தி, கு.மா.பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு முன் தோன்றியவர். “தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார். சிறுகதை நூல்கள் 3, நவீனம் 1, நாடக நூல்கள் 4, பயண நூல் 1, குறுங்காஇயம் 1, அறிவுரைக் கடித நூல் 1, இலக்கியக் கட்டுரை நூல் 1 எனப் பலவற்றை எழுதிக் குவித்தார். கவி கா.மு.ஷெரீப் கவிதைகள் மட்டுமல்லாது, இலக்கியத்தில் பல துறைகளிலும் நூல்கள் எழுதியுள்ளார். தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைந்தவர். அவரின் முதல் கவிதை “குடியரசு” ஏட்டில் 1934ஆம் ஆண்டு வெளிவந்தது. 1948இல் அறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தில், ‘திருநாடே’ என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி, அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி, திரை உலகுக்குள் மெல்ல நுழைந்தார். முதன் முதலாக இவர் 1948இல் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த “மாயாவதி” எனும் படத்திற்குத்தான் பாடல் இயற்றினார். முதல் பாட்டை ஏ.பி.கோமளா எனும் பாடகி பாடினார். அதனைத் தொடர்ந்து இவரது வெற்றிப் பயணம் மிக விரைவாகத் தொடர்ந்தது. பழைய திரைப்பாடல்களில் பல, இன்னும் புதிதுபோல் இருப்பதை இளம் ரசிகர்கள் கூட மறுக்கமாட்டார்கள். “ஏரிக்கரை மேலே… போறவளே பெண் மயிலே….!” என்று கம்பீரமாகவும் காதலுடனும் ஆரம்பிக்கும் ‘முதலாளி’ திரைப்படத்தில் வரும் பாடலை, கிராமப்புறத்தில் உள்ளவர்களெல்லாம் பாடிக்கொண்டு திரிந்த காலம் ஒன்று உண்டு. “சிட்டுக் குருவி… சிட்டுக் குருவி.. சேதி தெரியுமா? உன்னை விட்டுப் பிரிந்து போன கணவன் வீடு திரும்பலே” என்ற டவுன் பஸ் திரைப்படத்தில் வரும் பாடல், வில்லனுக்குக் கிடைத்த அபூர்வ டூயட்! மக்களைப் பெற்ற மகராசி என்ற திரைப்படத்தில் வரும் “ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா… உண்மைக்காதல் மாறிப் போகுமா?” என்ற இனிமையான பாடல், இன்றைக்கும் கூட நம் காதுகளில் ரீங்காரமிடுகிறது. இந்தப் பாடலில் இருக்கும் இனிமையோடு இன்னோரு ஆச்சரியமும் ஒளிந்திருக்கிறது. தமிழ்சினிமா மூலம் 40 ஆண்டு காலம் ரசிகர்களை மிரட்டிவந்த முதுபெரும் வில்லன் நடிகர். மிகச்சிறந்த அபூர்வக் கலைஞர், எம்.என். நம்பியார் – எம்.என்.ராஜம் இருவரும் சேர்ந்து பாடிய டூயட் பாடல் இது. “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா..!”, “பணம் பந்தியேயிலே குணம் குப்பையிலே… இதைப் பார்த்து அறிந்து நடக்காதவன் மனிதனில்லே..”, “வானில் முழு மதியைக் கண்டேன்.. வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன்”, “நான் பெற்ற செல்வம், நலமான செல்வம்..”, “உலவும் தென்றல் காற்றினிலே.. ஓடமிதே… நான் மகிழ ஊஞ்சலாடுதே…”, “வாராய் நீ வராய் போகுமிடம் வெகுதூரமில்லை…”, “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை…” “பொன்னான வாழ்வு மண்ணாகிப் போமோ… துயரம் இதுதானா?” போன்ற எண்ணற்ற அழியாப் புகழ்பெற்ற திரைப்படப் பாடல்களையும் எழுதியவர். 