பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று

பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று

இரண்டாம் பாகத்திற்குள் நுழையும் முன்பு முதற் பாகத்தின் சுருக்கம்:இராஜராஜன் என்று பிற்காலத்தில் பட்டமேற்ற சோழ இளவரசன் அருள்மொழி வர்மன் இலங்கையில் போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனது அண்ணன் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன். இவர்கள் இருவருக்கும் நடுவில் பிறந்த குந்தவை அப்போது பழையாறையில் இருந்தாள். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன் மாளிகை ஒன்றைக் கட்டி, தன் தந்தையும் சோழ அரசருமான சுந்தர சோழரை அங்கு வந்து தங்கியிருக்க வேண்டி, வாணர் குலத்தில் வந்த தனது நண்பன் வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்து அனுப்பினான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்த சிற்றரசர்களின் ரகசியக் கூட்டத்தில், சுந்தர சோழரின் பெரிய தந்தை கண்டராதித்த சோழரின் புதல்வனான மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட அவர்கள் முடிவு செய்ததை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.கண்டராதித்தர் இறந்தபோது மதுராந்தகன் சிறுவனாக இருந்தபடியால் சுந்தர சோழர் அரசராகி இருந்தார். மதுராந்தகனை ஆதரித்த சோழ நாட்டு சிற்றரசர்களுக்குத் தலைமை வகித்தவர் சோழ நாட்டு நிதியமைச்சர் பெரிய பழுவேட்டரையர். இவரது தம்பி சின்ன பழுவேட்டரையர்தான் தஞ்சைக் கோட்டையின் காவலர். பெரிய பழுவேட்டரையர் தனது முதிர்ந்த வயதில் நந்தினி என்ற பெண்ணை மணந்து கொண்டிருந்தார். நந்தினியின் மீதான மோகத்தில் கட்டுண்டு கிடந்த பெரிய பழுவேட்டரையரை நந்தினி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள். நந்தினியும் ஆதித்த கரிகாலனும் இளமையில் காதலர்கள். இவர்கள் காதலை குந்தவையும் கண்டராதித்தர் மனைவி செம்பியன் மாதேவியும் விரும்பவில்லை. பாண்டியருடன் நடந்த இறுதிப் போரின்போது நந்தினியின் வேண்டுகோளைப் புறம்தள்ளி, வீரபாண்டியன் தலையைக் கொய்தான் ஆதித்தன். வீரபாண்டியன் கொலைக்குப் பழிவாங்க சபதம் பூண்ட நந்தினி, பழுவூர் இளைய ராணியாகி பாண்டி நாட்டு ஆபத்துதவிகளுக்கு உதவி செய்து வந்தாள்.வந்தியத்தேவன் வழியில் நந்தினியைச் சந்தித்து அவள் தந்த முத்திரை மோதிரத்தைக் காட்டி அரசரைச் சந்தித்து ஆதித்தன் ஓலையைக் கொடுக்கிறான். தன்மீது ஐயம் கொண்ட சின்னப் பழுவேட்டரையரை ஏமாற்றி கோட்டையை விட்டு வெளியேறுகிறான். தஞ்சையில் அவன் சந்தித்த சேந்தன் அமுதன், வந்தியத்தேவனுக்கு உதவுகிறான். அவன் கோடிக்கரையில் இருக்கும் தன் மாமன் மகள் பூங்குழலியை ஒருதலையாகக் காதலிக்கிறான் என்பது தெரிய வருகிறது. வந்தியத்தேவனை ஒற்றன் என்று கருதி பழுவேட்டரையர் ஆணை ஒருபுறம் துரத்த, ஆபத்துதவிகள் கூட்டத்தைச் சேர்ந்த மந்திரவாதி ரவிதாசன் ஒருபுறம் துரத்த, அனைத்தும் கடந்து, பழையாறை வந்து ரகசியமாக இளவரசி குந்தவையைச் சந்தித்து விவரங்களைக் கூறுகிறான் வந்தியத்தேவன். இலங்கையில் உள்ள அருள்மொழி வர்மனைப் பழையாறைக்கு வரும்படி அழைத்து ஒரு ஓலை எழுதி, வந்தியத்தேவன் மூலம் அதை அனுப்பி வைக்கிறாள் குந்தவை. காஞ்சியில் இருந்தே வந்தியத் தேவனைத் தொடர்கிறான் ஆழ்வார்க்கடியான் என்ற திருமலை. பாண்டி நாட்டு ஆபத்துதவிகளின் ரகசியமும் அவன் தெரிந்திருக்கிறான். அவன் முதன்மந்திரி அநிருத்த பிரமராயரின் ஆள் என்பதை வந்தியத்தேவன் அறியவில்லை. வானத்தில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியிருந்தது பற்றிப் பலரும் பலவாறு பேசிக் கொண்டிருந்தனர். இனி இரண்டாம் பாகம்.. பொன்னியின் செல்வன் – 10இரண்டாம் பாகம் – சுழல்காற்று கோடியக்கரையின் கடலோரத்தில் மிதந்த சிறிய படகிலிருந்து நெஞ்சை உருகச் செய்யும் ஒரு பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்த இளம்பெண், நீண்ட கருங்குழலில் தாழம்பூவின் ஒரு மடலைச் சூடிக்கொண்டு தன்னில் ஆழ்ந்துகொண்டு அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள்.‘அலைகடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?நிலமகளும் துயிலுகையில்நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? அவளின் மனதில் இருந்த சோகத்தையெல்லாம் வெளிப்படுத்திய அந்தப் பாடல், கேட்பவரின் நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சியோடிருந்தது.ஆழம் அதிகமில்லாத அந்தக் கடற்கரையோரம் தன் ஓடத்தை நிறுத்திக் கரையிறங்கிய அந்தப் பெண், சேந்தன் அமுதன் மணக்க விரும்பும் முறைப்பெண்ணான பூங்குழலிதான். கலங்கரை விளக்கின் தீபம் ஏற்றப்பட்டிருந்ததைப் பார்த்த பூங்குழலி கோடியக்கரை குழகர் கோவிலில் சேமங்கலம் அடிக்கும் ஒலி கேட்கவே கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தாள். கோடியக்கரை கடற்கரையை ஒட்டி அடர்ந்த காடு. முழுவதும் மணற்பரப்பும் மணல்மேடுகளின் மீது செடிகளும் மரங்களூம் முளைத்ததினால் கெட்டிப்பட்ட குன்றுகளும் பள்ளங்களும் நிறைந்த அந்தக் காட்டில் வழிகண்டுபிடித்துப் போவது கடினம். திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதைப் போல பிரமை தோன்றக்கூடிய அபாயமான காட்டுவழி. பூங்குழலி அந்த வழியாகச் சென்று கோவிலில் தரிசித்துவிட்டு, பட்டர் அளித்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு மதில் மேல் அமர்ந்து உண்ணலானாள். அப்பொழுது வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் இரு குதிரைகளில் வருவதைப் பார்த்தவள், என்னவென்று விவரிக்க முடியாத உணர்ச்சியினால் கடல் பக்கமாக ஓடலானாள். அந்தக் காட்டில் வழி கண்டுபிடித்துப் போக முடியாமல் பூங்குழலியைப் பார்த்ததும் வழிகேட்கலாம் எனக் குதிரையிலிருந்து இறங்கிய வந்தியத்தேவன், அவள் ஓடுவதைக் கண்டு திகைத்து பின் அவனும் துரத்த, பாதி வழியிலேயே சேந்தன் அமுதன் குறிப்பிட்ட பெண் இவள்தான் எனப் புரிந்து கொண்டு மேலும் துரத்தலானான். அந்தக் கடற்கரை மணற்வெளியைப் பற்றி அறிந்திராத வந்தியத்தேவன் ஓடுகிற வேகத்தில் அதிலிருந்த புதைகுழியில் மாட்டிக்கொண்டு, தன்னைக் காப்பாற்றுமாறு கத்த, பூங்குழலி விரைந்து செயல்பட்டாள். அங்கு தேங்கிப்போயிருந்த சேற்றில் ஓடத்தை ஓட்டிக் கொண்டு வந்து தன் வலிய கரங்களை வந்தியத்தேவனுக்குக் கொடுத்து மேலிழுத்தாள். பின் சேற்றைக் கடலில் கழுவிக்கொண்ட வந்தியத்தேவன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, ‘சேந்தன் அமுதனின் காதலிதானே நீ?’ எனக் கேட்க, பூங்குழலி மறுத்தாள். பேசிக்கொண்டே இருவரும் நடந்தபோது முதல்நாள் இருவர் தன் அண்ணனுக்கு நிறைய காசு கொடுத்து இலங்கைக்குச் சென்றதைப் பூங்குழலி சொல்ல, அவள் சொன்ன அடையாளத்தை வைத்து அது மந்திரவாதி ரவிதாஸனாக இருக்கும் என வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டான். வழக்கமாக தான் பெண்களிடம் கடைபிடிக்கும் வழக்கப்படி பூங்குழலியிடம் வந்தியத்தேவன் பேச, அவள் தனக்கு நிறைய காதலர்கள் இருப்பதாகவும் சந்தேகமாய் இருந்தால் நள்ளிரவில் அவர்களைச் சந்திக்கச் செல்லும்போது பின் தொடர்ந்து வந்து பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லிச் சிரிக்க, பூங்குழலிக்கு சித்தப் பிரமையோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. பேசிக்கொண்டே வைத்தியர் மகனையும் அழைத்துக் கொண்டு பூங்குழலியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கோடியக்கரை கலங்கரை விளக்கக் காவலரும் பூங்குழலியின் அப்பாவுமான தியாகவிடங்கக் கரையரிடம் தாங்கள் வந்த சேதியைச் சொல்லி, தான் மட்டும் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யுமாறு வந்தியத்தேவன் கேட்டான். அவர் தன் மருமகளின் பணத்தாசை காரணமாக தன் மகன் யாரோ இருவரை இலங்கைக்கு ஏற்கெனவே ஒரு படகில் அழைத்துச் சென்றதைக் கூறி வருத்தப்பட்டுவிட்டு, உணவு உண்டு அங்கேயே தங்குமாறும், தான் வேறு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.வந்தியத்தேவன் நன்கு உண்டுவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென விழிப்பு தட்டி தன்னைத் தாண்டிச் சென்ற பூங்குழலியைத் தொடர்ந்து சென்றான். அடர்ந்த இருளில் பயந்துகொண்டே வந்தியத்தேவன் செல்ல, பூங்குழலி அழுகையுடன் அந்தப் பாடலை மறுபடி கடற்கரையில் பாடலானாள். வந்தியத்தேவனைப் பார்த்தவள், சிரித்தபடி அவனைத் திரும்பி பார்க்கச் சொல்ல, அங்கு பார்த்தவன் நடுநடுங்கிப் போனான். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 9

