கற்பைப் பிடித்துத் தொங்குகிறதா இலக்கிய உலகம்?

கற்பைப் பிடித்துத் தொங்குகிறதா இலக்கிய உலகம்?

தமிழினி இணையத்தில் எழுத்தாளர் இராசேந்திர சோழன் எழுதிய இசைவு என்ற சிறுகதை நேற்றிலிருந்து (05.09.2022) இலக்கிய இணைய உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. சரி, அப்படி என்னதான் பஞ்சாயத்தைக் கிளப்பி வைத்திருக்கிறார் என்று பார்க்கலாம் என்று கருதி, அந்தப் பக்கத்திற்குச் சென்று கதையை வாசித்தேன். மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே உறவு உண்டாகி, மருமகனின் பிள்ளைக்குத் தாயாகிவிடுகிறார் மாமியார். தொடக்கத்தில் இருவரையும் கண்டிக்கும் மகள், கதையின் இறுதிக்காட்சியில் இந்த உறவு தந்தைக்குத் தெரியாமல் மறைப்பதை, அந்த உறவுக்கான இசைவு எனக் குறிப்பால் உணர்த்துவதாகக் கதை முடிகிறது. இணைய வெளியில் பலரும் விமர்சித்ததைப்போல, நகர்ப்புற நாகரிகத்துக்குத் தம்மை வரித்துக்கொண்டு, மேட்டிமைச் சிந்தனைக்குள் குடியேறிவிட்ட தற்காலச் சமூகத்துக்கும், மனதின் ஒரு மூலையில் கதைக்களம் குறித்த தெளிவு இருந்தாலும், எங்கே நாம் இதை எதிர்க்கவில்லையென்றால் பெரும்பான்மைச் சமூகம் நம்மையும் ஒரு பாலியல் குற்றவாளி ஆக்கிவிடுமோ என்ற பதற்றத்தில் சிக்கிக்கொள்வோருக்கும் நிச்சயமாக இந்தக் கதை ஒரு அதிர்ச்சியாகவோ ஆபாசமாகவோ தோன்றுவதில் வியப்பில்லை. அண்மையில் வெளியான, வீட்ல விசேஷம் திரைப்படத்தில், திருமண வயதில் வீட்டில் மகன் இருக்க, குழந்தை பெற்றுக்கொண்ட தாயின் மனப் போராட்டம், அந்தக் குடும்பத்திலேயே நிலவிய குழப்பம், இறுதியில் உண்டான தெளிவு ஆகியவை நகைச்சுவை இழையோட, நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தன. அந்தப் படமும் முற்போக்காளர்களால் சிலாகித்துப் பேசப்பட்டது. முக்கியமாக, அந்தப் படத்தில் பாட்டி கதாபாத்திரம் பேசும் ஒரு வசனம் முக்கியமானது. ‘எத்தனை வயது கடந்தாலும் கணவன் மனைவிக்குள் நெருக்கம் இருந்தால்தானே குழந்தை பிறக்கும்?! 50-களைக் கடந்த பின்னும் பிறக்கும் இந்தக் குழந்தை, அந்தக் கணவன் மனைவிக்குள் இன்னமும் நீடிக்கும் காதலின் சாட்சி’ என்பதாக இருக்கும். வீட்ல விசேஷம் திரைப்படத்துக்கும் இசைவு சிறுகதைக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு, பிறந்த அந்தக் குழந்தைக்குத் தந்தை யார்  என்பதுதான். இசைவு கதையில் மாமியாரின் குழந்தைக்கு மருமகன் தந்தை ஆகிறான். அதாவது, தன் மகனுக்கு, தானே மைத்துனனும் ஆகிறான். இந்த உறவுச் சிக்கல்தான் கதையில் விழுந்துள்ள சிக்கலான முடிச்சு. இந்த முடிச்சுதான் எல்லோரையும் பதற்றம் கொள்ள வைக்கிறது. அந்தப் பதற்றமே இந்தக் கதையை, மஞ்சள் பத்திரிக்கை கதை, சரோஜாதேவி கதை என்றெல்லாம் வகைப்படுத்தச் செய்கிறது. மணி பார்க்கும் கடிகாரம்கூட ஊருக்கு ஒன்றோ இரண்டோ மட்டுமே இருக்கும் அளவினான குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த, மிகவும் எளிமையான மக்களோடு வாழ்ந்து பழகிய என்னைப் போன்றோருக்கு இப்படியான கதைகள், வெறும் கதைகள் மட்டுமே. அதாவது, இவ்வாறான நிகழ்வுகளை எங்கள் இளம் வயதிலேயே கதைகளாகவும் செய்திகளாகவும் கேட்டும், தவிர்க்க இயலாத சில தருணங்களில் கண்டும் கடந்தும் வந்திருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சியும் சினிமாவும் மிகமிக அரிதாக இருந்த காலத்தில் வாழ்ந்த எளிய மக்கள் இத்தகைய நிகழ்வுகளை மிக எளிதாகப் புறந்தள்ளி, கடந்து சென்று, வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்ளாமல் வாழ்ந்த மக்களைக் கண்டு வளர்ந்தவர்கள் நாங்கள். மாமியார் மருமகன் மட்டுமல்ல, மாமனார் மருமகள், கணவன் இருக்கும்போதே தன்னுடைய மனம் கவர்ந்த தன்னைவிட வயதில் இளைய ஆடவனைத் தன் வீட்டோடு வைத்துக்கொண்ட பெண், மனைவியின் நண்பன் வந்தால், அந்த நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய கணவன், நெருங்கிய உறவுக்குள்ளேயே இரண்டு வெவ்வேறு வீடுகளில் இரட்டைப் பிள்ளைகளைப் போல அச்சு அசலான பிள்ளைகள், இப்படிப்பட்ட மனிதர்களைச் சந்தித்துவிட்டு, அவர்களோடு பழகிவிட்டுத்தான் நாங்கள் வந்திருக்கிறோம். ஒரு திரைப்படத்தில், ஊருக்குள் திருவிழா நடக்கும் நேரத்தில், மைக் செட்காரர் வீட்டுக்குள் ஊர்ப் பெரிய மனிதர் நுழைந்து, ‘சுத்தபத்தமாதானே இருக்க?’ என்று கேட்பாரே, அதற்கு இணையான காட்சியை கண்ணால் கண்ட சாட்சிகள் நானும் என் தம்பியும். அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திலும்கூட, இரண்டு பெண்கள் மீதும், தான் சமமான காதல் வைத்திருப்பதாக அந்த நாயகன் சொல்வார். அதனால் இரண்டு பெண்களுமே அவரைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். ஆனால், ஒரே மேடையில் இரண்டு பெண்களை ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ளப் போவதாக ஒரு அழைப்பிதழும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அது பலராலும் ஏளனமும் செய்யப்பட்டது. தமிழ் சினிமா ஊதி ஊதிப் பெருக்குவதற்கு முன்பாக இந்தச் சமூகம் கற்பைக் குறித்து அத்தனை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. தாலி மற்றும் கற்பு குறித்தான சென்ட்டிமென்ட்களைக் காட்டுத் தீயினும் வேகமாகப் பரப்பிய பெருமை சினிமாவையே சாரும். அதன் நீட்சியைத் தற்போது தொலைக்காட்சித் தொடர்கள் செய்து வருகின்றன என்று கருதுகிறேன். அண்மையில் ஒருவர், ஒரு ஆணுக்குப் பல பெண்கள் மீது ஈர்ப்பு வந்தால் அது மனநலக் கோளாறு என்று எழுதி இருந்தார். காதல் ஒரே ஒருவரிடம் மட்டும்தான் வரவேண்டும் என்ற சிந்தனையின் மறுபக்கம்தான் அது என்றுதான் அதை என்னால் எடுத்துக்கொள்ள முடிந்தது. ஒரு மனநோயாளி தன்னை ஒருபோதும் மனநோயாளி என்று ஒப்புக்கொள்ள மாட்டார் என்று சொல்வதைப் போல, ஈர்ப்பு வந்தாலே மனநோயாளி என்றால், இங்கே ஏராளமான மனநோயாளிகள் தங்களை மறைத்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். உண்மையாகவே – நேர்மையாகவே – ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மீது ஈர்ப்பு வரவில்லை என்றால், அவர்கள் எங்கோ பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது கட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம் என்பது என்னுடைய கணிப்பு. இன்னும் சில இடங்களில், காமம் சார்ந்த செயல்களை விலங்குகளோடு ஒப்பிட்டு வசை பாடுவதும், அதற்கு முரணாக, கருவுற்று இருக்கும் பெண் விலங்கை ஆண் விலங்கு அணுகாது என்பதும் எனக்குள் சிரிப்பை உண்டாக்கும் நகைச்சுவைகளே அன்றி வேறல்ல. விலங்குகளுக்கு காமம் என்பது இனப்பெருக்கச் செயல்பாடு என்று மட்டுமே இங்கே வரையறுக்கப்படுகிறது. ஆனால், விலங்குகள் மனிதர்கள் கையில் அகப்படாதவரை அவற்றுக்குக் காமம் தோன்றிய உடனே வடிகாலும் கிடைத்துவிடும் வாய்ப்பு இருந்தது. ஆனால், மனிதன் கையில் சிக்கிக்கொண்ட விலங்குகளுக்கு அவற்றின் இயல்பான காம உணர்வுக்கான வடிகால் மறுக்கப்படுகிறது என்பதே உண்மை. கண்ணகியைக் கற்புக்கரசி என்று சொல்லித்தானே மெரினாவில் சிலை வைத்துப் போற்றுகிறோம்? கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மண்ணில் கலாச்சாரம் கெட்டுவிட்டது என்று மேடை போட்டு முழங்குகிறோம்? கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு மதுரையை எரித்த கண்ணகி, தன்னைத் தவிக்கவிட்டு வெளியேறிய கணவனுக்கும் தண்டனை தரவில்லை. அல்லது தானும் இன்னொரு துணை தேடிக்கொள்ளவில்லை. இன்சூரன்ஸ் துறையில் நீங்கள் இழப்பீடு கோரும்போது ‘விபத்துக்கான/ மரணத்துக்கான காரணம்’ – cause of accident/ death – என்வென்று ஆய்வு செய்வார்கள். உதாரணமாக, ஒரு வண்டியில் பிரேக் ஆயில் லீக் ஆகி, அதன் காரணமாக பிரேக் பிடிக்காமல் விபத்து நடந்தால், அது வண்டியின் பராமரிப்பில் கோளாறு என்ற காரணத்தால் இழப்பீடு நிராகரிக்கப்படும். ஆனால், மழையின் காரணமாக, சாலை சேறும் சகதியுமாக இருந்து வண்டி பிரேக் பிடிக்காமல் வழுக்கிச் சென்று விபத்து நேர்ந்தால் அது தங்கள் கட்டுப்பாடுக்குள் இல்லாத விபத்தாகக் கருதப்பட்டு இழப்பீடு வழங்கப்படும். அதேபோல, கோவலன் வறுமை நிலைக்கு வந்து மதுரைக்கு வந்ததற்கு அவனேதான் காரணம். இருந்தாலும் தண்டனை என்னவோ ஒட்டுமொத்த மதுரை மக்களுக்கும். ஆனால் நமக்கு முக்கியமானது என்னவோ, கணவன் கைவிட்டுப்போன பின்னும் அவனுக்காகவே காத்துக்கிடந்த அவளின் கற்பு நெறிதானே? இன்னமும் இந்தச் சமூகம் கற்பு எனும் கற்பிதத்தைத்தான் பிடித்துத் தொங்குகிறதா? அல்லது, மற்றவர்களுக்கு உற்ற துணை யார் என்பதை இந்தச் சமூகம்தான் தீர்மானிக்க விரும்புகிறதா? ஒழுக்கத்துக்கான அளவுகோலாகப் பெண்களின் உடலை மட்டுமே வைத்திருக்கவே இந்தச் சமூகம் விரும்புகிறதா? காமம் என்பதைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே ஒழுக்கசீலர் சான்றிதழ் வழங்கப்படுமா? காமத்தைக் கடந்து இந்தச் சமூகத்தில் நிலவும் பிற சிக்கல்கள் யாவும் உரிய தீர்வினை எட்டிவிட்டனவா? ஒரு பெண்ணுக்குத் தன்னுடைய உடல் மீதான உரிமையை இந்தச் சமூகம்தான் எப்போதும் தீர்மானிக்குமா? இப்படி ஏராளமான கேள்விகள் என் உள்ளத்தில் ஊற்றெடுத்தவண்ணம் இருக்கின்றன. எனக்குள் எழும் இன்னொரு முக்கியமான கேள்வி, இவர்களில் எத்தனை பேர் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தை வாசித்திருப்பார்கள் என்பதே. இந்தக் கதையிலும் அந்தப் பெண்ணுக்கு விருப்பமான ஆண், மருமகனைத் தவிர வேறு ஒருவராக இருந்திருப்பின் இந்தப் பதற்றம் உருவாகி இருக்காது என்றே நான் கருதுகிறேன். அதை முற்போக்குச் சிந்தனை என்றும்கூடச் சிலர் கொண்டாடி இருக்கக்கூடும். ஆனால் அந்தப் பெண்ணின் விருப்பத்தையோ அல்லது கதாசிரியர் விருப்பத்தையோ, விமர்சிப்பவர்கள் தீர்மானிக்க முடியாது அல்லவா? இதற்கும் ஒரு உதாரணம் சொல்கிறேன். தோழர் சி. ஞானபாரதி எழுதிய அவஸ்தை என்ற சிறுகதையின் ஒரு காட்சியில், வறுமையில் வாடும் ஒரு ஏழைப் பெண்ணின் வீட்டைக் குறித்த வர்ணனையில், வீட்டின் சமையலறையில் சடை சடையாக ஒட்டடை தொங்குவதாக எழுதி இருந்தார். அந்தக் கதையை வாசித்துவிட்டு நான் அவரோடு உரையாடுகையில், வறுமைக்கும் தூய்மைக்கும் தொடர்பு இல்லையே தோழர்; சிறிய வீடாக இருந்தாலும் அந்தப் பெண் வீட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ளலாம் அல்லவா? என்று கேட்டேன். அதற்கு ஞானபாரதி தோழர் சொன்ன பதில், “நீங்கள் பார்த்த வீடுகள் அவ்வாறு இருக்கலாம் தோழர். ஆனால், நான் பார்த்த பெண்ணின் வீடு எப்படி இருந்ததோ அதைத்தான் எழுதியுள்ளேன்” என்பதுதான். ஒருவேளை தோழர் இராசோ-வும் இதே பதிலைச் சொல்லக்கூடுமல்லவா? நல்லு இரா. லிங்கம் செப்டம்பர் 9, 2022

