உணவுத் தீண்டாமை

உணவுத் தீண்டாமை

இந்தச் சமூகத்தில், நாம் உண்ணுகிற உணவு என்பது, ஊருக்கு ஊர், நாட்டுக்கு நாடு வேறுபட்டுள்ளதைப்போல, ஒவ்வொரு மனிதருக்கும் உணவுப் பழக்கவழக்கம் வேறுபட்டே உள்ளது. உணவு விருப்பம் என்பது எல்லாருக்கும் ஒன்றுபோல இருக்கிறதா என்றால், இல்லை என்பதே உண்மை.   உலக நாடுகளில், அந்தந்த நாடுகளின் வாழ்வியல் சார்ந்து மக்கள் உணவுப் பழக்கத்தை வைத்திருக்கிறனர். அதில் ஆடு, மாடு, பன்றி, கோழி, மீன் போன்றவை பொதுவான அசைவ வகை உணவுகளாக அறியப்படுகின்றன. மேற்சொன்னவை மட்டுமல்லாது, நிலத்திலும் நீரிலும் வாழும் பல்வேறு விலங்குகள், பறவைகள், ஊர்வன, பூச்சிகள் ஆகியவையும் பல இடங்களில் மனிதர்களின் உணவுப் பட்டியலில் இருக்கின்றன. காய்கறிகளை / தாவரப் பொருட்களை மட்டுமே கொண்டு சமைக்கப்படும் உணவுகள் சைவ வகை உணவுகளாக அடையாளம் பெற்றுள்ளன. உலகின் பல நாடுகளில் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வது மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி,  மீன் வகைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள்தான். இந்தியா போன்ற சில நாடுகளில் வாழ்கிற மக்களிடம், அவர்களின் குடி, சமயம், குடும்பம் போன்றவற்றின் அடிப்படையில், உணவுப் பழக்கவழக்கங்களில் அசைவமும் சைவமும் கலந்திருக்கிறன. உயிர் வாழவும் பசி போக்கவும் நாம் உண்கிற உணவில், சைவ உணவுதான் சிறந்தது என்று சிலரும், இல்லை இல்லை, அசைவ உணவுதான் சிறந்தது என்று சிலரும் அவரவர் உணவுப் பழக்கத்தின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். உண்மையைச் சொன்னால், அவர்கள் அவர்களை அறியாமலே, மறைமுகமானதொரு அரசியல் வலையில் சிக்கவைக்கப்டுள்ளனர். இதனால் மனிதர்களுக்குள்ளே ஒற்றுமையை விலக்கி, வேற்றுமையை உருவாக்கி, உளவியல் ரீதியில் அவர்களை ஒருவகை நெருக்கடிக்கு உள்ளாக்கி வைத்திருக்கிறது இந்த உணவு அரசியல். இதனால், பழக்கப்பட்ட உணவை வைத்து ஒருவரை ஒருவர்  ஏளனமாகவும் இழிவாகவும் பார்க்கிற பார்வை இங்கே பரவலாக இருந்து வருகிறது. ஆம், சைவ உணவை உண்பவர்கள் எல்லா வகையிலும் உயர்ந்தவர்கள், போற்றத்தக்கவர்கள், அது பிறப்பின் பெருமை என்பதோடு, அசைவ உணவை உண்பவர்களை மிகவும் கேவலமாகவும் அருவருக்கத் தகுந்தவர்களாகவும் கீழானவர்களாகவும் தீண்டத் தகாதவர்களாகவும் பார்க்கிற எண்ணமும் ஒரு சாராரிடம் நிறைந்திருக்கிறது. அவர்களால் பொது இடங்களில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுகிறபோது, அசைவ உணவு கொண்டுவந்தவர்களோடு இயல்பாகச் சேர்ந்து உணவருந்த முடிவதில்லை. அவர்களின் செயல்பாடுகளால் அசைவ உணவை உண்பவர்கள் தர்மசங்கடத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. அதைப்போலவே சைவ உணவு உண்பவர்களுக்கும் பல சங்கடங்கள் நிகழ்கின்றன என்பதையும் நாம் பார்க்கவேண்டும். பெரும்பான்மையாக அசைவ உணவுப் பிரியர்கள் ஒன்றுகூடும் இடங்களில், சைவ உணவு உண்பவர்களை, சாம்பார் சோறு என்றும் தயிர் சோறு என்றும் ஏளனத்துக்கு ஆளாகிறார்கள். காரணம், பெரும்பான்மை கோலோச்சுகிற இடங்களில் சிறுபான்மை தாக்குதலுக்கு உள்ளாகிறது. உணவு என்பது அவரவர் விருப்பமாக இருக்க வேண்டுமே தவிர, ‘நீ அதை உண்ணாதே என்பதும் இதைத்தான் உண்ண வேண்டும் என்பதும் ஆதிக்க மையத்தின் அடாவடிச் செயலாகும்.  இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமென்றால், ஏழை எளியோர்களின் அன்றாட உணவுகளான பழஞ்சோறு, கஞ்சி, கூழ் போன்றவற்றைப்பற்றிப் பொது இடங்களிலோ மற்றவர்களிடத்திலோ பேசும்போது ‘ஆஹா, ஓஹோ’ என்பவர்கள், அதை ஏழைகளிடத்தில் காண்கிறபோது ஏளனமாகப் பார்கிற பார்வை பெரும்பாலோரிடம் இருக்கிறது. அது சைவமோ அசைவமோ, எதுவாக இருந்தாலும் ஏழைக்களிடம் இருப்பதால் அது, இவர்களைப் பொறுத்தவரை தீண்டத்தகாத உணவு, அவ்வளவுதான். என்னதான் ஒருவருக்கொருவர் உணவு விஷயத்தில் ஒவ்வாமையைக் காட்டினாலும், உணவுத் தீண்டாமை என்பது, ஏழைகளின் உணவுகளைபோல அசைவ உணவுகளின் மீது மட்டுமே அதிதீவிரமாகத் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக அசைவத்தின் மீது வெறுப்பை உமிழ்பவர்கள் தொடர்ந்து இருந்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அண்மையில், முன்னாள் செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி, தனது சமூக வலைத்தளப் பதிவில், ‘அசைவ உணவு சாப்பிடுவோரின் ஆன்மாவால், நெற்றிப் பொட்டில் உள்ள சவ்வைக் கிழித்துக்கொண்டு சென்று இறைவனைச் சேர முடியாது’ என்று அவருடைய குரு கூறியதாகப் பதிவு செய்திருந்தார். உண்மையில் அவர், சைவத்துக்கு ஆதரவு என்கிற பெயரில் அசைவ உணவு குறித்த தன் அறியாமையை வெளிப்படுத்தியிருந்தார், அவ்வளவே. முருக பக்தரான கிருபானந்த வாரியார் சுவாமிகள் போன்றவர்களுக்குக்கூட, உணவு விஷயத்தில் போதிய அறிவு இல்லை என்பதை அவரது உரைகளின் வழியே நான் கேட்டிருக்கிறேன். ஒருமுறை  அவர், சைவமே சிறந்ததென்று சொல்வதற்காக, ஒரு முருங்கை மரத்தின் கிளைகளை வெட்டி நட்டு வைத்தால், அது பல முருங்கை மரங்களாக வளர்ந்து நமக்குப் பயன் தரும். ஆனால் ஒரு ஆட்டை வெட்டி அதன் கால்களை நட்டுவைத்தால் ஆடு வளருமா எனக் கேட்கிறார். எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் பகுத்தறிவற்றுப் பேசுகிறபோது சிறிய மனிதராக ஆகிவிடுகிறார்கள் என்பதற்கு உதாரணம் இதுபோன்ற மூடத்தனமிக்க பேச்சுகள்தான். முருங்கை குறித்த அவர் பேச்சு சரிதான் என்று வைத்துக்கொண்டாலும், எல்லா மரங்களும் வெட்டி நட்டால் வளராது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தென்னை மரத்தையோ பனை மரத்தையோ அல்லது நெல், சோளம் போன்ற பயிர் வகைகளையோ வெட்டி நட்டால் அவை வளராது; பக்குவப்படுத்தப்பட்ட விதைகளைப் போட்டால்தான் வளரும். அப்படித்தான், ஒரு ஆட்டை வெட்டி அதன் கால்களை நடுவதால் ஆடு வளராது. ஆனால் ஆடுகளை வளர்த்து பல குட்டிகளைப் போட்டபின்பு அது கசாப்பு கடை வழியே உணவாக மாறுகிறது. ஒரு ஆடு பல குட்டிகளை ஈனும். அவை இன்னும் பலப்பல குட்டிகளை ஈனும். விவசாயம் எப்படி நடைபெறுகிறதோ அதற்குச் சற்றும் குறைந்ததல்ல கால்நடைகள் வளர்ப்பு. அண்மையில் விஜய் தொலைக்காட்சியில் ஒரு தம்பி பேசுகிறபோது, சைவம் சிறந்ததென்று சொல்வதற்காக, வாரியம் சுவாமிகள் சொன்னதாக ஒரு செய்தியைச் சொன்னார்.  எது சைவம்? எது அசைவம்?  என்று அவரிடம் கேட்டபோது, சாலையில் ஒரு ஆடு அடிபட்டு உயிருக்குப் போராடுகிறபோது, யார் கண்களில் நீர் சுரக்கிறதோ அது சைவம் எனவும் யார் வாயில் நீர் சுரக்கிறதோ அது அசைவம் என்றும் சொன்னதாகச் சொல்கிறார். இது எத்தகைய வக்கிர மனப்பான்மை?! அதாவது, சைவம் உண்பவர்கள் ஜீவகாருண்யம் மிக்கவர்கள், அன்பை போதிப்பவர்கள், யாருக்கும் தூன்பம் தராதவர்கள், நல்லவர்கள் என்பது போலவும் அதேசமயம் அசைவம் உண்பவர்கள் மற்ற உயிரினங்கள் மீது அன்பு செலுத்தாததோடு அதைக் கொன்று தின்பதையே முதல் குறிக்கோளாக வைத்திருப்பவர்கள், கொடூரமானவர்கள், மொத்தத்தில் நல்லவர்களில்லை என்பதாகவும் தரம் தாழ்த்தி பேசுபவரான வாரியார் சுவாமிகள், மிக நல்லவராக, பக்திமானாக நம் எல்லாராலும் மதிக்கப்படுகிறார்.  இவர்களைப் போன்ற சைவப் பெருமை பேசுகிறவர்களை, நடிகர் எம்.ஆர்.ராதா அவர்கள் போகிற போக்கில், “மூட்டைப் பூச்சிகளையும் கொசுகளையும் கொத்துக் கொத்தாக அடித்துக் கொல்பவர்களும், பல ஆயிரம் கூட்டுப்புழுக்களைக் கொன்று உருவாக்கப்படும் பட்டாடைகளை உடுத்துபவர்களும் மாட்டின் காம்புகள் நோகப் பாலைக் கறப்பவர்களும் மற்றவர்களுக்கு புத்தனைப்போலப் போதிப்பானுங்க; அயோக்கியப் பயலுங்க” என்று சாடுவார்.   உணவுகளில் எல்லாமும் எல்லாருக்கும் பிடிப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சுவை பிடிக்கிறது. அதைத்தான் அவர்கள் விரும்பி உண்கிறார்கள். சைவ உணவுப் பிரியர்கள் ஒதுக்கி வைக்கும் காய்கறிகள் ஏராளம். போலவே அசைவப் பிரியர்கள் ஒதுக்கும் கறி வகைகளும் ஏராளம். ஆகவே சைவமோ அசைவமோ, அவரவர் விருப்பத்திற்கு உண்பதைத் தாழ்வானதாகவோ அருவருக்கத்தக்கதாகவோ யாரும் கருதவேண்டாம். ஒருவருக்கு ஜீரணம் ஆகிற எந்த உணவும் உண்ணக்கூடியதே. உயிர்கள் பிறப்பின் நோக்கம் இனப்பெருக்கம் என்கிறது அறிவியல். இனத்தைப் பெருக்க வேண்டுமென்றால், நீடித்து உயிர் வாழ வேண்டும். உயிர் வாழ்வதற்கு உணவு அவசியம். அவரவர் உடல் நிலைக்கு ஏற்ற உணவினை உண்டு நீடித்து வாழ்வோம்.

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஒற்றுமையைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்பாக, இந்தியா ஒருபோதும் ஒரே நாடாக இருந்ததில்லை. பரந்த இந்த நிலப்பரப்பில் ஏராளமான இன, மொழி, பண்பாட்டு, பழக்கவழக்க, ஆட்சி முறை வேறுபாடுகள் தொன்றுதொட்டே இருந்து வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒருங்கிணைத்த அந்த இந்தியாவும்கூட இன்று இல்லை. அன்று ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்த பல பகுதிகள் இன்றைய இந்தியாவில் இல்லை. அப்போது ஆங்கிலேயர் வசமில்லாத சில பகுதிகள் இப்போது இந்தியாவுடன் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே, இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இருந்தபோதும்கூட, இந்தியாவில் பிரிவினைக் கோரிக்கைகளும் முழக்கங்களும் போராட்டங்களும் எழாமல் இல்லை. ஆனாலும்கூட, காலச் சூழல்களைக் கருத்தில்கொண்டு, வேற்றுமைகளைப் புறந்தள்ளித்தான் இந்திய ஒன்றியம் இதுகாறும் நிலைபெற்று இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், பாரதிய ஜனதா கட்சியும் அதன் சார்பு அமைப்புகளும், தொடர்ந்து பொதுக் குடிமைச் சட்டம் – Uniform Civil Code என்ற கருத்தை வலியுறுத்தி வருகின்றன. ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்திலேயே, கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பார்சிகள் தவிர்த்த அனைவரையும் இந்துக்கள் என்ற வட்டத்தில் அடைத்ததன் மூலம், பல்வேறு பண்பாடு, பழக்கவழக்க, வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி வந்த சமூகங்களின் பன்முகத் தன்மைக்கு வேட்டு வைக்கப்பட்டது. அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம் என்பது, இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கே ஊறு விளைவிக்கக் கூடும் என்பதை அவர்கள் உணர முற்படவேயில்லை. இந்தச் சூழலில், 2014இல் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றது முதலே, பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. முந்தைய சட்ட ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு, பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்று கூறிய பிறகும், தற்போது அமைந்துள்ள 22ஆவது சட்ட ஆணையம்,  பொது சிவில் சட்டம் கொண்டுவருவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் பொது அமைப்புகளும் இதற்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துவரும் சூழலில், இந்தக் கருத்துக் கேட்பு, நாளையுடன் (ஜூலை 14) முடிவடைகிறது. தமிழக அரசின் திட்டக் குழுவின் முன்னாள் துணைத் தலைவரும் சென்னைப் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பேராசிரியர் மு. நாகநாதன், இந்தியா சட்ட ஆணையம் அமைத்துள்ள குழுவிடம், பொது சிவில் சட்டம் அவசியமில்லை என்ற தனது கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். பேராசிரியர் மு. நாகநாதன், பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சட்ட ஆணையத்திடம் வழங்கிய கருத்துரு: பொது சிவில் சட்டத்திற்கான நாடாளுமன்றக் குழுவின் பரிசீலனைக்காக எனது கருத்துக்களைப் பின்வருமாறு முன்வைக்கிறேன். 1. அனைவருக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்பது, பல்வேறு இன, மொழி, மதங்கள் கொண்ட இந்தியச் சமூகத்தின் அடிப்படைக் கட்டமைப்பைத் தகர்த்துவிடும். 2. பன்முகத்தன்மையில்தான் இந்தியா வாழ்கிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாவட்டத்திலும்கூட, பல்வேறு வேறுபாடுகள் காணப்படுகின்றன. மக்கள் வெவ்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றுகிறார்கள்; வெவ்வேறு மொழிகளைப் பேசுகிறார்கள்; வெவ்வேறு உணவுக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்தியாவில், ஒவ்வொரு மாநிலத்திலும் நூற்றுக்கணக்கான திருமண முறைகள் உள்ளன. இந்தத் திருமண முறைகளும் கிராமத்திற்கு கிராமம் மற்றும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டம் என்ற பெயரில் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டு வருவது என்பது நடைமுறைக்கு ஒவ்வாத ஒரு காரியம். 3. மாபெரும் தலைவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனரும் அண்ணா என்று அனைவராலும் அழைக்கப்படுபவருமான டாக்டர்.சி.என்.அண்ணாதுரையின் கருத்துகளை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தமிழ் இனம் மற்றும் தனித்துவம் வாய்ந்த தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலாசாரத்தை உறுதிப்படுத்த, அவர் தனித் தமிழ்நாடு கோரிக்கையைக் கொண்டிருந்தார். இருப்பினும், 1962இல், சீனாவுடனான எல்லைப் போரின்போது, பிரிவினைக்கான கோரிக்கையை அவர் ஒதுக்கி வைத்துவிட்டு, பிரதமர் ஜவஹர்லால் நேருவை முழு மனத்துடன் ஆதரித்து, தேசத்தின் ஒற்றுமைக்காக உடன் நின்றார். 4. ஆனால் ஒரே நாடு, ஒரே மொழி என்ற பெயரில், தமிழ்நாடு ஒருபோதும் தனது தனித்துவத்தைப் பலியிடாது என்றும் அண்ணா கூறியிருந்தார். 5. 1967இல் தமிழக முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ‘தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் பிரிவினை கேட்பதற்கான காரணங்கள் தொடர்கின்றன’ என்பதை, அண்ணா தனது சட்டமன்ற உரையில் நினைவூட்டினார். எவ்வாறாயினும், நாட்டில் பல்வேறு பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பின்பற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அனைத்து அரசியல் தலைவர்களின் கடமையாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியாவின் தற்போதைய அடிப்படை சமூக – பண்பாட்டுக் கட்டமைப்பிற்கு எதிரான எந்தவொரு சட்டத்தினாலும் ஒற்றுமையை கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது. 6. எந்தவொரு பொதுவான சட்டத்தின் பெயராலும், இந்தப் பன்முகத்தன்மைகளை ஒருபோதும் சிதைக்கக்கூடாது. 7. 1963இல் அண்ணா தனது உரையில், “இறையாண்மை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேங்கிவிடுவதில்லை. நம்மிடம் ஒரு கூட்டாட்சி அமைப்பு உள்ளது. அதனால்தான் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒற்றையாட்சி அமைப்புக்குப் பதிலாக, கூட்டாட்சிக் கட்டமைப்பை விரும்பினர். ஏனெனில் பல்வேறு அரசியல் தத்துவ அறிஞர்கள் சுட்டிக்காட்டியபடி, இந்தியா மிகவும் பரந்தது. உண்மையில் இது ஒரு துணைக் கண்டம் என்றே குறிப்பிடப்படுகிறது. மக்களின் மனநிலைகள் மாறுபட்டவை.  மரபுகள் மிகவும் வேறுபட்டவை. வரலாறு மிகவும் மாறுபட்டது. இங்கு ஆதிக்கம் மிக்கதொரு ஒற்றையாட்சி அமைப்பு இருக்க முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். 8. அண்ணாவின் கருத்தில் உள்ள அதே பார்வையை, நோபல் பரிசு பெற்ற டாக்டர். அமர்த்தியா சென் தனது ‘The Argumentative Indian’ என்ற புத்தகத்தின் முன்னுரையில், இவ்வாறு குறிப்பிடுகிறார். “இந்தியா என்பது மிகப்பெரும் வேறுபாடுகளைக் கொண்ட, பலவேறுபட்ட நோக்கங்கள், பரந்த அளவில் வேறுபட்ட நம்பிக்கைகள், பல்வேறு வகையான பழக்கவழக்கங்கள் மற்றும் பல்வேறு வகையான சிந்தனைகளைக் கொண்ட ஒரு மாபெரும் நாடு.” 9. இந்தப் பின்னணியில், இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கும், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கும் இடையே ஏற்பட்ட விவாதத்தையும் அவர்களுக்குள் ஏற்பட்ட உடன்பாட்டையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழு இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும்போது, “வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. வடக்கு பழமைவாதத்தில் ஊறிப்போயுள்ளது. தெற்கு முற்போக்குப் பாதையில் பயணிக்கிறது. வடக்கில் மூடநம்பிக்கை அதிகமாக உள்ளது. தெற்கில் பகுத்தறிவு பரவியுள்ளது. தெற்கு கல்வியில் முன்னோக்கிப் பயணிக்கிறது. வடக்கு கல்வியில் பின்தங்கியுள்ளது” என்று அம்பேத்கர் குறிப்பிடுகிறார். நான் வழக்கமானதொரு சந்திப்பிற்காக திரு.ராஜகோபாலாச்சாரியாரிடம் சென்றேன். அதுதான் அப்போதைய நடைமுறை. அத்தகைய ஒரு சந்திப்பில், அரசமைப்புச் சபை உருவாக்கும் அரசமைப்புச் சட்டத்தைப் பற்றி திரு.ராஜகோபாலாச்சாரி  குறிப்பிடுகையில், “நீங்கள் ஒரு பெரிய தவறு செய்கிறீர்கள். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கொண்ட, இந்தியா முழுமைக்குமான ஒரு கூட்டமைப்பு சரிவராது. அப்படிப்பட்டதொரு கூட்டமைப்பில், இந்தியப் பிரதமரும் குடியரசுத் தலைவரும் எப்போதும் இந்தி பேசும் பகுதியிலிருந்துதான் தேர்வுசெய்யப்படுவார்கள். இங்கே, வடக்கில் ஒரு கூட்டமைப்பும் தெற்கில் ஒரு கூட்டமைப்புமாக இரண்டு கூட்டமைப்புகள் இருக்க வேண்டும். மேலும் வடக்கு மற்றும் தெற்குக் கூட்டமைப்புகள் இணைந்து, சமமான பிரதிநிதித்துவத்தோடு  சட்டமியற்றுவதற்கு மூன்றாவது கூட்டமைப்பும் வேண்டும்” என்று கூறினார். இவைதான் திரு.ராஜகோபாலாச்சாரியின் சிந்தனைகள். ஒரு உண்மையான காங்கிரஸ்காரரின் ஆழ்மனத்தில் இருந்து வெளிப்பட்ட கருத்துக்கள் இவை. நான் இப்போது, இந்தியா வடக்கு மற்றும் தெற்காக உடைவதை முன்னறிவிக்கும் தொலைநோக்காளராகவே திரு.ராஜகோபாலாச்சாரியைக் கருதுகிறேன். அவரது துல்லியமான கணிப்பைப் பொய்யாக்குவதற்கு நாம் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டும். 10. அமெரிக்காவில் வடக்குக்கும் தெற்குக்கும் இடையில் உள்நாட்டுப் போர் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் உள்நாட்டுப் போர் ஏற்படலாம். காலம், அத்தகைய மோதலுக்குப் பல காரணங்களை வழங்கும். வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பரந்த பண்பாட்டு வேறுபாடுகள் உள்ளன என்பதையும் அவை எளிதில் பற்றி எரியக்கூடியவை என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. 11. வடக்கை ஒருங்கிணைத்து, தெற்கைப் புறக்கணிப்பதன் வாயிலாக, ‘இது வெறும் மொழிப் பிரச்சினை அல்ல; ஒரு அரசியல் பிரச்சினை’ என்பதை ஆணையம் உணரவில்லை. இதுபோன்ற ஒரு நிகழ்வு ஏற்படாமல் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது, சரியான, அறிவுசார்ந்த, இயைந்த அணுகுமுறை அல்ல. இதற்கு என்னதான் தீர்வு? 12. வருந்தத்தக்கது என்னவெனில், 1940களில் சி.ராஜகோபாலாச்சாரி கணித்த விஷயங்களில் ஒன்று, இப்போது மணிப்பூரில் நடப்பதை நாம் காண்கிறோம். ஒற்றுமையின் அடிப்படைக் கோட்பாடுகள், நாட்டு மக்களின் பல்வேறு கலாச்சார, இன, மொழி நடைமுறைகளில் பெருமளவில் காணப்படுகின்றன. ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டுவரும் திட்டம், அடிப்படையில் இந்திய மக்களின் விருப்பத்திற்கு எதிரானது. பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாநிலக் கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்களைக் கலந்தாலோசிக்காமல், ஆளும் பாஜக அரசால் தொடங்கப்பட்ட ஒரே மாதிரியான சிவில் சட்டத்தின் முன்மொழிவு, இயல்பிலேயே கூட்டாட்சிக்கு எதிரானது. இது இந்திய ஒற்றுமைக்கு சாவு மணி அடிக்கும். கடுமையான நெருக்கடியில் இருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு, அச்சுறுத்தலான பல பொருளாதாரப் பிரச்சினைகள் அவசரமாகக் கையாளப்பட வேண்டியுள்ளன. நாட்டில் சமத்துவமின்மை அதிகரிக்கிறது, வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி வருகிறது, வறுமை அதிகரித்து வருகிறது, விலைவாசி உயர்கிறது. பணக்காரன் மேலும் பணக்காரனாகிறான்; ஏழை மென்மேலும் ஏழையாகிறான். பொதுக்கடன் அதிகரித்து வருகிறது. வங்கி அமைப்பு நிலையற்ற தன்மையைச் சந்தித்து வருகிறது. வருவாய் மற்றும் செலவினங்களுக்கு இடையே தொடர்ந்து இடைவெளி இருப்பதால், நிதி அமைப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சர்வதேச அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளின்படி, பசி மற்றும் வறுமைக் குறியீடுகளில் இந்தியா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதாவது, 191 நாடுகளில் இந்தியா 132ஆவது இடத்தில் இருப்பதாக UNDP மனித மேம்பாட்டு அறிக்கை தெரிவிக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அச்சுறுத்தும் இந்த அனைத்துப் பிரச்சினைகளையும் உடனடியாக எதிர்கொண்டு தீர்வு காண, நமக்கு ஒரு அறிவுப்பூர்வமான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறை தேவை. ஒரே மாதிரியான சிவில் சட்ட நடவடிக்கைக்கான முன்மொழிவு விவேகமற்றது மற்றும் தேவையற்றது. இந்தத் திட்டத்தைக் கைவிடுவதே நியாயமான நடவடிக்கையாகும். இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பேராசியர் மு.நாகநாதன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொது சிவில் சட்டம் தொடர்பான கருத்துகளை, சட்ட ஆணையத்திடம் பதிவு செய்ய விரும்புவோர், நாளைக்குள் தங்கள் கருத்துகளை, membersecretary-lci@gov.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம்.  

