வார்த்தை வன்முறைகளுக்கு ஆளாகும் பெண் உடல்

வார்த்தை வன்முறைகளுக்கு ஆளாகும் பெண் உடல்

“பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் உடையணிந்திருந்தால், அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது குற்றமாகாது” என்று கேரள நீதிமன்றம் அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான சிவிக் சந்திரன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டிற்கு, நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் இது போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் வருடம் நந்தி கடற்கரையில் நடந்த எழுத்தாளர்கள் முகாமின்போது தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக அவர் புகார் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் தன் தரப்பு சாட்சியாக அளிக்கப்பட்ட புகைப்படங்களில் சம்பந்தப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடை, பாலியல் ரீதியான செயல்பாடுகளைத் தூண்டும் விதமாக இருந்ததாக நீதிபதியே கூறுவது “விக்டிம் ப்ளேம்” செய்யப்படுவதாகவே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பாலியல் குற்றங்கள் எழும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட பெண் மீதே முன்வைக்கப்படும் இது போன்ற பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வெகுசனத்தைத் தாண்டி நீதிமன்றங்களே தெரிவிப்பது வேதனைக்குரிய விசயம். இதுதான் சாக்கு என்று சில ஊடகங்களும் “ஆபாச ஆடை அணிவது பாலியல் இச்சையைத் தூண்டுகிறது” என்று தன் பங்கிற்கு அந்த விசயத்தை ஆதரிக்கின்றன. பாலியல் குற்றங்களுக்கு ஆடை காரணமல்ல என்று தொடர்ச்சியாகப் பெண்களின் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், சமூகம் இன்றளவும் பெண்ணின் ஆடை மீதே விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று “ஒழுக்க விதிகள்” கற்பிப்பதில் மட்டுமே இந்தச் சமூகம் கவனம் செலுத்துகிறது. பொதுசனம், ஊடகம், நீதிமன்றம் என்று அனைவரும் பொதுவெளியில் பெண் மீதான மாண்பைக் குறைக்கும் வகையில் இது போன்ற பிற்போக்குக் கருத்துகளைப் பரவ விட்டுக் கொண்டே இருக்கின்றனர். உண்மையிலேயே பெண்கள் குறித்த முற்போக்குப் பார்வை இருந்தால், ஊடகத்துறையில் வேலை செய்யும் பெண்களிடமே கேட்டுப் பாருங்கள். அவர்களில் எத்தனைப் பெண்கள் தங்கள் வீட்டில் பெரும் எதிர்ப்பைச் சுமந்துகொண்டு தினந்தோறும் பணிக்குச் செல்கிறார்கள் என்று தெரியும். ஊடகம் என்றாலே “நோ” என்று சொல்லி விடும் போக்கு இன்னும் மாறாத சமூகத்தில் இருந்து கொண்டு, இது போன்ற கருத்துகள் வெளிவருவது ஆரோக்கியமான போக்கிற்கு வழி காட்டாது. பொதுவெளியில் ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும், ஒரு ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது இடத்தில் அவள் எங்கே நிற்க வேண்டும், எந்தப் பேருந்தில், எத்தனை மணிக்குப் பயணிக்க வேண்டும் என்று அவளுக்கான வரையறைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.   அப்படியானால் பெண் உடல் காம ஆசையைத் தூண்டுவது இல்லையா? பெண்ணின் உடல் பகுதிகள் காம இச்சைகளைத் தூண்டும் என்பதில் எனக்கும் துளி சந்தேகமும் இல்லை. ஆனால் அவை எப்போதும் காமத்தையே தூண்டிக் கொண்டிருக்கிறதா? சில நாட்களுக்கு முன்னால் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் இடத்தில் அக்குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாததால் ஒருபுறம் தாய் பாலூட்டிக் கொண்டே இருக்க, மறுபுறம் மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். திறந்த மார்புடன் அவள் பாலூட்டுவதைப் பார்த்துக் கூடியிருந்தவர்கள் காமத்தில் வெறி கொண்டு விட்டார்களா? அதில் ஓர் அழகியல் இருந்ததால் அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தர்கள். இங்கே ஆபாசம் எங்கிருந்து வந்தது. பெண்ணின் சம்மதமின்றி நடக்கும் பாலியல் வல்லுறவை நியாயப்படுத்தும் விதமாக அவளின் ஆடையை, அவளின் நிர்வாணத்தை – பகடையாய் உபயோகிப்பது முறையல்ல. பாலியல் வன்முறைக்கு ஆளாகும் மூன்று வயது குழந்தையின் ஆடை என்ன செய்தது? இங்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று அவர் பக்கம் நியாயங்களை அடுக்கும் சில ஊடகங்கள், சௌமியாவை இன்னும் மறந்திருக்காது என்று நினைக்கிறேன்‌. ஆண் உடல் போன்று பெண் உடலும் இயல்பு என்று எத்தனை முன்னெடுப்புகள் செய்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராக வீணாகிப் போகின்றன. இச்சமூகம் பெண்கள் மீது நடத்தும் உடல் ரீதியான வன்முறைகளுக்கு இணையாக இது போன்ற வார்த்தை வன்முறைகளும் மிகுந்த கண்டனத்துக்குரியது. பெண்களை ஒடுக்கி வைக்கும் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனை, படித்தவர்கள் அதிகமாக உள்ளதாகச் சொல்லப்படுகின்ற, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கின்ற மாநிலத்திலேயே இவ்வளவு வலுவாக உள்ளது எனில், நாட்டின் பிற பகுதிகளில், பிற்போக்கு சக்திகளின் பிடியில் சிக்கி இருக்கும் மாநிலங்களில் எந்த அளவில் இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பெண்கள் குறித்த இத்தகு கீழ்த்தரமான சிந்தனை கொண்ட நபர்களை அரசியல், நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகம் போன்ற அமைப்புகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். சாந்தி சண்முகம்

டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?

டாஸ்மாக்கில் விற்பது பஞ்சாமிர்தமா?

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை மாணவர்கள் எடுக்க வேண்டுமென்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு குறித்து தமிழக அரசு ஆலோசனை நடத்துகிறது. எல்லாம் சரி, தமிழக அரசின் பார்வையில் போதைப்பொருள் என்பது குட்கா, கஞ்சா, ஹெராயின், அபின் போன்றவையாகத்தான் இருக்கிறது. அரசால் விற்பனை செய்யப்படும் மதுபானங்கள், போதைப்பொருட்களின் கணக்கில் வராதது, வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது.  மதுபானங்கள்தான் தற்போது மிக மிக எளிதாகக் கிடைக்கக்கூடியதாக, அரசின் அனுமதியுடன் வாங்கிப் பயன்படுத்தக்கூடிய போதைப்பொருட்களாக இருக்கின்றன. அதேபோல, தினசரிச் செய்தித்தாள்களைத் திறந்து, கொலை, கொள்ளை, வன்புணர்வு, தற்கொலை எனப் பத்து செய்திகளை வாசித்தோமானால், அவற்றில் ஏழெட்டு சம்பவங்களுக்கு அடிப்படையாகவோ, பின்புலமாகவோ மதுப்பழக்கம் இருக்கும். மது போதையில் வன்புணர்வு, மதுப் பழக்கத்தால் கணவன் மனைவி இடையே தகராறு, மதுப் பழக்கத்தால் கடனாளியாகித் தற்கொலை, மதுபானம் வாங்கப் பணம் தராததால் மனைவி அடித்துக் கொலை, இப்படியான செய்திகள் மிகச் சாதாரணமாகிவிட்டன. இவையொன்றும் அரசின் பார்வைக்குப் போகாத ரகசியச் செய்திகள் அல்ல. ஆனால், இவற்றையெல்லாம் இத்தனைக் காலமாக அரசாங்கங்கள் கண்டுங்காணாமல்தான் கடந்து வருகின்றன. மதுபான விற்பனையாலும், மதுப் பழக்கத்துக்குப் பலர் அடிமையாவதாலும் அரசுக்கும் அரசியலுக்கும் கிடைக்கும் பல்வேறு நன்மைகளே அதற்குக் காரணம். குடி நோயால் மரணித்தவர்களின் எண்ணிக்கை, குடிநோயால் கணவன் உயிரிழந்ததால் இளம் விதவையான பெண்களின் எண்ணிக்கை, மது போதையால் நடக்கும் கொலை, கொள்ளை, வன்புணர்வு, விவாகரத்துகள் என அனைத்துப் புள்ளி விவரங்களையும் சேகரித்தால், தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகத்தீமையின் வீரியம் பளிச்சென அனைவருக்கும் புரியும். அவ்வளவு ஏன், ஒவ்வொருவரும் அவரவர் குடும்பம், உறவினர்கள் மட்டத்தில் தீவிர மதுப்பழக்கத்தில் சிக்கியவர்கள் குறித்துக் கணக்கெடுத்தாலே இதன் தீவிரத்தன்மை புரியும். இவற்றைத் தடுத்து நிறுத்த அரசு என்ன செய்ய வேண்டும்? முதலில், குடிப்பழக்கம் ஒரு சமூகக்கேடு என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். குடி குடியைக் கெடுக்கும் என்று சும்மாக்காச்சி போர்டில் எழுதிவைப்பதல்ல இது. தீவிர மதுப்பழக்கத்தால் ஏற்பட்டுள்ள சமூகக்கேடுகள் குறித்த புள்ளி விவரங்களைச் சேகரிக்க வேண்டும். குடிப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மிகத் தீவிரமாகவும் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்க வேண்டும். குடிப்பழக்கத்தால் ஒருவர் மீதான மரியாதை எந்த அளவுக்கு இழிவு நிலைக்குச் செல்கிறது, குடிப்பழக்கத்தால் ஒரு குடும்பம் எப்படிச் சீரழிகிறது என்பது குறித்த பிரச்சாரங்கள் திண்ணைப் பிரச்சாரம் போல முன்னெடுக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சாரங்கள், நேரடியாக மக்கள் மத்தியிலும், அனைத்து ஊடகங்களின் வழியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும், சமூக அக்கறையுடனும் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதால் விளையும் தீமைகள் குறித்து ஒவ்வொரு வீட்டிலும் பேசப்படும். தீவிர மதுப்பழக்கம் தவறென்ற சிந்தனை பரவத் தொடங்கும். இதுதான் மதுப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான சரியான முன்னெடுப்பாக இருக்கும். பொதுவாக, மதுபானக்கடைகளை ஒழித்துவிட்டால், மதுப்பழக்கத்தை ஒழித்துவிடலாம் என்ற சிந்தனை பலருக்கும் உண்டு. ஆனால், அது நடைமுறைக்கு ஒத்துவராது என்பதற்குப் பல்லாண்டுகளாக மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத்தில் தொடரும் கள்ளச்சாராயச் சாவுகளும், அங்கே விற்பனையாகும் போலி மது பானங்களும், சாராயம் குறித்த புள்ளிவிவரங்களுமே சாட்சி. அதேவேளை, மதுபானக்கடைகளை முற்றாக மூடுவதற்குப் பதிலாக, எண்ணிக்கையை இஷ்டத்துக்கு அதிகரிப்பதை நிறுத்த வேண்டும். இப்போது, சிறு கிராமத்திலும்கூட இரண்டு மூன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் மதுபானக்கடைகளும் ரெக்கரியேஷன் கிளப் என்ற பெயரில் நடக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, மதுபானக் கடைகளின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, ஊருக்கு வெளியே மதுபானக் கடைகளைக் கொண்டுசெல்ல வேண்டும். அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும், குடியிருப்புகளுக்கும் அருகிலுள்ள மதுபானக் கடைகளை ஒழிக்க வேண்டும். நம்மூரில் ஒரு விசித்திரம் என்னவென்றால், குடியிருப்புகளுக்கு அருகிலிருக்க வேண்டிய கல்விக்கூடங்கள், ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தொலைவில் இருக்கின்றன. ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்க வேண்டிய மதுபானக்கடைகள் குடியிருப்புப்பகுதியில் இருக்கின்றன. இந்நிலை மாற வேண்டும். இறுதியாக, மது பானங்கள், போதைப்பொருட்கள் பயன்பாடென்பது, தமிழ்நாடு என்றில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சவாலான பிரச்சனையாக தற்போது உள்ளது. குஜராத்திலுள்ள அதானி துறைமுகத்தில் கடந்த ஆண்டில், இந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பிடிபட்டது. அடுத்தடுத்து, அதே துறைமுகத்தில் 500 கோடி ரூபாய் மதிப்பிலும், 350 கோடி ரூபாய் மதிப்பிலுமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதேபோல், குஜராத்திலுள்ள மற்ற துறைமுகங்களிலும் போதைப் பொருட்கள் பிடிபட்டன. அதாவது, மதுவிலக்கு அமலில் இருக்கும் குஜராத் மாநிலம்தான், போதைப்பொருட்களின் சர்வதேசச் சந்தையாக இருக்கிறது. அதுமட்டுமல்லாது, போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராய விற்பனையும் அங்குதான் அதிக அளவில் நடக்கிறது. குஜராத் மட்டுமல்லாது, இந்தியா முழுக்கவே போதைப்பொருட்கள் சப்ளை அதிதீவிரமாக நடக்கிறது. பெருமுதலாளிகளின் உலகமாக மாறிவரும் இன்றைய சூழலில், போதைப்பொருட்கள் விற்பனையைக் கட்டுப்படுத்துவதோடு, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வைத் தீவிரமாக முன்னெடுப்பதும்தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கக்கூடும். அந்த விழிப்புணர்வு வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். நம் எதிர்காலம் நம் கைகளில். வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

கரைசேராப் படகுகள் – 10

கரைசேராப் படகுகள் – 10

தொடர்கதைவயலில் வேலை செய்தவர்கள் கும்பல் கும்பலாக ஓடியதைப் பார்த்ததும், ‘ஏன் இப்படி ஓடுகிறார்கள்?’ என்று தெரியாமல் குழம்பிப்போய் நின்றிருந்தார் செந்தாமரை. “எலே.. செந்தாமரை, நம்ம ஊரு கன்னிமா கோயில்ல…. யாரோ பெரியவரு வந்திருக்காராம். எல்லாரும் பாக்க போறாங்களாம், நீயும் வாடா” என்று கோபால் நாயக்கர் கூப்பிடவும், குழந்தை பிறந்த தீட்டு இருப்பதை  மறந்து அவர் கூடவே ஓடினார் செந்தாமரை. கோவாலண்ணன் கூப்பிட்டாரேன்னு வேகவேகமாக வந்த செந்தாமரைக்கு கோயிலுக்கு கிட்ட வந்ததும்தான் தீட்டுன்னு உரைச்சது. இருந்தாலும் வந்துட்டமேன்னு வாசலைத்  தாண்டி ஒதுங்கி நின்றார். கோயில் வாசல்ல  அகலமா ஒரு கல்லு இருக்கும். அந்தக் கல்லு மேல, உடம்பெல்லாம் ஒட்டிப்போய், ஒல்லியாக வேட்டி மாதிரி ஒரு காவித் துணி கட்டிகிட்டு, மேலுக்கு ஒரு துண்ட விரிச்சி போட்டுகிட்டு, கையில ஒரு கொம்ப வச்சிகிட்டு ஒரு பெரியவர் உட்கார்ந்திருந்தார். “ஆரு இவரு..?” என்று செந்தாமரை கோவாலுவைக் கேட்டார். “இவருதான் பெரிய மகான்; வட நாட்ல இருந்து  வர்ராராம், இவர பாத்தா புண்ணியமா..” என்று கோவாலு விளக்கினார்.  எல்லாரும் அவரிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள். செந்தாமரை பயந்துகொண்டு ஓரமாக நின்றுகொண்டிருந்தார். மகான், செந்தாமரையைக் கையை அசைத்துக் கூப்பிட்டார். கிட்ட ஓடிப் போன செந்தாமரை, ‘படார்’னு அவர் காலில் விழுந்துட்டார்.  “எழுந்திரு, காய்ச்ச மரம்தான் கல்லடி படும்”னு  சொல்லிட்டு, “சுவாதி நல்லா இருப்பா”ன்னு சொன்னார். ‘அந்த மகான் என்ன சொன்னார்னு புரியலையே..”ன்னு வழியெல்லாம் யோசனையாகவே இருந்தார்  செந்தாமரை. “அண்ணாத்த…. நம்ம வீட்ல யாருண்ணா சுவாதி? இல்லாத பேரை சொல்றாரு” என்று குழப்பமாகக் கேட்டார் செந்தாமரை. “முட்டா பய மவனே.. புனிதா குழந்தைக்குதான் சுவாதின்னு பேர் வக்கச்  சொல்லியிருக்காரு டா” என்று விளக்கினார் கோவாலு. “அண்ணாத்த, எனக்கு ஒரு ஒத்தாச பண்ணுங்க. நம்ம சுப்புடு ஐயர்கிட்ட குறிப்பு கொடுத்திருக்கேன். குழந்தைக்குப் பேரு வாங்கி வந்துடுங்கண்ணா. நான் மவளுங்களை ஏழாம் காப்புக்கு அழைச்சிட்டு வந்திடறேன்”னு சொல்லி பொட்டி வண்டியில புறப்பட்டார் செந்தாமரை. நடுமகள்  ஊரைத் தாண்டிதான் பெரிய மகள் வீட்டுக்குப் போகணும். அதனால  முதல்ல நடுமகள் வீட்டுக்குப் போனாரு செந்தாமரை.  “கடிச்ச பாக்குல காப் பாக்கு கொடுக்காத பெரியாத்தா, நாபெத்த மவளே, நாபெத்த மவளேன்னு வழியனுப்ப வந்தாளாம்”.  அந்த மாதிரி வாயிலேயே வட சுடுவா, கோதை மாமியாரு பவளம். செந்தாமரையைப் பார்த்ததும் “வாங்க.. வாங்க”ன்னு வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்  பவளம். “எப்படி இருக்கீங்க சம்பந்தி?ன்னு தெரியாம கேட்டுட்டாரு செந்தாமரை. “நாயக்  கேட்பாரும் இல்ல, நடுவூட்ல வைப்பாரும் இல்ல;  ஏன்னு கேட்பாரும் இல்ல எடுத்து புடிப்பாரும் இல்ல”ன்னு ஒப்பாரி  வைக்க ஆரம்பிச்சுட்டா பவளம். ஆனா கழுத்துல மாட்டு வடமாட்டம் மோப்பு வச்ச  செயினு தொங்க, காதுல வைர பேசரி மின்ன, ஆளு நல்லா வளமாதான் இருந்தா. பஞ்சு மிட்டாய் நிறத்துல காபிதூள் பூப்போட்ட  வெல உசத்தியான சேலையில கூந்தலில் கனகாம்பரம் தொங்க செழிப்பா இருந்த, மகள் கோதையைப் பாக்கறதுக்கு செந்தாமரைக்கு  மனசுக்கு குளிர்ச்சியா இருந்தது. வயிறு குளிர  மோரைக் குடித்துவிட்டுக் கிளம்பினார். “நாளைக்கு புனிதா பொண்ணுக்கு ஏழாம் காப்பு, குடும்பத்தோட வந்துடுங்க”ன்னு சொல்லிவிட்டுக் கிளம்பினார். வண்டிய வேகமாக  கூவத்தூருக்கு ஓட்டினாரு. வவுறு பசியில கத்த, மாட்ட அடிச்சு   ஓட்டினார்.   உச்சி வெயிலுக்கு இவரோட  பெரிய மகள்  வசந்தி வீட்டுக்கு வந்தார். பேத்தி வளரும்போது பாட்டியா பாசம் காட்னவ, தாலி ஏறியதும் மாமியாரா மாறிட்டா. இருந்தாலும், செந்தாமரை மருமவன்தானே.. அதான், மருமவன் வருவாருன்னு எதிர்பார்த்து , வெடக்கோழிக் குழம்பு வச்சு, வயக்காட்டு நண்டை வறுத்து ரசம் பண்ணி வச்சிருந்தாங்க. வவுறு கதறக் கதற உள்ள போட்டுத் திணிச்சுட்டு, மீதிய அம்மாவுக்கும் பொண்டாட்டிக்கும்   மூட்ட கட்டினார் செந்தாமரை. “காலைல கோழி கூவ வந்துடுங்க  அத்தை. வசந்தி.. நீயும்தான். புனிதா அவ புருசனை நெனைச்சு வெசனப்பட்டுகிட்டு இருக்கா. உன்னையும் கோதையையும் பாத்தா, அவ மனசு ஆறும்”னு  சொல்லிட்டு, “மாமனையும் மச்சானையும் வயக்காட்ல பாத்து சொல்லிட்டேன்”  என்ற சேதியும் சொல்லிட்டு கிளம்பினார். பொழுது சாயறதுக்குள்ள ஊரு போய்ச் சேரணும்னு வண்டிய அடிச்சு ஓட்டினார். வயக்காட்டு வேலைய கணக்கு தீர்த்துட்டு, கட்டின புடவயில கதிரெல்லாம் ஒட்டியிருக்க, முகமெல்லாம் வேர்த்து விறுவிறுக்க  வந்த மரகதத்தைப் பார்க்கும்போது, வழவழன்னு இருக்கற ரப்பர் மரத்துல பால் வடியறா மாதிரி இருந்தது. செந்தாமரையும் மாமியார் வீட்ல கொடுத்த தூக்குச் சட்டிய தூக்கிக்கிட்டு வீட்டுகுள் நுழைந்தார்.  “என்னதுங்க..? என் ஆத்தா கொடுத்தாங்களா?”ன்னு தூக்குச் சட்டிய  கையில வாங்கினாள் மரகதம். “விலை மோர்ல வெண்ணெய் எடுத்து, தலை மகனுக்குக் கல்யாணம் பண்ற குடும்பமாச்சே.. அவளா கொடுத்திருக்கப் போறா?”ன்னு  வம்பிழுத்தார்   பட்டம்மா. “ஓசியில உலை வச்சி, காந்தல்ல களிகிண்டற குடும்பமாச்சே உங்க குடும்பம்! நீ  என் குடும்பத்தைப் பேசறியா?”ன்னு பதிலடி கொடுத்தா மரகதம்.  “ஆரம்பிச்சிட்டீங்களா உங்க போராட்டத்த… சத்த நேரம் அடங்குங்க”ன்னு சத்தம் போட்டுட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்த செந்தாமரை மனசுகுள்ள, அந்த மகான் சொன்னது ஓடியது. அதற்குச் சாட்சியாக முருகர் படத்திற்குப் பின் இருந்து கடிதம் ஆடியது. தொடரும் சாம்பவி சங்கர்