பொன்னியின் செல்வன் – 9

பழையாறையிலிருந்து சற்று மாமல்லபுரம் வருவோம். மாமல்லபுரத்தின் பிரதான வீதியில் ஒரு விமான ரதத்தில் வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி என்று பட்டப்பெயர் கொண்ட, அடுத்த பட்டத்துக்குரியவனாக இளவரசர் பட்டாபிஷேகம் செய்யப்பட்ட மூத்த இளவரசனான ஆதித்த கரிகாலனும், மிலாடுடையார் என்ற பட்டத்தைப் பெற்றவரும் சுந்தரசோழரின் இரண்டாவது மனைவி வானமாதேவியின் தந்தையுமான – ஆதித்த கரிகாலனின் பாட்டனார் திருக்கோவிலூர் மலையமானும்,  பல்லவ குலத்தின் தோன்றலான பார்த்திபேந்திர பல்லவனும் அமர்ந்திருந்தனர். தஞ்சாவூரிலிருந்து வந்த செய்திகளைப் பற்றி மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்.  பீஷ்மரை ஒத்தவராக இருந்த மலையமான் மிலாடுடையாரின் பேச்சை, ஆதித்த கரிகாலன் மறுத்துப் பேசாதவனாயிருந்தான். பார்த்திபேந்திரன் வீரபாண்டியனை எதிர்த்த போரின் போது துணைசெய்தவனாய் இருந்ததால் ஆதித்த கரிகாலனுடன் இணைபிரியாதிருந்தான். அவனுக்கு, வந்தியத்தேவனும் கரிகாலனும் பாராட்டிய நட்பால் வந்தியத்தேவன் மேல் பொறாமை இருந்து வந்தது. பழுவேட்டரையர்களின் அதிகாரத்தைப் பற்றி அதிருப்தி தெரிவித்த ஆதித்த கரிகாலனிடம், ஏற்கனவே வந்தியத்தேவனின் மீதிருந்த பொறாமையால், அவன்தான் போன காரியத்தை உத்தேசித்துப் பொறுமையாக இருந்திருக்க வேண்டுமென பார்த்திபேந்திரன்  குறை கூறினான்.  மிலாடுடையார்  பொறுமையாக சூழ்நிலையை இருவருக்கும் விளக்கத் தொடங்கினார். கடம்பூரில் நடந்த சதியாலோசனை பற்றிக் குறிப்பிட்டவர், பழுவேட்டரையர்கள் நாட்டுக்கு எதிரான முன்னெடுப்புகளை திட்டமிடுவதாகவும், மதுராந்தகனுக்கு அரசாட்சியை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்ததையும், அந்தக் கூட்டத்தில் மதுராந்தகன் கலந்து கொண்டதையும் கூறி வருந்தினார்.  “மதுராந்தகன் கையில் வாளெடுத்து அறியாதவன்; பெண்ணாய்ப் பிறப்பதற்கு பதில் ஆணாய்ப் பிறந்தவன். மேலும், எனக்கு அரசுரிமைப் பட்டம் கட்டிவிட்டு, இப்போது எப்படி மாற்றலாம்?” என்று ஆதித்த கரிகாலன் கேட்க, மதுராந்தகனுக்கும் உரிமை உண்டு என்று சொல்லி மலையமான் அவனை சமாதானப்படுத்தினார். அதற்கு பார்த்திபேந்திரன் வெகுண்டு எழ, அவனை அடக்கியவர், “என் பேரனுக்கு சோழ அரசு இல்லையெனில்  படையெடுத்தாவது பெற்றுத் தருவேன்” என்று கூறி அவனையும் சமாதானப்படுத்தினார். கடம்பூர் மாளிகைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பானோ என்று வந்தியத்தேவன் மீது தனக்குச் சந்தேகம் ஏற்பட்டதாகவும், சின்னப் பழுவேட்டரையர் அவனை ஒற்றன் என்று குற்றம் சாட்டியதால் . பின்னர் தெளிந்ததாகவும் மிலாடுடையார் சொல்லவும், தான் அவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருப்பதாகக் கூறிய ஆதித்த கரிகாலன், குறுக்கே வந்தியத்தேவனை பழித்துக் கூறிய பார்த்திபேந்திரனையும் அடக்கினான். மிலாடுடையார் இப்போது சோழ ராஜ்யத்திற்கு பெரிய அபாயம் சூழ்ந்துள்ளதாகவும், இலங்கையில் உள்ள அருள்மொழிவர்மனை உடனே இங்கு வருவிக்குமாறும், பின் அனைவரும் சென்று சக்ரவர்த்தியைப் பழுவேட்டரையரின் பிடிகளில் இருந்து விடுவிக்க வேண்டுமென்றும் கூறினார்.  வந்தியத்தேவனை குந்தவையிடம் அனுப்பியிருப்பதாக ஆதித்த கரிகாலன் கூற, மிலாடுடையார் குந்தவையின் மீதான நம்பிக்கை தனக்குப் பெரிதாக உள்ளதாகவும், அவளைப் போன்ற அறிவுடையவர்கள் இதுவரை சோழர் குலத்தில் பிறந்ததில்லை எனவும், முதன்மந்திரியான அநிருத்தர் கூட குந்தவையின் கருத்தைப் பெரிதும் மதிப்பவர் எனவும் பெருமையாகக் கூறினார். அப்பொழுது பார்த்திபேந்திரன், ‘வந்தியத்தேவன் குந்தவையைப் பார்ப்பதற்கு முன் நந்தினியைப் பார்த்து மயங்கியிருந்தால் என்ன செய்வது?’ என்று கூற, ஆதித்த கரிகாலன் உறுத்து பார்த்திபேந்திரனைச் சுட்டு விடுவது போலப் பார்க்கவும், பார்த்திபேந்திரன் நடுங்கி விட்டான்.  மிலாடுடையார் பார்த்திபேந்திரனை மறுநாளே  இலங்கைக்குச் சென்று அருள்மொழிவர்மனை அழைத்து வரக் கிளம்புமாறு கூறினார். பார்த்திபேந்திரன் அலைக்கழிப்புடன் நின்றிருக்கும் ஆதித்த கரிகாலனை நெருங்கினான். என்னவென்று கேட்க, ஆதித்த கரிகாலன் நெடிய பெருமூச்சை விட்டு நீங்காத வேதனையில் துடிப்பதை எவ்வாறு சொல்ல முடியும் என்று வருந்தியபடி இருக்க, அனைவரும்  அரண்மனைக்குத் திரும்பினர். பார்த்திபேந்திரன் எப்படியும் இதைக் கேட்டறிவது என்று உறுதி பூண்டான்.  அரண்மனை திரும்பியதும் அரவான் கதை கேட்க பெரியவர் கிளம்பியவுடன், பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனை அணுகினான். ஆதித்த கரிகாலன், மனம் நிலையற்று தவிப்புற்றிருந்தான். பார்த்திபேந்திரன் போரைப் பற்றிப் பேச்செடுக்கையில் ஆதித்த கரிகாலன் வேதனையுடன் போரையும் தன் சாதனைகளையும் வெறுத்து விரக்தியுடன் பேச, வேதனைகளைச் சொல்லுமாறு பார்த்திபேந்திரன் வற்புறுத்தினான். பெருமூச்செறிந்த ஆதித்த கரிகாலன், தூரத்தே வெறித்துப் பார்த்தபடி, ‘என் மனதைத் திறந்தால் இருப்பது என் தாயும் தந்தையும் அல்ல; குடும்பத்தினர் அல்ல; இந்த தேசம் அல்ல. அங்கு இருப்பது பழுவூர் இளையராணி நந்தினி மட்டும்தான்’ என்று கூற, பார்த்திபேந்திரன் திடுக்கிட்டான். தங்களுக்கு அவளை எப்படித் தெரியும் என்று கேட்க, ஆதித்த கரிகாலன் நந்தினியைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். ‘நந்தினியை என்னுடைய பன்னிரண்டாம் பிராயத்தில் சிறு பெண்ணாக சந்தித்தேன்.  நானும் என் தம்பி, தங்கையும் விளையாடி முடித்துவிட்டு என் பாட்டி செம்பியன்மாதேவியைச் சந்தித்தபொழுது, அங்கு உதவி கேட்டு வந்தவர்களுடன் நின்றிருந்தாள். பார்த்த மாத்திரத்தில் அவள் என்னைக் கவர்ந்து கொண்டாள். அவளை எங்கள் தோழியாக ஏற்றுக் கொள்ளச் சொல்லி என் பாட்டி சொல்ல, குந்தவைக்கு அவளை ஏனோ பிடிக்காமல் போயிற்று. அழகின் மீதான பொறாமையில் சொல்கிறாள் என எண்ணி, அவளைச் சீண்டுவதற்காகவே நான் நந்தினியுடன் தொடர்ந்து பழகி குந்தவையுடன் சண்டை போட்டுக் களித்துக் கொண்டிருந்தேன். அப்போது பாண்டிய நாட்டு யுத்தத்துக்குப் படையெடுத்துச் சென்ற என் தந்தைக்கு உதவியாக நானும் சென்றுவிட்டேன். அந்த யுத்தத்தில் தோற்று வீரபாண்டியன் எங்கோ மறைந்துகொள்ள, இலங்கைக்கும் நம் படைகள் செல்ல, நாங்கள் அதற்கெல்லாம் உதவி செய்துவிட்டுத் திரும்ப இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன.   நான் திரும்பி வருகையில் குந்தவையும் நந்தினியும் வெகு அழகாகப் பரிமளித்ததுடன் தோழிகளாகவும் ஆகியிருந்தனர். எனக்கு நந்தினியுடன் பேசுவதானால் அத்தனை இன்பமாய் இருந்தது. ஆனால், என் பாட்டி செம்பியன் மாதேவிக்கோ குந்தவைக்கோ நான் அவளுடன் பேசுவது பிடிக்கவில்லை. பாட்டி என்னைக் கூப்பிட்டு, “அவள் சாதாரண அர்ச்சகருடைய பெண். அவளுடன் இவ்வளவு நெருக்கமாகப் பழகக்கூடாது” என்று கூறினாலும் நான் கேட்பதாயில்லை. திடீரென ஒருநாள், அவளை அவளுடைய உறவினர்களுடன் பாண்டிய நாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாகத் தகவல் வந்தது. அதனால் நான், என் கோபத்தைக் குந்தவையிடம் காட்டிக் கொண்டிருந்தேன். பிறகு, இராஷ்டிரகூடப் படைகளை விரட்டுவதற்காக சோழப் படைகளுடன் நான் தொண்டை நாட்டுக்கு வந்தபோதுதான் நீயும் நானும் நண்பர்களானோம்.  இலங்கையில்  நமது படை முறியடிக்கப்பட்டு கொடும்பாளூர் சிறிய வேளார் இறந்துவிட்டார் என்ற பின்னடைவு நமக்கு ஏற்பட்டதும் ஒளிந்திருந்த வீரபாண்டியன் தன் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்து மதுரையைக் கைப்பற்றினான். அப்போது என் தந்தைக்கு உடல்நலம் குன்றத் தொடங்கியிருந்தும்கூட, அவர் மதுரைக்குப் படையெடுக்கச் சித்தமானார். அவரைத் தடுத்து, மதுரையை மீண்டும் கைப்பற்றி வீரபாண்டியனுடைய தலையைக் கொண்டுவராமல் சோழ நாட்டுக்குத் திரும்பமாட்டேன் என சூளுரைத்துவிட்டு நாம் சென்றோம்.  வரிசையாய் வெற்றிகளைக் குவித்து, தப்பியோடிய வீரபாண்டியனைத் துரத்திக்கொண்டு சென்றோம். அப்போது வைகை நதியின் நடுவில் ஒரு சோலையில், ஆண்டாளை ஒத்த தோற்றத்தில் நந்தினியைக் கண்டேன். அவள் கண்ணனுக்கே தன்னை அர்ப்பணித்து விட்டதாகக் கூறி, தன் தாய் தந்தை மற்றும் தமயனுடன் வசிப்பதாகவும் தமயன் காசிக்குப் போயிருப்பதாகவும் தன்னைத் தொந்தரவு செய்ய வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டாள். அவளின் மீதான மோகம் கொழுந்துவிட்டு எரிந்தபோதும், வந்த காரியம் முடியட்டும் என்று பொறுமை காத்து , அவள் இருந்த பக்கம் படைகள் போகாதவாறு பார்த்துக் கொண்டேன். வீரபாண்டியனுடைய தலையுடன் தந்தையிடம் சென்று, அந்த வெற்றிக்குப் பரிசாக நந்தினியை மணக்கக் கேட்க வேண்டுமென முடிவு செய்திருந்தேன்.  ஆனால், தப்பி ஓடிய வீரபாண்டியன் அவள் வீட்டிலேயே கட்டிலில் படுத்திருந்ததையும் இவள் அவனுக்குப் பணிவிடை செய்ததையும் கண்டவுடன் என்னால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. நந்தினி என் காலில் விழுந்து, “நீங்கள் என்மீது ஒருகாலத்தில் கொண்டிருந்த அன்பின் பெயரால் கேட்டுக் கொள்கிறேன். அவரை ஒன்றும் செய்யாதீர்கள்” என்றாள்.  “பாண்டியனுக்கும் உனக்கும் என்ன உறவு?” என்று அவளிடம் கேட்டேன். நந்தினி, “அவர் எனது காதலர். என் தெய்வம். என்னை மணம் புரிந்து கொள்ளப் போவதாக உறுதி அளித்திருக்கிறார்” என்று சொல்லவும், என் கோபம் கட்டுக்கடங்காமல் சென்று அவளை உதைத்துத் தள்ளிவிட்டு ஒரே வீச்சில் வீரபாண்டியனின் தலையை வெட்டி வீழ்த்தினேன்.  உலகத்தின் மொத்த வெறுப்பு, குரோதம் எல்லாவற்றையும் அடக்கிய பார்வையில் நந்தினி என்னைப் பார்த்தாள். அச்சமயத்தில் நீங்களெல்லாம் வந்துவிடவும் குடிலில் இருக்கும் பெண்களைத் தொந்தரவு செய்யாதீர்கள் என உத்தரவு இட்டுவிட்டு பாசறைக்குத் திரும்பிய என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. அவள் கேட்டதைக் கொடுக்க முடியவில்லை என்றும் என் பிரியத்துக்குரிய நந்தினி வேறொரு ஆடவனின் உயிருக்காய் மன்றாடினாள் என்பதையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை.  மறுபடி அவளைத் தேடிக்கொண்டு சென்றபோது அவளின் பெற்றோர் என நான் பழையாறையில் முதன்முதல் கண்டவர்கள் அழுதுகொண்டு உட்கார்ந்திருந்தனர். விசாரித்தபொழுது நந்தினியைத் தனியே விட்டுவிட்டு அவர்கள் மூத்த மகளின் வீட்டுக்குப் போயிருந்ததும் திரும்பி வரும்பொழுது ஒரு பெண்ணின் கை, காலைக் கட்டிச் சிதையில் போட சிலபேர் முயன்றதைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தால் அவளைக் காணவில்லை என்றும் அழுதனர். நான், அந்தச் சிதையில் எரிந்த பெண் நந்தினியாகத்தான் இருக்கும் என முடிவு செய்து வருந்தி எரிச்சலடைந்து திரும்பிவிட்டேன்.  பின்னர் நாம் பழுவேட்டரையரின் திருமணம் பற்றி அறிந்துகொண்டு ஏளனமாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு என்னை அழைத்து இளவரசப் பட்டாபிஷேகம், மேலும் பரகேசரி என்னும் பட்டம் அளித்து இனி சோழராஜ்யத்தை ஆளும் பொறுப்பு முழுவதும் உனக்கே என என் தந்தை ஆசிர்வதித்து, அதற்குப் பாட்டியும் பெரியோர்களும் ஆசி கூறும் வைபவம் நடைபெற்றது. அந்த மணிமகுடத்துடன் அன்னை, பாட்டி என அனைத்து மாதரசிகளிடமும் ஆசி பெற அந்தப்புரத்துக்குத் தந்தை என்னை  அழைத்து சென்றார். அங்கே நடுநாயகமாக நந்தினி நின்றாள். ராணிக்குரிய ஆடை அணிகலன்களை அணிந்து முன்னைக் காட்டிலும் அழகாக, சர்வாலங்கார ரூபிணியாக நின்ற அவளைக் கண்டதும் அவளை மீண்டும் பட்டமகிஷியாக அடையப் போகிறேனா என்றெல்லாம் ஒரு கணம் என் மனம் மனக்கோட்டை கட்டியது.  ஆனால், அப்பொழுது என் தந்தை ‘ஆ’ வெனக் கூச்சலிட்டபடி மூர்ச்சையடைந்து விட்டார். அவரைத் தூக்கி வந்து சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். அவர் நந்தினியைப் பார்த்துதான் மூர்ச்சை அடைந்திருப்பாரோ என்ற ஐயம் எனக்கிருந்தது. நான் குந்தவையைத் தனியே அழைத்து நந்தினியைப் பற்றிக் கேட்க, “இப்போது நந்தினிதான் பழுவூர் இளைய ராணி. பெரிய பழுவேட்டரையரை மணந்து கொண்டு வந்திருக்கிறாள்” என அவள் கூறினாள். அதைக் கேட்டபோது நான் அடைந்த வலியைப் போல் இதுவரை எந்த வலியையும் நான் உணர்ந்ததில்லை. அன்று மயங்கிய என் தந்தையும் இன்றுவரை பூரண குணம் அடையவேயில்லை.  நந்தினி ஒருநாள் என்னை அவள் அரண்மனைக்கு வரச் சொல்லி செய்தி அனுப்ப, நான் அங்கு சென்று அவளை லதா

பொன்னியின் செல்வன் – 8

பொன்னியின் செல்வன் – 8

ஆழ்வார்க்கடியான் என்னும் திருமலை நம்பியை அழைத்து எப்பொழுதும் உலகநடப்புகளை அறிந்து கொள்ளுதல் குந்தவையின் வழக்கமாயிருந்தாலும் பறையறிவிப்பின் மூல காரணத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமே மேலோங்கியிருந்தது.  ஆழ்வார்க்கடியான் வரும்பொழுது வீதியில் நாடகம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில் கம்சன் போல் முகமூடி தரித்து வேடம் பூண்டு ஆடிக் கொண்டிருந்தவனின் குரலை எங்கோ கேட்டது போலவே இருக்கிறதே என்று யோசித்தபடியே வந்து இளவரசிக்காகக் காத்திருந்தான். குந்தவை நடைமுறை விஷயங்களைக் கேட்டபின், நந்தினியைப் பற்றி காழ்ப்புடன் பேசி நலம் விசாரிக்க, ஆழ்வார்க்கடியான் பொறுமையாகவே தகுந்த பதிலைக் கூறினான். சற்று முன் பறையறிந்து சென்றதைப் பற்றி குந்தவை கேட்கவும், அது ஒரு ஒற்றனைப் பற்றி என்று ஆழ்வார்க்கடியான் கூறவும் குந்தவை ஆர்வமாய்க் கேட்கலானாள். அவன் ஒரு முரட்டு வாலிபனென்றும் சக்ரவர்த்தியின் உடல்நிலையைப் பற்றியும் அடுத்து பட்டத்துக்கு வரப்போகிறவர்களைப் பற்றியும் தன்னிடமும் குடந்தை ஜோசியரிடமும் விசாரித்ததைக் கூற, தான் அங்கு அவனை சந்தித்ததாகக் குந்தவை கூறினாள். மேலும், எங்கு அவனைக் கண்டாலும் தன்னிடம் கொண்டு வந்து சேர்க்குமாறு குந்தவை கூற, ஆழ்வார்க்கடியான் விஷமப் புன்னகை செய்தபடி ‘அவனே உங்களைத் தேடி வருவான்’ என்று கூறினான். செம்பியன் மாதேவியைச் சந்தித்ததையும் குந்தவையைப் பார்க்க வருமாறு அவர் சொல்லச் சொன்னதையும் கூறி ஆழ்வார்க்கடியான் விடை பெற்றான். ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து தனது தமையனாரான ஈசான பட்டரைப் பார்க்க சிவன் கோவிலுக்குச் சென்றான். ஈசான பட்டர் சிவனைப் பழித்துப் பேசியதற்காக ஆழ்வார்க்கடியானை வெகுவாகக் கோபித்துக் கொண்டதைப்போல பாவனை செய்தார். அவரின் நடவடிக்கைகளும் விசித்திரமாக இருக்கவே ஆழ்வார்க்கடியான் அவரை விடாமல் பின் தொடர்ந்தான்.  கம்சன் வேடம் பூண்டவனுக்கு ஈசான பட்டர் உதவி செய்வதைப் புரிந்து கொண்டான். காலையில் அந்த மர்ம மனிதனும் ஈசானபட்டரும் மறைந்து செல்வதைக் கவனித்து அவர்களின் பின்னாலேயே சென்றான். இருவரும் ஓடையில் படகில் ஏறியபோது திரும்பிப் பார்த்தவனின் முகத்தைக் கண்டபோது, தன் சந்தேகத்தின்படி அது வந்தியத்தேவன்தான் என்று தெளிந்தான். முதன் மந்திரி அநிருத்த பிரும்மராயரின் அரண்மனைக்குச் சென்று அதன் நந்தவனத்தில் புகுந்து வந்தியத்தேவன் இறங்கப் போகும் இடத்தை நோட்டமிட ஆரம்பித்தான்.  நீரோடைக் கரையில் இருந்து ஈசானபட்டரும் வந்தியத்தேவனும் இறங்கி படிக்கட்டுகளின் வழியாக மேற்புறத்துக்கு வந்ததும் வந்தியத்தேவன் சிலையெனச் சமைந்து நின்றான்.  தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த பளிங்குக்கல் மேடையில் அமர்ந்திருந்த குந்தவை எழுந்து நின்று வந்தியத்தேவனை கண்ணோடு கண் நோக்கினாள். உலகமெலாம் ஒருமுறை நின்றுவிட்டதைப் போலவும், அந்த நொடியில் பல யுகங்கள் பயணம் செய்து திரும்பியது போலவும் தாங்கள் யாரென மறந்து ஆதி ஆணும் ஆதிப் பெண்ணுமாய் முதன்முதலாய் கண்டு இச்சை கொண்டது போலவும் இருவரின் மனங்களும் சஞ்சாரம் செய்தன. வெளியில் இதைக் காட்டிக்கொள்ள முடியாமல் இருவரும் தவிக்க, ஈசான பட்டர் தொண்டையைக் கனைக்க, நிஜவுலகை அடைந்த குந்தவை வலிந்து வருவித்துக் கொண்ட கடினக் குரலில், ‘என்னைத் தனியாகச் சந்திக்க வேண்டும் என பட்டரிடம் தெரிவித்தது உண்மையா?’ எனக் கேட்க, சீண்டப்பட்டது போல, நீங்கள் யாரெனத் தெரிந்தால்தான் அதைச் சொல்ல முடியும்’ எனத் துடுக்காக வந்தியத்தேவன் கூறினான்.  ‘யாரைப் பார்க்க நினைத்தீர்கள்?’ என்று குந்தவை வினவ, சோழர் தொல் குலத்தின் மங்கா மணிவிளக்கை, சுந்தரச் சோழரின் செல்வத் திருமகளை, ஆதித்த கரிகாலனின் தங்கையும் அருள்மொழிவர்மரின் தமக்கையுமான இளைய பிராட்டி குந்தவை தேவியைப் பார்க்க வேண்டுமென நீட்டி முழக்கி நிமிர்வுடன் வந்தியத்தேவன் கூறினான். ‘தானே குந்தவை’ என்று  அவள் கூறவும் குடந்தை ஜோதிடர் வீட்டிலும் அரிசிலாற்றங்கரையிலும் பார்த்ததும் அவரைத்தான் எனக் கேட்டுத் தெளிந்து கொண்டான். அதற்குமேல் அங்கு ஒரு கண்ணாமூச்சி ஆட்டமாக அவர்களின் பேச்சு தொடர்ந்தது. எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருந்த அதே வேளையில், தங்கள் மனதையும் இருவரும் சொற்களில் மறைத்து வைத்து பரிமாறிக் கொண்டிருந்தனர். வந்தியத்தேவன் கொடுத்த ஓலையைப் படித்த குந்தவை மேலும் மலர்ந்து அடுத்து என்னவென்று கேட்க, ஊருக்குத் திரும்ப வேண்டியதுதான் என்று அவன் கூற, அதற்கு முன் முக்கியமானதொரு வேலையை ஒப்படைக்கப் போவதாகக் குந்தவை சொல்ல, வந்தியத்தேவன் மறுத்தான்.  இளவரசர் தன்னை குந்தவையின் அந்தரங்கக் காவலனாக எதை ஏவினாலும் செய்வதற்காகவே அனுப்பினார் எனவும், ஆனால் தான் பழுவேட்டரையர்களைப் பகைத்துக் கொண்டு அவர்களால் தேடப்படுபவனாகவும், நெருங்கிய நண்பனான கந்தமாறானாலேயே துரோகி என்று குற்றம் சாட்டப்படுபவனாகவும் இருக்கிறேன். வீர வைஷ்ணவனான ஆழ்வார்க்கடியான் என்பவன் தன்னை ஒற்று பார்ப்பதாகவும் கூறினான். நந்தினி தன்மேல் ஒரு மந்திரவாதியை ஏவி விட்டிருக்கிறாள் எனவும் இத்தனை இக்கட்டில் தன்னை முக்கியமான காரியத்துக்கு உபயோகப்படுத்துவது குந்தவைக்கு சிக்கலில்தான் முடியும் என்று கூறி வருந்தினான். ஓடையில் படகில் ஏறி அவன் வந்ததிலிருந்து நடந்த கதையை ஒன்றுவிடாமல்  குந்தவை கேட்டுக் கொண்டாள். வந்தியத்தேவனும் வந்து சேர்ந்த கதையைச் சொல்லி, அந்த சந்திப்பு சீக்கிரம் முடிந்து விடாதபடி நீட்டிக் கொண்டே போனான். பழுவேட்டரையர்களின் படைவீரர்களால் துரத்தப்பட்ட வந்தியத்தேவன், சேந்தன் அமுதன் காட்டிய வழியில் சென்றுகொண்டிருந்தபொழுது பின்னால் படைவீரர்கள் நெருங்க, சேந்தன் அமுதனிடம் குதிரையை ஓட்டிக்கொண்டு முன்னால் செல்லும்படியும் என்னைக் கேட்டால் ஆற்றில் மூழ்கிவிட்டான் என்று கூறுமாறும் சொல்லித் தப்பிக்க யத்தனித்தான். சேந்தன் அமுதன் பொய் கூறமாட்டேன் எனச் சொல்லவும், வந்தியத் தேவன் நிஜமாகவே நீரில் மூழ்க, தொடர்ந்து வந்த படைவீரர்கள் சேந்தன் அமுதனைத் துரத்திச் சென்ற வேளையில் அவர்களிடமிருந்து தப்பித்து இரவில் அடர்ந்திருந்த தோப்புகளில் மறைந்து பழையாறைக்குச் சென்று கொண்டிருந்தான். இரவில் ஒரு பாழடைந்த மண்டபத்தில் உறங்கியபோது நந்தினியின் அரண்மனையில் கேட்ட அதே ஆந்தைக்குரல் கேட்க, தூணில் ஒளிந்து கொண்டு பார்த்தபொழுது அந்த மந்திரவாதி ரவிதாஸன் வந்துகொண்டிருந்தான். பார்க்கவே அச்சமூட்டும்படி இருந்த ரவிதாஸன், இருளில் தன்னைக் கவனித்திருக்க மாட்டான் என்று நினைத்திருந்த பொழுது, அவன் வந்தியத்தேவன் கழுத்தை நெறித்து  நந்தினியின் முத்திரை மோதிரத்தைத் தருமாறு கேட்க சமாளித்து தூணைப் பிடித்து காலால் தாக்கிவிட்டுத் தப்பித்தான். பழையாறை நகரில் நுழைய தக்க தருணம் பார்த்துக் காத்திருந்த பொழுது, நாடகக் கோஷ்டியுடன் இணைந்து கம்ஸ வேஷம் தரித்து ஊருக்குள் புகுந்து சிறிது நேரம் தெருக்களில் ஆடிக் களித்தபின் ஆதித்த கரிகாலன் சொன்னபடி ஈசான பட்டரைச் சந்தித்தான். சமணர் முழையில் அவனை ஒளித்து வைத்த ஈசான பட்டர், தக்க நேரம் பார்த்து இளவரசியைச் சந்திக்க அழைத்துச் சென்றார்.  விவரங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட குந்தவை, இதெல்லாம் ஒன்றுமில்லை என்று கூறும்படியான அபாயமானதொரு வேலையைத் தரப்போவதாகக் கூற, வானிலேறி விண்ணையே சாடும் வேலையாக இருப்பினும் செய்யக் கூடியவனாக வந்தியத்தேவன் சித்தமானான். திரும்பவும் மண்டபத்திற்கு வந்து  பனை ஓலைத்துணுக்கில் தங்கப் பிடி இட்ட எழுத்தாணியில் குந்தவை எழுதினாள். ‘பொன்னியின் செல்வ! இந்த ஓலை கண்டதும் உடனே புறப்பட்டு வரவும். விவரங்கள் இது கொண்டு வருகிறவர் சொல்லுவார். இவரைப் பூரணமாக நம்பலாம்’ என்று எழுதி அடியில் ஆத்தி இலை போன்ற சித்திரம் ஒன்றை வரைந்து, “உடனே இந்த ஓலையை எடுத்துக்கொண்டு ஈழ நாட்டுக்குச் சென்று அருள்மொழிவர்மரிடம் கொடுத்து, அவரைக் கையோடு கூட்டிவர வேண்டும்” எனக் கட்டளையிட்டாள்.  ஆதித்த கரிகாலரிடம் பணிபுரிந்த வந்தியத்தேவன், சுந்தர சோழரையும் சோழர் குலவிளக்கான குந்தவையையும் சந்தித்த பிறகு, இளவரசர் அருள்மொழிவர்மரையும் சந்திக்கப் போகும் பேறை நினைத்துப் பெருமிதம் கொண்டான். “இப்போதே கிளம்புகிறேன்” என்று ஓலையை வாங்கும்பொழுது குந்தவையின் காந்தள் விரல்களைத் தீண்டியபொழுது மறுபடியும் அவன் உலகம் சுழல மறுத்து நின்றது. ஈசான பட்டரின் குரலைக்கேட்டு நடைமுறைக்குத் திரும்பினான்.  மறுநாள், படைவீட்டு சாலையின் வழியே யானையில் அமர்ந்தபடி குந்தவையும் வானதியும் பராந்தகர் ஆதுரசாலைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த வீதியில் ஈழநாட்டுக்குச் சென்றிருந்த வீரர்களின் பெண்டு பிள்ளைகள் குடியிருந்தார்கள். அங்கிருந்தவர்களின் நலத்தை விசாரித்து அவர்களுக்குத் தேவையானதை வழங்க உத்தரவு இடுவது குந்தவையின் வழக்கம். இன்றும் அதுபோல வானதியைப் பரிகசித்தபடி உத்தரவை வழங்கிக் கொண்டிருந்தவளை, தலைமை வைத்தியர் அணுகி வணங்கினார். தான் சொன்ன இளைஞனை இலங்கைக்கு அனுப்பி மூலிகைகள் தருவித்துக் கொள்வதாகச் சொன்ன ஏற்பாட்டை உறுதி செய்துகொண்ட குந்தவை, அவனைப் பற்றிக் கேட்க, வைத்தியர் அந்த இளைஞனுடன் கோடியக்கரை வரை என் மகனும் துணைக்குச் செல்வதாகக் கூறி அவர்களை அறிமுகப் படுத்தினார்.  வானதி வைத்தியர் போல் வேடம் பூண்டிருந்த வந்தியத்தேவனை அடையாளம் கண்டுகொண்டு குந்தவையிடம் கூற, அவள் ஏதும் தெரியாதது போல இருக்கலாம் என்று சமாதானப் படுத்தினாள். குந்தவை வைத்தியரிடம், சக்கரவர்த்திக்கு  வைத்தியம் செய்ய மூலிகை எடுக்கப் போகவேண்டியிருப்பதால் வழியிலுள்ள அரசு அதிகாரிகள் இவர்கள் கோரும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற திருமந்திர ஓலையையும், கலங்கரை விளக்குக் காவலருக்கு ஒரு ஓலையும் வழங்கப்பட்டதை உறுதி செய்து கொண்டாள். கிளம்பும் அனைத்து ஏற்பாடுகளும் நடந்தபின்னும் ஏதோவொரு சாக்கை வைத்துக்கொண்டு குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக்கொண்டே இருந்தார்கள். ஒருவழியாக குந்தவை குறிப்புணர்த்த, வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் குதிரையில் கிளம்பினர். குந்தவை தன் மனம் வந்தியத்தேவனின் மீது கொண்டுள்ள ஈடுபாட்டை எண்ணி அதிசயப்பட்டபடி இருக்க, வானதி அதைக் கண்டுபிடித்தாற்போல் ஏதோ கேட்க, யோசனையுடன் மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள். தொடரும் சவிதா