சூதாட்டம் – விளையாட்டா?

சூதாட்டம் – விளையாட்டா?

சூதாட்ட விளையாட்டுகளுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என்று 50ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்குப் பின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். விளையாட்டு என்பது மனத்தையும் உடலையும் பலப்படுத்துவதற்கான, செழுமைப்படுத்துவதற்கான ஒரு செயல்முறை. மற்றவர் திறனைப் பார்த்துக் கற்றுக்கொள்ள ஊக்கமளிப்பது. தோல்வியிலிருந்து பாடம் கற்று வெற்றிபெற வேண்டும் என்ற பாடத்தைக் கொடுப்பது. தோல்வி என்பது வெற்றிக்கான முதல் படி என்பதைப் பயிற்றுவிப்பது. இறுதிவரை போராடும் குணத்தைக் கற்றுக் கொடுப்பது. வெற்றியும் தோல்வியும் வாழ்வில் இயல்பானவை என்பதை உணர்த்துவது. இவற்றையெல்லாம் முறையான பயிற்சிகள் மூலம் கைவரப் பெறலாம்; மேம்படுத்தலாம். எனவேதான் விளையாடுபவர்களை வீரர்கள் என்று சொல்கிறோம். அந்த அடிப்படையில்தான் மனிதனை மனிதனாக்கும் செயல்முறைப் போக்கான கல்வியில், விளையாட்டும் ஒரு அங்கமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. நடைமுறையில் அது எப்படி உள்ளது என்பது வேறு விஷயம். ஆனால் சூதாட்டம் அப்படி அல்ல. ஒருவரிடம் ஆசையைத் தூண்டி ஏமாற்றுவது என்பதே சூதாட்டத்தின் தத்துவம். எப்படியாவது அதிகமாகப் பணம் ஈட்டலாம் என்ற நப்பாசையைத் தூண்டி, அதற்கு அவரை அடிமைப்படுத்தி, அதன் மூலம் அவரிடம் கொள்ளையடிப்பது. சூதாட்டம் என்பது திரைமறைவு வேலைகள், நேர்மையற்ற தந்திரங்கள், ஏமாற்று வித்தைகளை அடிப்படையாகக் கொண்டது. அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பவைப்பது. இது ஒரு இழிவான செயல். இதனை எவரும் பாடமாக ஏற்கமுடியாது. இந்த நிலையில், சூதாட்ட விளையாட்டு என்ற பதம் சரியான ஒன்றா? நிச்சயமாக இல்லை. சூதாட்டமும் விளையாட்டும் எதிரெதிர் குணாம்சங்களைக் கொண்டவை. சூதாட்டம் ஒரு முறைகேடான செயல். முறைகேட்டிற்கு வழிவகுக்கும் செயல். இத்தகைய சூதாட்டங்கள் மிக மோசமான விளைவுகளை சமுதாயத்தில் ஏற்படுத்திக்கொண்டிருப்பதை அறிவோம். குறிப்பாக, இன்றைய இணையவழித் தொடர்பு உலகில், ஆன்லைன் விளையாட்டு என்ற பெயரில் ஏராளமான ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏதோ விரும்பிச் செல்பவர்களை மட்டும் இந்த சூதாட்டங்கள் ஏமாற்றவில்லை. மொபைல் ஆப்கள் மூலமாகவும் குறுஞ்செய்திகள் வாயிலாகவும் வண்ணமயமான படங்களையும் போலியான தகவல்களைக் காட்டி விளம்பரங்கள் செய்கின்றனர். ‘ஒருவரை ஏமாற்ற வேண்டுமென்றால், அவரது ஆசையைத் தூண்ட வேண்டும்’ என்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தின் வசனத்தைப் பின்பற்றி, ‘உங்கள் கணக்கில் சில ஆயிரங்கள் வரவு வைக்கப்பட்டுள்ளது; வந்து விளையாடுங்கள்’ என்று, நப்பாசையைத் தூண்டும் விதமாகச் செய்திகளை அனுப்புகின்றனர். இவையெல்லாம் கணினி மென்பொருட்கள் வாயிலாக நடைபெறுபவை. பிதாமகன் திரைப்படத்தில், கதாநாயகன் சூதாட்டம் நடத்துவார். கதாநாயகி முதலில் ஒரு ரூபாயை வைத்து சூதாடத் தொடங்கி, ஒரு குறிப்பிட்ட தொகை கிடைத்ததும் அந்தத் தொகையை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது, அவரைக் கட்டாயப்படுத்தித் தொடர்ந்து சூதாட வைத்து, அவரிடமிருந்த பொருட்கள் அனைத்தையும் நாயகன் பறித்துக்கொள்வார். இதே வழிமுறையைத்தான் இணைய வழியில் நடக்கும் சூதாட்ட மென்பொருட்கள் பின்பற்றுகின்றன. அதாவது, சூதாட்டக் களத்தில் இறங்கிய ஒருவர், அதிலிருந்து மீள வழியே இல்லாதவாறே அவை வடிவமைக்கப்படுகின்றன. முதலில் குறிப்பிட்ட திறனுடையவர்களை, அல்லது அனைவரையும் வெற்றிபெற மென்பொருளானது அனுமதிக்கும். குறைந்த தொகையை வென்றதாக அறிவிப்பும் கிடைக்கும். ஆனால் அந்தத் தொகையை நம்மால் வங்கிக் கணக்குக்கு மாற்ற இயலாது. நீங்கள் மேலும் பணம் செலுத்தி விளையாடவேண்டும் என்று நிர்பந்திப்பர். அது கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டி, சூதாட்ட வளையத்திற்குள் ஆழமாக இழுத்துச் செல்லும். இப்படிப்பட்ட சூதாட்டங்களில் ஈடுபட்டவர்கள் பணத்தை இழக்கின்றனர். எப்படியாவது இழந்த பணத்தை மீட்டுவிட வேண்டும் என்ற வேட்கையில், கடன் வாங்கிப் பணத்தைச் செலுத்தி விளையாடி அதையும் இழந்து தவிக்கின்றனர். மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய சூதாட்டங்கள் மனநோயாளிகளையும் உருவாக்கி வருகின்றன. சிலர் பெரும் பணத்தை இழந்து, இறுதியில் மன அழுத்தத்தாலும் கடன் தொல்லையாலும் தற்கொலை செய்துகொள்கின்றனர். வயது வித்தியாசமின்றி பள்ளி மாணவர்கள் முதல் பெரியோர் வரை இதற்கு பலியாகின்றனர். அபரிமிதமான கேளிக்கை வெறியை உண்டாக்கும். எனவேதான் தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் தர மறுத்ததையும் தமிழ்நாடு கண்டது. ஏற்கனவே விளையாட்டுகளையே சூதாட்டமாக்கிவிட்டனர். கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் சூதாட்டம் நடப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஐபிஎல்-லில் சூதாட்டமென்று நடவடிக்கையே எடுத்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். பல விளையாட்டு வீரர்கள் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. ஆனால், சூதாட்டத்துக்கு வரி விதிப்பு என்பது, உலகக்கோப்பை கிரிக்கெட் நடைபெற உள்ள நிலையில், மிகப்பெரிய சூதாட்டத்தை நடத்த அனுமதிப்பதுபோல் உள்ளது. இத்தகைய சூதாட்டங்களில் நிழலுக தாதாக்கள், சமூக விரோதிகள் ஈடுபடுவதாகவும் கூறுகின்றனர். அந்த வகையில் பார்த்தால் மது, போதைப் பழக்கங்களைப் போலவே, சொல்லப்போனால் அதைவிட, சூதாட்டமும் மிகவும் மோசமானது. இப்படிப்பட்ட நிலையில் சூதாட்ட விளையாட்டு என்று பெயரிட்டு அதற்கு ஜிஎஸ்டி வரி வசூலிப்பது எத்தகைய செயல்? ஒரு மக்கள் நல அரசாங்கம் இப்படிச் சிந்திக்க முடியுமா? சூதாட்டங்களுக்கு வரி வசூல் செய்ய நினைப்பது எரிகிற பிணத்திலிருந்து எதையாவது உருவும் செயலுக்கு ஒப்பாகும். இப்படியே போனால் கஞ்சா, ஹெராயின் போன்ற பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூலிப்பார்களோ!!!??? “நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், எங்களுக்கு வரி கொடுங்கள்” என்று கூறுவது இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் காட்சிகளையே நினைவூட்டுகிறது. வளர்ச்சிக்கான ஒரு அரசாங்கம் மனிதகுலத்திற்கு நன்மை தரும் பொருளுற்பத்தி, அறிவு உற்பத்திகளை மட்டுமே ஊக்கப்படுத்த வேண்டும். ஆனால் இன்று அரசாங்கங்கள் மது, சூதாட்டம் போன்ற மனிதர்களுக்குக் கேடிழைக்கும் செயல்களை அரசாங்கத்தின் வருவாயாகப் பார்ப்பது மோசமானது, ஆபத்தானது, மனிதகுலத்தின் வளர்ச்சிக்கே எதிரானது. ஒரு பொருள் அல்லது சேவையின் மீது வரி விதிப்பது என்பது, அந்தப் பொருள் அல்லது சேவை விற்பனையைச் சட்டப்பூர்வமாக அனுமதிக்கும் செயலாகும். சூதாட்டத்துக்கு ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டால் அது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதாகவே கருதப்படும். அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி மோசடி செய்யும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அரசு, அதே வகைமையில் வரும் இன்னொரு மோசடிக்கு சட்டப்பூர்வ அனுமதி அளிப்பது வேடிக்கையான செயல் அல்லவா? சூதாட்டத்துக்கு வரி விதிக்கத் தயாராக இருக்கும் அரசு, பல ஆயிரம் கோடி ரூபாய்கள் புழங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் ஆட்டங்களை வரி வளையத்துக்குள் கொண்டுவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசவையிலேயே மனைவி முதலான அனைத்தையும் வைத்து சூதாடியவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு ஆள்பவர்களின் ஆட்சியில் இதெல்லாம் மிகச் சாதாரணம்தானே?

