பொன்னியின் செல்வன் – 30

பொன்னியின் செல்வன் – 30

மதுராந்தகன் கொடிய எண்ணங்களுடன் சேந்தன் அமுதன் குடிசையை நோக்கிச் செல்கையில், பார்ப்பதற்கு அருவருப்பான தோற்றத்துடன், கருத்திருமன் மதுராந்தகனை மறிப்பதுபோலக் குறுக்கிட்டான். தன் கையிலிருந்த குறுவாளை, கருத்திருமனை நோக்கி மதுராந்தகன் ஓங்கினான். உடனே கருத்திருமன், தான் அவனுக்கு எதிரியல்ல என்றும் அவனுக்கு உதவுவதற்காகவே வந்திருப்பதாகவும் கூற, மதுராந்தகன் திகைத்தான். தன்னை மதுராந்தகனின் தந்தையாருடைய உண்மையான ஊழியன் என அறிமுகப் படுத்திக்கொண்ட கருத்திருமன், மதுராந்தகனின் தந்தை யார் என்ற ரகசியத்தை மதுராந்தகனின் காதில் சொன்னான். அவனும் ராஜகுமாரன் எனவும் தன்னுடன் வருமாறும் பலவகையில் மதுராந்தகனை அழைத்தான். மதுராந்தகன் அவனுடன் செல்வதாக முடிவு செய்தான். வந்தியத்தேவனைத் தங்களுடன் அழைத்துப்போவது பற்றி விவாதித்துக்கொண்டே, இருவரும் குதிரைகளை நோக்கி நடக்கத் தொடங்கினர். மதுராந்தகன், சேந்தன் அமுதனை ஏதாவது செய்யலாமென யோசித்து, பின் முடிவை மாற்றிக்கொண்டு நடக்கலானான். கருத்திருமனுடன் வந்திருந்த வந்தியத்தேவன், அவனின் வருகைக்காகக் காத்திருந்தான். மதுராந்தகனோடு கருத்திருமன் பேசியதன் ஒரு பகுதி அவன் காதிலும் விழவே, அவன் சற்றே குழம்பி குடிசையை நோக்கினான். அப்போது குடிசையின் பின்னால் இருந்த பலகணியின் வழியாக ஒரு உருவம், ஈட்டியைச் செலுத்துவதற்காகக் குறிபார்த்ததைக் கண்டு அதிர்ந்தான். அது பினாகபாணியேதான். பாதாளச் சிறையில் வந்தியத்தேவனால கட்டிப்போடப்பட்ட பினாகபாணி, பொன்னியின் செல்வருடன் வந்தவர்களால் அவிழ்த்துவிடப்பட்டான். வந்தியத்தேவன் தப்பித்ததை நினைத்து அவர்கள் மகிழ்ச்சியடைந்ததைக் கண்டு எரிச்சலுற்றவன், சேநாதிபதி பெரிய வேளாளரிடம் வந்தியத்தேவன் காணாமல் போய்விட்டதைச் சொல்லி உடனே தேடுமாறு வேண்ட, அவருக்குக் கோபம் வந்து அவனைத் துரத்திவிட்டார். முதன் மந்திரி அநிருத்தரிடமே பினாகபாணி சென்று நடந்ததைச் சொல்ல, அவரும் வந்தியத் தேவன் தப்பித்தது குறித்து ஏதும் சொல்லாமல் பினாகபாணியைக் குற்றம் சொன்னார். அவர், பினாகபாணியைத் தொடரச் சொல்லி, தான் அனுப்பியிருந்த ஆழ்வார்க்கடியான் மிச்சத்தைப் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையால், பினாகபாணியை விரட்டிவிட்டார். இதற்கெல்லாம் வந்தியத்தேவன்தான் காரணம் என்பதால், அவனை எப்படியாவது தானே பிடித்துவிட வேண்டும் என எண்ணி, வந்தியத் தேவன் சேந்தன் அமுதன் குடிசையில்தான் இருக்க வேண்டும் என்று யூகித்து, சேந்தன் அமுதன் குடிசையை அடைந்தான் பினாகபாணி. அவனுக்கு அந்த வழி சரியாகத் தெரியாததானால், எப்படியோ தேடித்தேடி முயன்றதில், மதுராந்தகனும் கருத்திருமனும் ரகசியமாகப் பேசுவதைக் கண்டான். குதிரைகள் கட்டிப்போட்டிருப்பதைக் கண்டவன், எப்படியும் தப்பிக்க வந்தியத்தேவன் அங்குதான் வரவேண்டுமென நினைத்து அங்கு செல்லத் தொடங்கினான். அப்போது குடிசைக்குள்ளிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்ளும் குரல்களைக் கேட்டு, பலகணி வழியாகக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தான். பூங்குழலியின் மேல் இருந்த மோகம் கண்ணை மறைக்க, கையிலிருந்த ஈட்டியை சேந்தன் அமுதன் மேல் எறிவதற்காகக் குறிபார்த்த போதுதான், வந்தியத்தேவன் அவனைக் கண்டான். அதே சமயத்தில், இரு குதிரைகளில் மதுராந்தகனும் கருத்திருமனும் கிளம்புவதைக் கண்ட வந்தியத்தேவன், பினாகபாணியின் செயலைத் தடுப்பதே முதல் வேலை என்று சடுதியில் முடிவெடுத்தான். வந்தியத் தேவன் ஓடிவரும் சத்தம் கேட்டுத் திரும்பிய பினாகபாணி, வந்தியத்தேவனை அதே ஈட்டியால் விலாவில் குத்தினான். அதே சமயம் குதிரைகள் ஓடும் சத்தமும் கேட்கவே, தான் குத்தியது மதுராந்தகரை என்று தவறாக நினைத்துக்கொண்டே தலைதெறிக்க ஓட்டம் எடுத்தான். வந்தியத்தேவனின் அலறலைக்கேட்டு சேந்தன் அமுதனும் பூங்குழலியும் விளக்கை எடுத்துக்கொண்டு வந்து, அவனை உள்ளே தூக்கிச் சென்றார்கள். வாணி அம்மை பச்சிலை வைத்தியம் செய்து அவன் உயிரைக் காப்பாற்றினாள். ஆழ்வார்க்கடியான் படகில் கட்டியிருந்தபடிக்கு, வந்தியத்தேவன் தப்பித்து இலங்கைக்குப் போவதே இப்போதைக்கு நல்லது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்ததை நினைத்துக்கொண்டு வந்தியத்தேவனிடம் ஒரு செய்தி சொல்லி அனுப்பக் காத்திருந்தான். அதேபோல, இரு குதிரைகள் அவனைத் தாண்டவும் அவற்றில் போகும் நபர்களை பார்த்து வியப்படைந்தான். கருத்திருமன் பெயரைக் கூறி, உதவிக்கு அழைத்தான். அப்போது கருத்திருமன் மட்டும் திரும்பி வந்து அவனை அவிழ்த்துவிட, அவனைத் தாக்கி, ‘உடன் வந்திருப்பது யார்?’ எனக் கேட்டு மிரட்டினான். கருத்திருமனால் அவன் பிடியிலிருந்து தப்பிக்கவியததால், மதுராந்தகனை அழைத்துச் செல்வதாகக் கூறினான். மதுராந்தகனின் உண்மையான தந்தை யார் எனவும் சேந்தன் அமுதன் யார் மகன் எனவும் மீண்டும் மிரட்டவும், கருத்திருமன் உண்மையைக் கூற, ஆழ்வார்க்கடியான் அவனை விடுவித்தான். ஆழ்வார்க்கடியானும் அவன் ஆட்களும் தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலை நோக்கி நடக்க, பினாகபாணி தலைதெறிக்க ஓடிவந்து இவர்களிடம் முட்டிக்கொண்டான். ‘வந்தியத்தேவன் அங்கு யாரையோ குத்திவிட்டு ஓடிவிட்டதாக’ ஆழ்வார்க்கடியானிடம் புலம்பினான். அவனிடம் மட்டும் நாலு குதிரையும் ஆட்களும் இருந்தால் பின்தொடர்ந்து சென்று பிடித்துவிடுவேன் எனச் சொல்ல, ஆழ்வார்க்கடியான் அவனைக் கோட்டை நோக்கி அழைத்துச் சென்றான். கோட்டைவாயிலில், அநிருத்தரும் சேநாதிபதி வேளாளரும் நிற்க, எதிர்ப்புறத்தில் சின்ன பழுவேட்டரையர், பார்த்திபேந்திரன், மற்றும் கந்தமாறனும் பரிவாரங்களும் இருந்தனர். பெரிய பழுவேட்டரையரும் ஒரு யானை மேல் வீற்றிருந்தார். ஆழ்வார்க்கடியானின் யோசனையின் பேரில், வந்தியத்தேவன் தப்பிப் போய்விட்டதைச் சொல்லி, அவனைப் பிடித்துவர பினாகபாணி உதவி கேட்க, சில வீரர்களுடன் கந்தமாறனைப் பினாகபாணியுடன் சின்ன பழுவேட்டரையர் அனுப்பி வைத்தார். குதிரையில் சென்ற மதுராந்தகனும் கருத்திருமனும் இருட்டில் நதி வெள்ளத்தைத் தாண்டமுடியாமல் மரத்தின்மீது அமர்ந்திருந்தனர். கருத்திருமன் பாண்டிய நாட்டின் ரத்தின ஹாரம், மணிமுடி பற்றியெல்லாம் சொல்லி, மதுராந்தகனின் மனச்சோர்வைப் போக்கிக்கொண்டிருந்தான். பின்னால் வீரர்கள் வருவதைப் பார்த்தவுடன், வேகவேகமாக குதிரைகளுடன் அக்கரைக்கு இருவரும் சென்றனர். இருட்டில் வெள்ளத்திலிருந்து கரையேறும் முன்பு, மதுராந்தகனை வந்தியத்தேவன் என எண்ணிக் கந்தன்மாறன் ஈட்டி எறிய, மதுராந்தகன் வெள்ளத்தில் வீழ்ந்தான். மூங்கில் பாலத்தில் ஏறி, கருத்திருமனைப் பிடிக்கப் பினாகபாணி முயல, கருத்திருமன் பாலத்தின் கயிறுகளை அறுத்துவிட்டதில் பினாகபாணி வெள்ளத்தில் விழுந்து இறந்தான். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு கருத்திருமன் தப்பி ஓட, வந்தியத்தேவன்தான் இறந்துவிட்டான் என எண்ணிக்கொண்டு, அவன் சடலத்தைக் கந்தமாறன் ஆற்றில் தேட, சடலம் கிடைக்கவில்லை என்பதால் ஆற்றில் அடித்துக்கொண்டு போயிருக்குமெனக் கருதி, கந்தன்மாறன் தஞ்சைக்கு திரும்பினான். இதற்குள், ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து சேந்தன் அமுதனின் குடிசையை அடைந்தான். அங்கு மதுராந்தகனுக்காக அவனைக் கூட்டி வந்த பல்லக்கு சிவிகையும் காவலர்களும் காத்திருந்தனர். உள்ளே சென்றபோது, மதுராந்தகன் கழற்றி வைத்துவிட்டுப் போயிருந்த ஹாரம், கிரீடம், உத்தரீயங்கள், வாகுவலயம் அனைத்தையும் ஒரு காவலன் கொண்டுவந்து தந்தான். ஆழ்வார்க்கடியான் குடிலின் கதவைத் தட்டியவுடன், கதவைத் திறக்காமல், பூங்குழலி வாக்குவாதத்தில் ஈடுபட்டாள். பின் கதவைத் திறந்து பார்த்து, காவலர்களைக் கண்டு பயந்தவளைத் தள்ளிக்கொண்டு ஆழ்வார்க்கடியான் உள்ளே சென்றான். வந்தியத்தேவனைக் கட்டிலுக்கடியில் மறைத்து வைத்திருந்ததைப்பற்றி ஆழ்வார்க்கடியான் கேட்க, சேந்தன் அமுதன் உண்மையை ஒத்துக்கொண்டு, உதவி செய்யுமாறு வேண்டினான். ஆழ்வார்க்கடியான், பொன்னியின் செல்வரின் யானையைக் கொண்டுவருவதாகவும் சேந்தன் அமுதன் மதுராந்தகன் கழற்றி வைத்த ஆபரணங்களைப் பூண்டு, வேடமிட்டு அதில் ஏறி வருமாறும் கூறினான். வந்தியத்தேவனை மதுராந்தகன் வந்த பல்லக்கில் ஏற்றிவிட்டு, பூங்குழலியை உடன் நடந்து வருமாறும் யோசனை கூறினான். பழுவேட்டரையர்களின் படை எப்போது வேண்டுமானாலும் இங்கு வருமெனவும் வந்தால் சேந்தன் அமுதனின் உயிரைக் காப்பாற்றத் தன்னுயிரைக் கொடுக்க முயன்ற வந்தியத்தேவனை நாம் காப்பாற்ற முடியாதெனவும் அவர்களை அவசரப்படுத்தினான். அவர்கள் சம்மதித்தனர். கோட்டை வாசலில் சின்ன பழுவேட்டரையருக்கும் சேநாதிபதி பெரிய வேளாளருக்கும் பூசல் ஏற்பட்டதைத் தடுக்க முடியாமல் முதன் மந்திரி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். சக்ரவர்த்தி உடல்நிலை சரியில்லாமல், தன் மூத்த மகனை இழந்து வருத்தப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவர்கள் சண்டையிட்டுக்கொள்வது அழகல்ல எனவும் மறுநாள் பகலுக்குள் அனைவரையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தும்வரை அமைதியாக இருக்குமாறும் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஆழ்வார்க்கடியான் அவரைத் தனியாக அழைத்து விஷயத்தைச் சொல்ல, அவர் சின்ன பழுவேட்டரையரிடம் மதுராந்தகர் யானையில் அமர்ந்து வருவதாகவும் சேந்தன் அமுதனுக்கு அடிபட்டிருப்பதால் அவனைப் பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்வதாகவும் கூறினார். ஏற்கனவே, தனது மருமகனான மதுராந்தகனின் பாதுகாப்பு பற்றி விவாதத்தில் இருந்த சின்ன பழுவேட்டரையர், அமைதியானார். ஆனால் தன் பாதுகாப்பில் இருந்த கோட்டைக் காவலைப் பெரிய வேளாளர் வைத்திருப்பதால், உள்ளே வர முடியாது எனப் பிடிவாதமாக மறுத்து, வெளியே தங்கிவிட்டார். மறுநாள் சக்ரவர்த்தியிடம் இதைத் தெரிவித்தபோது, காலாந்தக கண்டர் வராமல் ஆலோசனையைத் தொடரமுடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். கோட்டைக் காவலை மறுபடி அவரிடமே ஒப்படைக்கும்படி பெரிய வேளாளரிடம் சொல்ல, அவர்கள் அனைவரும் ஆதித்த கரிகாலனின் மரணம் பற்றியும் வந்தியத்தேவன் தப்பித்தது குறித்தும் கேள்விகளைத் தொடுத்தார்கள். அநிருத்தர், தன்னுடைய அஜாக்கிரதையால் வந்தியத்தேவன் தப்பித்தது உண்மையெனவும், திருப்பிக் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பும் தன்னைச் சார்ந்தது எனவும் கூறினார். வந்தியத்தேவனைத் தொடர்ந்து பிடித்துவர கந்தன்மாறன் போயிருப்பதாகப் பார்த்திபேந்திரன் சொல்ல, குந்தவையின் முகம் வாடியது. அதைக் கவனித்த முதன்மந்திரி அது சாத்தியமில்லை என அவளுக்குக் குறிப்பால் உணர்த்தினார். மறுபடி கோட்டைக் காவலைத் திரும்ப ஒப்படைப்பது குறித்துப் பேச, அநிருத்தர் ராஜ்ய உரிமை பற்றி முடிவெடுத்தபின் அதை முடிவு செய்யலாமென யோசனை கூற, பெரிய பழுவேட்டரையரோ தன் தம்பி அவர் பொறுப்பிலிருந்து தவறியது உண்மைதான் எனவும் கோட்டைக் காவலைத் திரும்ப ஒப்படைக்கத் தேவையில்லை எனவும் சொல்ல, அனைவரும் திகைத்தனர். சக்ரவர்த்தி பெரிதும் வருந்தி, ஒருநாளும் சின்ன பழுவேட்டரையர், தன் கடமையிலிருந்து தவறியதில்லை என ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினார். அப்போது தன் தொண்டையைக் கனைத்துக்கொண்ட பெரிய பழுவேட்டரையர், ‘சின்ன பழுவேட்டரையர், தன்னை நந்தினியிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொன்னதாகவும் தான் அதைக் கேட்கவில்லையெனவும் கூறினார். அந்தக் கொலை பாதகர்களை அன்றே கண்டுபிடித்திருக்க வேண்டுமெனவும், தான் தடுத்திருந்தால்கூட, அண்ணன் எனப் பாராமல் தன் கைகளை வெட்டியிருக்க வேண்டும் எனவும், அதனால் சின்ன பழுவேட்டரையர் தன் கடமையிலிருந்து தவறிவிட்டார் என்பது சரிதான் எனவும் கூறினார். கூடியிருந்தவர்களுக்கு அவருடைய பேச்சு மெய் சிலிர்த்தது. சக்ரவர்த்தி எல்லாவற்றையும் மறுத்து, சின்ன பழுவேட்டரையரின் மீதே நியாயமிருக்கிறது என்பதை மறுபடியும் எடுத்துரைத்தார். எனவே, கோட்டைக் காவலை அவரிடம் ஒப்படைக்குமாறும் பெரிய பிராட்டியிடம் ராஜ்ய உரிமை குறித்துக் கலந்து பேச வேண்டியிருப்பதால், இன்னும் மூன்று நாட்கள் கழித்து அதைப்பற்றிக் கலந்து பேசலாமெனவும் சக்ரவர்த்தி கூறினார். பார்த்திபேந்திரன், வந்தியத்தேவனைக் கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பை அநிருத்தர் ஏற்றுக்கொண்டதை நினைவுபடுத்தினான். பெரிய பழுவேட்டரையர் ஏதோ சொல்லவந்து, பின் நிறுத்திக்கொண்டார். அன்று சாயந்திரமே சின்ன பழுவேட்டரையரிடம் கோட்டைக் காவல் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அதில் சில சலசலப்புகள் எழுந்தன. அங்கங்கே சிறுசிறு கலகங்களும் ஏற்பட்டன. மக்கள் ராஜ்ய உரிமை குறித்துப் பேசி சண்டை எழுந்தது. தஞ்சை முழுவதும் ஒருவிதப் பதட்டம் ஏற்பட்டிருந்தது. தொடரும்

பொன்னியின் செல்வன் – 29

பொன்னியின் செல்வன் – 29

குந்தவை தன் தமையன் கரிகாலனின் இழப்பினாலும் வந்தியத்தேவன் பேரில் அந்தக் கொலைப்பழி விழுந்து கிடப்பதாலும் பெரும் கலக்கத்திலும் வருத்தத்திலும் இருந்தாள். அப்போது வானதி அங்கு வந்து, அவளை ஒரு இளம்பெண் பார்க்க வந்திருப்பதாகக் கூறினாள். வந்தவள் மணிமேகலைதான். அவள் மிகுந்த சோர்வுடன் வந்து நின்றாள். அவளைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தபோதும் தன் தமையன் அவள் அரண்மனையில்தான் கொலையுண்டான் என்பதால் குந்தவையால் மணிமேகலையின்மீது இரக்கம் கொள்ள இயலவில்லை. ஆனால் வந்தியத்தேவன் – கந்தமாறன் நட்பும் அதனால், கந்தமாறன் தன் தங்கையை வந்தியத்தேவனுக்கு மணம் செய்விக்கலாம் என்ற யோசனை வைத்திருந்ததையும் கடைசியில் ஆதித்த கரிகாலனுக்கு இவளைத் திருமணம் செய்து வைக்கும் யோசனையாக அது மாறிப்போயிருந்ததையும் நினைத்து, அவளின் சோகத்தில் குந்தவைக்கு சுவாரசியம்கூடப் பிறந்தது. என்னவென்று அவளிடமே விசாரிக்கலானாள். அவள் தன் கண்ணீருக்கு மத்தியில் ஆதித்த கரிகாலனைக் கொன்றது தானே எனக் கூறினாள். திடுக்கிட்ட குந்தவை, “சம்புவரையரையும் கந்தமாறனையும் காப்பாற்றுவதற்காக இப்படிக் கூறுகிறாயா?” என வினவியபோது, அதை மறுத்த மணிமேகலை, அவர்கள் மதுராந்தகனையும் பின்பு ஆதித்த கரிகாலனையும் தன் விருப்பத்திற்கு மாறாகத் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் அவர்களைத் தான் வெறுப்பதாகவே கூறினாள். மேலும் ஆதித்த கரிகாலன் தன்னை சகோதரியாக நினைத்து மடல் எழுதியிருப்பதையும் குறிப்பிட, குந்தவை மேலும் திகைத்தாள். அவள் வெகுவாகக் கலங்கிப் போயிருப்பதால், அவளுக்கு ஆறுதல் கூறி, அவளிடம் ‘என்ன நடந்தது’ என்று அக்கறையுடன் விசாரித்தாள். அவள், வாணர் குலத்து வீரர் வந்தியத்தேவர், பாதாளச்சிறையில் சிறைப்பட்டிருப்பதை மீட்பதற்காகவே வந்திருப்பதாகவும் அவரை எப்படியாவது விடுவிக்குமாறும் வேண்டிக்கொள்ள, குந்தவை திகைத்தாள். குந்தவை வந்தியத்தேவனைப் பார்க்கப் போவதற்கே தயங்கிக்கொண்டிருக்க, மணிமேகலை, அவன் மீதான கொலைப்பழியைத் தன்மேல் ஏற்றுக்கொள்ளச் சித்தமாய் வந்திருப்பதையும் வந்தியத்தேவன் பேரில் அவள் கொண்டிருக்கும் தூய அன்பினையும் கண்டு நெகிழ்ந்தாள். வானதி அவளை மேலும் விசாரித்தாள். ஆதித்த கரிகாலனால் வந்தியத்தேவருக்கு ஆபத்து இருப்பதாக நந்தினி தன்னை நம்பவைத்திருந்ததையும் ஆனால் ஆதித்த கரிகாலருக்கு அந்த எண்ணமேயில்லை என்று அவர் குந்தவையிடம் ஒப்படைக்கச் சொல்லி எழுதியிருந்த ஓலையில்  இருந்து தான் தெரிந்துகொண்டதையும் மணிமேகலை கூறினாள். குந்தவை அந்த ஓலையை வாங்கிப் படித்தாள். தன் விதியைத் தாண்டி, தான் செல்லப் போவதாகவும் வந்தியத்தேவன் முடிந்தவரை தன்னைக் காபந்து பண்ணியதாகவும் இதையும் மீறி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு, தானே பொறுப்பு என ஆதித்த கரிகாலன் அதில் எழுதியிருந்தான். குந்தவை ஒருவாறு தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு மணிமேகலையிடம், அவள் ஆதித்த கரிகாலரைக் கொன்றதாகச் சொன்னால் அவரின் புகழுக்கு அபகீர்த்தி ஏற்படும் எனவும் இதை வந்தியத்தேவரும் விரும்பமாட்டார்; தவிர வந்தியத்தேவர் அந்தப் பழியைத் தானே ஏற்கவும் முனைந்து மணிமேகலையைக் காப்பாற்றவே விரும்புவார் எனவும் கூறினாள். மனமுடைந்து போன மணிமேகலை, எப்படியாவது வந்தியத்தேவனை இப்பழியிலிருந்து காப்பாற்றுமாறு வேண்டினாள். அப்போது அங்கு பொன்னியின் செல்வர் வர, வானதியையும் மணிமேகலையையும் சற்றுத் தள்ளி இருக்குமாறு கூறிவிட்டு, தம்பியுடன் குந்தவை தனித்துப் பேசலானாள். அப்போது தனக்குப் பட்டம் சூட்டுவதைப்பற்றித் தன் அதிருப்தியைத் தெரிவித்தவர், மணிமேகலையைக் கண்ணுற்று என்னவென்று வினவ, பாதாளச் சிறையில் இருக்கும் வந்தியத்தேவனைக் காப்பாற்றுவதற்காக சம்புவரையர் மகள் வேண்டி நிற்பதை குந்தவை வருத்தத்துடன் கூறினாள். பெரிதும் அதிர்ந்துபோன பொன்னியின் செல்வர், வந்தியத்தேவனை இத்தனை நாள் தாம் நினைத்துப் பாராமல் இருந்ததைக் குறித்து வெட்கினார். தான் நன்றிகெட்ட செயல் செய்துவிட்டதாக வருந்தி, உடனே அவனை விடுவிக்கும் ஏற்பாடுகளைச் செய்யப்போவதாகச் சொல்லிக் கிளம்ப, அப்போது அங்கு வந்த மலையமானும் பூதி விக்கிரம கேசரியும் அவரைப் போகவிடாது வாயிலிலேயே பலவந்தமாகத் தடுத்தனர். திகைத்துப்போன அருள்மொழிவர்மரிடம் பூதி விக்கிரம கேசரி கோட்டைக்காவல் பாதுகாப்பு, சின்ன பழுவேட்டரையரிடம் இருந்து தன்னிடம் வந்திருப்பதைக் கூறினார். மலையமான், வந்தியத்தேவனை இளவரசர் விடுவித்தால் ஆதித்த கரிகாலனின் கொலைப்பழி அவர் மீதே திரும்ப வாய்ப்பிருப்பிருக்கிறது எனக் கூறினார். சக்ரவர்த்தி மதுராந்தகனுக்குப் பட்டம் சூட்ட முடிவு செய்திருப்பதாகவும் சம்புவரையர் மற்றும் மற்ற குறுநில அரசர்களை அழைத்துவர பார்த்திபேந்திரன் போயிருப்பதாகவும் ஆனால் மதுராந்தகன் பட்டம் சூடுவதில் தங்களுக்கு விருப்பமில்லை எனவும் பூதி விக்கிரம கேசரி தெரிவித்தார். கரிகாலன் மரணம் பற்றிய உண்மை வெளிப்படும்வரையில் இளவரசர் அமைதியாக இருப்பது நல்லது என்ற அவர்களின் முடிவை குந்தவை ஒப்புக்கொள்ள, வந்தியத்தேவனைப் பாதாளச் சிறையில் சென்று பார்த்துவிட்டாவது வரலாம் என்று அனைவரும் முடிவு செய்து மணிமேகலையுடன் கிளம்பினர். அங்கு சென்று பார்த்தபொழுது வைத்தியர் மகன் பினாகபாணி மட்டுமே இருந்தான். வைத்தியர் மகன் பழையாறையில் வந்தியத்தேவனால் அவமானப்படுத்தப்பட்ட பிறகு முதன்மந்திரி அநிருத்தரிடம் சென்றான். முன்னொரு சமயம் அவன் பாதாளச்சிறையில் இருந்தபொழுது பக்கத்துச் சிறையில் இருந்த பைத்தியக்காரன் என்று தன்னைச் சொல்லிக்கொண்டவனுக்கு இலங்கையில் பாண்டிய நாட்டு ரத்தினஹாரம் மற்றும் மணிமகுடம் இருக்குமிடம் குறித்தும் சோழகுலத்துப் பட்டத்து வாரிசு ஒருவரின் பிறப்பு ரகசியம் குறித்தும் தெரியும் என்றும் தன்னை விடுதலை செய்தால் அதைச் சொல்வதாகவும் தன்னிடம் கூறியதாகச் சொன்னான். அநிருத்தர் அதைப்பற்றிய உண்மையைத் தெரிந்துகொள்வதற்காக  சேனாதிபதியிடமிருந்து விடுதலை உத்தரவை வாங்கி அளிக்க, அதை எடுத்துக்கொண்டு பினாகபாணி பாதாளச் சிறையை அடைந்தான். அங்கு பக்கத்தில் இருந்த வந்தியத்தேவனை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து இழுக்காகப் பேசிவிட்டு, அந்த ரகசியம் அறிந்த பைத்தியக்காரனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான். தானே அந்த ரகசியங்களைத் தெரிந்துகொண்டால் நல்லது எனக் கேட்டுக்கொண்டிருந்தவனை, பக்கத்து அறையிலிருந்து சுவர்களை இடித்துத் தள்ளிவிட்டு வந்த வந்தியத்தேவன், அடித்துக் கட்டிப் போட்டான். வந்தியத்தேவன் பைத்தியக்காரனுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறி பினாகபாணி, பொன்னியின் செல்வர் முதலானவர்களிடம் அழுதான். கடம்பூரில் இருந்து வந்தியத்தேவனைக் கட்டி இழுத்துவந்தபோது, அவனுக்கு தீக்காயங்களாலும் தன் எஜமானனுடைய மரணத்தைத் தடுக்க முடியாத குற்றவுணர்ச்சியாலும் பெரிதும் மயங்கிய நிலையிலேயே தஞ்சைக்கு வந்தான். அவன்மீது இளவரசரைக் கொன்ற குற்றத்தைச் சுமத்திப் பாதாளச்சிறையில் அடைத்திருந்தார்கள்.  அப்போது பக்கத்துச் சிறை அறையிலிருந்த பைத்தியக்காரன் என்று தன்னை சொல்லிக்கொண்டவன், பினாகபாணி தன்னை விடுவிக்கப் போவதாகக் கூறவும், இருவரும் திட்டம் தீட்டி அவனைக் கட்டிப்போட்டுவிட்டு பினாகபாணி போல வந்தியத்தேவன் உடுத்திக்கொண்டு வாசலில் காத்திருக்கும் அநிருத்தரின் ஆட்களுடன் வெளியே சென்றனர். வழியில் பொன்னியின் செல்வர், குந்தவை, மணிமேகலை, வானதி, சேனாதிபதி என அனைவரும் எதிரே வர, தன்னைப் பார்க்கத்தான் போகிறார்கள் என அறியாத வந்தியத்தேவன் அவர்கள் கண்ணில் பட்டுவிடாமல் நின்றுகொண்டான். இவ்வளவு அருகிலிருந்தும் யாரிடமும் அணுகி உதவி கேட்க முடியவில்லையே என மருகினான். பின்னர் அநிருத்தரின் ஆட்களிடமிருந்தும் தப்பி, பைத்தியக்காரனும் வந்தியத்தேவனும் முன் பழுவூர் ராணியைச் சந்தித்த பெரிய பழுவேட்டரையர் அரண்மனையில், அதே வழியில் சென்று மதிலேறிக் குதித்து மறைந்துகொண்டனர். இருண்டபின்னேதான் சுரங்கப் பாதையை அடைய முடியுமென்பதால், மறைந்து உட்கார்ந்திருந்தபோது வந்தியத்தேவன் அந்தப் பைத்தியக்காரனின் கதையைக் கேட்டான். அவன் பெயர் கருத்திருமன். கருத்திருமன் ஒரு படகோட்டி. ஒருநாள் கலங்கரை விளக்கத்திலிருந்து கீழே விழுந்த, புத்தி சுவாதீனமற்று இருந்த ஊமைப் பெண்ணொருத்தியைக் கருத்திருமன் காப்பாற்றினான். அவளை ஈழ நாட்டில் விட்டு வரும்படி சோழ நாட்டு அதிகாரி ஒருவர் கூறியதால், ஓடத்தில் ஏற்றிக் கூட்டிப் போனான். வழியில் இன்னொரு மனிதரைக் காப்பாற்ற நேர்ந்தது. அவர் பாண்டிய அரசர் என்று தெரிந்தது. பின்னர் பாண்டிய அரசர், இலங்கை அரசன் மகிந்தனுக்கு, கருத்திருமன் மூலம் ஓலை கொடுத்தனுப்பினார். மகிந்தன் பாண்டியனுக்கு அடைக்கலம் அளித்தான். பாண்டியனின் தந்தை முன்பு, இலங்கையில் தங்கள் குலத்தின் புராதன ரத்தினஹாரத்தையும் மணிமகுடத்தையும் மறைத்து வைத்திருந்த இடத்தையும் கருத்திருமன் பார்த்துக்கொண்டான். பின்னர் பாண்டியருடன் ஊர் திரும்பியபின் அந்த  ஊமைப் பெண்ணை, கோடியக்கரையில் அவளது சகோதரியான வாணியுடன் பார்த்து அதிர்ச்சியுற்றான். அப்போது அந்தப் பெண் கருவுற்று இருந்தாள்.  அவர்களின் தமையனாரான கலங்கரை விளக்கக் காவலர் தியாகவிடங்கரின் வீட்டில் இரு சகோதரிகளும் இருந்தனர். மந்தாகினியின் தங்கையான வாணியின் மீது ஆசைப்பட்டுத் திருமணம் செய்துகொள்ள நினைத்தபோது, கோடியக்கரை குழகர் கோயிலுக்கு வந்த செம்பியன் மாதேவி, அக்கா தங்கை இருவரையும் தன்னுடனே அழைத்துச் சென்றதால், வருந்தி பாண்டிய நாட்டுக்கே கருத்திருமன் சென்றுவிட்டான். பாண்டிய அரசர் நாட்டை மீட்கும் முயற்சியில் இருந்தார். அவரைச் சந்தித்தபோது, அவர் அந்த ஊமைப்பெண்ணை முடிந்தால் கூட்டி வரும்படி கூறினார். பழையாறையில்  வாணியைச் சந்திக்கச் செல்லும்போது அவள் ஒரு குழந்தையைப் புதைக்க முயன்றுகொண்டிருந்தாள். அவளுக்குக் கேட்கும் திறன் இல்லாததால், குழந்தை அழுததைக்கூடக் கேட்க இயலாமல் இறந்துவிட்டதாகத் தவறாக நினைத்திருந்தாள். பின்னர் அந்தக் குழந்தையைக் காப்பாற்றியதாகவும் கூறித் தன் கதையை முடித்தான். வந்தியத்தேவனுக்கு இப்போது அந்தக் குழந்தையைப் பற்றிய எல்லா உண்மையும் புரிந்துபோனது. அதற்குள் இருட்டிவிட, இருவரும் சுரங்கப்பாதை வழியே சென்று, சில பொற்காசுகளையும் நிலவறையிலிருந்து எடுத்துக்கொண்டு கோட்டையை விட்டு வெளியேறினர். அப்போது நதியில் ஒரு ஓடம் கட்டிப் போடப்பட்டிருந்ததைக் கண்டு அருகே செல்ல, மறைவிலிருந்து சிலர் வந்து வந்தியத்தேவனைத் தாக்கி ஓடத்துடன் கட்டிப் போட்டனர். தன்னை கட்டிப்போட்டது ஆழ்வார்க்கடியான்தான் எனத் தெரிந்துகொண்ட வந்தியத்தேவன், அவனைத் திருப்பித் தாக்கிப் படகில் கட்டிப்போட்டான். முதன்மந்திரியிடம் கொண்டுபோவதற்காகவே தன்னைத் தாக்கினான் என்பதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன், தாங்கள் இருவரும் ஈழத்துக்குத் தப்பிபோவதாகவும் அதற்கு இரண்டு குதிரைகள் எங்கு கிடைக்கும் எனவும் ஆழ்வார்க்கடியானிடம் கேட்டான். பெரிய பழுவேட்டரையரை அழைத்துக்கொண்டு வரும்போது, சேந்தன் அமுதன் குதிரையிலிருந்து கீழே விழுந்து அடிபட்டு அவனது குடிசையில் படுத்துக் கிடப்பதாகவும் அவனைப் பூங்குழலியும் வாணி அம்மையாரும் பார்த்துக்கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறி, அங்கு சென்றால் அந்தக் குதிரைகளை எடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறினான். அப்போது கருத்திருமன், சேந்தன் அமுதனுக்கு அடிபட்ட விஷயம் செம்பியன் மாதேவியாருக்குத் தெரியுமா என்றும் கேட்டுக்கொண்டான். பின் இருவரும் அங்கு செல்லத் தொடங்கினர். பூங்குழலி, அடிப்பட்டிருந்த சேந்தன் அமுதனுக்குப் பணிவிடைகள் செய்துகொண்டிருந்தாள். சேந்தன் அமுதன், தனக்குக் குணமாகிவிட்டால் பூங்குழலி தன்னை விட்டுப் போய்விடுவாள் என்பதால், தான் குணமாக விரும்பவில்லை என்று கூற, பூங்குழலி நெகிழ்ந்தாள். பூங்குழலிக்கு அருள்மொழிவர்மர் மேல் அன்பிருப்பதைப் பற்றி அவன் வினவ, வானதியே அவருக்கு உரியவள் என்றும் தன் அத்தைக்குக் கிடைக்காத சிங்காதனத்தின் மேல் எனக்கு  ஆசை ஏற்பட்டது என்றும் கூறினாள். சேந்தன் அமுதனை அத்தகைய வீரதீரப் பராக்கிரமச் செயல்களைச் செய்யுமாறு கேட்க, அவன் மறுத்து சிவத்தொண்டு செய்வதே தன் வாழ்வின் லட்சியம் எனக் கூறினான். தன் பதவி ஆசைகளையெல்லாம் விட்டுவிட்டு, சேந்தன் அமுதனையே திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகப்