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வீர சுதந்திரம் வேண்டி நின்றார்

வ. உ. சி. பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை ‘மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்நூலோர்கள் செக்கடியில் நோவதுவுங் காண்கிலையோ?’என்று மகாகவி பாரதி தன் கவிதையில் வ.உ.சி.யின் சிறைக் கொடுமையைப் பதிவு செய்திருக்கிறான். சமகால விடுதலை இயக்கத் தலைவனுக்குத் தமிழால் சாகாவரம் தருகிறான். அது மட்டுமல்ல, ‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்மன்னனென மீண்டான் என்றேகேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ வருந்தலை என் கேண்மைக் கோவே!’என்று வ.உ.சி.க்கு மிகப் பெரிய நம்பிக்கையை ஆறுதலாக உரைக்கின்றான். தேசத்தின் விடுதலை இயக்க வரலாறு தெற்கிலிருந்து எழுதப்பட வேண்டும் என்ற கருதுகோள், கிழக்கிந்தியக் கம்பெனி காலத்தில் மட்டுமல்ல, இந்திய தேசிய காங்கிரஸ் காலத்தில் திலகர் யுகத்திலும், தொடர்ந்த காந்தி யுகத்திலும், எம் தமிழ்நிலத்தின் பங்கே பிரதானமாக இருந்ததில் நிலை கொண்டுள்ளது.  அது இரட்டை ஆயுள்தண்டனை பெற்ற இந்தத் தியாகத் திருமகன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் (1872-1936) வரலாற்றால் தவிர்க்க முடியாத நிரந்தரமான சான்றாக அமைந்து விடுகிறது. செப்டெம்பர் 5 என்றால் ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களோடு, வ.உ.சி. பிறந்தநாள் என்பதால் அவர் பற்றியும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறியத் தருதல் வேண்டும். வ.உ.சி.யும் பாரதியும் மனமொப்பிய நண்பர்கள். அவர்கள் நட்பை ஆராய்கிற பாங்கில் ‘நான் கண்ட பாரதி’ என்று சிறு நூலை வ. உ. சி. எழுதியிருக்கிறார். பாரதி சுதேசிய இயக்கப் பரப்புரையாளன். தூத்துக்குடி செய்திகளைத் தனது ‘இந்தியா’ பத்திரிகையில் தொடர்ந்து எழுதுகிறான். வ.உ.சி.யின் 151-வது பிறந்த நாளில் அந்தச் செய்திகளைப் பகிர விரும்புகிறேன். 1906-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று, சுதேசி கப்பல் நிறுவனம் தொடங்கப் பெற்றது. 1882-ஆம் ஆண்டு கம்பெனிகள் சட்டப்படி எண் 85, கிரேட் காட்டன் சாலை, தூத்துக்குடி என்ற முகவரியைப் பதிவு அலுவலகமாகக் கொண்டு பதிவு செய்யப்பட்டது. நிறுவனத்தின் பதிவு எண் 13 of 1906. அதற்கு முன்பு, ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற பெயரில் பம்பாய் ஷலைன் ஸ்டீம் கப்பல்  கம்பெனியாரிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு வாங்கி இயக்கி வந்தனர். ஆங்கில அரசாங்கம் வெள்ளைக்காரர் கப்பல் கம்பெனிகளுக்குச் சார்பாக இருந்து, சுதேசிய கம்பெனி கப்பல்களுக்கு இடையூறு விளைவித்தனர். 1906 ஜூலை 7-ஆம் தேதியிட்ட ‘இந்தியா’ இதழில், ‘சுதேசிய ஸ்டீம் கப்பல் கம்பெனி’ என்ற தலைப்பில் நிருபர் செய்தி என்ற கோதாவில் பாரதி தருகிற செய்தியின் சாரம்: தூத்துக்குடியிலே அஸிஸ்டெண்ட் போலீஸ் தலைவர் மிஸ்டர் ராமசாமி நாயுடு, ஸ்டேஷன் ஆபீஸர் குருநாதய்யர், இருவரும் மாதக் கணக்கில் விடுப்பு கேட்கிறார்களாம். ஏன்? அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி நாயுடுவும் சப் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் மோஹிதீன் கான் லோடி என்பவரும் வேறு ஊருக்குப் பணி மாறுதல் கேட்கிறார்களாம். அதுவும் ஏன்? தூத்துக்குடி அஸிஸ்டெண்ட் மாஜிஸ்ட்ரேட் மிஸ்டர் வாலர் என்பவர் வெள்ளைக் கப்பல் கம்பெனி பக்கம் சேர்ந்து கொண்டு, சுதேசிக் கப்பல் கம்பெனிக்குத் தொந்தரவு கொடுக்கிறாராம். அதனால் மேற்படி அதிகாரிகள் நேர்மையாக வேலை செய்ய முடியவில்லையாம். இதையெல்லாம் சொல்லிவிட்டு மேற்படி அதிகாரிகள் வாலருக்கு அஞ்சிவிடாமல் தாம் நியாயமாகப் பணிபுரிய வேண்டும் என்று அறிவூட்டுகிறார் அந்த நிருபர். மீண்டும் ஜூலை 21 இதழில் மிஸ்டர் வாலரின் சுதேசிக் கம்பெனிக்கு எதிரான நடவடிக்கைகளை விரிவாக எழுதுகிறார் பாரதி. ஆகஸ்டு 11 இதழில் ‘தூத்துக்குடியில் சுதேசியம்’ என்ற தலைப்பில், சுதேசிய முயற்சிகள் பலப்பட்டு வருவதை எழுதுகிறார். அதே இதழில், தென் இந்திய இரயில்வே கம்பெனியார் வெள்ளைக் கப்பல் கம்பெனியில் வர்த்தகம் செய்ய வரும் வணிகர்களுக்குக் கட்டணச் சலுகை அளித்திருப்பதை எழுதி, சீர்காழி வர்த்தகர்கள் இந்த வெள்ளைக் கம்பெனிகளின் கூட்டுச் சதியில் ஏமாறாமல் சுதேசிக் கம்பெனியுடனேயே வர்த்தகம் நடத்தியிருப்பதைப் பாராட்டுகிறார் பாரதி. செப்டெம்பர் 11 இதழில் புதிய கப்பல் கம்பெனி கனவு நிறைவேறப் போவதைத் தெரிவிக்கிறார். இந்தப் ‘புதிய சுதேசிய புகைக் கப்பல் கம்பெனி’யின் பாகஸ்தர்கள் லீகல் அட்வைசர்கள் காரியதரிசிகள் யார் யார்? என்றெல்லாம் விரிவான விவரங்களைத் தருகிறார் பாரதி. தூத்துக்குடி சுதேசிய இயக்கத்தில் வ.உ.சி.தலைவன் என்றால் பாரதி மகத்தான பரப்புரையாளன். செப்டெம்பர் 5-இல் வ.உ.சி.க்குப் பிறந்த நாள் வருகிறதென்றால், செப்டெம்பர் 11 பாரதியின் நினைவுநாள் ஆகும். இருவரையும் நினைவு கூர்வோம். இரா.கோமதிசங்கர், திருநெல்வேலி

வார்த்தை வன்முறைகளுக்கு ஆளாகும் பெண் உடல்

வார்த்தை வன்முறைகளுக்கு ஆளாகும் பெண் உடல்

“பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் உடையணிந்திருந்தால், அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது குற்றமாகாது” என்று கேரள நீதிமன்றம் அதிரடியாகக் கருத்துத் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், சமூக செயற்பாட்டாளருமான சிவிக் சந்திரன் மீது பெண் ஒருவர் அளித்த பாலியல் குற்றச்சாட்டிற்கு, நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் இது போன்ற ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார். கடந்த 2020ஆம் வருடம் நந்தி கடற்கரையில் நடந்த எழுத்தாளர்கள் முகாமின்போது தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக அவர் புகார் அளித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர் தன் தரப்பு சாட்சியாக அளிக்கப்பட்ட புகைப்படங்களில் சம்பந்தப்பட்ட பெண் அணிந்திருந்த ஆடை, பாலியல் ரீதியான செயல்பாடுகளைத் தூண்டும் விதமாக இருந்ததாக நீதிபதியே கூறுவது “விக்டிம் ப்ளேம்” செய்யப்படுவதாகவே தோன்றுகிறது. இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். பாலியல் குற்றங்கள் எழும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட பெண் மீதே முன்வைக்கப்படும் இது போன்ற பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வெகுசனத்தைத் தாண்டி நீதிமன்றங்களே தெரிவிப்பது வேதனைக்குரிய விசயம். இதுதான் சாக்கு என்று சில ஊடகங்களும் “ஆபாச ஆடை அணிவது பாலியல் இச்சையைத் தூண்டுகிறது” என்று தன் பங்கிற்கு அந்த விசயத்தை ஆதரிக்கின்றன. பாலியல் குற்றங்களுக்கு ஆடை காரணமல்ல என்று தொடர்ச்சியாகப் பெண்களின் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தாலும், சமூகம் இன்றளவும் பெண்ணின் ஆடை மீதே விமர்சனங்களை வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று “ஒழுக்க விதிகள்” கற்பிப்பதில் மட்டுமே இந்தச் சமூகம் கவனம் செலுத்துகிறது. பொதுசனம், ஊடகம், நீதிமன்றம் என்று அனைவரும் பொதுவெளியில் பெண் மீதான மாண்பைக் குறைக்கும் வகையில் இது போன்ற பிற்போக்குக் கருத்துகளைப் பரவ விட்டுக் கொண்டே இருக்கின்றனர். உண்மையிலேயே பெண்கள் குறித்த முற்போக்குப் பார்வை இருந்தால், ஊடகத்துறையில் வேலை செய்யும் பெண்களிடமே கேட்டுப் பாருங்கள். அவர்களில் எத்தனைப் பெண்கள் தங்கள் வீட்டில் பெரும் எதிர்ப்பைச் சுமந்துகொண்டு தினந்தோறும் பணிக்குச் செல்கிறார்கள் என்று தெரியும். ஊடகம் என்றாலே “நோ” என்று சொல்லி விடும் போக்கு இன்னும் மாறாத சமூகத்தில் இருந்து கொண்டு, இது போன்ற கருத்துகள் வெளிவருவது ஆரோக்கியமான போக்கிற்கு வழி காட்டாது. பொதுவெளியில் ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும், ஒரு ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பொது இடத்தில் அவள் எங்கே நிற்க வேண்டும், எந்தப் பேருந்தில், எத்தனை மணிக்குப் பயணிக்க வேண்டும் என்று அவளுக்கான வரையறைகள் நீண்டு கொண்டே செல்கின்றன.   அப்படியானால் பெண் உடல் காம ஆசையைத் தூண்டுவது இல்லையா? பெண்ணின் உடல் பகுதிகள் காம இச்சைகளைத் தூண்டும் என்பதில் எனக்கும் துளி சந்தேகமும் இல்லை. ஆனால் அவை எப்போதும் காமத்தையே தூண்டிக் கொண்டிருக்கிறதா? சில நாட்களுக்கு முன்னால் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளிவந்தது. அதில் குழந்தைக்கு மொட்டை அடிக்கும் இடத்தில் அக்குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்த முடியாததால் ஒருபுறம் தாய் பாலூட்டிக் கொண்டே இருக்க, மறுபுறம் மொட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். திறந்த மார்புடன் அவள் பாலூட்டுவதைப் பார்த்துக் கூடியிருந்தவர்கள் காமத்தில் வெறி கொண்டு விட்டார்களா? அதில் ஓர் அழகியல் இருந்ததால் அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தர்கள். இங்கே ஆபாசம் எங்கிருந்து வந்தது. பெண்ணின் சம்மதமின்றி நடக்கும் பாலியல் வல்லுறவை நியாயப்படுத்தும் விதமாக அவளின் ஆடையை, அவளின் நிர்வாணத்தை – பகடையாய் உபயோகிப்பது முறையல்ல. பாலியல் வன்முறைக்கு ஆளாகும் மூன்று வயது குழந்தையின் ஆடை என்ன செய்தது? இங்கு குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு மாற்றுத்திறனாளி என்று அவர் பக்கம் நியாயங்களை அடுக்கும் சில ஊடகங்கள், சௌமியாவை இன்னும் மறந்திருக்காது என்று நினைக்கிறேன்‌. ஆண் உடல் போன்று பெண் உடலும் இயல்பு என்று எத்தனை முன்னெடுப்புகள் செய்தாலும் அவை அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராக வீணாகிப் போகின்றன. இச்சமூகம் பெண்கள் மீது நடத்தும் உடல் ரீதியான வன்முறைகளுக்கு இணையாக இது போன்ற வார்த்தை வன்முறைகளும் மிகுந்த கண்டனத்துக்குரியது. பெண்களை ஒடுக்கி வைக்கும் இத்தகைய கீழ்த்தரமான சிந்தனை, படித்தவர்கள் அதிகமாக உள்ளதாகச் சொல்லப்படுகின்ற, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடக்கின்ற மாநிலத்திலேயே இவ்வளவு வலுவாக உள்ளது எனில், நாட்டின் பிற பகுதிகளில், பிற்போக்கு சக்திகளின் பிடியில் சிக்கி இருக்கும் மாநிலங்களில் எந்த அளவில் இருக்கும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, பெண்கள் குறித்த இத்தகு கீழ்த்தரமான சிந்தனை கொண்ட நபர்களை அரசியல், நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகம் போன்ற அமைப்புகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும் என்றும் நாம் வலியுறுத்தக் கடமைப்பட்டுள்ளோம். சாந்தி சண்முகம்

