அடடே சுந்தரா

அடடே சுந்தரா

திரை விமர்சனம் நானி, தெலுங்கில் அறிமுகமாகும் நஸ்ரியா நசீமுடன் இணைந்து  அட்டகாசமாக நடித்து, விவேக் ஆத்ரேயா எழுதி சிறப்பாகவும், சிரிப்பாகவும் இயக்கியுள்ள காதல் கதைதான், சுந்தரத் தெலுங்கில்  ‘அண்டே சுந்தரநிக்கி’, மொழி மாற்றத்தில் தேன் தமிழில் ‘அடடே சுந்தரா’. காதல் என்றாலே, வழக்கமாகச் சாதியோ மதமோ ‘கேட்’டைப் போடும்தானே! இந்தப் படத்தில் மதம்! எதற்கெடுத்தாலும் ஹோமம் செய்யும் விஸ்வநாத ஐயரின் (நரேஷ்) ஒரே மகன் சுந்தர பிரசாத் (நானி), ஊரறிந்த இந்து. பாயசமே கசப்பான முன் அனுபவத்தால், இந்து மதமும் கசந்த தாமஸின் (அழகம் பெருமாள்) இரண்டாவது மகள் லீலா தாமஸ் (நஸ்ரியா நசீம்). அவர்களுக்குள் லேசுப்பட்ட காதல் இல்லை. பள்ளி நாடகத்தில் வேஷமிட்டு நடித்தபோது துவங்கிய 100% உண்மையான காதல். நடுவிலே சுந்தரன் தொடர்பற்றுப்  போக, பருவமடைந்த லீலா கொஞ்சம் டைவர்ஷன் ஆகி, பின் சற்றுச் சுதாரித்து, இப்போது மீண்டு(ம்) சுந்தரனின் பாதையில்! 180 டிகிரி எதிரும் புதிருமாக உள்ள குடும்பத்தில் நிலவும் மத நல்லிணக்கத்துக்கு எதிரான நிலையைக் கடந்து,  காதலை நிறைவேற்றிக் கொள்ளத்தான், எத்தனை பாடுகள், பொய்கள், தந்திரங்கள், கோபதாபங்கள், உணர்ச்சிப் பிரவாகங்கள், மௌன யுத்தங்கள், சரணாகதிகள்…!!! இத்தனையையும் தாண்டி, அவர்களின் காதல் கைகூடியதா என்பதுதான், ‘அடடே சுந்தரா’ திரைப்படத்தின் மொத்தக் கதை. நகைச்சுவை கலந்த திரைப்படம், நானி, நஸ்ரியாவின் அசத்தலான தலைமையில், நரேஷ், ரோகிணி, பாட்டி அருணா பிக்‌ஷு,  அழகம் பெருமாள், நதியா, தன்வி ராம்,  மேனேஜர் ஹர்ஷவர்தன் பலமான கூட்டணியில்,  தங்குதடையின்றி ‘கலகல’வென்று செல்வது, இனிமை, சிறப்பு. மனிதத்தை மறுக்கும் மதவாதக் கருத்தியல்கள், சடங்கு சம்பிரதாயங்கள் மீது, ஆங்காங்கே அழுத்தமாகக் குட்டு வைப்பதும் பாராட்டத்தக்கது. பிராமணன், சமுத்திரத்தைத் தாண்டக்கூடாது என்கிற சம்பிரதாயம், அவசியத்திற்கும் அவசரத்திற்குமேற்ப மீறவும், அதற்கான பரிகாரமும்  படிப்படியாக நீர்த்துப்போய், நாக்கிலே ஒற்றைத் தர்ப்பையைக் கொளுத்தி, குறுக்கில் இழுத்து விடுவதில் குறுகிப் போவதையும், சுயநலத்தோடு ஒரு சமயம் மதத்தைப் பொருட்படுத்தாததையும், பிறிதொரு நிலையில் மதத் துவேஷத்தில் உக்கிரத்துடன் நிற்பதையும் இயக்குனர் பதிவு செய்திருப்பது, அவர்களை ஒருவேளை சிந்திக்க வைக்கக்கூடும். லேடிஸ் பை-சைக்கிளை எதிர்க்கும் சுந்தரனிடம் அப்பா, சிலதைக் காப்பாத்தணும்னா, சிலதை இழந்துதான் தீரணும்; விதவிதமான ரீசன் எல்லாம் உங்களாலதான் சார் சொல்ல முடியும்; என்னது! நல்ல குடும்பம்னு சொல்லி, சம்மதிக்க வெச்சியா? அப்ப, நம்ம குடும்பம் நல்ல குடும்பம் இல்லியா? போன்ற வசனங்களும், சுந்தரனுக்கும் அவனது மேனேஜருக்குமான  உரையாடல்களும் சுவையானவை. மேலும் இப்படத்தில், கருத்தரித்தது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தும், ‘டிஸ்ஜெர்மினொமா’ எனும் கொடிய கருப்பைப் புற்று நோயின் அடையாளத்தை மறைத்துவிடும் கொடுமை குறித்து விழிப்புணர்வு கொள்ள வழிவகுத்த இயக்குனரை வெகுவாகப் பாராட்டலாம். சிறுவன் சுந்தரன் (வினய்) மற்றும் சிறுமி லீலா தாம்ஸன் (ஹரிகா கோயிலம்மா) போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்துள்ளனர். சௌமியா (அனுபமா பரமேஸ்வரன்),  ஜோதிடர் ஜோகராவ் ( ஸ்ரீகாந்த் ஐயங்கார் ), சுந்தரின் மாமா (பிரித்வி ராஜ்), ஜோசப் (வெங்கடேஷ் மஹா), டாக்டர் குரு (ராகுல் ராமகிருஷ்ணன்), கைனகாலஜிஸ்ட் (பவித்ர லோகேஷ்), வம்சி (சாய் ரோனக்), பட இயக்குநர் (அலி) எனத் துணைப் பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களும், நடிப்பில் சோடை போகவில்லை. விவேக் சாகரின் பின்னணி இசையும் பாடல்களும் இனிமை. நிகேத் பொம்மியின் கண்கவர் ஒளிப்பதிவு ‘பளிச்’. குறிப்பிடத்தகுந்தது, ரவி தேஜா கிரிஜாலாவின் படத்தொகுப்பு. குறிப்பாக, ‘கட் டயலாக்ஸ்’  காட்சிகளை குழப்பமில்லாமல், விறுவிறுப்பு குறையாமல் ‘கட்’ செய்தது. படத்தின் நீளத்தைக் குறைத்திருக்க, நிறைய நியாயம் இருக்கிறது. முன் பாதியில் கணிசமாகக்  குறைக்க வாய்ப்பும் இருக்கிறது. படத் தொகுப்பாளரை இயக்குநர் அனுமதித்திருக்கலாம். சமூகத்தில் முதன்மை பெற வேண்டியது, மதம் தாண்டிய மனிதக் காதலே என்பதை, அழுத்தந்திருத்தமாகவும் நகைச்சுவையுடனும் வழங்கும் விவேக் ஆத்ரேயின் ‘அடடே சுந்தரா’, பலே சுந்தராதான். மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

யாரைத் திருப்திப்படுத்த?

யாரைத் திருப்திப்படுத்த?

உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் என்ன நடக்கும் தெரியுமா? ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும்.அடுத்த வேளை உணவுக்கான ஆர்டர்கள் ஹோட்டலுக்குச் சென்றிருக்கும்,பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர். படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர். சாப்பிட்ட இலைகளயும் குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்துவீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார். ஒரு அவசரச் சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென, உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார். மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள். எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார். இத்தனை தூரம் வந்தாச்சு, போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர். தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்.கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும். அடுத்து வரும் நாட்களில், நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும். உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும். ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும். இரண்டு வாரங்களில் உங்கள் மகன், மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்குத் திரும்பிடுவர், ஒருமாத முடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்குச் சிரிப்பார். அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத் துவங்கியிருப்பர்.அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக் கொண்டிருக்கும். ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும். மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும். நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள்.இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதி கொடுத்தல் மட்டும் மிகச் சிரத்தையாக நடக்கும். கண்மூடித் திறக்கும் இடைவெளியில், வருடங்கள் பல ஓடியிருக்கும். உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது. என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும்.உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய் அபூர்வமாய் உங்களைப்பற்றி யாரிடமோ பேசக்கூடும். மறுபிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்துகொண்டிருக்கக்கூடும். மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி,பேரிருளில் மூழ்கிப் பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும். இப்போது சொல்லுங்கள், உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்? பார்த்திபன் கண்ணன்

கானல் சுவாசிக்கும் கால்கள்

கானல் சுவாசிக்கும் கால்கள்

புகைப்படத்துக்கான கவிதைப்போட்டியில் பரிசு பெற்ற கவிதைகள்: கோபிப்பாளையம் புனித தெரசா தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. அரசு தாமஸ் அவர்கள், கடைத்தெருவில் கண்ட காட்சியைச் சிறைப்பிடித்து தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, ஒரு உழைப்பாளியின் நிலையை நமக்கெல்லாம் காட்சிப்படுத்தியிருந்தார். அந்தப் படத்திற்குப் பொருத்தமான கவிதை எழுதும்படி ஒரு போட்டியை நம்முடைய சுவடு இதழ் மற்றும் சுவடு பதிப்பகம் சார்பாக அறிவித்தோம். ஏராளமானவர்கள் போட்டியில் பங்கேற்றுக் கவிதைகளை அனுப்பியிருந்தார்கள். போட்டிக்கான நடுவராக இருந்து, கவிதைகளை வாசித்து, அவற்றிலிருந்து 3 கவிதைகளைப் பரிசுக்கானவையாகத் தெரிவு செய்தார் தோழர் கோமதி சங்கர் அவர்கள். பரிசு பெற்ற கவிஞர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும். பரிசு பெற்ற மற்றும் போட்டியில் பங்கேற்ற கவிஞர்கள் அனைவருக்கும் நம்முடைய வாழ்த்துக்களும், நன்றியும். ஆசிரியர் அரசு தாமஸ் அவர்களுக்கும் தோழர் கோமதி சங்கர் அவர்களுக்கும் சுவடு இதழ் மற்றும் சுவடு பதிப்பகத்தின் நன்றிகள். முதல் பரிசு பெற்ற கவிதை கானல் சுவாசிக்கும் கால்கள்கானல் சுவாசித்தபடிகால்கள் மிதிக்கின்றனதலைச்சுமை ஏனோதக்கையாய் மிதக்கிறதுஇந்தப் பயணம்இலக்கு நோக்கியதா?இரைப்பை இரைச்சலுக்கானதா?மகளின் சீர் குடத்திற்கானதா?மனைவியின் மருந்துக் குப்பிகளுக்கானதா?கடன்பட்ட நெஞ்சத்துக்கானதா?கவனிப்பாரற்ற சுயத்துக்கானதா?யூகிக்கக் கிடைக்கும் காரணங்கள் ஏராளம்பழுத்த மனதில் நம்பிக்கையோ தாராளம்தூரங்கள் கண்டு துவளவில்லைபாரங்கள் ஏந்த அஞ்சவில்லைவியர்வையில் குளிக்கும் உடலைமஞ்சள் நீரில் அலசி அலங்கரிக்கும் வரைஓடும் கால்களுக்கு ஓய்வேது?சுமக்கும் எடைக்கு குறைவேது?சளைக்காத மனமேசற்று நில்!களைத்தபடி உடன்வரும் உடலுக்குப் புத்துணர்வூட்டஒரு கோப்பை தேநீர் தருகிறேன் யாழினிஸ்ரீ கூடுதல் பரிசு பெற்ற கவிதைகள் எழுத முடியா நெடுந்துயர்வறுமை வாழ்க்கைக்குள்செலுத்திய பாரம்சைக்கிள் சக்கரங்கள் சுழலும்படிமூச்சிறைக்கப் பெடலைமிதிக்க விட்டிருக்கிறதுபசி ஒரு படி மேலே சென்றுமனதிற்குள் அளவிடமுடியாபாரத்தையும்தலையில் அளந்து வைத்த பாரத்தையும்ஏற்றி விட்டிருக்கிறதுகருணையுள்ள இந்த பூமிகாலம் காலமாய்ஏனோ எல்லோருக்கும் பொதுவாய்சுழல்வதில்லைகருணையற்ற இந்தக் காலம்காலம் காலமாய்ஏனோ எல்லோருக்கும் பொதுவாய்விடிவதில்லைநரம்புகள் புடைக்க வாழ்வைஎதிர்கொள்ளும் மனிதனின்நெடிதுயரத்தைஏனோ என்னால்எழுதி தொலைக்கக் கூடமுடிவதில்லை வழிப்போக்கன் பேர் சொல்லும் காசுவண்டி வாகனம் பெருத்துப் போச்சிஎங்க வயிறோ சிறுத்துப் போச்சிஊரெல்லாம் அதிக சம்பளம் வாங்குற காலத்தில கூடநாங்க வாங்குறதென்னவோ அஞ்சு பத்து கூலிதான்எழுதப் படிக்கத் தெரியாம போனதாலஎடை தூக்க வந்திட்டோம்எடைக்கு எடை ஏழுமலையானுக்கே படியளக்கும் மகராசா!இந்த ஏழ வயித்தையும் கொஞ்சம் பாருமையா!பட்டு சொக்கா போட்டு பகுமானமா நிப்பவரே!சீக்கிரம் பாத்துப் போட்டு தாங்க,பத்திரமா கொண்டுபோறேன்!!தலையில பொதி சுமக்குறோம்காலணிகூட இல்லாம காலணாவுக்குக் காத்துக் கிடக்கிறோம்எரி எந்திரமெல்லாம் எங்கிட்ட இல்ல சாமிஏதோ, ஏறி மிதிச்சா என்னோட சுமையவும் சேத்து சுமக்கமிதிவண்டி ஒன்னிருக்கு!அழுத்தி மிதிச்சா அஞ்சி நிமிசமாகும்எறக்க கூட ஆள் வேணாம்,ஒத்தாசைக்கு நின்னாபோதும்சேத்து ஏதும் கேட்கல,சொத்து சேர்த்து வைக்கவும் கேட்கலஒழைக்கிற காசு உடம்புல ஒட்டணும்இன்னைக்கு ஒட்டுற காசு உங்க பேர் சொல்லட்டும்! வே. ஆறுமுகப்பாண்டி

O2

O2

திரை விமர்சனம் ஆக்சிஜன்,  பிராணவாயு என்றெல்லாம் குறிப்பிடப்படும் உயிர்க்காற்று, உயிரைக் கொடுப்பதற்கு மட்டுமல்ல,  எடுப்பதற்கும்கூடக் காரணமாக அமையலாம் என்பதை,  ‘சீட் ஏஜ் திரில்லர்’ திரைக்கதையாக அறிமுக இயக்குனர் ஜிஎஸ் விக்னேஷ்,  ‘ஓ2’ திரைப்படத்தின் மூலமும் நயன்தாரா வழியாகவும் வழங்க முனைந்திருக்கிறார். ‘சிஸ்டிக் ஃபைரோசிஸ்’ எனும் சுவாச பாதிப்பால் ஆக்சிஜன் சிலிண்டர் உதவி இல்லாமல் சுவாசிக்க முடியாத வீராவுக்கு (ரித்விக்) அறுவைச் சிகிச்சை செய்யும் பொருட்டு, கோவையிலிருந்து கொச்சி நகருக்குத் தனியார் பேருந்தில் அழைத்துச் செல்லும் அம்மா பார்வதி (நயன்தாரா). இவரைப் போன்று அவரவர் பிரச்சனைகளுடன் ஒருங்கே பயணிக்கும் சில பயணிகள். போக்குவரத்து நெரிசல் காரணமாக, வழக்கமான பாதையை விட்டு குறுக்கு வழியில் செல்லும் பேருந்து, எதிர்பாராத விதமாக நிலச்சரிவில் பூமியில் புதைந்து, நம்மையும் பயத்தில் புதைய வைத்து விடுகிறது. அம்மா, குழந்தை, பேருந்து ஓட்டுநர் உட்பட பயணிகளின் கதி என்ன என்பதுதான், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ள இரண்டு மணிநேரப் படத்தின் மொத்தக் கதை. தாவரங்களின் வகை, தன்மை, சுற்றுச்சூழல் மற்றும் உயிர்க்காற்றின் முக்கியத்துவம் ஆகியவை குறித்த புரிதலைக் கொண்ட தாய் பார்வதியாக நயன்தாரா, ‘எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துன்னா, அத பார்த்துகிட்டு சும்மா இருக்கமாட்டா; தட் அப்ளைஸ் டு மதர் நேச்சர் டூ’, ‘உண்மைய சொல்லனும்னா நாமெல்லாம் ஒரு சவப்பெட்டியில் புதஞ்சிருக்கோம்’, ‘ஒரு மனுஷன் சும்மா இருந்தாலே ஒரு நிமிஷத்துக்கு 16 லிட்டர் காத்து தேவைப்படுது; கண்ணுக்குத் தெரியாத பிரச்ன ஆக்சிஜன்’ என்று சொல்வதும், குழந்தையைக் காப்பாற்ற நடத்தும் துணிச்சலும் உணர்வுப்பூர்வமுமான போராட்டங்களும், அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்துகின்றன. அம்மாவுடன் பாசத்தைப்  பகிர்ந்து கொள்ளும் நிகழ்வுகளிலும், ஆக்சிஜன் வேண்டி, ஜோம்பிகள் போன்று எல்லோரும் தம்மை வெரித்துப்  பார்க்கும்போது, ஒருவித அச்சத்துடன் அவர்களை நோக்கும் போதும், குழந்தை ரித்விக்கின் நடிப்பு பளிச்சிடவே செய்கிறது. எதிலும் எப்போதும் சுயநலமாக நடந்து கொள்ளும், சட்டத்திற்குப் புறம்பான காரியத்தைச் செய்யும், தண்ணீர் கொடுத்தவனையே ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லவும் செய்கின்ற, கொடுமையே உருவான போலீஸ்காரர், ‘கடவுளே ஒரு குறை வச்சாலும், ஒரு தாய் நெனச்சா அத சரியாக்க முடியும் தாயி ‘ என்று கூறும் குற்றமே செய்யாமல் தண்டனை அனுபவித்த கைதி, அரசியல்வாதி ஆர். என். ஆர். மனோகர்,  பேருந்து ஓட்டுநர் ஆடுகளம் முருகதாஸ், ‘உன் தகுதிக்கேத்த ஸ்கூல்ல சேக்கோணும்’ என்று கூறும் பஸ் முதலாளி கவிதா பாரதி, அப்பா இடிக்கி பாஸ்கர், மகள், மருத்துவப் படிப்பை முடித்த இளைஞர் எனத் துணைப் பாத்திரங்களை ஏற்ற கலைஞர்களும் கவனம் பெறுகிறார்கள். யாராலேயோ அலட்சியமாக வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பை, எங்கெங்கோ பயணித்து இறுதியில் காற்றாடியின் இயக்கத்தையே நிறுத்தி விடுவதான குறியீடு, காரில் போனால் கண்டம் என்று சொன்ன ஜோசியக்காரர், நடக்கப் போகிற விபரீதத்தைச் சொல்லாத அங்கதம், எதற்கெடுத்தாலும் ‘பேட் டே’ என்று சொல்லிக் கொண்டு வரும் இளைஞன், பஸ் என்ன ஆகியிருக்கும் என்று உணர்ந்த வினாடி ‘மை குட் டே’ என்று கூறுவதிலான நகைமுரண் போன்றவை குறிப்பிடத்தகுந்தவை. குழந்தை வீராவை அத்துணை நிர்பந்தப்படுத்தி, மீண்டும் பேருந்தில் மின்சாரத்தைப் பெறக் கீழே இறக்குவது, மூச்சுத் திணறலுக்கு ஆக்சிஜன் பெற முயல்வதைவிட அவசியமானதோ! நிலச்சரிவு நிகழக்கூடிய மலைப்பாங்கான மாநிலத்தில் இல்லாது, புதைந்திருக்கும் பேருந்தில் சரியான இடத்தை அறிந்துகொள்ள உதவும் கருவியை அரக்கோணத்தில் இருந்துதான் பெறவேண்டுமென்று கூறுவதை ஜீரணிக்க இயலவில்லை. இதுபோன்ற கதைக்கரு கொண்ட படத்திற்குப் பக்கபலமாக இருக்க வேண்டியது இசை. விஷால் சந்திரசேகர் இன்னும் மெனக்கெட்டிருக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பில் ஓரளவு நிறைவைத் தந்திருக்கிறார், ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன். ஆர் கே செல்வா படத்தொகுப்பை இன்னும் கூர்மைப்படுத்தியிருக்கலாம். நயன்தாரா முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்தும், கதைக்கரு வித்தியாசமாக இருந்தும், வாய்ப்பிருந்தும் அதனைப் படமாக்கிய விதத்தில் செழுமை இல்லாது, இந்த பட்ஜெட்டுக்குள் எடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தத்தில் எடுத்தது போன்று, போதிய விறுவிறுப்பு இல்லாமல் போனதும், சில காட்சிகள் ‘அமெச்சுரிஸ்ட்’டாகவும்கூட அமைந்து விட்டது, சோகமே. மதிப்பெண் : 6/10 மது ராஜேந்திரன்

ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

ஒரு மகாத்மா, ஒரு கொள்கை, ஒரு கொலை

நூல் அறிமுகம் இருபத்தி ஆறு தலைப்புகளில், இந்தப் புதினம் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு வரலாற்றுப் புதினம். காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளான ‘ஜனவரி 30, 1948’ தான் இறுதி இயலின் தலைப்பு. இந்நூல், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில், பாளையங்கோட்டையில் கல்லூரிப் படிப்பு நிறைவு செய்து விட்டுத் தம் பசுமையான நினைவுகளோடு பிரியா விடை கொடுக்கும், புதினத்தின் முக்கியக் கதைமாந்தர்களான சீனிவாச ராகவன், பிரான்சிஸ், மற்றும் செந்தூர் பாண்டியன் ஆகியோரது எதிர்காலத் திட்டங்கள் பற்றிய உரையாடலோடு தொடங்குகிறது. ஆதரவற்ற அநாதையான பிரான்சிஸ், தான் வளர்த்தெடுக்கப்பட்ட விதத்தினைக் கருத்தில் கொண்டு, இலங்கையில் உள்ள கண்டியில் கிறித்துவப் பாதிரியாவதற்குப் படிக்கச் செல்கிறான்.  செந்தூர் பாண்டியன், தன் தந்தையின் வணிகத்தை மேம்படுத்த லாகூருக்குப் பயணிக்கிறான். பயணத்தின்போது, அரசு உயர் அதிகாரி ஒருவரோடு பரிச்சயம் ஏற்பட, அந்த அதிகாரி, காந்தியம் பற்றி அறிந்து கொள்ளச்சொல்லி, ரொமன் ரொலைந்த் எழுதிய நூல் ஒன்றையும், தன்வரலாற்றுப் புத்தகமான ‘சத்திய சோதனை’ நூலையும் வாசிக்கத் தருகிறார். அந்த நூல்களைப் பயணத்தின் போதே வாசிக்கத் தொடங்குகிறான் செந்தூர் பாண்டியன். பிராமண குலத்தைச் சேர்ந்த ராகவன், தன் தந்தையின் வழி, வழக்குரைஞர் தொழில் செய்யாது, புனேயில், டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் நிருபர் பணிக்குச் செல்கிறான். அந்தப் புதிய சூழலில், ராகவன் வரலாற்றுப் பாத்திரங்களான நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கர்க்கரே, சாவர்க்கர் போன்றோர்களோடு தொடர்பு ஏற்பட்டு அவர்களோடு தொடர்ச்சியான உரையாடலில் ஈடுபடுகிறான். இதனால், காந்தியத்தைப் பற்றியும், பிராமணீயத்தின் மறுபுறத்தையும், இந்துத்துவ அமைப்புகளின் வெறுப்பு அரசியலை மய்யமாகக் கொண்ட தீவிரவாதத் தன்மையையும் அவனால் நன்கு உணர முடிகிறது. இஸ்லாமியர்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் ஆகிய சமயங்களின்  நல்லிணக்கத்திற்குப் பெயர் போன லாகூர் மாநகரம், அங்கு நிகழ்ந்த முஸ்லீம் லீக் மாநாட்டுப் பிரிவினைவாதத் தீர்மானத்தின் பின்புலத்தில்  தீவிரவாத இஸ்லாமியர்களின் போக்கினால் எவ்வாறு அமைதியற்றுப் போயுள்ளது என்பதை லாகூர் சென்றடைந்தவுடன், செந்தூர் பாண்டியன் கண்கூடாகப் பார்த்து அதிர்ந்து போகிறான். அவனுடைய சினேகிதன் யாகூப் கூட மதவெறியால் மாறிப் போயிருப்பதைக் கண்டு வருத்தம் கொள்கிறான். ஆனால், யாகூப்பின் அன்னையும், சகோதரியும் இவன் மீது எப்போதும் போல சகஜமாகப் பழகுகிறார்கள். ஒரு கட்டத்தில், யாகூப்பின் இளைய சகோதரி சலேலாவிற்கு, அவனுடைய விருப்பத்திற்கு மாறாக, அவர்கள் தாய், செந்தூர் பாண்டியனுக்கு மணம் முடிக்க யோசனையை முன்வைக்கிறார். பிறகு, தேசப் பிரிவினையுடனான சுதந்திரம் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில், லாகூர் பாகிஸ்தானின் பக்கம் என்று தகவல் கசிந்தவுடன், லாகூரில் இஸ்லாமியர்கள் அல்லாதோர் மீது கடுமையான தாக்குதல் நடக்கிறது. இதன் தீவிரத்தை உணர்ந்த செந்தூர் பாண்டியனின் தந்தை சற்குணம் தன் வீட்டுப் பத்திரத்தை சலேலாவின் பெயருக்கும், தன் பெரிய கடையினை யாகூப்பின் பெயருக்கும் மாற்றம் செய்து, அவர்கள் அன்னையிடம் அவற்றை ஒப்படைத்துவிட்டுத் தன் மகனுடன் சொந்த ஊர் திரும்புவதாகச் சொல்கிறார். தன் தொழிலில் ஈட்டிய சொத்தையே எழுதிக் கொடுத்து விட்ட சற்குணத்திற்கு, தன் சொத்தான சலேலாவைத் தருகிறாள் அவளுடைய அன்னை. தான் மனதால் நேசித்த சலேலா, மனைவியாகப் போகும் குதூகலத்துடன்  தன் தந்தையுடன் ஊர் திரும்பும் வழியில், காவலர்கள் வழி மறிக்கிறார்கள்.  சலேலாவின் மீது கொண்ட இச்சை காரணமாக, ஒரு வாரம்  வைத்துக் கொண்டு அனுப்புவதாகக் கூறித் தன் வண்டியில் ஏற்றச் சொல்கிறார்கள். அதை எதிர்த்து மற்ற இருவரும் போராடும்போது, கண்ணிமைக்கும் நேரத்தில் தன் கண் முன்னேயே தந்தை சுட்டுக் கொல்லப்படுவதைக் காண்கிறான் செந்தூர் பாண்டியன். அதே சமயத்தில், சலேலாவும், காவலர் பிடியிலிருந்து திமிறி, காவலரின் கத்தியுடன் கூடிய துப்பாக்கியால் தன்னைக் கீறிக் கொண்டு சாய்கிறாள். ஓட்டுனர் பகதூர், அதிர்ச்சியில் உறைந்து போகும் செந்தூர் பாண்டியனைத் தேற்றி,  தில்லி நோக்கிச் செல்லலாம் என்கிறான். அங்கு காந்தி தங்கியிருந்த குடியிருப்பையும், அவரது சமாதான நடவடிக்கைகளையும் கண்ணுற்ற பாண்டியன், பழி வாங்கும் எண்ணம் ஏதுமின்றி, சொல்லொணாத் துயரைத் தாங்கிக் கொண்டு சொந்த ஊர் செல்வதைத் தவிர்த்து, ராகவனைச் சந்திப்பதற்காகப் புனே செல்கிறான். அங்கு ராகவனோடு கழிக்கும் கால கட்டத்தில், காந்தியைக் கொல்ல சதிவலை பின்னப்படுவதாக இருவரும் உணர்கிறார்கள். தேசப் பிரிவினையால், உலகு கண்டிராத மதக் கலவரமும், தேசம் கண்டிராத அகதிகள் பிரச்னையும் ஏற்படுகிறது. முஸ்லீம் லீக ஆட்சி செய்யும் வங்காளம் கொலைக் களமாக மாறுகிறது. வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் குறிப்பிட்டதுபடி, 55000 ராணுவ வீரர்கள் தில்லியில் கொண்டு வர இயலாத அமைதியை, ஒற்றை வீரராக காந்தி, நவகாளியில் தன் சாகும் வரை உண்னாவிரதப் போராட்டத்தால் கல்கத்தாவில் கொண்டு வருகிறார். அதன் பின் தில்லி வருகிறார் காந்தியடிகள். தன்னுடைய சமாதான நடவடிக்கைகள் பலனளிக்காது போகவே, பிர்லா மாளிகையில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார். அடுத்தடுத்த உண்ணாவிரதத்தால் 79 வயது நிரம்பிய காந்தியின் உடல்நிலை மிகவும் பலவீனமடைந்தாலும், நாட்டில் அமைதியை நிலை நாட்ட உறுதியுடன் உண்ணா நோன்பு மேற்கொள்கிறார் மகாத்மா காந்தி.    காந்தியைக் காண செந்தூர் பாண்டியன் தில்லி செல்கிறான். ஐந்து நாட்களில் நிலைமை சீரடைகிறது. ‘காந்தி செத்தொழியட்டும்’ என்று பழித்த அகதிகள், காந்தியின் உயிரைக் காப்பாற்ற நினைக்கிறார்கள். பல்வேறு தரப்பினரும், அமைதிக்கான உறுதிமொழியைக் காந்தியிடம் அளித்தபின், அந்த உறுதிமொழிகள் மன உறுதியுடன் நிறைவேற்றப் படாவிட்டால், தான் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கையில் எடுக்க வேண்டியதிருக்கும் என்று காந்தி எச்சரிக்கை விடுக்கிறார். மௌலானா ஆசாத் பழச்சாறு கொடுக்க உண்ணாவிரதம் நிறைவு பெறுகிறது. அதற்குப்பின், வழக்கம் போல காந்தி தன் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்கிறார். ஆனால், அவரைக் கொல்வதற்கான திட்டம் புனாவில் தீட்டப்பட்டு, அதை நிறைவேற்றத் தில்லியில் திரள்கிறது மதவெறி பிடித்த கோட்சே கும்பல். ஒரு மாகாத்மாவின் கொலைச் செயலின் பின்புலமாக இருந்த மதவெறி பிடித்த பிராமணீயக் கொள்கையை மட்டுமின்றி, அந்தப் படுகொலை செயல்படுத்தப்பட்ட நுட்பமான விவரங்களையும் இந்த அற்புதமான நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். அவசியம் அனைவரும் வாசிக்க வேண்டிய நூல்.  நூலாசிரியர்: கன்யூட் ராஜ் பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2022)  விலை: ரூ. 460/- ஆனந்த் பாசு                      

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

அக்னி பாத் – தனியார்கள் வகுத்த பாதை

உங்கள் மகன் மெக்கானிக்கல் என்ஜினியரென வைத்துக்கொள்வோம். அல்லது ஏதோ ஒரு பட்டதாரி. படித்து முடித்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் வெறுமனே கையை பிசைந்தபடி இருக்கும் சூழலில், மிகப்பெரிய நிறுவனத்திலிருந்து நேர்முகத்தேர்வுக்கான கடிதம் வருகிறது. மகிழ்கிறீர்கள்; வேண்டிக்கொள்கிறீர்கள்; கனவு காண்கிறீர்கள்; இனி எல்லாம் சுகமேயென ஆனந்தக்கண்ணீரை துடைத்துக் கொள்கிறீர்கள். நேர்முகத்தேர்வில், “எட்டுமாதம் மட்டுமே பணிக்காலம், மாதம் 15000 சம்பளம், எட்டு மாதம் கழித்து நீங்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் சம்மதமா?”யென வினவுகிறார்கள். உங்கள் மகனின் பதில் என்னவாக இருக்கும்? பெற்றோர்களாகிய உங்கள் மனநிலை மற்றும் பதில் என்னவாக இருக்கும்? எனக்குத் தெரிந்த வரை “கிடைத்த வேலையைத் தவற விடாதே. சும்மா இருப்பதைக் காட்டிலும் இது மேல். உள்ளே நுழைந்து விடு பிறகு பார்த்துகொள்ளலாம்” என்பதாகவே இருக்கும். எட்டு மாதப் பணிக்குப் பிறகு வெளியேறி, வேறொரு நிறுவனத்திற்கு இதே எட்டுமாதப் பணிக்குத் தன்னை ஒப்புக்கொடுக்க வேண்டி வரும். இப்படியாக எட்டு எட்டாகப் பிரித்துக்கொண்டு 58 வயது வரை, சொற்ப மாதச் சம்பளத்திற்குப் பணி செய்து ஓய்வு பெறுபவர்களும் உண்டு. சம்பளம் மற்றும் பிஎஃப் தவிர வேறு எந்தப் பலனுக்கும் இவர்கள் தகுதியானவர்கள் அல்ல. சில நிறுவனங்களில் பிஎஃப் பணத்திற்கு உத்திரவாதம் கிடையாது. ஒப்பந்தப் பணியாளரெனில், உங்கள் ஒப்பந்தக்காரர் என்ன தருகிறாரோ, அதுவே உங்களுக்கான பிஎஃப் பணம். உலகெங்கும் உள்ள பெரிய நிறுவனங்கள், ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்கும் மேலாக இத்தகைய போக்கைக் கடைபிடித்து வருகின்றன. உதாரணத்திற்கு, ஒரு நிறுவனத்தில் 5000 பேர் பணிபுரிவதற்கான தேவை இருக்கிறதென வைத்துக்கொள்ளுங்கள். அதில் 2000 பேர் மட்டுமே ஆரம்ப கால, நிரந்தரப் பணியாளர்களாக அந்த நிறுவனம் தக்க வைத்துக்கொள்ளும். மீதமுள்ள 3000 பேர் தற்காலிகப் பணியாளர்களாக நியமித்துக்கொள்ளும். நிரந்தரப் பணியாளரின் வேலையும் தற்காலிகப் பணியாளரின் வேலையும் எந்த மாற்றமும் இன்றி, வேலைப் பளு முதல் வேலை நேரம் வரை ஒன்றாகவே இருக்கும். நிரந்தரப் பணியாளரின் மாதச் சம்பளம் 1,00,000 என வைத்துக்கொண்டால், தற்காலிகப் பணியாளரின் சம்பளம் வெறும் 15000 ஆக இருக்கும். இத்தகைய உழைப்புச் சுரண்டல் மூலமாக அதீத இலாபத்தின் சுவையை அனுபவித்துப் பழகிய முதலாளிகள், நிரந்தர வேலைக்கு நிரந்தரப் பணியாளர்களை ஒரு போதும் நியமிக்க மாட்டார்கள். நிர்வாகத் தரப்பைப் பொருத்தமட்டில் கூறப்படும் காரணங்கள்: நிலையற்ற வியாபாரச் சந்தை. மாறிவரும் தொழிற்நுட்பத்திற்கான முதலீடுகள், போட்டியாளர்கள், உள்நாட்டு வரிகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டே இத்தகைய பணியாளர்களை நியமித்துக்கொள்வதாகச் சொல்கிறார்கள். இவை உண்மைதானே என எண்ணும் அதே நேரம், ஈட்டும் இலாபத்தை வளராத மாநிலங்கள் அல்லது வளராத நாடுகளில் முதலீடு செய்து மிகக் குறைந்த மாதச் சம்பளத்திற்கு ஆட்களை அமர்த்தி, உற்பத்தியைத் தொடங்கி உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வார்கள். சுருக்கமாகச் சொல்வதனால், வளர்ச்சி என்பது முதலாளிகள் வகையினர்களுக்கு ஆனதாக மட்டுமே இருக்கும். ஏதோவொரு காரணத்துக்காக ஒரு ஆலை மூடப்பட்டாலும், பிற ஆலைகள் இயங்கும்படியான திட்டமிடல் அவர்களுக்குக் கை கொடுத்து விடுகிறது. இத்தகைய தனியார்களின் போக்கைத்தான் அரசுத் துறைகளிலும் அரசு நிறுவனங்களிலும் அமுல்படுத்த, அரசு நினைக்கிறது. இதன் மூலம் பொருளாதரத்தைச் சீர் திருத்தம் செய்துக்கொள்ள முனைகிறது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப, உள்நாட்டுத் தொழிற்கட்டமைப்பை மேம்படுத்துவது, அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு ஏற்ற நம்பகத்தன்மையுடன் கூடிய சூழலை உருவாக்கும் திறனற்றுக் கிடக்கிறது. தேவையற்ற சர்ச்சைகள் மூலம் உள்நாட்டுக் கலவரங்களை உருவாக்க வழி வகுப்பது போன்ற செயல்கள் மிக மோசமான பொருளாதாரப் பின்னடைவையே ஏற்படுத்தும். அதிகப்படியான நிதி ஒதுக்கப்படும் ராணுவத்தில் இருந்து “சாப்பிட ரொட்டி கூட இல்லை” என, கண்ணீர் மல்கிய ராணுவ வீரரின் காணொளி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராணுவத்தில் காலியிடங்கள் இருந்த போதும் அதை நிரப்பாமல், நான்கு ஆண்டுகள் வரை மட்டும் பணிபுரியவேண்டும்; அதில் 25% பேருக்கு மட்டுமே பணி நிரந்தரம் என்றால், மீதம் 75% பேரைத் தகுதியற்றவர்களாகத்தானே கருத வேண்டி வரும்.? அவ்வாறு தகுதியற்றவர்களாகக் கருதப்படும் அத்தகைய வீரர்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டார்கள்!? என்ற கேள்வி எழுவதோடு, அவர்களுக்கு அளிக்கப்படும் 12 இலட்ச ரூபாய் எந்த அளவிற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும்? அவ்வாறு ராணுவத்திற்குத் தகுதியற்றவர்களை முன்னணி நிறுவனங்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்து பணியமர்த்தும்? அந்தப்பணி எத்தகையதாக இருக்கும்? பொருளாதாரப் பின்னணியோ, மேம்பட்ட கல்வித்திறனோ அற்றவர்கள்தானே பெரும்பாலும் ராணுவத்தை தேர்வு செய்கிறார்கள்? அதிலும் மூத்த பிள்ளையெனில் உடன் பிறந்தோரைக் கரைசேர்த்து, தான் கரையேறுவதற்குள் அனைத்தும் கரைந்து விடுமே. அடுத்து எங்கே செல்ல முடியும்? தற்போது அவர்களுக்கு முன்னணி நிறுவனங்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவதாகக் கூறிவருகிறார்கள். அப்படியான வேலை வாய்ப்பு இருக்குமேயானால் எட்டுமாத வேலைத் திட்டத்தை நீக்கி நிரந்தர வேலைவாய்ப்பை பொறியியல் மற்றும் தொழிற்நுட்பம் பயின்ற இளைஞர்களுக்கு அளித்திருக்கலாமே? தெளிவில்லாத திட்டங்களை ஆதரிப்பது என்பது, நம் பிள்ளைகளின் வாழ்விற்கு நாமே சூன்யம் வைத்துவிடுவதாக அமைந்துவிடும். நிரந்தரமான பணிமுறைகளுக்கு நிரந்தரமான பணியாளர்களை அமர்த்துவது ஒன்றே சரியானது. அதற்கான பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்துவதே தற்போதைய தேவை. ஜெகதீஷ் நிதி