கரைசேராப் படகுகள் – 9

கரைசேராப் படகுகள் – 9

தொடர்கதை “ஏங்க மாமா… காப்பு சம்மந்தி வீட்லதானே போடுவாங்க? நாம ஏன் வாங்கணும்? மூனாம் மாசம் பொண்ணைக் கூட்டி அனுப்பும்போதுதான் குழந்தைக்கு கொலுசு, அண்ணாக்கயிறுன்னு போட்டு அனுப்புவாங்க” என்று குழப்பத்துடன் கேட்டாள் மரகதம். “இனாமாக் குடுத்த மாட்டைப் பூட்டி நெலாவுல ஏரடிச்சானாம் இளிச்சவாயன்”ன்னு உன் தலையில கட்டிடப் போறாங்கடா, உன் மருமவன் வூட்டு மனுசனுங்க” என்று ராகம் இழுத்தாள் பட்டம்மா. “என்னைய என்ன புத்திகெட்ட ஆம்பளன்னு நினைச்சயளா? ஆளாளுக்கு  அலப்பற தர்ரீங்க..” என்று செந்தாமரை சத்தம் போட்டுவிட்டு, அவங்களுக்கு   டவுனுக்குப் போக பொழுது ஆப்படலையாம். அதான் என்னய  வாங்கியாந்து வைக்கச் சொன்னாங்க” என்றார். மனிதனுக்கு இரண்டு நேரங்களில் கோபம் வரும். செய்த தப்பை மறைக்கும்போதும், தப்பு செய்யாத போது குற்றம் சாட்டப்படும் போதும்.  இதில் செந்தாமரை இப்பொழுது கோபப்பட்டது எந்த ரகம் என்று நமக்குப் புரியும். செந்தாமரை லேசாகக் குரலை உயர்த்தியதும், மாமியாரும் மருமகளும்  பொங்குகிற பாலில் தெளித்த தண்ணீர் மாதிரி ‘புஸ்சுன்னு’ அடங்கிவிட்டார்கள். செந்தாமரை வெளியில் வந்து, “ஏய்.. சுள்ளான் இங்க வாடா” என்று கூப்பிட்டதும், வாசலில் படுத்திருந்த சுள்ளான் வாலை ஆட்டிக்கொண்டே இவர் பின்னாடியே ஓடி வந்தது. இவர் வயக்காட்டுப் பக்கம் செல்வதைப்  பார்த்ததும் இவருக்கு முன்னாடி ஓடி வழிகாட்டியது. அதிகாலையில் எழுந்த மரகதம், வெள்ளிக்கிழமைங்கறதால வாசல்  தெளித்து அரிசி மாவில் பெரிதாகக் கோலம்போட்டு, அடுப்பு தட்டு   மொழுகி சும்மா வீட்டை ஜொலிக்க வைத்திருந்தாள். ‘நாளைக்கு வீட்டுக்கு சொந்த பந்தம், சாதி சனமெல்லாம் வருவாங்க’ என்று வீட்டை ஒழுங்குபடுத்தி வைத்துவிட்டு,  தலைக்குக் குளித்து, சின்ன சின்ன பூ கண்ணுக்கே தெரியாத சிவப்பு நிறத்தில் இருந்த மஞ்சள் நிற நூல் புடவையைக் கட்டியிருந்தாள் மரகதம். அவளை ஏற இறங்கப் பார்த்த பட்டம்மா, ‘டொக்…. டொக்..’ என்று வெற்றிலை இடித்துக்கொண்டே, “சீமை சிறுக்கியாட்டும் சீவி முடிச்சு சிங்காரிச்சு வயக்காட்டுல கலெக்டரு உத்தியோகம் பாக்க போனாளாம் வித்தக்காரி” என்று வியாக்கனம் படிச்சார். பொழுது விடிந்ததும் சண்டை வேண்டாம் என்று முகத்தைப் பரண்மேல்  வைத்துக்கொண்டு வேலை பார்த்தாள் மரகதம். “என்னத்த சுத்தம் பண்றா இந்தக் கருப்பாயி?” என்று அவளைத் திட்டிக்கொண்டே மாட்டுக் கொட்டகையைப் பெருக்கி வாரி, சாணத்தைக் குப்பைக்குழியில் கொட்டினாள். மாட்டுக்கு புண்ணாக்கு, தவிடு போட்டுத் தண்ணீர் காட்டிவிட்டு,  பித்தளையில நல்ல உயரமாக இருக்கும் பால் பாத்திரத்தில் பாலைக் கறந்து, நுரை பொங்கப் பொங்க அப்படியே எடுத்து வந்து பட்டம்மா பக்கத்தில் ‘பட்’டென்று வைத்துவிட்டு, “பால் வாங்க வரவங்களுக்கு அளந்து ஊத்திடுங்க” என்று வெடுக்கென்று சொன்னாள். நுரை பொங்கற பாலை ஊற்றி இழைய காய்ச்சி, கருப்பட்டி போட்டு  புனிதாவுக்கும் மாமியாருக்கும் கொடுத்துவிட்டு, ‘ரெண்டு டபரா’ காபியை கூஜாவில் ஊற்றி எடுத்துக்கொண்டு வாசலில் வந்து, ‘வயக்காட்டுப் பக்கம் யாரு போறாங்க?’ என்று பார்த்துக்கொண்டு நின்றாள் மரகதம். “எலே.. குருவம்மா வயக்காட்டுப் பக்கம் போனீன்னா.. என் மாமங்கிட்ட  கொடுத்துடு” என்று சொல்லி, அந்தப்பக்கம் வந்த குருவம்மாவிடம் கூஜாவைக் கொடுத்தாள். “எக்காவ், உங்க வயலுக்குத்தான் அறுப்புக்குப் போறேன்” என்று ‘போற போக்குல’ சொல்லிக்கொண்டே போனாள் குருவம்மா. நேற்று, வயலில் வேலை செய்யும் ஆட்கள்,  “தினம் கூழு வேண்டாம்; அரிசிக் கஞ்சி வேணும்” என்று சொன்னதால் மரகதம் அடுப்பில் உலை வைத்து, பெரிய படியில் ஐந்து படி நொய் அரிசியை ஊறப் போட்டுவிட்டு,  பக்கத்துத் தெருவில் இருக்கும் இருக்கற நாவிதர் வீட்டுக்குப் போனாள். மரகதத்தைப் பார்த்ததும் ஓடி வந்த இருளாயியிடம், “நாளைக்கு புனிதாவுக்குத் தீட்டு எடுக்கணும். வயக்காட்டுல வேலை கெடக்கு,  கொஞ்சம் வெள்ளனயே வந்துடு” என்று சேதி சொல்லிவிட்டுக் கிளம்பினாள். வீட்டுக்கு வந்து கஞ்சி காய்ச்சி எடுத்துக்கொண்டு, தூதுவளை துவையலை  வாழையிலையில் மடித்து அண்டா மேல் வைத்துக்கொண்டு, முந்தானைத் தலைப்பை சிம்மாடு மாதிரி சுருட்டித் தலை மேல் வைத்துக்கொண்டு, ‘ஒத்த கையால’ அண்டாவைப் பிடித்துக்கொண்டாள். ‘ஒத்த கையை வீசி வீசி அவள் நடந்த தாள லயத்துல வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாரை மயங்கியது. நெல்லு பொறுக்கிக்கிட்டு இருந்த தேன்சிட்டு, அந்த அண்டா மேல இருந்த தட்டு விளிம்புல ஊஞ்சல் ஆடிக்கிட்டு வந்தது.’ இந்த காட்சியில் மயங்கிய சூரியனும், ‘தனக்கு ஒருவாய் கஞ்சி கிடைக்காதா?’ என்று, மரகதம் பின்னாலேயே ஓடிவர, மேகக் கூட்டங்கள் அலைஅலையாக ஒன்றோடு ஒன்று துரத்திக் கொண்டு சூரியனை முந்திக்கொண்டு ஓடிவர, ஒருவழியாக வயக்காட்டுக்கு வந்து சேர்ந்தாள் மரகதம். சுடச்சுட கஞ்சியைப் பார்த்ததும், கதிர் அரிவாளைப் போட்டுவிட்டு ஓடிவந்தாங்க. கும்பலா உட்கார்ந்து ஊரு கதையைப் பேசி உரண்டை இழுத்து கஞ்சி குடிக்கற சுகமும் வெஞ்சனம் இல்லாம உடல் உழைச்சி, வயிறாற கஞ்சி குடிக்கற சுகமும் சொர்க்கத்துக்குச் சமம். செந்தாமரை பெரிய மகளை கூவத்தூரில் உள்ள மச்சானுக்கே திருமணம் செய்து கொடுத்தார். நடு மகளை தேவாதூரில் கொடுத்தார். ‘இரண்டு  ஊரும் பக்கம் பக்கம்தான்; இருந்தாலும் நடந்து போக முடியாது’ என்று பொட்டி வண்டியைக் கட்டிக்கொண்டு கிளம்புகிற நேரத்தில், வயக்காட்டில் வேலை செய்தவங்க எல்லாம் வேலையை விட்டுவிட்டு கும்பல் கும்பலாக ஓடினார்கள். தொடரும் சாம்பவி சங்கர்

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்னமும் அறிவிக்கவில்லை. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்ட அமைப்பின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு, 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டன. 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை முடிந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் பெறப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி சேர்க்கைக்காகக் காத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான தனியார்  கல்லூரியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல் என மாணவர்களுக்கான சேர்க்கைப் பட்டியல்களும் வெளிவந்து கொண்டுள்ளன. உண்மையில் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்துவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. ஆனால், இன்னமும் தேர்வு முடிவுகள் வெளியாகாத இந்தச் சூழலில், ‘எங்கள் குழந்தைகளுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?’ என CBSE பள்ளிகளில் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையுடன் கேட்கின்றனர்.  மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர்களது ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல, பெரும்பாலான  CBSE பள்ளிகளில் பத்தாம் வகுப்புத்  தேர்வு முடிவுகள் வராமலேயே, பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் சில பள்ளிகளில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு இடைத்தேர்வுகூட நடத்தி முடிக்கப்பட்டதுவிட்டது என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இரண்டுக்குமே MCQ (Multiple Choice Questions) என்றழைக்கப்படும்  கொள்குறிவகைத் தேர்வில் எடுத்த முடிவுகளை மட்டும் பிரிண்ட் அவுட் எடுத்து  பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  சிபிஎஸ்சி பள்ளிகளைப்  பொறுத்தவரை, இருபருவங்களாக நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளில், முதல் பருவத்தின் இந்தத் தேர்வு முடிவுகளை வைத்து பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையை நடத்தி உள்ளனர். மாணவர்களுக்கான பாடப் பிரிவுகளையும் பெற்றோர்களிடம் பேசி அவர்களாகவே தெரிவு செய்து 11 ஆம் வகுப்பு சேர்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில அரசுப் பாடத்திட்டத்திற்கான  தேர்வு விடைத்தாட்கள்  திருத்தும் பணி, ஜூன் முதல் வாரத்தில்  முடிந்து தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் மத்திய  இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் வரக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணி ஜூன் 5 ஆம் தேதியே முடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எதற்காகத் தேர்ச்சி முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வி, ஆசிரியர் மற்றும் பெற்றோர் தரப்புகளிலிருந்து வருகின்றன.  கொரோனா காலத்தில் கடந்த இரண்டு கல்வியாண்டுகளும் மாணவர்களுக்கு முறையான கல்வி கிட்டாத சூழல் நிலவியது. ஆனால், தற்போது எல்லா இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தச் சூழலில் மாணவர்கள் சரியான காலத்தில் உயர் வகுப்புகளுக்குச் சென்று முறையான கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் உண்டல்லவா? அதை முறைப்படி செயல்படுத்த வேண்டிய கடமை அரசுகளுக்கும் அரசு சார்பு அமைப்புகளுக்கும் உண்டல்லவா? ஆனால் இதுவரை, ஒன்றிய அரசோ, மாநில அரசோ, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளோ இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கல்வியில் சமமின்மை நிலவுவது குறித்து நாம் நன்கறிவோம். குறிப்பாக நம்  தமிழகத்தில், மாநிலப் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று பல்வேறு வகையான, பாடத்திட்டங்கள் சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் வேறுபட்ட மன நிலையை உருவாக்கக்கூடிய கல்விச் சூழலே அதிகரித்து வருகிறது. இங்கு சமத்துவம் பேசுகிறோம்; சமமான கல்வி என்று கூறுகிறோம்; வாய்ப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கிடையே கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு, பொருளாதாரம் சார்ந்த வியாபாரமாகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட அண்மைக் காலங்களில், கல்விச் சூழலில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதிகப் பணம் செலவழித்துப் படிக்கவைக்கக் கூடிய பள்ளிகள்தான் தரத்தில் உயர்ந்த பள்ளிகள் என்ற மனப்போக்கும் நிலவுகிறது. அதன் அடிப்படையிலேயே பத்தாண்டுகள் முன்பு வரை கோலோச்சிய பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சமச்சீர் கல்வி முறை வந்தபிறகு,  தங்களை மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ள, CBSE பள்ளிகளாக மாறின. இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத சூழலில் இப்பள்ளிகள் CBSE அமைப்புக்கு எதிராக எந்தக் குரலும் எழுப்பாமல், மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலை ஏதும் இல்லாமல் மௌனமாக உள்ளனர். தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனடியாக, மாணவர்கள் நலனைப் பொருட்படுத்தாமல், சட்டத்துக்குப் புறம்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கும் தனியார் பள்ளிகள், மாணவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் CBSE-ஐ எதிர்த்துப் போராட்டம் நடத்தாது ஏன்? ஒரே மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் தேர்ச்சி முடிவுகள் வரப்பெற்று உயர் வகுப்புகளுக்குச் சென்றுவிட்ட சூழலில், சக வகுப்பு சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளை இன்னமும் தேர்வு முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழலில் வைத்திருப்பது, மாணவர்கள் எதிர்காலத்தையும் மனநிலையையும் பாதிக்கும், பாழாக்கும் செயலாகும். எந்தக் கல்வி முறையில் பயின்றாலும், பயிலும் மாணவர்கள் அனைவரும் நமது குழந்தைகளே. இங்குள்ள கல்வி மற்றும் மனித வளத்துறைகள் இது குறித்து உரையாடல் நடத்தி இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-இடம் உரிய விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மாறாக, CBSE அமைப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும்வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கச் சொல்வது என்ன நிர்வாக முறை? என்பது விளங்கவில்லை. மாநில அரசு எப்போது உறக்கம் கலைக்கும்? இந்தச் சூழலிலாவது, நம் குழந்தைகளுக்கு ஏற்ற பள்ளிகள் அரசுப் பள்ளிகள், ஏற்ற பாடத்திட்டம் மாநிலப் பாடத்திட்டம் என்ற புரிதல் பெற்றோர்களிடம் உருவாக வேண்டும். கல்வி என்பது நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதை  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் கேட்டுப் பெற வேண்டியது நம் கடமை. நாம் தொடர்ந்து வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வர வேண்டும். கல்வி உள்ளூர் வளம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கல்வி கற்பார்கள். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, அலங்கார முகமூடிக்கு ஆசைப்பட்டு CBSE பின்னால் ஓடினால், நமது குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும்தான் பாழாகும் என்பதைப் பெற்றோர்களும் இந்த அரசும் உணர வேண்டும். கல்வி முதலாளிகள் தங்கள் மேட்டிமை மனப்பான்மையை மாற்றிக்கொண்டு மாநிலப் பாடத்திட்டத்திற்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், நுகர்வோர் உரிமைச் சட்டப்படி, ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியது கட்டாயம். பெற்றுக்கொண்ட பயணத்துக்கு உரிய சேவை வழங்காவிட்டால் அந்தந்தக் கல்வி நிறுவனங்கள்தான் குற்றவாளிகள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக அரசும் மெத்தனப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு CBSE பள்ளிகளில் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும். உமா மகேஸ்வரி, கல்வியாளர்

கரைசேராப் படகுகள் – 8

கரைசேராப் படகுகள் – 8

தொடர்கதை சேதி  சொல்லப்  போன மனுஷன்  வெள்ளையத்தேவன் மாதிரி  வெள்ளைப் பசுவைப் பிடித்துக்கொண்டு நிற்பதைப் பார்த்ததும் குழம்பித்தான் போனாள் மரகதம். “மதனி, நான்தான் அந்த ஊருதானேன்னு மாடு வாங்க அண்ணனைக் கூப்பிட்டுகிட்டுப் போனேன்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டு மாட்டை ஓட்டிச் சென்றான்   மாணிக்கம். ‘வெளைஞ்ச வெள்ளாமை வீடு வந்து சேர்றதுக்கே பணத்துக்கு  பவுசத்து நிக்கயிலே, இந்த மனுஷன் கூறு கெட்டுப்போய்  மாட்டைப் புடிச்சிட்டு வந்துட்டாரே’ன்னு மனதிற்குள்  பயந்த மரகதம் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “சரி… சரி… வெளக்கு வைக்கப் போவுது. வீட்டுக்கு வந்து கஞ்சித் தண்ணி குடிச்சிட்டு, பொறவு களத்து காவலுக்கு வரலாம்”  என்று  கணவனுக்குக் கட்டளையிட்டுவிட்டு, அருக்காணி  ஆய்ந்து வச்ச கீரையெல்லாம்  சிவப்பு நிறத்தில் மஞ்சள் பூ போட்ட புடவை முந்தானையை விரித்து மூட்டைக் கட்டிக்கொண்டு கிளம்பினாள் மரகதம். “அடியே…. எத்தனை பேரு வேலை செஞ்சாங்க? எவ்வளவு வேலை செஞ்சாங்கன்னு  சொல்லாமலேயே கிளம்பறயே…”  என கூப்பாடு போட்டார் செந்தாமரை. “ஆம்பள ஆளு 25, பொம்பள ஆளு 10, நம்ம அருக்காணியை எனக்கு ஒத்தாசைக்கு வச்சிருந்தேன். கணக்கு தீர்க்கும்போது  அவ வந்து நிக்கப் போறா. அவ கணக்கை  நான் பாத்துக்கறேன்” என்று படபடவென்று சொல்லிக் கொண்டே நடந்தாள் மரகதம். அவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே பக்கத்தில் ஓடினார் செந்தாமரை. நாலு தளை தாண்டியதும்  கோவாலு  நாயக்கர் தோட்டம் வந்தது. “அண்ணாத்த, புள்ள பெத்தவளுக்கு கத்தரி பிஞ்சும் முருங்கைப் பிஞ்சும் பறிச்சுகறேன்” என்று தூர நிக்கற உருவத்தைப் பார்த்துக் கத்திவிட்டு வேகமாக கத்தரி பிஞ்சைப் பறிச்சா. “மச்சான் ரெண்டு முருங்கை பிஞ்ச ஒடியேன்”னு சொன்னவள், காய்களைப் பறிச்சதும் செந்தாமரை தோளில் இருந்து துண்டை எடுத்து அதுல பறிச்சதெல்லாம் போட்டு மூட்டை கட்டிக்கொண்டு நடையைக் கட்டினர் இருவரும்.  வீட்டிற்கு வந்ததும் இருவரும் அரப்புப்  பொடி போட்டு நன்கு குளித்துவிட்டு வந்தனர். “எலே செந்தாமரை, இன்னிக்கு ஏன் இவ்வளவு நேரம்?” என்று  கேட்ட  அம்மாவுக்கு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டே, களத்து காவலுக்குப் போனதில் இருந்து முருங்கைக்காய் பறிச்சது வரைக்கும்  வெட்டி ஒட்டி படம் ஓட்டினார் செந்தாமரை.  காதில் தொங்கிய  பாம்படம் ஊஞ்சல் ஆட, மஞ்சள் நிறத்தில்  ஓரத்தில் மட்டும் காபி நிறத்தில் லேசான  கோடு போட்ட புடவை முந்தானையால் அடிக்கடி முகத்தை துடைத்துக் கொண்டும் ரவிக்கை அணியாத  மேலுக்கு  விசிறி   விட்டுக் கொண்டும் கதை கேட்டாள் பட்டம்மா பாட்டி. பின்பக்கம் இருக்கும் சமையல் அறையில் அடுப்பை ஊதி ஊதி நொந்து கொண்டிருந்த மரகத்திற்கு, ‘ஆத்தாளும் மவனும் அப்படி என்னதான் பேசுவாங்களோ!” என்று மனசுல உலை கொதித்தது. ஒரு வழியாக  சமைத்து  முடித்து   சாப்பாடு தட்டில்  வரும்போது  இரவு  ஏழு மணி சங்கு கூவியது. “ஏண்டி.. இந்த பச்ச புளிக்குழம்புக்கும், பருப்புத் துவையலுக்குமா இம்புட்டு நேரம்?” என்று வியாக்கனம் பேசினார் பட்டம்மா.  “ம்… உங்க அதட்டலுக்கு நான் பயப்படலாம், பச்சை மட்டை கூடவா பயப்படும்?”  என்று  வெடுக்கென்று  பதில் சொல்லிட்டு, “ஏனுங்க, நாளைக்கு கழிச்சுப் போட்ட புளியமரத்தை வெறவுக்கு ஏத்தி அனுப்புங்க” என்று பட்டம்மாள் மேலிருந்த எரிச்சலைக் கணவனிடம் காட்டினாள் மரகதம். நாலு முழ வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு, துண்டைத் தலையில் கட்டிக்கொண்டு, நீண்ட மூங்கில் கழியை ஒரு கையிலும்  லாந்தர் விளக்கை ஒரு கையிலும் பிடித்துக்கொண்டு நின்ன  செந்தாமரையைப் பார்த்து, “என்  ராசா அப்படியே  மாறு வேசத்தில வரும் ராசராச சோழனாட்டம் இருக்கேடா”  என்று பட்டம்மா நெட்டை முறித்தாள். இதை ரசித்துக்கொண்டே தூக்குச் சட்டியை எடுத்துவந்து கொடுத்து, “மாமா, காசற கீரை சாதம். நிறைய  பூண்டு போட்டு நல்லெண்ணெய்யில்  பண்ணது; வீணாக்கிபுடாதீங்க. பருப்பு துவையலும் வச்சிருக்கேன். உங்களுக்குத்தான் வாயில்  வேப்பங்குச்சியை வச்சதுமே வயிறு பசிக்குமே…” என்றாள் மரகதம். “நாளைக்கு அமட்டச்சிக்கு  சொல்லணும். புனிதாவுக்கு தலைக்கு ஊத்த பச்சில மருந்தைத் தேடி எடுத்து வரணும். இதெல்லாம் முடிச்சிட்டு அப்பறம் வயக்காட்டுக்கு போ” என்று மரகதத்திற்குக் கட்டளையிட்டார் பட்டம்மா. “மரகதம் நீ சீக்கிரம் வந்து மாத்தினாதான் ஆச்சு. எனக்கும் நிறைய வேலையிருக்கு. ஐயர்கிட்ட  பேரு வாங்கணும்; பொண்ணுங்களுக்கும்  அங்காளி, பங்காளிக்கும்  சொல்லிட்டு வரணும். டவுனுக்குப் போய் காப்பு வாங்கணும்” என்று இழுத்த செந்தாமரையிடம்,  “என்னது..! காப்பா?” என்று மாமியாரும் மருமகளும் ஒத்து ஊதினார்கள். “தவள  மாட்டிகிச்சு” என்று செந்தாமரை நினைத்தார். தொடரும் சாம்பவி சங்கர்