காற்றுடன் கலந்த கம்பீரக் குரல்

காற்றுடன் கலந்த கம்பீரக் குரல்

‘ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது..’ என்று கணீரென்ற உச்சரிப்பில் கம்பீரமான குரலுடன் ஆரம்பித்தது எனில், வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சட்டென்று ரேடியோவை நோக்கித் திரும்புவார்கள். செய்திகளைச் செவிமடுப்போர் எண்ணிக்கை அதிகமாகும். காலை 7.15 மணி என்று தெரிந்து, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பத் தயாராவார்கள். செய்தி முடிந்தவுடன் ரயிலுக்குச் செல்பவர்கள், பஸ் பிடிப்பவர்கள் வீட்டை விட்டுக் கிளம்புவார்கள். எவ்வளவு நேரம் ஆனாலும் இடையினில் செல்ல மனம் இடம் தராது. அப்படிப்பட்ட கம்பீர குரலுக்குச் சொந்தக்காரர் சரோஜ் நாராயண் சுவாமி, சென்னையில் தன் 87 வது வயதில் தன் சுவாசத்தை நிறுத்திக்கொண்டார்.  சரோஜா என்று இயற்பெயர் கொண்ட சரோஜ் நாராயண் சுவாமி, மும்பையில் பிறந்தவர். தாய்த் தமிழ்நாட்டின் தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாயின் காவிரித் தண்ணீரும், தான் பார்த்த தமிழ் சினிமாக்களும், படித்துப் படித்து மகிழ்ந்த பாரதியார் பாடல்களும்தான் தன் தமிழ் உச்சரிப்பிற்குக் காரணம் என்பார். கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்தபின், டெல்லியில் யூகோ வங்கியில் பணியில் இணைந்தார். அருகிலேயே டெல்லி அகில இந்திய வானொலி நிலையம். தமிழார்வம் காரணமாக அங்கே பணி கிடைத்தது. தமிழ் செய்தி வாசிப்பின் பொற்காலம் அங்கிருந்து தொடங்கியது. சரோஜ்தான் இந்தியாவில் தமிழில் செய்தி வாசித்த முதல் செய்தி வாசிப்பாளர்.  வானொலியில் 35 ஆண்டுகள் பணி புரிந்த பின்னர் செய்தி ஒளிபரப்புத் துறையில் சில காலம் பணி புரிந்தார். செய்தி ஆவணங்களுக்கு (news reels) குரல் கொடுத்தல், சினிமாக்களுக்கு சப் டைட்டில்கள் எழுதுதல் என்று பலவகையான பணிகளில் ஈடுபட்டார்.  தன் வானொலி அனுபவங்களைப் பல நேர்காணல்களில் வெளிப்படுத்தி உள்ளார்.  அவரது செய்தி வாசிப்புக்கால அனுபவங்களில் முக்கியமானவை அவரது பேட்டிகளில் இருந்தே நமக்குக் கிடைக்கின்றன. 31.10.1984 இந்திய வரலாற்றில் முக்கியமான நாள். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் ஒரிஸா பயணங்களைப் பற்றிக் காலைச் செய்திகளில் சொன்னவர், ‘இந்திராவின் ஒவ்வொரு துளி இரத்தமும் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக’ என்று பேசியதைக் குறிப்பிட்டுச் சொல்லும் போது, அன்று மாலையே இந்திரா சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியைச் சொல்ல நேரும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று வருந்திக் குறிப்பித்துள்ளார். செய்தி வாசிப்பாளர்கள் தங்கள் சுகம், துக்கம் போன்றவற்றைச் செய்தி வாசிப்பில் காண்பித்துவிடக் கூடாது என்பது எழுதப்படாத சட்டம் என்றாலும், அன்று சற்று நெகிழ்ந்து போய் இருந்ததாகவும், அவர் மரணத்தை அறிவிக்கும்போது, ‘அன்னை இந்திரா காந்தி’ என்று செய்தியில் எழுதப்படாத ‘அன்னை’ என்ற வார்த்தையைச் சேர்த்து தான் சொன்னதையும், அதற்காக அவர் மிகவும் பாராட்டப்பட்டார் என்பதையும் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். பின்னர் வந்த காலங்களில் பஞ்சாபிலிருந்து செய்தி வாசிப்பாளர்கள் வரமுடியாமல் போக, அவர்களின் பணிச் சுமையும் இவருக்குச் சேர்ந்தது.  காலை 5.30 மணி செய்திக்கு, 3 மணிக்கே தயாராக ஆரம்பித்து விடவேண்டும். ஆங்கில, இந்தி செய்திகளை வைத்துக்கொண்டு, மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்வது அந்தந்த மாநில மொழிச் செய்தி வாசிப்பவரின் பொறுப்பு என்பதால் வேலைப்பளு அதிகம். சில சமயங்களில் ஒரு சில வார்த்தைகளுக்காக, தூதரகங்களைத் தொலைபேசியில் அழைத்து உதவிகள் வாங்கியதையும் அவர் பேட்டிகளில் குறிப்பித்துள்ளார்.  தன்னால் மறக்க முடியாத காலம் பங்களாதேஷ் போர் நடந்த காலம் என்று கூறியுள்ள சரோஜ், அப்போது செய்திகளைக் கேட்ட நேயர்கள், ஏதோ தானே இந்திய வெற்றிக்குக் காரணம் என்பது போல மகிழ்ந்து தனக்குப் பாராட்டு மடல்கள் எழுதியதை சந்தோஷமாகக் குறிப்பிட்டுள்ளார்.  “பலர் என்னிடம், ‘உங்கள் குரல் மேல் (male) வாய்ஸ் போல இருக்கிறதே’ என்பார்கள். ‘ஆம், என் குரல் மேலான குரல்தான்’ என்பேன்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.   மும்பையில் பிறந்து, டெல்லியில் பணிபுரிந்து, கிழக்கு வங்காளத்தின்  விடுதலைச் செய்திகள் சொல்லி, பஞ்சாபியில் கலக்கிய கணீர்க் குரல் சென்னையில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டதன் மூலம், தான் இந்திய தேசத்திற்கே சொந்தமானவர் என்று நிரூபித்திருக்கிறார்.  2009 ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது இவருக்கு வழங்கப்பட்டது. கம்பீரக் குரலின் தமிழ் என்றும் நம் நினைவில் தங்கும்.  கோவை பிரசன்னா

தமிழ்நாடு நாள் – சிறப்பு மலர்

தமிழ்நாடு நாள் – சிறப்பு மலர்

ஜூலை 18 – தமிழக அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மலரை சுவடு வாசகர்களுக்காக மின்நூல் வடிவில் வெளியிடுகிறோம். நீங்கள் புத்தக வடிவில் இந்த மலரை வாசிக்க முடியும். கணினி அல்லது மடிக்கணினியில் வாசிப்பவர்கள் புத்தக்கத்தைத் திறந்த வடிவில் இரு பக்கங்களாகவும், அலைபேசியில் படிப்பவர்கள் ஒவ்வொரு பக்கமாகவும் வாசிக்கலாம்.

வாழும் கவிஞன் வாலி

வாழும் கவிஞன் வாலி

கவிஞர் வாலியின் 9 ஆம் ஆண்டு நினைவு நாளில் அவர் பாடல்களோடு சிறு பயணம்: “நன்றி சொல்லவே உனக்குஎன் மன்னவா வார்த்தை இல்லையேதெய்வம் என்பதே எனக்குநீயல்லவா வேறு இல்லையே” இன்று அதிகாலை காரில் உட்கார்ந்தபோது, பனிக்குளிரைக் கிழித்துக்கொண்டு எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும்போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் நினைவு நாள்; அவர் எழுதிய பாடல் முக விசேடம். கவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,தான் ஒரு படைப்பாளி, என்னுடைய நிலையில் இறங்கி வரமாட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை அவர் நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார். அதே சமயம், கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார். அதனால்தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டப்பட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும் “நன்றி சொல்லவே உனக்கு, என் மன்னவா வார்த்தை இல்லையே” பாடலும் பிடிக்கும்; அதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும், “சின்ன ராசாவே…..சித்தெறும்பு என்னைக் கடிக்குது” பாட்டும் பிடிக்கும். இரண்டுமே வாலியின் பாடல்கள்தான். இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார். “அந்த நாள் ஞாபகம்நெஞ்சிலே வந்ததே வந்ததேநண்பனே…..” என்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்எம்.எஸ்.விஸ்வநாதனுக்குக் கொடுத்தவர்தான், “நிலவிடம் வாடகை வாங்கிவிழி வீட்டினில் குடி வைக்கலாமா…நாம் வாழும் வீட்டுக்குள்வேறாரும் வந்தாலே தகுமா…..” என்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன?!! “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி? சமைஞ்சது எப்படி?” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.“டாலாக்கு டோல் டப்பிமா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் போடுவது வாலியின் பண்பு. ஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.எப்படி, அழுத்தமான சூழல் ஒன்றில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ, அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப் பார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ, அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார். இயக்குநர் கதிர் – இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால்தான் நமக்கும் “யாப்போடு சேராதோபாட்டு தமிழ்ப் பாட்டுதோப்போடு சேராதோகாற்று பனிக்காற்று….” என்று இதயத்திலும் “ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்அன்பே உன் பேரைச் சிந்தித்தால்தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்கண்ணே நம் கண்கள் சந்தித்தால்நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..” என்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது. “அன்னமிடும் கைகளிலேஆடிவரும் பிள்ளை இதுஉன்னருகில் நானிருந்தால்ஆனந்தத்தின் எல்லையதுகாயத்ரி மந்திரத்தைஉச்சரிக்கும் பக்தனம்மாகேட்கும் வரம் கிடைக்கும் வரைகண்ணுறக்கம் மறந்ததம்மா” தாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி – இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை “தாமரை மேலே நீர்த்துளி போல்தலைவனும் தலைவியும் வாழ்வதென்னநண்பர்கள் போலே வாழ்வதற்குமாலையும் மேளமும் தேவையென்ன?” என்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில் “நிலவினை நம்பி இரவுகள் இல்லைவிளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லைஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…” எனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது. அபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில் முழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம். “மல்லிகை முல்லைப் பூப்பந்தல்” என்று “அன்பே ஆருயிரே” (1975) க்காக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்காக எழுதி, அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் சுவீகரித்துக் கொண்டவர், 30 வருடங்கள் கழித்து மூன்றாம் தலைமுறை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் “மயிலிறகே மயிலிறகே” என வருடும் வரிகளோடு அதே “அன்பே ஆருயிரே” தலைப்பில் வெளிவந்த இன்னொரு படத்திலும் அனைத்துப் பாடல்களையும் எழுதினார். இவையெல்லாம் தன்னைப் பிரச்சாரப்படுத்திக் கவர்ந்து கொண்ட வாய்ப்புகள் அல்ல. அவர் மீதான ஈர்ப்பால் தானாகத் தேடி வந்தவை. கவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை; அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள்.இன்னொரு பரிமாணமும் இருக்கிறது, அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும். தாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத்தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி. கானா பிரபா

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

பெண்களை அடிப்பதுதான் திராவிட மாடலா?