செலக்டிவ் பாலிடிக்ஸ்

செலக்டிவ் பாலிடிக்ஸ்

இது சமூக வலைத்தளங்களின் காலம். சமூகத்தில் நிகழும் எந்தவொரு நிகழ்வையும் சமூக வலைத்தளவாசிகள் நினைத்தால், ஆதரவாக அல்லது எதிர்ப்பாக, பெரும் வைரலாக மாற்ற முடியும் எனும் காலம். சமூக வலைத்தளங்களால் உலகெங்கும் அரசுகளே தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் இளைஞர் புரட்சியாகக் கருதப்படும் 2011 எகிப்துப் புரட்சியும் சரி, 2017 மெரினா ஜல்லிக்கட்டு புரட்சியும் சரி, சமூகவலைதளங்களின் சக்தியால் இளைஞர்களை ஒன்றுதிரட்டி நிகழ்த்திக் காட்டப்பட்ட பெரும் புரட்சிகள். இதைப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகளும், கட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தி, தனி அணிகளையே உருவாக்கி நடத்தி வருகின்றனர். மறுபக்கம் அச்சு ஊடகங்கள் வர்த்தக ரீதியாக சவால்களைச் சந்தித்து வரும் நிகழ்காலத்தில், சேட்டிலைட் சேனல்களுக்கே கடும் போட்டியைக் கொடுக்கும் விதமாக யூ-டியூப் சேனல்கள் பல்கிப்பெருகி வருகின்றன. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் எதுவாகட்டும், அவற்றின் கடமை, அறம் என்னவாக இருக்க வேண்டும்? நீதியின் குரலாக, பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தரப்பு நியாயத்தையே பேசுபொருளாக்க வேண்டும். அதுதான் அறம். ஊடங்கங்களுக்கு மட்டுமல்ல; மக்களைக் காப்பாற்றுவாதற்காகவே அவதாரம் எடுத்து வந்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அறம். இந்தச் சூழலில், அண்மைக்காலத்தில் நடந்தேறிவரும் சில நிகழ்வுகளைக் காண்போம். நிகழ்வு 1அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் செய்த குற்றங்களுக்கு வழக்குப் பதிவு செய்யட்டும். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி தண்டனைகள் வழங்கப்படட்டும். அதில் தவறு இல்லை. ஆனால் உ.பி. அரசு இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு புதிய நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. அதாவது, போராட்டங்களை முன்னின்று நடத்துவோர் மற்றும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டோரது வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் அல்லது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக கூறி, காலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. மதியம் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. உ.பி இந்தியாவின் ஒரு அங்கம்தானே? இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட மாநிலம்தானே? அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நாடாளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இருக்கிறது அல்லவா? அந்த அமைப்புகள் கடமையைச் செய்யாவிட்டால் எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அந்தக் கடமையைச் செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதுதானே? நிகழ்வு 2தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 7 விசாரணைக் கைதிகள் காவல்நிலையத்தில் மரணமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கடுமையாகத் தாக்கப்பட்டதால் மரணமடைந்த்தாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வருவதற்குள், முதலமைச்சர் சட்டமன்றத்தில், அந்த நபர் உணவு ஒவ்வாமையால் மரணித்ததாக தவறான தகவலைச் சொல்கிறார். நிகழ்வு 3குடந்தையைச் சேர்ந்த பட்டியல் சமூகப் பெண்ணும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞரும் பெண்வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் அண்ணன், தான் மனம்மாறி அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி விருந்துக்கு அழைத்து, இருவரையும் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். நிகழ்வு 4கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதும் ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல் கட்சிகளும் சரி, ஊடகங்களும் சரி, எல்லாவற்றையும் டிரெண்ட் ஆக்கும் சமூக வலைத்தளங்களும் சரி, பெரிதாகப் பொருட்படுத்தவே இல்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த லாக்அப் மரணத்தை மிகப்பெரிய அளவில் வைரலாக்கின சமூக வலைத்தளங்கள். அந்தச் செய்தியைத் திரும்பத்திரும்ப ஒளிபரப்பி, மக்களைக் கொதிநிலையிலேயே வைத்திருந்தன ஊடகங்கள். எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டங்கள் நடத்தின. கடந்த காலங்களில் சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தபோது ஊடகங்களும் கட்சிகளும் இடைவிடாது பேசுபொருளாக்கி, போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், தற்போது குடந்தையில் நடந்த படுகொலையை சாதி ஆணவப்படுகொலை என்று குறிப்பிடவே மறுக்கின்றன. சாதிவெறி என்பது, சாதியப் படிநிலையின் எந்த அடுக்கில் இருந்தாலும் அது சமூக இழிவே என்ற உண்மையைப் பேசாமல் மூடி மறைக்கின்றன. அவ்வாறு உடைத்துப் பேசாமல், இத்தகைய படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், இவர்கள் சாதியை ஒழிக்கப் போராடுவதாகக் கூறுவது ஏமாற்று வேலை அல்லது நகைப்புக்குரியது. கடந்த காலங்களில் டெல்லியிலும் கஷ்மீரிலும் பெண் பாலியல் வன்கொடுமைகள் நடந்தபோது பொங்கி எழுந்து, “ஜஸ்டிஸ் ஃபார்_____” என்று பதாகைகள் ஏந்தியும் ஹேஷ்டேக்குகள் உருவாக்கியும் இவர்கள் எவ்வளவு பெரிய சமர் புரிந்தனர்? இங்கே நம் மண்ணில் நம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது ஊடகங்களும் அன்று போராடிய கட்சிகளும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டுள்ளன. ஏன் இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள்? நடந்த குற்றத்தைப் பாரபட்சமின்றிக் கண்டிக்க வேண்டுமே தவிர, குற்றம் புரிந்தவர் யார் என்று பார்த்து, கண்டிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது, அந்தக் குற்றத்தை விட மோசமானது. எத்தகைய அரச பயங்கரவாத்தையும் எதிர்க்க வேண்டுமே தவிர, நமக்கு வேண்டப்பட்ட அரசாக இருந்தால் கண்டுகொள்ளாமலும், நமக்கு எதிர்ப்பான அரசாக இருந்தால் பொங்கியெழுந்து போராட்டம் நடத்துவதும் மிகமிக ஆபத்தான போக்கு. இப்படியெல்லாம் ஊடகங்களும் முன்னால் எதிர்க்கட்சிகளும் செலக்டிவ் நிலைப்பாடுகளை எடுப்பதால்தான், திரு.ஆர்.எஸ்.பாரதி, திரு.அண்ணாமலை போன்றவர்கள் இவர்களை ஏலம்போட்டு இழிவுபடுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல, சிறிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள், அந்தந்த நேரங்களில் பெரிய கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆதரிக்கின்றன அல்லது எதிர்க்கின்றன என்ற விமர்சனங்கள் பலதரப்பிலும் வைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதியை நிலைநாட்ட எப்போதும் தயங்காமல் முன்வர வேண்டும். இதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களுக்கும் நீதி கிடைக்கும். இவர்களும் மேற்சொன்ன விமர்சனங்களில் சிக்காமல் சுயமரியாதையுடன் நேர்மைக்கே உரித்தான கம்பீரத்துடன் பயணிக்கலாம். செய்வார்கள் என்று நம்புவோம். தஞ்சை ராஜேஷ்

அஸ்கர் அலி இன்ஜினியரின் பெண்ணியம்

அஸ்கர் அலி இன்ஜினியரின் பெண்ணியம்

‘ஆண்களைப் போலவே சமமாக நடத்தப்பட வேண்டும்’ என்று பெண்கள் தங்கள் கருத்துக்களை, அவர்கள் அனுபவத்தில்  கண்ட அடக்குமுறையிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக வாதிடுவது இயல்பான ஒன்று. குர்ஆன் மற்றும் பல்வேறு தீர்க்கதரிசனங்கள் பற்றிய விளக்கங்கள் அளித்துள்ள பாகிஸ்தானின் ரிஃபத் ஹாசன் (1943), அமெரிக்காவின் அமினா வதூத்-முஹ்சின் (1952), மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பாத்திமா மெர்னிஸ்ஸி (1940), எகிப்து நாட்டின் நவல் எல் சாதவி (1931) போன்ற பெண்ணியவாதிகளின் எழுச்சி, இஸ்லாமிய சமூகத்தில் பெண்கள் இயக்கம் இன்னும் உறுதியாக உள்ளது என்பதற்குச் சான்று. ஆனால் இஸ்லாமிய ஆண் பெண்ணியவாதிகள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?  சமகால இஸ்லாமிய உலகின் சீர்திருத்தச் சிந்தனையாளரான ஆண் பெண்ணியவாதிகளில் ஒருவரான அஸ்கர் அலி இஞ்ஜினியர், ஆண்-பெண் சமத்துவம், திருமண உரிமைகள், ஹிஜாப் போன்ற பல விஷயங்களில் குர்ஆனின் அடிப்படையில், விளக்கங்கள் அளிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர். இஸ்லாமிய சமுதாயத்தில் அதற்குப் பெரும் பங்கு வகித்தவர் அஸ்கர் அலி இஞ்ஜினியர். முனைவர். அஷ்கர் அலி இன்ஜினியர், 1939 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் உதய்பூருக்கு அருகிலுள்ள சலும்பரில் பிறந்தார். அவர் தனது தந்தையிடமிருந்து இளம் பிராயத்திலேயே இஸ்லாமியக் கல்வியில் ஆரம்பப் பயிற்சி பெற்றார். அரபு மற்றும் பாரசீக மொழிகளையும் இதற்காகக் கற்றுக்கொண்டார். மேலும் இந்த இரு மொழிகளில் உள்ள இலக்கியப் படைப்புகளை ஆர்வத்துடன் வாசித்தார். அவரது இளம் வயதிலிருந்தே, அறிவார்ந்த பகுத்தறிவுச் சிந்தனையை வெளிக் காட்டினார். அவர் ‘ஆசியாவின் எஸ்பினோசா’ (Espinoza) என்று மேனாள் இந்தியத் துணை ஜனாதிபதி முனைவர் ஹமீத் அன்சாரியால் அழைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாம் மற்றும் அது கூறும் மனிதாபிமான விழுமியங்களைப் பற்றி எப்பொழுதும் அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்தாலும், பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, அவர் சிவில் இன்ஜினியர் பட்டம் பெற்று, பம்பாய் முனிசிபல் கார்ப்பரேஷனில் பொறியாளராக தனது பணியைத் தொடங்கினார். இருபது ஆண்டுகளில் விருப்ப ஓய்வு பெற்றார். அஷ்கர் ஒரு எழுத்தாளராக நாட்டில் அமைதி, மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, அசாத்தியத் துணிச்சலுடன் செயல்பட்டவர். சமூகம் மற்றும் மதச்சார்பின்மை பற்றிய ஆய்வு மையத்தின் நிறுவனத் தலைவர். அவர் உரை நிகழ்த்த அழைக்கப்பட்ட பல நாடுகளில் இருந்து உலக மதச்சார்பின்மையின் போக்குகளைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற்றிருந்தார். அவரது சுயசரிதை நூலான ‘A Living Faith: My Quest for Peace, Harmony and Social Change’ 2011 ஆம் ஆண்டில் அன்றைய இந்தியத் துணை ஜனாதிபதியான ஹமீத் அன்சாரி அவர்களால் வெளியிடப்பட்டது. அவரது அரும்பணி அவருக்குப் பல விருதுகளைப் பெற்றுத் தந்தது. மத நல்லிணக்கத்திற்கான அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில், ஒன்றிய அரசாங்கம் 1997-இல் அவருக்கு ‘வகுப்புவாத நல்லிணக்க’ விருதை வழங்கியது குறிப்பிடத்தக்கது. அவர் வகுப்புவாத வன்முறை மசோதாவை உருவாக்கிய தேசிய ஆலோசனைக் குழுவின் ஒரு அங்கத்தினராகவும் தம் பங்களிப்பைச் செலுத்தினார். “அஸ்கர் சமகால இஸ்லாமிய உலகில் மிகவும் பரவலாக வாசிக்கப்பட்ட, அதே சமயத்தில் எளிதில் அணுகக்கூடிய சீர்திருத்த சிந்தனையாளர்களில் ஒருவர்” என்று பன்முகக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் எழுத்தாளர், மொஹமத் இம்ரான் மொஹமத் தயிப் மேற்கோள் காட்டியுள்ளார். இஸ்லாமிய சமூகத்தில் சீர்திருத்தம் குறித்த பிரச்சனைகள் பற்றிய அவரது கருத்துக்கள், முஸ்லீம் சட்டம், அரசியல் மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களை மறுபரிசீலனை செய்வதற்கான முக்கியப் பங்களிப்பாகும். ஆயினும், அவை உலகெங்கிலும் உள்ள பல இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கங்களில் காணப்படும் அடிப்படைவாத மீளுறுதிப்பாட்டின் கருத்தாடலினால் முட்டுக்கட்டை ஏற்பட்டு, மேற்செல்ல முடியாத நிலையை அனுபவித்துள்ளது. இஞ்ஜினியர், உலகெங்கிலும், அனைத்து சமூகங்களுக்கிடையில்  பெண்-நிலை பெற்ற முக்கியத்துவம் குறித்துத் தனது மிகுந்த கவனத்தை செலுத்தினார். ​​அஸ்கரின் கூற்றுப்படி பல விஷயங்கள், குறிப்பாக சமூகத்தின் நிலை மாறியுள்ளன. எனவே, மதநூல்களின் வசனங்களையும் மாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் கருதினார். மற்றொரு அர்த்தத்தில் சொல்ல வேண்டுமென்றால், அடிமை நிலைக்கு தெய்வீக சட்டங்களின் தத்துவங்கள் இனி பொருந்தாது என்று அவர் தீர்ப்பளித்தார். இவ்வாறாக, சமய மறைகள் கைவிடப்பட்டு, மதச்சார்பற்ற அடிப்படையில் சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும், அல்லது நவீன நிலைக்கு ஏற்றவாறு அவற்றை மீள் வாசிப்பு செய்து மறுவிளக்கம் கொடுக்க வேண்டும் என்றார்.  அதே சமயத்தில், ‘அர்ரிஜாலு கவ்வாமுனா அலனிசா’ (arrijaalu qawwamuuna alannisaa) என்ற குர்ஆனின் வசனம் பெண்களை ஒடுக்கி ஆண்களின் கீழ் நிலையில் வைக்கிறது என்பதை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, அந்த வசனம், பெண்கள் மீது கடுமையாக உள்ளதாக அவர் கருதினார். ஆனால் ‘பெண்கள் தங்கள் வீடுகளில் பிணைக்கப்பட்டிருந்த காலங்களில், ஆண்களே அவர்களுக்குத் தேவைகளை வழங்குபவர்களாக இருந்தனர்’ என்கிற அக்காலச் சூழலையும் பார்க்கிறார். எனவே, குர்ஆன் அத்தகைய சமூக அமைப்பை மகிமைப்படுத்தவோ அல்லது அதை நெறிமுறையாக அறிவிக்கவோ இல்லை என்று அவர் குறிப்பிடுகிறார். சமூகக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறு மாற்றம் நிகழும்போது, பெண்கள் ஆண்களுடன் இணைப் பங்காளிகளாகும்போது, பெண்கள் ஆண்களுக்கு சமமாகவோ அல்லது உயர்ந்தவளாகவோ ஆக வேண்டும்; மேலும் ஆண்களைப் போலவே குடும்பத்தில் மேலோங்கிய பாத்திரத்தை வகிக்க ஆரம்பிக்க வேண்டும் என்றுரைக்கிறார். இன்னொரு எடுத்துக்காட்டாக, திருமண விஷயத்தில் ஆடவர் மற்றும் பெண்டிர், இருவருடைய நிலையைப் பொறுத்தவரை, ஆண்களுக்கு பெண்களை விட சிறப்புரிமை ஏதுமின்றி, மாறாக, ஆண்களை விடவும் பெண்களுக்கும் எவ்விதச் சலுகையுமின்றி, சமமாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார். கடவுளால் வேண்டப்படுவனவற்றை மீறாதவரை, ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பியபடி மண ஒப்பந்தத்தை வைத்திருக்க உரிமை உண்டு. விவாகரத்து உரிமை (talaq tajwiz) உட்பட, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்துடன் அவள் அந்த உடன்பாட்டில் ஈடுபடலாம். உண்மையில், பாதுகாவலர் (guardian) என்ற கருதுகோளையே குர்ஆன் அங்கீகரிக்கவில்லை என்று அவர் வலியுறுத்துகிறார்; ஒரு பெண் அவள் தெரிவு செய்யும் பட்சத்தில், ‘பாதுகாவலர்’ யாருமின்றி மணம் செய்து கொள்ளச் சுதந்திரம் உள்ளது என்கிறார். ‘இஸ்லாமிய அமைப்பு, அதன் சட்டதிட்டங்களின் படி, பெண்களின் நிலைக்கு ஒரு சாபம்’ என்று சொல்லும் மதச்சார்பற்ற பெண்ணியவாதிகள், இஸ்லாத்தை ஒரு ஒடுக்குமுறையாகச் சித்தரித்து, மேற்கத்திய மதச்சார்பற்ற மாற்றுகளை ஏற்றுக்கொள்வதன் மூலம் பெண்கள் தங்களை மதக்கட்டுகளிலிருந்து விடுவித்துக் கொள்ள வலியுறுத்துகிறார்கள். குர்ஆனின்  முறையான விளக்கத்தைப் பார்க்கும்போது, பெண் விடுதலையைப் புரிந்துகொள்வது உண்மையில் ஒரு பிரச்சனையா அல்லது தேவையா? பெண் விடுதலை இஸ்லாத்திற்கு இயைந்ததா? இல்லையா? என்கிற வினாக்களுக்கு விடை கிடைக்கிறது.   இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, இஸ்லாத்தின் பார்வையிலிருந்து, பெண் விடுதலையைக் காண்பதற்கான விளக்கங்கள், பெண் விடுதலைக்கான சிந்தனை எழுப்பப்பட்ட அதே காலகட்டத்தில் எழுதப்பட்டுள்ளன என்கிறார். இன்றைய சமூகம் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறது. குறிப்பாக, பெண் விடுதலை தொடர்பான சமகாலப் பிரச்சனை இஸ்லாமிய சமூகம் முழுவதும் பரவலாகப் பரவியுள்ளது. எனவே, இந்த நவீன யுகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஏற்ற விளக்கத்தை, அந்தச் சமூகமே பயன்படுத்திக்கொள்ள, மதிப்புமிக்க பங்களிப்பை அஸ்கர் அலி இஞ்ஜினியர் வழங்கிவிட்டு, அழியாச் சுவடுகள் பதித்துச் சென்றிருக்கிறார். ஆனந்த் பாசு

ஆளரவமற்ற கட்டடங்களுக்கு உயிர் உண்டா?