மாமன்னன்

மாமன்னன்

திரை விமர்சனம் காலங்காலமாக ஒடுக்கப்பட்ட, ஒடுக்குமுறைக்குப் பழகிய சமூகத்தைச் சார்ந்த, தன் இயற்பெயரே மறந்த, மறக்கடிக்கப்பட்ட மண்ணு, தனது அடுத்த தலைமுறையான மகன் அதிவீரனால் ஆதிக்கச் சமூகத்தின் அடக்குமுறைகளையும் தாண்டி, மாமன்னனாக நிமிர்ந்த கதைதான், மாரி செல்வராஜ் எழுதி இயக்கி, வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீரத்தி சுரேஷ், ஃபகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள ‘மாமன்னன்’ படத்தின் கதைச்சுருக்கம். “பன்னி மேய்க்கிற பசங்க கோவில் குளத்துல குளிக்கிறாங்களாம்… அவன்கள இன்னிக்கு விடக்கூடாது” என்று அந்த கிராமத்துப் பெரியவர்கள்(!) செய்யும் செயலிலேயே தெறிக்கிறது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நேரும் கொடூரம். அடுத்து, நல்லிணக்கத்தைப் ‘பாதுகாக்கும்’ பொருட்டு, ‘கோவில் கிணற்றின் சுவர் இடிந்து விழுந்து நான்கு சிறுவர்கள் மரணம்’ என்கிற பத்திரிகைச் செய்தியோடு முடித்துக்கொள்வது, உச்சபட்சக் கொடூரம். நியாயம் கேட்கும் மண்ணுவை அப்போதைய எம்.எல்.ஏ சுந்தரம் மன்னித்துவிட நிர்ப்பந்திக்கிறான். இதிலிருந்து தப்பிப் பிழைத்தும், அப்பாவின் மௌனத்தைச் சகியாமலும் அந்த ஊரைவிட்டு ஓடிய அதிவீரன், ஊருக்குத் திரும்பியபின் தன் ஆசானிடம் கற்றுக்கொண்ட ‘அடிமுறை’ தற்காப்புக் கலையைக் கற்பிக்கும் பயிற்சிப் பள்ளி நடத்துகிறான். ஒரு கட்டத்தில், அதே ஊரைச் சேர்ந்த லீலா நடத்தும் இலவசப் பயிற்சி வகுப்புக்கும் அங்கு இடம் அளிக்கிறான். இதனால் பாதிக்கப்படும் சுந்தரம் கல்விக் குழுமம், ஆட்களை அனுப்பி அந்தப் பயிற்சி வகுப்பை அடித்து நொறுக்குகிறது. கொதித்தெழுந்த அதிவீரன், இளைஞர்களோடு சென்று அக்கல்விக் குழுமத்தை நாசம் செய்கிறான். தற்போதைய மாவட்டச் செயலாளரான சுந்தரத்தின் மகன் ரத்தினவேலு, இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, எம்.எல்.ஏ. மண்ணுவையும் அதிவீரனையும் அழைக்கிறான். கட்சித் தொண்டனாக அன்று சுந்தரத்தின் எதிரில் நின்ற மண்ணு, அவன் மகன் ரத்தினவேல் தற்போது உட்கார்ந்திருக்க, எம்.எல்.ஏ. மாமன்னனாக இன்றும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்துப் பொங்குகிற அதிவீரன், அவரை உட்காரச் சொல்கிறான். திடுக்கிட்ட ரத்தினவேலு, “யார் சொன்னாலும் அப்பா உட்கார மாட்டாருப்பா..” என்று சொல்ல, ‘நீ உட்காரச் சொன்னியா?’ என்று ரத்தினவேலுவிடம் கேட்பதோடு, மாமன்னனை நிர்பந்தப்படுத்தி உட்கார வைத்துவிடுகிறான் அதிவீரன். சகிக்க முடியாத ரத்தினவேலு அதிவீரனைத் தாக்க, அவன் திருப்பித் தாக்க, மிகப்பெரிய கைகலப்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் முதல்வர் இதில் தலையிட, அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை, தேர்தலின் வெற்றி தோல்வி தீர்மானிக்கட்டும் என்று முடிவாகிறது. “நாம கேள்வி கேட்கவே ஒரு பதவிக்கு, ஒரு இடத்துக்கு வர வேண்டி இருக்கு” என்கிற அதிவீரன், அதை அடைந்தாரா என்பதுதான் ‘மாமன்னன்’ படத்தின் மீதிக் கதை. பார்த்ததும் சிரித்தே பழக்கப்பட்ட நம்மைக் கண்கலங்க வைக்கிறார் வடிவேலு. “இனிமேலாவது யாருக்கும் எங்கயும் இது நடக்கக் கூடாது” என்று முதல்வரிடம் நா தழுதழுக்கக் கோரும் மாமன்னனாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் வடிவேலுவின் மாறுபட்ட அசத்தலான நடிப்பு, “அவங்கள நிக்க வைக்கிறது என்னோட அடையாளம். இவன உட்கார வைக்கிறது என்னோட அரசியல்” என்று, கழுத்து நரம்பு புடைக்க, சாதிய ஆதிக்கமும் அரசியல் அதிகார வெறியும் கொப்பளிக்கும் இரத்தினவேலுவாக ஃபகத் பாசிலின் மிரட்டலான பங்களிப்பு,  “என்னடா பண்ணுவீங்க? உங்க ஊருக்குள்ள வந்தா கொன்றுவீங்களா? கொன்றுவீங்களாடா..?” என்று கொந்தளிக்கும் அதிவீரனாக உதயநிதி ஸ்டாலினின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்டதான நடிப்பு, “இங்கு மதம் அடிக்குதா, ஜாதி அடிக்குதா, பணம் அடிக்குதான்னு யோசிச்சோம்னா நமக்குப் பைத்தியமே பிடிச்சுடும்…” என்று பொருமும் நீலாவாக, கிடைத்த வாய்ப்பில் பழுதில்லாமல் செய்த கீர்த்தி சுரேஷ்,  பாடல்களிலும் பின்னணியிலும் கதைக்கருவுக்கு நெருக்கமாக, இசையில் புதிய பரிமாணத்தைக் காட்டியுள்ள ஏ.ஆர்.ரகுமான், வேட்டை நாய்கள், குதிரை, புத்தர்,  அம்பேத்கார், பெரியார் போன்ற வழக்கமான குறியீடுகள் இருந்தாலும் பிரச்சார நெடி வீசாமல், இன்னும் பரவலாக நிலவும் சாதிக் கொடுமையை, அது ஏற்படுத்தும் வலியை, செதுக்கியது போன்ற அழுத்தமான பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்தியுள்ள மாரி செல்வராஜ் என, ‘மாமன்னன்’ பலவகையில் ஒரு மாறுபட்ட படம். அழகம்பெருமாள் (சுந்தரம்), கீதா கைலாசம் (மாமன்னனின் மனைவி வீராயி), லால் (முதல்வர் சிந்தனை ராஜன்), சுனில் ரெட்டி (ரத்தினவேலுவின் சகோதரன்), ரவீனா ரவி (ரத்னவேலுவின் மனைவி) போன்ற துணைப் பாத்திரங்களும் தத்தம் பங்களிப்பைச் சிறப்பாகவே வழங்கியுள்ளனர். இசை போன்று, கதைக்கருவுக்கு நெருக்கமாகவே வண்ணத்திலும் கருப்பு வெள்ளையிலும் காட்சிகளைத் தத்ரூபமாகப் பதிவு செய்துள்ள தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் ஆர்.கே.செல்வாவின் படத்தொகுப்பும் கவனம் பெறுகின்றன.  யுகபாரதியும் அறிவும்  எழுதியுள்ள பாடல்கள் கேட்கும்படியாக இருக்கின்றன. வடிவேலு பாடிய ‘ராசாக் கண்ணு’ அருமை. எம்.எல்.ஏ.வைச் சுற்றி, ஒரு பத்து பேராவது எப்போதும் இருப்பது எங்கும் நடப்பதுதான். எப்போதும் மாமன்னன் ஒத்தையாகவே நிற்பதும் அந்தத் தொகுதி மக்களுக்கு சாதி வித்தியாசமின்றி நேர்மையாக உழைத்த, அவர்களது சுகதுக்கங்களில் பங்கெடுத்த ஒரு சட்டமன்ற உறுப்பினரை, ஒட்டுமொத்த கிராமங்களும் உள்ளே வரக்கூடாது என்று கூறுவதும்,  திடகாத்திரமான சங்க நிர்வாகிகளில் ஒருவரை, ரத்னவேலு  நாயைக் கொன்றதுபோல அடித்துக் கொன்றது குறித்து எவருமே கேள்வி எழுப்பாததும் நம்பக் கூடியவையாக இல்லை. இறுதிக் காட்சியில், வடிவேலு உள்ளே நுழைய, முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நிற்பதில், ரத்தினவேலுவின் மனைவியைக் குறிப்பிட்டு காட்டுவது, நயம். இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், அவர் சார்ந்துள்ள கட்சி, தலித் சமூகம், சமூக நீதி, வேங்கை வயல், முன்னாள் சபாநாயகர் தனபால் போன்றவற்றையெல்லாம் மறந்து, மறைத்து, ‘இப்படி எல்லாம் இப்போது எங்கு நடக்கும்? யார் சாதி பார்க்கிறார்கள்?’ என்று கேட்கிற, சுயசாதிப் பெருமை பேசுகிற மனநிலை கொண்டவர்கள், மாமன்னன் படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்துவிடலாம். இல்லையெனில், மனத்தளவில் அதற்கான பொறுப்புத் துறப்புடனும் திறந்த மனத்துடனும் படத்திற்கு வரலாம். அப்படி வந்தால் மட்டுமே, யாதொரு மனப்புழுக்கமும் இல்லாமல் திரைப்படத்தில் லயிக்கவும் முடியும். சாதிய இழிவுகள், ஏற்றத்தாழ்வுக் கொடுமைகள் முற்றிலுமாக ஒழிய, முன்னெடுத்துச் செல்லும் தொடர்ப் பயணத்தில் ‘மாமன்னன்’ ஒரு சிறு பங்களிப்பு. மதிப்பெண்: 7.5/10

நெருப்பைத் துளையிட முயலும் புழுக்கள்

நெருப்பைத் துளையிட முயலும் புழுக்கள்

கவிதை நீள் சன்மார்க்க வெண் தந்தம்வண்ணத்துப் பூச்சிகளுக்குவளைந்துகொடுப்பதைக் கண்டுஉங்கள் எண்ணப் புழுக்களால்துளையிட்டு நுழைய முயல்கிறீர்கள் நெருப்பைத் துளையிடபுழுக்களால் முடியுமோ? சன்மார்க்கத்தைத் துளையிட்டுசனாதன இசை கேட்க விரும்பும்உங்கள் செவிகளால்சத்ய தரும சாலையின்சடசடப்பைத் தாங்க இயலுமா? உங்கள் அகப் பைகுப்பைகளை வாரக்கூடியதுதரும சாலையின் அகப்பைஎளியோரின் தவிப்பைத் தீர்க்கக் கூடியது இங்கே குப்பைகளைக் கொட்டாதீர்களெனமீண்டும் சொல்கிறோம் மட்கும் மட்கா என்றஇரண்டுள்ளும் அடங்காதவற்றைமறுசுழற்சி செய்ய முயன்றுசூழலுக்கு ஏன் சீர்கேடு செய்கிறீர்கள்? ஞானசபைக்கு வந்துநாடக சபையின் வசனமானஇந்திரசபை போலிருக்கிறது என்கிறீர்கள்இல்லைஇங்கே கற்பகத் தரு ஏதுமில்லை தனித்திரு இருக்கிறதுஉங்களிடமிருந்து தனித்திருக்கிறோம் விழித்திரு இருக்கிறதுஉங்களிடம் விழிப்போடிருக்கிறோம் பசித்திரு இருக்கிறதுஉங்கள் ஆறிப்போன ஆரியச் சுவை விலக்கிபகுத்தறிவுப் பசியோடிருக்கிறோம்

பாவமன்னிப்பு

பாவமன்னிப்பு

உள்ளங்கையின் இதயரேகையைவிரல்முனைகள் நான்கும் அழுத்தஒலிவாங்கிமுன் விரைப்புடன்பாடிக்கொண்டிருக்கும் தேசியகீதத்தின்ஏதோவொரு ஏகார ஓசையில்வந்துத் தொலைக்கும்கொட்டாவியை எப்படித் தடுப்பது?! சுதேசி கோஷத்துடன்பரிந்துரைக்கப்பட்டதால்251 ரூபாய் செலுத்திவிட்டுக் காத்திருக்கும்எனக்கான செல்போன்தயாராகிவிட்டிருக்குமா?! பேரிடரில் பிழைத்தவர்கள்அளித்த கொடையில்பிழைப்பு நடத்தியவர் யாரோ?! உலகப் பணக்காரர்களின்வரிசைக் கோடுகளைபரோட்டோ சப்ளையர் கோடுகளாக்கிவிளையாடும் கபடிக் குழுவில்எனக்கும் இடம் கிடைக்குமா?! சற்றுப் பொறுங்கள் தேசத்துரோகச் சட்டம் பாயும்முன்ஆளுங்கட்சியில்ஐக்கியமாகிவிடுகிறேன்

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. (தொடர்ச்சி)

நேற்றைய பதிவின் தொடர்ச்சி. முந்தைய பதிவை வாசிக்க https://hexamedia.in/p-2023-0619-01/ 2019இல் செய்யப்பட்ட திருத்தம் எந்தவொரு ஆளையும் ‘பயங்கரவாதி’ என அரசு முத்திரையிடுவதற்கு வழிசெய்கிறது. இதன் காரணமாக இச்சட்டம் இருக்கும் சட்டங்களிலேயே மிகவும் ஆபத்தான சட்டமாக மாறிவிட்டது. புள்ளிவிவரங்கள் சொல்வதென்ன? இந்தச் சட்டங்கள் காங்கிரசு அரசால் கொண்டுவரப்பட்டாலும் இதன் பயன்பாடு பாஜக ஆட்சியில்தான் பெருமளவு அதிகரித்திருக்கிறது. காங்கிரசு ஆட்சிக்காலத்தில் ஆண்டொன்றுக்கு  13 ஊபா வழக்குகள் போடப்பட்டன என்றால் மோடி ஆட்சியில் ஆண்டொன்றுக்கு  34 வழக்குகள் என்னும் அளவுக்கு இது அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான ஊபா வழக்குகளில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செய்வதற்கான சதித் திட்டம் தீட்டுவதற்கான பிரிவு 18 பயன்படுத்தப்படுகிறது.  என்.ஐ.ஏ.வால் புலனாய்வு செய்யப்படும் 357 ஊபா வழக்குகளில் 238 வழக்குகளில் பிரிவு 18  பயன்படுத்தப்பட்டுள்ளது. அதில் வெறும் 36% வழக்குகளில் மட்டுமே ஏதோ ஒரு பயங்கரவாதச் சம்பவம் நடந்திருக்கிறது. மற்றவற்றிலெல்லாம் குற்றச் செயல்கள் எதுவும் நடைபெறவில்லை;  சதித்திட்டம் தீட்டினார்கள் என்ற பெயரில் பணம் கிடைத்தது, ஆயுதம் கிடைத்தது என்று சொல்லி பிரிவு 18 பயன்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் என்று சொல்லி இப்பிரிவின் கீழ் வழக்கு தொடுக்கப்படுகிறது. ஊபா வழக்குகளின் விசாரணை முடிவதற்குக் குறைந்தது மூன்றிலிருந்து 5 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. பிணையை மறுத்து ஆண்டுக்கணக்கில் ஒருவரைச் சிறையில் அடைத்து வைப்பதே ஊபாவின் குறி. ஒன்றிய உள்துறை அமைச்சகம் மக்களவையில் கொடுத்த புள்ளிவிவரப்படி ஊபா வழக்குகளில் சிறைப்பட்டோரில் 2018இல் 16.32%, 2019இல் 32.08%, 2020இல் 16.88%  பேர் மட்டுமே பிணையில் வெளிவந்துள்ளனர். ஊபா வழக்குகளில் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டு தண்டனை பெறும் விழுக்காடு சராசரியாக 27.57 (2015 – 2020 காலத்தில்) மட்டுமே. இதேகாலப்பகுதியில் ஊபாவில் குற்றஞ்சாட்டப்பட்டு தண்டனை பெறும் ஆட்களின் விழுக்காடு சராசரியாக 2.80 மட்டுமே. மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் அனைத்தும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் கடந்த  2022 அக்டோபரில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் இருந்து பெறப்பட்டவையாகும். ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டால், ’குற்றம் இழைக்கவில்லை’ என மெய்ப்பிக்க வேண்டிய பொறுப்பு குற்றஞ்சாட்டப்பட்டவரின் தலையில் சுமத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், வழக்கமான சட்ட நடைமுறைக்கு முரணாக, ‘மெய்ப்பிக்கப்படும்வரை யாரும் குற்றவாளி அல்ல’ என்ற இயற்கை நீதிக்கான கருத்தைத் தலைகீழாக மாற்றுகிறது ஊபா.  ஊபா சொல்லும் ‘அதிருப்தி’ என்றால் என்ன? இந்தியாவிற்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டி, எந்தவொரு குடிமகனையும் கைது செய்ய இந்தச் சட்டம் வரம்பற்ற அதிகாரங்களை அரசுக்கு வழங்குகிறது. அல்லது எதிர்காலத்தில் இத்தகைய அதிருப்தியை ஏற்படுத்தக்கூடிய நபர்களைத் தடுத்து வைக்கலாம் என்கிறது. இந்த அதிருப்தியின் பொருள் என்ன? பழங்குடிகள் தங்கள் நிலத்தில் வாழ்வதற்கான உரிமைக்காகவோ (காடுகள் உரிமைச் சட்டத்தின்படி) உழவர்கள் நிலத்தை உழுவதற்கான உரிமைக்காகவோ அல்லது தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமைக்காகவோ அல்லது இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவோ ஒருவர் பேசத் துணிந்தால், அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக அவர் ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்படலாம். யாரைத்தான் விட்டுவைத்தது ஊபா? மராட்டியத்தில் பீமா கோரேகான் வழக்கில், கனிம வளங்களைக் கார்ப்பரேட்கள் கொள்ளையடிப்பதற்கு எதிராக, பழங்குடிகள் நடத்தும் போராட்டத்திற்குத் துணை நின்றவர்கள்,  தலித் மக்களின் உரிமைக்காக உழைத்தவர்கள் இவ்வழக்கில் சிக்கவைக்கப்பட்டனர். நாடறிந்த மாந்தவுரிமைச் செயற்பாட்டாளர்கள்,  கலைஞர்கள்,  பேராசிரியர்கள், அருட்தந்தை ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 பேர் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   இவ்வழக்கில் சிறைப்பட்ட அருட்தந்தை ஸ்டான் சுவாமி, பார்க்கின்சன் நோய்க்கு ஆளாகியிருந்த 85 அகவை முதியவர். சிறையில் அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்டு இவர் சாகடிப்பட்டதை நாடே கண்டது. பீமா கோரேகான் வழக்கில் மூன்று முறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு புதிய புதிய ஆட்கள் சேர்க்கப்பட்டனர். தலைமை அமைச்சரைக் கொல்லச் சதி செய்தனர் என்பதொரு குற்றச்சாட்டு. ஆனால்,  குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் கணிணிக்குள் திருட்டுத்தனமாகச் சான்றுகளைத் திணித்துள்ளது மோடி அரசு என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனாலும் இவ்வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் இன்றளவும் பிணை மறுக்கப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்குத் துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருன்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித், சர்ஜீல் இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித்திட்டம் தீட்டியவர்கள் என்று ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சஃபூரா ஜார்கர், குல்சிமா பாத்திமா, நடாசா நர்வால், அசிப் இக்பால் தன்கா, மீரான் ஐதர், தேவங்கனா கலிடா உள்ளிட்ட மாணவர்கள் ஊபாவின் கீழ் வழக்கை எதிர்கொண்டவர்கள் ஆவர். ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது. இராஜ்தீப் சர்தேசாயும் வினோத் கே ஜோசும் உழவர் போராட்டத்தின் நிகழ்வுகளைத் திறனாய்வு செய்ததற்காக அரச துரோகச் சட்டத்தின்கீழ் வழக்கை எதிர்கொண்டனர். கவுகர் கீலானி, மசுரத் ஜாக்ரா, பீர்சாடா ஆசிக் ஆகிய காசுமீரைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்மீது ஊபாவின் கீழ் வழக்கு போடப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் சித்திக் கப்பான்மீது உத்தரபிரதேச அரசு ஊபா பிரிவுகளின்கீழ் வழக்குப் போட்டது. பாசக அரசால் இயற்றப்பட்ட மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிரான உழவர் போராட்டத்தின்போது அவர்கள் மீது ஊபாவின்கீழ் வழக்குப் போட்டது மோடி அரசு. அரசு உதவிபெறும் சுரங்க நிறுவனங்களும் தனியார் சுரங்க நிறுவனங்களும் சட்ட விரோதச் சுரங்கத்தை எதிர்த்துப் போராடும் மாவோவியர்கள் மற்றும் பிற பழங்குடிகளை  இச்சட்டத்தின் கீழ் வேட்டையாடுகின்றனர். ஜார்க்கண்டின் மஸ்தூர் சங்கதன் சமிதி (இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பூர்வமாக செயல்பட்டு 22,000 பழங்குடியினத் தொழிலாளர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தொழிற்சங்கம்) போன்ற அமைப்புசாராத் தொழிலாளர்களை அமைப்பாக்கும் தொழிலாளர்கள் அல்லது பம்பாய் மின்சார ஊழியர் சங்கத்தின் தொழிலாளர்கள் ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் நீண்ட காலம் அடைக்கப்பட்டனர். இதனால் அவர்களின் தொழிற்சங்கம் சிதைக்கப்பட்டது. இஸ்லாமியர்கள், சீக்கியர்கள் ஆகிய மதச் சிறுபான்மையிருக்கு எதிராக இச்சட்டம் மிக மோசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இச்சமூகங்களைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்கள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு ஆண்டுக் கணக்கில் பிணையின்றிச் சிறையில் வாடுவது நடந்துகொண்டிருக்கிறது. எந்தக் குற்றமானாலும் இஸ்லாமியர் என்றால் ஊபா பிரிவுகளைப் பயன்படுத்துவதும் அரச இயந்திரத்தின் இயல்பாக மாறிவருகின்றது. எடுத்துக்காட்டாக, முகமது அமீர் கான் என்ற இஸ்லாமிய இளைஞர் ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு குற்றமற்றவர் என்று விடுதலை ஆவதற்கு முன்பு 14 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர்களுக்காக வாதாட முன்வரும் வழக்கறிஞர்கள் மீதும் ஊபா பாய்கிறது. மராட்டியத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங், தெலங்கானாவைச் சேர்ந்த  9 வழக்கறிஞர்கள், தமிழ்நாட்டில் வழக்கறிஞர் முருகன் என ஊபா வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டோருக்காக வாதாட முன்வந்த வழக்கறிஞர்களைச் சிறையில் அடைத்து மிரட்டும் வரிசையில்தான் இன்று முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்துத்துவத்தின் இந்து தேசியத்தை ஏற்காத இஸ்லாமியர்கள் ஒருபக்கம். இந்து தேசியத்தை ஏற்காத காசுமீர், தமிழ்நாடு, பஞ்சாப், நாகலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தேசிய இன அரசியல் ஆற்றல்கள் இன்னொரு பக்கம். இந்துத்துவத்தின் கார்ப்பரேட் கொள்ளையை எதிர்க்கும் மத்திய இந்தியாவைச் சேர்ந்த பழங்குடிகள், நக்சல்பாரி அமைப்பினர்,  உழவர்கள், தொழிலாளர்கள், இன்னொரு பக்கம். இவர்கள் எல்லாரும் இந்தியாவுக்கு எதிராக அதிருப்தியை ஏற்படுத்தியதற்காக ஊபாவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு வேட்டையாடப்பட்டு வருகின்றனர். இதில் போராடும் சமூகப் பிரிவினர் மட்டுமின்றி அவர்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பும் அறிவாளிப் பிரிவினர், கல்வியாளர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், வழக்கறிஞர்கள், மாந்த உரிமைச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கலைப் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்கள், கிறித்தவ அருட்தந்தைகள் என எவரும் விட்டுவைக்கப்படவில்லை. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஊபா கருத்தை வெளியிடுவதும் கூட்டம் கூடுவதும் அமைப்பாதலும் அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 19  வழங்கியுள்ள அடிப்படை உரிமை இதுவாகும். இதைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் ஊபா சட்டம் அமைந்துள்ளது. மேலும் ஊபா சட்டத்தில் உள்ள பிரிவுகள் 35, 36 ஆகியவை அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும்  அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆகும். உறுப்பு 19 மட்டுமின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் என முன்வைக்கும் உறுப்பு 14, வாழ்வுரிமையையும் ஆள்வகைச் சுதந்திரத்தையும் உறுதிசெய்யும் உறுப்பு 21 ஆகியவற்றிற்கும் எதிரானதாகும். பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் என்.ஐ.ஏ. 2008இல் இச்சட்டம் காங்கிரசால் கொண்டுவரப்பட்டது. எல்லை கடந்த பயங்கரவாதம் என்கிற கருத்தாக்கத்தின் பின்னணியில் எல்லா நாடுகளைப்போல நாமும் ஒன்றை உருவாக்குகிறோம் என்று காங்கிரசு வாதாடியது. தேசப் பாதுகாப்புக்கும் இறையாண்மைக்கும் ஆட்சிப்புல ஓர்மைக்கும் ஊறு செய்யக்கூடிய குற்றங்களைப் புலனாய்வு செய்யவும் தண்டிக்கவும் என்.ஐ.ஏ. நிறுவப்பட்டது. அதாவது, மாநில அரசின் ஆட்சிப்புலத்திற்குள் நடக்கும் குற்றங்களைப் புலனாய்வு செய்வதை, ஒன்றிய ’காவல்துறை’க்கு மாற்றிவிட வழிவகுக்கும் சட்டம் இது. சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசின் பட்டியலில் இருக்கிறது. காவல்துறை என்பதும் மாநில அரசின்கீழ் வருகிறது. ஒன்றிய அரசு என்.ஐ.ஏ. என்றொரு புலனாய்வு நிறுவனத்தை ஏற்படுத்தியது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. என்.ஐ.ஏ. சட்டத்தில் பட்டியலிடப்பட்ட சட்டப் பிரிவுகளில் ஊபா சட்டப் பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இச்சட்டம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று 2021ஆம் ஆண்டு காங்கிரசு ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலம் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது. 2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள்,  வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட என்.ஐ.ஏ. சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டுவரப்பட்டால்தான் பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தமுடியும் என்பதற்கு எந்தத் தெளிவான காரணமும்  சொல்லப்படவில்லை. இவற்றை விசாரிப்பதற்கு மாநில அரசுக்கு அதிகாரமும் நிறுவனங்களும் இருக்கும்போது மாநில உரிமைக்குள் மூக்கை நுழைத்து அவ்வழக்கை என்.ஐ.ஏ. எடுத்துக்கொள்வதற்கு வழிசெய்யவே இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. என்.ஐ.ஏ. தொடங்கப்பட்டு வெறும் 15 ஆண்டுகளே ஆகியிருக்கும் நிலையில் இதன் இந்துத்துவ அரசியல் சார்பு அம்பலப்பட்டு நிற்கிறது. இந்துத்துவப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் புலனாய்வில் குற்றவாளிகளிடம் மென்மையான போக்கைக் கடைபிடிக்குமாறு என்.ஐ.ஏ.வால் தமக்கு அறிவுறுத்தப்பட்டதென அவ்வழக்கை  நடத்திய அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞர் ரோகினி சலைன்  2015 ஜூன் 25 அன்று தெரிவித்தார். இவ்வாறாக, ஊபா சட்டம் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதோடு மட்டுமல்லாமல் ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராக மக்கள் அமைப்பாகத் திரள்வதையும் தடுக்கிறது. குறிப்பாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் தங்களைக் குற்றமற்றவர்கள் என உறுதிப்படுத்த வேண்டும் என்பது எவர்மீதும் பொய்யான குற்றச்சாட்டைப் பதிவு செய்து, அவர்களை முற்றாக முடக்கிச் சிறையில் அடைத்துவிட வழிவகை செய்கிறது. என்.ஐ.ஏ. அமைப்பானது ஒன்றிய ஆட்சியாளர்களுக்குத் துணை போவதாகவும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகவும் உள்ளது. இந்தச் சூழலில், முற்போக்குச் சிந்தனையாளர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு இவ்விரண்டுக்கு எதிராகவும் இவற்றை முற்றாக அகற்றவும் குரல் எழுப்புவதும் செயல்படுவதும் தற்போதைய முக்கியத் தேவையாகும்.

