பொன்னியின் செல்வன் 10 – பாகம் 2 – சுழல்காற்று
இரண்டாம் பாகத்திற்குள் நுழையும் முன்பு முதற் பாகத்தின் சுருக்கம்:இராஜராஜன் என்று பிற்காலத்தில் பட்டமேற்ற சோழ இளவரசன் அருள்மொழி வர்மன் இலங்கையில் போர் நடத்திக் கொண்டிருந்தான். அவனது அண்ணன் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன். இவர்கள் இருவருக்கும் நடுவில் பிறந்த குந்தவை அப்போது பழையாறையில் இருந்தாள். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் பொன் மாளிகை ஒன்றைக் கட்டி, தன் தந்தையும் சோழ அரசருமான சுந்தர சோழரை அங்கு வந்து தங்கியிருக்க வேண்டி, வாணர் குலத்தில் வந்த தனது நண்பன் வந்தியத்தேவனிடம் ஓலை கொடுத்து அனுப்பினான். வழியில் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் நடந்த சிற்றரசர்களின் ரகசியக் கூட்டத்தில், சுந்தர சோழரின் பெரிய தந்தை கண்டராதித்த சோழரின் புதல்வனான மதுராந்தகனுக்குப் பட்டம் கட்ட அவர்கள் முடிவு செய்ததை வந்தியத்தேவன் தெரிந்து கொண்டான்.கண்டராதித்தர் இறந்தபோது மதுராந்தகன் சிறுவனாக இருந்தபடியால் சுந்தர சோழர் அரசராகி இருந்தார். மதுராந்தகனை ஆதரித்த சோழ நாட்டு சிற்றரசர்களுக்குத் தலைமை வகித்தவர் சோழ நாட்டு நிதியமைச்சர் பெரிய பழுவேட்டரையர். இவரது தம்பி சின்ன பழுவேட்டரையர்தான் தஞ்சைக் கோட்டையின் காவலர். பெரிய பழுவேட்டரையர் தனது முதிர்ந்த வயதில் நந்தினி என்ற பெண்ணை மணந்து கொண்டிருந்தார். நந்தினியின் மீதான மோகத்தில் கட்டுண்டு கிடந்த பெரிய பழுவேட்டரையரை நந்தினி ஆட்டி வைத்துக் கொண்டிருந்தாள். நந்தினியும் ஆதித்த கரிகாலனும் இளமையில் காதலர்கள். இவர்கள் காதலை குந்தவையும் கண்டராதித்தர் மனைவி செம்பியன் மாதேவியும் விரும்பவில்லை. பாண்டியருடன் நடந்த இறுதிப் போரின்போது நந்தினியின் வேண்டுகோளைப் புறம்தள்ளி, வீரபாண்டியன் தலையைக் கொய்தான் ஆதித்தன். வீரபாண்டியன் கொலைக்குப் பழிவாங்க சபதம் பூண்ட நந்தினி, பழுவூர் இளைய ராணியாகி பாண்டி நாட்டு ஆபத்துதவிகளுக்கு உதவி செய்து வந்தாள்.வந்தியத்தேவன் வழியில் நந்தினியைச் சந்தித்து அவள் தந்த முத்திரை மோதிரத்தைக் காட்டி அரசரைச் சந்தித்து ஆதித்தன் ஓலையைக் கொடுக்கிறான். தன்மீது ஐயம் கொண்ட சின்னப் பழுவேட்டரையரை ஏமாற்றி கோட்டையை விட்டு வெளியேறுகிறான். தஞ்சையில் அவன் சந்தித்த சேந்தன் அமுதன், வந்தியத்தேவனுக்கு உதவுகிறான். அவன் கோடிக்கரையில் இருக்கும் தன் மாமன் மகள் பூங்குழலியை ஒருதலையாகக் காதலிக்கிறான் என்பது தெரிய வருகிறது. வந்தியத்தேவனை ஒற்றன் என்று கருதி பழுவேட்டரையர் ஆணை ஒருபுறம் துரத்த, ஆபத்துதவிகள் கூட்டத்தைச் சேர்ந்த மந்திரவாதி