திரை விமர்சனம் யாரெல்லாம் மனித உயிருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமோ அவர்களே அதற்கு எதிராக இருந்தால் என்ன விளைவு என்பதுதான், ட்டி.ஜெ.ஞானவேல் எழுதி இயக்கி, சூர்யா-ஜோதிகா தயாரிப்பில், முதன்மைப் பாத்திரத்தில் சூர்யா நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம். கல்வி அறிவுக்கு வாய்ப்பில்லாத, சாதி பண பலமில்லாத ராஜாக்கண்ணு, ஒரு திருட்டுப் புகாரில் உறவினர் சிலரோடு விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், அவனது மனைவி செங்கேணியிடம், அவர்கள் தப்பித்து விட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். நம்ப மறுத்த மனைவி, காவல்துறையினரின் சித்திரவதை நெருக்கடிகளைத் தாண்டி, கையிலும் வயிற்றிலும் குழந்தைகளோடு சந்துரு என்கிற வழக்குரைஞர் துணையுடன், காணாமல் போன தனது கணவனை மீட்டுத் தர நீதிமன்றங்களில் சட்டப் போராட்டத்தை நடத்துகிறார். அதன் முடிவு என்ன என்பதே ஜெய் பீம் படத்தின் கதை. “ஒரு ஆளு மேல ஒரு கேசுதான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேசு போட்டு வையுங்க, எவன் வந்து கேட்கப் போறான்?” – ஜெயிலர், “நேத்து அடி வாங்கினான், இன்னிக்கு வந்து போராட்டம் பண்றான். இதுதான் ட்ரீட்மென்ட் கொடுக்கற லட்சணமா? யூஸ்லெஸ் ஃபெலோஸ்” – காவல்துறை அதிகாரி “விஐபி கேஸ்கூட இல்லை மேடம், சாதாரண டிரைபல் உமன் கேசுதான்” – உயர்நீதிமன்ற வழக்குரைஞர் “ஒரு டிரைபல் பொம்பளைய ஹைகோர்ட் வரை வர விட்டிருக்க” – அட்வகேட் ஜெனரல் “குற்றத்தைத் தடுக்கணும்னா எல்லா நேரமும் சட்டப்படி நடக்க முடியாது சந்துரு” – காவல்துறை அதிகாரி “நாளை ஒரு நாள் மட்டும் சமாளிச்சுட்டா போதும், ஜட்ஜ் பேனல் மாறுது” – அட்வகேட் ஜெனரல் – லாக்கப் உள்ளே இருப்பது மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் இந்தவகை மனோநிலைக்கு மத்தியில், வெளியே இருப்பதும்கூட பேராபத்துதான் என்பதை, இதைப்போன்ற வசனங்கள் மூலம் படம் துல்லியமாகச் சித்தரிக்கிறது. “எம்மா நடந்தாலும் எங்க ஆளுங்களுக்கே பட்டா கெடைக்கறதில்ல. நீங்க என்னமோ பட்டாங்கறீங்க, படிங்கறீங்க..” என மைத்ரா டீச்சரிடமும், “பாம்பு பிடிக்க வேணாம்னுதாய்யா படிக்க ஆசைப்பட்றான்” என்று தாசில்தாரிடமும், “டே பையா, மனுஷங்கிட்ட இருந்து ஒத்தி இருந்தாதான் உனக்கு நல்லது, போயிட்டு வா” என்று பாம்பிடமும், “இந்தக் காயமெல்லாம் கொஞ்ச நாள்ல ஆறிடும். ஆனா திருட்டுப் பட்டம் காலத்துக்கும் தங்கிடும்டா…” என்று சகோதரன் இருட்டப்பனிடமும் கூறும், அப்பாவி இருளர் ராஜாகண்ணுவாக வரும் கே.மணிகண்டன் – “உழைச்சுப் பொழைக்க தெம்பு இருக்கும்போது, நாங்க ஏஞ்சாமி திருடனும்?” என திருட்டுத் தாலி என்று பரிகசிக்கும் காவலரிடம் சொல்லும்போதும், “இந்தக் கேஸ்ல தோத்தாகூடப் பரவாயில்லை, புள்ளைங்ககிட்ட போராடித் தோத்துட்டேன்னு சொல்லிக்கிறேன்” என டிஜிபியிடம் சொல்லும்போதும், டிஜிபி சொல்லியபடி போலீஸ் ஜீப்பில் ஏறாமல் நடந்தும் பஸ்ஸிலுமாக வீட்டிற்குத் திரும்பும்போதும், சித்திரவதைக்கு இடையில் வெளியே சாப்பிட ஒரு வாய் எடுத்து வைக்கும்போது லாக்கப் உள்ளே ஆணும் பெண்ணுமாகக் காவலர்களின் சித்திரவதைகளால் அலற, அழுதுகொண்டே சாப்பாட்டைத் தவிர்க்கும்போதும், தனது கணவனின் பெயர் ஒரு பாடலில் வருகிறது என்கிற ஒரே காரணத்தால், அந்தப் பாடலையே நேசிக்கும் போதும், சுயமரியாதையும் பாசமும் நேசமும் கொண்ட