பொன்னியின் செல்வன் – 30
மதுராந்தகன் கொடிய எண்ணங்களுடன் சேந்தன் அமுதன் குடிசையை நோக்கிச் செல்கையில், பார்ப்பதற்கு அருவருப்பான தோற்றத்துடன், கருத்திருமன் மதுராந்தகனை மறிப்பதுபோலக் குறுக்கிட்டான். தன் கையிலிருந்த குறுவாளை, கருத்திருமனை நோக்கி மதுராந்தகன் ஓங்கினான். உடனே கருத்திருமன், தான் அவனுக்கு எதிரியல்ல என்றும் அவனுக்கு உதவுவதற்காகவே வந்திருப்பதாகவும் கூற, மதுராந்தகன் திகைத்தான். தன்னை மதுராந்தகனின் தந்தையாருடைய உண்மையான ஊழியன் என அறிமுகப் படுத்திக்கொண்ட கருத்திருமன், மதுராந்தகனின் தந்தை யார் என்ற ரகசியத்தை மதுராந்தகனின் காதில் சொன்னான். அவனும் ராஜகுமாரன் எனவும் தன்னுடன் வருமாறும் பலவகையில் மதுராந்தகனை அழைத்தான். மதுராந்தகன் அவனுடன் செல்வதாக முடிவு செய்தான். வந்தியத்தேவனைத் தங்களுடன் அழைத்துப்போவது பற்றி விவாதித்துக்கொண்டே, இருவரும் குதிரைகளை நோக்கி நடக்கத் தொடங்கினர். மதுராந்தகன், சேந்தன் அமுதனை ஏதாவது செய்யலாமென யோசித்து, பின் முடிவை மாற்றிக்கொண்டு நடக்கலானான். கருத்திருமனுடன் வந்திருந்த வந்தியத்தேவன், அவனின் வருகைக்காகக் காத்திருந்தான். மதுராந்தகனோடு கருத்திருமன் பேசியதன் ஒரு பகுதி அவன் காதிலும் விழவே, அவன் சற்றே குழம்பி குடிசையை நோக்கினான். அப்போது குடிசையின் பின்னால் இருந்த பலகணியின் வழியாக ஒரு உருவம், ஈட்டியைச் செலுத்துவதற்காகக் குறிபார்த்ததைக் கண்டு அதிர்ந்தான். அது பினாகபாணியேதான். பாதாளச் சிறையில் வந்தியத்தேவனால கட்டிப்போடப்பட்ட பினாகபாணி, பொன்னியின் செல்வருடன் வந்தவர்களால் அவிழ்த்துவிடப்பட்டான். வந்தியத்தேவன் தப்பித்ததை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்ததைக் கண்டு எரிச்சலுற்றவன், சேநாதிபதி பெரிய வேளாளரிடம் வந்தியத்தேவன் காணாமல் போய்விட்டதைச் சொல்லி உடனே தேடுமாறு வேண்ட, அவருக்குக் கோபம் வந்து அவனைத் துரத்திவிட்டார். முதன் மந்திரி அநிருத்தரிடமே பினாகபாணி சென்று நடந்ததைச் சொல்ல, அவரும் வந்தியத் தேவன் தப்பித்தது குறித்து ஏதும் சொல்லாமல் பினாகபாணியைக் குற்றம் சொன்னார். அவர், பினாகபாணியைத் தொடரச் சொல்லி, தான் அனுப்பியிருந்த ஆழ்வார்க்கடியான் மிச்சத்தைப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையால், பினாகபாணியை விரட்டிவிட்டார். இதற்கெல்லாம் வந்தியத்தேவன்தான் காரணம் என்பதால், அவனை எப்படியாவது தானே பிடித்துவிட வேண்டும் என எண்ணி, வந்தியத் தேவன் சேந்தன் அமுதன் குடிசையில்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து, சேந்தன் அமுதன் குடிசையை அடைந்தான் பினாகபாணி. அவனுக்கு அந்த வழி சரியாகத் தெரியாததானால், எப்படியோ தேடித்தேடி முயன்றதில், மதுராந்தகனும் கருத்திருமனும் ரகசியமாகப் பேசுவதைக் கண்டான். குதிரைகள் கட்டிப்போட்டிருப்பதைக் கண்டவன், எப்படியும் தப்பிக்க வந்தியத்தேவன் அங்குதான் வரவேண்டுமென நினைத்து அங்கு செல்லத் தொடங்கினான். அப்போது குடிசைக்குள்ளிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்ளும் குரல்களைக் கேட்டு, பலகணி வழியாகக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தான். பூங்குழலியின் மேல் இருந்த மோகம் கண்ணை மறைக்க, கையிலிருந்த