பொன்னியின் செல்வன் – 7

பொன்னியின் செல்வன் – 7

வந்தியத்தேவன் தனக்குள் வலிந்து ஏற்றிக் கொண்ட திடசித்தத்தால் நந்தினியின் மோகன சக்தியையும்  அவளின் தேர்ந்த மயக்கும் சொற்களையும் சமாளித்து, அவனுடைய எஜமான விசுவாசம் என்ற கவசத்தால் தகுந்த மறுமொழிகளைத் தந்தான். ‘முற்பிறவியில் நாம் சந்தித்தவர்களாக இருந்திருப்போம்’ என்று நந்தினி கூறியபோதுகூட, மனதில் குடந்தை ஜோதிடர் வீட்டில் சந்தித்த பெண்ணை நினைத்தபடி நந்தினியை ஒட்டியே பேசினான்.  ஆழ்வார்க்கடியான் தன்னிடம் நந்தினியைத் தன் தங்கையெனக் கூறியதாகவும் மறுபடியும் பழைய வாழ்க்கைக்குத் தங்களை அழைத்துப் போக விருப்பமாக இருப்பதையும் நந்தினியிடம் கூறச் சொல்லியதாகக் கூறினான். ‘அது தன்னால் முடியாது’ என்று கூறிய நந்தினியிடம், அவளைப் பாராட்டி புகழ்ந்தே வந்தியத்தேவன் பேசியதை அவள் ஒருவாறு ஏற்றுக் கொண்டாள். முத்திரை மோதிரத்தை பழுவேட்டரையர் தன்னிடம் கொடுத்ததாக சின்னப் பழுவேட்டரையரிடம் பொய் சொன்னதாகச் சொல்லிக் கொண்டிருந்தபோது எக்காளங்களும் முரசுகளும் ஒலிக்கக் கேட்டு பெரிய பழுவேட்டரையர் வந்து கொண்டிருப்பதைப் புரிந்து கொண்டார்கள்.  பேச்சுவாக்கில் குந்தவையைப் பற்றிப் பேசும்போது நந்தினியின் கண்ணில் தெரிந்த குரோதத்தைக் கண்ட வந்தியத்தேவன் உள்ளூர அதிர்ந்தான். தனக்கான அந்தரங்க ஊழியனாக இருக்கச் சொல்லி நந்தினி கேட்டபொழுது, அந்தப் பணிக்காகவே தன் தலைவன் கரிகாலன் குந்தவையிடம் தன்னை அனுப்பி வைத்திருப்பதாக வந்தியத்தேவன் கூறியதைக் கேட்டு எரிச்சலடைந்தாள். குந்தவைக்கு எடுத்துச் செல்லும் ஓலையைப் படித்துவிட்டு, இதற்கு மறுமொழியை என்னிடம் காட்டுவதாயிருந்தால் இந்தக் கோட்டையை விட்டு உங்களைத் தப்பி செல்ல உதவி செய்வதோடு  வேறு சில உதவிகளும் என்னால் செய்ய முடியும் என நந்தினி கூறியபோது ஆந்தையின் குரல் கேட்டது. நிஜ மந்திரவாதியே வந்து விட்டான் என்றாள் நந்தினி; வந்தியத்தேவன் மறைந்து கொண்டான்.  ஆழ்வார்க்கடியான் திருப்புறம்பியம் பள்ளிப்படையில் பார்த்த அந்த ரவிதாசன்தான் மந்திரவாதியாக வந்திருந்தான். நந்தினியிடம் அவளின் பழைய கதையை நினைவூட்டிய ரவிதாசன்,  வீரபாண்டியன் சிதையோடு கட்டாய உடன்கட்டை ஏற்றப்பட இருந்த அவள், தங்களுடன் இணைந்து பழிவாங்கும் நடவடிக்கையில் உதவுவேன் என்று சொன்னதை நினைவூட்டினான். தங்கள் கூட்டத்தில் யாரும் நம்பவில்லையாயினும், தான் மட்டும் அவளை நம்பிக் காப்பாற்றியதாகவும், நந்தினி பழுவேட்டரையரை மணந்து கொண்டதால் ஆத்திரமுற்றுக் கொல்ல வந்த பொழுது, பழைய சம்பவங்களுக்குப் பழிவாங்குவதற்கே இந்த அரண்மனையில் இருப்பதாக நந்தினி கூறியதையும் அவளுக்கு நினைவுபடுத்தி,  இப்பொழுது சுகபோகத்தில் அதை மறந்து விட்டதாகக் குற்றம் சாட்டினான். மேலும் வந்தியத்தேவனின் அழகில் அவள் மயங்கியிருக்கலாம் என்றும் சொல்ல, நந்தினி கோபமுற்று தான் செய்யும் திட்டங்கள் குந்தவைக்கு எதிரானவை என்றும் அங்கிருந்தும் சோழ அரசை அழிக்கும் செயலைத் தொடங்க வேண்டும் என்றும் கூறினாள். அதை நம்பாமல் பார்த்த ரவிதாசனிடம், வந்தியத்தேவனை அவனிடம் ஒப்படைப்பதாகவும் அவனுடன் சென்று குந்தவையிடம் பதில் ஓலை வாங்கியதும் தன்னிடம் அழைத்து வருமாறும் கூறிவிட்டு வந்தியத்தேவனைத் தேடியபோது அவன் அங்கிருந்து காணாமல் போயிருந்தான்.  பெரிய பழுவேட்டரையர் திரும்பி வந்தபொழுது எப்பொழுதும் எதிர்கொள்ளும் சின்ன பழுவேட்டரையர் சிறிது நேரம் கழித்தே வந்தார். போன காரியம் வெற்றியடைந்ததைப் பற்றிச் சொன்ன பெரிய பழுவேட்டரையரிடம், குந்தவையிடமும் செம்பியன் மாதேவியிடமும் கவனத்துடன் இருக்க வேண்டுமென சின்ன பழுவேட்டரையர் கேட்டுக் கொண்டார்.  பின்னர் பெரியவர் பெயரைச் சொல்லிக் கொண்டு முத்திரை மோதிரத்துடன் வந்திருந்த வந்தியத்தேவன் பற்றிய நிகழ்ச்சிகளைச் சின்னவர் சொல்ல, இருவரையும் வந்தியத்தேவன் ஏமாற்றி விட்டதை உணர்ந்து கோபமடைந்தனர். அப்படியானால் அந்த முத்திரை மோதிரம் இளையராணிதான்  தந்திருக்க முடியும் எனவும், நந்தினி மேல் தனக்கிருக்கும் சந்தேகங்களையும் சின்ன பழுவேட்டரையர் கூற, பெரியவர் சின்னப் பையனிடம் ஏமாந்துவிட்டதற்காகவும் நந்தினி மேல் சந்தேகப்பட்டதற்காகவும் சினந்து, தம்பியை வார்த்தைகளில் வறுத்தெடுத்துவிட்டு நந்தினியைப் பார்க்கச் சென்றார். செல்லும் வழியில் நந்தினியைப் பற்றி யோசித்துக் கொண்டே சென்ற பெரியவர், மந்திரவாதியை அடிக்கடி அழைத்துப் பேசுவது, தன்னைத் தொட விடாமல் விரதம் என்று சொல்வது பற்றியெல்லாம் கேட்டே ஆகவேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டார். பழுவேட்டரையர் லதாமண்டபத்தை அடையும்பொழுது நந்தினி அழுதுகொண்டே, தான் அவரை விட்டுப் பிரிந்து இருப்பது கடினமாக இருந்தது என்றும், தன்னை அனைவரும் பழிசுமத்துகிறார்கள் எனவும் நாடகமாடினாள். நந்தினியின் நடிப்புக்குக் கைப்பாவையாகிவிட்ட பழுவேட்டரையர், அவளை சமாதானப் படுத்தினார். மதுராந்தகனை நந்தினி அரச பதவிக்காக மனம் மாற்றியதையும், சுரங்க வழியில் சென்று பல்லக்கில் மறைத்து சென்றதையும் அவளின் புத்திசாலித்தனமான யோசனை எனக் கூறிப் பாராட்டி சமாதானப்படுத்த முயன்றார். நந்தினி மேலும் மேலுமாக நடித்து, ‘ஒரு கிழ எருமை மாட்டை இந்த இளம்வயதில் மணந்திருக்கிறாயே’ என்று சொல்லி குந்தவை அவளை ஏற்கனவே அவமானப்படுத்தியதை எல்லாம் சொல்லி அழத் தொடங்க, குந்தவை மீதான பழுவேட்டரையரின் சினம் மேலும் அதிகமானது. போர்க்களத்தில் தன்னந்தனியான வழியில் அபயம் என நந்தினி வந்தபோதே அவர் உள்ளம் அவள்பால் விழுந்து விட்டது என்றும் முன் பிறவிகளாய் நாம் இணைந்திருந்தோம் என்றும் பழைய கதைகளைக் கூறக்கூற நந்தினி பின்பக்கமாய்த் திரும்பி எரிச்சலை அடக்கிக்கொண்டு அவர் பேசுவதைக் கண்டு மகிழ்வதைப் போல நடித்தாள்.  மேலும், வீரராகிய அவர் பெண்ணான குந்தவையின் மந்திரசக்தியை எதிர்ப்பது அவரின் வீரத்துக்கே இழுக்கு என்பதால்தான், மந்திரவாதியின் உதவியைத் தான் நாடுவதாக நந்தினி கூறியதும் பழுவேட்டரையர் உருகிவிட்டார். அந்தப் பொழுதிலேயே நந்தினி, சுந்தர சோழரை அரச பதவியிலிருந்து இறக்கிவிட்டு பழுவேட்டரையரை சோழ சிம்மாசனத்தில் அமர வைப்பதுதான் தன் திட்டம் எனக் கூறவும் அவர் மேலும் நிலைகுலைந்தார்.  மந்திரவாதியும் நந்தினியும் பேசிக்கொண்டிருந்த போதே, அங்கிருந்து மறைவில் சென்ற வந்தியத்தேவன் தட்டுத்தடுமாறியபடி ஒரு இருண்ட சுரங்கப்பாதையை அடைந்தான். இருட்டில் துழாவியபடி வழியைத்தேடிக் கொண்டிருந்தபோது காலடிச் சத்தம் கேட்டு அத்திசையில் பார்க்கையில் மதுராந்தகனை வேல் தாங்கிய காவலன் ஒருவனும், அவனுடைய நண்பனான கந்தமாறனும் அழைத்து வருவதைக் கண்டான். பல்லக்கில் நந்தினியை அனுப்பிவிட்டு கோட்டைக்குள் சுரங்க வழியாக மதுராந்தகனை ரகசியமாக அழைத்து வருவதைப் புரிந்து மறைந்து கொண்டான். அவர்கள் வந்த வழியே தப்பிச் சென்றுவிடலாம் என்று கருதி அவ்வழியே சென்றவன் ஒரு இடத்தில் மாட்டிக்கொள்ள, அந்த இடம் பொக்கிஷ நிலவறை என்பதை உணர்ந்துகொண்டான். மறுபடியும் ஏதோ ஒலி கேட்க வந்தியத்தேவன் ஒளிந்து நின்று கவனித்தான். மதுராந்தகனை விட்டுவிட்டு வந்த கந்தமாறன், காவலனுடன்  ஒருபுறம் வர, பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடன் இன்னொரு புறத்திலிருந்து வந்து சந்தித்து ஏதோ பேசிக்கொண்டார்கள்.  பிறகு கந்தமாறன் விடைபெற்று முந்திச் செல்ல பெரிய பழுவேட்டரையர் பின்செல்லும் வீரனுக்கு ஏதோ சமிக்ஞை செய்தார். இருண்ட அந்தப் பாதையில் கந்தமாறனைப் பின் தொடர்ந்தால் கோட்டைக்கு வெளியே சென்றுவிடலாம் என்று புரிந்து கொண்ட வந்தியத்தேவன் சற்றுத்தொலைவில் அவர்களைப் பின் தொடர்ந்தான்.  ரகசியமான இடத்தில் சுவர் திறக்கப்பட, முதலில் வெளியேறிய கந்தமாறனைப் பின்னாலிருந்து காவலன் கத்தியால் குத்தினான். வந்தியத்தேவன் துரிதமாகச் செயல்பட்டு, அந்தக் காவலன் மேலும் கந்தமாறனைத் தாக்காதவாறு அவனை உதைக்க, அவன் சுவரில் மோதி கீழே சரிந்தான். அந்த நேரத்தில்  விளக்கு வெளிச்சம் வந்தியத்தேவன் மீது விழுந்தது. முதலில் கந்தமாறனைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்று உணர்ந்து கொண்ட வந்தியத்தேவன், அந்தக் காவலனை அவனது அங்கவஸ்திரத்தைக் கொண்டேக் கட்டிப் போட்டுவிட்டு, மயங்கிச் சரிந்திருந்த கந்தமாறனைத்  தூக்கிக்கொண்டு சுரங்கப் பாதையிலிருந்து வெளியே வந்தான். அது கோட்டைக்கு வெளியே வடவாறு ஒட்டிச்செல்லும் இடம் என்பதைக் கவனித்து கந்தமாறனைத் தோளில் சுமந்து நீரில் மூழ்கிவிடாதவாறு ஓரமாகவே சென்று ஆழம் குறைவாக இருந்த இடத்தில் சிரமப்பட்டு ஆற்றைக் கடந்து சென்றான். மரநிழலில் அவனைக் கீழே இறக்கி இன்னும் உயிர் இருக்கிறதா என்று பார்க்க, சற்றே கண்விழித்த  கந்தமாறன், வந்தியத்தேவன்தான் தன்னைப் பின்னாலிருந்து  கத்தியால் குத்திவிட்டதாகக் குற்றம் சாட்டடிவிட்டு மீண்டும் மயங்கிவிட்டான். வந்தியத்தேவன் உள்ளம் சோர்ந்து போனான்.  மறுபடியும் கந்தன்மாறனைத் தூக்கிக் கொண்டு பக்கத்திலிருந்த சேந்தன் அமுதன் வீட்டிற்குச் சென்றான். தோட்டத்தை நெருங்கியபோதே அது முற்றிலுமாக நாசமாக்கப்பட்டு இருந்ததைக் கண்டு கலங்கிப் போனான். சின்ன பழுவேட்டரையரின் ஆட்கள், தான் தங்கியிருந்த இடத்தைக் கண்டுபிடித்து வந்து நாசமாக்கியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டவன், திண்ணையில் படுத்திருந்த சேந்தன் அமுதனை மெல்ல எழுப்பி கந்தமாறனைக் காப்பாற்ற வேண்டிய அவசியத்தைக் கூறினான். சேந்தன் அமுதன், படைகள் வந்து அவனை விசாரித்து  நந்தவனத்தை அழித்துவிட்டுப் போனதாகவும் நல்லவேளையாகக் குதிரையை ஒன்றும் செய்யவில்லை என்றும் சொல்லிவிட்டு முதலில் இங்கிருந்து தப்பித்துப் போகும்படி வந்தியத்தேவனிடம் கூறினான். தன்னுடைய அன்னை வைத்தியத்தில் தேர்ந்தவள் என்று கூறிய சேந்தன் அமுதன் அன்னையை எழுப்பினான். பச்சிலைகள் கட்டி கந்தமாறனுக்கு மருத்துவம் செய்யத் தொடங்கியபோது படைவீரர்கள் வரும் சத்தம் கேட்கவே, சேந்தன் அமுதனை பழையாறைக்குச் செல்ல சிறிது தூரம் வழிகாட்ட வருமாறு அழைத்துக் கொண்டு வந்தியத்தேவன் குதிரையில் ஏறிக் கிளம்பினான். வந்த படைவீரர்கள் வாய்பேசமுடியாத முதியவளிடமிருந்து எதையும் தெரிந்துகொள்ள முடியாமல் வெளியேறினர். அதில் பாதிப்பேர் குதிரைச் சத்தத்தைக் கேட்டு வந்தியத்தேவனை துரத்திக்கொண்டு சென்றனர். மறைந்த கண்டராதித்தரின் மனைவியான செம்பியன் மாதேவியும், குந்தவையும், வானதியும், பழையாறையில் கிருஷ்ணனின் பிறந்தநாளான அன்று பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டுத் திரும்புகையில் ஆழ்வார்க்கடியானைக் கண்டார்கள். சிறு சமிக்ஞையின் மூலம் அவனை அரண்மனைக்கு வருமாறு சைகை செய்தனர். ஆழ்வார்க்கடியான் முதலில் செம்பியன் மாதேவியைச் சந்தித்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைப் பற்றி விவரமாகக் கூறலானான். ‘ஆதித்த கரிகாலன், பார்த்திபேந்திர பல்லவன் மற்றும் ஆதித்த கரிகாலனுடைய பாட்டனாராகிய திருக்கோவலூர் மலையமான் ஆகியோர் காஞ்சிபுரத்தில் பேசிக்கொண்டனர். இரண்டு பழுவேட்டரையர்களும் மதுராந்தகனும் சேர்ந்து சதி செய்து, சக்ரவர்த்தியைச் சிறைப்படுத்தி வைத்திருப்பதாகவும் அதற்கு செம்பியன் மாதேவியின் ஆதரவும் உள்ளது என்று சந்தேகப் படுகிறார்கள். எனவே அந்தரங்கமான தூதுவன் ஒருவனை ஓலை கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். அவன் சக்ரவர்த்தியைச் சந்தித்து ஓலையைக் கொடுத்து விட்டான். பதில் அளிப்பதற்கு ஒரு நாள் காத்திருக்குமாறு சக்ரவர்த்தி கூற, அதற்குள் அவன் சின்ன பழுவேட்டரையனின் கட்டுக்காவலை மீறித் தப்பித்துவிட்டான். அவன் அசகாய சூரன். மேலும்…’ என ஆழ்வார்க்கடியான் தயங்கியபோது, எதுவானாலும் சொல்லுமாறு செம்பியன் மாதேவி கூறினார். மதுராந்தகன் பல்லக்கில் கடம்பூரில் நடந்த ரகசியக் கூட்டத்துக்கு வந்ததையும், அங்கு நடந்த ஆலோசனைகளைப் பற்றியும் கூறினான். மிகவும் வருந்திய செம்பியன் மாதேவி குந்தவை தேவியைக் கலந்துகொண்டு மறுபடியும் ஆழ்வார்க்கடியானைச் சந்திப்பதாகக் கூறி அவனை அனுப்பி வைத்தார். பழையாறை நகரில் சோழ அரண்மனையை ஒட்டி ஓடை ஒன்றை அரசர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். குந்தவையின் மாளிகையில் உத்தியானவனத்தில்  குந்தவையும் வானதியும் பேசிக்கொண்டிருந்தனர். ஈழத்துக்கு