பெண் செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ் – “அசிங்கம் அவங்க பேச்சில இல்ல, நம்ம நடத்தையிலும் இருக்கு” என்று சக காவல் அதிகாரியிடம், “ஜனநாயகத்தை நில நிறுத்தணும்னா சில நேரத்துல சர்வாதிகாரத்தக் கையிலெடுத்துதான் ஆகணும்” என்று வழக்குரைஞர் சந்துருவிடம், “டிபார்ட்மெண்ட்டுக்காக எதையாவது விட்டுக் கொடுக்கலாம், எதற்காகவும் என் மனசாட்சிய விட்டுக்கொடுக்க முடியாது, சாரி சார்” என்று டிஜிபியிடம், உச்சபட்சமாக உயர்நீதிமன்றத்தில் மனசாட்சிப்படி விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து, சாட்சிகளின் வாக்குமூலம் வழங்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் – “அப்போ கடைசிவரை வேடிக்கை மட்டும்தான் பாப்பீங்க? ஏழாயிரம் மனுஷங்க சார்”, “இல்ல சார், நீங்க இவ்வளவு பாசிட்டிவா சொல்றதுதான், இன்னும் எனக்குச் சந்தேகமா இருக்கு” சந்திரனிடம் அவ்வப்போது பேசும்போதும், “திருடங்க இல்லாத சாதி இருக்கா நடராஜ்? முதல்ல, ஒரு ஜாதி பெயரைச் சொல்லி அவங்களை இப்படி பிராண்ட் பண்றத நிப்பாட்டுங்க” என்று காவல்துறை அதிகாரியிடம் கூறும்போதும், ” “எந்த ஆதாரமும் இல்லாமல் கேஸ் போடுவது, போலீசை எதிர்த்து அல்ல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எதிர்த்து. இந்த அரசாங்கத்த எதிர்த்து. சவாலான போராட்டமாய் இருக்கும், தயாரா இருங்க” என்று செங்கேணியிடமும், மைத்ராவிடமும் சொல்லும்போதும், “எதையும் சாதிப்பதற்காக இந்தக் கேஸ எடுக்கல சார். ஒரு இன்னசன்ட் டிரைபல் உமனுக்கு ஜஸ்டிஸ் கிடைக்கணும்னு போராடறேன். இன்னிக்கு செங்கேணி, நாளைக்கு இன்னொரு பொண்ணுக்கு ஆதரவா நிப்பேன். நீதி கிடைக்கலன்னா, ரோட்டுல நின்னு போராடுவேன். போராடறதுக்கு லா எனக்கு வெப்பன், தட்ஸ் ஆல்” என்று அட்வகேட் ஜெனரல் ராம்மோகனிடம் தெளிவு படுத்தும்போதும், “தப்பு பண்றவங்களுக்கு ஜாதிகள் நிறைய இருக்கு சார், பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதானே இருக்கோம்? நாமும் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போலாம் சார்” என்று ஐஜி பெருமாள்சாமியிடம் உறுதியாகத் தெரிவிக்கும்போதும், “காந்தி நேருன்னு முக்கியமான தலைவரெல்லாம் இருக்காங்க, ஏன் அம்பேத்கர் மட்டும் இல்ல!?” என்று வினவும் போதும், “ஏழு பேரா, ஏழாயிரம் பேராங்கறது முக்கியம் கிடையாது. பாதிக்கப்பட்டவங்க யாராயிருந்தாலும், அவங்க எத்தனை பேரா இருந்தாலும் நீதி கிடைக்கணும். அத உறுதி செய்யறது இந்த நீதிமன்றத்தோட தார்மீகக் கடமை, மை லார்ட்”, “பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு நடந்த அநீதியைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்”, “நீதிக்கு ஆதரவான வார்த்தைகளவிட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது”, “வரலாறு தெரியாதவங்களுக்குச் சொல்றேன். கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட புருஷனோட மரணத்துக்கு நீதி கேட்கற இந்தப் பொண்ணு செங்கேணிதான், நம்ம கண்ணு முன்னாடி நிக்கற கண்ணகி”, “கணவன இழந்த செங்கேணிக்கு ஊர் மையத்துல ஒரு பட்டா வழங்கனும்னு கேட்டுக்கறேன்” என்று ஆணித்தரமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும்போதும், சட்ட நிபுணத்துவம் மட்டுமல்லாது மனிதநேயமும் கூடிய உயர்நீதிமன்ற வழக்குரைஞராக வரும் சூர்யா – என அனைவருமே கதை, சம்பவங்கள், காட்சியமைப்பு, வசனங்கள் சேர்ந்து செதுக்கிய இம்முதன்மைப் பாத்திரங்களில் ஒன்றி, உச்சபட்ச அர்ப்பணிப்புத் திறமையால், அவை ‘பளிச்’சிட்டுத் துலங்கச் செய்துவிடுவது தனிச்சிறப்பு. அவ்வாறே, குழந்தை அல்லி (பேபி ஜோஷிகா மாயா), எஸ்.