வார்த்தை வன்முறைகளுக்கு ஆளாகும் பெண் உடல்
“பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் உடையணிந்திருந்தால், அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது குற்றமாகாது” என்று கேரள நீதிமன்றம் அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான சிவிக் சந்திரன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டிற்கு, நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் இது போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் வருடம் நந்தி கடற்கரையில் நடந்த எழுத்தாளர்கள் முகாமின்போது தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக அவர் புகார் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் தன் தரப்பு சாட்சியாக அளிக்கப்பட்ட புகைப்படங்களில் சம்பந்தப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடை, பாலியல் ரீதியான செயல்பாடுகளைத் தூண்டும் விதமாக இருந்ததாக நீதிபதியே கூறுவது “விக்டிம் ப்ளேம்” செய்யப்படுவதாகவே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பாலியல் குற்றங்கள் எழும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட பெண் மீதே முன்வைக்கப்படும் இது போன்ற பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வெகுசனத்தைத் தாண்டி நீதிமன்றங்களே தெரிவிப்பது வேதனைக்குரிய விசயம். இதுதான் சாக்கு என்று சில ஊடகங்களும் “ஆபாச ஆடை அணிவது பாலியல் இச்சையைத் தூண்டுகிறது” என்று தன் பங்கிற்கு அந்த விசயத்தை ஆதரிக்கின்றன. பாலியல் குற்றங்களுக்கு ஆடை காரணமல்ல என்று தொடர்ச்சியாகப் பெண்களின் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், சமூகம் இன்றளவும் பெண்ணின் ஆடை மீதே விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று “ஒழுக்க விதிகள்” கற்பிப்பதில் மட்டுமே இந்தச் சமூகம் கவனம் செலுத்துகிறது. பொதுசனம், ஊடகம், நீதிமன்றம் என்று அனைவரும் பொதுவெளியில் பெண் மீதான மாண்பைக் குறைக்கும் வகையில் இது போன்ற பிற்போக்குக் கருத்துகளைப் பரவ விட்டுக் கொண்டே இருக்கின்றனர். உண்மையிலேயே பெண்கள் குறித்த முற்போக்குப் பார்வை இருந்தால், ஊடகத்துறையில் வேலை செய்யும் பெண்களிடமே கேட்டுப் பாருங்கள். அவர்களில் எத்தனைப் பெண்கள் தங்கள் வீட்டில் பெரும் எதிர்ப்பைச் சுமந்துகொண்டு தினந்தோறும் பணிக்குச் செல்கிறார்கள் என்று தெரியும். ஊடகம் என்றாலே “நோ” என்று சொல்லி விடும் போக்கு இன்னும் மாறாத சமூகத்தில் இருந்து கொண்டு, இது போன்ற கருத்துகள் வெளிவருவது ஆரோக்கியமான போக்கிற்கு வழி காட்டாது. பொதுவெளியில் ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும், ஒரு ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது இடத்தில் அவள் எங்கே நிற்க வேண்டும், எந்தப் பேருந்தில், எத்தனை மணிக்குப் பயணிக்க வேண்டும் என்று அவளுக்கான வரையறைகள் நீண்டு கொண்டே செல்கின்றன. அப்படியானால் பெண் உடல் காம ஆசையைத் தூண்டுவது இல்லையா? பெண்ணின் உடல் பகுதிகள் காம இச்சைகளைத் தூண்டும் என்பதில் எனக்கும் துளி சந்தேகமும் இல்லை. ஆனால் அவை எப்போதும் காமத்தையே தூண்டிக் கொண்டிருக்கிறதா? சில நாட்களுக்கு முன்னால் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் இடத்தில் அக்குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாததால் ஒருபுறம் தாய் பாலூட்டிக் கொண்டே இருக்க, மறுபுறம் மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். திறந்த மார்புடன் அவள் பாலூட்டுவதைப் பார்த்துக் கூடியிருந்தவர்கள் காமத்தில் வெறி கொண்டு விட்டார்களா? அதில் ஓர் அழகியல் இருந்ததால் அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தர்கள். இங்கே ஆபாசம் எங்கிருந்து வந்தது. பெண்ணின் சம்மதமின்றி நடக்கும் பாலியல் வல்லுறவை நியாயப்படுத்தும் விதமாக அவளின் ஆடையை, அவளின் நிர்வாணத்தை – பகடையாய் உபயோகிப்பது முறையல்ல. பாலியல் வன்முறைக்கு ஆளாகும் மூன்று வயது குழந்தையின் ஆடை என்ன செய்தது? இங்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று அவர் பக்கம் நியாயங்களை அடுக்கும் சில ஊடகங்கள், சௌமியாவை இன்னும் மறந்திருக்காது என்று நினைக்கிறேன். ஆண் உடல் போன்று பெண் உடலும் இயல்பு என்று எத்தனை முன்னெடுப்புகள் செய்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராக வீணாகிப் போகின்றன. இச்சமூகம் பெண்கள் மீது நடத்தும் உடல் ரீதியான வன்முறைகளுக்கு இணையாக இது போன்ற வார்த்தை வன்முறைகளும் மிகுந்த கண்டனத்துக்குரியது. பெண்களை ஒடுக்கி வைக்கும் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனை, படித்தவர்கள் அதிகமாக உள்ளதாகச் சொல்லப்படுகின்ற, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கின்ற மாநிலத்திலேயே இவ்வளவு வலுவாக உள்ளது எனில், நாட்டின் பிற பகுதிகளில், பிற்போக்கு சக்திகளின் பிடியில் சிக்கி இருக்கும் மாநிலங்களில் எந்த அளவில் இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பெண்கள் குறித்த இத்தகு கீழ்த்தரமான சிந்தனை கொண்ட நபர்களை அரசியல், நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகம் போன்ற அமைப்புகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். சாந்தி சண்முகம்