பொன்னியின் செல்வன் – 28

பொன்னியின் செல்வன் – 28

கொள்ளிடத்தின் வடகரையில் திருநாரையூரில் தன் மனக்கலக்கம் தீர, நம்பியாண்டர் நம்பியைச் சந்தித்துவிட்டு வந்த செம்பியன் மாதேவியை ஆழ்வார்க்கடியான் சந்தித்து, ஆதித்த கரிகாலன் மறைந்த செய்தியைக் கூறினான். பெரிதும் கலங்கிய பெரிய பிராட்டியிடம்,   இதனால் உள்நாட்டுப் போர் நடக்கும் அபாயம் இருப்பதால் இளைய பிராட்டி குந்தவையுடன் தஞ்சை சென்று அதைத் தடுக்கும் உபாயத்தைச் செய்யுமாறு ஆழ்வார்க்கடியான் கேட்டுக்கொண்டான். செம்பியன் மாதேவி அதைச் செய்வதாக ஒப்புக்கொண்டு ஆதித்தனின் மரணத்தைப் பற்றி விசாரிக்க, வந்தியத்தேவன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும் தான் ஒரு ருசுவைத் தேடி மேற்றிசைக்குச் செல்லப் போவதாகவும் கூறினான். மேலும் குந்தவையை வந்தியத்தேவன் பொருட்டு மனங்கலங்காது இருக்குமாறு கூறி விடைபெற்றான். திருப்புறம்பியத்தை அடைந்த ஆழ்வார்க்கடியான் அங்கு இடும்பன்காரி, சோமன்சாம்பவன், கிரம வித்தன் மற்றும் இராக்கம்மாள் கூடிப் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, அவர்கள் அனைவரும் பச்சைமலைக்குச் செல்கிறார்கள் எனப் புரிந்துகொண்டான். அவனைப்போலவே அவர்களைப் பின் தொடர்ந்துவந்த பூங்குழலியைக் கண்டு, அவர்கள் செல்லும் இடத்திற்கு இருவரும் சென்றனர். வழியில் ஊமைராணி இறந்ததைக் கேட்டு வருந்தினான். ஒரு இடத்தில் ரவிதாஸன் மற்றும் ஆபத்துதவிகள் மறைந்து கூட்டமாகச் சமைத்துக்கொண்டிருந்ததைக் கண்டனர். ஆழ்வார்க்கடியான் மட்டும் அங்கிருந்த ஒரு குகைக்குள் மறைந்து சென்றான். அங்கு பழுவேட்டரையர், தன் காளாமுகத் தோற்றத்தோடு, அப்போதுதான் மயக்கத்திலிருந்து விழித்திருந்தார். அருகில் நந்தினி தலைவிரி கோலமாய் அமர்ந்து அவரைக் கஞ்சியை உட்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டிருந்தாள். முதலில் நந்தினியைக் கண்டு மகிழ்ந்த பழுவேட்டரையர், பின் அவளைப் பலவாறாகத் திட்டத்தொடங்கினார். ஆனால் நந்தினி அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள். இத்தனை நாள் தன்னைப் பட்டமகிஷியாக வைத்திருந்ததற்கு நன்றி கூறினாள். ஆதித்த கரிகாலனின் முடிவு தனக்குத் தெரிந்ததானாலே, அதிலிருந்து பழுவேட்டரையரை விலக்குவதற்காகவே, அவரைத் தஞ்சைக்கு அனுப்பி வைத்ததாகக் கூறினாள். ஆனால் விதிவசத்தால் அவர் வந்து சேர்ந்ததைப் பற்றியும் ஆதித்தகரிகாலனைச் சந்தித்தபொழுது, தன்னால் தன் சபதத்தை நிறைவேற்ற முடியாமல் போனதையும் குறிப்பிட்டாள். வந்தியத்தேவனின்பால் ஆதித்த கரிகாலனின் கோபத்தைத் தூண்டி, கரிகாலன் அவனைக் கொல்ல வருகையில், மணிமேகலை அவனைக் காப்பாற்ற இளவரசரைக் கொல்லுவாள் எனத் திட்டம் தீட்டி வைத்திருந்ததையும் கூறினாள். அப்போது தெய்வப் பயனாக காளாமுக வேஷத்தில் தாங்கள் உதவிக்கு வந்ததாகக் கூற, பழுவேட்டரையர், இடும்பன்காரியிடமிருந்து தான் வாங்கிவைத்திருந்த கத்தியை நந்தினி மீதே, தான் எறிந்தபோது அது இளவரசர் பேரில் பாய்ந்துவிட்டது எனப் பெரிதும் வருந்தி அவளைத் தூற்றினார். நந்தினி அவரைப் பெரும்பாடு பட்டு இங்கு தூக்கிவரச் செய்ததாகவும் மூன்று நாட்கள் அவருக்குப் பணிவிடை செய்து அகமகிழ்ந்து போனதாகவும் இனிமேல் விடைபெற்றுச் செல்லப்போவதாகவும் கூறிக்கொண்டிருந்தாள். இதைக்கேட்டுக்கொண்டிருந்த ஆழ்வார்க்கடியான் அங்கிருந்து விலகிவந்து பூங்குழலியிடம் அமர்ந்தான். குகையில் பெரிய பழுவேட்டரையரும் நந்தினியும் இருப்பதைக் கூறினான். அப்போது அவள் தன் அத்தையைக் கொன்ற சோமன் சாம்பவனைக் கொல்லக் காத்திருப்பதாகக் கூறினாள். பூங்குழலி, அரண்மனையில் தன் அத்தையைக் கொன்றவனைத் துரத்திக்கொண்டு சுரங்கப்பாதை வழியாக வரும்பொழுது, தன்னுடன் சின்ன பழுவேட்டரையரும் வந்தார் எனவும் சுரங்கப் பாதையில் மதுராந்தகன் மறைந்து இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து, இந்தப் பழி அவர்மீது விழுந்து விடுமோ என அஞ்சி அவரைக் கூட்டிக்கொண்டு திரும்பிவிட்டதாகவும் கூறினாள். அப்போது இருவரையும் ரவிதாஸனின் பாண்டிய ஆபத்துதவிக் கூட்டம் சூழ்ந்து கொண்டது. அனைவரும் அவர்கள் மீது தாக்குதலுக்குத் தயாராக, நந்தினி உள்ளிருந்து வந்து, அவர்களைத் தடுத்து, ஆழ்வார்க்கடியானிடம் தன் தாய் இருக்குமிடத்துக்குத் தன்னைக் கூட்டிச் செல்லுமாறு கேட்டாள். ஆழ்வார்க்கடியான், சோமன் சாம்பவன்தான் அவள் அன்னையைக் கொன்றுவிட்டான் எனக் குற்றம் சாட்ட, நந்தினி உடைந்துபோய் உட்கார்ந்து அழுதாள். அப்போது சின்ன பழுவேட்டரையரும் கந்தமாறனும் படைகளுடன் வர, பாண்டிய ஆபத்துதவிகள் ஆழ்வார்க்கடியான் தலையிலும் பலமாக ஒரு அடியைப் போட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.  சேந்தன் அமுதனும் ஒரு குதிரையில் கட்டப்பட்டு அங்கு வந்து சேர்ந்தான். சின்ன பழுவேட்டரையரைக் கண்டதும் பூங்குழலி, கொலைகாரர்கள் அவர்கள்தான் என்றும் அவர்களைப் பிடிக்குமாறும் கேட்டுக்கொண்டாள். அப்போது குகையிலிருந்து பெரிய பழுவேட்டரையர் எழுந்து வெளியில் வந்தார். திருமலையும் கந்தமாறனும் குகையினுள் நுழைய முயல, பெரிய பழுவேட்டரையர், ரவிதாசனும் மற்றவர்களும் குகையை அடைத்துவிட்டுத் தப்பித்துவிட்டதாகக் கூறினார். தளர்ந்து அடிபட்டு பிரேதக்களை பொருந்திய முகத்துடன் தன் மூத்தவரைக் கண்டுகொண்ட சின்ன பழுவேட்டரையர், அவரை வணங்கி அழுது நின்றார். ‘உன் பேச்சைக் கேட்காமல் மோசம் போனேன்’ என்று பெரியவர் வருந்தினார். பின் அதுவரை நடந்ததை சின்ன பழுவேட்டரையர் சொல்லி முடிக்க, பெரியவர் பொறுமையுடன் கேட்டுக்கொண்டார். பூதி விக்கிரம கேசரியிடம் கோட்டைப் பாதுகாப்பு இருப்பதையும். தங்கள் குடும்பத்தின் மேல் கைவைக்க கூடாது என எச்சரித்து வந்ததையும் கூறினார். வழியில் கந்தமாறனைக் கண்டு கூட்டி வந்ததாகவும் மற்ற அரையர்களுக்கு, படை திரட்டி வருமாறு ஓலை அனுப்பியுள்ளதாகவும் கூறினார். அப்போது ஓரமாய் உட்கார்ந்திருந்த நந்தினியைப் பார்த்து, தன் உயிரை நந்தினிதான் காப்பாற்றினாள் என்று சின்ன பழுவேட்டரையரிடம் கூறிவிட்டு நந்தினியை நெருங்கினார். ஆழ்வார்க்கடியான் நந்தினியிடம் ‘இப்போதாவது வந்தால் வைணவக் கைங்கரியங்கள் செய்யலாம்’ என அழைக்க, நந்தினிஅவன் தன்மீது வைத்திருக்கும் பாசத்துக்கு நன்றி உகுத்தாள். தூரத்தில் நின்று பூங்குழலி தன் அத்தை போலவே நந்தினி இருப்பதை சேந்தன் அமுதனிடம் சொல்லிக்கொண்டிருக்க, நந்தினி தன்னை நெருங்கிய பெரிய பழுவேட்டரையரின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தாள். பின் அங்கிருந்த புரவியின் மேல் ஏறிக்கொண்டு பாய்ந்தாள். அவளைத் தொடர முயன்றவர்களை, பெரிய பழுவேட்டரையர் தடுத்துவிட்டார். ஆம். நந்தினி மறைந்தாள்.. இந்தக் கதையில் இனி நந்தினி வரமாட்டாள்.. யார் கண்டது? என்றோ எங்கோ அவளை நாம் சந்திக்கக்கூடும். தஞ்சையில் ஆதித்த கரிகாலனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட, கூடவே ஜனசமுத்திரம் அலையலையாக திரண்டது. பழுவேட்டரையர்களின் பால் ஜனங்களின் அதிருப்தி பெரியளவில் இருந்ததால், அவர்களுக்கெதிரான கோஷங்கள்  எழுந்துகொண்டேயிருந்தன. ஈமச் சடங்குகள் நடந்து சக்ரவர்த்தியின் குடும்பம் கோட்டைக்குள் நுழைந்த பிறகும் அது தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்போது மதுராந்தகனும் இல்லாதபடியால், அவருக்கு எதிரான கோஷங்களுடன் தங்களுக்குக் கிடைத்த தகவலின்படி அநிருத்தரின் மாளிகைக்கு முன்பு சென்று கோஷமிடத் தொடங்கினர். வேளக்காரப் படையினர் வந்து துரத்தியடித்தனர். உண்மையில் மதுராந்தகன் அங்குதான் மறைந்திருந்தார். அநிருத்தர், அவருடைய பிறப்பு ரகசியம் தனக்குத் தெரியுமெனவும் ஆனால் அதைச் சொல்ல முடியாதெனவும் கூறியதில் மதுராந்தகன் சஞ்சலம் அடைந்திருந்தான். அப்போது செம்பியன் மாதேவிப் பிராட்டியாரும் அங்கு வந்து சேர்ந்தார். இருவருக்கும் ராஜ்ய உரிமை பற்றிய பேச்சுவார்த்தை முற்றிய நிலையில், பிராட்டியார் மதுராந்தகன் தன் மகனில்லை என்ற உண்மையைக் கூற நேர்ந்தது. மதுராந்தகன், அவர் மனம் புண்படும்படிப் பேசி உண்மையைச் சொல்லுமாறு பல்வேறு வார்த்தைகளால் ஏசினான். அநிருத்தரிடம் அந்தக் கதையை சொல்லுமாறு செம்பியன் மாதேவி கேட்டுக்கொண்டார். ‘செம்பியன் மாதேவி தன் குழந்தைப் பேற்றை எதிர்பார்த்திருந்த சமயத்தில், கண்டராதித்தர் வெளியூருக்குச் சென்றிருந்தார். அதே சமயத்தில், அக்காவும் தங்கையுமான இரண்டு ஊமை ஸ்தீரிகள் அரண்மனைத் தோட்ட த்தில் குடியிருந்தார்கள். கர்ப்பஸ்தீரியான அந்த ஊமைப் பெண்ணை ,அவள் சகோதரியுடன் செம்பியன் மாதேவி க்ஷேத்ராடனம் சென்றபோது சந்தித்துக் கூட்டிவந்து போஷித்துக் கொண்டிருந்தார். செம்பியன் மாதேவிக்குக் குழந்தை பிறந்தபோது, அது அசைவில்லாமல் இருந்ததைக்கண்டு பதறி அழுதபடி பார்க்கவந்த அநிருத்தரிடம் தெரிவித்தாள். தன் கணவரிடம் எப்படி இதைச் சொல்வேன் எனக் கதறிய செம்பியன் மாதேவியிடம் அநிருத்தர் ஒரு யோசனை தெரிவித்தார். அதன்படி அரண்மனைத் தோட்டத்தில் இருக்கும் கர்ப்பஸ்தீரிக்குப் பிறந்திருக்கும் இரட்டைக் குழந்தைகளில், ஆண் குழந்தையை எடுத்து வரச் செய்து, செம்பியன் மாதேவியிடம் அளித்தார். இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த அந்த ஊமை ஸ்தீரி மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தாள். குழந்தைகள் நன்றாக வளரும் என்று கூறிய அநிருத்தரிடம் விட்டுவிட்டு அவள் மறைந்துவிட்டாள். அசைவில்லாமல் பிறந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் புதைத்துவிடும்படி, அந்தத் தங்கையான ஊமை ஸ்தீரியிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு பெண் குழந்தையை, தன் சீடனான ஆழ்வார்க்கடியானிட்ம் கொடுத்து பாண்டிய நாட்டுக்கு அனுப்பிவைத்தார்.  செம்பியன் மாதேவி, இதைச் சிறிதுகாலம் கழித்துத் தன் கணவரான கண்டராதித்தனிடம் உணமையைக் கூறி மன்னிப்பும் கேட்டார். யார் வயிற்றில் பிறந்த குழந்தையாயினும் என்ன, நம் குழந்தை போலவே வளர்ப்போம். ஆனால் ராஜ குடும்பத்துக்கு வாரிசாக வேண்டாம். சிவத்தொண்டாற்றும்படி வளர்ப்போம். அவனுக்கு சிவ சாம்ராஜ்யமே போதும். ராஜ்ய உரிமை வேண்டக்கூடாது என உறுதி வாங்கிக்கொண்டு சில நாட்களில் இறந்தும் போனார்.’ இவற்றையெல்லாம் அநிருத்தர் சொல்லி முடித்ததும் அதிர்ந்த மதுராந்தகன், இது யாருக்கும் தெரியாதெனில் இதற்குப் பிறகும் இதை மறைத்து வைக்குமாறும் அதற்கு ஈடாக அவருக்குப் பரிசளிப்பதாகவும் கூறினான். அநிருத்தர் மறுத்து, செம்பியன் மாதேவி என்ன கட்டளை இடுகிறாரோ அதை மட்டுமே ஏற்பேனெனக் கூற, மதுராந்தகனுக்குச் சினம் மிகுந்தது. செம்பியன் மாதேவியிடம் இதை மறைத்துவிடுமாறு கூற, அவர் அதை ஒத்துக்கொள்ள மறுத்து, நல்வார்த்தைகள் கூறி அவனை ஆற்றுப்படுத்தினார். மேலும் அதை வெளியில் சொல்லுவதைத் தான் விரும்பவில்லை எனவும் மதுராந்தகனை, அரசர் கூட்டவிருக்கும் சபையில், ராஜ்யம் ஆளும் சிந்தனை தனக்கில்லை; சிவத்தொண்டில் முழுகப் போகிறேன், என அறிவிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மதுராந்தகன் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்க, அநிருத்தர் சபை கூட இன்னும் மூன்று தினங்கள் இருப்பதாகக் கூறவும் மதுராந்தகனின் மனத்தில் பலவிதத் தீய எண்ணங்கள் எழத் தொடங்கின. சேந்தன் அமுதனின் தாய்க்கு இந்தச் செய்தி தெரியும் என்பதையும் அறிந்துகொண்டான். அப்போது அருள்மொழி உள்ளே வந்து, செம்பியன் மாதேவியின் தாள் பணிந்து, இந்தப் பேச்சுகளை மறைந்திருந்து கேட்டதற்கு மன்னிக்கும்படியும் மதுராந்தகர் அவருடைய மகனில்லை என வெளியில் தெரிவிக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். இந்த ரகசியம் தனக்கும் தன் தமக்கை இளைய பிராட்டி குந்தவைக்கும் கூடத் தெரியுமென அவர் சொல்ல, அனைவரும் வியப்பிலாழ்ந்தனர். அநிருத்தர் மூன்று நாட்கள் அனைவரும் சிந்தித்து முடிவெடுக்குமாறு கேட்டுக்கொண்டார். தொடரும்

பொன்னியின் செல்வன் – 27

பொன்னியின் செல்வன் – 27

காளாமுகனாக வேடமிட்டு வந்திருந்த பெரிய பழுவேட்டரையரால் தாக்கப்பட்டு மயங்கியிருந்த வந்தியத்தேவன், அரைமயக்கத்தில் கண் திறந்து பார்த்தபொழுது, அங்கு காரிருள் அப்பியிருந்தது. கைகளால் துளாவிப் பார்த்தபொழுது, ஒரு திருகுமடல் கத்தி கிடைக்க, அதன் நுனியில் இருந்த பிசுபிசுப்பை உணர்ந்து வந்தியத்தேவன் அதிர்ச்சியுற்றான். தொண்டையில் காளாமுகன் அழுத்திப் பிடித்திருந்த காயத்தால் அவனுக்கு குரலும் வரவில்லை. பெருமுயற்சி செய்து அவன் எழுந்து நடந்தபொழுது எதிலோ தட்டுப்பட்டு விழுந்தவன், குனிந்து தொட்டுப் பார்த்ததும் அதிர்ந்தான். அது ஆதித்த கரிகாலனின் உயிரற்ற உடல் என்பதை அறிந்து கொண்டதும் அதிர்ச்சியும் துயரமும் அவனை அழுத்தின. வந்தியத்தேவனின் நெஞ்சு விம்மித் தொண்டையை அடைத்து கண்களில் கண்ணீர் பெருகியது. எவ்வளவோ முயன்றும் தன்னால் தடுக்க முடியாமல் போய்விட்ட இயலாமையை நினைத்து மருகித் துடித்தான். இளவரசரை பாதுகாக்க தன்னை அனுப்பிய குந்தவையையும், பொன்னியின் செல்வனையும் இனிமேல் எப்படிக் காண்பேன் என ஆதித்த கரிகாலனின் உடலை மடியில் போட்டுக்கொண்டு அழுதான். மனிதர்கள் வரும் சந்தடிகளும், வெளிச்சமும் நெருங்கி வர, நிமிர்ந்து பார்த்தான். கந்தமாறனும், சம்புவரையரும், சில வீரர்களும் தீப்பந்தங்களுடன் வந்தனர்.சம்புவரையர் ‘அடப்பாவி, இளவரசரைக் கொன்றுவிட்டாயா’ என்றபடி பதற, கந்தமாறன் வந்தியத்தேவன்தான் கொன்றிருப்பான் என அநியாயமாக பழிச்சாட்டினான். வந்தியத்தேவன் நொந்துகொண்டே, தான் கொல்லவில்லை என்பதையும், நந்தினியும் அங்கே ஒளிந்திருந்த பாண்டிய ஆபத்துதவிகள் பற்றியும் கூறினான். அவர்களுக்கும் வந்தியத்தேவனுக்கும் தொடர்பு உண்டு என கந்தமாறன் குற்றம் சாட்டி அவனைத் தாக்க வாளை உருவினான். வந்தியத்தேவன் அதை மறுத்துக்கொண்டே இருந்தான்.அப்போது திரைச்சீலை அசைய, சம்புவரையர் அங்கு பார்க்க, மணிமேகலை வெளியில் வந்து வந்தியத்தேவன் கொலை செய்யவில்லை என்று கூறினாள். கந்தமாறன் மேலும் கோபமடைந்து வந்தியத்தேவன் ஏதோ செய்து அவள் மனதை மாற்றியிருப்பதாகக் கூச்சலிட்டான். மணிமேகலை மறுக்க, சம்புவரையர், அப்போது ‘ஆதித்த கரிகாலனை கொன்றது யார்?’ என்று கேட்க, மணிமேகலை ‘நான்தான் கொன்றேன்’ எனக்கூற சம்புவரையர் மற்றும் கந்தமாறனுடன் வந்தியத்தேவனும் திகைத்து போனான்.சம்புவரையர் மனம் நொந்து போக, கந்தமாறன், மணிமேகலை வந்தியத்தேவனைக் காப்பாற்றவே இந்தப் பழியை ஏற்கிறாள் என்பதைப் புரிந்து அவனைக் கொல்லப் போக, சம்புவரையர் அவனைத் தடுத்தார். மேலும் மேலும் அவன் செய்த முட்டாள்த்தனங்களால்தான் பெரும்பழி நேர்ந்திருக்கிறது, வந்தியத்தேவனை உயிருடன் ஒப்படைப்பது முக்கியம் என பரிதவித்துப் பேச, கந்தமாறன் தந்தையின் சொல்லுக்கு பணிந்தான். மணிமேகலையை அந்தப்புரத்துக்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வரும்படி ஆணையிட்ட சம்புவரையரிடம், இப்போதைக்கு வந்தியத்தேவனின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என்பதை புரிந்துகொண்ட மணிமேகலை தானே செல்வதாக கூறிச் சென்றாள். அங்கிருந்த கட்டிலின் காலில் வந்தியத்தேவனைக் கட்டிப்போட ஆணையிட்ட சம்புவரையரிடம், ‘என் எஜமானனை நானே கொல்லவேண்டுமென என்ன அவசியம். நான் செய்யவில்லை என்பதை நம்புங்கள்’ என்று வந்தியத்தேவன் கேட்டான். அப்படியானால் தடுத்திருக்கலாமே என சம்புவரையர் கேட்க, பழுவூர் இளையராணியும் இளவரசரும் பேசிக்கொண்டிருந்தார்கள். நிலைமை விபரீதமாகும்போது தான் தடுக்குமுன் ஒரு காளாமுகன் வந்து கழுத்தை நெறித்ததால், மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறினான். அப்போது வெளியே மக்களின் பெருங்கூச்சல் கேட்க, சம்புவரையரும் காவலர்களும் அவனைத் தனியே விட்டுவிட்டு வேகமாக வெளியே வந்தனர். மலையமான் படைகள் கோட்டை வாசலில் வந்ததால் ஏற்பட்ட கூச்சல் அது என்று புரிந்து கொண்டனர். சம்புவரையர், கந்தமாறனை தப்பித்து போய்விடும்படி கூற, அது தமது பரம்பரைக்கே அபகீர்த்தி ஆகுமென கந்தமாறன் மறுத்துவிட்டான். அதைக்கேட்டு பெருமிதப் பட்ட சம்புவரையர், சுரங்கப்பாதை வழியாக தஞ்சாவூருக்குச் சென்று கரிகாலனின் மரணத்தைப் பற்றி சின்னப் பழுவேட்டரையரிடமும், ஒருவேளை பெரிய பழுவேட்டரையர் அங்கு வந்திருந்தால் அவரிடமும் தெரிவிக்கச் சொன்னார். இளவரசர் அருள்மொழி, தான் சிங்காதனம் ஏறுவதற்காக வந்தியத்தேவனை ஏவிவிட்டிருக்கலாம் என்றெல்லாம் செய்தி பரப்பவேண்டும் என்றும் முடிவுசெய்து கொண்டனர். மணிமேகலையை வாயைத் திறக்காமல் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு கந்தமாறன் கிளம்பினான். சிறிதுநேரம் சிந்தித்த சம்புவரையர் விளக்கை நன்றாகத் தூண்டிவிட்டு சுரங்கப் பாதையிலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். பின் அந்தப்புரத்தை அடைந்து அங்கிருந்த பெண்மணிகளிடம் எப்போது வேண்டுமானாலும் மாளிகையை விட்டு வெளியேற வேண்டியிருக்குமென எச்சரித்து விட்டு ஏழெட்டு வீரர்களுடன் அரண்மனை வாயிலுக்குச் சென்று கம்பீரமாக எதிர்வரும் மலையமான் படைகளை எதிர்த்து நின்றார். மிகுந்த மனவருத்தத்துடன் நடந்த சம்பவங்களை நினைத்து வந்தியத்தேவன் வருந்திக்கொண்டிருந்த போது சுரங்கபாதையிலிருந்து உஷ்ணம் சூழ அங்கு யாரோ நெருப்பு வைத்துவிட்டிருந்தது புரிந்தது. ஒரு கணம் தன் எஜமானனுடன் தானும் செத்துப்போய்விடலாம் என எண்ணினான். அவரைக் கொன்ற பழியை நாம் சுமக்கத்தேவையில்லை என்று நினைத்தவன் அடுத்த கணமே அதை மாற்றிக்கொண்டான். ஆதித்த கரிகாலனுக்கு செய்ய வேண்டிய இறுதிமரியாதைகளுக்கு அவரின் உடலை பத்திரமாக காப்பாற்றிக்கொண்டு போக வேண்டிய கடமை தனக்கிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு முயன்று தன் கட்டுகளிலிருந்து விடுவித்துக் கொண்டான். தீ நாலாபக்கமும் சூழ இளவரசரின் உடலை சுமந்தபடி, காலில் தட்டுப்பட்ட திருகுமடல் கத்தியையும் எடுத்துக்கொண்டு, யாழ்க்களஞ்சியத்தின் வழியாக முன்பு சதியாலோசனை நடந்தபோது பார்வையிட்ட மேல்மாடிக்கு கஷ்டப் பட்டு சென்றான். அங்கிருந்த மதிலில் இறங்கும்வண்ணம் ஒரு ஏணி சாய்த்து வைக்கப் பட்டிருக்க அதன்மூலம் இறங்கினான். அங்கு யாரையோ எதிர்பார்த்தபடி இடும்பன் காரி நின்றிருந்தான். அவனைச் சமாளித்துவிட்டு, உடலை சுமந்து கொண்டு அரண்மனைவாயிலை நோக்கி சென்றான். பார்த்திபேந்திரனும், மலையமானும் எதிரிட்ட வீரர்களை சிதறடித்துவிட்டு வேகமாக வந்து சம்புவரையரின் முன் நின்றனர். ‘ஆதித்த கரிகாலனுக்கு ஆபத்து உடனே படைகளுடன் வந்து காப்பாற்றவும்’ என்று எழுதப்பட்ட ஓலையைக் காட்டிய மலையமான், ‘என் பேரன் எங்கே?’ என சிங்கம் போல முழங்கினார். சம்புவரையர் தன் உடலில் எழுந்த நடுக்கத்தை மறைத்துக் கொண்டு, இளவரசர் பழூவூர் இளையராணியை சந்திக்க சென்றிருப்பதாக கூற, பார்த்திபேந்திரன் மலையமானைக் கூட்டிக்கொண்டு போக கிளம்பினவன் அதிர்ந்தான். அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்து தீ’ தீ எனக் கத்திக்கொண்டு நாலாபக்கமும் மக்கள் ஓடிக்கொண்டிருந்தார்கள்.பார்த்திபேந்திரன் அதிர்ந்து போய், மலையமானிடம், சம்புவரையரைக் காட்டி, ‘இவர்கள்தான் ஏதோ சூழ்ச்சி நடத்தியிருக்க வேண்டும். அவர்களை சிறைப்பிடியுங்கள்’ என்று கூற, சம்புவரையர் வாயிலை தகர்த்துக்கொண்டு வந்த அவர்கள்தான் பதில் சொல்லவேண்டுமென திரும்ப கர்ஜித்தார். பார்த்திபேந்திரன் தீ எரியும் திசையை நோக்கி ஓட, அந்தப்புரத்தில் இருக்கும் பெண்களெல்லாம் அலறியபடியே வெளியே வந்தனர். அவர்களுடன் வெளியே வந்த மணிமேகலை தீ எரியும் இடத்தைக் கண்டு பதறியபடியே அங்கு ஓடத் தொடங்கினாள். அவளைத் தடுக்க முயன்ற சம்புவரையரிடம் ‘அவர் அங்கிருக்கிறார்’ என்று பதறியபடி ஓட முயலவும், அவளை ஓங்கி அறைந்தார். சம்புவரையரின் கண்ணுக்கு கண்ணான செல்லப் பெண்ணான மணிமேகலை ஸ்தம்பித்து நின்றாள். அவளின் முகத்தைக் கண்டு வருந்திய சம்புவரையர், ‘அங்கு ஓடவேண்டிய அவசியமில்லை’ என்று வாயிலைச் சுட்டிக்க்காட்டினார். அங்கு வந்தியத் தேவன் அவனுடைய தோளில் ஆதித்த கரிகாலனின் சடலத்தை சுமந்தபடி தள்ளாடித் தள்ளாடி வந்து கொண்டிருந்தான். இதைக் கவனித்துக் கொண்டிருந்த மலையமானும் அந்த திசையைப் பார்க்க, அவரின் உடல் நடுங்கியது. நா எழவில்லை. தொண்டை அடியோடு அடைத்துக் கொண்டு விட்ட து. வந்தியத் தேவன் மலையமானைப் பார்த்து, ‘ஐயா! இதோ இளவரசர் கரிகாலர். வீரபாண்டியன் தலை கொண்ட இந்த வீராதி வீரரை உயிரோடு தங்களிடம் கொண்டு சேர்க்க என்னால் இயலவில்லை. உடலை மட்டும் கொண்டு சேர்த்தேன். விதியாலும், சதியாலும் கொல்லப்பட்ட உங்கள் பேரப் பிள்ளையை இனி நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு வந்தியத்தேவன் இளவரசர் சடலத்தை மெதுவாய் கீழே இறக்கிவைத்துவிட்டு தடால் என தானும் கீழே விழுந்து நினைவிழந்தான். மலையமான், தன் பேரனிடம் அமர்ந்து அந்த வீரத் திருமுகத்தை உற்று நோக்கி ‘ஐயோ’என்றபடி தன் இரும்பையொத்த முதிய கைகளினால் தலையிலும் மார்பிலும் மாற்றி மாற்றி அடித்துக்கொண்டு புலம்பினார். தான் அவனுக்கு போர்த்தொழில் கற்றுக்கொடுத்ததையும், படைக்களத்தில் நின்று போர் புரிந்ததையும், வீர பராக்கிரமச்செயல்கள் செய்ததையும், சொல்லிச் சொல்லி புலம்பினார். அப்படியாவது வீரமரணம் அடைந்திருக்கக் கூடாதா என்றெல்லாம் சொல்லிப் புலம்பினார்.பின்னர் சோகத்திலிருந்து விடுபட்டு ரெளத்திரகாரம் அடைந்து சம்புவரையரிடம், ‘நேருக்கு நேர் நின்று மோதினாலும் கொல்ல முடியாத தன் பேரனை என்ன சதி செய்து கொன்றாய்?’ என்று கர்ஜித்தார். சம்புவரையர் அதை மறுக்க, பார்த்திபேந்திரனிடம் அங்கிருக்கும் அத்தனை பேரையும் சிறைப்பிடிக்குமாறும், அரண்மனையை இடித்து சிதிலமாக்கும்படியும் ஆணையிட்டார். பார்த்திபேந்திரன் தீயே அரண்மனையை அழித்து விட்ட தாகக் கூற, அங்கு பார்த்த போது, மாளிகை கொழுந்து விட்டு எரிந்ததை அனைவரும் கண்டு திகைத்துப் போய் நின்றிருந்தனர். தன்னை ஒருவாறு சமனப் படுத்திக்கொண்ட மலையமான், ‘மூன்றாண்டு காலமாக மகனைப் பாராமலிருந்த தன் மகளிடம் இறந்த சடலத்தையாவது கொண்டு போய் காண்பிப்போம், இளவரசனைக் கொன்ற பாவிகளுக்கு அங்கேயே தக்க தண்டனையை சக்ரவர்த்தி வழங்கட்டும்’ எனக் கூறினார்.

பொன்னியின் செல்வன் – 26

பொன்னியின் செல்வன் – 26

ஆதித்த கரிகாலன் உள்ளே நுழைந்தபோது சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே நுழைந்ததால், சற்று முன்பு மணிமேகலை ஒளிந்து கொண்டதன் விளைவாக திரைச்சீலை அசைந்ததை வைத்து யாரோ ஒளிந்திருக்க வேண்டும் என்பதை அவதானித்துக் கொண்டான்.. நந்தினிக்கு அருகே தரையில் ஒளிர்ந்து கொண்டிருந்த வாளை அவள் எடுக்குமுன் குனிந்து, தான் எடுத்தான். அதன் நுனியில் புதிய ரத்தக்கறை இருப்பதைப் பார்த்தான். ‘அவனைப் போன்ற வீரர்களை வரவேற்க இதுவே சரியான முறை’ என நந்தினி கூர்மையாக கூறியதை ரசித்தான். தனது வாளைத் தன்னிடம் கொடுக்குமாறு நந்தினி வேண்ட, ‘மலர் கொய்யவும், மாலை புனையவும் பிரம்மன் படைத்த தளிர்க்கரங்களால் வாளைத் தொடலாகாது’ என அவளிடம் கூறினான். பெருமூச்செறிந்தவாறே நந்தினி, ‘இந்த ஏழையின் கைகள் ஆர்வத்துடன் மலர் கொய்து மாலை புனைந்த காலம் உண்டு. அந்த மாலையை சூடுவதற்குரியவர் எப்போது வருவார் என காத்திருந்து காத்திருந்து ஏமாந்த காலமும் உண்டு. அந்த பகற்கனவு கண்ட காலமெல்லாம் மறைந்து இந்த திக்கற்ற அனாதையின் கைகளில் வாளைத் துணைக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்திருக்கிறது. எனவே அந்த வாளை என்னிடம் கொடுத்து விடுங்கள்’ என வேண்டினாள். ஆதித்த கரிகாலன், அவள் தன்னை அனாதையென்று சொன்னதை எள்ளல் செய்து அவள் காலால் இட்ட வேலையைத் தலையாய் செய்ய எத்தனையோ பேர் காத்திருப்பதாக கூறினான். அந்த தூர்த்தர்களிடமிருந்து தன் காலை வெட்டிக்கொள்ளவாவது அந்த வாளின் துணை வேண்டுமென நந்தினி பதிலளித்தாள். அதற்கு கரிகாலன், ‘பழுவேட்டரையர் இருக்கும்போது அந்த தைர்யம் யாருக்கு வரும்’ என்றான். ‘ அவர் கொள்ளிடத்து வெள்ளத்தில் மூழ்கிவிட்டார் என்று தெரிந்த பிறகு அந்த வாலிபப் புலிகளுக்கு தைரியம் வந்துவிட்டது. அவர்களிடமிருந்து என்னைக் காத்துக் கொள்ளவே நான் இந்த வாள் சுழற்றப் பயின்றேன்’, என்றாள் நந்தினி. ‘வாள் வீசக் கற்றுக் கொண்டதற்கு அதுதான் நோக்கமா? உன் வேண்டுகோளைப் புறக்கணித்து உன் உள்ளத்தில் அழியாத புண்ணை உண்டாக்கிய பாதகனைக் கொல்லும் நோக்கமில்லையா?’ என்றான் கரிகாலன். ‘ஒரு சமயம் இருந்தது உண்மைதான். ஆனால் அந்த வேளை வந்திருக்கும் போது என் கரங்களில் வலிவும் நெஞ்சில் உறுதியுமில்லாமல் போய்விட்டது. இனி இந்த வாளை என் கற்பையும் என் கணவரின் கெளரவத்தையும் மட்டும் காப்பாற்றிக் கொள்ள மட்டுமே உபயோகிப்பேன். தயவுசெய்து அதைக் கொடுத்து விடுங்கள்’, என்றாள். ‘அந்த பொறுப்பை என்னிடம் கொடுங்கள். நான் அந்த பாதகனை தண்டிக்கறேன்.’, என்று கர்ஜித்தபடி ஆதித்த கரிகாலன் திரைச்சீலையை நோக்கிச் செல்ல. நந்தினி அவன் காலைத் தொட்டு மண்டியிட்டுக் கரங்களைக் குவித்துக் கொண்டு ‘ கோமகனே.. வேண்டாம்.. வேண்டாம்’ என்றாள். ‘ உன் கருணையை வேறு எங்காவது வைத்துக்கொள், ஏரித்தீவில் நீ வந்தியத்தேவனைப் பற்றிக் கூறியதெல்லாம் பொய் என நினைத்தேன். கந்தமாறன் சொன்ன பிறகே அனைத்தும் உண்மையென புரிந்து கொண்டேன். நண்பனைப் போல நடித்து சதி செய்யும் சண்டாளனிடம் கருணை காட்டாதே’ எனக் கூறி மேலே நகர்ந்தான். நந்தினி திகைத்து வாயிற்படியருகே அசையாது நின்றுகொண்டிருக்கும் கந்தமாறனைப் பார்த்து அவனைத் தடுக்குமாறு கத்தினாள். ஆனால் அவன் ஒரு அசட்டுச்சிரிப்பை சிரித்துவிட்டு பேசாமல் நிற்க, ஆதித்த கரிகாலன் வேகமாய் கத்தியின் நுனியால் திரைச்சீலையை நகர்த்தினான். உள்ளே சிறிய கத்தியுடன் க்றீச்’ என்று கத்தியபடி மணிமேகலை இருக்கவும் ஆதித்த கரிகாலன் ஸ்தம்பித்து நின்றான். பெரிதாகச் சிரித்தவாறே கந்தமாறனை அழைத்து ‘இந்தப் பெண்புலிக்கு எத்தனை வீரப் புலிக்குட்டிகள் பிறக்குமோ தெரியாது. கொண்டுபோய் உன் அம்மாவிடம் விட்டுவிட்டு வா’ என்று இருவரையும் அனுப்பிவிட்டு நந்தினியை ஏறிட்டான். ஒரு நாடகம் நடித்து அவர்களை அனுப்பி விட்ட தாகவும் இனிமேலாவது உண்மையை மனம் விட்டு பேசலாமென நந்தினியிடம் கூற, அவள் ‘அத்தனையும் நடிப்பா’ என வியந்தாள். ‘நடிப்பு உனக்கு புதிதா’ எனக் கேட்ட கரிகாலன் ‘மணிமேகலையை தான் கொல்லப்போகும்போது தடுக்காதது ஏன்? அவள் சாகட்டும் என விட்டுவிட்டாயா?’ என்று வினவ, அவள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதாக நந்தினி கூறினாள். ‘அவ்வளவு அன்பை நந்தினி யார் மீது வைத்தாலும் அவர்கள் தனக்கு விரோதியாகிவிடுவார்’ என ஆதித்த கரிகாலன் கூறினார். நந்தினி பதறி இல்லையெனக் கூறினாள் ‘உண்மையைச் சொல்.சோழ சாம்ராஜ்யத்தை பங்கு போடுவதற்கோ, மணிமேகலையை எனக்குத் திருமணம் செய்விப்பதற்காகவோ இங்கு நீ வரவில்லை. நான் நம்ப மாட்டேன். என் உள்ளத்தில் நிரம்பியிருப்பதெல்லாம் நிராசையும் அவநம்பிக்கையும்தான். இந்த நாட்டை விட்டும் இந்த உலகத்தை விட்டும் போய் விடவே நான் விரும்புகிறேன்.அதற்கு முன்னால் ஒரு தடவை உன்னைப் பார்த்துப் போகலாம் எனவே வந்தேன். நீ என்னிடம் ஒரு வரம் கேட்டாய். நான் என் மூர்க்கத்தினால் அதை உனக்குக் கொடுக்கவில்லை. அதற்கு வருத்தப் படுகிறேன். நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய், என்னை எதற்கு வரவைத்திருக்கிறாய்? பழுவேட்டரையரை எதற்காகத் தஞ்சைக்கு அனுப்பி வைத்திருக்கிறாய் என்றெல்லாம் எனக்குத் தெரியும். வீரபாண்டியனுடைய வாளினால் என்னைக் கொன்று பழிமுடிக்கும் நோக்கத்துடனேயே நீ இங்கு வந்திருக்கிறாய். அந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளட்டுமெனவே கந்தமாறனையும் மணிமேகலையையும் வெளியில் அனுப்பினேன். இதோ வாளைப் பெற்றுக்கொள்’ என வாளை நீட்டினான் கரிகாலன். வாளினைப் பெற்றுக்ககொண்ட நந்தினி நடுங்கி கண்ணீர் விட்டு தேம்பலுடன் அழலானாள்.‘உன் அந்தரங்கத்தை நான் அறிவேன். உன் பழியை முடிப்பதற்கு கந்தமாறனையோ, பார்த்திபேந்திரனையோ, வந்தியத்தேவனையோ நீ ஏவி விட வேண்டாம். உன் சபதத்தை உன் கையாலேயே முடித்துக் கொள். இதைவிட நல்ல சந்தர்ப்பம் வரப் போவதில்லை. என்னைக் கொல்லுவதினால் எனக்கு நீ எவ்வித தீங்கும் செய்தவளாக மாட்டாய். பேருதவி செய்தவளாவாய்?’ என்று கரிகாலன் கூற, அழுகையை அடக்கிக் கொண்டு நந்தினி, ‘ நான் இங்கு வந்த நோக்கம் பற்றி நீங்கள் சொன்னதெல்லாம் உண்மைதான். ஆனால் சந்தர்ப்பம் நேர்ந்திருக்கும் சமயத்தில் எனக்கு அந்த தைரியம் இல்லை. என் கைகள் நடுங்குகின்றன’ என்றாள். ‘ ஆம். ஏன் உன் நெஞ்சம் உறுதியாயிற்றே.. இளகிவிட்ட காரணம் என்ன?’ ‘உங்கள் நண்பர் வந்தியத்தேவன் சொன்ன செய்திதான் காரணம்’ ‘ நீயும் நானும் உடன்பிறந்தவர்கள் என்று அவன் சொன்னதை நீ ஏரிக்கரையில் நாம் பேசிக்கொண்டிருந்தபோது அதை நம்பவில்லை என்று கூறினாயே’ ‘அவர் என்னைப் பெற்ற அன்னையை இலங்கைத் தீவில் பார்த்ததாகக் கூறினார். அதை நான் நம்புகிறேன். எனக்கொரு வரம் கேட்கிறேன். இதையாவது கொடுங்கள். வீரபாண்டியன் மரணத்திற்கு பழிவாங்குவதாக செய்த சபதத்தை என்னால் முடிக்க இயலவில்லை. என்னை நானே கொன்று கொண்டு முடியலாம் என நினைத்தால் அதற்கும் என்னிட்ம் தெம்பில்லை. நீங்கள் இந்த வாளால் என்னை வெட்டிக் கொன்று விடுங்கள். இனிவரும் ஜென்மங்களில் நான் நன்றியுடன் இருப்பேன்.’என்று சொல்லியபடி நீட்டிய வாளை ஆதித்த கரிகாலன் வாங்கிக் கொண்டு அந்த அரண்மனையே அதிரும்படி பெரிதாகச் சிரித்தான். யாழ்களஞ்சியத்திலிருந்து இதைக்கேட்ட வந்தியத்தேவன் மருண்டான். இளைய பிராட்டி குந்தவை தன்னை இதுபோன்ற சந்தர்ப்பத்திலிருந்து ஆதித்த கரிகாலனைக் காப்பாற்றவே அனுப்பி வைத்திருக்கிறார் என்று நினைத்துக் கொண்டான். தற்போது வெளிவந்து அவர்களைக் குறுக்கீடு செய்யாமல் பொறுமையாக காத்திருக்கலாம் என முடிவு செய்து பல்லைக் கடித்துக் கொண்டு நின்றான். ‘ஒருகாலத்தில் உங்களிடமிருந்து மலர்மாலை சூடுவதாக கனவு கண்டேன். உங்கள் கையால் வாளை சூடும் பேறாவது எனக்குக் கிடைக்கட்டும்’ ‘அப்படியானால், நான் இந்த வாளைக் கொண்டு உன்னிடம் சேர்வதற்கு தடையாய் இருப்பவர்களைக் கொல்கிறேன். நீ என்னுடன் வந்துவிடு நந்தினி’ ‘என்னால் யாரும் சாக வேண்டாம். நமக்கு என் தலைவிதிதான் தடையாக இருக்கிறது’ ‘ அந்த தடையை நான் மாற்றி எழுதுகிறேன். தடை செய்யாதே. வந்தியத்தேவன் சொன்னதைப்பற்றி நாம் சகோதர முறை என யோசிக்கிறாயா?’ ‘இல்லை. நான் உங்களுக்கு ரத்த சம்பந்தமே இல்லை. அதில் சந்தேகமும் இல்லை. நான் பழுவேட்டரையரின் மனைவி. உங்களுக்கு பாட்டி முறை.’ ‘அந்தக் கதையை சொல்லி என்னை ஏமாற்றாதே நந்தினி. உன்னை விட்டு நான் காஞ்சிக்கு சென்ற பின்னும் என்னை ஓயாமல் வதைத்துக் கொண்டே இருந்தாய். நீ மட்டும் அங்கு குதூகலமாய் பழுவேட்டரையரின் மனைவியாக இருந்து கொண்டு என்னை ஆட்டுவித்தாய்’ ‘நான் மட்டும் சுகபோகங்களில் முழுகிக் கிடந்தேன் என நம்புகிறீர்களா?’ ‘இல்லையல்லவா? அப்படியானால் கிளம்பு. எத்தனையோ தீவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றை அடைவோம். உன்னைக் காட்டிலும் எனக்கு ராஜ்யம் பெரிதன்று’ ‘ராஜ்யத்தை துறந்தாலும் இந்தக் கீழ்க்குல மகள் புராதனமான சோழ சிங்காதனத்தில் ஏறுவதற்கு சம்மதிக்க மாட்டீர்கள் இல்லையா’ கேட்டுவிட்டு ஏளனமாக நந்தினி நகைக்க,‘என்னைக் காட்டிலும் சோழ சிங்காதனம் உனக்கு பெரியதாய் போயிற்றா? அதற்காகத்தான் என்னை சிறுபிராயத்திலிருந்து விரும்பினாயா?’ என்று குரோதம் ததும்ப கரிகாலன் கேட்டான். ‘அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். இதற்காகவே பழுவேட்டரையரை மணந்தேன். வீரபாண்டியரை காப்பாற்ற முனைந்தேன்’. அந்த பெயரைக் கூறியதும் கரிகாலன் வெகுவாக கோபப்பட்டு, ‘இதைச் சொன்னால் நான் கோபப்படுவேன். உன்னை வெட்ட வந்தால் அந்த வந்தியத்தேவன் வந்து என்னை வெட்டிவிடுவான் என கணக்கு போட்டிருக்கிறாயா’ என வாளை சுழற்றிக்கொண்டு ஓடத் தொடங்க.நந்தினி அவர் காலில் விழுந்து ‘வாணர்குல வீரரைப்பற்றி தாங்கள் கூறுவது அபாண்டம். அவரைக் கொலை செய்தால், மணிமேகலை தன் உயிரையே விட்டுவிடுவாள். என் நெஞ்சில் உங்கள் திருவுருவத்தைத்தவிர வேறெதுவும் இல்லை. இது சத்தியம்’ என கதறி அழுதாள். கரிகாலன் தணிந்து அவளைத் தன்னுடன் வருமாறு கெஞ்சினான். நந்தினி மறுத்து தன்னுடைய உண்மையான கதையை கூறினாள். ‘ என் வாழ்க்கையின் விமோசனம் மரணம் ஒன்றுதான். ஈழநாட்டில் வெறி பிடித்து அலைந்து கொண்டிருக்கும் மாதரசி என் அன்னை என்பதை என்னைப்போல பலரும் அறிந்திருந்தனர். என் அன்னையை அத்தகைய வெறியளாக்கிய காரணம் இன்னதென்பதையும் சில காலத்துக்கு முன்பு நான் அறிந்து கொண்டேன். அது என்னவென்றால் என்னுடைய தந்தை… என்னுடைய தந்தை… அவர்தான்’ விக்கி அழுதுகொண்டே ஆதித்த கரிகாலனின் காதில் சொல்லி முடித்தாள். ஒரு கணம் அதைக் கேட்டு பதறித்துடித்த ஆதித்த கரிகாலன், தன் ஆவேசம் தணிந்து அதை ஒத்துக் கொண்டான். ‘ஆம் நந்தினி. இப்போது எனக்கு எல்லாம் தெரிகிறது. உன் ஆழ்மனதில் நீ எவ்வளவு துன்பபட்டிருக்க வேண்டுமெனவும் புரிகிறது. அன்றைக்கு நீ என்னுடைய காலில் விழுந்து மன்றாடிய போது நான் அதை மறுத்தது எத்தனைக் கொடுமை என்று தெரிகிறது நந்தினி. நான் செய்ததற்கு வேறு பிராயச்சித்தமே இல்லை. நம் இருவருக்கும் நடுவில்