ஐ. குருமூர்த்தி (தமிழ்), ஆசிரியை மைத்ரா (ரஜிஷ விஜயன்), தலைமைக் காவலர் வீராச்சாமி (சூப்பர்குட் சுப்பிரமணி) காவலர் கிருபாகரன் (பால அசன்), அட்வகேட் ஜெனரல் எஸ் ராம்மோகன் (ராவ் ரமேஷ்), வழக்குரைஞர் சங்கரன் (எம்.எஸ்.பாஸ்கர்), பப்ளிக் ப்ராசிக்யூட்டர் செல்லபாண்டியன் (குரு சோமசுந்தரம்), ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் (இளவரசு), காவல்துறை அதிகாரி நடராஜ் (ராஜேஷ் பாலச்சந்திரன்), டிஜிபி எஸ் ராதாகிருஷ்ணன் (ஜெயபிரகாஷ்) தத்தம் பங்களிப்பைக் குறைவில்லாமல் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவும் (எஸ்.ஆர்.கதிர்) இசையும் (சீன் ரோல்டன்) படத்திற்கு வலு சேர்த்துள்ளன. தோய்வே தோய்ந்து போகும் அளவிற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குனர் மற்றும் காஸ்ட்டிங் டைரக்டர் வெகுவான பாராட்டுக்குரியவர்கள். காவல்துறையினரின் லாக்கப் சித்திரவதைகள் திரையைத் தாண்டி வந்து நம்மைத் தாக்குகின்றன. இனி, இது நின்று விடுமா? சாத்தான்குளம் சம்பவமே வெற்றிமாறனின் ‘விசாரணை’க்கு பிறகும்தானே! ஒட்டுமொத்தமாக நிற்காது, குறையலாம். அப்பட்டமாக ஒரு அப்பாவியைக் கொலை செய்த, அதை மறைக்கப் பாடுபட்ட அத்தனை நெஞ்சழுத்தக்காரர்களின் மனசாட்சியையும் நிச்சயம் இது உலுக்கி இருக்கும். அவ்விதம் அவர்கள் செய்ய எத்தனிக்கும்போது, இனி யோசிக்க வைக்கும். ஜெய் பீம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டு இருந்தாலும், சில சித்தரிப்புகள் அதனுடன் சேர்க்கப்பட்டிருப்பது, கலையம்சம் மிகுந்த படமாகவும் பரிணமிக்கச் செய்வதுடன், பட்டவர்த்தனமான உண்மைகளைக் கூறும் ஆவணப்படங்களில் இருந்து விலகி நிற்பவர்களையும்கூட, ஆவணப்படுத்தப்பட்ட உண்மை நிலையை அறியச் செய்வதும்தான் ! சித்தரிப்புகளில் சில, சிலரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்குமாயின், அவை சரியாகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விதமான சித்தரிப்புகள் இனியும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கேதான் உண்டு. ஜெய் பீம் கொண்டாடப்பட வேண்டிய படம் மட்டுமல்ல; அது பேசும் உண்மைகளை, திரையரங்க வெளியீட்டின் மூலமும் கடைகிராம மக்கள் வரை, கொண்டு சேர்க்கப்பட வேண்டிய படமும்கூட. முழுத் தகுதிகள் இருந்தும் விருதுகள் கிடைக்காமல் போகலாம் – காட்டப்படும் உண்மைகளையும் சேர்த்துச் சேர்த்து அங்கீகரிப்பதாகி விடுமோ எனும் அச்சத்தால். இதை வெறும் படமாக மட்டும் கடந்து செல்லாமல், பல பரிமாணங்களில் அது தரும் பாடத்தையும், படத்தைக் காண்பவர் எல்லாம் பாராட்டித் தீர்ப்பதுதான், அதன் வெற்றி. 27 ஆண்டுகளுக்கு முன்பு, ஜஸ்டிஸ் கே.சந்துரு சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தபோது கையாண்ட வழக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஜெய் பீம் படத்தில், வழக்குரைஞர் சந்துருவாக பாத்திரமேற்று உயிர்ப்பித்ததின் மூலம், நீதி நாயகம் கே.சந்துரு மற்றும் நடிகர் சூர்யா பரஸ்பரம் கௌரவம் பெறுகிறார்கள். இப்படம், நடிகர் சூர்யாவின் நடிப்புத் தொழிலில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையிலேயே ஒரு மைல்கல். மதிப்பெண் : 9/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து