“உலகில் மனித வரலாற்றில் அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால், பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும் கொடுமையும் ஒழிய வேண்டும். இது ஒழிந்த நிலையில்தான் சமத்துவம், சுதந்திரம் என்னும் முளை முளைக்கும்” என்றார் பெரியார். நாடு சுதந்திரம் பெற்ற வேளையில் பெரியார் சொல்லிச் சென்றவை இன்றும் சொற்களாகவேதான் இருக்கின்றனவேயன்றி, செயலாக்கம் பெறவில்லை என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது தமிழக அமைச்சரின் நேற்றைய செயல். ஒன்பது முறை எம்.எல்.ஏ வாகவும் ஆறாவது முறையாக அமைச்சராகவும் பதவியில் இருக்கும்  தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் அவர்களிடமிருந்து இப்படி ஒரு செயலை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகிலுள்ள  பாலவநத்தம் கிராமத்தில், அமைச்சரைக்கண்டு தனது கோரிக்கை குறித்து  மனு அளிக்க வந்த ஒரு பெண்ணின் தலையில், தன் கையிலிருந்த பேப்பரால் அமைச்சர் அடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. ஊடகங்களில் இது குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. பெண்ணியவாதிகளும், பெண்களுக்காகக் குரல்கொடுப்பவர்களும் அமைச்சரின் இந்த ஆனவப் போக்கைக் கடுமையாகக் கண்டிப்பதுடன் தேசிய மகளிர் ஆணையம் அமைச்சரமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளனர். பாஜக வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பதவி விலக வேண்டும் எனவும் அல்லது அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  ஆனால், திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வழக்கம்போலவே செலக்டிவ் பாலிடிக்ஸ் மனப்பான்மையுடன் கள்ள மௌனம் காக்கின்றன. சற்றே துணிவுடன் வீட்டைவிட்டு வெளியே வரும் பெண்களை மீண்டும் மீண்டும் வீட்டிற்குள் அடக்கி வைக்கும் செயலாகத்தான் இதைப் பார்க்க முடிகிறது. சமுக வலைத்தளங்களில் நொடிக்கொருமுறை வலம் வரும் இது போன்ற காணொலிகளைக் காணும் எந்தப் பெண்களும், இனி எப்படி மக்கள் பிரதிநிதிகளைச் சந்திக்க முற்படுவார்கள்? தங்களுக்கான உரிமைகளையோ, தேவைகளையோ எவ்வாறு கேட்டுப்பெறுவார்கள்? பலர்கூடி நிற்கும் பொதுவெளியில் மனு கொடுக்கச் செல்லும் பெண்களுக்கே இந்த நிலைதான் இங்கு. தனது அதிகாரத்தின் வலிமையை விளிம்புநிலை மக்களிடம் காட்டுவதுதான் பொறுப்பிலிருக்கும் அமைச்சர்களுக்கான மாண்பா? பொதுவாக அரசியல்வாதிகளின் அதிகார போதையே ஏழை மக்களின் மீது கை வைக்கும் துணிச்சலைத் தருகின்றது. அதுவும் பெண்கள் என்றால், அந்தத் துணிவு பன்மடங்காகப் பெருகி விடுகிறது.  மூச்சுக்கு மூச்சு, சமூக நீதியை வலியுறுத்தும் கட்சியிலிருந்துதான் இப்படியொரு மனிதத் தன்மையற்ற செயல் வெளிப்பட்டிருக்கிறது. பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஐ சமூகநீதி நாளாக அறிவிப்பதனால் மட்டும் சமூகநீதி பிறந்துவிடாது. அதன் ஓர் அங்கமான பெண் உரிமைக்காகவும், பெண்விடுதலைக்காகவும்  பெரியார் காட்டிய பாதையில் நடப்பதுதான் அரசின் இலக்காக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, சமூக நீதி என்பது குறிப்பிட்ட இனத்திற்கானது இல்லை,  இச்சமூகத்தில் உள்ள அனைவருக்குமானது. குறிப்பாக ஆயிரமாயிரமாண்டுகளாக  பள்ளங்களிலும், ஏற்றத்தாழ்வுகளிலும் புதையுண்டு ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்களுக்கானது. அந்தப் பள்ளங்களைச் சமன் செய்து, பாதிக்கப்பட்டவர்களைக் கைதூக்கி விடுவதுதான் சமூகநீதியேயன்றி தங்களுக்கு தேவைப்படும்போது, தேவையான இடங்களில் மட்டுமே பேசி, கைதட்டு வாங்குவதல்ல என்பதை அமைச்சரும், கட்சி மேலிடமும் புரிந்துகொள்ளவேண்டும். சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவி சூடுபிடிக்கத் துவங்கிய சில மணி நேரங்களில், பாதிக்கப்பட்ட பெண்ணே, “அமைச்சர் என்னை அடிக்கவில்லை, அவர் என் குடும்பத்தில் ஒருவர்” என விளக்கமளித்திருப்பது – விளக்கமளிக்க வைக்கப்பட்டிருப்பது – நகைச்சுவையின் உச்சம். இன்றைய முதல்வர் கடந்த ஆட்சிக்காலத்தில், சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞரை அடித்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு அழைத்து உபசரித்த காட்சி இப்போது நம் நினைவில் மீண்டும் வருகிறது. தன் குடும்பத்துப் பெண்ணாக இருந்தாலும் அடிக்கும் உரிமையை எந்த அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ளது? ஒரு சாமானியப் பெண்ணைப் பொதுவெளியில் அலட்சியமாக நடத்தும் அரசியல்வாதிகள், இதுபோன்ற சாமானியர்களால்தான் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பொதுவெளியில் பெண்களை அராஜகமாக நடத்துபவர்கள் குடும்ப உறுப்பினர்களோ, மேன்மைதாங்கிய(!) மக்கள் பிரதிநிதிகளோ யாராக இருந்தாலும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவர்களே; கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே. எனவே, முதலமைச்சர் உடனடியாக அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதே, இது மக்களாட்சி என்ற நம்பிக்கையை உருவாக்கும். அதுமட்டுமல்லாது, இதுபோன்ற உறுதியான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மக்களை மதிக்க வேண்டும் என்ற சிந்தனை இவரைப்போன்ற மக்கள் பிரதிநிதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் உருவாகும். இந்த ஆட்சி மீது மக்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பதவி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்த வேறுபாடும் இன்றி மக்கள் அனைவரையும் சமமாக மதிப்பதே உண்மையான சமூக நீதி. அதுவே உண்மையான திராவிட மாடல். எளிய மக்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதி அவமதிப்பது திராவிட மாடல் அல்ல; அது சட்ட விரோதம். ரமாதேவி இரத்தினசாமி

சிப்பாய் புரட்சி – ஒரு பின்னணி

சிப்பாய் புரட்சி – ஒரு பின்னணி

1799, மே மாதம் 4-ம் தேதி. ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டையைக் காக்க, திப்பு சுல்தான் விரைந்து செல்கிறார். தான் உயிரினும் மேலாக நம்பிக்கை வைத்திருந்த பூர்ணையாவும், மிர்சாதிக்கும், கமருதீனும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக மாறியதைக்கண்டு, ஒரு வினாடி பதைத்துத்தான் போனார். அவர்தான் வீரனாயிற்றே; உடைவாளைச் சுழற்றிக் களத்தில் இறங்கினார் திப்பு. எதிர்முகாமில் வெல்லெஸ்லி தலைமையில் ஏகாதிபத்தியப்படை. பெரும் போர் நடந்தது. போரின் நடுவே ஏதோ ஒரு துரோகியின் வாள் திப்புவைத் தாக்கியது. போர் முடிவுக்கு வந்து, வெள்ளையர்கள் திப்புவைத் தேடுகின்றனர். இறுதியில், ஒரு மன்னனுக்குரிய எந்த அடையாளமும் இன்றி, போர்க்களத்தில் வீரர்கள் உடல்களுக்கிடையில் கிடக்கிறது, மாவீரன் திப்பு சுல்தான் உடல். போர்முடிந்ததும், திப்பு சுல்தான் மகன்களும் மகள்களும் உறவினர்களும் வேலூர் கோட்டைக்குள் சிறை வைக்கப்பட்டனர். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில், போர்க்களத்தில் உயிர் நீத்த ஒரே மன்னரான திப்புசுல்தான் வாரிசுகள்,வேலூர் சிறையில் வாளாவிருக்கவில்லை. வேலூர் கோட்டைக்குள் இருந்த சிப்பாய்கள், மீசை வைக்கக்கூடாது; தலைப்பாகை மாற்ற வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாட்டு கொண்டு வந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் உத்தரவுகளை எதிர்த்து, சிப்பாய்கள் கனன்று கொண்டிருந்தனர். சிப்பாய்களின் எதிர்ப்பை திப்பு சுல்தானின் மூத்த மகன் ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகன் மொஹியுதீனும், நான்காவது மகன் மொய்சுதீனும், அரசியல் ரீதியாக உருமாற்றி வந்தனர். இறுதியில், 1806 -ம் ஆண்டு ஜூன் மாதம் 17-ம் தேதி, புரட்சிக்கான தேதி தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தவிர்க்க முடியாத காரணங்களால் அந்தத் தேதியில் புரட்சி நடைபெறவில்லை. பின்னர் 1806-ம் ஆண்டு, ஜூலை மாதம் 10-ம் தேதி நிச்சயிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில், ஜூலை 10-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு, வேலூர் கோட்டைக்குள் புரட்சி வெடித்தது. இந்திய சிப்பாய்கள், சுபேதார் ஷேக் காதம், ஷேக் காசீம், சுபேதார் ஷேக் ஹுசைன் ஆகியோர் தலைமையில் அணிவகுத்து, ஆங்கிலேய அதிகாரிகளையும், ஆங்கிலேய ராணுவ வீரர்களையும் சுட்டு வீழ்த்தினார்கள். கட்டாய தலைப்பாகை அமுல் படுத்திய கர்னல் மிக்கிராஸ் உட்பட, 14 வெள்ளை அதிகாரிகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். “வாருங்கள் நவாப், திப்பு சுல்தான் ஆட்சியைத் தொடருங்கள்” என்று, திப்பு சுல்தானின் மூத்த மகனை அழைத்தனர் சிப்பாய்கள். வேலூர் கோட்டைக்குள் யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு, திப்பு சுல்தானின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. ஆனால், அதிகாலை ஆர்க்காட்டிலிருந்து கர்னல் ராபர்ட் கில்லஸ்பி (Colonel Robert Gillespei) தலைமையில் பிரிட்டிஷ் படைகள் வந்து, புரட்சிக்காரர்களை வேட்டையாடியது.தன்னெழுச்சியாக எழுந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கெதிரான பெரும் புரட்சி, வெந்து தணிந்தது. ஆனாலும், அந்தத் தீ நாளங்கள் அணைந்ததுபோல் தோன்றினாலும், அதில் புகைந்து கனன்று கொண்டிருந்த தீக்கனல்,1857-ம் ஆண்டு அடுத்த புரட்சிக்கு உந்து சக்தியாக இருந்தது என்பது வரலாறு. ஆனால், 1806 -ம் ஆண்டு நடைபெற்ற வேலூர் புரட்சி, இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் உரிய இடத்தைப் பெறவில்லை என்பதுதான் கொடுமை. ஷாகுல் ஹமீது

மகா மகா சாணக்கியன்

மகா மகா சாணக்கியன்

“தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட – இழிவாய்க் கருதப்பட்ட மக்கள், அதாவது தீண்டத்தகாதோர் –  கீழ் சாதியார் – ஈன சாதியார் – சூத்திரர் என்பனவாகிய, ‘பிறவி இழிவும் – பிறவி அடிமைத்தனமும், சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும், விடுதலைக்கும், சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி, பிரவாகமும், வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கை கொண்டு, அதில் இறங்கி வேலை செய்தவர், அவ்வேலையில் அவர்பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடியாததாய் இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு விரோதி; ஆதிக்கமும், செல்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி; ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சாரக் கூலிகளுக்கு விரோதி! இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும்படியான  நிலையில், நெருப்பின்மேல்  நின்றுகொண்டு வேலை செய்வதுபோல், வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் – இலக்கியமாகவும் விளங்கினார்.” இவ்வளவு அடைமொழிகளையும், அர்த்த மிக்க சொல்லாடல்களையும் தந்தை பெரியார் அவர்களால் பொழிந்து எழுதப்பட்டது யாருக்கு என்றால், பானகல் அரசர் என்று கூறப்படும் பனங்கண்டி இராமராய நிங்கர் அவர்களுக்குத்தான்! தந்தை பெரியார் நெஞ்சத்தில் ஆழமாகக் குடிகொண்ட இந்தப் பெரு மகனாரின் பிறந்தநாள் இந்நாள் (சூலை 9, 1866). பெருஞ்செல்வக் குடும்பத்தில் பிறந்தவர். இவரின் முன்னோர்கள் ஆந்திராவின் பானகல்லு எனும் ஊரைச் சேர்ந்தவர்கள். அதன்பின் காளஸ்திரியில் குடியேறினர். காளஸ்திரி அரசர் குடும்பத்தோடு மண உறவு கொண்டவர்கள். சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்தவர் – சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றவர். 1912 முதல் 1915 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் மத்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு முத்திரையைப் பொறித்தவர். டாக்டர் சி. நடேசனார் அவர்களால் தொடங்கப்பட்ட திராவிடர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, நீதிக் கட்சியின் வேர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர். 1919ஆம் ஆண்டில் பார்ப்பனர் அல்லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கோரி, பிரிட்டானிய நாடாளுமன்றத்தில் வாதிட இங்கிலாந்து சென்ற நீதிக்கட்சிக் குழுவில் பானகல் அரசர் அங்கம் வகித்தார். 1920ஆம் ஆண்டில் சென்னை மாநில முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். வழக்குரைஞர் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சராகப் பணியாற்றியவர். உடல் நலக்குறைவு காரணமாக சுப்பராயலு ரெட்டியார் அவர்கள் பதவியிலிருந்து விலகியபோது, பிரதம அமைச்சராகப் பதவியேற்றார். 1923ஆம் ஆண்டுத் தேர்தலிலும் வெற்றி பெற்று பிரதம அமைச்சர் ஆனார். இவர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் அல்லாதார் பெற்ற உரிமைகளும், வாய்ப்புகளும், முன்னேற்றங்களும் அசாதாரணமானவை. 1) 1921ஆம் ஆண்டில் முதல் வகுப்புவாரி உரிமைச் சட்டம் (கம்யூனல் ஜி.ஓ.) இயற்றப்பட்டது.  2) பஞ்சமர், பறையர் என்ற பெயர்கள் நீக்கப்பட்டு ஆதி திராவிடர் என்று அழைக்கப்படுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. 3) தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்திற்காக ‘லேபர் கமிஷனர்’ என்ற தனி அதிகாரிகள் நியமனம். 4) ஆங்கிலேயர் வசமிருந்த சென்னை மாநில மருத்துவத் துறை இந்தியர் மயமாக்கப்பட்டது. ஆங்கிலேயர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வெடித்துக் கிளம்பியது. (நீதிக்கட்சி ஆங்கிலேயர்களுக்குத் துணை போனது என்று வாய்க் கூசாமல் பேசுவோர்க்கு இது காணிக்கை)  5) சென்னைப் பல்கலைக்கழக சட்டம்; அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டது. 6) கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தலைமை ஆசிரியர்களின் அதிகாரத்தில் இருந்தது.  பெரும்பாலும் அவர்கள் பார்ப்பனர்களாக இருந்ததால், பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் கல்லூரிகளில் நுழைவு என்பது தடையாக இருந்தது. இதனை மாற்றி கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு என்று தனிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. 7) மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது (இந்தக் கால மருத்துவர்களுக்கு இந்த வரலாறு தெரிய வேண்டும்). 8) பார்ப்பனர்களின் கொட்டமாக இருந்து வந்த இந்துக் கோயில்களின் சொத்துகளைக் காப்பாற்ற, இந்து அற நிலையச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. (மத விஷயங்களில் அரசு தலையிடுகிறது என்று சத்தியமூர்த்தி அய்யர் போன்ற தலைவர்கள் போட்ட கூச்சல் கொஞ்ச நஞ்சமல்ல! நீதிக்கட்சிக்காரர்கள் பிராமணர்களை மட்டுமல்ல; கடவுளையும் அழிக்கக் கிளம்பி விட்டனர். மதத்தை அழிக்க முனைந்து விட்டனர் என்று முரட்டுக் கூச்சல் போட்டனர்). 9) நலிவுற்ற ஆலைகளுக்கு அரசு நிதி உதவும் திட்டம் – தொழில்கள் வளர்ச்சி அடைவதற்கு வழி செய்யப்பட்டது. 10) சென்னையில் தியாகராயர் நகர் என்ற விரிந்த பகுதியை உருவாக்கிய வரும் இவரே! “மகா மகா சாணக்கியன்” என்று பார்ப்பனர்களால் கருதப்பட்டவர் பானகல் அரசர். தனது திரண்ட செல்வத்தைப் பொது வாழ்வுக்காகக் கொட்டியவர். தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். பானகல் அரசர் மறைந்தபோது தந்தை பெரியார் எழுதிய மிக நீண்ட அறிக்கை – பானகல் அரசரின் அருமையையும், சாதனையையும் என்றென்றைக்கும் பறைசாற்றும்! வேறு எந்தத் தலைவருக்கும் இவ்வளவுப் பெரிய அறிக்கையை தந்தை பெரியார் வெளியிட்டதில்லை. ‘திராவிடர் இயக்கம் என்ன சாதித்தது?’ என்று கேட்பவர்கள் அதன் சாதனைகளை அறியாதவர்களே! நீதிக்கட்சி அடிகோலிய கட்டுமானத்தின்மீதுதான் இன்றைய வளர்ச்சிகள் எல்லாம் நிமிர்ந்து நிற்கின்றன என்பதுதான் உண்மை. குறிப்பாக, சமூகநீதி என்பது இன்றைக்கு இந்தியா முழுவதும் உயிரோட்டமாக – ஒடுக்கப்பட்ட மக்களின் அடிநாதமாக இருக்கிறது.  இந்திய அரசமைப்புச் சட்டமே அங்கீகரிக்கிறது என்றால் அதற்கான ஆசான் நீதிக்கட்சியே! நீதிக்கட்சியே!! ‘மகா மகா சாணக்கியன்’ என்று பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்பட்ட பானகல் அரசரின் பிறந்த நாளில் அந்தப் பெருமகனாரை மிகுந்த நன்றியுணர்வுடன் நினைவு கூர்வோம். சமூகநீதிக்கு அறை கூவல்கள் புறப்பட்டு இருக்கும் இந்தக் காலகட்டத்தில், பானகல் அரசர் என்ற பெருமானின் உணர்வுகளை, தந்தை பெரியார் கொடுத்துச் சென்ற போராட்டக்  குணத்தோடு முன்னெடுப்போம்! சமூக நீதிக்கான சவால்களை முறியடிப்போம்! வாழ்க பானகல் அரசர் என்ற பெம்மான்! கி.வீரமணிதலைவர்,திராவிடர் கழகம்9-7-2016சென்னை பானகல் அரசரின் 156 ஆம் பிறந்தநாள் இன்று! ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, பானகல் அரசரின் 150 ஆம் பிறந்தநாளில் வெளியிட்ட அறிக்கை இது.