400-க்கும் மேற்பட்ட வெற்றிபெற்ற திரைப்படப் பாடல்களை எழுதி, திரைத் தமிழுக்கு மாபெரும் பங்களிப்பை செய்திருக்கிறார். இவர் திரைப்படத்திற்காக எழுதிய முதல் பாடல்” அல்லியின் வெண்ணிலா வந்தது போல்” என்று தொடங்கும் பாடல். 1948இல் வெளிவந்த ‘மாயாவதி’ என்ற படத்தில் இடம்பெற்றது. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதிய இவர், பெண் தெய்வம், புது யுகம் ஆகிய திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார். திருவிளையாடல் படத்தில் இடம்பெற்ற, ‘பாட்டும் நானே, பாவமும் நானே’ என்ற பாடலை கவி கா. மு. ஷெரீப் எழுதி இருந்தாலும் அது வேறொரு கவிஞர் பெயரில் வெளியானது. ஆனாலும் இவர் பெருந்தன்மையுடன் “கேட்பதற்கு நன்றாகத்தானே இருக்கிறது!” என்று குறிப்பிட்டதாக ஜெயகாந்தன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். “செங்கோல்” வார ஏட்டில் ஏராளமான தமிழ், தமிழர் சார்ந்த கட்டுரைகள் எழுதியுள்ளார். ஒளி, சாட்டை, தமிழ் முழக்கம் ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார். (1952-1962) “சிவாஜி” என்ற ஏட்டின் துணை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். திரை உலகத்தோடும், தமிழர் இயக்கங்களோடும், தொடர்பு கொண்டிருந்த அவர், தனது வாழ்வின் பின்னாட்களில் மிகச் சிறந்த ஆன்மீகவாதியாக மாறினார். சிந்தை அள்ளும் சீறாப்புராணத்திற்கு மிகச் சிறந்த உரை ஒன்றினை எழுதினார். இறைவனுக்காக வாழ்வதெப்படி?, இஸ்லாமும் ஜீவகாருண்யமும், இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, கிழக்கிலுள்ள பிறைக்கொடி நாடுகள், பயண நூல், ஆகிய இஸ்லாமிய சமயம், வாழ்வியல் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டிருந்த காலத்திலும் அதன் சீரழிவில் சிக்கிக் கொள்ளாதவர். ‘அழைத்தால் வருவோம்; வாய்ப்புக் கொடுத்தால் பாடுவோம்; யாரையும் சார்ந்து வாழ மாட்டோம்; யாரிடமும் எதையும் கேட்க மாட்டோம்’ என்ற கொள்கைப்படி வாழ்ந்தவர் கவி கா.மு.ஷெரீப். கலைஞர் கருணாநிதி அவர்களை அழைத்து வந்து, தான் பணிபுரிந்த மாடர்ன் தியேட்டர்ஸ்-ல் வேலைக்குச் சேர்த்துவிட்டவரும் இவர்தான் என்றும் ஒரு செய்தி உண்டு. “கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி பத்தியம் இருக்கணும். ரசிகர்ளை அவன் புள்ள மாதிரி நேசிச்சு, எதைக் கொடுக்கணும், எதைக் கொடுக்கக் கூடாதுன்னு ஒரு பொறுப்புணர்ச்சியோடு எழுதணும்” என்ற இவர், தான் சொல்லியபடி வாழ்ந்தும் காட்டினார்.  வரோன் ஷர்மிளா