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

“உலகில் மனித வரலாற்றில் அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையில்தான் சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும்” என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்ற வேளையில் பெரியார் சொல்லிச் சென்றவை இன்றும் சொற்களாகவேதான் இருக்கின்றனவேயன்றி, செயலாக்கம் பெறவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது தமிழக அமைச்சரின் நேற்றைய செயல். ஒன்பது முறை எம்.எல்.ஏ வாகவும் ஆறாவது முறையாக அமைச்சராகவும் பதவியில் இருக்கும்  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு செயலை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள  பாலவநத்தம் கிராமத்தில், அமைச்சரைக்கண்டு தனது கோரிக்கை குறித்து  மனு அளிக்க வந்த ஒரு பெண்ணின் தலையில், தன் கையிலிருந்த பேப்பரால் அமைச்சர் அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்ணியவாதிகளும், பெண்களுக்காகக் குரல்கொடுப்பவர்களும் அமைச்சரின் இந்த ஆனவப் போக்கைக் கடுமையாகக் கண்டிப்பதுடன் தேசிய மகளிர் ஆணையம் அமைச்சரமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பாஜக வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வழக்கம்போலவே செலக்டிவ் பாலிடிக்ஸ் மனப்பான்மையுடன் கள்ள மௌனம் காக்கின்றன. சற்றே துணிவுடன் வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்களை மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் அடக்கி வைக்கும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. சமுக வலைத்தளங்களில் நொடிக்கொருமுறை வலம் வரும் இது போன்ற காணொலிகளைக் காணும் எந்தப் பெண்களும், இனி எப்படி மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முற்படுவார்கள்? தங்களுக்கான உரிமைகளையோ, தேவைகளையோ எவ்வாறு கேட்டுப்பெறுவார்கள்? பலர்கூடி நிற்கும் பொதுவெளியில் மனு கொடுக்கச் செல்லும் பெண்களுக்கே இந்த நிலைதான் இங்கு. தனது அதிகாரத்தின் வலிமையை விளிம்புநிலை மக்களிடம் காட்டுவதுதான் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களுக்கான மாண்பா? பொதுவாக அரசியல்வாதிகளின் அதிகார போதையே ஏழை மக்களின் மீது கை வைக்கும் துணிச்சலைத் தருகின்றது. அதுவும் பெண்கள் என்றால், அந்தத் துணிவு பன்மடங்காகப் பெருகி விடுகிறது.  மூச்சுக்கு மூச்சு, சமூக நீதியை வலியுறுத்தும் கட்சியிலிருந்துதான் இப்படியொரு மனிதத் தன்மையற்ற செயல் வெளிப்பட்டிருக்கிறது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஐ சமூகநீதி நாளாக அறிவிப்பதனால் மட்டும் சமூகநீதி பிறந்துவிடாது. அதன் ஓர் அங்கமான பெண் உரிமைக்காகவும், பெண்விடுதலைக்காகவும்  பெரியார் காட்டிய பாதையில் நடப்பதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, சமூக நீதி என்பது குறிப்பிட்ட இனத்திற்கானது இல்லை,  இச்சமூகத்தில் உள்ள அனைவருக்குமானது. குறிப்பாக ஆயிரமாயிரமாண்டுகளாக  பள்ளங்களிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் புதையுண்டு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கானது. அந்தப் பள்ளங்களைச் சமன் செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதியேயன்றி தங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான இடங்களில் மட்டுமே பேசி, கைதட்டு வாங்குவதல்ல என்பதை அமைச்சரும், கட்சி மேலிடமும் புரிந்துகொள்ளவேண்டும். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவி சூடுபிடிக்கத் துவங்கிய சில மணி நேரங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணே, “அமைச்சர் என்னை அடிக்கவில்லை, அவர் என் குடும்பத்தில் ஒருவர்” என விளக்கமளித்திருப்பது – விளக்கமளிக்க வைக்கப்பட்டிருப்பது – நகைச்சுவையின் உச்சம். இன்றைய முதல்வர் கடந்த ஆட்சிக்காலத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரை அடித்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு அழைத்து உபசரித்த காட்சி இப்போது நம் நினைவில் மீண்டும் வருகிறது. தன் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் அடிக்கும் உரிமையை எந்த அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது? ஒரு சாமானியப் பெண்ணைப் பொதுவெளியில் அலட்சியமாக நடத்தும் அரசியல்வாதிகள், இதுபோன்ற சாமானியர்களால்தான் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பொதுவெளியில் பெண்களை அராஜகமாக நடத்துபவர்கள் குடும்ப உறுப்பினர்களோ, மேன்மைதாங்கிய(!) மக்கள் பிரதிநிதிகளோ யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, முதலமைச்சர் உடனடியாக அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே, இது மக்களாட்சி என்ற நம்பிக்கையை உருவாக்கும். அதுமட்டுமல்லாது, இதுபோன்ற உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்களை மதிக்க வேண்டும் என்ற சிந்தனை இவரைப்போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உருவாகும். இந்த ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பதவி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இன்றி மக்கள் அனைவரையும் சமமாக மதிப்பதே உண்மையான சமூக நீதி. அதுவே உண்மையான திராவிட மாடல். எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதி அவமதிப்பது திராவிட மாடல் அல்ல; அது சட்ட விரோதம். ரமாதேவி இரத்தினசாமி

கரைசேராப் படகுகள் – 7

கரைசேராப் படகுகள் – 7

தொடர்கதை` வேகவேகமாக நான்கு கால் பாய்ச்சலில் வாய்க்கால் வரப்பெல்லாம் தாண்டி நடந்தார் செந்தாமரை. நான்கு வயல் தாண்டியதும் மாணிக்கம்  முன்னால் செல்வது தெரிந்தது. இங்கிருந்து சத்தமாகக் கூப்பிட்டார் செந்தாமரை;  “எலே மாணிக்கம்.. எலே மாணிக்கம்….” என்று கத்தினார். மாணிக்கம் திரும்பிப் பார்த்து அங்கேயே நின்றுகொண்டான். கிட்ட நெருங்கியதும் மாணிக்கத்தைப் பார்த்து, “ஏதோ விசயமா விரசா போற போலிருக்கு” – எங்கே  செல்கிறாய் என்று கேட்காமல் நாசூக்காகக் கேட்டார். “ஆமாண்ணே, பெரிய கருப்பன் வீட்ல மாடு பிடிக்கறதுக்காக மாம்பாக்கம் போறண்ணே” என்று மகிழ்வாகச் சொன்னான் மாணிக்கம். “நல்லதா போச்சு; நானும் என் சின்ன மவள கொடுத்த வீட்டுக்குத்தான் போய்கிட்டு இருக்கேன்” என்று சொல்லிவிட்டு வேகமாக அவனுடன் சேர்ந்து நடந்தார் செந்தாமரை. “ஏம்பா.. மாடு வாரத்துக்கு பிடிக்கப் போறயா? மொத்தமா பிடிக்கப் போறயா?” என்று கேட்ட செந்தாமரைக்கு, “விலைக்குதான்ணே.. நல்ல  கறவை மாடா வேணும்ணே” என்று சொல்லிவிட்டு, “ரெண்டு பொட்ட புள்ள ஆயிடுச்சி. அதுங்களுக்குக் கல்யாணம் காட்சின்னு பாக்கணும். காடு கழனியை மட்டும் நம்பி என்ன பண்றதுண்ணே? அதான் மாடு வாங்கலாம்னு” இழுத்தா மாதிரி சொன்னான் மாணிக்கம். “அதுவும் சரிதான்; நல்ல ரோசனைதான்” என்று சொல்லிக்கொண்டே தலையை அண்ணாந்து பார்த்தார். மணி 12 இருக்கும் என நினைத்துக் கொண்டு, “எலே.. இது கோணங்கி வீட்டுக் கிணறுடா; தண்ணி தேனாட்டம் இருக்கும்” என்று சொன்ன செந்தாமரை, படியில இறங்கி தண்ணீரைக் கையில் அள்ளிக் குடிக்க, மாணிக்கமும் இணைந்துகொண்டான். துண்டை ஈரமாக்கி  வெயில் தெரியாமல் இருக்க, தலையில போட்டுக் கொண்டு நடந்தார்கள் இருவரும். மாம்பாக்கம் வந்ததும், “அண்ணே, நீங்க சம்பந்தி வீட்டுக்கு போயிட்டு, கருப்பன் வீட்டுக்கு வந்து மாடு வாங்கித் தாங்கண்ணே” என்றான் மாணிக்கம். “வேலியில போன ஓணானை வேட்டியில விட்ட கதையாயிடுச்சே; வயல்ல வெள்ளாமை இருக்கு, இவன்கிட்ட வியாபாரம் பேசறது தெரிஞ்சா மரகதம் வைவாளே” என்று மனதிற்குள் புலம்பினார். ஆனால் வாய் “வரேன் மாணிக்கம்” என்றது. சம்பந்தி வீட்டுக்குப் போனதும், “தங்கச்சி.. தங்கச்சி…” என்று கூப்பிட்டார். “அடடே! வாங்கண்ணே… என்று வரவேற்றபடி புனிதாவின் மாமியார் பவுனு  வெளியே வந்தார். “புள்ள பெத்த தீட்டு உள்ள வரக்கூடாது; இங்கேயே உட்காந்துக்கறேன்” என்று துண்டை விரித்துப் போட்டு உட்கார்ந்தார் செந்தாமரை. “புனிதாவும் பேத்தியும் எப்படிண்ணா இருக்காங்க? எங்கண்ணா வயல் வேலை அதிகமா இருக்கு; கை உழைச்சாதான் கஞ்சிங்கற கதையா இருக்கு. இப்பகூட பொட்ட புள்ளைங்களும் அவரும் வயக்காட்டுலதான் இருக்காங்க. பேத்திய கூட வந்து பாக்க முடியல” என்று புலம்பினாள் பவுனு. “ஏழாம் காப்புக்கு குடும்பத்தோட வந்துடுங்கன்னு சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன்” என்றார் செந்தாமரை.   “ஆமாண்ணே, என் பேத்திக்குக் காப்பு செய்து போடணும். புள்ள பணம் அனுப்பவே இல்ல, வர்றது வயிறுக்கும் வாய்க்குமே பத்த மாட்டேங்குது” என்று பஞ்சப் பாட்டு பாடினாள் பவுனு. “அதனாலென்ன, காப்புதானே? நான் பார்த்துகறேன்” என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு, “மச்சான் வந்தா சொல்லிடுமா” நான் கிளம்பறேன் என்றார். “இருங்கண்ணே, சாப்பிட்டு போவீங்க” என்ற பவுனிடம்  “வேணாம்” என்று மறுத்துவிட்டுக் கிளம்பினார். வழியெல்லாம், ‘அறுவடைச் செலவையே எப்படி சமாளிக்கறதுன்னு தெரியலை; இப்ப காப்பு செலவு வேறயா?’ என்று கவலைப் பட்டுக்கொண்டே வந்தார், கருப்பன் வீட்டுக்குச் சென்று மாட்டைப் பல்லு பிடித்துப் பார்த்தார். மடியில  கை வைத்துப் பார்த்தார். “என்ன மாணிக்கம், விலை பேசிடவா?” என்று கேட்டார். “ஆமாண்ணே, பேசி முடிச்சிடுங்க” என்றான் மாணிக்கம். கருப்பனும் செந்தாமரையும் துண்டைப் போட்டு விரலைப் பிடித்து விலை பேசினார்கள். ரொம்ப நேரம் பேரம் பேசி, கடைசியாக மாணிக்கத்திற்குத் திருப்தியாக விலையை முடித்துக் கொடுத்தார். மாட்டை ஓட்டிகொண்டு கிளம்பி வந்தான் மாணிக்கம். வரும் வழியெல்லாம் “;அந்த ஐயனாரப்பன்தான் உங்களைப்போல வந்து, எனக்கு மாடு வாங்கி கொடுத்தாரு” என்று  செந்தாமரையைப் புகழ்ந்து கொண்டே வநதான் மாணிக்கம். வயக்காட்டில் எல்லாரையும் விரட்டி வேலை வாங்கிக்கொண்டு இருந்தாள்  மரகதம். “கதிரெல்லாம் சீக்கிரம் களம் போய்ச் சேரணும். உங்க ஆண்ட வந்தார்னா என்னை ஆஞ்சிடுவார் ஆஞ்சி” என்று விசனப்பட்டாள். “அடியே.. அருக்காணி.. வாய்க்கால் ஓரத்துல கொஞ்சம் காச்சற கீரைய பறிச்சுக் கொடேன்” என்று அதிகாரம் பண்ணினாள் மரகதம். “புள்ள பெத்தவளுக்கா கீரை?” என்று அதிர்ந்தாள் அருக்காணி. “வித்தாரக் கள்ளி விறகொடிக்கப் போனாளாம்; கத்தாழ முள்ளு கொத்தோட புடுங்குசாம்னு,  நடிக்காதடி. புள்ள பெத்தவளுக்கு எங்கனயாவது கீரை தருவாங்களாடி?” என்று அதட்டலாகச் சொன்னாள் மரகதம். கதிர் எல்லாம் களம் வந்து சேர்ந்ததும், கட்டெல்லாம் எண்ணி வைக்கோல் பிரி போட்டுக் கட்டி, மூலைக்கு மூலை அடையாளம் வைத்துவிட்டு  மாமனுக்காகக் காத்திருந்தாள் மரகதம். வயக்காட்டில் வேலை செய்த பெண்கள் எல்லாம் வாய்க்கால் தண்ணியில் குளித்துவிட்டு, முந்தானையைப் போட்டு அந்த வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இதைப் பார்ப்பதற்கு வானில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் நிலவு ஓடி ஓடிப் பிடிப்பது போல அழகாக இருந்தது. வயக்காட்டில் யாரும் இல்லாமல் தனியாக நின்று கொண்டிருந்தாள் மரகதம். தூரத்தில் ஓநாய் கத்தும் சத்தம் கேட்டது. ‘பச்ச உடம்புக்காரிக்கு சோறு போடணுமே; இந்த மனுசனை இன்னும் காணோமே’ என்று தவித்தாள். தூரத்தில் மாமன் மாடு பிடித்து வருவதைப் பார்த்ததும், குழம்பினாள் மரகதம். தொடரும் சாம்பவி சங்கர்

விராட பருவம்

விராட பருவம்

திரை விமர்சனம்வர்க்க பேதம், சாதி பேதம் இவற்றின் அடிப்படையில், ஆதிக்க வர்க்கமும் அதிகார வர்க்கமும் கைகோர்த்து, ஆண்டாண்டு காலமாக நடத்தி வரும் கொடுமைதான், அப்பாவி மக்களின் மீது பல்வேறு வகையில் தொடரும் தாக்குதல். சுதந்திரத்திற்குப் பின்பும், அதற்கான தீர்வு முழுமையாகக் கிடைத்திராத நிலையில், அவர்களின் இரட்சகர்களாக ஆங்காங்கே மக்களின் போர்க் குழுக்கள். அக்குழுக்களின் கொள்கை கோட்பாடுகள், செயல்முறைகள், எதிர்பார்க்கும் தீர்வுகள்,  நடைமுறைக்குச் சாத்தியமா என்பதெல்லாம், இன்னமும் விமர்சனத்துக்குரியவைதான். இது ஒருபுறம் இருக்க, இந்த யுத்தப் பின்னணியில் முகிழ்த்த அழகான காதல் கதைதான், வேணு உடுகுலா இயக்கத்தில்,  நெட்ப்ளிக்ஸ் தளத்தில் தமிழிலும் வெளியாகி உள்ள தெலுங்குத்  திரைப்படம்,  ‘விராட பருவம்’ . ஒரு கூத்துக் கலைஞனின் (சாய் சந்த்) மகள் வெண்ணிலா (சாய் பல்லவி). அப்பாவின் அன்பு மட்டுமல்ல, அவரது  பாடல்களும்கூட  அவளை வளர்த்தன.  சமூக அக்கறை கொண்ட கவிதைகளை எழுதிய ‘ஆரண்யன்’ மீது அவளுக்கு  ஈர்ப்பு. அப்பாவி கிராம மக்களின் மீது  அராஜகத்  தாக்குதலை ஏவிய காவலர்களைத் துவம்சம் செய்த ரவி தோழர்தான் (ரானா டகுபதி) ஆரண்யன் என்று அறிந்ததில், ஈர்ப்பு காதலாகக் கனிந்தது. அவளுக்கு அப்பாவும் அம்மாவும் (ஈஸ்வரி ராவ்) மணமுடிக்க முயற்சித்தபோது, அந்த உறவுக்கார மாப்பிள்ளையை (ராகுல் ராமகிருஷ்ணா) மறுதலித்து, வீட்டை விட்டு வெளியேறி,  ரவி குறித்த வெண்ணிலாவின் தேடல் துவங்குகிறது. அந்தப் பயணத்தின் இடையே சந்திக்கும் ரவியின் தாய் (ஜரினா வஹாப்), சமூகச் செயற்பாட்டாளர் சகுந்தலா டீச்சர் (நந்திதா தாஸ்), பின்னர் தோழர் பரதக்கா (பிரியாமணி), தோழர் ரகு (நவீன் சந்திரா), காவல்துறையின் அடக்குமுறை என இவை எல்லாவற்றையும் தாண்டி, வெண்ணிலாவின் தேடல் முற்றுப் பெற்றதா, முழுமையும் பெற்றதா என்பதுதான், இப்படத்தின் மொத்தக் கதை. மக்கள் போர்க் குழுவின் ஈடுபாட்டில், செயல்பாட்டிலான உறுதி, தீவிரத் தன்மை, ராணா டகுபதியின் நடிப்பில் தத்ரூபமாகப்  பிரதிபலிக்கின்றது. அதையும் தாண்டி மிளிருகிறது, சாய் பல்லவிக்குள் ஏற்படும் காதலின் பரிணாம மாற்றமும்,  அதன் வெளிப்பாடும்! ‘ஷாம் சிங்கா ராய்’ மைத்ரேயியைத் தொடர்ந்து, ‘ விராட பருவம்’ வெண்ணிலாவும், சாய் பல்லவியின் நடிப்புத் திறமைக்கு அணி சேர்ப்பாள். துணைப் பாத்திரங்களில் இடம்பெற்ற கலைஞர்கள், கிடைத்த வாய்ப்பில் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியுள்ளதன் வாயிலாக, இணைப் பாத்திரங்களாகவே நிமிர்ந்து நிற்கின்றனர். ‘அம்மாவோட வார்த்தை எனக்குப் பிடிவாதத்த கத்து கொடுத்துச்சுன்னா, அப்பாவோட பாட்டு,  வாழ்க்கைப் பாடத்த கத்துக் கொடுத்துச்சு’; ‘ஒரு சில விஷயத்துக்குக் காரணம் இருக்காது மாமா, காரியம் மட்டும்தான்’; ‘காதலோட ஆழத்தைப் புரிஞ்சுக்க முடியாதவங்க, உயிரோடு இருந்தாலும் பொணத்துக்குதான்  சமம்’; ‘ஒரு மனுஷன காதலிக்கறதுக்குக்  காரணம் வேணுமா டீச்சர்? பசி, தூக்கம், தாகம், கண்ணீர் இதெல்லாம் எப்படி உள்ளுக்குள்ள இருந்து, தானா வெளியே வருதோ, அதே மாதிரிதான் காதலும் டீச்சர்’; ‘அப்போ, காதல்ங்கறது சீர்கேடா, அப்போ ஜெனிய காதலிச்ச காரல் மார்க்ஸ், ஜியாங்க காதலிச்ச மாவோ, க்ருப்பாஸ்கய காதலிச்ச லெனின்.. அவங்களோடதும் சீர்கேடுதானா?’ (வெண்ணிலா) ‘அதிகார வர்க்கத்த கேள்வி கேட்டா போதும், தடா சட்டத்தில போடுவாங்க, அப்பாவிகள என்கவுண்டர் செய்வாங்க, தேர்தலுக்காக வாக்குறுதிகள அள்ளி வீசி அடிமை ஆக்குவாங்க… ஞாபகம் வச்சுக்கோங்க, இந்த இயற்கையோட மண்ணின் வளம் ஒங்களோடது’; ‘எழுது, எந்தப் பெண்ணுக்கு அநியாயம் நடந்தாலும், எனக்குக் கிடைத்த தண்டனைதான்  கிடைக்கும்’ (தோழர் ரவி) ‘மனித உரிமை பற்றிப்  பேசினா போதும், கொன்ன பொணம்கூடக் கிடைக்காத மாதிரி பண்ணிடறாங்க..’ (சகுந்தலா டீச்சர்) ‘நாமகூட,  மக்களுக்காகத்தான் வேலை செய்றோம். நாம வாழ்வதற்காக வேலை செய்கிறோம், அவங்க சாகறதுக்கும் துணிஞ்சு  போராடிட்டு இருக்காங்க’ (காவல்துறை அதிகாரி) -ஆங்காங்கு நறுக்குத் தெறித்தது போலான,  சிந்தனைக்குரிய வசனங்கள் ! ஆந்திரா, தெலுங்கானா, கேரளா எனப் பல மாநிலங்களில் அலைந்து திரிந்து அசத்திய, டேனி சான்சேஸ் லோபஸ், திவாகர் மணி ஆகியோரின் கண்கவர் ஒளிப்பதிவும், சுரேஷ் பொப்லியின்  கதையோட்டத்திற்கு நெருக்கமான இசையும், பட இயக்கத்திற்கு வலு சேர்க்கின்றன. குழந்தைக்குப் பெயர் வைத்து ‘லால் சலாம்’ சொன்ன நொடியில், துப்பாக்கி ரவையால் அந்தப் பெண் போராளியின் தலை சிதறிப் போவது, மயிர்க்  கூச்செறியும் காட்சி.  பாடல்கள் அத்தனையும் பொருள் பொதிந்தவை, இனிமையானவை ! ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு விறுவிறுப்பைக் கூட்டுகிறது. முற்றிலும் மாறுபட்டதொரு பின்னணியில், சாய் பல்லவியின் அழகும் நடிப்புத் திறமையிலுமான வண்ணத் தூரிகையால், இயக்குனர் வேணு உடுகுலா வரைந்த அழுத்தமான, அழகான ஒரு காதல் ஓவியம்தான், ‘விராட பருவம்’. மதிப்பெண் : 8/10 மது ராஜேந்திரன்