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.

இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ.

இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act) எனப்படும் ‘சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம்’ தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது. இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த இரண்டையும் எதிர்த்து முனைப்புடன் இயக்கம் நடத்த வேண்டிய தேவையை பாசிச எதிர்ப்பு மற்றும் குடியாட்சிய ஆற்றல்கள் போதிய அளவு உணரவில்லை எனத் தோன்றுகிறது. இந்நிலை குறித்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி சார்பில், என் ஐ ஏ குறித்தும் ஊபா குறித்தும் அண்மைக்காலத்தில் இவை ஏவப்பட்டுள்ள நிகழ்வுகள் குறித்தும் மக்களிடையே முனைப்புடன் பரப்புரை செய்யத் தீர்மானித்துள்ளோம். இசுலாமியர்களை வேட்டையாடும் என்.ஐ.ஏ. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு கடந்த ஆண்டு செப்டம்பரில் தடைசெய்யப்பட்டவுடன் அவ்வமைப்பைக் கலைத்துவிட்டதாக அதன் நிர்வாகிகள் அறிவித்துவிட்டனர். ஆனால் சுமார் ஏழு மாதங்கள் கழித்து, அவ்வமைப்பில் நிர்வாகியாய் இருந்த சென்னையைச் சேர்ந்த தோழர் அப்துல் ரசாக் உள்ளிட்ட ஐந்து இசுலாமியர்கள் கடந்த மே 9 அன்று தேசியப் புலனாய்வு முகமையால் (என்.ஐ.ஏ) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்காக முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் வாதாடினார்கள். எந்த வழக்குக்காக அவர்கள் வாதாடிக்கொண்டிருந்தார்களோ அதே வழக்கில் அவர்கள் சேர்க்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பினர் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு பயங்கரவாதச் செயல்களுக்குத் திட்டமிடுகின்றனர்; சட்டவிரோதச் செயல்கள், பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்கு சதித்திட்டம் தீட்டுகின்றனர்; இரு பிரிவினருக்கு இடையே பகை வளர்க்கும் செயல்களில் ஈடுபடுகின்றனர்; தங்கள் பயங்கரவாதச் செயல்களுக்கு ஆட்சேர்க்கின்றனர்; பேரணி நடத்துகின்றனர்; ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளுடன் இரகசியத் தொடர்பு வைத்துக்கொண்டு அவர்களை ஆதரிக்கின்றனர் போன்ற தகவல்கள் தமக்கு கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் இவ்வழக்கைப் போட்டிருப்பதாகச் சொல்கிறது என்.ஐ.ஏ.. பாப்புலர் ஃப்ரண்ட் கடந்த செப்டம்பர் 28ஆம் நாள் தடைசெய்யப்பட்டது. கடந்த செப்டம்பர் 19 அன்று போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 120(B), 153-A, 153-AA ஆகியவற்றின் கீழும் சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 13,17,18, 18(B), 38, 39 ஆகியவற்றின் கீழும் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே 9 பேர் சிறைபட்டிருந்தனர். ஊபா உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான கூட்டமைப்பு ஒன்றின் தமிழ் மாநில அமைப்பாளராகச் செயல்பட்ட தோழர் காலித் முகமதுவும் அந்த 9 பேரில் ஒருவர். கடந்த ஏப்ரல் 13 அன்று மேற்சொன்ன பிரிவுகளுடன் ஊபா பிரிவுகள் 20, 22B-ஐயும் சேர்த்து இன்னொரு வழக்கு போடப்பட்டிருந்தது. முதல் வழக்குப் போடப்பட்டதோ ஏப்ரலில். ஆனால், அதற்கான கைது நடவடிக்கையை என்.ஐ.ஏ. மேற்கொண்டது செப். 22இல். இதில் 21 பேர் சிறைப்பட்டனர். அவர்களில் மூன்று பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தோர். உரத்து எழுப்ப வேண்டிய கேள்விகள்: பாப்புலர் ஃப்ரண்ட் பற்றி மேற்குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்ததாக என்.ஐ.ஏ. சொல்கிறது. அந்தத் தகவல்களைக் கொண்டு ஏப்ரலில் ஒரு வழக்குப் போட்டுள்ளது. பின்னர் அதே தகவல்களைக் கொண்டு இன்னொரு புதிய வழக்கை செப்டம்பரில் பதிந்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பெயர்களைத் தவிர வேறெந்த மாற்றமும் இவ்விரு வழக்கிலும் இல்லை. ஒரே குற்றத்திற்கு இரு வேறு வழக்குகள் போடுவது சட்ட நடைமுறைகளுக்குப் புறம்பானது இல்லையா? பயங்கரவாதக் குற்றங்களுக்கான பிரிவுகளின் கீழ் ஏப்ரல் மாதத்தில் ஒரு வழக்கைப் பதிந்துவிட்டு, ஐந்து மாதங்கள் கழித்து புதிய வழக்குக்காகக் கைது செய்திருப்பதிலிருந்தே குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை அம்பலமாகிறது இல்லையா? ஊபா பிரிவு 13, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவது பற்றியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈடுபட்ட சட்டவிரோதச் செயல்கள் என்ன? இது பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லாமல் பிரிவு 13ஐ வழக்கில் சேர்த்தது சட்டப் புறம்பானதில்லையா? இரு பிரிவுகளுக்கு இடையே நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களால் எங்கு, எப்போது, என்ன பேசப்பட்டது? பிரிவு 38,39 ஆகியவை பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராய் இருப்பது பற்றியது. பாப்புலர் ஃப்ரண்ட் பயங்கரவாத அமைப்பு என்பதற்காகத் தடை செய்யப்படவில்லை. மாறாக, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் அமைப்பு என்ற பெயரிலேயே தடைசெய்யபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அப்படித் தடைசெய்யப்படுவதற்கு ஒரு கிழமைக்கு முன்பே ஊபாவின் இந்தப் பிரிவுகளைப் பயன்படுத்தமுடியுமா? வழக்கம்போலவே, ஊபாவின் பிரிவு 18, பயங்கரவாதச் செயல்களை செய்வதற்காகச் சதித் திட்டம் தீட்டிய குற்றத்திற்கான பிரிவு இவ்வழக்கிலும் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம்போலவே, எவ்வித பயங்கரவாதச் செயல்களும் நடக்காமலே இப்பிரிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிவைக்கப்படும் வழக்கறிஞர்கள்: இவ்வழக்கு சட்டத்திற்குப் புறம்பானது என்பதால் அதை ரத்து செய்யக் கோரி குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகுகின்றனர். குற்றஞ் சாட்டப்பட்டவர்களை என்.ஐ.ஏ. தன் விருப்பப்படி விசாரணைக்கு அழைப்பதையும் பொருட்களைப் பறிமுதல் செய்ததையும் அவர்கள் நீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்குகின்றனர். குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழக்கை நடத்திய வழக்கறிஞர்கள்தான் முகமது அப்பாசும் முகமது யூசுப்பும் ஆவர். முகமது அப்பாஸ் இவ்வழக்கை எதிர்த்த 10 வழக்குகளில் வாதாடியவர்; 4 வழக்குகளில் முகமது யூசுப்பும் வாதாடியிருந்தார். இதற்கிடையே 05.03.2023 அன்று மதுரை கோரிப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவரை ‘விசாரணை’ என்ற பெயரில் என்.ஐ.ஏ. அதிகாரி டி.எஸ்.பி. செந்தில்குமார் கூட்டிச் சென்றார். என்.ஐ.ஏ அதிகாரிகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதால் மயங்கி விழுந்த ஜின்னா இறந்துவிடுவாரோ என்று அஞ்சி உடனே அவரை மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சேர்த்தனர். ஆனால், அவருக்கு வலிப்பு வந்த நிலையில் மருத்துவமனைக்கு அருகில் கிடந்ததாக இட்டுக்கட்டுகின்றனர். இவ்விசயத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கையும் களவுமாகச் சிக்கும் வகையில் மருத்துவமனையில் ஜின்னாவை சேர்க்கும்போது பதிவான சிசிடிவி காணொளிகளை வழக்கறிஞர் முகமது அப்பாசு பெற்றுவிட்டார். இது டி.எஸ்.பி. செந்தில்குமாருக்கு ஆத்திரமூட்டுகிறது. என்.ஐ.ஏ. வின் சித்திரவதையை அம்பலப்படுத்தி முகமது அப்பாஸ் ஒரு முகநூல் பதிவை எழுதினார். இதனால் ஆத்திரம் அடைந்த என்.ஐ.ஏ. டி.எஸ்.பி செந்தில்குமார் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ‘என்.ஐ.ஏ. மீதான அவதூறு பரப்பல்’ என்று முகமது அப்பாஸ் மீது புகார் செய்தார். இந்தப் பின்னணியில்தான், இரு வழக்கறிஞர்களும் எந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்த வழக்கிலேயே அவர்களைச் சேர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் உறுப்பினர் என்று இட்டுக்கட்டிக் கைது செய்திருக்கிறது என்.ஐ.ஏ. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையில்லையா? என்.ஐ.ஏ. வழக்குகளுக்கு எதிராக வாதாடுவதே குற்றமா? அப்படி வாதாடும் வழக்கறிஞர்களை அவர்கள் வாதாடும் வழக்குகளிலேயே இணைத்து சிறைப்படுத்துவது பாசிச அடக்குமுறையன்றி வேறென்ன? இதைக் கண்டித்து மதுரை ‘பார் அசோசியேசன்’ தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கோரியது. முகமது அப்பாசையும் முகமது யூசுப்பையும் பொய் வழக்குகளில் கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீதும் தமிழகக் காவல் துறையினர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டுக்குழு (JACC) தீர்மானம் நிறைவேற்றியது. தமிழ்நாடு தழுவிய அளவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்தனர். வழக்கறிஞர்களுக்கு எதிரான இதுபோன்ற பயங்கர அச்சுறுத்தல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று மே 30 அன்று சென்னையில் நடந்த ஊடகச் சந்திப்பில் மேனாள் உச்சநீதிமன்ற நீதியர் மார்கண்டேய கட்ஜூ முழங்கினார். இஸ்லாமியர்களைக் குதறும் என்.ஐ.ஏ. திறந்த வீட்டில் நுழைந்த நாய் போல் என்.ஐ.ஏ. தமிழ்நாட்டில் உள்ள இசுலாமியர்களை வேட்டையாடி வருகிறது. அன்றாடம் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சோதனை நடத்துவதன் மூலம் இசுலாமிய மக்களைத் தொடர் அச்சுறுத்தலில் வைப்பதும் பொதுச்சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்துவதும் நடந்து வருகிறது. பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீதான தடையைக் காரணமாகச் சொல்லிக்கொண்டு இந்தச் சோதனைகளும் கைதுகளும் நடத்தப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். – பாஜகவின் இந்துராஷ்டிர நிகழ்ச்சி நிரலை எதிர்த்து இசுலாமியர்கள் அமைப்பாவதையும் போராடுவதையும் பயங்கரவாதமென முத்திரை குத்தி அச்சுறுத்த நினைக்கிறது பாசிச பாஜக அரசு. கடந்த செப்டம்பரில் போடப்பட்ட வழக்குக்கான குற்றப் பத்திரிக்கையை அணியமாக்க மார்ச் 27 வரை இழுத்தடித்தது என்.ஐ.ஏ. அதையும்கூட நீதிமன்றத்தில் முன்வைக்காமல் காலந்தாழ்த்தியது; குற்றஞ்சாட்டப்பட்டோர் உயர்நீதிமன்றத்தை அணுகித்தான் ‘குற்றப்பத்திரிக்கையை என்.ஐ.ஏ. வெளியிட்டாக வேண்டும்’ என்ற ஆணையைப் பெற்றனர். இந்நிலையில்தான் மேற்படி ஐவரையும் இவ்வழக்கில் இணைத்து, கூடுதல் குற்றப்பத்திரிக்கையை அணியமாக்கியுள்ளது என்.ஐ.ஏ. கோவையில் நடந்த எரிவாயு உருளை வெடிப்பையும் பயன்படுத்திக்கொண்டு, ஏதோ தமிழ்நாட்டில் இசுலாமிய பயங்கரவாதம் தலைவிரித்தாடுவது போல் கதைகட்டத் துடிக்கிறது என்.ஐ.ஏ. கேட்பார் யாரும் இல்லை என்பதுபோல் தமிழ்நாட்டில் சோதனைகளும் கைதுகளும் தொடர் கதையாகி இருக்கின்றன. பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா! ஊபா வந்த பாதை: திமுக திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிக்கொண்டிருந்த பின்புலத்தில், தேசிய ஒருமைப்பாட்டுப் பேரவை தேசிய ஒருமைப்பாடு மற்றும் வட்டாரவியம் குறித்த குழுவொன்றை அமைத்தது. அக்குழு நாட்டின் ஒருமைப்பாட்டையும் இறைமையும் பாதுகாப்பதற்கும் நீடிக்கச் செய்வதற்கும் ஒன்றிய அரசுக்குப் போதுமான அதிகாரங்களை உரித்தாகும் வகையில் கருத்தை வெளியிடுவதையும் கூட்டம் கூடுவதையும் அமைப்பாவதையும் அடிப்படை உரிமையாக உயர்த்திப் பிடிக்கும் அரசமைப்புச் சட்ட உறுப்பு 19ஐத் திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைக்கு இணங்க 1963ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பில் கொண்டுவரப்பட்ட 16வது சட்டத் திருத்தம் உறுப்பு 19ஐ இறைமையினதும் ஒருமைப்பாட்டினதும் நலனின் பெயரால் கட்டுப்படுத்தக்கூடிய திருத்தத்தைப் புகுத்தியது. மேலும் பிரிவினைக் கோரிக்கையைக் கொண்டிருக்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கவல்ல திருத்தங்களும் மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும்போது, ‘நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் காத்து நிற்பேன்’ என்று உறுதிமொழி ஏற்கும் திருத்தமும் அப்போது செய்யப்பட்டது. 16ஆவது அரசமைப்புத் திருத்தத்தைச் செயல்படுத்தும் நோக்கில் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) 1967ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. அதுவரை மக்கள் அமைப்பாவதைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் மாநில அரசுகளிடம் இருந்தது. இந்தச் சட்டத்தின் மூலம் அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரத்தை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொண்டது. நாட்டின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இச்சட்டம் இயற்றப்படுவதாகக் காரணம் சொல்லப்பட்டது. மிசா, தடா, பொடா என அடுத்தடுத்து வந்த அடக்குமுறை சட்டங்கள் ஜனநாயக ஆற்றல்களின் போராட்டத்தால் முடிவு கட்டப்பட்டன. ஆனால் ஒரு கருப்புச்சட்டத்தைக் கைவிடும்போது அதன் கூறுகளைக் கொண்ட இன்னொரு புதிய சட்டத்தைக் கொண்டுவருவதை ஆளும்

கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

கலைஞராலேயே கைவிடப்பட்ட பூம்புகார்

மீண்டும் வளம் பெறுமா? நாம் அறிந்த வரையில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் முற்றிலும் புதிதாக, தமிழக அரசால் உருவாக்கப்பட்ட சுற்றுலாத்தலமென்றால் அது பூம்புகார்தான். சிலப்பதிகாரத்தின் கதை மாந்தரின் ஊரான பூம்புகார், பழைய காலத்தில் புகார் நகரம் என்றே அழைக்கப்பட்டது. காவிரி புகும், பகைவர்கள் புகார் எனும் பொருள்படும், ‘புகும் புகார்’ என்பதே பின்னாளில் பூம்புகார் என்றானது. காவிரிப்பூம்பட்டினம் என்றொரு பெயரும் உண்டு இதற்கு. சங்க காலம் முதலே சோழர்களின் துறைமுக நகராகவும் முதல் தலைநகராகவும் விளங்கியது. காலப்போக்கில் கடல்கொண்ட புகார் நகரம் போய், ஒரு சிறு மீனவ கிராமமாகச் சுருங்கிவிட்டது. இந்த இடத்தில் சிலப்பதிகாரத்தின் நினைவாக ஒரு சுற்றுலாத்தலம் அமைக்க விரும்பினார் கலைஞர். அதன்படி இங்கே சிலப்பதிகாரக் கதையை விளக்கும் அழகிய சிற்பங்கள் அடங்கிய சிலப்பதிகாரக் கலைக்கூடம் ஒன்றும் நெடுங்கல் மன்றம், இலஞ்சி மன்றம், பாவை மன்றம், கண்ணகி கோட்டம் ஆகியவையும் அமைக்கப்பட்டன. கலைக்கூடத்தின் முகப்பு அக்கால எழுநிலை மாடத்தின் வடிவில் அமைக்கப்பட்டது. உள்ளே சிலப்பதிகாரக் காட்சிகளும் நடு முற்றத்தில் கண்ணகி, மாதவி ஆகியோருக்கு ஆளுயரத்துக்கு மேற்பட்ட கலைநயம் கொஞ்சும் சிலைகளும் அமைக்கப்பட்டன. அக்காலப் புகார் நகரின் அமைப்பை விளக்கும் முப்பரிமாண மாதிரி வடிவம் ஒன்றும் இதில் இருந்தது. கலைக்கூடத்தைச் சுற்றி கண்ணைக் கவரும் தோட்டங்களும் நடைபாதைகளும் இளைப்பாறும் இடங்களும் அமைக்கப்பட்டன. இளங்கோ அடிகளுக்கும் கரிகால் சோழனுக்கும் கம்பீரமான சிலைகள் அமைக்கப்பட்டன. வண்ண விளக்குகளும் நீரூற்றுகளுமாய் ஜொலித்தன. இந்தக் கலைக்கூட எழுநிலை மாடம்தான் முன்பு தமிழ்நாடு செய்திப் பிரிவின் இலட்சினையாக (லோகோ) விளங்கியது. இதனைத் தவிர சிலப்பதிகாரத்தில் ஐவகை மன்றங்கள் பூம்புகாரில் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன. 1.வெள்ளிடை மன்றம், 2.இலஞ்சி மன்றம், 3.நெடுங்கல் மன்றம், 4.பூத சதுக்கம், 5.பாவை மன்றம் ஆகியவையே அவை. இவற்றில் வெள்ளிடை மன்றம், பூத சதுக்கம் தவிர மற்ற மூன்று மன்றங்கள் இக் கலைக்கூடத்தைச் சுற்றி உருவாக்கப்பட்டுள்ளன. 1. இலஞ்சி மன்றம் கூன் முதுகுடையோர், குள்ளமாய்ப் பிறந்தோர் மற்றும் உடல் குறைபாடுகள் உடையவர்கள் மூழ்கி எழுந்து, அந்தக் குறைபாடுகள் நீங்க சுற்றிவந்து வழிபட, பொய்கையும் மண்டபமும் கூடிய இலஞ்சி மன்றம்! “கூனும் குறளும் ஊமும் செவிடும்அழுகுமெய் யாளரும் முழுகினர் ஆடிப்பழுதுஇல் காட்சி நன்னிறம் பெற்றுவலம்செயாக் கழியும் இலஞ்சி மன்றமும்” – சிலப்பதிகாரம். இது தற்போது, ஒரு பூங்காவின் நடுவே இரண்டு தடாகங்களும் (நீச்சல் குளம்) இரண்டுக்கும் இடையில் ஒரு மண்டபமும் அதன் இருபுறமும் உடை மாற்றும் அறை போன்ற வட்ட வடிவ அறைகளும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திலும் நீராடும் பெண்ணின் பல்வேறு நிலைச் சிற்பங்கள் – நீராடச் செல்லுதல், உடை அணிதல், ஒப்பனை செய்து கொள்ளல், மாலை சூடுதல் என்ற நிலைகளில் பெண்களின் கலைநயமிக்க சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2. பாவை மன்றம் அரசன் நீதி தவறும்போதும் நீதி வழங்கும் அவையில் தவறான தீர்ப்பு – நடுநிலையாக இல்லாமல் ஒரு சார்பில் வழங்கப்படும்போதும் அந்தத் தவறை வாய் திறந்து சொல்லாமல் குறிப்பாலே கண்ணீர் வடித்துக் காட்டிக்கொடுக்கும் பாவை நிற்கும் பாவை மன்றம் ! “அரைசு கோல் கோடினும், அறம் கூறு அவையத்து,உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும்,நாவொடு நவிலாது, நவை நீர் உகுத்து,பாவை நின்று அழூஉம் பாவை மன்றமும்” – இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம் இது கலைக்கூடத்தின் நேர் எதிரே பூங்காவிற்கு இடையில் ஒரு வட்ட வடிவ மண்டபமாக உள்ளது. இதில் சிலப்பதிகார வரிகளுடன் பெண்களின் சிற்பங்கள் ஒவ்வொரு தூணிலும் உள்ளன. 3. நெடுங்கல் நின்ற மன்றம் பிறரால் வஞ்சிக்கப்பட்டு பித்துப் பிடித்தவர்களும் நஞ்சு உண்டு அவதிப்படுவோரும் பாம்பு தீண்டியவர்களும் பேய் பிடித்தவர்களும் சுற்றி வர, அவர்களின் துயரத்தைப் போக்கும் நெடிய கல் நிற்கின்ற நெடுங்கல் நின்ற மன்றம்! இது ஒரு Menhir கல்போல இருந்திருக்கலாம். வஞ்சம் உண்டு மயல்பகை உற்றோர்நஞ்சம் உண்டு நடுங்குதுயர் உற்றோர்அழல்வாய் நாகத்து ஆர்எயிறு அழுந்தினர்கழல்கண் கூளிக் கடுநவைப் பட்டோர்சுழல வந்து தொழத்துயர் நீங்கும்நிழல்கால் நெடுங்கல் நின்ற மன்றமும்! – இந்திர விழா ஊர் எடுத்த காதை சிலப்பதிகாரம் இது கலைக்கூடத்தின் பின்புறம் ஒரு கலைநயமிக்க நெடுந்தூணும் அதனைச் சுற்றிலும் சிற்பங்களும் கொண்ட அழகிய கலை வடிவம். இதன் மினியேச்சர் வடிவத்தைதான் கலைஞர் தனது பூம்புகார் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் லோகோவாகப் பயன்படுத்தினார். இதைத்தவிர சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக தமிழ்நாடு ஓட்டலும் உணவு விடுதியும் நத்தாங்கூடு மற்றும் முத்துச்சிப்பிகளின் வடிவில் காட்டேஜ்களும் அமைக்கப்பட்டன. கலைக்கூடத்தின் வெளி நுழைவாயிலிலிருந்து, கதவு, கைப்பிடி, பூங்காக்கள் மற்றும் பேருந்து நிலையம்கூட சிலம்பு வடிவத்திலேயே வடிவமைக்கப்பட்டது. இந்திரவிழா நடத்தும் பொருட்டு ஒரு அரங்கமும் அமைக்கப்பட்டது. இது தவிர ஊருக்கு ஏழு கிலோமீட்டர் முன்னதாகவே பூம்புகார் நுழைவு வாயில், கரிகால் சோழன் தோரண வாயில், இளங்கோ அடிகள் தோரண வாயில், கோவலன் தோரண வாயில், கண்ணகி தோரண வாயில், மாதவி தோரண வாயில் போன்ற வாயில்களும் அமைக்கப்பட்டன. சுற்றுலாவை மேம்படுத்த, தமிழ்நாட்டில் எங்கு பேருந்துகளுக்கு சுற்றுலா ரூட் பர்மிட் கேட்டாலும் அதில் தஞ்சை மாவட்டத்திற்கான பர்மிட் கட்டாயமாக சேர்த்தே அளிக்கப்பட்டது. ஆண்டுதோறும் சித்திரை முழுநிலவு நாளில் இந்திரவிழா, அரசு விழாவாக மாவட்ட நிர்வாகத்தால் கலை/இலக்கிய நிகழ்வுகளுடன் நடைபெற்றது. இவையெல்லாம் கலைஞர் ஆட்சியிலிருந்த வரை சிறப்பாக நடைபெற்றன. பின்னர் வந்த அதிமுக ஆட்சியில் இந்த இடம் கேட்பாரற்று விடப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சி கலைஞர் தலைமையில் வந்தபோதும் இந்த இடம் பெரிதாகக் கண்டுகொள்ளப்படவில்லை. இந்திர விழா மட்டும் பெயரளவில் நடைபெற்றது. பூங்காக்கள் அழிந்தன; கட்டடங்கள் சிதிலமுற்றன; முத்துச் சிப்பி, நத்தாங்கூடு வடிவக் காட்டேஜ்கள் எலும்புக்கூடாய்ப் போய் இன்று தரை மட்டமாகி, இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. பாவை மன்றம் நாய்களும் சமூக விரோதிகளும் புழங்கும் இடமாயிற்று. நெடுங்கல் மன்றத்தைச் சுற்றி இருந்த பூங்காக்கள் அழிந்து, இன்று அருகில் செல்லக்கூடப் பாதை இல்லாமல் திறந்த வெளியில் நிற்கின்றன. இலஞ்சி மன்றத்தின் நீச்சல் குளங்கள் வறண்டு போய், பூங்காக்கள் அழிந்து, அதன் கருமை நிற கிரானைட் கட்டடங்களின் மேல் தற்காலக் காவியக் காதலர்கள் தங்கள் பெயர்களைக் கல்வெட்டாகச் செதுக்கி வைத்துள்ளனர். இதன் நுழைவாயில் வாசமிகு கருவாட்டுக் கடைகளால் சூழப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஓட்டலும் உணவகமும் காணாமல் போய்விட்டன. ஒரே ஒரு சுற்றுலா அலுவலகம் பெரும்பாலும் திறக்கப்படாமல் உள்ளது. அங்குள்ளவர்களிடம் பூம்புகார் பற்றியோ சிலப்பதிகாரம் பற்றியோ எந்த ஒரு தகவலும் கிடைக்காது. சுக ஜீவனம் நடத்தும் அரசு ஊழியர்கள். தற்போது கலைக்கூடத்தையும், ‘புதுப்பிக்கிறோம் என்ற பெயரில்’ நீண்ட காலமாக மூடி வைத்துள்ளனர். பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. மற்ற இடங்களை, திறந்த வீட்டில் குக்கல்கள் போலச் சுற்றி வரலாம். சிலம்பு வடிவப் பேருந்து நிலையம் பழுதுபட்டுள்ளது. அதனைச் சுற்றி ஜேசிபிக்கள் ஏதோ பணி செய்கின்றன. கலைஞரின் கனவு சுற்றுலாத்தலமான பூம்புகாரை ஏனோ கலைஞரே பின்னாளில் கண்டுகொள்ளவில்லை; தொகுதியையும்தான். நீண்டகாலம் தொகுதியைக் கூட்டணி வேட்பாளர்களுக்கே ஒதுக்கினார். வெகு நீண்ட காலத்திற்குப் பின்னர் தற்போது திமுக எம்.எல்.ஏ. பார்க்கலாம், பூம்புகார் மீண்டும் நலம் பெறுகிறதா, வளம் பெறுகிறதா என்று.

வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள்?

வல்லூறை வீழ்த்துமா சிட்டுக்குருவிகள்?

மகாபாரதத்தில் ஒரு காட்சி:அர்ஜுனன் அம்பு எய்யப் பழகிக் கொண்டிருக்கிறான்.துரோணர் கேட்கிறார், “மரம் தெரிகிறதா?”“இல்லை”“மரத்தின் கிளை தெரிகிறதா?”“இல்லை”“கிளையில் இலையின் அசைவுகள்?”“தெரியவில்லை குருவே”“கிளையில் அமர்ந்திருக்கும் குருவியாவது தெரிகிறதா?”“மன்னித்துக் கொள்ளுங்கள் குருவே. குருவியும் தெரியவில்லை”துரோணருக்கு ஆச்சரியம்.“பிறகு என்னதான் தெரிகிறது அர்ஜுனா?”“நான் வீழ்த்த வேண்டிய குருவியின் தலை மட்டும் தெரிகிறது”பெருமை தொனிக்க துரோணர் சொல்கிறார்:“அம்பினை விடுக” அப்படித்தான் பாஜக-வை வீழ்த்தக் குறி வைப்பதற்காக இந்தியாவின் பெரும்பாலான எதிர்கட்சிகள் வருகின்ற ஜுன் 23 அன்று பாட்னாவில் சந்திக்க இருக்கிறார்கள். நிதிஷ்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, மேற்கு வங்க முதல்வர் மம்தா, தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின், டெல்லியிலிருந்து அரவிந்த் கேஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், சிவசேனாவின் உத்தவ் தாக்ரே, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். சமீபத்திய கர்நாடகத் தேர்தல் வெற்றியும் ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையும் காங்கிரசிற்கு உத்வேகம் அளித்துள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் மேலே சொன்ன தலைவர்கள் அனைவருமே அவரவர் மாநிலங்களில் தங்களுக்கென வாக்கு வங்கியைக் கொண்டவர்கள். இவர்கள் எல்லாரும் சேர்ந்து பாஜக-விற்கு எதிராகப் பொது வேட்பாளரை நிறுத்த முடியுமா என்பது மில்லியன் டாலர் வினா. அனைவருமே தோளில் கை போட்டு, காலை வாரி விடுவதில் கை தேர்ந்தவர்கள்தான். இருப்பினும் ‘நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் மதவெறிக்கு எதிராக, மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்’ என்ற புரிந்துணர்வு மட்டுமே, அவர்களுக்கு 2024 தேர்தலில் பாஜக என்ற குருவியின், இல்லையில்லை, வல்லூறின் தலையை மட்டும் பார்க்க வைக்கிறது. ஆம், வல்லூறுதான். இந்தியாவில் பாஜக தவிர வேறு கட்சிகளை ஒழித்துவிட்டு, பாஜக மட்டுமே ஒற்றைக் கட்சியாக இருக்க வேண்டும். ஒரே கட்சி, ஒரே மொழி, ஒரே பண்பாடு என எல்லாவற்றையும் மதவாதம் என்னும் ஒற்றைச் சித்தாந்தத்தக் குடையின்கீழ் கொண்டுவரத் தீவிரமாகச் செயலாற்றி வரும் ஒன்றிய வல்லூறு. ஜனநாயகத்தின் சிறப்பே, வலிமையான எதிர்க்கட்சி என்பதுதான். எதிர்க்கட்சி என்பது எதிரிக் கட்சியல்ல; ஆளும் கட்சி தவறிழைக்கும்போது அதைச் சுட்டிக்காட்டி, சரிப்படுத்திச் செல்ல உந்தும் ஒரு அமைப்பு முறை. எமர்ஜென்சிக்குப் பிறகு வந்த ஆட்சியின் ஒற்றுமையையும் சிறிது காலத்திற்குப் பின்னர் வந்த வி.பி.சிங் ஆட்சியையும் இங்கே கவனத்தில் கொண்டால், இந்திய ஜனநாயகம் எதிர்க்கட்சிகளுக்கு எவ்வளவு மதிப்பளித்திருந்தது என்று புரிந்துகொள்ள முடியும். அதேபோல கூட்டணி ஆட்சிமுறையில் குறைந்தபட்ச செயல்திட்டங்களுடன் அவற்றை நடைமுறைப்படுத்தும் ஆட்சி முறை. இடதுசாரிகள் பாராளுமன்றத்தில் அதிகம் இருந்த நாட்களையும் அவர்கள் குறைந்துபோய், பாராளுமன்றம் என்பதே ஒரு கேலிக்கூத்து ஆகிவிட்ட இந்தக் காலத்தையும் ஒப்புமைப்படுத்தி தற்போது என்னவெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதையும் சிந்திக்க வேண்டும். பாராளுமன்றத்தில் நாட்டின் விடுதலைக்கான போராட்டங்களும் அவற்றை வழிநடத்திய காட்சிகளும் இருப்பதுதானே ஜனநாயகம்? ஒரு குறிப்பிட்ட மதத் தலைவர்கள், அவர்களுக்கு மாபெரும் ஓவியங்கள், சிலைகள் வைத்து, இந்தியா மதரீதியான நாடாக நிறுவ முயற்சிப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இவற்றையெல்லாம் ஒற்றுமையுடன் மக்களிடம் கொண்டு சேர்த்து, மதவாதப் பொது எதிரியை வீழ்த்துவதற்கான திட்டங்களை வகுக்கும் களமாக எதிர்க்கட்சிகள் சந்திப்பு இருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு எப்படி இருக்கும், ஒரே நாளில் புரிதல் வருமா, பிரதமருக்கான பொது வேட்பாளரைத் தேர்வு செய்ய முடியுமா என்பதெல்லாம் போகப் போகத்தான் தெரியும். எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களுக்கென்று இருக்கும் கெத்து, ஈகோக்களை விட்டுக்கொடுத்து,பொதுவான கருத்தொற்றுமையை யார் உருவாக்கப்போகிறார்கள், இவர்களை ஒன்றிணைப்பவர்களாக யார் யாரை முன்னிறுத்தப்போகிறார்கள் என்பதெல்லாம் பெரிய விவாதப் பொருள்களாக இருக்கப்போகின்றன. முதல் சந்திப்பின் தலைவர் என்பதாலேயே நிதிஷ்குமார்தான் தலைமை என்று சொல்ல முடியாது. எல்லா மாநிலங்களுக்கும் ஜாதா சென்றதாலேயே ராகுலை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் என்றும் சொல்ல முடியாது. ராகுல் காந்தி பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக நாட்கள் நடக்கவில்லை; குறைந்த அளவு நகரங்களையே தேர்வு செய்தார். தமிழ்நாட்டின் முதல்வர் பெயர் நாடு முழுவதும் பரவியுள்ளது; திராவிட மாடல் குறித்து அனைவரும் பேசுகின்றனர் என்றாலும் வட இந்தியத் தலைவர்கள் எந்த அளவு மதாராஸியை நம்புவார்கள் என்பதைக் கணிப்பது கடினம். இவர்களை ஒருங்கிணைக்கும் ஒரு அமைப்பாக இடதுசாரிகளைத்தான் காணமுடிகிறது. ஆனால் மற்றவர்கள் அதை எப்படிப் பார்ப்பார்கள், முக்கியமாக மம்தாவின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். அனைவரும் சேர்ந்து அந்தந்த மாநிலங்களில் தாங்களே தேர்தலைச் சந்தித்துக் கொள்ளலாம்; மாநில அளவில் எதிர்ப்பு அணியை உருவாக்கிக் கொள்ளலாம்; தேர்தல் முடிந்த பிறகு தலைமையைப் பற்றி முடிவு செய்து கொள்ளலாம் என்று கருதுவார்களேயானால், அது எந்த அளவிற்கு சாதகமாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. பாஜக குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கலாம். அதற்கு வாய்ப்பு அளிக்கக் கூடாது என்பதே அனைவரின் எண்ணமாகவும் இருக்க வேண்டும். இந்தச் சந்திப்பு பற்றி பாஜக தலைவர்கள் கூறியிருப்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. பாலம் இடிந்துபோன பாட்னாவில் கூடுகிறார்கள்; அந்தப் பாலம் போலவே இடிந்துவிடப் போகிறது என்று கூறியுள்ளார் ஸ்மிருதி இரானி. ஆனால் அவர் சொல்ல மறந்தது, அந்தப் பாலத்தைக் கட்டிக் கொடுத்ததும் கடந்த முறையும் இடிந்து விழுந்ததைச் சரி செய்ததும் ஒரு குஜராத் கம்பெனி என்பதை. இதே நேரம் தமிழ்நாட்டில் வேறொரு முயற்சி நடைபெற்று வருகிறது. எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்பதைக் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் இங்கே எதிரியின் எதிரியைப் பிளவுபடுத்தி அழிக்கும் வேலையை பாஜக செய்ய ஆரம்பித்துள்ளது. நாம் மேலே சொன்ன எதிர்க்கட்சிகளின் முக்கியத்துவத்தை இங்கும் பொருத்திப் பார்க்கலாம். டி.டி.வி.தினகரனும் ஓ.பன்னீர்செல்வமும் புதிதாகக் கூட்டணி சேர்ந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வைக் கைப்பற்றப் போவதாகக் கூறுகிறார்கள். ஓபிஎஸ் ஏற்கெனவே பாஜக ஆதரவு மனப்பான்மை கொண்டவர். பாஜக, தான் நினைத்ததைச் சாதிக்க வசதியாக எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த நினைக்கலாம். அதன்மூலம் தற்போது உருவாக்க முயன்றுவரும், தானே பிரதான எதிர்க்கட்சி என்ற மாயத் தோற்றத்தை நிலைநிறுத்த நினைக்கலாம். தற்போதைய எதிர்க்கட்சியை ஒன்றுமில்லாமல் செய்வதற்கான விதையை பாஜக ஊன்றுகிறது. அதற்கு, அமைப்பு ரீதியாகவும் சட்டரீதியாகவும் பலவீனமானவர்கள், ஒரே இடத்திலிருந்து பிரிந்து சென்றவர்கள், நேற்றுவரை எதிரெதிராக இருந்தவர்கள், ஒருவர்மீது மற்றவர் மாறி மாறி துரோகி முத்திரை குத்தியவர்கள், திடீரென ஒன்றாகச் சேர்ந்துகொண்டு தண்ணீர் ஊற்றுகிறார்கள். இதை ஒரு கட்சியின் உட்கட்சிப் பிரச்சினையாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் அதிமுக-வின் வீழ்ச்சி தமிழ்நாட்டில் பாஜக-வின் வளர்ச்சி என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் கவலைக்குரிய விசயம் என்னவெனில், ஆளும் கட்சியான திமுகவும் பாஜகவின் இந்த முயற்சிக்கு உரம் கொடுத்து உதவுவது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. அண்ணாமலையைக் கண்டுகொள்ளாமல் விடுவதும் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை, தொழிற்கொள்கை, அதிகாரிகடம் குவிக்கப்பட்ட நிர்வாக அதிகாரம் போன்றவற்றைச் செயல்படுத்துவதில் ஒன்றிய அரசை விடவும் தீவிரம் காட்டுவதும் நமக்கு திமுகவின் மேல் ஐயத்தை ஏற்படுத்துகின்றன. கவர்னர் பதவியை ஒரு கட்சியின் தலைவர் பதவிபோல நடத்திக்கொண்டிருக்கும் போக்கு ஒரு தனி ஆவர்த்தனம். நாடு தழுவிய எதிர்ப்பு அணியில் இதன் தாக்கம் ஏதாவது இருக்குமா என்று தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில் மேற்கண்ட எதிர்க்கட்சிகள் சந்திப்பை திமுக எப்படிக் கையாளப்போகிறது என்பதையும் நாம் உற்றுநோக்க வேண்டியுள்ளது. ஆரம்பத்தில் சொன்னதுபோல் ஒரு சிட்டுக்குருவி தற்போது வல்லூறாக மாறி, மரத்தில் அமர்ந்தபடி எல்லாவற்றையும் இரையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறது. பாட்னா சந்திப்பில் எல்லாரும் சேர்ந்து வல்லூறை வீழ்த்துவதை இலக்காகக் கொள்வார்களா அல்லது வாய்ப்பைக் கைநழுவ விட்டுவிட்டு வல்லூறின் இலக்குக்கு இரையாவார்களா என்பதை வருங்காலம் நமக்கு உணர்த்தும். ஜுன் 23க்காகக் காத்திருப்போம்.