ரவிதாசன் ஒருபுறம் துரத்த, அனைத்தும் கடந்து, பழையாறை வந்து ரகசியமாக இளவரசி குந்தவையைச் சந்தித்து விவரங்களைக் கூறுகிறான் வந்தியத்தேவன். இலங்கையில் உள்ள அருள்மொழி வர்மனைப் பழையாறைக்கு வரும்படி அழைத்து ஒரு ஓலை எழுதி, வந்தியத்தேவன் மூலம் அதை அனுப்பி வைக்கிறாள் குந்தவை. காஞ்சியில் இருந்தே வந்தியத் தேவனைத் தொடர்கிறான் ஆழ்வார்க்கடியான் என்ற திருமலை. பாண்டி நாட்டு ஆபத்துதவிகளின் ரகசியமும் அவன் தெரிந்திருக்கிறான். அவன் முதன்மந்திரி அநிருத்த பிரமராயரின் ஆள் என்பதை வந்தியத்தேவன் அறியவில்லை. வானத்தில் வால் நட்சத்திரம் ஒன்று தோன்றியிருந்தது பற்றிப் பலரும் பலவாறு பேசிக் கொண்டிருந்தனர். இனி இரண்டாம் பாகம்.. பொன்னியின் செல்வன் – 10இரண்டாம் பாகம் – சுழல்காற்று கோடியக்கரையின் கடலோரத்தில் மிதந்த சிறிய படகிலிருந்து நெஞ்சை உருகச் செய்யும் ஒரு பாடல் கேட்டுக்கொண்டிருந்தது. அந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருந்த இளம்பெண், நீண்ட கருங்குழலில் தாழம்பூவின் ஒரு மடலைச் சூடிக்கொண்டு தன்னில் ஆழ்ந்துகொண்டு அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தாள்.‘அலைகடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?நிலமகளும் துயிலுகையில்நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்? அவளின் மனதில் இருந்த சோகத்தையெல்லாம் வெளிப்படுத்திய அந்தப் பாடல், கேட்பவரின் நெஞ்சம் விம்மி வெடித்து விடுவது போன்ற உணர்ச்சியோடிருந்தது.ஆழம் அதிகமில்லாத அந்தக் கடற்கரையோரம் தன் ஓடத்தை நிறுத்திக் கரையிறங்கிய அந்தப் பெண், சேந்தன் அமுதன் மணக்க விரும்பும் முறைப்பெண்ணான பூங்குழலிதான். கலங்கரை விளக்கின் தீபம் ஏற்றப்பட்டிருந்ததைப் பார்த்த பூங்குழலி கோடியக்கரை குழகர் கோவிலில் சேமங்கலம் அடிக்கும் ஒலி கேட்கவே கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தாள். கோடியக்கரை கடற்கரையை ஒட்டி அடர்ந்த காடு. முழுவதும் மணற்பரப்பும் மணல்மேடுகளின் மீது செடிகளும் மரங்களூம் முளைத்ததினால் கெட்டிப்பட்ட குன்றுகளும் பள்ளங்களும் நிறைந்த அந்தக் காட்டில் வழிகண்டுபிடித்துப் போவது கடினம். திரும்பத் திரும்ப ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருப்பதைப் போல பிரமை தோன்றக்கூடிய அபாயமான காட்டுவழி. பூங்குழலி அந்த வழியாகச் சென்று கோவிலில் தரிசித்துவிட்டு, பட்டர் அளித்த பிரசாதத்தை வாங்கிக்கொண்டு மதில் மேல் அமர்ந்து உண்ணலானாள். அப்பொழுது வந்தியத்தேவனும் வைத்தியர் மகனும் இரு குதிரைகளில் வருவதைப் பார்த்தவள், என்னவென்று விவரிக்க முடியாத உணர்ச்சியினால் கடல் பக்கமாக ஓடலானாள். அந்தக் காட்டில் வழி