கானல் சுவாசிக்கும் கால்கள்

கானல் சுவாசிக்கும் கால்கள்

புகைப்படத்துக்கான கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள்: கோபிப்பாளையம் புனித தெரசா தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அரசு தாமஸ் அவர்கள், கடைத்தெருவில் கண்ட காட்சியைச் சிறைப்பிடித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, ஒரு உழைப்பாளியின் நிலையை நமக்கெல்லாம் காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படத்திற்குப் பொருத்தமான கவிதை எழுதும்படி ஒரு போட்டியை நம்முடைய சுவடு இதழ் மற்றும் சுவடு பதிப்பகம் சார்பாக அறிவித்தோம். ஏராளமானவர்கள் போட்டியில் பங்கேற்றுக் கவிதைகளை அனுப்பியிருந்தார்கள். போட்டிக்கான நடுவராக இருந்து, கவிதைகளை வாசித்து, அவற்றிலிருந்து 3 கவிதைகளைப் பரிசுக்கானவையாகத் தெரிவு செய்தார் தோழர் கோமதி சங்கர் அவர்கள். பரிசு பெற்ற கவிஞர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும். பரிசு பெற்ற மற்றும் போட்டியில் பங்கேற்ற கவிஞர்கள் அனைவருக்கும் நம்முடைய வாழ்த்துக்களும், நன்றியும். ஆசிரியர் அரசு தாமஸ் அவர்களுக்கும் தோழர் கோமதி சங்கர் அவர்களுக்கும் சுவடு இதழ் மற்றும் சுவடு பதிப்பகத்தின் நன்றிகள். முதல் பரிசு பெற்ற கவிதை கானல் சுவாசிக்கும் கால்கள்கானல் சுவாசித்தபடிகால்கள் மிதிக்கின்றனதலைச்சுமை ஏனோதக்கையாய் மிதக்கிறதுஇந்தப் பயணம்இலக்கு நோக்கியதா?இரைப்பை இரைச்சலுக்கானதா?மகளின் சீர் குடத்திற்கானதா?மனைவியின் மருந்துக் குப்பிகளுக்கானதா?கடன்பட்ட நெஞ்சத்துக்கானதா?கவனிப்பாரற்ற சுயத்துக்கானதா?யூகிக்கக் கிடைக்கும் காரணங்கள் ஏராளம்பழுத்த மனதில் நம்பிக்கையோ தாராளம்தூரங்கள் கண்டு துவளவில்லைபாரங்கள் ஏந்த அஞ்சவில்லைவியர்வையில் குளிக்கும் உடலைமஞ்சள் நீரில் அலசி அலங்கரிக்கும் வரைஓடும் கால்களுக்கு ஓய்வேது?சுமக்கும் எடைக்கு குறைவேது?சளைக்காத மனமேசற்று நில்!களைத்தபடி உடன்வரும் உடலுக்குப் புத்துணர்வூட்டஒரு கோப்பை தேநீர் தருகிறேன் யாழினிஸ்ரீ கூடுதல் பரிசு பெற்ற கவிதைகள் எழுத முடியா நெடுந்துயர்வறுமை வாழ்க்கைக்குள்செலுத்திய பாரம்சைக்கிள் சக்கரங்கள் சுழலும்படிமூச்சிறைக்கப் பெடலைமிதிக்க விட்டிருக்கிறதுபசி ஒரு படி மேலே சென்றுமனதிற்குள் அளவிடமுடியாபாரத்தையும்தலையில் அளந்து வைத்த பாரத்தையும்ஏற்றி விட்டிருக்கிறதுகருணையுள்ள இந்த பூமிகாலம் காலமாய்ஏனோ எல்லோருக்கும் பொதுவாய்சுழல்வதில்லைகருணையற்ற இந்தக் காலம்காலம் காலமாய்ஏனோ எல்லோருக்கும் பொதுவாய்விடிவதில்லைநரம்புகள் புடைக்க வாழ்வைஎதிர்கொள்ளும் மனிதனின்நெடிதுயரத்தைஏனோ என்னால்எழுதி தொலைக்கக் கூடமுடிவதில்லை வழிப்போக்கன் பேர் சொல்லும் காசுவண்டி வாகனம் பெருத்துப் போச்சிஎங்க வயிறோ சிறுத்துப் போச்சிஊரெல்லாம் அதிக சம்பளம் வாங்குற காலத்தில கூடநாங்க வாங்குறதென்னவோ அஞ்சு பத்து கூலிதான்எழுதப் படிக்கத் தெரியாம போனதாலஎடை தூக்க வந்திட்டோம்எடைக்கு எடை ஏழுமலையானுக்கே படியளக்கும் மகராசா!இந்த ஏழ வயித்தையும் கொஞ்சம் பாருமையா!பட்டு சொக்கா போட்டு பகுமானமா நிப்பவரே!சீக்கிரம் பாத்துப் போட்டு தாங்க,பத்திரமா கொண்டுபோறேன்!!தலையில பொதி சுமக்குறோம்காலணிகூட இல்லாம காலணாவுக்குக் காத்துக் கிடக்கிறோம்எரி எந்திரமெல்லாம் எங்கிட்ட இல்ல சாமிஏதோ, ஏறி மிதிச்சா என்னோட சுமையவும் சேத்து சுமக்கமிதிவண்டி ஒன்னிருக்கு!அழுத்தி மிதிச்சா அஞ்சி நிமிசமாகும்எறக்க கூட ஆள் வேணாம்,ஒத்தாசைக்கு நின்னாபோதும்சேத்து ஏதும் கேட்கல,சொத்து சேர்த்து வைக்கவும் கேட்கலஒழைக்கிற காசு உடம்புல ஒட்டணும்இன்னைக்கு ஒட்டுற காசு உங்க பேர் சொல்லட்டும்! வே. ஆறுமுகப்பாண்டி