ஆளரவமற்ற கட்டடங்களுக்கு உயிர் உண்டா?

மேப்படியான் திரைப்படத்தில் ஒரு காட்சி. வாழ்ந்த வீட்டை சந்தர்ப்ப சூழ்நிலையால் விற்றுவிட்டு வெளியேறுவார் நாயகன்.  வீட்டைக் காலி செய்து மூட்டை முடிச்சுகள் கட்டி, டெம்போ, ஜீப் வெளியேறும்.  அந்த ஜீப்பின் பின்பக்கம்,  உள்ளிருந்து நாய் அந்த வீட்டையே பார்த்துக்கொண்டு செல்லும்.  அந்த  நாயின் கோணத்தில் இருந்து காட்சிப்படுத்தி இருப்பார்கள்.  நாயகன் வருத்தத்துடன் அப்படியே பார்த்துக்கொண்டு சற்று நேரம் நிற்பார்.  அதன் பின் பைக்கில் ஏறிக் கிளம்புவார். அன்றைய திரைப்படங்கள் முதல், இன்று வரை பல திரைப்படங்களிலும் சூழ்நிலை காரணமாக, நாயகனின் சோதனை காலங்களில், அவர்கள் வாழ்ந்த வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிகளில் இதுபோலவே வீட்டை உற்றுநோக்கி விட்டுத்தான் வெளியேறுவது நடக்கும். கூடவே கனமான அல்லது சோகமான பின்னணி இசையும் ஒலிக்கும். பல படங்களில் அது மனதை உருக்கும் சென்டிமென்ட் நிறைந்த க்ரிஞ் காட்சிதான். அந்த வீடுகளுக்கு அல்லது கட்டிடங்களுக்கு உயிர் உண்டா?  என்ற பெருங்கேள்விக்கான பதில்: மனிதர்களின் நிரம்பி வழிந்து உரையாடல்கள் வழி மென் உணர்வுகள் கடத்தப்படும்போது அந்தக் கட்டிடங்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு விடுகிறது.   அந்த இடங்களுக்கு, கட்டிடங்களுக்கு மீண்டும் செல்லும்பொழுது, தேங்கிக் கிடந்த நினைவலைகளுக்கு மீண்டும் உயிர் வந்து, சிறகடிக்க ஆரம்பித்து விடுகின்றன. அதற்காகவே மனம் அந்தப் பழைய இடங்களுக்குச் சென்று, அந்த நினைவலைகளில் பயணித்து, வாழ்வை உயிர்ப்பித்து, மனதைப் பரவசப்படுத்திக் கொள்ள நினைக்கின்றது.  5 வருடங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் ITPL அலுவலகம் சென்றேன் அல்லது வரவழைக்கப்பட்டேன்.  எப்போதும் மூன்று, நான்கடுக்குப் பாதுகாப்பு சோதனைகள் நிறைந்த அலுவலகம் இந்த  ITPL .  அடர் நீல நிறப் பேண்ட்டும்,  வெளிர் நீல நிறச் சட்டையும் அணிந்த இறுக்கமான பாதுகாப்புப் பணியாளர்கள்/அதிகாரிகள், வட கிழக்கு மாநிலத்தில் இருந்த இறக்குமதி ஆனவர்கள். வழக்கமாகக் கூட்டமாக இருப்பவர்கள், அன்று ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள்.      பைக்கில் உள்ளே சென்றால் துப்பாக்கி போன்ற ஒரு சோதனைக் கருவியை வைத்து பின்புறம் மாட்டியுள்ள பையை ஸ்கேன் செய்யும் பாதுகாப்பு சோதனை இல்லை.  உள்வரும் வாகனனங்களை வரிசையாக  ரேஸ் விடுவதுபோல நிறுத்தி, அதற்கு முன்னால் ஒரு கம்பியை நீட்டிக்கொண்டு செல்லும் சோதனையும் இல்லை.  சில சோதனைகள் எல்லாம் எதற்கு செய்கிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது; நமக்கும் தெரியாது.  அந்த வகை சோதனைகளில் இதுவும் ஒன்று.   ஆரம்பத்தில் புதிதாக உள்ளே சென்றபோது நிறுவன ஸ்டிக்கர் இல்லாமல் இவர்களிடம், தங்லீஷ் ஹிந்தியில் பேசி விருந்தினர் அட்டை வாங்கி  உள்ளே நுழைந்தது  தனிக்கதை.   இன்று அடையாள அட்டையை மட்டும் சோதனை செய்து அதில் ITPL ஸ்டிக்கர் உள்ளதா என்று பார்த்து அனுப்புகிறார்கள்.  அவர்களுக்குத் தேவை, அந்த குறிப்பிட்ட ஸ்டிக்கர்தானே தவிர, நமது முகம் அல்ல.  புதிய சோதனையாக, காய்ச்சல்  சோதிக்கும் கருவியைக் கையில் காண்பித்து  சோதனை செய்கிறார்கள். உள்ளே நுழைந்தாயிற்று.   ‘பார்க்கிங் காசு வாங்குவார்களே, எங்கு நிறுத்தலாம்?’ என யோசிக்கும் பொழுது, காசு வாங்கும் அறை காலியாக இருந்தது.  ஒவ்வொரு வண்டியாகத் தடுத்து நிறுத்தும் ஆட்டோமேட்டிக் குச்சியைக் காணோம்.  நிரம்பி வழியும் இரு சக்கர வாகன நிறுத்துமிடம், புல் முளைத்துக்  கிடந்தது.  மரங்களின் சருகுகள் சற்று அதிகமாவே கிடந்தன. மரங்ககளின் நிழல்களில் அங்கங்கு சில பழைய வாகனங்கள், சிலந்திகள் கூடு கட்டி சமூக இடைவெளியில் இளைப்பாறிக்  கொண்டு இருந்தன.  காலியாகக் கிடந்த பைக் நிறுத்தத்தைப் பார்க்கும்பொழுது, ‘எத்தனை கொள்ளை எங்க கிட்ட அடிச்சிருப்பீங்கடா?’ என்றுதான் தோன்றியது. பார்க்கிங்கின் வெளியே அங்கங்கு சொற்ப பணியாட்கள்.  இவை அனைத்தும் இன்னும் அலுவலகங்களுக்கு மக்கள் வரவில்லை என்பதை அழுத்திச் சொன்னது. ஏதோ யாருமில்லாத உலகத்துக்குள் பயணிப்பது போல ஒரு மயான அமைதி.  கல்லூரி போல குழுமம் குழுமாகச் சாலையில் நடந்துகொண்டே இருக்கும் பட்டாம்பூச்சிகளைக் காணவில்லை.  டவுன் பஸ் ஏறும் கூட்டம் போல  இருக்கும் லிப்ட் லாபிகள், காலியாக இருந்தன. புதிதாக வெளிவரும் திரைப்படத் தியேட்டர் போல எந்நேரமும் கூட்டமாக இருக்கும் கா∴படீரியா, மொக்கைத்  திரைப்படத்தின் பகல் காட்சி போல யாருமின்றி இருட்டடித்துக் கிடந்தது. ஏதோ யாருமற்ற இடத்திற்குள் நுழைந்து போன்ற ஒரு பிரம்மை.    மனிதர்கள் இல்லாத இந்தக் கட்டிடங்கள், ஏதோ வாழ்ந்து கெட்ட  குடும்பத்தைப் போலத்தான் காட்சி அளிக்கின்றன. நகரமோ, கிராமமோ, இடங்களோ, கட்டிடங்களோ, மனிதர்கள் இல்லாவிடில்  அவை தொல்பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட இடம் போலத்தான்.  மூடப்பட்ட அன்றைய மில்களும், தியேட்டர்களும் கடத்தும் வலிகள் அசாதாரணமானவை.  ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ராயல் தியேட்டரைக் கடக்கும் போதும் இதேதான் தோன்றும்.  ஆயிரம் ஆயிரம் மக்களைச் சுமந்து அவர்களைக் குதூகலப் படுத்திய  ஒரு அரங்கம்.  முண்டி அடித்துக்கொண்டு கம்பிகளின் இடையே கூட்டம் இருக்கும்.  பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக 100 நாள் கடந்து ஓடிய கட்டிடம்.  மேலே குறிப்பிட்ட, நாயகன் வீட்டைக் காலி செய்துவிட்டுப் போகும் காட்சி, அதில் ஓடிய திரைப்படங்களில் ஏதேனும் ஒன்றிலாவது வந்து இருக்கும். நிழல் உலகம் போல, நிகழ் காலங்களில் யாரும் பின்னணி இசை வாசிப்பது இல்லை.  இன்றைக்கு சண்டைக்காட்சிகள் எடுக்கப்படும் பின்னி மில் கூட இதுபோலத்தான் ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்திருக்கும்.   பலமாடிகளில் பகல் போல மின்னும் IT  நிறுவனக் கட்டிடங்களுக்கும் அந்த நிலைமை வருமா? தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் நம் ஊருக்கு வந்த 2000 களின் ஆரம்பத்தில், ‘5000 பேர் கொண்ட xy நிறுவனம் பழைய மஹாபலிபுரம் சாலையில் தொடங்க உள்ளார்கள்’ எனும் செய்தி செய்தித்தாள்களில் அவ்வப்போது வரும்.  இது மறைமுகமாக ஒரு 500 பேருக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் எனும் ஒரு வரியும் அந்தச் செய்தியில் சேர்ந்து இருக்கும்.  அந்த ‘மறைமுகமான வேலைவாய்ப்பு’ என்பது அங்குள்ள கா∴படீரியா, அட்மின் துறை, கட்டிடங்களைப் பராமரிக்கும் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலகப் பேருந்தை இயக்குபவர்கள் என இன்னும் பலரும் அடங்குவார்கள்.  அது தவிர அந்தந்த அலுவலகங்களின் வெளியே உள்ள சின்னச் சின்ன பெட்டிக்கடைகள், இளநீர், பஜ்ஜி, பஞ்சர் கடைகள் என இன்னும் பலவும் சேரும்.    இந்த இரு வருடங்ககளாக அவர்கள் அப்படியேவா இருப்பார்கள்?  தெரியவில்லை. மீண்டும் இதுபோன்ற அலுவலகம் திறப்பார்கள், உலகம்  திரும்ப வரும் எனப் பலர் காத்துக்கொண்டு கூட இருக்கலாம். ஏனெனில் நம் கடந்த காலம் அப்படி.  தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்கள் இனி பழைய முறையில், அனைத்து நாட்களும் அனைவரும் அலுவலகம் வந்து இயங்குமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.  பல நிறுவனங்களும் ஹைபிரிட் என்று சொல்லக்கூடிய சில நாட்கள் அலுவலகம், பல நாட்கள் வீட்டிலிருந்து எனும் முறைக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவே வழக்கமான முறையாக மாறக்கூடும்.  இது ஒரு வகையில் பெரு நகரங்களை, குறிப்பாக சென்னை, பெங்களூரை மூச்சு விட வைக்கும். ஆனாலும் நேரில் பார்க்கும்பொழுது வரும் தொடர்பு, உரையாடல், நெருக்கம்,  என்னதான் இணைய வழியே வேலை பார்த்தாலும் வருவது இல்லை.    இன்னும் திறக்கப்படாத டீக்கடைகள், பூட்டிக்கிடக்கும் பெட்டிக் கடைகளுக்காகவேனும் மீண்டும் இந்தக் கட்டிடங்களுக்கு மனிதர்களின் மூலம் உயிர் வர வேண்டும்.    க்ருஷ்

நடுகற்கள் – வரலாற்றின் சுவடுகள்

நடுகற்கள் – வரலாற்றின் சுவடுகள்

நடுகற்கள் என்றால் என்ன? மனிதன் காடுகளில் வாழ்ந்த ஆதி காலம் தொட்டே இயற்கையை வணங்கியும், மரணத்தைக் கண்டு பயந்தும் வாழ்ந்துள்ளான். அப்படி இறந்து போகும் மனிதன் எங்கு செல்வான் என்ற கேள்வி அவன் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. இறந்தவர்களுக்காக ஈமச்சின்னங்களை ஏற்படுத்தவும் பழகிக்கொண்டான். அவற்றில் ஒன்று கல்திட்டை. இவை ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. இந்தக் கல்திட்டைக்குள் வேட்டைக் காட்சிகளும், மனிதன் மற்றும் விலங்குகளின் உருவங்களும் பல இடங்களில் காணப்படுகின்றன. இந்தப் பாறை ஓவியங்களே நடுகற்களின் முன்னோடியாக இருக்கலாம். சங்க இலக்கியங்களில் நடுகற்களைப் பற்றிக் குறிப்பு இருந்தாலும் அவை இப்போது நம்மிடையே இல்லை. கால வெள்ளத்தில் அழிந்துபட்டன. விலங்குகளுடன் போரிட்டு இறந்த வீரனுக்காக வரையப்பட்ட ஓவியங்கள் தொன்மை வாய்ந்தவை. பெருங்கற்காலம் தொடங்கி இறந்தவர்களுக்கு உலகமெங்கும் நினைவுக்கற்கள் எடுக்கப்பட்டாலும் போரில் இறந்தவர்களுக்கு வீரக்கல் எனப்படும் நடுகல் எடுப்பது சிறப்பான ஒன்றாக இருந்துள்ளது. விலங்குகளுக்கும் கோழிக்கும்கூட நடுகல் எடுக்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆநிரைப்போரில் இறந்தவர்களுக்கு பல்லவர், பாணர், கங்கர்களின் காலத்தில் நிறைய நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. நடுகற்களின் வகைகள்:நடுகற்களின் அமைப்பு, உருவங்கள், கருவிகள் கொண்டு அவற்றை சிலவாராக நாம் வகைப்படுத்தலாம். நினைவுக்கல் வீரக்கல் நவ கண்டம் அரிகண்டம் சதிகல் புலிக்குத்திப்பட்டான் கல் யானைகுத்திப்பட்டான் கல் காட்டுப்பன்றி குத்திபட்டான் கல் கோழிக்கற்கள் ஏறுதழுவல் வீரக்கல்என்றவாறாக வகைப்படுத்தலாம். நினைவுக்கல் ஆதிமனிதன் தன் கூட்டத்தில் இறந்தவர்களைப் புதைத்த இடத்தை அடையாளப்படுத்த, அந்த இடத்தில் கற்களை நட்டுவைத்தான். அதுவே உலகின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முறைகளில் குத்துக்கற்கள், கற்பதுகை, கல்வட்டம், கற்குவை, கற்திட்டை எனப் பல வகைகளில் மாற்றமடைந்து வந்தது. போரில், மற்றும் விலங்குகளை வேட்டையாடி இறந்தவர்களுக்கு நடுகல் எடுக்கப்பட்டது. தற்போதும் கூட கிராமங்களில் உள்ள அய்யனார், செல்லியம்மன், கருப்பையா கோயில்களில் இறந்தவர்களுக்கான நினைவுக் கற்களைக் காணலாம். பிரசவத்தில் இறந்த பெண்கள் கைக்குழந்தையுடன் காட்டப்பட்டுள்ளனர். இன்றும் கூட இந்தப் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. வீரக்கல் போரில் வீர மரணம் அடைந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட நடுகற்களை நாம் வீரக்கல் எனக் கூறலாம். பல்லவர் காலம் துவங்கி நாயக்கர் காலம் வரை இது போன்ற வீரக்கற்கள் தமிழகம் முழுக்கக் காணக் கிடைக்கின்றன. நவகண்டம் இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும்போது, தன்னுடைய நாடு வெற்றியடைய தன் உயிரைக் கொற்றவைக்குப் பலி கொடுப்பது நவகண்டம் எனப்படும். தன்னுடைய உடலில் எட்டு பாகங்களை அரிந்து கொற்றவைக்குப் படையல் இட்டு கடைசியாகத் தன் தலையைத் தானே அரிந்து கொற்றவைக்குப் பலி கொடுத்துக் கொள்வது நவகண்டம் எனப்படும். இத்தகைய சிற்பங்களை அடையாளப்படுத்த, சிற்பத்தில் உள்ள வீரன் கையில் உள்ள கத்தியானது வீரனின் கழுத்துக்கு நடுவே காட்டப்பட்டிருக்கும். நோய்வாய்பட்ட தன் மன்னன் நலமடையவும், நீண்ட நாட்களாய் நின்றிருந்த திருவிழா நடை பெறவும் இது போன்று நவ கண்டம் கொடுத்துக் கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டம் ஆறகழூரில் இது போன்று 5 நவகண்டச் சிற்பங்கள் உள்ளன. அரிகண்டம் நவகண்டத்துக்கும் அரிகண்டத்துக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. அரி கண்டத்தில் ஒரே வெட்டில் தலை துண்டாகும்படி வெட்டிக்கொள்வார்கள். தலை முடியை வளைவான ஓர் மூங்கிலில் இணைத்து, தன் தலையைத் தானே வெட்டிக்கொள்வார்கள். தமிழகம் முழுக்க இது போன்ற அரிகண்டச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தன் தலைமுடியைத் தானே பிடித்திருப்பது போல் இச்சிற்பங்கள் காட்டப்பட்டிருக்கும். கொற்றவைக்கு தன்னைத் தானே பலி கொடுத்துக்கொள்ளும் நிகழ்வு இது. ஆரம்பக் காலகட்டத்தில் தானே விரும்பி இச்செயலைச் செய்தாலும், பிற்காலத்தில் வற்புறுத்திப் பலி கொடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதிரப்பட்டி நிலம் தானமாக கொடுக்கப்பட்டதைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆறகழூரில் இது போன்ற உதிரப்பட்டி கல்வெட்டு ஒன்று உண்டு. சதிகல் போரிலோ அல்லது வேறு காரணங்களாலோ கணவன் இறந்தவுடன் மனைவி உடன் கட்டை ஏறுதல் அல்லது சில வாரங்கள் கழித்து சடங்குகள் மேற்கொள்ளப்பட்டு, தீயில் புகும் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட நடுகற்கள் சதிகற்கள் எனப்பட்டன. இவர்கள் தீப்பாஞ்சாயி என்ற பெயரில் அவரின் வம்சத்தால் வழிபடப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் தீப்பாஞ்சாயி கோயிகள் பரவலாக உள்ளன. ஆறகழூரில் உள்ள அய்யனார் கோயிலில் தீப்பாஞ்சாயிக்கு சிறு கோயில் உள்ளது. ஆரம்பக் காலகட்டத்தில் விரும்பி மேற்கொள்ளப்பட்ட உடன் கட்டை ஏறுதல், பிற்காலத்தில் வற்புறுத்தி செய்விக்கப்பட்டது. இந்தியாவில் ராஜாராம் மோகன்ராய் அவர்களின் முயற்சியின் பேரில் அரசியல் சட்டத்தின் மூலம் உடன்கட்டை ஏறுதல் தடை செய்யப்பட்டது. புலிக்குத்திப்பட்டான் கல் மனிதன் காடுகளை ஒட்டிய கிராமங்களில் வாழ்ந்தபோது, அவனையும் அவன் வளர்க்கும் கால்நடைகளையும் புலிகள் தாக்கிக் கொன்று வந்தன. அத்தகைய கிராமங்களில் வசிக்கும் இளைஞன் ஒருவன் புலி வேட்டைக்குச் சென்று அந்தப் புலியைக் கொன்று தானும் வீர மரணம் அடைந்திருப்பான். அந்த இளைஞனின் வீரத்தைப் போற்றி வைக்கப்பட்ட நடுகற்களே புலிக் குத்தி நடுகல். சேலம் அருங்காட்சியகத்தில் சேந்தமங்கலத்திலிருந்து கொண்டு வரப்பட்ட இரு புலிக்குத்தி நடுகற்கள் உள்ளன. தமிழகம் முழுக்க இது போன்ற புலிக்குத்தி நடுகற்கள் உள்ளன. சேலம் குகை பகுதியில் புலிக்குத்தி தெரு என ஒரு தெருவின் பெயரே உள்ளது. யானை குத்திப்பட்டான் கல் வரலாற்றுக் காலம் தொடங்கியே போரில் யானைகளைப் பயன்படுத்தும் வழக்கம் தமிழ் மன்னர்களிடையே இருந்து வந்தது. காட்டு யானைகளைப் பிடித்து போர்ப் பயிற்சி கொடுத்து போரில் பயன்படுத்தினர். காடுகளின் அருகே உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் பயிர்களை நாசம் செய்தும் மனிதர்கள் மற்றும் அவர்கள் வளர்க்கும் விலங்குகளையும் கொன்று வந்தன. இப்படி போரில் அல்லது யானை வேட்டையின் போது இறந்த வீரர்களுக்கு வைக்கப்பட்ட நடுகற்களே யானை குத்திப்பட்டான் கல் எனப்படும். காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல் விளை நிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்த காட்டுப்பன்றிகளை வேட்டையாடி, தானும் இறந்த வீரனுக்காக வைக்கப்படும் நடுகல் காட்டுப்பன்றி குத்திப்பட்டான் கல் ஆகும். சேலம் வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வராயன் மரபுநடையில் இத்தகைய நடு கல் ஒன்றைக் காணலாம். கோழிக்கற்கள் மனிதனுக்கு மட்டுமல்லாமல் தான் வளர்க்கும் நாய், கோழி போன்றவற்றுக்கும் நடுகல் எடுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அரசலாபுரம் என்ற ஊரில் கோழிக்கான நடுகல் கல்வெட்டை சேலம் வரலாற்று ஆய்வு மைத்தின் விழுப்புரம் வீரராகவன் அவர்கள் கண்டறிந்துள்ளார். இந்தளூர் என்ற ஊரில் கோழிக்கான நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. அச்சிறுப்பாக்கம் தாமரைக்கண்ணன் அவர்கள் இதைக் கண்டறிந்துள்ளார். கோழிச்சண்டையில் இறந்த கோழிக்காக இந்த நடுகல் எடுக்கப்பட்டிருக்கலாம். ஏறுதழுவதல் வீரக்கல் ஏறுதழுவுதல் என்பது தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. கருமந்துறையில் கிடைத்த இந்த ஏறுதழுவல் நடுகல், தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது ஆறகழூர் பொன் வெங்கடேசன்