பொன்னியின் செல்வன் – Ps 25

பொன்னியின் செல்வன் – Ps 25

தஞ்சையில் சக்ரவர்த்தியின் உயிரைக் காக்க தன்னுயிரை விட்ட மாதரசி மந்தாகினி தேவியை நினைத்து அனைவரும் பெருமிதமும், வருத்தமும் கொண்டிருந்த அதே நேரத்தில் கடம்பூரில் நடந்த சம்பவங்களை பார்க்கப் போகிறோம். நந்தினி தனது அறையில் அலங்காரமுடைய கொலை வாளை எடுத்து தீப ஒளியில் அதன் பிரதிபலிப்பில் உவந்து அதை பயன்படுத்தும் வேளை வந்துவிட்டது எனச் சொல்லிக் கொண்டிருந்தாள். திடீரென மேலே பார்த்து வீரபாண்டியனின் ஆவிபேசுவதாக நினைத்துக்கொண்டு தான் கொடுத்த சபதத்தை நிறைவேற்றி விடுவதாக கெஞ்சினாள்.அப்போது மணிமேகலை உள்ளே வர நொடியில் முகபாவனைகளை மாற்றிக் கொண்டு தேனொழுக அவளுடன் பேசலானாள். மணிமேகலை, பழுவேட்டரையர் வெள்ளத்தில் மாட்டிக்கொண்டதை தன் தமயனும் தகப்பனாரும் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுவிட்டு நந்தினியிடம் உடனே சொல்ல வந்ததாக பதட்டத்துடன் கூறினாள். பெரிதாய் அந்த செய்திக்காக அலட்டிக் கொள்ளாத நந்தினியை அதிசயத்துடன் பார்த்த மணிமேகலையிடம், ‘ இது கந்தன் மாறனும், பார்த்திபேந்திரனும் தன்மேல் துர் எண்ணம் கொண்டுள்ளதால் என்னை அடைய அவர்கள் செய்யும் சதியாக இருக்கலாம்’, என்றாள். ‘தன் கணவருக்கு எதுவும் ஆகாது என்று நம்பிக்கை உள்ளதாகவும் தனக்கு மணிமேகலையை நினைத்து தான் பயம்’ எனவும் கூறினாள். மணிமேகலை தன் மனது வந்தியத் தேவனிடம் இருப்பதாகவும், ஆதித்த கரிகாலருக்கு மணம்முடிக்க கந்தன்மாறன் தொடர்ந்து தன்னை வற்புறுத்துவதால் அவனை வெறுப்பதாகக் கூறினாள். நந்தினி மணிமேகலையின் நிலையைக் கண்டு தான் வெகுவாக கலங்குவதாகவும் ஆதித்த கரிகாலர் மணிமேகலையை மணந்து கொள்ள ஆசைப்படுவதால் கந்தன்மாறன், அவள் தகப்பனார், அனைவரும் சேர்ந்து வந்தியத் தேவனின் உயிருக்கு ஊறு விளைவிக்க வாய்ப்பிருப்பதாகவும் விருப்பமில்லாத ஆண்மகனைக் கல்யாணம் செய்து கொண்டால் அந்த துயரத்தை மணிமேகலையால் தாங்க முடியாதெனவும் கூறி மணிமேகலையைக் குழப்பினாள். வீரனான வந்தியத் தேவனிடம் இதையெல்லாம் எடுத்துக் கூறினால், அதை மறுத்து நேருக்கு நேராய் நின்று ஆபத்தில் மாட்டிக்கொள்வான்; எனவே தன்னிடம் கூட்டி வந்தால் பழுவேட்டரையரின் நிலையை பார்த்து வருமாறு தான் கெஞ்சிக் கேட்டு சுரங்க வழியில் அவனை பாதுகாப்பாக அனுப்பிவிட்டால், நாம் இங்கே சமாளித்துக் கொள்ளலாம் என மணிமேகலையிடம் நைச்சியமாகக் கூறினாள். அதை அப்படியே நம்பிய பேதை மணிமேகலை, உடனே அவனை அழைத்து வருவதாகக் கூறி வெளியே சென்றாள். அப்போது வேட்டை மண்டபத்தின் ரகசிய அறையிலிருந்து மந்திரவாதி ரவிதாசன் கதவைத் தட்ட, நந்தினி வேட்டை மண்டபக் கதவைத் திறந்து சுரங்க அறைக்குள் நுழைந்தாள். ரவிதாஸனின் முகம் முன்னிலும் கோரமாய் இருந்தது. அவன் உடலில் காயங்கள் இருந்தன. நந்தினியின் சபதத்தை நிறைவேற்றுவது குறித்து திரும்ப திரும்ப கேள்விகள் கேட்டு, ‘இன்றில்லையானால், மறுபடி ஆதித்த கரிகாலனை முடிப்பது இயலாததாகிவிடும்’ எச்சரித்தான். ‘யாரும் குறுக்கே வராமலிருந்தால் போதும், இன்று எடுத்த காரியம் முடிக்காமல் விடமாட்டேன்’ என்று கூறிய நந்தினி அவன் உயிரைப் பறித்தபின்பு தானும் தன்னுயிரை விட்டுவிடப் போவதாகக் கூறினாள். ரவிதாஸன், அவளை அங்கிருந்து பாதுகாப்பாக சுரங்க வழியில் அழைத்துக்கொண்டு கொல்லிமலைக்கு போகத் தயாராக இருப்பதாகவும் அதற்காகவே நான்கு பேர் சுரங்க அறையில் காத்திருப்பதாகவும் கூறினான். பரமேஸ்வரன் வெளியில் காத்திருப்பதாகவும், ஐயனார் கோவிலில் ஒரு காளாமுகனைத் துரத்திவிட்டு தேவராளன் காத்திருப்பதாகவும் கூறினான். காரியம் முடிந்ததும் தான் சிரிக்கப் போவதாகவும், அப்போது உதவிக்கு வருமாறும் நந்தினி சொல்லிவிட்டு சுரங்க அறையை விட்டு வெளியே வந்தாள். அன்று மதியத்திலிருந்து ஆதித்த கரிகாலர் ஒரு நிலையில் நில்லாமல் உன்மத்தம் பிடித்தாற்போல் நடந்து கொண்டிருந்ததைக் கண்டு வந்தியத்தேவன் கலங்கினான். ஆதித்த கரிகாலரின் பாட்டனார் மிலாடுடையார் சைன்யத்துடன் வருகிற செய்தியை சம்புவரையர் வருத்தத்துடன் அவரிடம் தெரிவித்தார். தன்னை சம்புவரையரும் பழுவேட்டரையரும் செய்கிற சதிச் செயல்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகவே தன் பாட்டனார் படை திரட்டி வருகிறார் எனக் கூறி அவரை நோகடித்தான். பார்த்திபேந்திரன் சமாதானம் செய்ய முன்வர, ‘கந்தமாறனும், பார்த்திபேந்திரனும் பழுவூர் இளைய ராணியிடம் மதிமயங்கி தன்னை இங்கே கூட்டி வந்த’தாகப் பழி கூறினார். அதை ஒப்புக்கொண்ட பார்த்திபேந்திரன், நல்ல நோக்கத்துக்காகவே நந்தினி அவனை அழைத்து வரச் சொன்னதாகக் கூறினான். அதை ஒப்புக்கொள்ளாத கரிகாலன் தன்னை பின்னாலிருந்து தாக்கி கொல்ல பார்த்திபேந்திரனும், கந்தன்மாறனும் முயன்றதாகவும் வந்தியத்தேவன் காப்பாற்றியதால் தான் பிழைத்தேன் எனவும் பேசிக்கொண்டே போனார். மேலும் ஈழத்திலிருந்து அருள்மொழிவர்மரைக் கூட்டிவரச் சென்றுவிட்டு நடுக்கடலில் மூழ்க விட்டு விட்டதாக சொல்லியபோது கந்தன் மாறன் உள்ளே வந்தான். இளவரசர் அருள்மொழி சாகவில்லை என்றும் லட்சக்கணக்கான மக்கள் புடைசூழ தஞ்சைக்கு செல்வதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினான். இதைக் கேட்டு மகிழ்ச்சி அடைவான் கரிகாலன் என்று எல்லோரும் நினைத்தபோது, மகிழ்ச்சியடைவதற்கு பதில் கோபப்பட்ட ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவனைப் பார்த்து, தான் சொல்லும்வரை நாகப்பட்டினத்திலேயே அருள்மொழிவர்மன் இருப்பார் எனக் கூறியது எப்படி மாறியது எனக் கேட்டார். இளைய பிராட்டி அப்படி சொல்லித்தான் தன்னை அனுப்பியதாகவும், நடுவில் என்ன நிகழ்ந்தது எனத் தனக்குப் புரியவில்லை என வந்தியத்தேவன் சொல்ல, ஆதித்த கரிகாலன் வெகுவாக கோபப்பட்டார். தன் முகத்திலேயே விழிக்க வேண்டாம் எனவும், தொலைவிலேயே இருக்குமாறும், மறுநாள் அவனுக்குரிய தண்டனையை வழங்குவதாகவும் கூறி அவனை வெளியேற்றி விட்டார். பிற்பகலில் சம்புவரையரும் பார்த்திபேந்திரனும் மிலாடுடையாரை எதிர்கொண்டு அழைக்க ஆதித்த கரிகாலரின் ஆணையின் பேரில் வெளியே செல்வதை தெரிந்து கொண்டான் வந்தியத்தேவன். கரிகாலரின் கோபத்தை நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே நந்தவனத்தில் உலவிக் கொண்டிருக்கும் போது சந்திரமதியும் மணிமேகலையும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. மணிமேகலை சந்திரமதியிடம் ‘எங்கேயாவது தேடி வந்தியத்தேவனைக் கண்டுபிடித்து வரும்படி’க் கூறி அவளை அனுப்பி வைத்தாள். மணிமேகலையின் மீது கரிசனம் கொண்ட வந்தியத்தேவன் அவளின் எண்ணத்தை புரிந்து கொண்டிருந்தாலும், கந்தமாறன் தன்மீது வைத்துள்ள அவநம்பிக்கையையும் உத்தேசித்து அங்கு வந்ததிலிருந்து மணிமேகலையை விட்டு தள்ளியே இருந்தான். இப்போது மணிமேகலை தன்னைத் தேடுவதை அறிந்து கொண்டவன், அவளுக்கு தன்னுடைய உதவி தேவைப்படலாம் எனத் தோன்ற தனியே அமர்ந்து கொண்டிருந்த மணிமேகலையை நெருங்கி குரல் கொடுத்தான். தனிமையில் அமர்ந்திருந்த மணிமேகலை வந்தியத்தேவனின் குரலைக் கேட்ட தும் விதிர்த்து குளத்தில் விழப் போக, அவன் தாங்கிப் பிடித்தான். அதற்கு வெட்கப்பட்டவளாய், தன்னை பொருட்டாக மதிக்காததில் கோபமுற்று நன்றிகெட்டவர் என்று மணிமேகலை குற்றம் சாட்டினாள். தன் நிலையை விளக்கிய வந்தியத்தேவன் கந்தன்மாறனின் கோபத்துக்காகவே ஒதுங்கியதாக தெரிவிக்க, ‘அவன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கோட்டையை விட்டு வெளியேறுமாறும்’ மணிமேகலை வேண்டினாள். வந்தியத்தேவன் மறுக்க, ‘நந்தினி கூறியது சரிதான்’ என மணிமேகலை கூறவும், அவன் பதட்டமுற்று நடந்ததைக் கேட்க, அனைத்தையும் சொல்லி முடித்தாள்.நந்தினி அவனிடம் சொல்ல வேண்டாம் என்று கூறியதாகவும், ஆனால் அவளின் செயல்கள் சந்தேகத்துக்கு இடமாய் இருப்பதாகவும், தான் அறையிலிருந்து வெளியேறிய பின் வேட்டை மண்டபத்திலிருந்து குரல்கள் கேட்டதாகவும் மணிமேகலை கூறினாள். நந்தினி அறையிலிருந்து வேட்டை மண்டபத்துக்கு போகும் வழி ஒன்றும், வெளியிலிருந்து வரும் வழி ஒன்றும் அல்லாமல் அரண்மனைக்குள் இருந்து போகிற மூன்றாவது வழி இருக்கிறதா என வந்தியத் தேவன் கேட்க மணிமேகலை இருப்பதாகக் கூறினாள். அதை தனக்கு காட்டித் தருமாறு வந்தியத்தேவன் மணிமேகலையிடம் வேண்டினான். தன்னைக் கூடவே அழைத்துச் செல்லும் நிபந்தனையை விதித்து ஒரு கைவிளக்கை எடுத்துக் கொண்டு அந்த வழியில் மணிமேகலை அவனைக் கூட்டிச் சென்றாள். போகும் வழியில் வந்தியத்தேவனின் அருகாமையில் கிளர்ச்சியுற்று மகிழ்ந்து, அவனுடன் குறும்பாக பேசியபடியே மணிமேகலை வர அவன் உள்ளமோ என்னமோ நடக்கப் போகிறது என்ற அபாய உள்ளுணர்ச்சியால் பயந்திருந்தது. அப்போது குறுகிய பாதையில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு விளக்கைத் தவறவிட்டனர். அப்போது இடும்பன்காரி விளக்குடன் எதிரே வந்து இவர்களைக் கண்டு திடுக்கிட்டது போல நடித்தான். மணிமேகலை சுரங்கப் பாதையை சரிபார்க்க வந்ததாகவும், வேட்டை மண்டபத்தில் வேல் ஒன்றை எடுக்கப் போவதாகவும் கூறி விளக்கை வாங்கிக் கொண்டு இடும்பன்காரியை அனுப்பி வைத்தாள். இருவரும் வேட்டை மண்டபத்தை அடைந்தபொழுது முதலில் புலப்படவில்லையாயினும் இருட்டு கண்களுக்கு பழகிய பின் அங்கிருந்த விலங்குகளின் பின் மனிதர்கள் மறைந்து நின்று கொண்டிருந்தது தெரிந்தது. அப்போது திடீரென ரவிதாஸனின் ஆட்கள் வந்தியத்தேவனை பின்னிருந்து இழுத்து அங்கிருந்த வாலில்லாக் குரங்கோடு சேர்த்துக் கட்டியவர்கள், மணிமேகலையையும் கலைமானின் கொம்புகளோடு கட்டிவைத்தார்கள். வந்தியத்தேவன் அவளை அவிழ்த்து விடுமாறும், நந்தினியின் அழைப்பின் பேரிலேயே தாங்கள் வந்ததாகவும் கூறினான். ரவிதாஸன் இந்த அறையிலும் வெளியேயும் எது நடந்தாலும் அமைதியாக இருப்பான் எனில் அவனுடைய உயிருக்கு ஏதும் தீங்கு செய்ய மாட்டோம் என்றும் நந்தினிதான் பாண்டிமாதேவி, தான் பாண்டிய முதன் மந்திரி என்றும் சொல்லிக்கொண்டு போனான். இந்த சந்தர்ப்பத்தில் மணிமேகலையை யாரும் கவனிக்கவில்லை ஆதலால் அவள் கையிலிருந்த கத்தியால் கட்டுக்களை அறுத்துக் கொண்டு விடுவித்துக் கொண்டவள், ரவிதாஸன் துவாரத்தை திருகி அதில் வெளியே பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் வந்தியத்தேவனின் கட்டுகளையும் விடுவித்தாள். சப்தம் கேட்டு அனைவரும் அவன்மேல் பாய, வந்தியத்தேவன் தன் வலிமையைக் காட்ட, கதவைத் திறந்து கொண்டு நந்தினி வேட்டை மண்டபத்திற்குள் வந்தாள். அனைவரையும் திட்டியவள், மணிமேகலையை அவள்தான் வந்தியத்தேவனை அழைத்து வரச் சொன்னதாகச் சொல்லி அவர்கள் இருவரையும் அறையினுள் கூட்டிச் சென்றாள். உடனடியாக வந்தியத்தேவனை தப்பிச் செல்லும்படி நந்தினி கேட்க, அவளின் வாளைக் கொடுத்து விட்டால் தான் உடனே அங்கிருந்து போய்விடுவதாக அவன் மறுமொழி உரைத்தான். நந்தினி தடுமாற, ஆதித்த கரிகாலன் நந்தினியின் சகோதரன் எனவும், சகோதரஹத்தி ஏற்படாதவாறு தடுக்கவே தான் வாளைக் கேட்பதாகவும் வந்தியத்தேவன் இறைஞ்சினான். இதை ஆதித்த கரிகாலனிடமே சொல்லித் தடுக்கலாமே என நந்தினி ஏளனமாய் வினவ, தான் தடை செய்தால் இன்னமும் அதிகமாக கோபப் படுவார் என்பதால் தான் நந்தினியிடம் இறைஞ்சுவதாக வந்தியத்தேவன் கூறினான். மேலும் ஈழநாட்டில் அவளின் தாயாரை தான் சந்தித்ததையும் அவர் சோழ நாட்டின் மீது அளவற்ற பாசம் கொண்டிருப்பதையும், பொன்னியின் செல்வனை எல்லா ஆபத்திலிருந்தும் காத்து வருவதையும் குறிப்பிட்டான். இப்போது ஆதித்த கரிகாலனுக்கு நந்தினியால் தீங்கு நேருமானால் அந்த மாதரசி நந்தினியை எந்நாளும் மன்னிக்க மாட்டார் எனவும் எச்சரிக்கை செய்தான். நந்தினி தொய்வுற்று அமர, அரண்மனையில் தன் அன்னை போல் வேடமிட்டு நந்தினி சுந்தர சோழரை பயமுறுத்தியதையும், அனைத்தும் இதுவரை யாரிடமும் சொன்னதில்லை, வாளைக் கொடுத்துவிட்டால் இனியும் யாரிடமும் கூற மாட்டேன் எனவும், வந்தியத்தேவன் சொல்லச் சொல்ல நந்தினி இளகினாள். வாளை எடுத்து அவன் கையில் கொடுக்க

பொன்னியின்செல்வன் – 24

பொன்னியின்செல்வன் – 24

இளவரசர் வானதியின் பேச்சைக் கேட்டு சிரித்துக் கொண்டே யானையின் மீதிருந்து இறங்கினார். இன்னமும் அவளுக்கு பறவைக் குஞ்சுகளைக் காப்பாற்றியது நினைவில் இருக்கிறதா என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். பூங்குழலி களைப்பினால் வாடி நின்றிருந்ததைக் கண்டு ‘சமுத்திரகுமாரி’ என அவளை விளித்து, அதுவரை நடந்ததையெல்லாம் இருவரின் வாயிலாகவும் அறிந்து கொண்டார். யானையினாலும், அங்குசத்தினாலும் பாதிப்பு ஏற்படுமென பழுவேட்டரையர் அறிந்திருந்ததைக் கேட்டு ஆச்சர்யப் பட்டவர், மந்தாகினி தனியே ஆபத்தில் சிக்கியிருக்கிறார் என்றறிந்ததும் பதைத்துப் போனார். பூங்குழலி, ‘தன் அத்தை அவருக்கு அந்திமக்காலம் நெருங்கிவிட்டதாக உணர்வதால், கடைசியாக ஒருமுறை பொன்னியின் செல்வனைக் காண விரும்புவதாக’ தகவல் அனுப்பியிருப்பதைக் கேட்டவுடன் ஒரு கணமும் தாமதிக்காமல் தஞ்சை சென்றாக வேண்டும் என்று கூறினார். அங்கு தஞ்சையில் காலையில் வழக்கமாக நிகழ்வது போல கோட்டை திறந்ததும் வேளக்காரப் படையினர் உள்ளே சென்றனர். ஆனால் உடனே எல்லாக் கதவுகளும் அடைக்கப் பட்டதைக் கண்டு மக்கள் அனைவரும் திகைத்துப் போயினர். பொதுவாக வேறு ஏதாவது படையெடுப்பின்போதோ அவசர நிலையின் போதோதான் இத்தகைய நடவடிக்கைகள் இருக்கும் என்பதால் அச்சமும் பதற்றமும் அடைந்தனர். அப்போது கோட்டையின் வடபுறம் தவிர மூன்று புறங்களிலும் இருந்து சேனைகள் வந்து கொண்டிருந்ததைக் கண்டு பயந்தனர். அருகில் நெருங்கிப் பார்த்தவர்கள் அதன் முகப்பில் சோழச் சின்னமான புலிக்கொடியைப் பார்த்தவுடன் நிம்மதி அடைந்தார்கள். சோழர்களின் தென்திசை சேனாதிபதி பூதி விக்கிரம கேசரிதான் படைகளுக்கு தலைமையேற்று வந்து கொண்டிருந்ததும் மக்களுக்கு தெரிந்து போயிற்று. விக்கிரம கேசரி அங்கு வந்திருப்பது தங்கள் பிரியத்துக்குரிய இளவரசர் அருள்மொழியை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே எனப் புரிந்து கொண்டு அவர்களை மகிழ்ச்சியுடனேயே வரவேற்றனர்.கூடாரம் அடிக்கப் பட்ட பிறகு விக்கிரம கேசரி தலைமையில் சிற்றரசர்களின் கூட்டம் கூடிற்று. பழுவேட்டரையர்கள் சக்ரவர்த்தியை வெகுநாட்களாக சிறைவைத்து இருப்பதாகவும், அவர்களின் சூழ்ச்சியால் சக்ரவர்த்தி மனம் மாறி தன் இரண்டு பிள்ளைகளை விட்டுவிட்டு போரே அறியாத மதுராந்தகனுக்கு பட்டம் அளிக்க விரும்புகிறார் எனவும் சிலர் கூறினர். சக்ரவர்த்தி உயிருடன் இருக்கிறாரா என்பது கூடத் தெரியவில்லை என வருத்தப்பட்ட பூதி விக்கிரம கேசரி, இலங்கையில் இளவரசரைக் கொல்ல நடந்த சதிகள் பற்றியும் இங்கு வந்த பிறகு திருவாரூரில் யானைக்கு மதம் பிடித்ததையும் இளவரசர் காணாமல் போனதையும் சொல்லச் குழுவினர் அனைவரும் கடுங்கோபம் அடைந்தனர். பழுவேட்டரையர்களை எதிர்த்து கோட்டைக்கதவை திறந்து சக்ரவர்த்தியை விடுவிக்க வேண்டுமென அனைவரும் ஒரே குரலில் முழங்கினர். அப்போது ஒரு காவலாளி வந்து ரகசியமாக அவரின் காதில் ஏதோ சொல்ல, அவர் உடனே எழுந்து தஞ்சைக் கோட்டையின் வடக்கு வாசலுக்கு குதிரையேறிச் சென்றார். அங்கு அம்பாரியுடன் கூடிய யானை நின்றிருந்தது. அம்பாரிக்குள் இரண்டு பெண்கள் இருப்பதாகப் பட்டது. யானைப்பாகன் தனது கொம்பை எடுத்து ஊதிவிட்டு, ‘ கொடும்பாளூர் இளவரசி வானதி தேவியார் இளைய பிராட்டியிடம் இருந்து சக்ரவர்த்திக்கு செய்தி கொண்டு வந்திருப்பதாகவும், வானதிதேவிக்கும் அவர் தோழி பூங்குழலி அம்மைக்கும் கோட்டைக் கதவை திறந்து விடும்படியும்’ முழங்கவும், பூதி விக்கிரம கேசரி ஆச்சரியத்துடன் வானதியைப் பார்த்தார். யானையிலிருந்த வானதி, பெரியப்பா.. எனப் பேசத்தொடங்க. பூதி விக்கிரம கேசரி, ‘இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் குந்தவை உன்னிடமா செய்தி அனுப்பியிருக்கிறார், அப்படி என்ன சேதி’ என வினவ, ‘அருள்மொழிவர்மரைப் பற்றி செய்தி கொண்டு வந்திருப்பதாக’ வானதி கூறினாள்.‘இளவரசர் எங்கே இருக்கிறார்’ என்று அவர் கேட்க, ‘அதை மட்டும் சொல்ல முடியாது’ என உறுதியான குரலில் மறுத்து விட்டு யானைப்பாகனை முழங்குமாறு மேலும் கட்டளையிட்டாள். இதே சமயத்தில் கோட்டையின் உள்ளே இருந்த சின்னப் பழுவேட்டரையரான காலாந்தக கண்டர் வெகுவாக கலங்கியிருந்தார். பூதி விக்கிரம கேசரி படையெடுத்து வந்திருந்தது எரிச்சலைக் கிளப்பியிருந்ததுடன், பெரிய பழுவேட்டரையர் இன்னும் இங்கு வந்து சேராமலிருந்தது இன்னும் கவலையைக் கிளப்பியிருந்தது. அநிருத்தருடன் சென்று கொடும்பாளூர் வேளார் படையெடுத்து வந்த செய்தியை சக்ரவர்த்தியிடம் சொல்லலாம் என்று நினைத்துச் சென்றால், அநிருத்தர் சக்ரவர்த்திக்கு உடல்நிலை சரியில்லை எனவும், இந்த சமயத்தில் அதைச் சொல்ல வேண்டாமெனவும் அறிவுரை கூறினார். ‘இது போன்ற மனம் வருத்தும் செய்திகளால் அரசரின் உடல்நிலை மேலும் சீர்கெட்டால் அதன் பழியும் சின்னப் பழுவேட்டரையரையே சேரும்’ என்று அநிருத்தர் கூற, அநிருத்தரிடமே அரசரிடம் செய்தி சொல்லும் பொறுப்பை விட்டுவிட்டு கோட்டைப் பாதுகாப்பை பலப்படுத்தும் வேலைகளைக் கவனித்தார். அப்போது கொடும்பாளூர் இளவரசி கோட்டைக் கதவுக்கு அப்பால் இருப்பதாக சேதி வரவே அவளை அனுமதிக்கவே கூடாது என்று நினைத்தபடி கோட்டைக் கதவை நெருங்கியவர், ஒரு சிறு பெண்ணை அனுமதிக்காமல் தான் பயப்படுவதா என்று யோசித்துக் கொண்டே, கோட்டை மதிலின் மீதிருந்து அவர்களை பார்வையிட்டார்.அப்போது வானதியும் அவளின் பெரிய தந்தையும் வாக்குவாதம் செய்வதைக் கண்டார். யானைப்பாகன், ‘பெரிய பழுவேட்டரையரிடமிருந்து சின்னப் பழுவேட்டரையருக்கும், இளைய பிராட்டியிடமிருந்து சக்ரவர்த்திக்கும் செய்தி கொண்டு வந்திருப்பதாகவும்’ கொம்பு ஊத, தன் அண்ணன் இந்தப் பெண்ணிடமா செய்தி அனுப்புவார் என்ற சந்தேகத்துடன் கதவைத் திறந்து விட ஆணையிட்டார். உள்ளே இரு பெண்களும், யானைப்பாகனுமாக உள்நுழைந்ததும் வானதி தன் வணக்கத்தை தெரிவித்து பெரிய பழுவேட்டரையர், பாண்டிய ஆபத்துதவிகளிடமிருந்து சக்ரவர்த்திக்கு ஆபத்து ஏற்படப் போகிறது, அசட்டையாக இருக்க வேண்டாம் என எச்சரிக்கை செய்தி அனுப்பியிருப்பதாக கூறினாள். ஆனால், ‘அது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான், அதை உங்களிடம் தமையன் சொல்லியிருப்பதில் ஆச்சரியமில்லை’ எனச் சின்னப் பழுவேட்டரையர் அலட்சியமாய் கூறினார். ‘அரண்மனைக்கு வந்து போகும் மந்திரவாதியைக் குறித்து நீங்கள் கூறியதை தாம் அலட்சியம் செய்ததை மன்னித்து கவனமாக இருக்கும்படி’ பெரிய பழுவேட்டரையர் சொன்னதை வானதி சொல்லியதும் அவர் திகைத்தார். மேலும் இங்கு வரப்போகும் ஆபத்தைச் சொல்லவே தன்னை இளைய பிராட்டி அனுப்பியதாகவும், பெரிய பழுவேட்டரையர் ஆதித்த கரிகாலனைக் காப்பாற்ற கடம்பூர் விரைந்துள்ளதாகவும் கூற சின்னப் பழுவேட்டரையர் வானதியை முழுதாய் நம்பி உள்ளே அனுமதித்தார். கோட்டைக் காவலை பலப்படுத்த சில உத்தரவுகளை இட்டு விட்டு திரும்புகையில் இரண்டு பெண்களுடன் யானைப்பாகனும் அரண்மனைக்கு உள்ளே சென்றதைக் கண்டு பதைத்த சின்னப் பழுவேட்டரையர் ஒருவேளை அவன் பாண்டிய ஆபத்துதவியாக இருக்க கூடுமோ எனப் பாய்ந்து சென்று அவன் கரத்தை இறுக்கமாகப் பிடித்து ‘ யாரையடா ஏமாற்றப் பார்த்தாய்?’ என கர்ஜித்தார். முன்னே சென்ற இரண்டு பெண்களும் சொல்வதறியாது திகைக்க, மாட்டிக் கொண்ட இளவரசர் வெண்ணெய் திருடிய கள்வனைப் போல் புன்னகைத்தார். .இளவரசரை அடையாளம் கண்டு கொண்ட காலாந்தக கண்டர் நடுக்கமடைந்து நாக்குழற மன்னிப்பு கேட்க, அருள்மொழிவர்மர் சிரித்துக்கொண்டே தங்கள் கட்டளைக்கு ஒப்புக் கொடுக்கவே வந்ததாக பணிவுடன் கூறினார். காலாந்தக கண்டருக்கு இளவரசர் அருள்மொழி மீது எந்த தீய எண்ணமும் என்றைக்கும் இருந்ததில்லை. அவரைப்போய் அடா என்று பேசியதுடன், தகுந்தமுறையில் வரவேற்பு கொடுக்க முடியவில்லை என்பதும் அவரை நிலைகுலையச் செய்ய, வருந்தி மன்னிப்புக் கேட்டார், அத்தகைய வரவேற்பை தந்தை இந்நிலையில் இருக்கும்போது தவிர்ப்பதற்காகவே இம்முறையில் உள்நுழைந்ததாக இளவரசர் சின்னப் பழுவேட்டரையரை அமைதிப் படுத்தினார். அந்த கால இடைவெளியிலேயே இளவரசரைக் கண்ணுற்ற படையினர் மனம் மகிழ்ந்து சிறு கோஷமிட்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், கோஷம் வெளியில் கேட்காதவாறு அமைதிப் படுத்திய சின்னப் பழுவேட்டரையர் இளவரசரை உடனே உள்ளேயும் அனுப்பி வைத்தார். பூங்குழலி கவலையுடன் அவர்களுடன் செல்லாமல் தனித்திருக்கவும் அவளை விசாரித்தவர், பாதாளச்சிறை பற்றியும் அதில் ஒளிந்திருக்கும் ஆபத்து பற்றியும் அவள் சொன்னதைக் கேட்டு நம்பமுடியாமல் திகைத்தார். தான் நேரிலேயே காட்டுவதாக அவள் சொல்ல இருவரும் ஒரு தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு விரைந்தனர். காலையில் தன் அத்தை அந்த சுரங்கத்தில் ஒளிந்திருந்தவனை அடையாளம் காட்டியதையும், தன் அந்திமக் காலத்தைப் பற்றிச் சொல்லியிருந்ததும் அவளுக்கு நினைவில் வந்து அச்சுறுத்தியது. அப்போது ‘வீல்’ என்ற அத்தையின் சத்தம் கேட்டு சின்னப் பழுவேட்டரையரைப் பற்றிப் பொருட்படுத்தாமல், பூங்குழலி சக்ரவர்த்தியின் அறையை நோக்கி பாய்ந்தோடினாள். அங்கு சக்ரவர்த்தி படுத்திருந்த அறையில் அனைவரும் நின்றிருக்க அவருக்குமுன் மந்தாகினி தேவி சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தாள். ஆபத்தை உணர்ந்து கொண்ட பூங்குழலி பாய்ந்து போகுமுன்னர் ஒரு வேல் மேலிருந்து மந்தாகினி தேவியின் மீது பாய்ந்தது. அனைவரும் அதிர்ச்சியில் உறைந்திருக்க, ஏதோ ஒரு பொருள் மேலிருந்து வீழ அங்கிருந்த தீபம் அணைந்து விட்டது. இருளில் யாரையும் பார்க்கமுடியவில்லை. அதற்குள் யாரோ மோதிக் கொள்ளும் சத்தமும், மகாராணியின் ‘ஓ’ என்ற ஓலமும் கேட்டது. சின்னப் பழுவேட்டரையர் விளக்கைக் கொண்டு வரும்படி கட்டளையிட விளக்கு வந்து சேர்ந்திருந்த பொழுது மந்தாகினி தேவி, உடலில் வேல் தாங்கி தரையில் வீழ்ந்து கிடந்தார்., இவ்வளவு காலமும் கால்கள் சக்தியற்று படுக்கையில் கிடந்த சக்ரவர்த்தி தானே தவழ்ந்து வந்து அவரின் அருகில் அமர்ந்திருந்தார். மந்தாகினி தேவி சக்ர்வர்த்தியைப் பார்த்துக்கொண்டிருக்க, அவரின் தலையை சக்ரவர்த்தியின் மடிமீது இளவரசர் அருள்மொழி தூக்கி வைத்தார். பூங்குழலி ‘அத்தை அத்தை’ என கதறத் தொடங்க, இளவரசர், ‘ பல காலம் பிரிந்திருந்தவர் சேர்ந்திருக்கின்றனர் அவர்கள் இருவரும் தனியே இருக்கட்டுமென ’ அவளை சமாதானப் படுத்தினார். அத்தையைத் தவிர தனக்கு யாருமேயில்லை என பூங்குழலி கதறினாள்.அப்போது இளவரசர் தனக்கு தாயை விட மேலானவளான போதும், தந்தையுடன் தாய் சேர்ந்து இருப்பதைக் கண்டு தான் ஒதுங்கியிருப்பதாகக் கூறினார். மேலும், பூங்குழலியும் அவள் அத்தையும் சோழகுலத்துக்கு எப்பேற்பட்ட நன்மை செய்திருக்கிறார்கள் என விளக்கினார். மேலிருந்தவன் எறிந்த வேலை தன் மார்பில் வாங்கிக்கொண்ட மந்தாகினி தேவி, கீழே விழ, அவரைக் காப்பாற்ற மூன்று வருடமாக படுக்கையிலேயே இருந்த சக்ரவர்த்தி அங்கிருந்து நகர்ந்து வந்து விட்டமையால் வேலெறிந்த கொலையாளி, விளக்கை அணைத்து விட்டு கட்டிலில் படுத்திருந்த சக்ரவர்த்தியை மீண்டும் இருளில் குத்த முயன்றதில் கத்தி தலையணையில் சொருகி விட்டிருந்தது. அதைத் தடுக்க முயன்ற மகாராணி கத்தியதை அனைவரும் கேட்டிருந்தனர். இரண்டு முறையும் சக்ரவர்த்தியைக் காப்பாற்றியது மந்தாகினி தேவிதான். மேலும் பூங்குழலியின் உதவியினால் கோட்டைக்கு உள்ளே வந்ததாலும் இந்த நேரத்தில் தந்தையின் அருகே தான் இருந்தததால் தான் சின்னப் பழுவேட்டரையரின் மேல் எந்தப் பழியும் வீழாமல் தப்பிக்க முடிந்தது என இளவரசர் எடுத்துக் கூறினார். சின்னப் பழுவேட்டரையர் தன் கோட்டைக் காவல் பணியைச் சரியாகச் செய்யவில்லை என்பதை குறிப்பால் உணர்த்தினார். விழித்துக் கொண்ட சின்னப் பழுவேட்டரையர் பூங்குழலியைப் பாராட்டுவதாக நினைத்து தக்க