பிர்ச்மரக் காடுகள்

பிர்ச்மரக் காடுகள்

குளிர்காலச் சிறுவெயிலின் கதகதப்பான காலையில் நீயும் நானுமாய் கைகோர்த்துச் செல்லும் நடைகளிலே பேசித்தீர்க்கும் கணங்களும்  பின் மௌனமாய் உன் தோள் சாய்ந்து நடக்கும்  அழகான நேரங்களும்  நமது பாதையை நீளச்செய்ய இதோ இங்கே வலிமையாய் உயர்ந்திருப்பவை  பிர்ச் மரங்கள் மட்டுமல்ல – வலுவாய்நம் நேசமும்தான்…! கவிதை & ஓவியம்: அனிதாராஜ்

பண்டிகைக்காரி

பண்டிகைக்காரி

சின்னதாய்ச் சிங்காரித்துச்சின்னக்கண்ணில் மையிட்டுபுருவமிரண்டின் மத்தியிலேவண்ணக் குப்பிப் பொட்டுமிட்டேன்!உச்சி வகிடின் நடுவினிலேநெற்றிச்சுட்டி ஆடவிட்டேன்! மணிக்கட்டு அது நோகாது `சிறு வளையல்கள் பூட்டிவிட்டேன்,வீடெங்கும் நீ இசை நிரப்பகால்சலங்கைக் கட்டிவிட்டேன்! வண்ணமணி மேகலையும்தொங்கும் மணிஆரமும்அதன் இடங்கள் சேர்த்துவிட்டேன்!கூண்டுகிளிப் பொருத்தியகாதணியும் தொங்கவிட்டேன்! முல்லைப்பூக் கரங்களுக்குமருதாணி நிலாக்கள் வைத்தேன்!மல்லிப்பூ வாசனை நுகர்ந்துஅம்மா… இது வேண்டுமென்றாய்!அழகாய்ச் சரமொன்று கட்டிபின்னலிலே சூட்டிவிட்டேன்! அத்தனையும் முடித்துபாவாடை நுனிபிடித்து,பாட்டொன்றுப் பாடிபாங்காய் உன் தலைசாய்த்துகேட்டாய்…!“அம்மா, நல்லா இருக்குல்ல…”இதோ வந்துவிட்டது மகளேநம்வீட்டில் பண்டிகை நாள்! ஊரெங்கும் பொங்கலோநாடெங்கும் தீபாவளியோநீதானே என் பண்டிகைநீதானே என் திருவிழா அம்மா நான் உன்னை அலங்கரித்துகவியொன்றும் பாடிவைத்தேன்மகளே நீ என் தமிழ்ச்சாமி!