வாழ்க்கை ஒரு வட்டம்

வாழ்க்கை ஒரு வட்டம்

கடந்த 15 மாதங்களில் என்னுடைய பயன்பாட்டுக்கென அதிகபட்சமாக 400 – 500 ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல் போட்டு ஈருருளி ஓட்டியது போக, மீதி அத்தனை தூரங்களையும் மிதிவண்டியிலேயே பயணிப்பதன் அனுபவக் குறிப்புகள்: அலுவலகம் சென்று வருவது, இடையில் தேநீர் பருக, மதிய உணவுக்குச் செல்வது, அஞ்சல்/தூது அஞ்சல் அனுப்பச் செல்வது என, ஒரு நாளைக்கு சராசரியாக 20 கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலேயே சென்று வருகிறேன். வெளியூர் பயணங்கள், நகர எல்லைக்குள் பிறருடன் செல்வது, குடும்பத்தினருடன் ஆங்காங்கே சென்று வருவது, பெட்டிகள், மூட்டைகளை எடுத்துச் செல்வது போன்றவற்றிற்கு மட்டுமே மகிழுந்து. மற்ற நாட்களில் அதைத் தொடுவதே இல்லை. சில நாட்களில் ஆங்காங்கே ஒன்றிரண்டு வேலைகள் இருந்து, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டிய அழுத்தம் இல்லாத நாட்களில், நகர எல்லைக்குள் 40 கிலோமீட்டர் கூட மிதிவண்டியில் பயணிப்பதுண்டு. எப்போதாவது கொஞ்சம் சோம்பலாக இருக்கும் நாட்களில் நகருக்குள் சென்றுவர, ஒரு வேலையை முடிக்க நேரம் குறைவாக இருக்கும்போது, கட்டுச்சிப்ப அலுவலகங்கள் சென்றுவர, மகிழுந்து பராமரிப்புக்கு விட்டிருக்கும்போது என அரிதிலும் அரிதாக மட்டுமே ஈருருளியை எடுப்பதுண்டு. 2009-இல் வாங்கிய BSA SLR Photon Freedom மிதிவண்டிதான். சன்னமான சுமைதாங்கி உண்டு. கியர் கிடையாது. Ralco, Bedrock, Hartex போன்றவற்றில் டயர் போட்டாலும் நைலான் டயர் விரைவில் தேய்ந்து விடுவதோடு எதிர்பாராத நேரத்தில் ஓட்டையாகி விடுவதால் இரப்பர் டயரே சிறந்தது என்று தோன்றுகிறது. கடந்த ஒரு வருடத்தில் கோயமுத்தூர் நகர எல்லைக்குள், தோராயமாக 2500 – 3000 கிலோமீட்டர் மிதிவண்டியில் ஓட்டியிருந்தாலும், பயணத்தொலைவு, கலோரிகளை அளப்பதற்குச் செயலி எதுவும் பயன்படுத்தவில்லை; திறன்மிகு கைக்கடிகாரமும் (ஸ்மார்ட் வாட்ச்) பயன்படுத்துவதில்லை. எப்போதுமே ஒரு லிட்டர் தண்ணீர் புட்டியை சுமைதாங்கியில் வைத்திருப்பதுண்டு. நிதானமாக அளவான வேகத்தில் செல்வதால் கபால கவசம் அணிவதில்லை. எப்போதாவது வெயிலுக்குத் தொப்பி அணிவதுண்டு. இதுவரைக்கும் மற்ற வண்டிகள் இடித்து விழுந்தது, சறுக்கியது, நாய்கள் துரத்தியது என்று எந்தப் பிரச்சினையும் ஏற்பட்டதில்லை. பாதாசாரி, மிதிவண்டி, ஈருருளி, மகிழுந்து என எதுவாக இருந்தாலும் மற்றவர்கள் நம் மீது மோதக்கூடிய எதிர்பாராத விபத்தைத் தடுக்க வேண்டுமெனில் Be visible என்ற அடிப்படையை மறக்கக்கூடாது. ஒரு விநாடி யாரோ ஒரு ஓட்டுநர் கவனிக்கத் தவறுவதாலேயே விபத்து ஏற்படுகிறது. சைக்கிளை பைக் என்று விளிக்கும் நவயுக மிதிவண்டி வெறியர்கள், ஈருருளி ஓட்டுபவர்கள், மகிழுந்து ஓட்டுநர்கள் என எல்லோருமே மிகவும் அலட்சியமாக இருப்பது வாகனத்தின் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் எதிரொளிப்பான் (Retro Refelective Strip/Sticker) விசயத்தில்தான். இரவு நேரங்களில் be visible என்பது மிக முக்கியம். பாதாசாரி, மிதிவண்டி, ஈருருளி ஓட்டி வரும் ஒரு நபரை நான்கு சக்கர வாகனங்களில் உள்ள A piller ஓரிரு நொடிகள் மறைத்து blindspot-ஐ ஓட்டுநருக்கு உண்டாக்கக் கூடியது. கணிசமான ஓட்டுநர்கள் அலைபேசியில் பேசுவது, உடனிருப்பவர்களுடன் தீவிரமான உரையாடலில் ஈடுபடுவது என வருகிறார்கள். குடிகார நாய்கள் வண்டி ஓட்டி வருவதும் நம் ஊரில் இயல்பானதாகிவிட்டது. இத்தகைய ஆபத்தான ஓட்டுநர்கள் தூரத்தில் உள்ள சின்னச்சின்ன அசைவுகளை எல்லாம் கவனித்து முகப்பு விளக்கின் dim, bright-ஐ மாற்றி மாற்றி அடித்துப் பார்த்தெல்லாம் வண்டி ஓட்டுவதில்லை. குத்து மதிப்பாக பிரேக்கையும், ஆக்சிலரேட்டரையும் மிதித்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்காக நாம் அன்றாடம் reflective jacket போட்டும் வாகனம் ஓட்ட முடியாது. தினமும் இரவு வீடு திரும்புவபவர்களுக்கு மிதிவண்டியுடன் வரும் எதிரொளிப்பான் போதாது. நாமே சிவப்பு நிற 3M எதிரொளிப்பான் ஸ்டிக்கரை முன்னும் பின்னும் ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டியதுதான் (முறைப்படி பார்த்தால் முன்புறம் வெள்ளை நிற எதிரொளிப்பான் மட்டுமே இருக்க வேண்டும். இருந்தாலும் சிவப்பு அல்லது மஞ்சள் பட்டையை ஒட்டுவதில் தவறில்லை). இரு சக்கரங்களுக்கும் முழுமையான Mud guard இல்லாத மிதிவண்டிகளை அன்றாடம் வேலைக்குச் செல்பவர்கள் பயன்படுத்தவே முடியாது. சாலைகளில் திடீரென சாக்கடை ஓடும், மழை பெய்த பின் மணிக்கணக்கில் தண்ணீர் வந்துகொண்டே இருக்கும், வண்டியில் அடிபட்ட நாய் அல்லது பூனையின் உடல் சாலை முழுவதும் ஒட்டியிருக்கும். கண்ட இடத்தில் எச்சில் துப்பி வைத்திருப்பார்கள்; சில இடங்களில் வாந்தி எடுத்து வைத்திருப்பார்கள். எவ்வளவு பார்த்துப் பார்த்து ஓட்டினாலும் சில இடங்களில் ஒன்றுமே செய்ய முடியாது என்ற நிலையில் காலை இரண்டையும் தூக்கிக்கொண்டு நேராக விட வேண்டியதுதான். அப்போதுதான் இரும்பு mud guard-இன் அருமை புரியும். காற்றில் ஆடிக்கொண்டே வரும் பிளாஸ்டிக் mud guard இருக்கும் மிதிவண்டிகளில் அவ்வப்போது எதிரொளிப்பானை mud guard மறைத்து விடுகிறது. இதை அறியாமல், ஆபத்தை உணராமல் பலர் இரவு நேரங்களில் செல்கின்றனர். சக்கரத்தின் கம்பியில் மாட்டியிருக்கும் ஆரஞ்சு வண்ண எதிரொளிப்பான் வில்லைகள் மிக அற்புதமாக வடிவமைக்கப்பட்டவை. அதன் முக்கியத்துவம் தெரியாத பலர் அவற்றைத் துடைப்பதே இல்லை; உடைந்துவிட்டால் புதியது மாட்டுவதும் இல்லை. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அவற்றை கழட்டிவிட்டு புதியது மாட்டுவது அவசியம். சுமைதாங்கியும், இரும்பு mud guard-உம் இல்லாத நவயுக மிதிவண்டிகளை அன்றாடப் பயன்பாட்டுக்கு வைத்திருப்பது சவாலான செயல். நமக்குப் பயன்பட வேண்டிய பொருளே நமக்கு சுமையாக மாறிவிடக்கூடாது என்பது என் கருத்து. Gear உடைய, suspension வைத்த மிதிவண்டிகளின் இயல்பான பயன்பாடு பற்றித் தெரியவில்லை. கோயமுத்தூர் போன்ற சமதளமான நகரத்தில் அவற்றால் என்ன பயன் என்று நானறியேன். பஞ்சாங்கத்தைப் பார்த்து செவ்வாய் கிரகத்துக்கு இராக்கெட் விடுவதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். Gym-க்கு car-இல் வந்து நின்றுகொண்டிருக்கும் cycle-ஐ ஓட்டி கலோரிகளை எண்ணுவதை ஜீரணிக்கவே முடிவதில்லை. பல இடங்களுக்கும் நான் மிதிவண்டியிலேயே செல்வதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் சிலர் மிதிவண்டிக்கு மாறினார்கள். ஆனால் ஓரிரு மாதங்களில் அதைக் கைவிட்டுவிட்டு பழையபடி ஈருருளிக்குத் திரும்பிவிட்டனர். தனிப்பட்ட விருப்பம், தன்னூக்கம், ஈடுபாடு என்பதைத் தாண்டி அதற்கான முக்கிய காரணம் அவர்களது மிதிவண்டி டயர். அன்றாடப் பயன்பாட்டுக்கான மிதிவண்டியில் டயர் சன்னமாக இருக்க வேண்டும். நம் மக்கள் பெரிய button கொண்ட MTB அல்லது மிக சன்னமான track டயர் உள்ள ஒன்றை எந்தவிதமான யோசனையும் இல்லாமல் வாங்குகின்றனர். காதணிபாடி மாட்டி பாட்டுக் கேட்டுக்கொண்டே ஒருநாளும் சாலைகளில் சென்றதில்லை. அவ்வாறு செய்வது நமது உயிருக்கே ஆபத்தாக முடியக்கூடியது என்பதோடு இசையை அவமதிக்கும் செயல். வெளியூர் செல்லும்பொழுது மிதிவண்டியை பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள bike stand-களில் நிறுத்தி விட்டுச் சென்றுவிடுவதால் இப்போதெல்லாம் வீட்டிலிருந்து சென்று வரும் taxi செலவும் இல்லை. நாளொன்றுக்கு 20 ரூபாய் நிறுத்தக்கட்டணம் மட்டுமே. வெயில் நேரத்தில் செல்வது பழகிவிட்டால் ஒன்றுமே தெரியாது. வியர்வை வந்தாலும் அலுவலகம் சென்றவுடன் பத்து நிமிடங்களில் இயல்பாகி விடுகிறது. சட்டை அழுக்காவதும் இல்லை. மழை நின்ற அடுத்த சில நாட்கள் சாலைகளில் உள்ள சேறு, சகதி காய்ந்து புழுதியாக பறக்கும். அதுவும் முகக் கவசம் அணிவதால் பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் தலை முடி முழுவதும் புழுதியாக இருக்கும். அப்படியே சீவினால் சீப்பு நிறம் மாறுவது தெரியும்! Traffic jam என்ற பிரச்சினை ஒருபோதும் மிதிவண்டிக்காரர்களுக்குக் கிடையாது. ஈருருளிகளே செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து மொத்தமாக நின்றுவிட்டாலும் தூக்கித் தோளில் வைத்துக்கொண்டு நடந்து சென்று பத்து மகிழுந்துகளைத் தாண்டிய பிறகு இறக்கி வைத்து எப்போதும் போல ஓட்டிச் செல்லலாம். இதைவிட இன்னும் குறைவான நுகர்வுடைய minimalist வாழ்க்கை முறைக்குச் செல்ல மூன்று கிலோமீட்டருக்குக் குறைவான தூரத்தை நடந்து மட்டுமே செல்வது என்ற இலக்கை 2023-க்கு செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறேன். ஆர். எஸ். பிரபு

மகா மகா சாணக்கியன்

மகா மகா சாணக்கியன்

“தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட – இழிவாய்க் கருதப்பட்ட மக்கள், அதாவது தீண்டத்தகாதோர் –  கீழ் சாதியார் – ஈன சாதியார் – சூத்திரர் என்பனவாகிய, ‘பிறவி இழிவும் – பிறவி அடிமைத்தனமும், சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி, பிரவாகமும், வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கை கொண்டு, அதில் இறங்கி வேலை செய்தவர், அவ்வேலையில் அவர்பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு விரோதி; ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி; ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலிகளுக்கு விரோதி! இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான  நிலையில், நெருப்பின்மேல்  நின்றுகொண்டு வேலை செய்வதுபோல், வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் – இலக்கியமாகவும் விளங்கினார்.” இவ்வளவு அடைமொழிகளையும், அர்த்த மிக்க சொல்லாடல்களையும் தந்தை பெரியார் அவர்களால் பொழிந்து எழுதப்பட்டது யாருக்கு என்றால், பானகல் அரசர் என்று கூறப்படும் பனங்கண்டி இராமராய நிங்கர் அவர்களுக்குத்தான்! தந்தை பெரியார் நெஞ்சத்தில் ஆழமாகக் குடிகொண்ட இந்தப் பெரு மகனாரின் பிறந்தநாள் இந்நாள் (சூலை 9, 1866). பெருஞ்செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் முன்னோர்கள் ஆந்திராவின் பானகல்லு எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். அதன்பின் காளஸ்திரியில் குடியேறினர். காளஸ்திரி அரசர் குடும்பத்தோடு மண உறவு கொண்டவர்கள். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்தவர் – சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர். 1912 முதல் 1915 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு முத்திரையைப் பொறித்தவர். டாக்டர் சி. நடேசனார் அவர்களால் தொடங்கப்பட்ட திராவிடர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நீதிக் கட்சியின் வேர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். 1919ஆம் ஆண்டில் பார்ப்பனர் அல்லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி, பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் வாதிட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் பானகல் அரசர் அங்கம் வகித்தார். 1920ஆம் ஆண்டில் சென்னை மாநில முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். வழக்குரைஞர் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். உடல் நலக்குறைவு காரணமாக சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் பதவியிலிருந்து விலகியபோது, பிரதம அமைச்சராகப் பதவியேற்றார். 1923ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதம அமைச்சர் ஆனார். இவர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் பெற்ற உரிமைகளும், வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் அசாதாரணமானவை. 1) 1921ஆம் ஆண்டில் முதல் வகுப்புவாரி உரிமைச் சட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) இயற்றப்பட்டது.  2) பஞ்சமர், பறையர் என்ற பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி திராவிடர் என்று அழைக்கப்படுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 3) தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக ‘லேபர் கமிஷனர்’ என்ற தனி அதிகாரிகள் நியமனம். 4) ஆங்கிலேயர் வசமிருந்த சென்னை மாநில மருத்துவத் துறை இந்தியர் மயமாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது. (நீதிக்கட்சி ஆங்கிலேயர்களுக்குத் துணை போனது என்று வாய்க் கூசாமல் பேசுவோர்க்கு இது காணிக்கை)  5) சென்னைப் பல்கலைக்கழக சட்டம்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. 6) கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தலைமை ஆசிரியர்களின் அதிகாரத்தில் இருந்தது.  பெரும்பாலும் அவர்கள் பார்ப்பனர்களாக இருந்ததால், பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரிகளில் நுழைவு என்பது தடையாக இருந்தது. இதனை மாற்றி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு என்று தனிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. 7) மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது (இந்தக் கால மருத்துவர்களுக்கு இந்த வரலாறு தெரிய வேண்டும்). 8) பார்ப்பனர்களின் கொட்டமாக இருந்து வந்த இந்துக் கோயில்களின் சொத்துகளைக் காப்பாற்ற, இந்து அற நிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (மத விஷயங்களில் அரசு தலையிடுகிறது என்று சத்தியமூர்த்தி அய்யர் போன்ற தலைவர்கள் போட்ட கூச்சல் கொஞ்ச நஞ்சமல்ல! நீதிக்கட்சிக்காரர்கள் பிராமணர்களை மட்டுமல்ல; கடவுளையும் அழிக்கக் கிளம்பி விட்டனர். மதத்தை அழிக்க முனைந்து விட்டனர் என்று முரட்டுக் கூச்சல் போட்டனர்). 9) நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவும் திட்டம் – தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கு வழி செய்யப்பட்டது. 10) சென்னையில் தியாகராயர் நகர் என்ற விரிந்த பகுதியை உருவாக்கிய வரும் இவரே! “மகா மகா சாணக்கியன்” என்று பார்ப்பனர்களால் கருதப்பட்டவர் பானகல் அரசர். தனது திரண்ட செல்வத்தைப் பொது வாழ்வுக்காகக் கொட்டியவர். தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். பானகல் அரசர் மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய மிக நீண்ட அறிக்கை – பானகல் அரசரின் அருமையையும், சாதனையையும் என்றென்றைக்கும் பறைசாற்றும்! வேறு எந்தத் தலைவருக்கும் இவ்வளவுப் பெரிய அறிக்கையை தந்தை பெரியார் வெளியிட்டதில்லை. ‘திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது?’ என்று கேட்பவர்கள் அதன் சாதனைகளை அறியாதவர்களே! நீதிக்கட்சி அடிகோலிய கட்டுமானத்தின்மீதுதான் இன்றைய வளர்ச்சிகள் எல்லாம் நிமிர்ந்து நிற்கின்றன என்பதுதான் உண்மை. குறிப்பாக, சமூகநீதி என்பது இன்றைக்கு இந்தியா முழுவதும் உயிரோட்டமாக – ஒடுக்கப்பட்ட மக்களின் அடிநாதமாக இருக்கிறது.  இந்திய அரசமைப்புச் சட்டமே அங்கீகரிக்கிறது என்றால் அதற்கான ஆசான் நீதிக்கட்சியே! நீதிக்கட்சியே!! ‘மகா மகா சாணக்கியன்’ என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட பானகல் அரசரின் பிறந்த நாளில் அந்தப் பெருமகனாரை மிகுந்த நன்றியுணர்வுடன் நினைவு கூர்வோம். சமூகநீதிக்கு அறை கூவல்கள் புறப்பட்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பானகல் அரசர் என்ற பெருமானின் உணர்வுகளை, தந்தை பெரியார் கொடுத்துச் சென்ற போராட்டக்  குணத்தோடு முன்னெடுப்போம்! சமூக நீதிக்கான சவால்களை முறியடிப்போம்! வாழ்க பானகல் அரசர் என்ற பெம்மான்! கி.வீரமணிதலைவர்,திராவிடர் கழகம்9-7-2016சென்னை பானகல் அரசரின் 156 ஆம் பிறந்தநாள் இன்று! ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பானகல் அரசரின் 150 ஆம் பிறந்தநாளில் வெளியிட்ட அறிக்கை இது.