ஈட்டியை சேந்தன் அமுதன் மேல் எறிவதற்காகக் குறிபார்த்த போதுதான், வந்தியத்தேவன் அவனைக் கண்டான். அதே சமயத்தில், இரு குதிரைகளில் மதுராந்தகனும் கருத்திருமனும் கிளம்புவதைக் கண்ட வந்தியத்தேவன், பினாகபாணியின் செயலைத் தடுப்பதே முதல் வேலை என்று சடுதியில் முடிவெடுத்தான். வந்தியத் தேவன் ஓடிவரும் சத்தம் கேட்டுத் திரும்பிய பினாகபாணி, வந்தியத்தேவனை அதே ஈட்டியால் விலாவில் குத்தினான். அதே சமயம் குதிரைகள் ஓடும் சத்தமும் கேட்கவே, தான் குத்தியது மதுராந்தகரை என்று தவறாக நினைத்துக்கொண்டே தலைதெறிக்க ஓட்டம் எடுத்தான். வந்தியத்தேவனின் அலறலைக்கேட்டு சேந்தன் அமுதனும் பூங்குழலியும் விளக்கை எடுத்துக்கொண்டு வந்து, அவனை உள்ளே தூக்கிச் சென்றார்கள். வாணி அம்மை பச்சிலை வைத்தியம் செய்து அவன் உயிரைக் காப்பாற்றினாள். ஆழ்வார்க்கடியான் படகில் கட்டியிருந்தபடிக்கு, வந்தியத்தேவன் தப்பித்து இலங்கைக்குப் போவதே இப்போதைக்கு நல்லது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்ததை நினைத்துக்கொண்டு வந்தியத்தேவனிடம் ஒரு செய்தி சொல்லி அனுப்பக் காத்திருந்தான். அதேபோல, இரு குதிரைகள் அவனைத் தாண்டவும் அவற்றில் போகும் நபர்களை பார்த்து வியப்படைந்தான். கருத்திருமன் பெயரைக் கூறி, உதவிக்கு அழைத்தான். அப்போது கருத்திருமன் மட்டும் திரும்பி வந்து அவனை அவிழ்த்துவிட, அவனைத் தாக்கி, ‘உடன் வந்திருப்பது யார்?’ எனக் கேட்டு மிரட்டினான். கருத்திருமனால் அவன் பிடியிலிருந்து தப்பிக்கவியததால், மதுராந்தகனை அழைத்துச் செல்வதாகக் கூறினான். மதுராந்தகனின் உண்மையான தந்தை யார் எனவும் சேந்தன் அமுதன் யார் மகன் எனவும் மீண்டும் மிரட்டவும், கருத்திருமன் உண்மையைக் கூற, ஆழ்வார்க்கடியான் அவனை விடுவித்தான். ஆழ்வார்க்கடியானும் அவன் ஆட்களும் தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி நடக்க, பினாகபாணி தலைதெறிக்க ஓடிவந்து இவர்களிடம் முட்டிக்கொண்டான். ‘வந்தியத்தேவன் அங்கு யாரையோ குத்திவிட்டு ஓடிவிட்டதாக’ ஆழ்வார்க்கடியானிடம் புலம்பினான். அவனிடம் மட்டும் நாலு குதிரையும் ஆட்களும் இருந்தால் பின்தொடர்ந்து சென்று பிடித்துவிடுவேன் எனச் சொல்ல, ஆழ்வார்க்கடியான் அவனைக் கோட்டை நோக்கி அழைத்துச் சென்றான். கோட்டைவாயிலில், அநிருத்தரும் சேநாதிபதி வேளாளரும் நிற்க, எதிர்ப்புறத்தில் சின்ன பழுவேட்டரையர், பார்த்திபேந்திரன், மற்றும் கந்தமாறனும் பரிவாரங்களும் இருந்தனர். பெரிய பழுவேட்டரையரும் ஒரு யானை மேல் வீற்றிருந்தார். ஆழ்வார்க்கடியானின் யோசனையின் பேரில், வந்தியத்தேவன் தப்பிப் போய்விட்டதைச் சொல்லி, அவனைப் பிடித்துவர பினாகபாணி உதவி கேட்க, சில வீரர்களுடன் கந்தமாறனைப் பினாகபாணியுடன் சின்ன பழுவேட்டரையர் அனுப்பி வைத்தார். குதிரையில் சென்ற மதுராந்தகனும் கருத்திருமனும் இருட்டில் நதி வெள்ளத்தைத் தாண்டமுடியாமல் மரத்தின்மீது அமர்ந்திருந்தனர். கருத்திருமன் பாண்டிய நாட்டின் ரத்தின ஹாரம், மணிமுடி பற்றியெல்லாம் சொல்லி, மதுராந்தகனின் மனச்சோர்வைப் போக்கிக்கொண்டிருந்தான். பின்னால் வீரர்கள் வருவதைப் பார்த்தவுடன், வேகவேகமாக குதிரைகளுடன் அக்கரைக்கு இருவரும் சென்றனர். இருட்டில் வெள்ளத்திலிருந்து கரையேறும் முன்பு, மதுராந்தகனை வந்தியத்தேவன் என எண்ணிக் கந்தன்மாறன் ஈட்டி எறிய, மதுராந்தகன் வெள்ளத்தில் வீழ்ந்தான். மூங்கில் பாலத்தில் ஏறி, கருத்திருமனைப் பிடிக்கப் பினாகபாணி முயல, கருத்திருமன் பாலத்தின் கயிறுகளை அறுத்துவிட்டதில் பினாகபாணி வெள்ளத்தில் விழுந்து இறந்தான். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கருத்திருமன் தப்பி ஓட, வந்தியத்தேவன்தான் இறந்துவிட்டான் என எண்ணிக்கொண்டு, அவன் சடலத்தைக் கந்தமாறன் ஆற்றில் தேட, சடலம் கிடைக்கவில்லை என்பதால் ஆற்றில் அடித்துக்கொண்டு போயிருக்குமெனக் கருதி, கந்தன்மாறன் தஞ்சைக்கு திரும்பினான். இதற்குள், ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து சேந்தன் அமுதனின் குடிசையை அடைந்தான். அங்கு மதுராந்தகனுக்காக அவனைக் கூட்டி வந்த பல்லக்கு சிவிகையும் காவலர்களும் காத்திருந்தனர். உள்ளே சென்றபோது, மதுராந்தகன் கழற்றி வைத்துவிட்டுப் போயிருந்த ஹாரம், கிரீடம், உத்தரீயங்கள், வாகுவலயம் அனைத்தையும் ஒரு காவலன் கொண்டுவந்து தந்தான். ஆழ்வார்க்கடியான் குடிலின் கதவைத் தட்டியவுடன், கதவைத் திறக்காமல், பூங்குழலி வாக்குவாதத்தில் ஈடுபட்டாள். பின் கதவைத் திறந்து பார்த்து, காவலர்களைக் கண்டு பயந்தவளைத் தள்ளிக்கொண்டு ஆழ்வார்க்கடியான் உள்ளே சென்றான். வந்தியத்தேவனைக் கட்டிலுக்கடியில் மறைத்து வைத்திருந்ததைப்பற்றி ஆழ்வார்க்கடியான் கேட்க, சேந்தன் அமுதன் உண்மையை ஒத்துக்கொண்டு, உதவி செய்யுமாறு வேண்டினான். ஆழ்வார்க்கடியான், பொன்னியின் செல்வரின் யானையைக் கொண்டுவருவதாகவும் சேந்தன் அமுதன் மதுராந்தகன் கழற்றி வைத்த ஆபரணங்களைப் பூண்டு, வேடமிட்டு அதில் ஏறி வருமாறும் கூறினான். வந்தியத்தேவனை மதுராந்தகன் வந்த பல்லக்கில் ஏற்றிவிட்டு, பூங்குழலியை உடன் நடந்து வருமாறும் யோசனை கூறினான். பழுவேட்டரையர்களின் படை எப்போது வேண்டுமானாலும் இங்கு வருமெனவும் வந்தால் சேந்தன் அமுதனின் உயிரைக் காப்பாற்றத் தன்னுயிரைக் கொடுக்க முயன்ற வந்தியத்தேவனை நாம் காப்பாற்ற முடியாதெனவும் அவர்களை அவசரப்படுத்தினான். அவர்கள் சம்மதித்தனர். கோட்டை வாசலில் சின்ன பழுவேட்டரையருக்கும் சேநாதிபதி பெரிய வேளாளருக்கும் பூசல் ஏற்பட்டதைத் தடுக்க முடியாமல் முதன் மந்திரி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். சக்ரவர்த்தி உடல்நிலை சரியில்லாமல், தன் மூத்த மகனை இழந்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர்கள் சண்டையிட்டுக்கொள்வது அழகல்ல எனவும் மறுநாள் பகலுக்குள் அனைவரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தும்வரை அமைதியாக இருக்குமாறும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஆழ்வார்க்கடியான் அவரைத் தனியாக அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவர் சின்ன பழுவேட்டரையரிடம் மதுராந்தகர் யானையில் அமர்ந்து வருவதாகவும் சேந்தன் அமுதனுக்கு அடிபட்டிருப்பதால் அவனைப் பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்வதாகவும் கூறினார். ஏற்கனவே, தனது மருமகனான மதுராந்தகனின் பாதுகாப்பு பற்றி விவாதத்தில் இருந்த சின்ன பழுவேட்டரையர், அமைதியானார். ஆனால் தன் பாதுகாப்பில் இருந்த