காற்றில் சிக்கிய பட்டம்

காற்றில் சிக்கிய பட்டம்

கவிதை மொட்டை மாடியில்தண்ணீர் தொட்டியின் மேல்அரை நிக்கர் போட்ட ஒரு சிறுவன்காலை மாலைகை விரலுக்கிடையே நழுவும்மணலைப்போலநேரம் மறந்துவானில் பட்டத்தைப்பறக்கவிட்டுக்கொண்டேயிருக்கிறான்இருட்டு மற்றும் வெளிச்சமெனஇரண்டு காலத்திலும்ஒரே சந்தோசமாய் எழுத்துச் சுழற்சியில் சிக்கிய எனக்குஅவன் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கிறான்காலையில்மஞ்சள் வெயில் நிறைந்தஎன் வாசல் முற்றத்தில்பட்டத்தின் கருநிழல் மட்டும்செவ்வகக் குடை விரித்தாற்போலத் தெரிந்தது நிஜத்தைவிடப் பெரிதாக அசையும்ராட்சச நிழல் கண்டுகண்கள் லயத்தில் மின்னினபட்டத்தின் நிழல்ஒரே இடத்தில் படபடத்துச் சுழன்றுதடுமாறித் தவித்ததுநான் வெளியே சென்றபோதுஎன் நிழலையோபட்டத்தின் நிழலையோகூடப்பார்க்கவில்லைஎன் வீட்டு மீட்டர் பெட்டியில்சிக்கலான அமைப்பில்சிக்கிய பட்டத்தைஆர்வத்தோடு மீட்டுஅவனிடம் காற்றில் எறிந்தேன் அந்தப் பட்டத்தில்உலக வரைபடம் இருந்ததுஅதில் இருநாட்டு எல்லைப்பகுதிவரையப்பட்ட இடத்தில் கிழிந்ததுஆம்! பட்டம் கிழிந்ததுஅச்சிறுவன் தரையில் அமர்ந்துமுதன்முறையாகபறந்த பட்டத்தைத்தலைகுனிந்து பார்க்கிறான் பட்டத்தின்பறக்கும் எதிர்காலத்தைநிர்ணயிக்கும் நூல் கண்டுசெயலற்றுக் காணப்பட்டதுஎல்லையோரக் காவலளியின்காலணியைத் தைப்பது போலகுண்டு துளைத்த ராணுவ வீரனின்காயமடைந்த உடலின் பகுதியைமருத்துவர் தைப்பது போலஅந்தப் பட்டத்தைஊசிகொண்டு தைத்துக்கொண்டிருக்கிறான் அவனிடம் நான்ஒன்று சொல்ல வேண்டும்என் காலடியில்கிழிந்த இரு நாட்டின்எல்லைப்பகுதி கிடக்கிறதுஅவன் அதைவிட்டுஇரு நாட்டையும் இணைத்துத்தைத்துவிட்டான் போலும்

‘மல்’யுத்தம்

‘மல்’யுத்தம்

‘மல்’யுத்தம் மல்லுகட்டிமல்லுகட்டிபதக்கம் வாங்கினார்கள்தேசம் கொடி அசைத்துக்குதூகலித்ததுபிரதமரோடு படம் எடுத்துமகிழ்ந்துகொண்டார்கள் மல்லுகட்டிமல்லுகட்டிகோரிக்கை வைத்தார்கள்மல்லுகட்டிமல்லுகட்டிமறுக்கிறது அதிகாரம் மல்லுகட்டிவாங்கிவந்த பதக்கங்கள்புறக்கணிப்போம் என்றாலும்மல்லுகட்டிப் பார்க்கிறதுஅதிகாரம் பல்லைக்காட்டிச் சிரிக்கிறதுசெங்கோல்

எப்போதும் தேவைப்படும்  பெரியார்

எப்போதும் தேவைப்படும் பெரியார்

பெரியார் நினைவுநாள் சிறப்புக் கட்டுரை 1931ஆம் ஆண்டில் பெரியார் ஈ.வெ.ரா. தோழர் ம.வெ. சிங்காரவேலுவை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். அவர்களுக்கிடையே 1919 முதலே தொடர்பு இருந்தாலும் குறிப்பாக பின்னாளில் ஏற்பட்ட தொடர்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மூடநம்பிக்கைகள், அதை ஒட்டிய சடங்கு சம்பிரதாயங்கள் ஆகியவற்றை வேரறுக்க விரும்பிய ஈ.வெ.ரா. அதற்கான சரியான மனிதர் சிங்காரவேலு என்பதைக் கண்டறிந்தார். ஒரு துறையில் மட்டுமல்ல, பல துறைகளிலும் அறிஞராகத் திகழ்ந்த சிங்காரவேலுவே அதற்குச் சரியானவர் என நினைத்தார்; மதித்தார். அறிவியல் அறிவு பெரிதும் இல்லாத அந்தக் காலத்தில் விஞ்ஞானம் தொடர்பான புத்தகங்களைப் படித்ததுடன் கட்டுரையும் எழுதி மக்களுக்கு அறிவுறுத்தி வந்த சிங்காரவேலுவைப் பெரியார் பயன்படுத்திக்கொண்டார். ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்ற பன்மொழி அறிஞரான சிங்காரவேலுவின் பன்மொழி அறிவைத் தமது பணிக்குப் பயன்படுத்திக்கொண்டார் பெரியார்.பெரியாரின் வேண்டுகோளுக்கிணங்க கடவுளைப்பற்றியும் சாதி மதங்களைச் சாடியும் அறிவியல் ரீதியான கட்டுரைகளை பெரியாரின் குடியரசு, புரட்சி, பகுத்தறிவு ஆகிய பத்திரிகைகளில் எழுதினார். பெரியாருக்கு உவப்பான இப்பணி 1931 முதல் 1935 வரை சிறப்பாக நடைபெற்றது. சிங்காரவேலின் தொடர்பால் பெரியார் முழுக்க முழுக்கப் பொதுவுடமைக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தார். இதற்கு முழு முதல் காரணம் தோழர் சிங்காரவேலு. தந்தை பெரியார் ரஷ்யாவுக்குப் போய்விட்டு இந்தியா திரும்பிய பிறகு சுயமரியாதை சமதர்ம இயக்கத்தைத் தொடங்கினார். கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டார். செல்லுமிடமெல்லாம் குழந்தைகளுக்கு லெனின், ஸ்டாலின், மார்க்ஸ், மாஸ்கோ, ரஷ்யா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார. இவருடன் சேர்ந்து தோழர்கள் ஜீவா, கிசன் போன்றவர்கள் இயங்கி வந்தனர். ஈ. வெ. ராமசாமி நாயக்கர் என்று அறியப்பட்டவர் 1927ஆம் ஆண்டிலேயே நாயக்கர் என்ற சாதிப் பெயரைப் புறக்கணித்துப் புறம் தள்ளினார். இவரைப் பெரியார் என்று முதலில் அழைத்தவர் சுயமரியாதை இயக்கத்தின் முக்கியமானவர்களின் ஒருவரான வழக்கறிஞர் நாகர்கோயில் பி. சி. சிதம்பரம் பிள்ளை ஆவார். அவர் தென்னிந்திய திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஐந்தாவது நிர்வாகியாவார். 1930களில் அவர் எழுதிய ஆலயப் பிரவேசம் என்ற ஆங்கில நூல் பின்னால் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. அந்நூலுக்கு அணிந்துரை எழுதியவர் பெரியார். பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம் பெண்கள் உரிமைகள் பற்றி மிக விரிவாகப் பேசியது. மதம் எவ்வாறு பெண்களை ஒடுக்குமுறைக்கு ஆளாக்குகிறது, மதச் சடங்குகள் ஏன் பெண்கள் மீது வலிந்து திணிக்கப்படுகின்றன, சாதியின் கூறுகளும் அதில் எவ்வாறு சேர்ந்தே பங்களிக்கின்றன என்பதையெல்லாம் விளக்கி 1929இல் செங்கல்பட்டில் நடந்த இயக்கத்தின் முதல் மாநாட்டில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்களில் முக்கியமான ஒன்று பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்கவேண்டும் என்பதாகும். எலியின் விடுதலைக்குப் பூனைகள் எங்காவது முயற்சி செய்யுமா? என்று வேடிக்கையாகப் பெரியார் குறிப்பிட்டு, பெண்களின் விடுதலைக்காக ஆண்கள் பேசுவதைவிடத் தங்கள் விடுதலைக்காக, சுயமரியாதைக்காக பெண்களே முன் நின்று உழைப்பதே சிறந்தது என்பார். 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் முற்போக்குப் பெண்கள் சங்க மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டை மீனாம்பாள் சிவராஜ் கொடியேற்றித் தொடங்கி வைக்க, நீலாம்பிகை அம்மையார் தலைமை உரை நிகழ்த்தினார். அந்த நிகழ்வின்போது ஈ.வெ.ரா.வுக்கு வழங்கப்பட்ட பட்டம்தான் பெரியார். அந்தப் பட்டத்தை அவர் மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். தம் வாழ்நாளில் தாம் எப்போதாவது அமைச்சராக நேர்ந்தால் பெண்களின் கல்விக்காக மட்டுமே பணத்தைச் செலவழிப்பேன் என்று பேசியுள்ளார். ஆனால் ஆட்சி அதிகாரத்தில் தன் வாழ்நாளில் அவர் பங்கேற்கவில்லை. பெண் ஏன் அடிமையானாள் ? என்ற புரட்சிகரமான நூலில் பெரியார் கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும், கற்புக்காகக் கணவனின் மிருகச் செயலைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிற கொடுமையான மதங்கள், சட்டங்கள் மாற வேண்டும். கற்புக்காக மனதில் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்ற சமூகக் கொடுமை அழிய வேண்டும் என்று தெளிவாகவும் அழுத்தமாகவும் வலியுறுத்துகிறார். தமிழ்மீது தீராக் காதல் கொண்ட பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியதை நாம் தவறாகவே புரிந்து கொண்டிருக்கிறோம். எனக்கு தமிழ் பாஷையிடம் எவ்விதப் பற்றுமில்லை; மிகப் பழைய பாஷை, சிவபெருமான் பேசிய பாஷை என்பதற்காகவோ அகஸ்தியரால் உண்டாக்கப்பட்ட பாஷை என்பதற்காகவோ எனக்கு அதில் பற்று இல்லை. நான் எதிர்பார்க்கும் நன்மையும் அது மறைய நேர்ந்தால் அதனால் நஷ்டம் ஏற்படும் அளவையும் உத்தேசித்தே நான் தமிழிடம் அன்பு செலுத்துகிறேன் என்கிறார். விஞ்ஞானப் பெருவெளியில் உலகம் விரிந்து விரைந்து கொண்டிருக்க தமிழைப் பிற்போக்குப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக்கொள்ள பெரியார் விரும்பவில்லை. துருப்பிடித்த கருத்துக்களைத் துடைத்து வைத்துக் கொண்டிருப்பதா தமிழ்? எல்லாவற்றையும் சொல்லி முடித்தாகிவிட்டது என்று முற்றுப்புள்ளி வைப்பதற்கா தமிழ்? பக்தியைக் கழித்துவிட்டால் தமிழில் என்ன இருக்கிறது? இந்தப் பழஞ்சரக்கை வைத்துக்கொண்டு உலகச் சந்தையில் எப்படி நிற்பது, விற்பது என்ற அறிவுத் துயரத்தால்தான் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று பெரியார் கூறினார். ஆங்கில வாசனையே இல்லாது வெறும் தமிழ் வித்வான்களாக, தமிழ்ப் புலவராக இருக்க நேர்ந்துவிட்டால் அவர்கள் உலகம் அறியாப் பாமரர்களாகவே இருப்பார்கள். தமிழ் மொழி மூவாயிரம், நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி என்பதைத் தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டுமிராண்டி மொழி என்பதற்கு அதைத்தானே முக்கியக் காரணமாக கூறுகிறேன் என்றார். எழுத்து, சொல், கருத்து, அறிவு, பயன்பாடு, படைப்பிலக்கியம் போன்றவற்றைக் காலந்தோறும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அப்படி புதுப்பித்துக்கொள்ளாத மொழி காட்டுமிராண்டி மொழிப் பட்டியலில் சேர்ந்து விடுமே என்று கவலை கொண்டார். தமிழ் எழுத்துக்கள் ஒலி வடிவம் சார்ந்தவை. 247 ஒலி வடிவங்களோடு வழங்கி வரும் தமிழ், எழுத்துக்கள் மிகுதியான ஒரு மொழி என்பதால் கற்பதற்குக் கடினம். அறிவியல் கருவிகளில் ஏறுவதற்கு இடர்ப்படுகிறது. சுமைகள் குறைந்த பயணம் எளிதாக இருப்பது போல எழுத்துக்கள் குறைந்த மொழி, பறவைப் பாய்ச்சலில் பயணம் ஆகலாம். தமிழில் 247 ஒலி வடிவங்களை 131ஆகக் குறைத்த பெருமைக்குரிய பெரியார் குடியரசு, பகுத்தறிவு, விடுதலை, உண்மை ஆகிய தமது பத்திரிகைகளில் சீர்திருத்த எழுத்துக்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வந்தார். பண்டிதர்களோ பல்கலைக்கழகமோ செய்யத் துணியாத இந்தச் சீர்திருத்தத்தைச் செய்தவர் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்காத பாமர மேதை பெரியார். பல துறைகளில் தடம் பதித்த பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள் மூன்று மாதங்கள் 7 நாட்கள். 8200 நாட்களை சுற்றுப்பயணத்திற்குச் செலவிட்டார். அது 8 லட்சத்து 20ஆயிரம் மைல்கள் பயணத்திற்குச் சமமாகும். அதாவது பூமியின் சுற்றளவைப் போல 33 மடங்கு சுற்றி வந்ததற்கு ஈடாகும். 21,400 மணி நேரம் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளை ஒலிப்பதிவு செய்து ஓட விட்டால் இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதங்கள் பதினோரு நாட்கள் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும். இயற்கை நமக்குத் தேவைப்படுவதுபோல எப்போதும் நமக்குத் தேவைப்படுபவர் பெரியார். தமிழ்வெளியில் பெரியார் என்ற பெயர் என்றும் நிலைத்து நிற்கும்.