சூட்சுமங்கள்

சூட்சுமங்கள்

எப்போதும்போல எதுவுமில்லாதவர்ஏமாந்தே எலும்பாகிறார்எல்லாமுடையவர்வசதியோடு வள்ளலாகிறார்தெய்வமும் கைவசமிருப்பதைக்கொடுத்துதான் நிற்கிறதுதன் இருப்பிடத்தில்கட்டணமென்றால் சிறப்பு தரிசனத்தில் வரம்கட்டணமில்லையென்றால் கடைசியிலேதான் என்றசுகவாசிகளின் சூட்சுமங்கள்தான்தெரிவதில்லை பாவம்தெய்வங்களுக்கும் தெருக்கோடிகளுக்கும் கலை

பேரரசுகளின் கல்லறையில்..!

பேரரசுகளின் கல்லறையில்..!

காணுமிடமெங்கும்இரத்தம் உறைந்த பூமியில்வாழ்வுக்கும் சாவுக்கும்இடையே போராடுகிறார்கள் அண்டங்களுக்கு அப்பால் சென்றுகுடியிருப்புகளை நிறுவஇருபத்தியோராம் நூற்றாண்டு மனிதன்முயன்று கொண்டிருக்கையில்,உயிர் தப்ப எண்ணியோர்உயிரே பறக்கும் விமானத்தின்சக்கரங்களிலிருந்து வீழ்வது இருண்ட காலத்திற்குள் அவர்கள்விழுவது போலவே இருக்கிறது பஸ்தூன், டாஜிக்ஸ், ஹாசாரஸ்பழங்காலத்திலிருந்து பழங்குடிகளேபல்குடிகளாகப் பெருகிவாழும் தேசத்தில்வரலாற்றின் போக்கிற்கேற்ப வாழும் மக்கள்மாறும் போதெல்லாம்கற்காலத்தில் வாழவேகட்டாயப்படுத்தப்படுகிறார்கள்கொலைக்கருவி ஏந்திமதம் காப்பவர்களால் புதுமையோ புரட்சியோ இல்லாமல்பழமையிலேயே கிடக்கும்பழங்குடிகளின் தேசம்புவிசார் அரசியலில்வளங்களைக் கொள்ளையடிக்கும்வல்லூறுகளின் வேட்டைக் காடாகிவிட்டது ஆதிக்கம் எதுவாயினும்அடிபணியோம் என்பதைதுப்பாக்கி முனையிலும்பயமேதுமின்றிப் பதாகை ஏந்தும்பெண்கள் சொல்கிறார்கள் ஆதிக்கவாதிகள் எல்லாம்அழிந்து போன பேரரசுகளின் கல்லறையில்புரட்சியின் பூப்பூக்கும் காலம்போர்க்களத்திலும் அமைதி சூழும் ஆக்கம்: பவா சமத்துவன் படங்கள்: இணையத்திலிருந்து

எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

எட்டப்பன்களின் பாஞ்சாலங்குறிச்சி

ஆகஸ்ட் போராட்ட நினைவு சிறப்புக் கவிதை ஆகஸ்டு மாத இளம் வெயிலின்அகிம்சைக் கூடத்தில்தான்ஒத்துழையாமை உலைக்களம். ஒரு கிழவனின் அகிம்சைஇரும்பை எரியவிட்டுத்தான்பரிசோதிக்கப்பட்டது. உலகப் போரின் நெருக்கடியில்கூடமுகத்தோடு முகமாய் ஒட்டிக் கிடந்தவெள்ளையனின்அதிகார முகமூடி. ஒவ்வொரு இந்தியனின்இதயத்திலும்எரிமலையின் சாம்பல். பக்கத்திலேயே இருந்ததுபகத் சிங்கின்அறிவுத் துருத்தி ஆயுதக் கூடம்.இருந்தும்போர்க்களத்திற்குப் அருகிலேயேபுறமுதுகாளர்களின் கூடாரமும்.மதப் புராணிகங்களின் அம்பறாத்தூணியில்தகதகக்கும் ஜாதி அம்புகள். மார்பில் ரோஜா சூடியவனைமரணத்தைப்போல் பார்த்தார்கள். வேடிக்கைக்காரர்களின் கண்களில்வெறிகள் மினுங்கின“இந்தியச் சிறுமிக்குவெள்ளைக்கார துரையுடன்குழந்தைத் திருமணம்.” நாக்கிலும் முளைத்த நரிப்பற்கள். பசுமாடுகளுக்குப் பாதுகாப்பெனகாடே கைகூப்பிய போதேகள்ளச் சிங்கங்களுக்குக் காடு தானம். கனவு கண்டு தீப்பிடித்த கண்கள்தோண்டியெடுக்கப்பட்டன.நிழலுருவங்கள்இருளின் பூதங்களெனஅகராதிகள் திரிக்கப்பட்டுவிட்டன. ஒரு நாட்டின் கொடித்துணியைநெய்வதற்குமுன்எத்தனை சவத்துணிகளைநெய்ய வேண்டியிருக்கிறது. களைப்பின் உச்சத்தில் கைகள் சோர்ந்துஆயாசமானாள்ஆகஸ்டு ராணி. செய்கூலி சேதாரத்துடன்ஓர் விடுதலை ஆபரணம் செய்யப்பட்டாலும்அணியுமுன்கழுத்தினைக் களவாடியகள்வர்கள். ஆகஸ்டு எரிமலையின் நெருப்பெடுத்துத்தான்ஒவ்வொரு வீட்டுக் கதவிலும்புரட்சியின் எண்கள் எழுதப்பட்டன.ஆனாலும் பொய்யர்களின் முகவரிக்குத்தான்அனைத்து அஞ்சல்களும் போய்ச் சேர்ந்தன. எட்டப்பன்களின்பாஞ்சாலங்குறிச்சிதான் இந்தியா. இப்போதுவெள்ளையனே வெளியேறு என்றால்சிரித்தபடியே அவன் சொல்கிறான்:“இந்தியனே வெளியேறு.” கவிதை: நா.வே.அருள் படங்கள்: இணையத்திலிருந்து

சுண்டிய குடலின் வாசம்

சுண்டிய குடலின் வாசம்

கங்குகளில் தெறிக்கும்அனலைக் குடித்துசிவப்பேறி வெந்து தணிந்தசூளையிலிட்ட செங்கல்களில்கொடும் பசியில் கொதித்துச்சுண்டிய குடலின் வாசம்பூத்துக் கிடக்கும் மணிக்கணக்காய்மூச்சடக்கி மிதித்தெடுக்கும்களிமண்ணின் பதத்தைகொப்புளங்கள் வெடித்துரணங்கூட்டி வதைக்கும் பாதங்கள்முணுமுணுத்துச் சொல்லும் வாங்கிய முன்பணத்துக்காய்இளைத்துப்போனவாங்காத கூலியில்வெந்தது வேகாததுகணக்கில் தப்பியதென்றுசேதாரம் போகஅதிகாரங்களின் அத்தனை நரித்தனத்துக்கும்ஈடு சொல்லி வீடு வந்துசேர்ந்த பணம்பொழுதுக்கும் கும்பி நிறைக்கும்டீக்கடை பாக்கிக்கும்மூட்டுவலி தைலத்துக்குமாய்மூச்சுமுட்டி நிற்கும் காலங்காலமாய் கல்லறுத்த பிழைப்பில்முடமாகிப்போன காலும்சவமாகிப்போன கண்ணுமாய்தலைமுறை தாண்டியும்தலையெழுத்து சிரிக்கும்குடிசையின் அக்னிமூலை உயிர்ப்புசூளையின் தனலோடும்வெறிக்கும் வெய்யிலோடும்ஊசலாடிக் கிடக்கும் சாமம் தாண்டியும்சாளரங்கட்டும் பச்சைக் கல்லோடுகூட்டிக் கழித்துப் பார்க்கும்கந்துவட்டிக் கணக்குபொறையோடும் டீயோடும்பசித்த வயிறைப்புறத்தே தள்ளும் அடக்கிவைத்த சிறுநீரின்அடிவயிற்றுக் குத்தலாய்தேக்கி வைத்தவெசனமெல்லாம்தேகத்தை மென்று தின்னும் ஆண்டுக்கொருமுறைஅய்யனாரு பூசையில்குறை சொல்லிமுறையிட்டு நிற்கதை பிறந்தால்வழி பிறக்குமென்றுகுறி சொல்லும்பூசாரியின் வாக்கில்விடியாத நாட்களின்நுகராத வெளிச்சம்கைசேராக் கனவுகளில்இளைப்பாறியே களைக்கும் -அன்புமணிவேல்

மூடிய கேள்விகள்?