பொன்னியின் செல்வன் – 6

பொன்னியின் செல்வன் – 6

கோட்டைக்குள் நுழைந்த வந்தியத்தேவனுக்கு, ஒரு நகரத்துக்கு வந்த புதிதான அனுபவம் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளித்தது. பழுவூர் இளையராணியின் முத்திரை மோதிரம், காட்டிய மாத்திரத்தில் ஒரு கேள்விகூட இல்லாமல் அனைத்துக் கதவுகளையும் திறக்கக்கூடிய வல்லமை படைத்ததாக இருந்தது. நகருக்குப் புதியவன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தாமல் புலிக்கொடி பறந்து கொண்டிருந்த அரண்மனையை நோக்கி அரசரைக் காண வந்தியத்தேவன் சென்று கொண்டிருந்தான். சின்ன பழுவேட்டரையரைத் தாண்டி அரசரை யாரும் சந்திக்க முடியாது என்று தெரிந்து கொண்ட வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர் இன்னும் கடம்பூரிலிருந்து திரும்பவில்லை என்பதையும் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்டான். அரண்மனையினுள் நுழைந்தவன் சின்னப் பழுவேட்டரையரைச் சந்திக்க எங்கு செல்வது என்று குழம்பிக் கொண்டிருந்தபொழுது, ஒரு புலவர் கூட்டம் அரசரைச் சந்திக்க அவரின் அனுமதி வாங்கச் சென்று கொண்டிருந்ததைக் கண்டு அவர்களுடன் இணைந்து கொண்டான். தமையனாரை விட ஆஜானுபாகுவாய் வீற்றிருந்த சின்ன பழுவேட்டரையரை நெருங்கி அறிமுகப்படுத்திக் கொண்டான். வீர இளைஞர்களைக் கண்டால் தன் காவல்படையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளும் ஆவலில் ஆர்வமாகக் கவனித்த சின்ன பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலனின் தூதுவன் என்றதும் முகம் கடுத்தார். ஓலையை வாங்கிப் படித்துப் பார்த்துவிட்டு புதிதாக ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு, அரசரிடம் தானே ஓலையைச் சேர்த்து விடுவதாகக் கூறினார். இதை எதிர்பார்த்திருந்தபடியால் வந்தியத்தேவன் கடம்பூரில் பெரிய பழுவேட்டரையரைப் பார்த்ததாகவும் அவர்தான் இந்த ஓலையை அரசரிடம் தன்னையே கொடுக்கச் சொன்னதாகவும் இட்டுக் கட்டிக்கூற, அரசரைப் பார்க்க உள்ளே அனுப்பினார். அரசரைக் கண்டதும் பரவசமும், அவர் நோயில் நலிந்து காணப்பட்டதால் வருத்தமும் அடைந்த வந்தியத்தேவனுக்குப் பேச்சே வரவில்லை. மகனிடமிருந்து வந்த ஓலை என்றது அரசரும், அரசியுமான வானமாதேவியும் மிகவும் மகிழ்ந்தனர். தான் கட்டிக்கொண்டிருக்கும் பொன்மாளிகைக்கு வருகை தருமாறு ஓலையில் ஆதித்த கரிகாலன் எழுதியிருந்ததைப் படித்த அரசர், ‘தெய்வங்களுக்கு மட்டுமே பொன்மாளிகை ஏற்படுத்த வேண்டும்; மனிதர்களுக்குத் தேவையா?’ என்று வருந்த, தாயும் தகப்பனுமாயும், நாட்டுக்கான அரசனுமாயும் விளங்கும் சுந்தரசோழர்-வானமாதேவிக்குப் பொன்மாளிகை கட்டியது தவறில்லை என வந்தியத்தேவன் இனிய சொற்களைக் கூற, இருவருக்கும் வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. தூரத்தில் சின்ன பழுவேட்டரையர் வருவதைக் கண்டவன், தான் சொல்ல நினைத்ததை அவசர அவசரமாகக் கூறினான். ‘தாங்கள் தஞ்சையிலிருந்து கிளம்ப வேண்டும். இங்கு அபாயம் சூழ்ந்து கொண்டிருக்கிறது. அபாயம்.. அபாயம்’ .. எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சின்ன பழுவேட்டரையர் உள்ளே நுழைய, அவர் கடைசி வார்த்தையைக் கேட்டு விட்டார். அப்போது புலவர்கள் உள்ளே வர, வந்தியத்தேவன் அவர்களுடனேயே போய் நின்றுகொண்டான். வந்த புலவர்கள் தமிழ்ப் பாடல்களைப் பாட, அரசர் அதில் லயித்து மகிழ்ந்தார். பாடல்கள் வழி ஒரு குறிப்பு இருந்தது. அது இலங்கையில் நடக்கும் போருக்கு இங்கிருந்து உணவுப் பொருட்கள் அனுப்ப வேண்டாம் என்பதாகும். நடுவில் குந்தவை தேவியைப் பற்றி அரசர் பேசியபோது, அவரின் முகம் நெகிழ்ந்ததைக் கண்ட வந்தியத்தேவன், அவரைச் சந்தித்து அடுத்த ஓலையைக் கொடுக்க வேண்டும் என்று இடுப்பைத் தொட்டு பார்த்தான். ஓலையைக் காணவில்லை. எங்கோ தொலைந்து போய்விட்டது என்று தெரிந்துகொண்டவன், இருப்பில் நிற்காமல் பதட்டமுற்று கிளம்பிக் கொண்டிருக்கும் அந்த புலவர்களுடனேயே திரும்ப முனைந்தான். ஆனால் சின்ன பழுவேட்டரையர் அவனைப் போகவிடாமல் இறுகக் கைப்பற்றி அரசரிடம் கூட்டிச்சென்று அபாயம் என அவர் காதில் விழுந்ததைப் பற்றி விசாரித்தார். சுதாரித்துக்கொண்ட வந்தியத்தேவன், தான் அபயம் எனக் கேட்டதாகவும், தனக்கு ஒரு பத்து கிராமங்களாவது தங்களுடைய முன்னோர் பூமியில் அளிக்குமாறு வேண்டிக் கொண்டதாகவும் முறையிட்டான். அதையும் ரசித்த அரசரிடம், சின்ன பழுவேட்டரையர் ஓலைக்கு என்ன பதில் அனுப்புவது என்று கேட்க, அரசர் தஞ்சையை விட்டு வெளியே போவதில் அதுவும் பெண் பிள்ளைகள் போகும் பல்லக்கில் கால் செயலிழந்த நிலையில் போவது விருப்பமில்லை என்று கூறினார். அதற்குத் தகுந்த பதில் பெரிய பழுவேட்டரையர் திரும்பி வந்ததும் கலந்துகொண்டு அனுப்பலாம் எனவும், தன் பிள்ளைகளைப் பார்க்கவேண்டும் போல் இருப்பதாகவும், எனவே ஆதித்த கரிகாலனையும், ஈழம் சென்றிருக்கும் அருள்மொழி வர்மனையும் வரச் சொல்லி ஓலை எழுதவேண்டும் எனவும் கூறினார். அதுவரை வந்தியத்தேவனை இங்கேயே தங்க ஏற்பாடு செய்யுமாறும் கூறினார். ஈழத்திற்கு உணவுப் பொருட்கள் அனுப்புவதற்கான சின்ன பழுவேட்டரையரின் ஆட்சேபனையைப் புலவர்களின் பாட்டால் குறிப்புணர்த்தியதைப் புரிந்துகொண்ட அரசர், அதற்கும் ஏற்பாடு செய்யலாம் எனக் கூறினார். யமனிடமிருந்து கூட மீட்டு வருபவர் என்னும் அளவுக்கு அரசர் சின்ன பழுவேட்டரையரின்பால் நம்பிக்கை வைத்திருந்தது அவர் பேச்சிலேயே தெரிந்தது. ஓலையைத் தொலைத்திருந்த வந்தியத்தேவனுக்கு மனம் தடுமாறிக் கொண்டே இருந்தது. அவன் நினைத்தாற்போலவே அந்த ஓலை சின்ன பழுவேட்டரையரிடம் ஒரு காவலன் மூலமாக அடைந்திருந்தது. ‘அந்தரங்கமான காரியங்களுக்கு உண்மையான தீரன் வேண்டும் எனக் கேட்டிருந்தாய் அல்லவா? ஓலையைக் கொண்டு வருபவனே அந்த வீரன்’ என்றும், ‘வந்தியத்தேவனைப் பூரணமாக நம்பலாம்’ என்றும் ஆதித்த கரிகாலன் அந்த ஓலையில் எழுதியிருந்ததைக் கண்ட சின்ன பழுவேட்டரையர், இதில் ஏதோ சூது இருக்கிறது என்று புரிந்து கொண்டே வேகமாக அங்கு வந்திருந்தார்.  அரசரிடம் விடைபெற்றுக்கொண்டு, வந்தியத்தேவனைக் காவலாளிகளிடம் ஒப்படைத்து நன்கு உபசரிக்கும்படி ஆணையிட்டார். வெகுதூரம் வந்த களைப்பு போக அந்த மாளிகையில் தனக்கு அளிக்கப்பட்ட சுகபோக உபசரிப்பில் வந்த விஷயத்தையே மறந்து போகும் வண்ணம் மகிழ்ந்திருந்தான் வந்தியத்தேவன். புதிய உடைகள், உணவு எல்லாவற்றையும் ருசித்தவன், அங்கிருந்த சிற்பக் கூடத்தைச் சுற்றிப் பார்த்து சோழர்குல வரிசை, பராக்கிரமம், போர்கள், போரில் வீர மரணம் அடைந்தவர்கள், அதில் பழுவேட்டரையர் பரம்பரை செய்த தியாகங்கள், உதவிகள் எல்லாவற்றையும் பார்வையிட்டுப் புரிந்து கொண்டான்.  தன்னைக் கண்காணிப்பதற்கே இந்த உபசரிப்பு என்று புரிந்து கொண்ட வந்தியத்தேவன், சடுதியில் ஒரு திட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு அங்கிருந்த காவலாளிகளிடம் தன் பொருட்களைத் திருப்பித் தருமாறு சண்டையிட ஆரம்பித்தான். முன்வாசலில் குதிரையில் வந்த சின்ன பழுவேட்டரையரை ஓரக்கண்ணில் கவனித்தவன் தன்னை நெருங்கியவர்களை எல்லாம் ஒரே சுற்றில் வீழ்த்தினான். என்ன கலாட்டா என்று நெருங்கியவர், அவனின் வீரத்தை மனதுக்குள் மெச்சி, தமையனாரிடம் கலந்து கொண்டு  அவனைத் தன் காவற்படையில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணிக்கொண்டார். தன் பொருட்களெல்லாம் காணவில்லை, திரும்ப வேண்டும் என்று கேட்ட வந்தியத்தேவனிடம் என்ன பொருட்கள் எனக் கேட்க, அவன் வேறுவழியில்லாமல் குந்தவை தேவியின் ஓலையும் அதில் இருப்பதாகக் கூறி அனைத்துப் பொருட்களும் எனக்குத் திரும்ப வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தான்.  அவர் ஆணையின்படி எடுத்து வந்த பொருட்களில், தவறவிடப்பட்டிருந்த ஓலையும் அவன் வைத்திருந்ததை விட அதிகப் பொற்காசுகளும் இருந்தன. இதிலிருந்தே தன்னை உளவு பார்த்ததைப் புரிந்து கொண்டவன், அதிகப்படியாக இருந்த காசுகளை மறுத்தான். அதை வைத்துக்கொள்ளுமாறு கூறிய சின்ன பழுவேட்டரையர், அவன் அன்று அங்கேயே தங்கி, பெரிய பழுவேட்டரையரைப் பார்த்துவிட்டுப் போகிறானா என அவன் திட்டத்தை விசாரித்தார். இருந்துவிட்டுப் போவதாகவே கூறியவன், தஞ்சைக் கோட்டையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென அனுமதி கேட்டான். அவனுடன் இரு காவலாளிகளைத் துணைக்கு அனுப்பி, சுற்றிப் பார்க்கச் சொல்லிவிட்டு சின்ன பழுவேட்டரையர் கிளம்பினார்.  தான் தப்பிப் போகாமல் இருப்பதற்குத்தான் காவலாளிகள் இருவரும் வருகிறார்கள் என்று புரிந்துகொண்ட வந்தியத்தேவன், வேடிக்கை பார்ப்பது போல் போக்கு காட்டிக்கொண்டே, அங்கிருந்து எப்படித் தப்புவது என்று யோசித்துக்கொண்டு வந்தான். திடீரென அவனுக்கு நந்தினியின் ஞாபகம் வந்து, இந்தக் கோட்டையில் உதவி செய்வதானால் அவள்தான் செய்ய முடியும் என்று தோன்ற, காவலாளிகளிடம் இருந்து தப்ப சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியில் வேளக்காரப் படை வந்து கொண்டிருந்தது. திடீரென வேளக்காரப் படை வரிசையில் சிறிது குழப்பம் ஏற்பட, அதைப் பிடித்துக் கொண்ட வந்தியத்தேவன் அங்கிருந்து ஓடிய வீரர்களுடன், தானும் ‘பிடி.. பிடி’ என்று சத்தம் போட்டுக்கொண்டே எதிர்ப்பட்ட சந்தின் வழியே தப்பி ஓடினான்.  அவர்களுடனே சிறிது தூரம் ஓடியவன், பின் வழி மாறி சிறிய சந்துகளிலெல்லாம் மாறி மாறிச் சென்று, ஒரு பெரிய மதில் சுவரின் ஓரத்தில்  அமர்ந்து கொண்டான். இந்நேரம் சின்னப் பழுவேட்டரையரின் ஆட்கள் தன்னைத் தேடிக் கொண்டிருப்பார்கள், எப்படியேனும் தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொண்டவன் அப்படியே சுவரின் மீது சாய்ந்து தூங்கி விட்டான். சிறிது நேரத்தில் யாரோ அழைப்பது கேட்டு விழித்தவன் மேலிருந்து ஒரு பெண் உருவம் பேசுவதைக் கண்டு அதிர்ச்சியுற்றான்.  அந்த உருவம் ‘என்ன தூக்கமா? இரு ஏணி வைக்கிறேன். ஏறி வா’ எனக் கூறிவிட்டு மூங்கில் ஏணி ஒன்றை இறக்க, வந்தியத்தேவனால் நம்பவே முடியவில்லை. சரி ஆனது ஆகட்டும். போய்ப் பார்க்கலாம் என ஏறத் தொடங்கினான். ‘ம். அங்கே இளையராணி காத்துக் கொண்டிருக்கிறார்கள். உனக்குத் தூக்கம் கேட்கிறதா’ என்று அந்தப் பெண் கேட்க, வந்தியத்தேவனால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. இளையராணி என்றால் நந்தினியின் மாளிகைக்கா நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணியவன், மேலும் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்வோம் என வேகமாக ஏறினான். மதிலின் உச்சியில் ஏறிக் கீழே பார்த்தபோது, அது ஒரு அரண்மனையின் விஸ்தாரமான தோட்டம் எனத் தெரிந்தது.  யாருடையது எனக் கேட்கத் தொடங்கிய வந்தியத்தேவனை ‘உஷ்.. என அடக்கியபடி அந்தப் பெண் முன்னால் நடந்தாள். வந்தியத்தேவனும் தொடர்ந்தான்.  நடுவில் காவலாளிகளின் சத்தத்திற்கு மறைந்து கொண்டபோது நிலவின் வெளிச்சத்தில் அந்தப் பெண் வந்தியத்தேவன் முகத்தை உற்றுப்பார்த்து, ‘நீ போனமுறை வந்த அதே மந்திரவாதிதானா?’ என்று சந்தேகத்துடன் கேட்க, இவன் சமாளித்துக் கொண்டு அடிக்கடி மாறுவேடம் பூண்டாக வேண்டிய அவசியத்தைக் கூறினான். பின் ஒரு லதா மண்டபத்தை அடைந்தார்கள். அந்த இரவில் அங்கிருந்த விளக்குகளின் ஒளியில் அலங்கரிக்கப்பட்ட அந்த மண்டபம் ஒரு விதத்தில் தேவலோகமென வந்தியத்தேவனுக்குத் தோன்றியது. உள்ளே சென்ற பெண்ணிடம் பேசிய குரலை வைத்து, அது நந்தினிதான் எனப் புரிந்து கொண்டான்.  உள்ளே வந்தியத்தேவன் நுழைந்தபோது ஒயிலாய் சப்பர மஞ்சத்தில் நந்தினி சாய்ந்திருந்தாள். அவனைக் கண்டு வியந்தபோதும், பணிப்பெண்ணின் முன் இருவரும் சமாளித்துக் கொண்டனர். அழகெனும் தெய்வமே உருக்கொண்டாற்போல் நந்தினியின் மோகன உருவத்தைக் கண்டு மயங்கிய வந்தியத்தேவன், முன்னொருமுறை மதுவால் ஏற்பட்ட மயக்கத்தையும், சித்தம் கலங்குவதால் இனிமேல் மது அருந்தக்கூடாது என்று தான் உறுதி எடுத்துக் கொண்டதையும் நினைத்து, இதுவும் அதுபோலத்தான் என்று எண்ணிக் கொண்டு திடமாய் தன்னை