பொன்னியின் செல்வன் – 23

பொன்னியின் செல்வன் – 23

வெகுநேரம் கழித்து கண்விழித்த பழுவேட்டரையர் சோழ நாட்டை எத்தகைய ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று சிந்திக்க முயன்றார்.  பெரும்பிரயாசைப்பட்டு தன்னை அந்த மண்டபக் கல்லிலிருந்து  விடுவித்துக் கொண்டவர், வெகுவாக அடிப்பட்டிருந்த போதும் தான் செய்ய வேண்டிய செயல்களை எண்ணி மனதிடத்துடன் எழுந்து நின்றார். அப்போது வானில் பிரகாசித்துக் கொண்டிருந்த தூமகேது பிரகாசித்து வானிலிருந்து பெரும் வெளிச்சத்துடன் ஒளிர்ந்து வீழ்ந்தது. துர்ச்சகுனமாக அதைக் கருதியவர்,  முதலில் நாகைக்கும், தஞ்சைக்கும் செய்தியை அனுப்பிவிட்டு ஆதித்த கரிகாலனை காப்பாற்ற தானே முயல வேண்டுமென நினைத்த அந்த வீரக்கிழவர் தன் காயங்களை பொருட்படுத்தாது வேகமாக விரைந்தார். அந்த இடம் குடந்தைக்கருகில் இருக்கிறதென்பதையும் அங்கே பக்கத்தில்தான் குடந்தை ஜோதிடர் வீடு இருக்கிறதென்பதை யோசித்து அவர் மூலம் செய்தி அனுப்பலாம் என்று குடந்தை ஜோதிடர் வீட்டுக்கு வேகமாக விரைந்தார். அப்போது வீட்டின் வாசலில் ரதங்கள் நிற்பதையும், வானதி, குந்தவையின் பேச்சு சப்தம் கேட்பதையும் உணர்ந்தவர் சீடனின் எச்சரிக்கையை தன் ஹூங்காரம் மூலம் அலட்சியம் செய்துவிட்டு உள்ளே நுழைந்தார். குந்தவை, மந்தாகினி காணாமல் போனதையும், தூமகேது மறைந்ததையும் வைத்து வருந்தி நாகையிலிருந்து வந்துகொண்டிருக்கும் அருள்மொழியை பழையாறையில் நிறுத்திக் கொள்ள வேண்டுமென அதிகாலையிலேயே புறப்பட்டவள், வழியில் குடந்தை ஜோதிடரிடம் ஏதாவது கேட்டுச் செல்லலாமென வந்திருந்தாள். பழுவேட்டரையரின் ஹூங்காரத்தை அடையாளம் கண்டு கொண்டு ஜோதிடரிடம் ஜாடை காட்டிவிட்டு அங்கிருந்த திரைச்சீலையின் பின் இருவரும் ஒளிந்து கொண்டார்கள். ஜோதிடரிடம் பதட்டமாக பேசிய பழுவேட்டரையர், அவரது சீடனிடம் முத்திரை மோதிரத்தை தருவதாகவும், அதை எடுத்துக் கொண்டு தஞ்சை எடுத்துச் சென்று சின்னப் பழுவேட்டரையரிடம் சொல்லிபொக்கிஷ நிலவறையில் காத்திருக்கும் யமனிடமிருந்து சக்ரவர்த்தியை காக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். அப்போது உள்ளிருந்து வெளிப்பட்ட குந்தவை மறைந்திருந்து அவரது பேச்சை கேட்க நேர்ந்ததற்கு மன்னிப்பு கேட்க, குந்தவையிடம் பழுவேட்டரையரும் நந்தினியின் போதனைகளால் இத்தனை நாள் தான் நடந்து கொண்டற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு உடனே தஞ்சைக்கு திரும்பி சக்ரவர்த்தியை காப்பாற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.  மேலும் தான் கடம்பூர் திரும்பி தன் கையாலேயே நந்தினிக்கு முடிவு கட்டுவதாக சூளுரைக்க, குந்தவை அவரின் தாள் பணிந்து நந்தினியை அவர் எதுவும் செய்துவிடக்கூடாது, ஏனெனில் அவள் தங்களுடைய சகோதரி என்று வேண்டினாள். திகைத்து நின்ற ப்ழுவேட்டரையருக்கு பழைய சம்பவங்கள் எல்லாம் கண்ணுக்குள் வந்து போக ஆதித்த கரிகாலனுக்கு இது தெரியுமா எனக் கேட்க, வந்தியத்தேவன் மூலமாக சொல்லி அனுப்பியிருப்பதாக குந்தவை கூறினாள். ஆதித்த கரிகாலன் அதை நம்பியிருக்கமாட்டான் எனக் கூறிய பழுவேட்டரையர் தான் இளவரசி வந்த ரதத்தை எடுத்துக் கொண்டு கடம்பூர் சென்று கரிகாலனை காப்பாற்றுவதாகவும், பொன்னியின் செல்வனையும் சக்ரவர்த்தியையும் காப்பது குந்தவையின் பொறுப்பு என்று கூறி விடை பெற்றார். சில நிமிடத்தில் ஆழ்வார்க்கடியான் வந்து கொடும்பாளூர் படைகள் தஞ்சையை முற்றுகையிட நெருங்கி கொண்டிருப்பதாக கூறினான். கொடும்பாளூர் பூதி விக்கிரம கேசரி மாபெரும் சைன்யத்தைக் கூட்டிக் கொண்டு பழுவேட்டரையர்கள் சின்ன இளவரசரையும், சக்ரவர்த்தியை எங்கேயோ சிறைவைத்திருப்பதாக சந்தேகப் பட்டு கோட்டைப்பொறுப்பையும், தனாதிகாரி பொறுப்பையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் நிபந்தனை வகுத்துள்ளதாக கூறினான். மேலும் அருள்மொழி வர்மருக்கு வானதியை திருமணம் செய்து, அடுத்த பட்டத்துக்கு உரியவராக அவருக்கே  பட்டாபிஷேகம் நடத்துமாறும் இதற்கெல்லாம் சம்மதிக்காவிட்டால் தஞ்சைக் கோட்டையை மூன்று நாட்களுக்குள் தரைமட்டமாக்கிவிடுவேன் எனவும் செய்தி அனுப்பியிருப்பதாக கூறினான். ஆழ்வார்க்கடியானின் செய்தியைக் கண்டு குந்தவை சகோதர யுத்தம் மூண்டு விடப் போகிறதே எனக் கலங்க, வானதி தன் பெயரை இந்த கலகத்தில் இழுத்து வைத்து தன் பெரிய தகப்பனார் பேசுவதில் விருப்பமில்லை என புலம்பினாள். நேரே சென்றாவது தன் பெரிய தகப்பனாரிடம் இதை வலியுறுத்தப் போவதாக வானதி சொல்ல, அப்போது உள்ளே நுழைந்த பூங்குழலி இடக்காக, சோழ சிங்காதனத்தில் பட்டத்தரசியாக அமர யாருக்குதான் ஆசை இல்லை என்பது போல் பேச வானதி சினந்தாள். இருவரையும் அமைதி படுத்திய குந்தவை, பூங்குழலி அங்கு எப்படி வந்தாள் என விசாரிக்க, தன் அத்தை பொக்கிஷ நிலவறையில் ஒளிந்து கொண்டு சக்கரவர்த்தியைக் கொல்ல ஆயுதத்துடன் மறைந்து இருக்கும் கொலைகாரன் ஒருவனைப் பின்தொடர்வதாகவும், அவனிடமிருந்து சக்கரவர்த்தியை காப்பாற்ற முயல்வதாகவும், பொன்னியின் செல்வனுக்கு ஏதோ ஆபத்து இருப்பதாக அவர் உணர்ந்து அதனால் பொன்னியின் செல்வரைக் காப்பாற்ற தன்னை அனுப்பியதாகவும் கூறினாள். மேலும் மற்றவர்கள் போல் தனக்கு அரண்மனை வாழ்வு பிடிப்பதில்லை எனவும் வானதியை இடித்துரைத்தவாறே கூறினாள். வானதி மேலும் சினந்து ஒருவேளை பொன்னியின் செல்வரை மணக்கும் நற்பேறு தனக்குக் கிடைத்தால் கூட சிங்காதனத்தில் தான் உட்காரப் போவதில்லை என ஆவேசமாக சபதமிட்டாள். அனைவரும் திகைக்க, பூங்குழலி, சிரிப்பும் அழுகையுமாய் பாட வேறு தொடங்கினாள். பைத்தியங்கள் போல் இரு பெண்களும் நடந்து கொள்வதைக் கண்ட குந்தவை, ஆழ்வார்க்கடியானை வினவ, அவன் இளவரசியின் ரதத்தில் இணைந்திருந்த படகைப் பெற்றுச் செல்லவே இங்கு வந்ததாகவும், பழுவேட்டரையர் அதையும் எடுத்துச் சென்றுவிட்டதால் என்ன செய்வதென புரியவில்லை எனவும் கூறினான். ஜோதிடரின் சீடனை வேறொரு படகைச் சம்பாதித்துக் கொண்டுவர அனுப்பியிருப்பதாகவும், அதில் குந்தவையும் வானதியும் அரண்மனைக்குச் சென்று சக்ரவர்த்தியை ஆபத்திலிருந்து காப்பாற்றுமாறு கூறினான். வானதி அதை அடியோடு மறுத்து தான் பொன்னியின் செல்வனிடம் செல்லப் போவதாக கூறினாள். அதற்குள் அரசலாறு உடைந்து வெள்ளம் வருவதாக ஜோசியர் கூறி படபடப்புடன் அம்மன் கோவிலின் கூரை மீது ஏறிக் கொள்ளச் சொல்ல அனைவரும் ஓடினர். பூங்குழலி விரைவாக மேலே ஏறி குந்தவைக்கு கைகொடுத்து ஏற்றிவிட்டாள். பின்னால் வந்த வானதி பூங்குழலியின் கையை பற்ற விரும்பாமல் தண்ணீருக்குள் வீழ்ந்தாள். நீரின் போக்கில் சென்று ஜோதிடர் குடிசையின் கூரை மீது ஏறிக்கொள்ள அனைவரும் நிம்மதியுற்றனர். ஆனால் அவ்வீட்டின் சுவர்கள் வெள்ளத்தினால் கரைய கூரை மட்டும் மிதந்து வெள்ளத்தினூடே சென்றது. வானதி அங்கிருந்து ‘ தான் மிதந்து பொன்னியின் செல்வரை சந்திக்கப் போவதாக பூங்குழலிக்கு கேட்குமாறு கத்திக் கொண்டே மிதந்து போய்க் கொண்டிருந்தாள். குந்தவை வானதியைக் குறித்து பெரிதும் கலங்க, சீடனின் படகு மெதுவாக வந்து கொண்டிருந்தது. வானதி இருந்த கூரையோ  வெகுவாக அவர்களை விட்டு விலகிப் போய்க்கொண்டிருந்தது. படகு இவர்கள் அருகே வந்து ஏற்றிக்கொண்டு வானதியை நோக்கி செல்வதற்குள் வானதி வெகுதூரம் அடித்துச் செல்லப்படுவாள். இதையெல்லாம் நினைத்து குந்தவை கவலைப்பட்டாள். பூங்குழலி தன் அஜாக்கிரதையால்தான் வானதி கீழே விழ நேர்ந்தது என்றும், தான் எப்படியாவது அவரைக் காப்பாற்றிக் கூட்டி வருவதாகவும் குந்தவையிடம் உறுதி கூறிவிட்டு வெள்ளத்தில் குதித்து படகை நோக்கி வேகமாக நீந்திச் சென்றாள். இந்த வெள்ளம் இப்படியிருக்க மக்கள் வெள்ளம் சூழ, பொன்னியின் செல்வர் திருவாரூருக்கு வந்து சேர்ந்தார். தொடர்ந்து மக்களால் தன் பிரயாணம் ஆங்காங்கே தடை படுவதும், நதிகளில் மழைவெள்ளம் அதிகரித்து வருவதால் திருவாரூரிலேயே தங்கிச் செல்லுமாறு ஊர்மக்கள் சொன்ன அறிவுரைகளும் அவரை வெகுவாக சங்கடப் படுத்தின. யானை மூலமாகத் தான் தனியே கிளம்புவதுதான் உசிதம் என முடிவு கட்டி யானைப்பாகனை அழைத்துவரச் சொன்னபோது, முருகைய்யன் இளவரசரைப் பார்ப்பதற்கு அழுதுகொண்டே வந்து சேர்ந்தான். தான் இங்கு வந்த பொழுது, அவன் மனைவி ராக்கம்மாள் யானைப்பாகனை மயானத்துக்கு அழைத்து சென்று கொண்டிருந்ததைப் பார்த்து பின் தொடர்ந்து போனபொழுது, மந்திரவாதி போன்ற ஒருவன், ‘நாளைக் காலை இளவரசர் ஏறும் யானைக்கும் மதம் பிடிக்கப் போகிறது. நீ தப்பி ஓடி விடு’ என்று யானைப்பாகனிடம் கூறியதைப் பார்த்ததாக வந்து கூறினான். இளவரசர் அன்றுவரை நடந்ததை நினைத்துப் பார்த்த பின் தனக்குள் ஒரு முடிவு செய்து கொண்டு அன்றிரவு உறங்கினார். அதிகாலையிலேயெ எழுந்து பிரயாணத்துக்கு தயாராக, யானைப்பாகனை  பலமுறை அழைத்தபின் முகமெல்லாம் மாறிப்போனவனாக யானைப்பாகன் வந்து சேர்ந்தான். அவன் மேலே ஏறி உட்கார முயல யானை அவனை துதிக்கையால் தூக்கி எறிந்தது. ஜனங்கள் நாலாபக்கமும் யானைக்கு மதம் பிடித்து விட்டது என பயந்து சிதறி ஓடினர். அந்த கலவரத்தை சரியாகப் பயன் படுத்திக் கொண்ட இளவரசர் சடுதியில் முருகைய்யன் காதோடு ஏதோ சொல்லிவிட்டு யானையின் மேலேறி அம்பாரியை தள்ளிவிட்டு விட்டு அதன் காதில் ஆணையிட யானை வெகுவேகமாக அங்கிருந்து ஓட தொடங்கியது. யானைக்கு மதம் பிடிக்கவில்லை, வந்த போலி யானைப்பாகனின் தீய நோக்கத்தால்தான் யானை அவனை தூக்கி எறிந்தது என்பதைப் புரிந்து கொண்ட இளவரசர் சரியாக அந்த சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்டார். இளவரசர் சொன்னதைப் புரிந்து கொண்ட முருகைய்யன் தூக்கிவீசப்பட்ட யானைப்பாகனிடம் போக அவன் தான் யானைப்பாகனில்லை என்று நடித்தான். நேற்றிரவு மந்திரவாதியாக நடித்தது நீதானே என்று கேட்கவும் போலி யானைப்பாகனாக வந்திருந்த பாண்டிய ஆபத்துதவி ரேவதாஸ கிரமவித்தன் அங்கிருந்து ஓடிவிட்டான். வீசியெறிந்த அங்குசத்தை எடுத்துக்கொண்டு ஊரில் ஒரு வீட்டில் கட்டி வைக்கப் பட்டிருந்த உண்மையான யானைப்பாகனை விடுவித்தான். மயானத்தில் யானைக்கு மதம்பிடிக்காமலிருக்க சில மருந்துகளைத் தருவதாகக் கூறி தன்னை இந்த வீட்டில் கட்டிவைத்து விட்டதாக யானைப்பாகன் அழுதான். இளவரசரின் நலம் குறித்து விசாரித்த அவனை ஊர்மக்களிடம் முருகைய்யன் கூட்டிச் செல்ல, அனைவரும் உண்மை அறிந்து தஞ்சைச் சாலையில் சிலரும் மந்திரவாதியைத் தேடிக்கொண்டு சிலரும் ஆவேசத்துடன் புறப்பட்டனர். நதி வெள்ளத்தில் வானதி சென்று கொண்டிருந்த கூரை ஆங்காங்கே வேகமாகவும் மெதுவாகவும் சென்றது. பயமாக இருந்த போதும் இளவரசரிடம் தன்னைக் கொண்டுபோகிறது என்ற நம்பிக்கையில் சென்று கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் ஒரு நதியின் கரை தெரியவும், அது திருவல்லம் தலம் என்பதும் மழவரையர் மகளான செம்பியன் மாதேவி அங்கு திருப்பணி செய்திருந்ததும் அவள் ஞாபகத்துக்கு வந்தன. அங்கு முன்பு ஒருநாள் தங்கியிருந்த பொழுது மரத்திலிருந்த பறவைக்குஞ்சுகள் கீழே விழுந்து விடாமல் தான் பதட்டமுற்றதும், அவற்றைக் காப்பாற்ற பெயர் தெரியாத ஒரு இளைஞன் யானையின் மீது அமர்ந்து வந்து காப்பாற்றியதும் நினைவுக்கு வந்தது. யாரென்றே தெரியாமல் அந்த இளைஞனை ‘யானைப்பாகா’ என்று மிரட்டியதும் பின் இலங்கைக்கு பொன்னியின் செல்வன் கிளம்புகையில் அந்த யானைப்பாகன்தான் அவர் என்று தெரிந்தவுடன் தான் மயங்கிவிழுந்ததையும் எண்ணிக் கொண்டு சிலிர்ப்படைந்தாள். தன்னை பட்டத்தரசியாக்கும் பொருட்டு தன் பெரிய தகப்பனார் இளவரசரின் கழுத்தில் தன்னைக் கட்டுவதில் தனக்கு விருப்பமில்லை எனவும் ஒரு யானைப்பாகனாக அவர் இருந்தாலும் அவரையே 

பொன்னியின் செல்வன் – 22

பொன்னியின் செல்வன் – 22

நாகப்பட்டினத்து சூடாமணி விஹாரத்தில் தங்கியிருந்த பொன்னியின் செல்வனுக்கு ஜூரம் குணமாகிவிட்ட பொழுதும் அங்கு மறைந்திருப்பது அசெளகர்யமாய் இருந்தது. எனவே அங்கிருந்த தலைமை பிஷூவிடம், புத்த சமயம் பற்றியும் அவர் சென்று வந்த நாடுகள் பற்றியும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது இளவரசரை புத்த பிட்ஷூகள் சேர்ந்து விஹாரத்தில் மறைத்து வைத்திருந்து புத்த சமயத்துக்கு அவரை மாற்ற முயற்சி செய்வதாக வதந்தி பரவி வருவதாக பிட்ஷூ வருத்தப் பட்டுக் கொண்டிருந்தார்.அப்போது மக்கள் விஹாரத்தை சூழ்ந்து கொண்டு இளவரசரை வெளியே அனுப்புமாறு கூக்குரலிட்டுக் கொண்டு இருப்பதாக சீடர்கள் பதட்டத்துடன் கூறினர். முருகைய்யன் என்ற படகோட்டியும் அவன் மனைவியும்தான் பெரிதாய் சத்தம் போட்டு வதந்தியைப் பரப்புவதாக சீடர்கள் மேலும் தெரிவித்தனர்.இளவரசர், இந்த சங்கடத்தை விலக்கவும் அங்கிருந்து மக்கள் அறியாமல் வெளியேறவும் திட்டமிட்டார். வெளியில் திரண்டு நிற்பவர்களில் முருகைய்யன் ஒருவனை மட்டும் அழைத்து வருமாறு சீடர்களிடம் கூறினார். முருகைய்யன் தன் பேச்சை மீறமாட்டான் என உறுதி தெரிவித்த இளவரசர் அவன் உள்ளே வந்தவுடன் முன்போல வாய்க்கால் வழியாக ஆனைமங்கலத்துக்கு சென்றுவிடுவதாகக் கூறினார். வெளியே சென்ற பிஷூ, மக்களின் ஆரவாரத்தை அடக்கியபடி இளவரசரை சமீபத்தில் பார்த்தவர் முன்வருமாறு கூற, படகோட்டியும் அவன் மனைவியான ராக்கம்மாளும் முன்வந்தனர். படகோட்டியே உள்ளே சென்று இளவரசர் இருக்கிறாரா என்று பார்த்துக்கொள்ளட்டும் என்றபடி இளம்பிஷு அவனை உள்ளே அழைத்துச் செல்ல, தலைமை பிஷு கூட்டத்தைக் கட்டுப் படுத்தத் தொடங்கினார். எக்காலத்திலும் இளவரசரை புத்த மதத்தில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என உறுதி கூறிய ஆச்சாரிய பிஷூ நாகப்பட்டினத்தை நெருங்கி வரும் புயலையும் அதன் ஆபத்தையும் மக்களுக்குச் சுட்டிக்காட்டினார். கடல் அங்கு ஆவேசமாக பொங்கிக் கொண்டிருந்ததைக் கண்ட மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள சிதறி ஓட ஆரம்பித்தனர். தயங்கி நின்ற ராக்கம்மாளையும் ஒருவன் வந்து காதோடு ஏதோ சொல்லிக் கூட்டிப் போனான். தலைமை பிஷூவுக்கு கடல் பொங்கி வந்து சூடாமணி விஹாரத்தையும் மூழ்கடித்துவிடும் என்ற பயத்தினால் இளவரசரை அழைத்துக் கொண்டு நாகப்பட்டினத்தின் கிழக்குப் பகுதியிலிருக்கும் ஆபத்து இல்லாத பகுதியான ஆனைமங்கலத்துக்கு அழைத்துப் போகும்படி படகோட்டியைக் கேட்டுக் கொண்டார்.படகு ஆனைமங்கலத்துக்கு அருகில் செல்லும்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதைக் கண்ட இளவரசர் விஹாரத்தில் இருந்த தலைமை பிஷுவுக்கும் ஏதாவது ஆபத்து நேர்ந்திருக்கும் எனக் கருதி உடனே படகைத் திருப்ப ஆணையிட்டார். அவர் சந்தேகப் பட்டபடியே புத்தரின் பாத சரணங்களை இறுகப் பிடித்தப்படி தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த ஆச்சாரியரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து படகில் கொண்டு வந்து சேர்த்தார். புயல்காற்றும் சிறு தூறலும் வெள்ளமும் படகைத் தாக்க முருகைய்யன் பிரயாசைப்பட்டு படகை ஓட்ட, வழியில் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகவிருந்த கன்றுக்குட்டியை ஆச்சார்யரும், இளவரசரும் காப்பாற்றினர். ஆனைமங்கல மாளிகையை அடைந்த பொழுது அங்கிருந்த வாயிற்காப்பானை, அங்கே அடைக்கலமடைந்திருந்த மக்களுக்குத் தெரியாமல் வேறு வழியாக மேன்மாடத்துக்கு அழைத்துச் செல்ல பணித்தார்.மக்களுக்குத் தேவையான பொருளுதவிகளைச் செய்யுமாறு ஆணையிட்டுக் கொண்டிருக்கையில் முருகைய்யன் அவன் மனைவியை நினைத்துக் கவலைப்பட இளவரசர் அவனைத் தேற்றினார். அவன் அங்கு வர நேர்ந்ததைப்பற்றி சொன்னான். தன்னுடைய அத்தையாகிய மந்தாகினி தேவியை பழுவேட்டரையர் கைது செய்து கொண்டு போனதையும், பூங்குழலி அவர்களைப் பின் தொடர்ந்து சென்றதையும், இராக்கம்மாள் இளவரசர் சூடாமணி விஹாரத்தில் இருப்பதை சந்தேகித்து இவனை இங்கு கூட்டி வந்ததையும் விவரமாகக் கூறினான். ஈழத்து அரசியை கைதுசெய்த செய்தியைக் கேட்டதும் பதைத்த இளவரசர் உடனடியாகத் தான் கிளம்புவதாக அறிவித்தார். மறுநாள் சிறு வியாபாரி போல மூட்டை ஒன்றை தோளில் சுமந்தபடி முருகைய்யனைக் கூட்டிக் கொண்டு இளவரசர் கிளம்ப, மறைவில் இருந்த இராக்கம்மாள் வேண்டுமென்றே இளவரசரின் காலில் விழுந்தாள். முருகைய்யனின் சமிக்ஞையை கண்டுகொள்ளாமல், இளவரசர் பிழைத்து வந்ததை சந்தோஷத்துடன் மக்களுக்கு அறிவித்தாள். கூட்டம் சேர்ந்ததைக் கண்ட இளவரசர் தான் ஒரு வியாபாரிதான் எனச் சொன்னபோதும் கவனிக்காமல் திரும்ப திரும்ப இளவரசர்.. இளவரசர் எனச் சத்தமாகப் பேசி அனைவரது கவனத்தையும் ஈர்க்கலானாள்.முருகைய்யன் ரகசியமாக இளவரசர் மாறுவேடத்துடன் ஊருக்குச் செல்ல இருப்பதாகக் கூற, அதையும் பழுவேட்டரையருக்கு பயந்து இப்படி போகும் நிலை இளவரசருக்கு வந்து விட்டதே எனக் கூறி ஆர்ப்பாட்டம் செய்தாள். கூட்டம் கூடி மக்கள் அனைவரும் வந்துவிட எண்பேராயத்தின் தலைவர், இளவரசர் உயிர்பிழைத்ததற்கு மகிழ்ச்சி அடைந்து ஒருநாளாவது தங்கிப் போகும்படி வற்புறுத்தினார். கூட்டம் அதிகமாக சேர ஆரம்பித்தைக் கண்ட இளவரசர் மறுக்க முடியாமல் மாலையில் கிளம்புவதாக கூற அவருக்குண்டான யானைகள், குதிரைகள், சிவிகைகள், திருச்சின்னங்கள், கொடிகள், பேரிகை, எக்காளம் முதலிய வாத்தியங்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டன. கூட்டம் கூடி ஐம்பெருங்குழுவின் அதிகாரிகளும், எண்பேராயத்தின் தலைவர்களும் மாளிகையின் வாசலில் வந்து சேர்ந்தனர். பெரும் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டது. இளவரசர் அங்கிருந்து கிளம்ப தாமதமாவதைக் கண்டு பதட்டமடைந்தார். மேலும் அங்கிருந்தவர்கள் அனைவரும் சக்ரவர்த்தி உயிரோடு இருக்கிறாரா என்பது குறித்தும், பழுவேட்டரையர்களின் அதிகாரம் மீதான அதிருப்தி குறித்தும் பேசிக்கொண்டே இருக்க இளவரசருக்கு உடனே அங்கிருந்து கிளம்பி தந்தையைக் காண வேண்டுமென்ற தவிப்பு உண்டாயிற்று. யானைகளும், குதிரைகளும், மக்களுமாக பெரும் அணியுடன் தஞ்சையை நோக்கி பெருந்திரளாக இளவரசர் புறப்பட்டார். கடம்பூரிலிருந்து கிளம்பிய பழுவேட்டரையர் மிகுந்த மன உளைச்சலுடன் கொள்ளிடம் ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். என்னதான் நந்தினியின் முன் எப்பொழுதும் போல அவள் பேச்சைக் கேட்டு பரிவாரங்கள் இல்லாமல் ஒரு பத்துப் பேரை மட்டும் கூட்டிக் கொண்டு மதுராந்தகனை அழைத்து வர தஞ்சைக்கு உடனே கிளம்பி விட்டிருந்தாலும், மூன்று வாலிபர்கள் இடையே அவளைத் தனியாக விட்டு விட்டு வந்தது அவர் மனதை அரித்துக் கொண்டிருந்தது. அவளின் மோகனசக்தி அவளை விட்டு தூரமாக வந்தபின், பூரணமாக விலகியிருந்த சூழ்நிலையில், பல விஷயங்களை சிந்திக்க தொடங்கி னார்.பழுவேட்டரையர் யோசித்துக் கொண்டே வந்ததில், ஆற்றில் திடீரென ஏறி வந்த வெள்ளத்தை கவனிக்காது தன்னிலையிலேயே மூழ்கிப்போனார். வெள்ளத்திலும் காற்றிலும் தத்தளித்து படகு கரைசேர்ந்த போது பெரும் மரம் ஒன்று சாய்ந்ததில் படகு தலைகுப்புற கவிழ்ந்தது. படகில் கூட வந்தவர்கள் நிலைமையை உடனே சமாளித்து நீந்த தொடங்கி விட்டார்கள். நந்தினியின் நினைவிலேயே மூழ்கியிருந்த பழுவேட்டரையர் தன்னைச் சமாளித்துக் கொண்டு உத்வேகம் கொண்டு நீந்தி மேலே வருவதற்குள் வெள்ளம் அவரை படகு கவிழ்ந்த இட த்திலிருந்து வெகுதூரம் கூட்டிச் சென்று விட்டது. வெகு பிரயாசைப்பட்டு நீந்தி கரையை அடைந்த பழுவேட்டரையர் நதிக்கரையோரமாகவே நடந்து சென்று குடந்தை நகரை அடையலாமென நினைத்தார். ஆனால் புயல் வலுத்ததால் மறுபடியும் வெள்ளம் வந்து அவரை உருட்டிச் செல்ல இந்தமுறை நாம் சேற்றில் முழுகிவிடப்போகிறோம் என பயந்தார். அப்போது ஏதோ ஒரு சக்தி அவரை உந்த கையில் கிடைத்த கல்லைப் பிடித்துக் கொண்டு வெளியே பாய்ந்தார். அந்த இடத்தில் துர்க்கா பரமேசுவரியின் கோவிலில் முணுக்கென வெளிச்சத்துடன் தெய்வம் அருள் பாலித்துக் கொண்டிருந்தது. தெய்வத்தின் அருளாலேயே தான் காப்பாற்றப்பட்டதாக மகிழ்ந்தவர் அங்கு வைத்திருந்த நிவேதனப் பொருட்களை உண்டு விட்டு அங்கேயே அன்றிரவைக் கழித்தார். கனவில் தேவி வந்து நந்தினியை நம்பாதே என்று எச்சரிக்க திடுக்கிட்டு எழுந்தவர் நன்றாக விடிந்திருந்ததையும் சுற்றி வெள்ளம் ஓடிக் கொண்டிருந்ததையும் தற்போது தாம் வெளியே போகவேண்டுமானால் கோவிலுக்கு வெளியே உள்ள மரம் விழுந்தால்தான் பாலம் போல உபயோகப் படுத்தி காட்டுப்பகுதிக்கு செல்ல ஒரே வழி என்பதையும் உணர்ந்தார். பொறுமையுடன் அன்றைய பகலும், இரவும், அடுத்த பகலும் காத்திருந்த பின் மறுநாளைய மாலையில் அம்மரம் வீழ்ந்தது. துர்க்கா பரமேசுவரியை வணங்கி விடைபெற நினைத்தபோது மந்திரவாதி என யாரோ அழைக்கும் குரல் கேட்டு தூங்குவது போல் பாசாங்கு செய்து ஓரமாக கண்மூடிப் படுத்துக் கொண்டார். வந்தவன் தேவராளன். இரவிதாஸன்தான் தூங்குவதாக நினைத்து அருகில் வரும்வரை அழைத்துக் கொண்டே வந்தவன், முகம் பார்த்து விட்டு பயந்து அந்த மரத்தின் வழியாகவே வேகமாக ஓட்டம் பிடித்தான். பழுவேட்டரையர், மந்திரவாதியின் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டுமென அவனைத் தொடர்ந்து சென்றார். தேவராளனின் சேற்றுக் கால்தடத்தை தொடர்ந்து சென்ற பழுவேட்டரையர் தாம் வந்திருக்கும் இடம் பழைய திருப்புறம்பியம் பள்ளிப்படை என்று அறிந்து கொண்டு, தேவராளனும் ரவிதாசனும் பேசுவதை ஒட்டுக் கேட்கலானார். சுந்தர சோழனையும் அவரது இரண்டு பிள்ளைகளையும் யமன் நெருங்கிக் கொண்டிருக்கிறான் என பேசிக்கொண்டிருந்ததை மறைவில் இருந்து கேட்டுத் திகைத்தார். இரவிதாஸனிடம் தேவராளன், தான் பழுவேட்டரையரை பார்த்து விட்டு வந்ததைப் பற்றிக் கூற, இரவிதாஸன், அவர் மீது கல்லைத் தூக்கிப் போட்டு விட்டு வந்திருக்கலாமே என்று கடிந்து கொண்டான். மேலும் இளவரசரை விஹாரத்திலிருந்து வெளிப்படுத்தியது பாண்டியர்களின் ஆபத்துதவிக் கூட்டத்தைச் சேர்ந்த இராக்கம்மாள்தான் என்றும், வரும் வழியில் யானைப்பாகனாக ரேவதாஸக் கிரமவித்தன் யானைப்பாகனாக அமர்ந்து இளவரசன் உயிரை எடுப்பான் எனவும், சுந்தரசோழரது அரண்மனையின் பாதாள சுரங்கத்தில் சோமன் சாம்பவன் அரசரைக் கொல்லக் காத்திருப்பதாகவும் கூறினான். தேவராளன் நந்தினியைப் பற்றி அதிருப்தியை வெளியிட, அவளை இனிமேல் பாண்டிமாதேவி என்று அழைக்குமாறும், ஆதித்த கரிகாலனை கொல்லாமல் அவள் ஓயமாட்டாள் எனவும் இரவிதாஸன் அவனை சமாதானப் படுத்தினான். வந்தியத்தேவனை நந்தினி காப்பாற்றியது பற்றிய சந்தேகத்தை தேவராளன் கேட்க, முடிந்தால் நந்தினி வந்தியத்தேவன் மூலமாகவே ஆதித்த கரிகாலனை கொல்லுவாள் என்று கூறியவன், சோமன் சாம்பவன் பாதாள சுரங்கத்தில் உள்ள பொக்கிஷங்களை கொண்டு வருவான் எனவும், நந்தினி வேலை முடிந்தவுடன் சுரங்கம் வழியே வெளியேறி வந்து, எல்லோரும் கொல்லிமலை சென்று, சோழநாட்டில் நடக்கும் அல்லோலங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே பாண்டியருக்கு படை திரட்டலாமெனவும் விவரித்தான். இதையெல்லாம் கேட்ட பழுவேட்டரையருக்கு தன் தலைமேல் இடிவீழ்ந்தாற் போல் ஆயிற்று. சோழர்குலத்தை பூண்டறுக்க செய்ய சபதமெடுத்தவள் தன் மனைவியாக இத்தனை நாள் இருந்ததை நினைத்து வேதனையுற்றார். அப்போது அவர் கனைத்ததில் திரும்பிய இருவரையும் தன் கைகளால் கொல்ல முயல, தேவராளன் தப்பித்து மண்டபத்தின் மேல் பெயர்ந்திருந்த கல்லை அவர் மீது தள்ள, அந்த இடைவெளியில் இரவிதாஸன் அவரிடமிருந்து விடுவித்துக் கொள்ள, மண்டபக் கல்லும் மரமும் ஒருசேர பழுவேட்டரையரின் மேல் விழுந்தது. இருவரும் வேகமாக ஓட்டம் பிடித்தனர்.