மூடிய கேள்விகள்?

மூடிட்டுப் போ என்கிறார்கள்.. தீர்வு அறியாததற்கும் விடை தெரியாததற்கும் எப்போதும் பேசும் பேச்சு இது.. திறனாய்ந்த மருத்துவன் காயத்தை திறந்து பார்க்கிறான்.. நோய்மை புரியாத வைத்தியன் கடவுளுக்குத் தான் தெரியும் என்று மூடிட்டுப் போகிறான்.. இயங்காமல் இருப்பது நோய்மை.. மூடுண்ட தொழிற்கூடமே நோய்மைப்பட்ட நிறுவனமாகிறது.. திறக்காத வான்குடைதான் எமனேறும் வாகனமாகிறது.. இதழ்கள் மூடிய மலருக்குள் எப்போதும் வண்டின் குடைச்சல்.. மூடிக் கிடக்கும் வானம் அழுகிறது.. வெளிறி கிடக்கும் வானம்தான் விண்மீன்களால் ஜொலிக்கிறது.. பெருவெடிப்பே ஜீவனின் ஆதாரம்.. உறுதிறத்தலே லௌகீக ரகசியம்.. கதவடைத்தல் என்பது வீட்டு கதவடைப்பது போல் நிதம் நடக்கும் சங்கதியாகிறது.. கதவடைக்கிறோம் எனும் பேரில் சிறகுகளைக் கத்தரிக்கிறீர்கள்.. பசி ஓலத்தில் துஞ்சமறுக்கும் விழிகளை அறைந்து சாத்துகிறீர்கள்.. வேர்களுக்கு சொட்டுநீர் பொசியும் அடைப்பான்களை இறுக மூடிவிட்டு கனிகளைக் கணக்கிடுகிறீர்கள்.. ஆமை ஓட்டுக்குள் ஒடுங்குவதும் அரவம் புற்றுக்குள் பதுங்குவதும் ஒன்றெனும் அசமத்துவம் பேசுகிறீர்கள்.. கதவடைப்பதை விடுதலை என்றீர்கள்! கதவடைப்பதை பாதுகாப்பு என்றீர்கள்! உங்களின் இந்த விளையாட்டிற்கு பாம்புகள் மட்டுமே பல்லிளிக்கின்றன.. பால் கனியோடு கூத்தடித்து விட்டில்களுக்காக விளக்கேற்றும் உமது கதவடைத்தல் ஓர் ஆடம்பரம்… இரவு ஒன்பதுமணி முதல் விடியவிடிய வெற்று ஒட்டடைக் கோலில் விரகதாப வலைப்பின்னி காத்திருக்கும் உமது கதவடைத்தல் சிற்றின்பம்.. சயனித்தலைக் கடக்கவியலாத உமது சரசத்தை சம்சாரி விஞ்சுகிறான்.. அவன் சாவோடு சல்லாபிக்கிறான்.. விதியோடு விவாகம் செய்கிறான்.. வியாதியோடு விழுந்து புரளுகிறான்.. மூடுவதிலோ, திறப்பதிலோ எமக்கு எந்த வேறுபாடும் இல்லை.. மூடிக் கிடக்கும் போது இந்திரனால் பங்கப் படுவதும் திறந்திருக்கும் போது கௌதமனால் சாபம் பெறுவதும் அகலிகைகளான எமக்கு வாடிக்கை.. வறண்ட நதிகளில் தவறிவிழும் எங்கள் மோசேக்களின் கைக்கோல் ஜீவாதார வழிகளை அடைத்துவிடுகிறது. துன்பக்கடலை பிளக்கும்போதும் பெரும் பிரளயத்தைக் கிளப்பி  எம்மை ஜலசமாதி அடையச் செய்கிறது.. கதவடைப்பில் சிக்கும் எலிகளை என்றேனும் நீர் எண்ணியதுண்டா? உமது