கரைசேராப் படகுகள் – 6

கரைசேராப் படகுகள் – 6

சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் குழந்தையைக் கொஞ்சிய செந்தாமரை, கயிற்றுக் கட்டிலைத் தலைமேல்  தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் விளக்கைக் கொளுத்திப் பிடித்துக்கொண்டு, களத்து மேட்டுக் காவலுக்குக் கிளம்பினார். “அம்மா… நான் காவலுக்குக் கிளம்பறேன்”  என்ற செந்தாமரையின் குரல் கேட்டு, “டேய்… நேத்து எத்தன தள டா அறுத்தீங்க? எத்தனை மூட்டை தேறும்?” என்று பட்டம்மா  ஆர்வமாய்க் கேட்டார். “அரிகராம் மேடும் அரசமர தளையும் அறுத்ததுமா. என்ன, அரிகராம் மேடு பத்து மூட்டையும் அரசமரம் எட்டு மூட்டையும் தேறும். கூலிக்குதான் என்ன பண்றதுன்னு தெரியல. குப்புசாமி ரெட்டி  நெல்லா கொடுக்கலாம்னு சொல்றாரு. நான் பணமா  கொடுக்கலாம்னு யோசிக்கறேன்” என்று அம்மாவிடம்  அனைத்தையும் கொட்டினார் செந்தாமரை.  இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த மரகதம், “இதே விசயத்த நம்மகிட்ட சொன்னா  கேட்டுக்க மாட்டோமா..? ஆம்பளங்கற  கவுரதி  குறைஞ்சிடுமோ?” என்று மனதிற்குள்  பொருமினாள்.  “மரகதம், வீட்டை பத்திரமா பாத்துக்க. புழக்கடை பக்கம் ராத்திரில போக வேணாம். கதவை அழுத்தி தாப்பா போடு”  என்று  எச்சரிக்கை செய்துவிட்டு, போருக்குச் செல்வதுபோல  கட்டிலைக் கம்பீரமாகத் தலையில் வைத்துக்கொண்டு  செந்தாமரை கிளம்பினார். அந்த சமயத்தில் கோழி விற்பவன், பெரிய கூடையில் கோழிக்குஞ்சுகளை அடைத்து தலைமேல் தூக்கிக்கொண்டு, கையில் லாந்தர் எடுத்துக்கொண்டு வந்தான். செந்தாமரை அவனிடம், “நீ எந்த ஊரு பா? வியாபாரம் எப்படிப் போகுது?” என்று பேச்சுக் கொடுத்து, அவனோடு பேசிக்கொண்டே களத்துமேடு வந்து சேர்ந்தார். தூரத்தில்  விளக்கு வெளிச்சம் தெரிந்தது.   “யாருப்பா அது?” என்று அதட்டலாக ஒரு கத்தல்  வந்தது. கத்தியது  குப்புசாமிரெட்டி. “மச்சான் நான்தான் செந்தாமரை” என்று பதிலுக்குக் கத்தினார். “ஏய் செந்தாமரை..  உனக்கு கீழண்டை  மாணிக்கம் வயல்ல  மணிலா போட்டிருக்கான். நாலு கொடி புடுங்கிட்டு வா; சுட்டு சாப்பிடுவோம்”  என்று அதிகாரம் பண்ணினார் குப்புரெட்டி. செந்தாமரையும்  கொஞ்சம் கொடி பிடுங்கி எடுத்துக்கொண்டு வந்து, இரண்டு களத்துமேட்டுக்கும் நடுவில் போட்டு இடுப்பில் சொருகி வைத்திருந்த தீப்பெட்டியை எடுத்துக் கொளுத்தினார். “மச்சான் ஒரு கொடிமட்டும் கையில அகப்படாம, வழவழன்னு புடுங்கவே முடியலை மச்சான்” என்று கடுப்பாகக் கூறினார் செந்தாமரை. மணிலா கொடியைத் திருப்பிவிட்டு கொளுத்திக் கொண்டிருந்த குப்புசாமி, திடீரென்று சிரித்தார். கையில் கொம்பு வைத்துக்கொண்டு கொளுத்திய கொடியைப் புரட்டிப் போட்டு  சிரித்துக் கொண்டே, “செந்தாமரை, உனக்கு எத்தனை நாளா பாம்பு கறி சாப்பிடணும்னு ஆசை?” என்று கேட்டார். “க்குவா… வாந்தி வருது. பாம்பு கறியா..?” என்று குமட்டினார் செந்தாமரை. “பின்ன, மணிலா கொடிகூட பாம்பு சேர்த்து பிடிச்சி வந்திருக்க? நாம அதையும் சேர்த்து சுட்டுகிட்டு இருக்கோம்” என்று சொன்னார் குப்புரெட்டி. இருட்டில் மணிலா கொடிக்கும் பாம்புக்கும்  வித்தியாசம் தெரியாமல், பாம்பைப் பிடித்துக் கொண்டு வந்துவிட்டதை உணர்ந்த செந்தாமரை, குப்பு ரெட்டியோடு சேர்ந்து சிரித்தார். குடும்பக்  கதையைப் பேசிக்கொண்டு  களத்து மேட்டில்  இருவரும் படுத்துத் தூங்கினார்கள். சூரியன் உச்சந்தலையைப் பிடித்து இழுத்ததும், எழுந்து மோட்டரைக் கிளப்பிவிட்டு, வேப்பங்குச்சியை வாயில் வைத்துக் கொண்டே   வயக்காட்டைச் சுத்திவந்து  அண்டைவெட்டி, மடைமாற்றி, குளித்துவிட்டு, களத்துமேடு வருவதற்கும் எட்டு மணி சங்கு கூவறதுக்கும்  சரியாக இருந்தது. மரகதம் அதிகாலையிலேயே எழுந்து  அருக்காணி கொடுத்துவிட்ட பிஞ்சு அவரைக்காயில்  கால் கிலோ பூண்டைக் கொட்டி நல்லெண்ணெயில் முக்கி, குளிசெலவு போட்டு  நல்ல மணமா அவரைப்பிஞ்சு வதக்கலும் சுடச்சுட சாதமும் புனிதாவுக்குக் கொடுத்தாள். கருப்பட்டி காபி போட்டு மாமியாருக்கு கொடுத்தாள். இன்று சற்று அசந்து தூங்கியதில், கன்றுக்குட்டி ஊட்டிவிட்டது. மரகதத்தால் பால் கறக்கமுடியவில்லை. மரகதம் தூக்குசட்டியில் கெட்டிக் கூழும், புதுசா வெள்ளையா இருக்கற நெத்திலிக் கருவாடு, மொச்சை, கத்தரிக்காய், வாழைக்காய், உருளை, முருங்கை, சொரக்காய் எல்லா காய்கறிகளையும்  போட்டு சும்மா தகதகன்னு மின்னுகின்ற  நெத்திலி கருவாட்டுக்  குழம்பும்  எடுத்துக்கொண்டு வயலுக்கு வந்தாள். ஒரு கை தலையில் இருக்கும் கூழ்  அண்டாவைப் பிடித்துக்கொண்டிருக்க, தோளில் செந்தாமரையின் சட்டையைப் போட்டுக்கொண்டு, ஒரு கையில் தூக்குச் சட்டியைத் தூக்கிக் கொண்டு வயல் வரப்பில்  மரகதம் நடந்துவரும் அழகில்  மயங்கி, சூரியனும் கூடவே ஓடி வருகிறான். அதற்குள்  ஆட்கள் எல்லாம் கதிர் அறுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  செந்தாமரை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே, “மாமா.. ஏழாம் காப்புக்கு சம்பந்தி வீட்டுக்கு சொல்லணும்” என்று இழுத்தாள் மரகதம். “கூறு கெட்டவளே, அறுவடை நடக்குது. இப்ப போயி,,,” என்று கருவாட்டுக் குழம்பை நக்கிச் சாப்பிட்டுக் கொண்டே சொன்னார் செந்தாமரை. “அதான்.. நான் இருக்கேனுங்க.. இதோ இருக்குது  மாம்பாக்கம். வயலில் குறுக்கால போனா பொழுது சாயறதுக்குள்ள வந்திடலாம்” என்று வழி சொன்னாள் மரகதம். செந்தாமரை மெளனமாக  சாப்பிட்டு முடித்து, சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார். பெண்கள் ஆண்களிடம் காரியம் சாதிக்கும் இரண்டு இடம், ஒன்று சாப்பிடும் இடம்; இன்னொன்று திருமணம் ஆனவர்களுக்குத் தெரியும். பெண்களைப் பெற்றவர்கள் செல்வதற்குச் சங்கடப்படும் இடம் பெண்ணைத் திருமணம் செய்து  கொடுத்த வீட்டிற்குத்தான். செந்தாமரையும் அதே சங்கடத்துடன்  மாம்பாக்கம் நோக்கி நடந்தார். தொடரும் சாம்பவி சங்கர்

பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?

பகல் கொள்ளைக் கூடாரமா பள்ளிக்கல்வித் துறை?

தமிழகப் பள்ளிக் கல்வியில் நாம் எதிர்பார்க்காத அளவில் பல மாற்றங்கள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இவையெல்லாம் கல்வியைச் சீர்திருத்தம் செய்து, அடுத்த கட்ட நகர்வை நோக்கி வளர்க்கும் செயல்முறைகளா என்று பார்த்தால், அதுதான் இல்லை. புதிய தேசிய கல்விக் கொள்கையை நாம் தொடர்ந்து விமர்சித்து வந்தாலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தன்னார்வலர்களைப் பள்ளிக்குள் அனுமதித்தல் என்ற கருத்துதான், தொடர்ந்து தமிழகத்தில் பல விதங்களில் செயல்பாட்டில் வந்துகொண்டே உள்ளது. இல்லம் தேடி கல்வியில் ஆரம்பித்து, தற்போது பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பிக்கக் கூறியுள்ள ஃபெல்லோஷிப் தன்னார்வலர்  திட்டம் வரை அனைத்து நிலையிலும் தன்னார்வலர்கள்தான்.   நிகழ்காலக் கல்வியை நாம் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்தால், இன்றைய பள்ளிக்கல்வி மிகுந்த ஆபத்தில் உள்ளது என்பதனை நாம் உணர முடியும். அதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பல மாவட்டங்களின் பள்ளிகளில் நிகழ்ந்த அதிர்ச்சி தரும் நிகழ்வுகளே. திருப்பூர், சேலம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில், வட இந்தியாவிலிருந்து வந்துள்ள சில நபர்கள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, கைவினைப் பொருட்கள் செய்யும் முறை குறித்து மாணவர்களுக்குப் பயிற்றுவித்து வருகின்றனர். இந்த நபர்கள் பள்ளிக்கு வருகிறார்கள் என்ற அறிவிப்பை, முதன்மைக் கல்வி அலுவலர்களே வெளியிட்டுள்ளனர். இதற்காக மாணவர்களிடம் பணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்று சுற்றறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், அவர்கள் கொண்டு வந்துள்ள புத்தகத்தை மாணவர்களிடம் விற்கும் வேலையைத் துரிதமாகச் செய்து வருகின்றனராம். ஐந்து மொழிகளில் அச்சிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தில் தமிழ் மொழியாக்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகக் குமுறுகிறார்கள் ஆசிரியர்கள். ஏற்கனவே, கொரோனா காலக் கற்றல் இடைவெளியால் வாசிக்கும் திறனில் குறைந்துள்ள மாணவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால், மாணவர்களின் மொழியறிவு முற்றாக அழிந்துவிடும் என்று புலம்புகிறார்கள். நாமும் பார்த்திருப்போம், நாம் படித்த காலத்தில்கூட, இதைப்போல ஒரு மனிதர் பள்ளிக்கு வருவார். மிகவும் நலிந்த பொருளாதாரப் பிரிவைச் சேர்ந்தவர் என்பது அவரது தோற்றத்திலேயே வெளிப்படும். காகிதத்தில் பூ, மரம், தொப்பி, மெழுகுவர்த்தி ஸ்டேண்டு போன்றவற்றைச் செய்து காட்டுவார். பின்னர், அதைப்போன்ற செயல்முறைகள் அடங்கிய ஒரு புத்தகத்தை மாணவர்களிடம் காண்பித்து, 2 ரூபாய் கொடுத்து விருப்பப்படுபவர்கள் வாங்கலாம் என்பார். ஒருசிலர் வாங்குவார்கள். அப்போது வந்தவர்கள் எல்லாம்   வேலை இல்லாத காரணத்தால், இதைப்போல ஒரு தொழிலை மேற்கொண்டு, அன்றாடம் பிழைப்பு நடத்த வருபவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில், நாம் புதிய தேசிய கல்விக் கொள்கையை வலிமையாக எதிர்த்து வரக்கூடிய சூழலில், நமது தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அலுவலர்கள் கையொப்பமிட்ட ஆணையுடன் இரண்டு வடநாட்டு மனிதர்கள் வட இந்தியாவிலிருந்து வந்துள்ளனர். ஹிந்தி மொழி மட்டுமே பேசக் கூடிய இவர்கள் தமிழ் மொழியே தெரியாமல், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று தங்கள் புத்தகங்களை விற்பனை செய்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து சமூக ஊடகங்களில், மாணவர்கள் மற்றும் அரசுப்பள்ளிகளின் நலனின் அக்கறையுள்ள ஆசிரியர்கள், தங்கள் எதிர்ப்புக்  குரலைக் கவலையுடன் பதிவு செய்து வருகின்றனர். இந்த 2022 – 2023 ஆம் கல்வி ஆண்டில் பள்ளிகளில், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குக் கற்பிக்கக்கூடிய பாடப்பிரிவேளைகளில் (Periods) மாற்றம் செய்துள்ளனர். அதில் தமிழ், ஆங்கிலம்,  சமூக அறிவியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் ஏற்கனவே  வழக்கில் இருந்த ஏழு பிரிவேளைகள் ஆறாகக்  குறைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ஒரு பிரிவேளையில் கல்வி இணைச் செயல்பாடுகள்  என்ற வகுப்புக்கான செயல்பாட்டை சேர்த்துள்ளனர். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் பள்ளிக் கல்வித் துறையில் இருந்து பெறப்பட்டு, பள்ளிகள் பின்பற்றி வருகின்றன. கல்வி இணைச் செயல்பாடுகளுக்காக  ஒதுக்கப்பட்ட பிரிவேளைகளில் செய்யக்கூடிய பணிகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டுதல்களைத் தந்துள்ளது.  காகிதம் மடித்தல், தொப்பிகள்  செய்தல் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருட்கள் செய்தல் என ஏராளமான பட்டியலைக் கொடுத்துள்ளது.  அதற்கான ஆசிரியர்கள் ஏற்கனவே பள்ளிகளில் இருக்கின்றனர். பெரும்பாலும் மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் அதற்கென்று  கலை  ஆசிரியர்கள், சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களே குழந்தைகளுக்கு நன்றாகச் சொல்லிக் கொடுக்க முடியும். ஆனால் அதை விடுத்து, பள்ளிக்குச் சற்றும் தொடர்பில்லாத வெளி நபர்களை பள்ளிக்கு உள்ளே அனுமதித்து செயல்முறைகள் வெளியிட்டு இருக்கின்றனர் கல்வி அலுவலர்கள், இதற்கு ஆணையர் கடிதமும் கூடுதல் பலமாம்.  மேலும்  கலை ஆசிரியர்களாக இல்லாத பிற ஆசிரியர்களும் சிறப்பாசிரியர்கள் இல்லாத பள்ளிகளிலும் கூட இச்செயல்பாடுகளை நேர்த்தியாகக் கையாள முடியும். காரணம்  இன்று இணையத்தில், வலையொலி (YOU TUBE)யில்  தேடினால் ஏராளமான காணொலிகள் கொட்டிக் கிடக்கின்றன. குழந்தைகளே காணொலியைப் பார்த்து மிக அழகாகக் கைவினைப் பொருட்களைச் செய்து வருகின்றனர். குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்துவதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும் என்றால், எந்த ஆசிரியரும் இந்தக் கல்வி இணைச் செயல்பாடுகள் பிரிவேளையை அணுகும்போது, குழந்தைகளுக்கு அவர்களாகவே  வழிகாட்டுவார்கள். ஏராளமான பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் இருக்கின்றது. அங்கும் காணொளிகளைக் காட்டிப் பயிற்சி தரலாம்.  எல்லாமே நம் கைக்குள் அடங்கி இருக்கிறது .குழந்தைகளது பெற்றோர்கள் பெரும்பாலும் அலைபேசிகளை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் அந்தச் செயல்பாடுகளின் இணையப்பக்கத்தை நாம் கூறினால் அவர்களாகவே தேடுவார்கள் அல்லது ஆசிரியர் அதைப் பார்த்து வந்து வகுப்பறையில் கற்றுத் தரலாம். இந்தச் சூழ்நிலையில்தான் தற்போது வட இந்தியாவிலிருந்து வந்துள்ள தன்னார்வலர்களை??!! அதாவது, வெளி நபர்களை முறையாகப் பள்ளிக்குள் அனுமதித்து, அவர்களுக்குப் புத்தகங்களை விற்கும் உரிமையையும் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சில மாவட்டங்களில் ஆணை மூலமாக வழங்கியுள்ளது தெரியவருகிறது. அவர்களுடைய ஆணையின் செயல்முறைக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள பார்வையில், ஆணையரின் கடித எண்ணையும் இணைத்துள்ளனர். இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது, தமிழக பள்ளிக்கல்வித் துறை வடமாநிலங்களில் இருக்கக்கூடிய தனிநபர்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரும் கூடாரமாக மாறுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இதனால், இங்கே பலன் அடைபவர்கள் யார்? என்ற கேள்வியும் எழுகிறது. சராசரியாக ஒரு பள்ளியில் சில நூறு புத்தகங்களை அவர்கள் விற்றாலும்கூட, தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் புத்தகங்களை விற்கும்பொழுது பல கோடி ரூபாய் பகல் கொள்ளை அடிக்கப்படும். இந்தத் தனி நபர்களுடைய முதலாளி யார்? எங்கிருக்கிறார்? அவர்களுக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கும் என்ன தொடர்பு? யாரோ சிலர் வருமானம் ஈட்டும் இடமாக தமிழகப் பள்ளிகளை மாற்றுவது ஏன்? இவற்றையெல்லாம் நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சந்தேகக் கண்ணோடு நோக்கவேண்டும். இத்தகைய செயல்பாடுகளை ஆசிரியர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது, பள்ளிகள் இது போன்ற வெளி நபர்களைக் கட்டாயமாக உள்ளே அனுமதிக்கக்கூடாது, அலுவலர்கள் உத்தரவு கொடுத்தாலும் அதை மறுப்பதற்கான உரிமை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உண்டு என்பதை உணர வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்கள் இதில் தலையிட்டு நிராகரிக்க முடிவு செய்ய இயலும்.   இவர்களைப் போன்ற வெளிநபர்கள் எதற்காக நம் பள்ளிகளை நாடி வரவேண்டும்? பள்ளிக்குத் தொடர்பில்லாத நபர்களைப் பள்ளிக்குள் அனுமதிப்பதால் குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பேற்கப் போகிறார்கள்? இதைப்போன்ற செயல்பாடுகளைக் கற்பிக்கப் பயிற்சியும் அனுபவமும் பெற்ற ஆசிரியர்கள் நம்மிடையே இருக்கின்றனர். இல்லையெனினும் நியமனம் செய்ய வேண்டியது அரசின் கடமை.  நமது ஆசிரியர்களுக்கு இல்லாத திறன் ஒன்றும் அவர்கள் எடுத்து வரவில்லை. ஆகவே, தன்னார்வலர்களைப் பள்ளிக்குள்  அனுமதிக்கும் புதிய தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கத்தையும் அதனைக் கொல்லைப்புற வழியே அனுமதிக்கும் தமிழக பள்ளிக் கல்வித்துறையின் செயல்பாட்டையும்  உறுதியுடன் நாம் நிராகரிக்க வேண்டும். சு. உமாமகேஸ்வரி 