பொன்னியின் செல்வன் – 21

பொன்னியின் செல்வன் – 21

ஆதித்த கரிகாலன் கடம்பூருக்கு வந்த நிமிடம் முதல் எல்லோரையும் ஆட்டி வைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு சம்புவரையரும், பழுவேட்டரையரும் வெகுவாகக் கலங்கிப் போயிருந்தார்கள். அவனிடம் பேசுவதற்கே அவர்கள் பயந்து தயங்கியிருந்த பொழுதில்ஆதித்த கரிகாலனே அவர்களை அழைத்துப் பேச ஆரம்பித்தான்.மதுராந்தகனுக்கு பட்டம் கட்ட சுந்தரசோழர் முடிவெடுத்திருப்பதாகவும், அதைப்பற்றிய சிற்றரசர்களின் அபிப்ராயம் என்னவென தெரிந்து கொண்டு, தான் முடிவெடுக்க இருப்பதாக நயந்து கூறினான். பழுவேட்டரையர் அதை நம்பி விட்டார்.உடனே நந்தினியின் திட்டமான நாட்டை பிரித்து கொடுக்கும் யோசனையைக் கூற கரிகாலன் வெகுண்டான்.‘கிழவர்களாகிய நீங்கள் வேண்டுமானால் பெண்களைப் பங்கு போட்டுக் கொள்வதைப்போல நாட்டை பிரிக்க எண்ணலாம். என்னால் முடியாது. அதனினும் மதுராந்தகனுக்கே எனது உரிமையை விட்டுத் தருகிறேன். பதிலாக வட திசை நோக்கி படை எடுத்துச் செல்ல சைன்யமும் அதற்குண்டான தளவாடங்களையும் அரசர் அனுமதியும் பெற்றுத் தர வேண்டும். என்ன சொல்கிறீர்கள்?’ எனக்கேட்டான். பழுவேட்டரையர், ‘தஞ்சைக்கு சென்று சக்ரவர்த்தியுடன் பேசிக்கொண்டு’ , என்று சொல்லத் தொடங்கும்போதே நடுவில் இடைமறித்து, தஞ்சையில் சக்ரவர்த்தியை சிறைவைத்திருப்பதாகவும், பழுவேட்டரையர்களின் கைகளில்தான் ஆட்சிப்பொறுப்பும், நிதிமூலங்களும் இருக்கிறது என்பது தனக்குத் தெரியும் என்றும் வேண்டுமானால், இளையராணியிடம் கேட்டு சொல்கிறேன் என்று கூறுங்கள்’ என எள்ளினான்..பழுவேட்டரையருக்கு கோபம் மிகுந்தும் அடக்கிக் கொண்டு வாளாவிருந்தார். கரிகாலன் தான் இங்கேயே தங்கியிருப்பதாகவும். பழுவேட்டரையர் தஞ்சைக்கு சென்று மதுராந்தகனை அழைத்து வந்து ஆயத்தங்கள் செய்து முடித்தவுடன். தான் தஞ்சைக்கு சென்று பெற்றோரிடம் விடைபெற்று படைகளை அழைத்து செல்வதாகவும் முடிவாகக்கூறினான். அதுவரை வேட்டையாடி பொழுதைக் கழிக்க விரும்புவதாகவும் அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யுமாறு சம்புவரையரிடம் கேட்டுக்கொண்டு வந்தியத்தேவனை உடன் அழைத்தபடி அங்கிருந்து சென்றான். அனைவரும் திக்பிரமையடைந்திருந்தனர். ஒருவாறு மீண்ட பழுவேட்டரையருக்கு உடனடியாக அங்கிருந்து தஞ்சைக்கு நந்தினியை அழைத்துச் சென்றுவிடுவதுதான் உசிதம் எனத் தோன்றியது. கரிகாலன் மதுராந்தகனை இங்கே அழைத்து வந்தால் கரிகாலன் அவனை ஏதாவது செய்துவிடுவான் என்ற பயமும்இருந்தது. தஞ்சைக்கு பாதுகாப்பாக நந்தினியை அழைத்துச் சென்றுவிட்டு சின்னப் பழுவேட்டரையரை கலந்தாலோசித்து விட்டு மேலே முடிவெடுக்கலாமென நந்தினியிடம் கூறி கிளம்பச் சொல்ல அவள் மறுத்தாள். நந்தினி, சபையில் கரிகாலன் பழுவேட்டரையரை அவமானப் படுத்தியதை மணிமேகலை சொல்லி விட்டதாகக் கூறி அழுதாள். எனவே அவனைப் பழிவாங்க வேண்டுமெனக் கூற, பழுவேட்டரையருக்கு நந்தினி தன்மீது வைத்துள்ள பதிபக்தியை நினைத்து உவகையுற்றார். நந்தினி மறைத்து வைத்த வாளைக் காட்டி தான் இங்கு பாதுகாப்பாக இருக்கப் போவதாகவும் அவர் மட்டும் தஞ்சை செல்லவேண்டுமெனவும் வேண்டிக் கேட்டுக் கொண்டாள். தற்போது அவரோடு கிளம்பினால் கிழவருக்கு நந்தினி மேல் நம்பிக்கையில்லை என்று பேச்சு கிளம்பும் என்றாள். அவருக்கு மனமில்லாத போதும் அவள் சொல்லை மீறாமல் கிளம்பிச் சென்றார். ஆதித்த கரிகாலன் தன் நண்பர்களை அழைத்துக் கொண்டு வேட்டைக்குக் கிளம்பினான். சம்புவரையருக்கு மணிமேகலையை கரிகாலனுக்கு மணமுடித்தால் நல்லது என்று தோன்ற, கந்தமாறன் அதற்கு எதிராக இருந்தான். நந்தினிக்கும் கரிகாலனுக்கும் இடையில் ஏதோ இருக்க வேண்டும் என்று அவன் மருகி வந்தான். நந்தினியை அழைத்துக் கொண்டு வீரநாராயண ஏரியில் இருந்த சிறிய தீவின் நீராழி மண்டபத்திற்கு மணிமேகலை தன் தோழிகளுடன் பொழுதைக் கழிக்க வந்து சேர்ந்தாள். வேட்டையில் ஆதித்த கரிகாலன் கண்ணில் கண்ட மிருகங்களையெல்லாம் தன் ஆத்திரத்தினால் கொன்று தீர்த்தான். இரு காட்டுப்பன்றிகள் குறுக்கிட அதில் ஒன்றின் மீது கரிகாலன் எய்த அம்பு குறிதவறி விட கந்தமாறன் நகைத்தான். கரிகாலன் அவனிடம் பந்தயமிட்டு அவனையும் பார்த்திபேந்திரனும் ஒரு பன்றியை பிடித்து வருமாறும், தானும் வந்தியத்தேவனும் ஒன்றை பிடிப்பதாகவும் சவால் விட்டான்.அதன்படி துரத்தி வந்தபொழுது, பன்றியைத் தவற விட்டனர். கரிகாலனும் வந்தியத்தேவனும் தனிமையில் எல்லாச் சூழலையும் விவாதித்தனர். வந்தியத்தேவனிடம் நந்தினியை தனியே சந்திப்பதற்கான தன் அச்சத்தை கரிகாலன் வெளிப்படுத்த, வந்தியத்தேவன் நந்தினி அவரின் சகோதரி என்ற உண்மையை அவளிடம் சொல்லுமாறு வற்புறுத்தினான். நந்தினியின் வஞ்சம் குறித்து பேசிய கரிகாலன்நானோ அவளோ இறந்து விடுவது தான் இதற்கான தீர்வு என்றெல்லாம் பேசி கலங்கடித்தான். மணிமேகலையை தான் உடன்பிறவா சகோதரியாக கருதுவதாகவும், கரிகாலன் அவளை மணக்கலாமெனவும் வந்தியத்தேவன் கூறினான். அப்போது சிறுத்தையுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த பழைய பன்றியை கண்டு இருவரும் சண்டையிட்டு பன்றியை வென்றனர். அதற்கு எதிர்க்கரையில் பெண்களைப் பார்த்தவுடன் நீரில் குதிரையை விட்டுக்கொண்டு அங்கு சென்றனர். அங்கு பன்றியிடமிருந்து தப்பிய சிறுத்தை பெண்களை நோக்கிப் பாய தயாராய் இருந்தது. கரிகாலன் அம்பை விட சிறுத்தை பெண்களின் மீது பாய்ந்தது. சிறுத்தை, மணிமேகலை, நந்தினி மூவரும் நீரில் விழுந்தனர். பின் எழுந்த மணிமேகலையை நோக்கி சென்ற வந்தியத்தேவனை தடுத்து நந்தினியிடம் அனுப்பிவிட்டு கரிகாலன் அவளை நோக்கி சென்றான். கரிகாலன் தன்னைத் தொட்டு தூக்கியதை மணிமேகலை விரும்பாமல் பேச, அவளுடைய அன்புக்கு வந்தியத்தேவன் பாத்யதை இல்லை எனக் கரிகாலன் கூறி நந்தினியுடன் அவன் குலவிக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்ட மணிமேகலை துணுக்குற்றாள். உண்மையில் வந்தியத்தேவன் நந்தினியை காப்பாற்றியவுடன் பயந்து வேகமாக இறக்கிவிட நந்தினி அவன் முதலில் தன்னிடம் வராததையும் தான் அவனுக்கு உதவி செய்ததை மறந்து விட்டதையும் சொல்லி ஏசினாள். அதற்கு பதிலளித்த வந்தியத்தேவனை ஒத்துக்கொள்ளாமல் மறுநாள் நள்ளிரவில் தன்னைத் தனியே சந்திக்குமாறு கூறினாள். அதற்குள் கரிகாலனும் மணிமேகலையும் நெருங்கிவிட பேச்சை நிறுத்திக் கொண்டாள். பின்னர் எதிரே அந்த அடிப்பட்ட சிறுத்தை கரையேறிக் கொண்டிருப்பதைக் கண்ட ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனை அதைக் கொன்று வருமாறு அனுப்பிவிட்டு, நந்தினியுடன் தனியே பேச விழைந்தார். மணிமேகலையும் உணவு தயாரிக்கும் இடத்திற்கு சென்று விட நந்தினியிடம் அவள் தன் சகோதரி என்ற உண்மையைக் கூறினார். ஒரு கணம் திகைத்த நந்தினி இதைச் சொன்னது வந்தியத்தேவனா? எனக்கேட்க, ஆமோதித்த கரிகாலனை பார்த்துச் சிரித்தாள். இளையபிராட்டி குந்தவை நம்மை மறுபடியும் பிரிப்பதற்காக வந்தியத்தேவன் மூலம் செய்த சூழ்ச்சி என்று சொல்ல, வந்தியத்தேவன் அப்படிப்பட்டவனல்ல என்று கரிகாலன் மறுத்தார். அப்போது வந்தியத்தேவன் தன்மீது ஆசைப்பட்டதாகவும் தான் மறுத்ததால் கரிகாலனைதன்னிடம் அணுகாதவாறு அவன் காவல் இருப்பதாகவும் பழி கூறினாள். முன்பே கடம்பூருக்கு வரும்போது வந்தியத்தேவன் ‘உங்களை விட்டு பிரிய மாட்டேன்’ என்று தன்னிடம் சொன்னதை கரிகாலன் நினைவுற்றான். மேலும் அநிருத்தர் அருள்மொழிவர்மருக்கு பட்டம் சூட்ட நினைப்பதாகவும், மதுராந்தகன் அரசாள தகுதியில்லாதவன் எனவும், ஆழ்வார்க்கடியான் தன்னை மணம்புரிந்து கொண்டு வைணவ பக்தியில் ஈடுபடவேண்டுமென ஆசைப்படுகிறான் என்றெல்லாம் கூறி தன்மீது பரிதாபம் ஏற்படும்படி செய்தாள். மேலும் வந்தியத்தேவன் திரும்பி வரும்போது அவனின் குலமான வாணர்குல பாட்டு ஒன்றை அவன் சொன்னதாகப் பொய் கூறி சொல்லலானாள். வந்தியத்தேவன் அதைத் தான் சொல்லவில்லை என்று மறுக்க, அதை காதில் கொள்ளாமல் அதில் மூவேந்தர்களின் தலையைப் பறித்ததாக வரும் வரிகளைச் சொல்லி காண்பித்தாள். ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவன் மீது வெறுப்பு கொள்ளும் வண்ணம் அனைத்தையும் செய்தவள், ஆதித்த கரிகாலனே ஆட்சிக்கு வரவேண்டும் என்றும், அவன் தஞ்சைக்கு வர அவள் தடையாக இருப்பதாக கருதினால், தான் அங்கிருந்து போய்விடுவதாக கூறி அவனிடம் வருந்தினாள். ஆதித்த கரிகாலன் நந்தினியின் வலையில் முழுதாய் விழுந்தான்.வந்தியத்தேவன் செயலற்று நிற்க, உணவுக்கு அழைக்க வந்த மணிமேகலை அவனை சமாதானப் படுத்த முயற்சி செய்து அவனையே பார்க்க, அவன் இந்த ஏமாற்றத்தை தாங்கவியலாமல் உள்ளக் கொந்தளிப்புடன் இருந்தான். உணவுக்குப் பின் மணிமேகலை பாட அனைவரும் ரசித்துக் கொண்டிருக்கையில் அவளின் பார்வை தன்மீதே இருப்பதைக் கண்ட வந்தியத்தேவன் அவள் மீது பரிதாபம் கொண்டான். அப்போது புயலும் மழையும் சூழ்வதைப்போல தோற்றம்உண்டாக, படகும் கட்டி வைத்திருந்த இடத்திலிருந்து காணாமல் போயிருந்தது. எப்படிப் போவது என்று அனைவரும் சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது சம்புவரையர் இரு பெரிய படகுகளை எடுத்துக்கொண்டு வந்து அனைவரையும் அழைத்துச் சென்றார். நான்காம் பாகம் முற்றிற்று.

பொன்னியின் செல்வன். 20

பொன்னியின் செல்வன். 20

நான்காம் பாகம் தொடர்ச்சி.. நாகப்பட்டினத்திலிருந்து பூங்குழலியும் சேந்தன் அமுதனும் கோடியக்கரைக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள். தன் அத்தைக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்காகவும் பொன்னியின் செல்வன் மீதான தன் அன்பிற்கு ஏற்பட்டிருக்கும் தடைகளாலும் பூங்குழலி அரச குடும்பத்தினர் மீது பெருங்கோபம் கொண்டிருந்தாள்.சேந்தன் அமுதன் அவளை மணக்கும் ஆசையை வெளியிட்டதற்கும் சரியாக பதில் கூறவில்லை. அப்போது ஊமைராணி மந்தாகினி எதிர்ப்பட்டாள்.. சேந்தன் அமுதனைக் கண்டு சிறிது கலவரப்பட்டாலும் பூங்குழலி எடுத்துச் சொன்னவுடன் ஊமைராணி அவர்களிடம் நெருங்கி வந்தாள். பின், சேந்தன் அமுதனை அழைத்துக் கொண்டு, வீட்டுக்கு சென்று ஊமைராணிக்கு உணவெடுத்துக் கொண்டு வரலாம் என்று கிளம்பினாள். வழி நடுவில் அண்ணி ராக்கம்மாளும் இன்னொரு ஆணும் புதர் மறைவில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்தார்கள். பூங்குழலியைப் பார்த்ததும் ராக்கம்மாள் மட்டும் வெளிப்பட்டு ஊமை ராணி பற்றி அறிந்து கொள்ள கேள்விகளால் துளைத்ததற்குச் சமாளித்துப் பூங்குழலி பதில் கூறினாள். பிறகு சேந்தன் அமுதனைத் தஞ்சைக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தாள். உணவெடுத்துக் கொண்டு கிளம்புகையில், அவள் தந்தை தியாகவிடங்கர், தன்னை அரசாங்க காரியங்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு கூறியது மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. ஊமை ராணி மந்தாகினியுடன் படகில் செல்லும்போது திடீரென சிலர் வந்து பூங்குழலியை கட்டிப் போட்டுவிட்டு ஊமைராணியை பலவந்தமாகக் கூட்டிச் சென்றனர். கடத்தியவர்களில் தலைவனாக இருந்தவன் முன்பு வந்தியத் தேவனுடன் வந்திருந்த பழையாறை வைத்தியர் மகனாகிய பினாகபாணி. சிறிது நேரம் கழித்து அங்கு வந்த சேந்தன் அமுதன் பூங்குழலியை அவிழ்த்து விட்டுவிட்டு தான் அங்கு திரும்பி வந்த கதையைக் கூறினான். அவளின் அண்ணியை கட்டிப் போட்டு இருந்ததைப் தஞ்சை செல்லும் வழியில் பார்த்ததாகக் கூறி, சந்தேகப்பட்டு பின் தொடர்ந்து வந்ததாகவும், ஊமைராணியைத் தஞ்சை செல்லும் வழியில் காவலர்கள் அழைத்துச் செல்வதாகவும் கூறினான். இருவரும் தஞ்சை போகும் சாலையில் ஊமைராணியைத் தேடிச் சென்றனர்.மன்னரின் முன்னிலையில் தன் அத்தைக்கு நியாயம் கேட்கப் போவதாக பூங்குழலி புலம்பிக் கொண்டே வந்தாள். இருட்டும் நேரத்தில் தஞ்சைக்கு அருகே மழைவரத் தொடங்கியதும் இருவரும் ஒரு மண்டபத்தில் ஒதுங்கினர். அருகே மரம் ஒன்று விழுந்து கிடந்தது. பல்லக்கு ஒன்று மண்டபத்தின் முன்பு இறக்கி வைக்கப் பட்டிருந்ததையும். அந்தப் பல்லக்குத் தூக்கி வந்தவர்கள் மேல்தான் மரம் விழுந்திருக்கிறது என்றும் அதனால் பல்லக்கு தூக்கி வந்தவர்கள் கூட்டத்தில் குழப்பம் நிலவியதையும் தூர இருந்தே மின்னல் வெளிச்சத்தில் பார்த்தனர். அங்கிருந்து பல்லக்கை இவர்கள் இருந்த இட த்திற்கே கொண்டு வந்து இறக்கி வைத்தனர். சிறிது நேரம் கழித்து பல்லக்கிலிருந்து ஊமைராணி இறங்கி பூங்குழலியை தனியாக அழைத்து ஏதோ ஊமைபாஷையில் பேசினாள். அந்த இருட்டிலும் அதைப் புரிந்து கொண்ட பூங்குழலி சேந்தன் அமுதனை அழைத்து ஊமைராணி அவளுக்கு பதிலாக பல்லக்கில் தன்னைப் போகச் சொன்னதாகவும், சேந்தன் அமுதன் வீட்டுக்கு ஊமைராணியைக் கூட்டிப் போகச் சொல்லிவிட்டதாகவும் சமிக்ஞையில் சொன்னதாகக் கூறினாள். பயந்து போன சேந்தன் அமுதனை, ஊமைராணியின் ஏற்பாடு சரியாகத்தான் இருக்கும் என்றும் சமாதானப் படுத்திவிட்டு பல்லக்கில் ஏறி அமர்ந்தாள். இந்த நாடகத்தை எல்லாம் இன்னொரு நபரும் மண்டபத்து இருள் மூலையில் இருந்து பார்த்து கொண்டிருந்தது இவர்களுக்கு தெரியாது. ஆழ்வார்க்கடியான் முதன்மந்திரியை மறுநாள் காலையில் சந்தித்து அவரின் கட்டளைப்படி ஆதித்த கரிகாலனை சந்தித்தும் அவனது கடம்பூர் பயணத்தை தடுக்க முடியவில்லை என்பதைத் தெரிவித்தான். அப்போது முதன் மந்திரி, திருமலையால் முடியாது என்று கைவிட்ட காரியமான ஊமைராணியை வைத்தியர் மகன் மூலம் தான் கொண்டு வந்து அந்தப்புரத்தில் தங்க வைத்திருப்பதாகக் கூறி தன்னுடன் வந்து அவருடன் பேச உதவுமாறு ஆழ்வார்க்கடியானைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்தப்புரத்தில் ஊமைராணிக்கு பதிலாக பூங்குழலியைக் கண்டு அதிர்ந்தவர், பூங்குழலியின் துடுக்குப் பேச்சால் கோபமுற்றார். ஆழ்வார்க்கடியான், சேந்தன் அமுதனுடன் ஊமைராணி சென்றதை மண்டபத்தில் தான் மறைந்திருந்து பார்த்ததாகவும், பழுவூர் ஆட்களின் பல்லக்கு என்பதால் தான் தடுக்க முயலாமல் அமைதியாக இருந்து விட்டதாகவும் கூறினான். சேந்தன் அமுதன் குடிசையில்தான் மந்தாகினி இருப்பார் என்றும் திருமலை கூறினான். அப்போது குந்தவையும், வானதியும் வந்தனர். பூங்குழலியைக் கண்டு குந்தவை வெகுவாக ஆச்சரியப்பட்டாள். அநிருத்தர் நடந்ததைக் கூற, ஊமைராணி தஞ்சைக்கு வந்துவிட்டதை அறிந்த குந்தவை உடனே இங்கு அவளைக் கூட்டி வருமாறு பரபரப்புற்றாள். அப்போது ஆழ்வார்க்கடியான் பூங்குழலியால் மட்டுமே அது இயலும் எனச் சொல்ல, ஆழ்வார்க்கடியானையும் பூங்குழலியையும் மந்தாகினியை கூட்டிவர அனுப்பினார் அநிருத்தர். வானதியை தனியே அனுப்பிவிட்டு குந்தவை முதன்மந்திரியிடம் தன் தகப்பனாரைப் பற்றிச் சொல்லி வருந்தினாள். தன் பெரியன்னையைப் பற்றிய உண்மையை தன்னிடம் சொல்லிவிட்டு, அவள் இறந்து விட்டதாக எண்ணி அவர் துயருறுவதைக் கூறி குந்தவை அழுதாள். இதைக் கேட்டு வேதனையுற்ற அநிருத்தர், தன் மீதே குற்றமென்றும், தாம்தான் ஊமைராணியாகிய மந்தாகினி தேவி இறந்து போனார் என்று அரசரிடம் பொய் சொன்னேன் என்றும் கூறி வருந்தினார். மேலும், செம்பியன் மாதேவியின் பாதுகாப்பில், மந்தாகினி சிலநாட்கள் இருந்தபோது அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததையும் கூறினார். பேச்சுவாக்கில் அருள்மொழி உயிரோடு இருக்கும் விஷயத்தை குந்தவை சொல்லிவிட அது அனைவருக்கும் தெரியாமல் இருப்பதே நல்லது என்றும் அநிருத்தர் கூறினார்.குந்தவை மதுராந்தகனுக்கு பட்டம் சூட்ட தந்தை விரும்புகிறார் என்பதையும், தனக்கும் அதில் ஆட்சேபணை இல்லை என்பதையும் கூற,செம்பியன் மாதேவி அதற்கு பெரும் தடையாக இருப்பார் என முதன் மந்திரி கூறினார். ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் ஊமைராணியை கூட்டிக்கொண்டு வரும் வழியில் கோட்டைக்குள் நுழைந்த போது மந்தாகினியை கூட்டத்தில் தவற விட்டு விட்டோம் என்ற செய்தியோடு திரும்பி வந்தனர். பதைபதைத்த குந்தவையிடம், கோட்டைக்குள் வந்த பிறகே காணாமல் போயிருக்கிறார் என்பதால் தான் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டு முதன்மந்திரி கிளம்பினார். மந்தாகினி தேவி பூங்குழலியுடன் வந்து கொண்டிருந்தபொழுது, கூட்டத்தில் ரவிதாஸனைப் பார்த்துவிட்டு, அவனைப் பின்தொடர ஆரம்பித்து விட்டார்.. ரவிதாஸனுடன் சோமன்சாம்பவனும் இணைந்து பழுவூர் அரண்மனையை அடைந்தனர். அங்கிருந்த பணிப்பெண்ணிடம் ஆந்தைக் குரல் கொடுத்து வரவழைத்து இளையராணியின் உத்தரவைச் சொல்லி பொக்கிஷ நிலவறையின் சாவியைப் பெற்றுக் கொண்டு உள்நுழைந்தனர். அவர்களுக்குத் தெரியாமலேயே மந்தாகினி தேவியும் உள்ளே நுழைந்து மறைந்து நின்று கொண்டார். பணிப்பெண் கொடுத்த சோற்று மூட்டையை எடுத்துக்கொண்டு எடுத்த காரியம் நிறைவேற மூன்று நாட்கள் ஆகுமென்பதால் இங்கேயே மறைந்திருக்க வேண்டும் என பேசிக்கொண்டார்கள். தீவர்த்தி கொண்டு வந்து கொடுத்த தாதியை ஒரு நாழிகை கழித்து வந்து கதவு திறக்குமாறு ரவிதாஸன் சொல்லிவிட்டு சோமன் சாம்பவனை அழைத்துக் கொண்டு படிகள் வழியாக கீழிறங்கி நிலவறைக்கு கூட்டிச் சென்றான். போகும் வழியில் ஒரு சுவரின் மீது ஏறினால் அங்கிருந்து அரண்மனையில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்க முடியும் என சோமன் சாம்பவனிடம் விவரித்தான். ரவிதாஸன் சோமன் சாம்பவனிடம் இன்று செவ்வாய். இன்னும் இரு நாட்கள்மறைந்து இருந்துவிட்டு, வெள்ளியன்றுதான், சுந்தரசோழரின் பட்டமகிஷி கோயிலுக்கு செல்லும்போது உன் காரியத்தை முடிக்க வேண்டும். சோழன் குலம் நிர்மூலமாகும் நாள் வெள்ளிக்கிழமைதான்.அதுவரை கவனமாக இரு’ என எச்சரித்து விட்டு ஒரு பாதாள அறையை திறந்து அதனுள் கூட்டிப் போனான். நடுவில் ஒரு இடத்தில் ரவிதாஸன் ஏறிப்பார்த்த இடத்தில் ஊமைராணி ஏறிப்பார்த்தார்.அப்போது பாதாளத் துளையில் இறங்கிய ரவிதாஸனும் சோமன் சாம்பவனும் எதிர்பக்கத்தில் ஒரு மூலையில் வந்து நின்றிருப்பது தெரிந்தது. பின்னர் அவர்கள் இருவரும் திரும்பி வந்த போது மறைந்து கொண்டார். ரவிதாஸன் அங்கிருந்து சென்றதும் சோமன் சாம்பவன் திரும்பி வந்து அமர்ந்து கொண்டான். இருட்டும்போது தனியே இருப்பதால் லேசாய் பயந்திருந்தவன் மந்தாகினி ஓ’ வென எழுப்பிய ஓலத்தைக் கண்டு மேலும் பயந்து எதிர்திசையில் ஓடினான். அந்தத் தருணத்தில் அந்த பாதாள திறப்பில் இறங்கிய மந்தாகினி ஒரு சிற்பக் கூடத்தை அடைந்தார். அங்கே பகீரதன் சிலை, பத்துத்தலை ராவணன்சிலை போன்ற சிலைகளெல்லாம் கலையம்சத்துடன் அமைக்கப் பட்டிருந்தது. ராவணன் கைகளுக்கு இடையே இருந்த வழியின் வழியாகத் தான் வந்திருப்பது விலாசமான தோட்டம் என்று அறிந்து கொண்டாள். தோட்டத்தை ஒட்டி தாழவாரங்கள் தெரிந்தன. தாழ்வாரங்களைக் கடந்து செல்கையில் தீப ஒளி ஓரிடத்தில் தெரிய அங்கிருந்து பார்க்கையில் சுந்தரசோழரின் படுக்கையறை தெரிந்தது. எத்தனையோ காலங்களுக்கு பிறகு அவரைக் கண்டதும் மந்தாகினியின் உள்ளம் விம்மியது. முன்பு ரவிதாஸன் இங்கு நின்றுதான் சோமன் சாம்பவனிடம் திட்டத்தை விளக்கியதை நினைத்து ஒரு நிமிடம் மருண்டார். சின்னப் பழுவேட்டரையர் சற்றுமுன் முதன் மந்திரியைப் பற்றி சொல்லிப் போயிருந்த குற்றச்சாட்டுகளை சிந்தித்தவாறு படுத்திருந்தார் சுந்தர சோழர். கூடவே, வேளக்காரப் படையினருக்கும், பழுவூர் படையினருக்கும் ஏற்படும் சச்சரவுகளைப் பற்றியும் யோசித்து குழப்பமான மனநிலையிலிருந்தார்.அநிருத்தர் கோடியக்கரையிலிருந்து ஒரு பெண்ணை கடத்தி வந்ததாகவும் அதற்கு பழுவூர் அரண்மனைப் பல்லக்கை கேட்டதாகவும், குற்றங்களை அடுக்கியிருந்தார் சின்னப் பழுவேட்டரையர். தான் விசாரிப்பதாகக் கூறவும், சின்னப் பழுவேட்டரையர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். அநிருத்தர் ஆழ்வார்க்கடியானுடனும் பூங்குழலியுடனும் சக்ரவர்த்தியை சந்திக்க வந்திருந்தார்.. மந்தாகினி தேவியை நழுவ விட்டது பற்றி அநிருத்தர் பெரிதும் கலக்கமுற்றிருந்தார். அநிருத்தரைக் கண்டவுடன் சக்ரவர்த்தியின் கோபமும் குமுறலாய் வெடித்தது. அனைவரும் தன்னிடமிருந்து எல்லாவற்றையும் மறைப்பதாக மருகினார். அனைவரையும் சந்தேகப்பட்டார். அநிருத்தர் தடுத்து அத்தனை உண்மைகளையும் கூறுவதாகக் கூறினார். முதலில், அருள்மொழியைக் காப்பாற்றிய பூங்குழலியை அழைத்து உண்மையைச் சொல்லும்படி கூறினார். பூங்குழலி தியாகவிடங்கரின் மகள் என்று தெரிந்துகொண்டு அவள் பயபக்தியுடன் அருள்மொழி வர்மர் பத்திரமாக இருக்கும்செந்தியைக் கூற சந்தரச் சோழர் சிறிது அமைதியுற்றார். ஆனால் தஞ்சையில் வீசிய காற்றும் மழையும் நாகப்பட்டினத்திலும் புயலாக வீசியதாய் கேள்விப்பட்டதில் இளவரசரின் நிலை குறித்து சுந்தரச் சோழர் அச்சமும் வருத்தமும் தெரிவித்தார். அநிருத்தர் ஆழ்வார்க்கடியானையும், பூங்குழலியையும் அனுப்பி இளவரசரை வரவழைக்க அனுமதி வழங்குமாறு வேண்டினார். பிறகு ஆழ்வார்க்கடியானும் பூங்குழலியும் பாசுரங்களையும், தேவாரத்தையும் பாட சுந்தரசோழர் ஒருவாறு அமைதியுற்றார். அவரை உறங்க வைத்துவிட்டு அனைவரும் அகன்றனர். சுந்தரசோழருக்கு பூங்குழலியின் முகச் சாயல் எதைஎதையோ நினைவுபடுத்த அவருக்கு பழைய நினைவுகள் உறக்கத்தில் கனவுகளாய் வரத் தொடங்கின. உறக்கமும் விழிப்புமான நிலையில் நிஜமாகவே தன் முன் யாரோ நிற்பதாக உணர்ந்தார். கூர்ந்து பார்க்கையில் அது மந்தாகினி தேவியின் ஆவிதான், வழக்கம் போல வந்து விட்டாள் என்றெண்ணி அலறிக் கொண்டே, பக்கத்திலிருந்த விளக்கை அவர் மேல் எறிந்தார். நிஜத்தில் அங்கே நின்றிருந்த மந்தாகினி மேல் அது

பொன்னியின் செல்வன் – 19

பொன்னியின் செல்வன் – 19

நான்காம் பாகம் – மணிமகுடம் நந்தினியின் முடங்கலைக் காட்டி, கந்தன்மாறன் ஆதித்த கரிகாலனை பார்த்திபேந்திரன் தூண்டுதலோடு கடம்பூருக்கு விருந்தாளியாக அழைத்து வந்துகொண்டிருந்தான்.நந்தினியை ஒரு தடவை சந்தித்துவிடுவது அவளைப் பற்றிய பல புதிர்களுக்குப் பதில்கள் தேட உதவலாம் என்பதால் ஆதித்த கரிகாலனும் சம்மதித்து இந்தப் பயணத்திற்கு உடன்பட்டான். கெடில நதியின் துறையில் கரிகாலனின் பாட்டனாரான மிலாடுடையார் அவனைத் தனியே அழைத்து இந்தப் பயணத்தை நிறுத்த இறுதியாக ஒரு முயற்சி செய்தார். கரிகாலன் உடன்படாததால், ‘வள்ளுவர் கூற்றின்படி தொழுத கையிலும் அழுத கண்ணீரிலும் ஆயுதம் மறைந்திருக்கும். நண்பர்கள் போலச் சூழ்ந்திருக்கும் எதிரிகளிடம் மிகுந்த எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்’ என்று அறிவுரைகள் கூறிவிட்டு, தான் திருக்கோவலூர் சென்று வெண்ணாற்றங்கரைக்குப் படையுடன் திரும்பிவருவதாகச் சொல்லி வருத்தமுடன் விடைபெற்றார். வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் அந்த மழைக்கால கொள்ளிட நீர்ப்பெருக்கில் தங்கள் உடைமைகள் அனைத்தையும் தவறவிட்டுவிட்டார்கள். மேற்கொண்டு செல்லக் குதிரையில்லாமல் கடம்பூருக்கு அருகில் நடந்தே வந்து சேர்ந்தனர். ஆதித்த கரிகாலர் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை எனத் தெரிந்துகொண்டார்கள். கோட்டையின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஐயனார் கோவில் ஒன்றைக் கண்டதும் இரவை அங்கேயே தங்கிக் கழித்துவிடலாம் என்று கோவிலை நெருங்கினார்கள். அப்போது அங்கிருந்த மண் குதிரைகளில் ஒன்று நகர்ந்தது. அதன் பிலத்தில் இருந்து, கடம்பூர் மாளிகையின் சேவகனும் ஆபத்துதவிக் கூட்டத்தைச் சேர்ந்தவனுமான இடும்பன் காரி எழுந்து வருவதைப் பார்த்து இருவரும் ஒருபுறம் மறைந்துகொண்டனர்.அவன் கோவிலுக்குள் விளக்கேற்றி வைத்ததைப் பார்த்ததும் இங்கே யாரேனும் வருவார்கள் என ஆழ்வார்க்கடியான் கூறினான். வந்தியத்தேவன் வழக்கம்போல ஆர்வம் உந்த, அந்தப் பிலத் துவாரத்தில் இறங்கிப் பார்ப்பதாகக் கூறி அந்தத் துவாரத்துக்குள் சட்டெனப் புகுந்துவிட்டான். புகுந்த சற்று நேரத்தில் அந்தச் சுரங்க வழியை வெளியிலிருந்து இடும்பன் அடைத்துவிடவே சுரங்க வழி இருள் வழியாக மாறிவிட்டது. வெகுதூரம் சென்றபிறகு அந்த வழி சம்புவரையரின் அரண்மனையில் உள்ள ஒரு மண்டபத்தில் முடிந்தது. சுற்றிலும் காட்டு மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உருவங்கள் அந்த மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு வல்லவரையன் முதலில் மிரண்டாலும் அது வேட்டை மிருகங்களின் பாடம் செய்யப்பட்ட உருவங்களையும் ஆயுதங்களையும் சேர்த்து வைக்கும் மண்டபம் என்பதை அறிந்துகொண்டான். அங்கிருந்த யானை உருவம் ஒன்றின் தந்தத்தைத் தன்போக்கில் திருகியதும் சுவரில் ஒரு துவாரம் தெரிந்தது. அதில் எட்டிப்பார்க்க, ஒரு அழகிய பெண்ணின் முகத்தோடு முத்தமிடுவது போன்ற தோற்றத்தில் தன் முகமும் தெரிய, வந்தியத்தேவன் அதிர்ந்து போய்ச் சிலையாய் நின்றான். அந்தப் பெண் சிறிதாய் ‘கூ’வெனக் கூவினாள். இவன் பயந்து யானை மீதிருந்து கையை எடுக்க, துவாரம் பழையபடி மூடிக்கொண்டது. கந்தன்மாறனின் தங்கையான மணிமேகலைதான் அந்தப் பெண் என்று வந்தியத் தேவனுக்குத் தெரிந்துவிட்டது. மணிமேகலை கள்ளம் கபடு தெரியாமல் வளர்ந்த பெண். வந்தியத்தேவனைப் பற்றி அவளிடம் பெரிதாகப் பேசி அவன் மீது ஆசையை வளர்த்துவிட்டவன் கந்தமாறனே. பிறகு அவனே அரசியல் அழுத்தங்களில் சிக்கி வந்தியத்தேவன் நாடோடி என்றும் தன்னை முதுகில் குத்திய துரோகி என்றும் கூறி அவனை மறந்துவிடுமாறு கூறி வந்தான். பின்பு மதுராந்தகருக்கு அவளை மணம் செய்து வைப்பதாகப் பேசினார்கள். இப்போதோ விருந்தாளியாக வரப்போகும் இளவரசர் ஆதித்த கரிகாலனுக்கு மணிமேகலையை மணமுடிக்கப் போவதாக கூறத் தொடங்கினார்கள் இந்தப் பேச்சுகளெல்லாம் முன்பொருமுறை கந்தன் மாறன் அந்தப்புரத்திற்கு அழைத்துவந்து அறிமுகப்படுத்திய வாலிபனின் உருவத்தைத் தன் நெஞ்சில் பதிந்து வைத்துக்கொண்ட மணிமேகலைக்குப் பிடிக்கவில்லை. அவள் இந்தத் திட்டங்களை மறுத்து வந்தாள். பழுவேட்டரையரும் இளையராணியும் வரப்போவதாகவும் சிற்றரசர்கள் அனைவரும் சேர்ந்து, வரவிருக்கும் ஆதித்த கரிகாலனிடம் சமரசப் பேச்சு நடத்தப் போவதாகவும் அரண்மனையில் பேசிக்கொண்டார்கள். நந்தினி தங்குவதற்காக வேட்டை மண்டபத்தை அடுத்த அறையைத் தயார் செய்துகொண்டிருந்தபோதுதான் யானைமுகக் கதவைத் திறந்துகொண்டு அந்த அறைக்குள் தலைகாட்டிய வந்தியத் தேவனின் முகத்தை ஆடியில் பிம்பமாகத் தெரிந்த தன் முகத்தை முத்தமிடுவது போலான நெருக்கத்தில் பார்த்துக் கூவிவிட்டாள் மணிமேகலை. உடனே அந்த முகமும் மறைந்துபோய்விட்டது. தொடர்ந்து வேட்டை மண்டபத்தில் சந்தடிகள் கேட்டன. தன் தோழி சந்திரமதியை அழைத்து விளக்கு எடுத்துவருமாறு மணிமேகலை பணித்துவிட்டு உள்ளே நுழைய முயன்றாள். வந்தியத்தேவன் வேட்டை மண்டபத்தில் இருந்து வெளிவர யோசித்துக்கொண்டிருக்கும் போது, இடும்பன் காரி ஒரு முதலையை வைத்து மூடியிருந்த ரகசிய வழியைத் திறந்துகொண்டு மேலே வருவதைப் பார்த்தான். உடனே வந்தியத்தேவன் ஒரு குரங்கின் பின் ஒளிந்துகொண்டான். மணிமேகலை உள்ளே வருவதைப் பார்த்தவுடன் இடும்பன் காரி விலங்குகளைத் துடைப்பதுபோல நடித்தான். மணிமேகலை விசாரித்ததற்கு, தான் இங்கு வெகுநேரமாக இருப்பதாக இடும்பன்காரி கூற மணிமேகலை கதவைத் திறந்தபடி வெளியே சென்றுவிட்டாள். அப்போது இடும்பன்காரியைத் தொடர்ந்து பின்னே வருபவர்களின் பேச்சுச் சத்தமும் கேட்க, வந்தியத்தேவன் அந்தக் குரங்கு பொம்மையை இடும்பன்காரியின் மேல் தள்ளி அந்தத் துவாரத்தில் விழுமாறு செய்துவிட்டு யானையின் தந்தத்தைத் திருகி அந்தச் சிறிய துவாரத்தின் வழியே வெளியேற முயன்றான். இடுப்பு வரை வந்தாலும் பாதிக்குமேல் வெளியே போக முடியாமல் தவித்தவனுக்கு மணிமேகலை கை கொடுத்து அறைக்குள் இறக்கிவிட்டாள். வந்தியத்தேவனிடம், ‘தன்னை முதுகில் குத்திய சிநேகத் துரோகி’ என்ற கந்தமாறனின் குற்றச்சாட்டை மணிமேகலை விசாரித்தாள். வந்தியத்தேவன் அதை மறுத்து, கந்தமாறனின் முன்னிலையில் இதைக் கேட்குமாறு கூறினான். கந்தமாறன் ஆதித்த கரிகாலனை அழைத்துவரப் போயிருப்பதாகவும் அவர்கள் வரும்வரை ஆயுத சாலையில் மறைந்திருக்குமாறும் மணிமேகலை கூறினாள். இதற்குள் வேட்டை மண்டபத்தில் நடமாட்டம் அதிகமாகக் கேட்க, அங்கிருந்த வாத்தியக் கருவிகள் வைத்திருக்கும் யாழ் களஞ்சியத்தில் மறைந்திருக்குமாறு சொல்லிவிட்டு மணிமேகலை வேட்டை மண்டபத்துக்குள் சென்றாள். அதற்குள் மணிமேகலையின் தோழி அறைக்குள் வந்து விடவே, வந்தியத்தேவன் யாழ் களஞ்சியப் படிகளில் ஏறத்தொடங்கினான். முடிவில் மேன்மாடத்திற்கு வந்துவிட்டான். முந்தைய முறை வந்தியத்தேவன் வந்தபோது, தான் படுத்திருந்த மேல் மச்சு அதுதான் என்று அறிந்துகொண்டு நிம்மதி அடைந்தான். அங்கிருந்த நிலா மாடத்திலிருந்து பார்க்கையில் கடம்பூர் அரண்மனை வாசலில் பெரிய பழுவேட்டரையரை ராஜோபசாரத்துடன் வரவேற்பது தெரிந்தது. மதிலைத் தாண்டிவிடுவோம் என்றெண்ணி ஒரு மூங்கில் கழியைப் பிடித்து ஏறி கோட்டை மதிலை விட்டு இறங்கியபோது தேவராளன் தன் நாயுடன் அவனைத் தாக்கத் தயாராய் இருக்க, வந்தியத்தேவன் அவன் மீதே குதிக்க, ஆழ்வார்க்கடியானும் உதவிக்கு வர, இருவரும் சேர்ந்து நாயையும் அவனையும் காட்டுக் கொடிகளால் கட்டிப்போட்டனர். மதிலின் ஓரமாகவே இருவரும் வெளியேறினார்கள். அச்சமயம் அங்கு வந்த கடம்பூர் வீரர்களின் குதிரைகளைப் பறித்துக்கொண்டு விரைந்தனர். ஆதித்த கரிகாலர் கோட்டையை நெருங்குவதற்கு முன்னமே அந்த வழியில் சென்று அவரைச் சந்தித்தார்கள். ஆதித்த கரிகாலன் வந்தியத்தேவனைக் கண்டதும் மகிழ்ந்ததைக் கண்டு பார்த்திபேந்திரனும் கந்தமாறனும் அசூயை அடைந்தார்கள். கந்தமாறன் தன் முதுகில் குத்தியவன் எனக் குற்றம் சாட்ட, வந்தியத்தேவன் தானே அவனைக் காப்பாற்றியதாகவும் அவன் முதலில் எதற்காக பொக்கிஷ அறைச் சுரங்கத்தின் வழியே வந்தான் எனவும் யாரைக்கூட்டி வந்தான் என்பதையும் சொல்லுமாறு கேட்க கந்தமாறன் மெளனம் சாதித்தான். உடனே பார்த்திபேந்திரன், வந்தியத்தேவனுக்காகத்தான் இளவரசர் அருள்மொழி கடலில் குதித்ததாகவும் இப்பொழுது இவன் மட்டும் தப்பி வந்தது எப்படி என்று கேட்குமாறு குற்றஞ்சாட்டினான். வந்தியத்தேவன் அவனை முந்திக்கொண்டு, பார்த்திபேந்திரன் எப்படித் தனியாகக் கடலில் குதிக்க இளவரசரை அனுமதிக்கலாம் என்று திருப்பிக் கேட்க, ஆதித்த கரிகாலர் பெரிதாகச் சிரித்தார். ஒரு தருணத்தில் தன் கையிலிருந்த வேலால் கந்தமாறன் வந்தியத்தேவனைத் தாக்க முயல அந்த வேலைக் கரிகாலர் பிடுங்கித் தன் இரும்பையொத்த கரங்களால் முறித்துப் போட்டார். வியப்பாகப் பார்த்த அனைவரிடமும், தன் நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்ளக் காரணம் இளையராணியின் மோகன சக்திதான் எனவும் தனக்கு அதைப் பற்றித் தெரியும் என்பதால் இத்துடன் இந்தப் பேச்சை நிறுத்துமாறும் கூறினார். ஆழ்வார்க்கடியானை முன்பே பார்த்திருப்பதாகக் கூறி விசாரிக்க, வீரபாண்டியன் இருக்கும் இடத்தைத் தேடி அலைந்துகொண்டிருந்தபோது மறைவிடத்திலிருந்து ஆதித்த கரிகாலருக்கு அந்த இடத்தைச் சொன்னது தானே எனக் கூறினான் திருமலை.ஆவேசமடைந்த ஆதித்த கரிகாலர் அவனை வெட்ட வர, வந்தியத் தேவன் குறுக்கிட்டு, அவன் முதன்மந்திரியின் தூதன் எனவும் அவருக்கு சேதி கொண்டுவந்திருப்பதாகவும் கூறினான். அமைதியடைந்த கரிகாலன் அவர்களைக் குதிரையில் தன்னுடன் இருபக்கமும் வருமாறு கூறி அவர்களுடன், நடந்த செய்திகளை எல்லாம் கேட்டவாறே பயணத்தைத் தொடர்ந்தார். பழுவூர் இளையராணியைச் சந்தித்த மணிமேகலைக்கு அவளை மிகவும் பிடித்துவிட்டது. நந்தினியும் பாசத்தை அவள்மீது சொரிந்து, தன்னை அக்காவென அழைக்கும்படிக் கூறினாள். அவளை முழுமையாக நம்பிய மணிமேகலை அவளிடம் மனதைத் திறந்தாள். வந்தியத்தேவனே அவள் மனதில் குடிகொண்டுள்ளவன் என்பதைக் கூறினாள். மேலும் வந்தியத்தேவனை இந்த அறையில் பார்த்ததையும் இடும்பன் காரியை விசாரிக்க உள்ளே செல்கையில் அவன் காணாமல் போய்விட்டதையும் சொல்லி, தனது காதல் வெற்றி பெற அவளுக்கு உதவியாய் இருக்கவேண்டுமென நந்தினியைக் கேட்டுக்கொண்டாள். ஆதித்த கரிகாலர் தன் பரிவாரங்களுடன் வர சம்புவரையரும் பழுவேட்டரையரும் மாளிகை வாசலில் அவர்களை எதிர்கொண்டழைத்து வரவேற்றார்கள். சுற்றியுள்ள ஊர்களில் இருந்தெல்லாம் மக்களின் கூட்டம் குவிந்திருந்தது. ஆதித்த கரிகாலன் அவர்களிடம் இளவரசனாகப் பேசினான். ஆதித்த கரிகாலன் மாளிகைக்குள் வந்ததிலிருந்தே ஒருவாறு நிலையழிந்ததாகக் காணப்பட்டான். பழுவேட்டரையரையும் சம்புவரையரையும் சொற்களால் குத்திக்காட்டிப் பேசினான். அனைவரும் அவனை சமாதானப் படுத்தும் வழிதெரியாது நிற்கையில், பார்த்திபேந்திரன் தான் பார்த்துக் கொள்வதாகக் கூற, அவனையும் சதியில் கூட்டு சேர்ந்து விட்டாயா எனக்கேட்டு அதிர வைத்தான் கரிகாலன். நந்தினியைக் கண்டு வணங்கி பழுவூர் பெரிய பாட்டிக்கு வணக்கமெனச் சொல்ல, அவளின் கூரிய பார்வையைத் தாங்காமல் தாண்டிச் சென்றான். சம்புவரையரிடம் தன் தாத்தா இரவில் தூங்கினால் பகைவர்கள் சூழ்வர் என்று சொல்லி எச்சரித்து அனுப்பியிருப்பதைச் சொல்லி சிரித்தான். பழுவேட்டரையரிடம், அவர் மூடுபல்லக்கில் மதுராந்தகனைக் கூட்டி வந்ததைச் சொல்லி எள்ளி நகையாடியதைப் பார்த்தவர்கள் அனைவரும் அவனது நடவடிக்கையைக் கண்டு நடுங்கினர். அவனை சமாளிக்க முடியாமல் தடுமாறினர். சம்புவரையரையும், பழுவேட்டரையரையும் தன் சொற்களால் வதைத்தான். பின் சிற்றரசர்கள் கூட்டம் நடக்கப் போவதை அறிந்துகொண்டு எல்லோரிடமும் ஆலோசனை செய்து விடலாம் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.