பொன்னியின் செல்வன் – 5

பொன்னியின் செல்வன் – 5

சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் நடந்த யுத்தத்தில் அவ்வப்போது சிங்கள மன்னர்கள் பாண்டியர்களுக்கு உதவி செய்வது வழக்கமாய் இருந்தது. பாண்டிய மன்னனான வீரபாண்டியனை ஆதித்த கரிகாலன் வென்றதைத் தொடர்ந்து, ஈழமன்னனுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என சோழநாடு விரும்பியது. போர் புரிவதை விரும்பும் சோழத் தளபதிகள்,  மாவீரர்கள் அங்கு செல்வதற்குப் போட்டி போட்டனர். அப்பொழுது இளவலான அருள்மொழிவர்மன், தன்னை அனுப்பும்படி அனைவரிடமும் வலியுறுத்தினார். குந்தவை தேவிக்குத் தன் தம்பியாகிய அருள்மொழிவர்மன் மீது தனிப்பிரியம். அவரும் தமக்கை குந்தவை இட்ட கட்டளைகளை மீறியதே கிடையாது. தன் தம்பியை வீரனாகவே வரித்திருந்த குந்தவைக்கு ஈழம் செல்லத் தகுதியானவன் அருள்மொழிவர்மர்தான் என்று தோன்றியது. ஈழத்துக்கு வழியனுப்புகையில், தன் தோழியான வானதியை ஆரத்தி எடுக்கப் பணித்தபொழுது, வானதி தனக்கேற்பட்ட மனக்கிளர்ச்சியால் தட்டைத் தவறவிட்டு மயக்கமடைந்தாள். இளவரசரும் பதற, குந்தவை வானதியைத் தாங்கிப் பிடித்து உள்ளே அழைத்து சென்றார். இளவரசர் வந்து வானதியைசி சற்றே சமாதானப் படுத்திவிட்டு விடைபெற்றுச் சென்றார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் வானதிக்கு அடிக்கடி மயக்கம் வந்தது. குந்தவையும் அவளைக் கண்போலப் பார்த்துக் கொண்டிருந்தாள். இது, உடனிருந்த தோழிகளிடையே வானதியின் மேல் பொறாமையைச் வளரச் செய்தது. வானதியின் பயத்தைப் போக்க, தாங்கள் ஜோதிடர் வீட்டுக்குச் சென்று திரும்புவதற்குள் ஒரு பொம்மை முதலையைத் தயார் செய்து வைக்கச் சொல்லியிருந்தாள் குந்தவை. அவர்கள் இருவரும் திரும்பி வந்தபோது, அனைவரும் ‘முதலை முதலை’ எனக் கத்திக்கொண்டு பயந்தது போல நடித்தனர். வானதி பயப்படவில்லை. ஆனால், இந்த சத்தத்தைக் கேட்டு அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த வந்தியத்தேவன், பெண்களைக் காப்பாற்றுவதாக எண்ணி ஈட்டியால் முதலையைத் தாக்கினான். அதிலிருந்து பஞ்சும், வாழைநாரும் வெளிவந்தன. சுற்றியுள்ள பெண்களெல்லாம் சிரிக்க, வந்தியத்தேவன் குழம்ப, குந்தவை ஜோதிடர் வீட்டில் பதில் சொல்லாமல் வந்ததற்கும், இங்கு பொம்மை முதலையுடன் விளையாடிக் கொண்டிருந்ததையும் சொல்லி வருத்தம் தெரிவிக்க, வந்தியத்தேவன் அடைந்த ஏமாற்றத்தைச் சொல்லி மாளாது. இத்தனையும் பெண்களுக்கு நடுவில் நடக்கவும், அசூயை அடைந்த வந்தியத்தேவன் குதிரையை விரட்டிக்கொண்டு வேகமாகக் கிளம்பி விட்டான். அதைக் கண்டு குந்தவை வருந்தியதோடு, தோழிகளையும் கடிந்து கொண்டாள். குந்தவையைச் சந்தித்தபிறகு அங்கேயே நின்றுவிட்ட மனதைத் திருப்ப முடியாமல் வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். குந்தவையின் நினைவால் இயற்கை எழிலை ரசிக்க முடியாமல் புதுவித உணர்வில் தவித்துக்கொண்டே தஞ்சையை நோக்கிச் சென்று கொண்டிருந்தான். திருவையாறு திரும்பும் வழியில் கடம்பூர் மாளிகையில் பார்த்திருந்த மூடுபல்லக்கு வருவதைக் கவனித்தவன், அதில் இருப்பவர் மதுராந்தகன் என்பதை எப்படியாவது அம்பலப்படுத்திவிட வேண்டும் என முடிவு செய்துகொண்டு பல்லக்கைத் தொடர்ந்தான். பழுவேட்டரையரும் அவரின் பரிவாரங்களும் உடன் வராததால் இன்னும் துணிவு பிறந்தது. பழுவூர் ஆட்கள் இவன் பின்தொடர்வதைக் கவனித்து விசாரிக்க முயல்கையில், வேண்டுமென்றே பல்லக்கை இடிப்பதுபோல் சென்று காப்பாற்ற வேண்டும் என பல்லக்கில் இருப்பவரிடம் முறையிட்டான். காவலர்கள் பிடிக்க வந்த நேரம் பல்லக்கின் மூடுதிரை விலகியபோது உள்ளே தெரிந்த உருவத்தைக் கண்டு அதிர்ந்தான். மதுராந்தகனை எதிர்பார்த்த வந்தியத் தேவனுக்கு அழகிய மோகினியைப் போன்ற பெண்ணைக் கண்டு பேரதிர்ச்சி. முதலில் பேச்சு வராமல் திகைத்தவன், அவள் நந்தினிதான் என்று யூகித்த கணத்தில், ஆழ்வார்க்கடியானின் பெயரை உபயோகித்து, தங்களிடம் பேச வேண்டும் என்றான். பழுவூர் இளைய ராணியான நந்தினி, ஒரு கணம் வியந்தவள் அரண்மனையில் வந்து சந்திக்குமாறு கூற, ‘காவலர்கள் விடமாட்டார்களே’ என வந்தியத்தேவன் நயந்தான். உடனே நந்தினி, ஒரு தந்த மோதிரத்தைக் கொடுத்து, பின் தொடர்ந்து வரவேண்டாம் என எச்சரித்துவிட்டே அந்தப் பல்லக்கை நகரச் சொன்னாள். வந்தியத்தேவன் அவள் அழகில் கிறுகிறுத்துப் போயிருந்தான். பழுவேட்டரையர் இவள் பேச்சைக் கேட்கிறார் என்பது உண்மையானால் அது தவறில்லை என்று நினைத்துக் கொண்டான். பல்லக்கு வெகுதூரம் சென்றபிறகே கிளம்பிய வந்தியத்தேவன், தஞ்சையை அடைந்தான். நகரத்தை ரசிக்க ஆவலிருந்தாலும் முதலில் வந்த வேலையைப் பார்க்க வேண்டும் என்ற கடமையினால், கோட்டை பிரதான வாயிலுக்குச் செல்ல, அங்கு யாரும் உள்ளே சொல்லாமல் ஒதுங்கி நின்றிருந்தனர். காவலர் கவனத்தைக் கவராது உள்ளே செல்வது கடினம் என்று உணர்ந்து கொண்டு, அருகிலிருந்த ஒரு இளம் வாலிபனிடம் பேச்சுக் கொடுத்து, வேளக்காரப் படை வெளியில் வருவதற்காகத்தான் அனைவரும் ஒதுங்கி இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டான். வேளக்காரப் படை பெரும் ஆர்ப்பாட்டத்துடன் வெளிவந்தது. அவர்கள் வெளியில் வந்த பிறகு முக்கியஸ்தர்களைத் தவிர உள்ளே செல்ல யாருக்கும் அனுமதியில்லை என்று தெரிந்து கொண்டவன், இரவைக் கோட்டைக்கு வெளியே கழித்து விடலாம் என்று முடிவு செய்தான். பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சிவபக்தன் போலத் தோற்றமளித்த வாலிபனிடம் பேச்சுக் கொடுத்ததில், அவன் தஞ்சைத் தளிக்குளத்தார் ஆலயத்தில் மலர் கைங்கரியம் செய்து வருபவன் எனத் தெரிந்தது. தங்க இடமிருக்குமா என்று கேட்க, சேந்தன் அமுதன் என்ற அந்த வாலிபன் அவன் வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறினான். அவனுடன் வீட்டுக்குச் சென்ற வந்தியத்தேவன் அவனுடைய தாயார் காது கேளாத, வாய்பேச முடியாத பெண்மணி என்று தெரிந்துகொண்டான். சேந்தன் அமுதனிடம் கோட்டையைப் பற்றிய விவரங்கள் கேட்டு அறிந்தான். கோட்டைக்குள்ளே சுந்தர சோழர், பழுவேட்டரையர்கள், முதன்மந்திரி அநிருத்தர், இளவரசர் மதுராந்தகர் அரண்மனைகளும் மற்றும் அதிகாரிகள் வசிப்பிடங்களும் துர்க்கைக் கோவிலும் கணிகையரும் இருப்பதாகக் கூறினான் சேந்தன் அமுதன். கோட்டைக் காவலர் சின்ன பழுவேட்டரையரின் மகளை மதுராந்தகர் மணந்திருப்பதாகவும் அதற்குப் பிறகு அவரின் குணம் சிறிது மாறிவிட்டதாகவும் கூறினான். வெகு சுவையான உணவை உண்ட வந்தியத்தேவன் அயர்ந்து உறங்கினான். இதற்கிடையில், வந்தியத்தேவன் கிளம்பிப்போன பிறகு திருமலையப்பன் என்னும் ஆழ்வார்க்கடியான், குதிரை வாங்கி வந்த பணியாளோடு பேச ஆரம்பித்தான். தன் பெயர் இடும்பன்காரி என்று அறிமுகப் படுத்திக்கொண்ட அந்தப் பணியாள் தன் கை விரல்களால் மீன் போன்ற முத்திரையைக் காட்ட, ஆழ்வார்க்கடியான் அதைப் புரிந்து கேள்வி கேட்டபோது ஒன்றுமில்லை என்று மறுத்துவிட்டான். ஆழ்வார்க்கடியானிடம் போக்குக் காட்டி அவன் விலகிச் சென்ற சமயத்தில் ஆழ்வார்க்கடியான் மரத்தின் மேல் ஏறிக்கொண்டு திரும்பவும் அவ்விடம் வந்த இடும்பன் காரியைக் கண்காணிக்க ஆரம்பித்தான். வெகுநேரம் கழிந்த பின்பு சோமன் சாம்பவன் என்னும் புதியவன் வந்து மீன் முத்திரையைக் காட்ட, இருவரும் கிளம்பித் திருபுறம்பியம் என்னும் பகைவனின் பள்ளிப்படைக்கு ரகசியமாகச் செல்லவேண்டுமெனப் பேசிக்கொண்டே கிளம்பினர். (பள்ளிப்படை என்பது பழந்தமிழகத்தில் போர்க்களத்தில் உயிர் துறந்த வீரர்களுக்கு எழுப்பப்படும் நடுகல்லும், தெய்வமும் இணைந்த கோயிலாகும்). பாண்டியருக்குப் பகை நிலையில் நின்று போரிட்ட பல்லவ மன்னனின் துணைவன் கங்க மன்னன் பிருதிவிபதி நினைவாக எழுப்பப்பட்ட திருபுறம்பியம் பள்ளிப்படைக்கு ஆழ்வார்க்கடியான் வந்து சேர்ந்து இருட்டும்வரை மறைந்து இருந்தான். பின் இருவர் இருவராக ஆறுபேர் வந்து கூடினர். பின்னர் சோமன் சாம்பவனும் இடும்பன்காரியும் வந்து இணைந்து கொண்டனர். ரவிதாஸன் என்பவன் இலங்கைக்கும் தொண்டை மண்டலத்துக்கும் இரு குழுவாகப் பிரிந்துச் சென்று பகைவர்களை ஒரே நேரத்தில் கொல்ல வேண்டுமென்றும், அதற்கான பொருளைச் சோழரின் கருவூலத்திலிருந்தே எடுத்து வந்ததாகக் கூறி பொன் நாணயங்களைக் காண்பித்தான். இடும்பன்காரி பணியாள் போல சம்புவரையர் மாளிகையில் நடித்து, முதல்நாள் நடந்த சம்பவங்களைத் தெரிந்து கொண்டதைக் கூறினான். ஆழ்வார்க்கடியான் மற்றும் வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியபோது ரவிதாஸன், ஆழ்வார்க்கடியான் செம்பியன் மாதேவியின் ஒற்றனாய் இருக்கலாம் எனக் கூறி அவனை எங்கு பார்த்தாலும் கொன்று விடுமாறு கூறினான். அப்போது ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தில் சலசலப்புத் தோன்ற, நெருங்கி வந்தவர்கள் மீது வெளவாலை எறிந்துவிட்டு ஆழ்வார்க்கடியான் இருளில் மறைந்து தப்பினான். வந்தியத்தேவன் காலையில் புத்துணர்ச்சியுடன் நன்கு அலங்கரித்துக்கொண்டு, அரசரைத் தரிசிக்கக் கிளம்பினான். கோவிலுக்கு பூக்கூடையுடன் கிளம்பிய சேந்தன் அமுதனிடம் பேசிக்கொண்டே, குதிரையை அங்கேயே விட்டுவிட்டு கோட்டை வாசலுக்கு நடக்க ஆரம்பித்தனர். சேந்தன் அமுதனின் அன்னையின் தமக்கை இறந்து விட்டார் எனவும் தமையனார் ஒருவர் கோடியக்கரையில் குழகர் கோயிலில் கைங்கர்யம் செய்வதாகவும் கூறினான். சேந்தன் அமுதனின் மாமன் மகளான பூங்குழலி நன்கு பாடுவாளெனவும், அவள் பாடினால் சமுத்திரமும் காட்டு விலங்கும் கூட மெய்மறந்து போகுமெனவும் சிலாகித்தான். சேந்தன் அமுதனுக்கு பூங்குழலி மீது இருந்த ஆசையை உணர்ந்து கொண்ட வந்தியத்தேவன், “திருமணம் செய்து கொள்ளலாமே” என்று கிண்டல் செய்ய, சேந்தன் அமுதன் அதற்கு, பூங்குழலியின் சம்மதத்திற்குக் காத்திருப்பதாகக் கூறினான். பழுவேட்டரையரின் திருமணத்தைப் பற்றிப் பகடியாய் வந்தியத்தேவன் பேச, சேந்தன் அமுதன் அதைக் கண்டித்தான். கோட்டைக்குள் செல்லும்போது இத்தகைய பேச்சு ஆபத்தை விளைவிக்கும் என எச்சரித்தான். பழுவேட்டரையர்களை எக்காரணத்தைக் கொண்டும் பகைத்துக் கொள்ளக் கூடாது எனவும், அவர்கள்தான் இங்கு அதிகார மையம் என்பதையும் புரிய வைத்தான். பழையாறையிலிருந்த சுந்தர சோழரைக்கூட, வீரபாண்டியனின் மரணத்துக்குப் பிறகு பாண்டியர்களால் ஏதாவது ஆபத்து நேரலாம் என்பதால் தஞ்சையில் தங்கள் பாதுகாப்பில் பழுவேட்டரையர்கள் வைத்திருப்பதாகக் கூறினான். இரு கால்களும் உணர்ச்சியற்று இருப்பதால் சக்ரவர்த்தியான சுந்தரசோழர் எங்குமே செல்ல முடியாது என்றும் வருந்தினான். பழுவேட்டரையர்களின் அதிகாரத்தில் ஒட்டுமொத்த நாடும் இருப்பதால்தானே நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபடுகிறார்கள் என உள்ளுக்குள் மருகிய வந்தியத்தேவன், சேந்தன் அமுதனிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய மனக்கோட்டைகளுடன் கோட்டை வாசலை நெருங்கினான். சவிதா