அதிகாரம் – அன்றும் இன்றும்

அதிகாரம் – அன்றும் இன்றும்

எளிய மக்களைப் பொறுத்தவரை ஆண்டவன் முன்பு அனைவரும் சமம் என்ற நம்பிக்கை இருந்தாலும், ஆண்டவனைவிட ஆட்சியாளர்களே அதிகாரம் மிக்கவர்கள் என்பதை மன்னராட்சிக் காலம் முதற்கொண்டு மக்களாட்சிக் காலம் வரை மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். அண்மைக் காலமாக கோவில்கள் தொடர்பாக நடந்து வரும் பிரச்சினைகளில் ஆட்சியாளர்களின் செயல்பாடு எவ்வாறு உள்ளது என்பதை மன்னராட்சிக் காலத்துடன் ஒப்பிட்டுக் காட்டுகிறது இந்தக் கட்டுரை. (ஆ-ர்.) இன்று சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்ய, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தலைமையிலான குழு கோவிலுக்குச் செல்கிறது. “15 ஆண்டுகளுக்கு முன் தணிக்கை செய்த அறிக்கையை வழங்குங்கள்” என்று அமைச்சர் கேட்கிறார். “தரமுடியாது. இது எங்கள் கோவில். தணிக்கை செய்ய அரசுக்கு அதிகாரமில்லை” என்று தீட்சிதர்கள் பதிலளிக்கிறார்கள். “கோவிலைக் கட்டியது பழங்கால மன்னர்கள். நீங்கள் நிர்வாகம் மட்டுமே செய்கிறீர்கள்” என்கிறார் அமைச்சர். “கொத்தனார் கட்டினார் என்பதற்காக வீடு அவர்களுக்குச் சொந்தமாகிவிடுமா?” என்று தீட்சிதர்கள் கேட்கிறார்கள். “ஓ! அப்படியானால் பணம் செலவு செய்து நீங்கள் கோவில் கட்டினீர்களா? மன்னர்கள் கொத்தனார்களா?” என்று அமைச்சர் கேட்கிறார். வாக்குவாதம் தொடர்கிறது. “உங்கள் நெற்றியில் விபூதி இல்லை. நாங்கள் விபூதி வைத்துவிடவா?” என்று தீட்சிதர்கள் கேட்க, அமைச்சரும் சம்மதித்து விபூதி வைத்துக்கொள்கிறார். பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “கணக்குகளை தீட்சிதர்கள் இந்து அறநிலையத்துறையிடம் சமர்ப்பிப்பதே மனு தர்மம்” என்று அமைச்சர் பேட்டி கொடுத்து விசாரணையை நிறைவு செய்தார். அன்று விக்கிரம பாண்டியனின் ஆட்சிக்காலம். கடலூர் அருகே திருப்பாதிரிப்புலியூரில் சுப்பிரமணியப் பிள்ளையார் கோவில் ஒன்று கட்டப்பட்டது. 2 மா அளவு நிலம் ‘சுவாமி’க்குத் தானமாக அளிக்கப்பட்டது. இது திருப்பாதிரிப் புலியூர் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களிலிருந்து தரப்பட்டது. அவ்வூரைச் சேர்ந்த பிராமணர்கள், “இது எங்கள் நிலம். எங்களுக்குச் சொந்தமான பிரம்ம ஷேத்திரம். இதனைப் பிள்ளையார் கோவிலுக்குத் தரக்கூடாது” என்று பிரச்சினை செய்தனர். இதனை விசாரிப்பதற்காக பல்லவராயர், அழகிய மணவாளப் பல்லவராயர் ஆகிய இரண்டு அரசு அதிகாரிகள் அவ்வூருக்கு வந்தனர். சோழகுலவல்லி நல்லூர் என்ற ஊரின் பொதுச் சபையில் விசாரணை நடந்தது. விசாரிக்கவே கூடாது என்று கடுமையாக பிராமணர்கள் எதிர்த்தனர். ஒரு பிராமணர், ‘தீக்குளிப்பேன்’ என்று மிரட்டினார். மிரட்டலைப் பொருட்படுத்தாத அரசு அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர். விசாரணை தொடங்கியது. “பிராமணர்களே, நீங்கள் உரிமை கோரும் நிலத்துக்குச் சான்று ஏதேனும் உண்டா?” என்று அதிகாரிகள் வினவினர். “இது எங்கள் பிரம்ம ஷேத்திரம். எங்களுக்குச் சொந்தமான நிலம். சான்று காட்டத் தேவை இல்லை” என்று பிராமணர்கள் பதிலளித்தனர். “பல்லாண்டு காலமாக வேளாளர், அளவர், பள்ளிகள், பரம்பர்கள் இந்த நிலத்தை உழுது பயிர் செய்கிறார்கள். இது பிரம்ம க்ஷத்திரம் ஆகாது. கோவிலுக்குச் சொந்தமான திருநாமத்துக் காணி. உங்களின் உரிமை நிலம் என்பதற்குக் கல்வெட்டுச் சான்று இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள்”. இது அதிகாரிகள் எனுப்பிய வினா. “அது தேவை இல்லை. இந்த நிலப்பகுதிகளை எங்களுக்குள் விற்பனை செய்தும் ஒத்தி வைத்தும் உள்ளோம். அதற்குச் சான்று உள்ளது. இச்சான்று போதும்” என்பது அவர்களின் பதில். “உங்களுக்குள் நீங்களே விற்பனை செய்த சான்றாவணங்கள் செல்லாது. இவற்றை ஏற்க மாட்டோம்” என்று கெடுபிடி காட்டிய அதிகாரிகள், கோவில் அலுவலர்களை வரவழைத்து விசாரித்தனர். “இது கோவில் நிலம்தானா? பிராமணர்களுக்கு உரியதா? கோவில் நிலம் என்றால் சான்றுகள் இருக்கிறதா?” என்று கோவில் அலுவலர்களிடம் விசாரணை அதிகாரிகள் கேட்டனர். “இது உறுதியாகக் கோவில் நிலம்தான்” என்று கூறி அதற்கான கல்லெழுத்து சாசனங்களை அலுவலர்கள் ஆவணமாகக் காட்டினர். அந்த ஆவணங்களில் பிராமணர்கள் உரிமை கொண்டாடிய அந்நிலப் பகுதி கோவிலுக்குச் சொந்தமானது என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது. ‘கோப்பெருஞ்சிங்கர் நாளிலும் விக்ரமபாண்டித்தேவர் காலத்தில் எழுதின திருமுகத்தின்படி திருப்பாதிரிப்புலியூர் கோவிலுக்கு உடலடங்க இறையிலியாக எழுதின ஓலையின்படி இந்நிலம் திருநாமத்துக்காணியாகக் கோவிலுக்குச் சொந்தம்’ என்று எழுதப்பட்டு கல்லிலும் வெட்டப்பட்டது. அதில் பிராமணர்களும் உடன் கூட்டாத்தாரும் கையெழுத்திட்டிருந்தனர். சான்றாவணங்களைப் பார்த்த அதிகிரிகள் பிராமணர்களைக் கண்டித்தார்கள்.உடனடியாக அந்த நிலங்களைக் கோவிலுக்கு ஒப்படைக்கவேண்டும் என்று சாசனம் செய்யப்பட்டு, அதிகாரிகள் கையெழுத்திட்டு விசாரனை முடிவு பெற்றது. நிலமும் பிள்ளையார் கோவிலுக்குச் சொந்தமானது. ஆதாரம்: தென்னிந்தியர் கல்வெட்டுத் தொகுதி (7-759) மா. மாரிராஜன்

ஹிஜாப் அணிவது மத அடையாளமா?

ஹிஜாப் அணிவது மத அடையாளமா?

கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் ஹிஜாப் அணிந்துவரத் தடை விதித்த பிரச்சினை தற்போது அடுத்த வடிவம் பெற்றுள்ளது. தற்போது கர்நாடக அரசு, தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அந்தந்த நிர்வாகம் சொல்லும் சீருடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், இந்தக் கட்டுப்பாடு அரசியல் சாசனம் வழங்கும் மதச் சுதந்திர உரிமைக்கு எதிரானது அல்ல என்றும் கூறியுள்ளது. மூன்று வெவ்வேறு கல்லூரிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர, 200க்கும் மேற்பட்ட மாணவிகள் காவி ஷால் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனால், அந்தக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுதின அலங்கார ஊர்தி அணிவகுப்பில் கல்வி மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட வணியில் வடிவமைக்கப்பட்ட இந்து மதச் சாமியார் சிலையை விடவா ஹிஜாப் அணிவது மத அடையாளத்தை முன்னிறுத்துகிறது? தலையில் முக்காடு அணியும் வழக்கம் தென் மாநிலங்களில் அதிகம் இல்லையென்றாலும் வட மாநிலங்களில், குறிப்பாக ராஜஸ்தான் உள்ளிட்ட மேற்கு மாநிலப் பெண்களில் அனைத்துப் பெண்களிடமும் உண்டு. கிறித்தவ மதத்திலும் கூட, தொழுகை நேரங்களில் பெண்கள் முக்காடு அணிந்தே தொழகை நிகழ்த்துவார்கள். இந்தியாவில் பல்வேறு மத, சமுதாயப் பெண்களிடையே, வேற்றுக் குடும்ப ஆண்களைக் கண்டால் உடனடியாகப் பெண்கள் தங்கள் தலையில் முக்காடு இட்டுக் கொள்வது இன்னமும் வழக்கமாகவே உள்ளது. ஏதோ ஒரு வகையில் முக்காடு இட்டுத் தலையை மறைத்துக்கொள்வது ஆணாதிக்கத்தின் வெளிப்பாடே. ஆனாலும், ஹிஜாப் அணிவது ஒரு மத அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதை மத அடையாளமாகவே எடுத்துக் கொண்டாலும், விபூதி குங்குமம் வைப்பது, நாமம் போடுவது போன்றவையும் மத அடையாளங்களே. அவ்வளவு ஏன், ஒரே மதத்துக்குள் பிறரைத் தாழ்த்தும் வகையில் பூணூல் அணிவது சாதியத்தின் அடையாளம் இல்லையா? ஹிஜாப் அணியத் தடை விதிப்பவர்கள், இந்த அடையாளங்களுக்கும் தடை விதிப்பார்களா என்ற கேள்வி எழுகிறது. ஹிஜாபுக்குப் போட்டியாக காவி ஷால் அணிந்து வருவது மதவாத அரசியலின் மற்றொரு வெளிப்பாடே அன்றி வேறில்லை. கல்லூரி மாணவிகள் வரை தற்போதைய சிற்பான்மையினர் மீதான மதவெறுப்பு விதைக்கப்பட்டுள்ளது இந்த சமூகத்தில் விதைக்கப்பட்டுள்ள நச்சு விதை மரமாகிக்கொண்டு இருப்பதன் நிகழ் சாட்சி. ஹிஜாப் என்பது ஆணாதிக்கத்தின் சாட்சி என்றாலும் இன்றைய பெண்களில்‌ சிலர் அதை அலங்காரத்தின் வடிவமாக மாற்றிக்கொண்டு பல்வேறு வண்ணங்களில் பல்வேறு டிசைன்களில் அணிந்து மகிழ்கின்றனர். தனியார் பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த வழிபபாட்டுப் பாடல்கள், நடைமுறைகளை இன்னமும் வைத்துக்கொண்டு,கல்லூரி வயதில் உடைக் கட்டுப்பாடு விதிப்பது என்பது இன்னமும் இந்தச் சமூகம் எவ்வளவு பிற்போக்கான சிந்தனைகளில் உழல்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஷாம் சிங்கா ராய்