பொன்னியின் செல்வன் – 18

பொன்னியின் செல்வன் – 18

குழந்தைச் சக்கரவர்த்தியை சிம்மாசனம் போல ஒன்றில் அமரச் செய்து நந்தினி நடத்திய நாடகம் முடிந்தது.‘ஆதித்த கரிகாலனை பழி முடிக்க வேண்டுமெனில் அவனது கடம்பூர் வருகையைத் தடுக்கச் செல்லும் வந்தியத்தேவனை தடுக்க வேண்டும்..அவனை நாங்கள் பிடித்து வைத்திருக்கிறோம்’ என்று ரவிதாசன் நந்தினியிடம் சொல்லி வந்தியத் தேவனை அவள் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.நந்தினியும் அவன் தங்களோடு சேர்ந்து விடும்படி மீண்டும் கூறினாள்..வந்தியத் தேவன் மறுக்கவே ரவிதாசன் அவனை கொன்று விடலாம் என்றான்..நந்தினியோ அவனைக் கட்டிப் போட்டுவிட்டு போய் விடலாம் என்று கண்டிப்பாக கூறி விட்டாள்..அதன் படி வந்தியத் தேவனை கட்டிப் போட்டுவிட்டு நந்தினியும் அந்த கூட்டத்தாரும் போய் விட்டார்கள். அப்போது அங்கு வந்த ஆழ்வார்க்கடியான் வந்தியத் தேவனை கட்டவிழ்த்த பின்னர் அவனும் வந்தியத் தேவனும் காஞ்சிப் பயணத்தைத் தொடங்கினர்.ஆழ்வார்க்கடியான், காளாமுகர்கள் சங்கமக் கூட்டத்தில் என்ன நடக்கிறது என்று பார்த்து வருமாறு தன்னை அநிருத்தர் அனுப்பியதாகக் கூறினான்.நாட்டில் சில முக்கிய குடும்பங்கள் காளாமுகத்தை சேர்ந்திருந்தபடியால் அவர்களின் ஆதரவு மதுராந்தகனுக்கு கிடைத்தால் நல்லது என்பதற்காக, பெரிய பழுவேட்டரையர் மதுராந்தகரை அங்கு வரச் சொல்லியிருந்தார்.அவரை அங்கு போக விடாமல் தடுப்பதற்காக ஒரு வீரனைக் கொண்டு குதிரையை மிரளச் செய்து மதுராந்தகரை கீழே விழ வைத்தது அநிருத்தரின் வேலையாய்த் தான் இருக்கும் என்று ஆழ்வார்க்கடியான் கூறினான்.வானதியை காப்பாற்றவும் அநிருத்தர் தக்க ஏற்பாடு செய்திருப்பார் எனவும் ஆழ்வார்க்கடியான் வந்தியத் தேவனை சமாதானப் படுத்தி, நாம் காஞ்சியை நோக்கி செல்வோமென அறிவுரை கூறினான். ஆழ்வார்க்கடியான் சொன்னது போல்தான் நடந்தது.வானதியை கட த்தியவர்கள் அநிருத்தரிடம் கொண்டு வந்துதான் சேர்த்தார்கள்.அநிருத்தர், பொன்னியின் செல்வரைப் பற்றிய உண்மையை கூறச் சொல்லி வானதியை மிரட்டத் தொடங்கினார்.உறுதியுடனும், அச்சம் இல்லாமலும் கேள்விகளை எதிர்கொண்ட வானதி என்ன கேட்டாலும் தான் உண்மையை சொல்லப் போவதில்லை என்று மறுத்தாள். அப்போது வந்த யானையைக் காட்டி உண்மையைச் சொல்லாவிடில் இந்த யானை உன்னை தூக்கி எறிந்து விடும் என்று முதன்மந்திரி மிரட்டிய பின்னரும் வானதி சொல்லவில்லை.வானதியை தன் தும்பிக்கையால் தூக்கி தனது மேலுள்ள அம்பாரியில் விட்டது அந்த யானை.அம்பாரியில் தயாராக இருந்த குந்தவை அவளைத் தாங்கிக் கொண்டு, நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள ஆனைமங்கலத்திற்குத்தான் நாமிருவரும் செல்லப் போவதாகக் கூற வானதி சமாதானமுற்றாள். வானதியை அனுப்பிவிட்டு அநிருத்தர் திரும்பும் வழியில் மதுராந்தகர் அடிபட்டு கிடப்பதைப் பார்த்து பக்கத்திலிருக்கும் கிராமத்துக்கு எடுத்து சென்று மருத்துவ உதவி செய்தார்.மதுராந்தகரிடம் இதுவரை நடந்ததெல்லாம் தமக்குத் தெரியும் என்று முதன்மந்திரி கூறினார்..கடம்பூருக்கு இளைய ராணியின் மூடுபல்லக்கில் மதுராந்தகன் சென்றதையும் அதன் பேரிலான அதிருப்தியையும் தெரிவித்துக் கொண்ட அவர்,ராஜ்யத்தின் மீதான உரிமை மதுராந்தகருக்கு இருக்கிறது எனவும் அதை நேரில் சக்ரவர்த்தியிடமே தெரிவித்து உரிமை கோரலாம்.அதற்கு சதிக் கூட்டம் எல்லாம் தேவையே இல்லை என்றார். மதுராந்தகரின் ஆற்றாமை சினமாய் தலைக்கேறியது. ‘என்னை பற்றிய ரகசியங்கள் அறிந்தவர் நீர்தான் என எண்ண வேண்டாம். எனக்கும் தெரியும்.என் தாயாரின் வயிற்றில் இருக்கும்போதே எனக்கு எதிராக சதி செய்தவர் நீங்கள்.நான் பிறந்த பிறகும் என்னை கொன்றுவிடுவதற்கு ஏற்பாடு செய்தீர்கள்.குழந்தை பிறந்ததும் அது பெண் குழந்தையென நினைத்து கோவில் பட்டரிடம் கொடுத்து வளர்க்க ஏற்பாடு செய்தீர்கள்.ஆனால் அரைநாழிகை கழித்து நான் பிறந்தேன். என்னைக் கொல்ல நீங்கள் செய்த ஏற்பாடுகள் தவறிப் போனது.என் ஜாதக பலத்தால் நான் இதுவரை பிழைத்திருக்கிறேன். இதையெல்லாம் பொய் என்று உங்களால் முடிந்தால் மறுத்து பாருங்கள் ‘ என ஆவேசமாக முழங்கினான். அநிருத்தர் நிஜமாகவே ஸ்தம்பித்து போனது போலானார்.இளவரசருக்கு இத்தனை விவரங்கள் தெரிந்திருக்கும் போது தான் சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை என்று கூறி அத்துடன் முடித்துக் கொண்டார். நாகப்பட்டினத்தில் சூடாமணி விஹாரத்தில் சுரத்துடன் அடைக்கலமடைந்திருந்த பொன்னியின் செல்வனுக்கு ஆச்சாரிய பிஷுவின் பக்கத்து அறையிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.சுர வேகம் காரணமாக பெரும்பாலும் இளவரசர் பிரக்ஞையற்றே இருந்தார்.கனவிலும் நனவிலும் திடமாக இருக்க இயலாமல் அலைக்கழிந்தார். மூன்று நாட்களுக்குப் பின் நினைவுக்கு வந்து ஆச்சார்ய பிட்ஷூவிடம் தன்னைக் கூட்டி வந்தவர்கள் யார்? எப்படி வந்தேன் என்றெல்லாம் கேட்டு அறிந்தார்.அச்சமயத்தில் பூங்குழலியும் சேந்தன் அமுதனும் இளவரசரைக் கூட்டிச் செல்ல ஓடத்தில் காத்திருப்பதாக செய்தி கிடைத்ததும்ஆச்சாரிய பிஷுவிடம் தன் நன்றியையும், அன்பையும் தெரிவித்து பின்னொரு நாளில் திரும்ப சந்திப்பதாகக் கூறி விடைப்பெற்றார். ஓடத்தில் காத்திருந்தவர்கள் மூலம் குந்தவையும், வானதியும் நந்தி மண்டபத்தில் காத்திருப்பதாக அறிந்து கொண்டார்.நந்தி மண்டபத்தில் காத்திருந்த வானதி பூங்குழலியும் ஓடத்தில் வருவதைக்கண்டு ஒதுங்க முயல குந்தவை அவளை அங்கேயே இருக்குமாறு பணித்தாள். நலம்பெற்று வந்த இளவரசரை உச்சி முகர்ந்த குந்தவையின் பாதத்தை பணிந்து எழுந்தான் பொன்னியின் செல்வன்.இருவரும் பாசத்தில் கண்ணீர் உகுத்தனர். இலங்கையில் நடந்த சம்பவங்களையும் ஊமைராணியைப் பற்றியும் தெரிந்து கொண்ட குந்தவை,பழுவூர் இளையராணி நந்தினி அவர்களின் தமக்கையாகவே இருக்க முடியும் என்பதையும்,அது பற்றி உண்மை தெரிந்தவர்கள் செம்பியன் மாதேவியும், முதன்மந்திரி அநிருத்தரும்தான்.ஆனால் இருவரும் வாயைத் திறக்கவே மாட்டார்கள் என்றும்,நந்தினியையும் ஊமைராணியும் பார்த்த ஒருவன் வந்தியத்தேவன் மட்டுமே என்றும் கூறினாள். வந்தியத்தேவனை வெகுவாகப் பாராட்டிய இளவரசரிடம் அவனை ஆதித்த கரிகாலனிடம் கடம்பூருக்கு வரவேண்டாமென தடுக்கத் தூது அனுப்பியிருப்பதாக குந்தவை கூறினாள்.சுந்தர சோழரை அரண்மனையில் நந்தினி ஆவி போல வந்து பயமுறுத்துவதை வானதி நேரில் கண்டதை இளவரசரிடம் சொல்லச் சொல்லி,நந்தினி தங்கள் சகோதரி என்னும் உண்மையை அவளுக்குத் தெரிவித்து சோழ குலத்தை பழி வாங்க எண்ணும் அவள் முயற்சியைத் தடுக்கும் வரையிலும்நாட்டில் நடக்கும் அரசியல் தீவிரங்கள் குறையும் வரையிலும் இன்னும் கொஞ்ச நாள் இளவரசர் சூடாமணி விஹாரத்தில் இருப்பதே நல்லது என எடுத்துரைத்தாள். ஒரு நல்ல தருணத்தில் தான் பரிந்துரைக்கும் பெண்ணையே இளவரசர் மணக்க வேண்டுமென வானதியை மனதில் கொண்டு, தமக்கையாக ஆணையிட்டாள்.இதற்குள் வானதியைப் பார்த்ததால் எரிச்சலுற்ற பூங்குழலி, தன் பெரிய அத்தையான ஊமை ராணியின் வாழ்வு அரச குலத்தாராலேயே நலிவடைந்தது எனவும்,அவர்களை நம்பவே கூடாது என வெறுப்பை சேந்தன் அமுதனிடம் உமிழ்ந்தாள். சேந்தன் அமுதன் அவளை மணக்க விரும்புவதை வந்தியத்தேவன் சொன்னதாக பூங்குழலி கூறியதும்தான் எந்த சந்தர்ப்பதிலும் அவளுடன் நிற்பேன் என உணர்ச்சி மிகுந்து கூறினான். ஆத்திரம் அடங்காத பூங்குழலி சிறுகல்லை எடுத்து அங்கு உலாவிக் கொண்டிருந்த காளை மாடு ஒன்றின் மீது எறியஅது மிரண்டு வானதியை துரத்த, அவள் கால்வாயில் விழுகையில் இளவரசர் அவளைக் கையில் ஏந்திக் காப்பாற்றினார். குந்தவையிடம், ‘ வானதி இப்போது மயங்கியிருப்பாள் அல்லவா ‘ என இளவரசர் கூறி முடிக்கவும் வானதி சிரித்தபடி அவன் கைகளிலிருந்து எழுந்து அவர்களைத் தாண்டி ஓடினாள். மூன்றாம் பாகம் முற்றிற்று..அடுத்த பகுதியில் நான்காம் பாகம் துவங்கும்..

பொன்னியின் செல்வன் 17

பொன்னியின் செல்வன் 17

வானதியை அனுப்பிவிட்டு பழையாறை சிறைச்சாலைக்குச் சென்று வந்தியத்தேவனைச் சந்தித்தாள் குந்தவை. சற்றும் தயங்காமல் தன் மனதை அவனிடம் திறந்து காட்டினாள். அந்தஸ்து பேதத்தைச் சொல்லித் தயங்கிய வந்தியத்தேவனிடம் தன் கரங்களை நீட்டினாள். உணர்ச்சி மேலிட  அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் வந்தியத்தேவன். எதிர்ப்பேதும் இல்லாமல் அவனது கரங்களோடு தன் கரங்களைப்  பிணைத்துக்கொண்டவள்,  “உமது கரத்தைப் பற்றிய இந்த என் கரம் இன்னொரு ஆடவனுடைய கையை ஒருநாளும் பற்றாது” என உறுதிமொழி கூறியதில் அவன் தன்னைமறந்து நின்றான். அவன்மீதான முதன்மந்திரியின் குற்றச்சாட்டைக் கூறியவள், ஆதித்த கரிகாலனைக் காத்து நிற்க வேண்டுமென வந்தியத்தேவனிடம் கேட்டுக்கொண்டாள். பழுவூர் இளையராணியைப்பற்றி ஆதித்த கரிகாலனிடம் எடுத்துச் சொல்லி, உடன்நின்று நிழல்போலக் காக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்ட குந்தவையிடம் கரிகாலர் அவ்வளவு சீக்கிரம் அதை நம்பக்கூடியவர் அல்ல என்றும் தன்னால் முடிந்ததைச் செய்கிறேன் என்றும் ஆறுதல் கூறினான். அங்கிருந்து கிளம்பிய வந்தியத்தேவன் வழியில் ஆழ்வார்க்கடியானைச் சந்தித்தான். கொள்ளிடத்தில் அவனுடன் வந்து சேர்ந்துகொள்வதாக அவன் கூறிவிட்டுப் போய்விட்டான். போனமுறை இதே வழியில் பயணித்ததற்கும் இப்போது பயணிப்பதற்கும் உண்டான வேறுபாட்டை அசைபோட்டபடிச் செல்ல ஆரம்பித்தான். வழியில் வானதி பல்லக்கில் போவதைப் பார்த்தவன் அவளுடன் நின்று பேச விரும்பாமல் குடந்தை ஜோதிடரின் வீட்டுக்குச் சென்றான். முதன்முதலாக இளைய பிராட்டியைப் பார்த்ததைக் காதலுடன் நினைவுகூர்ந்தவன், சோதிடரிடம் தூமகேதுவைப்பற்றியும் இளவரசரைப் பற்றியும் ஆருடம் கேட்டுக்கொண்டிருக்கையில் வானதி அங்கு வந்துசேர்ந்தாள். தன்னைப் பார்த்துவிட்டு நின்று பேசாமல் வந்ததைச் சொல்லிக்காட்டியவள், தான் புத்த பிட்சுணி ஆகப்போவதாகவும் தன்னோடு சூடாமணி விஹாரம்வரை துணைக்கு வந்து விட்டுவிடும்படியும் வந்தியத்தேவனிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். வந்தியத்தேவன்,  இளவரசரின் பேரில் பூங்குழலிக்கு இருந்த அப்பழுக்கற்ற காதலையும் இளவரசருக்கும் அவள்மேல் உள்ள பிரியத்தையும் தெரிந்துவைத்திருந்ததால் ஒருவகையில் வானதியின்மேல் இருந்த லேசான வெறுப்பு அவள் பேசப்பேசக் குறைந்து இல்லாமல் போய்விட்டது. அவள்பால் உள்ளம் கனிந்திருந்தது. முதன்மந்திரியின் ஓலையை எடுத்துக்கொண்டு காஞ்சி செல்வதால் தன்னால் வர இயலாது என்பதைச் சொல்லித் தன்மையாகவே மறுத்தான். வானதி சற்று வருந்தியபோதும் துணிச்சலுடன் தனியாகவே செல்வது என முடிவெடுத்து உடனே கிளம்பிவிட்டாள். அத்தனைக்காலம் பயந்தாங்கொள்ளியாகவே இருந்த பெண் இவ்வாறு மாறியிருந்ததைக்கண்டு வந்தியத்தேவனும் சோதிடரும் வியந்துபோனார்கள். சோதிடர் கொள்ளிடக் கரையில் காளாமுகர்களின் சங்கமம் நடந்துகொண்டிருக்கும் தகவலை அவனிடம் கூறினார். பின் அங்கிருந்து கிளம்பிய வந்தியத்தேவன், வழியில் ஏதோ அபயக்குரலைக் கேட்டுத் திரும்பினான். வானதியின் தோழியைக் கட்டிப்போட்டுவிட்டு வானதியின் பல்லக்கைச் சிலபேர் கடத்திச் செல்வதைக்கண்டு தொடர்ந்தான். இருட்டில் அவர்கள் செல்லும் பாதை தெரியாமல் மறைந்துபோக திகைத்து நின்றுவிட்டான். அப்போது மின்னல் ஒளியில் களத்து மேட்டில் குதிரை ஒன்று ஏறுவது தெரிந்தது. அதன்மேல் இருந்தவர் மதுராந்தகர் என்றும் தெரிந்தது. அங்கிருந்த வீரன் தீவட்டியை உயர்த்தவே, மதுராந்தகரின் குதிரை   மிரண்டு தறிகெட்டு ஓடியதையும் அடுத்த மின்னல் வெளிச்சத்தில் கண்டான். காப்பாற்ற நினைத்துத் தொடர்ந்து போக இருளில் பாதை தட்டுப்படவில்லை. மழை வேறு வலுக்க ஆரம்பிக்க, அங்கிருந்த ஒரு மண்டபத்தில் ஒதுங்கினான். அப்போது நான்கு வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று தனியே நிற்பதைக்கண்டு பேச்சுக் கொடுத்தான். அந்த குழந்தை குதிரை வேண்டுமென அம்மாவிடம் கேட்டதாகவும் அம்மா தர மறுத்ததால் ஓடி வந்துவிட்டதாகவும் கூறியது. மேலும் மண்டபத்திற்கு வெளியில் வந்தால் புலி கடித்து விடுமென அம்மா கூறியதாகவும் காஞ்சியில் தன் முக்கிய எதிரி இருப்பதாகவும் தான் புலியை விழுங்கும் மகர மீன் எனவும் கூற வந்தியத்தேவன் குழப்பமடைந்தான். அப்போது ஒரு சிறு கூட்டம், ‘சக்ரவர்த்தி’ என அழைத்தபடி அந்தக் குழந்தையைத் தேடி வந்தது. அவர்களில் தேவராளன், ரவிதாசன், இடும்பன் காரி என அனைவரும் இருந்தனர். அவர்கள் வந்தியத்தேவனை அங்கிருந்து திருப்புறம்பியம் பள்ளிப்படைக்கு நந்தினி வர இருப்பதாகச் சொல்லிக் கூட்டிச் சென்றனர். அங்கு சென்று சிலமணி நேரம் காத்திருந்தபொழுது நந்தினி தன் வழக்கமான ஆடை அணிகலன்களைத் துறந்து தலைவிரிகோலமாய் துர்க்காதேவிபோல் பல்லக்கில் வந்து இறங்கினாள். அங்கு சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை அவளை ‘அம்மா’வெனக் கட்டிக்கொண்டது. எல்லோரையும் முன்வரச் சொன்ன நந்தினி, அந்த வாளை எடுத்துக் குழந்தையின் கையில் கொடுத்தாள். பின் அனைவரிடமும் ‘நான் நாடகம் ஆடுகிறேன் என்றும் அரண்மனை சுகங்களில் செய்துகொடுத்த சபதத்தை மறந்துவிட்டேன் என்றும் சொன்னீர்கள். சபதம் தீர்க்கும் வேளை வந்துவிட்டது. சம்புவரையர் மாளிகையில் சமரசப் பேச்சு நடைபெற அத்தனைத் திட்டங்களும் தீட்டிவிட்டேன். சிற்றரசர்கள் இனிமேல் எப்போதும் ஒன்றுகூடாவண்ணம் அது நிகழ்ந்தேறும். நம் சபதத்தை யார் முடிக்கப் போகிறார்களோ அவரைச் சக்ரவர்த்தியே வாளெடுத்துக் கொடுத்துத் தீர்மானிக்கட்டும். மிச்சமிருப்பவர்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ எனக் கூறி அந்தக் குழந்தையிடம் ‘சபதத்தை முடிக்க யார் தைரியசாலி எனத் தோன்றுகிறதோ அவரிடம் இந்த வாளைக் கொடு’ என்று கேட்டுக் கொண்டாள். குழந்தை அனைவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு வாளை நந்தினியிடமே கொடுத்தது. அனைவரும் திகைத்தபோதும் வாளை நெஞ்சோடு அணைத்துக்கொண்ட நந்தினி, வீரபாண்டியனின் படுகொலைக்குப் பழிவாங்கும் பாக்கியம் தனக்கே கிடைத்ததாக மகிழ்ந்து கண்ணீர்விட்டாள். தொடரும்

பொன்னியின் செல்வன் 16

பொன்னியின் செல்வன் 16

பழையாறையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த வந்தியத்தேவன் தனது குதிரையின் காலில் அடிப்பட்டிருந்ததை அறிந்தான். அராபியர்கள்போல் அதன் குளம்புகளில் லாடம் அடிக்கலாம் என்று கருதி ஒரு கொல்லுப்பட்டறையை அணுகினான். அந்தக் கொல்லன் மீன் முத்திரை பதிக்கப்பட்ட அபூர்வமான வாள் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்தான். அந்த மீன் முத்திரையை அழிக்கும் வேலை அதுவென்று வந்தியத்தேவன் புரிந்துகொண்டான். கொல்லன் தான் செய்துகொண்டிருக்கும் பணியை முடித்துவிட்டு லாடம் செய்துதருவதாகக் கூறினான். வந்தியத்தேவன் பெரிதும் களைத்திருந்தபடியால் ஓரமாய்ப் படுத்து உறங்கலானான். உறக்கத்தில் பல்வேறு கனவுகளால் அலைக்கழிக்கப்பட்டு உளறினான். விழித்து எழுந்ததும் கொல்லன் அவன் உறக்கத்தில் உளறியதைச் சொல்லி எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தினான். மேலும் இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி அங்குவரை பரவியிருப்பதையும் சற்றுமுன் இவ்வழியே சென்ற பழுவேட்டரையரின் பரிவாரங்கள்மூலம் அந்தச் செய்தி வந்துசேர்ந்திருந்தது என்பதையும் கொல்லன்மூலம் அறிந்தான். குளம்புகளில் லாடம் அடித்துக்கொடுத்த கொல்லனுக்கு நன்றி கூறிவிட்டுப் பழையாறை வழியில் செல்ல ஆரம்பித்தான். வழியில் ஆபத்துதவி தேவராளன் குறுக்கிட்டு, ரவிதாஸனைப்பற்றியும் இளவரசரைப்பற்றியும் கேட்க, வந்தியத்தேவன் கவனமாகப் பதிலளித்தான். ஒரு மூடுபல்லக்கைச் சுட்டிக்காட்டி அதில் இருக்கும் நந்தினி வந்தியத் தேவனிடம் பேசவிரும்புவதாகக் கூறி அழைத்தான் தேவராளன். இவனும் பல்லக்கின் அருகே செல்ல, சுற்றி மறைந்திருந்த வீரர்கள் அவனைத் தாக்கிப் பல்லக்கிற்குள் கட்டிப்போட்டுப் பல்லக்கைத் தூக்கிச்சென்றனர். சுதாரித்துக்கொண்ட வந்தியத்தேவன் பல்லக்குப் பயணத்தின் நோக்கத்தையும் முடிவையும் அறியும்பொருட்டு அமைதியானான். அப்போது பல்லக்கில் ஏதோ மயக்கும் புகை எழவும் அதில் நினைவிழந்தான். கண் விழித்தபோது ஒரு அறையில் இருந்தான். திறந்த கதவின் வழியாக நந்தினி வரவும் இலங்கையில் கண்ட ஊமை ராணியின் தோற்றத்தை ஒப்பிட்டு அவள்தான் ஆடை, ஆபரணங்கள் அணிந்து வந்துவிட்டாளா என்று அதிசயித்தான். பொக்கிஷ நிலவறையில் இருந்து அவள்தான் அவனைத் தப்பிக்கவிட்டதாகவும் அவன் ஒரு நன்றிகெட்டவன் எனவும் பல்வேறு வார்த்தைகளால் அவனை வெறுப்பேற்றினாள் நந்தினி. பிறகு  அருள்மொழிவர்மரைப்பற்றிக் கேட்டாள். குந்தவையையும் பூங்குழலியையும் எள்ளி நகையாடினாள். வந்தியத்தேவன் அத்தனைக்கும் அசைந்துகொடுக்காது அவளை அமைதியுறுமாறு வேண்டினான். அப்போது வந்தியத்தேவன் முன்பு கொல்லுப்பட்டறையில் கண்ட வாளைக் கைகளில் எடுத்து ஆசையுடன் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள் நந்தினி.  ’ஆடை, ஆபரணங்களால் அலங்கரிந்த என்னுடைய உடம்பிலோ நெஞ்சத்தில் வஞ்சம்கொண்ட கொடியவன் ஒருவனின் விஷநெஞ்சத்திலோ இந்த வாளைச்செலுத்திக் குபுகுபுவெனப் பெருகும் இரத்தத்தைப் பூசிக்கொண்டு சாகவேண்டுமென்பது தெய்வத்தின் ஆக்ஞை’ என்றெல்லாம் ஆவேசம் வந்தவள்போலப் பேசிக்கொண்டுபோனாள். அவளை அமைதிபடுத்தும் வழி தெரியாது, ‘பழுவேட்டரையர் எங்கே?’ என வந்தியத்தேவன் பேச்சைத் திருப்பினான். அவரும் பார்த்திபேந்திரனும் வெறியாட்டக்காரனிடம் இளவரசர்பற்றிக் குறிகேட்கப் போயிருப்பதாகச் சொல்லி, அதற்கும் பெரிதாய்ச் சிரித்து, பெரிய பழுவேட்டரையர், கந்தன்மாறன், பார்த்திபேந்திரன், ஏன் ஆதித்த கரிகாலனும்கூடத் தன்முன் வர அஞ்சுவதைக் கூறினாள்.. ஆதித்த கரிகாலனை கண்டு தன்னைப்பற்றி  அஞ்சவேண்டாம் என்ற செய்தியைச் சொல்லுமாறு நந்தினி கேட்க வந்தியத்தேவன் மறுத்தான். இளவரசரைப்பற்றிக் கேட்க, அதுவும் தனக்குத் தெரியாது என்று கூறி அவளின் முத்திரை மோதிரத்தைத் திருப்பியளித்தான். அதை அவனையே வைத்துக்கொள்ளச்சொன்னவளிடம் ஊமை ராணி அவள்தானா என்ற சந்தேகத்தை வந்தியத்தேவன் கேட்டான். நந்தினி இல்லையென மறுத்துவிட்டு மறுமுறை அவளைக்கண்டால் தன்னிடம் கொண்டுவந்து சேர்க்குமாறும் இல்லையெனில் தன்னையாவது அவளிடம் கூட்டிச்செல்லுமாறும் கேட்டு அவனைத் தன் ஆட்களிடமிருந்து விடுவித்தாள். தன்னைக் கடத்திப்போன இடத்திலிருந்து பழையாறைக்குப் பயணம் செல்லும் வழியில் சென்றவன் இருளடையவும் சிறிதுநேரம் உறங்கிக்கொண்டிருந்தபொழுது இரண்டு காளாமுக வீரசைவர்கள் அவனைப்பற்றியும் நாட்டைப்பற்றியும் பேசிக்கொண்டு கடந்துசென்றனர். ஆதித்த கரிகாலனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் பேசிக்கொண்டதை மறைந்திருந்து வந்தியத்தேவன் கேட்டபொழுது, விரைவில் தன் எஜமானருடன் சென்றுசேர்ந்துவிடவேண்டுமென நினைத்துக்கொண்டு பழையாறையை நெருங்கினான். எப்படி பாதுகாப்பைத் தாண்டி உள்ளே நுழைவது என்று கவலைப்பட்ட பொழுது, மதுராந்தகர் தன் பரிவாரங்களுடன் வருவது தெரிந்தது. செம்பியன் மாதேவி முக்கியமான விஷயம் பேசவருமாறு அனுப்பிய அழைப்பை ஏற்று மதுராந்தகர் கிளம்பியபொழுது அவர் மாமனாரான சின்ன பழுவேட்டரையர் அன்னையிடம் பட்டம் குறித்தும் பேசுமாறு அறிவுறுத்தியிருந்தார்.  வந்தியத்தேவன் வேண்டுமென்றே பரிவாரங்கள் நடுவே நுழைந்து  நிமித்தம் கூறுவோன்போல, கடம்பூரில் மூடு பல்லக்கில் வந்த நிகழ்ச்சியைக்கூறி நடிக்க, மதுராந்தகன் அவனையும் தம்முடன் அழைத்துக்கொண்டு பழையாறை கோட்டைக்குள் நுழைந்தார். சிவ சீல சிரோன்மணியான செம்பியன் மாதேவி திருநாரையூர் நம்பி எனும் சிவக்கொழுந்தை மரியாதையுடன் வரவேற்று சபையில் பாடச்செய்து சிறப்பு செய்துகொண்டிருந்தார். மதுராந்தகருக்கு அதையெல்லாம் காணக்காண எரிச்சலாய் இருந்தது.  தனியிடத்தில் வந்து வந்தியத்தேவனை நிமித்தம் சொல்லுமாறு கேட்க, அவன் ஆ..ஊ எனக் கத்திக்கொண்டு நடித்தான். பின் அவர் பட்டம்சூட்ட ஒரு பெண் தலைவிரிக்கோலத்தில் தடையாக இருப்பதாக இட்டுக் கட்டினான். பின் தலைவலியால் துடிப்பதாகக் கூறி நகர்வலம் போய்விட்டு வருவதாகச் சொல்லி மாளிகையிலிருந்து வெளியேறினான். மதுராந்தகரை அவரது அன்னை அழைப்பதாகச் செய்தி வரவும் ஆத்திரத்துடன் கிளம்பிச்சென்றார். கோடியக்கரையில் வந்தியத்தேவனுடன் மூலிகை பறிக்க வந்துவிட்டு, பின்பு பழுவேட்டயர்களிடம் காட்டிக்கொடுத்த வைத்தியர் மகன் பினாகபாணியிடம், வந்தியத்தேவன் பழையாறைக்கு வந்தால் தன்னிடம் தகவல் சொல்லுமாறு நந்தினி சொல்லியிருந்தாள். அதனை ஏற்றுக் காத்திருந்தவன் வெளியேவந்த வந்தியத்தேவனைக் கண்டான். அப்போது மக்களிடம் குற்றவாளி, ஒற்றன் என்றெல்லாம் கூறி வந்தியத்தேவனை மாட்டிவிட, அங்குவந்த ஆழ்வார்க்கடியான் அவனை சாமர்த்தியமாகத் தப்பிக்கவைத்தான். பின்பு குந்தவையைச் சந்திக்க அனுப்பிவைத்தான். இளவரசரைக் கடல்கொண்ட துக்கச் செய்தியை அப்போது தூதர்கள் கொண்டுவந்திருந்தனர். செம்பியன் மாதேவி மதுராந்தகரிடம், தன் கணவர் கண்டராதித்தருக்கு மண்ணாளும் ஆசை இல்லாததோடு, சுந்தரசோழரின் பரம்பரையே தனக்குப்பின் ஆளவேண்டுமென்றும், அதற்குத் தன் வாரிசு தடையாக இருக்கக்கூடாது என்றும் வாக்குப் பெற்றுக்கொண்டு சிவபதம் அடைந்ததாகக்கூறி, மதுராந்தகர் தந்தையின் விருப்பம்போலவே நடக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டாள். மதுராந்தகர் பொறுமை இழந்து செம்பியன் மாதேவியைக் கண்டபடி ஏசினார். ஆத்திரத்தில் கழுத்திலிருக்கும் உருத்திராட்ச மாலையைக் கழற்றியெறிய முயல, கழுத்தைவிட்டு அது நகரவில்லை. தன் மகன் பட்டத்தை அடையத் தடையாக இருக்கும் நீயெல்லாம் ஒரு தாயா?  என்றெல்லாம் கேட்க, தன் மகன் உயிருடன் இருப்பதும் தனக்கு முக்கியம் என செம்பியன் மாதேவி விளக்க, அவன் கோபம் சற்றுத் தணிந்தது. தனக்குப் பல சிற்றரசர்கள் உதவுவார்கள் என்றெல்லாம் சொல்லி தாயைச் சமாதானப்படுத்த தொடங்கினான். அவர்களையெல்லாம் நம்புவதில் பயனில்லை என்று பெரிய பிராட்டி அறிவுரை சொல்லத்தொடங்கியபொழுது அரண்மனை வாசலில் பெரும் ஓலமும் சாபக்குரல்களும் கேள்விக் குரல்களும் பயங்கரப் பேரொலியாக கேட்டன. மதுராந்தகரை அங்கேயே இருக்கச்சொல்லிவிட்டு செம்பியன் மாதேவி மாடத்தைநோக்கி விரைந்தார். வந்தியத்தேவன் ஓடத்தில் குந்தவையைச் சந்தித்தான். சில நொடிகள் பேச்சிழந்து நின்றபிறகு நடந்தவை அனைத்தும் சொல்லும்படி குந்தவை கேட்க, எல்லாவற்றையும் சொல்லலானான். இளவரசருக்குக் கடும் சுரம் ஏற்பட்டதையும் சேந்தன் அமுதனும், பூங்குழலியும் சூடாமணி விஹாரத்துக்கு அழைத்து சென்றதையும் கூறிக்கொண்டிருந்தபொழுது வானதி தோட்டத்திலிருந்து ஓடிவந்து தண்ணீருக்குள் விழுந்தாள். இளவரசர் இறந்துவிட்டதாக நினைத்து வானதி தன் உயிரையும் விட்டுவிட வேண்டுமென நீரில் பாய்ந்திருந்தாள். அவளைக் காப்பாற்றி, குந்தவை தன் மடியில் வைத்து மயக்கத்தைத் தெளியவைத்துக் கொண்டிருந்தபொழுது வந்தியத்தேவன் பூங்குழலியின் மீதான இளவரசரின் எண்ணம் குறித்தும் பூங்குழலி இளவரசருக்காகத் தன்னுயிரையும் பணயம் வைப்பாள் என்பதையும் கூற, குந்தவை ஆத்திரமுற்றாள். மயக்கம் தெளிந்துவிட்ட வானதியும் இந்தச் செய்தியைக்கேட்டு, ‘இளவரசர் உயிருடன் இருக்கிறார்’ என்ற ஆறுதலையும் ‘பூங்குழலியை விரும்புகிறார்’ என்ற துயரத்தையும் ஒருசேர அடைந்தாள். வந்தியத்தேவன் ஊமை ராணியைப்பற்றிக்கூற குந்தவை பரபரப்படைந்தாள். நந்தினிக்கும் அவருக்கும் இருக்கும் உருவ ஒற்றுமையைப்பற்றிக் கூறவும் நந்தினி தன் தமக்கையென்று முன்னமே தனக்குச் சந்தேகம் இருந்ததையும் கூறி வருந்தினாள். ஓடக்காரப் பெண்ணான பூங்குழலியை இளவரசர் மணக்கமுடியாது என குந்தவையும் குலம், கோத்திரமெல்லாம் அந்தப் பெண்ணின் அன்புக்கு முன்னால் ஒன்றுமில்லை என வந்தியத்தேவனும் நடத்திய வாக்குவாதத்தில் வானதி மயக்கம் பூரணமாகத் தெளிந்து எழுந்தாள். ஆழ்வார்க்கடியான் விரைந்து வந்து, ‘இளவரசர் கடலில் மூழ்கிவிட்டதுபற்றி ஆத்திரமாயிருப்பதாகவும் வந்து சமாதானம் செய்யும்படியும் குந்தவையை அழைத்தான். குந்தவையும் செம்பியன் மாதேவியும் மாடத்தில் வந்து நின்றவுடன் கூட்டத்தில் அனைவரும் அவர்களை நோக்கி முறையிட்டனர். பழுவேட்டரையர் சூழ்ச்சியால்தான் ஏதோ நடந்துவிட்டது என ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள, குழப்பமும் ஆத்திரமும் மிகுந்து அந்த இடம் களேபரமாகக் காணப்பட்டது. அப்போது குந்தவை குறிப்புணர்த்த, ஆழ்வார்க்கடியான் பெரிய குரலில், இளவரசருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நிமித்தக்காரன் சொல்வதாகக் கூற, நிமித்தக்காரனாக வேடம் பூண்டிருந்த வந்தியத்தேவனும் அதை  ஆமோதித்தான். வைத்தியர் மகன் அவனைப் பார்த்து ஒற்றன் எனக் கத்த, ஆத்திரமுற்று மேலிருந்து குதித்து வந்தியத்தேவன் அவனோடு சண்டையிடத் தொடங்கினான். அதற்குள் அநிருத்த பிரும்மராயர் அங்கே வருகைதந்து அவர்கள் இருவரையும் கைதுசெய்யுமாறு ஆணையிட்டுவிட்டு கூட்டத்தையும் அமைதியாக இருக்குமாறு சொல்லிவிட்டு செம்பியன் மாதேவியைத் தனியே சந்தித்தார். சுந்தர சோழச் சக்கரவர்த்தி மதுராந்தகருக்குப் பட்டம் சூட்ட இருப்பதாகவும் அதற்குச் சம்மதம் தருமாறும் கேட்க, செம்பியன் மாதேவி தன் கணவரின் ஆணையை மீறமாட்டேன் என்று மறுத்தார்.  அதற்கு ஒரு முக்கியமான காரணம் இருப்பதாக முதன்மந்திரி சொல்ல வர, மதுராந்தகர் உள்ளே வரவே அதைச் சொல்லாமலேயே விடைபெற்றார். மதுராந்தகர் அநிருத்தரை தன் முக்கிய எதிரியாக கருதுவதாகத் தன் தாயாரிடம் கூறினான். குந்தவையைச் சந்தித்த அநிருத்தர், நாட்டின் நிலைமையை எடுத்துக்கூறினார். அவர் அனைத்தையும் அறிந்து வைத்திருந்ததைத் தெரிந்துகொண்டு வியந்துவிட்டு வந்தியத்தேவனை விடுவிக்கும்படி கோரினாள். ஆனால், வந்தியத்தேவன் நந்தினியைச் சந்தித்ததை அநிருத்தர் சொல்லி அவன் நந்தினியின் ஒற்றனாய் இருக்கலாம் எனச் சந்தேகப்பட, குந்தவை மறுத்தாலும் அவன் மறைத்ததை நினைத்துக் குழம்பினாள். இளையராணியின் சூழ்ச்சிக்குப் பழுவேட்டரையர்கள் மட்டுமல்லாது, மதுராந்தகர், கந்தன்மாறன் மற்றும் பார்த்திபேந்திரன் அனைவரும் மயங்கி அவள் பேச்சுக்கு ஆடுவதையும் ஆதித்த கரிகாலனைக் கடம்பூருக்கு வரவழைத்து சம்புவரையர் மகள் மணிமேகலையை திருமணம் செய்து கொடுக்கத் திட்டம் தீட்டியுள்ளதையும் கூறினார். ஆனால் அது வெளிப்பேச்சுதான் எனவும், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகளுடன் அவளுக்குத் தொடர்பிருப்பதால் இதன் பின்னால் வேறு சூழ்ச்சி இருக்கலாம் என்று கூற, குந்தவை பயந்தாள். அநிருத்தர் வந்தியத்தேவனைத் தான் விடுவிப்பதாகவும், அவன் உடனே காஞ்சிக்கு சென்று ஆதித்த கரிகாலனை கடம்பூருக்கு வரவிடாமல் தடுக்குமாறும், தடுக்க முடியாது போனால் நிழல்போல ஆதித்தரைப் பிரியாமல் காக்குமாறும் ஆணையிடச் சொல்லி குந்தவையிடம் சொல்லி முடித்தார். வந்தியத்தேவன் பக்குவமற்று நடந்து கொள்வதால் ஆழ்வார்க்கடியானையும் உடன் அனுப்புவதாக முடிவெடுத்தனர். நடுவே வந்த வானதி பிடிவாதமாகக் கொடும்பாளூர் போவதாகக் கூற தடுக்க முயன்று முடியாமல் போக, குந்தவை அவளுக்கு விடை கொடுத்தாள். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 15