பொன்னியின் செல்வன் – 4

பொன்னியின் செல்வன் – 4

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் என நினைத்திருப்போம். ஆனால் சில சம்பவங்கள் நம் வாழ்க்கையையே மாற்றி அமைக்கும் வல்லமை பெற்றிருக்கும். வந்தியத்தேவனுக்கு அந்த இரவு அப்படித்தான் அமைந்திருந்தது. முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று கூடியிருந்ததும், உற்ற நண்பனான கந்தமாறன் தன்னிடம்கூட ஏதும் கூறாமல் தன்னைத் தனியே படுக்க வைத்துவிட்டு வந்து இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதும், தன்னைப் பற்றி எச்சரிக்கையாகப் பேசியதும் வந்தியத்தேவனை அங்கு நடப்பவற்றை உற்றுக் கவனிக்கத் தூண்டின. பழுவேட்டரையர், சாம்ராஜ்யத்தின் அரசுரிமையைப் பற்றிப் பேச ஆரம்பித்திருந்தார். ஏற்கனவே இளவரசராக இருப்பவர் சுந்தரசோழரின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனபோதும், பழுவேட்டரையர் தன்னுடன் குழுமியிருந்தவர்களிடம் அரசைக் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன்மாளிகை கட்டிவைத்துக் கொண்டு அதற்கு சுந்தரசோழரையும் தாயையும் அழைத்துக் கொண்டிருப்பது யாருக்கும் உவப்பில்லை எனக் கூறினார். மேலும் ஈழத்துக்குப் போர் புரியச் சென்றிருக்கும் அருள்மொழிவர்மன், படையெடுத்துச் சென்ற இடத்திலேயே உணவுக்கு ஏற்பாடு செய்யாமல் தஞ்சையிலிருந்து அனுப்பச் சொல்வது சரியில்லை என்றும், அவ்வாறு அவர் கட்டாயப்படுத்தப் படுவதால், நிதி நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பிலுள்ள அவரும் அவருடைய தம்பியான சின்ன பழுவேட்டரையரும் அதிகமான வரிகளை விதிப்பதற்குண்டான அவசியம் நேர்வதாகச் சொல்லிக் குறைப்பட்டார். இதற்கெல்லாம் மேல் சுந்தரசோழரின் உடல்நலம் கெட்டுக் கொண்டிருப்பதையும், அடுத்த வாரிசு யாரென முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அரசு நலனில் அக்கறையுள்ள நமக்கு உண்டென்றும் அவர் சொல்லும்போது கூட்டத்தில் உள்ள அனைவரும் அதிர்ந்தனர். ஏற்கனவே வாரிசாய் உள்ள ஆதித்த கரிகாலனைப் பற்றிக் கேட்க, அவர் முந்தைய நாட்களில் நடந்த பட்டத்திற்குண்டான உரிமைகளைப் பற்றி விரிவாக கூறினார். ஆதித்த கரிகாலனை விட சுந்தரசோழரின் பெரியதகப்பனான கண்டராதித்தர் – செம்பியன் மாதேவி தம்பதியருக்குப் பிறந்த மதுராந்தகனுக்கே அதிக உரிமை உண்டென அவர் அழுத்தந்திருத்தமாகச் சொன்னபோது, யாராலும் மறுத்துப் பேச முடியாத நிலை ஏற்பட்டது. சுந்தர சோழர் இதைப்பற்றி எதையும் பேசத் தெம்பிலாது அவர் மகள் குந்தவை தேவியினால்தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அதிருப்தியாகத் தெரிவித்தபொழுது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு, பழுவேட்டரையரை நோக்கி ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. பழுவேட்டரையர் அங்கு கொண்டு வந்து வைத்திருந்த மூடுபல்லக்கைப் பற்றியும், குந்தவை தேவியைப் பழி கூறும் பழுவேட்டரையர், தான் புதிதாக மணந்துகொண்ட மனைவியின் பேச்சைக் கேட்டு நடப்பதும், இவ்வளவு முக்கியமான கூட்டத்தின்போதுகூட அவரை உடன் கூட்டி வந்திருப்பதையும் சுட்டிக் காட்டினர். பழுவேட்டரையர் சினம் காட்டாமல், முதலில் ராஜாங்க விஷயங்கள் முடிவானதும் அதைப்பற்றிப் பதில் கூறுவதாகக் கையமர்த்தினார். பிறகு மதுராந்தகன் முடிசூடுவதைப் பற்றியான பேச்சுகள் எழுந்தன. அதற்கு ஆதரவு தருபவர்கள் யார் யாரெனத் தெரிந்துகொள்ளப் பழுவேட்டரையர் முயன்றார். அப்போது சம்புவரையர் ஒரு சந்தேகத்தை முன் வைத்தார். மதுராந்தகனை செம்பியன் மாதேவி ஒரு சிவக்கொழுந்தாகவே சிறுவயது முதல் வளர்த்து வருகிறார். ராஜ்ய விவகாரங்களில் தலையிடாமல சிவ காரியங்களில் மட்டுமே நாட்டம் செலுத்துபவராகவே மதுராந்தகனை அனைவரும் இவ்வளவு நாள் பார்த்து வருகிறார்கள். இப்பொழுது வாரிசுப் போட்டிக்கு முதலில் செம்பியன் மாதேவி சம்மதிப்பாரா? மற்றும் மதுராந்தகனின் விருப்பம் என்னவென்று தெரியாமல் நாம் கூடி முடிவெடுத்துவிட்டு, பின்னர் அரசரிடம் அவப்பெயர் வாங்கிவிடக்கூடாதே என்றெல்லாம் தன் அச்சத்தைத் தெரிவித்தார். அப்பொழுது பழுவேட்டரையர், யாரும் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை எனவும், அதற்குரிய ஆதாரத்தைக் காண்பிப்பதாகவும் கூறி “மதுராந்தகரே! வெளியில் வாருங்கள்” என்று கூற, பல்லக்கைவிட்டு வெளியே வந்து அனைவரையும் வணங்கிய மதுராந்தகனைப் பார்த்து அனைவரும் திகைத்தனர். பின்னர் மதுராந்தகனை வாழ்த்தினர். இவற்றை மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்த வந்தியத்தேவனும் அதிர்ந்து, ‘இதற்காகத்தான் ஆழ்வார்க்கடியான் ஒற்றறிய வந்தானா?’ என்று நினைத்தபடி ஆழ்வார்க்கடியான் இருந்த இடத்தைப் பார்க்க, அங்கு யாருமில்லை. இதற்குமேல் இங்கு நின்று கவனித்துப் பார்க்க ஏதுமில்லை என்று தெரிந்து கொண்டவன் அவனுடைய இடத்தில் போய்ப் படுத்து உறங்க முயற்சித்தான். ஒரு பெரும் அரசியல் சுழலில் தான் சிக்கிக்கொண்டதாய் உளைந்தவனால் அவ்வளவு சீக்கிரம் உறங்க முடியவில்லை. காலையில் கந்தமாறன் வந்து எழுப்பிய பிறகே வந்தியத்தேவனால் எழ முடிந்தது. எழுந்ததும், முதல்நாள் நடைபெற்ற சம்பவங்களை நினைத்துக் கொண்டவன் உடனே அங்கிருந்து கிளம்புவதாகக் கூறினான். கந்தமாறன் முதலில் வருந்தினாலும், பெரிதாக எதுவும் சொல்லவில்லை. கொள்ளிடக்கரை வரையிலும் அவனை வழியனுப்ப கூடவே வந்தான். வந்தியத்தேவன், கந்தமாறன் முன்பே அவன் தங்கை மணிமேகலையைப் பற்றிக் கூறியதை நினைவுபடுத்தி, அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை என வருந்தினான். கந்தமாறன் தர்மசங்கடத்துடன், அவன் தங்கை மணிமேகலையை வந்தியத்தேவனுடன் முன்னம் இணைத்துப் பேசியதை மன்னித்துவிடுமாறு வேண்ட, வந்தியத்தேவன் தன்னைப் போன்ற ஓர் ஏழை இதை எதிர்பார்த்திருக்க வேண்டியதுதான் எனக் கூறினான். கந்தமாறன் எந்த உண்மையையும் அவனிடம் சொல்ல முடியாததற்கு வருந்தினான். அதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனை சமாதானப்படுத்தி விடைபெற்றான். அவன் குதிரையை ஒரு பணியாள் கொண்டுபோக, இன்னொரு குதிரையை அக்கரையில் வாங்கிக் கொடுக்க இன்னொரு பணியாள் உடன் வர, வந்தியத்தேவன் படகில் ஏறியபோது, இன்னொருவரும் அவசரமாக வந்து ஏறினார். அது ஆழ்வார்க்கடியான். படகில் ஒரு வீர சைவரும் இருக்க, வழக்கம்போல இருவரும் சண்டை போட்டுக்கொண்டே அக்கரையில் இறங்கினர். வந்தியத்தேவனுக்குக் குதிரை வாங்கிக்கொண்டு வருவதற்காக வந்த பணியாள் கிளம்பிவிட, ஆழ்வார்க்கடியானும் வந்தியத்தேவனும் ஒருவரையொருவர் நேற்று நடந்த விஷயங்களைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ள முயன்றார்கள். இருவருமே ஒருவரை ஒருவர் ஒற்றறிய முயன்றதால், அவர்கள் இருவரால் எதையும் அறிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றமே மிஞ்சியது. மூடுபல்லக்கில் வந்த பழுவேட்டரையரின் ராணியிடம் கடிதம் கொடுக்கச் சொன்ன ஆழ்வார்க்கடியானுடைய செயல் தவறானது என்று வந்தியத்தேவன் சொல்ல, அவன் மறுத்தான். ‘மதுரைக்குப் பக்கத்தில் என்னுடைய பெற்றோர் எடுத்து வளர்த்த குழந்தைதான் நந்தினி. ஆண்டாளைப் போன்று பக்தியில் சீலமாய்த் திகழ்ந்தவள். வடநாட்டுக்கு நான் யாத்திரை சென்றிருந்தபொழுது, சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் போர் நடைபெற்றது. அப்பொழுது தப்பித்து ஓடிவந்த அடைக்கலம் புகுந்த வீரபாண்டியனின் மரணத் தறுவாயில் நந்தினி உதவி செய்தபொழுது, படைவீரர்கள் உட்புகுந்து அவனைக் கொன்றுவிட்டார்கள். பழுவேட்டரையர் அவளைப் பிடித்து வந்து கட்டாயமாக மணம் புரிந்திருக்கிறார். அதற்குப் பிறகு நான் அவளைச் சந்திக்க முடியவில்லை. அவளைத் தனியே சந்தித்துப் பேசவும், அவள் விரும்பினால் விடுதலை செய்து போகவும் முயன்று கொண்டிருக்கிறேன்’ என ஆழ்வார்க்கடியான் முடித்தான். இதைக் கேட்டவுடனே வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானைப் பற்றிய தன் தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டான். எனினும், பல்லக்கிலிருந்தது மதுராந்தகன்தான் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும் விளையாட்டுப் போல, ‘சுந்தரசோழருக்கு அடுத்து யார் பட்டத்துக்கு வருவார்?’ என்ற கேள்வியைக் கேட்டு ஆழம் பார்த்தான். ஆனால் ஆழ்வார்க்கடியான் அசராமல், இதெல்லாம் குடந்தை ஜோதிடர்தான் சொல்வார் எனக் கூறி, ஜோசியரின் பெருமைகளையும் கூறினார். குதிரை வந்தவுடன் வந்தியத்தேவன் ஜோசியர் இல்லத்துக்குச் சென்று ஆருடம் பார்த்துவிட்டே தன் பயணத்தைத் தொடர்வது என்று முடிவு செய்துவிட்டே கிளம்பினான். அதே சமயத்தில் அரிசிலாற்றின் கரையில் ஒரு படகு சில பெண்களைச் சுமந்துகொண்டு வந்தது. படகில் இருந்து இரு முக்கியப் பெண்மணிகள் இறங்கினர். கொடும்பாளூர் இளவரசி வானதியும், சோழவம்சக் குலக்கொடி குந்தவை தேவியும் படகிலிருந்து இறங்கினர். குடந்தையில் தங்களுக்கு முக்கியமான வேலை இருப்பதாகக் கூறி வானதியை மட்டும் அழைத்துக் கொண்டு குந்தவை கரையில் காத்துக் கொண்டிருந்த ரதத்தில் கிளம்பினாள். எங்கு செல்கிறோம் என்று கேட்ட வானதியிடம், குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குச் செல்லப் போவதாகக் குந்தவை கூறினாள். ரதத்தை ஒதுக்கி நிறுத்தச் சொல்லி சாரதிக்கு ஆணையிட்ட இளவரசியையும் வானதியையும் ஜோசியர் வரவேற்று அமர வைத்தார். வானதி சிறிது காலமாக அடிக்கடி மயக்கமடைவதையும், உற்சாகமற்று இருப்பதையும் பற்றித் தெரிந்துகொள்ள வந்திருப்பதாகக் குந்தவை கூறினாள். அக்காலத்தின் பழக்கமாக உயர்குடும்பங்களைச் சேர்ந்த ஜாதகங்களை ஜோசியர்கள் வைத்திருப்பது போன்று வானதியின் ஜாதகத்தையும் வைத்திருந்த குடந்தை ஜோதிடர், ஜாதகத்தை எடுத்துப் பார்த்து, நம்ப முடியாது திகைத்துப்போனார். குந்தவை என்னவென்று வினவ, ஜோதிடர் வானதியின் ஜாதகம் கொண்டிருந்த சிறப்புகளைப் பற்றிக் கூறலானார். வானதியை மணக்கப் போகிறவன் கடல் கடந்து போயிருக்கிறான். அவன் போர்களில் வென்று அரசனாக முடிசூடுவான். இந்தப் பெண்ணின் காலில் இருக்கும் தாமரையினால், பின்னால் ஒரு காலத்தில் பெரும் பட்டமகிஷிகள் கூட இவர் பாதம் பணியக் காத்திருப்பார்கள். இவரின் வயிற்றில் ஆலிலை ரேகை கொண்டுள்ளதால் இவருக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தடங்கல் என்பதே கிடையாது. உலகை வெற்றி கொள்வான்’ என்று கூறிக் கொண்டிருந்தபோதே வானதி மயங்கி வீழ்ந்தாள். அவளின் மயக்கத்தைத் தெளிவித்தவாறே வானில் இருக்கும் வால்நட்சத்திரத்தைப் பற்றிய தன் சந்தேகத்தைக் குந்தவை கேட்டாள். ஆனால், ஜோசியர் அதற்கு சரியான மறுமொழி அளிக்காமல் மழுப்பி விட்டார். விழித்த வானதிக்கும் குந்தவைக்கும் அம்மன் பிரசாதத்தை அளித்த ஜோசியரிடம் வானதி, குந்தவை தேவிக்கு அமையப்போகும் கணவரைப் பற்றிக் கேட்டாள். ‘எங்கிருக்கிறார்? எப்படி வருவார்?’ என்று வானதி கேட்டபோது, ஜோசியர் சொல்வதற்கு முன் குறும்பாக, குதிரையில் ஏறி வருவார், அசகாய சூரர் என்றெல்லாம் குந்தவை பதில் அளித்துக் கொண்டிருக்க, நிஜமாகவே குதிரை வரும் சத்தம் கேட்டது. வாசலில் குழப்பமான ஒலிகள் கேட்டன. கதவைத் திறந்து கொண்டு வந்தியத்தேவன் உள் நுழைந்தான். குந்தவையின் கண்களும் வந்தியத்தேவனின் கண்களும் சந்தித்துக் கொண்டன. குந்தவையை ஏறிட்ட வந்தியத்தேவன், உடனே சமாளித்துக்கொண்டு சீடனை கடிந்தபடி வெளியே சென்றுவிட்டான். குந்தவையும் வானதியும் விடைபெற்று வெளியில் வந்தபொழுது மன்னிப்பும் கேட்டான். அவர்களின் ரதம் கிளம்பிய பிறகு ஜோதிடரிடம் அவர்கள் யாரெனத் தெரிந்துகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலிக்கவில்லை. வந்தியத்தேவனின் ஜாதகத்தை வைத்திருந்த ஜோதிடர், அவனுக்குக் கடற்பயணம் வாய்க்குமெனினும், உயர்ந்த பதவிகள் அவனைத் தேடிவருமெனவும் ஆருடம் கூறினார். ஆழ்வார்க்கடியானைப் பற்றிக் குறிப்பிட்டபொழுது, அந்த அடையாளத்தில் திருமலையப்பனை மட்டுமே தெரியும் எனக் கூறினார். பொற்கழஞ்சுகளைச் சன்மானம் அளித்த பிறகு வந்தியத்தேவன் வழியெங்கும் இயற்கை எழிலை ரசித்தபடி தன் பிரயாணத்தைத் தொடங்கினான். தொடரும். சவிதா  