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா?

மனிதர்களை அடிமைப்படுத்தி, சந்தையில் அவர்களை நிறுத்தி விற்பனை செய்த வரலாறுகளைப் படித்திருக்கிறோம். கிளர்ந்தெழுந்த அடிமைகள் கொடூரமாக ஒடுக்கப்பட்ட கதைகளைப் பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அடிமை வணிகங்கள் இல்லாததாக இன்றைய உலகம் மாறிவிட்டது என்று நிம்மதியாகப் பெருமைப்படுகிறோம். ஆனால் உண்மையில் அடிமை வணிகம் ஒழிந்துவிட்டதா? நவீன காலத்து அடிமைமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பு பதிவு செய்திருக்கிறது. பாலியல் தொழில், கொத்தடிமை, கட்டாயப்படுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர் முறை இவற்றில் குறைந்தது 4 கோடிப் பேர் சிக்கியிருக்கிறார்கள். நாடுவிட்டு நாடு மட்டுமல்லாமல் ஒரு நாட்டுக்குள்ளேயே மனிதக் கடத்தல் நடக்கிறது. இவற்றுக்காக மனிதர்கள் கடத்தப்படுவதில் பல லட்சம் கோடி ரூபாய் புழங்குகிறது. உலக அளவில் சுமார் 12.16 லட்சம் கோடி ரூபாய் லாபம் குவிக்கப்படுகிறது. உழைப்புச் சுரண்டல், பாலியல் வன்மம் மட்டுமின்றி இவர்கள் அனுபவிக்கிற உடல் நோய்கள் உள்ளிட்ட துயரங்களும் அவமதிப்புகளும் ஏராளம். மக்கள்தொகையில் மிகச் சிறுபான்மையாக இருக்கக்கூடிய பழங்குடியினர், பூர்வ குடியினர், ஒதுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட, வஞ்சகங்களுக்கு எளிதில் இரையாகக்கூடிய மக்கள் நவீன அடிமை வலையில் சிக்க வைக்கப்படுகிறார்கள். குழந்தைகள், பெண்கள், மனநலம் குன்றியோர், உடல் ஊனங்களுக்கு உள்ளானோர் போன்ற எதிர்த்துநிற்க முடியாதவர்கள் வலுக்கட்டாயமாகவோ, பணத்தைக் காட்டியோ, சூழ்ச்சி செய்தோ கடத்தப்படுகிறார்கள். குழந்தைகளில் நான்குக்கு ஒரு குழந்தை வீதம் கடத்தப்படுகிற தகவல் நெஞ்சை உறைய வைக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? அடிமைத்தனத்தை ஒழிப்பது என்பது அ, டி, மை என்ற மூன்று எழுத்துக்களை அழிப்பதல்ல. நவீன அடிமைத்தனத்தை ஒழிக்கச் செயல்படுவோம். அவ்வாறு செயல்படுகிறவர்களோடு சேர்ந்தாவது நிற்போம். இந்தத் தகவல்களை சக மனிதர்களுக்குச் சொல்வோம். நவீன பொருளாதார அடியாட்களான அரசாங்கங்களின் கொள்கைகளும் பாராமுகங்களும் இதற்கொரு காரணம் என்பதையும் சேர்த்தே சொல்வோம். அழகுக்கு அடிமை, அன்புக்கு அடிமை, கவிதைக்கு அடிமை, காதலுக்கு அடிமை… என்பதாகவெல்லாம் உணர்ச்சி மிகுந்து பேசுவோமே, அதை நிறுத்திக்கொள்வோம். எதற்காகவும் யாரும் யாருக்கும் அடிமையாவதை மறுப்போம். இன்று (டிசம்பர் 2) உலக அடிமைத்தன ஒழிப்பு தினம்.

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

கப்பலால் கவிழ்ந்த கலங்கரை விளக்கு

வ. உ. சி. நினைவுநாளில் அவர் புகழ் பாடும் கவிதை நிலம் மட்டும் அல்லநீரும் எமது உரிமை எனகடலிலும் நீசுதந்திரக் கொடிபறக்கவிட்டாய் கப்பல் ஓட்டிய உன் கம்பீரம்இன்னும் பட்டொளி வீசிப்பறக்கிறது பாரெங்கும் நீதிமன்றத்தில் மட்டும்வழக்காடி வாழ்ந்திருந்தால்கப்பல் கப்பலாய் நீபொருள் ஈட்டியிருக்கலாம் மக்கள் மன்றம் வந்துஉரிமைக் குரல் கொடுத்ததால்நீதிமன்றம் கொண்டுபோய்நிறுத்தினார்கள் உன்னை ஆம்…வழக்கறிஞராகப் போகவேண்டியநீதிமன்றத்துக்குகுற்றவாளியாகக் கொண்டு போய்நிறுத்தியது காலம் கண்ணை மூடிக்கொண்டுதண்டனையும் கொடுத்தாள்அன்று கோலோச்சியஆங்கில நீதி தேவதை நீதி தேவதையா?அநீதி தேவதையானஅவள் வழங்கியதோஇரட்டை தீவாந்திரம் அத்தோடு மூழ்கியதுஉன் வாழ்க்கைக் கப்பல் முள்ளை முள்ளால்தான்எடுக்க வேண்டும் என்பதால்கப்பலில் வந்த வெள்ளையனைகப்பலோட்டியே கப்பலேற்றலாம்என நீ நினைத்தாய் சட்டம் படித்த உன் நெஞ்சில்இருந்தது நீதிஅதனால் உன் முள் கூடதராசு முள்ளாகத்தான் இருந்தது வணிகம் செய்ய வந்துஆட்சியைப் பிடித்தவெள்ளையன் வைத்திருந்ததோவிஷம் தடவிய முள் ஆயுள் தண்டனை விதித்துசிறையில் அடைத்துஉன் சிறகுகளைப் பிய்த்து எறிந்ததுஆங்கில ஏகாதிபத்தியம் செக்கிழுத்து செக்கிழுத்துசிறையிலேயே நீசிதைந்து போனாய் விடுதலை அடைந்து வெளியே வந்ததும்உன் துடுப்புகளையும்உடைத்துப் போட்டதுஎமது அலட்சியம் ஏற்கனவே உடல் தேய்ந்திருந்த நீஅதனால் உள்ளமும்ஓய்ந்து போனாய் அடியோடு வீழ்ந்துபோனதுஅரசோடு போட்டி போட்ட உன்அகண்ட பொருளாதாரம் அன்றாட வாழ்க்கைக்கேதள்ளாடும் நிலைக்குப் போனதுஉன் வாழ்வாதாரம் பின் உயிர் வாழ்ந்த நாளெல்லாம்கொடும் வெயிலானதுகடன்காரர்கள் பட்டியலேஉன் உயிலானது கடிதம் எழுதி எழுதியேகாலாவதி ஆனதுன் காலம் கணக்குப் பார்த்தாதீர்க்க முடியும் உன் தியாகத்தை? கடலில் கரைத்த பெருங்காயமானதுஉன் தியாகம்கண்ணீராலும் ஆறாத பெருங்காயமானதுஎங்கள் இயலாமை காந்தி கணக்கானதுஉன் வாழ்வு மன்னிக்கச் சொல்லிஉன் முன் மன்றாடுவதன்றிவேறொன்று தோன்றவில்லை எனக்கு இவ்வளவு நெருக்கடிகளுக்கிடையேஎப்படி உனக்குள்அப்படி ஒரு இலக்கிய தாகம்? கடலையே குடித்துவிடுவதுபோல்எழுதித் தள்ளியிருக்கிறாய்! பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தாய்ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தாய்கவிதை எழுதினாய்உரை எழுதினாய்சிறையிலும் எழுதினாய் எங்கள் பாரதியின் தோழனேஉன்னை எழுதாமல் இன்று நான்வேறு யாரை எழுதிஎன்ன பயன்? கப்பலால் கவிழ்ந்தகலங்கரை விளக்கேஒன்றை மட்டும் யாரும்மறைக்கமுடியாது எங்கே எப்போதுகப்பலைப் பார்த்தாலும்உன் ஞாபகம்தான்எங்கள் நெஞ்சில் எழுகிறது ஏனெனில்தேசத்தின் முதல் சுதந்திரக் கப்பல்உன்னுடையதல்லவா?அதில் பட்டொளி வீசிப் பறந்ததுஇந்த மண்ணின் மானம் அல்லவா? அதிகாரத்துக்கு அஞ்சாமல்நெஞ்சு நிமிர்த்திய வீரனேசட்டத்தால் போராடிய சூரனே சதி காரத்தால் நீ வீழ்ந்திருந்தாலும்இந்திய விடுதலை வரலாற்றில்என்றென்றும் ஒளிவீசும் அத்தியாயம்உன் சரித்திரம் காலக் கடலில் கரைந்து போகும்எத்தனையோ மனித வாழ்க்கையில்என்றென்றும் கரையாமல் வாழும்கப்பல் ஓட்டிய உன் கம்பீரம் இந்தியப் பெருங்கடல் அலைகள்உன் பெயரை ஓயாமல்பாடிக்கொண்டே இருக்கும் எங்கள் நெஞ்சின் அலைகளும்.

ஒரு தேசியக் குடும்பம்

ஒரு தேசியக் குடும்பம்

விடியுமா? நூல் அறிமுகம் 1942. பூர்ணியா மத்தியச் சிறைச்சாலையில் மூன்றாம் வகுப்பு கைதியான (கைதி எண் 1109), முப்பத்தி மூன்று வயது “பூர்ணா” எனும் பீலி பாபுவிற்கு நாளை வைகறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. பீலிக்கு இத்தண்டனை கிடைக்கக் காரணமானவன், நீதிமன்றத்தில் அவனுக்கு எதிராய் சாட்சி சொன்ன அவன் மிகவும் நேசிக்கும் அவனின் அருமைத் தம்பி “நீலு”. பீலு, நீலுவின் பெற்றோர்களும் அதே சிறையில்தான் இருக்கிறார்கள். பூர்ணியா அரசுப்பள்ளியின் முன்னால் தலைமையாசிரியரான அவர்களின் அப்பா “மாஸ்டர் ஸாஹப்” ஸன்யால், சிறையின் முதல் வகுப்பு வார்டில் இருக்கிறார். அம்மா பெண்கள் வார்டில். நீலு இப்போது அவன் பெரியம்மா வீட்டில் தங்கியிருக்கிறான். அண்ணன் பீலு ஒரு காங்கிரஸ் சோஷியலிஸ்ட். தம்பி நீலு ஒரு கம்யூனிஸ்ட். அவர்களின் பெற்றோர் முதிர்ந்த காங்கிரஸ்வாதிகள்; காந்தியை தெய்வமாகத் தொழுபவர்கள். அப்பா ஸன்யால், பீலு, நீலு சிறுவர்களாயிருக்கும்போது தன் தலைமையாசிரியர் வேலையை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தவர் (அவரின் அந்த முடிவு தவறென்று அவரின் நெருக்கமான உறவினர்கள் சிலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஸன்யால், காங்கிரஸில் சேருவதான தன் முடிவிற்கு தன் மனையிடம் மட்டும்தான் சம்மதம் கேட்கிறார்). பீலுவும், நீலுவும் சிறுவர்களாக இருந்தபோது/வளர்பருவத்தில் காங்கிரஸ் அபிமானிகள்தான். பீலு சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று காந்தியை ஒருமுறை சந்தித்திருக்கிறான். ஆனால் வளர வளர பீலுவிற்கும், நீலுவிற்கும் அவர்களின் அரசியல் நோக்குகளில் மாற்றம் உண்டாகிறது. ஆகஸ்ட் 8, 1942 – பாம்பேயின் “கோவாலியா டேங்க்” மைதானத்தில் காந்தி அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் முழக்கத்தை அறிவிக்கிறார். அதன்பின்பு… பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளின் வங்க நாவல்களையும், எழுத்தாளர்களையும், அவர்களின் பாணிகளையும் அருமையாக அலசி அவ்வரலாற்றில் ஸதீநாத்தின் ஜாகரி (விடியுமா?) எங்கு அமர்கிறது, அதன் தனித்துவம் என்னென்ன என்பதைப் பிரமாதமான முன்னுரையாகக் கொடுத்திருக்கிறார் ஸரோஜ் பந்தோபாத்யாய. முன்னுரையிலிருந்து…ஸதீநாத் பாதுரியின் ஜாகரி வங்காள அரசியல் நாவல், இலக்கியத்துக்கு ஒரு புதுப் பரிமாணம் கொடுத்துள்ளது. 1942-ம் ஆண்டிலேயே பாரத அரசியல் விழிப்புணர்வின் ஒருமை சிதறி, வேற்றுமைகள் தனித்துவம் பெற்று வளர ஆரம்பித்துவிட்டன. காங்கிரஸ் இசைத்து வந்த கோஷ்டிகான அமைப்பில், சி.எஸ்.பி, அதாவது காங்கிரஸ் ஷோசியலிஸ்ட் பார்ட்டி, கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆகியோர் தங்கள் தனி ஸ்வரங்களை மீட்ட ஆரம்பித்துவிட்டனர். ஆகஸ்ட் இயக்கத்தின் உசிதத்தைப் பற்றியே காங்கிரஸுக்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் கடும் கருத்து மோதல்கள் எழுந்தன. காங்கிரஸுக்கும் சி.எஸ்.பி.க்கும் இடையே இயக்கத்தின் கதிவிதிகளைப் பற்றிப் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஜாகரி-யில் வர்ணிக்கப்படும் மாஸ்டர் ஸாகிப்பின் குடும்பம் அன்றைய அரசியல் சூழலின் ஒரு நுணுக்க ஓவியமாக அமைந்திருக்கிறது. முந்தைய நாள் மாலையிலிருந்து பீலு தூக்கிலிடப்படப் போகும் அடுத்த நாள் விடிகாலை வரையிலான பத்து/பனிரெண்டு மணி நேரங்கள்தான் முழு நாவலுமே. சிறையிலிருக்கும் அம்மா, அப்பா, பீலு, தூக்கிற்குப் பின் அண்ணன் பீலுவின் உடலை வாங்கிச்செல்ல அந்த இரவில் சிறையின் கேட்டருகே காத்திருக்கும் நீலு, ஆகிய நால்வரின் நினைவோடையாக நாவல் விரிகிறது. அருமையான நாவல்! அற்புதமான மொழிபெயர்ப்பு! நிறைவான வாசிப்பின்பம்! சிறிதும் வாசிப்பின் வேகம் குறைக்காத அபாரமான சுவாரஸ்யமான எழுத்து!. நிகழ்வுக்கும் நினைவுகளுக்கும் இயல்பாய் வழுக்கி மாறும் அந்த லாவகம் அபாரம்! முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே வெளிவந்த நாவலின் தனித்துவமான அந்த உத்தியும், துளியும் செயற்கையற்ற இயல்பான அதன் நடையும், கையாளப்பட்ட விஷயங்களின் புதுமைத் தன்மையும், சமூக அக்கறைகளும், எழுப்பிக்கொள்ளும் வினாக்களின் வழியே இழைந்தோடும் மனிதமும், அக்காலகட்டத்தின் உண்மை பொலியும் யதார்த்தச் சித்திரமும் மனதை வெகுவாக வசீகரித்தன. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் இந்தியாவில் 1942 ஆகஸ்ட் கிராந்தி இயக்கத்தின் (வெள்ளையனே வெளியேறு) கொந்தளிப்பான காலகட்டத்தில், அந்த அரசியல் சூழல் ஒரு தேசியக் குடும்பத்தை எங்கனம் அலைக்கழித்தது என்பதை ஆழமாகப் பேசுகிறது நாவல். நாற்பதுகளின் இந்திய அரசியல் சூழலை நுண்ணி அறிய விரும்பும் இலக்கிய வாசகர்களும், வரலாற்றாய்வில் விருப்பமானவர்களும் தவறவிடக் கூடாத முக்கியமான நாவல் விடியுமா? நாற்பதுகளின் சமூக அரசியல் சூழல் நாவலில் ஆழமாய் அறியக் கிடைக்கிறது. சிறைச்சாலை நடவடிக்கைகளும், அக்காலத்தில் சிறைகளின் இயங்கு முறைகளும், சிறைச்சாலையின் உட்புறக் கட்டமைப்பும், அதிகாரப் படிகளும், கைதிகளின் அன்றாடங்களும், பல்வகைக் கைதிகளின் மனோநிலைகளும் நடவடிக்கைகளும் நாவலில் நுணுக்கமாய் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. தன் பதினான்கு வருட சிறை வாசத்திற்குப் பின் ஹஸாரிபாக் ஜெயிலிலிருந்து விடுதலையாகும் ஆங்கிலோ இந்தியன் வில்லியம்ஸ், ஜெயிலில் தான் நட்டு வளர்த்த கொய்யா மரத்தையும், ஜாமூன் மரத்தையும், அசோக மரத்தடியில் தான் கட்டிய மேடையையும் பார்த்து விம்மி விம்மி அழுகிறான். முன்னுரையில் ஸரோஜ் குறிப்பிடுவது போல் விடியுமா?-வின் மூலப்பொருள் கட்சித் தொண்டனல்ல – மனிதன். விடியுமா? – ஸதீநாத் பாதுரிவங்க நாவல்; மூலம்: Jagari 1945தமிழில்: என்.எஸ். ஜகந்நாதன்நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடு

எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்

எழுவர் விடுதலையும் விதை போட்டவரும்

ராஜீவ் கொலை வழக்கில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்த எழுவரும் இன்று (11.11.2022) உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு போன்றவற்றில் நம்மைப் பின்னோக்கி இழுக்கும் அதே நீதிமன்றம், இப்படியான தீர்ப்புகளையும் அவ்வப்போது வழங்குவதே நமக்கான ஆறுதலாகவும் நீதிமன்றத்தின் மீதான பிடிப்பாகவும் இன்னும் நீடிக்கிறது. எழுவர் விடுதலையின் கிரெடிட்டை எடுத்துக்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், அவற்றின் தலைவர்கள், தனி நபர்கள் இப்படி ஏராளனமானோர் வரிசையில் இருக்கிறார்கள். ஆனாலும்கூட, இந்த விடுதலைக்கு – தீர்ப்புக்கு ஒட்டுமொத்தமாக எவரொருவரும் உரிமை கோர முடியாது. இருப்பினும், எந்த ஒன்றுக்கும் தொடக்கப்புள்ளி என்ற ஒன்று வேண்டுமல்லவா? ஒரு கட்டடம் கட்ட முதல் கல், ஒரு கோலம் போட முதல் புள்ளி, ஒரு காடு வளர்க்க முதல் விதை.. இந்த வரிசையில், எழுவர் விடுதலைக்கு முதல் விதை போட்டவர் யார்? ஒருவேளை,  பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவருக்குத் தூக்கு உறுதி செய்யப்படாமல், அவர்களின் கருணை மனு ஜனாதிபதியால் ஏற்கப்பட்டிருந்தால், அவர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டிருந்தால், இந்த ஏழு பேரும் வாழ்நாள் முழுக்க சிறையிலே கிடந்துக்கூட மரணம் எய்தியிருக்கக்கூடும். ஆனால், கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, மூவரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்ட நிலையில், மீண்டும் நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டி, ராம் ஜெத்மலானியை அழைத்துவந்து வாதாடி, அவர்கள் தூக்கிலிடப்படுவதைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் நீண்ட நெடிய சட்டப் போராட்டங்கள் நடத்தி, உச்சநீதிமன்றத்தின் வழியே நிரந்தரமாக அவர்களின் தூக்குக் கயிற்றை அறுத்தெறிந்தவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ. மூவரின் தூக்கை ரத்து செய்து தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அவர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்யும் முடிவையும் மாநில அரசே எடுக்கலாம் என்றும் கூறியது. அந்தத் தீர்ப்புதான்  பேரறிவாளன் முதலான எழுவரின் விடுதலைக்கு அடித்தளம் அமைத்துத் தந்தது. அந்தத் தீர்ப்பை முன்வைத்துதான் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானங்கள் இயற்றப்பட்டன; அமைச்சரவை கூடி முடிவெடுத்து ஆளுநருக்கு அனுப்பியது. அம்முடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருந்ததால்தான், இன்றைய தீர்ப்பில், ஆளுநர் தன் கடமையைச் செய்யத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அதை முன்வைத்தே இன்று அறுவர் விடுதலை பெற்றுள்ளனர். இதில் இன்னொரு கூடுதல் மகிழ்ச்சியாக, மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் விதமாக, சட்டமன்றமும் அமைச்சரவையும் எடுக்கும் முடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல், சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்ளும் ஆளுநர்களுக்கும் உச்சநீதிமன்றம் குட்டு வைத்துள்ளது. இந்தத் தீர்ப்பு, மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் ஆளுநர்களின் செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி மட்டுமன்று. எதிர்காலத்தில் எந்த ஒரு ஆளுநரும் இவ்வாறு நடந்துகொண்டால், அதை முறியடிக்க உதவும் வழிகாட்டுதலாகவும் அமைந்துள்ளது. கருணை மனு நிராகரிக்கப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டப் போராட்டங்களுமே இன்றைய விடுதலையைச் சாத்தியப்படுத்தியுள்ளன. நளினியின் தாயார் தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிட்டதைப் போல, இந்த விடுதலையானது ஒரு கூட்டு முயற்சியே. அந்த முயற்சியில் மேலே குறிப்பிட்டதைப்போல, பல்வேறு கட்சிகள், அமைப்புகள், தலைவர்கள், வழக்கறிஞர்கள், பொருளாதார ரீதியாகவும் தார்மீக அடிப்படையிலும் உதவியவர்கள் என்று அனைவரின் பங்களிப்பும் உள்ளது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடியவர்கள் விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. மூவர் தூக்கை எதிர்த்து மீண்டும் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறியதன் வழியே, ‘இன்றைய மகிழ்ச்சிக்கான விதையை அன்றே ஊன்றியவர் வைகோ’ என்பதை யாரும் மறுத்துவிட முடியாது என்பதே உண்மை, தேவர் மகன் திரைப்படத்தில், “நாளைக்கு நீ பழம் சாப்பிடுவ; பிறகு உன் மகன் சாப்பிடுவான், அதன்பிறகு அவன் மகன் சாப்பிடுவான். ஆனா விதை.. நான் போட்டது” என்று சொல்வாரே அதைப் போல.   