பொன்னியின் செல்வன் – 15

மூன்றாம் பாகம் – கொலை வாள் நாகப்பட்டின புத்த பிட்சுகள் சுந்தர சோழரைச் சந்திக்க வந்தபொழுது, ‘இலங்கை அரசுரிமையை அத்தீவின் புத்த சங்கம் ஒன்று இளவரசர் அருள்மொழி வர்மருக்குக் கொடுக்க விரும்புகிறது’ எனக் கூறியதைச் சாதகமாக்கி, பெரிய பழுவேட்டரையர் இளவரசரைக் கைது செய்யும் ஆணையை வாங்கியிருந்தார். அரசரும் அருள்மொழியிடம், ‘மதுராந்தகருக்கே பட்டத்தைக் கொடுத்து விடலாம்’ என்ற தன் விருப்பத்தை நேரில் சொல்லி ஏற்கச் செய்யலாம் என்ற காரணத்தினால்தான் அதற்குச் சம்மதித்தார். அருள்மொழிக்கு மக்களின் ஆதரவு அதிகமாய் இருந்ததால் அவரைக் கைது செய்து கொண்டுவரும்பொழுது, அது தனக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற அச்சம் பெரிய பழுவேட்டரையருக்கு இருந்தது. மேலும், வந்தியத்தேவன் மூலம் குந்தவை ஓலை அனுப்பியதும் அவன் யார் கையிலும் சிக்காமல் இலங்கைக்கு சென்றுவிட்டதும் அதை அதிகப் படுத்தியிருந்தன. எனவே, இலங்கையிலிருந்து இளவரசர் வரும்போதே யாரும் அணுகாவண்ணம் தஞ்சைக்குக் கூட்டி வந்துவிட வேண்டும் என்று யோசித்து கோடியக்கரைக்குக் கிளம்பினார். நந்தினியும் உடன்வருவதாகச் சொல்லவும் அவளுடன் சேர்ந்து பிரயாணம் செய்யும் ஆசையுடன் சம்மதித்தார். இருவரும் பரிவாரங்களுடன் கிளம்பினார்கள். நந்தினிக்கு ‘ரவிதாஸன் இலங்கை சென்ற காரியத்தை வெற்றியுடன் முடித்தானா?’ என்று தெரிந்து கொள்வதும் வந்தியத்தேவன் மூலம் குந்தவை இளவரசருக்கு அனுப்பிய செய்தியைத் தெரிந்துகொள்வதும் நோக்கமாய் இருந்தன. நாகப்பட்டினத்தில் தனாதிகாரியாக தன் கடமைகளை முடித்துவிட்டு கோடியக்கரை வந்து, அவருக்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்ட  கூடாரத்தில் பெரிய பழுவேட்டரையர் நந்தினியுடனும் தன் பரிவாரங்களுடனும் தங்கினார். அப்போதுதான் சுழற்காற்று அடித்து ஓய்ந்திருந்தது. அச்சமயத்தில் பார்த்திபேந்திரனுடைய மரக்கலம் வந்து சேர்ந்தது. ஒரு படகில் பார்த்திபேந்திரன் கூடாரத்துக்கு வந்தான். பெரிய பழுவேட்டரையர் விசாரிக்குமுன் நந்தினி  முன்வந்து பேசினாள். பார்த்திபேந்திரன் அந்தக் கணத்தில் அவளின் செளந்தர்யத்தில் மதிமயங்கிப் போனான். அதைக்கண்டு பெரிய பழுவேட்டரையர் எரிச்சலடைய, நந்தினி இளவரசரைப் பற்றிக் கேட்க, சுய நினைவடைந்த பார்த்திபேந்திரன் வந்தியத்தேவனைக் காப்பாற்ற இளவரசர் கடலில் குதித்ததையும்,  காப்பாற்றியபின் அந்தப் படகு உடைந்து அனைவரும் மூழ்கிவிட்டதையும் பாதி உயிராய் தான் ஒருவன் மட்டுமே திரும்பியதாகவும் கூறினான்.  இளவரசர் மூழ்கிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதுமே பெரிய பழுவேட்டரையர் வேரற்ற மரம் போலத் தரையில் வீழ்ந்தார். நந்தினி நீர்கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்த, தன் கையால் இளவரசரைத் தூக்கி  வளர்த்ததை நினைவுபடுத்திக்கொண்டு கலங்கியபடி பார்த்திபேந்திரனை வெகுவாகக் கோபித்துக் கொண்டார். இளவரசர் கோடிக்கரையில் கரையொதுங்க வாய்ப்பிருப்பதாக பார்த்திபேந்திரன் கூறவும், காஞ்சியிலிருந்து கிளம்பியது முதல் நடந்தது வரை அவனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நந்தினி வேண்டுமென்றே, ‘ஒருவேளை அவன் வந்த மரக்கலத்தில் இளவரசரை மறைத்து வைத்திருக்கலாம்’ என ரகசியமாகக் கூற, பழுவேட்டரையர் அவனை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு மரக்கலத்தை சோதனை செய்ய ஆட்களுடன் விரைந்தார். அவனுடன் தனியே பேச வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட நந்தினி, தன் சாகசத்தை பார்த்திபேந்திரனிடம் தொடங்கினாள். ஆதித்த கரிகாலனிடம் நந்தினி பற்றி அறிந்திருந்த பார்த்திபேந்திரன், அவளிடம் தாங்க முடியாத வெறுப்பை உமிழ்வதற்குக் காத்திருந்தவன், அவளைப் பார்த்த்தும் தன்வயம் இழந்து மகுடிமுன் ஆடும் பாம்பைப் போல் ஆகியிருந்தான். நந்தினி பல்வேறு சொற்களால் அவன் இதயத்தில் தன் மீதான பரிதாபத்தை வளர்த்தெடுத்தாள். பார்த்திபேந்திரன் அவளை பழுவேட்டரையரிடமிருந்து விடுவித்து, தன்னுடன் கூட்டிச் சென்றுவிடலாம் என்று நினைக்குமளவுக்கு அவனை மயக்கமூட்டியும் பரிதாபத்துகுரியவளாகத் தன்னைக் காட்டிக்கொண்டும் பேசினாள். அவன் அப்படி மயங்கியிருந்த சந்தர்ப்பத்தில் ஆதித்த கரிகாலனை சம்புவரையர் மாளிகைக்கு அழைத்து வர வேண்டுமென நந்தினி கேட்டுக் கொண்டாள். ‘ஆதித்த கரிகாலனுக்கு சம்புவரையர் மகளான மணிமேகலையை மணம் செய்து வைத்துவிட்டால் தான் நிம்மதி அடைந்துவிடுவேன்’ எனவும் பார்த்திபேந்திரனிடம் பசப்பினாள். கலத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பிய பெரிய பழுவேட்டரையர் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து முறைத்தார். பார்த்திபேந்திரனைக் கைது செய்ய ஆணையிட்டார். ஆனால், கைது செய்ய வந்தவரகளைத் தாக்கிவிட்டு பழுவேட்டரையர் என்ன சொன்னாலும் தான் கேட்பதாகப் பணியவும், பார்த்திபேந்திரன் மேல் அவருக்கு நல்ல எண்ணம் வந்தது. ‘அரசரிடம் இளவரசரைப் பற்றிச் சொல்லும்போது, கூடவே பார்த்திபேந்திரன் இருந்தால் நம்பகத்தன்மை அதிகரிக்கும்’ என நந்தினி எடுத்துச் சொல்ல, பழுவேட்டரையர் அதற்குச் சம்மதித்தார். அதற்குள் மந்திரவாதியின் ஆந்தைக் குரல் கேட்டதால், ‘ஒருநாள் இருந்து இளவரசர் கரையொதுங்குகிறாரா என்பதைத் தெரிந்து கொண்டு போகலாம் எனக் கூறினாள் நந்தினி. கரையோரமாய் ஆட்களை நிறுத்தி தேடிப் பார்க்கவும் தனாதிகாரி ஆணையிட்டார். பூங்குழலி படகை வலிக்க, வந்தியத்தேவன் இளவரசரிடம், ‘கோடியக்கரை போனால் பழுவேட்டரையர்கள் கைது செய்யும் அபாயம் இருப்பதால், குந்தவையின் ஆணைப்படி பழையாறைக்கு செல்ல வேண்டு’மென வலியுறுத்தினான். ஆனால், இளவரசருக்குக் குளிர்க்காய்ச்சல் அதிகமாக, தூரத்திலிருந்து கலங்கரை விளக்கின் மேலே ஆட்கள் நின்று பார்த்துக் கொண்டிருப்பதைப் பூங்குழலி சொல்ல, கோடியக்கரையில் இருந்து நாகை செல்லும் ஒரு வாய்க்காலில் ஓடத்தை மறைத்து நிறுத்திவிட்டு ஊருக்குள் சென்று விஷயங்களை அறிந்து வந்தபின் பயணத்தை முடிவு செய்யலாம் என இருவரும் திட்டமிட்டனர். அதன்படி, பூங்குழலி அங்கிருந்த குழகரின் கோவிலை அடைந்தாள். கோவிலில் பட்டரைச் சந்தித்து பிரசாதங்களையும் பாலையும் பெற்றுக்கொண்டு, பழுவேட்டரையரும் நந்தினியும் வந்திருப்பதை அறிந்து கொண்டு திரும்பினாள். நந்தினியை, பூங்குழலின் அண்ணியான ராக்கம்மாள் சந்தித்து பாண்டியர் ரகசிய முத்திரையைக் காண்பித்து தானும் ஆபத்துதவி என்று தெரிவித்துக் கொண்டாள். மந்திரவாதியுடன் பேச குழகர் கோயிலுக்குக் கூட்டிச் செல்வது போல் கூட்டிச் சென்றாள்.  அப்போது சேந்தன் அமுதன் இங்கு வந்திருப்பதையும் இருவரும் கலங்கரை விளக்கின் மேல் இருந்தபொழுது ஒரு படகு வந்து பின் கண்ணுக்கு மறைந்து விட்டதையும் கூறினாள். பின்னர் நந்தினியின் உருவம் ஊமைராணியை ஒத்திருப்பதாகக் கூற, இனி ஊமைராணியை கண்டால் தன்னிடம் கூட்டி வருமாறு நந்தினி கேட்டுக் கொண்டாள். அவளை அவ்வளவு சீக்கிரம் யாரும் சந்திக்க முடியாதெனவும் பூங்குழலிக்கு அவளை நன்கு தெரியுமெனவும் இராக்கம்மாள் கூறினாள். இருவரும் மந்திரவாதியிடம் வந்து சேர்ந்தனர். மந்திரவாதியும் நந்தினியும் பேசுவதை பூங்குழலி திரும்பிப்போகும் வழியில் கேட்க நேரிட்டது. இளவரசர் இறந்துவிட்தாக வந்த செய்தியை நந்தினி நம்பவில்லை. பூங்குழலியைப் பற்றிச் சொல்லி மண்டபத்தில் ஒளித்து வைத்திருக்கலாம் என ராக்கம்மாள் மந்திரவாதியிடம் சொல்ல, பூங்குழலிக்கு அச்சம் பரவியது. இளவரசரைச் சுற்றி நாலாபக்கமும் சூழ்ந்திருந்த ஆபத்தை உணர்ந்து கொண்டாள். எப்பாடுபட்டாவது அவரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் தனக்கு இருப்பதை உணர்ந்து மறைவிடம் நோக்கி விரைந்தாள். ஆனால், விட்டுவிட்டு வந்த இடத்தில் ஓடமும் இளவரசரும் இல்லாதிருப்பதைக் கண்டு மேலும் கலவரமடைந்தாள். மண்டபத்தில் ஒளிந்து இருக்கலாம் என்று நினைத்தால் மந்திரவாதி அங்கு வருவதாகச் சொன்னது நினைவுக்கு வர, எச்சரிப்பதற்காக காட்டு வழியில் வேகமாக ஓடினாள். நடுவில் சேந்தன் அமுதன் பாடுவது போல் நடித்து, மந்திரவாதி அங்கிருப்பதை உணர்த்த, இருவரையும் மந்திரவாதி ரவிதாசன் ‘இளவரசர் எங்கே?’ எனக் கேட்டு மிரட்டினான்.  பூங்குழலி இளவரசர் இறந்து விட்டதாகக் கூற ரவிதாசன் அதை நம்பவில்லை. பூங்குழலி கடற்கரைப் பக்கம் ஓடுவது போல போக்குக்காட்டி ரவிதாசனைப் புதைமணலில் விழுமாறு செய்தாள். ரவிதாசன் காப்பாற்றுமாறு கதற, சேந்தன் அமுதனின் துண்டை வாங்கி அவனைக் கட்டிவிட்டு, ‘காலையில் யாரேனும் வந்தால் அவிழ்த்து விடுவார்கள்’ எனக் கூறி இருவரும் மண்டபத்துக்கு விரைந்தனர். இளவரசரை நாகப்பட்டினத்திலுள்ள சூடாமணி விஹாரத்திற்கு கூட்டிச் செல்லுமாறு குந்தவை சொல்லி அனுப்பியதாக சேந்தன் அமுதன் கூற, வந்தியத்தேவன் பழையாறைக்குச் செல்வதாக ஏற்பாடாயிற்று. சுரவேகத்தில் மயக்கமடைந்திருந்த அருள்மொழிவர்மரைப் படகில் ஏற்றினர். அப்போது நரிகளின் ஊளைக் குரல் கேட்டது. இளவரசர் அபாயத்திலிருக்கும் மனிதனைக் காப்பாற்ற வேண்டும் எனக் கூறிக்கொண்டே மறுபடியும் மயங்கி விழ, பூங்குழலி ரவிதாசனைக் காப்பாற்ற புதைகுழிக்கு விரைந்தாள். வந்தியத்தேவனும் உடன் சென்றான். அதற்குள் ராக்கம்மாள் ரவிதாசனை விடுவித்து விட்டிருந்தாள். இவர்கள் கால்வாய்க் கரையை நோக்கி வரும் வழியில் ரவிதாசனும் ராக்கம்மாளும் மறைந்திருப்பதைப் பார்த்து விட்டார்கள். அவர்களும் இவர்களைக் கவனித்து விட்டார்கள். வந்தியத்தேவன் வேண்டுமென்றே அவர்கள் காதில் விழும்படி, ‘ஆதித்த கரிகாலன் அரசாள்வதற்காக பொன்னியின் செல்வரை, தான் கடலில் மூழ்கடித்துக் கொன்றுவிட்டதாகவும் பூங்குழலி அதைப்பற்றி வாய்திறந்தால் ரவிதாசனைப் புதைசேற்றில் தள்ளிக் கொன்றதை நந்தினியிடம் சொல்லி விடுவேன்’ என்றும் மிரட்டி நடித்தான். அவளுடைய மாமன் மகன் கொண்டுவரும் ஓடத்தில் ஏறி இலங்கை போய்விடுமாறும் பூங்குழலியை மிரட்டினான். அதன்படியே பூங்குழலி ஓடத்தில் ஏறிக்கொள்ள, படகை நாகப்பட்டினம் நோக்கி செலுத்தினார்கள். மந்திரவாதியும் ராக்கம்மாளும் இதைத் தொடர்ந்து மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். பின் மந்திரவாதி வெளிப்பட, வந்தியத்தேவன் ‘பிசாசு, பிசாசு’ எனக் கத்திக்கொண்டே ஓடி மந்திரவாதி பார்வையில் இருந்து மறைந்தான். சேந்தன் அமுதன் சொன்ன இடத்தில் தன் குதிரையைக் கண்டுகொண்டான். பழையாறை பாதையில் குதிரையை நடத்தினான். சுரத்தில் பாதிக்கப்பட்டிருந்த இளவரசரைக் கனிவுடன் கவனித்துக் கொண்டும் இடைப்பட்ட கிராமங்களில் சேந்தன் அமுதன் கொண்டுவந்த  உணவைப் பகிர்ந்துண்டும் மூவருமாக நாகப்பட்டின சூடாமணி விஹாரத்தை அடைந்தனர். பூங்குழலி இளவரசருக்கு சேவை செய்வதில் தனி உவகை கொண்டிருந்தாள். இவர்கள் சூடாமணி விஹாரத்தை அடைந்தபொழுது அங்கே இளவரசரைக் கடல் கொண்டுவிட்ட செய்தி கிடைத்து அல்லோல கல்லோலமாயிருந்தது. சேந்தன் அமுதன் தலைமைப் பிட்சுவிடம் சென்று விஷயங்களைச் சொல்லி விஹாரத்தின் பின்பகுதியில் நிறுத்தியிருந்த படகிடம் அழைத்து வந்தான். அவரும், குந்தவை தேவி ஏற்கனவே அவரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டதை மனதில் வைத்துக்கொண்டு, ரகசியமாகவே இளவரசரை உள்ளே அழைத்துச் சென்றார்.  ‘மறுபிறவியிலேனும் அருள்மொழி வர்மரை மறுபடி சந்திக்க முடியுமா?!” என்ற ஏக்கத்துடன் பூங்குழலி கதவு மூடும்வரை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். தொடரும்.

பொன்னியின் செல்வன் – 14

பொன்னியின் செல்வன் – 14

மண்டபத்திலிருந்து அருள்மொழி வர்மன் குழுவினர் வெளியேறி நடந்தனர். வழியிலேயே பார்த்திபேந்திரனும் கொடும்பாளூர் பெரிய வேளாரும் சைன்யத்துடன் வந்து கொண்டிருந்தனர். பூங்குழலியும் அவர்களுடன் வந்திருந்தாள். அனைவரும் சாலையோரமிருந்த மண்டபத்திற்குச் சென்று பேசலாமென முடிவெடுத்தனர். போகும் வழியில், பூங்குழலி உதவி கேட்டது வந்தியத்தேவனுக்கு ஞாபகம் வர இளவரசரிடம், “சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?” எனக் கேட்க, அவர் “சரிவர நினைவில்லை” என பதிலளித்தார். வந்தியத்தேவன் பூங்குழலியைத் திரும்பி பார்க்க, அவள் தன் வழக்கத்திற்கு மாறாக நாணத்துடன் கடைக்கண்களால் இளவரசரையே பார்த்துக்கொண்டு நிற்பதைக்கண்டு சிரித்துக் கொண்டான். திருக்கோவலூர் சிற்றரசரும் இளவரசரின் பாட்டனாருமான மலையமானும் ஆதித்த கரிகாலனும் இளவரசன் அருள்மொழி காஞ்சிக்கு வந்து பழுவேட்டரையரின் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் பார்த்திபன். இளவரசர் கொடும்பாளுர் வேளாளரிடம், குந்தவை பழையாறைக்கு அழைப்பதையும், முதன்மந்திரி அநிருத்தர்தான் இலங்கையிலேயே இருக்கச் சொல்லி இருப்பதையும் கூறி ஆலோசனை கேட்டார். அவரோ பூங்குழலி கொண்டு வந்திருக்கும் சேதியைக் கேட்டுவிட்டு முடிவெடுக்கும்படி கூறினார். சக்கரவர்த்தியின் கட்டளையின் பேரில் இளவரசரைச் சிறைப்படுத்திக் கொண்டுவருவதற்காக பழுவேட்டரையர்கள் இரண்டு மரக்கலங்கள் நிறைய போர்வீரர்களை அனுப்பியிருப்பதாக பூங்குழலி கூறினாள். அனைவரும் அதைக் கேட்டு கோபப்பட, இளவரசர் அருள்மொழிவர்மரோ தன்னுடைய தந்தையின் ஆணைக்கு கீழ்ப்பட்டு கலபதியிடம் தம்மை ஒப்புக்கொடுப்பதே முறை எனக் கூறினார். பூங்குழலியிடம் தன்னை அங்கே சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார். கொடும்பாளூர் வேளார், பழுவேட்டரையர்களின் சூழ்ச்சியையும் நந்தினி யார் என்பதையும் பார்த்திபேந்திரன் மூலம் அறிந்து கொண்டதை எடுத்துக் கூறி, போகவேண்டாமெனத் தடுத்தார். இளவரசர் அதையும் மறுத்துக் கிளம்ப, தானும் தொடர்ந்து வருவேன் என சைன்யத்துடன் கிளம்பினார். ஆனால், சைன்யத்துடன் கிளம்பிச் சென்றால் தாமதத்தை ஏற்படுத்தி, தன்னை பார்திபேந்திரனுடன் அனுப்பி விடலாம் என்ற சேநாதிபதியின் சூழ்ச்சியைப் புரிந்து கொண்டார் அருள்மொழிவர்மர். யானையின் காதில் ஏதோ ஓதி அதை வெகுவேகமாக ஓடச்செய்தார். யானையின் மேல் இளவரசருடன் அமர்ந்திருந்த பூங்குழலி, நடப்பது கனவா நனவா எனத் திகைத்து மகிழ்ந்திருந்தாள். நடுவில் அருள்மொழிவர்மர் ஊமை ராணியைப் பற்றி விசாரிக்க, பூங்குழலி அவள் தன் குருவெனக் கூறினாள். ஊமைராணியே தன் பெரிய தாயார் என்றும், அவர் இறந்துவிட்டதாகத் தன் தகப்பனார் நினைத்துக்கொண்டு வருந்தியிருப்பதாகவும், ஒருவேளை தான் சொல்ல முடியாமல் போனால் பூங்குழலி அதைச் சொல்லவேண்டுமென்ற உறுதிமொழியை இளவரசர் அவளிடமிருந்து பெற்றுக்கொண்டார். படைக்கலங்கள் இறங்கியிருந்த துறையை அவர்கள் அடைந்தபோது ஒரு மரக்கலம் தரை தட்டிக் கிடந்ததை கண்டார்கள். என்ன நடந்ததென்றே தெரியாமல் குழப்பமாய் இருந்தது. பூங்குழலி உணவு அருந்தாமல் சோர்வுற்றிருந்தாள். அப்போது அந்தக் கலத்தருகே ஊமைராணி அவர்களுக்காக சமைத்து உணவிட்டாள். இருவரையும் உறங்கச் சொல்லிவிட்டு ஊமைராணி காவல் இருந்தார். உறக்கத்தில் பூங்குழலி ‘அலைகடல்தான் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன்’ என்று முணுமுணுக்க, இளவரசர் அவள் மீது பரிவு கொண்டார். விடிந்தவுடன் ஒரு ஓடத்தில் சேநாதிபதியும் ஆழ்வார்க்கடியானும் வந்து சேர்ந்தனர். வரும் வழியில் ஒரு பெரிய மரக்கலம் செல்வதைக் கண்டு அதில் இளவரசர் சென்றிருக்கலாம் என்று கருதி நீரில் குதித்து நீந்தி அந்தக் கலம் நோக்கிச் சென்ற படகொன்றில் ஏறி வந்தியத்தேவன்  சென்றுவிட்டதாகக் கூற இளவரசர் பெரிதும் வருந்தினார். அப்போது ஊமைராணி குதிரையில் வந்து அவர்களை ஒரு இடத்திற்கு வருமாறு சைகை செய்தாள். அங்கு சென்றபோது, இளவரசரைக் கைது செய்ய வந்த மாலுமிகளும் வீரர்களும் இறந்து கிடந்ததைக் கண்டனர். அப்போது கலபதி மட்டும் குற்றுயிரோடு இருக்க, இளவரசர் அவரை மடியில் ஏந்தினார். இளவரசரைக் கைது செய்யும் விவரம், கூட வந்த வீரர்களுக்கு தெரிந்தவுடன் அதற்கு அவர்கள் உடன்பட மறுத்தனர் என்றும், அப்போது வந்த அரபுநாட்டு வீர்கள் தங்களைத் தாக்கிக் கொன்றுவிட்டு மரக் கலத்தையும்  ஓட்டிக்கொண்டு போய்விட்டதாகவும் வருந்திய கலபதி, ‘இளவரசரைக் கைது செய்ய வந்த துரோகத்தினாலேயே இவ்வாறு நிகழ்ந்தது, மன்னிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டு உயிர் விட்டார். பின் இளவரசர் அங்கிருந்த சோழ வீரர்களின் உடல்களை எல்லாம் தக்க மரியாதையுடன் தகனம் செய்தார். சேநாதிபதியிடம் மிகவும் வருந்திய இளவரசர், தன் பொருட்டு வந்தியத்தேவன் அரேபியக் கப்பல் கொள்ளைக்காரர்களிடம் சிக்கிக்கொண்டதால் அவனைக்  காப்பாற்ற என்ன செய்வதென்று யோசித்தார். அப்போது பூங்குழலியும் ஊமைராணியும் பூங்குழலியின் தமயனைக் கூட்டிக் கொண்டு வந்தனர். அவள் தமயன், அவர்கள் இளவரசரைக் கொல்ல வந்த பாவிகள் என்பது தெரியாமல் அவர்களை இலங்கைக்குக் கூட்டி வந்ததாகவும், இப்போது அரபுக்கப்பலில் அவர்களுடன் வந்தியத்தேவனையும் கூட்டிப் போய் விட்டதாகவும் மன்னிப்புக் கோரி நின்றான். அப்போது பார்த்திபேந்திரனின் கப்பலைக் கண்ட இளவரசர் சற்றும் தாமதியாமல் படகில் ஏறிக் கப்பலை அடைந்து வந்தியத்தேவனைக் காப்பாற்ற கப்பலைத் திசை திருப்புமாறு கட்டளையிட்டார். பார்த்திபேந்திரனும் கப்பலை விரைந்து செலுத்துமாறு கலபதிக்கு ஆணையிட்டான். கடலில் கொந்தளிப்பு எழுந்தது. ஒரு பெரும்புயல் தோன்றத் தொடங்கியிருந்தது. எனவே கப்பல் நகரவேயில்லை. இளவரசர் வந்தியத்தேவனை எண்ணிக் கவலையுற்றார்.  வந்தியத்தேவன் குந்தவையின் ஆணையின் பேரில், ‘இளவரசர் இல்லாமல் நாம் திரும்பக்கூடாது’ என்று உறுதி பூண்டுதான் கடலில் குதித்துப் படகை அடைந்து கப்பலுக்குச் சென்றான். ஆனால் அங்கு இளவரசர் இல்லை என்பதும், படகில் கூட வந்தவர்கள் அபாயகரமானவர்கள் என்பதையும் கப்பலுக்குச் சென்ற பிறகே புரிந்து கொண்டான். அவனை கப்பலின் அடிப்பகுதியில் கட்டிப் போட்டிருந்தார்கள். கடம்பூரில் தேவராட்டம் ஆடிய தேவராளனும் மந்திரவாதி ரவிதாசனும் கப்பலில் வந்தனர். அவர்கள் பேசிக்கொண்டதில், அவர்களின் தலைவி இளையராணி நந்தினி என்பதைத் தெரிந்து கொண்டான். மேலே சத்தம் கேட்க, தன் கட்டுகளை விடுவித்துக்கொண்டு வந்தபோது, அராபியர்களை ரவிதாசனும் தேவராளனும் தாக்கிக் கடலில் எறிவதைக் கண்டு தானும் அவர்களைத் தாக்கலானான். அரேபியர்கள் அனைவரையும் மூவரும் தீர்த்து முடித்தனர். ரவிதாசன் அவனை, தன் கூட்டத்தில் சேரவேண்டும், இல்லையானால் கடலில் தூக்கிப் போட்டுவிடுவேன் என மிரட்ட, வந்தியத்தேவன் அவர்களை யார் எனக் கேட்டான். தாங்கள் பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் எனவும், சோழர் குலத்தைப் பூண்டோடு அழிக்க சபதம் எடுத்துச் செயல்படுபவர்கள் எனவும் அவனை தங்களோடு சேர்ந்துவிடும்படியும் கூறினர். வந்தியத்தேவன் மறுக்க, அவனைக் கொன்றுவிட முடிவெடுத்தனர். ஆனால் அவன் அவர்களைத் தாக்கத் தயாராய் இருக்க, அவனைத் தந்திரமாக ஏமாற்றிவிட்டு கப்பலோடு இருந்த படகை எடுத்துக் கொண்டு தப்பித்தனர். நடுக்கடலில் தன்னந்தனியாக மரக்கலத்தில் வந்தியத்தேவன் மாட்டிக் கொண்டான். புயலும் மழையும் ஆரம்பித்தது. சுற்றிலும் இருட்டு பரவியது. கல் மழை, அதைத் தொடர்ந்து பேய் மழை, இடி, மின்னல் என எல்லாம் சேர்ந்து வந்தது. வந்தியத்தேவன், தன் ஆயுள் இங்கேயே முடிந்து போகுமோ, தாம் இறந்ததை குந்தவைக்கு யார் சொல்லுவார்கள் என்றெல்லாம் பரிதவித்தான். அப்போது ஒரு பெரும் இடி அவன் கப்பலில் இருந்த பாய்மரத்தில் விழுந்து பாய்மரத்தில் தீப்பற்றிக் கொண்டது. தன் விதி அத்துடன் முடிந்து விட்டதென வந்தியத்தேவன் நினைத்துக் கொண்டான்.  அதே சமயத்தில் பார்த்திபேந்திரனின் கலத்தில் இருந்து வந்தியத்தேவனைக் கண்டுவிட்ட இளவரசர் இரண்டு வீரர்களை அழைத்துக்கொண்டு அவனைக் காப்பாற்றப் படகில் கிளம்பினார். பார்த்திபேந்திரன் தடுத்தும் கேட்கவில்லை. புயல் மழையில் கொந்தளிக்கும் அலைகளின் நடுவே மிகுந்த சிரமத்திற்கிடையில் கலத்தின் அருகில் படகை எடுத்துச்சென்று வந்தியத் தேவனிடம் ‘குதி குதி’ எனக் கத்தினார். வந்தியத்தேவன் இளவரசரைக் கண்டவுடன் கடலில் குதிக்க, அலையால் உந்தப்பட்ட படகு, கப்பலிருக்கும் திசையை விட்டு விலகிச் சென்றது. இளவரசர் நீரில் குதித்து வந்தியத்தேவனைப் பற்றிக்கொண்டு படகில் சிரமப்பட்டு ஏற்றினார். தீப்பற்றிய கப்பல் பெரிதாய் எரிய ஆரம்பித்து மூழ்கத் தொடங்கியது. வேகவேகமாய்ப் படகை செலுத்திய பின்னும் உடைந்த பெரிய பாய்மரத் துண்டு ஒன்று படகில் மோத, படகு இரண்டாய் உடைந்தது. உடைந்த பாய்மரத்துண்டை இளவரசரும் வந்தியத்தேவனும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர். மழையும் இடியும் புயலும் நின்று அமைதி சூழ்ந்தது. ஆனால், இருளில் படகோ, கப்பலோ சென்ற திசை தெரியவில்லை. கரையில், இளவரசர் சென்ற பின் ஆழ்வார்க்கடியானிடம் சேநாதிபதி, ‘நடந்தது கூட நல்லதற்குத்தான். இளவரசர் பார்த்திபேந்திரனின் கலத்தில் ஏறி காஞ்சிக்குச் சென்றுவிட்டால் தானும் கிளம்பித் தஞ்சைக்குச் செல்வதாகக் கூறினார். ஆழ்வார்க்கடியான், ஊமை ராணியைப் பார்த்தால் கையோடு அழைத்து வரும்படி அநிருத்தர் ஆணையிட்டிருப்பதாகக் கூறிவிட்டு ஊமை ராணியை நோக்கிச் சென்றான். பூங்குழலியை அருகில் அழைத்த சேநாதிபதி அவளிடம், ‘இளவரசர் பற்றிப் பகல்கனவு காணாதே; அவருக்கு என் மகள் வானதிதான் மணப்பெண்’ எனக் கூறி எச்சரிக்க, பூங்குழலி சினமுற்று அங்கிருந்து வேகமாக அகன்றாள். தன் படகை எடுத்துக்கொண்டு புயலின் அல்லோலகங்களுக்கு நடுவே பூதத்தீவில் ஒதுங்கி, புயலின் ஆவேசத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது கடலின் ஓரத்தில் பாய்மரத்தில் ஒருவனைக் கண்டு அவனை கரையேற்றினாள். அவன் முதல்நாள் இடிவீழ்ந்ததில் ஒரு மரக்கலம் எரிந்ததைச் சொல்லி, அதில் பலர் காயப்பட்டிருக்கலாம் எனக் கூறினான். சேநாதிபதியின் வார்த்தையால் பெரிதும் வருந்தியிருந்த பூங்குழலி, தன் ஓடத்தை வைத்துக்கொண்டு ஆபத்தில் இருப்பவர்களைக் காப்பாற்றவாவது செய்யலாம் என நினைத்து கடலுக்குள் இறங்கினாள். இளவரசர் அவளை சமுத்திரகுமாரி என்று அழைத்ததை நினைத்துக் கொண்டாள். இன்னேரம் அவர் கோடியக்கரை சென்றிருப்பார், அரச குடும்பங்கள் அனைத்தும் இப்படித்தான் என்று நினைத்துக்கொண்டு  பாட ஆரம்பித்தாள். ‘இடி இடித்து எண்திசையும்வெடிபடும் அவ்வேளையிலேநடனக் கலை வல்லவர் போல்நாட்டியந்தான் ஆடுவதேன்?’ ஒரு இரவு முழுவதும் கடலில் பாய்மரத்தைப் பற்றி மிதந்து கொண்டிருந்த வந்தியத்தேவன், முழுவதுமாய் நம்பிக்கை இழந்திருந்தான். இளவரசர் நான்கு நாட்கள் வரை மிதந்து  உயிர் பிழைத்தவரகள்கூட உண்டு என அவனை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார். தன்னால் அல்லவா இளவரசருக்கு இவ்வாறு ஆனது என வந்தியத்தேவன் வருந்திக் கொண்டிருந்தான். அப்போது பூங்குழலியின் பாட்டு இனிமையாக அவர்கள் காதில் விழுந்தது. பூங்குழலி  இவர்களைக் கண்டு அதிசயித்து நின்றாள். இளவரசர் வந்தியத்தேவனைப் படகில் ஏற்றி, தானும் ஏறினார். இரண்டாம் பாகம் முற்றிற்று.