மயிலை சீனி எனும் தமிழ்த் தேனீ

மயிலை சீனி எனும் தமிழ்த் தேனீ

வாழ்நாள் முழுதும் வரலாற்றைத் தேடியமயிலையின் வானம்பாடிஆழ்ந்த தமிழ்ஞானிஆனால் படிக்கவில்லை பள்ளிதாண்டி கோயில் வரலாறெனில் அதன் கொடி வரலாறாய் விரியும்சமய வரலாறெனில் தத்துவமும் குடைபிடிக்கும்பண்பாட்டைச் சொல்லவந்தால் பயன்பாடும் சேர்ந்துவரும்மொழியின் வரலாறென்றால் மூதறிஞரும் முகமன் சொல்வார் அதனால்தான்பாரதிதாசன் இப்படி அறையலுற்றார் ‘தமிழையே வணிகமாக்கித்தன்வீடு மக்கள் சுற்றம்தமிழிலே பிழைப்பதற்குதலைமுறை தலைமுறைக்குத்தமிழ்முதலாக்கிக் கொண்டபல்கலைத் தலைவன் எல்லாம்தமிழ்ச் சீனி வேங்கடத்தின்கால் தூசும் பெறாதென்பேன்’ மொழிக்கு சமயங்களின் கொடைகளைமுத்தான பலநூல் வழி மொழிந்ததெல்லாம்மொழிச் சரிதம் படிப்போருக்கு முழுநிலவாய்க் கூடவரும் ‘கிறித்துவமும் தமிழும்’ அவர் எழுதிய முதல்நூலாம்பொறிவாயில் ஐந்தவித்த புத்தனைப் பின்தொடர்ந்த‘பௌத்தமும் தமிழும்’ அடுத்து வந்தது‘சமணமும் தமிழும்’ ‘இசுலாமும் தமிழும்’‘இந்துமதமும் தமிழும்’ என்றெல்லாம்சமயத்தோடு மொழிவரலாற்றைச் சேர்த்து எழுதினார் அழகர் கோவில் வரலாறு எழுதப் புகுந்தஅறிஞர் தொ.பரமசிவன்மயிலை வேங்கடத்தின் ஆய்வையேமுதற்புள்ளியாகக் கொண்டார் தரவில்லாமல் இருண்டிருந்த களப்பிரர் வரலாற்றைஇலக்கிய வெளிச்சத்தில் கரம்பிடித்து அழைத்து வந்தார்பல்லவ மன்னர்கள் வரலாற்றைப்பலநூல்களாய் எழுதித் தந்தார் மகாபலி புரத்தை மாமல்லபுரம் என்றுகண்டுதமிழர் மனதில் மகிழ்ச்சி பெய்தார்மகேந்திரப் பல்லவனின் மத்த விலாச அங்கதத்தைதமிழில் தந்தவரும் மனோன்மணியத்தைபதிப்பு செய்தவரும் மயிலையார்தான் நுண்ணிய கலை ஆய்வும் அவரே தொடங்கிவைத்தார்சங்க கால வரலாறு தொட்டுசமகால இலக்கிய வரலாறு வரைமயிலை சீனி வேங்கடசாமியின் கொடை உண்டு கல்வெட்டு ஆய்வுக்கும் செப்பேட்டு ஆய்வுக்கும்சொல்வெட்டுச் செய்த மயிலை சீனி வேங்கடசாமிக்குசூலை எட்டில் நினைவு தினம் தமிழைக் கொண்டாடுமுகத்தான்தமிழ்த் தேனீயை அறிந்து போற்றுவோம் கோமதி சங்கர்

அப்துல் கலாமின் மௌனம்

அப்துல் கலாமின் மௌனம்

சென்ற மாதம் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். அறையைச் சுத்தம் செய்ய வந்தவர் வயதில் மூத்த ஒரு பெரியவர். ‘பெயர் என்ன?’ என்று கேட்டேன். ‘அப்துல் கலாம்’ என்றார். ‘கலாமின் பெயர் உங்களுக்கும்’ என்றேன். சிரித்துக்கொண்டார். ‘எவ்வளவு ஊதியம் வாங்குகிறீர்கள்?’ என்றேன். குறைவான ஊதியம் ஒன்று சொன்னார். ‘கட்டுபடியாகிறதா?’ என்றேன். ‘விலைவாசி ஏறிவிட்டது’ என்றவர், ‘சாதாரண மக்கள் பாடு மிகச் சிரமம்’ என்றார். நானும், இன்று காசுக்காக மக்கள் படும் சிரமங்களைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ‘கேஸ் விலை கூடிவிட்டது’ என்றேன். அவரும் ‘ஆமாம் சார்’ என்று சொல்லிக்கொண்டே வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தார். ‘எல்லாம் இந்த மத்தியில் இருக்கிற மோடி அரசுதான்’ என்றேன். பேசியவர் அமைதியானார். ‘மோடியின் பொருளாதார, நிர்வாகச் சீர்கேடு’ என்று சொன்னேன். அமைதியாகவே இருந்தார். ‘என்ன ஒன்றும் சொல்ல மாட்டேங்கிறீர்கள்?’ என்றேன். ‘அதுதான் நீங்கள் சொல்லிட்டீங்களே சார்’ என்றார். ‘எல்லாம் இந்த மோடி அரசுதான் என்று, நான் வெளிப்படையாகச் சொல்கிறேன். அதுபோல நீங்கள் ஏன் சொல்ல மாட்டேங்குறீர்கள்?’ என்றேன். ‘அதற்குக் காரணம் உங்களுக்கும் தெரியும் சார்’ என்று சொல்லிவிட்டு வேலையில் முனைப்பாக இருந்தார். என்னால் மோடி அரசுதான் காரணம் என்று வெளிப்படையாக மற்றவருடனான உரையாடலில் சொல்ல முடியும்போது, கலாம் என்கிற பெயரைத் தாங்கியிருக்கிற ஒரு மனிதரால் ஏன் அப்படிச் சொல்ல இயவில்லை? ஏன் அந்த அச்ச உணர்வு அவருக்கு ஏற்படுகிறது? வலிந்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த அச்ச உணர்வைத்தான் ஆகப் பெரிய ஆபத்தாக உணர்கிறேன். அரசின் அதிகாரத்தோடு இணைந்து, ஒரு பகுதி மக்களை அச்சத்தில் வாழும் சூழலை உருவாக்கியிருக்கிறார்கள். சமுகத்தைப் பிளவுபடுத்தியிருக்கிறார்கள். உயிர் வாழ்வதற்கான பயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். சாதிய முரண்பாட்டிலும்கூட, உரிமைகளைப் பறிப்பதைவிட உயிர்வாழ்வதற்கான அச்சத்தை உருவாக்குவதையே ஆகப் பெரிய ஆபத்தாகக் காண்கிறேன். ஏனெனில், இருத்தலுக்கே போராடும் மக்களிடம் உரிமைப் போராட்டம் என்பதற்கு வழியின்றிப் போய்விடும். எனவே, உரிமைப் பறிப்புக்காக அவர்கள் தனியே எதுவும் மெனக்கெட வேண்டியதில்லை. சாதியப் படிநிலையில், பார்ப்பனர்களைவிட சூத்திரர்கள் என்கிற சாதி இந்துக்கள், தங்களுக்குக் கீழ் இருக்கிற ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்துபவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். 25 ஆண்டுகள் முடிந்தாலும் மேலவளவு படுகொலைகளை இன்று வாசித்தாலும் அச்சமாக இருக்கிறது; வெண்மணியும் கூட. க. பாண்டியராசன்