அப்துல் கலாமின் மௌனம்

அப்துல் கலாமின் மௌனம்

சென்ற மாதம் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அறையைச் சுத்தம் செய்ய வந்தவர் வயதில் மூத்த ஒரு பெரியவர். ‘பெயர் என்ன?’ என்று கேட்டேன். ‘அப்துல் கலாம்’ என்றார். ‘கலாமின் பெயர் உங்களுக்கும்’ என்றேன். சிரித்துக்கொண்டார். ‘எவ்வளவு ஊதியம் வாங்குகிறீர்கள்?’ என்றேன். குறைவான ஊதியம் ஒன்று சொன்னார். ‘கட்டுபடியாகிறதா?’ என்றேன். ‘விலைவாசி ஏறிவிட்டது’ என்றவர், ‘சாதாரண மக்கள் பாடு மிகச் சிரமம்’ என்றார். நானும், இன்று காசுக்காக மக்கள் படும் சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘கேஸ் விலை கூடிவிட்டது’ என்றேன். அவரும் ‘ஆமாம் சார்’ என்று சொல்லிக்கொண்டே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘எல்லாம் இந்த மத்தியில் இருக்கிற மோடி அரசுதான்’ என்றேன். பேசியவர் அமைதியானார். ‘மோடியின் பொருளாதார, நிர்வாகச் சீர்கேடு’ என்று சொன்னேன். அமைதியாகவே இருந்தார். ‘என்ன ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறீர்கள்?’ என்றேன். ‘அதுதான் நீங்கள் சொல்லிட்டீங்களே சார்’ என்றார். ‘எல்லாம் இந்த மோடி அரசுதான் என்று, நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அதுபோல நீங்கள் ஏன் சொல்ல மாட்டேங்குறீர்கள்?’ என்றேன். ‘அதற்குக் காரணம் உங்களுக்கும் தெரியும் சார்’ என்று சொல்லிவிட்டு வேலையில் முனைப்பாக இருந்தார். என்னால் மோடி அரசுதான் காரணம் என்று வெளிப்படையாக மற்றவருடனான உரையாடலில் சொல்ல முடியும்போது, கலாம் என்கிற பெயரைத் தாங்கியிருக்கிற ஒரு மனிதரால் ஏன் அப்படிச் சொல்ல இயவில்லை? ஏன் அந்த அச்ச உணர்வு அவருக்கு ஏற்படுகிறது? வலிந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அச்ச உணர்வைத்தான் ஆகப் பெரிய ஆபத்தாக உணர்கிறேன். அரசின் அதிகாரத்தோடு இணைந்து, ஒரு பகுதி மக்களை அச்சத்தில் வாழும் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். சமுகத்தைப் பிளவுபடுத்தியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதிய முரண்பாட்டிலும்கூட, உரிமைகளைப் பறிப்பதைவிட உயிர்வாழ்வதற்கான அச்சத்தை உருவாக்குவதையே ஆகப் பெரிய ஆபத்தாகக் காண்கிறேன். ஏனெனில், இருத்தலுக்கே போராடும் மக்களிடம் உரிமைப் போராட்டம் என்பதற்கு வழியின்றிப் போய்விடும். எனவே, உரிமைப் பறிப்புக்காக அவர்கள் தனியே எதுவும் மெனக்கெட வேண்டியதில்லை. சாதியப் படிநிலையில், பார்ப்பனர்களைவிட சூத்திரர்கள் என்கிற சாதி இந்துக்கள், தங்களுக்குக் கீழ் இருக்கிற ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். 25 ஆண்டுகள் முடிந்தாலும் மேலவளவு படுகொலைகளை இன்று வாசித்தாலும் அச்சமாக இருக்கிறது; வெண்மணியும் கூட. க. பாண்டியராசன்

என்னைத் தொட்டால் உங்களுக்குத் தீட்டு

என்னைத் தொட்டால் உங்களுக்குத் தீட்டு

அது சுதந்திரத்திற்கு முந்தைய காலம். இங்கிலாந்தின் ஒரு வட்ட மேஜை மாநாடு. மேன்மை தங்கிய ஐந்தாம் ஜார்ஜ் வருகிறார். அவருக்கு இந்தியப் பிரதிநிதிகளை அறிமுகப்படுத்தும் படலம். His highness, இவர் இந்தியாவின் அம்பேத்கர், இவர் தமிழ்நாட்டில் இருந்து ஏ. டி. பன்னீர்செல்வம்.. என்று தொடர்ந்து வரும்போது, இவர் என்று அடுத்தவரைப் பார்க்க, அவர் இரு கைகளைப் பின்னால் கட்டியிருக்கிறார். அவருடைய கோட்டில் “தாழ்த்தப்பட்டவர்” என்று எழுதியுள்ளது. மன்னரை அவமதிக்கும் செயல் என்று உணர்ந்தே அவர் இதைச் செய்கிறார். அருகில் வந்த மன்னரிடம், நான் தீண்டப்படாதவன், என்னைத் தொட்டால் உங்களுக்குத் தீட்டுப்பட்டுவிடும்‘ என்று தைரியமாகச் சொல்கிறார். என்னவென்று விசாரித்த மன்னரிடம், எங்கள் நாட்டில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை இதுதான் என்று கூறி விளக்கம் அளிக்கிறார். யாராவது கீழே விழுந்தாலும் அதுதான் நிலைமை என்பதை விசாரித்து அறிந்த மன்னர், அவரிடத்தில் கோபம் கொள்ளாமல் புரிந்து கொள்கிறார். இவ்வளவு தைரியமாக மன்னரிடம் பேசிய அந்த மாமனிதர்தான் இரட்டைமலை சீனிவாசன். தாழ்த்தப்பட்ட மக்களுக்காகவும் சமூக சீர்திருத்தத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களில் மிகவும் சீனியர். அம்பேத்கர் பிறந்தபோது இவருக்கு 30 வயது. ஆனால் அதே அம்பேத்கருடன் இங்கிலாந்தில் நடந்த வட்ட மேஜை மாநாட்டிற்குச் சென்று வந்தவர். 1859 ஜுலை 7 அன்று செங்கல்பட்டில் இரட்டைமலை – ஆதிஅம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். கோவை கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த சீனிவாசன் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று விளங்கினார். இந்திய துணைக்கண்டத்தின் தாழ்த்தப்பட்ட மக்களில் இருந்து பட்டப்படிப்பை முடித்த முதல் பெருமைக்குரியவர், இரட்டைமலை சீனிவாசன். சிறு வயதிலேயே சமூக அமைப்பின் சமமின்மையில் வருந்தியவர், அந்த நிலையை மாற்றுவதையே தன் வாழ்க்கைக் குறிக்கோளாகக் கொண்டார். திராவிடர் கழகம் என்று தொடங்கி, திராவிட மகாஜன சபா என்று பெயர் மாற்றம் பெற்ற அமைப்பின் மாநாடு உதகையில் நடந்தபோது, தன் உறவினர் அயோத்திதாசப் பண்டிதருடன் இவர் இயற்றிய 10 தீர்மானங்கள் தமிழகத்தின் சமூக நீதிக்கான பாதையில் முதல் காலடியானது. அப்போதைய காலகட்டத்தில் விடுதலைக்காகப் பணியாற்றிக் கொண்டிருந்த காங்கிரஸ் மீதும், அரசியல் மீதும் நம்பிக்கையற்றவராகவே இருந்தார் சீனிவாசன். சக இந்தியரிடமே வேறொரு இந்தியன் சுதந்திரம் கேட்பது கேவலம் என்பார். இன்றும் அந்த அவலம் நீடிப்பதை நாம் அறிவோம்தானே! பறையன் என்ற பத்திரிக்கையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தினார். பெயர்க்காரணம் கேட்டபோது, ‘தன்னைத்தானே பெருமை பாராட்ட பறையர்கள் முன்வரும்போதுதான் அவர்களின் தன்னம்பிக்கை பெருகும்’ என்று பதிலளித்தார். அது சிறந்த பிரசாரப் பத்திரிக்கையாகத் திகழ்ந்தது. பறையன் இதழின் முதல் பிரதியை மதிப்புரைக்காக சுதேசமித்திரன் பத்திரிகைக்கு அனுப்பியபோது, அதன் ஆசிரியராக இருந்த சி.ஆர்.நரசிம்மன், அதனைக் கையால் தொடாமல் குச்சி வைத்து புரட்டிப் பார்த்தார் என்ற செய்தி, அக்காலத்தில் நிலவிய தீண்டாமையின்  நிலைமையை நமக்குச் சொல்லாமல் சொல்கிறது. கல்வியின் மூலம்தான் சமூக முன்னேற்றம் நிகழும் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. ICS என்னும் இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வு இங்கிலாந்தில் நடந்து வந்தது. அதை இந்தியாவிலும் சேர்ந்து நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரியபோது, அதை எதிர்த்து ஆங்கிலேய அரசுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு அவர் சொன்ன காரணம் கவனிக்கத்தக்கது. “இந்தியாவில் நடத்தினால் பிராமணர்கள் அதிகம் எழுதுவார்கள். மேலும் அவர்களுடைய சட்டங்கள், அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதை ஏற்பதில்லை. எனவே இங்கிலாந்தில் மட்டும் நடத்தினால் போதுமானது” என்று எழுதினார். இந்தியாவின் பிரச்சினைகளை இங்கிலாந்தில் நேரடியாகச் சொல்ல வேண்டும் என்று கிளம்பியவர், அவர் சென்ற கப்பல் தென்ஆப்பிரிக்காவில் நின்றதால் அங்கேயே இறங்கிக் கொண்டார். இவரின் ஆங்கிலப் புலமை காரணமாக நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் பணி கிடைத்தது. அங்கேதான் இவர் காந்தியைச் சந்தித்தார். இவருடைய நட்புதான் காந்திக்கு திருக்குறளையும், தமிழில் கையெழுத்து இடுதலையும் கற்றுத் தந்தது. பின்னொரு காலத்தில் இந்த நட்புதான் பூனா ஒப்பந்தத்தில் காந்தியுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடவும் செய்தது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பிய சீனிவாசன், நீதிக்கட்சியின் மேலவை உறுப்பினராகி அமைச்சராகிறார். இவர் காலத்தில் சிறப்பான தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டு ஆணைகள் ஆகியுள்ளன. பொதுக் கிணறுகள், பொதுச்சாலைகள், ஆலயங்கள் பயன்படுத்துவதில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் வேற்றுமை பாராட்டக்கூடாது, சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆணையாக்கப் பட்டது. ஆதி திராவிடர் என்ற பொதுப்பெயர் பல்வேறு பெயர்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. இரண்டாவது வட்ட மேஜை மாநாடு இங்கிலாந்தில் நடந்தபோது அம்பேத்கருடன் சேர்ந்து மாநாட்டில் கலந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாகப் பேசி, ஆங்கிலேயர்களிடம் ஒப்புதல் பெற்றார். இந்தியா திரும்பியவுடன் காந்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில், சமாதானத்திற்காகப் பெரும் பங்காற்றினார். பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டவர்களில் இரட்டைமலை சீனிவாசனும் ஒருவர். ஆங்கிலேய அரசாங்கத்திற்கு ஆதரவான நிலையே எடுத்தார் என்று ஒரு குற்றச்சாட்டு இவர் மீது வைக்கப்படுகிறது. ஆனால் இது ஒரு உத்தியாகத்தான் பயன்படுத்தப்பட்டது என்று தமிழகத்தின் சமூக சீர்திருத்தம் – ஒரு இருநூற்றாண்டு வரலாறு என்ற தன் நூலில் அருணன் கூறுகிறார். தன் இறுதி மூச்சு வரை தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த இரட்டைமலை சீனிவாசன், தன் 86 ம் வயதில் செப். 1945-ல் இயற்கை எய்தினார். இந்தியா சுதந்திரம் அடைவதை அவர் பார்த்துச் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் வராமல் இல்லை. கோவை பிரசன்னா

கரைசேராப் படகுகள் – 5

கரைசேராப் படகுகள் – 5

தொடர்கதை – சாம்பவி சங்கர் சூரியன் தத்தளித்து, தகதகத்துக் கிளம்பும் காலைப்பொழுது. அந்த ஓட்டு வீட்டு வாசலில் பெரிய வேப்பிலைக் கொத்து சொருகி இருந்தது.  பெரிய அகலமான பித்தளைச் சட்டியில் ஆலம் கரைத்து, அதில் வேப்பிலை, கரித் துண்டு, காய்ந்த மிளகாய் போட்டு வாசலில் அனைவரின் பார்வையில் படும்படி வைத்திருந்தனர். மரகதம் மூன்றாம் நாள் புனிதாவுக்கு சாதம் கொடுப்பதற்காக, அதிகாலையிலேயே எழுந்து, குளிசெலவு எல்லாம் மண் சட்டியில் வைத்துப் பொன்னிறமாக வறுத்து, அம்மியில் வைத்து ஒட்ட ஒட்ட அரைத்து எடுத்தாள். முதல்நாளே பட்டம்மாள் பாட்டி கால்கிலோ பூண்டை உரித்து வைத்திருந்தாள். அலமு பாட்டி, அவள் வீட்டுத் தோட்டத்தில் இருந்து பிஞ்சுக் கத்தரிக்காயைப் பறித்துவந்து மரகதத்திடம் கொடுத்து இருந்தார். நல்லெண்ணெய் நிறைய ஊற்றி, பூண்டைப் போட்டு, அதன் தலையில் கொஞ்சமாகப் பெருங்காயத்தைக் கொட்டி, நன்றாக வதங்கியதும் பிஞ்சுக் கத்திரிக்காயைப் போட்டு, நல்லெண்ணெயில் மூழ்க விட்டு, தட்டு போட்டு மூடி வைத்து வதக்கி, கத்திரிக்காய் வெந்ததும் அரைத்த குளி செலவு போட்டு சட்டியை மூடி வேகவைத்தாள் மரகதம். அந்த வாசனை தெருவில் செல்பவர்கள் அனைவரையும் சுண்டி இழுத்தது. “அடியே… மரகதம், அந்த கத்திரிக்காய் சட்டியில் சுடச்சுட சாதம் போட்டு எடுத்துட்டு வாடி…” என்று பட்டம்மா பாட்டி நாவில் நீர் ஊற சொன்னார். “பாரேன் இந்தக் கிழவிக்கு, அங்க புள்ளை பெத்தவ பசியோட இருக்கா. இங்கே இவங்களுக்கு சாப்பாடு கேட்குதாம்” என்று மாமியாரை மனதிற்குள் கிண்டல் அடித்துவிட்டு, தன் மகள் புனிதாவிற்குச் சுடச்சுட சாதமும் கத்தரிக்காய் வதக்கலும் சேர்த்து காலையில் 7 மணிக்கு உணவு கொடுத்தாள். இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த புனிதாவிற்கு, இந்தச் சாப்பாடு தேவாமிர்தமாக இருந்தது. அவசரமாக வேலை முடித்துக் கொண்டிருக்கும்போதே, “வயலில் ஆளுங்களுக்கு சாப்பாடு வேணும்” என்று செந்தாமரை மரகதத்தை அவசரப்படுத்தினார். நேற்று  செய்து வைத்த கூழில் இருந்து ஒரு அண்டா கூழைக் கரைத்து, அதற்கு ஊறுகாய் மிளகாயும் நார்த்தங்காய் ஊறுகாய், மாங்காய் ஊறுகாயை ஒரு டப்பாவிலும் எடுத்துக்கொண்டாள். கூழ் அண்டாவை, தலையில் சும்மாடு வைத்துத் தூக்கிக்கொண்டாள். மரகதமும் செந்தாமரையும் மாறி மாறி அந்தக் கூழ் அண்டாவை ரெண்டு பர்லாங்கு  தூரத்தில் உள்ள வயலுக்கு எடுத்துச் சென்றனர். வயலில் அறுவடை வேகமாக நடந்து கொண்டிருந்தது. அங்கு இருந்த பாதாம் மரத்திலிருந்து கிடுகிடுவென்று வாதாம் இலைகளைப் பறித்த மரகதம், இலைகளை வேகவேகமாக தொண்ணை ஆக்கி, அங்கு இருந்தவர்களுக்கு எல்லாம் கூழ் ஊற்றிக் கொடுத்தாள். பக்கத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த அருக்காணியையும் கூப்பிட்டுக் கூழ் கொடுத்தாள் மரகதம். மரகதம் வயல் வேலை செய்து கொண்டிருந்தாளே தவிர, ‘பட்டம்மா பாட்டியும் அலமு பாட்டியும் புனிதாவையும் குழந்தையையும் நன்றாகப்  பார்த்துக்கொள்வார்களா?’ என்ற கவலையிலேயே அவள் மனம் இருந்தது. மதியம் ரெண்டு மணி இருக்கும். வீட்டு வாசலில் தபால்காரர் வந்து, “ஐயா… ஐயா…” என்று கத்திக் கொண்டிருந்தார். வாசலில் வேப்பிலை சொருகவில்லை என்றால், அவர் நேரடியாக உள்ளே சென்று இருப்பார். வேப்பிலையைப் பார்த்ததும் தயங்கி, வெளியிலேயே நின்று கொண்டிருந்தார். ஆடி அசைந்து, திருவாரூர் தேராட்டம் பட்டம்மா பாட்டி வெளியில் வந்தார். “யார் அது? நம்ம ராமுவா? வாப்பா… என்ன வெளியிலேயே நின்னுட்ட?” என்று அக்கறையுடன் கேட்டார் பாட்டி. “வெளியில்தான் வேப்பிலை வேலி போட்டுட்டீங்களே, அப்புறம் எப்படி உள்ளே வர்றது?” என்று அங்கலாய்த்தார் கடுதாசி கொண்டுவந்தவர். “பாட்டி இந்தாங்க, இதை பத்திரமாக உங்க பிள்ளைகிட்ட கொடுத்துடுங்க” என்று கூறி, கவரைப் பாட்டியிடம்  கொடுத்துவிட்டுச் சென்றார். பாட்டி அதை எடுத்து வந்து, பத்திரமாக சாமி மாடத்தில் முருகர் படத்திற்குப் பின்னால் வைத்தார். ‘யார் கண்ணிலும் படாமல், பத்திரமாக என்னிடமே இரு’ என்று படத்திலிருந்த செந்திலாண்டவன் சிரித்தார். வயக்காட்டில் அறுவடை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. ஆண்களும் பெண்களும் கதிர் அறுத்து, அரி அரியாக  வைத்தனர். அதை மரகதம், செந்தாமரை, இன்னும் சிலர் கட்டுக் கட்டாகக் கட்டினர். சில கட்டுகள் கட்டி முடித்ததும், ஆண்கள் அந்தக் கதிர்களைத் தலையில் வைத்துக்கொண்டு களத்து மேட்டுக்குச் சென்றனர். கதிர்களை அறுத்து முடித்ததும் பெண்களும் அந்தக் கதிர்களைத்  தலையில் சுமந்து, களத்து மேட்டுக்குக் கொண்டு வருவார்கள். இதில் அழகு என்னவென்றால், ஆண்கள் வேகமாக வாய்க்கால் வரப்புகளில் நடந்து களத்து மேட்டுக்கு வந்துவிடுவார்கள். பெண்கள் பாவம், தட்டுத்தடுமாறி வரப்புகளில் மேடு பள்ளங்களில் கால்வைத்து நடந்து வருவது நடனமாடிக்கொண்டே வருவதுபோல அழகாக இருக்கும். இந்த ஆண்கள் கட்டுகளைக் களத்தில் போட்டுவிட்டு, பாதி வழியில் வந்து தன் தங்கையோ,  மனைவியோ,  அம்மாவோ,  அத்தை மாமன் மகளோ, தூக்கி வரும் கட்டுகளை அவர்கள் மாற்றிக்கொள்வார்கள். அந்தக் கதிர் மாற்றும் அழகு, வானத்தில் அலை அலையாகச் சென்று கொண்டிருக்கும் மேகங்கள், கண்ணிமைக்கும் நேரத்தில் எதிர்த் திசையில் வரும் மேகத்துடன் மோதிக் கலைந்து செல்வது போல இருக்கும். கதிரெல்லாம் களம் வந்து சேர்வதற்குள், சூரியன் கீழ் வானம் வந்து சேர்ந்துவிட்டான். அவசர அவசரமாகக் கதிர்க் கட்டுகளை அடுக்கி வைத்துவிட்டு, ஆட்கள் எல்லாரும் அங்கேயே கரண்ட் கொட்டாயில் மோட்டார் கிளப்பி குளித்துவிட்டு, துணிகளைக் காய வைத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தார்கள். பெண்கள் மார்பையும் உடலையும் மூடுவது போல, ஒற்றை சேலைத் தலைப்பை ஏற்றிக் கட்டிக்கொள்வார்கள். இன்னொரு தலைப்பை மறுகையால் பக்கவாட்டில் தூக்கிப் பிடித்தது  போல நடந்து வருவார்கள். கடலில் பாய்மரக் கப்பல், பாய்மரம் கட்டி கடலின் அலைகளில் ஆடி அசைந்து நகர்வது மாதிரி இருக்கும், பெண்கள் சேலை உலரவைத்து நடந்து வரும் அழகு. அவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு, செந்தாமரையும் மரகதமும் பேசிக்கொண்டே வந்தார்கள். “இன்னும் அறுவடை செய்ய வேண்டிய தளைகள் 4 துண்டு இருக்கு. இன்னைக்கு இரண்டு துண்டுதான் முடிஞ்சிருக்கு. இதுவே சின்ன தளைகள்தான்” என்று வேலையின் கடினத்தை வருத்தமாகக் கூறினார் செந்தாமரை. “ஆமாங்க, குழந்தையையும் பார்த்துக்கொண்டு, வயல் வேலைகளையும் பார்க்க முடியலைங்க” என்று அலுப்புடன் கூறினாள் மரகதம். “அடி போடி, எள்ளு எண்ணெய்க்குக் காயுதாம், எலிப்புழுக்கையும், ‘ஆமாம், கூட சேர்ந்து நானும் காயுறேன்’னு சொல்ற மாதிரி இருக்கு நீ பேசறது. நான் கூலி கொடுக்க பணத்துக்கு என்ன பண்றதுன்னு புலம்பிக்கிட்டு இருக்கேன். இவ என்னடான்னா வேலை அதிகமா இருக்குன்னு புலம்பறா”   என்று குறைபட்டார் செந்தாமரை. “ஆமா, பொம்பளைங்க வேலை செய்யறது ஆம்பளைங்களுக்கு பெரிய விஷயமாகவே தெரியாதே” என்று மனதுக்குள் புலம்பினாள் மரகதம். வேக வேகமாக வீட்டிற்குள் வந்த மரகதம், அவசரமாய் ஒரு குளியல் போட்டுவிட்டு, அதைவிட அவசரமாக மிளகு பூண்டு தட்டிப்போட்டு ரசம் வைத்து, அதற்குத் தொட்டுக் கொள்வதற்கு உடைத்த கடலையும் பூண்டும்  சேர்த்துத் துவையல் செய்தாள். புனிதாவிற்கு வறுத்த ரொட்டியைக் காபியில் ஊறவைத்து மாலை 6 மணிக்கே பட்டம்மா பாட்டி  கொடுத்திருந்தார். வேலைகளை முடித்துவிட்டுக் குழந்தையிடம் சென்று, கொஞ்சிக் கொண்டிருந்தார் செந்தாமரை. வீட்டு வேலைகளை முடித்துவிட்டு இரவு முழுவதும் மரகதம்தான் அந்தப் பச்சை சிசுவைப் பார்த்துக்கொள்வாள். புனிதாவால் எழுந்து உட்காரக்கூட முடியாது. இன்னும் சரியான சத்தான ஆகாரம் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. குழந்தை பிறந்த ரணம் குடல் முழுக்க உள்ளாகவே இருக்கும். அந்த ரணம் ஆறுவதற்கு ஒரு வாரமாவது ஆகும். அது வரைக்கும் பார்த்துப் பார்த்துதான் சாப்பிடணும். புனிதா வெளியில் அனைவரிடமும் சிரித்துப் பேசிப் பழகினாலும், அவள் மனம் முழுவதும் அவள் கணவனின் நினைவே நிறைந்திருந்தது. “என்னதான் வேலை அதிகமாக இருந்தாலும், நான் எப்படி இருக்கேன்னு விசாரித்து ஒரு கடுதாசிகூடப் போட முடியாதா?” என்று புனிதாவிற்குக் கோபம் லேசாக எட்டிப் பார்த்தது. “நொண்டியாகக்கூட இருந்துவிடலாம்; திருமணத்திற்குப் பிறகு ஒன்டியாக மட்டும் இருக்கக்கூடாது” என அடிக்கடி பாட்டி சொன்னது புனிதாவிற்கு நினைவுக்கு வந்தது. ‘இவள் வாழ்வின் சதியில் எனக்கும் பங்கு’ என்று செந்தில் ஆண்டவரும் அவருக்குப் பின்னிருந்த கடுதாசியும் சிரித்துக் கொண்டிருந்தது. தொடரும் சாம்பவி சங்கர்