ஷாம் சிங்கா ராய்

திரை விமர்சனம் சமீப காலங்களில் திரையுலகம் சமூக இழிவுகளை, மனித அவலங்களைத் துணிச்சலுடன் திரும்பிப் பார்க்க விழைந்துள்ளதும் சராசரி ரசிகர்களையும் அக்கறையுடன் அவற்றைக் கவனிக்கச் செய்துள்ளதும் வரவேற்கத்தக்கது, பாராட்டவும் தக்கது. அந்த வகையில், ஜங்கா சத்யதேவ் கதைக்கு, ராகுல் சாங்கிருத்தியன் அருமையாக திரைக்கதை எழுதி இயக்கி, சாய் பல்லவி, க்ரித்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன் உடன் இரட்டைவேடங்களில் நானி  நாயகனாக நடித்து, தெலுங்கில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் ‘ஷாம் சிங்கா ராய்’. தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது சிறப்பு. அறிமுக இயக்குனர் வாசுதேவ் கந்தா (நானி) மீது கதைத் திருட்டு வழக்காகத் துவங்கி, அந்தக் குற்றச்சாட்டை அறவே மறுக்கும் அவன், அதிலிருந்து மீண்டு வர  மேற்கொள்ளும் முயற்சிகளாக விரிந்து, எதிர்பாராத முடிவாக முடிவது, அவனுக்கு மட்டுமல்ல; ரசிகர்களுக்கும் கூடத்தான். “நாங்க கேணிகிட்ட போ கூடாதுங்கய்யா” – “அப்படின்னு கேணி சொல்லுச்சா? உன் குடம் நிறையனும்னா உடனே மழை வரணும்; இல்லன்னா உனக்குள்ள தைரியம் வரணும்”,  “அவங்கள்லாம் தாழ்த்தப்பட்டவங்க” – “அதுக்காக தாகமும் தாழ்ந்து போயிடுமா? அவன் தீண்டத்தகாதவன்னா, அவன் நடந்து போற பாதையில நீங்க ஏன் நடந்து போறீங்க? அவன்  சுவாசிச்சு விடற காத்த நீங்க ஏன் சுவாசிக்கிறீங்க? நிறுத்திக்க வேண்டியதானே? காற்றுக்கும் நீருக்கும் நிலத்துக்கும் காப்பாற்றுகிற குணம் இருக்குமே தவிர, காவு வாங்கற குணம் இருக்காது. இது குலத்தோட காலைப்பிடித்துத் தொங்கிட்டு இருக்கறதுக்கு ரிக்வேதம் காலம் கிடையாது, சுதந்திர பாரதம்”, “இப்போ இந்தக் கேணியும் தாழ்த்தப்பட்டதுதான், அவனுக்கே சொந்தம். தாகம் இருக்கிறவங்க மொண்டு குடிங்க, சாதி இருக்குங்கிறவன் நாவறண்டு சாவுங்க. அவன் குடிசையை எரிக்கப் போனீன்னா, உன் வீடு எங்கிருக்குன்னு ஷாம் சிங்கா ராய்க்கு நல்லாத் தெரியும்” “மனுஷன மனுஷனா பார்க்காதவன் ஊரா இருந்தா என்ன, வீடா இருந்தா என்ன, என்னால இருக்க முடியாது”, ” சமுதாயத்தை மாத்தற சக்தி எழுத்தாளனுக்கு மட்டும்தான் உண்டு, நான் போகணும், நான் எழுதணும்”, “பண்டிகை ஒவ்வொரு வருஷமும் வரும், என் காலம் போனால் திரும்பி வராது” போன்ற அர்த்தபூர்வமான காட்சிகளும் வசனங்களும் அசத்தல். “இந்த உலகத்ல ஒவ்வொரு வேலையையும் ரெண்டு விதமா செய்யலாம். ஒண்ணு பயத்தோட, இன்னொன்னு காதலோட”,  “தெய்வத்தின் துரோகத்தால் தேகமெங்கும் முள்ளாகி, மனமெல்லாம் தெய்வீகம் நிரம்பிய ரோஜாமலர்”, “பெண் யாருக்கும் தாசி இல்லை; தனக்குத் தாசி வேணும்னு  நெனக்கிறவன் கடவுளே கிடையாது”, “ஆத்ம அபிமானத்தவிட, எந்த ஆகமும் தப்பு கிடையாது. தப்புன்னு தெரிஞ்சா கடவுளே ஆனாலும் எதிர்க்கறதுல தப்பே கெடையாது. பயந்தவங்கதான் கர்மா சித்தாந்தம் பேசுவாங்க”, “எம்.எஸ். சுப்புலட்சுமி பேரை கேள்விபட்டிருக்கியா, ஒரு காலத்தில் தேவதாசி, இப்ப பத்மபூஷன் அவார்டு வாங்கி இருக்காங்க. பரதநாட்டியத்தில் பாரத தேசத்தில் மிகப் பெரிய டான்சர் பாலசரஸ்வதி, தேவதாசி குடும்பத்தைச் சேர்ந்தவங்கதான்”,“பெண் யாருக்கும் தாசி அல்ல; அந்தக் கடவுளுக்கும் கூட” எந்த ஒரு சமூகத்திலே தன் பசியைப் போக்கிக்கறதுக்கு ஒரு பெண் மேலேயும் கீழேயும் இருக்கற அவயங்கள விற்கிறாளோ, அந்தச் சமூகத்தில இருக்கிற ஆம்பளைங்க, ஆம்பளைங்களே கிடையாது, பெண்கள் விற்பனைப் பொருள்கள் அல்ல” இப்படி மனதை வருடும், சிந்தையில் அறையும் வசனங்கள் படமெங்கும். காளி கோவிலில் உள்ள தேவதாசிகளில் தினமொருவளை சுகித்து வரும் தலைமை அர்ச்சகர் மஹந்தாவிடம், “யார் வேணா தொட்டுப் பார்க்கறதுக்கு நாங்க கோயில்ல உள்ள தூண்கள் கெடயாது, மானமுள்ள மனுஷிங்க. எங்க மேல யாருக்கும் உரிமை கெடயாது, அந்த தெய்வத்துக்கும் கூட” என்று ரோஸி சொல்ல, “நீ கடவுளுக்குத் தாசி கிடையாது; எனக்குதான் தாசி” என்று சொல்லி, ரோஸியைப் பல பெண்களுக்கு மத்தியில் கடுமையாகத் தாக்கி, மனுசாஸ்திரம் பாதுகாப்பில் பூணூலைக் காதிலே சுற்றி, அவள்மீது சிறுநீர் கழித்து அவமதித்த மகாதேவ் மஹந்தாவின் ஆணுறுப்பை, காளி சிலை கையில் இருந்த அரிவாளைக் கொண்டு அறுத்தெறிந்து, அவனை நெருப்புச் சட்டியில் ஷாம் சிங்கா ராய் எறியும் காட்சி புல்லரிக்கச் செய்கிறது. வித்தியாசமான உருவ அமைப்பில்,  உடல் மொழியில், இருவேடங்களில் நானியும், வயது வித்தியாசங்களில் சாய்பல்லவியும், பக்குவப்பட்ட சிறப்புக்குரிய நடிப்பை வழங்கியுள்ளது அருமை. இருவருக்குமே திரை வாழ்க்கையில் இப்படம், குறிப்பிடத்தக்க ஒரு படமாக அமையலாம். க்ருத்தி ஷெட்டி (காதலி கீர்த்தி), மடோனா செபாஸ்டியன் (லாயர் பத்மாவதி), நண்பன் பிரமோத் (அபிநவ் கோமடம்), உளவியல் நிபுணர் (லீலா சாம்சன்), ஜிசு சென்குப்தா (தேபேந்திர சிங்கா ராய்), ராகுல் ரவீந்திரன் (மனோஜ் சிங்கா ராய்), முரளி சர்மா (அட்வகேட் கிருஷ்ணமூர்த்தி), மனீஷ் வத்வா (மகாதேவ் மஹந்த்), சுபலேகா சுதாகர் (நீதிபதி) ஆகிய கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே செய்துள்ளனர். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு அருமை. குறிப்பாக, சாய் பல்லவி நடனக் காட்சிகள், நானியின் சண்டைக் காட்சிகள்,  பரந்த கங்கை நீர் நிலை, கொல்கத்தா காளிகாட் (செட்) நகரம். மிக்கி ஜே மேயரின் பின்னி எடுக்கும் பின்னணி இசையும், ஈர்க்கும் பாடல்களும் சிறப்பு. பழுதில்லாத படத்தொகுப்பு, நவீன் நூலி. கதைத் திருட்டு புகாரின்பேரில் கைது செய்வது எல்லாம், சற்று அதீதம். அறிவியல் ரீதியான பாலி கிராப் முறையை ஏற்கும் சாட்சிகள் சட்டம், அதே ரீதியிலான உளவியல் நிபுணரின் ஹிப்னாஸிஸ் அறிக்கையை ஏற்காதது, வினோதம். ரோஸி குழந்தை பெற வாய்ப்பில்லை என  போகிற போக்கில் மருத்துவர் சொல்வதுபோல் சொல்வது, தெளிவில்லை. மறு ஜென்மத்திற்கு அறிவியல் ரீதியான சாட்சி இல்லை என்கிற வாதத்தை மறுப்பதற்கு, விஷ்ணு மறு ஜென்மத்தில் ராமராக வந்தார் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ( ! )  மேற்கோள்காட்டி நிறுவ முற்படுவது, அபத்தமானது; கதைக் கருவுக்குப் பின்னடைவாக அமைந்திருக்கக் கூடியது. நல்லவேளை, இந்த நீதிமன்றம் இதனை அடிப்படையாகக் கொண்டு இவ்வழக்கில் தீர்ப்பு வழங்காதது! திரை உத்திக்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்பட்ட, படத்தில் அறிவியலுக்குப் புறம்பான சிலவற்றை, சினிமா லாஜிக்,  லிபர்டி என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப,  ஏற்றுக் கொள்வதோ, தள்ளுவதாகவோ இருந்தாலும் அதையும் தாண்டி புரிய வேண்டியவர்களுக்கு, அவரவர்களுக்குப் புரிகிற மொழியில், உத்தியில் கதைக்கருவும் வசன – காட்சி அமைப்புகளால் அதனை அழுத்தம் திருத்தமாக மனதில் உறைக்கும்படியும் பதியும்படியும் கட்டமைத்தும் வழங்கப்பட்டிருப்பதில் இயக்குனரின் திறமையையும் நேர்த்தியையும் பாராட்டித்தான் ஆகவேண்டும். மதிப்பெண் : 8/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

பண்டிகைக்காரி

பண்டிகைக்காரி

சின்னதாய்ச் சிங்காரித்துச்சின்னக்கண்ணில் மையிட்டுபுருவமிரண்டின் மத்தியிலேவண்ணக் குப்பிப் பொட்டுமிட்டேன்!உச்சி வகிடின் நடுவினிலேநெற்றிச்சுட்டி ஆடவிட்டேன்! மணிக்கட்டு அது நோகாது `சிறு வளையல்கள் பூட்டிவிட்டேன்,வீடெங்கும் நீ இசை நிரப்பகால்சலங்கைக் கட்டிவிட்டேன்! வண்ணமணி மேகலையும்தொங்கும் மணிஆரமும்அதன் இடங்கள் சேர்த்துவிட்டேன்!கூண்டுகிளிப் பொருத்தியகாதணியும் தொங்கவிட்டேன்! முல்லைப்பூக் கரங்களுக்குமருதாணி நிலாக்கள் வைத்தேன்!மல்லிப்பூ வாசனை நுகர்ந்துஅம்மா… இது வேண்டுமென்றாய்!அழகாய்ச் சரமொன்று கட்டிபின்னலிலே சூட்டிவிட்டேன்! அத்தனையும் முடித்துபாவாடை நுனிபிடித்து,பாட்டொன்றுப் பாடிபாங்காய் உன் தலைசாய்த்துகேட்டாய்…!“அம்மா, நல்லா இருக்குல்ல…”இதோ வந்துவிட்டது மகளேநம்வீட்டில் பண்டிகை நாள்! ஊரெங்கும் பொங்கலோநாடெங்கும் தீபாவளியோநீதானே என் பண்டிகைநீதானே என் திருவிழா அம்மா நான் உன்னை அலங்கரித்துகவியொன்றும் பாடிவைத்தேன்மகளே நீ என் தமிழ்ச்சாமி!

சூட்சுமங்கள்

சூட்சுமங்கள்

எப்போதும்போல எதுவுமில்லாதவர்ஏமாந்தே எலும்பாகிறார்எல்லாமுடையவர்வசதியோடு வள்ளலாகிறார்தெய்வமும் கைவசமிருப்பதைக்கொடுத்துதான் நிற்கிறதுதன் இருப்பிடத்தில்கட்டணமென்றால் சிறப்பு தரிசனத்தில் வரம்கட்டணமில்லையென்றால் கடைசியிலேதான் என்றசுகவாசிகளின் சூட்சுமங்கள்தான்தெரிவதில்லை பாவம்தெய்வங்களுக்கும் தெருக்கோடிகளுக்கும் கலை

ஆன்டி இண்டியன்

ஆன்டி இண்டியன்

திரை விமர்சனம் வழக்கமான கதை, திரைக்கதை இல்லை. வழக்கமான நடிகர், நடிகைகள் இல்லை. வழக்கமான காதல், சண்டை, நகைச்சுவைக் காட்சிகள் இல்லை. வழக்கமான ஒளிப்பதிவு, இசை, படத்தொகுப்பு இல்லை. வழக்கமான திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. வழக்கத்திலிருந்து வேறுபட்டுத் தனித்து, விறுவிறுப்புடன் ரசிகர்களைச் சுவைக்கவும் சிந்திக்கவும் கொஞ்சம் வருந்தவும் செய்து, இறுதிவரை இருக்கையில் இறுத்திப் பார்க்க வைத்து விடுகிற படம்தான், மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம் பாவா தயாரித்து, ப்ளூ சட்டை சி இளமாறன் கதை, திரைக்கதை, வசனம், இசை பொறுப்பேற்று, அறிமுக இயக்கம் என்கிற சுவடே தெரியாமல் அருமையாக இயக்கி வெளிவந்துள்ள ‘ஆன்டி இந்தியன்’ திரைப்படம். சென்னை மயிலாப்பூர் இடைத் தேர்தல் நடைபெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு, அத்தொகுதியைச் சேர்ந்த சுவர் ஓவியர் பாஷா (ப்ளூ சட்டை இளமாறன்) யாது காரணத்தாலோ, யாராலேயோ வெட்டிக் கொல்லப்பட்டு விடுகிறார். ஒரு பக்கம் காவல்துறை விசாரணை நடத்த, மறுபக்கம் கட்சிகளின் தேர்தல் வியூகம் நடைபெற்றுக் கொண்டிருக்க, அவரை எரிப்பதா, புதைப்பதா, அடக்கம் செய்வதா என்பதில் துவங்கும் பிரச்சனை, எவ்விதம் முடிவுக்கு வருகிறது என்பதுதான் ‘ஆன்டி இந்தியனி’ன் மொத்தக் கதை. தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் புறா கதை, ப்ளூ சட்டை மாறன் துணிச்சலுடன், இப்படி ஒரு படத்தை நேர்த்தியாக எடுத்துத் தருவதற்கு அடிப்படை என்பது, சுவையான ஒரு செய்தி !ஆரம்பத்தில் சொல்லும் இக்கதையை மாறன் இறுதியில் வைத்து முடித்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். “மதத்த நம்பறவன் கோச்சுக்க மாட்டான்… மதத்தை வெச்சு பொழப்பு நடத்தறான் பாத்தியா, அவன்தான் கோச்சுப்பான்”, “நம்ம மக்களப் பத்தி நமக்கு தெரியாதா? செருப்பால அடிச்சிட்டு… கைல கருப்பட்டி கொடுத்தா, நக்கிக்கிட்டே போயிடுவாங்க” செத்தவன் பேரு பாஷா, அப்பன் பேரு இப்ராஹிம், உங்க பேரு?, என்ன, சரோஜாவா?, நம்ம புள்ளைங்கங்ற நம்ம அடையாளமே இல்லீயேப்பா…, இந்துக்களுக்கு என்ன ஒரு பிரச்சனையானாலும் அங்க நாங்க இருப்போம், நார்த் மாதிரி இல்ல தலைவரே, இங்கே எல்லாமே கஷ்டம், அவரு 25 வருஷமா இதோ வரேன் அதோ வரேன்னு சொல்லி, அவர் ரசிகர்களை ஏமாத்திட்டிருக்காரு, செத்தவனை வச்சு பொழப்ப நடத்தி, வாழ்ந்தவங்கதானே நம்ம அரசியல்வாதிக, இவங்க பொணத்த வெச்சிகிட்டு வெளயாட்டு காட்டிட்டிருக்காங்கண்ணா, முன்னாடி எல்லாம் தூர்தர்ஷன்னு ஒரே ஒரு சேனல் இருக்கும், அதுல ஒரு பஞ்சாயத்து ஓடிட்டு இருக்கும். இன்னிக்கு ஊர்பட்ட சேனல்ஸ் இருக்கு, எல்லாத்திலும் வெறும் பஞ்சாயத்து மட்டும்தான் ஓடிட்டு இருக்கு, -இப்படிப் படம் முழுவதும் ‘பஞ்ச் டயலாக்’ ஸாக இல்லாது, ரசிகர்களின் மனதைப் ‘பன்ஞ்’ செய்து விடுகிற டயலாக்குகளாக விரவி இருக்கின்றன. இந்தப் படம் எந்த ஒரு தரப்பையும் குறிப்பாகச் சுட்டிக் காட்டிடவில்லை; மதவாதிகள், அரசியல்வாதிகள், ஊடகவாதிகள், ஏன் மக்களையும் சேர்த்து, எல்லோரையுமே அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுகிறது. என்னதான் இயல்புத் தன்மையைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும், படம் முழுவதுமாகத் தொடரும் கெட்ட வார்த்தைகளைத் தவிர்த்திருக்கலாம். இறந்த உடலுக்குச் சுன்னத் செய்ய, மார்க்கம் அனுமதிக்குமோ ! படத்தின் பெயரும் கதைக்கருவோடு ஒட்டவில்லை. ராதாரவி (முதல்வர் செங்குட்டுவன்), ஆடுகளம் நரேன் (காவல்துறை துணை ஆணையர்), வழக்கு எண் முத்துராமன் (காவல் ஆய்வாளர்) ஜெயராஜ் (ஏழுமலை) வேலு பிரபாகரன் (ஹாஜியார்) விஜயா (சரோஜா), பசி சத்யா (சரோஜாவின் தோழி) உட்பட அனைத்துக் கலைஞர்களும் தத்தம் பங்கினைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். கதிரவனின் ஒளிப்பதிவும், சுதர்சனின் படத்தொகுப்பும், மாறனின் பின்னணி இசையும், உறுத்தாமல் படத்தின் தேவையை நிறைவு செய்கின்றன. இடையிடையே கானா பாடல், இனிமை சேர்க்கிறது. “பேசாம பாடிய எடுத்துட்டு போய் மெடிக்கல் காலேஜிலாவது போடுங்க சார், பசங்கலாவது அதை வெச்சி படிக்கட்டும்” என்று கருஞ்சட்டை மனிதர் (கில்லி மாறன்) மூலம் துணிச்சலுடன் சொல்லிய இயக்குனர் மாறன், படத்தின் இறுதிக் காட்சியையும் அதே துணிச்சலுடன், மதச் சார்புத் தன்மையை மறுக்கும் விதத்தில், அவ்விதமே அமைத்திருந்தால், ‘ஆன்டி இந்தியன்’ கூடுதல் சிறப்புப் பெற்றிருக்கும். மதிப்பெண் : 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஜீவன் சந்தியா