கண்டுபிடித்துப் போக முடியாமல் பூங்குழலியைப் பார்த்ததும் வழிகேட்கலாம் எனக் குதிரையிலிருந்து இறங்கிய வந்தியத்தேவன், அவள் ஓடுவதைக் கண்டு திகைத்து பின் அவனும் துரத்த, பாதி வழியிலேயே சேந்தன் அமுதன் குறிப்பிட்ட பெண் இவள்தான் எனப் புரிந்து கொண்டு மேலும் துரத்தலானான். அந்தக் கடற்கரை மணற்வெளியைப் பற்றி அறிந்திராத வந்தியத்தேவன் ஓடுகிற வேகத்தில் அதிலிருந்த புதைகுழியில் மாட்டிக்கொண்டு, தன்னைக் காப்பாற்றுமாறு கத்த, பூங்குழலி விரைந்து செயல்பட்டாள். அங்கு தேங்கிப்போயிருந்த சேற்றில் ஓடத்தை ஓட்டிக் கொண்டு வந்து தன் வலிய கரங்களை வந்தியத்தேவனுக்குக் கொடுத்து மேலிழுத்தாள். பின் சேற்றைக் கடலில் கழுவிக்கொண்ட வந்தியத்தேவன் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு, ‘சேந்தன் அமுதனின் காதலிதானே நீ?’ எனக் கேட்க, பூங்குழலி மறுத்தாள். பேசிக்கொண்டே இருவரும் நடந்தபோது முதல்நாள் இருவர் தன் அண்ணனுக்கு நிறைய காசு கொடுத்து இலங்கைக்குச் சென்றதைப் பூங்குழலி சொல்ல, அவள் சொன்ன அடையாளத்தை வைத்து அது மந்திரவாதி ரவிதாஸனாக இருக்கும் என வந்தியத்தேவன் எண்ணிக் கொண்டான். வழக்கமாக தான் பெண்களிடம் கடைபிடிக்கும் வழக்கப்படி பூங்குழலியிடம் வந்தியத்தேவன் பேச, அவள் தனக்கு நிறைய காதலர்கள் இருப்பதாகவும் சந்தேகமாய் இருந்தால் நள்ளிரவில் அவர்களைச் சந்திக்கச் செல்லும்போது பின் தொடர்ந்து வந்து பார்த்துக் கொள்ளுமாறும் சொல்லிச் சிரிக்க, பூங்குழலிக்கு சித்தப் பிரமையோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. பேசிக்கொண்டே வைத்தியர் மகனையும் அழைத்துக் கொண்டு பூங்குழலியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். கோடியக்கரை கலங்கரை விளக்கக் காவலரும் பூங்குழலியின் அப்பாவுமான தியாகவிடங்கக் கரையரிடம் தாங்கள் வந்த சேதியைச் சொல்லி, தான் மட்டும் இலங்கை செல்ல ஏற்பாடு செய்யுமாறு வந்தியத்தேவன் கேட்டான். அவர் தன் மருமகளின் பணத்தாசை காரணமாக தன் மகன் யாரோ இருவரை இலங்கைக்கு ஏற்கெனவே ஒரு படகில் அழைத்துச் சென்றதைக் கூறி வருத்தப்பட்டுவிட்டு, உணவு உண்டு அங்கேயே தங்குமாறும், தான் வேறு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்.வந்தியத்தேவன் நன்கு உண்டுவிட்டு உறங்கிக்கொண்டிருந்தபோது திடீரென விழிப்பு தட்டி தன்னைத் தாண்டிச் சென்ற பூங்குழலியைத் தொடர்ந்து சென்றான். அடர்ந்த இருளில் பயந்துகொண்டே வந்தியத்தேவன் செல்ல, பூங்குழலி அழுகையுடன் அந்தப் பாடலை மறுபடி கடற்கரையில் பாடலானாள். வந்தியத்தேவனைப் பார்த்தவள், சிரித்தபடி அவனைத் திரும்பி பார்க்கச் சொல்ல, அங்கு பார்த்தவன் நடுநடுங்கிப் போனான். தொடரும்.