அகிலன் என்னும் இலட்சிய எழுத்து

அகிலன் என்னும் இலட்சிய எழுத்து

தமிழ் படைப்பிலக்கிய உலகில் மிகச் சிறந்த ஆளுமையாக விளங்கியவர் எழுத்தாளர் அகிலன். 1922 இல் புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் என்னும் ஊரில் பிறந்த அகிலாண்டம் என்ற அகிலன் 1938 இல் தனது முதல் கதையை எழுதினார். பள்ளியில் வெளிவந்த பத்திரிகையில் ‘அவன் ஏழை’ என்ற அந்தக் கதையை பதினாறு வயதுப் பையனான அகிலன் கொடுத்தபோது, அந்தக் கதையின் நடைச் சிறப்பு ஆசிரியருக்கு ஐயத்தை ஏற்படுத்த, இந்தக் கதையை எங்கு திருடினாய்?’ என்று கேட்டார். ‘ஐயா, என் கதையை நீங்கள் பிரசுரிக்க வேண்டாம். திருப்பித் தந்து விடுங்கள். நான் திருடனில்லை’ என்று ஆவேசப்பட்டிருக்கிறார் அகிலன். அந்த ரோசத்திலேயே உண்மையை உணர்ந்த ஆசிரியர், அவரைத் தட்டிக் கொடுத்தார். 1944 இல் அவரது முதல் நாவல் ‘மங்கிய நிலவு’ வெளிவந்தது. ஆனால், அகிலன் தமிழ் வாசகர்களிடையே வாழ்நாள் முழுவதும் மங்காத முழு நிலவாகவே பிரகாசித்தார். பள்ளிப் பருவத்திலேயே வாலிபர் சங்கம் அமைத்து, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணிகள் நிராகரிப்பு என்றெல்லாம் தேசிய இயக்கங்களில் செயல்பட்டிருக்கிறார். தேசிய இயக்கத்தில் ஆழ்ந்த பற்றுக் கொண்டிருந்த அகிலனுக்கு, ‘தேச விடுதலை மக்களின் வாழ்வில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும்’ என்று, அன்றிருந்த எல்லாப் படைப்பாளிகளைப் போலவே மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்யோ என்ற யதார்த்தம் அவரைச் சுட்டிருக்க வேண்டும். அவர் படைப்புகளில் இந்த ஏமாற்றத்தை நாம் அடையாளம் காண முடியும். மு.வ., கி.வா.ஜ. உள்ளிட்ட இலக்கிய ஜாம்பவான்களிடமும், சிவாஜி கணேசன், டி.கே.எஸ். சகோதரர்கள் உள்ளிட்ட கலைஞர்களுடனும் நெருக்கமும் அன்பும் கொண்டிருந்தார். தீவிர கொள்கைப் பிடிப்பும் நேர்மையும் அவரது எழுத்தாளர் வாழ்வின் இலட்சியமாக இருந்தன. போட்டி மிகுந்த அன்றைய படைப்புலகில், அவர் தன் இலட்சியத்தில் என்றும் தளராமல் தன் படைப்புகளை வெளிக் கொணர்ந்தார். அகிலனுக்கென்று மிகப் பெரிய வாசகர் வட்டம் எப்போதும் இருந்தது. எல்லா வார, மாத இதழ்களிலும் அவரது சிறுகதைகளோ தொடர் கதைகளோ நிச்சயம் வந்த வண்ணம் இருக்கும். மொத்தம் 20 நாவல்கள், 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாடகங்கள் மற்றும் சிறுவர் நூல்கள் என்று பன்முகப் படைப்பிலக்கியங்களிலும் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார். எளிய நடையுடன் கூடிய இவரது படைப்புகளில், சமூகப் பொறுப்புடன் கூடிய எழுத்து வேட்கை துலங்குவதைக் காண முடியும். சுவையான கதைக்களம், உயிர்த் துடிப்பான பாத்திரப் படைப்பு, அறம் சார்ந்த வாழ்க்கையின் மீதான பிடிப்பு என்று, அகிலனின் படைப்புகள் வாசகர் மனதைக் கொள்ளை கொண்டன. 1963 இல் அவரது சரித்திரப் புதினமான ‘வேங்கையின் மைந்தன்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற அகிலன், 1975 இல் அவரது ‘சித்திரப் பாவை’ நாவலுக்கு ஞான பீடம் விருதையும் வென்றார். அவரது பாவை விளக்கு, வாழ்வு எங்கே மற்றும் கயல் விழி ஆகிய படைப்புகள் திரைப்படங்களாக வந்தன. எங்கே போகிறோம், சிநேகிதி, பெண், கொம்புத் தேன் மற்றும் நெஞ்சின் அலைகள் உள்பட்ட மகத்தான நாவல்களைப் படைத்த அகிலன், தனக்கென்று மிகப் பெரிய வாசகர் உலகத்தைக் கொண்டிருந்தார். அகிலனின் படைப்புகள் சர்ச்சைகளையும் காட்டமான விமர்சனங்களையும் சந்தித்த தருணங்களும் உண்டு. அவற்றை மிகுந்த நேர்மையுடன் அணுகினார் அகிலன் என்ற பண்பாளர். மிகச் சிறந்த இலக்கிய மேதையும் ஒரு அரை நூற்றாண்டு கால இலக்கிய உலகின் இலட்சியம் மிக்க அடையாளமாகவும் (1944 – 1988) தமிழ் உலகில் சுடர் விட்ட அகிலனுக்கு இன்று நூற்றாண்டு தொடங்குகிறது. சுவடு இதழ், ஒரு தொடக்கமாக அகிலனின் நூற்றாண்டை, எழுத்தில் சமூகப் பொறுப்பின் அடையாளமாகப் போற்றிக் கொண்டாட வாசகர்களை அழைக்கிறது. வாழ்க அகிலன் புகழ்! கோமதி சங்கர்

செலக்டிவ் பாலிடிக்ஸ்

செலக்டிவ் பாலிடிக்ஸ்

இது சமூக வலைத்தளங்களின் காலம். சமூகத்தில் நிகழும் எந்தவொரு நிகழ்வையும் சமூக வலைத்தளவாசிகள் நினைத்தால், ஆதரவாக அல்லது எதிர்ப்பாக, பெரும் வைரலாக மாற்ற முடியும் எனும் காலம். சமூக வலைத்தளங்களால் உலகெங்கும் அரசுகளே தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ளும் நிலை சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்த நூற்றாண்டின் மாபெரும் இளைஞர் புரட்சியாகக் கருதப்படும் 2011 எகிப்துப் புரட்சியும் சரி, 2017 மெரினா ஜல்லிக்கட்டு புரட்சியும் சரி, சமூகவலைதளங்களின் சக்தியால் இளைஞர்களை ஒன்றுதிரட்டி நிகழ்த்திக் காட்டப்பட்ட பெரும் புரட்சிகள். இதைப் புரிந்துகொண்ட அரசியல்வாதிகளும், கட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் செலுத்தி, தனி அணிகளையே உருவாக்கி நடத்தி வருகின்றனர். மறுபக்கம் அச்சு ஊடகங்கள் வர்த்தக ரீதியாக சவால்களைச் சந்தித்து வரும் நிகழ்காலத்தில், சேட்டிலைட் சேனல்களுக்கே கடும் போட்டியைக் கொடுக்கும் விதமாக யூ-டியூப் சேனல்கள் பல்கிப்பெருகி வருகின்றன. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் எதுவாகட்டும், அவற்றின் கடமை, அறம் என்னவாக இருக்க வேண்டும்? நீதியின் குரலாக, பாதிக்கப்பட்டோரின் குரலாக ஒலிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் தரப்பு நியாயத்தையே பேசுபொருளாக்க வேண்டும். அதுதான் அறம். ஊடங்கங்களுக்கு மட்டுமல்ல; மக்களைக் காப்பாற்றுவாதற்காகவே அவதாரம் எடுத்து வந்துள்ள அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அறம். இந்தச் சூழலில், அண்மைக்காலத்தில் நடந்தேறிவரும் சில நிகழ்வுகளைக் காண்போம். நிகழ்வு 1அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் உரிமை பொதுமக்களுக்கு உண்டு. உத்திரபிரதேசத்தில் சில இடங்களில் குறிப்பிட்ட சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் செய்த குற்றங்களுக்கு வழக்குப் பதிவு செய்யட்டும். நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று, குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சட்டப்படி தண்டனைகள் வழங்கப்படட்டும். அதில் தவறு இல்லை. ஆனால் உ.பி. அரசு இந்த நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படாத ஒரு புதிய நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. அதாவது, போராட்டங்களை முன்னின்று நடத்துவோர் மற்றும் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்டோரது வீடுகள் ஆக்கிரமிப்பு நிலங்களில் அல்லது விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக கூறி, காலையில் நோட்டீஸ் அளிக்கப்படுகிறது. மதியம் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. உ.பி இந்தியாவின் ஒரு அங்கம்தானே? இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட மாநிலம்தானே? அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் கடமையும் நாடாளுமன்றத்திற்கும் உச்சநீதிமன்றத்திற்கும் இருக்கிறது அல்லவா? அந்த அமைப்புகள் கடமையைச் செய்யாவிட்டால் எதிர்க்கட்சிகளுக்கும் ஊடகங்களுக்கும் அந்தக் கடமையைச் செய்ய வைக்க வேண்டிய பொறுப்பு இருக்கிறதுதானே? நிகழ்வு 2தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 7 விசாரணைக் கைதிகள் காவல்நிலையத்தில் மரணமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கடுமையாகத் தாக்கப்பட்டதால் மரணமடைந்த்தாகச் சொல்லப்பட்டுள்ளது. ஒரு மரணத்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வருவதற்குள், முதலமைச்சர் சட்டமன்றத்தில், அந்த நபர் உணவு ஒவ்வாமையால் மரணித்ததாக தவறான தகவலைச் சொல்கிறார். நிகழ்வு 3குடந்தையைச் சேர்ந்த பட்டியல் சமூகப் பெண்ணும் திருவண்ணாமலையைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞரும் பெண்வீட்டார் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்தப் பெண்ணின் அண்ணன், தான் மனம்மாறி அவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி விருந்துக்கு அழைத்து, இருவரையும் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். நிகழ்வு 4கடந்த ஓராண்டில் தமிழகம் முழுவதும் ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெண்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். மேற்கண்ட அனைத்து நிகழ்வுகளிலும் அரசியல் கட்சிகளும் சரி, ஊடகங்களும் சரி, எல்லாவற்றையும் டிரெண்ட் ஆக்கும் சமூக வலைத்தளங்களும் சரி, பெரிதாகப் பொருட்படுத்தவே இல்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த லாக்அப் மரணத்தை மிகப்பெரிய அளவில் வைரலாக்கின சமூக வலைத்தளங்கள். அந்தச் செய்தியைத் திரும்பத்திரும்ப ஒளிபரப்பி, மக்களைக் கொதிநிலையிலேயே வைத்திருந்தன ஊடகங்கள். எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு போராட்டங்கள் நடத்தின. கடந்த காலங்களில் சாதி ஆணவப் படுகொலைகள் நடந்தபோது ஊடகங்களும் கட்சிகளும் இடைவிடாது பேசுபொருளாக்கி, போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், தற்போது குடந்தையில் நடந்த படுகொலையை சாதி ஆணவப்படுகொலை என்று குறிப்பிடவே மறுக்கின்றன. சாதிவெறி என்பது, சாதியப் படிநிலையின் எந்த அடுக்கில் இருந்தாலும் அது சமூக இழிவே என்ற உண்மையைப் பேசாமல் மூடி மறைக்கின்றன. அவ்வாறு உடைத்துப் பேசாமல், இத்தகைய படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்காமல், இவர்கள் சாதியை ஒழிக்கப் போராடுவதாகக் கூறுவது ஏமாற்று வேலை அல்லது நகைப்புக்குரியது. கடந்த காலங்களில் டெல்லியிலும் கஷ்மீரிலும் பெண் பாலியல் வன்கொடுமைகள் நடந்தபோது பொங்கி எழுந்து, “ஜஸ்டிஸ் ஃபார்_____” என்று பதாகைகள் ஏந்தியும் ஹேஷ்டேக்குகள் உருவாக்கியும் இவர்கள் எவ்வளவு பெரிய சமர் புரிந்தனர்? இங்கே நம் மண்ணில் நம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும்போது ஊடகங்களும் அன்று போராடிய கட்சிகளும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டுள்ளன. ஏன் இத்தகைய மாறுபட்ட நிலைப்பாடுகள்? நடந்த குற்றத்தைப் பாரபட்சமின்றிக் கண்டிக்க வேண்டுமே தவிர, குற்றம் புரிந்தவர் யார் என்று பார்த்து, கண்டிப்பதா வேண்டாமா என்று முடிவு செய்வது, அந்தக் குற்றத்தை விட மோசமானது. எத்தகைய அரச பயங்கரவாத்தையும் எதிர்க்க வேண்டுமே தவிர, நமக்கு வேண்டப்பட்ட அரசாக இருந்தால் கண்டுகொள்ளாமலும், நமக்கு எதிர்ப்பான அரசாக இருந்தால் பொங்கியெழுந்து போராட்டம் நடத்துவதும் மிகமிக ஆபத்தான போக்கு. இப்படியெல்லாம் ஊடகங்களும் முன்னால் எதிர்க்கட்சிகளும் செலக்டிவ் நிலைப்பாடுகளை எடுப்பதால்தான், திரு.ஆர்.எஸ்.பாரதி, திரு.அண்ணாமலை போன்றவர்கள் இவர்களை ஏலம்போட்டு இழிவுபடுத்தும் நிலை ஏற்படுகிறது. அதேபோல, சிறிய கட்சிகள் மற்றும் இயக்கங்கள், அந்தந்த நேரங்களில் பெரிய கட்சிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு ஆதரிக்கின்றன அல்லது எதிர்க்கின்றன என்ற விமர்சனங்கள் பலதரப்பிலும் வைக்கப்படுகின்றன. இவற்றை எல்லாம் சம்மந்தப்பட்டவர்கள் சிந்தித்துப் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நின்று நீதியை நிலைநாட்ட எப்போதும் தயங்காமல் முன்வர வேண்டும். இதனால் பாதிக்கப்படும் சாமான்யர்களுக்கும் நீதி கிடைக்கும். இவர்களும் மேற்சொன்ன விமர்சனங்களில் சிக்காமல் சுயமரியாதையுடன் நேர்மைக்கே உரித்தான கம்பீரத்துடன் பயணிக்கலாம். செய்வார்கள் என்று நம்புவோம். தஞ்சை ராஜேஷ்

ஆளரவமற்ற கட்டடங்களுக்கு உயிர் உண்டா?

ஆளரவமற்ற கட்டடங்களுக்கு உயிர் உண்டா?