ஜீவன் சந்தியா

திரை விமர்சனம் அங்கிங்கு என்று இல்லாமல், இந்தியச் சமூகத்தில் எங்குமே எப்போதுமே நிலவும் ஒன்றுதான், ‘காதல் கசக்குதையா’. ஜீவன் அபயங்கர், சந்தியா ஜோஷி விஷயத்திலும் அதே நிலைதான். அவரவர் குடும்பங்கள் அவர்களது நட்புக்கு, காதலுக்கு, வாழ்க்கைக்கு, தோழமைக்கு குறுக்கே நிற்கின்றன. தடைகளைத் தாண்டி, அவர்கள் இணைந்தார்களா? வாழ்ந்தார்களா? என்கிற கேள்விகளுக்கு விடைதான், தீபக் பிரபாகர் மாண்டே எழுதி இயக்கி, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள மராத்தி மொழி குடும்பச் சித்திரம்,  ஜீவன் சந்தியா. காதலுக்குக் கண்ணில்லை என்பது மட்டும் இல்லை, வயதும் இல்லை; தேவை மட்டுமே உண்டு. என்ன ஒன்று, ஜீவன் அபயங்கர் (அசோக் சரப்) சந்தியா ஜோஷி (கிஷோரி சஹானே) ஜோடி, அவர்களின் தேவையை உணரும்போது கொஞ்சம் வயதாகி விடுகிறது;  அறுபதுகளில்தான் அவர்களிடத்தில் காதல் வாய்க்கிறது. அதனால் ஒன்றும் அது சுலபமாகி விடவில்லை. வாழ்க்கையில் போராட்டமாகவும், போராட்டமே வாழ்க்கையாகவும் தொடர்கிறது, பரஸ்பரம் கைத்தலம் பற்றியே என்பதால், சுமையும் சுகமுமாக. மர்ம முடிச்சுகள் இல்லை. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லை. கிளுகிளுப்பான காட்சிகள் இல்லை. சண்டை சர்க்கஸ் இல்லை. கிளாமருக்கு இடமில்லை. விரசம் இல்லை. காமெடி டிராக் இல்லை. இத்தனை ‘இல்லை’ என்றாலும், நிறைவும் இல்லாமல் இல்லை. நடுங்கும் கையைப் பற்றிக் கொண்டு, “மிஸ்டர் அபயங்கர், எனக்கு நீங்க கைய கொடுக்கறீங்களா? இல்ல, பிடிமானத்துக்காக என் கைய  புடிச்சுக்கிறீங்களா?” எனக் கேட்கும் சந்தியாவிடம், “கைய நீ கொடுத்தாலும், நான் கொடுத்தாலும் இந்த வயசுல நம்ம ரெண்டு பேருக்குமே பிடிமானம் தேவைப்படுதே, மிஸஸ் அபயங்கர்” என்பதும்,  ஆட்டோவில் அவர்களுக்குள் ஏற்படும் அறிமுகம், ரெஸ்டாரண்டில் ஜோஷியின் அழகை ஆராதித்து, ஜீவன் அபயங்கர் வண்ணத்துப்பூச்சியை வாழ்க்கைக்கு ஒப்பீடு செய்தலும், சந்தியா மகளிடம் பேச முனையும்போது முடியாமல் போவதும், பின்னர் மகள் பேச முனையும்போது பேச்சை முடித்து விடுவதும், பூங்காவில் அபயங்கர், ஜோஷி பூவைச் சூடிக் கொள்ளச் சம்மதிக்க அந்த மலர் பற்றி எடுத்து விளக்குவதும், கண்ணாடியைப் பார்க்கச் சொல்ல, அவள் பார்ப்பதும், நட்பு காதலாகித் திருமணத்தில் வந்து நிற்கும் நிலையில், பூங்காவில் அவர்களுக்குள்ளான உரையாடலும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அபயங்கரோடு சந்தியாவின் பேச்சும், அப்பாவின் வாழ்க்கை குறித்து எடுத்த முடிவை மகன் அங்கூர் சொல்ல, “உன்னுடைய சந்தோஷத்துக்காக வேண்டுமானால் அந்த பேப்பரில் கையெழுத்துப் போடுகிறேன். ஆனா ஒரு விஷயம் ஞாபகத்தில வெச்சுக்கோ, பேப்பர்ல போடற கையெழுத்து நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்புறத நிறுத்தப் போறதில்ல” என்று சொல்வதும், நர்ஸ் மமதா கரே வாக அபயங்கர் குடும்பத்தினருடன் அளவளாவதும், ரசிக்கத்தக்க  நயமான காட்சிகள். தொலைபேசியிலோ செல்பேசியிலோ அனைத்துப் பாத்திரங்களும் ஒரு முறை பேசி விடுகிற காட்சி தவறாமல் இடம் பெற்றிருக்கிறது. சந்தியா ஜோஷியை சந்திக்கக்கூட மறுக்கும் அளவிற்கு, மகன் அங்கூர் அபயங்கரின் அதீத வெறுப்புக்கு வலுவான காரணம் இல்லை. பாத்திரத்தின் தன்மையால் அசோக் சரப்பும், கிஷோரி சஹானாவால் பாத்திரமும் மெருகேறி நிற்பது சிறப்பு. ஜீவன் அபயங்கராக முற்பகுதி நடிப்பில் இருந்த இயல்பு, பிற்பகுதியில் சற்று தொய்வடைந்து விடுகிறது. சந்தியா ஜோஷியாக  ஆரம்பத்திலிருந்து இறுதிவரை தொடர்கிறது நடிப்பில் சரிவே இல்லாத செறிவு. சமீர் தர்மாதிகாரி (அங்கூர் அபயங்கர்),  பிரதீபா அபயங்கர் (ருசிதா ஜாதவ்), ரவீந்திர மக்கானி (டாக்டர் தாமலே), ரமேஷ் தியோ (சந்தீப்), சீமா தியோ (சினேகா) ஆகியோரும் தத்தம் பங்களிப்பை, ஏற்ற பாத்திரங்களுக்குப் பழுதில்லாமல்  வழங்கியுள்ளனர். அதுல் பாலச்சந்திர ஜோஷியின் இசையில் இனிமையான  பாடல்களும், பின்னணி இசையும், மங்கேஷ் அஷோக் கடேக்கர் கண்கவர் ஒளிப்பதிவும் மனதைக் கவர்கின்றன. மஹந்தேஷ்வர் படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். இரண்டு மணி 15 நிமிடங்கள் ஓடும் படத்தின் நீளத்தை, இயக்குனர் உடன் இணைந்து பேசி, இருபது நிமிடங்களைக் குறைத்திருந்தால், இன்னும் நிறைவாக இருந்திருக்கும். காதல் என்பது எதுவரை என்கிற கேள்விக்கு, இறுதிச் சுவாசம் உள்ளவரை என்கிற பதிலை, அறுபது வயதிற்கு மேற்பட்டவருக்கு என்று இல்லாமல், எல்லா வயதினர் மனதிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்கிறது, ‘ஜீவன் சந்தியா’. மதிப்பெண்: 7/10 விமர்சனம்: மது ராஜேந்திரன்

ஜெய் பீம்

ஜெய் பீம்

திரை விமர்சனம் யாரெல்லாம் மனித உயிருக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டுமோ அவர்களே அதற்கு எதிராக இருந்தால் என்ன விளைவு என்பதுதான், ட்டி.ஜெ.ஞானவேல் எழுதி இயக்கி, சூர்யா-ஜோதிகா தயாரிப்பில், முதன்மைப் பாத்திரத்தில் சூர்யா நடித்து, அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படம். கல்வி அறிவுக்கு வாய்ப்பில்லாத, சாதி பண பலமில்லாத ராஜாக்கண்ணு, ஒரு திருட்டுப் புகாரில் உறவினர் சிலரோடு விசாரணைக்காகக் காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட பின்னர், அவனது மனைவி செங்கேணியிடம், அவர்கள் தப்பித்து விட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். நம்ப மறுத்த மனைவி, காவல்துறையினரின் சித்திரவதை நெருக்கடிகளைத் தாண்டி, கையிலும் வயிற்றிலும் குழந்தைகளோடு சந்துரு என்கிற வழக்குரைஞர் துணையுடன், காணாமல் போன தனது கணவனை மீட்டுத் தர நீதிமன்றங்களில் சட்டப் போராட்டத்தை நடத்துகிறார். அதன் முடிவு என்ன என்பதே ஜெய் பீம் படத்தின் கதை. “ஒரு ஆளு மேல ஒரு கேசுதான் போடணும்னு சட்டம் இருக்கா என்ன? தலைக்கு ரெண்டு கேசு போட்டு வையுங்க, எவன் வந்து கேட்கப் போறான்?” – ஜெயிலர், “நேத்து அடி வாங்கினான், இன்னிக்கு வந்து போராட்டம் பண்றான். இதுதான் ட்ரீட்மென்ட் கொடுக்கற லட்சணமா? யூஸ்லெஸ் ஃபெலோஸ்” – காவல்துறை அதிகாரி “விஐபி கேஸ்கூட இல்லை மேடம், சாதாரண டிரைபல் உமன் கேசுதான்” – உயர்நீதிமன்ற வழக்குரைஞர் “ஒரு டிரைபல் பொம்பளைய ஹைகோர்ட் வரை வர விட்டிருக்க” – அட்வகேட் ஜெனரல் “குற்றத்தைத் தடுக்கணும்னா எல்லா நேரமும் சட்டப்படி நடக்க முடியாது சந்துரு” – காவல்துறை அதிகாரி “நாளை ஒரு நாள் மட்டும் சமாளிச்சுட்டா போதும், ஜட்ஜ் பேனல் மாறுது” – அட்வகேட் ஜெனரல் – லாக்கப் உள்ளே இருப்பது மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் இந்தவகை மனோநிலைக்கு மத்தியில், வெளியே இருப்பதும்கூட பேராபத்துதான் என்பதை, இதைப்போன்ற வசனங்கள் மூலம் படம் துல்லியமாகச் சித்தரிக்கிறது. “எம்மா நடந்தாலும் எங்க ஆளுங்களுக்கே பட்டா கெடைக்கறதில்ல. நீங்க என்னமோ பட்டாங்கறீங்க, படிங்கறீங்க..” என மைத்ரா டீச்சரிடமும், “பாம்பு பிடிக்க வேணாம்னுதாய்யா படிக்க ஆசைப்பட்றான்” என்று தாசில்தாரிடமும், “டே பையா, மனுஷங்கிட்ட இருந்து ஒத்தி இருந்தாதான் உனக்கு நல்லது, போயிட்டு வா” என்று பாம்பிடமும், “இந்தக் காயமெல்லாம் கொஞ்ச நாள்ல ஆறிடும். ஆனா திருட்டுப் பட்டம் காலத்துக்கும் தங்கிடும்டா…” என்று சகோதரன் இருட்டப்பனிடமும் கூறும், அப்பாவி இருளர் ராஜாகண்ணுவாக வரும் கே.மணிகண்டன் –    “உழைச்சுப் பொழைக்க தெம்பு இருக்கும்போது, நாங்க ஏஞ்சாமி திருடனும்?” என திருட்டுத் தாலி என்று பரிகசிக்கும் காவலரிடம் சொல்லும்போதும், “இந்தக் கேஸ்ல தோத்தாகூடப் பரவாயில்லை, புள்ளைங்ககிட்ட போராடித் தோத்துட்டேன்னு சொல்லிக்கிறேன்” என டிஜிபியிடம் சொல்லும்போதும், டிஜிபி சொல்லியபடி போலீஸ் ஜீப்பில் ஏறாமல் நடந்தும் பஸ்ஸிலுமாக வீட்டிற்குத் திரும்பும்போதும், சித்திரவதைக்கு இடையில் வெளியே சாப்பிட ஒரு வாய் எடுத்து வைக்கும்போது லாக்கப் உள்ளே ஆணும் பெண்ணுமாகக் காவலர்களின் சித்திரவதைகளால் அலற, அழுதுகொண்டே சாப்பாட்டைத் தவிர்க்கும்போதும், தனது கணவனின் பெயர் ஒரு பாடலில் வருகிறது என்கிற ஒரே காரணத்தால், அந்தப் பாடலையே நேசிக்கும் போதும், சுயமரியாதையும் பாசமும் நேசமும் கொண்ட பெண் செங்கேணியாக லிஜோமோல் ஜோஸ் – “அசிங்கம் அவங்க பேச்சில இல்ல, நம்ம நடத்தையிலும் இருக்கு” என்று சக காவல் அதிகாரியிடம், “ஜனநாயகத்தை நில நிறுத்தணும்னா சில நேரத்துல சர்வாதிகாரத்தக் கையிலெடுத்துதான் ஆகணும்” என்று வழக்குரைஞர் சந்துருவிடம், “டிபார்ட்மெண்ட்டுக்காக எதையாவது விட்டுக் கொடுக்கலாம், எதற்காகவும் என் மனசாட்சிய விட்டுக்கொடுக்க முடியாது, சாரி சார்” என்று டிஜிபியிடம், உச்சபட்சமாக உயர்நீதிமன்றத்தில் மனசாட்சிப்படி விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்து, சாட்சிகளின் வாக்குமூலம் வழங்கும் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி பெருமாள்சாமியாக பிரகாஷ்ராஜ் – “அப்போ கடைசிவரை வேடிக்கை மட்டும்தான் பாப்பீங்க? ஏழாயிரம் மனுஷங்க சார்”, “இல்ல சார், நீங்க இவ்வளவு பாசிட்டிவா சொல்றதுதான், இன்னும் எனக்குச் சந்தேகமா இருக்கு” சந்திரனிடம் அவ்வப்போது பேசும்போதும், “திருடங்க இல்லாத சாதி இருக்கா நடராஜ்? முதல்ல, ஒரு ஜாதி பெயரைச் சொல்லி அவங்களை இப்படி பிராண்ட் பண்றத நிப்பாட்டுங்க” என்று காவல்துறை அதிகாரியிடம் கூறும்போதும், ” “எந்த ஆதாரமும் இல்லாமல் கேஸ் போடுவது, போலீசை எதிர்த்து அல்ல, ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எதிர்த்து. இந்த அரசாங்கத்த எதிர்த்து. சவாலான போராட்டமாய் இருக்கும், தயாரா இருங்க” என்று செங்கேணியிடமும், மைத்ராவிடமும் சொல்லும்போதும், “எதையும் சாதிப்பதற்காக இந்தக் கேஸ எடுக்கல சார். ஒரு இன்னசன்ட் டிரைபல் உமனுக்கு ஜஸ்டிஸ் கிடைக்கணும்னு போராடறேன். இன்னிக்கு செங்கேணி, நாளைக்கு இன்னொரு பொண்ணுக்கு ஆதரவா நிப்பேன். நீதி கிடைக்கலன்னா, ரோட்டுல நின்னு போராடுவேன். போராடறதுக்கு லா எனக்கு வெப்பன், தட்ஸ் ஆல்” என்று அட்வகேட் ஜெனரல் ராம்மோகனிடம் தெளிவு படுத்தும்போதும், “தப்பு பண்றவங்களுக்கு ஜாதிகள் நிறைய இருக்கு சார், பாதிக்கப்பட்டவங்களுக்கு நாமதானே இருக்கோம்? நாமும் எந்த எக்ஸ்ட்ரீமுக்கும் போலாம் சார்” என்று ஐஜி பெருமாள்சாமியிடம் உறுதியாகத் தெரிவிக்கும்போதும், “காந்தி நேருன்னு முக்கியமான தலைவரெல்லாம் இருக்காங்க, ஏன் அம்பேத்கர் மட்டும் இல்ல!?” என்று வினவும் போதும், “ஏழு பேரா, ஏழாயிரம் பேராங்கறது முக்கியம் கிடையாது. பாதிக்கப்பட்டவங்க யாராயிருந்தாலும், அவங்க எத்தனை பேரா இருந்தாலும் நீதி கிடைக்கணும். அத உறுதி செய்யறது இந்த நீதிமன்றத்தோட தார்மீகக் கடமை, மை லார்ட்”, “பாதிக்கப்பட்டவங்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, அவங்களுக்கு நடந்த அநீதியைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும்”, “நீதிக்கு ஆதரவான வார்த்தைகளவிட அநீதிக்கு எதிரான நீதிமன்றத்தின் மௌனம் ஆபத்தானது”, “வரலாறு தெரியாதவங்களுக்குச் சொல்றேன். கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட புருஷனோட மரணத்துக்கு நீதி கேட்கற இந்தப் பொண்ணு செங்கேணிதான், நம்ம கண்ணு முன்னாடி நிக்கற கண்ணகி”, “கணவன இழந்த செங்கேணிக்கு ஊர் மையத்துல ஒரு பட்டா வழங்கனும்னு கேட்டுக்கறேன்” என்று ஆணித்தரமான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைக்கும்போதும், சட்ட நிபுணத்துவம் மட்டுமல்லாது மனிதநேயமும் கூடிய உயர்நீதிமன்ற வழக்குரைஞராக வரும் சூர்யா – என அனைவருமே கதை, சம்பவங்கள், காட்சியமைப்பு, வசனங்கள் சேர்ந்து செதுக்கிய இம்முதன்மைப் பாத்திரங்களில் ஒன்றி, உச்சபட்ச அர்ப்பணிப்புத் திறமையால், அவை ‘பளிச்’சிட்டுத் துலங்கச் செய்துவிடுவது தனிச்சிறப்பு. அவ்வாறே, குழந்தை அல்லி (பேபி ஜோஷிகா மாயா), எஸ்.ஐ. குருமூர்த்தி (தமிழ்), ஆசிரியை மைத்ரா (ரஜிஷ விஜயன்), தலைமைக் காவலர் வீராச்சாமி (சூப்பர்குட் சுப்பிரமணி) காவலர் கிருபாகரன் (பால அசன்), அட்வகேட் ஜெனரல் எஸ் ராம்மோகன் (ராவ் ரமேஷ்), வழக்குரைஞர் சங்கரன் (எம்.எஸ்.பாஸ்கர்), பப்ளிக் ப்ராசிக்யூட்டர் செல்லபாண்டியன் (குரு சோமசுந்தரம்), ஊராட்சி மன்றத் தலைவர் குணசேகரன் (இளவரசு), காவல்துறை அதிகாரி நடராஜ் (ராஜேஷ் பாலச்சந்திரன்), டிஜிபி எஸ் ராதாகிருஷ்ணன் (ஜெயபிரகாஷ்) தத்தம் பங்களிப்பைக் குறைவில்லாமல் வழங்கியுள்ளனர். ஒளிப்பதிவும் (எஸ்.ஆர்.கதிர்) இசையும் (சீன் ரோல்டன்) படத்திற்கு வலு சேர்த்துள்ளன. தோய்வே தோய்ந்து போகும் அளவிற்கு ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு கச்சிதம். கலை இயக்குனர் மற்றும் காஸ்ட்டிங் டைரக்டர் வெகுவான பாராட்டுக்குரியவர்கள். காவல்துறையினரின் லாக்கப் சித்திரவதைகள் திரையைத் தாண்டி வந்து நம்மைத் தாக்குகின்றன. இனி, இது நின்று விடுமா? சாத்தான்குளம் சம்பவமே வெற்றிமாறனின் ‘விசாரணை’க்கு பிறகும்தானே! ஒட்டுமொத்தமாக நிற்காது, குறையலாம். அப்பட்டமாக ஒரு அப்பாவியைக் கொலை செய்த, அதை மறைக்கப் பாடுபட்ட அத்தனை நெஞ்சழுத்தக்காரர்களின் மனசாட்சியையும் நிச்சயம் இது உலுக்கி இருக்கும். அவ்விதம் அவர்கள் செய்ய எத்தனிக்கும்போது, இனி யோசிக்க வைக்கும். ஜெய் பீம் உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டு இருந்தாலும், சில சித்தரிப்புகள் அதனுடன் சேர்க்கப்பட்டிருப்பது, கலையம்சம் மிகுந்த படமாகவும் பரிணமிக்கச் செய்வதுடன், பட்டவர்த்தனமான உண்மைகளைக் கூறும் ஆவணப்படங்களில் இருந்து விலகி நிற்பவர்களையும்கூட, ஆவணப்படுத்தப்பட்ட உண்மை நிலையை அறியச் செய்வதும்தான் ! சித்தரிப்புகளில் சில, சிலரிடம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்குமாயின், அவை சரியாகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றது; அவ்விதமான சித்தரிப்புகள் இனியும் தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கேதான் உண்டு. ஜெய் பீம் கொண்டாடப்பட வேண்டிய படம் மட்டுமல்ல; அது பேசும் உண்மைகளை, திரையரங்க வெளியீட்டின் மூலமும் கடைகிராம மக்கள் வரை, கொண்டு சேர்க்கப்பட வேண்டிய படமும்கூட. முழுத் தகுதிகள் இருந்தும் விருதுகள் கிடைக்காமல் போகலாம் – காட்டப்படும் உண்மைகளையும் சேர்த்துச் சேர்த்து அங்கீகரிப்பதாகி விடுமோ எனும் அச்சத்தால். இதை வெறும் படமாக மட்டும் கடந்து செல்லாமல், பல பரிமாணங்களில் அது தரும் பாடத்தையும், படத்தைக் காண்பவர் எல்லாம் பாராட்டித் தீர்ப்பதுதான், அதன் வெற்றி. 27 ஆண்டுகளுக்கு முன்பு, ஜஸ்டிஸ் கே.சந்துரு சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞராக இருந்தபோது கையாண்ட வழக்கின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஜெய் பீம் படத்தில், வழக்குரைஞர் சந்துருவாக பாத்திரமேற்று உயிர்ப்பித்ததின் மூலம், நீதி நாயகம் கே.சந்துரு மற்றும் நடிகர் சூர்யா பரஸ்பரம் கௌரவம் பெறுகிறார்கள். இப்படம், நடிகர் சூர்யாவின் நடிப்புத் தொழிலில் மட்டுமல்ல, அவரது வாழ்க்கையிலேயே ஒரு மைல்கல். மதிப்பெண் : 9/10 விமர்சனம்: மது ராஜேந்திரன் படங்கள்: இணையத்திலிருந்து

வெளிச்சத்துக்கு வரும் பார்ப்பனியப் படுகொலை

வெளிச்சத்துக்கு வரும் பார்ப்பனியப் படுகொலை

ராம்குமார் – இந்தப் பெயரை நம்மில் பலர் மறந்தே போயிருப்போம். நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில், ஜெயிலில் கரண்ட் கம்பியைக் கடித்துச் செத்த ராம்குமார் என்று சொன்னால் பலருக்கும் நினைவு வரும். ராம்குமார் தற்கொலை?! வழக்கை, ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் சூ மோட்டோ வழக்காக எடுத்து விசாரித்தது. விசாரணையில், ‘ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்று கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் Pathology துறைப் பேராசிரியர் டாக்டர் ஆண்டாள் பழனி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் வேணு ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர். போகிற போக்கில் அவர்கள் இதைச் சொல்லவில்லை. ராம் குமாரின் மூளை, சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், நாக்கு, உதடு உள்ளிட்ட பல பாகங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ததில், எந்த பாகத்திலும் எந்தத் திசுவிலும் மின்சார பாதிப்புக்கு ஆளானதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் அப்துல் காதர், ராம்குமாரின் உடலோடு சிறை மருத்துவரும் வந்திருந்ததாகவும், சிறையில் என்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன என்று கேட்டறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குறுக்கு விசாரணையின்போது, ‘ராம்குமாரின் உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதன் அடையாளம் அல்ல. உடலை மார்ச்சுவரிக்கு அனுப்ப வேண்டியிருந்ததால், நான் அவரது உடலில் இருந்த புறக்காயங்களை சோதிக்கவில்லை. அவரது உடலின் திசுக்களை ஆய்வு செய்தால்தான் மின்சாரம் தாக்கியதா என்று தெரியவரும். ஆனால், முந்தைய அறிக்கையில், மின்சாரம் தாக்கிய காயம் இருந்ததாக, தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார். முன்னதாக, ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் மறுவிசாரணை கோரித் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சியில், பார்ப்பனியம் நடத்திய படுகொலைகளில் ராம்குமார் மரணமும்! ஒன்று என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய காவல்துறை, உயிர்காக்க வேண்டிய மருத்துவத்துறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதித்துறை, அனைத்துக்கும் பொறுப்பான அரசு ஆகிய அனைத்துமே கூட்டாக இந்தச் சதியில் பங்கெடுத்துள்ளன. இது மட்டுமல்லாது, சுவாதி வழக்கில் உண்மையான குற்றவாளியைத் தப்ப வைக்க இவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டுள்ளார்கள் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வரும். அதற்காக பலியிடப்பட்ட அப்பாவிதான் ராம்குமார் என ஒருநாள் நிரூபிக்கப்படலாம். தற்போது அமைந்துள்ள அரசு, ராம்குமார் மரணம்!, சுவாதி கொலை ஆகிய இரண்டு வழக்குகளையுமே மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டால், பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ராம்குமார் சாவுக்கும் நீதி கிடைக்கலாம். செய்யுமா புதிய அரசு? பொறுத்திருந்து பார்ப்போம்.