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வ. உ. சி. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’என்று மகாகவி பாரதி தன் கவிதையில் வ.உ.சி.யின் சிறைக் கொடுமையைப் பதிவு செய்திருக்கிறான். சமகால விடுதலை இயக்கத் தலைவனுக்குத் தமிழால் சாகாவரம் தருகிறான். அது மட்டுமல்ல, ‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்மன்னனென மீண்டான் என்றேகேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மைக் கோவே!’என்று வ.உ.சி.க்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஆறுதலாக உரைக்கின்றான். தேசத்தின் விடுதலை இயக்க வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்ற கருதுகோள், கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் மட்டுமல்ல, இந்திய தேசிய காங்கிரஸ் காலத்தில் திலகர் யுகத்திலும், தொடர்ந்த காந்தி யுகத்திலும், எம் தமிழ்நிலத்தின் பங்கே பிரதானமாக இருந்ததில் நிலை கொண்டுள்ளது.  அது இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற இந்தத் தியாகத் திருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் (1872-1936) வரலாற்றால் தவிர்க்க முடியாத நிரந்தரமான சான்றாக அமைந்து விடுகிறது. செப்டெம்பர் 5 என்றால் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களோடு, வ.உ.சி. பிறந்தநாள் என்பதால் அவர் பற்றியும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறியத் தருதல் வேண்டும். வ.உ.சி.யும் பாரதியும் மனமொப்பிய நண்பர்கள். அவர்கள் நட்பை ஆராய்கிற பாங்கில் ‘நான் கண்ட பாரதி’ என்று சிறு நூலை வ. உ. சி. எழுதியிருக்கிறார். பாரதி சுதேசிய இயக்கப் பரப்புரையாளன். தூத்துக்குடி செய்திகளைத் தனது ‘இந்தியா’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதுகிறான். வ.உ.சி.யின் 151-வது பிறந்த நாளில் அந்தச் செய்திகளைப் பகிர விரும்புகிறேன். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று, சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882-ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி எண் 85, கிரேட் காட்டன் சாலை, தூத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பதிவு எண் 13 of 1906. அதற்கு முன்பு, ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற பெயரில் பம்பாய் ஷலைன் ஸ்டீம் கப்பல்  கம்பெனியாரிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு வாங்கி இயக்கி வந்தனர். ஆங்கில அரசாங்கம் வெள்ளைக்காரர் கப்பல் கம்பெனிகளுக்குச் சார்பாக இருந்து, சுதேசிய கம்பெனி கப்பல்களுக்கு இடையூறு விளைவித்தனர். 1906 ஜூலை 7-ஆம் தேதியிட்ட ‘இந்தியா’ இதழில், ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற தலைப்பில் நிருபர் செய்தி என்ற கோதாவில் பாரதி தருகிற செய்தியின் சாரம்: தூத்துக்குடியிலே அஸிஸ்டெண்ட் போலீஸ் தலைவர் மிஸ்டர் ராமசாமி நாயுடு, ஸ்டேஷன் ஆபீஸர் குருநாதய்யர், இருவரும் மாதக் கணக்கில் விடுப்பு கேட்கிறார்களாம். ஏன்? அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி நாயுடுவும் சப் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் மோஹிதீன் கான் லோடி என்பவரும் வேறு ஊருக்குப் பணி மாறுதல் கேட்கிறார்களாம். அதுவும் ஏன்? தூத்துக்குடி அஸிஸ்டெண்ட் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் வாலர் என்பவர் வெள்ளைக் கப்பல் கம்பெனி பக்கம் சேர்ந்து கொண்டு, சுதேசிக் கப்பல் கம்பெனிக்குத் தொந்தரவு கொடுக்கிறாராம். அதனால் மேற்படி அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்ய முடியவில்லையாம். இதையெல்லாம் சொல்லிவிட்டு மேற்படி அதிகாரிகள் வாலருக்கு அஞ்சிவிடாமல் தாம் நியாயமாகப் பணிபுரிய வேண்டும் என்று அறிவூட்டுகிறார் அந்த நிருபர். மீண்டும் ஜூலை 21 இதழில் மிஸ்டர் வாலரின் சுதேசிக் கம்பெனிக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவாக எழுதுகிறார் பாரதி. ஆகஸ்டு 11 இதழில் ‘தூத்துக்குடியில் சுதேசியம்’ என்ற தலைப்பில், சுதேசிய முயற்சிகள் பலப்பட்டு வருவதை எழுதுகிறார். அதே இதழில், தென் இந்திய இரயில்வே கம்பெனியார் வெள்ளைக் கப்பல் கம்பெனியில் வர்த்தகம் செய்ய வரும் வணிகர்களுக்குக் கட்டணச் சலுகை அளித்திருப்பதை எழுதி, சீர்காழி வர்த்தகர்கள் இந்த வெள்ளைக் கம்பெனிகளின் கூட்டுச் சதியில் ஏமாறாமல் சுதேசிக் கம்பெனியுடனேயே வர்த்தகம் நடத்தியிருப்பதைப் பாராட்டுகிறார் பாரதி. செப்டெம்பர் 11 இதழில் புதிய கப்பல் கம்பெனி கனவு நிறைவேறப் போவதைத் தெரிவிக்கிறார். இந்தப் ‘புதிய சுதேசிய புகைக் கப்பல் கம்பெனி’யின் பாகஸ்தர்கள் லீகல் அட்வைசர்கள் காரியதரிசிகள் யார் யார்? என்றெல்லாம் விரிவான விவரங்களைத் தருகிறார் பாரதி. தூத்துக்குடி சுதேசிய இயக்கத்தில் வ.உ.சி.தலைவன் என்றால் பாரதி மகத்தான பரப்புரையாளன். செப்டெம்பர் 5-இல் வ.உ.சி.க்குப் பிறந்த நாள் வருகிறதென்றால், செப்டெம்பர் 11 பாரதியின் நினைவுநாள் ஆகும். இருவரையும் நினைவு கூர்வோம். இரா.கோமதிசங்கர், திருநெல்வேலி

பதவி வாங்கும் கருவி

பதவி வாங்கும் கருவி

கவிஞர் பொன்மணிதாசன் கவிதை பெட்டியிலே பணமிருக்கும்பேருசொல்ல ஆளிருக்கும்வட்டிக்கென்று சென்றபணம்வளர்ச்சியிலே தானிருக்கும் ஒட்டிசில உறவிருக்கும்உறவினிலும் முரணிருக்கும்அட்டியிலை பெற்றப்பேருஆகாசம் தொட்டிருக்கும்! வீட்டுக்கே சாமிவரும்வீராப்பு பேசவரும்ஓட்டுக்கு பணங்கொடுத்தால்ஓடோடிப் பதவிவரும் மாட்டுக்கும் மரியாதைமறக்காமல் தேடிவரும்நாட்டுக்குள் இவருக்கென்றுநாற்புறமும் புகழுவரும்!  வந்தநோய் விரட்டவரிசையிலே மருத்துவரும்அந்தநோய் தீர்ப்பதற்குஆயிரமாய் செவிலியரும் எந்தபணம் கொடுத்தாலும்ஏற்காமல் முதுமைவரும்அந்தநாள் வந்துவிட்டால்அடுத்தநொடி தனிமைவரும்! அறிவார் அறியவரும்அறிவார்ந்த தத்துவத்தைவிரிவாய் சொல்வதென்றால்விடுகதை யந்தவித்தை புரியாமல் ஆடும்களம்பூமியடா நீயறிந்தால்தெரியாமல் வந்தநிலைதெளிவாக்கு மிந்தகதை! பொன்மணிதாசன்

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழாக்கும் CBSE

மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகளை இன்னமும் அறிவிக்கவில்லை. தமிழக அரசின் மாநிலப் பாடத்திட்ட அமைப்பின் கீழ் உள்ள பள்ளிகளுக்கு, 10, 11 மற்றும் 12 ஆகிய மூன்று வகுப்புகளுக்கான  பொதுத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதமே வெளியிடப்பட்டுவிட்டன. 11 ஆம் வகுப்புக்கான சேர்க்கை முடிந்து பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள், தேர்வு முடிவுகள் பெறப்பட்டு கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பி சேர்க்கைக்காகக் காத்துக் கொண்டுள்ளனர். பெரும்பாலான தனியார்  கல்லூரியில் சேர்க்கை நடைபெற்று வருகிறது. முதல் பட்டியல், இரண்டாம் பட்டியல் என மாணவர்களுக்கான சேர்க்கைப் பட்டியல்களும் வெளிவந்து கொண்டுள்ளன. உண்மையில் பெரும்பாலான கல்லூரிகள் மாணவர் சேர்க்கையை நிறைவு செய்துவிட்டதாகவே தகவல்கள் வருகின்றன. ஆனால், இன்னமும் தேர்வு முடிவுகள் வெளியாகாத இந்தச் சூழலில், ‘எங்கள் குழந்தைகளுக்குக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா?’ என CBSE பள்ளிகளில் படித்த குழந்தைகளின் பெற்றோர்கள் கவலையுடன் கேட்கின்றனர்.  மாணவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக அவர்களது ஆசிரியர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்ல, பெரும்பாலான  CBSE பள்ளிகளில் பத்தாம் வகுப்புத்  தேர்வு முடிவுகள் வராமலேயே, பதினொன்றாம் வகுப்புப் பாடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும் சில பள்ளிகளில் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு இடைத்தேர்வுகூட நடத்தி முடிக்கப்பட்டதுவிட்டது என்றும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு இரண்டுக்குமே MCQ (Multiple Choice Questions) என்றழைக்கப்படும்  கொள்குறிவகைத் தேர்வில் எடுத்த முடிவுகளை மட்டும் பிரிண்ட் அவுட் எடுத்து  பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.  சிபிஎஸ்சி பள்ளிகளைப்  பொறுத்தவரை, இருபருவங்களாக நடத்தப்பட்ட பொதுத் தேர்வுகளில், முதல் பருவத்தின் இந்தத் தேர்வு முடிவுகளை வைத்து பதினொன்றாம் வகுப்பு சேர்க்கையை நடத்தி உள்ளனர். மாணவர்களுக்கான பாடப் பிரிவுகளையும் பெற்றோர்களிடம் பேசி அவர்களாகவே தெரிவு செய்து 11 ஆம் வகுப்பு சேர்க்கை முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மாநில அரசுப் பாடத்திட்டத்திற்கான  தேர்வு விடைத்தாட்கள்  திருத்தும் பணி, ஜூன் முதல் வாரத்தில்  முடிந்து தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்பட்டுவிட்டன. ஆனால் மத்திய  இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் வரக்கூடிய சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான விடைத்தாட்கள் திருத்தும் பணி ஜூன் 5 ஆம் தேதியே முடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், எதற்காகத் தேர்ச்சி முடிவுகளை இன்னும் வெளியிடாமல் இருக்கின்றனர் என்ற கேள்வி, ஆசிரியர் மற்றும் பெற்றோர் தரப்புகளிலிருந்து வருகின்றன.  கொரோனா காலத்தில் கடந்த இரண்டு கல்வியாண்டுகளும் மாணவர்களுக்கு முறையான கல்வி கிட்டாத சூழல் நிலவியது. ஆனால், தற்போது எல்லா இடங்களிலும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்தச் சூழலில் மாணவர்கள் சரியான காலத்தில் உயர் வகுப்புகளுக்குச் சென்று முறையான கல்வியைத் தொடர வேண்டிய அவசியம் உண்டல்லவா? அதை முறைப்படி செயல்படுத்த வேண்டிய கடமை அரசுகளுக்கும் அரசு சார்பு அமைப்புகளுக்கும் உண்டல்லவா? ஆனால் இதுவரை, ஒன்றிய அரசோ, மாநில அரசோ, பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித் துறைகளோ இது குறித்து எந்த மேல் நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. நம் நாட்டில் கல்வியில் சமமின்மை நிலவுவது குறித்து நாம் நன்கறிவோம். குறிப்பாக நம்  தமிழகத்தில், மாநிலப் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகள், சர்வதேசப் பள்ளிகள் என்று பல்வேறு வகையான, பாடத்திட்டங்கள் சார்ந்தும் கட்டமைப்பு சார்ந்தும் வேறுபட்ட மன நிலையை உருவாக்கக்கூடிய கல்விச் சூழலே அதிகரித்து வருகிறது. இங்கு சமத்துவம் பேசுகிறோம்; சமமான கல்வி என்று கூறுகிறோம்; வாய்ப்புகள் பரவலாக்கப்பட வேண்டும் என்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கிடையே கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வு, பொருளாதாரம் சார்ந்த வியாபாரமாகப் பல வருடங்களாகத் தொடர்ந்து வருகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சிகள் பெருகிவிட்ட அண்மைக் காலங்களில், கல்விச் சூழலில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. அதிகப் பணம் செலவழித்துப் படிக்கவைக்கக் கூடிய பள்ளிகள்தான் தரத்தில் உயர்ந்த பள்ளிகள் என்ற மனப்போக்கும் நிலவுகிறது. அதன் அடிப்படையிலேயே பத்தாண்டுகள் முன்பு வரை கோலோச்சிய பெரும்பாலான மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், சமச்சீர் கல்வி முறை வந்தபிறகு,  தங்களை மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ள, CBSE பள்ளிகளாக மாறின. இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத சூழலில் இப்பள்ளிகள் CBSE அமைப்புக்கு எதிராக எந்தக் குரலும் எழுப்பாமல், மாணவர்களின் எதிர்காலம் குறித்த கவலை ஏதும் இல்லாமல் மௌனமாக உள்ளனர். தங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், உடனடியாக, மாணவர்கள் நலனைப் பொருட்படுத்தாமல், சட்டத்துக்குப் புறம்பாக வேலை நிறுத்தம் அறிவிக்கும் தனியார் பள்ளிகள், மாணவர்கள் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் CBSE-ஐ எதிர்த்துப் போராட்டம் நடத்தாது ஏன்? ஒரே மாநிலத்தில் அரசுப்பள்ளிகளில் பயின்ற குழந்தைகள் தேர்ச்சி முடிவுகள் வரப்பெற்று உயர் வகுப்புகளுக்குச் சென்றுவிட்ட சூழலில், சக வகுப்பு சிபிஎஸ்இ பள்ளிக் குழந்தைகளை இன்னமும் தேர்வு முடிவை எதிர்நோக்கிக் காத்திருக்கும் சூழலில் வைத்திருப்பது, மாணவர்கள் எதிர்காலத்தையும் மனநிலையையும் பாதிக்கும், பாழாக்கும் செயலாகும். எந்தக் கல்வி முறையில் பயின்றாலும், பயிலும் மாணவர்கள் அனைவரும் நமது குழந்தைகளே. இங்குள்ள கல்வி மற்றும் மனித வளத்துறைகள் இது குறித்து உரையாடல் நடத்தி இருக்க வேண்டும். சிபிஎஸ்இ-இடம் உரிய விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மாறாக, CBSE அமைப்பு தேர்வு முடிவுகளை வெளியிடும்வரை, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்கச் சொல்வது என்ன நிர்வாக முறை? என்பது விளங்கவில்லை. மாநில அரசு எப்போது உறக்கம் கலைக்கும்? இந்தச் சூழலிலாவது, நம் குழந்தைகளுக்கு ஏற்ற பள்ளிகள் அரசுப் பள்ளிகள், ஏற்ற பாடத்திட்டம் மாநிலப் பாடத்திட்டம் என்ற புரிதல் பெற்றோர்களிடம் உருவாக வேண்டும். கல்வி என்பது நம் குழந்தைகளின் அடிப்படை உரிமை. அதை  ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் கேட்டுப் பெற வேண்டியது நம் கடமை. நாம் தொடர்ந்து வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட வர வேண்டும். கல்வி உள்ளூர் வளம் சார்ந்ததாக இருக்க வேண்டும். அப்போதுதான் குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கல்வி கற்பார்கள். தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். அதைவிடுத்து, அலங்கார முகமூடிக்கு ஆசைப்பட்டு CBSE பின்னால் ஓடினால், நமது குழந்தைகளின் கல்வியும் எதிர்காலமும்தான் பாழாகும் என்பதைப் பெற்றோர்களும் இந்த அரசும் உணர வேண்டும். கல்வி முதலாளிகள் தங்கள் மேட்டிமை மனப்பான்மையை மாற்றிக்கொண்டு மாநிலப் பாடத்திட்டத்திற்குத் திரும்ப வேண்டும். ஏனெனில், நுகர்வோர் உரிமைச் சட்டப்படி, ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் மாணவர்களின் கல்விக்குப் பொறுப்பேற்க வேண்டியது கட்டாயம். பெற்றுக்கொண்ட பயணத்துக்கு உரிய சேவை வழங்காவிட்டால் அந்தந்தக் கல்வி நிறுவனங்கள்தான் குற்றவாளிகள் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். தமிழக அரசும் மெத்தனப் போக்கைக் கைவிட்டு, உடனடியாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு CBSE பள்ளிகளில் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டும். உமா மகேஸ்வரி, கல்வியாளர்