வீட்டு அடுப்பெரிய  ஊர் பிணங்களின் சிதைகளில் சுள்ளி சேகரிக்கிறவர் நீங்கள்.. பொங்கிவரும் பாலில் தெளிக்கும் தண்ணீராக இருக்க வேண்டிய ஊரடங்கை கொதித்து வெளியேறும் ஆவிக்கு  ஊற்றும் பாலாக மாற்றியவர் நீர்! வாசல்களை அடைக்கும் நீங்கள் மூச்சு முட்டும்போது விருட்டென விசிறிகளைத் திறந்து விடுகிறீர்கள்.. இன்னல்கள் எதையும் அகற்றாமல் ஜன்னல்களைத் திறந்து வைக்கிறீர்கள்.. கண்ணீர் கதவுகளை அடைத்து கண்ணோட்டத்தை பறிகொடுக்கிறீர்கள்.. தண்ணீர் மதகுகளை அடைத்து வயிற்றோட்டத்தில் பரிதவிக்கிறீர்கள்.. மூடி மறைப்பதே ராஜதர்மம்.. அடைத்து வைப்பதே அநுகூலமென்பதை உம் திறக்கப்படாத கோப்புகள் சொல்லும்.. மூடிட்டுப் போகும் பேச்சும் வெறும் பேச்சாகத்தான் இருக்கிறது.. காணிக்கை செலுத்த புதியவகை உண்டியல்களை நிறுவுகிறீர்கள்.. படையல்களை வரிசைப்படுத்தும் சாத்வீக முறைகளைக் கற்பிக்கிறீர்கள்.. நெய்வேத்திய பொருட்களின் தீர்வையை கடவுளர்களிடம் சேர்ப்பிக்கிறீர்கள்.. பிரசாதத்தைக்கூட கண்ணில் காட்டாமல் பூசாரிகளை விட்டு களவாடுகிறீர்கள்.. மூளைகளை மூடி வைத்துவிட்டு வாய்களை அகல திறக்கிறீர்கள்.. ஆலயங்களை மூடிவிட்டு பிரார்த்தனைகளை முடுக்குகிறீர்கள்.. மோசமான ஓட்டுநர்கள் எப்போதும் பக்தியை வளர்க்கிறார்கள்.. மதக்கடைகளை அடைத்துவிட்டு மதுக்கடைகளை திறந்துவைத்தீர்கள்.. ஏதாவது ஒரு போதையில் மக்கள் மயங்காது போனால் உமக்கு கைகால்கள் உதறுகிறது.. வகுப்பறைகளை மூடிவிட்டு வகுப்புவாதத்தை மூட்டி விடுகிறீர்கள்.. ஏழை எளியவர்க்கு சோறுபோடும் அட்சயப் பாத்திரங்களைக் கழுவி கவிழ்த்து வைக்கிறீர்கள்.. இருட்டில் தத்தளித்துத் தவிக்கும் மக்களின் கதி என்னவென்றால் கடவுளுக்கே வெளிச்சம் என்கிறீர்கள்.. மொத்தத்தில் – வைபோகங்கள் சிறுகதையானாலும் அனுபோகம் நெடுந் தொடராகிறது.. பொறுப்பு கையுறை போட்டுக் கொண்டது. கடமை முகமூடி அணிந்து கொண்டது.. தர்மம் மூடிட்டுப் போய்விட்டது.. மணலைக் கயிறாகத் திரித்து துன்பமலையை மத்தாக்கி ஊழல்கடலைக் கடைந்தபோது வெளியானது ஊரடங்கு காமதேனு.. வேண்டியதைத் தரும் தேவதையால் ஊமைகள் கண்ட கனவு உத்தேசமாய் பலித்துப் போனது.. மாடுகளுக்கே மகுடம் சூட்டும் தேசத்தில் காமதேனுவை எதிர்க்கும் மன்னரும் ராஜ்ஜியத்தை இழந்து தவசியாவார்..