ஜெயிக்க விரும்பியவர்

ஜெயிக்க விரும்பியவர்

சிறுகதை  –  களந்தை பீர்முகம்மது அவர் போகும்போது ஒருமுறை பார்த்துக்கொண்டார்.  அரசமரத்தையும் அதைச் சூழ்ந்திருக்கும் பீடத்தையும்.  அழகாகவும் அடர்ந்த நிழலாகவும் வந்து தலைசாய் என்று சொல்கிற விதமாகவும் நல்ல அரச மரத்தடி.  அந்த மரம் அக்கிராமத்தின் வயதைக் கூறுகிறதுபோல.  அதை ரொம்பவும் அடர்த்தியாகப் பார்த்தார்.  பக்கத்தில் குளம் கிடக்கிறது.  தண்ணீர் அலைவுறும் பாளமாக ஒளிர்கிறது.  சிற்றலைகள் மீன்குஞ்சுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கலாம்.  விளையாட்டு விளையாட்டாயிருக்க,  மேலே ஊர்ந்துசெல்லும் தென்றலோடு இசைந்து அலைகள் ஏதோ பாடல் பாடுகின்றன.  அதனால்தான் இத்தனை குஷாலான அலையடிப்புகள்.  குளம் ஊர்ப்பரப்புக்கு மேலே நான்கைந்து அடி உயரமாக விரிந்துகிடப்பது தெரியவருகிறது புலமாடத் தேவருக்கு. நடந்துகொண்டே இருந்தார்.  ஆனால் அரச மரத்தடியில் உட்கார்ந்து சுகமாகத் தலையைச் சாய்த்துத் தூங்கிவிடுகிறார்.   காற்றும் அலைகளும் இவ்வளவு குதூகலமாய் இருக்கும் கிராமக் குளத்தில் இதை யாரும் ரசிக்காமலோ அனுபவிக்காமலோ எங்கெங்கிலும் அலைந்து திரிகிறார்கள்.  அவர் தன் உடம்பை அங்கே கிடத்தியபடியே நடந்துகொண்டிருக்கிறார்.  திரும்பித் திரும்பிப் பார்க்கிறார்.  தான் அங்கே கட்டைபோலச் சாய்ந்துகிடப்பது தெளிவாகத் தெரிகிறது.  கொஞ்சம் புரள்வதும் ஏதோ புலம்புவதுமாக.  அந்தக் காற்றும்  பீடமும் தனக்கு எப்பவும் வேண்டும் என்று விரும்புகிறார்.  உள்மனது அவரை அறியாமல் சொல்லிவிட்டது, ‘நீ அங்கே செல்வாய் கொஞ்ச நேரத்தில்.’ காற்றின் இதம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.  வயல் பசுமை கிறங்கச் செய்தது. இவள் இந்தச் சொகுசில்தான் இந்த ஊரிலேயே இருக்கிறாளா என்று கேட்டுக்கொள்கிறார்.  கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆள் நடமாட்டம் இல்லை.  அதனால் கொஞ்சம் சத்தமாய்க் கேட்டார், ‘பாதவத்தி, வந்த ஜோருல இப்படியே ஒக்காந்திட்டியே.  என்னை ஒருமுறை கூடவா நீ நெனச்சுப் பாக்கல?’ முன்பு எப்போதோ வந்தது.  மாப்பிள்ளை ஜோர் காலம்.  அதற்குப் பிறகு அவர் இங்கு வரவில்லை.  தலையாரி வேலையில் சாத்தியப்படாது.  ஆனால் அவர் வள்ளியம்மாவிடம் சொல்லிக்கொண்டது இன்னும் கெத்தாக, ‘இந்த மாரி அங்கேயும் இங்கேயும் அலையுற ஜோலி மயிரெல்லாம் இங்கே நடக்காது.  வாய மூடிட்டுக் கெட.’  அன்று முடங்கிவிட்டாள்;  ”அவரு வந்துதான் கிழிக்கப்போறமா?”.  தன்னைப் பார்க்க வந்த அம்மைகிட்டேயும் ஐயாகிட்டேயும் எவ்வளவோ குறை சொல்லி ஒப்பாரி வைத்திருக்கிறாள்.  ஒப்பாரியோடும் முணங்கல்களோடும் வருஷங்களைக் கடத்திவந்தாள்.  புலமாடன் புலமாடத் தேவராக அறியப்பட்ட ஒருநாள் கலவரக்காரி மாதிரி அவரை எதிரே நிற்கவைத்துக் கேள்வி கேட்டாள்.  தலையாரித் தேவர் பயந்துபோய், ‘ போய்த் தொல.’  வள்ளியம்மாள் அந்த ஒரு வாய்ப்பைப் பன்மடங்கு வாய்ப்பாய்ப் பெருக்கினாள்,  வரவும் போகவும்.  என்ன பொல்லாத தூரமா?  ஒரு பதினைஞ்சு கிலோ மீட்டர்.  கணபதி பஸ் போகிற நேரத்தைக் கணக்குவைத்து நேராக ரைஸ்மில் பக்கம்போய் நின்னா போதும்.  வள்ளியம்மை கைகாட்ட வேண்டிய அவசியமில்லை.  அவள் நிற்கிறதைப் பார்த்து பக்கீர் ராவுத்தர் பஸ்ஸை உடன் பிரேக் போட்டு நிறுத்துவார்.  வள்ளியம்மை பூஞ்சை உடம்புக்காரி.  காற்றுபோல ஒரு சொடுக்கொலியில் பஸ்ஸில் ஏறுவாள்.  பஸ் நின்றதும் தெரியாது; புறப்பட்டதும் தெரியாது. ஒருமுறை புலமாடத் தேவர் நூறு, இருநூறடி தூரத்துக்குள் வந்துகொண்டிருக்கும்போதே கணபதி பஸ்ஸை நிறுத்தி ஊருக்கு ஏறிப் போயிட்டாள்.  ‘எளா, ஒன் வீட்டுக்காரரு வாரார, நீ கண்டுக்காம ஏறிட்டே!” ’ஆங்… வந்தா போவாரு…’ இதைப் பார்த்தார் தேவர்.  அவருக்கு ஆத்திரம் வந்து அவள் ஆக்கிவச்ச சோற்றைப் பூனைக்கு அள்ளிக்கொட்டினார்;  அப்புறம் பஸ்ஸ்டாண்டுக்கு வந்து கிட்டுப்பிள்ளை கிளப்பில் உட்கார்ந்து முட்டைகோஸும் தேநீரும் சாப்பிட்டது ஞாபகத்தில் உண்டு. புலமாடத் தேவர் பீடியை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டார்.  புகை வெளியே வருவதற்குள்ளேயே காற்றில் காணாமல் போயிற்று.  ‘அவதான் அப்படிப் போனா.  இந்தப் படுபாவி இசக்கியுமில்லா அவக்கூட சேந்துக்கிட்டான்.  அவன் எப்படி இந்த ஒண்ணுக்குமில்லாத ஊர்ல வந்து கெடக்கான்?  அவன் சேக்காளிப் பயலுவள் எல்லாம் நம்மகிட்ட எத்தனை முறை கேட்டுட்டானுவோ.  அந்த மீரான் பய கடுதாசி போட்டதா வேற சொன்னான்.  ஆனா இசக்கி பதிலே போடாம ஒக்காந்துட்டான்.  இப்படி சேக்காளிப் பயலுவளயே கைவிட்டுட்டுப் போறவன் எப்படி நம்மள ஏறெடுத்துப் பாப்பான்.” புலமாடத் தேவர் தன் மகனிடம் நாசுக்காகப் பேசி கையோடு இழுத்துட்டுப் போயிரணும் என்று மனசுக்குள் திட்டம் வைத்திருந்தார்.  ’அவன் இங்கே கிடந்து என்ன வேல பாப்பான்.  வயல்ல இறங்கி வேல பாக்குறப் பயலா அவன்?  மூதி….அறிவுகெட்ட மூதி….அவன் அம்மையோடு சேந்துசேந்து அவனுக்கும்லா மூளை மழுங்கிப்போச்சு.’  இத்தனைப் போக்காக அவர் இசக்கியை நினைத்துக்கொண்டிருந்தாலும் சரஸ்வதியைப் பற்றி நினைக்கவே இல்லை.  அவ பெரிய ராங்கிக்காரில்லா.  நல்ல நாள்லேயே நாழிப் பால் கறக்காதவ. இப்போ அவ அம்மைக்குத் துணையா இருக்குறதா சொல்றானுங்கோ.  நம்ம வீட்டுக் காரியம் நமக்குத் தெரியல்ல.  ஊருக்காரப் பசங்கெல்லாம் ஏதோ திருதராஷ்டிரன் கணக்கா எல்லாத்தையும் நேரில பாத்த மாதிரி நம்ம வீட்டுக் கதைய பேசுறானுவோ.’ அவர் வடக்கே நோக்கிப் போகப்போக அவரைக் கடக்கும் வண்டிகளும் வடக்கே இருந்து வருவனவாகத்தான் இருந்தன.  தெற்கே இருந்து யாராவது மாட்டுவண்டி, சைக்கிள்ல வந்தாலும் அவங்களைத் தொத்திக்கிட்டு ஊருக்குள்ளாற போயிரலாம்.  இந்தக் காற்றும் பச்சை வயலும் இல்லேன்னா இந்த வெயில்ல அலையிறது ரொம்பக் கஷ்டமாக ஆகியிருக்கும்.  அந்த மரத்தடியில் தலையைச் சாய்த்திருக்கலாம்.  பிள்ளையார் துணையிருக்கிறார்.  அவர்கிட்டே கதையச் சொல்லிப் பிரார்த்தனையும் செஞ்சிருக்கலாம். ஊரில் அந்த சேக்கு பையன் இருக்கிறான்.  இசக்கியோட முக்கியமான சேக்காளி அவன்.  சேக்கு நிறைய கதை எழுதிக்கிட்டிருக்கான்னு சொல்வானுவோ.  அவன் என் கதையை எழுதிப் பரிசு வாங்கியிருக்கானாம்.  அதைக் கேள்விப்பட்ட நாளிலே இருந்து அவனைக் கண்ணால பாக்கக் கூட முடியல்ல.  என் கதையை அவன் எப்படி எழுத முடியும்?  இப்பத்தான நான் இப்படி லோல்படுறேன்.  இதெல்லாம் படுறதுக்கு முன்னாலேயே ஒருத்தன் எப்படி என்னோட கதைய எழுத முடியும்?  ரொம்பவும் அக்குறும்பால்ல இருக்கு! ‘ஜெயிக்க விரும்பியவர்’ என்ற தலைப்பில் சேக் கதை எழுதினான். அது முக்கியமான சிற்றிதழில் பிரசுரமானது.  அந்த மாதமே அந்தக் கதைதான் சிறந்த கதை என்று தேர்ந்தெடுத்திருந்தது அந்த இலக்கிய அமைப்பு.  ‘ஜெயிக்க விரும்பியவர்’ கதாநாயகரான புலமாடத் தேவர் மிகவும் அணுக்கமாக இருந்தார் சேக்கிற்கு.  அவன் எழுதிய கதை அவனாகக் கற்பனை செய்து எழுதியதல்ல.  இந்தக் கதையில் இப்படி ஓர் அம்சம் இருக்கு என்று எடுத்துக் கொடுத்தவள் மைமூன் பாத்திமா.  இவன் கண் முன்னே வாழும் புலமாடத் தேவரைப் பற்றித் தன் சொந்த மண்ணில் பார்க்க துப்புக்கெட்டு, சென்னையில் மைமூன் பாத்திமாவைப் பார்க்கப்போன இடத்தில் அவள் சொல்லித்தான் சேக்கிற்குத் தெரிந்தது. மைமூன் பாத்திமா தெளிவாகச் சொன்னாள், ‘ஐயோ பாவம் புலமாடத் தேவரு.  அவரு பொண்டாட்டி அவரை வேண்டாம்னு சொல்லிட்டாளாமே,” அவன் கொஞ்சமாய் முழித்தான்.  அந்த முழிகண்டு மைமூன் பாத்திமா மறுபடியும் சொன்னாள்,” உனக்குத் தெரியாதாக்கும் இத்தனை நாளா?  இந்த முழி முழிக்கிற? நீயெல்லாம் என்னடே கதை எழுதுற?” மைமூன் பாத்திமா இப்படிக் கேட்டதும் சேக்கிற்குக் கடும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.  அவன் எதிர்பார்க்கவில்லை;  மைமூன்பாத்திமாவும் எதிர்பார்த்திருக்க முடியாது.  அவளை அடக்க விரும்பி ஆங்காரமாகக் கட்டிப்பிடித்து முத்தங்களாகக் கொடுத்தான்.  அவனுக்கு ஆச்சரியம் என்னவென்றால், மைமூன்பாத்திமா எந்த ஆட்சேபணையும் சொல்லாமல் அவன் கட்டுக்குள் கிடந்தாள்;  எனக்கென்ன என்கிற மாதிரி வசப்பட்டிருந்தாள். இன்னும் ரொம்ப நேரமாய் அவன் தழுவித்தழுவித் தனக்குள் புதைத்துக்கொண்டிருந்தான்.   மைமூன்பாத்திமா எத்தனை பெரியவள்?  இவனுக்கு உண்மையிலேயே அவளை என்றேனும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கவா செய்தது?  அப்புறம் இருவரும் அவரவர் பேச்சைத்தான் பேசி வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.  அவளுடைய ஈர்ப்பான முலைகள் இன்னும் நல்ல திமிரோடு அவன் மார்பில் குத்திக்கொண்டிருந்தது அவனுக்குக் கிளர்ச்சியை ஊட்டியது.  இவளும் தன் உடம்பு அழுந்திவிட்ட இந்த ஒல்லிப்பிச்சான் சேக்கின் உடம்பை ஆச்சரியமாக நோக்கினாள். ‘சேக்கு நீ இந்தக் கதையை எழுது…என்னா….நல்லா வரும் பாரு.  உனக்குப் பரிசும் கிடைக்கும்டே.’  இந்தப் பேச்சை ரொம்ப ரசித்தான். புலமாடத் தேவரை அவரறியாமல் மனம் பின் தொடர விட்டான்.  அவன் இதற்குள்ளாக தேவரைப் பற்றிச் சில விஷயங்கள் தெரிந்துகொண்டிருந்தான். அதையெல்லாம் லெட்சுமணன் சொன்னான்.  இந்த லெட்சுமணன் ஒரு கூறுகெட்ட பய.  இவன் சொல்லை எவ்வளவுக்கு ஆதாரமாகக் கொள்வது? ஊசலாடினான் சேக்.  இருந்தாலும் இப்போது இது ஓர் இடைக்காலக் கொள்முதல் போல கைவசம் இருக்கட்டும் என்று மனத்துக்குள் பூட்டிவைத்தான்.  எவ்வளவு கூறுகெட்ட பயலாயிருந்தாலும் ஒரு கதைக்கு எல்லா தகவல்களும் தேவைதானே? புலமாடத் தேவர் தன் பாரியாள் வள்ளியம்மையைத் தேடிப் போகப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது;  அவருக்கும் தெரியாது.  வயிற்றுப்  பசியும் உணர்ச்சிப் பசியும் அவரை மொய்த்தன.  கிட்டுப்பிள்ளை கிளப்பில் மூணு இட்லியும் ஒரு தேநீரும் சாப்பிட்டு வேலைக்காகவில்லை.  நின்றுகொண்டிருந்த கணபதி பஸ்ஸில் ஏறிக்கொண்டார்.  பல கற்பனைகள்.  வள்ளியம்மா ரொம்பவும் கோபப்பட்டுப் பேசுவாள்.  இம்முறை நாம் சாந்தமாகப் பதில் பேச வேண்டும்.  பாவி மட்டை, சும்மா ஊருக்குப் போயிட்டு வர்ரேன் என்று சொல்லிவிட்டுப் போனவள்தானே,  இப்படியா போய் தன் ஊருக்குள் இருந்துவிடுவது?  கோபத்தை ஆற்றிய பின்னராவது தன் வீட்டுக்கு வந்திருக்கலாமே!  அப்படியென்ன ஊரு உலகத்தில் யாருக்கும் இல்லாத கோபம்? வாயில் வைக்கிற மாதிரி சாப்பாடு செஞ்சாயென்னா என்று கேட்டது ஒரு தப்பா?  அல்லது இதுபோக வேறு எதையாவது என்னையறியாமலேயே நான் சொல்லிட்டேனா?  இல்லே, பழைய கோவத்தையெல்லாம் திரட்டிக்கிட்டு ஒரேயடியா காலிபண்ணிப் போயிட்டாளோ? அவள் போய்விட்டு நாளைக்கு வருவா, நாளை மறுநாளைக்கு வருவா என்று எதிர்பார்த்திருந்தார் புலமாடத் தேவர்.  ஒரு வாரம் ஆகவும் சந்தேகம் வந்தது; அச்சம் வந்தது.  பிறகுதான் தெரிந்தது அவளுடைய ட்ரங்குப் பெட்டியில் எதுவும் இல்லையென்று.  சரஸ்வதியுடைய துணிமணிகளும் ஒன்றும் கிடையாது.  ”எவ்வளவு தந்திரம் இந்தப் பொட்டச்சிகளுக்கு?”.  இவை மனசுக்குள் ஓடஓட வேலையில் கவனம் சிதறித் தேவர் வாங்கிக் கட்டிக்கொண்டதும் உண்டு.  யாரிடத்திலும் துயரைப் பகிர முடியாமலும் போச்சு.  வழக்கமாக இராத்திரி நேரத்தில் அந்த போஸ்ட் ஆஃபீஸ் திண்ணையில கொஞ்சம் குளுமையை அனுபவிச்சுக்கிட்டு, சோவாரிக்கிட்டு,  ஊர்க்கதையைப் பேசிக்கிட்டு இருந்த அந்தப் பொழுதெல்லாம் நரகமாப் போச்சி.  அவர் உடம்பு அங்கு இருக்கும்;  மனதைக் காணோம் என்று ஆகிவிடும்.  சேதுப்பிள்ளை, பேச்சியா பிள்ளை, மூக்கன் செட்டியார், அதாவுல்லா, பாலையா கோனார் இப்படியாக எல்லாரும் சேர்ந்து கிடந்து பேசிக்கிட்டிருந்தப்போது தன்னால் ஒரு வரியும் ஆற்ற முடியாமல் போயிற்று.  பேந்தப் பேந்த அங்குமிங்கும் முழிப்பார்.  தன் முன்னே இப்படி ஊர்க்கதையும் சினிமாகதையும்