பொன்னியின் செல்வன் – 13

பொன்னியின் செல்வன் – 13

சின்ன பழுவேட்டரையரிடம் பாதாளச் சிறையின் சாவியைப் பெற்றுக்கொண்ட குந்தவை, வானதியை அழைத்துக்கொண்டு வைத்தியர் மகனைக் காணச் சென்றாள். பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கச்சாலையின் பின்புறமாகப் பாதாளச் சிறைச்சாலை இருந்ததால் அதற்கான கட்டுக்காவலும் அதிகமாக இருந்தது. அங்கு சென்றபோது சேந்தன் அமுதன் தேவாரப் பாடல் ஒன்றைப் பாடிக் கொண்டிருந்தான். அவன் யார் என்பதையும், அவன் வந்தியத்தேவனுக்குச் செய்த உதவியையும் பற்றி குந்தவை தெரிந்து கொண்டாள். வைத்தியர் மகனைப் பழுவூர் இளையராணியின் ஆட்கள் அழைத்துப் போனதையும், வந்தியத்தேவன் காவலர்களிடம் இருந்து தப்பி இலங்கைக்குச் சென்றுவிட்டான் என்பதையும் தெரிந்துகொண்டு அங்கிருந்து கிளம்பினார்கள். சேந்தன் அமுதன் விடுதலை செய்யப்பட்டான். பல்வேறு உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், முக்கியமான நிருபம் (கடிதம்) ஒன்றை ஆதித்த கரிகாலனுக்கு எழுதி முடித்தாள் நந்தினி. அதில், ‘அரசிளங்குமரா! தயங்கி, பயந்து இந்த நிருபம் எழுதத் துணிந்தேன். இராஜ்யத்தின் நிலைமையைப் பற்றிப் பலவிதமான செய்திகள் காதில் விழுகின்றன. தாங்கள் எதையும் கவனிப்பதில்லை. நோயினால் மெலிந்திருக்கும் தங்கள் தந்தை பலமுறை சொல்லி அனுப்பியும், தாங்கள் தஞ்சைக்கு வரவில்லை. இதற்குக் காரணம் நான்தானோ என்ற எண்ணம் என்னை வதைக்கிறது. தங்களை ஒருமுறை சந்தித்தால் எல்லாச் சந்தேகங்களையும் போக்கி விடுவேன். அதற்குத் திருவுளம் இரங்குவீர்களா? தஞ்சைக்கு வர விருப்பமில்லாவிட்டால், கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் சந்திக்கலாம். நான் இன்று தங்கள் பாட்டியின் ஸ்தானத்தில் இருக்கிறேன். நாம் சந்தித்துப் பேசுவதில் என்ன ஆட்சேபம் இருக்க முடியும்? இதைக் கொண்டுவரும் வீர இளைஞர், சம்புவரையர் குமாரரைத் தாங்கள் பூரணமாக நம்பி அவரிடம் எந்தச் செய்தியும் சொல்லி அனுப்பலாம் – இங்ஙனம், துரதிர்ஷ்டத்தின் கூடப் பிறந்த அபாக்கியவதி நந்தினி’ என்று எழுதி இருந்தது. அந்த நிருபத்தை, அவளது கவர்ச்சியில் ஏற்கெனவே மயங்கிப் போயிருந்த கந்தமாறனிடம் கொடுத்து, அதைக் கரிகாலரிடம் சேர்ப்பிக்கும்படியும், எப்படியும்  அவரைக் கடம்பூருக்கு அழைத்து வரும்படியும் வேண்டிக் கொண்டாள். வந்தியத்தேவன் கந்தமாறனை முதுகில் குத்தியிருக்கமாட்டான் என்றும் அன்று நிலவறைச் சந்திப்பின்போது தன்னை பழுவேட்டரையர் மகளாக அழைத்ததையும் நினைவுபடுத்தினாள். கந்தமாறன் யோசித்து முடிக்குமுன் பெரிய பழுவேட்டரையர் ஆங்காரத்துடன் வந்து சேர்ந்து கந்தமாறனை கேள்விகளால் துளைத்தார். நந்தினி பொறுமையாக அதற்கெல்லாம் பதில்சொல்லி அவரை சமாளித்து, கந்தமாறன் ஆதித்த கரிகாலனுக்கு ஓலை கொண்டுசெல்வதைப் பற்றிக் கூற, பழுவேட்டரையாரால் நந்தினியை எதிர்த்து எதுவும் சொல்ல முடியவில்லை. கந்தமாறன் சென்றபிறகு, தன்னை அவன் எதிரில் சந்தேகப்பட்டுப் பேசியதற்காகப் பழுவேட்டரையரிடம் பெரிதாய் வருந்தி, தன்மேல் சந்தேகம் உள்ளதானால் வாளெடுத்துக் கொன்றுவிடுங்கள் என்றெல்லாம் கூறி இளக வைத்தாள். பின் பழுவேட்டரையர் அவளை சமாதானப்படுத்தத் தொடங்கினார். அங்கே இலங்கையில்.. வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் இளவரசரைத் தேடிச் சென்றுகொண்டிருந்தபோது வழியில், பார்த்திபேந்திரப் பல்லவனைச் சந்திக்க நேர்ந்தது. வந்தியத்தேவன், தான் வந்த காரணத்தைத் தெரிவிக்காமல் பேச்சை முடித்துக்கொண்டான். ஆழ்வார்க்கடியான் பார்த்திபேந்திரனுடன் வந்திருந்த ஆட்களைக் கூர்ந்து பார்த்தான். பார்த்திபேந்திரன் சென்றவுடன், அந்த ஆட்கள் திருப்பியம்புறம் பள்ளிப்படையில் சோழர் குலத்தை அழிக்க சபதம் எடுத்துக் கொண்டவர்கள் என்று வந்தியத்தேவனிடம் கூறினான். வந்தியத்தேவன் இரண்டு பேரை அழைத்துக்கொண்டு பூங்குழலியின் தமையன் இலங்கைக்குச் சென்றதைப்பற்றி அவள் தந்தை குறிப்பிட்டதை  நினைத்துக்கொண்டான். இலங்கையின் சில பகுதிகள் சிங்கள மன்னன் மகிந்தனிடம் இருப்பதாகவும், சோழப் படை கைப்பற்றிய பகுதிகளில் இளவரசர் அருள்மொழி வர்மர் கருணையுடன் இலங்கை மக்களிடம் நடந்து கொள்வதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். அப்போது வீதியில் பெரிய யானை மீதான அம்பாரியில் சீன யாத்ரிகர்கள் அமர்ந்திருக்க, அதன் மீதிருந்த பாகனை ஆழ்வார்க்கடியான் கூர்ந்து கவனித்து அது இளவரசர் அருள்மொழிவர்மர்தான் என்பதைப் புரிந்து கொண்டான். ஆனால் வந்தியத்தேவன் அதைக் கவனித்திருக்கவில்லை. ஒரு காவலாளி கொடும்பாளூர் முத்திரை மோதிரத்தைச் சரிபார்த்து அவர்களை அழைத்துச் சென்றான். காவலாளியும் ஆழ்வார்க்கடியானும் இரு குதிரைகளில் ஏறிக்கொள்ள, வந்தியத்தேவனுக்குக் குதிரை வழங்கப்படவில்லை. கோபமடைந்த வந்தியத்தேவன் காவலாளியைத் தள்ளிவிட்டு, தாண்டிப்போன குதிரைகளைப் பின் தொடர ஆரம்பித்தான். வெகுதூரம் சென்றபிறகு சோழர் சைன்யத்துடன் தாவடிகள் காணப்பட்டது. அப்போது முன்சென்ற குதிரைகளிலிருந்து ஒருவர் மட்டும் வேகமாக வந்து வந்தியத்தேவனின் முகத்தில் குத்திக் கீழே தள்ளி அவன் இடுப்பிலிருந்த ஓலையை எடுத்துப் படிக்கத் தொடங்கினார். வந்தியத்தேவனால் அசையவே முடியவில்லை. அப்போது சுற்றியிருந்த அனைவரும் அந்த வீரனின் முகத்தைக் கண்டு ‘பொன்னியின் செல்வர் வாழ்க’ எனக் கோஷமிட, வந்தியத்தேவன் திகைத்தான். பின் அனைவரும் விலகிச் செல்ல, அருள்மொழிவர்மர் விஷயங்களைக் கேட்டறிந்தார். ‘பார்த்திபேந்திரன் ஆதித்த கரிகாலனைக் காஞ்சிக்கு அழைத்து வரும் தூதனாக வந்திருப்பதை அறிந்தே, உங்களைச் சந்திக்கும் முன்பு அவரைச் சந்திப்பதைத் தவிர்த்தேன்’ என இளவரசர் கூறினார். ஆழ்வார்க்கடியான் தன்னை இலங்கையிலேயே இருக்கும்படி அநிருத்த பிரம்மராயர் சொல்லி அனுப்பியதாகக் கூறினான். மூன்று பேரிடமும் இருந்து வெவ்வேறு விதமான செய்திகளை அடைந்த இளவரசர் அமைதி காத்தார். பின்னர் பார்த்திபேந்திரனைச் சந்திப்பதற்காக அநுராதபுரம் கிளம்பிய அருள்மொழிவர்மருக்கு, செல்லும் வழியில் புத்தரின் பாதங்களில் மறைத்து வைக்கப்பட்ட ஒரு செய்தி கிடைத்தது. அன்று இரவில் ஒரு படித்துறை தடாகத்தின் அருகே மூவரும் சென்றனர். அங்கு ஒரு பிட்சு வந்து அவர்களை ரகசிய வழியொன்றில் நிலவறை விகாரம் ஒன்றின் உள்ளே அழைத்து சென்றார். அங்கு ஒரு கருங்கல் மண்டபத்தில் தங்க சிங்காதனம், மணிமகுடம், உடைவாள், செங்கோல் அனைத்தும் இருந்தன. அங்கிருந்த தலைமைப் பிட்சு இளவரசரை அந்த சிம்மாசனத்தில் அமர்ந்து இலங்கை அரசுரிமையை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் அருள்மொழி வர்மர், தான் அவருடைய வேண்டுகோளுக்காகப் பெருமைப்படுவதாகவும் தன் தந்தையும் அரசருமான சுந்தர சோழருக்கு, தான் கீழ்ப்பட்டவன் என்பதால் அவரின் சொல்லின்றி எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறி மறுத்தார். வந்தியத்தேவன் இளவரசரின் பெருந்தன்மையை எண்ணிப் பெருமிதப்பட்டவாறே இருக்க, மூவரும் வெளிவந்தனர். அதைப்பற்றிப் பேசிக்கொண்டே வீதியில் நடந்தபொழுது கைதட்டும் ஓசை கேட்க, திரும்பிப் பார்க்கையில் ஓர் உருவம் நின்றிருந்தது. அதை நோக்கி இருவரையும் அழைத்துக் கொண்டு இளவரசர் நகர, அவர்கள் இருந்த இடத்தில் இருந்து மேல் மாட முகப்பு இடிந்து வீழ்ந்தது. ஒரு நிமிடம் தாமதித்திருந்தால்கூட மூவரும் இறந்திருக்கக் கூடும். காப்பாற்றிய அந்த உருவத்தைக் கண்ட வந்தியத்தேவன் திகைத்தான். ஏனெனில் அந்தப் பெண் பழுவூர் இளையராணி நந்தினியின் உருவ அமைப்பில் இருந்தார். ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த உருவம் மறைந்து விட, சித்தப் பிரமையோ எனக் குழம்பினான். ஒரு மண்டபத்தை அடைந்து அங்கு இரவைக் கழிப்பதற்காக மூவரும் தங்கினர். அப்போது வந்தியத்தேவன் அந்தப் பெண்மணியைப் பற்றிக் கேட்க, அருள்மொழி வர்மர் அவளைப்பற்றிச் சொல்லலானார். ‘சிறு வயதில் என்னைப் பொன்னி நதியில் இருந்து காப்பாற்றிய பெண்மணி இவர்தான். நான் இலங்கைக்கு வந்தபிறகு, ஒரு சமயம் இரவில் எழும் விசித்திரமான குரலைக் கேட்டு என் வீரர்கள் அச்சப்பட, அது இந்தப் பெண்மணியின் குரல்தான் என்பதை நான் கண்டுகொண்டேன். அவரால் பேச முடியாது என்றும், அவர் என்மீது அளப்பரிய பாசம் கொண்டவர் என்பதையும் அறிந்து கொண்டேன். அப்போது அங்கு குளிர்காய்ச்சல் பரவி இருந்ததால், உடனே அங்கிருந்து நாங்கள் கிளம்பி விட வேண்டும் என அந்த மாதரசி கேட்டுக்கொள்ள நாங்கள் அங்கிருந்து கிளம்பி விட்டோம். அது மட்டுமல்லாமல் என்னைத் தொடரும் மறைமுக எதிரிகள், வனவிலங்குகள், மலைப்பாம்புகள் போன்ற பல அபாயங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறார்’ என்று கூறியவர், அவர்களை படுத்துக்கொள்ளும்படி கூறினார். அப்பொழுது அந்த மூதாட்டி அங்கு வந்து, அவர்களைப் பின் தொடருமாறு சைகை செய்ய மூவரும் அங்கிருந்து கிளம்பினர். அவர்களை ஒரு ரகசிய  குகைக்கு அழைத்துச்சென்று, குகையின் சுவர்களில் தான் வரைந்திருந்த  சித்திரங்களைக் காட்டினாள். அந்தச் சித்திரங்களில் இருந்து,  ஒரு பெண்ணைப் பார்த்து ஒரு வாலிபன் காதல் கொள்வதும், அவர்கள் மகிழ்ந்திருப்பதும், ஒரு தருணத்தில் அந்த வாலிபன் பிரிந்து செல்ல, இந்தப் பெண் தொடர்ந்து சென்று அவனை ஒரு நகரத்தில் பார்த்தபோது, அவ்வாலிபன் அரசனாகப் பட்டம் சூடி நிற்பதைக் கண்டு அந்தப் பெண் மனமுடைந்து கலங்கரை விளக்கில் இருந்து விழுவதையும், அவளை ஒருவர் காப்பாற்றியதையும் அறிந்து கொண்டார்கள். பின் அந்தப் பெண் மனநிலை சரியில்லாத வெறியளாகவும் கர்ப்பமுற்றும் இருப்பதையும், அங்கிருந்த ராணி ஒருத்தியும் அப்போது கர்ப்பமாக இருப்பதையும்,  அந்தப் பெண்ணுக்கு இரு குழந்தைகள் பிறப்பதையும், ராணி அந்தக் குழந்தைகளில் ஒன்றை வளர்க்கக் கேட்பதையும், இந்தப் பெண் இரண்டு குழந்தைகளையுமே விட்டுவிட்டு ஓடிவந்து விட்டதையும், தூரமாய் இருந்து இரு குழந்தைகளையும் அவ்வப்போது பார்ப்பதுவுமான பல செய்திகளை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். பின்பொரு நாள் காவிரியில் விழுந்த குழந்தையை அப்பெண் காப்பாற்றுவது  போன்ற சித்திரத்தைப் பார்த்ததும்,  ‘அந்தப் பெண் நீங்கள்தான்’ என அருள்மொழி வர்மர் சுட்டிக்காட்ட, அந்த மூதாட்டி இளவரசரை அணைத்துக்கொண்டு கண்ணீர் பெருக்கினாள். பின் இன்னொரு சுவரில் வரவிருக்கும் அபாயங்களை சித்திரத்தில் எழுதி அருள்மொழிவர்மரிடம் காட்டினாள். குகையின் மேல் நின்று பார்த்தபொழுது இவர்கள் படுத்திருந்த இடம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. தொடரும்.

பொன்னியின் செல்வன் – 12

பொன்னியின் செல்வன் – 12

இலங்கையில் நிலைமை அவ்வாறிருக்க, பழையாறையிலிருந்து குந்தவையும் வானதியும் தஞ்சைக்குக் கிளம்பினார்கள்.  நாட்டில் அரசியல் சூழ்ச்சி நடைபெறுவதை வந்தியத்தேவன் மூலம் கேட்டதிலிருந்து, உடல்நலம் சரியில்லாத தன் தந்தையுடன், சகோதரர்களும் அருகே இல்லாத சூழ்நிலையில், தான் அங்கே இருப்பதுதான் நியாயம் என குந்தவைக்குத் தோன்றிவிட்டது. செல்லும் வழியில் வானதி, அருள்மொழிக்கு ‘பொன்னியின் செல்வன்’ என்ற பெயர் வந்த காரணத்தைக் குந்தவையிடம் கேட்க, அவள் சொல்லலானாள். ‘”ருள்மொழிவர்மன் குழந்தையாக இருக்கையில் படகில் குடும்பத்துடன் பொன்னி நதியில் செல்கையில், தவறி நதியில் விழுந்து விட்டான். அனைவரும் பதற, வீரர்கள் நதியில் குதித்துத் தேட, குழந்தை கிடைக்காமல் எல்லோரும் பயந்து விட்டனர். அப்போது படகிலிருந்து சற்று தூரத்தில் ஒரு பெண்ணுருவம் குழந்தையை ஏந்தியபடி தோன்றியது. உடனே சுந்தரசோழர் குதித்து குழந்தையைப் பெற்றுக்கொண்ட வினாடியில் அந்தப் பெண்ணுருவம் சடாரென்று மறைந்து விட்டது. குழந்தையைப் படகில் கொண்டு வந்து சேர்த்த சுந்தரசோழரோ மூர்ச்சையுற்றுப் போனார். பின் அந்தப் பெண் யாரெனத் தெரிந்து கொள்ள முடியாததால் சோழநாட்டின் தெய்வமான பொன்னித் தாயே காப்பாற்றிக் கொடுத்தாள் என்ற பொருளில் ‘பொன்னியின் செல்வன்’ என அருள்மொழிவர்மனை அழைக்கத் தொடங்கினர்” என குந்தவை சொல்லி  முடித்தாள். இருவரும் தஞ்சையை அடைந்தார்கள். வரவேற்ற நந்தினியிடமும் பழுவேட்டரையர்களிடமும் குந்தவை பூடகமாக வார்த்தைப் போர் நிகழ்த்த ஆரம்பித்தாள். நந்தினியும் அதைப் புரிந்து கொண்டு திருப்பி அடிக்க, அந்தச் சொற்போரில் கலந்துகொள்ள முடியாமலும் புரியாமலும் வானதி தவித்தாள். அன்றைய முன்னிரவில் வானதி தவிர, அனைத்துப் பெண்களும் நவராத்திரி விசேஷ பூஜைக்காக துர்க்கை கோவிலுக்குச் சென்று விட, வானதி தனித்து மாடத்தில் நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு அழுகுரலும் புலம்பலும் கேட்க, கேட்ட இடத்தை நோக்கி நடந்தாள். “என்னை ஏன் உயிருடன் சித்ரவதை செய்கிறாய்? உன்னைத் தெரியாமல் கொன்று விட்டதற்கு ஏன் இப்படிப் பழிவாங்குகிறாய்?” என்றெல்லாம் சொல்லிப் புலம்பியும் அழுதும் கொண்டிருந்தது சுந்தர சோழர்தான் என்று தெரிந்து வானதி திகைத்துப் போனாள். அப்படி அவர் பார்த்து புலம்பிக் கொண்டிருந்த உருவம் எதுவென எட்டிப் பார்த்தபொழுது, பழுவூர் இளையராணியின் உருவம் போல மங்கலாகத் தெரியவும் வானதி அங்கிருந்து நகர்ந்து செல்ல முயற்சித்து மூர்ச்சையடைந்தாள். அடுத்த நாள் காலையில் சுந்தர சோழர் குந்தவையை அழைத்து வானதியைப் பற்றி விசாரித்துவிட்டு,  தஞ்சை அரண்மனை இளம்பெண்களுக்கு ஏற்றதல்ல. இங்கு பேய் நடமாடுகிறது என்றெல்லாம் சொல்ல, குந்தவை  அவரின் உடல் தேறும் வரை இங்குதான் இருப்பேன் என மறுமொழி கூறினாள். பெருமூச்செறிந்த சுந்தரசோழர், இனி தான் உடல்நிலை தேற வாய்ப்பில்லை என்றும் அதற்கு தன் மனக்கவலை மட்டுமே காரணம் எனவும் கூறினார். நடக்கும் சதிகளைப் பற்றி குந்தவை லேசாக எடுத்துரைத்து, மதுராந்தகனுக்குப் பட்டம் கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெறுகின்றன என்று கூற, சுந்தரசோழர் மகிழ்ந்து செம்பியன் மாதேவியை அழைத்து முதலில் அவர் சம்மதம் கேட்டு மதுராந்தகனுக்கே பட்டம் கட்டி விடலாம் எனக் கூறினார். குந்தவை துணுக்குற்று, “இது உங்கள் வாரிசுக்கு நீங்கள் செய்யும் துரோகமில்லையா?” என்று கேட்க, “இல்லை, என் சாபக்கேட்டை என் புதல்வர்களுக்குக் கடத்த விரும்பவில்லை” என்று சுந்தரசோழர் சொல்லவும் குந்தவை அதிர்ந்தாள். மேலும் சொல்லும்படி அவள் வற்புறுத்த, சுந்தரசோழர் அவளிடம் பின்வரும் கதையைக் கூறினார். “என் வாலிப பிராயத்தில், இலங்கையில் போருக்குச் சென்றிருந்தேன். போர் தோல்வியில் முடியவே, மனம் குமைந்து யாரும் அறியாமல் கடலில் குதித்து ஒரு தீவில் கரை ஒதுங்கினேன். எதிர்பாராத ஒரு தருணத்தில் என்னைக் கொல்ல வந்த கரடி ஒன்றிடமிருந்து என்னைக் காப்பாற்றினாள் கரையர் குலப் பெண்ணொருத்தி. அவள் வாய் பேச முடியாத ஊமைப் பெண். நான் அவளுடன் அந்தத் தீவில் சில நாட்கள் மகிழ்ச்சியாக இருந்தேன். ஒருநாள் என்னைத் தேடிக் கொண்டு நம் நாட்டினர் கப்பல்களில் வந்து இறங்கினர். அந்தப் பெண்ணிடம் கண்டிப்பாகத் திரும்பி வருவதாக வாக்களித்துவிட்டு நான் நம் நாட்டுக்குத் திரும்பினேன். உடனே நான் ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் இருந்தது. அப்பொழுது என் பாட்டனார் பராந்தக சோழன் சாகும் தருவாயில் இருந்தார். சோழநாட்டின் மேன்மையை நிலை நாட்ட வேண்டும் என்று என்னிடம் உறுதி வாங்கிக் கொண்டார். அவருக்குப் பின் என் பெரியப்பா கண்டராதித்தர் சக்ரவர்த்தியானார். அப்போதுதான் அவர் மழவரையர் மகளான செம்பியன் மாதேவியை மணந்திருந்தார். ஆனபோதும் அவர் என்னையே யுவராஜனாக பட்டாபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருந்தார். இருவரும் பட்டாபிஷேகம் முடித்து மக்களுக்கு அரண்மனை மேன்மாடத்தின் முன்றிலில் காட்சிதர நின்றிருந்தோம். வாழ்த்துத் தெரிவித்த மக்களுக்கிடையே கண்ணீருடன் அந்த ஊமைப் பெண்ணின் முகம் தெரிய, நான் திகைத்து மயங்கி விழுந்தேன். மயக்கம் நீங்கி எழுந்தவுடன் என் நண்பன் அநிருத்தனை அழைத்து அந்தப் பெண்ணின் அடையாளங்களைச் சொல்லி, கண்டுபிடிக்க வேண்டுமெனக் கண்டிப்புடன் கேட்டிருந்தேன். கோடியக்கரையில் நான் சொன்ன அடையாளங்களுடன் ஒரு பெண் இருப்பதாகவும் அழைத்தால் வர மறுத்துவிட்டதாகவும் அநிருத்தன் கூற, நான் நேரடியாகவே சென்றேன். ஆனால், அங்கு சென்று விசாரித்தபொழுது அவள் கலங்கரை விளக்குத் தூணின் மீது ஏறி விழுந்து விட்டதாகவும் பொங்கி வந்த கடலின் சீற்றத்தில் மூழ்கிவிட்டிருக்கலாம் எனவும் கூறினார்கள். நான் அளவுகடந்த துன்பம் அடைந்தாலும், தஞ்சைக்கு அவளை அழைத்து வந்தால் நேரும் சங்கடங்கள் இல்லாமல் போனதை எண்ணி ஒருவகையில் அமைதியும் அடைந்து தஞ்சைக்குத் திரும்பி ராஜ்யப் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ ஆரம்பித்தேன். ஆனால், அவளின் உருவம் என் கனவுகளில் வந்து அலைக்கழிக்கும்.  நாளடைவில் அதையெல்லாம் மறந்துவிட்டிருந்தாலும் பின்பொருநாள் அருள்மொழிவர்மன் காவிரியில் விழுந்த நாளன்று காவிரியம்மனே வந்து காத்து நின்றதாக  நீங்கள் கருதினீர்கள். ஆனால், வந்தது அவள்தான்.  அதேபோல, ஆதித்த கரிகாலன் இளவரசப் பட்டம் ஏற்றதும் தாய்மார்களின் ஆசி பெற அந்தப்புரம் சென்ற அவனுடன் நான் சென்றபோது, தாய்மார்களுடன் அவளது ஆவியும் நின்றிருந்ததிகைக்க கண்டு அன்றும் நான் மூர்ச்சையுற்றேன். அப்போதெல்லாம்கூட என் குற்றவுணர்வும் சித்தப்பிரமை காரணமாகவும் இப்படி எண்ணிக் கொள்கிறேன் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது நள்ளிரவில் நாலைந்து முறையாக வந்து இம்சை செய்கிறாள். அதைப் பார்த்துதான் வானதி மயங்கி வீழ்ந்திருக்க வேண்டும். அதனால்தான் சொல்கிறேன், இந்த சாபமுள்ள சோழ சாம்ராஜ்யம் என் பிள்ளைகளுக்கு வேண்டாம். மதுராந்தகனுக்குக் கொடுத்து விடலாம்” என சுந்தர சோழர் சொல்லவும், குந்தவை குறுக்கிட்டு “இதற்கு செம்பியன் மாதேவி பாட்டி ஒத்துக்கொள்வாரா? உலகம் என்ன சொல்லும்? அரசாள்வதற்கென எந்தத் தகுதியும் வேண்டாமா?” என்றெல்லாம் கேட்டாள். சுந்தரசோழர் அனைத்தையும் மறுத்து வாதிட்டு, உடனடியாக செம்பியன் மாதேவியை அழைத்து வருமாறு குந்தவையிடம் வலியுறுத்தினார். அப்போதைக்கு சுந்தரசோழரை சமாதானம் செய்து, தன் அன்னையைத் தனியே அழைத்து, “ஒரு கணமும் அரசரைத் தனிமையில் விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று குந்தவை எச்சரித்தாள். ஆதுர சாலை எனப்படும் தர்ம வைத்தியசாலை ஒன்றைத் தஞ்சையில் துவக்கி வைத்தாள் குந்தவை. தனக்குரிய சர்வமானிய நிலங்களை அந்த ஊர் விவசாயிகளே சகல உரிமைகளுடன் அனுபவித்துக்கொண்டு, ஆதுரசாலை வைத்தியருக்கு ஆண்டு தோறும் நெல்லும், தினமும் பசும்பாலும்,  ஆட்டுப்பாலும்,  இளநீரும் அனுப்ப வேண்டியது என தான சிலா சாஸனம் செய்து கொடுத்தாள் குந்தவை. அந்த விழாவில் சுந்தர சோழர் பிள்ளைகளுக்கு மக்கள் கொடுத்த ஆசி முழக்கங்கள் பெரிய பழுவேட்டரையருக்கு எரிச்சலை அளித்தன. காயமுற்று சிகிச்சை பெற்றுக் கொண்டு, நந்தினி அரண்மனையில் இருந்து வந்த கந்தன்மாறனைப் பார்க்கக் குந்தவை சென்றாள். குந்தவை வந்த குதூகலத்தில், கந்தன்மாறன் இன்னும் அதிகமான குற்றச்சாட்டுகளை வந்தியத்தேவன் மீது  புனைந்தான். அப்போது வைத்தியர் மகனை கோடிக்கரையில் இருந்து ஒற்றனென்று பிடித்துக் கொண்டு வந்ததை மூவரும் பார்த்தனர். நந்தினி சூழ்ச்சியாகப் பேசி, வந்தியத்தேவனை இலங்கைக்கு அனுப்பிய விஷயத்தைக் குந்தவையிடமிருந்து வரவழைத்தாள். வந்தியத்தேவனின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சொல்லி குந்தவையை வருத்தினாள் நந்தினியிடம் சொற்போரில் தோற்றுப்போன குந்தவை, சினத்துடன் சின்ன பழுவேட்டரயரைச் சந்தித்தாள். தான் சக்கரவர்த்திக்கு மூலிகை தேடி வர அனுப்பித்த வைத்தியர் மகனை ஒற்றனென்று சிறைப் பிடித்தது தவறென்று கூறி விடுதலை செய்ய வேண்டினாள். சின்ன பழுவேட்டரையர் பாதாளச் சிறையின் சாவியைக் குந்தவையிடம் கொடுத்து, “நீங்களே விடுதலை செய்து அதற்குப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். குந்தவை அதை ஏற்றுக்கொண்டு சாவியுடன் சிறைச்சாலையை நோக்கி நடந்தாள்.  சின்ன பழுவேட்டரையர் அதிருப்தியுடன் விலகி நடக்கலானார்.

பொன்னியின் செல்வன் – 11

பொன்னியின் செல்வன் – 11

முடிவில்லாது பரந்திருந்த இருளில் அங்கங்கே நூறு அக்கினிக் குண்டங்கள் தோன்றி அணைந்தன. புகையோ விறகோ எதுவுமில்லாது ஒளிர்ந்து பின் அணைந்து பின் புதிதாகத் தோன்றின. ஆனால் வெகுசீக்கிரத்தில் அவன் புத்தி வேலை செய்து, கந்தகம் கலந்த பூமிப் பிரதேசங்களில் அந்த வாயு வெளிவரும்போது ஏற்படும் தோற்றம் என்று உணர்தியது. பின் வந்தியத்தேவன் பூங்குழலியை வீடு திரும்பும்படி அழைத்துக்கொண்டு, திரும்பும் வழியில் இலங்கைக்குத் தன்னை அழைத்துச் செல்லுமாறு பூங்குழலியை வந்தியத்தேவன் கேட்க, அவள் பதிலேதும் அளிக்கவில்லை.மறுநாள், தியாகவிடங்கக் கரையரை கோவிலில் சந்தித்தபொழுது அவரும் பூங்குழலியை அழைத்துச் செல்லும்படி கேட்குமாறும், ஆனால் அவளிடம் எந்த ஆசை வார்த்தைகளைப் பேசியும் கோபப்படுத்திவிட வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். அங்கிருந்து கடலுக்குச் சென்று குளிக்கலாம் என்று கடலுக்குள் இறங்கியவன், தான் கழற்றி வைத்திருந்த தன் துணிகளில் இருந்து ஓலையை எடுத்துக்கொண்டு பூங்குழலி ஓடுவதைப் பார்த்து அதிர்ந்துபோய் ஓடி வந்தான். பூங்குழலி வெகு வேகமாக விரைந்து காட்டுப் பகுதியில் மறைந்து கொள்ள, வெகுதூரம் அவளைத் தேடி காட்டுக்குள் வந்தியத்தேவன் அலைந்தான். ஒரு இடத்தில் பூங்குழலி ஓலையைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, வந்தியத்தேவனைச் சிறைப்பிடிக்க வைத்தியர் மகன் பழுவேட்டரையரின் ஆட்களைக் கூட்டி வந்திருப்பதாகக் கூறி, அதில் இருந்து தப்புவிப்பதற்காகவே திசைதிருப்பி வேகமாகக் காட்டுப்பகுதிக்குக் கூட்டி வந்ததாகக் கூறினாள். பூங்குழலியின் புத்திசாலித்தனத்தை நினைத்து ஆச்சரியப்பட்டு நன்றி சொல்லிவிட்டு, இலங்கைக்கு கூட்டிச் செல்லும்படி மறுபடியும் வேண்ட, பதிலாக பூங்குழலி, தான் கேட்கும் உதவியைச் செய்ய வேண்டும் என்ற சத்தியத்தை வாங்கிக்கொண்டாள். அவனை அங்கேயே மறைந்து இருக்குமாறும் இரவு வரும் வரை வெளியே வரவேண்டாமெனவும் சொல்லி ஒரு மண்டபத்தில் மறைந்து இருக்கச் சொன்ன பூங்குழலியிடம் ஆபத்தான மிருகங்கள் வருமே என வந்தியத்தேவன் தன் பயத்தை வெளிப்படுத்தினான். வஜ்ராயுதம் போன்ற ஒரு ஆயுதத்தை எடுத்துக் கொடுத்து ஒரு சிறுத்தையை அதில்தான் கொன்றேன் எனக் கூறிக் கிளம்பிய பூங்குழலியை வந்தியத்தேவன் பிரமிப்புடன் பார்த்தான். காரணம், அது திருக்கை மீனின் எலும்பு. இரவில் முன்னேற்பாடுடன் வந்து பூங்குழலி கொடுத்த சமிக்ஞையின் பேரில் வெளிவந்து இருவரும் ஓசைப்படாமல் படகைத் தள்ளிக் கிளம்பினர். அவள் படகைக் கையாளும் லாவகம் குறித்துப் பாராட்டி அவளின் தந்தை அவளை அழைத்துச் செல்லச் சொன்னதைக் கூறிய வந்தியத்தேவனிடம், கடலுக்கு வந்துவிட்டால் சமுத்திர ராஜனே அவளது தந்தை எனவும் அவள் சமுத்திரகுமாரி எனவும் பூங்குழலி கூறினாள். வந்தியத்தேவன் அவளிடம் பேசித் தெரிந்து கொண்டதில் அவள் சாதாரண பெண்களைப் போல அல்ல என்றும் பொன்னியின் செல்வனான அருள்மொழிவர்மரின் பெயரைச் சொன்னால் அவளின் முகத்தில் நாணமும் உடலில் குழைவும் ஏற்படுகிறது என்பதையும் புரிந்து கொண்டான். கடலில் ஏற்படும் ஆபத்துகளைப் பூங்குழலி சொல்லச்சொல்ல, வந்தியத்தேவன் அதைக் கேட்டுக் குழம்பி கடலில் குதித்து விட, பூங்குழலி பெரும்பாடுபட்டு அவனைக் காப்பாற்றிப் படகில் ஏற்றினாள். மறுபடியும் கண்விழித்த போது அவள் பாடிக் கொண்டிருந்தாள். ‘வாரிதியும் அடங்கி நிற்கமாருதமும் தவழ்ந்து வரகாரிகையென் உள்ளந்தனிலேகாற்று சுழன்றடிப்பதேன்?அலை கடலும் ஓய்ந்திருக்கஅகக்கடல்தான் பொங்குவதேன்?வந்தியத்தேவன் அவள் மனதில் ஏதோ சோகமும் ஏமாற்றமும் சஞ்சலப் படுத்திக் கொண்டிருக்கின்றன என்று எண்ணினான். அவளை சந்தேகப்பட்டது மிகவும் தவறெனவும் புரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டான். பூங்குழலி அதை ஒன்றும் பெரிதுபடுத்திக் கொள்ளாமல் இலங்கையில் நாகத்தீவில் இறக்கிவிடுவதாகக் கூறவும், இளவரசர் எங்கு தங்கியிருக்கிறார் என்று கண்டுபிடிப்பதைப் பற்றிய பேச்சு வந்தது. பூங்குழலி நாகத்தீவுக்கு முன் பூதத்தீவு என்று ஒன்று உள்ளதாகவும் இவன் படகிலேயே இருந்தால் அவள் போய் விஷயம் சேகரித்து வருவதாகவும் சொல்ல, வந்தியத்தேவன் அதற்குச் சம்மதித்தான். பூதத்தீவில் இறங்கி சொன்ன மாதிரியே ஒரு நாழிகைக்குள் விஷயத்தைத் தெரிந்து கொண்டு வந்தவள் முதன்மந்திரி அநிருத்தப் பிரம்மராயரை மாதோட்டத்தில் சந்திக்க இளவரசர் சென்றிருப்பார் எனக் கூறினாள். கரை நெருங்க பூங்குழலி கேட்ட சத்தியத்தை நினைவுபடுத்தி என்ன உதவி வேண்டும் என வந்தியத்தேவன் கேட்க, சில நிமிடங்கள் சிந்தித்தவள், பொன்னியின் செல்வனைச் சந்தித்து ஓலையெல்லாம் கொடுத்தான பிறகு ‘சமுத்திர குமாரியை நினைவிருக்கிறதா?’ என்று கேட்க வேண்டுமென்றும், அதற்கு அவர் சொல்லும் பதிலை மாறாமல் தன்னிடம் சொல்ல வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டாள். பூங்குழலியின் மனதைப் புரிந்துகொண்ட வந்தியத்தேவன் திகைத்து, ‘அவ்வளவு உயரத்தில் பறக்கவா இந்த ஓடக்காரப் பெண்ணுக்கு ஆசையிருக்கிறது!’ என்று மனதோடு எண்ணிக்கொண்டு, உன் உதவிக்காகவே இதைக் கண்டிப்பாகச் செய்வேன் என உறுதி பூண்டு அவளிடமிருந்து விடைபெற்றான். பூங்குழலி ஓடத்தில் சாய்ந்து அவளுலகில் சஞ்சாரிக்க ஆரம்பித்தாள். கடற்கரையோரமாக நடந்து சென்று இலங்கையின் மாதோட்டத்தில் சோழ சைன்யம் தங்கியிருந்த இடத்துக்கு வந்தியத்தேவன் வந்து சேர்ந்தான். அங்கும் கடம்பூரைப் போலக் கெடுபிடிகள் நடக்கவும், வந்தியத்தேவனைச் சிறைப்பிடித்தனர். அவன் சேனாதிபதி கொடும்பாளூர் பெரிய வேளாளரைச் சந்திக்க வேண்டுமெனச் சொல்லவும் அவனிடமிருந்த முத்திரை மோதிரம், ஓலை எல்லாவற்றையும் பரிசோதித்து எடுத்துக் கொண்டார்கள். அப்போது சேனாதிபதி, முதன்மந்திரி அநிருத்த ப்ரும்மராயரை ராமேசுவரம் வரை வழியனுப்பச் சென்றிருந்ததனால் அவர் வரும் வரை அவனைக் காவலில் வைத்திருந்தனர். பிரயாணத்தில் களைத்திருந்த வந்தியத்தேவன் முதல்நாள் முழுக்க நன்கு தூங்கி ஓய்வெடுத்தான். இரண்டாம் நாளின் இறுதியில் பக்கத்து அறையிலிருந்து ஆழ்வார்க்கடியானின் குரல் கேட்கவே ஆச்சர்யமடைந்தான். பிறகு விசாரித்ததில் அவன் சேனாதிபதியுடன் இங்கு வந்ததாகக் கூறினான். குந்தவையும் வந்தியத்தேவனும் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டிருந்த ஆழ்வார்க்கடியான், அங்கிருந்து மதுரை சென்று சில விஷயங்களைத் தெரிந்து கொண்டு இராமேசுவரத்திற்கு வந்து சேர்ந்தான். அங்கு முதன்மந்திரி அநிருத்த பிரும்மராயர் இலங்கையில் அருள்மொழிவர்மரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்த வணிகர்களைச் சந்தித்து நடப்பு நிலவரங்களைப் பேசிக் கொண்டிருந்தார். அங்குதான் இதுவரை தெரிந்துகொண்ட விஷயங்களைத் தன் எஜமானனான அநிருத்த பிரும்மராயரிடம் ஆழ்வார்க்கடியான் முழுவதுமாகக் கூறினான். அநிருத்த பிருமராயர் சேனாதிபதியுடன் இருந்தபோது வந்தியத்தேவனைப் பற்றிச் செய்தி வந்ததால் ஆழ்வார்க்கடியான் விரைந்து இலங்கைக்குச் சென்று வந்தியத்தேவனைப் பற்றி எடுத்துச் சொல்லி இளவரசரிடம் தன் ஓலையைக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவரின் ஆணையைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்குப் பயணம் செய்து சேனாதிபதியுடன் திரும்பியிருந்தான். வந்தியத்தேவனிடமிருந்து எடுக்கப்பட்ட ஓலை, மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இளவரசர் அநுராதபுரம் சென்றுவிட்டதாகவும், இருவரும் சேர்ந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்து ஓலையைச் சேர்க்கும்படி சேனாதிபதி சொன்னதாகவும் ஆழ்வார்க்கடியான் கூறினான். இருவரும் இணைந்து சேனாதிபதியைச் சந்தித்தார்கள். முதல் சந்திப்பிலேயே அவருக்கு வந்தியத்தேவனை மிகவும் பிடித்து விட்டது. வந்தியத்தேவன் புத்திசாலித்தனமாக, அவரது அண்ணன் மகளான வானதியைப் பற்றியும் குந்தவை அவள் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பற்றியும் பேச சேனாதிபதி மகிழ்வுற்றார். இருவரும் ஒருவரையொருவர் பிரியக்கூடாதெனவும் ஒற்றுமையுடன் சென்று இளவரசரைச் சந்திக்கும்வரை சண்டையிடாமல் செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்த, அவரை வணங்கி விடைபெற்று இருவரும் இளவரசரைத் தேடித் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர். தொடரும்.