பொன்னியின் செல்வன் – 3

பொன்னியின் செல்வன் – 3

வந்தியத்தேவனும் கந்தமாறனும் வெளியே வந்த பிறகு, உள்ளிருந்து கந்தமாறனின் அன்னை அவனை மட்டும் அழைக்க, பின்னால் கேலிச் சிரிப்புகளுடன் கூடிய ஒலிகள் கேட்டன. தன்னைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்ட வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். கந்தமாறன் வந்து அரண்மனையைச் சுற்றிக் காட்டியபோதும், மனம் அதில் லயிக்காமல், ‘தன்னைப் பற்றிப் பேசி அனைவரும் சிரித்தனரா?’ என சந்தேகமாய்க் கேட்டான்.  மறுத்த கந்தமாறன், ‘பழுவேட்டரையரைப் பற்றி’ என விரிவாகச் சொல்லத் தொடங்கினான். வந்தியத்தேவனும் கந்தமாறனும் வெளியே வந்த பிறகு, உள்ளிருந்து கந்தமாறனின் அன்னை அவனை மட்டும் அழைக்க, பின்னால் கேலிச் சிரிப்புகளுடன் கூடிய ஒலிகள் கேட்டன. தன்னைத்தான் கிண்டல் செய்வதாக எண்ணிக்கொண்ட வந்தியத்தேவன் அலைக்கழிந்தான். கந்தமாறன் வந்து அரண்மனையைச் சுற்றிக் காட்டியபோதும், மனம் அதில் லயிக்காமல், ‘தன்னைப் பற்றிப் பேசி அனைவரும் சிரித்தனரா?’ என சந்தேகமாய்க் கேட்டான்.  மறுத்த கந்தமாறன், ‘பழுவேட்டரையரைப் பற்றி’ என விரிவாகச் சொல்லத் தொடங்கினான். பழுவேட்டரையர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மர்மமான பெண்ணை மணந்து கொண்டதாகவும், எங்கு போனாலும் அவளை மூடு பல்லக்கில் வைத்துத் தன்னுடனேயே அழைத்துச் செல்வதாகவும் கூறினான். மேலும், அந்தப் பெண்ணை அந்தப்புரத்துக்குக்கூட அனுப்பாமல், தன்னுடனேயே தங்க வைத்திருப்பதையும், அதை ஒரு தாதிப்பெண் பார்த்துவிட்டு வந்து விவரித்ததை அன்னையும் மற்ற பெண்களும் சொல்லிச் சிரித்ததாகக் கூறினான். இந்த முதிய வயதில் இப்படி அவர் நடந்துகொள்வதே அனைவரின் சிரிப்புக்கும் காரணம் என விளக்க, வந்தியத்தேவன் மறுத்தான். ‘அது மட்டுமல்ல; அந்தப் பெண் அழகாக இருப்பதற்காகவும் உன் வீட்டுப் பெண்கள் சிரித்திருக்கலாம்’ என்றதும், ‘நீ எப்போது பார்த்தாய்?’ எனக் கேட்டான் கந்தமாறன். வரும் வழியில் பார்த்ததையும் இப்போதுதான் அது யாரெனத் தெரிந்து கொண்டதாகவும் வந்தியத்தேவன் கூறியபோது வாத்தியங்களின் முழக்கம் கேட்டது. அது குரவைக் கூத்துக்கான ஆரம்ப முழக்கம் எனக் கந்தமாறன் கூறியதும், ஆழ்வார்க்கடியான் நம்பி அதைக் குறிப்பிட்டது நினைவுக்கு வந்து, தனக்கும் அதைப் பார்க்க ஆவல் என வந்தியத்தேவன் சொல்ல, இருவரும் அங்கு சென்றனர். முற்றத்தில் மேடை அமைக்கப்பட்டு, மயில், அன்னம், கோழி போன்ற சித்திரங்களை வரைந்திருந்தனர். அகில் புகை, மலர் மணம், தீபங்களின் ஒளி எல்லாம் வந்தியத்தேவனின் மனதை மயக்கின. அந்தச் செந்நிறம் ஒருவிதமான உணர்வை எழுப்பியது. முக்கிய விருந்தாளிகள் வந்து அமர்ந்ததும் குரவைக் கூத்து ஆடும் பெண்கள் ஒன்பது பேர் மலர்மாலையுடன் பிணைத்துக் கொண்டு முருகன் பற்றிய பாடல்களைப் பாடிக்கொண்டே ஆடினார்கள். பின் வேலாட்டம் தொடங்கியது. தேவராளன், தேவராட்டி என ஆண், பெண் இருவரும் வந்து சிவப்பு வண்ண ஆடைகளையும் மலர்களையும் அணிந்து ஆடியது அச்சத்தை ஊட்டியது. பின் தேவராளன் வெறியாட்டம் ஆட, அனைவரும் சந்நதம் வந்துவிட்டதாகப் பதைத்தனர். மழை பொழியுமா, நாடு செழிக்குமா, என்றெல்லாம் ஒவ்வொருவராகக் கேட்க, தேவராளன் ஆடிக்கொண்டே, மன்னர் குலத்து, ஆயிரங்கால அரசர் குலத்து ரத்தம் வேண்டும், பலி வேண்டும்; கொடுப்பீர்களா? என உக்கிரமாகக்  கேட்டான். மேடைக்கு முன்னால் வீற்றிருந்த பழுவேட்டரையர், மழவரையர், சம்புவரையர் எல்லாரும் திகைத்தபடி ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பூசாரியை நிறுத்தச் சொல்ல, தேவராளன் மயங்கி வீழ்ந்தான். சபை மெளனமாகக் கலைய, நரிகள் ஊளையிடும் சப்தம் கேட்டது. வந்தியத்தேவன் அந்தத் திசையில் திரும்பிப் பார்த்தான். மதில் சுவற்றின் மேல் ஆழ்வார்க்கடியானின் தலை மட்டும் வெட்டி வைத்திருந்ததைப் போலத் தெரிந்தது. அதிர்ந்துபோன வந்தியத்தேவன் மறுபடியும் பார்க்க, அங்கு எதுவுமே இல்லை. அவன் உள்ளம் எதையோ நினைத்துக் கலங்கிற்று. அதற்குப் பின் பிரம்மாண்டமான விருந்து தொடங்கியது, கந்தமாறன் அங்கு வந்திருந்த அனைவரையும் யார் யாரென எடுத்துக் கூறிக்கொண்டிருந்தான். அங்கு வந்திருந்த பெரியமனிதர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள் அல்லர். அனைவரும் குறுநில மன்னர்கள்; அல்லது தன் வீரத்தினால் குறுநில மன்னர்களுக்கு இணையான பட்டத்தைப் பெற்றிருந்தவர்கள். அதாவது இன்றைய அமைச்சர்கள், அதிகாரிகள், பெருங்குழும முதலாளிகள் போன்றவர்கள். கந்தமாறன் சொல்லச் சொல்ல, ‘இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அனைவரும் எதற்காக இங்கு இணைந்து வந்திருக்கிறார்கள்?’ என்ற சந்தேகம் வந்தியத்தேவனுக்குள் வளரலாயிற்று. விருந்து முடிந்து, அரண்மனையின் மேல் மாடத்தின் ஒரு மூலையில் அவனுக்கென ஒதுக்கப்பட்ட திறந்த மண்டபத்தில் கந்தமாறன் விட்டுச் சென்ற பிறகும் கூட, அந்த சந்தேகம் மறையாதிருந்தது. களைப்பினால் கண்ணயர்ந்த பின்னும் ஆழ்மனநிலையில் அந்த சந்தேகம் வலுத்தபடியே இருந்ததால், கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டுப் பாதியிலேயே விழித்துக் கொண்டான். கனவில் வெட்டுப்பட்ட ஆழ்வார்க்கடியான் தலையைக் கண்டிருந்த வந்தியத்தேவன், திடுக்கிட்டு விழித்தபோதும் அதையே பார்த்து வெருண்டான். ஆனால், இந்த முறை தலை மறையவில்லை. கடைசியில் உற்றுப் பார்த்தபொழுது, ஆழ்வார்க்கடியான் மாளிகையின் சுற்று மதிலுக்குப் பின்னாலிருந்து தலையை மட்டும் எட்டி உள்ளே பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று துலங்கியது. ஏதோ ஓர் ஆபத்து என உள்மனம் சொல்ல, உடல் பதறி வாளுடன் அவனை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான். ஆழ்வார்க்கடியான் தலை தெரிந்த இடத்திற்கும் இவன் படுத்திருந்த இடத்திற்கும் உண்டான தொலைவைக் கவனமாகக் கடந்தபோது பேச்சுக்குரல் கேட்கவே, வந்தியத்தேவன் குனிந்து பார்த்தான். கீழே குறுகலான முற்றத்தில் விருந்தில் பார்த்த அனைத்து முக்கியமானவர்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அந்த நள்ளிரவில் பேசிக் கொள்வதானால் ஏதோ ஒரு முக்கிய விஷயமாக இருக்க வேண்டும் என ஊகித்த வந்தியத்தேவன், அதைப் பார்க்கத்தான் ஆழ்வார்க்கடியான் மதிலில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொண்டான். இப்போது ஆழ்வார்க்கடியானைக் கையும் களவுமாகப் பிடிப்பதானாலும் கீழே அமர்ந்திருப்பவர்களுக்குத் தெரியாமல் முடியாது. அப்போதும் அவன் தப்பிவிட்டான் என்றால், தன்னை சந்தேகப்பட வாய்ப்பு இருக்கிறது. கந்தமாறனும் அந்தக் கூட்டத்தில் இருப்பதைக் கண்டவுடன் காலையில் அவனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தான். பக்கத்தில் இருந்த மூடு பல்லக்கைப் பார்த்ததும் ஆழ்வார்க்கடியான் அந்தப் பல்லக்கில் இருந்தவளைப் பார்க்கத்தான் வந்திருப்பான் எனப் புரிந்து கொண்டான். திரும்பி விடலாம் என யத்தனித்தபோது, தன் பெயர் அடிபடுவதைக் கண்டு உற்றுக் கேட்க ஆரம்பித்தான். ‘உங்கள் மகனின் நண்பன் என ஒருவன் வந்துள்ளானே.. அவன் ஆதித்த கரிகாலனின் கீழ் பணிபுரியும் ஆள். நாம் பேசும் விஷயம் எதுவும் அவனுக்குத் தெரிந்துவிடக் கூடாது. தெரிந்தால் இந்தக் கோட்டையை விட்டு அவன் உயிருடன் போகக் கூடாது’ என்று சொல்லக் கேட்டதும் வந்தியத்தேவனுக்குப் பொறி கலங்கியது. ஆனால், கந்தமாறன் தன் நண்பனுக்குப் பரிந்து பேசினான். அவன் நம்பிக்கைக்குரியவன் என்று கூறியதை ஏற்றுக்கொண்ட பழுவேட்டரையர், “இப்போது நாம் பேசப்போவது பெரிய சாம்ராஜ்யத்தைப் பற்றிய மிக முக்கியமான விஷயம். இது மட்டும் வெளியில் தெரிந்தால், பயங்கரமான பின்விளைவுகளை நாம் எதிர்கொள்ள வேண்டும்” என எச்சரித்துவிட்டு, மேலும் அதிர்ச்சி தரும் விஷயங்களைப் பேசத் தொடங்கினார். வந்தியத்தேவன் முதலில் பயந்தாலும், அவர்கள் பேசும் விஷயங்களை மறைந்திருந்து கேட்கலானான். அதைத் தொடர்ந்து நடக்கப்போகும் பல முக்கியமான திருப்பங்களுக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில், அடுத்தடுத்து நடந்த விஷயங்கள் வந்தியத்தேவனை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டே சென்றன. தொடரும். சவிதா

பொன்னியின் செல்வன் – 2

பொன்னியின் செல்வன் – 2

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1 – முந்தைய பகுதியைத் தவறவிட்டவர்கள் இந்த இணைப்பில் வாசித்துவிட்டுத் தொடரலாம். பொன்னியின் செல்வன் – 2 பழுவேட்டரையரின் பரிவாரங்கள் ராஜபோகமாக ஆர்ப்பாட்டத்துடன் செல்வதை வந்தியத்தேவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, அதிகார ஆக்கிரமிப்பில் பழுவேட்டரையரின் காவலாளிகள், தள்ளி நிறுத்தப்பட்டிருந்த அவன் குதிரையுடன் வம்புக்குச் சென்றார்கள். அவர்களால் சீண்டப்பட்ட குதிரை கூட்டத்தில் குழப்பம் விளைவித்தபடியே தப்பித்து ஓடியது. அதனைத் தடுக்க முடியாமல் வாடி நின்ற வந்தியத்தேவனைக் கண்ட ஆழ்வார்க்கடியான் அவனிடம், ‘என்னிடம் காட்டிய வீரத்தை அவர்களிடம் காட்டக்கூடாதா?’ என்று வேறு  குத்திக் காட்டினான். உள்ளூரக் கோபத்திலிருந்த வந்தியத்தேவன், பழுவேட்டரையருடைய வீரர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சண்டைக்குப் போகாமல், தள்ளிப் போய் பாவமாக நின்று கொண்டிருந்த குதிரையைத் தட்டிக் கொடுத்துக் கூட்டி வந்தான். ‘இந்த வீரர்களுக்கு என்றேனும் நல்ல பாடம் புகட்ட வேண்டும்’ என்றும் எண்ணிக் கொண்டான். ஆழ்வார்க்கடியான் காத்திருந்ததைக் கண்டபோது இன்னும் எரிச்சலாயிருந்தது. போதாதற்கு  ஆழ்வார்க்கடியானும் நோட்டம் பார்ப்பது போல், ‘எங்கு தங்குகிறாய்?’ எனக் கேட்டதும் இடக்காகப் பதில் சொன்னான். ஆழ்வார்க்கடியான் விடாமல், ‘நீ கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் தங்குவதாயிருந்தால் எனக்கு உன்னிடம் ஒரு உதவி தேவைப்படுகிறது’ எனக் கூறினான். தான் செல்லப் போகுமிடம் அவனுக்குத் தெரிந்திருந்தது வந்தியத்தேவனுக்குத் திகைப்பாக இருந்தது. அதைக் குறித்து அவன் எப்படி எனக் கேட்க,  ‘பழுவேட்டரையரின் பரிவாரங்கள் சம்புவரையரின் மரியாதை வழங்கப்பட்டு  அங்குதான் செல்கின்றன;  மேலும், நாடெங்கிலும் இருந்து விருந்தாளிகள் இன்று இங்கு வரப்போகிறார்கள்’ என்று ஆழ்வார்க்கடியான் கூறவும், பழுவேட்டரையர் போன்ற மாவீரரை இன்று அந்த மாளிகையில்  சந்தித்துப் பழக வேண்டும் என்ற ஆவல் வந்தியத்தேவனுக்கு ஏற்பட்டாலும், அவருடைய படைவீரர்களின் அதிகார அலட்சியம் அவனுக்குக் கசந்தது. ஆழ்வார்க்கடியான் வந்தியத்தேவனிடம், அன்றிரவு சம்புவரையர் மாளிகையில் நடக்கும் குரவைக்கூத்து, களியாட்டம் போன்றவற்றைப் பார்க்க வேண்டுமென்றும், தன்னை ஒரு பணியாள் போலப் பொய் சொல்லி அவனுடன் அங்கு அழைத்துச் செல்ல முடியுமா என்றும் கேட்டான். வந்தியத்தேவன் அவ்வாறெல்லாம் மோசடிக் காரியத்துக்கு உடன்பட மறுத்து, தான் தன்னுடன் படித்த சம்புவரையர் மகனான கந்தமாறவேளின் நண்பன் என்ற உரிமையில் போவதாகக் கூறினான். அப்படியென்றால் அவனுக்கே இன்றைக்கு அங்கு தங்குவது சிரமம்தான் எனக் கூறினான், ஆழ்வார்க்கடியான். பேசிக்கொண்டே தொடர்ந்து வந்து கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான், வீர நாராயண ஏரியை ஒட்டியிருந்த வீர நாராயணப் பெருமாள் கோயிலுக்கு வந்தியத்தேவனை அழைக்க, அவனும் உடன் சென்றான். வீர நாராயணர் கோவிலைப் பற்றிய ஒரு அறிமுகம்: முதலாம் பராந்தகச் சோழன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில், இராஷ்டிரகூட மன்னர்கள் படையெடுத்து வருவார்கள் என எதிர்பார்த்து, பாதுகாப்புக்காகத் தன் மகன் இராஜாதித்தன் தலைமையில் ஒரு பெரிய சைன்யத்தைத் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். படைவீரர்கள் வேலையின்றி இருப்பதைக் கண்ட இராஜாதித்தன், குடிமக்களுக்கு உதவும் வகையில் கொள்ளிடத்திலிருந்து வீணாகும் வெள்ள நீரின் ஒரு பகுதியைச் சேமிக்க ஒரு ஏரியை உருவாக்கி, அதற்கு தன் தந்தையின் இன்னொரு விருதுப் பெயரான வீர நாராயணன் ஏரி எனப் பெயரிட்டான். ஏரிக் கரைகளைக் காக்க அந்நாளில் பெருமாளுக்குக் கோயில் கட்டுவது வழக்கம். அந்தக் கோவிலுக்குத்தான் இப்பொழுது வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் வந்திருக்கிறார்கள். ஆழ்வார்க்கடியான் பக்திப் பரவசத்தில் கண்ணீர் வழிய உருகி, பாசுரங்களைப் பாடுவதைக் கண்ட வந்தியத்தேவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது மதிப்பு உண்டாகியது.  அர்ச்சகர் ஈசுவர பட்டரிடம் தீர்த்தம் பெற்றுக்கொண்டு வெளியில் வந்தவுடன் வந்தியத்தேவன் ஆழ்வார்க்கடியானிடம் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டான். பதிலுக்கு ஆழ்வார்க்கடியான் கேட்ட உதவி வந்தியத்தேவனுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. பழுவேட்டரையருடன் மூடுபல்லக்கில் சென்ற பெண்ணுக்கு ஒரு சீட்டு தருவதாகவும், அதை சம்புவரையர் மாளிகையில் தங்க நேர்ந்தால் அந்தப் பெண்ணிடம் சேர்த்து விடுமாறும் ஆழ்வார்க்கடியான் கூறியதைக் கேட்ட வந்தியத்தேவன், படபடப்படைந்து கோபப்பட்டான். ஆழ்வார்க்கடியான் அதைப் பொருட்படுத்தாமல், ‘முடியாது என்றால் பரவாயில்லை; நீ இந்த உதவியை எனக்குச் செய்திருந்தால், பின்னால் நானும் உனக்கு உதவ வசதியாய் இருக்கும்’ எனக் கூற, வந்தியத்தேவன் எரிச்சலில் உடனே அங்கிருந்து குதிரையிலேறிக் கிளம்பி விட்டான். சம்புவரையரின் மாளிகையை வேகமாய் நெருங்கியவன், பலமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கவனித்தான். தயங்கி நின்றால் விசாரிப்பார்கள் என்று எண்ணி, குதிரையைத் திறந்திருந்த பெரிய கோட்டையின்  வாசலுக்குள்  வேகமாக இட்டுச் சென்றான். ஆனால் படைவீரர்கள் அவனைத் தடுத்து நிறுத்தி அவன் துடுக்குத்தனத்தை விசாரிக்க ஆரம்பித்தனர். அவன் யார் என விசாரித்ததற்கு, ‘என் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன்; என் நாடு திருவல்லம்; என் குலத்து முன்னோர்களின் பெயர்களை உங்கள் நாட்டு வீரர்கள் தங்கள் மார்பில் எழுதிக் கொண்டு பெருமையடைந்தார்கள், தெரிந்ததா?’ என வீரமாகக் கூறினான். அவர்கள் அதைக் கண்டுகொள்ளாமல் ஏற்கனவே சீண்டிய குதிரையையும் அவர்கள் ஏளனமாய்ப் பேசுவதைக் கண்ட வந்தியத்தேவன் சட்டென ஒரு யுக்தியைச் செயல்படுத்தினான்.   குதிரையை விட்டால் திரும்பிப் போவதாக அமைதியாக வந்தியத்தேவன் கூறினான். கயிற்றை வீரர்கள் விட்டவுடன், உடைவாளை உருவிக் கொண்டு பெரும் வேகத்துடன் கோட்டைக்குள்ளே சென்றான். தடுத்த வேல்கள் விழுந்தன. சுற்றியும் வந்த வீரர்கள் சிதறினர். கோட்டைக்கதவு சாத்தப்பட்டது. வீரர்கள் ‘பிடி.. பிடி..’ என சுற்றி வளைத்தனர். எல்லோரும் சுற்றி வளைத்ததும், வந்தியத்தேவன் குதிரையிலிருந்து தாவிக் குதித்தான். ‘கந்தமாறா.. கந்தமாறா.. என்னைக் கொல்கிறார்கள்’ என சத்தம் போட, நெருங்கி வந்த வீரர்கள் அவன் தங்கள் எஜமானனின் மகன் பெயரைக் கூறவும் தயங்கி நின்றனர். மேல் மாடத்திலிருந்து செங்கண்ணன் சம்புவரையர், தன் மகன் கந்தமாறனை அழைத்து ‘என்ன கலகம்?’ என்று பார்த்து வரச் சொன்னார். கந்தமாறன் வரும்வரை அனைவரும் அப்படியே நின்றிருந்தனர். பிடித்த கத்தியுடன் தனியொரு வீரனாக நின்றிருந்த வந்தியத்தேவனைப் பார்த்ததும், “வல்லவா.. நண்பா.. நீதானா?” என வியந்து கட்டிக் கொண்டான் கந்தமாறன். “இதுதான் நீ எனக்களித்த வரவேற்பா?’ என வந்தியத்தேவன் கூறவும், சுற்றி இருந்த வீரர்களைக் கடிந்துகொண்டு, வந்தியத்தேவனை அணைத்தபடி வெகு உற்சாகமாக உள்ளே கூட்டிச் சென்றான் கந்தமாறன். (கல்கியின் வார்த்தைகளில்: இளம்பிராயத்தில் நட்பும் காதலும்தான் பரவசப் படுத்தக் கூடியவை. காதலுக்காவது சில துன்பங்கள் உண்டு; நட்புக்கு அதுவும் கிடையாது) கந்தமாறன் வந்தியத்தேவனை, தன் தந்தை சம்புவரையரிடம், உற்சாகமும் பெருமையுமாகத் ‘தன் நண்பன்’ என அறிமுகப்படுத்த, அவர் அத்தனை மகிழ்ச்சியாகப் பேசவில்லை. ‘கலவரத்திற்கு காரணம் இவன்தானா?’ என்றும், இருட்டியதற்குப் பிறகு இவ்வளவு ஆர்ப்பாட்டத்துடன் வந்ததையும் அவர் குறை கூறியது கந்தமாறனுக்கு வருத்தமாய் இருந்தது. அடுத்து வந்தியத்தேவனைப் பழுவேட்டரையரிடம் கூட்டிச் சென்றான். பழுவேட்டரையரின்பால் வந்தியத்தேவன் கொண்டிருந்த ஈடுபாட்டைச் சொல்லிவிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் உந்தப்பட்டு, ‘மாமா. இவன் என் நெருங்கிய நண்பன். வாணர் குலத்தவன். நாங்கள் எல்லைக்காவல் புரிந்தபோது உங்களைப் பார்க்க வேண்டும் என கூறிக்கொண்டே இருப்பான். தங்கள் உடம்பில் போரினால் ஏற்பட்ட அறுபத்து நான்கு காயங்கள் இருப்பது உண்மைதானா என எண்ணிப் பார்க்க வேண்டுமென்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பான்’ எனப் பெருமையாகக் கூறினான். பழுவேட்டரையர் குதர்க்கமாக, ‘எண்ணிப் பார்க்கவில்லையென்றால் நம்ப மாட்டாயா? வாணர் குலத்துக்கு மட்டும்தான் வீரம் சொந்தமா?’ என்று கேட்கவும், இருவரும் எரிச்சலும் வருத்தமும் அடைந்தார்கள். வந்தியத்தேவன் சுதாரித்தபடி, ‘ஐயா, பழுவேட்டரையரின் புகழ் குமரி முதல் இமயம் வரை பரவியிருக்கிறது. சந்தேகிப்பதற்கு நான் யார்?’ எனப் பொறுமையாகக் கூறவும், ‘நல்ல மறுமொழி’ என பழுவேட்டரையர் அமைதியாகி விட்டார். சம்புவரையர் வந்தியத்தேவனுக்கு உணவளித்துவிட்டு சீக்கிரம் படுக்க வைத்துவிட்டுத் திரும்புமாறு கந்தமாறனுக்குக் கட்டளையிட்டார். அந்தப்புரத்துக்கு வந்தியத்தேவனைக் கூட்டிச் சென்ற கந்தமாறன், தன் அன்னையை அவனுக்கு அறிமுகப் படுத்தினான். அன்னையை வணங்கிய வந்தியத்தேவன் அவருக்குப் பின்னால் ஒளிந்ததுதான் கந்தமாறன் முன்பு தன்னிடம் சொல்லியிருந்த அவனது தங்கை மணிமேகலையாக இருக்கும் என நினைத்துக் கொண்டான். பின், அங்கிருந்த பெண்களின் கூட்டத்தில், ‘பல்லக்கில் வந்த பெண் இருக்கிறாளா?’ என்று கண்களால் தேடினான். தொடரும். சவிதா