அம்மாவுக்குக் கல்யாணம்

அம்மாவுக்குக் கல்யாணம்

வேர்களாகும் விழுதுகள் – 3 “அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரில குடை பிடிப்பானாம். ஆனாலும் ரெண்டாங் கல்யாணத்துக்கு இம்புட்டு ஆடம்பரம் ஆகாது”. கெட்டி மேளச் சத்தத்தை மீறி, பின்னாலிருந்து குரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன். மெல்லிய குரலென  நினைத்துப் பேசிக்கொண்டிருந்த பெண்கள்  அசடு வழிய சிரித்துவிட்டுப் பேச்சைத் தொடர்ந்தனர். அது ஒரு திருமண வீடு. மணப்பெண்ணின்  முதல் திருமணம் தோல்வியுற்றதால் நடைபெறும்  மறுமணம், அப்பெண்களின் வாயில் அவலாகிக் கொண்டிருந்தது. கணவனை இழந்தவர்கள், பிரிந்து வாழ்பவர்கள், மணமுறிவு பெற்று வாழ்பவர்கள், திருமணமாகாதவர்கள் என, தனித்து வாழும் கணிசமான  பெண்களால் நிரம்பிக் கிடக்கிறது  இந்தச் சமூகம். ஆனாலும்கூட, ஒரு  பெண்ணிற்கு  மறுமணம் என்பதை இன்னும்  இங்கு இயல்பாக ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பெண்களின்  சிறகுகளை முறிப்பதில் இதுபோன்ற  பெண்களுக்கும் பங்குண்டு. ஐ.நா.வின் ‘உலகப் பெண்களின் முன்னேற்றம் 2019 – 2020; மாறும் உலகில் குடும்பங்கள்’  என்ற தலைப்பின் கீழ் தரப்பட்டுள்ள அறிக்கையில், உலகிலேயே கணவனை இழந்த பெண்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இந்தியா. அதே நேரத்தில் இந்தியாவில்தான் மிகக்  குறைந்த அளவில் 1.3 சதவீத  விவாகரத்துகள் (1000 திருமணங்களில் 13 திருமணமே மணமுறிவு)  நடைபெறுவதாகவும் குறிப்பாக  நகர்ப்புறங்களில் மட்டுமே நிகழ்வதாகவும்  கூறுகிறது. இந்த இரண்டு முரண்களுக்குமான காரணத்தை ஆராய்ந்தால் மீண்டும் பெண்ணடிமை, ஆணாதிக்கம் என்ற சக்கரங்களுக்குள்ளேயே சுழல வேண்டியிருக்கும்.  இந்தியாவின் இந்த மிகக் குறைவான மணமுறிவுகளுக்கு பின்னால் இருப்பது மகிழ்வான, புரிதலான திருமண உறவா? அல்லது சமுதாய அழுத்தமா? என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியே. பில்கேட்ஸ் – மெலிண்டா இணையரின் திருமண முறிவு அறிக்கையைக்கூட  ஏற்றுக்கொள்ள முடியாமல் பொங்கும் கூட்டத்தை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. ஏனெனில், இன்றும் இங்கு விவாகரத்து  என்பது, தனி மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல் எனப் புரிந்து கொள்ளப்படாமல், வெட்கத்திற்குரியதாகவும் அவமானத்திற்குரியதாகவும், குடும்ப கௌரவமாகவும் மட்டுமே பார்க்கப்படுகிறது.  இந்தியாவின் முதல் (கணவனை இழந்த) பெண் மறுமணம் 1856 டிசம்பர் 7 ஆம் தேதி ஈஸ்வர சந்திர வித்யாசாகரின் முயற்சியால்  வங்கத்தில் நடைபெற்றதாக  வரலாறு கூறுகிறது. ஆனால் இன்றும்கூட கணவனை இழந்த பின்போ அல்லது மணமுறிவுக்குப் பின்போ மறுமணம்  செய்யத் தயங்கி, துவண்டு நிற்கும் பெண்களே இங்கு அதிகம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மறுமணங்கள் இன்று பரவலாக மனதளவில்  ஏற்றுக் கொள்ளப்பட்டாலும்கூட, ஆணின் மறுமணம் போல பெண்ணின் மறுமணம் எளிதாகக் கை கூடுவதில்லை. குறிப்பாக குழந்தையுடைய  பெண்கள்  மறுமணம் செய்யக்கூடாது என்றே உலகம் எதிர்பார்க்கின்றது. பெண் என்பவள் ஆணைச் சார்ந்தே வாழவேண்டும் என நிர்பந்திக்கும் இதே சமூகம், இணையர் இறந்து விட்டாலோ, பிரிந்து விட்டாலோ பெண் தனியாகவே வாழ்ந்து முடிக்க  வேண்டும்  என்றும் எதிர்பார்க்கிறது. குழந்தையுடன் மறுமணம் நோக்கிச் சிந்திக்கும் பெண்ணைக் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கி, அவளை வாழ்நாளெல்லாம் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறது, இன்றும்.  ஆனால் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே  பெண்களின் மறுமணம் குறித்து சிந்தித்திருக்கிறார் எழுத்தாளர் சூடாமணி. இவரது ‘இரண்டாவது அப்பா’  என்ற சிறுகதை, ஏழு வயதுக் குழந்தையுடன் கணவனை இழந்த கதைநாயகி, துணிவுடன் இரண்டாம் திருமணம் முடித்து அதனை எதிர்க்கும் தன் தாயையும் ஏற்கத் தயங்கும் மகனையும் அழகாக சமாளித்து, தன்னம்பிக்கையுடன்  புது வாழ்வைத் தொடர்வதை விவரிக்கிறது. சூடாமணியின் ‘இரண்டாம் அப்பா’  காலத்திற்கும்  முன்பே  ஒலித்த  குரலாய், பெண்கள் மறுமணத்தை ஓங்கிச் சொல்கிறது. இன்றும்  பெண்ணின் மறுமணத்தை கள்ளத்திருமணம் போல் நடத்தும் பெற்றோர்களுக்கிடையே தன் மகள்   சௌந்தர்யாவின் மறுமணத்தை  ஊரறிய  நடத்தி, பொருள் பொதிந்ததாக மாற்றி,  வாழும்  உதாரணத் தந்தையாகத் திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.  இந்த சமூகத்தில் அப்பாவாக இருப்பதற்கும் அம்மாவாக இருப்பதற்கும் வேறுபாடுகள் உண்டு. அப்பா மறுமணம் முடித்தால் ஏற்றுக் கொள்ளும் குழந்தைகளால்  அம்மாவுக்கு மறுமணம் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடிவதில்லை. காரணம், நாம் உருவாக்கி வைத்திருக்கும்  அம்மா என்ற புனித பிம்பம்.  தன் உணர்வுகளை அழித்து, குழந்தைகளுக்காகவே தங்கள் வாழ்வை  ஒப்புக் கொடுத்துவிடுபவள்தான்  தியாகத்தாய் என  செல்களில் உறைந்து கிடக்கும் அழுக்கை அகற்றினாலன்றி  பெண்ணிற்கான மறுமணங்கள் சாத்தியப்படாது. இப்படிப்பட்ட சூழலில்தான் அம்மாவிற்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டு  என்பதைப் புரிந்து, தங்கள் தாய்க்கு திருமணம் முடித்து வைத்து நம்பிக்கை வெளிச்சம் தந்திருக்கின்றனர் இரண்டு  இளைஞர்கள் தமிழகத்திலும் கேரளாவிலும். அவர் பெயர் மினி. கேரளாவில் கொல்லம் அருகில் பள்ளிமோன் என்னுமிடம். திறமையான, அன்பான ஆசிரியை. மகன் கோகுல் ஸ்ரீதர். கணவரின் கட்டளைக்கிணங்க, குழந்தைக்காக பணியை உதறிய உதாரண மங்கை.    திருமண பந்தம் சுகப்படவில்லை. தினந்தோறும் வாக்குவாதம், பிரச்சினை, சண்டை. குழந்தைக்காக கசப்பான திருமண வாழ்வை சகித்துக்கொண்டு, பூட்டிய கதவுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கானோரில் ஒருத்தியாக  வாழ்ந்தார். அப்படியான ஒரு நாளில்  தலையில் விழுந்த அடியால் இரத்தம் சொட்டச்சொட்ட நின்ற அம்மாவைப் பார்த்து பதறிய மகனிடம், “ஒண்ணுமில்லடா, அம்மா உனக்காக என்ன வேணா தாங்கிக்குவேன்” என்று சொன்ன அம்மாவின் வார்த்தைகள் தன்னைத் தூங்க விடவில்லை எனக் கூறுகிறார்  கோகுல் ஸ்ரீதர். ஏனெனில், இது போன்ற வன்முறைகள் அம்மாவின் மீது ஏவப்படுவது  முதன்முறையல்ல.  ‘உனக்காகத் தாங்குவேன்’ என்பது மினியின் வார்த்தைகள் மட்டுமல்ல. இந்தியாவின் பெரும்பான்மை அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்காகவே  எந்தத் துன்பத்தையும்  தாங்கிக் கொண்டு, திருமண பந்தத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். சண்டை, சச்சரவு, பிரச்சினைகள் சூழ்ந்த சூழலில் வாழும், வளரும் குழந்தைகள் நம்பிக்கையின்மை, மன அழுத்தம், தனிமை உணர்வுடனே வாழ்வதாகக் கூறுகிறது சைல்ட் ட்ரெண்ட்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு.  கோகுலும் அப்படியே வளர்ந்தான், வாழ்ந்தான்.  தொடர்ந்த பிரச்சினைகளுக்குப் பிறகு, தன்  அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு, அப்பாவின் வீட்டை விட்டு வெளியேறிய அந்தக் கணத்தில் அவருக்கென ஒரு வாழ்வை அமைத்துத் தரவேண்டும் என, தான் முடிவெடுத்ததாக கோகுல் கூறுகிறார். தனக்காக தன் தாய் இதுவரை அனுபவித்த கொடுமைகளின் முற்றுப் புள்ளியாக  மறுமணத்தை யோசித்திருக்கிறார் இந்த இளைஞர்.  “எனக்காக இவ்வளவு காலம் எல்லாவற்றையும் எதிர்த்து வாழ்ந்த அம்மா கொஞ்சம் தனக்காகவும் வாழட்டும்” என விரும்பினேன் எனக் கூறும் கோகுல், மறுமண முடிவுக்கு தன் தாயை சம்மதிக்க வைக்க, பெருமுயற்சி எடுக்க வேண்டி இருந்திருக்கிறது. தன் தாயின் பள்ளிப் பருவ நண்பன் வேணு என்பவரே வரனாக வந்தபோது இந்த மறுமணம் கைகூடியிருக்கிறது. தன் அம்மாவின் மறுமண முடிவை மற்றவர்கள் தவறாக சித்தரித்து விடக் கூடாது என்பதே கோகுலின்   கவலையாக இருந்தது. அதனால் அவரே இந்த நிகழ்வை முகநூலில் பகிர்ந்து  “அம்மாவின் இரண்டாவது திருமண முடிவை ஏற்றுக்கொண்டு, அவருக்கான மரியாதையை அளியுங்கள்” என்று கூறிய இந்த முற்போக்கு இளைஞனை சமூக வலைத்தளங்கள் கொண்டாடித் தீர்க்கின்றன. “அப்பாக்கள் மறுமணம் செய்தால் ஏற்றுக்கொள்ளும் குழந்தைகள், அதையே அம்மாக்கள்  செய்தால் ஏன் ஏற்றுக்கொள்வதில்லை?” என்று முடித்த  கோகுலின் நியாயமான கேள்விக்கு  இளைஞர்களே பதிலாக வேண்டும்.   தமிழ்நாட்டின் சித்தார்த்தன் கருணாநிதி எழுதியுள்ள, Right to Marry  என்ற நூலை வாசித்துவிட்டு, அவரைத் தொடர்புகொண்டு I’m proud of you என்று கூறிய என் வார்த்தைகளுக்கு கேள்விகளாலேயே சாட்டை வீசுகிறார் அவர். “இதில்  பெருமைப்படுவதற்கு என்ன இருக்கிறது? இன்றும்  இதைப் பெருமையாகப் பேசுகிறோம் என்பதே வேதனைக்குரிய விஷயமல்லவா? இது சாதாரணமான, இயல்பான ஒரு நிகழ்வாக மாற இந்தச் சமூகத்திற்கு இன்னும் எத்தனை காலம் பிடிக்கும்?” என்று கேள்வியால் அசரடிக்கும்  சித்தார்த், தந்தை இறந்து  பத்தாண்டுகள் கழித்து தன் அம்மா செல்விக்கு, 47 வயதில்  மறுமணம் செய்து வைத்திருக்கிறார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், வலையாம்பட்டு என்ற கிராமத்தில் வறுமையில் சுழன்ற குடும்பம் அது. 2009-ல் கணவர் இறந்துவிட,  கல்லூரியில் அடியெடுத்து வைத்திருந்த சித்தார்த் கருணாநிதி, பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மகிழ்னன்  என்ற இரு மகன்களோடு, வறுமையுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார் செல்வி அம்மாள்.  இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் படும் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தார்.   வழக்கமான தமிழ் அம்மாவாக தன் ஆசாபாசங்களைத் தள்ளிவைத்து, தன் பிள்ளைகளின் படிப்பிற்காக உழைத்துத்  தேய்ந்தார். மகன்கள் இருவரும் படித்து, வேலை தேடி, நகரம் நோக்கி நகர்ந்துவிட தனிமை அவரைத் தின்றது.  நல்லகாலம்,  சராசரி மகன்களாய் இல்லாமல், இருவரும் தாயின் வலியை உணர்ந்து கொண்டனர். சித்தார்த், தன் தம்பியோடு கலந்தாலோசித்து அம்மாவுக்கு மறுமணம் செய்யும் முடிவைக் கையிலெடுத்தார். ஆனால் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்தும் சமூகத்தின் கட்டமைப்பு குறித்தும் கவலைப்பட்ட செல்வி அம்மாள் மறுத்து ஒதுங்கினார். மனம் தளரவில்லை சித்தார்த்தன். 2017 ல் ஆரம்பித்த பேச்சுவார்த்தை, நேரம் கிடைக்கும்போதெல்லாம் தொடர்ந்தது. இறுதியில் பிள்ளைகளே வென்றனர்.  அருகிலுள்ள சூலாங்குறிச்சியில் மறுமணம் முடிய, இன்று குடும்பமுமே உற்சாகத்தில். “பத்தாண்டுகளுக்கு முன்பே எனது ஆசிரியர் ஒருவர் அம்மாவின் மறுமணம் குறித்து என்னிடம் பேசியபோது அருவெறுப்பாக இருந்தது. ஆனால் நானும் காதலித்து,  பிரிவு நேரிட்டபோதுதான், அம்மாவிற்கு மறுமணம் தேவை என்பதை உணர்ந்தேன்” என்கிறார்  கோவையில் ஆங்கில மொழிப் பயிற்றுனராக இருக்கும் சித்தார்த் கருணாநிதி.  “ஆணோ, பெண்ணோ இணையரில் ஒருவர்  இறந்து விட்டால் சிறிது காலம் எடுத்துக் கொண்டு மீண்டும் மணம் புரிவதில் என்ன தவறு?”  என்று அவர் கேட்கும் கேள்வியின் நியாயத்தை ஆண்கள், பெண்கள் அத்தனை பேரும் உணர வேண்டிய தருணமிது. “நான் கணவரை இழந்து தனியாக இருந்தபோது உதவி கேட்டு எந்த ஆண்களிடமாவது பேசினால் கூட, என்னைத் தவறாகப் பேசியவர்கள், நான் மறுமணம் முடித்த பிறகு என்னை அவ்வாறு பேசுவதில்லை. என் மீதான அவர்கள் பார்வை மாறியிருக்கிறது” என மகிழ்ச்சியோடு கூறும் செல்வி அம்மாளின் வார்த்தைகளிலுள்ள மற்றொரு கோணம் பெண்கள் மறுமணத்திற்கு வலுசேர்க்கிறது. இந்தியாவில் 1.36 மில்லியன் பேர்   விவாகரத்தானவர்கள் என்றும், 40 மில்லியன் பெண்கள் கணவரை இழந்தவர்கள் என்றும் 2016-ல் வெளியான BBC  அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, தனித்து வாழும் ஆண்களை விட, தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் மிக அதிகம்.  முறிந்து  போகும் திருமண பந்தங்களிலும், முடிந்துபோன திருமண வாழ்க்கையிலும் தோற்றுப் போய்விட்டோம் என்று எண்ணாமல் மீண்டும் ஒரு வாழ்வை ஏற்றுக்கொள்ள பெண்கள் முன்வர வேண்டும். புராதனச் சிந்தனைகளைத் தூக்கிக்கொண்டு, தனிமையில்  உழலாமல், விருப்பமான வாழ்வை அமைத்துக் கொள்வதில் தவறேதுமில்லை.   ஊர்