கோட்டைக் காவலைப் பெரிய வேளாளர் வைத்திருப்பதால், உள்ளே வர முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து, வெளியே தங்கிவிட்டார். மறுநாள் சக்ரவர்த்தியிடம் இதைத் தெரிவித்தபோது, காலாந்தக கண்டர் வராமல் ஆலோசனையைத் தொடரமுடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கோட்டைக் காவலை மறுபடி அவரிடமே ஒப்படைக்கும்படி பெரிய வேளாளரிடம் சொல்ல, அவர்கள் அனைவரும் ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றியும் வந்தியத்தேவன் தப்பித்தது குறித்தும் கேள்விகளைத் தொடுத்தார்கள். அநிருத்தர், தன்னுடைய அஜாக்கிரதையால் வந்தியத்தேவன் தப்பித்தது உண்மையெனவும், திருப்பிக் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பும் தன்னைச் சார்ந்தது எனவும் கூறினார். வந்தியத்தேவனைத் தொடர்ந்து பிடித்துவர கந்தன்மாறன் போயிருப்பதாகப் பார்த்திபேந்திரன் சொல்ல, குந்தவையின் முகம் வாடியது. அதைக் கவனித்த முதன்மந்திரி அது சாத்தியமில்லை என அவளுக்குக் குறிப்பால் உணர்த்தினார். மறுபடி கோட்டைக் காவலைத் திரும்ப ஒப்படைப்பது குறித்துப் பேச, அநிருத்தர் ராஜ்ய உரிமை பற்றி முடிவெடுத்தபின் அதை முடிவு செய்யலாமென யோசனை கூற, பெரிய பழுவேட்டரையரோ தன் தம்பி அவர் பொறுப்பிலிருந்து தவறியது உண்மைதான் எனவும் கோட்டைக் காவலைத் திரும்ப ஒப்படைக்கத் தேவையில்லை எனவும் சொல்ல, அனைவரும் திகைத்தனர். சக்ரவர்த்தி பெரிதும் வருந்தி, ஒருநாளும் சின்ன பழுவேட்டரையர், தன் கடமையிலிருந்து தவறியதில்லை என ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார். அப்போது தன் தொண்டையைக் கனைத்துக்கொண்ட பெரிய பழுவேட்டரையர், ‘சின்ன பழுவேட்டரையர், தன்னை நந்தினியிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னதாகவும் தான் அதைக் கேட்கவில்லையெனவும் கூறினார். அந்தக் கொலை பாதகர்களை அன்றே கண்டுபிடித்திருக்க வேண்டுமெனவும், தான் தடுத்திருந்தால்கூட, அண்ணன் எனப் பாராமல் தன் கைகளை வெட்டியிருக்க வேண்டும் எனவும், அதனால் சின்ன பழுவேட்டரையர் தன் கடமையிலிருந்து தவறிவிட்டார் என்பது சரிதான் எனவும் கூறினார். கூடியிருந்தவர்களுக்கு அவருடைய பேச்சு மெய் சிலிர்த்தது. சக்ரவர்த்தி எல்லாவற்றையும் மறுத்து, சின்ன பழுவேட்டரையரின் மீதே நியாயமிருக்கிறது என்பதை மறுபடியும் எடுத்துரைத்தார். எனவே, கோட்டைக் காவலை அவரிடம் ஒப்படைக்குமாறும் பெரிய பிராட்டியிடம் ராஜ்ய உரிமை குறித்துக் கலந்து பேச வேண்டியிருப்பதால், இன்னும் மூன்று நாட்கள் கழித்து அதைப்பற்றிக் கலந்து பேசலாமெனவும் சக்ரவர்த்தி கூறினார். பார்த்திபேந்திரன், வந்தியத்தேவனைக் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை அநிருத்தர் ஏற்றுக்கொண்டதை நினைவுபடுத்தினான். பெரிய பழுவேட்டரையர் ஏதோ சொல்லவந்து, பின் நிறுத்திக்கொண்டார். அன்று சாயந்திரமே சின்ன பழுவேட்டரையரிடம் கோட்டைக் காவல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதில் சில சலசலப்புகள் எழுந்தன. அங்கங்கே சிறுசிறு கலகங்களும் ஏற்பட்டன. மக்கள் ராஜ்ய உரிமை குறித்துப் பேசி சண்டை எழுந்தது. தஞ்சை முழுவதும் ஒருவிதப் பதட்டம் ஏற்பட்டிருந்தது. தொடரும்