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

புதுவெள்ளம் – பொன்னியின் செல்வன் 1

சோழர் பரம்பரை – ஒரு எளிய அறிமுகம் பொன்னியின் செல்வன் கதைக்குள் நுழையும் முன்பு கதை நிகழும் காலத்தோடு பயணம் செல்ல இந்த பரம்பரை வரலாறு உதவியாக இருக்கும்.விஜயாலய சோழன், ஆதித்ய சோழன் என சிற்றரசாக இருந்த சோழர்கள் முதலாம் பராந்தக சோழன் காலத்தில் தங்கள் எல்லையை விரிவடையச் செய்து பேரரசாக உருவெடுத்தனர். பராந்தக சோழனின் மூத்த மகனான இராஜாதித்ய சோழன் போர்க்களத்தில் வீரமரணம் அடைந்தார். எனவே இரண்டாவது மகனாகிய கண்டராதித்ய சோழன் அரசராகப் பதவி ஏற்றார். அவர் ஒரு சிவபக்தர். வெகுகாலம் திருமணத்தை வெறுத்த அவர், தன்னைப் போலவே சிவபக்தியில் தேர்ந்த செம்பியன் மாதேவி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு வெகுகாலம் குழந்தைப் பேறு இல்லாததால், இளையவரான அரிஞ்சய சோழருக்கு பட்டத்து இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. பின்னர், கண்டராதித்ய சோழனுக்கும் செம்பியன் மாதேவிக்கும் குழந்தை பிறந்த சிறிது காலத்திலேயே கண்டராதித்ய சோழன் காலமானார். எனவே, அரிஞ்சய சோழர் அரசராக முடிசூடினார். அவரும் குறைந்த காலத்திலேயே இறந்துவிட, அவரின் மகனான சுந்தர சோழன் பதவி ஏற்றார். அவருடைய காலத்தில் நடைபெற்ற கதையைத்தான் நாம் பார்க்க இருக்கிறோம். சுந்தர சோழனின் முதல் மகனான ஆதித்த கரிகாலனுக்கு மதுரையை ஆண்ட வீரபாண்டியனை வென்றதால் இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது. இதற்கிடையில் கண்டராதித்தனின் மகன் மதுராந்தகனும் வயதை அடைந்து வாரிசாக இருக்கிறார். இந்த வாரிசுரிமை, அரசியல் களத்திலும் சோழமன்னர் குடும்பத்திலும் எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தியது என்பதுதான் இக்கதையின் சாரம். இனி.. புதுவெள்ளம்சற்றேறக்குறைய சுமார் 1070 ஆண்டுகளுக்கு முன், இதே ஆடி பதினெட்டாம் நாளன்று கதை தொடங்குகிறது. இப்பொழுது வீராணம் ஏரி என்று அழைக்கப்படும் வீர நாராயண ஏரிக்கு அன்றுதான் வந்தியத்தேவன் வந்திருக்கிறான். இந்த ஏரி எழுபத்து நான்கு கணவாய்களை உடையது. அது உண்மைதானா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டே வந்தியத்தேவன் தன் குதிரையுடன் வந்தடைந்த நாளில், பதினெட்டாம் பெருக்குக்காக ஏரிக்கரை களைக்கட்டியிருந்தது. இரு கரைகளும் பொங்கிப் பாய்ந்த அந்த வெள்ளத்தில் மக்களின் வெள்ளமும் சேர்ந்துகொள்ள, வந்தியத்தேவனுக்கு உற்சாகம் பொங்கியது. கண்ணுக்கினிய பெண்கள் கூட்டம் பாடிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தது. சில உபசரிப்புகளையும் அவன் ஏற்றுக் கொண்டான். சோழர்கள் உண்டாக்கி வைத்திருந்த நீர் மேலாண்மையையும் மக்கள் கூட்டம் அவர்களைப் போற்றிப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்ததையும் வியந்து பார்த்துக் கொண்டிருந்தபோது சலசலப்பும் பரபரப்பும் உற்சாகமும் பதட்டமும் நிறைந்த கூச்சல்கள் எழத் தொடங்கின. எல்லோரும் பார்த்த திசையைப் பார்த்தபோது, ஏழெட்டு பெரிய ஓடங்கள் வெள்ளைப் பாய்கள் விரிக்கப்பட்டு ஏரிக்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தன. முதலில் வந்த படகில் வீரர்கள் ஆயுதங்களுடன் இறங்கி கூட்டத்தை ஆயுத பலத்துடனும் உரத்த குரல்களுடனும் ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட இன்றையக் காலகட்டத்தில் பிரதமர் வருகையின்போது நடக்கக்கூடிய கெடுபிடிகள் போன்று அது இருந்தது. வருபவர் யாரென விசாரித்தபோது பனைமரக் கொடியைச் சுட்டிக் காட்டினர். வந்தியத்தேவன் புரியாமல் பார்க்க, அது பழுவேட்டரையருடையது என்று அவனுக்கு ஒருவர் புரிய வைத்தார். அவர் வருவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்த பொழுது அவரின் அரசியல் பலம் புரிந்தது. வந்தியத்தேவனால் ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பழுவேட்டரையர் சிறந்த வீரர். சோழப் பேரரசின் நிதி அமைச்சரான அவர், நிர்வாகத்திலும் மிகுந்த செல்வாக்கு கொண்டிருந்தார். கருவூலம், நிதி மேலாண்மை, கூல விநியோகம் போன்ற முக்கியப் பொறுப்புகள் அவர் வசமும் தலைநகர் தஞ்சாவூர் கோட்டைக் காவல் அவரின் தம்பியான சின்னப் பழுவேட்டரையரின் வசமும் இருந்தன. சுற்றியிருக்கும் அரசுகளுக்கு வரி, தண்டம் விதிக்கக்கூடிய அளவுக்கு உரிமை கொண்டவர் என்றெல்லாம் ஏற்கனவே அவரைப்பற்றி வந்தியத்தேவனுக்குத் தெரிந்திருந்தது. ஒரு வீர இளைஞனான அவனுக்கு, அந்த மாபெரும் வீரரைச் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது உவகையாக இருந்தது. ஆனால் அவன் வந்த வேலையை நினைத்துக் கொண்டான். காஞ்சி நகரில் சோழ அரசின் பட்டத்து இளவரசரும், தன்னுடைய தலைவனுமான ஆதித்த கரிகாலன் எச்சரித்திருந்ததையும் நினைவில் கொண்டு வந்தான். ஆதித்த கரிகாலன் இரு ஓலைகளை, தன் தந்தையான சுந்தர சோழரிடமும், தமக்கையான குந்தவை தேவியிடமும் ரகசியமாக ஒப்படைக்க வேண்டுமெனக் கட்டளையிட்டிருந்தார். முக்கியமாக, பழுவேட்டரையர்களுக்குத் தெரியவே கூடாது என்றும் சொல்லியிருந்தார். வந்தியத்தேவன் குறும்பான வாலிபன் என்பதால், அடக்கமாக, யாருக்கும் தெரியாமல், எந்த வம்புச் சண்டையிலும் நுழையாமல், பத்திரமாகச் செல்லுமாறு கண்டித்திருந்தார். (ஆனால், அவன் அப்படி இருந்திருந்தால் இந்தக் கதை உருவாகியே இருந்திருக்காது) அதை நினைத்துக்கொண்ட வந்தியத்தேவன் பழுவேட்டரையரைப் பார்க்கும் ஆவலை அடக்கிக் கொண்டு, கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் இரவு தங்கும் நோக்கத்துடன் குதிரையைச் செலுத்திக்கொண்டு கிளம்பி விட்டான். இயல்பிலேயே துடிப்பான வந்தியத்தேவனுக்கு, தன் வால்தனங்களை அடக்கிக்கொண்டு பயணம் செய்யக் கடினமாக இருந்தது. ஆனாலும், பழையாறை போன்ற முக்கியமான நகரங்களைப் பார்ப்பது குறித்தும், குந்தைவை தேவியைச் சந்திக்கப்போகும் பெருமையை நினைத்தும், தன் ஆவலை அடக்கிக் கொண்டான். வீரநாராயண விண்ணகரக் கோவிலுக்குச் செல்லும் வழியில், கடைத்தெரு கோலாகலமாய் நிறைந்திருந்தது. அதை ரசித்துக் கொண்டே சென்றவனை அங்கு நடந்துகொண்டிருந்த சைவ வைணவச் சண்டை ஈர்த்தது. ஒரு சைவர், ஒரு வைணவர் மற்றும் ஒரு அத்வைதி ஆகியோர் தங்கள் கொள்கையே சிறந்தது என வாதிட்டுக் கொண்டிருந்தனர். இருபக்கமும் மனிதர்கள் நின்றுகொண்டு தத்தம் கொள்கைகளுக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தனர். சண்டையிட்டுக் கொண்டிருப்பவர்களில் வைணவத்துக்கு ஆதரவளித்துக் கொண்டிருந்தவர்தான் ஆழ்வார்க்கடியான் நம்பி. அவர் ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார். சைவ- வைணவச் சண்டைகள் அப்பொழுது வெகு பிரசித்தம். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத வந்தியத்தேவன் நடுவில் புகுந்து, சண்டை போடுவதை நிறுத்துமாறும், அப்படிப் போட வேண்டிய அவசியம் இருந்தால், போருக்குச் செல்லும்படியும் கூறினான். மக்களில் சிலருக்கு அவன் சொன்னது பிடித்திருந்தது. ஆழ்வார்க்கடியானின் மொத்த ஆவேசமும் இவன் பக்கம் திரும்பிவிட்டது. விளையாட்டாய் சண்டையை நிறுத்த வந்தியத்தேவன் முயல, கூட்டமும் அதில் சேர்ந்து கொண்டது. அப்போது மறுபடியும் சலசலப்பு ஏற்பட்டது. பழுவேட்டரையர் யானையின் மீது அமர்ந்து, தன் கூட்டங்களுடன் அதிகாரம் பொருந்திய மிளிர்வுடன் வந்து கொண்டிருந்தார். பின்னால் ஒரு பல்லக்கு வந்தது. பல்லக்கின் உள்ளே யார் இருப்பாரோ என்ற எதிர்பார்ப்புடன், வந்தியத்தேவன் பல்லக்கை நோக்கினான். பல்லக்கு வந்தியத்தேவனைக் கடக்கும் போது திரை விலகியது. அழகு பொங்கும் சுந்தர முகம் தோன்றியது. ஆனாலும் மனத்தில் காரணம் தெரியாத ரசிப்பின்மை தோன்றியது. இவனைப் பார்த்தவுடன் சட்டெனத் திரை மூடிக் கொண்டது. யாரைப் பார்த்து பயந்து திரை மூடிக் கொண்டது என்று வந்தியத்தேவன் தேடும்போது, ஆழ்வார்க்கடியான் விசித்திரமான முகபாவத்துடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். அவனுக்கு அது மர்மமாகத் தோன்றியது. அந்தக் கணத்தில் அவனுக்கு ஆழ்வார்க்கடியான் மீது ஒரு வித வெறுப்பும் அருவருப்பும் தோன்றியது. தொடரும் சவிதா

பொன்னியின் செல்வன் – முன்னுரை

பொன்னியின் செல்வன் – முன்னுரை

பொன்னியின் செல்வன் – என்றைக்குமே சுவையூட்டும் ஒரு புதினம்தான். பல நடிகர்களும் இயக்குனர்களும் திரைப்படமாக எடுக்க விரும்பிய ஒரு கலைப் படைப்பு. எத்தனை விமர்சனங்கள் இருந்தபோதும், ‘படிக்க முடியவில்லை’ எனப் புலம்புவர்கள் அதிகம். வாசிப்புப் பழக்கமில்லாதவர்கள், நீண்ட நெடிய நாவலைச் சுவைக்க முடியாமல், அலமாரியில் வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வெளியாகிப் பல பத்தாண்டுகள் கடந்தும், இன்னமும் அதிகமான அளவில் விற்பனை ஆவது பொன்னியின் செல்வன்தான் என்பது வெளிப்படை. பொன்னியின் செல்வனை வாசிக்கவும், ஒலி வடிவில் கேட்கவும் நிறைய செயலிகளும் ஒலிப் புத்தகங்களும் இருக்கின்றன. ஆனபோதும் பலருக்கு இது அடைய முடியாத ஆடம்பரம். படிக்க முயல்பவர்களில் சிலர், நீண்ட வர்ணனைகள், கிளைக்கதைகள், நாவலின் நீளம் போன்றவற்றால் அயர்ச்சியுற்று, பாதியில் விட்டதாகச் சொல்லியிருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, நான் பொன்னியின் செல்வனை முப்பது முறைக்கு மேல் படித்திருக்கிறேன். எல்லாக் கதாபாத்திரங்களும் என் மனதில் அழுந்தப் பதிந்தவை. என் குழந்தைகளுக்கு, அவர்களுக்கு ஏற்றவாறு அவர்களுடைய மொழியில் தினமுமே படுக்கப் போகும் முன் கதையாகச் சொல்லியிருக்கிறேன். இருவரும் அதை ஒரு வரிகூடப் படித்ததில்லை என்றபின்னும், இன்னமும் கதாபாத்திரங்களை மேற்கொண்டு ஞாபகம் வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இந்த முயற்சியைத் தொடங்கி இருக்கிறேன். திரைப்படமாகப் பார்த்தால் இன்னமும் நன்றாகப் புரியக்கூடும்தான். ஆனால், எழுத்துலகத்துக்கே சம்பந்தப்பட்ட சில விவரணைகளைக் காட்சிப் படுத்துதல் மிகக் கடினம் அல்லது முடியாது. எனவே, வாசிக்க ஆசைப்பட்டும், நேரமோ பொறுமையோ வாய்க்காதவர்களுக்காக சுருக்கப்பட்ட வடிவில் பொன்னியின் செல்வன் புதினத்தைத் தருகிறேன். இயன்றவரை எல்லா நிகழ்வுகளையும் பதிவு செய்திருக்கிறேன். சில சுவையான கட்டங்களைத் தற்காலத்துடன் பொருத்திச் சொல்லியிருக்கிறேன். கல்கியின் நகைச்சுவை உணர்வை அங்கங்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. சுவை கெடாத வண்ணம் எல்லோராலும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு அறிமுகமாகக்கூட இதைக் கருதலாம்.  இதைப் படித்துவிட்டு மூலத்தைத் தேடிப் படிக்கும் எண்ணம் வர வேண்டும் என்பதுதான் என் நோக்கம்.   பொன்னியின் செல்வன், கல்கி இதழில் தொடராகத்தான் வெளிவந்தது. போலவே, இந்தச் சுருக்கப்பட்ட வடிவமும் சுவடு இதழில் தொடராகவே வெளியாகவுள்ளது. இந்தத் தொடர் குறித்தான அறிவிப்பு வெளியான உடனே, சுவடு வாசகர்கள் காட்டிய ஆர்வம் மகிழ்ச்சி அளிக்கிறது. கதையைத் தொடங்குவதற்கு முன் சில வரிகள்: பெரும்பாலானவருக்கு இந்தத் தலைப்பு, மன்னன் இராஜராஜ சோழனைக் குறிக்கிறது என்பதுகூடத் தெரியாது. இந்தக் கதை ஒரு மனிதனின் – மன்னனின் முழுமையான வாழ்நாள் வரலாறு அல்ல. மிக முக்கியமான அரசனாக வரலாற்றில் பதியப்பட்டவரின் வாழ்க்கைத் தொகுப்பு அல்ல. அவன் அரசனாவதற்கு முன்பான ஒரு சிறிய காலகட்டத்தை மட்டுமே இது விவரிக்கிறது. அதில் நடந்த துரோகங்கள், நம்பிக்கை, போர், இயற்கைச் சீற்றம், சோழ மண்ணின் பெருந்தன்மை, ராஜாங்க அலசல்கள், அரசியல், உயர்ந்த மனிதர்களின் அறம் என எல்லாவற்றையும் தொட்டுப் போகிறது. காலமும் இடமும் இதில் பெரும்பங்கு வகிக்கின்றன. என்னதான் தலைப்பு இராஜராஜசோழனைச் சொல்லியிருந்தாலும், இந்தப் புதினத்தின் முக்கிய நாயகன் வந்தியத்தேவன்தான். அவனைச் சுற்றித்தான் கதைக்களம் நகரும். தஞ்சையையும் சுற்றுப்புறத்தையும் தெரிந்தவர்களுக்கு, இதில் இடம்பெறும் இடங்களும், நடந்த விஷயங்களையும்  தொடர்புபடுத்திப் பார்த்துக் கொள்வது எளிது. மற்றவர்கள் வரைபடத்தின் உதவியோடு அந்த ஊர்களைப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றாய் இணையும் இடம், கதாபாத்திரங்கள் சந்திக்கும் நிகழ்வு, அனைத்தும் ஒரு நேர்கோடாய், தொய்வில்லாமல் போகக்கூடிய நாவல் இது. கல்கியின் வர்ணனைகள், விவரணைகள் நம்மை அந்தக் காலத்திற்கே கொண்டு போய் விடக்கூடியன. அந்த வசனங்களும், நகைச்சுவையும், நடையும் வெகு சுவாரசியம்தான். ஆனாலும் அவசர உலகமாகிவிட்ட காலத்தில், ஆர்வம் உள்ளவர்கள் சுருக்கமாகவேணும் வாசிக்கும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, சுவை கெடாமல் சுருக்க முயன்றிருக்கிறேன். மீண்டும் நினைவூட்டுகிறேன், வர்ணனைகளோ, மேலதிகமான விவரங்களோ, கல்கியின் பகடியும் எள்ளலுமான நடையோ இதில் வாய்க்காது. சுமார் பத்து அத்தியாயங்களோ அதற்கும் மேலோ  ஒரே அமர்வில் படிக்கும் வண்ணம் சுருக்கி எழுதப்பட்டது. புது வெள்ளம், சுழல் காற்று கொலைவாள் மணிமகுடம் தியாக சிகரம். என ஐந்து பாகங்கள் கொண்ட புதினத்தை, கிட்டதட்ட ஒரு பாக அளவில் சுருக்கப்பட்டுள்ளது. ஆடி 18 முதல் புதுவெள்ளம் பொங்கிப் பெருக்கெடுக்க உள்ளது. வாசிக்கத் தயாராகுங்கள் – பொன்னியின் செல்வன் – சுருங்கிய வடிவில் – சுவடு இணைய இதழில். சவிதா