மேப்படியான் திரைப்படத்தில் ஒரு காட்சி. வாழ்ந்த வீட்டை சந்தர்ப்ப சூழ்நிலையால் விற்றுவிட்டு வெளியேறுவார் நாயகன்.  வீட்டைக் காலி செய்து மூட்டை முடிச்சுகள் கட்டி, டெம்போ, ஜீப் வெளியேறும்.  அந்த ஜீப்பின் பின்பக்கம்,  உள்ளிருந்து நாய் அந்த வீட்டையே பார்த்துக்கொண்டு செல்லும்.  அந்த  நாயின் கோணத்தில் இருந்து காட்சிப்படுத்தி இருப்பார்கள்.  நாயகன் வருத்தத்துடன் அப்படியே பார்த்துக்கொண்டு சற்று நேரம் நிற்பார்.  அதன் பின் பைக்கில் ஏறிக் கிளம்புவார். அன்றைய திரைப்படங்கள் முதல், இன்று வரை பல திரைப்படங்களிலும் சூழ்நிலை காரணமாக, நாயகனின் சோதனை காலங்களில், அவர்கள் வாழ்ந்த வீட்டைவிட்டு வெளியேறும் காட்சிகளில் இதுபோலவே வீட்டை உற்றுநோக்கி விட்டுத்தான் வெளியேறுவது நடக்கும். கூடவே கனமான அல்லது சோகமான பின்னணி இசையும் ஒலிக்கும். பல படங்களில் அது மனதை உருக்கும் சென்டிமென்ட் நிறைந்த க்ரிஞ் காட்சிதான். அந்த வீடுகளுக்கு அல்லது கட்டிடங்களுக்கு உயிர் உண்டா?  என்ற பெருங்கேள்விக்கான பதில்: மனிதர்களின் நிரம்பி வழிந்து உரையாடல்கள் வழி மென் உணர்வுகள் கடத்தப்படும்போது அந்தக் கட்டிடங்களுக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு விடுகிறது.   அந்த இடங்களுக்கு, கட்டிடங்களுக்கு மீண்டும் செல்லும்பொழுது, தேங்கிக் கிடந்த நினைவலைகளுக்கு மீண்டும் உயிர் வந்து, சிறகடிக்க ஆரம்பித்து விடுகின்றன. அதற்காகவே மனம் அந்தப் பழைய இடங்களுக்குச் சென்று, அந்த நினைவலைகளில் பயணித்து, வாழ்வை உயிர்ப்பித்து, மனதைப் பரவசப்படுத்திக் கொள்ள நினைக்கின்றது.  5 வருடங்களுக்குப் பிறகு, கடந்த மாதம் ITPL அலுவலகம் சென்றேன் அல்லது வரவழைக்கப்பட்டேன்.  எப்போதும் மூன்று, நான்கடுக்குப் பாதுகாப்பு சோதனைகள் நிறைந்த அலுவலகம் இந்த  ITPL .  அடர் நீல நிறப் பேண்ட்டும்,  வெளிர் நீல நிறச் சட்டையும் அணிந்த இறுக்கமான பாதுகாப்புப் பணியாளர்கள்/அதிகாரிகள், வட கிழக்கு மாநிலத்தில் இருந்த இறக்குமதி ஆனவர்கள். வழக்கமாகக் கூட்டமாக இருப்பவர்கள், அன்று ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள்.      பைக்கில் உள்ளே சென்றால் துப்பாக்கி போன்ற ஒரு சோதனைக் கருவியை வைத்து பின்புறம் மாட்டியுள்ள பையை ஸ்கேன் செய்யும் பாதுகாப்பு சோதனை இல்லை.  உள்வரும் வாகனனங்களை வரிசையாக  ரேஸ் விடுவதுபோல நிறுத்தி, அதற்கு முன்னால் ஒரு கம்பியை நீட்டிக்கொண்டு செல்லும் சோதனையும் இல்லை.  சில சோதனைகள் எல்லாம் எதற்கு செய்கிறார்கள் என்று அவர்களுக்கும் தெரியாது; நமக்கும் தெரியாது.  அந்த வகை சோதனைகளில் இதுவும் ஒன்று.   ஆரம்பத்தில் புதிதாக உள்ளே சென்றபோது நிறுவன ஸ்டிக்கர் இல்லாமல் இவர்களிடம், தங்லீஷ் ஹிந்தியில் பேசி விருந்தினர் அட்டை வாங்கி  உள்ளே நுழைந்தது  தனிக்கதை.   இன்று அடையாள அட்டையை மட்டும் சோதனை செய்து அதில் ITPL ஸ்டிக்கர் உள்ளதா என்று பார்த்து அனுப்புகிறார்கள்.  அவர்களுக்குத் தேவை, அந்த குறிப்பிட்ட ஸ்டிக்கர்தானே தவிர, நமது முகம் அல்ல.  புதிய சோதனையாக, காய்ச்சல்  சோதிக்கும் கருவியைக் கையில் காண்பித்து  சோதனை செய்கிறார்கள். உள்ளே நுழைந்தாயிற்று.   ‘பார்க்கிங் காசு வாங்குவார்களே, எங்கு நிறுத்தலாம்?’ என யோசிக்கும் பொழுது, காசு வாங்கும் அறை காலியாக இருந்தது.  ஒவ்வொரு வண்டியாகத் தடுத்து நிறுத்தும் ஆட்டோமேட்டிக் குச்சியைக் காணோம்.  நிரம்பி வழியும் இரு சக்கர வாகன நிறுத்துமிடம், புல் முளைத்துக்  கிடந்தது.  மரங்களின் சருகுகள் சற்று அதிகமாவே கிடந்தன. மரங்ககளின் நிழல்களில் அங்கங்கு சில பழைய வாகனங்கள், சிலந்திகள் கூடு கட்டி சமூக இடைவெளியில் இளைப்பாறிக்  கொண்டு இருந்தன.  காலியாகக் கிடந்த பைக் நிறுத்தத்தைப் பார்க்கும்பொழுது, ‘எத்தனை கொள்ளை எங்க கிட்ட அடிச்சிருப்பீங்கடா?’ என்றுதான் தோன்றியது. பார்க்கிங்கின் வெளியே அங்கங்கு சொற்ப பணியாட்கள்.  இவை அனைத்தும் இன்னும் அலுவலகங்களுக்கு மக்கள் வரவில்லை என்பதை அழுத்திச் சொன்னது. ஏதோ யாருமில்லாத உலகத்துக்குள் பயணிப்பது போல ஒரு மயான அமைதி.  கல்லூரி போல குழுமம் குழுமாகச் சாலையில் நடந்துகொண்டே இருக்கும் பட்டாம்பூச்சிகளைக் காணவில்லை.  டவுன் பஸ் ஏறும் கூட்டம் போல  இருக்கும் லிப்ட் லாபிகள், காலியாக இருந்தன. புதிதாக வெளிவரும் திரைப்படத் தியேட்டர் போல எந்நேரமும் கூட்டமாக இருக்கும் கா∴படீரியா, மொக்கைத்  திரைப்படத்தின் பகல் காட்சி போல யாருமின்றி இருட்டடித்துக் கிடந்தது. ஏதோ யாருமற்ற இடத்திற்குள் நுழைந்து போன்ற ஒரு பிரம்மை.    மனிதர்கள் இல்லாத இந்தக் கட்டிடங்கள், ஏதோ வாழ்ந்து கெட்ட  குடும்பத்தைப் போலத்தான் காட்சி அளிக்கின்றன. நகரமோ, கிராமமோ, இடங்களோ, கட்டிடங்களோ, மனிதர்கள் இல்லாவிடில்  அவை தொல்பொருள் இலாகாவின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்ட இடம் போலத்தான்.  மூடப்பட்ட அன்றைய மில்களும், தியேட்டர்களும் கடத்தும் வலிகள் அசாதாரணமானவை.  ஈரோடு பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள ராயல் தியேட்டரைக் கடக்கும் போதும் இதேதான் தோன்றும்.  ஆயிரம் ஆயிரம் மக்களைச் சுமந்து அவர்களைக் குதூகலப் படுத்திய  ஒரு அரங்கம்.  முண்டி அடித்துக்கொண்டு கம்பிகளின் இடையே கூட்டம் இருக்கும்.  பல திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக 100 நாள் கடந்து ஓடிய கட்டிடம்.  மேலே குறிப்பிட்ட, நாயகன் வீட்டைக் காலி செய்துவிட்டுப் போகும் காட்சி, அதில் ஓடிய திரைப்படங்களில் ஏதேனும் ஒன்றிலாவது வந்து இருக்கும். நிழல் உலகம் போல, நிகழ் காலங்களில் யாரும் பின்னணி இசை வாசிப்பது இல்லை.  இன்றைக்கு சண்டைக்காட்சிகள் எடுக்கப்படும் பின்னி மில் கூட இதுபோலத்தான் ஒரு காலத்தில் பரபரப்பாக இருந்திருக்கும்.   பலமாடிகளில் பகல் போல மின்னும் IT  நிறுவனக் கட்டிடங்களுக்கும் அந்த நிலைமை வருமா? தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் நம் ஊருக்கு வந்த 2000 களின் ஆரம்பத்தில், ‘5000 பேர் கொண்ட xy நிறுவனம் பழைய மஹாபலிபுரம் சாலையில் தொடங்க உள்ளார்கள்’ எனும் செய்தி செய்தித்தாள்களில் அவ்வப்போது வரும்.  இது மறைமுகமாக ஒரு 500 பேருக்கான வேலை வாய்ப்பை உருவாக்கும் எனும் ஒரு வரியும் அந்தச் செய்தியில் சேர்ந்து இருக்கும்.  அந்த ‘மறைமுகமான வேலைவாய்ப்பு’ என்பது அங்குள்ள கா∴படீரியா, அட்மின் துறை, கட்டிடங்களைப் பராமரிக்கும் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அலுவலகப் பேருந்தை இயக்குபவர்கள் என இன்னும் பலரும் அடங்குவார்கள்.  அது தவிர அந்தந்த அலுவலகங்களின் வெளியே உள்ள சின்னச் சின்ன பெட்டிக்கடைகள், இளநீர், பஜ்ஜி, பஞ்சர் கடைகள் என இன்னும் பலவும் சேரும்.    இந்த இரு வருடங்ககளாக அவர்கள் அப்படியேவா இருப்பார்கள்?  தெரியவில்லை. மீண்டும் இதுபோன்ற அலுவலகம் திறப்பார்கள், உலகம்  திரும்ப வரும் எனப் பலர் காத்துக்கொண்டு கூட இருக்கலாம். ஏனெனில் நம் கடந்த காலம் அப்படி.  தகவல் தொழில்நுட்பத் துறைப் பணியாளர்கள் இனி பழைய முறையில், அனைத்து நாட்களும் அனைவரும் அலுவலகம் வந்து இயங்குமா என்பதைக் காலம்தான் தீர்மானிக்கும்.  பல நிறுவனங்களும் ஹைபிரிட் என்று சொல்லக்கூடிய சில நாட்கள் அலுவலகம், பல நாட்கள் வீட்டிலிருந்து எனும் முறைக்கு மாறிக்கொண்டு இருக்கிறார்கள். இதுவே வழக்கமான முறையாக மாறக்கூடும்.  இது ஒரு வகையில் பெரு நகரங்களை, குறிப்பாக சென்னை, பெங்களூரை மூச்சு விட வைக்கும். ஆனாலும் நேரில் பார்க்கும்பொழுது வரும் தொடர்பு, உரையாடல், நெருக்கம்,  என்னதான் இணைய வழியே வேலை பார்த்தாலும் வருவது இல்லை.    இன்னும் திறக்கப்படாத டீக்கடைகள், பூட்டிக்கிடக்கும் பெட்டிக் கடைகளுக்காகவேனும் மீண்டும் இந்தக் கட்டிடங்களுக்கு மனிதர்களின் மூலம் உயிர் வர வேண்டும்.    க்ருஷ்

வெளிச்சத்துக்கு வரும் பார்ப்பனியப் படுகொலை

வெளிச்சத்துக்கு வரும் பார்ப்பனியப் படுகொலை

ராம்குமார் – இந்தப் பெயரை நம்மில் பலர் மறந்தே போயிருப்போம். நுங்கம்பாக்கம் சுவாதி கொலை வழக்கில், ஜெயிலில் கரண்ட் கம்பியைக் கடித்துச் செத்த ராம்குமார் என்று சொன்னால் பலருக்கும் நினைவு வரும். ராம்குமார் தற்கொலை?! வழக்கை, ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையம் சூ மோட்டோ வழக்காக எடுத்து விசாரித்தது. விசாரணையில், ‘ராம்குமார் மின்சாரம் தாக்கி இறந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என்று கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் Pathology துறைப் பேராசிரியர் டாக்டர் ஆண்டாள் பழனி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் மருத்துவர் டாக்டர் வேணு ஆனந்த் ஆகியோர் தெரிவித்துள்ளனர். போகிற போக்கில் அவர்கள் இதைச் சொல்லவில்லை. ராம் குமாரின் மூளை, சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல், நாக்கு, உதடு உள்ளிட்ட பல பாகங்கள் தங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும், அவற்றை ஆய்வு செய்ததில், எந்த பாகத்திலும் எந்தத் திசுவிலும் மின்சார பாதிப்புக்கு ஆளானதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். ராம்குமாரின் உடல் ராயப்பேட்டை மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது, அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த மருத்துவர் அப்துல் காதர், ராம்குமாரின் உடலோடு சிறை மருத்துவரும் வந்திருந்ததாகவும், சிறையில் என்ன சிகிச்சைகள் கொடுக்கப்பட்டன என்று கேட்டறியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், குறுக்கு விசாரணையின்போது, ‘ராம்குமாரின் உடலில் இருந்த காயங்கள் மின்சாரம் தாக்கியதன் அடையாளம் அல்ல. உடலை மார்ச்சுவரிக்கு அனுப்ப வேண்டியிருந்ததால், நான் அவரது உடலில் இருந்த புறக்காயங்களை சோதிக்கவில்லை. அவரது உடலின் திசுக்களை ஆய்வு செய்தால்தான் மின்சாரம் தாக்கியதா என்று தெரியவரும். ஆனால், முந்தைய அறிக்கையில், மின்சாரம் தாக்கிய காயம் இருந்ததாக, தவறுதலாகக் குறிப்பிட்டு விட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார். முன்னதாக, ராம்குமார் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் மறுவிசாரணை கோரித் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சியில், பார்ப்பனியம் நடத்திய படுகொலைகளில் ராம்குமார் மரணமும்! ஒன்று என்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மக்களுக்குக் காவலாக இருக்க வேண்டிய காவல்துறை, உயிர்காக்க வேண்டிய மருத்துவத்துறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டிய நீதித்துறை, அனைத்துக்கும் பொறுப்பான அரசு ஆகிய அனைத்துமே கூட்டாக இந்தச் சதியில் பங்கெடுத்துள்ளன. இது மட்டுமல்லாது, சுவாதி வழக்கில் உண்மையான குற்றவாளியைத் தப்ப வைக்க இவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட்டுள்ளார்கள் என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சத்துக்கு வரும். அதற்காக பலியிடப்பட்ட அப்பாவிதான் ராம்குமார் என ஒருநாள் நிரூபிக்கப்படலாம். தற்போது அமைந்துள்ள அரசு, ராம்குமார் மரணம்!, சுவாதி கொலை ஆகிய இரண்டு வழக்குகளையுமே மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டால், பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். ராம்குமார் சாவுக்கும் நீதி கிடைக்கலாம். செய்யுமா புதிய அரசு? பொறுத்திருந்து பார்ப்போம்.