கரைசேராப் படகுகள் – 4 

கரைசேராப் படகுகள் – 4 

தொடர்கதை குழந்தை பெற்றெடுத்த எந்த உயிரினமாக இருந்தாலும் அகோரப் பசியில் இருக்கும். சில உயிரினங்கள் தன் குட்டியையே சாப்பிட்டுவிடும். அப்படி ஒரு பசியில்தான்  நாக்கு வறண்டு தண்ணீர் கேட்டாள் புனிதா. ஆனால் இந்தப் பட்டம்மா கிழவி அதைப் பிடுங்கிவிட்டதே என்ற கோபத்துடன், “ஏன் அத்தை, தண்ணி டம்ளர புடுங்கறீங்க?” என்று  கேட்டாள்  மரகதம்.  “பொசக்கெட்டவளே, புள்ள பெத்த உடனே தண்ணி குடிச்சா ஜன்னி வச்சிடும்” என்று ஆதங்கத்துடன் சொன்னார் பட்டம்மா. “இப்ப என்ன பண்றது? புள்ளைக்கு நாக்கு வறளுதே” என்று விசனப்பட்டாள் மரகதம். “சர்க்கரைத் தண்ணிய தொட்டு, பச்ச மண்ணு நாக்கிலும் புனிதா நாக்கிலும் தடவுங்க” பட்டம்மா பக்குவமாகச் சொன்னார். தாமரைமீது மோகம் கொண்டு ஆதவன் அதிவேகமாய் வரும் இளங்காலைப் பொழுது. ஆதவனைக் கண்ட வெட்கத்தில் ஆம்பலும் அல்லியும் மறைய, குளங்களில் தாமரைகள் பூத்துக் குலுங்கின.  மரகதம்  சாணத்தால் வாசல் மெழுகி, கோலம் போடாமல் விட்டாள். அப்பதான் தீட்டு வீடுன்னு பார்ப்பவர்களுக்குத் தெரியும். ஏழு நாளுக்கு அந்த வீட்டுடன் அன்னம் தண்ணி புழங்க மாட்டாங்க.  வீட்டு வாசலில் “அம்மா… தாயீ..” என்ற குரல் கேட்டு வெளியில் வந்த மரகதம், வாசலில் வண்ணாத்தி இருப்பதைப் பார்த்தாள்.  “வா சொக்கி.. ஏன் நேற்று துணி எடுத்துட்டு வரல?” என்று சற்று அதட்டலுடன் கேட்டாள். “வந்தேன் தாயீ, திண்ணையில பெரிய வூட்டு அய்யாமாருங்க எல்லாம் இருந்தாங்க, அதான் போயிட்டேன். பாப்பாவுக்கு பொண்ணு பொறந்திருக்காமே, ரொம்ப சந்தோசமுங்க”  என்று வெள்ளந்தியாகப் பேசினாள் சொக்கி.  “ஆமா சொக்கி, தீட்டு எடுக்கற அன்னிக்கு உனக்கு வெத்தல பாக்கு தரேன். இப்ப பாப்பா துணிய தனியா எடுத்துட்டுப் போ” என்று உள் அறையைக் காட்டினாள் மரகதம். “எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கு. புள்ள பெத்த வீடும் கல்யாண வீடும் ஒன்னுன்னு சொல்வாங்க. வாரவங்க போறவங்களை கவனிக்கணும்; புள்ள பெத்தவளை கவனிக்கணும். காடு கழனிய பாக்கணும். இந்த மனுஷன் வேற, ரெண்டு நாள்ல அறுவடைன்னு சொல்றாரு. ஆளுங்களுக்கு கூழாக்குவேனா? புனிதாவ கவனிப்பேனா? ஆத்தாடி, தலைய சுத்துதே!” என்று புலம்பிக்கொண்டே வேலைகளைத் தொடர்ந்தாள் மரகதம். “செந்தாமர.. டவுனுக்குப் போய் புனிதாவுக்கு வறுத்த ரொட்டி வாங்கிட்டு வா. இன்னிக்கு புனிதாவுக்கு அதுதான் சாப்பாடு”  என்று மகனுக்குக் கட்டளையிட்ட பட்டம்மா, “ஏன்டா, உன் மத்த மவளுக்கெல்லாம் சேதி சொல்லிட்டியா?” என்று பேத்திகளைப் பார்க்கும்  ஆர்வமுடன் கேட்டாள்.  “சொல்லி விட்டிருக்கு. அவளுங்க எல்லாம் ஏழாம் காப்புக்கு வர்ரோம்னு சொல்லியிருக்காங்க” என்றார் செந்தாமரை. “என்னமோ போடா, நீ பெத்தது மூனும் பொண்ணா போச்சேன்னு வெசனமா இருக்கு” என்று புலம்பிக்கொண்டே பட்டம்மா பாட்டி நெய்யை ஊற்ற, “யாரை நோவறது? விதைச்சவன் விதைச்சுட்டான்; விதி வழியே போவ வேண்டியதுதான்” என்று சலித்துக்கொண்டார் செந்தாமரை.  “ஏங்க காலையிலேயே எதுக்கு சலிச்சிகிட்டு? ஆகற வேலைய பாருங்க. போய் சுப்புடு ஐயரைப் பாத்து புள்ளைக்கு பேர் குறிச்சிட்டு  வாங்க” என்று செந்தாமரையைக் கிளப்பி சுப்புடு ஐயர் வீட்டிற்கு அனுப்பினாள் மரகதம்.  “மரகதம்….  மிளகு, சீரகம், தனியா, சுக்கு, ஓமம், திப்பிலி, இதையெல்லாம் பொன்னிறமா வறுத்து, அம்மியில வச்சு ஒட்ட ஒட்ட அரைச்சு, குழம்பு வைக்கணும். இனிமே மூனு மாசத்துக்கு இது மாதிரி பத்தியச் சாப்பாடுதான் தரணும்” என்று மரகதத்திற்கு விளக்கமாகச் சொல்லிக்கொண்டிருந்தாள்  பட்டம்மா.  பக்கத்துத் தெரு குப்புசாமி ரெட்டியார் கொல்லையில் களையெடுத்துக் கொண்டே  பெண்கள், ஊர்க் கதையை ஊறுகாய் இல்லாமல் வாயில் ஊறவைத்தனர்.  “ஏன்டி, நம்ம ஓட்டு வீட்டு  பட்டம்மா பாட்டி பேத்திக்கு பொண்ணு பொறந்திருக்காமே!”  என்று முனியம்மாவுக்கு மூக்கு வியர்த்தது.  “ஆமான்டி, பாவம் அவ புருசன் வரலன்னு அழுதுகிட்டு இருக்காளாம். எங்க இருக்கானோ?! உயிரோட இருக்கானோ, இல்லையோ! யாரு கண்டா? கல்யாணம் பண்ணி மூனு மாசத்துல விட்டுட்டு போனான்; இன்னி வரைக்கும் தகவல் இல்லையாம்”  என்று  அருக்காணி அளந்துவிட்டுக் கொண்டிருந்தாள்.  மனிதர்களிடம் இருந்து வரும் வார்த்தைகள், தனக்குச் சொந்தம் என்று நினைக்கிறார்கள். அந்த வார்த்தையின் பலன் பிறருக்குச் சொந்தம் என்பதை அறியாமலே பேசுகிறார்கள். இங்கும் அப்படித்தான், களையெடுத்துக் கொண்டே புனிதாவின் கணவனைப் பற்றி, தப்புத் தப்பாக தலைப்புச் செய்தி வாசித்துக் கொண்டிருந்தனர். “அருக்காணி, உன் வாயில நல்ல வார்த்தைகளே வராதா? பாவம் புனிதா, அவ புருசனைப் பத்தி அவச்சொல்லா சொல்ற. எல்லாம் மாசம் ஒரு தடவை கடுதாசி போடறானாம்” என்று நல்ல மனதுடன் பேசினாள் சிவப்பி.  “ஏன்? கடுதாசி போடற துரைக்கு ஒரு எட்டு வந்து பாக்க முடியாதாமா? அப்படி என்ன பொல்லாத வேலை? ஒருக்கால் அங்க ஏதாவது வீடு கீடு வச்சிருப்பானோ?” என்று திரையில்லாமல் படம் ஓட்டினாள் அருக்காணி.  “ஊரு கதைய உப்பில்லாம பேசறியே அருக்காணி, உன் புருசனை எங்க மூனு மாசமா காணோம்? அடிச்சி விரட்டிட்டியா?” என்று கடுப்புடன் கேட்டாள் சிவப்பி.  “என் கதைதான் ஊரு சிரிக்குதே! உனக்கு வேற தனியா சொல்லணுமா? அவன்தான் அந்த எடுபட்ட  சிறுக்கியை விட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டான். அதான் ஒரேயடியா போய் சேருடான்னு தலைமுழுகி விட்டுவிட்டேன்” என்று சாதாரணமாகச் சொன்னாள் அருக்காணி. அருக்காணியைப் பொறுத்தவரை அவள் கதையாக இருந்தாலும், ஊர்க்கதையாக இருந்தாலும், மேளம் கொட்டாமல் தண்டோரா போடுவாள். இது அவள் இயல்பு. அதை யாரும் பெரிதாக எடுத்துக்க மாட்டாங்க. ‘குடிகாரக் கணவனிடம் உதைபட்டு வாழறதைவிட, தனியா உழைச்சு ரெண்டு புள்ளைங்களைக் காப்பாத்தறாளே’ன்னுதான் சந்தோஷப்படறாங்க. அருக்காணி ஒரு கொல்லையில் வேலை செய்தால், அங்கே ஊர் செய்தி முழுவதும் தெரிந்து கொள்ளலாம். இன்னிக்கு இப்பதானே தென்னன்டை  தெரு புனிதாவைப் பற்றி சொல்லியிருக்கா? இன்னும் வடக்குத் தெரு, நடுத் தெரு, வில்லித் தெருன்னு எல்லா செய்தியும் வரும். யார் யார் வீட்ல அடிச்சிகிட்டாங்க என்பதில் தொடங்கி, யார் வீட்ல என்ன சமையல் செய்தாங்க என்பது வரை அனைத்துச் செய்திகளுக்கும் குத்தகைக்காரி இந்த அருக்காணி. தொடரும் சாம்பவி சங்கர்

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

மயிலாடுதுறை ஏ.வி.சி. கல்லூரி

இன்றோடு என் மகன் வி.பிரபாகரனின் இளங்கலை வணிகவியல் படிப்பு நிறைவடைகிறது. இனி எதிர்காலப் படிப்பு மற்றும் வாழ்க்கைக் குறித்து அவன்(ர்)தான் முடிவெடுக்க வேண்டும். அவர் படித்த ஏ.வி.சி. கல்லூரி குறித்து சில குறிப்புகளை எழுத விரும்புகிறேன். அன்பனாதபுரம் வகையார் அறத்துறை கல்லூரி, (A.V.C.College) மயிலாடுதுறை காலம் நூற்று அறுபது ஆண்டுகளுக்கு முற்பட்டது. எழில்மிகு காவிரியின் வடகரையின்பால் துவங்கி, கொள்ளிடத்தின் தென்கரை வரை, மாயூரத்திலிருந்து (மயிலாடுதுறை) மணல்மேடு செல்லும் மார்க்கத்தில் பரந்து விரிந்திருந்த பரப்பிற்கு நாயனாகிய மூலவரின் பெயர் திரு. சடையப்பர் அவர்கள். அவர்களுக்கு ஒரே மகனாகப் பிறந்தார் திரு. இராமலிங்கம். அவருடைய பிள்ளைகள் அறுவருள் முதல்வராகத் தோன்றி, சில காலம் வாழ்ந்து, திருமணம் முடிக்கும் முன்னரே மறைந்தார் திரு. வேலாயுதம். இவ்வறத்துறை தோன்ற உறுதுணையாக இருந்தது, ஆறு பங்குகளை ஐந்து ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணம், இவர்களை ஈன்றெடுத்த திரு. இராமலிங்கம் அவர்களுக்கோ அல்லது உடன் பிறந்த ஐவருக்கோ ஏற்படாதுதான். அறத்துறையின் பணி நலன்களை அதற்கெனப் பணித்துப் பரிபாலனம் செய்ய வேண்டிய பொறுப்பினை இந்த ஐந்து குடும்பத்தினரின் மூத்தவரிடம் ஒப்படைக்கும்படி தீர்மானிக்கப்பட்டது. உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அவர்கள் கல்லூரி வெள்ளி விழா உரையில் குறிப்பிட்டது போல, இப் பெரிய நிறுவனமோ அதைச் சார்ந்த கல்லூரியோ தனியார் பெயரில் அமைக்கப்படாமல் இருப்பது அவற்றை அமைத்த பெரியவர்களின் பண்பினைக் காட்டுகின்றது. எனினும் மற்ற ஐவரின் பெயர்கள், அவர்கள் தம் வழித் தோன்றல்கள் மூலம் நினைவு கூறப்படும் பொழுது, பெருந்தகை வேலாயுதம் அவர்கள் தவப்பெயரையும், பல்லாயிரவர் வாய்மொழி மூலம் கேட்டு மகிழும்வண்ணம், கல்லூரியின் கலையரங்கத்திற்கு ‘வேலாயுதம் பிள்ளை கலையரங்கு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.வி.சி. கல்லூரி தோற்றம்30 ஏழை மாணவர்களைக் கொண்ட சடையப்ப மாணவர் இல்லத்தினைத் தொடங்கி, மாணவர்களுக்கு மூன்று வேளை உணவும், இடவசதியும், அறங்காவலர் குழுவில் ஒருவரான டாக்டர் திரு. சிறீ. சொக்கலிங்கம் அவர்களால் இலவச மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டு, அதற்கான செலவுகளை ஏற்கொண்ட இவ்வறத்துறை நிர்வாகம் 1947 வரை செயல்பட்டது. இவ்வறத்துறையின் நிர்வாகத்தை சீர்ப்படுத்தும் நோக்கத்துடன் குடும்பத்துப் பெரியவர்கள், மயிலாடுதுறை சார்பு நீதி மன்றத்தின் ‘Scheme’முறையின் கீழ் இந்த நிர்வாகப் பொறுப்பை 1950 இல் கொண்டு வந்தனர். 1947 முதல் 1950 வரையுள்ள இடைக்காலத்தில் நீதிமன்றப் பொறுப்பாளர் மூலம் நிர்வாகம் நடைபெற்றது. இந்த நிர்வாகச் சீர்திருத்தித்தின் பயனாக, 1955 இல் மிகவும் அரும்பாடுபட்டு இந்தக் கல்லூரி தொடங்கப் பெற்றது. அந்தக் காலத்தில் ஒரு கல்லூரி தொடங்க எவ்வளவு முயற்சிகள் தேவைப்பட்டன என்பதை அதில் பங்கு கொண்ட பெருந்தகைகள்தான் அறிவர். 9 ஆசிரியர்களுடனும், 120 மாணவர்களுடனும், நகரப் பூங்காவில் ஸ்ரீலஸ்ரீ கயிலைக் குருமணி அவர்களது திருக்கரங்களால் தொடங்கப்பெற்ற கல்லூரி, ஸ்ரீலஸ்ரீ 26 ஆவது குருமகா சந்நிதானம் அவர்களது வாழ்த்துகளுடன் வெள்ளி விழா கொண்டாடியபோது, 1300 மாணவர்களுடனும் நூற்றுக்கு சற்றே மேற்பட்ட ஆசிரியர்களுடனும் 50 க்கும் மேற்பட்ட அலுவலர்களுடனும் எல்லா பட்டப்படிப்புகளுடனும் நான்கு பட்ட மேற்படிப்பு பிரிவுகளோடும் தமிழ்நாட்டில் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றாக விளங்குகின்ற பேறினைப் பெற்றது. புதுமுக வகுப்புகள் இருந்தபொழுது, 2000 மாணவர்கள் வரை பயின்றனர். ரூ.2,00,000 முதலீட்டுடன் தொடங்கப்பட்ட இந்த கல்லூரிக்கு ரூ. 20,00,000 வரை இந்த அறத்துறை கொடையளித்தது. நல்ல பல ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள், நூலகம், கலையரங்கு, 150 மாணவர்கள் தங்கும் விடுதி ஆகியவற்றையும் ஏற்படுத்தியது. ஒரு கல்லூரி நாள் விழாவில் கல்லூரி கல்வி இயக்குநர் அவர்கள் கூறியது போல, மன்னம்பந்தலை மணப்பந்தல் போலக் காட்சியளிக்க வைத்திருக்கின்றது இக்கல்லூரி. அறத்துறையின் பங்கு போக கட்டிடங்களுக்காகவும், புத்தகங்கள் மற்றும் சாதனங்களுக்காகவும் ரூ 5,00,000 க்கும் மேலாக அன்புடன் அரசு உதவியுள்ளது. இந்த ஆண்டு NAAC ஆய்வில் A+ தர வரிசையை பெற்றது மட்டுமல்லாமல், டெல்டா பகுதியில் சிறந்த கலை அறிவியல் கல்லூரியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொழிப் போர் தியாகி சார்ங்கபாணி பயின்ற கல்லூரி இது என்பது, இக்கல்லூரியில் பயிலும் அனைவருக்கும் பெருமை தரும் செய்தி. அவர் நினைவாக, கல்லூரி முன்பு நினைவுத் தூண் நிறுவப்பட்டுள்ளது. இக்கல்லூரியால் பயனடைந்த, பயனடையும், பயன்பெறப்படுகின்ற மாணவர்கள் எத்தனைப் பேர்கள்! ஆசிரியப் பெருந்தகைகள், அலுவலர்கள் எவ்வளவு பேர்கள்! காவிரி பாலம்: மயிலாடுதுறை நகரத்தில் பேருந்துகள், வாகனங்கள் செல்வதற்காக, காவேரி ஆற்றில் அமைக்கப்பெற்றுள்ள பாலக்கரை பாலம், ஏ.வி.சி. அறத்துறையினரால் கட்டப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கந்தசாமி விநாயகம்

கரைசேராப் படகுகள் – 3

கரைசேராப் படகுகள் – 3

தொடர்கதை மனிதன் பிறக்கும்போதே பல உறவுகளுடன்தான் பிறக்கிறான். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு எங்கோ பிறந்து வளர்ந்த ஆணும் பெண்ணும்  இணைகின்றனர். வெறும் மஞ்சள் கயிறும் மோதிரமும் மட்டுமா  இருவரையும் இணைக்கிறது?! அவை வெறும் அடையாளம் மட்டுமே. கணவன் – மனைவி உறவு என்பது பூர்வ ஜென்ம பந்தம், நம்பிக்கை இருப்பவர்களுக்கு; இந்த ஜென்மத்து சொர்க்கம் அன்பு இருப்பவர்களுக்கு. பிரசவம் முடிந்த மறுநொடியில், பிறந்திருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்று கூட கேட்கத் தோன்றாமல், கணவனைத் தேடுகிறாள் என்றால், ‘எனக்குக் குழந்தை பிறந்தாலும்  அவர்தான் முக்கியம்’ என்று உணர்த்தும் மறைபொருள் இது என்பதை அனைவரும் அறிந்தனர். “அம்மாடி தாயே, நீ படிச்சிருக்க; உன் கணவரைப் பற்றி உனக்குத் தெரியாதா? நீதான் மனசைத் தேத்திக்கணும்” என்று செந்தாமரை, தன் மகளுக்கு ஆறுதல் கூறினார். “நீ பார்த்து வச்ச மாப்பிள்ளைதானே? அவ ஏன்டா மனசைத் தேத்திக்கணும்?” என்று மகன் மீது பாய்ந்தாள் பட்டம்மா பாட்டி.  மருத்துவச்சி குழந்தையை சுத்தப்படுத்தி, பழைய நூல் புடவையில் சுற்றி எடுத்து வந்து  செந்தாமரையிடம் காட்டினாள். ரோஜாக் குவியலுக்கு மத்தியில்  தாமரைப் பூ மலர்ந்திருப்பதைப் போன்று அந்தக் குழந்தை பூத்திருந்தது.  புனிதாவைப் போன்று அழகான பெண் குழந்தை. குழந்தையைப்  பார்த்ததும், முதலில்  அதன்  காதைத் திருப்பிப் பார்த்து, “என்  நிறமெல்லாம் வரமுடியாது” என்று அலட்டிக் கொண்டாள் அலமு பாட்டி.  “ஆமா, ஆமா. நீ  காக்கா சிவப்பாச்சே” என்று கிண்டலடித்தாள் பட்டம்மா  பாட்டி. “ஏம்பா செந்தாமரை, குழந்தை  உனக்குச் சொந்தமா? இல்ல, ஊருக்குச் சொந்தமா?” என்று  கோபால் நாயக்கர் கேட்டார்.   “என் பொண்ணு மாதிரியே  தங்கச்சிலை பொறந்திருக்கா  நாயக்கரே” என்று மகிழ்ச்சியுடன் வெளியில் இருந்த அனைவரின் கைகளையும் பிடித்துக் கொண்டார் செந்தாமரை.  “சரிப்பா, இந்தப் பேப்பரில் குழந்தை பிறந்த நேரம், தேதியெல்லாம்  குறிச்சிருக்கேன். வெள்ளனயே  போய்  நம்ம சுப்புடு ஐயர்கிட்ட குழந்தைக்கு ஜாதகம் எழுதிக்கோ” என்று சொல்லிவிட்டு பெரிசுகள்  திண்ணையைக் காலி செய்தனர். பாட்டிகளும் ஆளுக்கொரு காரணம் சொல்லிவிட்டுக் கிளம்பினர். “வள்ளி, பொறந்த குழந்தை பையனா பொண்ணான்னு கேட்க மறந்துட்டோமே?” என்று சுகுணா தண்ணி மோந்துகொண்டே ஆதங்கப்பட்டாள்.  “அதுக்கு ஏன் அம்புட்டு விசனப்படற? என் மாமியாளும் உன் ஆத்தாளும் வந்தா தெரிஞ்சிடப் போகுது” என்று  வள்ளி  நீட்டி முழக்கினாள். “சுகுணா, எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு வச்சிருக்கேன். வந்து எடுத்துகிட்டு போ” என்று  சொன்ன  வள்ளிக்கு, ‘சரி’ என்று தலையாட்டிவிட்டு, “வள்ளி, என் குடம் ரொம்பிடுச்சு. நீ மோந்துக்கோ” என்று வாளியை நீட்டினாள் சுகுணா.  “சுகுணா, மதியம் நெல்லு குத்தியது மேலெல்லாம் வலிக்குது. நாலு குடம் தண்ணி இறைச்சி கொடேன்”  என்று  கேட்டாள்  வள்ளி. “அதானே பார்த்தேன், என்னடா ‘செட்டியார் ஆத்தைக் கட்டி இழுக்கறாரே’ன்னு”  என்று  வள்ளி குழம்பு கொடுத்த  காரணத்தைச் சொல்லிவிட்டு,  நீர் இறைத்தாள் சுகுணா. “அம்மா, நாக்கு வறட்சியா இருக்கு; கொஞ்சம் தண்ணி கொடும்மா” என்று புனிதா குரல் கொடுத்தாள்.  மரகதம் எடுத்துக்கொண்டு சென்ற தண்ணீர் டம்ளரை  வெடுக்கென்று பிடுங்கினாள்  பட்டம்மா  பாட்டி.  தொடரும் சாம்பவி சங்கர்