மகாகவி நாள் குழப்பம்

மகாகவி நாள் குழப்பம்

பாரதி நினைவு நாள் மகாகவி நாளாகக் கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்குப் பாராட்டுகள். ஆனால், பாரதியின் நினைவுநாள் செப்டம்பர் 11 என்பதுதான் பிழையாக உள்ளது. பாரதி இறந்தது செப்டம்பர் 11 நள்ளிரவு 12 முடிந்து, செப்டம்பர் 12 அன்று ஒன்றரை மணிக்கு. சென்னை மாநகராட்சிப் பதிவேட்டிலும் செப்டம்பர் 12 என்றுதான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அக்கால வழக்கப்படி காலை ஆறு மணி வரையிலான நேரத்தை முந்தைய தேதியில் குறிப்பிட்டு சிலர் பேச்சு வழக்கில் சொன்னதே வரலாறாக நிலைத்துவிட்டது. அனைத்திந்திய வானொலி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி உள்ளிட்டவை இன்றளவும் செப்டம்பர் 11 தேதியிலேயே பாரதி நினைவு நாள் நிகழ்வுகளை ஒலி/ஒளிபரப்புகின்றன. தமிழ்நாட்டின் பல இடங்களிலும் பிற மாநிலங்களிலும் பாரதி சிலையில் நினைவுநாள் தவறாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தக் குழப்பத்தைச் சரி செய்யக்கோரி தமிழறிஞர்கள் பலர் குரல் எழுப்பி வந்துள்ளனர். காரைக்காலைச் சேர்ந்த பேராசிரியர் ச. சுப்புரெத்தினம் எடுத்த முயற்சியின் பலனாக, எட்டயபுரம் பாரதி நினைவு மண்டபத்தில் உள்ள கல்வெட்டில், 2014 ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில், பாரதியின் நினைவு நாள் செப்டம்பர் 12 என்று மாற்றம் செய்யப்பட்டது. மேலும், பேராசிரியரின் முயற்சியால், புதுவை பாரதியார் இல்லத்தில் அவரது இறப்புச் சான்றிதழ் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இவர் பாரதியின் நினைவுநாள் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டுவர, செப்டம்பர் 12 என்பதை தமிழ்நாடு அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரி வருகிறார். இந்தச் சூழலில், தமிழக அரசே பாரதி நினைவுநாளை செப்டம்பர் 11 என்று அறிவித்துள்ளது வரலாற்றுப் பிழையை அதிகாரபூர்வமாக ஆக்குவதாக உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக மகாகவி நாள் செப்டம்பர் 12 அன்று கொண்டாடப்படும் என அறிவிக்க வேண்டும். அப்போதுதான் இந்தக் குழப்பம் முடிவுக்கு வரும்.

ஊருக்கு ஊரு பிழை! குளறுபடியான அரசின் திருத்தம்!

ஊருக்கு ஊரு பிழை! குளறுபடியான அரசின் திருத்தம்!

தமிழக அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ள ஊர்ப்பெயர் களின் திருத்தத்தில் காணப்படும் ஒலிக்குறிப்புக் குழப்பங்கள்! தமிழக அரசு சமீபத்தில் செய்துமுடித்துள்ள சீக்ரெட் ஆபரேசன் தான் அனைவராலும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. கொரோனாவை விரட்டியடிக்க எதாவது திட்டம் தீட்டிட்டாங்களா என்றெல்லாம் நப்பாசைகொள்ள வேண்டாம். தமிழகத்திலுள்ள ஊர்ப்பெயர்கள் பலவற்றின் ஆங்கில மொழியாக்கத்தில் கொண்டுவந்துள்ள திருத்தத்தைத்தான் குறிப்பிடுகிறேன். எழும்பூர் என்பதை எக்மோர் என்று குறிப்பிடுவதையும், திருவல்லிக்கேணியை ட்ரிப்ளிகேன் என்று குறிப்பிடுவதையும், தூத்துக் குடியை டூட்டிகொரின் என்று குறிப்பிடுவதையும் மாற்ற வேண்டுமெனப் பலகாலமாக பேசப்பட்டு வந்ததுதான். அதுபோல் அமைந்த பெயர்களை மட்டும் மாற்றாமல், ஏற்கனவே ஓரளவு சரியாகவே குறிப்பிடப்பட்டிருந்த பெயர் களிலும்கூட திருத்தங்களைச் செய்து விட்டார்கள். இந்த வேலையை மாவட்ட வாரியாகக் குழு அமைத்து செய்துமுடித்ததாகத் தெரிகிறது. இதில், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ள மாற்றங்களை ஏற்றும், மாற்றியமைத்தும் இறுதிசெய்து கெஜெட்டில் வெளியிட்டுள்ளனர். இதற்குப்பின்னர்தான் பொதுமக்களுக்கு இந்த செய்தியே தெரியவந்துள்ளது. ஆனால் இந்த மாற்றங்களில் பல்வேறு குழப்பங்கள் காணப் படுகின்றன. இந்த குழப்பங்களுக்கு அடிப்படைக் காரணமே, ஒலிக்குறிப்பு அடிப்படையிலான மாற்றத்தில் எடுக்கப்பட்ட தவறான சில முடிவுகளாகும். குறிப்பாக, ‘உ’ என்ற எழுத்துக்கு ‘U’ பயன்படுத்துகிறார்கள். அதேவேளை, ‘ஊ’ என்ற எழுத்துக்கு ‘’OO’ பயன்படுத்துகிறார்கள். இது சிலவகை ஒருங்குறி விசைப்பலகைகளின் அடிப்படையில் செய்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால் இது தவறு. உ என்பதற்கு ‘U’ என்றால், ஊ என்பதற்கு ‘UU’ தான் வரவேண்டும். இதில் அவர்களுக்கே தெளி வில்லாததால், தொடர்ச்சியாகப் பல பிழைகளைக் காணமுடிகிறது. ஊர்ப்பெயர்களை ஆங்கிலப்படுத்துமுன், “ka – க, kaa – கா, ki – கி, kii – கீ, ke – கெ, kee – கே, kai – கை, ku – கு, kuu – கூ, ko – கொ, koo – கோ, kau – கௌ” என்ற அடிப்படையைப் பின்பற்றியிருக்க வேண்டும். இதில் அவர்கள் தவறியிருப்பது தெரிகிறது. இதன்காரணமாக ஏற்பட்டுள்ள பிழைகள் என்னவென்று பார்க்கலாம். கோயம்புத்தூர் பெயரை ஆங்கிலப் படுத்துகையில், இறுதியில் ‘thoor’ என முடிக் கிறார்கள். அதேவேளை, குன்னத்தூர் என்ற ஊரின் இறுதியில் ‘thur’ என்று முடிக்கிறார்கள். இங்கே தூ என்ற எழுத்துக்கு ‘thoo’ மற்றும் ‘thu’ என இரண்டுவிதமாகப் பயன்படுத்தியி ருக்கிறார்கள். இது ஒரு குழப்பம். இந்த குழப்பம், பல ஊர்களில் தொடர்கிறது. இதேபோல, மேலக்கூடலூர் என்பதற்கு ‘lur’ என்று முடிக்கிறார்கள். அதுவே அரியலூர் என்பதற்கு ‘’loor’ என்று முடிக்கிறார்கள். குச்சனூர் என்பதற்கு ‘nur’ என்று முடிக்கிறார்கள். அதுவே ஆதனூர் என்பதற்கு ‘noor’ என்று முடிக்கிறார்கள். இவற்றிலும் அதே தவறைச் செய்துள்ளார்கள். அடுத்து, குறில் நெடில் தவறுகள் எக்கச் சக்கமாக உள்ளன. கூட்டுறவுபட்டி என்ற ஊரின் தொடக்கத்துக்கு Koo பயன்படுத்து கிறார்கள். அப்படியானால் கூ என்பதற்கு Koo என்றாகிறது. புதுக்கோட்டை என்பதற்கு Puthukkottai என்று எழுதுகிறார்கள். இதை உச்சரித்தால் புதுக்கொட்டை என்றுதான் வரும். கொட்டாபட்டி என்பதற்கும் Kottapatti என்றே எழுதுகிறார்கள். கோயமுத்தூர் என்பதற்கும் Koyampuththoor என்றே எழுதுகிறார்கள். இதனை கொயம்புத்தூர் என்றுதான் அழைக்க வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்ட மொழிமாற்றத் துக்கான அடிப்படைப் புரிதல் இல்லாததால் வந்த விளைவு தான் இது. ‘OO’ என்பதை ‘ஊ’ என்ற அர்த்தத்தில் தமிழக அரசு பயன்படுத்து கிறது. எனவே ‘கொ’ என்பதற்கு ‘KO’ என்று பயன்படுத்தியவர்களால், ‘கோ’ என்பதற்கு ‘KOO’ என்று பயன்படுத்த முடியவில்லை. அதன் அர்த்தம், அவர்களின் மொழிமாற்ற அகராதிப்படி ‘கூ’ என்றே ஒலிக்கும். எனவே குறில், நெடில் குறித்தெல்லாம் சிந்திக்காமல் அப்படியே விட்டுவிட்டார்கள். அடுத்து ‘THTH’ பயன்பாட்டில் இருக்கும் குழப்பம். வத்திராயிருப்பு என்பதற்கு ‘Vaththiraayiruppu’ என்று எழுதுகிறார்கள். அதேவேளை, சேத்தியாத்தோப்பு என்பதை ‘Setthiyathoppu’ என்று எழுதுகிறார்கள். ‘TTH’ மட்டுமே பயன்படுத்துகிறார்கள். இதேபோன்ற தவறுகளுடன் பல ஊர்கள் இருக்கின்றன. அடுத்து, சாத்தமங்கலம் என்பதையும் ‘’satthamangalam’ என்று எழுதுகிறார்கள். சாத்தாம்பட்டி என்பதை மட்டும் ‘’saatthampatti’ என்று எழுதுகிறார்கள். இங்கே ‘சா’ என்ற எழுத்துக்கே ‘Saa’ மற்றும் ‘Sa’ என இரண்டுவிதமாகப் பயன்படுத்துகிறார்கள்.    எருக்கஞ்சேரி என்பதை ‘erukkanjery’ என்று மாற்றியுள்ளார்கள். மல்லிகைச்சேரி என்பதை ‘‘mallikaichcheri’ என்று எழுதுகிறார்கள். முன்னதில் ‘‘Y’ எனவும், பின்னதில் ‘‘I’ எனவும் முடிகிறது. அதேபோல ‘சே’ என்பதை ‘‘che’ எனக் குறில் எழுத்தாகப் பயன்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொன்றாகக் கவனித்தால் மொத்தமுள்ள 1018 ஊர்ப்பெயர்த் திருத்தங்களில் ஆயிரக்கணக்கான பிழைகளைக் கூறலாம். இதில் நான் காணுகின்ற ஒரே சிறப்பு,  என்ற வடமொழி எழுத்தை திரு என்று தமிழில் எழுதுவதுபோல ஆங்கிலத்திலும் ‘‘thiru’ என்று மாற்றிவிட்டார்கள். இதற்காக மட்டும் பாராட்ட லாம். மற்றபடி இவர்கள் பிடுங்கிய ஆணிகள் அனைத்துமே தப்பும் தவறுமான ஆணிகளாகவே இருக்கின்றன.

என்ன நடக்கிறது எல்லையில்?

என்ன நடக்கிறது எல்லையில்?

இசுலாமிய வெறுப்பை மக்களிடம் வளர்ப்பதற்காக, பாகிஸ்தானை மட்டுமே இந்தியாவின் எதிரியாகச்  சித்தரித்து வந்த மோடி தலைமையிலான அரசு, இந்திய ஒன்றியத்தின் தென்கோடி முனைக்கு கூப்பிடு தொலைவில் உள்ள இலங்கைத் தீவில், ஈழத் தமிழர்களிடமிருந்து சிங்கள அரசு அபகரித்த பகுதியில் தனது இருப்பைச் சீனா நிலைநிறுத்திய போதும், தமிழகத் தலைவர்கள் பலரும் எச்சரித்தபோதும்கூட சீனா குறித்து மோடி அரசு கவலை கொள்ளவில்லை. மாறாக  சீன அதிபரை மாமல்லபுரம் அழைத்து வந்து குலாவியது. ஆனால் தற்போது லடாக் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பதற்றம் நிலவி வந்த நிலையில், அதிகாரிகள் மட்டத்திலான பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினை தீர்க்கப்பட்டு விடும் என்று மழுப்பப்பட்டது. இந்நிலையில் ஜூன்16 பிற்பகலில், இந்திய சீன இராணு வத்தினர் இடையில் நடந்த மோதலில் மூன்று இந்திய வீரர்கள் அடித்தே கொல்லப் பட்டதாக செய்திகள் வந்து திகைக்க வைத்தன. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பழனி என்ற வீரரும் ஒருவர். ஆனால், அடுத்த சில மணி நேரத்திற்குள்ளாக இருபதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகின்றன. லடாக் பகுதி மக்கள் மிகுந்த பதற்றத்தில் இருப்பதாகவும் செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, கொரோனா நோய்ப் பரவல், கடும் பொருளாதார வீழ்ச்சி, அரசால் கைவிடப் பட்டு கால்நடைகளான அப்பாவி மக்கள்,  வேலை இழப்பு, 20 இலட்சம் கோடி வெற்று அறிவிப்புகள் என எல்லாப் பக்கமும் தோல்வி அடைந்த மோடி அரசு, தற்போது வெளியுறவுக் கொள்கையிலும் தோல்வியடைந்திருப்பது அம்பலமாகிவிட்டது. பிரச்சினைகளைத் தீர்க்கும் திறமையோ, துணிவோ இன்றி  மௌனம் காக்கும் பிரதமர், நாட்டின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.